Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-154.jpg?resize=750%2C375&ssl

ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார் – உக்ரேன் இணக்கம்!

சவுதி அரேபியாவில் அமெரிக்கா-உக்ரேன் இடையே நடந்த ஒரு நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக கெய்வ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளிவிகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ, இந்த வாய்ப்பை ரஷ்யாவிடம் முன்வைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், “நேர்மறையான” திட்டத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பது இப்போது அமெரிக்காவின் பொறுப்பாகும் என்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

ஜெட்டாவில் செவ்வாயன்று (11) நடந்த பேச்சுவார்த்தை, ஓவல் அலுவலகத்தில் ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான முன்னதாக நடந்த சந்திப்பின் அசாதாரண மோதலுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாகும்.

பேச்சுவார்த்தையின் பின்னர், வொஷிங்டன் நிறுத்தி வைத்திருந்த உக்ரேனுக்கான உளவுத்துறை பகிர்வு மற்றும் பாதுகாப்பு உதவியை உடனடியாக மீண்டும் தொடங்குவதாகவும் அமெரிக்கா ஒரு கூட்டு அறிக்கையில் குறிப்பிட்டது.

செவ்வாய்க்கிழமை மாலை ஜெட்டாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ரூபியோ, ரஷ்யா இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புவதாகக் கூறினார்.

30 நாள் போர்நிறுத்தத்திற்கான சலுகை, கடலிலும் வானத்திலும் பகுதியளவு போர்நிறுத்தத்திற்கான ஜெலென்ஸ்கியின் முன்மொழிவுக்கு அப்பாற்பட்டது.

ஜெட்டாவில் நடந்த பேச்சுவார்த்தையின் ஆக்கபூர்வமான தன்மைக்கு உக்ரேன் ஜனாதிபதி ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்தார்.

எனினும், பேச்சுவார்த்தை தொடர்பில் மொஸ்கோ இன்னும் பதிலளிக்கவில்லை.

பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து வொஷிங்டனால் விளக்கமளிக்கப்பட்ட பின்னர் ரஷ்யா ஒரு அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.

தற்போது அது உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.

இதேவேளை, போர் நிறுத்தத்திற்கான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், உக்ரேனின் போர்க்கள நிலைகள், குறிப்பாக ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1424862

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் போர்: 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஸெலன்ஸ்கி தரப்பு - ரஷ்யாவின் முடிவு என்ன?

ரஷ்யா யுக்ரேன் போர், ஸெலன்ஸ்கி , மார்கோ ரூபியோ, டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தம், அமெரிக்கா , சவுதி அரேபியா, வெள்ளை மாளிகை, ஓவல் அலுவலகம், அரிய புவி கனிமங்கள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,சௌதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்தத்திற்கு யுக்ரேன் தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மையா டேவிஸ் & பால் ஆடம்ஸ்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சௌதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய யுக்ரேன் தரப்பினர், அமெரிக்கா பரிந்துரைத்தபடி உடனடியாக அமலாகும் வகையில் ரஷ்யாவுடன் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

இனி இந்த விஷயத்தில் "ரஷ்யாதான் முடிவெடுக்க வேண்டும்" என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இனி இந்த நேர்மறையான முன்மொழிவை ஏற்றுக் கொள்ளும் வகையில் ரஷ்யாவை சமாதானப்படுத்துவது அமெரிக்காவின் கையில் இருக்கிறது என்று யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில், டிரம்ப், ஸெலன்ஸ்கி இடையே நடைபெற்ற அசாதாரணமான வார்த்தைப் போருக்குப் பின்னர், இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் அதிகாரப்பூர்வ முதல் சந்திப்பாக ஜெட்டாவில் செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்பு அமைந்தது.

இரு தரப்பும் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில் யுக்ரேனுக்கான பாதுகாப்பு உதவிகள் மற்றும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கை உடனடியாக மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதவிகளை, யுக்ரேன் அதிபர் உடனான ஓவல் அலுவலக சந்திப்புக்குப் பின்னர் அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்தது.

