Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம்: ஒன்ராறியோ மாகாணத்தில் சட்டமாக ஏற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம்: ஒன்ராறியோ மாகாணத்தில் சட்டமாக ஏற்பு

 
vijay4-1-696x336.jpg
 15 Views

கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் ஆளுநரின் ஒப்புதலுடன் உத்தியோகபூர்வ சட்டமாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டது.

இதன்மூலம் மே-18 ஆம் திகதியுடன் முடிவடையும் 7 நாட்கள் ஒன்ராறியோவில் ஆண்டுதோரும் தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக கடைப்பிடிப்பதற்கான சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அத்துடன், தமிழினப் படுகொலை குற்றச்சாட்டை வெளிநாடொன்றின் மாகாணம் சட்டரீதியாக ஏற்று அங்கீகரித்த முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் முன்மொழிவு (Bill 104) மூன்றாவது வாசிப்பு மே 06ஆம் திகதி ஒன்ராறியோ மாகாணச் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

vijay4.jpg

தொடர்ந்து மாகாண ஆளுநர் ஒப்புதலுக்காக இது அனுப்பப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரம் ஆரம்பமான முதல்நாளான நேற்று இந்த சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்து மாகாண ஆளுநர் கையெழுத்திட்டார்.

இதனையடுத்து தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டம் ஒன்ராறியோவில் உத்தியாகபூா்வமாக நடைமுறைக்கு வந்தது. ஒன்ராறியோ சட்டமன்ற தமிழ் உறுப்பினர் விஜய் தணிகாலம் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் என்ற தனிநபர் பிரேரணையை 2019ஆம் ஆண்டு சமர்பித்தார்.

இந்த தனிநபர் பிரேரணை மீதான மூன்றாம் வாசிப்பு கடந்த 6-ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஆளும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்தும், தமிழர்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் உரிமை மறுப்புகள் குறித்தும் பேசினர்.

தொடர்ந்து ஒளுநரின் ஒப்புதல் பெற Bill 104 என்ற இந்தத் சட்டத் திருத்தம் அனுப்பப்பட்டது. இந்நிலையிலேயே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார ஆரம்ப நாளில் இதனை அங்கீகரித்து ஆளுநர் கையெடுத்திட்டார்.

ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் இனப்படுகொலைக் அறிவூட்டல் வாரம்’ (சட்டமூலம் 104) ஆளுநரின் அங்கீகாரத்தை பெற்று சட்டமாவதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வந்தபோதும் அந்த முயற்சி கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தத் தீா்மானத்தை முன்வைத்து நிறைவேற்றியமைக்காக நான் பெருமையடைகிறேன் என விஜய் தணிகாசலம் கூறியுள்ளார்.

இந்தத் தீா்மானத்தின் மூலம் மே 12 – மே 18 வரையான காலப்பகுதி ஒன்ராறியோவில் இலங்கை தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக பிரகடணப்படுத்தப்படுகிறது. தமிழ் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான பிற குற்றங்கள் குறித்து பொதுமக்களை தெளிவுபடுத்த இதன்மூலம் சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் குறித்த தீா்மானத்தை நிறைவேற்ற ஒன்ராறியோ தமிழ் சமூகத்துடன் ஒன்றிணைந்து நின்றமைக்காக மாகாண முதல்வர் டக் போர்ட், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஒன்ராறியர்களுக்கும் நன்றி கூறுகிறேன் எனவும் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=49410

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

வெல்டன் விஜய்  ...வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

 

பாராட்டுக்கள் விஜய்.

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் தணிகாசலம் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்..........!   🌹

எறும்பூர கல்லும் தேயும்........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொறொன்ரோவில் சட்டமாகியது ‘தமிழின அழிப்பு அறிவியற்கிழமை’ – விஜய் தணிகாசலத்துடன் இலக்கின் சிறப்பு நேர்காணல்

