Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் பார்வை | சாணிக் காயிதம் - ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு பழிவாங்கல் படலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
796428.jpg  
 

ரத்தம் தெறிக்க, அலறல் சத்தம் ஒலிக்க, வெறி அடங்கும் வரை தேடித் தேடி நடத்தப்படும் பழிவாங்கும் படலம்தான் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'சாணிக் காயிதம்' படத்தின் ஒன்லைன்.

கடலை வெறித்துப் பார்த்தபடி, பீடியை பற்றவைத்துக்கொண்டு ஆசுவாசமாக நின்றுகொண்டிருக்கிறார் சங்கய்யா (செல்வராகவன்). அருகிலிருந்த அறையிலிருந்து சங்கரய்யாவை நோக்கி பொறுமையாக நடந்து வருகிறார் பொன்னி (கீர்த்தி சுரேஷ்). எந்த வித பதற்றமும் இல்லாமல், 'உயிரோட எரிக்கணும் மண்ணெண்ணய கொடு' என கேட்கிறார். பொறுமையாக சம்பந்தபட்டவரை எரித்து முடித்து அவர்கள் அங்கிருந்து நடந்து செல்லும் வரை அந்த 'சிங்கிள் ஷாட்' நீண்டுகொண்டேயிருக்கிறது. திரையிலிருந்து அகலாமல் பார்த்துக்கொள்ளும் அந்த 'சிங்கிள் ஷாட்' மூலமாக நம்மை கைப்பிடித்து அவரது உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

அவரது அந்த உலகத்தில் கத்தியும், தோட்டாவும், துப்பாக்கியும், ரத்தமும் நிரம்பிக் கிடக்கின்றன. அந்த உலகத்தில் காவல் துறை அதிகாரியான பொன்னியின் குடும்பம் தடயமேயில்லாமல் அழிக்ககப்படுகிறது. பொன்னியும் சிதைக்கப்படுகிறாள். அதேபோல சங்கரய்யாவின் குடும்பமும் அழிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணாக பழிவாங்கும் வேட்கையோடு இருக்கும் பொன்னியுடன் சங்கைய்யாவும் இணைகிறார். இருவரின் நோக்கமும் ஒன்றுதான். அது பழிவாங்குதல்!

அந்தப் பழிவாங்கும் படலத்தை அவர்கள் எப்படி நிகழ்த்திக்காட்டுகிறார்கள் என்பதை 2.15 மணி நேரம் சினிமாவாக ரத்தமும் சதையுமாக திரைக்கதையால் எழுதியிருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.

16518378113078.jpg

பொன்னியாக கீர்த்தி சுரேஷ். இனி இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் இருக்கும் ஒருவராக உடல்மொழியாலும், அழுகையாலும், கோபத்தாலும், வெறியாலும் அந்த உணர்வுகளை நமக்கு கடத்துகிறார். இழப்பிற்கு முன் வேறொருவராகவும், இழந்த பின் மற்றொரு பொன்னியாகவும் இரு வேறு உணர்வுகளையும் கச்சிதமாக நமக்கு கடத்துகிறார். இவ்வளவு கொலை வெறியுடன் பெண் ஒருவர் கூர்தீட்டப்பட்ட கத்தியாக நடித்திருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிது. 'பழிவாங்குறதுன்னா என்னான்னு தெரியுமா?' என அவர் பேசும் சிங்கிள் ஷாட் காட்சி மிரட்டல் வடிவம்.

சங்கய்யாவாக செல்வராகவன். எல்லாமே கைமீறிவிட்டது என உணர்ந்து கதறி அழும் தருணத்தில், செல்வராகவன் எனும் நடிகரை தமிழ் சினிமா இத்தனைக் காலம் இழந்திருப்பதை உணர முடிகிறது. சண்டைக்காட்சிகளிலும், பொன்னியிடம் சண்டையிடும் காட்சிகளிலும், அசால்ட்டாக கொலை செய்வது என ஸ்கோர் செய்கிறார் செல்வராகவன். இரண்டு பேரும் இணைந்து முழுப்படத்தையும் சுமந்து செல்கின்றனர். இவர்களைத் தவிர, 'ஆடுகளம்' முருகதாஸ், வினோத் முன்னா,'அசுரன்' ஜேகே, விஜய் முருகன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு படத்துக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

