மாதுரு ஓயா அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கிய அரச இயந்திரம்
மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத்தின் நாயகர்கள் காமிணியும் ஜெயவர்த்தனவும்
மாதுரு ஓயா பகுதியில் பிக்கு தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சிங்களவர்களின் அடாத்தான நிலஅபகரிப்பிற்கு அரசால் வெளிப்படையாக ஆதரவு கொடுக்க முடியவில்லை. தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட கலவரங்களுக்குப் பின்னரும் ஜெயவர்த்தனவை ஆதரித்து நின்ற ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் கூட மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. திட்டமிட்ட இனக்கலவரங்களினால் சர்வதேச அனுதாபத்தினைப் பெற்றுவந்த தமிழர்களுக்கு மாதுரு ஓயாவின் ஆக்கிரமிப்பை அரசு ஆதரிப்பதென்பது அவர்களது நிலையினை இன்னும் பலப்படுத்தியிருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவையும் இது ஆத்திரப்படுத்தியிருக்கும்.
ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை இரகசியமாக, மெதுமெதுவாகவே செய்ய விரும்பியிருந்தனர். ஆனால், மகாவலி அபிவிருத்திச் சபையில் பணியாற்றிய சிலர் மிகவும் வெளிப்படையாகவும் மூடத்தனமாகவும் மிகப்பெரிய செயற்பாடு ஒன்றினை முன்னெடுத்ததன் மூலம் ஜெயாரின் திட்டத்தினைப் போட்டுடைத்துவிட்டனர். இது ஜெயாரின் அரசையும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியிருந்தது.
புரட்டாதி 8 ஆம் திகதி தேவநாயகம் கூட்டிய பத்திரிக்கையாளர் சந்திப்பு அவர் எதிர்பார்த்ததற்கு நேர் எதிரான விளைவினை ஏற்படுத்தியிருந்தது. மாதுரு ஓயாவின் சிங்கள ஆக்கிரமிப்பை மகாவலி அபிவிருத்தி அமைச்சு துரிதப்படுத்தியது. திம்புலாகலை பிக்குவை அணுகிய அதிகாரிகள், சிங்களக் குடியேற்றத்தினைத் துரிதப்படுத்துமாறு கோரினர். பிக்குவும் மிக வெளிப்படையாகவே இக்குடியேற்றதைச் செயற்படுத்தத் தொடங்கினார். அதன் ஒரு அங்கமாக தவச எனும் சிங்கள நாளிதழில் விளம்பரம் ஒன்றினை வெளியிட்ட திம்புலாகலை தேரை, மகவலி நீர்ப்பசணத் திட்டத்தின் மூலம் நண்மையடையப்போகின்ற காணிகளில் விவசாயம் செய்ய விரும்புவோர் தன்னைத் தொடர்புகொள்ளலாம் என்கிற அறிவிப்பினை அந்த விளம்பரம் தாங்கி வந்தது. மேலும், நாட்டிலுள்ள அனைத்து பெளத்தமத பீடங்களின் நாயக்கர்களுக்கும் திம்புலாகலை பிக்கு அனுப்பிய கடிதத்தில் தத்தமது பகுதிகளில் இருந்து குறைந்தது இரு காணிகளற்ற விவசாயிகளையாவது தெரிவுசெய்து தருமாறு கேட்டிருந்தார். இவ்வாறு 700 காணிகளற்ற சிங்கள விவசாயிகளைச் சேர்த்துக்கொண்டு மாதுரு ஓயாவிற்குச் சென்றார் திம்புலாகலை தேரை. இவரது இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை மட்டக்களப்பு அரசாங்க அதிபரையும், ஏனைய அதிகாரிகளையும் அதிர்ச்சியடையச் செய்திருந்தது. தமிழர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட காணிகளை ஆக்கிரமித்து நின்ற 700 சிங்கள விவசாயிகளையும், பிக்குவையும் அவ்விடத்தில் இருந்து அகன்றுவிடுமாறு அரசாங்க அதிபர் கோரியபோது அவர்கள் அவரைச் சட்டை செய்யவில்லை. அரசாங்க அதிபர் பொலீஸாரின் உதவியை நாடியபோது அவர்களும் கைவிரித்து விட்டனர். ஆகவே, வேறு வழியின்றி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் கல்க்குடா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அமைச்சர் தேவநாயகத்திற்கு இதுகுறித்த கடிதம் ஒன்றினை அரசாங்கதிபர் அந்தோணிமுத்து அனுப்பிவைத்தார்.
