Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துக் கவிஞர் கி.பி.அரவிந்தன் நேர்காணல்!

Featured Replies

இலங்கையில் இன்னொரு போரை நாங்கள் விரும்புவில்லை

ஈழத்துக் கவிஞர் கி.பி.அரவிந்தன் நேர்காணல்

"குழந்தை தோளில் சரிகின்றது

நெஞ்சுக்குள் ஏதோ குமைகின்றது

'நீங்கள் அகதியானது உங்களுக்குச் சரி

என்னை ஏன் அகதியாக்கி அலைச்சலாக்கி..'

மடிபற்றி எழுகின்றது கேள்வி"

'கனவின் மீதி' தொகுப்பில் கி.பி.அரவிந்தன்

'இனி ஒரு வைகறை', 'முகம் கொள்' என்கிற கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து 'கனவின் மீதி' மூலம் ஈழத்துக் கவிதையுலகில் தனியிடத்தை உருவாக்கிக் கொண்ட கி.பி. அரவிந்தனுக்குப் பல முகங்கள். பதினேழு வயதிலேயே வீட்டை விட்டு. போராட்டத்தில் இறங்கிய இவருடைய சொந்தப் பெயர் கிறிஸ்டோபர் ஃபிரான்ஸிஸ். இனப்பிரச்சினையினால் சொந்த நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து பதினைந்து ஆண்டுகளாக பாரீசில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

பல பத்திரிகைகளுடன் இணைந்து தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிற இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர ஃப்ரீலான்ஸ் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறவர். ஐரோப்பிய தமிழ்த் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிற 53 வயதான அரவிந்தன், பல வருட இடைவெளிக்குப் பிறகு சென்னைக்கு வந்திருந்தார். ஹோட்டல் அறை ஒன்றில் இந்த நேர்காணலுக்காகச் சந்தித்தபோது தயக்கங்கள் இல்லாமல் ரொம்ப காலமாகப் பழகிய நண்பரைப்போல பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். புலம்பெயர்வின் இடையறாத வலி தொற்றிய அவருடைய பேச்சு அவர் தங்கியிருந்த அறையைக் கதகதப்பு மிக்கதாக உணரச் செய்திருந்தது.

--------------------------------------------------------------------------------

இனி அவருடன் நிகழ்த்திய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

tron0150bc.jpg

கி.பி. அ-ன்:

1953ஆம் வருடம் நான் பிறந்தது யாழ்ப்பாணத்தில். என் தாய் தந்தையரின் சொந்த ஊர் நெடுந்தீவு. என் பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் அதன்பின் தொடாந்தும் நான் படித்தது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில். எழுபதுகளுக்குப் பின்னால் தீவிரமான இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினேன். என் அப்பா அரசு ஊழியர். உணவுக் கட்டுப்பாட்டு திணைக்களத்தில் வேலை செய்தார். அம்மா மருத்துவ தாதியாக யாழ் மருத்துவமனையில் பணியாற்றினார். நாங்கள் ஏழு பேர். நான் மூத்த ஆள். எனக்குக் கீழ் ஆறு பேர்.

மணா:

1960களிலேயே இனப் பாகுபாட்டுப் பிரச்சினை தொடங்கிவிட்டதா?

கி.பி. அ-ன்:

அப்போது நான் சிறுவனாக இருந்தேன். 60களில் நடந்த முக்கியமான நிகழ்வு சாதி எதிர்ப்புப் போராட்டம். அது கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில்தான் நடந்தது. நான் சிறு பையன்களாக இருந்தோன். அதில் ஈடுபடவில்லை.

இலங்கையில் தமிழர்கள் மத்தியில் இறுக்கமான சாதி அமைப்பு இருந்தது. சாதிய ஒடுக்குமுறை நீண்டகாலமாக இருந்து வந்தது. 1965க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சியினால் சாதி எதிர்ப்பு ஓர் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது. மிகப்பெரிய போராட்டமாக மாறி துப்பாக்கிச் சூடுவரை சென்றது. தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையை ஒழித்தல், சமபந்தி போஜனம் போன்றவை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன.

மணா:

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் எடுத்துக்கொண்ட விஷயத்தை அங்கே பொதுவுடைமை இயக்கம் செய்ததா?

கி.பி. அ-ன்:

ஆமாம். சாதிய அடக்குமுறையை முக்கியமான பிரச்சினையாக பொதுவுடைமை இயக்கம்தான் எடுத்துப் போராடியது. சாதி எதிர்ப்பால் சமூகத்தில் சின்னதொரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அதனால் சரிவு என்று சொல்ல முடியாது. சமூகக் குலுக்கம் என்று சொல்லலாம். சாதியப் படிநிலைகள் குலுங்கின. அப்போது ஏற்பட்ட சின்ன அதிர்வு, மனோ நிலைகளில் சின்னதொரு மாற்றத்தைக் கொடுத்தது. இந்தச் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உத்திகள், பயிற்சி முறைகள் பின்னாளில் ஈழப் போராட்டத்தில் உதவியாக இருந்தன. ஈழத்தின் ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சியில் இந்தச் சாதி எதிர்ப்புப் போராட்டம் முன்னோடியாக இருந்தது.

மணா:

இந்தப் போராட்டம் இலங்கையின் எந்தப் பகுதியை முன்னிறுத்தி நடந்தது.

கி.பி. அ-ன்:

சாதிய அடக்குமுறையின் தீவிரம் வெளிப்படையாக தெரிய வந்தது குடா நாட்டில்தான். இங்குதான் மக்கள் செறிவாக வாழ்ந்தார்கள். அதனால் சாதிய ரீதியான பிரச்சினை துலாம்பாரமாக தெரிய வந்தது. அதற்கான போராட்டம் கட்டாயத் தேவையாகவும் இருந்தது. அந்தப் போராளிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றிய அறிவுதான் பிறகு ஏற்பட்ட போராட்டத்திற்கு கைமாற்றப்பட்டது.

மணா:

தமிழகத்தில் 1960களில் மாணவர்கள் மத்தியில் இயல்பான மொழி உணர்வு, இன உணர்வு பரவலாக ஏற்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு அதுதான் பின்னணியாக அமைந்தது. அதுமாதிரியான ஓர் உணர்வு இலங்கையில் இருந்ததா?