 
Capture-7.jpg
 85 Views

கடந்த  6.5.2021 அன்று, ரொறொன்ரோ சட்டசபையில் ‘தமிழின அழிப்பு அறிவியற் கிழமை’ மூன்றாம் வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு, 12.05.2021 அன்று ஒரு சட்டமாக இயற்றப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் சந்தித்த இனவழிப்பின் 12ஆவது ஆண்டை உலகத் தமிழினம் நினைவுகூரத் தயாராகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எமது மக்களுக்காக இந்த அரிய முயற்சியை முன்னெடுத்த NDP கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களுக்கும், அவருக்குத் துணை நின்ற அனைவருக்கும் ‘இலக்கு’ நிர்வாகம் மற்றும் வாசகர்கள் சார்பாக எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

vijay-thirukural-300x200.jpeg

மிகக் கடுமையான வேலைப் பழுவின் மத்தியிலும் இந்த நேர்காணலை ‘இலக்கு’ மின்னிதழுக்கு மனமுவந்தளித்த விஜய் தணிகாசலம் அவர்களுக்கு ‘இலக்கு’ தனது மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்துகிறது.

கேள்வி – ‘தமிழின அழிப்பு அறிவியற் கிழமை’ என்ற இந்த விடயத்தை ஒன்ராறியோ நாடாளுமன்றம் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் எப்படி உதித்தது? 

பதில் – நான் 14 வயசில ரொறொன்ரோ கனடாவுக்கு வந்தனான். நானும் தமிழ் ஈழத்தில இருந்து அந்த இனவழிப்பை பாத்திருக்கிறன். எங்கட ஒழுங்கையிலும் கூட நிறையப் பேர் சிறீலங்கா ஆமியின் செல் அடித்து இறந்த ஆக்கள் இருக்கினம். நாங்களும் இடம்பெயர்ந்து போய் ஒவ்வொரு இடமாய்ப் போய் அகதிகளாக வந்தது. அந்த ஒரு அனுபவம் இருக்கு. பிறகு 2009 நடக்கேக்க நான் இங்க யூனிவேசிட்டியில படிச்சுக் கொண்டிருந்தனான். 2009 என்பது உங்களுக்குத் தெரியும் உலகத்தில, தாயகமாய் இருக்கலாம் அல்லது புலத்திலயாய் இருக்கலாம். எல்லா இடத்திலயும் மக்களுக்கு அது ஒரு திருப்புமுனையாய்  இருந்தது. எல்லாப் பாளிமென்ருக்கு முன்னால போயும் நாங்கள் மன்றாடிக் கேட்டுக் கொண்டு நிண்டனாங்கள். எங்கட மக்களுக்கு நடக்கிறது இனவழிப்பு. அதை உலக நாடுகள் எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் எண்டு. நாங்கள் அப்படி மன்றாடிக் கேட்டும் உலக நாடுகள் செவி சாய்க்காமல் கொத்துக் கொத்தாய் கொன்று அழிச்சிருக்கினம். அப்ப இங்க இருக்கிற எல்லா இளையோருக்கும் ஒரு உணர்வு வந்திருக்கும். எங்கட மக்களுக்கு நடக்கிற இனவழிப்பை நிற்பாட்ட வேண்டும். மற்றது இனவழிப்பு என்றதை அங்கீகரிச்சால் தான் நீதிக்கான பயணத்தில் நாங்கள் அடுத்த கட்டத்துக்குப் போகலாம் எண்டு தெரியும். நான் வந்ததில இருந்து இங்க இருக்கிற இளையோர் அமைப்புக்களோட இணைஞ்சு வேலை செய்துகொண்டு இருந்தனான். அதற்குப் பிறகு, 2009க்குப் பிறகு யுனிவேசிட்டியில படிச்சுக் கொண்டிருக்கும் போதும் இதற்குப் பிறகு படிச்சு முடிச்சாப் பிறகும் சமூகத்தோடு இருந்து செயற்றிட்டங்களில் இருக்க வேண்டும் என்பது – உலகத்திலேயே இளையோர் எல்லோருக்குமே அப்படி இருக்கும் எண்டு நினைக்கிறன். அந்த ரீதியில தான் போய்க் கொண்டிருந்தது. பிறகு நான் finance துறையில இருக்கிறதால கனடாவிலுள்ள prime ministerக்கு ஒரு fund raising செய்ய வேணும். ஒரு fund raiser ஆய் வரவேணும். ஏனெண்டால் நான் business படிச்சு financeக்குள்ள இருக்கிறன். ஆனால் அரசியல் மட்டத்துத்துக்குள்ள போறதுக்கு நாங்கள் எப்பவும் பின்னால நிண்டு வேலை செய்யிறதுக்குத் தான் interest காட்டிக் கொண்டிருந்தது. பிறகு இரண்டு மூண்டு தரம் ரொறொன்ரோவில இருக்கிற அண்ணாமார், அக்காமார் தான் கேட்டவையள்.  so நான் இரண்டு வாட்டி இல்லையெண்டு சொல்லி மூண்டாவது தடவை ஒரு challenge ஆக எடுத்துச் செய்வம் எண்டு தான் தொடங்கியது.

