Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி

Featured Replies

  • Replies 80
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிகாந்த் அரசியல் கட்சி: "அரசியலுக்கு வரவில்லை; தேர்தலுக்கு வருகிறார் ரஜினி"

  • ராஜன் குறை
  • எழுத்தாளர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
ரஜினி அரசியல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

(கட்டுரையில் இடம் பெற்றுள்ளவை கட்டுரையாளரின் கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. -ஆசிரியர்)

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்று கூறுவது தவறு; அவர் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பங்கேற்கப் போகிறார் என்பதுதான் சரியான தகவல். ஊடகங்கள் இரண்டையும் வேறுபடுத்தி பார்க்காமல் குழப்புகின்றன. முதலில் இதை தெளிவாக புரிந்துகொள்வோம்.

அரசியலில் ஈடுபடுவது என்பதன் பொருள் என்னவென்றால் ஒரு கட்சியை, அமைப்பை உருவாக்குவது. கட்சியின் முன்னணி குழுவினர் அதன் கொள்கைகளை, கோட்பாடுகளை வகுப்பது; கட்சி அணியினரிடையே அவற்றை விவாதித்து, அனைவரும் புரிந்துகொள்ளும்படி செய்வது. அவற்றை செழுமைப்படுத்துவது.

கட்சி அணியினரின் துணையுடன் அந்த கொள்கை, கோட்பாடுகளை பிரசாரம் செய்வது. இந்த கொள்கை கோட்பாடு என்பது பகுதி நலன் சார்ந்ததாகவும் இருக்கலாம்; பகுதி நலனும் பொதுநலனும் இணைந்ததாகவும் இருக்கலாம்.

அரசியல் செயல்பாடு என்பது அடிப்படையில் அரசியல் கட்சியின் செயல்பாடுதான். மக்களுடன் ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் கட்சிக்காரர்கள் கொள்ளும் உறவுதான், அந்த பகுதி மக்களின் நலனுக்கு உழைப்பதுதான் அரசியல். தேர்தல் என்பது அப்படி பணியாற்றும் கட்சியினர் ஆட்சி செய்ய முற்படுவது. கட்சிதான் சுவர் என்றால், சித்திரம் என்பது ஆட்சி. சுவரில்லாத சித்திரங்கள், அரசியல் கிடையாது.

பிற கட்சிகளின் அரசியல் அணிகள்

உதாரணமாக, திராவிட முன்னேற்ற கழகம் 1949ஆம் ஆண்டு துவங்கப்பட்டாலும், கட்சிக்கான கிளைகளை உருவாக்கி, கட்சி அமைப்பை கட்டுவதற்கு இரண்டாண்டுகள் எடுத்துக்கொண்ட பிறகு, 1951 ஆம் நடந்த முதல் மாநில மாநாட்டில்தான் கட்சியின் சட்ட திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தது. அதன் பிறகு உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்கப்பட்டு, மேலும் பல கிளைகள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து மாவட்ட மாநாடுகள், கூட்டங்கள், கொள்கை விளக்க பயிற்சி வகுப்புகள் நடந்தன. பல்வேறு கோரிக்கைகளுக்காக கட்சி தொடர்ந்து போராடியது. கட்சி அமைப்பை உருவாக்குவதே, கோரிக்கைகளை முன்னெடுப்பதே, போராடுவதே அரசியலாக விளங்கியது. தேர்தல் பங்கேற்பு என்பது அதற்கெல்லாம் அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்தது.

கம்யூனிஸ்டு கட்சிகள் தொழில்கள் சார்ந்து தொழிற்சங்கங்களை, கட்சி அணிகளை, உருவாக்குவன. வெகுஜன அமைப்புகளும் இவற்றை ஒட்டியே செயல்படும்.

