Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை: டக்ளஸ் செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை: டக்ளஸ் செவ்வி

(நேர்காணல் ஆர்.யசி) 

 ‘மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனியை தனக்கு பின்னராக தலைமை பொறுப்புக்கு கொண்டு வர பிரபாகரன் விரும்பினார் அதற்காக கணினிப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு அது வலுப்படுத்தப்பட்டதே தவிர மகனை யுத்த முனைக்கு அனுப்பும் எண்ணம் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை.

‘இலங்கை இந்திய தரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாக பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான திட்ட வரைபை இந்தியப் பிரதமரிடம் வழங்கியிருந்தேன்.  அது தொடர்பாக இந்தியத் தரப்பும் திருப்தி வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக அந்த முயற்சிகளை முன்கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது’
 

spacer.png

இந்திய மீனவர்களின் விவகாரத்தில் சட்டவிரோதமான எல்லைமீறிய செயற்பாடுகள் தடுக்கப்பட வேண்டும். அந்த விவகாரம் நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும். எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் எமது கடல் வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே நான் உறுதியாக இருக்கின்றேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள்  அமைச்சர் வீரகேசரி வார வெளியீட்டிற்கான செவ்வியில் தெரிவித்தார். 

அவர் வழங்கிய செவ்வி வருமாறு

கேள்வி:- 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஊடாக எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்?

 பதில்:-  கடற்றொழில் அமைச்சிற்கு சுமார் 8.2 பில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைச்சு நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்க வேண்டிய தேசிய அமைச்சாக காணப்படுகின்றது. அந்த வகையில் நாடளாவிய ரீதியில் கடற்றொழில் செயற்பாடுகளிலும் நீர் வேளாண்மையிலும் முன்னோக்கி நகர்வதற்கான பல்வேறு திட்டங்கள் குறித்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. 

அவற்றை செயற்படுத்துவது தொடர்பாக நானும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர அவர்களும் அமைச்சு அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் பிரதாணிகளுடன் கலந்துரையாடி நேர்த்தியான முறையில் வேலைத் திட்டங்களை முன்னேடுப்போம். நிச்சயமாக கடற்றொழில் அமைச்சின் அபிவிருத்தி நடவடிக்கைள் முன்னுதாரணமாக அமையும்.

கேள்வி:- தேசிய அமைச்சு – நாடளாவிய ரீதியில் திட்டங்கள் என்றெல்லாம் நீங்கள் தெரிவித்தாலும், ஒரேயொரு தமிழ் அமைச்சர் என்ற வகையில் வடக்கு கிழக்கு பிரதேச கடற்றொழில் சார் அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்களவு நிதி ஒதுக்கபட்டவில்லை என்று சொல்லப்படுகின்றதே?

பதில்:- எவ்வாறான அளவுகோலின் அடிப்படையில் இவ்வாறான விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது என்று எனக்கு புரியவில்லை. வரவு செலவுத் திட்டத்தில் மயிலிட்டி, வாழைச்சேனை துறைமுகங்களில் அடுத்த கட்ட அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நந்திக் கடலில் அடுத்த கட்டப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதைவிட களப்பு அபிவிருத்தி போன்ற பொதுவான நிதி ஒதுக்கீடுகளின் ஊடாகவும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். மேலும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை விருத்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பருத்தித்துறை,பேசாலை,குருநகர் ஆகிய இடங்களில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மீன்பிடித் துறைமுகங்களை உருவாக்குவது தொடர்பாகவும் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான உரையில் சுட்டிக்காட்டியிருந்தேன். அவதானித்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

கேள்வி:- ஆம்,  உங்களுடைய உரையில் அவை சொல்லப்பட்டிருந்தாலும் வரவு செலவுத் திட்டத்தில் அவற்றுக்கான நிதி ஒதுக்கப்படவில்லையே...?

