Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காலத்தாற் செய்த உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட கட்டுரை இங்கு கருத்தாடலுக்காக பகிர்கிறேன். கட்டுரையாளரின் கருத்துக்களில் சரி பிழை முரண்பாடுகள் யாவையும் கதைக்கலாம். அல்லது வசைபாடலாம். அவரவர் விருப்பம். படித்ததில் பிடித்திருந்தது. பிடித்தவர்கள் படிக்க இங்கே பதிவிடுகிறேன்.

காலத்தாற் செய்த உதவி

- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்-

புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் தொடர்பாகப் பேச்சு வந்தபோது ஒரு நண்பர் சொன்ன தகவல் கவனத்திற்குரியதாக இருந்தது.

புலிகளின் காலத்தில் போராட்டத்துக்கெனப் புலம்பெயர் தமிழர்கள் தாராளமாக உதவினார்கள். இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளுக்கும் அவர்களுடைய போராட்ட வழிமுறைக்கும் ஆதரவாக இருந்தனர். இவர்கள் எண்ணிக்கையில் பெருந்தொகையினராகவும் இருந்தனர்.

இவர்களால் புலிகளின் போராட்டத்துக்கு செய்யப்பட்ட உதவிகள் இரண்டு பிரதான வகையில் அமைந்தன. அல்லது அப்படிப் பயன்படுத்தப்பட்டன.

1. ஆயுதங்கள் வாங்குவதற்கான உதவிகள் மற்றும் இயக்கத்தின் தேவைகளுக்கான உதவிகள்.

2. புலிகள் மேற்கொண்ட மக்களுக்கான அத்தியாவசியப் பணிகள் மற்றும் அவர்கள் மேற்கொண்ட நிர்வாக நடவடிக்கைகளுக்கான உதவிகளும் போரினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளும்.

இந்த உதவிகளைத் தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் பலரும் செய்துள்ளனர். இந்த உதவிகளைப் பெறுவதற்காக வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் பொறிமுறையும் அதை நடைமுறைப்படுத்தும் அமைப்பும் இருந்தன.

இந்த நிதி சேகரிப்பிலும் இரண்டு வகைகள் இருந்தன.

1. தாங்களாகவே விரும்பி நிதியைக் கொடுக்கும் முறை.

2. கொஞ்சம் வற்புறுத்தி நிதியை எடுக்கும் முறை.

இந்த நிதிசேகரிப்பு முறைகள் தொடர்பாக புலம்பெயர் (ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில்) முறைப்பாடுகள் கூட செய்யப்பட்டுள்ளன.

எனினும் புலிகளிடம் தாராளமான நிதி வந்து சேர்ந்தது. அத்துடன் வெளிநாடுகளில் அதிகமான வருவாயைத் தரக்கூடிய ஒரு ஏற்பாட்டையும் புலிகள் மேற்கொண்டிருந்தனர். புலிளின் முதலீடுகளும் வணிகமும் நிதிப் பெருக்கையும் நிதிச் சுற்றோட்டத்தையும் தாராளமாக்கியது.

ஆகவே தாயகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்கு ஓரளவு கணிசமான நிதி கிடைத்தது.

இவ்வாறு நிதியை வழங்கியவர்களில் ஒரு தொகுதியினர் சமாதானப் பேச்சுகளின் போது நாட்டுக்கு வந்து தங்கள் உதவிகள் எப்படியான பங்களிப்பைச் செய்திருக்கிறது? என்று பார்த்தும் சென்றனர். அப்போது ஒரு குறிப்பிட்ட அளவு மக்களுக்கும் இவர்களுக்குமான உறவும் உருவாகியது. குறிப்பாக போராட்டத்துடன் இணைந்து நின்றோர் (அதிகமாகப் போராளி குடும்பங்கள்) என்ற வகையிலானவர்களின் உறவை இவர்கள் கொண்டிருந்தனர்.

இவ்வாறு நாட்டுக்கு வந்து பார்த்துச் சென்றதன் பின்னர், மேலும் இவர்களுடைய பங்களிப்பின் வீதமும் கூடியிருந்தது.

ஒரு தனியரசின் சாத்தியம் தங்களுக்குப் புலப்படுகிறது என்றும் அதை மேலும் வளர்த்தெடுப்பதற்கான பங்களிப்பாக தங்களுடைய உழைப்பும் உதவிகளும் அமையட்டும் என்றும் இவர்கள் கருதினார்கள்.