09-300x200.jpg

அதற்குப் பிறகு தமிழ் மக்கள், அவர்களது ஆதரவால தான் உள்ளே வந்தது. உள்ளே வந்தாப்பிறகு நாங்கள் 2009இல நடந்ததுக்கு நான் இருக்கிற ஒன்ராறியோ சட்ட சபையில எப்படியாவது அங்கீகாரம் கொண்டு வரவேண்டும் எண்டு, நாங்கள் எங்க போறோமோ அங்க எங்கட கதைகளைச் சொல்வது தான் எங்கட வேலைத் திட்டமாய் இருக்கும். அப்படி வரக்கேக்க ஒன்ராறியோ மாகாணம் என்பது தேசிய மட்டமில்லாமல் மாகாணம் எண்டு இருக்கிற படியால் அதில் வெளியுறவு அமைச்சு Foreign Affairs Ministry ஒன்ராறியோ மாகாணத்தில இல்லை.  கனடாவில அது தேசிய அளவில தான் இருக்குது. Tamil Remembrance Day  அதுக்கான அங்கீகாரத்தைக்  கொண்டு வரும் போது இங்க சுகாதாரமும் கல்வியும் தான் முதல் இரண்டு அமைச்சுகளாய் இங்க ஒன்ராறியோ மாகாண சட்ட சபையில இருந்தது. அப்ப நாங்கள் இந்தக் கல்வி இருக்கும் போது தான் தமிழின அழிப்பு, ஒரு அறிவியற் கிழமை, அறிவூட்டல் வாரம் மாதிரிச் செய்ய வேணும் எண்ட ரீதியில நாங்கள் இதைக் கொண்டு போனது. அது வேலை தொடங்கி இரண்டு வருசத்துக்கு மேல ஆயிற்றுது. அப்படித் தான் இந்தTamil Genocide Education Week உருப்பட்டது.

கேள்வி – நன்றி. இளையோர் இச்செயற்பாட்டில் அதிகமாக ஈடுபட்டதாக அறிகிறோம். அதைப்பற்றி என்ன சொல்ல விரும்புறீங்க?

பதில் – நிச்சயமாய் இது நாங்கள் முதல் இந்த சட்ட சபை உறுப்பினர்களுக்குக் கொண்டு வந்து அறிமுகப்படுத்துவதற்கு முதலே இங்க ஒன்ராறியோ கனடாவில் இருக்கிற தமிழ் இளையோர் அமைப்பாக இருக்கலாம் தமிழ் இளையோர் ஒன்றியமாக இருக்கலாம் பிறகு இங்க இருக்கிற National Council of Canadian Tamils என்கின்ற மக்களவையாக இருக்கலாம். எல்லாரும் ஒரு குழுவாய்ப் போய், தமிழ் சமூகத்தின்ர ஒரு குழவாய்ப் போய், எல்லாக் கட்சி மட்டத்தையும் அவையள் சந்திச்சவையள். இங்க மூண்டு கட்சி பிரதானமாய் இருக்கினம் அதாவது Progressive Conservative கட்சி, Liberal கட்சி NDP கட்சி எண்டு இருக்கினம். பிறகு Green Party யும் இருக்குது. so கட்சி வேறுபாடு இல்லாமல் எப்பவுமே எங்கட பிரச்சினையைக் கொண்டு போகும் போது, தமிழ் மக்களுடைய பிரச்சினையைக் கொண்டு போகும் போது, கட்சி வேறுபாடு இல்லாமல் அந்த அறிவூட்டலைச் செய்ய வேணும் எண்ட ரீதியில இளையோர்கள்  அதை ஒரு தலைமைத்துவப் பதவியை எடுத்து எல்லா இடத்திலயும் போய்ச் சந்திச்சாப் பிறகு தான் நாங்கள் இதனை அறிமுகப்படுத்தினது சட்டசபையில. அப்ப சட்டசபையில அறிமுகப்படுத்தும் போதே எல்லாக் கட்சியிலயும் இதுக்கான ஒரு ஆதரவுக் குரலைக் கொண்டு வந்திற்றோம். அதுக்குப் பிறகு அறிமுகப்படுத்தும் போது முதலாவது வாசிப்பு இரண்டாவது வாசிப்பு ஏகமனதாய் எல்லாராலயும் வாக்களிக்கப்பட்டு அது நிறைவேறுது. அதுக்குப் பிறகு தொடர்ந்தும் அந்த மின்னஞ்சல் சட்டசபை உறுப்பினர்களுக்கு எழுதிறதாய் இருக்கலாம் social media வாய் இருக்கலாம் இணையத் தளங்களில் தமிழின அழிப்பின்ர விழிப்புணர்ச்சியை எடுக்கிற campaign ஆய் இருக்கலாம் என்று இதில இளையோரும் தமிழ் மக்களும் தான் காரணம். இது நிறைவேறுவதற்கு சட்டமூலம் நிறைவேறி இப்ப சட்டமாய் ஆயிருக்கு. அதுக்குத் தமிழ் மக்கள் காரணம். குறிப்பாய் இளையோர்கள் காரணம்.

