Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87988Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்6Points38754Posts -
நியாயம்
கருத்துக்கள உறவுகள்3Points2137Posts -
alvayan
கருத்துக்கள உறவுகள்3Points5416Posts
Popular Content
Showing content with the highest reputation on 07/20/25 in all areas
-
பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
2 points20 JUL, 2025 | 10:41 AM (இராஜதுரை ஹஷான்) குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. தந்தையின் பெயர் இல்லாவிடினும், தாயின் குடும்ப வழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். அதற்கான வசதிகள் காணப்படுகின்றன என்று மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, குருணாகல் மாவத்தகம பகுதியில் கடந்த 17 ஆம் திகதியன்று பிறந்து இரண்டு நாட்களான சிசு ஒன்று வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூகத்துக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்க வேண்டிய பொறுப்பு மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சுக்கு உண்டு. பெண்கள் தந்தையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் அல்லது பொறுப்பேற்க முடியாத நிலையில் குழந்தையை பிரசவிக்க நேரிட்டால் பாரதூரமான சுகாதார பாதிப்புக்கும், சமூக நெருக்கடிகளுக்கும் உள்ளாக நேரிடும். ஆகவே இவ்வாறான சம்பவங்கள் குறித்து அமைச்சுக்கு பாரியதொரு பொறுப்பு காணப்படுகிறது. பொறுப்பேற்க முடியாத நிலை மற்றும் உறுதிப்படுத்த முடியாத சூழல் ஆகிய காரணிகள் பெண்கள் அச்சமடைந்து இவ்வாறு தாம் பெற்ற குழந்தையை கைவிட்டுச் செல்கிறார்கள். மனிதர்களின் உளவியல் தொடர்புகளை தடுக்க முடியாது, சட்டமியற்ற முடியாது. இருப்பினும் அந்த உளவியல் ரீதியிலான தொடர்பில் பிரதிபலனாக பிள்ளைகளை பாதுகாப்பற்ற வகையில் விட்டுச் செல்லும் நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. தந்தையின் பெயர் இல்லாவிடினும்,தாயின் குடும்பவழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். அதற்கான வசதிகள் காணப்படுகின்றன. பெண்கள் பிள்ளை பெற்றவுடன் அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். பெற்ற குழந்தையை வளர்க்க முடியாவிடின் பிறிதொரு தரப்பினருக்கு அந்த குழந்தையை கையளிக்கும் சட்டத்திலான நிறுவன கட்டமைப்பு நாட்டில் உள்ளது. நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்கான வசதிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் வழங்கப்படும். குருநாகல் மாவத்தகம பகுதியில் வயல்வெளியில் கைவிடப்பட்ட சிசு தற்போது வைத்தியசாலை கண்காணிப்பில் ஆரோக்கியமாக உள்ளது. இந்த சிசுவின் தாயை தேடி விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தாயை கண்டுப்பிடித்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த தாய் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிடும் சமூக நிலையே காணப்படுகிறது. இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/2204342 points
-
பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
2 pointsஇது ஒருவகையில் முற்போக்கு சிந்தனை வடிவம் தான். இளவயது மகப்பேறு, பாலியல் துஸ்பிரயோக விளைவு போன்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் பெண்ணுக்கு இது அனுகூலமாக கூட அமையலாம். குழந்தையின் வளர்ச்சியில், பராமரிப்பில் நேரத்தை, செலவுகளை பகிர்ந்து கொள்ளாத ஒரு ஆண்வெறும் பத்திரத்தில் மட்டும் தன்னுடைய பெயரை போட்டு "ஆண்மையை" காட்டுவதில் என்ன பலன். இது ஒருவகையில் முற்போக்கு சிந்தனை வடிவம் தான். இளவயது மகப்பேறு, பாலியல் துஸ்பிரயோக விளைவு போன்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் பெண்ணுக்கு இது அனுகூலமாக கூட அமையலாம். குழந்தையின் வளர்ச்சியில், பராமரிப்பில் நேரத்தை, செலவுகளை பகிர்ந்து கொள்ளாத ஒரு ஆண்வெறும் பத்திரத்தில் மட்டும் தன்னுடைய பெயரை போட்டு "ஆண்மையை" காட்டுவதில் என்ன பலன். சமூகம் எல்லாவற்றிட்கும் எதோ ஒரு பெயர் வைத்து அழகு பார்க்கும்... அது அவர்கள் மனப் பிறழ்வு. இது என்னுடைய தாழ்மையான கருத்து.2 points
-
கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
கெரி ஆனந்த சங்கரி மீது நம்பிக்கை உண்டு – கனடிய பிரதமர் July 17, 2025 11:31 am பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆனந்தசங்கரி, தனது அமைச்சரவையில் சேருவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினராக கனடா உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான CBSA அடையாளம் காணப்பட்ட ஒருவருக்காக நிரந்தர குடியிருப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக கடிதம் எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கெரி ஆனந்த சங்கரி தொடர்பில் கனடிய அரசியல் பரப்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 2006ஆம் ஆண்டு முதல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்காக ஆனந்தசங்கரி 2016 மற்றும் 2023-ல் கனடிய எல்லைப் பாதுகாப்பு சேவை முகவர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். 