Jump to content

"விதவையின் கனவு"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"விதவையின் கனவு"
 
 
 
நான் பதினெட்டு வயதை தாண்டிய குமரிப்பெண்ணாக இருந்தபொழுது, காதல் , காமம் பற்றிய எண்ணங்கள் திறந்தவையாக எனக்கு இருந்தன. நான் ஒளிவு மறைவு இன்றி என் நண்பிகளுடன் சுதந்திரமாக அரட்டை அடிப்பேன். ஆனால் என் கணவர் அதற்கு எதிர்மாறு. அவர் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் பாரம்பரியமான கட்டுப்பாடுகளுடன் காணப்பட்டார். நாம் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கிய பொழுது, மூன்று நான்கு முறை சந்தித்த பின்பு தான் முதல் முத்தமே தந்தார். நானும் ஒவ்வொரு சந்திப்பிலும் அவருக்கு சில சந்தர்ப்பங்களை வழங்கியும் பார்த்தேன், ஆனால் அவர் என்னைப்பற்றி முழுதாக அறிவதிலேயே காலம் கடத்தினார். 
 
என்றாலும், காலம் மெல்ல மெல்ல நகர அவரின் புனித காதலை, உண்மையான அன்பை உணரத் தொடங்கினேன். மூன்று நான்கு மாதம் ஆகும் பொழுது, எனக்குள் இருந்த காமத்தை விட , அவர் மேல் பாசம் வளரத் தொடங்கி, என் முன்னைய சுதந்திர பறவை நிலையில் இருந்து, இவர் தான் இனி என் ஆள் என்ற உரிமை நிலை தோன்றிவிட்டது. என்னாலேயே நம்ப முடியவில்லை, எப்படி மாறினேன் என்று! ஆமாம், அவர் இல்லாமல் நான் இல்லை என்றாகி விட்டது!!
 
அவர் என் மேல் அக்கறை, பாசம் மற்றும் மரியாதையை வெளிப்படையாகவே காட்டினார். அவர் மிகவும் கனிவாகவும் உண்மையாகவும் எந்த ஒளிவு மறைவும் இன்றி என்னுடன் பழகத் தொடங்கினார். அப்ப தான் நான் வாழ்க்கை என்றால் என்ன என்பதை உண்மையில் உணர்ந்தேன், காமம், கேளிக்கை  மட்டும் வாழ்வு அல்ல, அன்புடன் , விட்டுக் கொடுப்புடன், ஒருவரை ஒருவர் புரிந்து, தங்கி, மனம் ஒத்து மகிழ்வதே வாழ்வு என்று அறிந்தேன். அது என்னில் பல மாற்றத்தையும் ஏற்படுத்தியது. 
 
பெற்றோர்கள், மூத்தோர்கள் சம்மதத்துடன் என் திருமணம் நவம்பர் மாதத்தில் சிறப்பாக நடைபெற்றது. நான் மனைவி என்ற நிலையை அடக்கத்துடன் ஏற்றுக் கொண்டேன். அவர் மீது என் ஈர்ப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மின்சாரம் போலும் இருந்தது.  நாம் இருவரும் வாழ்க்கை இன்பங்களுக்கு ஒரு ஒழுங்கு முறையில் முன்னுரிமை கொடுத்து இருவரும் அவ்வற்றை பகிர்ந்து நம்பிக்கையான மகிழ்வுடன் இருந்தோம்.
 
 
"நெஞ்சை பறித்தவன் என்னை சந்தித்தான் 
தஞ்சம் கொடுத்தேன் ஆறுதல் அளித்தேன் 
வஞ்சனை இல்லாமல் அன்பை கொட்டினான்      
கொஞ்சம் மயங்கி சந்தோசம் கண்டேன்!"  
   
"மஞ்சள் நிலாவில் குளிர் காய்ந்தோம் 
மஞ்சத்தில் நெருங்கி அருகில் இருந்தோம் 
அஞ்சா நெஞ்சத்தான் எதோ உளறினான் 
நஞ்சு கலந்து காதல் வீசினான்!"   
 
"கொஞ்சி பேசி இன்பத்தில் பூத்தான்  
வஞ்சனை இதழால் முத்தங்கள் தந்தான் 
நெஞ்சத்தை விஞ்சும் கதைகள் சொன்னான் 
பஞ்சு மெத்தையில் தழுவி உறங்கினோம்!"  
 
 
நாம் ஆறு ஆண்டுகள் பிரிக்க முடியாதவர்களாக ஒன்றாக இரு உடல் ஒரு உயிராக இருந்தோம். ஆனால் இயற்கைக்கு அது பொறுக்கவில்லை போலும், எமது ஆறாம் திருமண நாளில் கண்டறியப்படாத ஒரு குறைபாட்டால் திடீரென மயங்கி என் மடியில் விழுந்தார். அவருக்கு இதற்கு முன் எந்த உடல் குறைபாடும் வெளிப்படையாக இருந்ததில்லை. உடனடியாக வைத்தியசாலை விரைந்தாலும், போகும் வழியிலேயே அவரின் கடைசி மூச்சு நின்றுவிட்டது. அவரை எம்மால் காப்பாற்ற முடியவில்லை.  
 