கட்சியின் முக்கிய அரசியல் பணி அந்தந்த அணியினரின் நலன்கள், கோரிக்கைகளுக்காக போராடுவது. தேர்தலில் பங்கேற்பது என்பது அதற்கு உதவுவதற்குத்தான். உழைப்பவர்களிடமே அதிகாரம் இருக்கவேண்டும், முதலீட்டியக் குவிப்பும் அதிகாரக் குவிப்பும் உழைப்பாளர்களை சுரண்டக்கூடாது என்ற உன்னத தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கொள்கைக் கூட்டம் அது.

ரஜினி அரசியல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மக்களுக்கு அதை புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாததால் தேர்தல்களில் அவை முக்கிய சக்தியாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அரசியலில் அவர்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. தேர்தல் வேறு, அரசியல் வேறு.

விடுதலை சிறுத்தைகள் கட்சியோ சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் விடுதலைக்காக, மேம்பாட்டுக்காக செயல்பட உருவாக்கப்பட்ட கட்சி. ஒவ்வொரு பகுதியிலும் அன்றாடம் ஜாதி ஒடுக்குமுறைக்கு, வன் கொடுமைகளுக்கு எதிராக களத்தில் செயல்படுவது அக்கட்சியின் நோக்கம்.

அந்த அரசியலை வலுப்படுத்தவே சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பங்கேற்கிறது. அதன் உயிர்மூச்சு அன்றாட உரிமைப் போராட்டம்தான். பிற தலித் இயக்கங்களும் அப்படித்தான்.

அ.இ.அ.தி.மு.க என்னதான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று தலைமை வழிபாட்டு அரசியல் செய்தாலும் அதன் கட்சி அமைப்புதான் அதன் அரசியல் பலம்.

ஒவ்வோர் ஊரிலும் தி.மு.க கட்சியினருக்கு எதிர்முனையில் இயங்குபவர்களைக் கொண்டது அந்த கட்சி. எல்லா தொழில்களிலும் போட்டிபோடுவர்கள் ஒருவர் அந்த கட்சியில் இருந்தால், மற்றவர் இந்த கட்சியில் இருப்பார்.

தி.மு.கவின் கொள்கைகள், கோட்பாடுகள் பலவற்றை அ.தி.மு.க. பிரதியெடுத்தாலும், அந்தக் கட்சியின் அணியினர், தி.மு.கவை எதிர்ப்பவராக இருப்பார்கள். இதன் காரணமாக, ஒரு கட்சியிலிருந்து விலகி மற்ற கட்சியில் சேர்வதும் அடிக்கடி நிகழ்கிறது.

ஏன், பாரதிய ஜனதா கட்சி என்பதுகூட ராஷ்டிரfய ஸ்வயம் சேவக் என்ற தொண்டர் அணியினை அடிப்படையாகக் கொண்ட கட்சிதான். இந்து மத அடையாளம், சனாதன பெருமிதம், மீட்புவாத பிற்போக்கு தேசியம், இஸ்லாமிய எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவ தேசியவாத அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். எலும்பு, நரம்பு, சதையெல்லாம் அதுதான். அதன் மேலே போர்த்தப்பட்ட தோல்தான் பாரதீய ஜனதா கட்சி.

அரசியல் என்பதே எதிரிகள் x நண்பர்கள் பிரிவினைதான்

சுருக்கமாகச் சொன்னால் கட்சி அமைப்பு, கட்சி அணியினர், அவர்கள் கொள்கை பற்று, ஆகியவைதான் அரசியல். அவற்றுடன் சேர்ந்து யாருக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதும் மிக முக்கியமானது. அரசியல் என்பதே எதிரி, நண்பன் என்ற வித்தியாசத்தின் கட்டுமானம்தான் என்று சொன்னார் கார்ல் ஷ்மிட் என்ற அறிஞர்.