கேள்வி – இப்ப நீங்க அதைச் செய்து ஒரு மூன்றாவது வாசிப்பை முடிச்சு ஒரு சட்டமாக அது மாற்றப்பட்டிருக்குது. ஆனால் இந்த இரண்டு வருசம், இதை நோக்கிய ஒரு பயணம் ஒரு சவால் நிறைந்த ஒரு பயணமாய்த் தான் இருந்திருக்கும். நிறையச் சவால் இருந்திருக்கும். ஆனால் இதில நீங்கள் சந்திச்ச முக்கியமான அல்லது பெரிய சவால் என்று நீங்கள் எதை நினைக்கிறீங்க?

maxresdefault-1.jpg

பதில் – முக்கியமான சவால் எண்டு சொல்லும் போது சிறீலங்கா அரசு இந்த Bill ஐ எப்படியாவது நிப்பாட்ட வேணும் எண்ட வேலையில அவர்கள் குறிப்பாக இறங்கி இருந்தவை. அதுக்கு அவங்கள் செய்த வேலை என்னெண்டால் இங்க சட்டசபை உறுப்பினர்களாய் இருக்கிற எல்லாரையும் இங்க இருக்கிற முதல்வராய் இருக்கலாம். இல்லாவிட்டால் அமைச்சர்களாய் இருக்கலாம். இல்லாட்டி உறுப்பினர்களாய் இருக்கலாம் எல்லாரையும் சந்திச்சு, கொரோனா தொற்றுக்கு முதல் நேராகவும் கொரோனா தொற்றுக்குப் பிறகு மெய்நிகர் மூலமாகவும் சந்திச்சு இந்தவொரு பொய்ப் பிரச்சாரத்தைச் செய்து கொண்டே இருந்தவை. பொய்ப் பிரச்சாரம் எப்படியெண்டால் – இப்படியொரு விடயமே நடக்கேல்ல – எங்கட மக்கள் அங்க கொல்லப்படவே இல்லை – அங்க safe zone க்குள்ள கொண்ணந்தும் cluster bomb போட்டுக் கொல்லேல்ல எண்டும் hospitalக்கு செல் அடிக்கேல்ல எண்டும் எல்லாத்தையும் ஒரு பொய்ப் பிரச்சாரமாக… ஆனால் எங்கட இனவழிப்பு நடந்தேறிய காலகட்டம் என்பது ஒரு டிஜிட்டல் காலகட்டம். அதில நிறையப் படங்கள் இருக்குது ஆதாரமாய். வீடியோ satellite images, documentaries எண்டு நிறைய விடயம் இருக்குது. அந்தப் பொய்ப் பிரச்சாரம் எண்டது இங்க நிறைய தங்கட  resource எல்லாத்தையும் வைச்சு ஒரு பெரியதொரு முயற்சி எடுத்தவையள். எங்களுக்குத் தெரியும் அவை இதை நிப்பாட்டப் பாக்கினம். ஏனெண்டால் உலகத்தில ஒரு மூலையிலயும் தமிழின அழிப்பின்ர உண்மையான அங்கீகாரம் ஆருக்கும் கிடைக்கக் கூடாது.  ஏனெண்டால் ஒரு இடத்தில கிடைச்சுது எண்டால் எங்கட தமிழ் மக்கள் அதை எல்லா நாடுகளுக்கும் கொண்டு போய்ச் சேர்த்து எல்லா நாடுகளிலயும் அங்கீகாரத்தைக் கொண்டு வந்திடுவினம் எண்ட ஒரு அச்சத்தில அவர்கள் நிறைய எதிர்ப்பை அவர்களுக்குத் தெரிவிச்சுக் கொண்டிருந்தவையள். அது மூண்டாவது வாசிப்பு முடிஞ்சு இந்த Ontario Governor General இன்ர கையெழுத்துப் போடுற வரைக்கும் கூட இருந்தது. இங்க இருக்கிற தேசிய மட்டத்தில இருந்தும் அழுத்தங்கள் வந்தது. இலங்கையில இருந்தும் அந்த அழுத்தங்கள் வந்து கொண்டிருந்தது. அதைத் தான் ஒரு முக்கியமான ஒரு சவாலாய் நான் பார்க்கிறன்.