அத்துடன் தாயத்தில் போராட்;டத்தால் பாதிக்கப்பட்டிருப்போரின் நிலைமை இவர்களை உறுத்தியது. மேலும் போராட்டத்துடன் நிற்போருக்கு ஏதோ ஒரு வகையில் தாம் உதவ வேண்டும் என்ற எண்ணமும் நிலைமையை அவதானித்த இவர்களுக்கு ஏற்பட்டது.

இதை இவர்களே அப்பொழுது புலிகளின் ஊடகங்களில் - நாட்டுக்கு வந்து திரும்பிய பின்னர் தெரிவித்திருக்கின்றனர். இந்தக் கருத்துப் பின்னர் நாட்டுக்கு வராதோரிடமும் பரவியது. ஏறக்குறைய இதுவொரு குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடே. ஆனாலும் இது தவிர்க்க முடியாத ஒரு நிலை. இந்த நிலை ஏதோ ஒரு வகையில் உதவியையும் நன்மையையும் தருகிறது’ என்றார் அப்பொழுது ஆய்வாளரான நண்பர் ஒருவர்.

ஆனால், பின்னர் அரசியல் நிலைமை மாறிவிட்டது. எதிர்பார்ப்புகள் முற்றிலும் சிதைந்து விட்டன.

இப்போது புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் இவர்களுடைய உதவும் நிலை வீழ்ச்சியடைந்துள்ளது. தங்களுடைய உதவிகளை இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு எடுத்துச் செல்ல நம்பிக்கையானவர்களும் பொருத்தமான வழிமுறைகளும் இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள். அப்படியே நம்பவும் செய்கிறார்கள்.

அப்படியொரு கருத்தாக்கம் செய்யப்பட்டுள்ளதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், வெளிநாடுகளில் இயங்கும் விடுதலைப் புலிகளின் அணிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டி இதற்கொரு காரணம். அடுத்த காரணம், புலம்பெயர்ந்தோரில் ஒரு தரப்பினர் நடத்துகின்ற ஊடகங்கள் இப்படியான அபிப்பிராயத்தை உருவாக்கியிருக்கின்றன.

இவர்களுடைய கருத்தின்படி, இப்போது இலங்கையிலிருக்கும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவினால், அந்த உதவி இலங்கை அரசாங்கத்தையே சென்றடையும் என்ற அபிப்பிராயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் புலம்பெயர் தமிழர்கள் (முன்னர் புலிகளின் தரப்பினால் உதவியோர்) உதவுவதற்கு விரும்பவில்லை. அல்லது அப்படிச் சொல்லிக் கொள்கிறார்கள்.

இதையும் கடந்து இலங்கை அரசாங்கத்துக்கூடாக உதவிகளைச் செய்தால், அது தங்களுடைய கொள்கைக்குப் பொருத்தமானதல்ல. எப்படித் தங்களுடைய எதிரியை நம்பி காசைக் கொடுக்க முடியும்? என்று இவர்கள் கேட்கிறார்கள். தங்கள் உதவியைப் பெற்றுக் கொண்டு, தமிழர்களுக்குத் தான் உதவுவதாகக் காட்டி, அரசாங்கம் அரசியல் நன்மையைப் பெற்றுவிடும் என்றும் இந்தத்தரப்புக் கூறுகிறது.

எனவே இந்தத் தரப்பினரின் உதவிகள் இப்போது மட்டுப்படுத்தப்பட்டு விட்டன. அல்லது தடைப்பட்டு விட்டன.

அதாவது இப்போது இந்தத் தரப்பினர் உதவுவதற்கும் பங்களிப்புகளைச் செய்வதற்கும் இன்றுள்ள ‘அரசியல் தடை’ யாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.

இதேவேளை, புலிகளை எதிர்த்தோர் என்று சொல்லப்படும் இன்னொரு தரப்பினர் இப்போது உதவத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் முன்னர் பெரிய அளவில் உதவிகளைச் செய்ய வாய்ப்பின்றி இருந்தனர். அதற்கான அரசியற் சூழலும் அப்பொழுது இந்தத்தரப்பினர்களுக்கு இருக்கவில்லை. இவர்கள் எண்ணிக்கையிலும் சிறிய அணியினர்.