ஆர்.எஸ்.எஸ்ஸை பொறுத்தவரை, தேசத்தின் உள்முரண்களை பேசும் எல்லோருமே எதிரிகள்தான். ஒன்றிய அரசு, மாநில அரசு இடையிலான அதிகாரப் பகிர்வை பேசும் கட்சிகள் எல்லாம் எதிரிகள்; வர்க்க முரணை பேசும் கம்யூனிஸ்டுகள் பிறவி எதிரிகள்; இஸ்லாமியர்கள் தேச விரோதிகள். இவர்கள் எல்லோருக்குமே பாரதீய ஜனதா கட்சியின் ஒற்றை இந்து அடையாள பாசிசம் எதிரி.

இந்த பின்னணியில் பார்த்தால் ரஜினிகாந்திற்கு கட்சி அமைப்பை உருவாக்குவதில் ஆர்வம் இல்லை. ஜனவரியில் அல்ல, தேர்தல் அறிவித்த பிறகுகூட அவர் கட்சி தொடங்கலாம். ஏனெனில் கட்சிக்கு கொள்கை, கோட்பாடு என்று எதுவும் கிடையாது. அதையெல்லாம் கேட்டால் அவருக்கு தலை சுற்றும்.

ஆன்மீக அரசியல் என்று சொல்வது ஓர் உள்ளீடற்ற சொல்லாட்சி. தன்னலமற்ற பொதுநல சேவை என்று வைத்துக்கொண்டால் அதைத்தான் அனைத்து கட்சிகளும் கூறுகின்றன. ரஜினிகாந்த் தன் கட்சி யாரை எதிர்த்து செயல்படுகிறது என்று சொல்ல மாட்டார். யார் நண்பர்கள் என்று சொல்லமாட்டார். எல்லாருக்கும் பொதுவான ஜாதி,மத, அரசியல் பேதங்களை கடந்த ஆன்மீக நல்லாட்சி அரசியல் என்பார். அதன்பொருள் "அரசியலே எதுவும் கிடையாது. நான் நிறைய சினிமாவில் நடித்து உங்களை மகிழ்வித்தேன். எனக்கு ஓட்டுப்போடுங்கள்" என்பதுதான்.

ரஜினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதலிலேயே கட்சி தொடங்கினால் கட்சிக்குள் ஏற்படும் கோஷ்டி மோதல்கள், பதவிப் போட்டிகளை சமாளிக்கும் பொறுமையெல்லாம் அவருக்கு கிடையாது. மக்களிடையே பணியாற்ற வேண்டும் என்றால் மக்கள் கோரிக்கைகளுக்காக போராடுவது என்பதே அவருக்கு பிடிக்காது. அரசுக்கு எதிராக போராடுவது மகா பாவம் என்று நினைப்பவர். எனவே கட்சி கிளைகள், உள்கட்சி தேர்தல்கள் என்று எதுவும் நடக்காது.

பாரதிய ஜனதா கட்சி, அர்ஜுனமூர்த்தி என்ற ஆர்.எஸ்.எஸ்காரரை கட்சி அமைப்பை உருவாக்க டெபுடேஷனில் அனுப்பியுள்ளது. அவர் கட்சியை பார்த்துக்கொள்வார். ரஜனியின் வேலை தேர்தல் வந்த பிற்கு வாய்ஸ் கொடுப்பது; தன் வேட்பாளர்களுக்கு ஆதரவு தரச்சொல்லி கேட்பது. அவ்வளவுதான்.

ஆட்சிக்கும் வர மாட்டார்

சரி, கட்சியில்தான் ஆர்வமில்லை; ஆட்சி செய்யவாவது முன்வருவாரா என்று பார்த்தால் அதிலும் ரஜினிக்கு ஆர்வம் கிடையாது. தினமும் இரவு - பகலாக அரசு பணிகளை மேற்கொண்டு, எதிர்க் கட்சியினர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டு வாழ்வதை நினைத்தால் அவருக்கு அபத்தமாக இருக்கிறது. “சீ.சீ அதெல்லாம் எனக்கு சரிவராது” என்று கல்யாண மண்டபத்தில் பத்திரிகையாளர் கூட்டம் போட்டு வெளிப்படையாக கூறினார்.

