Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
                                                                           The Sun/Son shines
                                                                                                       -  சுப.சோமசுந்தரம்
 
 
             திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றது தொடர்பாக எனது எண்ணவோட்டத்தைப் பதிவு செய்ய விழைவு. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தமட்டில் இது எப்போதோ எதிர்பார்த்த நிகழ்வோ, என்னவோ ! எனவே பெரிய அளவில் எவ்விதச் சலசலப்பும் பொதுவெளியில் நிகழவில்லை எனலாம் - ஏதோ ஒன்றிரண்டு எதிர்க்கட்சியினர் வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தமது வயிற்றெரிச்சலைக் கொட்டியது தவிர. அதுவும் இந்திய அரசியலில் வாரிசு அரசியல் என்பது ஏதோ இதற்கு முன் நிகழாத புதுமை போல.
                திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பொதுவாக வாரிசு அரசியலில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். அது ஒரு முதிர்ச்சியற்ற ஜனநாயகம் என்பதையே பிரதிபலிப்பதாக எண்ணுபவன் நான். அந்த முதிர்ச்சியின்மை அரசியல்வாதிகள் சார்ந்தது என்பதை விட மக்கள் சார்ந்தது என்பதுவே சாலப் பொருத்தம். ஒரு மருத்துவரின் மகனோ மகளோ மருத்துவர் ஆவதில் எனக்கு மாறுபாடு இல்லை. அதே போலவே ஒரு ஆசிரியருக்கும் இன்ன பிற தொழில் முனைவோருக்கும். இவ்வளவு ஏன், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தீவிர அரசியலில் இறங்குவதும் இயற்கையான ஒன்றே. ஆனால் ஒரு தலைமை மருத்துவரின் மகன் அல்லது மகள் மருத்துவரான கையோடு எடுத்த எடுப்பில் தலைமை மருத்துவர் ஆக்கப்படுவது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றோ, அவ்வாறே ஒரு ஆட்சியாளரின் மகன் அல்லது மகள் எத்தனையோ காலம் கொள்கை பிடிப்புடன் அக்கட்சியில் அல்லது ஆட்சியில் பணியாற்றியோரை ஓரங்கட்டி ஆட்சி பீடத்தில் அமர வைக்கப்படுவது ஏற்புடையதன்று. இவை எல்லாம் ஒரு முதிர்ந்த ஜனநாயகத்தில், அரசியல் முதிர்ச்சி பெற்ற மக்கள் சமூகத்தில், கொள்கைப் பிடிப்புடன் முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு கட்சிக்குப் பொருந்தி வருவது. இன்றைய அரசியல் சூழலில் நான் முன்னர் குறிப்பிட்ட பண்பட்ட அரசியல் பொருந்தி வருமா என்பது ஐயப்பாடே !
                 திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டினை அநேகமாக அத்துணைத் துறைகளிலும் முன்னேற்றிக் காட்டியது தமிழ் நிலத்திற்கான பேறு. திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் பெருகியதாகவும், மாநிலம் சீர்கேடு அடைந்ததாகவும் மாற்றார் கூக்குரலிடலாம். பூமிதானில் யாங்கணும் துலங்கிய ஊழல் இந்தியத் துணைக்கண்டத்தில் பல்கிப் பெருகியமை உள்ளங்கை நெல்லிக்கனி. இதனால் எல்லாம் ஊழலை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது என்பது ஒரு புறம். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சீரழிந்ததாகச் சொல்வதெல்லாம் முழுப் பொய் அன்றி வேறென்ன ? தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இவ்விருவரையும் சிறந்த வழிகாட்டிகளாக எண்ணும் நான் பெரிய அளவில் திமுக வின் ஆதரவாளன் என்று சொல்வதற்கில்லை. எக்காலத்திலும் அதிமுகவின் ஆதரவாளனாய் இருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை. இருப்பினும் கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார், தளபதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரு வகையில் நன்றிக் கடன் பட்டுள்ளேன். சுமார் ஐம்பத்தைந்து வருடங்களாகத் தேசியக் கட்சி எதுவும் தமிழ் நிலத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்வதைக் கனவிலும் நினைக்க முடியாமல் செய்தார்களே ! தேசியக் கட்சிகள் இங்கு ஆட்சி செய்வதில் அப்படி என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் வந்தால் நான் தேசியம் எனும் நீரோட்டத்தில் கரைய வேண்டி இருக்குமே ! தேசிய நீரோட்டத்தில் நீந்துவது ஏற்புடைத்து. கரைவதை எங்ஙனம் ஏற்பது ? நான் ஏன் எனது மொழி, பண்பாட்டு அடையாளங்களை இழந்து இந்தியன் எனும் ஒற்றைத் தன்மையில் நிற்க வேண்டும் ? உலக அரங்கில் பன்மைத்துவம்தானே இந்தியத் திருநாட்டின் தனித்துவமாக இருக்க முடியும் ? 