Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?

தேசிய மக்கள் கட்சியினர் நேற்றைய‌ பாராளுமன்றத் தேர்தல்களில் அடைந்திருக்கும் பெரும்பான்மை வெற்றியின் ஊடாக அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றனர். இக்கட்சியினர் முன்னர் தமிழ் மக்கள் தொடர்பாக சில விடயங்களைச் செய்வதாக உறுதியளித்திருந்தார்கள். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை அடைந்திருக்கும் இன்றைய நிலையில் இக்கட்சியினர் தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வாறான விடயங்களைச் செய்யலாம் என்பதுபற்றிப் பார்க்கலாம்.

225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் இக்கட்சியினர் 159 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இவ்வாறு வெற்றிபெற்றவர்களுள் பெரும்பான்மையினர் முதற்தடவையாக பாராளுமன்றம் வருபவர்கள். இவர்களுள் சிலர் வடக்குக் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள். 

அரசியல்க் கைதிகளின் விடுதலை

தேர்தலிற்கு சில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர‌ குமார திசாநாயக்க வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார். தமிழர்களின் இரு முக்கிய நகரங்களான யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகியவற்றில் தனக்கான ஆதரவினைப் பலப்படுத்தும் நோக்கில் அப்பகுதிகளில் கூட்டங்களை அவர் நடத்தினார். வவுனியா கூட்டத்தில் பேசும்போது தமிழ் அரசியல்க் கைதிகளைத் தொடர்ந்தும் தடுத்துவைத்திருக்கும் நோக்கம் தனக்கில்லை என்று பொருள்பட அவர் பேசினார். "பிரதம நீதியரசர் முன்வைக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் தமிழ் அரசியல்க் கைதிகளை விடுவிக்கும் முயற்சிகளை நாம் முன்னெடுப்போம்" என்று அங்கு அவர் கூறினார்.
  
வடக்குக் கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகளை விடுவித்தல்

வவுனியா கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அநுர, முன்னைய அரசாங்கங்களினாலும், அரச அதிகாரிகளினாலும் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழருக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க தான் ஆவன செய்வதாகக் கூறியிருந்தார்.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது சிங்கள மொழி உரையில் தமிழர்களிடமிருந்து அடாத்தாக அரசுகளால் பிடுங்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்க விரும்புவதாகவும், தமிழ் மக்கள் பல தசாப்த்தங்களாக  முகங்கொடுத்து வருகின்ற அரச அடக்குமுறைகளைத் தணிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்."நாம் வடக்கில் காணிகளை வழங்கினால் தெற்குக் கொந்தளிக்கிறது, அவ்வாறே தெற்கிற்கு வழங்கினால் வடக்கு கொந்தளிக்கிறது" என்று அவர் பேசினார். வடக்குக் கிழக்கில் சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று தொனிப்படவே அவரது கருத்து அமைந்திருந்தது. ஆனால் தனது கருத்திற்கான ஆதாரங்களை அங்கு முன்வைப்பதை அவர் தவிர்த்துக்கொண்டார்.

முள்ளிவாய்க்கால் இனக்கொலை நடந்தேறி பதினைந்து வருடங்களை கடந்த நிலையிலும் இன்றுவரை வடக்குக் கிழக்கில் பெருமளவு பிரதேசங்களை சிங்களப் படைகள் ஆக்கிரமித்தே வைத்திருக்கின்றன. இதே காலப்பகுதியில் சிங்கள பெளத்தர்கள் தமிழர் தாயகத்தில் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி மேலும் பல பிரதேசங்களை தொல்லியல்த் திணைக்களமும், வனப் பாதுகாப்புத் திணைக்களமும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றன. வடக்குத் தமிழரின் நிலங்கள் முன்னைய அரசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டமைக்கான காரணங்கள் எவ்வாறு இருந்தபோதிலும் நாம் அவற்றினை விடுவிக்க ஆவன செய்வோம் என்று அவர் வவுனியா உரையில் கூறியிருந்தார். 