அவரால் பத்து நிமிடத்திற்கு மேல் பொறுமையாக யார் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது. பிறர் பேசுவதையெல்லாம் பொறுமையாகக் கேட்பார். அவருக்கு தோன்றியதை செய்வார். அதற்கு விளக்கம் கொடுப்பது, விவாதம் செய்வதெல்லாம் அவருக்கு பிடிக்காது. அதாவது எது அரசியலின் உயிர்மூச்சோ அந்த விவாதம், விளக்கம், தர்க்கம் எதுவும் அவருக்கு பிடிக்காது.

இந்த பாசிச மனோபாவத்தால்தான் அவருக்கு நரேந்திர மோதியை மிகவும் பிடிக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பே நிகழ்த்தாத அரசியல்வாதிகளை அவர் ரசிக்கிறார். ஆனால் அவரால் அப்படிக்கூட ஆட்சி பொறுப்பை ஏற்கமுடியாது. எனவே அவர் ஆட்சி செய்ய வேறு ஒருவரைத்தான் நியமிப்பார். அதாவது ரஜினி நிறுத்தும் வேட்பாளர்கள் பெருவாரியாக வெற்றி பெற்றுவிட்டால், அர்ஜுனமூர்த்தி போன்ற ஒருவரை ஆட்சியில் அமர்த்துவார். அமர்த்திவிட்டு பாபா படம் போல இமயமலைக்கு செல்வார். ஆட்சிக்கு ஏதாவது பிரச்னை வந்தால் மீண்டும் வந்து குரல் கொடுப்பார்.

ஆட்சியும் செய்யமாட்டார், மக்கள் பணியும் செய்யமாட்டார், கட்சி அணிகளையும் உருவாக்க மாட்டார் என்றால் அவர் அரசியலுக்கு வரவில்லை என்றுதான் பொருள். லாட்டரி சீட்டு வாங்குவதுபோல நேரடியாக தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவார். மக்கள் ரஜினி மோகத்தில் ஓட்டளித்து அவர்களை தேர்ந்தெடுத்தால் ஆட்சியாளர்களை நியமித்து ஆட்சி நடத்த ஏற்பாடு செய்வார். அதையெல்லாம் அர்ஜுன்மூர்த்தியோ, குருமூர்த்தியோ, அமித்ஷா வோ பார்த்துக்கொள்வார்கள்.

ரஜனி என்னும் பிராண்ட்

கோல்கேட் கம்பெனி பற்பசை தயாரிக்கிறது. நீங்கள் அங்காடியில் போய் பார்த்தால் பல பெயர்களில் பற்பசைகள் இருக்கும்; அவற்றில் பல கோல்கேட் தயாரிப்பாக இருக்கும். Ultrabrite, Maxfresh, Maxwhite, Total Care என்றெல்லாம் பல பெயர்களில் இருக்கும். சமீபத்தில் சால்ட் என்று ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள்.

அது போல ஆர்.எஸ்.எஸ் - தமிழகத்திற்கென்றே ஒரு பிரத்யேக பிராண்டாக ரஜினிகாந்த்தை அறிமுகம் செய்துள்ளது. டிசம்பருக்குள் எவ்வளவு முகவர்கள் கிடைக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு உற்பத்தியில் முதலீடு செய்வார்கள். ஊடகங்களுக்கு கொண்டாட்டம். ஏகப்பட்ட விளம்பரங்கள் கிடைக்கும். ஆனால் கோல்கேட் போல இல்லாமல் இந்த ஆர்.எஸ்.எஸின் ரஜினி பிராண்ட் தமிழ் சமூகத்தை சீரழித்துவிடும்.

https://www.bbc.com/tamil/india-55187282

எழுத்தாளர் தி.மு.க சார்பானவர் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
50A56275-B840-49AF-AAE1-636A0CEC2E42.jpeg
 
