109ஆவது பொன் அணிகளின் போர் கிரிக்கெட்டில் சென். பட்றிக்ஸ் - யாழ்ப்பாணம் கல்லூரி பலப்பரீட்சை
12 Mar, 2026 | 01:10 PM
(நெவில் அன்தனி)
யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான யாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் போர் வட்டுக்கொட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் இன்று (12) ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டி அருட்தந்தை ரி.எம்.எவ். லோங் அடிகளார் ஞாபகார்த்த சவால் கிண்ணத்துக்காக விளையாடப்படுகிறது.
1917இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டி, வட மாகாணத்தின் மிகவும் பழைமையான மற்றும் பெருமைக்குரிய கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாக விளங்குகிறது.
2025ஆம் ஆண்டுவரை நடைபெற்று முடிந்த 108 பொன் அணிகளின் போரில் சென். பட்றிக்ஸ் கல்லூரி 35 வெற்றிகளை ஈட்டியுள்ளதுடன் யாழ்ப்பாணம் கல்லூரி 17 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 31 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டது.
1973ஆம் ஆண்டு ஈட்டிய வெற்றிக்குப் பின்னர் அடுத்த வெற்றிக்காக 52 வருடங்களாக ஏங்கிக்கொண்டிருந்த யாழ்ப்பாணம் கல்லூரி கடந்த வருடம் அந்த ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
சிதம்பரலிங்கம் மதுசன் தலைமையில் யாழ்ப்பாணம் கல்லூரி 59 ஓட்டங்களால் கடந்த வருடம் வெற்றியைப் பதிவு செய்தது.
சென். பட்றிக்ஸ் கல்லூரி கடைசியாக 2023இல் சிவராசா கீர்த்தன் தலைமையில் வெற்றி பெற்றிருந்தது.
2025இலிருந்து இப் போட்டி மூன்று நாள் போட்டியாக நடத்தப்படுவது விசேட அம்சமாகும்.
இந்த வருடம் சென். பட்றிக்ஸ அணிக்கு பிரேமநாயகம் மதுசன் தலைவராகவும் யாழ்ப்பாணம் கல்லூரிக்கு ரொபின்சன் உதயகுமார் ஜோன்சன் தலைவராகவும் விளையாடுகின்றனர்.
இரண்டு அணிளிலும் மிகச் சிறந்த வீரர்கள் இடம்பெறுவதால் இந்த வருடப் போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
மேலும் இப் போட்டியைக் கண்டுகளிக்கவென கனடா, ஐக்கிய இராச்சியம். நோர்வே, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பழைய மாணவர்கள் பெருமளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தத்தமது அணிகளுக்கு உற்சாகமூட்டுவதால் இப் போட்டி ஒரு கொண்டாட்ட விழாவாகவும் அமைகின்றது.
இது இவ்வாறிருக்க, இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சவால் கிண்ணத்துக்கான 32ஆவது 50 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இத் தொடரிலும் சென். பட்றிக்ஸ் கல்லூரி 24 - 7 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் சவால் கிண்ணத்துக்கான 6ஆவது ரி20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும். இதில் சென் பட்றிக்ஸ் 4 வெற்றிகளையும் யாழ்ப்பாணம் கல்லூரி ஒரு வெற்றியையும் ஈட்டியுள்ளன.
இரண்டு வகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்திலேயே நடைபெறும்.
பொன் அணிகளின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமம் அனுசரணை வழங்குவதுடன் வீரர்களுக்கான சீருடைகளை அந் நிறுவனம் வழங்கியுள்ளது.
இப் போட்டிக்கு டோக்கியோ சிமென்ட் குழுமம் இணை அனுசரணை வழங்குகிறது.
அணிகள்
சென். பட்றிக்ஸ்: பிரேமநாயகம் மதுசன் (தலைவர்), சிவநாதன் ஷெகான் (உப தலைவர்), ரொபின்சன் பியர்லி டெனோவன், காம்டின் லிக்ஷன், விமலதாஸ் டெஃபானோ, செரெனஸ் நிஷாந்தன் ஹரின் ஏட்றியன், மதியழகன் ஸ்டீவ் ஆதித்தியா, ஜெபின்சன் கெமிஷன், டைட்டஸ் ஜோயேஷ், செல்வகுமார் ஸ்மித் செனாரி, ஜெயராஜரூபன் டினுலக்சன், ஜீவராஜ் மேகவர்ஷிகன், மெரின் ஹில்மன் தனுஷன், ரொக்ஷான் வொட்சன் செர்வின், அருள்ராஜன் அஷோபின், பிரதீப் மெலோடியஸ் ரவின், சுரேஷ்குமார் ஜானுசன், தேவராசா சஜீன் ஜோபேர்ட், ரொபின்சன் தேவ்சன், ஹென்றிக் விகாயகுமார் கியூட்வெஸ்லன்.
யாழ்ப்பாணம் கல்லூரி: ரொபின்சன் உதயகுமார் ஜோன்சன் (தலைவர்), வாசுதேவன் விஷ்னுகோபால் (உப தலைவர்), திவாகரன் கார்த்திகன், சசிகரன் சங்கீத், அன்ரனி ரித்மன் அபிநாத், ஸ்டெலன் கருணைதாஸ் ஹமிஷ் ஹாமிஷன், கீதேஸ்வரன் ஹரிஷன், அனுஷாந்தன் ஹாமிஷன், சுரேஷ் கபிஷன், சுபீசன் தக்சிகன், கேதீஸ்வரன் திருக்குமரன், உதயராஜா கென்றிக்சன், பாலரூபன் கெவின், சசிகரன் அஷ்மின், சத்திவேல் சதுஜன், ரவிகுமார் சாருஜன், சசிகாந்த் கிரிஷான், ராசஜெயந்தன் அஷ்வின், தயாபரன் அக்சயன்.
https://www.virakesari.lk/article/240784
By
ஏராளன் ·