Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இலட்சியப்பற்றுடன் ஜனநாயகவழிப் போராட்டங்கள் மூலமாக தமிழ் மக்களின் உரிமைகளை நடைமுறைச் சாத்தியமாக்குவோம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இலட்சியப்பற்றுடன் ஜனநாயகவழிப் போராட்டங்கள் மூலமாக தமிழ் மக்களின் உரிமைகளை நடைமுறைச் சாத்தியமாக்குவோம்'

jananaya.jpg

இருபத்தைந்து வருடங்களுக்கு இந்நாட்டை அவசரகாலச் சட்டம் தொடர்ந்து தன் பிடிக்குள் வைத்திருப்பது மட்டுமன்றி மாறி மாறி பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தையும் பெற்று வருகின்றது.நான் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பல விதங்களிலும் இடையூறாக இருக்கும் இச்சட்டம் நீக்கப்படவேண்டிய அவசியத்தை இச்சபையில் வலியுறுத்த விரும்புகின்றேன். ஜனநாயக தேசிய முன்னணி கொண்டு வந்த பிரேரணையை ஆதரிக்கின்றேன்.

இந்நாட்டில் முப்பது வருடங்களாக நிலவிவந்த போர்ச்சூழல் நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையிலும் பாதுகாப்புக் காரணங்கள் கூறப்பட்டு இச்சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் இயல்பு வாழ்வும் பேணப்பட வேண்டும் என்பதில் எவ்வித முரண்பாட்டுக்கும் இடமில்லை. ஆனால், இச்சட்டம் எமது நாட்டு மக்களின் சுதந்திரத்தையும் இயல்பு வாழ்வையும் பாதுக்கின்றதா அல்லது இடையூறு விளைவிக்கின்றதா என்பதுதான் இங்கு எழும் கேள்வி. இங்கு தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு தங்களுடைய இலாபம் அரசுடன் இணைந்து கொண்டுள்ள ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பாதுகாப்புக்கு இச்சட்டம் அவசியம் எனக் கூறித் தெரிவித்து வருவதை இச்சபை நன்கறியும்.

நான் இச்சபையில் கேட்டுக்கொள்வது, இச்சட்டம் எவ்வாறு தமிழ் மக்களைப் பாதுகாக்கிறது? எவ்வாறு தமிழ் மக்களின் இயல்பு வாழ்வுக்கு துணை நிற்கின்றது? என்பதுதான். நான் இங்கு கேட்டுக்கொள்ள விரும்புவது இச்சட்டம் தமிழ் மக்களை யாரிடம் இருந்து பாதுகாக்கின்றது? எவ்விதம் பாதுகாக்கின்றது?

இனந்தெரியாதவர்கள் என்ற பெயரில் யாழ்.குடாநாட்டில் ஒரு சிலரால் கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்கள் முன்பும் இடம்பெற்றன,இப்போதும் இடம்பெறுகின்றன. இச்சட்டத்தால் இவர்கள் யார் எனக் கண்டுபிடிக்க முடியாதா? இவர்களின் கைகளுக்கு ஆயுதங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாதா? இவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியாதா?இவர்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. இவர்கள் யார் என்பதோ இவர்களுக்குப் பின்னணியில் நின்ற கட்சிகள் எவை என்பதோ, இவர்களுக்கு மேற்கொண்டு என்ன நடந்தது என்பதோ இது வரை வெளிவரவில்லை.

இவ்விடயங்களில் இந்த அவசரகாலச் சட்டடம் ஏன் பலவீனமடைந்து போயுள்ளதென்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால், இச்சட்டத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் அனைவரும் சந்தேகத்துக்குரியவர்களாக்கப்படுகின்றனர். அடிக்கடி மேற்கொள்ளப்படும் வீதிச் சோதனைகள் எமது மக்களின் இயல்பான நடமாட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கின்றன. குடும்பப் படங்கள் எடுக்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. இவை இச்சட்டத்தால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் இயல்பு வாழ்வும் தானே என நான் கேட்டு வைக்க விரும்புகின்றேன்.

அண்மையில் கிளிநொச்சி அம்பாள் குளத்தில் வெள்ளை வானில் வந்த ஒருசிலரால் ஒரு வர்த்தகர் கடத்தப்பட்டார். அது தொடர்பாக அவரின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யச் சென்றபோது அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். மீண்டும் அவர்கள் அந்த பொலிஸ் நிலையம் சென்றபோது அவர் புலன்விசாரணைகளுக்காக கொழும்பு கொண்டு செல்லப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டது.

ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுவதென்றால் அப்பகுதி பொலிஸாருடனோ அல்லது கிராம சேவையாளருடனோ சென்று கைது செய்யப்பட வேண்டும். ஆனால், அவசரகாலச் சட்டமோ இப்படியான மர்மமான கைதுகளுக்கு இடம்கொடுக்கின்றது.

இப்படி வெள்ளைவான்களில் கடத்தப்பட்ட பலர் காணாமல்போயினர். இன்னும் சிலர் வீதியில் கொன்று வீசப்பட்டனர். இவை இனந்தெரியாத நபர்களால் அல்லது பாதாளக்கோஷ்டியினால் மேற்கொள்ளப்பட்டவை எனக்கூறப்பட்டது. அண்மையில் உரும்பிராயில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் பிணமாக பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டார்.

இதுவா தமிழ் மக்களுக்கு அவசரகாலச் சட்டம் வழங்கும் பாதுகாப்பு என இச்சபையில்

நான் கேட்டுவைக்க விரும்புகின்றேன். இதுவா தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட இயல்பு வாழ்வு?

கடந்த 08.02.2011 அன்று இச்சபையில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் சகல மக்களையும் இச்சட்டம் பாதுகாப்பதாகவும் ஒரு சிலர் சிறுசிறு விடயங்களை ஊதிப்பெருப்பித்து அரசியல் இலாபம் தேடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். தமிழ் மக்கள் கொல்லப்படுவதும், கடத்தப்பட்டுச் சடலங்களாக மீட்கப்படுவதும் அல்லது புலனாய்வுப் பிரிவினரால் மர்மமான முறையில் கைதுசெய்யப்படுவதும் சிறு சிறு விடயங்களா?

பொதுமக்களைப் பொறுத்தவரை இவை உயிர் தொடர்பான பிரச்சினை. உறவுகளை இழப்பது தொடர்பான பிரச்சினை. நிம்மதியற்ற அச்சமும் பீதியும் கலந்த நாட்கள் தொடர்பான பிரச்சினை. இவற்றை நான் ஊதிப்பெருப்பிக்க வேண்டியதில்லை. ஏனெனில் இவை ஏற்கனவே ஊதிப்பெருத்து வெடித்து உதிரம் கசிபவை. உரிமை உரிமை என்று கூச்சலிடும் நாம் என்ன உரிமைகளைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுத்தோம் என்ற கேள்வியை அமைச்சர் இங்கே எழுப்பினார்? நியாயமான கேள்வி தான். சும்மா கிடைப்பதற்கு சுதந்திரம் என்ன சுக்கா, மிளகா? என்ற பாரதியார் பாடல்தான் எனக்கு இங்கே நினைவுக்கு வருகிறது.

உரிமைகள் என்பது ஒரு நாளில் கிடைத்துவிடுவதில்லை. உரிமைகளுக்கான போராட்டம் என்பது தொடர்ச்சியானதும் நீண்டதும். இது வேகமாக முன்செல்லும். இடையில் எதிர்பாராத பின்னடைவுகளையும் சந்திக்கும். இது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மட்டுமல்ல, உலக விடுதலைப் போராட்டங்களே பெற்றுக்கொண்ட அனுபவம். எனவே, எமது ஒவ்வொரு அடிவைப்பும் ஆணித்தரமானவை. அசைந்துகொடுக்காத இலட்சிய உறுதி கொண்டவை. விலைபோய் விடாத விசுவாசம் கொண்டவை. இதன் காரணமாகவே நாம் இன்றும் அரசுடன் பேசுகின்றோம். சில கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு காரணமாகவும் எமது மக்கள் எமக்கு வழங்கும் பேராதரவு காரணமாகவும் எம்மை அரசு பேச்சுக்களுக்கு அழைத்திருக்கின்றது. அதற்காக நாம் ஒரு நாளில் உரிமைகளைப் பெற்றுவிடுவோம் என்று சத்தியம் செய்யவில்லை. ஜனநாயக தந்திரோபாய போராட்டங்கள் மூலம் எமது உரிமைகளைப் பெற முன்செல்வோம். ஆனால், நாம் ஏற்கனவே 13 ஆவது திருத்தச் சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்படுவதற்கு நாம் கையுயர்த்தி ஆதரவு வழங்கவில்லை. 18 ஆவது திருத்தச் சட்டமூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரம், பொது நிர்வாக அதிகாரம் பறிக்கப்பட்டன. உள்ளூராட்சி திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணசபைகளின் அதிகாரம் மேலும் பறிக்கப்பட்டது. இதை நாம் கடுமையாக இச்சபையில் எதிர்த்துக் குரல்கொடுத்தோம். ஆனால், அமைச்சரும் அவரது கட்சியினரும் தமிழ் மக்களுக்கென வழங்கப்பட்ட சில உரிமைகள் கூட பறிக்கப்பட ஆதரவு தெரிவித்தனர். இப்படியான ஒரு நிலையில், கௌரவ அமைச்சர் எம்மையும் இந்த அரசியலுக்கு வரும்படி அழைக்கின்றார். நாம் எப்போதுமே தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களில் இறங்கிப் போகவும் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது எதிர்ப்பதும் என்ற வகையில் எங்கள் அரசியலை முன்னெடுத்து வருகின்றோம். அரசாங்கம் செய்யும் அனைத்தையும் ஆதரிப்பதன் மூலம் இணக்க அரசியல் என்ற பெயரில் ஒரு அப்பட்டமான சரணடைவு அரசியல் செய்ய நாம் என்றுமே தயாரில்லை என்பதை இச்சபையில் உறுதியாகத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

