Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியது

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியது.

ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனால் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். அவர்களை மீண்டும் அவர்களுடைய இடத்தில் குடியமர்த்துவதுதான் நோக்கம் என இஸ்ரேல் அறிவித்து கடந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. தரைவழி தாக்குதலையும் தொடங்கியது.

இதனால் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான சண்டை அதிகமானது. அடிக்கடி இஸ்ரேல் தாக்குவதும், ஹிஸ்புல்லா பதில் தாக்குதல் நடத்துவதுமாக இருந்தது.

இந்த நிலையில்தான் இஸ்ரேல்- லெபனான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. முயற்சி மேற்கொண்டன.

இதற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இஸ்ரேல் அரசின் கீழ் இயங்கி வரும் அதிக அதிகாரம் படைத்த பாதுகாப்பு கேபினட் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இன்று நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமல் படுத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறுகையில் “லெபனானில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து போர் நிறுத்த நாட்கள் நீடிப்பது அமையும். நாங்கள் ஒப்பந்தத்தை அமல்படுத்துவோம். எதாவது மீறல் நடைபெற்றால் பதிலடி கொடுப்போம். பெற்றி பெறும் வரை நாங்கள் ஒன்றுபட்டு இருப்போம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை நேரப்படி இன்று காலை 7.30 மணி முதல் இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1410059

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் - ஹெஸ்பொலா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் - எப்படி அமல்படுத்தப்படும்? முழு தகவல்

இஸ்ரேல்-ஹெஸ்பொலா போர் நிறுத்த ஒப்பந்தம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, செப்டம்பர் மாத இறுதியில் ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேல் படையெடுப்பை தொடங்கியது

இஸ்ரேலுக்கும் இரானின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக்குழுவான ஹெஸ்பொலாவுக்கும் இடையே 13 மாத கால மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

“லெபனானில் நடைபெறும் மோதலை நிறுத்தவும், ஹெஸ்பொலா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இஸ்ரேலைப் பாதுகாப்பதாகவும் இந்த ஒப்பந்தம் இருக்கும்" என்று அமெரிக்காவும் பிரான்ஸும் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

அதிகாரப்பூர்வ விளக்கங்கள் மற்றும் ஊடக செய்திகளில் இருந்து இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றி நமக்கு தெரிந்த தகவல்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

அதிபர் பைடன் கூறியதென்ன?

“நிரந்தர போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது", என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, 60 நாட்களில் ஹெஸ்பொலா தனது படைகளையும், ஆயுதங்களையும் நீலக் கோடு (Blue Line) பகுதிக்கும் அங்கிருந்து வடக்கே 30 கிமீ தொலைவில் உள்ள லிடானி நதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து அகற்றும். நீலக் கோடு பகுதி என்பது லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற எல்லை ஆகும்.

அந்த பகுதியில் உள்ள ஹெஸ்பொலா குழுவினருக்கு பதில் லெபனான் ராணுவப் படைகள் அமர்த்தப்படுவார்கள். மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவுக்கு அங்குள்ள உள்கட்டமைப்பு, ஆயுதங்களை லெபனான் ராணுவம் அகற்றும் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே 60 நாட்களில், இஸ்ரேல் படிப்படியாக அங்கு எஞ்சியுள்ள தனது படைகளையும் பொதுமக்களையும் திரும்பப் பெறும். எல்லையின் இருபுறமும் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அதிபர் பைடன் கூறியுள்ளார்.

 
இஸ்ரேல்-ஹெஸ்பொலா போர் நிறுத்த ஒப்பந்தம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஹெஸ்பொலா ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இஸ்ரேல் மீது ஏவியுள்ளது

ஹெஸ்பொலாவுக்கு மாற்றாக லெபனான் படை

ஒப்பந்தத்தின் படி லெபனான் ராணுவம் 5,000 ராணுவ வீரர்களை தெற்கில் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதில் அவர்களின் பங்கு என்ன என்பதை பற்றியும் தேவைப்பட்டால் அவர்கள் ஹெஸ்பொலாவை எதிர்கொள்வார்களா என்பது பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளன. அவ்வாறு எதிர்கொள்ளும் நடவடிக்கையால், ஏற்கனவே அதிகமான பிளவுகள் உள்ள நாட்டில் மேலும் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்றும் கருதப்படுகின்றது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தில் தனது பொறுப்புகளை நிறைவேற்ற போதுமான பணம், படைகள் மற்றும் ஆயுதங்கள் தங்களிடம் இல்லை என்று லெபனான் ராணுவம் கூறியுள்ளது.