கி.பி. அ-ன்:

1950, 60களில் தீவிரமான செயல்பாடு கொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. இலங்கை அளவில் அரசியல் ரீதியாக செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த தேசிய உணர்வு, தேசியம் பற்றியதான சிந்தனை தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்போது எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. அதனால்தான் அது மக்களிடம் சரிவை சந்தித்தது. மக்களின் உணர்வை அவர்கள் முழுமையாகப் புறக்கணித்தார்கள். இலங்கை என்கிற தேசிய அளவிலான பார்வையுடன் எதையும் பார்க்க வேண்டும் என்பதான உணர்வில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருந்தார்கள். ஆனால் இவர்கள் தொடக்க நிலையில் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று பேசியவர்கள்தான். பிறகு மாறிவிட்டார்கள்.

மணா:

அந்தக் காலகட்டத்தில் அரசியல் உணர்வென்பது தவிர்க்க முடியாத விஷயமாக மாணவர்களிடம் இருந்ததா?

கி.பி. அ-ன்:

பொதுவாக இலங்கைத் தமிழர்களிடம் தமிழரசுக் கட்சியின் செல்வாக்குதான் அதிகம் இருந்தது. அக்கட்சியின் கருத்தோட்டம், எண்ணப்போக்கு என்பது இங்கிருந்த (தமிழகம்) திராவிட இயக்கத்தின் மொழி பற்றியதான கருத்துக்கள் எல்லாம் கிட்டத்தட்ட இணைவாக்கம் கொண்டதாக இருந்தன.

தமிழ் உணர்ச்சியை ஊட்டி ஊட்டி, மேன்மைப்படுத்தி அதைத்தான் தமிழரசுக் அக்ட்சியினர் அரசியலாக்கினார்கள். ஆனால் அதற்கேற்ற வகையில் செயல்திட்டங்களோ, அதை வழிநடத்தும் முறைகளோ அவர்களிடம் சரியாக அமையவில்லை. இலங்கை அரசியலில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில்தான் அவர்களுக்குக் கவனம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு தமிழ்பேசும் மக்களுக்குட் தீர்வைப்பெற்றுத் தர முயற்சித்தாலும் தோல்விதான் ஏற்பட்டது.

1965இல் தமிழரசுக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் சேர்ந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கிறார்கள். அதில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர் அமைச்சராகிறார். ஆனால் பாராளுமன்றத்தில் அடையாள அட்டை மசோதா போன்று மிக மோசமான சட்டங்களைக் கொண்டு வருகிறபோது தமிழரசுக் கட்சிக்குள் இருந்த தீவிரமான கருத்துக் கொண்டவர்களுக்கு இடையில் பெரிய முரண்பாடு தோன்றியது. தேசிய ரீதியிலான தீவிர நிலை எட்டும் அதே வேளையில்தான், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முனைப்பாக முன்னெடுக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி.

1968 ஆம் ஆண்டு முக்கியமான காலகட்டம். மாணவர்கள் உலகில் எழுச்சிகளும், போராட்டங்களும் நிகழ்ந்தன. 65-70 காலகட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் வியட்நாம் போர், சேகுவாராவின் கொலை என உலகம் முழுவதும் வெவ்வேறான நிலைமை. 1970ல் இலங்கையில் புதிய ஆட்சி. ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியும் எல்எஸ்பியும் கம்யூனிஸ்ட் கட்சி எனச் சிறு சிறு கட்சிகள் சேர்ந்து ஆட்சிக்கு வருகிறார்கள்.

உடனடியாக அவர்கள் வந்து கல்வி பற்றியதான ஒரு கொள்கையை வெளியிடுகிறார்கள். அது தமிழ் மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம். தரப்படுத்துதல் என்ற முறையில் சொல்லப்பட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் அணிதிரண்டு வீதிக்கு வருகிறார்கள். அது கல்வி அடிப்பையில் கொண்டு வரப்படவில்லை. இன ரீதியான ஒடுக்குமுறை என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இன்றைக்கு முக்கியமாக இருக்கிறவர்களின் அரசியல் பயிற்சிக்கான தொடக்கநிலையாக அதைச் சொல்லலாம். 'நானும் மாணவர்களின் அந்தப் பேரணியில் கலந்து கொண்டேன்' என்று பலரும் சொல்லுமளவிற்கு அது ஒரு தொடக்கப்புள்ளியாக இருந்தது.

மணா:

உங்கள் குடும்ப அளவில் ஏதும் பாதிப்பு நிகழ்ந்ததா?

கி.பி. அ-ன்:

என் தந்தைக்கு பெரியார் கருத்துகளின் மீது ஈடுபாடு உண்டு. வீட்டில் நிறையப் புத்தகங்கள் வைத்திருந்தார். என்னுடைய சிறுவயதில் அவர் திராவிட கருத்துக் கொண்டவராக இருந்தார். ஆசைத்தம்பி, மு.கருணாநிதி, மதியழகன், சி.பி.சிற்றரசு, இப்படி பலரின் புத்தகங்கள் அவரிடம் இருந்தன. ஒரு பெட்டிக்குள் வைத்திருந்தார். பதினைந்தாவது வயதில் புத்தக வாசிப்புத் தொடங்கும்போது பெரியார் மீது எனக்கு விருப்பம் வந்தது. அன்றைக்கு பெரியாரின் சிந்தனைகளை சரியாகப் புரிந்துகொண்டிருப்பேனா என்று தெரியவில்லை. ஆனாலும் வீட்டிற்குள் ஒரு கலகக்காரன் மாதிரி மாறினேன். கிறிஸ்துமஸ¤க்கு எல்லோரும் புது உடுப்புப் போடுவார்கள். நான் போடமாட்டேன். இப்படி அந்த வயதுக்கேற்ற சின்னச்சின்ன கலகங்கள்.

அப்பா நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் எடுத்து வந்து வாசிப்பார். கல்கி, அகிலன் என அந்தக் காலத்து எழுத்தாளர்கள்ன் நாவல்களை வாசிப்பது பழக்கம். வீட்டில் எப்போதும் பேப்பர் வாங்குவார்கள். நெடுந்தீவில் என்னுடைய அம்மாவின் பெரிய அண்ணர் வீட்டில் தங்கிக்கொண்டு படித்தேன். அந்த ஊருக்கு வள்ளம்(படகு) வந்தால்தான் பேப்பர் வரும். அதை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அந்த பேப்பரை வாசித்தபிறகுதான் மற்ற வேலைகளைப் கவனிப்பார்கள்.