'ஒற்றுமை உன்னதம், ஓர்மை பாசிசம்' (Unity is noble, Uniformity is fascist) என்பதே இந்திய அரசியலமைப்பு நமக்குச் சொல்லித் தருவது; உலகுக்கும் சொல்வது. வேற்றுமையிலேயே ஒற்றுமையை நிலை நாட்டுவதில் திமுகவும் அதிமுகவும் தம் பங்கினை நெடுங்காலம் செவ்வனே நிறைவேற்றின. ஆனால் அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவின் அனைத்து அணியினரும் தங்கள் சுயநலம் சார்ந்து ஒரு பாசிச அரசிடம் தம்மையும் நம்மையும் அடகு வைப்பதிலேயே குறியாய் இருப்பதாய்த் தெரிகிறது (அம்மையார் சுயநலம் அற்றவர் என்று சொல்ல வரவில்லை; தம்மையும் நம்மையும் அடகு வைக்க அவரது தன்மானம் இடம் கொடுப்பதில்லை). இத்தகைய சூழலில் மதவாத, வகுப்புவாத பாசிசத்திடமிருந்து நம்மைக் காக்க மக்கள் ஆதரவுடன் உள்ள ஒரே கட்சி - நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் - திமுக என்றே தோன்றுகிறது. எனவே திமுக மேலும் உரம் பெற்றுத் திகழ்வது - அச்சங்கிலித் தொடர் தற்போது பாதகமின்றித் தொடர்வது -  தமிழினத்தைப் பொறுத்தமட்டில் காலத்தின் கட்டாயமாகிறது. அதனைத் தொடர திமுகவில் வேறு தலைவர்கள் இல்லையா என்ற கேள்விக்கு, மக்கள் ஆதரவு பெற்றோர் வேறு இல்லை என்று ஆணித்தரமாய்ச் சொல்வதைத் தவிர வேறு வழி, ஒளி தெரியவில்லையே ! தோழமைக் கட்சிகளில் திறமையானோர், நேர்மைத் திறமுடையோர் உண்டு. இடதுசாரிகளில் உண்டு; தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் உண்டு. ஆனால் அவர்களும் பெரும்பான்மை மக்களின் ஆதரவு என்ற ஒற்றைப் புள்ளியில் அடிபட்டுப் போகிறார்களே ! சாதி பேதம் இன்றி அனைத்து சமூகத்தினருக்கான தலைவர் தொல்.திருமா என்றே சொல்லலாம். அவரையெல்லாம் 'வையத் தலைமை கொள்' என்று அழைப்பதற்குத் தமிழ் மக்கள் தம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த நிதர்சனங்களைப் புரிந்து, மற்றுப்பற்று இல்லாத மக்கட் பற்றாளராய் தொல்.திருமாவளவன் மற்றும் இடதுசாரித் தோழர்கள் தமிழ் அரசியலில் வலம் வருவது நமக்கான பேறு.
                 திமுக அரசியலில் இன்று முன்னணியில் உள்ள ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி இம்மூன்று கலைஞர் கருணாநிதி குடும்ப வாரிசுகளின் அரசியல் முகங்களும் பண்பட்டதாகவே தோன்றுகின்றன. உதயநிதி ஸ்டாலினிடம் அரசியல் முதிர்ச்சி இல்லை என்று சமீபத்தில் சங்கிகள் ஓலமிட்டது பெரும் நகைப்பானது. அவர் சநாதனம் பற்றிப் பேசியது ஒரு முதிர்ந்த திராவிட அரசியலே ? வெள்ள நிவாரணம் தொடர்பாகப் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு என்ன ஏடிஎம் மெஷினா, கேட்டவுடன் பணம் கொடுக்க ?" என்று தரம் தாழ்ந்து கூறியதற்குப் பதிலடியாக உதயநிதி, "அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் ? தமிழ் மக்கள் கொடுத்த வரிப்பணத்தைத்தானே கேட்கிறோம் ?" என்று கேட்டது கூட ஒரு அனுபவம் பெற்ற அரசியல்வாதியின் பதிலாகவே வெளிப்படுகிறது.
            எனவே சூழல்களைக் கருத்தில் கொண்டு மாற்றார்தம் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள, எத்தனை குறை கொண்டிருந்தாலும் இன்றைக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் திராவிட முன்னேற்றக் கழகமே ! நம் நம்பிக்கை வானில் உள்ள ஒளிக்கீற்று உதயநிதி ஸ்டாலின் மட்டுமே ! போகிற வரை போகட்டும்; ஆகிற வரை ஆகட்டும்.
             இதனை எழுதி முடித்து மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் எனக்கே நான் ஒரு திமுக காரனாகத் தோன்றுகிறேன். அதற்கு நான் என்ன செய்து தொலைக்க ?               