2023-இல் கெரி ஆனந்தசங்கரி நீதித் துறைக்கான பாராளுமன்ற செயலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த வாரம் கனடா நீதிமன்றம், அந்த நபரின் கடைசி முறையீட்டையும் நிராகரித்தது. தேசிய பாதுகாப்பும், பொது பாதுகாப்பும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது. 2023-இல் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்குப் பிறகு, இத்தகைய கடிதங்களை எழுதுவதை நிறுத்தியுள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் வாக்காளர்களுக்காக ஆதரவு கடிதங்கள் எழுதுவது வழக்கமான செயலாகும் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதானல் வேறும் தகவல்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார். எனினும்,கனடாவில் இயங்கி வரும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அமைப்பு ஒன்றின் பிரதானி ஷெரில் சபேரியா, இதை ஒரு முக்கிய தவறான முடிவாகக் குறிப்பிடுகிறார். ஒரு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் என எல்லைப் பாதுகாப்புச் சேவை முகவர் நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு ஆதரவு வழங்குவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல எனவும். இது நாடு முழுக்க பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை சீர்குலைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் எதிர்க்கட்சிகளும், இந்த விவகாரத்தில் ஆனந்தசங்கரி பதவியில் தொடரக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். இது போல் கடிதம் எழுதியவர்கள், பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கவே கூடாது என எதிர்க்கட்சி செனட் தலைவர் லியோ ஹூசாகோஸ் சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ளார். https://oruvan.com/canadian-prime-minister-has-confidence-in-kerry-ananda-shankar/2 points
-
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
பறையிசைக்கும் மக்களின் குலதெய்வம் வல்லியக்கன் தி. செல்வமனோகரன் 18 நிமிட வாசிப்பு March 8, 2024 | Ezhuna பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது. கருவிக்கையாட்சி, மொழிப்பயன்பாடு என்பவற்றின் வழி மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனை தொழிற்படத் தொடங்கியது. அப்போதே இயற்கையின் அதீத ஆற்றல் மனிதனுக்கு அதன் மீது பயத்தையும், பக்தியையும் உருவாக்கியது. தன்னை மீறிய மேம்பட்ட சக்தி உண்டு என்ற பிரக்ஞையும் நம்பிக்கைகயும் மேலோங்கத் தொடங்கின. இயற்கை மீதான பயபக்தி இயற்கை வழிபாடாகவும் பின் இயற்கைத் தெய்வ வழிபாடாகவும் பரிணாமமுற்றது. நிலத்தெய்வங்கள், குலதெய்வங்கள், அச்சத்தால் உருவாக்கப்பட்ட பல தெய்வங்கள் எனப் பல்வகைத் தெய்வங்கள் உருவாக்கம் பெற்றன. காலதேச வர்த்தமானத்திற்கேற்ப தெய்வங்களின் முதன்மையும் மாறத்தொடங்கியது. அவ்வாறு மாறாத, மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்த மரபார்ந்த தெய்வங்கள், நாட்டார்தெய்வங்கள், கிராமியத் தெய்வங்கள் எனப்பட்டன. காலனித்துவத்தின் வழி ஈழத்துப்புலத்தில் உருவான நவீனத்துவம், ஆங்கிலமயப்பட்ட, மேலைத்தேய கருத்தாக்கங்களையும், வாழ்வியலையும், கலாசார பண்பாடுகளையும் வியப்புடன் நோக்கி அவையே மேலானவை எனும் மனப்பதிவைத் தந்தன. அரச உத்தியோகம், மத்தியதர வர்க்கத்தைப் பெருகச் செய்தது. சுதேச கலை, கலாசாரம், பண்பாடு, பொருளாதாரம், தத்துவம், சமய மரபுகள் போன்றவற்றை கீழ்மையானவையாக எண்ணவும் புறமொதுக்கவும் செய்தன. பின்காலனிய உலகமயமாதல் சூழல், ஒற்றைப் பண்பாட்டை அவாவி நிற்கிறது. இது சிறுசிறு இனக்குழுக்களினது தனித்த அடையாளங்கள் சிதைவதற்கும், வரலாறற்றுப் போதலுக்கும் இருப்புச் சார்ந்த கேள்விகளுக்கும் உட்படுத்தலை அவதானிக்கச் செய்தன. இதன் வழி ‘மாற்றுச்சிந்தனை’ முதன்மையுறத் தொடங்கியது. பண்பாட்டுப் பன்மைத்துவத்தின் முக்கியத்துவம், சுதேச அறிவியல், சமயம், தத்துவம், கலாசார மரபுகளின் வழி வரலாறு பற்றிய பிரக்ஞை என்பன மீளக் கட்டமைக்கப்படத் தொடங்கின. மனிதனுக்கு உள்ளார்ந்த சிந்தனை (abstract thinking) தோன்றிய காலத்திலிருந்து இயற்கை சார் உணர்வு ஏற்பட்டது. அதன்வழி இயற்கை, வழிபாட்டுப் பொருளானது. இயற்கைப் பொருட்கள் அனைத்தும் கடவுளர் ஆயின. இவ்வியற்கையின் சக்தியே இயக்கன்; இதனை சமூக மானிடவியலாளர்கள் ‘அனிமிசன்’ என்கின்றார்கள். இயற்கையின் கடவுளர் தன்மை இயக்கன் – இயக்கியாயின், இயக்கனும் இயக்கியும் கொடூரமும், அழகும், அன்பும் நிறைந்தவையாக எடுத்தாளப்படுகின்றன. இந்தியாவின் பிரதான சமயங்களான இந்து சமயம், பௌத்தம், சமணம் போன்றன இயக்கன் – இயக்கியை உள்வாங்கின. குறிப்பாக ஒரு கடவுளை முதன்மைப்படுத்தும் போது அது இயக்கர்களின் தலைவனாக – இயக்கிகளின் தலைவியாகக் காட்டப்பட்டது. சிவன் பூதநாதரானார். இலங்கையின் வரலாற்று நூல்களில் சிங்கதேசக் குடிமகனான விஜயன் இயக்கியாகிய குவேனியைத் திருமணம் செய்தமையும் தலைவனானமையும் இவ்வாறாகவே இருக்கலாம். தமிழர் மரபிலும் ஏனையோர் மரபிலும் இயக்கி பெற்ற இடத்தை இயக்கன் பெறவில்லை. அதேபோல இலங்கை வரலாற்றில் நாகர்கள் பெற்ற