Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான 50 வீத வரி இன்று முதல் அமுல் !

27 Aug, 2025 | 09:57 AM

image

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. 

அமெரிக்க ஜனாதிபதியாக nடானால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், ஏனைய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தி வருகிறார்.

அதன்படி அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்ததுடன் அந்த வரிவிதிப்பு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது.

அத்துடன், ரஷ்யாவிடம் மசகு எண்ணெய், இராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். 

இந்த கூடுதல் வரிவிதிப்பு இன்று ( ஆகஸ்ட் 27)  முதல் அமுலுக்கு வந்துள்ளது. எனவே,அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு இன்று முதல் 50 சதவீதமாக அதிகரிக்கின்றது.

இது குறித்து, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஆகஸ்ட் 27 ஆத் திகதி (அதாவது இன்று) அதிகாலையில் இருந்து விற்பனைக்காக அமெரிக்காவிற்குள் இறக்குமதியாகும் மற்றும் அமெரிக்காவில் உள்ள களஞ்சியசாலைகளில் இருந்து விற்பனைக்காக வெளியேறும் இந்திய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பு பொருந்தும்.

அதே சமயத்தில், 27 ஆம் திகதி அதிகாலைக்கு முன்பு கப்பலில் ஏற்றப்பட்ட இந்திய பொருட்கள், நடுவழியில் கப்பலில் வந்து கொண்டிருக்கும் பொருட்கள் ஆகியவற்றுக்கு 25 சதவீத கூடுதல் வரி பொருந்தாது. இருப்பினும், செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்பு அமெரிக்காவில் பயன்படுத்த அவற்றுக்கு ஒப்புதல் பெறுவதுடன், அமெரிக்க சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரிவிதிப்பால், புடைவை, தைத்த ஆடைகள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், இறால், தோல், காலணி, விலங்கு பொருட்கள், இரசாயனங்கள், மின்சார எந்திர சாதனங்கள் ஆகிய துறைகள் பாதிக்கப்படும்.

ஆனால் மருந்து பொருட்கள், எரிசக்தி பொருட்கள், இலத்திரனியல் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றுக்கு 50 சதவீத வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

கடந்த ஆண்டு வர்த்தக மதிப்புப்படி, அமெரிக்காவுக்கு 4 ஆயிரத்து 820 கோடி டொலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 

எனவே, அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால், 4 ஆயிரத்து 820 கோடி டொலர் மதிப்புள்ள இந்திய பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று இந்திய மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை தவிர, பிரேசில் மட்டுமே 50 சதவீத வரியை எதிர்கொள்கின்றது. சீனா 30 சதவீத வரியையும், மியான்மர் 40 சதவீத வரியையும் எதிர்கொள்கின்றன.

இந்திய பொருட்களுக்கு வரி உயர்வு அமுலுக்கு வரும் வேளையில், சீனாவுக்கும் 200 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

அதாவது கடந்த ஏப்ரல் மாதம், சீன பொருட்கள் மீதான வரியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உயர்த்தினார். ஒருகட்டத்தில் 150 சதவீத வரி அளவுக்கு உயர்த்தினார். அதேபோல் சீனாவும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரியை அதே அளவுக்கு உயர்த்தியது.

இருதரப்பிலும் வர்த்தக போர் வெடிக்கும் சூழ்நிலை உருவானது. பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக வர்த்தக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

சீனாவின் அரியவகை புவி காந்தங்கள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தவும், அமெரிக்க தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை வாபஸ் பெறவும் ஒப்பந்தம் ஏற்பட்டது. 

இதனால், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 55 சதவீதமாக சீனா குறைத்தது. சீன பொருட்கள் மீதான வரியை 32 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. இந்த தற்காலிக வர்த்தக போர் நிறுத்தம், நவம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றது.

இந்த தற்காலிக வர்த்தக போர் நிறுத்தத்தை சீர்குலைக்கும் வகையில், சீனாவுக்கு இந்த பகிரங்க எச்சரிக்கையை தற்போது டிரம்ப் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/223461

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் 50 % வரி விதிப்பால் ஐ போன் விலை உயருமா? - டிரம்ப் நிர்வாக முடிவுகளை ஆப்பிள் நிறுவனம் எப்படி கையாளுகிறது?

அடுத்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோனில் புதிய, மேம்படுத்தப்பட்ட ஐபோன் 17 மாடலை வெளியிடவிருக்கிறது

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், இந்த புதிய வரிகள் ஐபோன்களுக்குப் பொருந்துமா?

