Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார்?

அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு..

அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

இரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்குள் இருந்த தேசியத் தலைவரை அண்ணா! தயவுசெய்து இங்கிருந்து புறப்படுங்கள் என பணிவாகக் கட்டளைக் கடிதம் எழுதியது கூட எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா என்றும் சிலர் அக்காவின் வீரச்சாவின் பின்னர் கூறினர். வடபோர்முனைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன், கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் மணிவண்ணன், மகளிர் பொறுப்பாளரும் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியுமான பிரிகேடியர் விதுசா ஆகியோருடன் பிரிகேடியர் துர்க்காவும் வீரச்சாவு என்ற செய்தி அங்கு இருந்த எங்களின் இதயங்களைக் கிழித்தது. மனம் அதை நம்ப மறுத்தது. அனைத்துப் பெண் போராளிகளும் கண்ணீர்விட்டு ஓலமிட்டு அழுதனர். பெண் போராளிகளுக்கு இனி ஒரு தலைமை கிடைக்குமா என அனைத்து உள்ளங்களும் ஏங்கியது.

1971ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் திகதி கலைச்செல்வி பொன்னுத்துரை என்னும் பெயர் சூட்டி நான்கு பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்த பெண் பிள்ளை தான் எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா. யாழ்ப்பாணத்தில் வலிகாமத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் விடுதலைப் புலிகளின் நான்காவது மகளிர் பயிற்சிப் பாசறையில் 1989ம் ஆண்டு தனது அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். தலைவனின் நிழலில் மணலாற்றுக் காட்டில் தலைவரே நேரடியாக பயிற்சியை வழிநடத்திய காலத்தில் வளர்ந்தவர்தான் இவர். கடற்புலி லெப்.கேணல் மாதவி, கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி, கப்டன் வானதி, மேஜர் கஸ்தூரி, கப்டன் பாரதி போன்ற ஒப்பற்ற பெண் போராளிகளும் இதே பாசறையில்தான் தங்களின் பயிற்சியை ஆரம்பித்திருந்தனர்.

இவரது போராட்டப் பற்றையும், துணிவான கள ஆற்றலையும் கண்ட தேசியத் தலைவர் 1991ம் ஆண்டு மருத்துவப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட வைத்தார். இவர் அடிக்கடி மகளிர் பிரிவின் முதல் படைத் தளபதியாக இருந்த மேஜர் சோதியா அக்கா அவர்களை நினைவு கூறுவதோடு அவரில் மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருந்தார். அவர் காட்டிய அன்பும், இறுக்கமான பண்புமே தங்களை தலைவனை அறிந்து கொள்ளவும் போராட்டத்தின்பால் பற்று மிக்கவராக மாற்றவும் உந்து கோலாக இருந்தது என்றும் அவர் அடிக்கடி கூறுவார்.

உருவத்தில் மிகவும் சிறிய தோற்றம் கொண்டவராக இவர் இருந்தாலும் சிறப்புத் தளபதியாகத் தனது ஆயுத உறையில் கைச்சுடுகலனைக் கட்டிக் கொண்டு வலம் வரும்போது மிகவும் கம்பீரமாகவே இருக்கும். 1996 க்கு முன்னர் பல சிறிய களமுனைகளைச் சந்தித்து இருந்தாலும் 1996ம் ஆண்டு ஜுன் மாதம் மேஜர் சோதியா படையணியின் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டு 450 வரையிலான போராளிகளுடன் மூன்று கம்பனிகளுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓயாத அலைகள் 1, 2, 3 ஆகிய நடவடிக்கைகளுடன் ஜெயசுக்குறு எதிர்ச்சமர் மற்றும் தீச்சுவாலை நடவடிக்கை ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டு அணிகளை வழிநடத்தி வந்தார் பிரிகேடியர் துர்க்கா. தீச்சுவாலை நடவடிக்கையின் போது வயிற்றில் விழுப்புண் அடைந்த நிலையில் களத்தில் எதிரியின் முற்றுகையில் நின்றபடி �எங்களைப் பாக்காதீங்க..எங்கட இடத்துக்கு செல்லை அடியுங்க� என்று மிகவும் துணிச்சலாக அவர் கூறிய பாங்கை பல வருடங்களுக்குப் பின்னரும் இயக்கத்தில் பலரும் பெருமையாகக் கூறுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கும்.