நான் மதத்தால் ஒரு கத்தோலிக்கன். கத்தோலிக்க மத வெளியீடுகள் நிறைய வந்தன. எப்படியோ பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் தொடர்ந்தது. அதேவேளையில் யாழ் மத்தியக் கல்லூரியில் இரண்டு பேராசிரியர்கள் முக்கியமானவர்கள். எனக்கு வரலாறு படிப்பித்தவர் தமிழ்நாட்டில் உள்ள பச்சையப்பன், கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர். திராவிட இயக்கக் கொள்கைக்காரராக இருந்தார். அண்ணாவின் திராவிட நாடெல்லாம் படித்தவர். அவர் பிரெஞ்சுப் புரட்சி பற்றியெல்லாம் சொல்லித் தரும்போது வெகு ஆர்வத்துடன் சொல்வார். எங்களுக்கு நெப்போலியன் பற்றி நிறைய கற்பனைகள் வரும்.

யூசுப் மாஸ்டர் என்று ஒருவர். அவர் ஜனநாயகம், வாக்களிப்பது எல்லாம் பொய் என்பார். என்ன ஜனநாயகம் என்பார். நாங்கள் படிக்கும்போது இலங்கை கல்வி அமைச்சகம் 'சியவச' என்ற பரிசுத் திட்டத்தை அறிவிக்கிறது. இதை எல்லா மாணவர்களும் வாங்க வேண்டும் என்கிறார்கள். அது சிங்களத்தில் இருந்தது. தமிழர்கள் வாங்கக்கூடாது என்று புறக்கணித்தோம். கல்லூரித் தேர்வுகளை ஒரு மண்டபத்தில் எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு ஆள் வந்து ஒவ்வொரு டேபிளிலும் டிக்கெட் வைத்துவிட்டுப்போனார். "பரீட்சை எழுத மாட்டோம்; டிக்கெட் வாங்க மாட்டோம்" என்று மறுத்தோம். இப்படி எங்களை முடுக்கி விட்டது அந்த வாத்தியார்தான்.

நான் மாணவர் நிலையில் தமிழரசுக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தேன். அவர்கள் புரட்சிகரமாக எதாவது செய்வார்கள் என்று நம்பினேன். பகத்சிங்க் பற்றியெல்லாம் படித்திருக்கிறேன். ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்', போராட்டம் நாவல்களைப் படித்த அனுபவம். இதெல்லாம் சேர்ந்து எண்ணங்களில் மாற்றங்களைக் கொண்து வந்தன.

எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கிறது. அப்போது நாங்கள் அயர்லாந்துப் போராளி தான்பிரீன் பற்றிய புத்தகத்தை ரகசியமாக வைத்திருந்து வாசிப்போம். ஒவ்வொருவராக ரகசியமாகப் பரிமாறிக்கொள்வோம். 'எரிமலைத் தியாகிகள்' என்ற புத்தகத்தை அப்படித்தான் படித்தோம். எல்லாம் தனிச்சுற்றுகளாகச் சுற்றி வரும். கீழ் இயக்கம் ஒன்றைத் துவக்குவதற்கான மனோநிலை அப்போதே தொடங்கியது. இப்படி ஒரு சூழல் உருவாகத் தொடங்கியது.

1972-இல் இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குகிறார்கள். இதுவரை பிரிட்டிஷாரால் வரையப்பட்ட அரசியலமைப்பை இவர்கள் தங்களுக்கானதாகச் செய்யவேண்டும் என்று புதிய அரசு அறிவிக்கிறது. இந்தப் புதிய அரசியலமைப்பு எப்படி இருக்கப்போகிறது, அதில் இங்கே வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான நிலைமை என்ன, இவர்களுக்கான அதிகாரங்களை எப்படிப் பங்கிடப் போகிறார்கள்? என்பது போன்ற விவாதங்களை எல்லாக் கட்சியினரும் பேசத் தொடங்குகிறார்கள். இதை எதிர்கொள்வதற்காக ஒரே தலைமையாக ஐக்கிய முன்னணியாக இணைய வேண்டும் என்று கருத்தெல்லாம் தமிழ் பேசும் மக்களிடம் இருந்தது.

1972-ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்புச் சட்டம் வரையப்படுவதற்கு முன்பு தமிழர் கட்சிகளெல்லாம் சேர்ந்து ஒரு கோரிக்கையை வைக்கிறார்கள். அது நிராகரிக்கப்படுகிறது. 1972, மே 22ஆம் தேதி இலங்கை குடியரசாக பிரகடனம் செய்யப்படுகிறது. இலங்கை சிலோன் என்ற பெயரில்லாமல் ஸ்ரீலங்கா என்ற புதிய பெயர் அறிவிக்கப்படுகிறது.

அந்த நாளை தமிழர்களின் கரி நாள் (கறுப்பு நாள்) என்று தமிழர்களின் ஐக்கிய முன்னணி அறிவிக்கிறது. மக்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. கறுப்புக் கொடி ஏற்ரி துக்க நாளாக கொண்டாட வேண்டும் என்று 15ஆம் தேதியிலிருந்தே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. 'மாணவர்களே பள்ளிக்குச் செல்லாதீர்கள்! ஊழியர்களே அலுவலகங்களுக்குச் செல்லாதீர்கள்!' என்று ஒரு துண்டுப்பிரசுரத்தை ஐக்கிய முன்னணி வெளியிட்டது. நாங்கள் மாணவர்களாக இருந்தபோது அந்தப் பிரசுரத்தை விநியோகித்தோம். அப்போது போலீஸ் என்னையும் சேர்த்து மூன்று பேரைக் கைது செய்கிறது. அதற்குப் பிறகு தலைவர்கள் 'எங்களையும் கைது செய்யுங்கள்' என்றார்கள். அதெல்லாம் ஒரு துவக்கம்.

மணா:

'தமிழ்ப் பேரவை' என்ற அமைப்பைப் பிறகு ஆரம்பித்தீர்களா?

கி.பி.அ-ன்:

சிறையால் வந்ததும் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து 'தமிழ் இளைஞர் பேரவை' என்ற அமைப்பைத் தொடங்கினோம். அதன் தனி நடவடிக்கைகளாக உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் நடாத்தினோம். 1974ம் ஆண்டு நான்காவது தமிழாராச்சி மாநாடு நடக்கின்றது. அதையொட்டி படுகொலை நடக்கின்றது. இது ஐனவரியில். ஜுனில் சிவகுமாரன் இறக்கிறார். ஐனவரிக்கும் ஜுனிற்கும் இடையில் சிவகுமாரன் குழுவினராகிய நாங்கள் பல்வேறு வன்முறையை பாவித்தோம். அதில் தோல்விகள் கிடைத்தன.