பதில்:- உண்மைதான். ஆனால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழலில் அனைத்தையும் அரசாங்கத்தின் நிதியின் ஊடாக செய்ய முடியாது. எனவே எங்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு முடிந்தளவு வெளிநாட்டு உதவிகளையும், தனியார் முதலீடுகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளினால் முழுத் தேவைகளையும் சொந்த வருமானத்தில் நிறைவேறிக் கொள்ள முடியாது. அதனடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாத அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை சாதகமான தரப்புக்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.

தேவையேற்படின் குறை நிரப்பு பிரேரணைகள் மூலமும் குறிப்பிட்டளவு நிதியினை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கின்றது. இவ்விடத்தில் இன்னொரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். 

பருத்தித்துறையில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பாரிய துறைமுகத்தை நீண்ட கால கடன் அடிப்படையில் அமைப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வேலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான முன்னாய்வுப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. ஆனால் அந்தப் பிரதேசத்தினைச் சேர்ந்த சில தரப்பினரின் புரிதல் இன்மை காரணமாக குறித்த திட்டத்தினை ஆசிய அபிவிருத்தி வங்கி தற்போது கைவிட்டுள்ளது. 

எனினும் மனம் சோராத விக்கிரமாதித்னைப் போன்று மீண்டும் குறித்த திட்டம் தொடர்பாகவும் ஏனைய சில திட்டங்கள் தொடர்பாகவும் ஆசிய அபிருத்தி வங்கியிடம் கோரிக்கையை முன்வைக்க இருக்கின்றேன். 

அதேவேளை சில தனியார் முதலீட்டாளர்களும் தமது ஆர்வத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அராங்கத்தினுடைய கொள்கை அடிப்படையில் ஆராய்ந்து மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையிலான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

கேள்வி:- பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகள் தடைப்படுவதற்கு காரணமாக இருந்த தரப்புக்கள், எதிர்காலத்தில் குறித்த அபிவிருத்தியை ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்..?

பதில்:- இதுதொடர்பான சரியான கருத்துப் பரிமாற்றங்களை நடத்தி, இந்த துறைமுகம் அபிவருத்தி செய்யப்படுவதனால் தவிர்க்க இயலாத வகையான பாதிப்புக்கள் ஏற்படுமாயின் நியாமான தீர்வினை அல்லது மாற்று ஏற்பாடுகளை கண்டறிவதன் ஊடாக அனைத்து தரப்புக்களின் சம்மத்துடன் குறித்த அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுக்க முடியும் என்று நான் நம்புகின்றேன். 

உதாரணத்திற்கு கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினை பார்ப்பீர்களாயின், குறித்த திட்டம் ஆரம்பிக்கப்டுகின்ற போதும், பல்வேறு காரணங்களை தெரிவித்து மக்களில் ஒரு தரப்பினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. எனினும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரோடு பல்வேறு கட்டப் பேச்சுகளை நடத்தி அவர்களினால் முன்வைக்கப்பட்ட காரணங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு அடிப்படை திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டதுடன் தவிர்க்க முடியாத பாதிப்புக்ளை எதிர்கொண்ட மக்களுக்கு நஸ்டஈடும் வழங்கப்பட்டது. 

 பிரதேசத்தின் அபிவிருத்தி என்பது தங்களுடைய எதிர்காலச் சந்ததிக்கானது என்பதை புரிந்த கொண்ட மக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கான நட்ட ஈட்டினை பெற்றுக் கொண்டு குறித்த கொழும்பு நகரத் திட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் மோதரையில் ஒரு பகுதியினருக்கான நட்டஈடு கடந்த ஆட்சியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறை குழப்பங்கள் காரணமாக வழங்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த வருடம் நான் கடற்றொழில் அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் வழங்கியிருந்தேன். 