எப்பொழுதும் சிரித்த முகம். எந்த ஒரு தரத்தில் உள்ள போராளியையும் எழுந்து நின்று வரவேற்று அமர வைக்கும் பணிவான குணம். அந்த முகத்தை நாங்கள் இனிக் காண மாட்டோம் என்பது இன்னமும் எங்களால் நம்ப இயலாத ஒன்று. வீரர்கள் நிச்சயமாக வீழ்வதில்லை. அவரின் உணர்வும் உருவமும் அப்படித்தான் இன்னமும் எங்களை ஆக்கிரமிக்கின்றது. காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரம் யோகா செய்வார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. பயங்கரவாதி என்று எங்களை வர்ணிக்கும் பாதகர்கள் துர்க்கா அக்காவுடன் ஒருநாள் அமர்ந்து கதைத்திருக்க வேண்டும் என நாங்கள் எண்ணிய நாட்கள் பல உண்டு. 2006ம் அண்டு சமரில் கம்பனியை வழிநடத்திச் சென்ற லெப். கேணல் ஆர்த்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டது துர்க்கா அக்காவின் மனதை வெகுவாகப் பாதித்தது. எதையும் இலகுவில் வெளிக்காட்ட மாட்டார்.

ஆனால் உள்மனத்தில் அவர் எவ்வளவு கண்ணீர் விட்டார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஒரு சிறந்த புகைப்படவியலாளர், அமைப்புக்குத் தேவையான ஆங்கிலப் படங்களை விரும்பிப் பார்க்கும் ஒருவர், கராத்தே மற்றும் யோகாக் கலையை விரும்பிப் பயின்ற ஒரு அன்பான உள்ளம்.

தனக்கென தலைவன் கொடுத்த படையணியை அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்தவர்களாக, அனைத்துக் கலைகளிலும் சிறந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை நோக்கியே பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்களின் செயற்பாடுகள் இருக்கும். போர்களில் பெண்கள் என்னென்ன வழிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அதிகம் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு பல ஆங்கில புத்தகங்கள் மற்றும் ஒளிநாடாக்களை தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பார். 2001ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் துர்க்கா அக்காவுக்கு கேணல் தரத்தை வழங்கியிருந்தார். விழுப்புண் அடைந்த நிலையிலும் அவரது வேலைகள் அனைத்தையும் அவரே செய்ய வேண்டும் என்பதில் மிகவும் அழுத்தமாக இருப்பார். அவருடன் நிற்கும் போராளிகள், அக்கா பாவம் என்று சொல்லிவிட்டு அவருக்கு கிணற்றில் இருந்து நீர் எடுப்பதற்கு உதவினால் கூட "ஏன் எனக்கு எடுக்க இயலாதா" நீங்கள் போய் உங்கட கடமைகளைச் செய்யுங்கள்" என அன்பாகக் கடிந்து கொள்வார்.

விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் கீழ் இயங்கி வந்த போர்ப்பயிற்சி, தொலைத்தொடர்புப் பிரிவு, கணினிப் பிரிவு, படையப் புலனாய்வுப் பிரிவு, அரசியல்துறை, புலனாய்வுத்துறை, படையத்தொடக்கப் பயிற்சிக் கல்லூரி, படையறிவியல் கல்லூரி, புகைப்படப் பிரிவு, திரைப்படப் பிரிவு, காவல்துறை, நீதித்துறை, ஆகியவற்றினதும் மகளிர் பொறுப்பாளர்களுக்கான மகளிர் பேரவைக் கூட்டம் மாதம் ஒருமுறை நடைபெறும். பெயர் வெளியிடப்படாத இடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்று பெண் புலிகள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்படும். இதற்கு பிரிகேடியர் விதுசா மற்றும் பிரிகேடியர் துர்க்கா ஆகியோரே தலைமை வகித்தனர். பெண்கள் தொடர்பில் எந்த ஒரு முடிவையும் தாமாகவே எடுக்கும் அதிகாரத்தை தமிழீழத் தேசியத் தலைவர் இவர்களுக்கு வழங்கியிருந்தார்.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கும் பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்கள் ஒரு மணி நேரம் யோகா செய்ததன் பின்னர் மேஜர் சோதியா அவர்களின் படத்துக்கு மெழுகுதிரி கொழுத்தி கைகூப்பி வணங்குவார். அதன்பின்னர் தனது கடமைக்குத் தயாராகி விடுவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தளமாகச் சென்று போராளிகளுடன் அவர்களின் இன்ப துன்பங்களைக் கதைத்து அறிந்து கொள்வார். 2008ம் ஆண்டு மே மாதம் சோதிய படையணிப் போராளிகள் ஓமந்தைப் பகுதியில் லெப்.கேணல் வரதா தலைமையிலும் மன்னாரில் லெப்.கேணல் செல்வி தலைமையிலும், மணலாற்றில் லெப்.கேணல் தர்மா தலைமையிலும் முகமாலையில் மணிமொழி தலைமையிலும் களத்தில் நின்றிருந்தனர். பிரிகேடியர் துர்க்கா அவர்கள் ஒவ்வொரு களமுனையாக மாறி மாறிச் சென்று அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து களமுனைக்கு அவர்களைத் தயார் படுத்தி விட்டு வருவார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள பலரும் அவருக்கு இட்ட பெயர் �காட்டுக் கோழி�. காடுகளில் தனி பிரியத்தோடு வாழும் அவர் தனது முக்கியமான முகாமை காட்டின் நடுவே வைத்திருந்தார். 1996ம் ஆண்டு வரை தலைவனின் பாசறையாக இருந்த அந்த முகாமை அதற்குப் பின்னர் சோதியா படையணிப் போராளிகள் நிர்வாகம் செய்து வந்தனர். 50 அடி ஆளமான கிணற்றில் தண்ணீர் அள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகள் குளித்து. காட்டுப் பயிற்சி பெற்று, காட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய காட்டு நகர்வுகளுக்குச் சென்று களைப்புடன் திரும்புவார்கள். அங்கே ஒரு சிறிய அறையில் தனக்குத் தேவையான அரசியல், விஞ்ஞானப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார் துர்க்கா அக்கா. போராளிகளின் கதைத்து, பயிற்சி அளிக்கும் நேரம் போக மிகுதி இருக்கும் நேரங்களில் அந்தப் புத்தகங்களும் அவரின் உடன் பிறந்த சகோதரன் அவருக்குக் கொடுத்த கணினியும்தான் அவரின் நண்பர்கள். காட்டுக்குள் சென்று அங்குள் மரங்கள், இலைகள், பூக்கள், விலங்குகள், பழங்கள், போராளிகள் அனைத்தையும் படமெடுத்து தனது கணினித் திரையை அலங்கரிப்பார்.

அங்குள்ள காடுகளின் தன்மையை அறிந்து கொள்வதிலும் அதை ஏனைய போராளிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் மிகவும் அக்கறை கொண்டு செயற்படுவார். சமாதான காலத்தில் இங்கு வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் இந்தக் காடுகள் மிகவும் வேறுபட்ட தன்மை உடையதாகவும் மிகவும் குறுகிய தூரத்திற்கும் இவற்றின் தன்மை வேறுபடுவதாகவும் கூறியிருந்தது இவருக்கும் மிகவும் ஆர்வமான விடயமாக இருந்தது. உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இப்படியான காடுகளைக் காண்பது அரிது என்றும் தமிழீழத்தில் மூன்றில் இரண்டு பகுதி காடாக இருப்பது நாட்டின் சூழலுக்கு நன்மை தரும் என்றும் அடிக்கடி குறிப்பிடுவார். இரவு நேரங்களில் பெண் பிள்ளைகள் வெளியில் செல்லக் கூடாது என்று வளர்ந்த சமூகங்களில் இருந்து வந்த பெண்புலிகள் காட்டைப் பாதுகாக்க இரவு நேரக் காவற்கடமைகளில் துணிச்சலாக நின்று பல எதிரியின் வேவுக் காரர்களைப் பிடித்து அடைத்தார்கள் என்பது பல சமயங்களில் வெளியில் தெரிய வராமல் போன உண்மை. களமுனையில் நிற்கும் போராளிகளுக்கு சிற்றுண்டிகள் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல முறைகள் தானே வேறு போராளிகளுடன் சேர்ந்து நின்று சிற்றுண்டி வகைகள் செய்து கொண்டு செல்வார்.

களமுனையில் நிற்கும் ஆண்போராளிகள் கூட �அக்கா வந்து போனவா..கட்டாயம் ஏதாவது கொண்டு வந்திருப்பா� மறைக்காமல் எடுங்கோ..� என்று உரிமையோடு கேட்கும் அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருந்தார் அவர். கராத்தே கலையில் மிகுந்த ஈடுபாட்டுடனும் அதை பெண் போராளிகளுக்குக் கற்றுக் கொடுப்பதில் முனைப்புடனும் இருந்த அவர் மேஜர் சோதியா அவர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் மேஜர் சோதியா அவர்களின் நினைவு தினத்தன்று பெண்களுக்கான கராத்தே சுற்றுப் போட்டியைத் தனது நண்பரும். கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்று கடற்புலிகளில் தளபதியாக இருந்த கெங்கா அக்காவுடன் இணைந்து நடத்தி வந்தார். கரும்புலிப் பயிற்சி பெற்றிருந்த கெங்கா அக்கா அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி நாட்களில் நடந்த கடற்சமரில் கரும்புலியாகச் சென்று எதிரிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