ஆறேழு குற்றங்களுக்காக 1976ம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டேன். 77 வரைக்கும் ஒரு வருடம் சிறையில் இருந்தேன். பிறகு பெயிலில் வெளி வருகிறேன். அதேவருட பிற்பகுதியில் வழக்குகள் வரத்தொடங்குகின்றன. ஒவ்வொரு வழக்கிற்கும் பெயில் எடுக்க வேண்டும். இல்லையென்றால் உள்ளுக்குள் போக வேண்டும். வீட்டில் வசதியில்லை. பிரச்சனை. 1978-இல் பயங்கரவாத தடைச்சட்டம் வருகின்றது. பொலீசுக்கு அதிகாரம் கூடி முதற்தடவையாக தெருவில் இரண்டு இளைஞர்களை சுட்டுப் போடுகிறார்கள். அதுதான் முதல் சம்பவம். தொடர்ந்து வெகு வேகமாக நிகழ்ச்சிகள் நிகழத் தொடங்குகின்றன.

மணா:

அந்தக்காலகட்டத்தில உங்களுடைய செயல்பாடுகள் எப்படி இருந்தன?

கி.பி.அ-ன்:

ஈராஸ் அமைப்பில் இருந்தேன். 1978ஆம் ஆண்டு லெபனான் சென்றுவிட்டு சென்னைக்கு வந்தேன். இங்கு பத்திரிகை நடத்துவது, நண்பர்களை ஒருங்கிணைப்பது எனப் பல வேலைகள் செய்தேன். பத்தாண்டுகள் சென்னையில் இருந்தேன். அப்போது தமிழக - ஈழ நட்புறவுக் கழகத்தை நாங்கள் கட்டி வளர்த்திருக்கிறோம். தமிழக அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிநபர்கள் கொண்ட அமைப்பாக அதை வளர்த்தெடுத்தோம். சின்னச் சின்ன புத்தகங்கள் கொண்டு வந்தோம். லங்காராணி நாவலை வெளியிட்டோம். இப்படி பல்வேறு பட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தோம்.

மணா:

நீங்கள் படைப்பு ரீதியாக எந்தக் காலகட்டத்தில இருந்து இயங்க ஆரம்பித்தீர்கள்?

கி.பி.அ-ன்:

1972ல் சிறைக்கு சென்று வந்தபிறகு, வாசிப்பு அனுபவம் இலக்கிய ரீதியான ஆர்வத்தை ஏற்படுத்தியது. முதன்முறையாக ஒரு முக்கியமான நாடகத்தில் நடிக்கத் தொடங்கினேன். அதற்கு நாடகப்போடடியில் முதற்பரிசு கிடைத்தது. அந்த நாடகாசியரிடமிருந்துதான் எழுத்து கணையாழி தாமரை இதுபோன்ற சிறு சஞ்சிகைகளைப் பார்கிறேன். அதில் ஒருவகையான ஈடுபாடு வருகின்றது. ஜெயகாந்தனை தீவிரமாக வாசித்திருக்கிறேன். எஸ்.பொ.வை படிக்கத் தொடங்குகிறேன்.

இரண்டு ஆண்டுகள் (1974ஜுன் தொடங்கம் 1976ஜுன் வரை) தலைமறைவாக வாழ்ந்தபோதுதான் நான் முதன் முறையாக எழுதத் தொடங்கினேன். இரண்டு பெரிய நோட்டுப் புத்தகங்களில் கதை, கவிதைகள் என எழுதியிருந்தேன். நான் கைதானபோது தங்கியிருந்த வீட்டுக்காரர் அவற்றையெல்லாம் கொழுத்தி விட்டார். அதற்குப் பின் தலைமறைவு வாழக்கையில் எரிமலை என்று ஒரு அரசியல் பத்திரிகை நடத்தினோம். நான்கு இதழ்கள் மட்டும் கொண்டு வந்தோம். 'ஈராஸ்' அமைப்பிற்காக ஈழம், தர்க்கீகம், பொதுமை என்ற சில பத்திரிகைகள் வந்தன. நான் சென்னையில் இருந்தபோதுதான் கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.

மணா:

கவிதை எழுதத தொடங்கிய போது யாருடைய தாக்கம் உங்களிடம் இருந்தது?

கி.பி.அ-ன்:

அன்றைக்கு ஈழத்தில் எழுதிக் கொண்டிருந்த இளம் முன்னணிக் கவிஞர்களின் கவிதைகளில் ஈர்க்கப்ட்டேன். எங்களை உந்தித் தள்ளியதில் இந்தக் கவிதைகளுக்கு பெரும் பங்குண்டு. சமகாலத்தில் சேரன், ஜெயபாலன் போன்றவர்கள் கவிதை எழுதுகிறவர்களாக இருந்தார்கள். நாங்கள் வாசிப்பவர்களாக இருந்தோம். அலை, மல்லிகை, சமர் போன்ற பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. கவிதைகளில் என்னைப் பாதித்தவர்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. கல்லூரியில் எனக்கு தமிழ் இலக்கியப் பாடம் விருப்பமானதாக இருந்திருக்கின்றது. கவிதைகளில் அரசியல் கருத்தை வெளிப்படுத்த வேண்டுமென்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. புதுக்கவிதை எழுத இலகுவாக இருந்தது.

வானம்பாடிக் கவிஞர்களின் கவிதைகளும் என்னைப் பாதித்திருக்கலாம். அப்போது புரட்சி வெல்லட்டும், கிழக்கு வெளுக்கின்றது என்பது போன்ற கவிக்குரல்கள் எழுந்தன. மு.மேத்தா, அக்னி புத்திரன், சிற்பி, புவியரசு போன்றவர்களின் கவிதைகளை படித்திருக்கிறேன். அதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.

மணா:

ஈழத்துப் படைப்பாளிகளின் நேரடியான போராட்டக் களத்தைப் பார்த்தவர்கள். அப்படியான ஒரு நிர்ப்பந்தமான சூழல் அனுபவம் இங்குள்ளவர்களுக்குக் கிடையாது இல்லையா?

கி.பி.அ-ன்:

1978ஆம் ஆண்டில் நான் எழுதிய கவிதைகளில் ஐந்து கூட தேறாது. நாங்கள் வெளியிட்ட பத்திரிகைகளின் அட்டையில் கவிதை எழுதுவேன். அந்த அளவில்தான் இருந்தேன். அதற்குமேல் கவிதை எழுதியதில்லை. உண்மையில் என்னுடைய நல்ல கவிதைகளை எழுதத் தொடங்கியது 90களில்தான்.