இந்த இடத்தில் ஒரு விடயத்தினை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஒரு பிரதேசத்திற்கே நன்மையளிக்க கூடிய இவ்வாறான அபிருத்தித் திட்டங்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் தாங்களுடைய பாரம்பரிய வரையறைகளை சற்று தளர்த்தி – குறுகிய சிந்தனைகளை தவிர்த்து - நீண்டகால நோக்கோடு குறித்த திட்;டங்களின் சாதக பாதகங்களை ஆராய வேண்டும். அந்தத் திட்டம் நிறைவேற்றப்டுவதனால் கிடைக்கப் போகின்ற சாதங்களுடன் ஒப்பிடும் போது ஏற்படக்கூடிய பாதகங்கள் சொற்பமானவையாக இருப்பின்   பாதகங்களை நிவர்த்திக்க கூடிய மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய வேண்டும். 

அதனை விடுத்து கண்ணை மூடிக்கொண்டு முழுத் திட்டத்திற்கும் எதிராக வீதிக்கு இறங்குவது எமக்கும் எமது சந்ததிக்கும் நாமே ஏற்படுத்திக் கொள்ளுகின்ற பாதகங்களாவே அமையும்.

கேள்வி:- கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இலங்கைக்கான அமெரிக்க துர்தவர் அலெயன் பி ரெப்லிட்ஸ் அம்மையார் உங்களைச் சந்தித்து இருந்தார். குறித்த சந்திப்பில் எவ்வாறான விடயங்கள் பேசப்பட்டன?

பதில்:- அமெரிக்காவினால் இலங்கையில் மேற்கொள்ளத் திட்டமிடப்படுகின்ற காலநிலை மாற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தி திட்டங்களில் எவ்வாறான கடற்றொழில் சார் திட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதே குறித்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து. கடற்றொழில் நடவடிக்கைகளில் எதிர்கொள்ளப்படுகின்ற சவால்கள், கடற்றொழிலாளர்களின் வாழ்கை தரத்தினை முன்னேற்றுதல், நீர்வேளாண்மையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்துதல் மற்றும் தேசிய நல்லிணக்கதின் ஊடாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான எனது அணுகுமுறை என்பவை தொடர்பாக அவருக்கு தெளிவுபடுத்தியிருந்தேன்.

என்னுடைய அணுகுமுறைகள் தொடர்பாக திருப்தி வெளியிட்டிருந்த அவர், நீர்வேளாண்மை மற்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்கை தரத்தினை முன்னேற்றும் செயற்பாடுகள் போன்ற விடயங்களில் கடற்றொழில் அமைச்சுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கின்றது என்ற செய்தியை வெளிப்படுத்தியிருந்தார். ஆக மொத்தத்தில் திருப்பதிகரமான – கடற்றொழில் சமூகத்திற்கு நம்பிக்கையளிக்கும் சந்திப்பாக அமைந்திருந்தது.

கேள்வி:- கடற்றொழில் நடவடிக்கைகளில் எதிர்கொள்ளப்படுகின்ற சவால்கள் தொடர்பாக அமெரிக்க தூதுவருக்கு தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கின்றீர்கள். அப்படியானால், இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லைமீறிய செயற்பாடுகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறினீர்களா..?

பதில்:-  எந்த விடயத்தை எங்கு பேசுவது – யாருடன் எவ்வாறான விடயங்களைப் பேசுவது என்பது தொடர்பாக தமிழ் தலைமைகளிடம் காணப்பட்ட – காணப்படுகின்ற தெளிவின்மையும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களில் ஒன்று என்கின்ற விமர்சனத்தினை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றவன் நான். 

இந்நிலையில் இந்திய மீனவர்களின் விவகாரத்தினை எடுத்துக் கொள்வீர்களாயின் சட்டவிரோதமான எல்லைமீறிய செயற்பாடுகள் தடுக்கப்பட வேண்டும். அந்த விவகாரம் நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும். எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் எமது கடல் வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே நான் உறுதியாக இருக்கின்றேன்.