அதாவது அப்போது இந்தத் தரப்பினர் உதவுவதற்கும் பங்களிப்புகளைச் செய்வதற்கும் அன்று நிலவிய ‘அரசியல் தடை’ என்று சொல்லப்பட்டது. அதுவே உண்மையும் கூட.

ஆனால், இவர்கள் இப்போது உருவாகியிருக்கும் புதிய சூழ்நிலையில் அரசுக்கு ஊடாகவும் தனியாகவும் தங்களின் உதவிகளைச் செய்து வருகின்றனர்.

அத்துடன் புலிகளுடன் நெருக்கமாக நின்று உதவியவர்களில் இன்னொரு சிறிய அணியினர், தொடர்ந்தும் தாங்கள் இந்தப் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவவேணும். அது தங்களுடைய கடமை என்ற உணர்வோடு செயற்பட்டு வருகிறார்கள். இவர்களில் ஒரு சாரார் தங்கள் நண்பர்கள், உறவினர் போன்றோருக்கூடாக உதவி வருகின்றனர்.

இந்த உதவிகள் சுயாதீனமானவை.

இதைவிட இன்னொரு சாரார் என்று சொல்லப்பட வேண்டியவர்களும் உதவிக் கொண்டிருக்கின்றனர். இவர்களும் முன்னர் புலிகளுடன் இணைந்தோ அல்லது ஆதரவாகவோ அல்லது அதிகம் முரண்படாமலோ உதவியவர்கள். இவர்கள் இப்போது திரு. கே.பியுடன் இணைந்து தாயத்தில் உதவிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால், மேற்குறிப்பிட்ட இவர்களுக்கும் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள மக்களுக்குமான தொடர்புகள் மெல்ல மெல்ல உருவாகத் தொடங்கியிருக்கின்றன. முன்னர் புலிகளின் வழியாக உதவியோருக்கு நாட்டிலுள்ள மக்களுடன் தொடர்பிருந்தது. உறவு ஏற்பட்டது. இப்போது புலிகளுடன் உடன்பட மறுத்தோருக்கு அப்படியான உறவும் தொடர்புகளும் ஏற்பட்டுள்ளன.

முன்னரையும் விட மிக மோசமான நிலையிற் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் - யாராவது வந்து உதவ மாட்டார்களாக என்று எதிர்பார்த்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் - இந்தத் தரப்பினர் செய்யும் உதவி என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெரிய விசயமாகப் படுகிறது. ஆகவே இந்தப் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உதவுவோரை மிக்க நெருக்கமாகவும் அதிக நன்றியுணர்வோடும் வைத்துக் கொள்கின்றனர்.

ஆனால், புலிகளின் காலத்தில் செய்யப்பட்ட உதவித்தொகையின் அளவுக்கும் அதன் பிரமாண்டத்தன்மைக்கும் ஏற்ப இந்த உதவிகள் இல்லை. ஆனாலும் மக்களுக்கு இந்தச் சிறிய உதவிகள் பெரிய விசயமாகவே படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

காரணம் அவர்களுடைய நிலைமை அப்படியிருக்கிறது என்பதே.

இந்த நிலையில் நாம் மீண்டும் கவனிக்க வேண்டியது என்னவென்றால், உதவி செய்வோருக்கும் மக்களுக்குமான உறவைப் பற்றியதே. இது முக்கியமான ஒன்று. ஆபத்து வேளையில், உதவி தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில் எவரொருவர் உதவுகின்றாரோ அவரை மதிப்பதும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்வதும் மனிதப் பொது இயல்பாகும்.

முன்னர் புலிகளின் காலத்தில் உதவிகளைச் செய்தோரைக்கூட இன்னும் மறக்காமல் பலரும் இருக்கின்றனர் என்றால், அந்த உதவிகள் அவர்களுடைய மனதில் அப்படியான ஒரு பதிவை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதே பொருளாகும்.

அதைப்போலவே இன்றைய உதவிகளும் இன்றைய நிலையில் இந்த மக்களுக்குப் பெரியதொரு பதிவாக அமைகின்றது. உதவிகளைப் பெறும் மக்கள் தங்களுடைய இன்றைய இயலாமையை – உதவி தேவைப்படும் நிலையைப்பற்றியே சிந்திக்கிறார்கள்.