சென்னையில் இருந்தவரைக்கும் கூட பெரிதாக கவிதை எழுத முயற்சித்ததில்லை. 1988-இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் வருகிறது. எல்லா இயக்கக்காரர்களும் விமானத்தில் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நான் மட்டும் ஒரு அகதியாக மண்டபம் முகாமுக்குச் சென்றுவிட்டேன். இராமேஸ்வரத்திலிருந்து அகதிக் கப்பலில் காங்கேசந்துறையில் போய் இறங்கிக் கொண்டேன். அகதியோடு அகதியாகப் போனேன். பிறகு எந்த இயக்கத்தோடும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுகள் நண்பர்கள் இயக்கத்திற்கு வாருங்கள் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். நான் மறுத்துவிட்டேன். 1989-இல் இலங்கையில் எனக்குத் திருமணம் நடந்தது. அதற்குப்பிறகு சென்னைக்கு துணைவியுடன் ஒருதடவை வந்தேன். 1990ஆம் ஆண்டு பிரான்சுக்குச் சென்றேன்.

மணா:

ஏன் பிரான்சைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

கி.பி. அ-ன்:

பிரான்சுக்குப் போக வேண்டுமென்று நான் வரவில்லை. 90ஆம் ஆண்டு கடுமையான காலகட்டம். எங்கள் வீட்டை விட்டு வெளியேறு வேறெங்கேயோ சென்றுதான் தஞ்சம் புகுந்தோம். அந்த நேரத்தில் என் தங்கைக்குத் திருமணம் நிச்சயம் செய்திருந்தோம். அதனால் தங்கையை யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வந்து கொழும்பில் விடவேண்டும். பயணம் செய்வது பெரும் கஷ்டம். தனியாக அனுப்ப இயலாது. நாந்தான் கூட்டிக்கொண்டு வந்தேன். கொழும்புக்கு வந்த பிறகு என் தம்பி, "நீ தங்கையை அழைத்துக் கொண்டு சிங்கப்பூருக்கு வந்துவிடு. நான் டிக்கெட் தருகிறேன். சிங்கப்பூரையும் பார்த்த மாதிரி இருக்கும்" என்று சொன்னான். சிங்கப்பூருக்குச் சென்றேன். "ஒரே சண்டையாக இருக்கிறது. நீ அங்கு போய் என்ன செய்யப்போகிறார்" என்று தம்பி கேட்டான். அரசியலிலேயே தொடர்ந்து ஈடுபட்டதால் புத்தகம், பேப்பர், பத்திரிகை இதுதான் எனக்குத் தெரியும். வேறு எந்த வேலையும் தெரியாது.

தொழிலும் தெரியாது. அங்கு போய் பத்திரிகையும் நடத்த முடியாது. என்ன செய்யப்போகிறேன் என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்தது. யாழ்ப்பாணத்தில் மனைவி டீச்சராக இருக்கிறாள். ஒருவரின் வருமானத்தை வைத்து பிழைக்கவும் முடியாது. "நாங்கள் இங்கேயே இருக்கிறோம்' என்று மனைவி சொல்லிவிட்டாள்.

"நீ தனியாக இருக்கிறாய். பாதுகாப்பில்லாத நிலைமை. அதெல்லாம் சரிப்பட்டு வராது. இலங்கை செல்ல வேண்டாம்" என்று சொன்னான் தம்பி. இரண்டாம் நாள் விமானத்தில் ஏற்றி விட்டான். சீனா போய் சுற்றிவந்து இறுதியில் ஜேர்மனியில் இறங்கினேன். சில விசாரணைகளுக்குப் பிறகு அங்குள்ள அகதி முகாமில் கொண்டு போய்விட்டார்கள்.

மணா:

அங்கு மொழிச் சிக்கல் இருக்குமே?

கி.பி. அ-ன்:

மொழிபெயர்ப்பாளர் ஒருவர் வருவார். இல்லையென்றால் நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கதைக்கலாம். பெரும்பாலும் ஜெர்மன் மொழியில்தான் பேசுவார்கள். யு.என்.ஓ. அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசுவார்கள். எனக்கு முகாமில் இருக்கப் பிடிக்கவில்லை. உடனே ஜேர்மனியில் இருந்த தம்பியிடம் "என்னை அழைத்துக் கொண்டு போய்விடு" என்று போன் பண்ணி சொன்னேன். நான்கு நாட்கள் முகாமில் இருந்தேன். அகதிகள் முகாமிலிருந்து வெள்யேறுவது மிகப்பெரிய கஷ்டம். கட்டுப்பாடுகள் அதிகம். ஏதோ முயற்சிகள் செய்து என்னை சில நண்பர்கள் காரில் அழைத்துக் கொண்டு சென்று இன்னொரு ஊரில் தங்க வைத்தார்கள். ஜெர்மனியிலிருந்து பிரான்ஸ¤க்குச் செல்வது களவுதான். கார் மூலம் பிரான்ஸ் சென்றேன். பிரான்சில் இறங்கியதும் ரொம்பக் கஷ்டம். என்ன வேலை செய்வது? ஒன்றும் விளங்கவில்லை. அங்குள்ள வாழ்க்கையும் போன இரண்டு நாட்களிலேயே புரிந்துகொண்டேன்.

மணா:

அந்த மக்களின் கலாசாரத்தோடு பொருந்திப் போக முடிந்ததா? அது உளவியல்ரீதியாக சிக்கலை ஏற்படுத்தியதா?

கி.பி. அ-ன்:

அந்த மண்ணில் இறங்கிய ஒரு நாளிலேயே உங்கள் பிரமிப்பெல்லாம் கொட்டிப் போகும். அப்போதே உணரத் தொடங்கி விடுவீர்கள். நான் எந்த இடத்தில் இருக்கிறேன்? எனது இடம் எது? நான் யார்? நம்மைச் சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் காட்டில் நிற்பதுபோல் தான் தோன்றும். வெளியே போக இயலாது. மற்றவர்களிடம் போய் கதைக்க இயலாது. சாமான்கள் வாங்க முடியாது. எனக்கு மொழி தெரியாது. மொழி தெரிந்த ஆளாகத் தேடித் திரிய வேண்டும். இதெல்லாம் புதிது புதிதான சிக்கல்களாகத்தான் தோற்றம் தரும்.