அதேவேளை மறுபுறத்திலே சம்மந்தப்பட்டிருப்பவர்கள் தமிழக மக்களில் ஒரு பகுதியினர். எங்களுக்கு இங்கே இரத்தம் சிந்தியபோது அங்கே இரத்தம் கொதித்தவர்கள். - நான் எதனையும் மறக்கவில்லை. இவ்வாறான நிலையில் இழுவை படகு தொழில் முறையை பயன்படுத்துவன் ஊடாக நிறைந்த வருமானத்தினை ஈட்ட முடியும் என்ற தீர்க்கதரிசனமற்ற தீர்மானம் காரணாமாக தங்களுடைய பாரம்பரிய தொழில்முறைகளை கைவிட்டு இந்த தொழிலை வாழ்வாதாரமாக மாற்றிக் கொண்டுள்ளனர். 

தற்போது அவர்களுடைய கடல் பிரதேசத்தில் போதுமான வளங்கள் இல்லாத நிலையில் எமது கடல் பிரதேசத்தினுள் நுழைகின்றனர். யதார்த்த நிலையை புரிந்து கொண்ட நிலையில் தான் இந்த வருட ஆரம்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இந்தியாவிற்கு சென்ற போது இரண்டு தரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாக பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான திட்ட வரைபு ஒன்றை இந்தியப் பிரதமரிடம் வழங்கியிருந்தேன். 

குறித்த வரைபு தொடர்பாக இந்தியத் தரப்பும் திருப்தி வெளியிட்டுள்ளது. எனினும் கொரோனா காரணமாக அந்த முயற்சிகளை முன்கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக பேச வேண்டியவர்களுடன் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கின்றேன்.  

கேள்வி:- இங்கே இரத்தம் சிந்தியபோது அங்கே இரத்தம் கொதித்தவர்கள் என்று தமிழக மக்களை விளிக்கின்றீர்கள். ஆனால் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த போது மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் கொந்தளிக்கவில்லை என்ற விமர்சனம் இருக்கின்றது தானே?

பதில்:-அவ்வாறான சூழ்நிலையை எற்படுத்தியது புலித் தலைமையின் தவறான சுயநலச் தீர்மானங்களே தவிர தமிழக மக்கள் அல்ல. அவர்கள் உணர்வு ரீதியாக எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமானவர்களாகவே இருக்கின்றனர்.

கேள்வி:- நீங்கள் சொல்லது போன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீர்மானங்கள் சுயநலன் சார்ந்தது என்றால் யுத்த முனையில் தனது குடும்பத்தினரை வைத்திருக்காமல் புலம்பெயர் நாடொன்றிற்கு பாதுகாப்பாக அனுப்பியிருக்கலாமே?

பதில்:- உங்களைப் போன்று பலரும் இதனை வாதப் பொருளாக முன்வைப்பதை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அவதானித்திருக்கின்றேன். உங்கள் எல்லோரையும்விட என்னால் பிரபாகரனின் மனவோட்டங்களை அறிந்து கொள்ள முடியும். அதனாலேயே இன்று உங்கள் முன்னால் இருந்து கதைத்துக் கொண்டிருக்கின்றேன். தனது குடும்பதினர் புலம்பெயர் நாடுகளில் இருப்பதைவிட தனக்கு அருகில் இருப்பதுதான்  பாதுகாப்பானது என்பதே பிரபாகரனின் எண்ணமாக இருந்தது. தன்னுடைய சாம்ராஜ்ஜியம் மக்களையும் அழித்து தன்னையும் அழிக்கப் போகின்றது என்று பிரபாகரன் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதனால் பிரபாகரனினால் தனது குடும்பத்தினருக்கு அனைத்து வசதிகளும் கொண்ட வாழ்கை முறை வன்னியிலேயே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

அதேபோன்று மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனியை தனக்கு பின்னரான தலைமை பொறுப்புக்கு கொண்டு வரும் முயற்சியாக கணனிப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு அது வலுப்படுத்தப்பட்டதே தவிர மகனை யுத்த முனைக்கு அனுப்பும் எண்ணம் பிரபாகரனுக்கு இருக்கவில்லை. பிரபாகரனின் இந்த தீர்மானத்தினை சூசை போன்றவர்கள் வெளிப்படையாக விமர்சித்ததாக தகவல்கள் இருக்கின்றன. 