தமிழர் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட திம்புலாகலைப் பிக்குவின் உருவச்சிலையினைத் திறந்துவைக்கும் போர்க்குற்றவாளி சவீந்திர சில்வா
மகாவலி அபிவிருத்திச் சபையும் வெளிப்படையாகவே தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. திம்புலாகலை விகாரையிலிருந்து மாதுரு ஓயா ஆக்கிரமிப்புப் பகுதிக்கு சிங்கள விவசாயிகளை ஏற்றிச்செல்ல அமைச்சின் பாரவூர்திகளை அமைச்சு அனுப்பி வைத்தது. இப்பகுதியில் அத்துமீறிக் குடியேறும் சிங்கள விவசாயிகள் வீடுகளை அமைக்கவென தடிகள், பிளாத்திக்கு துணிகள், வேயப்பட்ட ஓலைகள் மற்றும் ஏனைய கட்டடப்பொருட்களையும் அமைச்சகத்தின் பாரவூர்திகள் கொண்டுவந்து சேர்த்தன. இதற்கு மேலதிகமாக சீமேந்துப் பக்கெற்றுக்களும் ஏனைய பொருட்களும் அமைச்சகத்திலிருந்து இப்பகுதிக்கு ஏற்றிவரப்பட்டன. மகாவலி ஆற்றில் பணியில் ஈடுபடுத்த வரவழைக்கப்பட்ட உழவு இயந்திரங்களும், புல்டோசர்களும் மாதுரு ஓயாப் பகுதியில் சிங்களவர்கள் அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கும் காணிகளை துப்பரவாக்கி சமப்படுத்தும் பணியில் அமர்த்தப்பட்டன.
புரட்டாதி 15 ஆம் திகதி தேவநாயகத்துடன் மீண்டும் தொடர்புகொண்ட அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து, மாதுரு ஓயாவில் அத்துமீறி நுழைந்து, தமிழர் காணிகளைக் கைப்பற்றி இருக்கும் சிங்களவர்களின் தொகை 40,000 ஆக உயர்ந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். ஆகவே தனது இரண்டாவது பத்திரிக்கையாளர் சந்திப்பினை மறுநாளே கூட்டிய தேவநாயகம் நிலைமை மிகவும் மோசமாகி வருவதாகக் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் இந்த நிலைமையினால் மிகுந்த அதிருப்தியடைந்து வருவதாகவும் மோதல்கள் உருவாகும் சூழ்நிலையொன்று உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.
மகாவலி அபிவிருத்தி அமைச்சு சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருப்பதாக தேவநாயகம் குற்றஞ்சாட்டினார். தனது குற்றச்சாட்டினை நிரூபிக்க புகைப்பட ஆதாரங்களை அவர் காட்டினார். மகாவலி அமைச்சுக்குச் சொந்தமான பாரவூர்திகள் விவசாயிகளையும், கட்டடப் பொருட்களையும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குக் கொண்டுவந்து இறக்குவதைப் புகைப்படங்கள் காட்டின. மேலும், மகாவலி அமைச்சின் அதிகாரிகள், பணியாளர்கள், ஒப்பந்தக் காரர்கள் என்று பெரும் பட்டாளமே இக்குடியேற்றத்தை செயற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவருவதையும் புகைப்படங்கள் காட்டியிருந்தன.