என் தங்கை வீட்டில் தங்கியிருந்தது கொஞ்சம் உதவியாக இருந்தது. 87-லேயே அவர்கள் வந்துவிட்டார்கள். வர்களுக்கு அங்குள்ள நடைமுறைகள் தெரியும். என் தங்கை குடும்பத்தினரும் நான்கு இளைஞர்களும் ஒரே வீட்டில் இருந்தார்கள். அப்படித்தான் அங்கு இருக்க முடியும். அதில் நானும் ஓர் ஆளாகப் போய் சேர்கிறேன். இதை விட மோசமான வாழ்க்கையும் அங்கு உண்டு. ஒரே அறையில் பதினைந்து பேர் தங்கியிருப்பார்கள். நீங்கள் நம்ப மாட்டீர்கள். 'டேர்ன்' வைத்துப் படுப்பார்கள். அப்படியான வாழ்க்கையெல்லாம் உண்டு. அதுவொரு பெரிய நெருக்கடி. அதை எப்படிச் சொல்வதென்றே புரியவில்லை. பாரீஸ் ஒரு நெருக்கடியான நகரம். இங்குள்ள சிற்றூழியர்களின் பணியைத்தான் நாங்கள் பிரான்ஸில் செய்கிறோம். கூட்டுவது, துடைப்பத் இப்படிப்பட்ட வேலைகள்தான் கிடைக்கும்.

'க்ளீனிங்' என்பது அங்கே பெரிய இண்டஸ்ட்ரி. அடுத்ததாக உணவகங்களில் வேலை. குசினிக்குள் கழுவுகிற வேலை. மற்றது ஒவ்வொரு வீட்டிற்கும் விளம்பர தாள்களை கொண்டு சேர்ப்பது. இந்தப் பணியை ஒரு கம்பனி ஏற்றிருக்கும். ஒரு ஏரியாவில் ஆயிரம் வீடுகளுக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஏழு மாடி, எட்டு மாடி ஏறி இறங்க வேண்டும். அடுத்ததாக கண்காட்சி மண்டபங்களில் வேலை. அங்கு வந்து நிகழ்ச்சி நடத்துகிறவர்களுக்கு ஏற்ற மாதிரி பொருட்களை, இயந்திரங்களை, துணிகளை மாற்றி அமைத்துத் தரவேண்டும். தொடர்ந்து வேலை இருந்துகொண்டே இருக்கும்.

நாங்கள் எவ்வகையான வேலைகள் செய்யக்கூடாது என்று நினைத்தோமோ அவ்வகையான வேலைகளைத்தான் செய்தோம். இது பிரான்ஸின் நிலைமை. தொடக்கக் காலத்தைவிட நிலைமை இப்போது கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பிரான்சிற்கு வந்து கால் நூற்றாண்டாகி விட்டது.

மணா:

நீங்கள் ஆரம்ப காலத்தில் என்ன வேலை செய்தீர்கள்?

கி.பி. அ-ன்:

கிளினீங் வேலைதான் செய்தேன். கார்பெட் சுத்தம் செய்ய வேண்டும். டாய்லெட் கழுவ வேண்டும். மேசை துடைப்பது, சிகரெட் ஆஸ்ட்ரே துடைக்க வேண்டும்.

காலையில் ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு முன்பு மூன்று மணி நேரத்திற்கு முன்பு அங்கு போய் வேலை செய்ய வேண்டும். அலுவலகம் முடிந்ததற்கு பின்பு இரவு ஏழு மணியிலிருந்து 10 மணி வரை சுத்தம் செய்யவேண்டும். அதிகாலை 5 மணிக்கு எழுந்து வெகு தூரம் பயணம் செய்ய வேண்டும். வீட்டுக்கு கிட்ட வேலை இருக்குமென்று சொல்ல இயலாது. குளிர்காலமென்றால் பனி கொட்டிக் கிடக்கும். ஒவ்வொர் நிறுவனத்திற்கும் நேரம் மாறுபடும். இந்த வகையான வேலையைத்தான் செய்தேன்.

இது ஒரு வகையான மனிதப் போர். எதார்த்த நிலைமையை நான் சொல்கிறேன். இதுதான் உண்மை. இதை மறைக்கத் தேவையில்லை. இன்றைக்கு அதை யாரும் சொல்லவும் மாட்டார்கள். நிறைய நிலைமை மாறியிருக்கிறது. இன்றைக்கு எங்களுடைய பெரும்பாலான பெண்கள் க்ளினீங் வேலையைத்தான் செய்கிறார்கள். இந்த வேலைகளை எப்போதும் மறைத்து வாழ்வதுதான் புலம்பெயர் வாழ்வின் அவலம் என்று சொல்லலாம்.

மணா:

இந்த வேலைக்குத் தகுந்த வருமானம் கிடைக்குமா?

கி.பி. அ-ன்:

அடிப்படைச் சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு 7 யூரோ. எட்டு மணி நேரம் வேலை செய்தால் 56யூரோ. அதை இந்தியப் பணத்தில் பெருக்கினீர்கள் என்ரால் இங்கே ஐம்பது ரூபாய் வாங்குவது மாதிரிதான். அதற்குள்தான் வீட்டு வாடகை, மின்சாரக்கட்டணம், உடை மற்ரும் பயணச் செலவுகள் எல்லாமும். இரண்டு வேலை செய்தால்தான் வசதியாக வாழலாம். இது ஒரு வகை வாழ்க்கை நிலை.

எங்களுடைய சமூகம் போரால் பாதிக்கப்பட்ட சமூகம். ஒவ்வொருவரும் ஐந்து பேரைச் சுமந்து ஆகவேண்டும். எங்களுடைய உழைப்பில் மிச்சம் பிடித்து பொருளாதாரம் சிதைக்கப்பட்ட ஒரு தேசத்திற்கு நாங்கள் பணம் அனுப்பியாக வேண்டும். இதற்காக நாங்கள் கடினமாக உழைத்துத்தான் ஆகவேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் எங்கள் போராட்டத்திற்கும் பங்களிப்புச் செய்பவர்களாகத்தான் இருக்கிறோம். இப்படியான வாழ்க்கை எங்களுக்கு இருக்கிறது. இலங்கையர்களை இங்கே பார்க்கும்போது உங்களுக்கு பகட்டுத்தான் தெரியும். மறுக்கவில்லை. அதற்குக் காரணம் நான் மூன்று வருடங்கள் உழைப்பேன். பகல் இரவென்று உழைத்துவிட்டு இரண்டு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு வங்கியில் கடன் வாங்கி இந்தியாவிற்கு வருவேன். அந்த இரண்டு மாதங்களில் இங்கே வாழ்கிற வாழ்க்கைதான் வாழ்க்கை.