எனது இருபத்தி ஒன்பது வயதில் நான் விதவை ஆகினேன். என்னால் நம்பவே முடியவில்லை. நான் இப்ப தனி ஆள். அவரின் மனைவி என்ற அடையாளம் மறைந்து விதவை தாயாகி விட்டேன். என் இரு பிள்ளைகளையும் உற்றுப்பார்த்தேன். அவர்களின் உருவில் அவரையே கண்டேன்.  நான் குமரிப் பெண்ணாக சுதந்திரமாக திறந்த எண்ணங்களுடன் இருந்த அந்த நிலையில் இப்பவும் இருந்து இருந்தால், ஒருவேளை நான், சில மாதங்கள் கழிய, துக்கம் ஓரளவு தணிய,  இன்னும் ஒரு துணை தேடி இருப்பேன். ஆனால் அவரின் அன்பு , அளவில்லா அக்கறை என்னை முற்றாக இன்று என்னை அறியாமலே மாற்றி விட்டது!
 
 
"அன்பு நெஞ்சே அரவணைத்த கையே
அயராத கண்ணே அலைந்த காலே 
ஆத்திரம் ஏனோ ஆவேசம் ஏனோ   
ஆரிடமும் சொல்லாமல் போனது ஏனோ?" 
 
"இருப்பாய் என்று இறுமாப்பு கொண்டேன்   
இருளில் இன்று மருண்டு துடிக்கிறேன்    
ஈன்ற கன்றுகள் இளைத்து வாடுகின்றன 
ஈழ  மண்ணின்  இளைய  மகனே? " 
 
"உருவம் சுவரில் தீபத்துடன் தொங்குது 
உயிர்கள் இருந்தும் பிணமாய் நடக்கிறேன் 
உந்தன் செல்லங்கள் அப்பாவை தேடுது  
ஊமையாய் ஊனமாய் எதோ வாழ்கிறேன்? "  
 
"எண்ணம் செயல் எல்லாம் நீயே 
எங்கள் வீட்டு ஆண்டவனும் நீயே 
ஏக்கம் தவிப்பு சுடுகுது எம்மை
ஏமாற்றம் தந்து பிரிந்தது ஏனோ?"  
 
 
எம் வீடு வெறிச்சோடி விட்டது. எனக்கு என் எதிர்காலம் பற்றி கற்பனை செய்யவே முடியவில்லை. அவரின் படத்தின் முன் கண்ணீர் துளிகள் விழுந்த வண்ணமே இருந்தன. என் மகனும் மகளும் அருகில் வந்து இரு கண்களையும் துடைத்து, நாம் இருக்கிறோம் என்று சொல்லாமல் சொன்னார்கள். அவர்களின் ஒவ்வொரு செய்கையும் அவரையே நினைவூட்டின. ஒரு கணவனாக என்னுடன் வாழ்ந்தவர் இரு பிள்ளைகளாக இன்று வாழ்வதைக் காண்கிறேன்!
 
இப்ப என் கனவு எல்லாம், என் கணவரின் வாரிசுகளான இருவரையும் அவர் எனக்கு சொல்லிய , காட்டிய வழியில், வளர்த்து, நல்ல நிலையில், சமுதாயத்தின் முன் இவர்கள் அவரின் பிள்ளைகள் என பெருமை அடையச் செய்வதே! கட்டாயம் அது நடக்கும். எனக்கு அவர் ஊட்டிய நம்பிக்கை மற்றும் திடம் அப்படியே இருக்கு! அவர் உடல் தான் எரிந்ததே தவிர, அவரின் வழிகாட்டல் அழியவில்லை!!
 
 
"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்"
 
 
 அன்புடன் அப்பனின் மனைவி ராசாத்தி 
 
[நான் என்னை விதவை என்று சொல்லவிரும்பவில்லை, அவர் என்னுடன் இன்னும் வாழ்கிறார்.  
இரவில் இன்னும் என்னை கட்டி அணைத்து ஆறுதல் தருகிறார். நான் தனி ஆள் என்ற உணர்வு இப்ப என்னிடம் இல்லை]  
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
316833252_10222090083903895_1955806913897253048_n.jpg?stp=dst-jpg_p417x417&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=kVT5zkpcD_kQ7kNvgENp_Cx&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD_ALrzVG_GT8YYwut4rXs1dPkjGU5u08kurr8oudfBRQ&oe=66415E53 317076792_10222090084463909_8167716572573962856_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=GhBPoZ_IKbIQ7kNvgF4jo3x&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA-4l2DfCIM7ZFgKub0QpDORnkg0x8XVY331FKBgOeAwQ&oe=66416910 441456458_10225135442235950_5702477990953703126_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Lvx-f38oq38Q7kNvgHak2Ly&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDRCAxppGkUmS00BZat4O0_Sktzsm6Ltvw_fx5lWu4aXg&oe=66413DCA
 
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.