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுப.சோமசுந்தரம் said:
இதனை எழுதி முடித்து மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் எனக்கே நான் ஒரு திமுக காரனாகத் தோன்றுகிறேன். அதற்கு நான் என்ன செய்து தொலைக்க ?               

🤣..............

உங்களுக்கு மட்டும் இல்லை, இதை வாசித்து முடித்தவுடன் எனக்கும் தோழரும் திமுக அபிமானியோ என்றே தோன்றியது.............🤣

திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், முன்னே எடுத்துச் சென்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கும் கிடையாது. பெரியார் எங்கள் எல்லோருக்கும் பெரியாரே.

உதயநிதிதான் அடுத்து வரப் போகின்றார் என்பது முன்னரே தெரிந்ததே. இன்னும் சில வருடங்கள் பொறுத்து இருந்திருக்கலாம் என்பதே என்னுடையதும், பலரினதும் அபிப்பிராயம் என்றே நினைக்கின்றேன்.

உதயநிதி முன்னருக்கு இப்பொழுது பேச்சில் முதிர்ச்சி அடைந்து கொண்டு வருகின்றார். ஆனாலும், இதை விட நாகரீகமான அரசியலை இவரால் கொண்டு வரமுடியும், கொண்டு வரவேண்டும் என்பது ஒரு அவா...... 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுப.சோமசுந்தரம் said:

திரு. உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் தான் என்று பலரும் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

திமுக, வேறு கட்சிகளை வளர விடாமல் இடையிலேயை கிள்ளி எறிந்து விடும். சினிமாவில் இருந்து ஒரு தளபதி  வருகிறார். அவரை  அரசியலில் இருந்து விரட்டுகிறார்களா? அவர் தாக்குப் பிடிப்பாரா? பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசிரிய தொழிலில் இருப்பவரின் பிள்ளை ஆசிரியராக வருவதற்கும்
வைத்திய தொழிலில் இருப்பவரின் பிள்ளை வைத்தியராக வருவதையும்
ஒரு அரசியல்வாதியின் பிள்ளை அரசியல்வாதியாக வருவதையும் ஒப்பிட முடியாது.