வரலாற்றுத்தடத்தை இயக்கர்கள் பெறவில்லை. விஜயனால் குவேனி கைவிடப்பட்ட பின் அவர்களின் குழந்தைகள் வளர்ந்து தகாப்புணர்ச்சி வழி குடும்பங்கள் உருவானதாகவும் அவர்களே வேடுவர்கள் எனப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இலங்கையின் ஆதிவேடர்களின் தெய்வம் ‘யக்கு’ என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் வாழ்வில் நிலமானியமுறையும் அதன்வழி கெடித்திருந்த சாதியமும் சமூகவியல் தளத்தில் முக்கியமானவை. தொழில்ரீதியான அடுக்குமுறை பேதத்தைத் இது தந்தது; கலை, பண்பாடு, பொருளாதாரம், சமயம் என எல்லாத் தளங்களிலும் செல்வாக்குச் செலுத்தியது. இதன் வழி சாதியத் தெய்வங்களும், சாதியக் கோயில்களும் உருவாகின. பறையிசைக்கும் குடிகளின் தெய்வமே வல்லியக்கன். வல்லியக்கன் இயற்கை – இயக்க – இயக்கன் – இயக்கி வழிபாட்டின் வழி உருவான வழிபாடாக இதனை இனங்காண்பதோடு ‘யக்’ வழிபாட்டோடும் இணைத்து இத்தெய்வம் பற்றிய முதன்மை ஆய்வினைச் செய்த பேராசிரியர் இரகுபதி கருத்துரைக்கின்றார். இயற்கை வழிபாடு உலகப் பொதுமைக்குமானது. இயற்கை எனும் தமிழ்ச் சொல் இயற்கை வழிபாட்டைக் குறித்து, அது பின் இயக்க வழிபாடாக இயக்கன் – இயக்கி எனும் ஆண், பெண் வழிபாடாக வளர்நிலை பெற்றிருக்க வேண்டும். அதனை ‘யக்’ வழிபாட்டோடு இணைத்தல் அவசியமற்றது. ‘வல்லியக்கன்’ எனும் பெயர் பற்றி பல்வகை அனுமானங்கள் உண்டு. வல்லி – இயக்கன் – வல்லி எனும் பறையிசைக்கும் மக்களின் மூதாதையால் வழிபடப்பட்ட தெய்வம், வல்லியக்கன் எனக் கூறப்பெற்றிருக்கலாம். ஏனெனில் வல்லி, வல்லியப்பன் எனும் பெயர்கள் இன்றும் பறையிசைக்கும் மக்களிடம் செல்வாக்குடன் காணப்படுகிறது. வல்லியின் வழித்தோன்றல்கள் வல்லியக்கனை வழிபடுகின்றனர். வலிமை பொருந்திய இயக்கன் என்ற நம்பிக்கையின் வழி உருவான பெயராக இருக்கலாம். வள்ளிபுனம் – வள்ளி புலம் – வல்லி புரம் வள்ளி – வல்லி எனும் அடிப்படையில் வல்லியின் தலைவன் முருகனைக் குறிப்பதாக எழுந்து பின்பு அது தனித்தெய்வமாக உருப்பெற்றிருக்கலாம். வள்ளி வேடுவர் பெண் என்பதும் இலங்கை வரலாற்றில் இயக்கர் வேடுவர்களாக சித்தரிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது. ஈழத்தின் வல்லியக்கன் வழிபாட்டிடங்கள் ஈழத்தில் பறையிசைக்கும் மக்கள் வாழுமிடங்கள் எங்கும் வல்லியக்கன் வழிபாடு இருந்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டாலும் அதற்குப் போதிய சான்றுகள் இல்லை. “கன்னாபுரம் நின்று அந்நாள் நடந்து அறிதரிய ஏழாலை அதில் மீதுறைந்து புன்னாலைக்கட்டுவன் அச்செழுகோப்பாய் புத்தூர் நீர்வேலி வறுத்தலைவிளான் பளையிரண்டு மன்னார் சுழிபுரம் சங்கானை தோலவரம் மற்றுமுள்ள தேசமெல்லாங் கடந்து சுன்னாகம் வாழவரு வல்லியக்கராசனை தொழுவார்க்கு வல்வினைநோய் தொலைந்து போகும்” இப்பாடலை கிறிஸ்தவப் பாதிரியார் சுவாமி ஞானப்பிரகாசர் தன் கட்டுரையில் எடுத்தாண்டுள்ளார். ஏழாலை வல்லியக்கன் கோயில் பூசாரி வல்லியக்கன் ‘பத்தாசியாக’ கோயில் நிகழ்வுத் துண்டுப் பிரசுரத்தில் அச்சடித்து வெளியிட்டுள்ளார். இது வாய்மொழிப் பாடலாக இருந்திருக்க வேண்டும். இப்பாடல் ஈழநிலத்தின் வடபுலத்தில் வல்லியக்கன் கோயில் இருந்த இடங்களைப் பட்டியற்படுத்துகின்றது. கன்னாபுரம், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், அச்செழு, கோப்பாய், புத்தூர், வறுத்தலைவிளான், பளை இரண்டும், மன்னார், சுழிபுரம், சங்கானை, தொல்புரம், சுன்னாகம் என்பன அவையாகும். இவற்றுள் தெல்லிப்பழையில் ஆலயமுண்டு. கிளிநொச்சி மாவட்ட பளை, விடத்தற்பளை மற்றும் இயக்கச்சி பிரதேசங்களில் வல்லியக்கனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சங்கானை கோயில் அழிக்கப்பட்டுவிட்டது. அது போலவே தொல்புரம், சுழிபுரம், சுன்னாகம், மன்னார் கோயில்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குடிசனப் பரவலாக்கத்தின் வழி உருவான வேலணை சின்னமடு, நவாலி, சண்டிலிப்பாய், இருபாலை, அச்செழுவின் புதியகோயில் போன்றன கள ஆய்வினூடாகப் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வல்லியக்கன் கோயில்கள் தனிக்காணிகளிலும் வீட்டு வளவுகளினுள்ளும் அமைந்துள்ளமை இது ஒரு குலதெய்வ வழிபாடு என்பதை உறுதிப்படுத்துகின்றது. கோயிலாக இல்லாமல் ஆலமரம், நாவல்மரம், மஞ்சவுண்ணா, பூவரசு போன்ற மரங்களின் கீழ் வல்லியக்கன் அமர்ந்திருந்தார். கல் – மயோசியன் கல் (வெள்ளைக்கல்) சூலம் போன்ற பருப்பொருட்களின் ரூபத்தில் அவர் வழிபடப்பட்டார். மரங்களின் கீழ் திறந்த வெளியிலும் சீமெந்துக் கட்டடங்களிலும் இக்கோயில்கள் அமைந்துள்ளன. இத்தெய்வத்தின் இணைத்தெய்வமாக முடி மன்னர் (கோண்டாவில், அச்செழு, ஏழாலை) காணப்படுகிறார். இதனை விட தற்காலத்தில் இணைத்தெய்வங்களாக காளி (நவாலி), விறுமர், ஐயனார் (கரவெட்டி) என்பன காணப்படுகின்றன. வழிபாட்டு முறைகள் வல்லியக்கனை வழிபடும் முறைகள் பிரதேச வழக்காறுகளுக்கேற்ப சிற்சில மாறுபாடுகளுடன் காணப்படுகின்றன. சில இடங்களில் நித்தம் ‘விளக்கு வைக்கும்’ வழக்கம் உண்டு. ஆனால் பல ஆலயங்களில் வெள்ளிக்கிழமை, விஷேட நாட்கள் போன்ற குறித்த நாட்களில் மட்டும் இவ்வழக்கம் காணப்படுகின்றது. எல்லாக் கோயில்களிலும் ‘வைகாசி