அமித் பாயின் ஆட்கள் உருட்டி மிரட்டி இறுதியில் தலைவரை சம்மதிக்க வைத்தே விட்டார்கள். இது வேல் யாத்திரை, குஷ்பு vs திருமா போன்ற மத ரீதியான ஒருங்கிணைப்புகளில் பாஜக தலைமை மெல்ல மெல்ல நம்பிக்கை இழந்து வருவதைக் காட்டுகிறது. இனி மும்முரமாக அதிமுகவின் உட்கட்டமைப்பை பயன்படுத்தி வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் நின்று அதிமுக வாக்குகளை தம் வசப்படுத்தி எப்படியாவது பத்து இடங்களையாவது பெறுவது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தைக் கொண்டு சிறிய வித்தியாசத்தில் சில தொகுதிகளில் வெற்றி பெற்றதாக ஒரு நாடகத்தை நடத்தி, குறிப்பிட்ட இடங்களையாவது அதிமுகவும் பாஜகவும் பகிர்ந்து கொள்வது, இறுதியாக ரஜினி, கமல் போன்ற நடிகர்களில் டு மினிட் நூடுல்ஸ் கட்சிகளைக் கொண்டு வாக்குகளைப் பிரிப்பது மட்டுமே பாஜகவின் பிரதான வியூகமாக இருக்க முடியும். அதாவது, இப்போதைக்கு பாஜக நம்பியிருப்பது (1) அதிமுகவின் வாக்குவங்கி, (2) மின்னணு வாக்குப்பதிவு எந்திர மோசடி, மற்றும் (3) வாக்குகளை சிதறடிக்கும் திரை ஆளுமைகள். 
 
யாருடைய வாக்குகள் வரப்போகும் தேர்தலில் இவர்களால் சிதறப் போகின்றன என நாம் இங்கு கேட்க வேண்டும்:
வடமாநிலங்களில் பொதுவாக ஒவைஸ்ஸி போன்ற கறுப்பாடுகளை பயன்படுத்தி பொதுவான முற்போக்கு இந்து வாக்குகளை பாஜக தம் வசம் திருப்பியது, அதே போல காங்கிரஸின் வாக்காளர்களான இஸ்லாமியர் பலரையும் ஒவைஸியின் ஆட்களுக்கு வாக்களிக்க செய்தது. தமிழகத்தில் இந்த பொதுவான, நடுநிலை வாக்காளர்களை இந்துமயப்படுத்தலாம் எனும் முயற்சி தோற்ற நிலையில் அவர்களை திராவிட கட்சி-சார்பற்ற வேட்பாளர்கள் மற்றும் திரை ஆளுமைகள் நோக்கி சிதறடிக்கலாம் என பாஜக இப்போது கணக்குப் போடுகிறது. இதற்காகத் தான் தினமும் இருபது மாத்திரைகள் முழுங்கும் ரஜினியை, தேர்தல் அரசியலால் தன் திரை வாழ்க்கைக்கு பங்கம் வந்து விடக் கூடாதே என அஞ்சும் ரஜினியை கழுத்தில் கத்தி வைத்து இறக்கி விட்டிருக்கிறார்கள்.
 