ஆனால், லெபனானின் சில சர்வதேச நட்பு நாடுகள் ஆதரவு வழங்கி, அவர்களின் இந்தப் பிரச்னைக்கு உதவ முடியும்.

ஹெஸ்பொலா இப்போது முன்பை விட பலவீனமாக உள்ளது என்றும் லெபனான் அரசாங்கம் தங்கள் நாட்டில் முழு கட்டுப்பாட்டையும் எடுத்து அதன் அதிகாரம் எல்லா இடங்களிலும் நிலைநிறுத்துவதை உறுதி செய்வதற்கு இதுவே சரியான நேரம் என்றும் பல மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன.

 
இஸ்ரேல்-ஹெஸ்பொலா போர் நிறுத்த ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நிரந்தர போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார்.

போர் நிறுத்த அமலாக்கத்தை யார் கண்காணிப்பார்கள்?

இந்த ஒப்பந்தம், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1701ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த தீர்மானம் 2006-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உதவியது.

தீர்மானம் 1701-இன் படி, லிடானி நதியின் தெற்கே உள்ள பகுதிகளில் லெபனான் அரசாங்கம் மற்றும் ஐ.நா.வின் அமைதி காக்கும் படையினரை தவிர, ஆயுதக் குழுக்களோ அல்லது ஆயுதங்களோ இருக்கக்கூடாது.

ஆனால் இரு தரப்பினரும் தீர்மானத்தை மீறியதாகக் கூறப்படுகின்றது.

அப்பகுதியில் விரிவான உள்கட்டமைப்புகளை உருவாக்க ஹெஸ்பொலா அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. அதே நேரத்தில் லெபனான் எல்லையில் ராணுவ விமானங்களை இயக்கியதன் மூலம் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை மீறியதாக லெபனான் கூறுகிறது.

இந்த முறை, அமெரிக்காவும் பிரான்ஸூம் தற்போதைய முத்தரப்பு குழுவில் இணையும். இதில் ஏற்கனவே ஐ.நா.வின் அமைதி காக்கும் படை, லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகியவை இருக்கின்றன.

“ஒப்பந்தம் எந்த வகையிலாவது மீறப்படுகின்றதா என இந்த குழு கண்காணிக்கும்”என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.

“இப்பகுதியில் அமெரிக்கப் போர் படைகள் இருக்காது, ஆனால் முன்பு நடந்தது போலவே லெபனான் ராணுவத்திற்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கும். ஆனால், இந்த விஷயத்தில் லெபனான் ராணுவம், பிரான்ஸ் ராணுவத்தினருடனும் இணைந்து செயல்படும்", என்று அந்த அதிகாரி கூறுகிறார்.

இஸ்ரேலின் கவலைகளைக் குறிப்பிட்டு, ''தெற்கு லெபனானில் உள்ள ஹெஸ்பொலாவின் பயங்கரவாதத் தளங்கள் மீண்டும் உருவாக அனுமதிக்கப்பட மாட்டாது'' என்று அதிபர் பைடன் கூறினார்.

 
இஸ்ரேல்-ஹெஸ்பொலா போர் நிறுத்த ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒப்பந்தத்தை மீறி, ஹெஸ்பொலா தாக்குதல் நடத்த முயற்சித்தால் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தும் என்று நெதன்யாகு எச்சரித்தார்.

இந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் கூறுவதென்ன?

“லெபனானில் 'அமெரிக்காவின் முழு புரிதலுடன்' ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் முழு சுதந்திரத்தை இஸ்ரேல் வைத்திருக்கும்'' என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.

ஒப்பந்தத்தை மீறி, ஹெஸ்பொலா ஆயுத தாக்குதல் நடத்த முயற்சித்தாலோ, எல்லையில் பயங்கரவாத உட்கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்கமுயற்சித்தாலோ, ராக்கெட்டை ஏவினாலோ, சுரங்கம் தோண்டினாலோ இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தும்", என்று நெதன்யாகு எச்சரித்தார்.