விசாகம்’ மிகச்சிறப்பாகப் பொங்கல் வைத்துப் பூசித்து வழிபடப்படும் நாளாகக் காணப்படுகிறது. நாட்டார் தெய்வங்களுக்குப் பொதுவில் வைகாசி விசாகதினம் குளித்தியாக, பொங்கல் நாளாக, மடை நாளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்னின்றும் மாறுபட்டு ஏழாலை வல்லியக்கனுக்கு சித்திரை மாத நான்காவது புதன்கிழமை விஷேடநாளாகக் கருதப்பட்டு மடைப்பண்டம் எடுக்கப்பட்டு பொங்கி வழிபடப்படுகின்றது. கரவெட்டி கோயிலில் பங்குனி கடைசிப்புதன் விஷேடநாளாகும். மடைப்பண்டம் எடுக்கும் மரபு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மடைப்பண்டம் எடுக்கும் முதல்நாள் ஆலயச்சூழல் தூய்மைப்படுத்தப்படும். ‘விளக்கு வைத்தல்’ நிகழும். விளக்கு வைப்பவர், பூசை செய்பவர் பறையிசைக்கும் மக்களில் ஒருவராக இருப்பார். இந்நிகழ்வின் பூசாரியாக அவர் திகழ்வார். ஆனைக்கோட்டை போன்ற சில கோயில்களில் வாய்கட்டிப் பூசை செய்யும் முறைமையும் உண்டு. இது கப்புறாளை (கதிர்காமம்), கப்பூகர் (மண்டூர்க்திர்காமம், செல்வச்சந்நிதி) எனும் வாய்கட்டி பூசை செய்யும் முறையின் செல்வாக்கால் வந்திருக்கக் கூடும். பொங்கலுக்கு உரிய பண்டங்கள், பாத்திரங்கள் இணைத் தெய்வங்களின் ஆலயங்களில் வைத்துப் பூசை செய்யப்பட்டு புனிதப்படுத்தப்பட்டு வல்லியக்கன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். மடைப்பண்டம் கொண்டுசெல்லப்படும் போது மடைப்பறை இசைக்கப்படும். ஆலயங்களின் நிகழ்வுகளுக்கு இசைக்கவெனத் தனிப்பறையும் தனியான ‘இசைப்பு’ முறையும் கலைஞர்களும் இருந்ததாக அறியமுடிகிறது. இது மங்கல இசையாக, பறை சாற்றுதலாகக் கூறப்படுகிறது. பலியிடும் வழக்கம் இருக்கவில்லை என எல்லா ஆலயக்காரர்களும் உறுதிபட உரைக்கின்றனர். கரவெட்டி கோயிலில் மட்டும் ஆலயத்துக்கு அப்பால் உள்ள சந்தியில் வைத்து மடைப்பண்டம் எடுப்பதாகவும் மடைப்பண்டம் எடுக்கும் போது ‘கோழியறுத்தல்’ எனும் பலி நிகழ்த்தப்படுவதாகவும் நேர்காணல் (சி.அருணகிரிநாதன், வயது 61) மூலம் அறிய முடிந்தது. வல்லியக்கனை வழிபடுதலினூடாக சந்ததி பெருக்கம், நோய் நொடியில் இருந்து விடுபடுதல் போன்ற நம்பிக்கைகள் காணப்படுகின்றன. தமது நேர்த்தி நிறைவுறும் போது நேர்த்திக்கடன் செலுத்தும் முறை காணப்படுகிறது. இது ‘தெய்வக்கடன்’ என்றே கூறப்படுகிறது. பொங்குதல், மடைபரவுதல் போன்றன அவற்றுட்சில. மட்சம், மாமிசம் படைப்பதில்லை. தற்போது காவடியெடுத்தல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாலய விஷேடதினங்களில் கலையாடி, குறிசொல்லல், திருநீறு போடுதல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன. சமகாலப் பயில்வுகள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி மிகவும் நசுக்கப்பட்ட நிலையில் தமது பொருளாதாரத்துக்கு மூலமாக இருந்த பறையை 1950 – 1970 இடையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வின் வழி உடைத்தும் எரித்தும் ‘இனி பறை இசைப்பதில்லை’ எனச் சபதம் செய்து ஈழத்தின் வடக்குப் பிரதேசத்தில் பல பிராந்தியங்களில் பறையிசைக்கும் தொழில் கைவிடப்பட்டது. பெருந்தெய்வவுருவாக்கம் – பெருங்கோயிற் பண்பாடு, சமஸ்கிருதமயமாக்கம் எனும் பிராமணர்க்குக் தம் கோயிலைக் கையளிக்கும் செயற்பாட்டின் வழி ஆலயங்களில் பறை வாத்தியம் வெளியேற்றப்பட்டு தவில் மங்கல வாத்தியமாக்கப்பட்டது. கிழக்கிலும் மலையகத்திலும் இன்றும் ஆலயங்களில் பறை ஓரளவேனும் இசைக்கப்படுகிறது. வடக்கில் செல்வச்சந்நிதி போன்ற ஒருசில ஆலயங்களில் பறையிசைக்கும் மக்களின் குலமல்லாத இறையடியவர் பறை ‘அறை’கிறார். இவ்வாறான செயற்பாடுகளும் இலங்கையின் யாவருக்குமான இலவசக்கல்வி, இலவச உணவு, இலவச உடை, இலவச வைத்தியசாலை போன்ற செயற்றிட்டங்களும் எல்லாச் சமூகங்களையும் வலுப்படுத்தியது. அரசாங்க உத்தியோகத்தர்களை, நிலையான மாதச்சம்பளம், ஓய்வூதியம் பெறுகின்றவர்களை உருவாக்கியது. இவ்வாறு உருவான புதிய வர்க்கம் , உயர்சாதியல்லாத மக்களிடம் ‘சாதிய நீக்கம்’ – உறவு நீக்கம், அடையாள நீக்கம் எனும் உணர்வுகளை செயல்நிலைப்படுத்தத் தூண்டியது. இதற்கு பறையிசைக்கும் மக்களின் படித்தவர்க்கமும் தப்பவில்லை. தம் குலமக்கள் இருந்த இடங்களை விட்டு நகரங்களையும் வேறு நிலங்களையும் நோக்கிப் பெயர்ந்தனர். குல தெய்வங்களைக் கைவிட்டனர். இதன்வழி வல்லியக்கன், ‘சைவம் அகலக்காலூன்றி நின்ற நிலத்தில்’ வல்லிபுரத்தாழ்வார் ஆயினார். தாமே பூசைசெய்து வழிபட்ட வல்லியக்கனை பெருங்கோயில் வழி கட்டமைக்க முற்பட்டு சீதாராமசாஸ்திரிகளை நாடிய போது ‘வல்லி’ எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு கோண்டாவில் வல்லியக்கனை வல்லிபுர ஆழ்வாராக மாற்றினார். அக்கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ந்து பிராமணர் கோயிலாக்கப்பட்டது (பறையிசைக்கும் மக்கள் கருவறைக்குள் செல்லுதல் தடைப்பட்டது). இதன் வழி, தாம் மேற்சாதியானதாக அம்மக்கள் நம்புகின்றனர். இவ்வழி, வேலணை சின்னமடு வல்லியக்கன், நாராயணர் – கிருஷ்ணனாக மாற்றப்பட்டுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு இரகுபதி, யாழ்ப்பாண சைவ உயர் சாதியினருக்கு எதிரான வைணவராக வல்லியக்கன் வழி