இந்த வியூகத்தை எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
1) அடுத்த சில மாதங்களில் ரஜினி நேரடியாக பயணித்து மக்களை சந்தித்து பேசுவார் என நான் நம்பவில்லை. அதற்குப் பதிலாக அவரது ஐடி விங் ஆட்கள் ரஜினி சார்பில் தினமும் சில ட்வீட்டுகளை போடுவார்கள். அதை நமது டிவி சேனல்கள் விழுந்து விழுந்து விவாதிக்க வேண்டும் என தில்லியில் இருந்து அமித் பாய் அசைன்மெண்டை கொடுத்து விடுவார். ரஜினியும் அவ்வப்போது தனக்கு எழுதி அளிக்கப்பட்ட அறிக்கைகளை மனப்பாடம் பண்ணி ஊடகத்திடம் ஒப்பிப்பார். இதையும் அவரது கட்சிப் பேச்சாளர்கள் விளக்குவார்கள். இது ஒரு உப-வியூகம் - அதாவது ஒட்டுமொத்த தேர்தல் உரையாடலையும் ரஜினி-கமல்-மூன்றாவது அணி நோக்கித் திருப்புவது. ஆனால் இந்த சதித்திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலியாகக் கூடாது. ரஜினி, கமலை விமர்சிப்பது, அவர்களுக்கு பதில் அளிப்பது என மிகுதியான இடத்தை, நேரத்தை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. அப்படியே புறக்கணித்து விட வேண்டும். 
2) நான்கைந்து மாதங்களில் ரஜினி கட்சிக்கான அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தி, வேட்பாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமித்து, தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்வது நடக்கிற கதை அல்ல. இந்த குறுகின இடைவெளியில் ஒரு தொகுதியில் நிற்கப் போகும் வேட்பாளரை அங்குள்ள மக்கள் பரிச்சயம் கொண்டு அவர்களின் கொள்கைகளைத் தெரிந்து கொண்டு நம்பிக்கை பெற்று ஓட்டுக்களை அளிப்பது நடக்காத காரியம். மேலும் இந்த கட்சி ஒரு வெளிப்புற அழுத்தத்தினால் உருவாகிற ஒன்று என்பதால், தலைமை சினிமாவில் ஒரு கால், பாஜக புழக்கடையில் ஒரு கால், ஐ.டி ரெய்டுக்கு தலை, பாஜக அளிக்கும் பணத்துக்கு வால் எனக் கொடுத்து தெளிவற்று இருப்பதால் அதன் தொண்டர்களும் மும்முரமாக பணி செய்யப் போவதில்லை. அதாவது தெமுதிக, நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்குக் கூட ஒரு முழுநேரத் தலைமை, தெளிவான நோக்கம், கொள்கை இருப்பது போல இந்த டூ மினிட் நூடுல்ஸ் கட்சிகளுக்கு இல்லை. ஆம் ஆத்மியினரைப் போல ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு தம்மை நிறுவவும் அவர்களுக்கு அவகாசமில்லை. (ஆம் ஆத்மிக்கே இங்கு கதவை மூடி விட்டார்கள் என்பது வேறு கதை.) ஆனாலும் ஊழல் எதிர்ப்பைக் கொண்டு அதிமுகவை தாக்கி அவர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தி ஒரு பி-டீமை பாஜக உருவாக்கியிருக்கலாம். (அது வேல் யாத்திரை, குஷ்பு யாத்திரையை விட பயன்பட்டிருக்கும்.) ஊழலற்ற ஆட்சி எனப் பேசுவதன் வழி அவர்களால் திராவிடக் கட்சிகளை ஒரு சிக்கலான இடத்துக்குத் தள்ளி திராவிட ஒவ்வாமை இல்லாத நடுநிலையாளர்களை, அரசியல் புரிதல் குறைவான மத்திய வர்க்கத்தை ஈர்த்திருக்கலாம். ஆனால் அதிமுகவுக்கு எதிராக, சார்பாக, நடுநிலையாக இருப்பது என தகிடுதித்தம் செய்து இந்த சாத்தியத்தை பாஜக தவற விட்டது. இப்போது அவர்களுக்கு தமிழகத்தில் எந்த இடமும் இல்லை (அதிமுகவின் தோளில் ஏறி சவாரி செய்வதைத் தவிர.)
 திராவிடக் கொள்கையை விரும்பாத சிறுபான்மையினர் கூட இங்கு உ.பி., பீகாரில் உள்ள பொதுநிலை இந்துக்களைப் போல பெரும் தரப்பு அல்ல. இங்கு சாதி, முற்போக்கு, சமூகநீதி அரசியலே பெரும்பான்மை வாக்காளர்களைக் கவர்கிறது. இம்மூன்றுமே பாஜகவின், ரஜினியின் அரசியலுக்கு ஒவ்வாதவை. ஆகையால் பாஜகவின் பிற மாநிலங்களில் வெற்றிபெற்ற ஓட்டுப் பிரிப்பு வியூகத்தைக் கண்டு இத்தனை சதம் வாக்குகள் போய் விடும் திமுக கூட்டணியினர் தேவையில்லாமல் அஞ்ச வேண்டியதில்லை. 
இதுவரையில் ஜெயலலிதாவுக்கு மூன்றாவது அணியாக இருந்து உதவியவர்கள் தமிழ் தேசிய அரசியலை எடுத்தும் கொண்டவர்கள். அதற்காக தயாராக இருந்த களத்தை பயன்படுத்தியவர்கள். ஒரு சில வருடங்களாவது களத்தில் நின்று பிரச்சாரம் செய்து நம்பிக்கையை ஏற்படுத்தியவர்கள். தெமுதிக, நாம் தமிழர், மே 17 இயக்கம் போன்ற கட்சிகளை இவ்விசயத்தில் கமல், ரஜினியின் கட்சிகளுடன் ஒப்பிடவே முடியாது. இதில் கமல் கூட ஓரளவுக்கு திராவிட மரபில் வருகிறவராக தன்னைக் காண்பித்து, சற்று முன்னதாகவே கட்சி ஆரம்பித்து தயாரிப்பு வேலைகளை செய்து வருகிறார். ரஜினியோ ஸ்கைப்பில் பெண் பார்த்து விமானத்தில் இருந்து இறங்கியதுமே திருமணம் செய்ய வருகிற அமெரிக்க மாப்பிள்ளை. 
 