'இனி முடிவு ரஷ்யாவின் கையில்...'

இரு தரப்பு கூட்டறிக்கையில் "இரு தரப்புப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைக்கான குழுக்களின் பெயர்களை அறிவிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். யுக்ரேனின் நீண்ட கால பாதுகாப்புக்காக அமைதியை எட்டுவதற்கான பேச்சுவார்தையைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெட்டாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மார்கோ ரூபியோ இந்த முன்மொழிவை ரஷ்யா ஏற்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

"யுத்தத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்க யுக்ரேன் தயாராக உள்ளது" எனக் கூறிய ரூபியோ ஒருவேளை ரஷ்யா இதை நிராகரித்தால், "அமைதிக்குத் தடையாக யார் இருக்கிறார்கள் என்பதை துரதிர்ஷ்டவசமாக நாம் தெரிந்து கொள்வோம்" எனக் கூறினார்.

"போரை நிறுத்தவும், உடனடியாக பேச்சுவார்த்தையைத் தொடங்கவும், நாங்கள் வழங்கிய ஒரு திட்டத்தை யுக்ரேன் இன்று ஏற்றுக்கொண்டது" எனவும் அவர் தெரிவித்தார்.

"நாங்கள் இந்தத் திட்டத்தை ரஷ்யா தரப்புக்கு எடுத்துச் செல்வோம். அவர்களும் அமைதியை ஆமோதிப்பார்கள் என நம்புகிறோம். இனி முடிவு அவர்கள் கையில் உள்ளது" என்றார் ரூபியோ.

கடலிலும், வான் பரப்பிலும் மட்டும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற ஸெலென்ஸ்கியின் முன்மொழிவைவிட இந்த 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவு பரந்துபட்டதாக இருக்கிறது.

நன்றி தெரிவித்த ஸெலன்ஸ்கி

ரஷ்யா யுக்ரேன் போர், ஸெலன்ஸ்கி , மார்கோ ரூபியோ, டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தம், அமெரிக்கா , சவுதி அரேபியா, வெள்ளை மாளிகை, ஓவல் அலுவலகம், அரிய புவி கனிமங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சௌதி அரேபியாவின் ஜெட்டாவில் செவ்வாய்க்கிழமையன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது

ஜெட்டாவில் நடந்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்காக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, டிரம்புக்கு நன்றி தெரிவித்தார். ஸெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், "போரை நிறுத்துவதற்கோ அல்லது தொடர்வதற்கோ ரஷ்யா தனது விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும். இது முழு உண்மைக்கான நேரம்" என்று கூறியுள்ளார்.

ரஷ்யா இதுவரை ஏதும் பதிலளிக்காத நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகை செவ்வாய்க்கிழமை முன்கூட்டியே அளித்த தகவல்களின்படி, பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து அமெரிக்காவுடன் விவாதித்த பிறகு ஓர் அறிக்கை வெளியிடப்படும்.

பிப்ரவரி 2022 முதல் யுக்ரேனில் முழுமையான ஆக்கிரமிப்பை ரஷ்யா தொடங்கியது. யுக்ரேனின் நிலப்பரப்பில் 20 சதவீதத்தை தற்போது மாஸ்கோ கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசவுள்ளதாகவும் தமது முன்மொழிவுகளை அவர் ஏற்பார் என்று நம்புவதாகவும் கூறியிருந்தார்.

"அவர்கள் கூறுவதைப் போன்று, இது இரு தரப்பு ஒப்புதல்களுக்கு உட்பட்டது" எனக் கூறிய டிரம்ப் அடுத்த சில நாட்களில் இந்தத் திட்டமானது ஏற்றுக் கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

"எங்களுக்கு ரஷ்யாவுடன் நாளை பெரிய சந்திப்பு இருக்கிறது, சில சிறந்த பேச்சுவார்த்தைகள் தொடரும் என நம்புகிறோம்" என்பது டிரம்பின் கூற்றாக இருக்கிறது. யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியை மீண்டும் வாஷிங்டன் அழைப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறினார்.