பறையிசைமக்கள் மாறுவதாகவும், இதில் அம்பேத்கார் சிந்தனையின் சாயல் இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார் (இரகுபதி, பொ., 2006, பக்22 – 23). ஆனால் அச்செழுவிலுள்ள வல்லியக்கன் கடந்த 2021 ஆம் ஆண்டில் சிவபெருமானாக மாற்றப்பட்டுள்ளமை இக்கருத்துக்கு மாறானதாக, அம்பேத்கார் வழி சிந்திக்காது ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்க வழி நின்றதையே காட்டுகின்றது. இவ்வாறான மேனிலையாக்கங்கள் பிராமணரை முதன்மைப்படுத்துகிறது. மக்களை வெளித்தள்ளுகிறது. மடைப்பண்டம் எடுத்தல், மடைப் பறையிசைத்தல் முதலான பாரம்பரிய முறைகள், கலைகள், நம்பிக்கைகள் புறந்தள்ளப்பட்டு இல்லாதொழிக்கப்படுகிறது. சீமெந்துக் கற்களால் கட்டப்படட் வல்லியக்கன் கோயில்களில் விஷ்ணுவின் சங்குசக்கரம் (ஆனைக்கோட்டை) பிள்ளையார், முருகன் (சண்டிலிப்பாய்), விறுமர், ஐயனார் (கரவெட்டி) போன்ற சின்னங்கள், தெய்வங்கள் இடம்பிடித்து வருதலையும் சமஸ்கிருதமயமாதலுக்கான வெளி அண்மிப்பதையும் அவதானிக்க முடிகிறது. பறையிசை என்பது இருமரபுக் கோயில்களிலும் இல்லை என்பதும் கோயிற்பறை இல்லாது ஒழிந்து போனதையும் சாவுப்பறை வாசிப்பவர் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருத்தலையும் அதுவும் தன் கலைப்பெறுமானத்தை இழந்து வருதலையும் சாவுப்பறையின் இடத்தை ‘பாண்ட்’ (Band) வாத்தியம் ஆக்கிரமித்து வருதலையும் அவதானிக்க முடிகிறது. பெரும்பாலான பறையிசைக்கும் மக்கள் சாதிய – தன்னடையாள நீக்கத்திற்காகவும் வேறுசில நம்பிக்கைகள், தேவைகள் என்பனவற்றுக்காகவும் கிறிஸ்தவத்திற்கு (குறிப்பாக புரட்டஸத்தாந்தம்) மாறிவருகின்றனர். ஆதிதிராவிடர்களுக்கான அடையாளங்கள், தெய்வங்கள், வழிபாட்டுமுறைகள், கலைகள் கைவிடப்படுகின்றன. சமாந்தரமாக, தமிழர் வரலாறு சிதைவுறுதலும் நிகழ்கிறது. நிறைவுரை பறையிசை இசைக்கும் கலைஞர்கள் சாதிய ஒடுக்குமுறையினின்றும் தாழ்வு மனப்பாங்கில் இருந்தும் விடுதலை பெற அவாவிநிற்றலின் வழி தன்னடையாளத்தைத் துறத்தல் நிகழ்கிறது. அதன் ஒரு அங்கமாக, ஈழத்தமிழர்களில் ஒரு பிரிவினரான ஆதித் தமிழர்களாக அடையாளப்படுத்தப்படும் பறையிசைக்கும் மக்கள், தம் குலதெய்வமான வல்லியக்கனை நாராயணனாகவும் சிவனாகவும் மாற்றி பெருந்தெய்வவழிபாட்டினுள்ளும் சமஸ்கிருதமயமாதலினுள்ளும் கலக்கச்செய்து மேனிலையாக்கம் பெற முயற்சிக்கின்றனர். வல்லியக்கனைக் கைவிடுகின்றனர். தம் சமயம் துறந்து கிறிஸ்தவத்திற்கு மாறி புது அடையாளத்தை உருவாக்குகின்றனர். உலகமயமாதலுள் ஒன்ற முற்படுகின்றனர். வரலாற்றாசிரியர்கள் ஈழத்தில் தமிழர், நாகர் வழி வந்தவர்கள் எனக் கூறுகின்றனர். இயக்கர் வரலாறு குவேனி வழி வேடுவருள் தொலைக்கப்பட்டது. இயக்கரை – வல்லியக்கரை வழிபடும் வழிபாட்டின் வழி தமிழர் வரலாற்றைச் சீரமைக்க வாய்ப்புள்ளது. அத்தோடு ஈழத்தில் மட்டுமே வல்லியக்கன் வழிபாடு நிலவி வருதலும் கவனத்திற்குரியதாகும். தொடரும். ஒலிவடிவில் கேட்க 14352 பார்வைகள் About the Author யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் சைவசித்தாந்த துறையின் முதுநிலை விரிவுரையாளராக தி. செல்வமனோகரன் திகழ்கிறார் . இந்திய மெய்யியல் கற்கை புலத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்துக்கற்கை புலம் சார்ந்து காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், இலங்கையில் சைவத்தமிழ் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, நாயன்மார் பாடல்கள், தமிழில் மெய்யியல் எனும் நூல்களை எழுதியுள்ளார். பெறுதற்கரிதான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளார். 'சொற்களால் அமையுலகு' என்னும் இவரது நூல் கலை, இலக்கியம் சார்ந்த விமர்சன நூலாகும். https://www.ezhunaonline.com/valliyakkan-the-god-of-the-people-who-play-parai/1 point
-
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை!
நம்ம ஆபீசர்ஸ்....டிஜிட்டலில் சுருட்ட முடியாதே....கக்கூசு என்றால் கத்தையாக காசு வரும்😅1 point
-
வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!
மோட்டார் சைக்கிளை யார் ஓடுவது? நீங்களா? மோட்டார் சைக்கிளில் திரிவதை விட ஆட்டோ பிடிப்பது பாதுகாப்பானது. ஊபர் மிகவும் வசதி. கட்டணம் பரவாயில்லை. உண்மையில் வாடகைக்கு வாகனம் இலங்கையில் எடுப்பது கிட்டத்தட்ட் வெளிநாட்டில் தினம் ஆகும் செலவுக்கு ஒப்பானது. அல்லது அதைவிட கொஞ்சம் குறைவு என கூறலாம். உங்களுக்கு பொதுவாக மைல் பிரச்சனை வராது. ஏன் என்றால் ஒரு நாளைக்கு வெளிநாடு போல் 700/800 அல்லது 1000/1200 கிலோமீற்றர் நாங்கள் இலங்கையில் ஓடப்போவது இல்லை. அப்படி ஓடினால் இலங்கை தெரு நிலவரங்களை பொறுத்தவரை ஆபத்தானதும் கூட. நிதானமாக, ஆறுதலாக வாகனம் ஓடக்கூடிய சூழ்நிலை காணப்பட்டால் வாடகைக்கு எடுத்து ஓடலாம். அவசரப்படுவது என்றால் வாகனம் வாடகைக்கு எடுத்து ஓடுவது ஆபத்தானது. நீண்ட தூரங்களுக்கு ஹயரை விட புகையிரதம் அதிகம் பாதுகாப்பானது. ஹயர் ஓடும் சாரதிகள் போதுமான அளவு தூங்கி, ஓய்வெடுத்து வாகனத்தை ஓட்டுகின்றார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.1 point
-
வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!