ஏனென்றால் வைத்திய/ஆசிரிய தொழிலுக்கு வருபவர்களுக்கு படிப்பறிவும் பட்டறிவும் தேவை. படிக்காமல் கவர்ச்சி மூலம் இந்த தொழிலுக்கு வர முடியாது.

அரசியல் அப்படியல்ல. அதிலும்  இந்திய அரசியல் அப்படியல்ல. மக்கள் செல்வாக்கு,அரசியல் செல்வாக்கு இருந்தால் யாரும் அரசியல்வாதியாகலாம்.


தமிழ்நாட்டு அரசியலில் கலைஞர் கருணாநிதிக்கு உள்ள ஆற்றல் ஸ்டாலினுக்கு அறவே இல்லை. அதிலும் உதயநிதிக்கு சினிமாவை தவிர வேறு ஏதும் தெரியாது.


பின்புலத்தில் நல்ல படித்த அதிகாரிகள் இருந்தால் எந்த மோடனும் ஆட்சி செய்யலாம்.

9 hours ago, சுப.சோமசுந்தரம் said:

நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு என்ன ஏடிஎம் மெஷினா, கேட்டவுடன் பணம் கொடுக்க ?" என்று தரம் தாழ்ந்து கூறியதற்குப் பதிலடியாக உதயநிதி, "அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் ? தமிழ் மக்கள் கொடுத்த வரிப்பணத்தைத்தானே கேட்கிறோம் ?" என்று கேட்டது கூட ஒரு அனுபவம் பெற்ற அரசியல்வாதியின் பதிலாகவே வெளிப்படுகிறது.

அதற்கு சீத்தாராமன் என்ன பதில் சொன்னார்? 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அதற்கு சீத்தாராமன் என்ன பதில் சொன்னார்? 🤣

தமக்கே உரித்தான முகம் காட்டி, "இந்த அப்பன், ஆத்தா என்ற பேச்செல்லாம் பொது வாழ்க்கைக்கு நல்லதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பொறுப்புடன் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று பாடம் எடுத்தார் - நிவாரண நிதியைப் பிச்சை என்று பொது வாழ்க்கைக்கு உகந்த (!) மொழியில் பேசிய, மக்களால் தேர்ந்தெடுக்கவே படாத நிர்மலா சீதாராமன். சுய முரண் (self contradiction) என்பதெல்லாம் அனைத்துக் கட்சி அரசியலிலும் சகஜம்தானே ! 

        நிர்மலா சீதாராமனின் பதில் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "அப்படியா ? சரி, மாண்புமிகு நிதியமைச்சரின் மதிப்பிற்குரிய அப்பாவின் காசையா கேட்டோம் ?" என்று உதயநிதி ஸ்டாலின் பதிலிறுத்தார்.

         அத்துடன் அந்த எபிசோட் இனிதே முடிவடைந்தது என்று நினைக்கிறேன்.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

//  அவர்கள் வந்தால் நான் தேசியம் எனும் நீரோட்டத்தில் கரைய வேண்டி இருக்குமே ! தேசிய நீரோட்டத்தில் நீந்துவது ஏற்புடைத்து. கரைவதை எங்ஙனம் ஏற்பது ? நான் ஏன் எனது மொழி, பண்பாட்டு அடையாளங்களை இழந்து இந்தியன் எனும் ஒற்றைத் தன்மையில் நிற்க வேண்டும் ?// இந்தப் பதிவில் எனக்குப் பிடித்த வரிகள். இந்தக் கேள்வியை எனக்குள்ளும் கேட்கிறேன். 

பகிர்வுக்கு நன்றி பேராசிரியர் அவர்களே.. 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.