கேள்வி – இலங்கை அரசாங்கம் அழுத்தத்தைப் பிரயோகித்த போது அதை நீங்கள் எப்படி வெற்றி கொண்டனீங்கள்? என்ன மூலோபாயத்தை அதுக்கு நீங்கள் பாவிச்சனீங்கள்?

பதில் -மக்கள் விட்டுக் கொடுக்காமல் திரும்பத் திரும்ப சட்டசபை உறுப்பினர்களோட முக்கியமாய் இங்க ஒன்ராறியோவில் இருக்கிற முதல்வர், Premier Doug Fordக்கு அவ்வளவு ஆதரவு தெரிவிச்சுக் கொண்டிருந்தவை. இது எங்களுக்கு முக்கியமானது. தங்கட வலிகளைப் பிள்ளைகள் அம்மா அப்பா Black July இல பட்ட  ஒரு வலியாக இருக்கலாம் அல்லது அவர்களது உறவினர் 2009 இல பட்ட அவலமாக இருக்கலாம். அந்தக் கதைகளை இணையத் தளத்தில் பகிரத் தொடங்கினவை, அது ஆவணமாக்கப்படத் தொடங்கியது ஆவணமாக்கிறது ஒரு முக்கியமான பணியெண்டு நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு facebookயிலயோ, instagramஇலயோ tweeter பக்கத்திலயோ அவையள் அதை ஆவணப்படுத்தத் தொடங்கினாப் பிறகு நிறையப் பேர் அதைப் பரப்பி அதைச் share பண்ணிக் கொண்டிருந்த போது அரசியல் மட்டத்தில அது நிறையப் பேரைப் போய்ச் சேர்ந்தது. அது தான் முதல் வெற்றியாக இருந்தது. அதை மக்கள் சக்தி எண்டு தான் சொல்ல வேணும்.

DYr8UfvXcAEFOSc-225x300.jpeg

இரண்டாவது Ontario Government உம் Premier Doug Ford உம் 2020 ஓகஸ்ட் மாசம் எல்லாத் தமிழ் ஊடகங்களையும் சந்திச்சவர். 13, 14 தமிழ் ஊடகங்களைச் சந்திச்ச போது தமிழ் ஊடகங்கள் கேட்டது – தமிழின அழிப்புச் சட்டமூலம் வந்திருக்குது அதைப்பற்றி நீங்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறீங்கள் எண்டு சொல்லும் போது அவர் அப்ப, நான் அவருக்குப் பக்கத்தில நிண்டனான். அவருக்குத் தெரியும் மக்களுக்கு இது முக்கியமான ஒரு தேவை எண்டு – அப்ப முதலே எனக்கு அவர் சொல்லேல்ல. தமிழ் ஊடகங்களுக்கு open ஆகச் சொன்னவர். Genocide is a terrible thing. It should not happen in Sri Lanka. It should not happen anywhere in the world என்ன செய்தெண்டாலும் I will take it to the third reading all the way pass பண்ணுறதுக்கு நான் help பண்ணுறன் எண்டு ஓகஸ்ட் மாதம் 2020 சொன்னவர். கொரோனாத் தொற்று உச்சகட்டத்தில இருக்கிற காலகட்டத்தில தமிழ் ஊடகங்களுக்கு வீடியோவில record பண்ணேக்க சொல்லியிருக்கிறார். அப்ப எங்களுக்கு ஒரு பூரிப்பாய் இருந்தது. எனக்கும் ஒரு பெருமையாய் இருந்தது. இப்படி வந்து தமிழ் ஊடகத்துக்கு முன்னால சொல்லறது எண்டது.