ஆயிரம் இரண்டாயிரம் யூரோக்களை கொண்டு வந்து பெருக்கினால் ரூபாய் பல கட்டுகளாக இருக்கும். மீனைக் கொண்டு வா, தங்கத்தைக் கொண்டு வா, ஸாரியைக் கொண்டு வா, நண்பா வா, குடி எல்லாம் நடக்கும். இரண்டு மாதம் முடிந்ததும் கடன் கட்டவேண்டும். ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் பகட்டுதான். இங்கு வந்து நிற்கிற இரண்டு மாதம்தான் தான் ராஜா என்பதை நிரூபித்துக் கொள்கிறான்.

மணா:

இதுபோன்ற நெருக்கடியான வாழ்நிலையில் கவிதை எழுதுவதற்கான மனநிலை எப்படிக் கூடி வந்தது?

கி.பி. அ-ன்:

இதை என்னுடைய தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது. புலம்பெயர்வு நிகழ்ந்ததற்குப் பின்னால், ஒரு சமூகத்திற்கு தனது தாயகம், இழப்புகள் பற்றிய ஏக்கம் தானாகவே வந்து சேரும். அதிலும் பல அந்நியர்களுக்கு மத்தியில் இருக்கும்போது நான் யார்? என்ற முதலாவது கேள்வி எழும்.

ஒரு துருக்கி நிற்கிறான். ஒரு கறுப்பர், அராபியன், தென் அமெரிக்கன், வெள்ளையில் குறைந்த வெள்ளை, கூடிய வெள்ளை, மஞ்சள் வெள்ளை, சிவப்பு வெள்ளை எல்லாம் நிற்கிறார்கள். இப்போது நான் யார்? என்ற கேள்வி இயல்பிலேயே எழும். நீங்கள் நடமாடத் தொடங்கினால் உங்கள் நாடு என்ன? மொழி என்ன? உங்களுடைய பெரிய ஆட்களைச் சொல்லு? கேட்பார்கள். எனக்குத் தெரிந்திருக்காது.

இந்தச் சூழல் என்னைப்பற்றி அறிய நிர்பந்திக்கும் வாசிக்காதவன்கூட ஏதாவது வாசித்தாக வேண்டும். ஊரில் இருக்கும்போது வாசித்ததைவிட வெளியெ வந்த பிறகு வாசித்தது அதிகம். வாசிப்பை பழக்கப்படுத்திக் கொண்டவர்களின் விகிதம் அதிகம்.

  • தொடங்கியவர்

மணா:

நம்முடைய சார்புத் தன்மையை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் நிகழ்ந்து விடுகிறதா?

கி.பி.அ-ன்

ஆமாம். கட்டாய நிலைமை வருகிறது. கவிதை எழுதாதவன் கவிதை எழுதுகிறான். கதை எழுதுகிறான். 1990-இல் ஜெர்மனியில் 32 பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு 'கேம்ப்'பிலும் ஒரு பத்திரிகை ஏதாவது செய்ய வேண்டும். அறைக்குள் அகப்பட்டுக் கிடக்க முடியாது.

புதிதாக வருகிறவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் ஈழத்துக் கவிதையை நான்தான் படைக்கிறேன் என்கிறார்கள். ஏனெனில் இதற்கு முன்பு நிகழ்ந்தவை பற்றி அவர்களுக்குத் தெரியாது. புலம்பெயர்வில் பெரும்பாலான இலக்கியவாதிகள் வரவில்லை. ஊரில்தான் இருக்கிறார்கள்.

இதனால் வெளியில் உள்ளவர்கள் தங்களுக்குத் தாங்களே முடிசூட்டிக் கொள்கிறார்கள். இங்கு நான் வரும்போது என்னிடம் இருந்தது வெறும் இயக்க அரசியல்தான். இரண்டாவது சமூகம் பற்றியதான அனுபவம். மூன்றாவது தமிழ்நாடு எனக்குக் கற்றுத்தந்த சில பாடங்கள். சென்னையில் செய்த பணி காரணமாக எனக்கு நண்பர்களாகக் கிடைத்தவர்கள் கவிஞர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் இருந்தார்கள். நிறைய விவாதங்கள் நடக்கும். 1978-ஆம் ஆண்டு கொந்தளிப்பான நேரம். ஒரு பிரஸ், ஒரு பத்திரிகை. இந்த அனுபவங்கள் எனக்குத் தெரியும். இன்றைக்கு இருக்கிற புகழ்பெற்ற ஆட்களோடு பழகிய அனுபவம் எனக்குண்டு.

நான் பாரீஸ் சென்றபோது 'ஓசை' என்றொரு காலாண்டிதழ் வந்துகொண்டிருந்தது. ஓசையின் பாணி பிடித்ததால் அதில் பங்களிப்பு செய்யத் தொடங்கினேன். எனக்குத் தெரிந்த விஷயங்களை அதில் புகுத்தினேன். நல்ல வரவேற்பு. பின்னர் மெளனம் என்னும் காலாண்டிதழை நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டேன். பிரான்ஸ¤க்கு வருவதற்கு முன்பு 1989-90களில் இடம்பெயர்ந்த என் அனுபவத்தை வைத்துச் சில கவிதைகள் எழுதினேன். அதுதான் உண்மையாக நான் எழுதிய கவிதை. போர்க்கால அனுபவத்தை 'இனியொரு வைகறை' என்ற தலைப்பில் கவிதையாக எழுதினேன்.

மணா:

வாழ்க்கையில் கனத்த அனுபவங்களிலிருந்து ஒருவகையான விடுபடுதல் உணர்வு படைப்பு மூலம் கிடைக்கிறதா?

கி.பி. அ-ன்:

'இனியொரு வைகறை' தொகுப்பு முழுக்கமுழுக்க ஈழத்து போர் அனுபவங்கள்தான். 'முகம் கொ:' தொகுப்பு பாதி ஈழத்து அனுபவங்களும் கலந்தது. மூன்றாவது தொகுப்பு 'கனவின் மீதி'யைப் பார்த்தால் முழுவதும் புலம்பெயர் அனுபவங்கள். 'ஓசை' மற்றும் அங்கு வருகிற பத்திரிகளில் தொடர்ந்து கவிதைகள் வெளிவரத் தொடங்குகின்றன. போராட்டத்தில் நீண்டகால அனுபவம் இருந்தபடியால் நண்பர்களை அணுகி கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். அங்கு போகும்போது என்னுடைய வாசிப்பு அதிகம் இருந்தது என்பதை புரிந்து கொண்டேன். ஏற்கனவே எனக்குக் கிடைத்த வாசிப்பு அனுபவம், தமிழில் நவீன எழுத்தின் பரிச்சயம், பழைய எழுத்தாளர்கள் அறிமுகம் இப்படி மேலதிகமான தகுதியாக மாறுகிறது.