ஆனால் அவர்களின்  துரதிஸ்டம் இறுதியில் சார்ள்ஸ் அன்ரனியை தேடி யுத்தமுனை நகர்ந்து விட்டது.

 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துடனான மோதல் ஏற்பட்டு புலிகளுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது பிரபாகரன் முதலில் செய்த வேலை தன்னுடைய மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் ஐரோப்பிய நாடான டென்மார்கிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது தான். 

பின்னர் பிரேமதாஸ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது பேச்சுவார்த்தைக்காக இலண்டனில் இருந்து வந்த அன்ரன் பாலசிங்கத்துடன் நாட்டிற்கு வந்திருந்தனர். 

அதன் பின்னர் கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக படையினர் மேற்கொண்ட ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னியில் கடுமையான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில்தான் பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலசந்திரன் பிறந்திருந்தார். 

எனினும் இறுதியிலும் தன்னுடைய சாம்ராஜ்ஜயம் சிதறப் போகின்றது என்பதை பிரபாகரன் முன்கூட்டியே உணர்ந்திருந்தால் இப்போது இந்தக் கேள்விக்கு விடையளிக்க வேண்டிய தேவை எனக்கு இருந்திருக்காது.

https://www.virakesari.lk/article/96501

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துடனான மோதல் ஏற்பட்டு புலிகளுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது பிரபாகரன் முதலில் செய்த வேலை தன்னுடைய மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் ஐரோப்பிய நாடான டென்மார்கிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது தான்.

பொய்யனுக்கு பொய்கூட சொல்லத் தெரியல்ல.

1987 இல் ஹிந்திய இராணுவம் யுத்த முனைப்பை செய்த போது.. தேசிய தலைவரின் பிள்ளைகள்.. மதிவதனி அக்காவின் தாயாரோடும் தந்தையாரோடும்.. யாழ் இந்து மகளிர் கல்லூரியில் அடைக்கலம் தேடி இருந்த மக்களோடு வாழ்ந்தனர். இந்தக் குரங்கு அப்போ எங்கே ஓடி ஒளிச்சிருந்துதோ தெரியாது. 

இவற்ற நெடுந்தீவு சாம்ராச்சியம் அழிச்சது எப்படி என்று முதலில் தேடிப் பார்க்கட்டும். மகேஸ்வரியுடன் போட்ட கூத்து எப்படி அழிஞ்சது என்பதையும் தேடிப் பார்க்க வேண்டும்.

தன் சொந்த இனம் அடிமையாவது பற்றி எந்தக் கவலையும் இல்லை..  ஆனால்.. மனதில் வைச்சிருக்கும் வஞ்சகம் வெல்லனும் என்று நினைக்கும் ஒரு மிகக் கீழ்த்தரமான வெறுக்கத்தக்க மிருகமே இது. 

16 hours ago, கிருபன் said:

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இலங்கைக்கான அமெரிக்க துர்தவர் அலெயன் பி ரெப்லிட்ஸ் அம்மையார் உங்களைச் சந்தித்து இருந்தார். குறித்த சந்திப்பில் எவ்வாறான விடயங்கள் பேசப்பட்டன?

அம்மையாருக்கு அலன் தம்பதிகளை கடத்திய சர்வதேச பயங்கரவாதி இவருன்னு தெரிந்திருக்கவில்லைப் போலும். அமெரிக்கா இப்படியான பயங்கரவாதிகளோடு நல்ல கொண்டாடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.