இந்த நிலைமை முன்னரும் இருந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் அப்படியானதொரு நிலைமையை உருவாக்குகிறது. இது பொது விதி.

அதாவது, இவர்கள் தங்களின் வாழ்க்கையையே முன்னிறுத்திப் பார்க்கிறார்கள். அரசியல் நோக்கங்கள், அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றியெல்லாம் இவர்கள் சிந்திப்பதேயில்லை. இதைப்பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு இவர்களுக்குச் சூழ்நிலை அமைவதில்லை.

உண்மையில் இதுவொரு பரிதாபகரமான நிலைமையே.

இவர்கள் தங்களின் நாளாந்த வாழ்க்கையைப் பற்றியே தலை நிறையச் சிந்திக்கிறார்கள். அடிப்படைத்தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ள முடியாமலிருப்போர், அவற்றை எப்படி நிறைவேற்றலாம் என்பதைப் பற்றியே சிந்திப்பர். பிள்ளைக்குச் சாப்பாட்டைக் கொடுக்கவே முடியாத ஒரு தாயினால், தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டைப்பற்றியும் தான் ஆற்றவேண்டிய பொதுப்பணிகளைப் பற்றியும் எப்படிச் சிந்திக்க முடியும்?

ஆகவே இவர்கள் எல்லாவற்றுக்கும் அப்பாலும் தங்களுக்கு உதவியோருக்கு விசுவாசமாகவும் நன்றியாகவும் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

இதற்கொரு உதாரணமாக, அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முத்து ஐயன் கட்டுப் பிரதேசத்தில் புனித பூமி என்ற அநாதைச் சிறுவர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றைக் குறிப்பிட வேணும்.

இந்தச் சிறுவர் இல்லம் முன்னர் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் அனுசரணையுடன் நிர்வகிக்கப்பட்டது. ஆனால், அரசாங்கத்தின் பதிவைப்பெற்ற ஒரு நிறுவனமாக அமைந்திருந்தது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் தங்கிப் படித்தார்கள். அவ்வளவு சிறார்களையும் இந்த நிறுவனம் நல்ல முறையில் பராமரித்தது. நான் முன்னரே இங்கே குறிப்பிட்டிருப்பதைப் போல இதற்கான நிதியைப் பெருமளவிலும் புலம் பெயர் தமிழர்களே வழங்கி வந்தனர்.

போரின்போது இந்த நிறுவனம் பாதிப்படைந்து விட்டது. இங்கேயிருந்த பிள்ளைகள் மிகச் சிரமப்பட்டு (அதுவோரு மிகப் பெரிய துயரக்கதை. அதைத் தனியே இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்) எப்படியோ படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் சென்று விட்டனர்.

ஆனால், அதிர்ஸ்ரவசமாக இந்தச் சிறுவர் இல்லம் மீண்டும் இப்போது இயங்கத் தொடங்கியிருக்கிறது. இந்த இல்லத்தை விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரமுகரான திரு. கே.பி என்கிற குமரன் பத்மநாதன் இப்பொழுது மீண்டும் இயங்க வைத்துள்ளார்.

மீண்டும் புனித பூமி என்ற அந்தச் சிறுவர் இல்லத்தை இயங்க வைத்ததையிட்டு அங்கே 14 ஆண்டுகளாகத் தங்கியிருக்கும் ஒரு மாணவர் நன்றிப் பெருக்கோடு சொன்ன விசயம், ‘எங்களுக்கு யார் உதவுகிறார்களோ, அவர்களே எங்களுக்குத் தெய்வங்கள். முன்னர் எங்களை ஆதரித்தவர்களையும் நாங்கள் மறக்கவில்லை. அவர்களே எம்மை இந்த நிலைக்கு ஆளாக்கினார்கள். இப்போது எங்களைக் கைவிட்டு விடாமல், இப்படிப் பொறுப்பெடுத்து ஆதரிக்க வந்திருப்போரையும் நாங்கள் மறக்கவில்லை. எங்களுக்கு இந்த உலகத்தில் வேறு யார் இருக்கிறார்கள்? நாங்கள் எங்கள் வாழ்க்கைக்கு உதவும் இந்தக் கைகளையும் நல்ல இதயங்களையும் எங்கள் வாழ்க்கையில் மறக்கவே மாட்டோம்’ என்பது.