நான் லீனியர் பாணியில் பயணிக்கும் கதையை சின்ன சின்ன டைட்டில் மூலம் பாகம் பாகமாக விவரிக்கிறார் இயக்குநர். அத்தோடு பழிவாங்கும் உணர்வை நமக்கும் சேர்த்து கடத்துவதால் படத்துடன் எளிதாக ஒன்ற முடிகிறது. கீர்த்தி சுரேஷ் குற்றவாளிகளை கொல்லும் காட்சிகளில், நமக்கும் அவருக்கு இருக்கும் அதே பழிவாங்கும் உணர்ச்சி ஒட்டிக்கொள்வது திரைக்கதையின் பலம். வழக்கமான பழிவாங்கும் கதையை அதன் திரைக்கதை வாயிலாகவும், படத்தின் மேக்கிங் மூலமாகவும் கவனிக்கவைக்கிறார் இயக்குநர். இடையில் குவென்டின் டாரான்டினோ படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வும் சிலருக்கு எழலாம்.

16518378763078.png

கதை சொல்லும் பாணியை அழகாக்குவதே அந்த ஃப்ரேம்கள்தான். அடிக்கடி வரும் சிங்கிள் ஷாட் காட்சிகள், ப்ளாக் அண்ட் ஒயிட் ஃப்ரேம்கள், ஒயிடு ஆங்கிள் ஷாட்ஸ் என யாமினி யக்ஞமூர்த்தியின் ஒளிப்பதிவு தரம். ரத்தம் தோய்ந்த கத்தியில் சாம் சிஎஸ்-சின் இசையும் ஒட்டிக்கொண்டு, காட்சிக்களுக்கான உணர்வை கடத்த உதவுகிறது. நாகூரான் ராமசந்திரன் எடிட்டிங், சவுண்ட் எஃபெக்ட் என தொழில்நுட்ப ரீதியாக எந்த குறையுமில்லாமல் படம் பயணிக்கிறது.

சாதிய பாகுபாட்டை மையமாக வைத்து நகரும் இந்தப் படத்தில், ஒரு பெண் வேலைக்கு செல்வதையும், போலீஸாக இருப்பதையும் ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற ஆண், பெண் வேறுபாடும் பேசப்படுகிறது. கொலையாளிகளைப் பொறுத்தவரை, கீர்த்தி சுரேஷை பெண் என்ற அடிப்படையில், அசால்ட்டாக கடக்கும் ஆண்மையவாதிகளாக காட்சிப்படுத்தபடுகிறார்கள். ஆணாதிக்கம் மற்றும் சாதிவெறியின் இருமுனைச் சுமைகளை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும் படம் விளக்குகிறது.

மன உறுதிமிக்க அடல்ட் ஆடியன்ஸை குறிவைத்து அருண் மாதேஸ்வரன் தனது 'ராக்கி', 'சாணிக் காயிதம்' படங்கள் மூலமாக திரைத்துறையில் தனக்கான அடையாளத்தை நிறுவியிருக்கிறார். வன்முறையைக் காட்சிப்படுத்துவதில் தனித்துவ பாணியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவதிலும் கவனமும் பெற்றிருக்கிறார்.

முதல் பார்வை | சாணிக் காயிதம் - ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு பழிவாங்கல் படலம் | Saani Kaayidham movie review - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் வந்த திரைப்படத்தில் சிறந்தது எனலாம். வெள்ளிக்கிழமை பார்த்தது இன்னும் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சாணிக் காயிதம்

ஆர். அபிலாஷ்

280065979_10222161913661452_1517930843008459381_n.jpg
 

 