அடுத்தது இயக்கத்தில் பொறுப்பாளனாக இருந்தபடியால் அதற்குரிய முதிர்ச்சி நிலை பார்க்கிற முறையில், பிரச்சினையைச் சொல்கிற முறையில் தெரிந்தது. அரசியல் ரீதியில் ஏற்பட்ட அனுபவத்தை இலக்கியத்தில் பயன்படுத்தினேன். சமூகம் பற்றிய பார்வையும் தொடர்ச்சியாக இருந்துகொண்டு இருந்தது. மற்றது இடது பற்றியதான கருத்தோட்டங்கள்.

மணா:

'அங்கே என்ன நடக்கிறது' என்று தொடர்ச்சியாக ஈழம் பற்றிய கவனம் இருந்துகொண்டே இருந்ததா?

கி.பி. அ-ன்:

அந்த கவனத்திலிருந்து என்னால் மீளவே முடியவில்லை. என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. இந்த அறைக்கு வந்துவிட்டேன் என்றால் அதன் பின்னணி விவரங்களை சூழலை கவனிக்கத் தொடங்கிவிடுகிறேன். இந்த மனநிலைக்கு இயக்க அரசியலும் காரணமாக இருக்கிறது. அது பாதுகாப்பு உணர்வாக இல்லை. சூழலை பற்றிய அறிவு. எப்போதும் அந்த கவனம் என்னிடம் உண்டு.

பாரீசில் வாழ்கிரவர்களைவிட பாரீஸ் பற்றிய அறிவை கூடுதலாக வைத்திருந்தேன். அந்தச் சமூகம், எவ்வகையான சிக்கலுக்குரியதாக அரசியல் இருக்கிறது? பிரெஞ்சு நண்பர்களிடம் இன்றைய செய்தி என்ன? அரசியல் செய்திகள் என்னாவதென்று பேசி தெரிந்துகொள்வேன். சமகால அரசியல் போக்குகள் பற்றிக் கேட்பேன். எப்போதும் எனக்கு சமகாலத்தோடு இணைந்திருப்பதில் விருப்பம் உண்டு.

மணா:

நீங்கள் போர்ச் சூழலிருந்து மீண்டு நிம்மதி தேடிவந்த மண்ணில் நிகழும் கலவரங்கள் உங்களை எந்த அளவிற்கு மனநிலையைப் பாதித்திருக்கிறது?

கி.பி.அ-ன்:

எங்களுடைய சமூகம் பாரீசை சொர்க்கம் போலத்தான் நினைத்த்து. ஒருவகையான அரசியல் அறிவும், இந்தப் போக்குகளை அறிந்தவன் என்ற முறையில் எனக்கு எப்போதும் அச்ச உணர்வாகவே இருந்தது. எங்கள் மேல் எதுவும் நடக்கலாம் என்றுதான் நினைத்தேன். நான் முதலில் சொல்லும்போது யாரும் நம்புவதாக இல்லை. எதிர்மறையாக கதைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்கள். ஜெர்மனியில் நாசிஸம் என்பது கண்ணுக்கு முன் நடந்த ஒரு வரலாறு. பிரான்சிற்கு வந்தவுடன் நாங்கள் எப்படி நடத்தப்படுகிறோம் என்பது புரிந்துவிட்டது. பிரான்ஸ் மிகப்பெரிய காலனிகளைக் கொண்ட நாடு. அங்கு மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை கண் முன்னால் பார்க்க முடியும்.

மணா:

கலவரச் சூழல் உருவானதற்கான காரணம் என்ன?

கி.பி.அ-ன்:

தங்களுடைய காலனிகளை விட்டுவிட்டு மக்கள் வருகிறார்கள். தவிர்க்கமுடியாமல் பாண்டிச்சேரியில் வழங்கிய மாதிரி பலருக்கு குடியுரிமை வழங்குகிறார்கள். அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இதைவிட முக்கியமான நிலைமை, இரண்டாவது உலகப் போரில் ஐரோப்பா பாதிக்கப்படுகிறது. அதைப்போல பிரான்சும் பாதிக்கப்படுகிறது. இப்படி பாதிக்கப்பட்ட பிரான்சைக் கட்டி எழுப்புவதற்கு தொழிலாளர்கள் தேவை. அந்தத் தொழிலாளர்களை தங்கள் காலனிய நாடுகளிலிருந்து வரவழைத்தார்கள். குடியிருக்க வீடு, குடியுரிமை இப்படிக் குடிப்பெயர்வுக்கு என்னென்ன வசதிக்ளோஅவற்றைச் சொல்லி அழைத்து வருகிறார்கள்.

கட்டுமான வேலைகளுக்குக் காலனி மக்களை பயன்படுத்தியதற்குப் பின்னால் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலோ, அவர்களுடைய சமூகத்தோடு தங்களை இணைத்துக் கொள்வதிலோ இவர்கள் அக்கறை காட்டவில்லை. அதனால் தனித்துப் போனார்கள். இதற்கு காலனி மக்களும், பிரான்ஸ் அரசும் காரணமாக இருக்கலாம். அவர்கள் பிரான்ஸிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. அந்த மக்களின் ஐந்தாவது தலைமுறை இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறது. இன்னமும் வெளிநாட்டவர்களாகவும் இழிவான சொற்களில் அழைக்கப்படுகிறவர்களாகவும்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் ரசிகை.....அரவிந்தன் அவர்களின் மனம் திறந்த பேட்டியை இணைத்தமைக்கு......

ஈழத்து கவிஞரின் பேட்டியை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் ரசிகை.

நன்றி ரசிகை. புலம்பெயர் தமிழர்களின் நிலை இதுதானே. அதுவும் ஆரம்ப காலபுலம்பெயர் தமிழரின் நெருக்கடி கூட.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி ரஸ்

கி.பி அரவிந்தனின் சிட்னி இன்பத்தமிழ் வானொலிக்கு வழங்கிய பேட்டியினை ஏற்கனவே இணைத்துள்ளேன்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...t=7688&start=30

முன்பு கேட்காதவர்கள் கேட்கலாம்

நல்லதொரு இணைப்பு

கவிஞர்.கி.பி அரவிந்தனின் வார்த்தைகளில் புலத்தின் ஒரு பகுதி வெளிப்பட்டுள்ளது.

இன்னும் பலர் மனம் திறக்க வேண்டும்............

  • 4 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரவிந்தன் அண்ணாக்கு பாராட்டுக்கள்

ஈழத்து கவிஞரின் பேட்டியை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் ரசிகை.

ஈழத்து கவிஞரின் பேட்டியை இணைத்த ரசிகைக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.