ரஷ்யாவின் அரசு செய்தி ஊடகமான Tass வழங்கிய தகவல்களின்படி, வரும் சில நாட்களில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை இருக்கிறது என்பதை ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளரான மரிய ஸகரோவா மறுக்கவில்லை.

அரிய கனிமங்களை வழங்கும் யுக்ரேன்

ரஷ்யா யுக்ரேன் போர், ஸெலன்ஸ்கி , மார்கோ ரூபியோ, டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தம், அமெரிக்கா , சவுதி அரேபியா, வெள்ளை மாளிகை, ஓவல் அலுவலகம், அரிய புவி கனிமங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஓவல் அலுவலக நிகழ்வுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை

டிரம்ப், ஸெலன்ஸ்கி இடையிலான நல்லுறவு மீண்டும் சரியான பாதைக்குத் திரும்பியுள்ளதா?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த மார்கோ ரூபியோ, "அமைதிக்கான பாதையை நோக்கித் திரும்பியுள்ளது" என்று கூறினார். "இது தொலைக்காட்சித் தொடரில் நடக்கும் நிகழ்ச்சிகள் அல்ல" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"மக்கள் நேற்றும் போரில் இறந்தார்கள், போர் நிறுத்தம் எட்டப்படவில்லை எனில் நாளையும் மரணங்கள் நிகழும்" என்று ரூபியோ கூறினார்.

மாஸ்கோவில் இரவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், யுக்ரேன் போரை நிறுத்துவதற்கான ராஜ்ஜீய நடவடிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் யுக்ரேன் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா இடையிலான "அரிய கனிமங்கள்" தொடர்பான ஒப்பந்தத்தைச் சாத்தியமுள்ள வகையில் விரைவாக இறுதி செய்ய டிரம்ப் மற்றும் ஸெலன்ஸ்கி ஒப்புக் கொண்டதாகவும் கூட்டறிக்கை கூறியுள்ளது.

அமெரிக்கா அளிக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தின் பேரில் அரிய கனிமங்களை எடுத்துக் கொள்வதற்கான அனுமதியை அமெரிக்காவுக்கு வழங்குவதாக யுக்ரேன் கூறியிருந்தது. ஆனால் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற பிரச்னையால் இது தடம் மாறியது.

ஆனால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கனிமங்கள் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை எனவும், யுக்ரேன் மற்றும் அமெரிக்க கருவூலத் துறைகள் சார்பில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் மார்கோ ரூபியோ கூறினார்.

'பேச்சுவார்த்தையில் ஐரோப்பாவும் இடம் பெற வேண்டும்'

ரஷ்யா யுக்ரேன் போர், ஸெலன்ஸ்கி , மார்கோ ரூபியோ, டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தம், அமெரிக்கா , சவுதி அரேபியா, வெள்ளை மாளிகை, ஓவல் அலுவலகம், அரிய புவி கனிமங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உடனடி பாதுகாப்பு உத்தரவாதங்கள் இன்றி கனிமங்களைத் தர ஒப்புக் கொண்ட யுக்ரேன்

ஜெட்டாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கான அமெரிக்க குழுவில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

ஸ்டீவ் விட்காஃப் வரும் நாட்களில் ரஷ்யா செல்லவிருப்பதாக, திட்டமிடல் குறித்து அறிந்த வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன. ஆனாலும் இது மாறுதலுக்கு உட்பட்டது.

இந்தக் கூட்டறிக்கையின்படி, எந்த அமைதிப் பேச்சுவார்த்தையிலும் ஐரோப்பிய நாடுகளின் ஈடுபாடு இருக்க வேண்டும் என கீயவ் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பாவை பேச்சுவார்த்தையில் இருந்து தள்ளி வைக்கும் வகையில், போர் தொடர்பான அணுகுமுறையில் அமெரிக்காவிடம் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, ஐரோப்பிய நாடுகள் கடந்த சில வாரங்களில் அவசர சந்திப்புகளை நடத்தின.