தமிழில் எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ஒன்று என இதை மனம் திறந்து பாராட்டுகிறேன். அதற்கான காரணங்கள் இவை:
1) ஒவ்வொரு சட்டகமாக இவ்வளவு அழகாக, அர்த்தம் பொருந்தியதாக ஒரு படத்தைப் பார்த்து சில வருடங்கள் ஆகின்றன (கடைசியாக மிஷ்கினும், ராமும், ரஞ்சித் “காலாவிலும்” செய்திருந்தார்கள்.) முதல் காட்சியின் சட்டகத்தில் இருந்து கடைசிக் காட்சித் துளி வரை ஒரு தொடர்ச்சி இருக்கிறது. ஒரு நேர்த்தியான, திட்டவட்டமான காட்சி மொழி இருக்கிறது. குறிப்பாக, துவக்கத்தில் இருந்தே (அதாவது பழிவாங்கும் படலம் துவங்கும் போதிருந்தே) பொன்னியும் சங்கையாவும் ஒரு சதுர சட்டகத்தின் வழியாகவே உலகைப் பார்க்கிறார்கள். அது ஒரு ஜன்னலாகவோ கார் ஜன்னலாகவோ இருக்கிறது. மற்றொரு காட்சியில் வில்லனின் ஆட்கள் தொலைநோக்கி வழியாக கடலில் நின்றெரியும் படகைப் பார்க்கையில் அந்த சட்டகம் வட்டமாக இன்றி சதுரமாக இருக்கிறது. இது எதார்த்தமில்லையே என சிலருக்குத் தோன்றலாம். ஆனால் இப்படத்தின் கூறுமொழி ஒரு மீஎதார்த்தத்தினால் ஆனது. இந்த இடத்தில் இவர்களும் பொன்னியையும் சங்கையாவையும் போன்றே பழிவாங்கும் தூய்மையான, நோக்கமற்ற வன்முறைக்குள் வந்து விட்டார்கள் என்று இயக்குநர் உணர்த்துகிறார்.
மற்றொரு காட்சியில், ஒரு நிழல் கவிந்த சுவர் ஓரத்தை காட்டுகிறார்கள். அதை அடுத்து அங்கு பொன்னி, சங்கையாவின் மெட்டாடர் வேன் வந்து நிற்பதைக் காட்டுகிறார்கள். பெரும்பாலான படங்களில் இது ரிவர்ஸாகவே இருக்கும். ஆனால் இங்கோ ஏற்கனவே ஒளியும் இருளும் கலந்த உலகினுள் அவர்கள் வந்திறங்குவதைக் குறிக்கும் நோக்கில் இப்படி சித்தரிக்கிறார்கள். இப்படியே எத்தனையோ தருணங்கள் படத்தில் உள்ளது. ஒவ்வொன்றையும் பற்றி எழுதினால் நூறு பக்கங்களாவது வரும். அந்தளவுக்கு மெனக்கெட்டிருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.
2) படத்தில் குடும்ப செண்டிமெண்டுகள், பாடல்கள் இல்லை. நகைச்சுவை இல்லை. பின்னணி இசை தேவையான இடங்களில் மட்டுமே உள்ளது. இதை இனி வரும் படங்களிலும் இயக்குநர்கள் பின்பற்றினால் நன்றாக இருக்கும். பாடல்களை தனி ஆல்பமாக வெளியிடுவதே சிறந்தது. ஏனென்றால் பெரும்பாலான படங்களில் பாடல்கள் உணர்ச்சிகளை மிகைப்படுத்த, கதையோட்டத்தை தடைசெய்யவே பயன்படுகின்றன. குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளும் அப்படித்தான்.
3) பொதுவாக பிளேஷ்பேக்குத் தான் கறுப்புவெள்ளை வண்ணத்தை பயன்படுத்துவார்கள். ஆனால் அருண் இரு முக்கிய பாத்திரங்கள் முழுக்க வன்முறையில், கசப்பில், ஆறாத வடுக்கள் பற்றின நினைவுகளில் மூழ்குவதைக் காட்ட பயன்படுத்துகிறார். இது ஏற்படுத்தும் அதிர்ச்சியும், தாக்கமும் வலுவானது. கறுப்பு வெள்ளைக் காட்சிகள் வரும்போதெல்லாம் யாரோ ஊசியால் என்னைக் குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டது.
3) மோனோகுரோம் நிற அமைப்பும் பாராட்டத்தக்கது. இது பல பின்நவீன படங்களில் வருவது தான் என்றாலும் இப்படத்தில் பாத்திரங்களின் உளவியலை உணர்த்த சரியாக கொண்டு வரப்பட்டுள்ளது.