பிரிகேடியர் துர்க்கா அக்காவுக்கு குழந்தைகளில் அதிகப் பிரியம். செஞ்சோலை நிகழ்வுகளுக்குச் சென்று அந்தக் குழந்தைகளுடன் அளவளாவிக் கொள்வதிலும் அவர்களை விதம் விதமாகப் புகைப்படங்கள் எடுப்பதிலும் எப்போதுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். திருமணமான பெண் போராளிகளின் குழந்தைகளை விதம் விதமாகப் படங்கள் எடுத்துத் தனது கணினியில் அவர்களை அலங்கரித்துக் கொள்வார்.

வீரச்சாவைத் தழுவிக் கொள்வதற்கு முன்னர் இறுதியாக களமுனைக்கு வெளியில் நின்ற போராளிகளை அவர் சந்தித்தது மார்ச் மாதம் 21ம் திகதி. புதிதாக போராட்டத்தில் இணைந்த போராளிகளுக்கு எதிரியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் எழ வேண்டிய கட்டாயத்தை அன்று அவர் அன்போடு கூறி விளங்க வைத்தார். களமுனையில் எறிகணைகள் மழை போல் பொழியும் நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அடிப்படைப் பயிற்சி முகாமை வந்து சேர்ந்தார். மிகவும் களைப்புடன் இருந்தார். எங்கும் எறிகணைகள் மழை போல் பொழிந்த வண்ணம் இருந்தன. முள்ளிவாய்க்கால் கடலில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பெண்களுக்கான அடிப்படைப் பயிற்சிப் பாசறையில் இருந்த பனங்கூடலுக்கு இடையில் ஒரு கொட்டகைக்குள் படுத்திருந்தார். களமுனையில் நித்திரையின்றி அவர் உழைத்தது அவரின் உடலில்தான் தெரிந்தது. உணர்வும் உத்வேகமும் இன்னமும் எந்த மாற்றமும் அடையவில்லை.

"என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார்?" ஒரு இராணுவ வீரன் என்றவன் கடைசி வரைக்கும் எதிரிக்கு எதிராகப் போராடி வீரச்சாவை அடைய வேணும். அதுதான் அவனுக்கு அழகு அப்படித்தான் அண்ணா நினைக்கிறார். எவனிடமும் பணிந்து போயோ அல்லது கைப் பொம்மைகளாகவோ அண்ணா இருக்க விரும்ப மாட்டார்"என்று கூறிவிட்டு நாங்கள் அனைவருமே இரண்டு மாதங்களாகக் குடித்துக் கொண்டிருந்த அதே அரிசிக் கஞ்சியைக் குடித்துவிட்டு எறிகணைகள் ஓலமிட்டுக் கொண்டிருக்க சற்று நேரம் பாயை விரித்து சாய்ந்து கொண்டார். களமுனையில் பல மணிநேரங்கள் நித்திரை கொள்ளாமல் எதிரியின் எறிகணைக்குள் மாட்டியிருந்து கண்விழித்து எங்களைக் காத்த அந்த உயிர் உறங்குவதை அன்றுதான் நாங்கள் கடைசியாகக் காணப் போகின்றோம் என்பது எங்களுக்கு நிச்சயம் தெரியாது.

குறிசூட்டுத் திறனில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுத் தளபதிகளுக்கு இடையிலான போட்டிகளில் அடிக்கடி தேசியத் தலைவரிடம் இருந்து பரிசைப் பெற்றுக் கொண்டு வந்தார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. தனக்குக் கீழுள்ள போராளிகள் வேவுத் திறன், மறைந்திருந்து தாக்கும் பயிற்சி, வலிந்த தாக்குதல், ஆழ ஊடுருவும் தாக்குதல், பாதுகாப்புச் சமர் ஆகிய அனைத்திலும் ஆண் போராளிகளுக்கு சமமாக தங்களால் எல்லா விதத்திலும் களமுனையில் காட்ட முடியும் என உறுதியோடு நின்று நிரூபித்துச் சென்று விட்டுள்ளார் பிரிகேடியர் துர்க்கா. தலைவனின் ஆணையை அப்படியே ஏற்று நடத்தி வந்த அவரைப் பற்றி அவரின் வீரச்சாவின் பின்னர் ஒரு தனிப்பட்ட சந்திப்பில் தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிடும்போது