Kings Rent a Car எனும் பெயரில் ஒரு நிறுவனம் உள்ளது. உங்கள் சர்வதேச சாரதி அனுமதி பத்திரத்தை அனுப்பினால் போதும். விமானநிலையத்தில் இலங்கை சாரதி அனுமதி பத்திரத்துடன் வாகனமும் நிற்கும். இது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என நினைக்கின்றேன். இவர்கள் கட்டணம் நியாயமானது. வாகனத்தின் தரமும் பரவாயில்லை. https://www.kingsrentacar.com/ நான் பல தடவைகள் இவர்களிடம் வாகனத்தை வாடகைக்கு எடுத்துள்ளேன். நல்ல சேவை.1 point
-
கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
இப்படி எத்தனை அக்கினிச்சூளையை தாண்டி வந்தது நம் இனம்! கம்பன் வீட்டுக்கைத்தறியும் கவி பாடுமாம். ஆனால் இங்கு ஒரு இனவழிப்பை சந்தித்த இனத்தின் பிரதிநிதி, ஜானாதிபதி சட்டத்தரணி, அதை நிறுவுவதற்கு ஆதாரம் போதாதாம். அந்த இனத்தின் புதைகுழி என்று அடையாளம் கண்ட பின்னும் முன் கொண்டு சென்று நிஞாயம் தேட திறமையற்ற, நடக்கின்ற அனிஞாயங்களை தட்டிக்கேட்க, சுட்டிக்காட்ட திராணியற்ற, தனது சக உறுப்பினர்களை அதட்டவும் பயமுறுத்தவும் மட்டுமே பயன்படும் வக்கீல். எது நடக்கிறதோ இல்லையோ, அவர் எங்கு போனாலும் அணியும் கோட் சூட் ஆதாரம் அவர் ஒரு திறமையான சட்டத்தரணி என்று காட்டுவதற்கு. அரசியல்வாதியின் எடுபிடி, அரசியல்வாதி போல பேசுவதில்லையா? ஜனாதிபதியின் ஏவல், தன்னால் எதுவும் செய்ய முடியும் என பந்தா காட்ட முடியுமென்றால், ஓடி ஓடி வக்கீலை காக்க வக்காலத்து வாங்கும் கோசானுக்கு சட்டம் தெரிவதில் என்ன சிக்கல்?1 point
-
சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு
1 pointஅட நீங்கள் வேற.....எறும்பு(சிறிலங்கா) ஏறி மரம்(சுவீஸ்) சாய்ந்து விடவா போகுது 😂1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
ஒருபுறம் செம்மணி புதைகுழி, மறுபுறம் புலம்பெயர்ந்தோரின் எழுச்சி, தன்னை விரட்டுகிறது என்பது சிங்களத்தின் கவலை, பயம். எத்தனை நாடுகளை சீரழித்து, அடிமைப்படுத்தி தம்மை வளப்படுத்திக்கொண்ட நாடுகள் இன்று மனிதாபிமானிகள். ஆனால் அடிமை, அடக்குமுறைக்கு எதிராக போராடியவர்கள் வழியில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, தாங்களும் செய்த கொடூரங்களை மறைக்க இப்படி கூச்சல் போடுவது வழமை. இலங்கை அரசாங்கம் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஐ .நா .அமர்வுகளில் போது பல நிறுவனங்களுக்கு மக்களின் பணத்தை வாரியிறைத்து அறிக்கைகள் தாயாரித்தது. அதற்கு யாரும் சாதாரணப்பட்டவர்கள் உடன்படுவது இல்லை. சமூக ஊடகங்கள், மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள், சட்ட விடயத்தை கையாண்டவர்கள், சட்டத்தரணிகள் போன்ற விடயம் தெரிந்தவர்களே. இலங்கை அரசுக்காக இவ்வாறான அறிக்கைகளை தயாரித்து அவர்களை காப்பாற்றி பாராட்டும் பெற வைத்திருக்கிறார்கள். அவர்களே இலங்கை அரசு செய்த அடூழியங்களை நிஞாயப்படுத்துகிறார்கள், கண்டும் காணாததுபோல் இருந்தார்கள், இதற்கு அவர்களுக்கு ஊதியமுமுண்டு.1 point- கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
இலங்கையரின் குடியேற்ற சர்ச்சை; பொது பாதுகாப்பு அமைச்சர் மீது நம்பிக்கையுள்ளதாக கனேடிய பிரதமர் தெரிவிப்பு! கனடாவில் தற்சமயம் சர்ச்சைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree)க்கான ஆதரவினை அந் நாட்டுப் பிரதமர் மார்க் கார்னி வெளிப்படையாக கூறியுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, அமைச்சராக வருவதற்கு முன்பு, கனடாவிற்குள் நுழைவதற்கு கூட்டாட்சி அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை அவர் ஆதரித்தார் என்ற அறிக்கை வெளியானதும் சர்ச்சைகள் எழுந்தது. இந் நிலையிலேயே பிரதமர் மார்க் கார்னி, கேரி ஆனந்தசங்கரி மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நீதி அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளராக ஆனந்தசங்கரி இருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த செந்தூரன் செல்வகுமாரனை நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்ற முடிவை இரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை ஆதரித்து கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார். கனேடிய குடிவரவு அதிகாரிகள் செல்வகுமாரன், தமிழ்ப் புலிகள் என்று அழைக்கப்படும் தீவிரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்று தீர்மானித்த பின்னர் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செவ்வாயன்று (15) குளோபல் நியூஸ் செய்தி வெளியிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கையில் நீண்ட காலமாக சுதந்திரப் போரை நடத்தினர். மேலும் 2006 முதல் கனடாவின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளனர். கனடா எல்லை சேவைகள் நிறுவனம் செல்வகுமாரனை அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்ததன் அடிப்படையில் குடியேறியவராக நிராகரித்திருந்தாலும், ஆனந்தசங்கரி அவர்களின் முடிவை மாற்றுமாறு கேட்டுக் கொண்டார். 