தேசிய மக்கள் சக்தியில் விஞ்ஞாபனத்தில் "நிலப் பகிர்ந்தளிப்பில் காணப்படும் பாகுபாடுகள் தனியார்மயப்படுத்துவதனால் உருவாக்கப்பட்டவை" என்று குறிப்பிட்டிருந்தது. ஆக, காணிகள் தனியார்மயப்படுத்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுவதாலேயே அதுகுறித்த அரசியல்ப் பிரச்சினை உருவாகிறது என்று அது நியாயப்படுத்தியிருந்தது. ஆகவே இக்காணிப்பிரச்சினையினைத் தீர்த்துவைக்க தற்காலிக நீதித்துறை அமைப்பொன்றினை உருவாக்கி, இப்பிரச்சினைக்கான நீதியானதும், விரைவானதுமான தீர்வுகளை வழங்க தான் விரும்புவதாக அக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் மேலும் தெரிவித்திருந்தது. இன்றைய நாள்வரை தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்களும், சிங்களவர்களால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்களும் இடைவிடாது நடந்துகொண்டே இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை இல்லாதொழித்தல்

அநுர‌, தனது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்கள் மீது அடக்குமுறையினைக் கட்டவிழ்த்துவிடும் சட்டங்களை நீக்கப்போவதாகக் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு அகற்றப்படவிருக்கும் சட்டங்களுள் மக்களின் சுதந்திரமான பேச்சிற்கும், ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கும் எதிராக இருக்கும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டமும் உள்ளடக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 1979 ஆம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் பின்னர் நிரந்தரமாகவே அமுல்ப்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தினூடாக தனிநபர்களை காரணமின்றித் தடுத்து வைப்பது, அவர்களைக் கால வரையறையின்றித் தடுத்து வைப்பது ஆகிய அதிகாரங்கள் தமிழர்களைக் குறிவைத்தே அரசுகளால் உருவாக்கப்பட்டுப் பாவிக்கப்பட்டு வந்தன. சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக எழுந்தமானமான கைதுகள், நீதிக்குப் புறம்பான விசாரணைகள், சித்திரவதைகள், அழுத்தங்களினூடான வாக்குமூலங்கள் ஆகியவற்றிற்கு காவல்த்துறையினருக்கும், இராணுவத்தினருக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டன.  

ஆனால், ஜனாதிபதியாக அநுர பதவியேற்ற சில நாட்களின் பின்னர் பேசிய ஜனாதிபதியின் செயலகத்தின் இயக்குநர் விஜேபண்டார இதுகுறித்த தனது கட்சியின் நிலைப்பாட்டினை இவ்வாறு தெரிவித்தார். "ப‌யங்கரவாதத் தடைச் சட்டத்தில் இருக்கும் சிக்கல் என்னெவென்றால், அது சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எதிராகப் பாவிக்கப்படுகிறதென்பதேயன்றி அச்சட்டமே தவறென்பதென்பதில்லை" என்று பொருள்படக் கூறியிருந்தார். மேலும், "சரியான ஆதராங்கள், சாட்சியங்களைப் பாவிப்பதனூடாக பயங்கரவாத‌த் தடைச்சட்டம் நீதியான முறையில் அமுல்ப்படுத்தப்படுதல்  அவசியம். அரசியல்ப் பழிவாங்கல்களுக்காக இச்சட்டம் பாவிக்கப்படுவதையும் நாம் எதிர்க்கிறோம்" என்று அவர் கூறியிருந்தார். "இச்சட்டம் சரியான முறையில் பாவிக்கப்படுமிடத்து, எந்தப் பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை, அவ்வளவுதான்" என்று வெகு சாதாரணமாகக் கூறியிருந்தார்.

இதேவேளை பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்துப் பேசிய அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் விஜித்த ஹேரத், "சட்டத்தை நீக்கவேண்டிய அவசியம் ஏதுமில்லை. சில மாற்றங்களைச் செய்யலாம், ஆனால் அதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை நாம் பெறவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் அன்று கேட்டுக்கொண்ட பாராளுமன்றப் பெரும்பான்மையும் இப்போது அவருக்குக் கிடைத்திருக்கிறது. 

பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளைக் கோருவதைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது என்பதுடன் பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களால் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகின்ற அரச மயப்படுத்தப்பட்ட கொடூரமான அடக்குமுறை என்பதும் குறிப்பிடத் தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இறுதியாக அதிகாரத்தில் இருக்கப்போவது அநுர குமார திசாநாயக்கவா?

இலங்கையில் ஆட்சிக்கு வந்த பல ஜனாதிபதிகள் நீண்டகாலமாகவே ஒரு விடயத்தைக் கூறி வந்திருக்கின்றனர். அதுதான் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையினை இல்லாதொழிப்பதென்பது. அந்தவழியில் அநுரவின் கட்சியினரும் தமது விஞ்ஞாபனத்தில் இம்முறையினை ஒழிக்கவிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். புரட்டாதி மாதவாக்கில் கூட்டமொன்றில் பேசிய அக்கட்சியின் பிரமுகர் சுனில் ஹந்துநெட்டி, அநுரவே இறுதியான நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இருப்பார் என்று குறிப்பிட்டிருந்தார். 

"நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்கிவிடக்கூடிய ஜனாதிபதியொருவர் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கிறார். இதனைச் செயற்படுத்துவதற்கான ஆதரவினைத் தருமாறு மக்களை நாம் கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் கோரியிருந்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியினை நீக்குவதனூடாக சர்ச்சைக்குரிய ஆட்சிமுறையொன்றினை இல்லாதொழிப்பது மட்டுமன்றி, ஜனநாயக ரீதியிலான மாற்றங்களையும் எம்மால் செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார். மக்களின் ஆதரவோடு இலங்கையின் அரசியல்ப் பாதையினை தம்மால் செப்பனிட முடியும் என்றும் அவர் கூறினார். "இது ஆரம்பம் மட்டும்தான், மக்களின் ஆதரவோடு இந்த நாட்டினை நாம் கட்டியெழுப்புவோம்" என்று அவர் கூறினார். 

மாகாண சபைகளை மீள செயற்படுத்துவது

ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்திலும், தனது தேர்தல்ப் பிரச்சாரங்களின்போதும் தான் ஆட்சிக்கு வந்தவுடன் மாகாணசபைகளை ஒருவருட காலத்திற்குள் மீளவும் இயங்கச் செய்வதனூடாக மக்களும் அரசாட்சியில் பங்குகொள்ளும் சூழ்நிலையினை உருவாக்கப்போவதாக அநுர கூறியிருந்தார். இரத்தினபுரியில் பேசும்போது மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்தும் தனது நோக்கத்தையும், உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும் தனது நோக்கத்தினையும் அவர் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.  

"ஒரு ஜனாதிபதி, பலமான மந்திரிசபை, பாராளுமன்றம், மாகாணசபைகள், உள்ளூராட்சிச் சபைகள், நகர சபைகள் உள்ளிட்ட ஒரு அரசியல் பொறிமுறை இந்த நாட்டிற்கு மிகவும் அவசியம். நாம் ஆட்சிக்கு வந்த ஒருவருடத்திற்குள் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவோம். அதுமட்டுமல்லாமல் உள்ளூராட்சிச் சபைகள், பிரதேச சபைகள், நகர சபைகள் போன்ற‌வற்றிற்கான தேர்தல்களையும் நடத்தவிருக்கிறோம்" என்று அநுர அப்பேச்சின்போது குறிப்பிட்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

அனுர என்ற தனிப்பட்ட ஒருவருடைய சிந்தனை என்பது ஒன்றாகவும்  
அவர் தங்கியிருக்கும் அமைப்பின் சிந்தனை என்பது வேறாகவும்
அவர் சார்ந்த ஒட்டு மொத்த மக்களின் சிந்தனை என்பது இன்னுமொரு வேறுபாடாகவும் இருக்கலாம்.

இந்தச் சிந்தனைகளில் பலதோ அல்லது ஓர் சிலதோ ஒரு இடத்தில் சந்திக்கும்போது ஒரு தீர்வுக்கு   அவர்கள் வரலாம்.