4) அந்த கடற்கரை ஷாட்டுகள், அதில் சிறுவயது பொன்னியும் அவள் அம்மாவும் தனியாக நடந்து போவது, சங்கையா ஒரு சிறுவனாக ஒரு மணற்குன்றின் மீதேறி அவர்களைப் பார்ப்பது, ஷாட் மெல்ல மெல்ல விரிந்து அதன் ஓரத்தில் சங்கையா வந்து தேய்ந்து மறைவது அற்புதமான காட்சி. சில நொடிகளில் அவர்களுடைய வாழ்வின் விளிம்பில் அவன் இருக்க விரும்புவதும், ஆனாலும் மறைய நேர்வதும் காட்டப்படுகிறது. (ஹிந்து விமர்சனத்தில் ஶ்ரீவத்ஸன் சொல்லுவதைப் போல பெர்க்மேனின் சாயல் இதில் உள்ளது தான்.) பல இயக்குநர்கள் இதைக் காட்ட வசனங்கள், ஒரு “ஓஓஓ” என்று ஒப்பாரிக் குரலில் பாடல், கண்ணீர்த் துளிகள் திரண்ட கன்னங்கள் என (விஜய் டிவி பாணியில்) பெரும்பிரயத்தனம் செய்திருப்பார்கள். அருணுக்கு இந்த எக்ஸ்டிராஸ் இல்லாமல் ஒளிப்பதிவை மட்டும் கொண்டு சிக்கனமாக கதை சொல்லத் தெரிகிறது.
5) பிளேஷ்பேக்கை தமிழ் சினிமாவில் மிக மோசமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என முன்பு ஒருமுறை எழுதி இருந்தேன் அல்லவா, இப்படத்தில் பிளேஷ்பேக் அட்டகாசமாக உள்ளது. இரண்டு பிளேஷ்பேக்குகள் வருகின்றன: அ) பொன்னிக்கு நடக்கும் பாலியல் தாக்குதல், அவளது குடும்பம் உயிருடன் எரிக்கப்படுவது. ஆ) பொன்னியும் அவளது அம்மாவும் அவளது அப்பாவின் முதல் மனைவியால் துரத்தப்படுவது, சாபத்துக்குள்ளாவது. இதை நான்லீனியராக படம் முழுக்க சொல்கிறார்கள். இது பிளேஷ்பேக் கதைகூறலுக்கு இடைஞ்சலாகாமல் இருக்க உதவுகிறது. அடுத்து மொத்த படத்தையும் பொன்னியின் நினைவுகூறலாகப் பார்க்க வழிவகுக்கிறது. அதாவது பிளேஷ்பேக்குக்குள் பிளேஷ்பேக்குக்குள் பிளேஷ். எப்படி!
6) படத்தில் உள்ள தூய்மையான, தர்க்க நியாயமற்ற வன்முறை பற்றி சொன்னேன் அல்லவா, இது எதார்த்த சினிமாவுக்கு விரோதமான ஒன்று என்பதால் தமிழில் வெகு அரிதாகவே இது காட்டப்படுகிறது. பொன்னியையும் அவளது குடும்பத்தையும் வில்லன்கள் தாக்குவதற்கு, அழிப்பதற்கு எந்த காத்திரமான, தர்க்கரீதியான காரணமும் இல்லை. முகத்தில் துப்பியதற்கான எவனாவது ஒரு குடும்பத்தை நெருப்பிட்டு கொளுத்தி, ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் பண்ணுவானா? பண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள் நம் நாட்டில். சொல்லப் போனால் 99% வன்முறையும் எந்த தர்க்கத்துக்கும் உடன்படாததே - சினிமாவில் மட்டுமே ஒரு காரணத்தை வலிந்து புனைகிறார்கள். அருண் சாதியத்தையும், காமத்தையும், ஆண் மீதான வன்மத்தை பெண்ணுடலில் செயல்படுத்திப் பார்க்கும் விருப்பத்தையும் இந்த காட்சிகளில் கோர்க்கிறார். இது நம் நெஞ்சில் வந்து அறைகிறது.
அதே போல பொன்னியும் அவளுடன் அவள் அண்ணன் சங்கையாவும் பழிவாங்கலாம் என முடிவெடுக்கும் தருணம் வெற்றிமாறனின் “அசுரனில்” போல இனிமேல் ஓட இடமில்லை எனும் நிலையில் அல்ல. வில்லன்கள் வக்கீல் மற்றும் போலீசின் துணையுடன் தப்பித்துப் போகிறார்கள். அவ்வளவு தான், இனி நானே கொல்லுகிறேன் என பொன்னி முடிவெடுக்கிறாள், அவளுடன் சங்கையாவும் கைகோர்க்கிறான். எவ்வளவு எளிதாக அந்த தருணத்தை காட்டி விட்டார் இயக்குநர். தேவையில்லாத டிராமா, கண்ணீர், கொந்தளிப்பு இல்லை. இவ்விதத்தில் “சாணிக் காயிதம்” எனக்கு புரூஸ் லீயின் Return of the Dragonஐ நினைவுபடுத்தியது.