ஐரோப்பிய யூனியன் ஆணையத்தின் தலைவரான உர்சுலா வோன் டெர் லெயன் பேசுகையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நேர்மறையான முன்னேற்றங்களை வரவேற்பதாகக் கூறினார். யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது அமெரிக்க அதிபரின் முக்கிய உறுதி மொழியாக இருக்கிறது.

யுக்ரேன் அதிபர் வலியுறுத்திய உடனடிப் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்காமல், போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஸெலன்ஸ்கிக்கு அவர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தார். போர் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவுக்கு எதிராக மேலும் தடைகளை விதிக்கக் கூடும் என்ற அரிதான எச்சரிக்கையையும் வெள்ளிக்கிழமையன்று டிரம்ப் விடுத்தார்.

போர்க்களத்தில் தற்போது ரஷ்யா யுக்ரேனை முழு வேகத்துடன் தாக்குகிறது என்பதால் இந்த நடவடிக்கை குறித்து யோசிப்பதாக டிரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார்.

தொடரும் டிரோன் தாக்குதல்கள்

ரஷ்யா யுக்ரேன் போர், ஸெலன்ஸ்கி , மார்கோ ரூபியோ, டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தம், அமெரிக்கா , சவுதி அரேபியா, வெள்ளை மாளிகை, ஓவல் அலுவலகம், அரிய புவி கனிமங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மாஸ்கோ பிராந்தியத்தில் யுக்ரேனின் டிரோன் தாக்குதலால் 3 பேர் கொல்லப்பட்டனர்

நடைமுறையில், களத்தில் நடைபெற்று வரும் போர் செவ்வாய்க்கிழமை அன்றும் தொடர்ந்தது.

மாஸ்கோ பிராந்தியத்தில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடங்கியது முதல் ரஷ்ய தலைநகரில் நடந்த மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

இது மட்டுமின்றி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் காயமடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் கூறியுள்ளன. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அளித்த தகவலின்படி, 337 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. இதில் 91 டிரோன்கள் மாஸ்கோ பிராந்திய வான் வெளியில் இடைமறிக்கப்பட்டன.

தலைநகர் கீயவ் மற்றும் பல பிராந்தியங்களில் ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்கள் நடந்ததாக யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவால் ஏவப்பட்ட 126 டிரோன்களில் 79 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக யுக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது. இதில் Iskander-M ஏவுகணையும் இருந்ததாக யுக்ரேன் கூறியுள்ளது.

ஆனால் யுக்ரேனில் உயிரிழப்புகள் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cj0q1p8p93do

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் 30 நாள் யுத்தநிறுத்தத்திற்கு தயார் - பாதுகாப்பு உதவிகளை வழங்குவதை மீண்டும் ஆரம்பித்தது அமெரிக்கா

12 MAR, 2025 | 12:16 PM

image

உக்ரைன் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்ததை தொடர்ந்து அந்த நாட்டிற்கான பாதுகாப்பு உதவிகளை வழங்குவதையும் புலனாய்வு தகவல்களை பரிமாறுவதையும் அமெரிக்க மீள ஆரம்பித்துள்ளது.

ரஸ்யா உடன்பட்டால் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என உக்ரைன் தெரிவித்துள்ளதை தொடர்ந்து அமெரிக்கா பாதுகாப்பு உதவிகளை புலனாயவு தகவல்களை வழங்குவது ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.

ஒரு வாரகாலத்திற்கு முன்னர் காணப்பட்ட நிலைப்பாட்டிலிருந்து விலகி டிரம்ப் நிர்வாகம் புதிய நிலைப்பாட்டையெடுத்துள்ளது.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க உக்ரைன் ஜனாதிபதிகள் கடும் வார்த்தை போரில் ஈடுபட்டதை தொடர்ந்து அமெரிக்கா பாதுகாப்பு உதவிகளை புலனாயவு தகவல்களை வழங்குவதை இடைநிறுத்தியிருந்தது.