ஆனால் அந்தத் தீர்வு என்பது அவர் சார்ந்த ஒட்டுமொத்த மக்களின் தீர்ப்பாக இருக்காவிட்டால் அது அவருடைய இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் .

ஆகவே அவர் வழங்கும் தீர்வு என்பது அவர் சார்ந்த ஒட்டுமொத்த மக்களின் விருப்பமானதொரு தீர்வாகவே இருக்க வாய்ப்பு  இருக்கலாம்.

ஆகவே தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இலவு காத்த கிளியின் நிலைகுத் தள்ளப்படலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுர ஆட்சியை பற்றி சாத்திரம்,முன்னறிவுப்புகள் எதுவுமே சொல்ல முடியாது.
இருந்தாலும் எனது கணிப்பு என்ன வென்றால் இலங்கையின் முக்கிய பிரச்சனையாகிய தமிழர் பிரச்சனையை 1960 ம் ஆண்டு இருந்த நிலைக்கு  இழுத்துக்கொண்டு வருவார் என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ அரசியல் விமசகர்கள், பந்தி எழுத்தளார்கள் என்று சொல்லிக்கொள்வப்பார்கள் திரிபு படுத்தப்படட தமிழ் மூலங்களில் தங்கியிருக்காமல் (cherry-picked quotes, facts and figures, self-serving selective, misrepresentations, misinterpretations, misquotations),முதன்மை மூலங்களை ஆராய்ந்து தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும், அப்படி செய்வதினால் தமிழ் மக்களுக்கும், நாட்டுக்கும் விமோசனம் அளிக்கும்.

அநுர யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை

 

அநுர வவுனியாவில் ஆற்றிய உரை

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13 ஆம் திருத்தச் சட்டம் குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினருடனான சந்திப்பொன்றில் பேசும்போது 13 ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தனது ஆதரவு இருக்கும் என்று அநுர‌ கூறியிருந்தார்.

ஆனால், அநுரவின் இந்தக் கூற்றினை அவரே மறுதலிக்குமாற்போல் அவரது யாழ்ப்பாணக் கூட்டத்தின் உரை அமைந்திருந்தது. "13 ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவேன் என்று பொய்கூறிக்கொண்டு உங்களிடம் வாக்குக் கேட்டு நான் வரவில்லை" என்று அவர் யாழ்ப்பாணத்தில் கூறினார்.  1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே செய்யப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்த மாகாணசபை அடிப்படையிலான தீர்விற்கான ஒப்பந்தத்தை தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கப்போதுமான‌து அல்ல என்று நிராகரித்திருந்த அதேவேளை, சிங்களவர்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தினூடாக நாடு பிளவுபடும் என்று அதனை எதிர்த்து வந்தார்கள். 

1987 ஆம் ஆண்டு இவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து அநுர தலைமை தாங்கிவரும் மக்கள் விடுதலை முன்னணியினரால் அது மிகவும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி அரசிற்கெதிராக நடத்திய இரு ஆயுதக் கிளர்ச்சிகளில் 80 களின் இறுதிப்பகுதியில் நடத்தப்பட்ட இரத்தக்களறி நிறைந்த ஆயுதக் கிளர்ச்சி இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை எதிர்த்தே நடத்தப்பட்டது. 13 ஆம் திருத்தச் சட்டத்தினூடாக தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை எதிர்த்தே பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் பலியிடப்பட்ட கிளர்ச்சியை அது நடத்தியிருந்தது. 

"ஒரு அரசியட் கட்சியாக,  சில தசாப்த்தங்களுக்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம், அது அமுல்ப்படுத்தப்படுவதைக் கடுமையாக‌ எதிர்க்கிறோம். இலங்கையின் இறையாண்மையினைப் பாதுகாப்பதே எமது மிக முக்கிய கரிசணை என்பதோடு, அதனை அடைந்துகொள்வதற்காக எத்தனை உயிர்களைத் தியாகம் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம்" என்று அக்கட்சியின் முக்கிய பிரமுகர் விஜித்த ஹேரத் இவ்வாண்டின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். 

"இதுதொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு இதுவரையிலும் மாறவில்லை, இனிமேலும் மாறப்போவதில்லை.  இந்த நாட்டின் அரசியல்ச் சரித்திரத்தில் எமது நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் எமது இலட்சியத்தின் மேல் நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாடு எப்போதும் ஒரேமாதிரியாகவே இருந்து வருகிறது, இனிமேலும் அது அப்படியே இருக்கும் என்பதனை என்னால் உறுதியாகக் கூறமுடியும். இதுதொடர்பாக எமது கட்சியின் உறுதிப்பாடு எப்போதுமே மாறதென்பதை எமது நாட்டு மக்கள் நிச்சயமாக நம்பலாம்" என்று அவர் மேலும் கூறியிருந்தார். 

2015 ஆம் ஆண்டு தி ஐலண்ட் எனும் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், சமஷ்ட்டி அடிப்படையிலான எந்தத் தீர்வையும் தமது கட்சி எதிர்க்கும் என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

மேலும், வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைப்பதை தமது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்பதையும் அவர் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறார். "இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக எழுந்தமானமாக இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாகப் பிரித்துப்போட்டதே எமது கட்சிதான். வடக்குக் கிழக்கு மாகாணஙகளைப் பிரிப்பதற்கு எமது கட்சி மூன்று வழக்குகளைப் பதிவுசெய்து போராடியது" என்றும் அவர் நினவுகூர்ந்தார்.

2007 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பினை வழங்கிய உச்ச நீதிமன்றம் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை தனித்தனியே வட மாகாணம் என்றும் கிழக்கு மாகாணம் என்றும் நிரந்தரமாகவே பிரித்துப் போட்டது. இத்தீர்ப்பு வெளியானபோது நீதிமன்ற முன்றலில் கூடியிருந்த மக்கள் விடுதலை முன்னணியினரும் அவர்களது ஆதரவாளர்களும் பெருத்த கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 

2010 ஆம் ஆண்டு அநுர குமார திசாநாயக்க பேசும்போது, "வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கு அரசியலமைப்பினூடாக எடுக்கப்படும் எந்த முயற்சியையும் தமது கட்சி எதிர்க்கும்" என்று கூறியிருந்தார். 

அவரது ஜனாதிபதித் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்திலும் "இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் பாதுகாப்பதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை" என்று மீளவும் ஆணித்தரமாகக் கூறியிருந்தார் என்பதும் நினைவிருக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனக்கொலைக்கான பொறுப்புக்கூறல்

முள்ளிவாய்க்கால் இனக்கொலையின்போது சிறிலங்கா இராணுவம் 167,676 தமிழர்களைப் படுகொலை செய்திருக்கிறது என்று கணிப்பிடப்பட்டிருக்கிறது. உணவும், மருந்துப்பொருட்களும் தடைசெய்யப்பட்டிருந்ததுடன், காயப்பட்டவர்களைப் பராமரித்து வந்த வைத்தியசாலைகளும் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வந்தன. தமிழ்ப்பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் சிங்கள இராணுவத்தினரால் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன், சரணடைந்தவர்களில் ஆயிரக்கணக்காணோர் படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் ஆயிரக்கணக்காணோர் காணாமலாக்கப்பட்டதோடு இன்றுவரை அவர்களைத் தேடி அவர்களின் உறவுகள் வடக்குக் கிழக்கில் நீதிகோரிப் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளும், போராட்டங்களும் இன்றுவரை உதாசீனம் செய்யப்பட்டே வருகின்றன.  

இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பாக பல ஐ.நா அறிக்கைகள் வெளிவந்திருப்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபையில் பல தீர்மானங்களும் காலத்திற்குக் காலம் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. தமிழ் மக்கள் ஒரு இனமாகவும், ஐ. நா மனிதவுரிமைச் சபையினூடாகவும் இறுதி யுத்தத்தில் தம்மீது நடத்தப்பட்ட பாரிய போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் ஊடாக நீதியின் முன் நிறுத்தி தண்டனை வழங்கவேண்டும் என்று இடையறாது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

ஆனால், சர்வதேச மயப்படுத்தப்பட்ட யுத்தக் குற்ற விசாரணைகளுக்கெதிராக அநுர குமார திசாநாயக்கவும் அவரது கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டினையே எடுத்திருக்கின்றனர். இவ்வருட ஆரம்பத்தில் பேசிய அநுர குமார திசாநாயக்க, "இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்டதாக நம்பப்படும் போர்க்குற்றங்களையோ, மனிதவுரிமை மீறல்களையோ செய்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுவோரை தமது அரசு ஒருபோதும் தண்டிக்கப்போவதில்லை" என்று உறுதிபடக் கூறியிருந்தார். 

"போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே தமக்கான நீதியினைக் கோரவோ, யுத்தக் குற்றங்களை விசாரிக்கும்படியோ என்னிடம் கோரவில்லையே" என்றுகூட அவர் வெளிப்படையாகப் பேசியிருந்தார். ஆனால்,  தம்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணை ஒன்றினூடாக விசாரித்து நீதி வழங்குங்கள், குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள் என்கிற ஒட்டுமொத்தக் கோரிக்கையினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற பின்புலத்தில் அநுரவினால் இவ்வாறான கூற்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அதேவேளை இறுதி யுத்த காலத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று நன்கு அறியப்பட்ட பல முன்னாள்த் தளபதிகளை அநுரவின் கட்சி அரவணைத்து வருகிறது. ஹெயிட்டியில் சமாதானப் பணிகளில் ஈடுபட்டு பல சிறுமிகளை பாலியல் தொழிலுக்காகக் கடத்தியவர்கள் என்று கண்டறியப்பட்ட இலங்கையின் மூன்றாவது பட்டாலியன் படைப்பிரிவின் தளபதியான ஜெனரல் அனுர ஜயசேகரவை அநுர தனது அரசின் பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமித்திருக்கிறார். மேலும் இலங்கை விமானப்படை தாக்குதல்ப் பிரிவின் தளபதியாக இருந்து இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் படுகொலைகளில் நேரடியாகப் பங்காற்றிய ஒருவனை ப‌டைகளின் பிரதானியாக அநுர நியமித்து கெளரவித்திருக்கிறார்.

அநுர ஜனாதிபதியாகப் பதிவியேற்று சில தினங்களுக்குள் மேற்கொண்ட முக்கியமான இராஜதந்திர நகர்வாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்தை தனது அரசு முற்றாக நிராகரிக்கிறது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்ததைக் காணலாம். சர்வதேச விசாரணைப் பொறிமுறைகளைப் பாவித்து இறுதி யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேடும் காலத்தை நீடிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அதனை நிராகரித்தே அநுர குமார இந்த அறிவிப்பை மேற்கொண்டிருந்தார். சென்றமாதம் பேசிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், சர்வதேச விசாரணைகள் தொடர்பான தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை மீள உறுதிப்படுத்தியதோடு, தமிழ் மக்களால் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட உள்ளூர் விசாரணைப் பொறிமுறை ஒன்றினூடாக குற்றச்சாட்டுக்களை தமது அரசு விசாரிக்க முன்வரும் என்று கூறியிருந்தார். 

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெளத்த மதத்தினை மற்றைய மதங்களைக் காட்டிலும் முன்னிலைப்படுத்தி அதற்கான அதிமுக்கிய ஸ்த்தானத்தினை வழங்குவது