7) அதே நேரம் மலையாளப் படமான “களாவில்” (கூடவே சில உலகப்படங்களில்) நாம் கண்ட தூய்மையான வன்முறை இப்படத்தில் இல்லை, இதைப் போய் ஏன் அதிக வன்முறை என்று மக்கள் முத்திரை குத்துகிறார்கள் எனப் புரியவில்லை. நான் பார்த்ததிலேயே மிகக்குறைவான வன்முறை கொண்ட படம் இது தான். தனியாக உருளும் தலை, மெல்ல மெல்ல அடங்கும் உடல் என எதையும் காட்டவில்லை. பொன்னி பார்க்க, நினைக்க விரும்பும் வன்முறை தருணங்கள் மட்டுமே படத்தில் வருகின்றன.
😎 மகாபாரதக் கதையின், பாரதியின் “பாஞ்சாலி சபதத்தின்” இன்னொரு வடிவமே “சாணிக் காயிதம்”. ஆனால் நீதிக்கான கொந்தளிப்புகள், கூக்குரல்கள் இல்லாத வடிவம். சொல்லப் போனால் மகாபாரதக் கதையில் கூட நாம் இன்று பேசுகிற அறம், நீதி போன்றவை இல்லை. இதை உணர்த்தும் நோக்கில் மூன்று தருணங்கள் வருகின்றன:
அ) பொன்னியும், சங்கையாவும் தம் பட்டியலில் உள்ளவர்களைக் கொன்று விட்டு அடுத்து என்ன பண்ணலாம் என்று பேசிக் கொள்வது. அப்போது சுட்டப்படும் வெறுமையானது பாரதப் போருக்குப் பின்னர் பாண்டவர்களும் மீதமாகும் (திருதராஷ்டிரர் உள்ளிட்ட) கௌரவர்களும் உணரும் வெறுமையே.
ஆ) திருதராஷ்டிரரை உணர்த்துவதற்காக சுடலை எனும் பார்வையற்ற சிறுவனை கதைக்குள் கொண்டு வருகிறார்கள். அவர்கள் சதா யாரையாவது சார்ந்திருக்கிறான். முதலில் தன் குடிகார அப்பாவை, அடுத்து தன் அப்பாவைக் கொல்ல விரும்பிய, தன்னையே கொல்ல நினைக்கிற சங்கையாவை. அவனுக்கு யாரிடத்தும் ஒரு பிடிப்பு உள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு மோசமான நிகழ்வை அவன் தன் பார்வையற்ற கண்களால் ‘பார்த்திருக்க’ நேர்கிறது. அவன் அப்போது தன்னால் இயன்ற நன்மையை செய்ய முயல்கிறான், ஆனால் அவனால் அது இயல்வதில்லை. இது படத்தின் கிளைமேக்ஸில் காட்டப்படுகிறது. இந்த அத்தியாயத்துக்கு அருண் “ஆயிரம் பார்வைகள்” என பெயரிட்டிருக்கிறார். இதன் வழி திருதராஷ்டிரர் தன் சபையில் பாஞ்சாலி அவமதிக்கப்பட்ட போது உணர்ந்த மனநிலையை மீள்வாசிப்பு செய்திருக்கிறார்கள். நீதியின் கண்கள் எப்போதும் பார்வையற்றவை தாம், ஆனால் அதையும் மீறி அதில் சிறிது கருணை இருக்கலாம் என்கிறார். பொன்னி அவனை ஏற்கிற இடத்தை நியாயப்படுத்த இந்த உண்மை வெளிப்படும் தருணம் உதவுகிறது. அதே நேரத்தில் கதையின் மொத்த போக்குடன் பொருத்தப்படாமல் இருந்தாலும் முத்தாய்ப்பாக, மனதைத் தொடும், வாழ்க்கைக்கு அர்த்தம் அளிக்கும் விதமாக படத்தை முடிக்கவும் இது உதவுகிறது. எப்படி ஆயினும் பார்வையற்றவனின் ஆயிரம் பார்வைகள் எனும் உருவகம் தொடர்ந்து நம்மை தொந்தரவு செய்தவதாக உள்ளது. இந்த ஒரு இடத்துக்காக இப்படம் நமது வரலாற்றில் நீடித்திருக்க வேண்டும்.
இ) கடைசி வில்லனைக் கொல்லும் இடத்தில் புரொஜெக்டரின் ஒளியில் குருதித் துளிகள் பீய்ச்சியடிக்க சிவப்பு மழையில் நனைந்தபடி அனுபூதி அடையும் தருணம் அப்படியே துரியோதனனின் குருதியை தன் கூந்தலில் பாஞ்சாலி பூசும் இடத்தை நினைவுபடுத்துகிறது.
“சாணிக் காயிதத்தின்” ஒளிப்பதிவுக்காக நிச்சயம் யாமினிக்கு தேசிய விருது அளிக்கப்பட வேண்டும்.
இந்த படத்தை மிஸ் பண்ணாதீங்க!
 