இப்போது பிரச்சினை என்னவென்றால், முன்னர் புலிகளின் காலத்தில் பங்களிப்புச் செய்த பலரும் இன்று தூர நிற்பதால், அவர்களுடைய தொடர்புகளும் செல்வாக்கும் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டே போகிறது என்பதே.

இது ஒரு மோசமான நிலையே. தங்கள் உழைப்பின் பெரும்பகுதியைப் போராட்டத்துக்காகவும் மக்களின் வாழ்வுக்காகவும் கொடுத்து வந்த இந்தப் புலம் பெயர் மக்கள், இப்போது மெல்ல மெல்ல மறக்கப்பட்டு வருகிறார்கள். அல்லது தூரத்தே நிற்கிறார்கள். இது துயரமான ஒரு நிலைமை.

ஒரு அரசியல் வீழ்ச்சி என்பது அப்படியே நிலைமையைப் புரட்டிப் போட்டுவிட்டது.

உண்மையில் இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது. மக்களுடைய பிரச்சினைகள் தீரவில்லை. தேவைகள் மேலும் அதிகரித்திருக்கின்றன. எல்லோரும் ஆதரித்த போராட்டத்துக்காக இந்த மக்கள் எல்லாவற்றையும் இழந்து தெருவில் நிற்கிறார்கள்.

ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் அரசியற் பேரத்திற்குள்ளாகியிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. வரலாற்றின் இந்த முரணை எப்படி விளங்கிக் கொள்வது? அல்லது இந்த முரணை எவ்வாறு விளக்குவது?

சனங்களைப் பொறுத்தவரை நன்றி மறந்தவர்களாகவோ தமக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகளாகவோ அவர்கள் இல்லை என்பது முக்கியமானது. எவராவது வீசும் எலும்புத்துண்டுகளுக்குப் பின்னால் செல்பவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள் என்று விமர்சிப்பதும் குற்றம் சொல்வதும் பொருத்தமில்லாதது.

போராட்டத்துக்காக இந்தச் சனங்கள் எல்லாவகையான தியாகங்களையும் செய்தவர்கள். எல்லாவகையான பங்களிப்புகளையும் வழங்கியவர்கள். அதற்காகவே எல்லா இழப்புகளையும் எல்லாத் துயரங்களையும் சுமந்தவர்கள், இன்னும் சுமந்து கொண்டிருப்பவர்கள். இவர்கள் பட்ட வடுக்கள் இன்னும் ஆறவேயில்லை.

ஆனால், அப்போதும் இப்போதும் இவர்கள் நிரந்தரப் பாதிப்புக்குள்ளே இருக்கின்றனர் என்பதே இங்கே அவதானத்திற்குரியதாகிறது.

ஆகவே மக்களைக் குறைசொல்வதற்கு இடமில்லை. அவர்களுடைய நிலைமைதான் அவர்களை இப்படியான நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது.

போராட்டத்துக்காகவே எல்லாவற்றையும் செய்தவர்கள் என்ற வகையில் இவர்களுக்கு உதவ வேண்டியது ஒது பொதுப் பணி. இதுவொரு அவசியப்பணி.

ஆபத்தில் உதவுவது என்பதே மிக முக்கியமானது. இதைச் செய்வதற்கான வழிமுறைகள் சிலவேளை எல்லோருக்கும் வாய்க்காதிருக்கலாம். ஆனால், அதைக் கண்டு பிடிப்பதே இன்றைய அரசியல். இன்றைய பங்களிப்பு அதுவே.

ஏனெனில், ஒரு போராட்டத்தின் வீழ்ச்சி என்பது அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த அரசியற் தரப்பின் வீழ்ச்சியாக மட்டும் கருதப்படுவதில்லை. அந்த இயக்கத்தின் வீழ்ச்சியாகவோ அல்லது அந்தப் போராட்ட அமைப்பின் வீழ்ச்சியாகவோ மட்டும் அமைந்து விடுவதில்லை.