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் மீது 50 சதவீத இறக்குமதி வரி என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் யுக்ரேன் போருக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது என குற்றம் சாட்டி, இதன் காரணமாகவே இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரிவிதிப்படுகிறது என்கிறார் டிரம்ப்.

புதிய வரிகளால் என்ன பாதிப்பு?

இனி வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், இந்தப் புதிய வரி விகிதங்களின்படி அமெரிக்க அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அந்த நிறுவனம் பொருளின் விலையை உயர்த்தி வரிச் செலவை ஈடு செய்தால், இந்தச் சுமை முழுவதும் அமெரிக்க நுகர்வோரின் மீதுதான் விழும்.

அப்படி சுமத்த விரும்பாத நிறுவனங்கள், ட்ரம்பால் வரி விதிக்கப்படாத நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய விரும்பலாம். இதனால், வரி விதிக்கப்பட்ட நாடுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு வேலை இழப்பு ஏற்படலாம்.

வரி உயர்வின் நேரடி பாதிப்பை எதிர்கொள்வது அமெரிக்க நுகர்வோராகவே இருப்பார்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வரி உயர்வின் நேரடி பாதிப்பை எதிர்கொள்வது அமெரிக்க நுகர்வோராகவே இருப்பார்கள்

ஐபோன்களுக்கு எந்த அளவுக்கு வரி விதிக்கப்படும்?

தற்போதைய சூழலில் ஐபோன்களுக்கு இந்தப் புதிய வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பெருமளவில் ஆசியாவில்தான் தயாராகின்றன.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து இறக்குமதி வரி குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுவந்த நிலையில், ஆகஸ்ட் ஆறாம் தேதி 'ஆப்பிள்' வெளியிட்ட செய்திக் குறிப்பில் அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப்போவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அறிவித்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன்களுக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்குப் பெறும் முயற்சியாகவே இந்தத் திட்டத்தை டிம் குக் அறிவித்திருப்பதாக 'ப்ளூம்பர்க்' கூறுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தபோது, ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர்கள், பிற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்களிக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

ஜூலை மாத இறுதியில் அந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு பேசிய டிம் குக், அமெரிக்காவில் விற்பனையாகும் ஐ போன்களில் பெரும்பகுதி இந்தியாவில் தயாரிக்கப்படுவதாகவும் ஐபேட், ஐவாட்ச், மேக்புக் போன்றவை வியட்னாமில் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

செமி கண்டக்டர்கள் உள்பட எந்தெந்தப் பொருட்கள் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியமானவை என அமெரிக்காவின் வர்த்தகத் துறை ஆராய்ந்து வருதாகவும் அது நிறைவடையும்வரை அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் ஸ்மார்ட் போன்கள் மீது வரிகள் விதிக்கப்படாது என்றும் ப்ளூம்பர்க் கூறுகிறது.

சீனாவில் பெருமளவில் ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனம் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்குப் பிறகு, தனது உற்பத்தியை வேறு பல நாடுகளுக்கும் பரவலாக்கியது. குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் ஐபோன் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இறக்குமதிகள் மீது வரிகளை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்ததையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஐபோன்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதற்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் இந்தியா மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், இந்த வரி விதிப்பு 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்குப் பிறகு வரிகள் அமலுக்கு வந்தபோது, இது 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதாகக்கூறி கூடுதலாக 25 சதவீத வரியை விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி அமலுக்கு வந்தது.

எதிர்காலத்தில் ஐபோன்களுக்கு வரி விதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டா?

வரிவிதிக்கப்படும் ஆபத்துக்களை குறைக்க ஆப்பிள் நிறுவனம் முயற்சித்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

"தற்போதைய கொள்கையின்படி இறக்குமதியாகும் செமிகண்டக்டர்கள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றுக்கு எவ்வித வரிகளும் கிடையாது. ஆகவே, ஐபோன்களைப் பொறுத்தவரை இந்த வரி விதிப்புப் பிரச்சனை இப்போதைக்குக் கிடையாது. எதிர்காலத்தில் என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது" என்கிறார் குளோபல் ட்ரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவின் நிறுவனரான அஜய் ஸ்ரீ வத்ஸவ்.

ட்ரம்பின் வரி விதிப்பு இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை பாதிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறார் கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச்சின் ஆய்வுப் பிரிவு இயக்குநரான தருண். "அமெரிக்காவைப் பொறுத்தவரை, சீனாவிற்கு வெளியிலும் போன்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தேவை. ஆகவே இதற்கு வரி விதிக்க மாட்டார்கள் எனக் கருதுகிறேன். மேலும் ஐபோன்களைப் பொறுத்தவரை உள்நாட்டிலும் மிகப் பெரிய அளவில் விற்பனை இருக்கிறது. ஆகவே வரி விதித்தாலும் பாதிப்பின் அளவு சற்று குறையும்" என்கிறார் தருண்.