On 5/10/2022 at 01:23, Kavi arunasalam said:

இந்த வருடம் வந்த திரைப்படத்தில் சிறந்தது எனலாம். வெள்ளிக்கிழமை பார்த்தது இன்னும் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

எனக்கும் பிடித்துள்ளது. 

இதே இயக்குனர எடுத்த ராக்கி திரைப்படம் இப் படத்தை விட அதிகமாக பிடித்துள்ளது ( இறுதிக் காட்சியை தவிர)

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பார்வையில்லாத பையன் தன்னை தொட்டிருக்கிறான் என்னும் ஐயம் கடைசிவரை பொன்னியின் மனதில் இருக்கின்றது......நினைவில் நிற்கும் நல்ல படம்......!   👍

1 hour ago, suvy said:

அந்தப் பார்வையில்லாத பையன் தன்னை தொட்டிருக்கிறான் என்னும் ஐயம் கடைசிவரை பொன்னியின் மனதில் இருக்கின்றது......நினைவில் நிற்கும் நல்ல படம்......!   👍

இந்தப் படத்தில் எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஆதங்கம், அந்த பொலிஸ்காரனையும் மற்றவர்களை கொன்ற மாதிரி அணுஅணுவாக கொன்று இருக்க வேண்டும். அதுவும் பொன்னிதான் அதைச் செய்து இருக்க வேண்டும். ஆனால் பொன்னியின் அண்ணனால் (செல்வராகவன்) துப்பாக்கியால் சுடப்பட்டு ஒரே நொடியில் மரணிக்கின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நிழலி said:

இந்தப் படத்தில் எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஆதங்கம், அந்த பொலிஸ்காரனையும் மற்றவர்களை கொன்ற மாதிரி அணுஅணுவாக கொன்று இருக்க வேண்டும். அதுவும் பொன்னிதான் அதைச் செய்து இருக்க வேண்டும். ஆனால் பொன்னியின் அண்ணனால் (செல்வராகவன்) துப்பாக்கியால் சுடப்பட்டு ஒரே நொடியில் மரணிக்கின்றான்.

ஓம்.......எனக்கும் அந்த கவலை உண்டு.......!  😢

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்ட காலத்திற்கு முந்திய இலங்கையை நினைவுக்கு கொண்டுவருகிறது இந்தத் திரைப்படம். 

அந்தச் சிறுவர்களை எதற்காக வலிந்து திணித்தார்கள் ? கவலையாக இருந்தது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.