ஹெஸ்பொலா அல்லது வேறு யாரோ இந்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேலை நேரடியாக அச்சுறுத்தினால், சர்வதேச சட்டத்தின்படி இஸ்ரேலுக்குத் தற்காத்துக் கொள்ள உரிமை இருக்கிறது” என்று இஸ்ரேலின் நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் பைடன் ஆதரித்தார்.

மேலும் இந்த ஒப்பந்தம் லெபனானின் இறையாண்மையையும் மதிக்கிறது என்றும் அவர் கூறினார்.

தேவைப்பட்டால் திருப்பி தாக்குவதற்கான உரிமையை இஸ்ரேல் கோரியுள்ளது. ஆனால் இதனை லெபனான் நிராகரித்துள்ளதால், இஸ்ரேலின் நிலைப்பாடு, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக நம்பமுடியவில்லை என கருதப்படுகின்றது.

இந்த பிரச்னையை தீர்க்க, இஸ்ரேலின் இந்த நிலைபாட்டை ஆதரித்து, அமெரிக்கா ஒரு கடிதம் அனுப்பக்கூடும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தமும்: பிரான்ஸ் பின்னணியும்!

Oruvan

லெபனானில் ஹிஸ்புல்லா, பலஸ்தீனத்தின் காசா என்று இரண்டு முனைகளில் போரை நடத்திக் கொண்டிருந்த இஸ்ரேல் தற்போது ஹிஸ்புல்லா இயக்கத்துடன் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

அதுவும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில் இந்த போர் நிறத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க, பிரான்ஸ் ஆகிய நாடுகள் எடுத்த நகர்வுகள் இப் போர் நிறுத்தத்துக்குக் காரணம் என்று கூறினாலும் இதன் பின்னால் உள்ள காரண - காரியங்கள் குறித்து கேள்விகள் - சந்தேகங்கள் இல்லாமலில்லை.

பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தில் போரை நடத்திக் கொண்டிருந்த இஸ்ரேல், லெபனானிலும் போரைத் தொடங்கியதால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர்களும் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர்.

தாக்குதலைத் தீவிரப்படுத்தி தரை வழியாகவே தெற்கு லெபனான் பகுதியை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியது. இதனால், தெற்கில் வசித்த லெபனான் மக்கள், வடக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். இப் போர், மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகப்படுத்தியது. இதனால், பல நாடுகளுக்கும் போர் பரவும் அபாயம் உருவானது. மத்தியக் கிழக்கில் முழு அளவிலான போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சம் உலக அளவில் ஏற்பட்டது.

இப் பின்னணியில்தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்விகள் சர்வதேச அளவில் விஞ்சியுள்ளன. ஏனெனில், காஸாவில் போர் தொடர்கிறது. அங்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்படாமல் ஹிஸ்புல்லாவுடன் மாத்திரம் போரை நிறுத்தியதன் அரசியல் லாபங்கள் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் பிபிசி அரபு சேவை செய்தியாளர் கேரைன் டோர்பி, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய இயங்கங்களை இஸ்ரேல் அணுகிய விதத்தில் வேறுபாடு இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

லெபனானில் போர் நிறுத்த உடன்பாட்டை இஸ்ரேல் எட்டியதற்கும், காஸாவில் ஹமாஸுடன் அதை எட்ட முடியாததற்கும் இடையே இருக்கும் ஒரு முக்கிய காரணம், இரண்டுக்குமான அரசியல் சூழல் என்கிறார் பிபிசி அரபி மொழிக்கான ஜெருசலேம் செய்தியாளர் முகன்னத் டுடுன்ஜி.

அதேநேரம், லெபனானில் உள்ள பல மதரீதியிலான மற்றும் அரசியல் ரீதியிலான குழுக்களில் ஹிஸ்புல்லா இயக்கம் முக்கியமானது. அதோடு, அனைத்து லெபனான் மக்களும் இஸ்ரேலுடனான அதன் மோதல் குறித்து ஒரே மாதிரியான பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஆனால், காஸாவின் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. அங்கு, ஆளும் அரசியல் சக்தியாகவும், இராணுவ சக்தியாகவும் ஹமாஸ் இருக்கிறது. அதோடு, இதேபோன்ற இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்ட வேறு சில பிரிவுகளால் ஆதரிக்கப்படுகிறது என்ற கருத்துக்களும் உண்டு.

ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் ஆகிய இயங்கங்களை இஸ்ரேல் எவ்வாறு அணுகியது என்பதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. காஸா தற்போது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள ஒரு பகுதி. ஆனால், லெபனான் தனிப்பட்ட இறையாண்மை கொண்ட ஒரு நாடு. முன்பு இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலும், ஹிஸ்புல்லா மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களின் கடும் எதிர்ப்புகளால் அது பின்வாங்க நேரிட்டது.

எவ்வாறாயினும் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா பேர் நிறுத்தத்தை அமெரிக்காவும், பிரான்ஸும் இணைந்து சாத்தியப்படுத்தியிருக்கின்றன. இதன் பிரகாரம் இஸ்ரேல் - லெபனான் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற எல்லையாகக் கருதப்படும் ப்ளூ லைன் மற்றும் லிடானி நதிப் பகுதிகளிலிருந்து 60 நாட்களுக்குள்ளாக படைகளை இரு தரப்பும் திருப்பிப் பெற வேண்டும். மேலும், தெற்கு லெபனானில், அந்த நாட்டு இராணுவமும், ஐ.நா-வின் அமைதி காக்கும் படையும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். அதேபோல், அமெரிக்கா தலைமையிலான குழு ஒன்று, போர் நிறுத்த நடைமுறைகளைக் கண்காணிக்கும். ஒப்பந்தம் மீறப்படும் பட்சத்தில், இந்தக் குழு நடவடிக்கைகளை எடுக்கும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

லெபனான் பிரதமர் நஜீப் மிகாடி, தெற்கு லெபனானில் இராணுவ வலிமையை அதிகப்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் லெபனானில் புதிய அத்தியாயம் தொடங்கும் என நம்புவதாகவும் கூறியிருக்கிறார்.

அதேநேரம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவோ, போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஹிஸ்புல்லாவோ, அவர்களது கூட்டாளிகளோ மீறினால், பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். ஆகவே, இந்த ஒப்பந்தத்தை எந்தத் தரப்பு மீறினாலும், மீண்டும் அங்கு போர் வெடிக்கும் அபாயங்கள் இருப்பது நன்கு தெரிகிறது.

இஸ்ரேலிடம் மிகப்பெரிய இராணுவ திறன்களும் வான்வெளியில் மேலாதிக்கமும் இருந்தபோதிலும், லெபனானில் தரைப்படை நடவடிக்கையில் அவதிப்பட்டதை மறுக்க முடியாது. சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த சண்டையின் முடிவிலும்கூட, தெற்கிலுள்ள நகரங்களைக் கைப்பற்றுவதில் இஸ்ரேல் தோல்வியடைந்திருந்தது என்பது உண்மை. ஹிஸ்புல்லாவின் ரொக்கெட் ஏவுதிறனைச் செயலிழக்க வைக்க இஸ்ரேலினால் முடியவில்லை.

ஹிஸ்புல்லாவின் தொடர் தாக்குதல்கள் இஸ்ரேலில் போர் வியூகங்களில் பல குழப்பங்களை உருவாக்கிய அதேநேரம் காஸா மோதலில் அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டும் என்ற நோக்கங்களும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குக் காரணமாக இருந்தது என்ற முடிவுக்கு வரலாம்.

ஹமாஸுடன் ஒப்பிடுகையில், ஹிஸ்புல்லா அதிக இராணுவ திறன்களைக் கொண்ட ஒரு வலிமையான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

ஆகவே, இஸ்ரேல் அதன் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்ற அவதானிப்புகளும் உண்டு. எவ்வாறாயினும் இந்தப் போர் நிறுத்தம் அழிவுகளில் இருந்து மக்களைக் காப்பாற்றியுள்ளது என்பதே உண்மை.

https://oruvan.com/sri-lanka/2024/11/29/israel-hezbollah-ceasefire-and-the-french-background

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.