 அதனாலே மூன்றாவது அணியின் வாக்குப் பிரிப்பு செயல்திட்ட வெற்றி வாய்ப்பு - மற்ற கட்சிகள் அளவுக்கு - இந்த நடிப்பாளுமைகளின் கட்சிகளுக்கு இருக்காது என நினைக்கிறேன். 
 
3) அதிமுகவைப் பொறுத்த வரையில் கடந்த சில ஆண்டுகளில் எடப்பாடியாரின் அணியினர் தம்மை நிலையான தரப்பாக காட்டியிருக்கிறார்கள். ஊடகப் பிராச்சாரத்தில் (மோடி பாணியில்) வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆனால் பாஜகவின் சொம்பு இவர்கள் என்பது மக்கள் மனத்தில் ஆழமாய் பதிந்திருப்பதால் வலுவற்ற கட்சி எனும் எண்ணமும் மக்களுக்கு உண்டு. திமுக தம் பிரச்சாரத்தின் போது இப்போதைய அதிமுக அமைச்சர்கள், முதல்வர், துணை முதல்வரின் ஊழலை அம்பலபடுத்த முயற்சிக்க வேண்டும். அவர்கள் தமிழகத்துக்கு எதிராக செயல்பட்ட தருணங்களை வலுவாக முனைக்க வேண்டும். இவையிரண்டையும் விட முக்கியமாக - பீகாரில் தேஜஸ்வி யாதவ் செய்த பிரச்சாரத்தின் பாணியில் - எதிர்கால தமிழகத்தை திமுக எப்படி வழிநடத்தப் போகிறது, அதற்கான திட்டங்கள் என்ன என பிரச்சாரம் செய்ய வேண்டும். அதாவது எதிரணியின் ஓட்டைகளைப் பற்றி அதிகம் பேசாமல் (ஏனென்றால் மக்களுக்குக்குத் தான் அது தெரியுமே) தமது சிறப்புகளை, திட்டங்களை, தாம் கொண்டு வரவிருக்கும் மறுமலர்ச்சியைப் பற்றி அதிகம் பேச வேண்டும். எதிர்மறையாக அன்றி நேர்மறையான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். 
 