"எனக்கு விசுவாசமான தளபதிகளை நான் இழந்திட்டன்" என்று குறிப்பிட்டிருந்தார். எங்கள் தலைவனின் தங்கையாக, பெண்புலிகளின் தளபதியாக, தன்னிகரற்ற ஒரு தலைவியாக விளங்கிய எங்களின் துர்க்கா அக்கா பிரிகேடியர் துர்க்காவாக 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி அதிகாலை வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

அவரின் வழிகாட்டுதலை ஏற்றுநின்று இறுதிச் சமரின் நான்கு மாதங்களில் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய சோதியா படையணிப் போராளிகளான லெப். கேணல் அகநிலா, லெப்.கேணல் மோகனா, லெப்.கேணல் செங்கையாழினி, லெப்.கேணல் அரசலா, லெப்.கேணல் அறிவு, லெப்.கேணல் சோழநிலா, லெப். கேணல் வரதா, லெப்.கேணல் மொழி, மேஜர் அகல்மதி, மேஜர் விதுரா, மேஜர் செஞ்சுரபி, மேஜர் ஈழக்கனி, மேஜர் இசைபாடினி, மேஜர் இசையறிவு, மேஜர் கலைமகள், மேஜர் ஈழநிலா, கப்டன் அலையரசி ஆகியோருக்கும் புதிதாக இணைந்து மிகவும் தீர்க்கமாகத் துணிவுடன் செயற்பட்டு இறுதியாக பிரிகேடியர் துர்க்கா அவர்களினால் 2ம் லெப் தரம் வழங்கப்பட்டு வீரச்சாவடைந்த 2ம் லெப் தர்சினி மற்றும் மே மாதம் 15ம் திகதி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மூத்த போராளிகளான நயவாணி, கௌசலா மற்றும் இன்னமும் பெயர் குறிப்பிடப்படாத பல நூறு மாவீரர்களதும் கனவும் எங்கள் ஆன்மாவில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாடு விடுதலை அடையும் நாளில் அவர்களின் துயிலறைகளை அழகுபடுத்தி அலங்கரிக்கும் அந்த நாட்களே எங்களுக்கு வரக்கூடிய பொன்னான நாட்கள்.

நன்றி: ஈழம் பிரஸ்

எத்தனை திறமையான தளபதிகள் போராளிகள். எத்தனை உயிர்கள் எவ்வளவு உடமைகள். அத்தனையும் இருந்தும் பின்னர் இழந்தும் ???????????????????? :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

திறமை மிக்க தளபதிகள் எமது மண்ணுக்காக விலைமதிக்க முடியாத தியாகங்களைச் செய்து இருக்கிறார்கள். ஆனால் எம்மில் பலர் தற்பொழுது பல குழுக்களை உருவாக்கி நான் பெரிது நீ பெரிது என்று போட்டி போட்டுக் கொண்டு சிங்களம் செய்யவேண்டியதை தெரிந்தோ தெரியாமல் செய்தோ சிங்களத்துக்கு துணை போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்களில் கண்ணீரை வரவழைக்கும் கதைகள் நொச்சி.

நாங்கள் நினைவுகளைச் சுமக்கின்றோம்.

ஆனால் பலர் அதை விறகாகப் பயன்படுத்தி குளிர் காய்கின்றார்கள்.

விலை மதிப்பில்லாத தியாகங்கள், பலனை எதிர் பாராத அர்ப்பணிப்புக்கள்.

எமது பொழுது ஒரு நாள் கட்டாயம் விடியும்!!!

அது வரை அவர்கள் நினைவுகளை இதயங்களுக்குள் வைத்துப் பூசிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்காக தங்கள் வாழ்வ்வை அழித்த.. இவர்கள் எல்லாம் இவ்வளவு விரைவில் மறக்கப்படுவார்கள் என்று நினைக்கவே இல்லை.

அன்று தமிழ் தேசியம் பேசிய ஊடகங்கள்.. இன்று பாலியல் செய்திகளை தினமும் இட்டு.. குசித் தேசியம் பேசுகின்றன. அதையெல்லாம் கடந்தும் இவர்கள் பேசப்படுகிறார்கள் என்றால் அது அவர்களின் தியாகத்தை உணரும் மதிக்கும் மக்களால் மட்டுமாகவே இருக்க முடியும்.

Edited by nedukkalapoovan

நன்றி நொச்சி. இது போல் இன்னும் எத்தனையோ திறமையாளர்களை நாம் இழந்தது எமது இனத்துக்கு நேர்ந்த கொடுமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.