சிறிலங்காவின் அரசியலமைப்பு பெளத்த மதம் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறது, "இலங்கைக் குடியரசு பெளத்த மதத்திற்கு அதிமுக்கிய ஸ்த்தானத்தினை வழங்கும். ஆகவே பெளத்த மதத்தையும், பெளத்த சாசனத்தையும் பாதுகாத்துப் பேணி வளர்ப்பது ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசினதும் தலையாய கடமையாகும்". தம்மை மார்க்ஸிஸ்ட்டுக்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியினர் கூறிக்கொண்டபோதிலும், அடிப்படையில் அவர்களும் மிகத் தீவிரமான சிங்கள பெளத்த தேசியவாதிகள் தான் என்பதனையே அவர்களின் கடந்தகால அரசியல் செயற்பாடுகள் காட்டி நிற்கின்றன. தனது கட்சியின் இந்த நிலைப்பாட்டினை அநுரவும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, நியாயப்படுத்தி வருகிறார். அரசியலமைப்பினை மாற்றக்கூடிய பாராளுமன்றப் பலம் தற்போது அநுரவிற்குக் கிடைத்திருக்கின்ற போதிலும் அவரோ அவரது கட்சியோ அதற்கெதிரான நிலைப்பாட்டினையே எடுத்திருக்கிறார்கள். 

ஜனாதிபதி தேர்தல் நாடைபெறுவதற்கு சில தினங்கள் இருக்கும் வரையிலும் பெளத்த மதத் துறவிகளைப் போற்றிப் புகழ்வதிலும், கெளரவிப்பதிலும் அநுர சிரத்தையெடுத்து நடந்துகொண்டார். அவ்வாறான சந்தர்ப்பமொன்றான மகரகமவில் ஒழுங்குசெய்யப்பட்ட‌ நிகழ்வொன்றில் சுமார் 1500 பெளத்த பிக்குகள் முன்னிலையில் பேசிய அநுர, "பெளத்த மதத்திற்குரிய அதி உன்னத ஸ்த்தானத்தினை வழங்குவேன், அதன் புனிதத்தினை எப்பாடுபட்டாவது பாதுகாப்பேன்" என்று உறுதிமொழி வழங்கினார். மேலும் அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையினை எக்காரணத்திற்காகவும் தனது அரசு கைவிடாது என்றும் அவர் உறுதியளித்தார். 

அநுரவின் பெளத்த மதம் சார்ந்த நிலைப்பாடே கட்சிக்குள்ளும் பரவிக் கிடக்கின்றது. கட்சியின் முக்கியஸ்த்தரான கே.டி.லால்காந்த, இனவாதப் பிக்குகள் அமைப்பான பொதுபல சேனவின் ஸ்த்தாபகர் ஞானசாரத் தேரவுடன் நெருங்கியத் தொடர்புகளைக் கொண்டிருப்பவர் என்பதுடன் வெளிப்படையாகவே அவருடன் இணைந்து செயற்பட்டும் வருபவர்.

இவ்வருடம் மாசியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணையாளர் மிச்செல் பாக்லெட் இலங்கை தொடர்பாக எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

"இலங்கையில் இராணுவமயமாக்கல் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டு வருவது தெரிகிறது. அரச நிறுவனங்களிலும் நிர்வாக அமைப்புக்களிலும் சிங்களத் தேசியவாதமும், பெளத்தமயமாக்கலும் முன்னெடுக்கப்பட்டு வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. இது சிறுபான்மையினங்களிடையே அச்சத்தினையும், ஸ்த்திரத்தன்மையீனத்தையும் ஏற்படுத்தியிருப்பதுடன், அச்சமூகங்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளவும் இந்நிலைமை அழுத்தம் கொடுக்கின்றது. இதனால் சமூகங்களுக்கிடையே இணக்கப்பட்டினையும், நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவது கடிணமாக்கப்பட்டு வருகின்றது" என்று அவ்வெச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இறுதியாக அதிகாரத்தில் இருக்கப்போவது அநுர குமார திசாநாயக்கவா?

சில சமயம்  தனது பதவி காலம் முடியும் ஐந்தாவது வருட இறுதியில் செய்வார்..