vijay-thani.jpg

அந்த வீடியோ வெளியில வந்தாப் பிறகு இலங்கை அரசாங்கத்தினது அழுத்தம் எண்றது எத்தனையோ மடங்காய் அதிகரித்திருந்தது. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் எல்லா நாடுகளிலயும் அவர்கள் அப்படியான வேலைகளைச் செய்வார்கள். மக்களுடைய பலமும் ஒன்ராறியோ Premier Doug Ford உம் இருக்கும்போது ஏனைய வேறு இன சட்டசபை உறுப்பினர்களும் இதுக்கான ஆதரவும் கூடத் தொடங்கினது. ஆப்படியான ஆதரவுகளால தான் இப்ப இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கேள்வி – இது சட்டமாகி அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், எந்த விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்? எப்படிப்பட்ட செயற்பாடுகளில் நீங்கள் இப்போது ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்?

பதில் – சட்ட ரீதியான ஒரு பொறிமுறை ஒன்ராறியோவில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் எப்படியென்றால், 250 ஆண்டுகளின் பின்னர் எங்கள் தலைமுறை, தலைமுறை தாண்டிய பின்னரும் இந்தச் சட்டம் ஒன்ராறியோவில் சட்டமாகவே இருக்கப் போகின்றது. உதாரணமாக இலங்கை அரசாங்கம் எப்படி Sinhala Only Act என்ற சட்டத்தைக் கொண்டு வந்ததோ Standardization என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்ததோ அவற்றைப் போல இப்போ இன அழிப்பைப் பற்றியதொரு சட்டம். இது எப்படியெனில், ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு யூத மக்களுக்கு நடந்தது  இனவழிப்பு என்பதை ஒரு பாடமாகப் படிக்கின்றார்களோ அதே போல தமிழ் மக்களுக்கு நடந்தது ஒரு இன அழிப்புத் தான் என்பதை பாடமாகப் படிப்பதற்குரிய ஒரு வாய்ப்பு இதன் மூலமாக வந்திருக்கின்றது. இதற்குப் பின்னர் இங்கு இருக்கும் எங்கள் தமிழ் மக்கள், புத்திஜீவிகள், வழக்கறிஞர்கள், கல்வியியலாளர்கள், மனநலம் சார்ந்து வேலை செய்பவர்கள் எல்லோரும் ஒன்றாக  சேர்ந்து இங்கு இருக்கும் கல்வி சபைகளில் அவர்களுடன் இணைந்து இதற்கான ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கும் போது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு வாரத்தில் எல்லாக் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

WhatsApp-Image-2021-05-16-at-3.22.40-PM-

ஒரு சரியான பாடத் திட்டத்தை ஒரு சமூகமாக வந்து முன்வைக்கும் போது, அவர்கள் Professionals  முன்வைக்கும் போது, கல்விச் சபை அதை ஏற்றுக் கொள்ளும். கல்விச் சபைக்கு மேலாக இருக்கும் ஒன்ராறியோ அரசாங்கம் அதை சட்டமாகக் கொண்டு வந்திருக்குது. இது முதலாவது.

இரண்டாவதாக கல்லூரிகளில university களில படிப்பை முடித்து post graduate படிப்பு படிக்கிறவர்களாக இருக்கலாம். அவர்கள் Masters அல்லது PhD படிக்கும் போது ஒரு Thesis பேப்பரில் தமிழின அழிப்பை சார்ந்த ஒரு தலைப்பை எடுத்து, அதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். அதற்கான நிதியுதவியை இங்கு இருக்கும் தமிழ் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து கொடுத்து உதவ வேண்டும்.

எப்படி இதை மேற்கொள்ள வேண்டுமென்றால், ஒருவர் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டால், அதை வைத்து அடுத்த ஐந்து பேர் இதை மேற்கொள்ள வேண்டும். பின்னர் இது 25ஆக மாறும். ஒரு பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கூட இந்த ஆய்வுக்கான நிதிக் கொடுப்பனவைக் கொண்டு வரவேண்டும்.