அந்த வீழ்ச்சியானது அந்தப் போராட்டத்துடன் சேர்ந்து நின்றோரைப் பாதித்து, அவர்களுடைய வாழ்க்கையையும் வீழ்ச்சிக்குள்ளாக்கி விடுகிறது. இதுவே இப்போது நடந்திருப்பது.

ஆகவே இந்த வீழ்ச்சியை ஈடு செய்ய வேண்டிய பொறுப்பு இன்று அனைவருக்கும் முன்னாலுள்ள ஒரு முக்கிய பொறுப்பாகும்.

ஏனெனில் இந்த மக்கள்தான் முன்னரும் அரசியல் இலக்குக்காக மையத்தில் நின்று போராடியவர்கள். இப்போதும் இவர்கள் அத்ததகையதொரு மையத்தில்தான் இருக்கிறார்கள். அதாவது, இவர்களே தாயகத்தில் தொடர்ந்தும் இருப்பவர்கள்.

ஆகவே நண்பரின் கூற்றுப்படி இப்போது அரசியற் தொடர்பாடலில் இருப்பவர்களே மக்களால் விரும்பப்படுவோராகவும் மக்களின் ஆதரவைப் பெற்றோராகவும் இருக்கப்போகிறார்கள். மக்களுடைய வாழ்க்கைத் தேவைகளான இருப்பிட வசதி, கல்வி, மருத்துவம், வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டிய பொறுப்பு உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும் தரப்புகள் யார் என்றே மக்கள் பார்க்கின்றனர்.

என்றபடியால்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தரப்புக்கான அங்கீகாரமும் அரசியல் வாய்ப்பும் கிட்டுகிறது.

ஒரு காலத்தில் இங்கே ஐரோப்பிய வருகையானது ஒடுக்கப்பட்ட – வறிய மக்களிடத்தில் பெரும் செல்வாக்கைச் செலுத்தும் அளவுக்கு உதவியாக இருந்தது. இதன்விளைவாக இலங்கையில் கிறிஸ்தவர்களாக மாறியவர்களின் தொகை இதற்குச் சாட்சி. (பின்னர், ஒடுக்கப்பட்டோரின் செல்வாக்கு உயர்கிறது என்பதால், உயர்சாதியினர் பாய்ந்தடித்துக்கொண்டு கிறிஸ்தவத்துக்குத் தாவி, வாய்ப்புகளையெல்லாம் தமதாக்கிக் கொண்டது வேறு கதை).

இந்த நிலைமை அன்று அந்த மக்களுக்கு அவசியமாக இருந்தது என்பதே இங்கே நம் கவனத்திற்குரியது. இதைத் தவறென்று இன்று வாதிடலாம். அது முக்கியமானதல்ல. அந்த நிலைமையை – பாதிக்கப்பட்டிருப்போரின் - உதவிகள் தேவைப்படுவோரின் வாழ்நிலை என்னவாக இருக்கிறது என்பதையே நாம் புரிந்து கொள்ள வேணும். அதுவே முக்கியமானது.

மக்களின் மனநிலை என்பது பல வகையானது. அவர்கள் அந்த மனநிலையைத் தங்கள் வாழ்நிலையிலிருந்தே பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களுடைய நிலையில் நின்று பார்க்கும்போதே அதை அறியலாம். அந்த அறிவே மக்களுக்கான அரசியலாகவும் மக்களை அறிந்த அரசியலாகவும் இருக்கும்.

00

இன்று ஒரு இக்கட்டான நிலையில் எமதினம் உள்ளது. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை.

ஒரு பக்கத்தில் மக்களை தாங்கவும் மறு பக்கத்தில் ஒரு நிரந்த அரசியல் விடுதலையை பெற்றெடுக்கவும் வேண்டிய வரலாற்று கடமை எமக்கு உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கத்தில் மக்களை தாங்கவும் மறு பக்கத்தில் ஒரு நிரந்த அரசியல் விடுதலையை பெற்றெடுக்கவும் வேண்டிய வரலாற்று கடமை எமக்கு உண்டு.

அகூதா இக்கருத்தில் மாற்றுக் கருத்தில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணும் தெரியேல்லை காதும் கேக்குதில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணும் தெரியேல்லை காதும் கேக்குதில்லை

உந்தக் கறுப்புக்கண்ணாடியைக் கழட்டினாத்தான் இரவில கண் தெரியும். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.