இந்தியாவில் ஐபோன்களின் விலைகளில் மாற்றம் இருக்குமா?

இந்தியாவில் விற்பனைக்கு வரும் பெரும்பாலான ஐ போன்கள் உள்நாட்டிலேயே உற்பத்தியாகின்றன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் விற்பனைக்கு வரும் பெரும்பாலான ஐ போன்கள் உள்நாட்டிலேயே உற்பத்தியாகின்றன

எதிர்காலத்தில் ட்ரம்ப் ஸ்மார்ட் போன்களுக்கும் வரிகளை விதித்தால் அமெரிக்காவில் நிச்சயம் அதன் விலைகள் உயரும். ஆனால், இந்தியாவில் என்ன ஆகும்?

"இந்தியாவில் விலைகள் உயராது. காரணம், இந்தியாவில் விற்பனையாகும் போன்கள் இங்கேயே தயாராகின்றன. மிக உயர்ந்த ரகம் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் வெளிநாடுகளில் தயாராகிறது. ட்ரம்பின் வரி அந்நாட்டிற்குள் இறக்குமதியாகும் பொருட்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதால் இந்தியாவில் ஐபோன்களின் விலை உயர வாய்ப்பில்லை" என்கிறார் அஜய் ஸ்ரீவத்ஸவா.

ஐபோனின் விலைகளைப் பொறுத்தவரை, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே விலையிலேயே விற்பனையாகிறது என்பதால், உள்ளுர் வரிகள் மட்டுமே விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார் பொருளாதார நிபுணரான பிரபாகர்.

ஐபோன்களுக்கு வரி விதித்தால் என்ன ஆகும்?

ஐ போன்களுக்கு வரி விதிக்கப்பட்டால் பாதிக்கப்படுவது ஆப்பிள் நிறுவனமாகத் தான் இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐ போன்களுக்கு வரி விதிக்கப்பட்டால் பாதிக்கப்படுவது ஆப்பிள் நிறுவனமாகத் தான் இருக்கும்.

"ஐபோன்களைப் பொறுத்தவரை இந்தியாவில் ஒருங்கிணைப்பு மட்டும்தான் நடக்கிறது. இதற்கான உதிரி பாகங்கள் சீனாவில் இருந்துதான் வருகின்றன. போன்களுக்கு வரி விதித்தால், ஆப்பிள் நிறுவனம் பெரிய அளவில் பாதிக்கப்படும். அதனால்தான் இப்போதைக்கு வரி இல்லை. ஆனால், உற்பத்தியை அங்கே மாற்றச் சொல்லி அந்நிறுவனத்திடம் சொல்லிவருகிறார் ட்ரம்ப். ஆப்பிள் என்ன செய்யுமெனப் பார்க்க வேண்டும்.

அடுத்ததாக, இந்த வரியினால் பெரிய பாதிப்பு என்பது ஜவுளி, நகைகள், வாகன உதிரிபாக உற்பத்தி போன்றவற்றில்தான் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது வேறு சந்தைகளைப் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், வேறு சந்தைகள் எதிலும் இவ்வளவு விலை கொடுத்து நம் பொருட்களை வாங்க மாட்டார்கள். ஆகவே இந்தத் துறைகள் குறித்துதான் நாம் பெரிய அளவில் கவலைப்பட வேண்டும்.

இந்தியாவிலும் ஐபோன் உற்பத்தியாகிறது என்ற பெயரும் வேலைவாய்ப்பும்தான் இதனால் கிடைக்கிறது. வேறு பலன்கள் இல்லை" என்கிறார் பிரபாகர்.

அடுத்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோனில் புதிய, மேம்படுத்தப்பட்ட ஐபோன் 17 மாடலை வெளியிடவிருக்கிறது. செப்டம்பர் 9ஆம் தேதி இந்த புதிய மாடல் அமெரிக்காவில் வெளியாகவிருக்கிறது. இந்தியாவில் இந்த போனுக்கான முன்பதிவு செப்டம்பர் 12ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐபோன் 17 மாடலைப் பொறுத்தவரை மொத்தம் நான்கு வேரியண்ட்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த நான்கு வேரியண்ட்களுமே இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தியாகவிருப்பதாக ஆப்பிள் வட்டாரங்களை மேற்கோள்காட்டி 'ப்ளும்பர்க்' இணையதளம் தெரிவிக்கிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c15ljz3n1v1o

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி இலங்கை ஆடை, கடலுணவு மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.