வெளியில் இதைப் பார்த்தால், ஒரு சிறிய பாடசாலையில் ஒரு ஆக்கம் செய்யும் போது, யூலையில் நடந்த  ஒரு அப்பாவின் வலியை சொல்லும் போது,  அதே இடத்தில் அந்தப் பிள்ளையிடம் இதை மாற்றம் செய்யுங்கள், இது மிகைப்படுத்தப்பட்டதாக உள்ளது என அநேக இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இனிமேல் அப்படி யாரும் சொன்னால், அவர்கள் தான் சட்டத்திற்குப் புறம்பானவர்கள் என்பார்கள். ஏனெனில், இது தற்போது ஒரு சட்டமாக வந்துள்ளது. சட்டத்திற்கு உட்பட்டதாக இது மாறி விட்டது என்று சொல்லலாம்.

வெளியில் தமிழின அழிப்பு இல்லை என்று நிராகரிப்பதால் அதிகமானவர்கள் இது பற்றிப் பேசுவதில்லை. ஒரு பொது இடமாக இருக்கலாம். மே 18இல் நாங்கள் நினைவேந்தல் செய்யும் போது யாராவது தகாத வார்த்தைகளால் சொன்னால் கூட அது ஒரு hate crime இற்குள் உட்படுத்தப்படும். அதாவது ஒரு சமூகத்திற்கு, ஒரு இனத்திற்கு எதிரான  discriminaiton ஆகப்பார்க்கக் கூடும். ஏனெனில், அது அரசாங்கத்தால் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் என்பதை எப்படியும் எமது மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம்.

Capture.JPG-1-1-300x173.jpg

இது நடந்து முடிந்த பின்னர் கனடாவின் முக்கிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ஒருவர் தனது ருவிற்றர் பக்கத்தில் ஒரு ஆய்வை போட்டிருந்தார். அதற்கு அந்தப் பல்கலைக்கழகம் இது ஒரு குற்றம் சாட்டப்பட்ட இன அழிப்பு (Alleged genocide) என பதிவிட்டிருந்தது. அப்போது அவர் குறித்த பல்கலைக்கழகத்திற்கு ருவிற்றர் பக்கத்தில் பதில் அளிக்கையில், நேற்றைய தினம் இந்த சட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் Alleged genocide எனப் போட வேண்டாம். எனது பதிவில் அவ்வாறு போடப்படவில்லை. ஆனால் பல்கலைக்கழகம் அவ்வாறு போட்டுள்ளது. இந்தச் சட்டத்தை குறியீடாக வைத்து சிபார்சு செய்யுங்கள் என்று சொல்லிய சில மணி நேரத்தில் அந்த பல்கலைக்கழகம் அந்தக் குறியீட்டைப் பார்த்து விட்டு Alleged genocide என்ற வார்த்தையில் Alleged  என்ற வார்த்தையை எடுத்து  genocide தான் இலங்கையில் நடந்திருக்கின்றது என்று கூறி ருவிற்றர் பக்கத்தில் மாற்றம் செய்துள்ளனர். இதை உதாரணமாக சொல்கிறேன். ஏனென்றால், இதற்கு முன்னர் பல்கலைக்கழகம் இதை உறுதிப்படுத்துவதற்கு ஆவணங்கள்  இல்லை என்று கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அதற்கான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டைக் காட்டும் போது ஒரு வழக்கறிஞர் கூட வழக்கிற்கு இதை வைத்து வாதாடக்கூடிய வாய்ப்பு உள்ளது.

கேள்வி –  முதல் தடவையாக எங்கள் தாயகத்திற்கு வெளியில் எங்களின் ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அந்த அநீதி ஒரு இனவழிப்பு என்று சொல்லி ஒன்ராறியோ நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும்? எங்கள் ஈழத்தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிக்கின்றார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

Capture.JPG2_-300x241.jpg

பதில் – எங்கள் தமிழ் உறவுகள் உலகப் பந்தில் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எல்லாத் தமிழ் மக்களும் இந்த ஒரு நோக்கத்திற்காகவே பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கான நீதியைத் தேடித்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். கனடாவிலுள்ள ஒன்ராறியோ நாடாளுமன்றத்தில் வந்த இந்த சட்டமூலம் இந்தப் பயணத்திற்கு ஒரு வலுச் சேர்த்திருக்கின்றது என நான் நினைக்கிறேன். இந்த உத்வேகத்துடன் வேறு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்கள் அந்தந்த நாடுகளிலும் எமது மக்களுக்கு நிகழ்ந்த இனஅழிப்பு தான் என்பதை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கு இருக்கின்றது.