எமது மக்களின் உரிமைகளுக்காக விட்டுக்கொடுக்காது போராடுவது, தவிர்த்து இணக்க அரசியல் என்ற பேரில் முற்று முழுதாக சரணாகதி அடைந்து தாங்கள் சொந்த இலாபங்களையும் பதவிகளையும் காப்பாற்றும் பாதையில் செல்வது என்பதற்கு பெயர் இணக்க அரசியல் என்றால் அதையே நாம் தொடர்ந்தும் செய்ய வேண்டுமா? நாம் புலிகளுக்கு ஒரு முகமும் அரசாங்கத்துக்கு ஒருமுகமும் மக்களுக்கு ஒரு முகமும் காட்டுவதாக அமைச்சரால் குற்றஞ்சாட்டப்பட்டது. இங்கு நான் அவரின் நகைப்புக்கிடமான சிறுபிள்ளைத்தனத்தை எம்மால் புரியமுடிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரே ஒரு முகம்தான் உள்ளது. அது தமிழ் மக்களின் தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் எமது உரிமைகளை வென்றெடுப்பது. ஆனால் அரசியலின் ஒவ்வொரு நகர்வையும் தந்திரோபாய அடிப்படையில் பிரதான இலக்கிலிருந்து விலகாமல் கையாளுவது எந்தவொரு ஒடுக்கப்பட்ட மக்களினதும் வழிமுறையாகும். ஒவ்வொரு சட்டத்திலும் நாம் மேற்கொள்ளும் நகர்வுகள் அமைச்சரின் சரணடைவு நகர்வுகளுக்கு வெவ்வேறு முகங்களாகக் தெரிவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.அதனடிப்படையிலேயே நடைமுறைக்குச் சாத்தியமற்றவற்றைப் பேசி நாம் மக்களை ஏமாற்றுகிறோம் என அவர் குற்றஞ் சுமத்துகிறார். எது நடைமுறைக்குச் சாத்தியம் என்பதைத் தீர்மானிப்பது சொந்த நலன்களின் அடிப்படையில் நிபந்தனையற்ற முறையில் சரணடைவதன் மூலம் அல்ல! மாறாக இலட்சியப்பற்றுடன் மக்களின் நலன்என்ற அடிப்படையில் உறுதியாக முன் செல்வதே நடைமுறைச் சாத்தியங்களை உருவாக்கும். கொடுப்பதை வாங்கிக் கொண்டு திருப்தியடைவதுதான் நடைமுறைச் சாத்தியமானால் அது பிச்சைக்காரர்களுக்கு மட்டும்தான் பொருத்தமானது. ஆனால், நாம் பிச்சைக்காரரல்ல.

பெருமைக்குரிய தமிழ் மக்கள். விட்டுக்கொடுக்காத ஜனநாயக வழிப் போராட்டங்கள் மூலம் எமது உரிமைகளை நடைமுறைச் சாத்தியமாக்குவோம்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=8576:q-&catid=72:article&Itemid=100

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.