4 hours ago, ரஞ்சித் said:

மாகாணசபைகளை ஒருவருட காலத்திற்குள் மீளவும் இயங்கச் செய்வதனூடாக மக்களும் அரசாட்சியில் பங்குகொள்ளும் சூழ்நிலையினை உருவாக்கப்போவதாக அநுர கூறியிருந்தார்

இது நல்ல விடயம் காலம் பதில் சொல்லட்டும் ....இவை யாவ்ற்றையும் நடைமுறைப்படுத்த துட்டு எங்கே இருந்து வரும்..

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, putthan said:

சில சமயம்  தனது பதவி காலம் முடியும் ஐந்தாவது வருட இறுதியில் செய்வார்..

இது நல்ல விடயம் காலம் பதில் சொல்லட்டும் ....இவை யாவ்ற்றையும் நடைமுறைப்படுத்த துட்டு எங்கே இருந்து வரும்..

அவ்வளவு காலம் ஓடுமா....அதுதானெ ரணில்  இப்ப நாய்க்கு பிஸ்கட் போட்டபடி வெயிட் பண்ணிக்கொண்டிருக்காரு..

நம்ம புலம் பெயர்ஸ்சயும் நம்புறாராமே...வரச்சொல்லி கூட்டத்திலை பேசினாரே...இல்லையினா யாழ் கபிதன் சார் குடுப்பாருசார்...மகிந்த காலம் முதல்..ரணில் காலம் வரை விசுவாசமாக உழைத்தவராச்சே..🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

1987 ஆம் ஆண்டு இவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து அநுர தலைமை தாங்கிவரும் மக்கள் விடுதலை முன்னணியினரால் அது மிகவும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி அரசிற்கெதிராக நடத்திய இரு ஆயுதக் கிளர்ச்சிகளில் 80 களின் இறுதிப்பகுதியில் நடத்தப்பட்ட இரத்தக்களறி நிறைந்த ஆயுதக் கிளர்ச்சி இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை எதிர்த்தே நடத்தப்பட்டது.

ரோகண விஜயவீரா எழுதிய புத்தகத்தில் தமிழர்கள் சுயநிர்நணய உரிமை கோரிக்கை ஒர் மேட்டுக்குடியினரின் கோரிக்கை ...எனகூறியுள்ளாராம் ...அதை தான் இப்பொழுது அவர்களது வாரிசுகள்  பொருளாதார பிரச்சனை தான் உண்டு என கூறுகின்றனர்... .

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் என்பிபியே எதிர்பார்க்காத விரும்பாத ஒன்று என்று தான் ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள்.

113 க்க மேல் ஏடக்க விரும்பினார்களே தவிர மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விரும்பவில்லை.

காரணம்.

மற்றைய அரசுகளை வெளியே இருந்து விமர்சித்த பல விடயங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதனால் சகலதையும் இவர்களின் விருப்படி நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம்.

முக்கியமாக சகல அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் ஒழிப்போம் என்றார்கள்.

இது வெளியே இருந்து எல்லோரும் சொன்னார்கள்.உள்ளே வந்ததும் மறந்துவிட்டார்கள்.

அதே பட்டியலில் இவர்களும் வருவார்களா?

தமிழர் பிரச்சனைக்கு எல்லோரும் சேர்ந்து (தமிழர் தரப்பில் சமந்திரன்)ஒரு தீர்வு எழுதியுள்ளனர்.

இப்போது அதை தீர்வாக எடுத்தால் யாருமே வாய் திறக்க முடியாது.

ஏனென்றால் எல்லோரும் சேர்ந்து எழுதியது.

அதிலே தமிழருக்கு பல பாதகமான விடயங்கள் உள்ளன என சொல்கிறார்கள்.(சுமந்திரனின் வேலை)

இனி அடுத்தடுத்து உள்ளூராட்சிசபை மாகாணசபை தேர்தல்கள் வருகிறபடியால் தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர பாதை திறப்பு காணிவிடுவிப்பு என்று பரிசீலிக்கலாம்.

சிறையில் உள்ளவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தை எடுத்தாலே போதும் வெளியே வந்துவிடுவார்கள்.

அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்கள் கட்சியில் சேர்ந்து போட்டியிடுவதற்கு நம்மவர்கள் போட்டாபோட்டியிடப் போகிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.