இது 2021 மே 12ஆம் திகதி சட்டமாக நிறைவேற்றப்பட்டது. 13ஆம் திகதி அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் இருக்கின்ற வேற்றின பாராளுமன்ற உறுப்பினரும் (Hugh McDermott) இப்படியான ஒரு தனிநபர் பிரகடன சட்ட மூலத்தைக் கொண்டு வரவேண்டும் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் எப்போதும் தமிழ் மக்களுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர். அவரின் அந்தக் காணொளியை நாங்கள் பார்த்துள்ளோம். அது தான் தமிழ் மக்களின் வெற்றி என நினைக்கின்றேன். ஏனெனில், ஒரு இடத்தில் செய்தால், அதை எல்லா இடமும் செய்யும் ஆற்றல் வளம் எங்கள் தமிழ் மக்களிடம் இருக்கின்றது.

ஒன்ராறியோ மாகாணம் போல் Quebec மாகாணத்திலும் நிறைய தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதேபோல் கனடாவின் தேசிய மட்டத்தில் இதை அங்கீகரிக்கக்கூடிய நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுப்பார்கள் என்று நிச்சயமாக எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அது தான் எங்கள் தமிழ் மக்களின் ஒற்றுமையாக இருக்கும். எங்களின் இளையோரின் வீச்சாகவும் இருக்கும் என நான் நம்புகின்றேன்.

உங்களின் கடுமையான ஒரு வேலைப் பழுவிலும் நீங்கள் எங்களின் இலக்கு வாசகர்களுக்கு உங்கள் நேர்காணலை தந்தமைக்காக நன்றி. எங்கள் இலக்கு நிர்வாகம் சார்பாகவும், வாசகர்கள் சார்பாகவும் எங்கள் வாழ்த்தைத் தெரிவிக்கின்றோம். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் பன்னிரெண்டாவது ஆண்டை இன்னும் இரண்டு நாட்களில் நினைவுகூரப் போகின்றோம். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் எங்களின் மக்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தருகின்றதொரு விடயமாகத் தான் இது இருக்கின்றது. அதை நீங்கள் பல சவால்கள், தடைகளைக் கடந்து நீங்கள் முன்னெடுத்திருக்கின்றீர்கள். எங்கள் இலக்கு மின்னிதழ் சார்பாக எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம். உங்கள் செயற்பாடுகள், விடயங்களை எங்கள் வாசகர்களுக்கு எடுத்துச் செல்ல நாங்கள் தொடர்ந்தும் பயணிப்போம். இந்த நேரத்தை நீங்கள் ஒதுக்கித் தந்தமைக்கு மிகவும் நன்றி.

நீங்கள் என்னுடன் தொடர்பு கொண்டு இலக்கு மின்னிதழில் இந்தப் பதிவையும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தமைக்கு நன்றி. நீங்கள் போட்ட பாதையில் தான் இளையோர்கள் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த இடத்தில் இலக்கு வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஏனெனில், எல்லா நாடுகளிலும் இளையோர் முன்வந்து மக்களுக்கு ஒரு விடயத்தை செய்யும் போது, அதை தட்டிக் கொடுப்பதற்கு நிறைய ஊடகங்கள், அமைப்புகள் எங்களுக்கு உதவி செய்கின்றது. இலக்குப் பத்திரிகைக்க நன்றி.

நாங்கள் எவ்வளவு தடைகள் வந்தாலும், எவ்வளவு நெருக்குவாரங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் உலகத் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த 18ஆம் திகதி இனஅழிப்பில் கொல்லப்பட்ட எங்கள் மக்களுக்கான  சுடரை ஏற்றுவோம். மே 18 என்பது எங்கள் மக்கள் மேல் உறுதி எடுக்கின்ற நாள். இந்த நீதிக்கான பயணத்தில் நாங்கள் அனைவரும் தொடர்ந்து பயணிப்போம் என்று சொல்லி விடைபெறுகிறேன்.

 

 

https://www.ilakku.org/?p=49718

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.