சவுதி அரேபியாவில் உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளிற்கு தலைமைதாங்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ருபியோ யுத்த நிறுத்தம் குறித்த திட்டத்தை அமெரிக்கா ரஸ்யாவிற்கு தெரிவிக்கும், என தெரிவித்துள்ளார்..

பேச்சுவார்த்தை மேசையில் என்ன உள்ளது என்பதை அவர்களிற்கு தெரிவிக்கப்போகின்றோம், உக்ரைன் துப்பாக்கி சூட்டை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைகளிற்கு தயார், இனி ரஸ்யாவே ஆம் அல்லது இல்லை என தெரிவிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சமாதான திட்டத்தினை ரஸ்யா ஏற்க மறுத்தால் சமாதானத்திற்கான உண்மையான தடை என்னவென்பது தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/208981

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா நிபந்தனைகளை விதித்துள்ளது – ரொய்ட்டர்

Published By: RAJEEBAN

13 MAR, 2025 | 10:17 AM

image

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா நிபந்தனைகளை விதித்துள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

இந்த விடயங்கள் குறித்து நன்கறிந்த இருவர் இதனை ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர்.

ரஸ்யா பரந்துபட்ட நிபந்தனைகளைமுன்வைத்துள்ளது, இந்த நிபந்தனைகள் ரஸ்யா முன்னர் முன்வைத்த நிபந்தனைகள் போன்றவை என இந்த விடயங்கள் குறித்து நன்கறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனிற்கு நேட்டோவில் உறுப்புரிமையை வழங்க கூடாது, உக்ரைனில் உலக நாடுகளின் படைகளை நிறுத்தக்கூடாது, கிரிமியாவும் நான்கு மாகாணங்களும் ரஸ்யாவிற்கு சொந்தமானது என்ற புட்டினின் வேண்டுகோளை உலக நாடுகள் ஏற்கவேண்டும் போன்ற நிபந்தனைகளை ரஸ்யா கடந்த காலங்களில் விதித்திருந்தது.

இதேவேளை உக்ரைன் போருக்கு அடிப்படை காரணங்களான நேட்டோவின் கிழக்கு நோக்கி விஸ்தரிப்பு குறித்தும் சமீபகாலமாக ரஸ்யா சுட்டிக்காட்டி வந்துள்ளது.

ரஸ்யா தனது பட்டியலில்; புதிதாக என்ன விடயங்களை சேர்த்துக்கொண்டுள்ளது இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா தயாரா என்ற விபரங்கள்  வெளியாகவில்லை.

கடந்த மூன்று வாரங்களாக ரஸ்ய அமெரிக்க அதிகாரிகள் இந்த நிபந்தனைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி இணங்கியுள்ள நிலையில் ரஸ்ய ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிவதற்காக அமெரிக்க ஜனாதிபதி காத்திருக்கின்றார்.

யுத்த நிறுத்தத்திற்கான புட்டினின் அர்ப்பணிப்பு குறித்து நிச்சயமற்ற நிலையே காணப்படுகின்றது.

முன்னாள் கேஜிபி உறுப்பினரான விளாடிமிர் புட்டின் யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தி அமெரிக்கா உக்ரைன் ஐரோப்பாவிற்கு இடையில் கருத்துவேறுபாடுகளை உருவாக்க முயல்வார் என அமெரிக்க அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிபுணர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/209064

  • கருத்துக்கள உறவுகள்

கனிமங்களுக்கான கையெழுத்து அமெரிக்கா மற்றும் யூக்ரேனால் சவூதியில் வைக்கப்பட்டதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nunavilan said:

கனிமங்களுக்கான கையெழுத்து அமெரிக்கா மற்றும் யூக்ரேனால் சவூதியில் வைக்கப்பட்டதா?

இன்னும் கனிமங்களுக்கான கையெழுத்து வைக்கப் படவில்லை.

5 அம்ச திட்டங்களுக்கு உக்ரைன் சம்மதித்ததாக தெரிகின்றது.

அதில் கனிமவளமும் ஒன்று.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.