வாக்குகளை சிதறடிக்க மட்டுமல்ல, கவனத்தை சிதறடிக்கவும் தாம் மூன்றாவது அணியினர் அமைக்கப்படுகிறார்கள். அந்த பொறியில் விழுந்து விடக் கூடாது. ஏனென்றால் தேர்தல் முடிந்ததும் ஸ்டாலினுக்கு போன் போட்டு வாழ்த்துகிற முதல் ஆள் ரஜினியாகவே இருப்பார். அதைக் கருதி அவரை சீண்டாமல் விடுவதே சிறந்த அரசியலாக இருக்கும். கமல் தேர்தல் முடிவுகள் வரும் முன்னரே இன்னும் மூன்று எடுக்க சாத்தியமில்லாத படங்களுக்கான கதைகளை யோசித்துக் கொண்டிருப்பார். யாராவது ஞாபகப்படுத்தினால் மட்டுமே குழப்படியான அரசியல் ட்வீட்களைப் போடுவது, இரு பக்கமும் மேளமடிக்கும் அறிக்கை விடுவது, வெண்ணெய் போல வழவழா வெண்பா எழுதுவது என இருக்கும், எந்த மக்கள் போராட்டத்தையும் யாருக்கு எதிராகவும் ஒருங்கிணைக்காத அவர் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நடைமுறை அரசியலை மறந்துவிட்டு “உலக நாயகன்” பிம்பத்தில் கரைந்து விடுவார்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

டெபாசிட் இழக்கும் சில்லறைக் கட்சிகளின் குடுமிபிடிச் சண்டை🤣🤣🤣

 

ரஜினி கட்சியை வழிநடத்த மன்றத்தில் ஆள் இல்லையா? சீமான்

 

spacer.png

ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள ஒருவருக்குக் கூட கட்சியை வழிநடத்த தகுதியில்லையா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும், டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் அறிவித்தார். 2021 சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 6) செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ரஜினி கட்சி ஆரம்பிப்பதை விமர்சித்தார்.

 

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக முடிவு செய்துவிட்டதால் நாங்களும் மோதலாம் என்று முடிவு செய்துவிட்டோம். 45 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி மன்றத்தை வழிநடத்தும் நிர்வாகிகளில் ஒருவர் கூடவா கட்சியை ஒருங்கிணைத்து வழிநடத்தத் தகுதி பெறவில்லை. பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தியை ஒருங்கிணைப்பாளராக வைத்துக்கொண்டு சாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியலை எப்படி கொடுப்பார் என்று கேள்வி எழுப்பினார் சீமான்.

காங்கிரஸில் இருந்து வந்தவரையும் பாஜகவில் இருந்து வந்தவரையும் வைத்துக்கொண்டு ரஜினி எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார். ஜனவரியில் கட்சி தொடங்கும் அவரை ஏப்ரலில் முதல்வராக்க வேண்டுமா? சினிமாவில் அமெரிக்க மாப்பிள்ளை, எஞ்சினீயர் போல இல்லாமல் வந்தால் நேரடியாக முதல்வராகத்தான் ரஜினி வருவாரா என்று சாடிய சீமான்,

அழுத்தத்தின் காரணமாகத்தான் ரஜினி இந்த முடிவுக்கு வந்துள்ளார். அமித் ஷா வந்த பிறகான நிர்வாகிகள் சந்திப்பின்போது கூட கட்சி தொடங்கும் எண்ணத்தில் ரஜினி இல்லை என்றும் விளக்கினார்.

மேலும், “மக்களின் எந்தப் பிரச்சினைக்கு ரஜினிகாந்த் குரல் கொடுத்துள்ளார். நாட்டுக்கு மக்களுக்கு அவர் தேவையில்லை. ஆனால் பாஜகவுக்கும் ஊடகங்களுக்கும் ரஜினி தேவைப்படுகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

 

https://minnambalam.com/politics/2020/12/06/38/rajini-political-party-seeman-critizice

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

மாத்தனும் எல்லாத்தையும் மாத்தனும்......
இப்போ இல்லன்னா எப்பவும் இல்ல.

குடும்பமா சரக்கு அடிக்கிறத மாத்தனும் .இப்போ  இல்லைனா எப்பவும் இல்லை.:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.