புகைப்படங்களுக்கு மேலாக இந்த செயற்பாடுகளை நேரடியாகக் கண்டவர்களும் ஊடகவியலாளர்களிடம் தமது சாட்சியத்தைப் பகிர்ந்துகொண்டனர். மாதுரு ஓயாவில் தற்போது காணப்படும் நிலைமை அப்பகுதியில் பாரிய விழா ஒன்று நடைபெற்றுவருவது போன்று காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். "நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் திம்புலாகலை விகாரைக்கு மக்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றனர். பாரவூர்திகளும், மினிவான்களும் மக்களை கொண்டுவந்து இறக்கிக் கொண்டிருக்கின்றன. அங்கிருந்து மாதுரு ஓயாவின் பல பகுதிகளுக்கு அம்மக்களை மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளே அனுப்பி வைப்பதோடு அம்மக்களுக்குத் தேவையான கட்டடப் பொருட்களையும் கொடுத்து வருகின்றனர். துப்புரவு செய்யப்படும் காணிகளில் மக்கள் தங்குமிடங்களை அமைத்துக்கொள்ள அதிகாரிகளே உதவுகின்றனர். பல தனியார் அமைப்புக்கள் இம்மக்களுக்கான உணவுப் பொட்டலங்களை விநியோகித்து வருகின்றனர்" என்று பொலொன்னறுவைக்கான லேக் ஹவுஸின் நிருபர் கூறினார். .
திம்புலாகலை விகாரை
மகவலி அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகளின் திரைக்குப் பின்னரான இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றிய வதந்திகள் கொழும்பின் உயர்வர்க்க மட்டத்தில் பரவிவரத் தொடங்கின. மேலும் இத்திட்டத்தின் நடத்துனராகச் செயற்பட்டு வந்த ஹேர்மன் குணரட்ண மகவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயக்கவிடம் மாதுரு ஓயாச் சிங்கள குடியேற்றத்திற்கு இராணுவப் பாதுகாப்பினை வழங்குமாறு கோரியபோதும், இராணுவத்தினருக்கு வேறு வேலைகள் இருக்கின்றன என்று கூறி காமிணி அக்கோரிக்கையினை நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வந்தன. குணரட்ணவிடம் பேசிய காமிணி இராணுவத்திற்குப் பதிலாக வேறு ஒழுங்குகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் இத்திட்டத்தின் பிதாமகர்களில் ஒருவரான பண்டிதரட்ண, பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புகொண்டு ஆடிக் கலவரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்ததற்காகவும் பல தமிழர்களைக் கொன்றதற்காகவும் பதவியிலிருந்து விலக்கப்பட்ட கடற்படைவீரர்களை, சட்டவிரோதமாக நடந்துவந்த மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கேட்டுக்கொண்டதாகத் தெரிய வருகிறது.
மிகுந்த கோபத்துடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேவநாயகம் எச்சரிக்கை ஒன்றினையும் அங்கு விடுத்தார்.
"மீண்டுமொருமுறை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இனமோதல் ஒன்று ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமானால், மாதுரு ஓயாவில் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் சிங்களவர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். எனது கோரிக்கைகுச் சாதகமான பதில் ஒன்றினை இந்த அரசாங்கத்தினால் தரமுடியாது போனால் நான் எனது பதவியில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்.
தேவநாயகத்தின் இந்த எச்சரிக்கைகள் ஊடகங்களில் வந்ததையடுத்து ஜெயார் கோபப்பட்டார். இன்னொரு இனக்கலவரத்தையோ அல்லது தேவநாயகம் விலகிச் செல்வதையோ ஜெயாரினால் அப்போது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. தமிழர்கள் தனது ஆட்சியில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்று சர்வதேசத்திற்குக் காட்டுவதற்கு தேவநாயகமே ஜெயாருக்கு உதவிவந்தார். தேவநாயகமும், தொண்டைமானுமே தமிழர்கள் மீது ஜெயார் கருணையுடன் இருக்கிறார் என்று காட்டுவதற்காகப் பாவிக்கப்பட்ட நடிகர்களாக அன்று இருந்தார்கள். தேவநாயகத்தின் பதவி விலகலும், இன்னொரு இனக்கலவரமும் மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத்தின் பின்னால் தான் இருப்பதை உலகிற்குக் காட்டிவிடும் என்று அவர் அஞ்சினார்.
ஆகவே, தேவநாயகத்துடன் நேரடியாகப் பேசிய ஜெயார், "நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் பொறுமையாக இருங்கள்" என்று கெஞ்சினார்.