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், டொராண்டோவிற்கு குடிபெயர்வதற்கான அந்த நபரின் முயற்சியை ஆதரித்து ஆனந்தசங்கரி கனடா எல்லை சேவைகள் நிறுவனத்துக்கு கடிதங்களை எழுதினார். அதில் மிகவும் அண்மைய கடிதம் நீதித்துறை நாடாளுமன்ற செயலாளராக கேரி ஆனந்தசங்கரி இருந்தபோது எழுதப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில், இது குறித்து புதன்கிழமை (16) எஃகுத் தொழிலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தனது திட்டங்களை வெளியிட்டதன் பின்னர் உரையாற்றிய கனடப் பிரதமர் கார்னி, “பொது பாதுகாப்பு அமைச்சர் அந்த சூழ்நிலையின் விவரங்கள் குறித்து வெளிப்படையாக இருந்தார், மேலும் அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது,” என்று கூறினார். கடந்த மே 13 அன்று கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக ஆனந்தசங்கரியை கார்னி நியமித்திருந்தார். வெள்ளை மாளிகை வர்த்தகப் போரைத் தவிர்க்க, போதைப்பொருள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தலுக்கு எதிராக கனடா தனது எல்லையை பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நம்ப வைக்கும் பொறுப்பு ஆனந்தசங்கரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மாதம் உலகத் தமிழ் இயக்கம் தொடர்பான முடிவுகளில் இருந்து ஆனந்தசங்கரி தன்னை விலக்கிக் கொண்டபோது அவர் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/14395411 point- கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
Gary இதைவிடாது போராட வேண்டும். தனது வாக்காளர் ஒருவருக்கு பா ஊ இப்படியான கடிதங்கள் வழங்குவது மிக சாதராணவிடயம். அல்லாமல் இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. பாஉ வாக செயல்படும் போது அது சட்டமீறல் இல்லை எனில் இப்போதும் இல்லைத்தான். இது இலங்கையின் சதி. ஆங்கிலேய வழி வந்த நாடுகளில் the PM has full confidence என சொல்லிய பலர், அநேகமாக சில வாரங்களுக்குள் வீட்டுக்கு போவதே அதிகம். இவருக்கு இப்படி நிகழாது இருக்க வேண்டும். ஊரில் உள்ள தமிழ் எம்பிகள் கூட்டாக ஒரு ஆதரவு கடிதத்தை கனேடியன் ஹைகொமிசனரிடம் கொடுக்கலாம்.1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 point- ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
பிரசவச் செவிலி கொத்தியாத்தை தி. செல்வமனோகரன் June 10, 2024 | Ezhuna பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது. அறிமுகம் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த மனிதன் தன் வாழ்வில் நடைபெற்ற விரும்பத்தக்க, விரும்பத்தகாத அல்லது நன்மை, தீமையின் பாற்பட்ட அனுபவத்தின் வழி தன்னால் கட்டியமைக்க முடியாத விடயங்களை இயல்பிறந்த ஆற்றல்களாகக் கருதத் தலைப்பட்டான். ஒவ்வொரு இயற்கை நிகழ்வுக்கும் காரணமாக தெய்வங்கள் உருப்பெறத் தொடங்கின. நன்மை செய்யும் தெய்வங்கள், தீமை செய்யும் தெய்வங்கள் என அவை உரைக்கப்பட்டன. நிலத்தெய்வம், ஐம்பூதங்களின் தெய்வம், மரத்தெய்வம், உருவம் உள்ள தெய்வம், உருவம் அற்ற தெய்வம், முன்னோர், அவலச்சாவுற்ற மனிதர், ஆவியாய் இயல்பிறந்த ஆற்றல் பெற்று தெய்வமாதல் அல்லது பேயாதல் எனப் பல்வேறு தெய்வங்களும் நம்பிக்கைகளும் காணப்பட்டன, காணப்படுகின்றன. மக்களின் வாழ்வியலோடு இணைந்து பயணிக்கும் தெய்வங்களும் பேய்களும் பற்றிய உரையாடல்களும் உள்ளன. இந்நாட்டார் தெய்வங்கள், அவற்றின் ஆற்றல்கள் பற்றி பல கதைகள், பாடல்கள் இன்றும் நின்று நிலவி வருகின்றன. ஆதிகாலத்தில் இயல்பிறந்த பல ஆற்றல்களை உடைய இராட்சதன் ஒருவன் வாழ்ந்து வந்ததாகவும், அவன் தன் ஆற்றல்களால் நாட்டார் தெய்வங்கள் பலவற்றை வருத்தி அழித்தான் என்றும், அதனால் அத்தெய்வங்கள் அவனைக் கண்டு அஞ்சி ஒளிந்தன என்றும் கூறப்படுகிறது (சிவபெருமானிடம் எதைத் தான் தொட்டாலும் சாம்பலாகும் வரம் பெற்ற பஸ்மாசுரனைக் கண்டு வரங்கொடுத்த சாமியான சிவபெருமானே ஓடியொழித்த வரலாற்றை இது ஞாபகப்படுத்துகின்றது). சில தெய்வங்கள் மக்களிடம் சென்று அடைக்கலம் பெற்றன. அத்தெய்வங்கள் அவ்வவ் மக்களின் குல தெய்வங்களுமாயின. இவற்றுள் ‘கொத்தி’ எனும் தெய்வம், பிள்ளை பெறும் வீடு ஒன்றினுள் சென்று ஒளித்தது. பிள்ளைப்பேறுக்கு மருத்துவிச்சிக்கு உதவியது. இதனால் மருத்துவிச்சியின் தெய்வமாகவும் பிரசவ தெய்வமாகவும் கொத்தி கருதப்படுகின்றார். கொத்தி கொல் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த சொற்களே கொற்றி, கொற்றவை, கொத்தி எனத் திரிபடைந்திருக்க வேண்டும். தமிழர் மரபில் கொற்றவைக்குத் தனியிடமுண்டு. தமிழரின் வாய்மொழி வழக்காறு காலத்திலிருந்து கொற்றவை வழிபடுதெய்வமாக இருந்து வருகிறாள். இயற்கை நெறிக்கால திணையியலில் பாலை நிலத்தெய்வமாக வீரம் தீரம் நிறைந்த, கொடூரமான தெய்வமாக, பேயாக அவள் சித்திரிக்கப்படுகின்றாள். கலிங்கத்துப்பரணி அவளை பேயாகவே ஆக்கிவிடுகிறது. கொற்றவை, கொற்றி, துர்க்கை, காளி, காடுகாள், சூர், சூரீ, பழையாள், தொல்குடி குமரி எனப் பலவாறு அமையும் ஒரு பொருட்பன்மொழிகளாகவே இவை கருதப்படுகின்றன. தாய்மை மிக்கவள், அவள் மகன் வேலன், காட்டிடை வாழ்பவள், பேய் முழிகளை (கண்கள்) உடையவள், நஞ்சருந்தியும் சாவாதிருப்பவள் என அவள் பலவாறு இலக்கியங்களில் சித்திரிக்கப்படுகின்றாள். ஈழத்துப்புலத்தில் காலனிய காலத்தொடக்கத்தில் போர்த்துக்கேயர் சமய ஒடுக்கு முறைகளை மேற்கொண்டு வழிபாட்டிடங்களை இடித்தழித்தனர். பின் ஆட்சிக்கு வந்த ஒல்லாந்தர் சமயவழிபாடுகளையும் அனுட்டானங்களையும் தடைசெய்தனர். இதற்கு மாற்றீடாக நாட்டார் வழிபாட்டில் கல், சூல, வேல் வழிபாடுகள் முதன்மை பெறத்தொடங்கின. உருவமற்ற அரூபத்தெய்வங்கள் மக்கள் மனங்களை வென்றெடுத்தன. அவற்றுள் பிறப்பு – இறப்பு சார்ந்த பெண் தெய்வமாக கொத்தி முதன்மை பெற்றமை குறிப்பிடத்தக்கது. கொத்தித் தெய்வம் பற்றிய தொல்கதை ஒன்று உண்டு. “அன்று நல்ல மழை, நீர் சூழ்ந்து விட்டது. ஒரு பெண்ணின் பேறுநாள் அன்று. வலியால் அவள் துடிக்கிறாள். ஊர் மருத்துவிச்சிக்கு சொல்லிவிட்டாயிற்று. சிறிது நேரத்தில் மருத்துவிச்சி மட்டும் வருகின்றாள். பிரசவ வேதனையால் பெண் துடிக்கின்றாள். வந்த மருத்துவிச்சி உரிய வகையில் மருத்துவம் பார்க்கின்றாள். குழந்தை சுகமாகப் பிரசவிக்கப்படுகின்றது. தாயும் சேயும் நலம். மருத்துவச்சி புறப்பட்டுவிட்டாள். சிறிது நேரத்தின் பின் மருத்துவிச்சியை அழைக்க சென்றவனும் மருத்துவிச்சியும் வருகிறார்கள். நீர் குறுக்கிட்டதால் வரத் தாமதமாகிவிட்டது எனக்கூற, வீட்டில் இருந்தவர்கள் திகைக்கிறார்கள். அப்படியாயின் ‘உங்களைப் போன்றே ஒரு பெண் வந்து மருத்துவம் பார்த்தாளே’ என்கின்றனர். உண்மை விளங்குகின்றது. அது தெய்வ அருள்; அவள் கொத்தித்தெய்வம் என்கிறாள் மருத்துவிச்சி.” மக்கள், பிள்ளை பெறுதலின் போது அது சுகநலமாக நடைபெறவும் மருத்துவிச்சிகள் பிள்ளைகளை சுகமாகப் பெறச் செய்யவும் – தொழில் நிமித்தமும் கொத்தியை வழிபட்டனர். கொத்தி கொத்தியாச்சியாகவும், கொத்தியாத்தையாகவும் வழிபடப்பட்டார். ஆத்தா, ஆத்தை என்பன தாயைக் குறிக்கும் சொற்கள் (கோத்தை என்ற வழக்கம் யாழ்ப்பாணத்தில் உண்டு). ஆச்சி, அம்மளாச்சி என அம்மனைக் குறிப்பிடுவதும் உண்டு. கொற்றவையை தெய்வீக உணர்வுடன் வணங்கும் அதேவேளை கொடூரமான, அச்ச உணர்வினை ஊட்டுகின்ற தெய்வமாகப் பார்ப்பதைப் போலவே கொத்தியும் வணங்கப்பட்டார். பிள்ளைப்பேறு காலத்தில் தாய்க்கும் அக் குடும்பத்திற்கும் பிள்ளைப்பேறைப் பார்க்கும் மருத்துவிச்சிக்குமான நம்பிக்கைத்தெய்வமே கொத்தி. சமூகத்துக்கும் அத்தெய்வத்துக்குமான உறவுநிலை என்பவற்றின் வழி கொற்றவையில் இருந்து தனித்த ஒரு தெய்வமாகவே இவளைப் பார்க்க முடிகின்றது. கொத்திப் பேய் கொத்தித் தெய்வம், குறித்த காலகட்டத்தின் பின்னர், இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளில், கொத்திப்பேயாகவே பார்க்கப்பட்டாள். அது அவளின் கொடூரப் பண்பை முன்னிறுத்தியதன் விளைவாகவிருக்கலாம். பிற்காலத்தில் கொத்திப்பேய் குழந்தைகளைத் துன்புறுத்தும், நோய்க்குள்ளாக்கும் என்ற கருத்துகளும் காணப்பட்டது. கருத்தரித்த பெண்ணுக்குள் காவலாய், இரத்தப்பெருக்கு ஏற்படாமலும், குறைப்பிரசவம் நிகழாமலும், உடனிருந்து அருள்பவள் கொத்தியாத்தை; குழந்தையை சுகமாகப் பிரசவிக்கச் செய்பவளும் கொத்தியாத்தை; அதே அவள் நலமாகப் பிறந்த குழந்தையின் அழகினில் மயங்கி, குழந்தையின் மேல் ஆசை கொண்டு அதைத் தூக்கிக் கொண்டு ஓடுவதற்குப் பார்ப்பாள். தூக்கிச் செல்ல முடியாத இடத்து, காத்திருந்து காத்திருந்து ‘அலுத்துப் போய்’ (சலிப்பு), ஏமாற்றமுற்று, கோபம் கொண்டு குழந்தையை துன்புறுத்தவோ, நோய்நொடி ஏற்படுத்தவோ முற்படும் போது கொத்திப்பேய் எனப்படுகின்றாள். கொத்திப்பேய் விரட்டல் நவீன வைத்தியசாலைகள் உருவாவதற்கு முன் அவரவர் வீடுகளிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. வீடுகளில் தனியறை அல்லது தனியிடம் ஒதுக்கப்பட்டு அது தூய்மையாகப் பேணப்படும். பிரசவவலி பெண்ணுக்கு ஏற்பட்டவுடன் மருத்துவிச்சியை அப்பெண்ணின் கணவன் அழைத்துவருவான். அவள் பிரசவம் பார்த்து குழந்தை பிறந்தவுடன் அதனைக் குறியீட்டு ரீதியில் குடும்பத்தார்க்கு அல்லது வீட்டுக்கு வெளியில் நிற்பவர்களுக்குத் தெரிவிப்பாள். அதனை: “பன்னீர்க் குடமுடைந்து பாலகன் பிறந்திடவே நன்னீர்பை கொண்டு நயந்து நயந்து எல்லோரும் பெண்பிள்ளையல்ல இது பேருலகில் எங்களுக்கு ஆண் பிள்ளை யென்றே அகமகிழ்ந்து கூரை தட்டி வாயார வாழ்த்தி வரிசையுடன் கோலெறிந்து……” எனும் நாட்டார் பாடல் (கனகரத்தினம், இரா.வை., 1991) உணர்த்தி நிற்கின்றது. இதில் ஆண்பிள்ளை வேண்டிநிற்கும் மனப்பாங்கும், ஆண்பிள்ளை பிறந்தால் கூரையின் மேல் தட்டுதல், கூரையின் மேல் கோலெறிதல் எனும் செயற்பாடுகளின் மூலம் அறிவிக்கும் சம்பிரதாயமும் கூறப்பட்டுள்ளது. பெண்பிள்ளை பிறத்தல் அம்மியில் தட்டுதல், கூரையின் மீது விளக்குமாறு எறிதல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து ஐந்தாம் நாள் மருத்துவிச்சி தாயை முழுக வைப்பாள். குழந்தையைச் சுத்தப்படுத்துவாள். அவ்வீட்டில் சோறு சமைத்து பலவகைக் கறிகள் ஆக்கப்படும். அவற்றோடு ஒடியல் மா, குரக்கன் மா போன்றவற்றில் பிட்டு அவிக்கப்படும். மச்ச உணவு (மீன்கறி, பொரியல்) விசேடமாகச் செய்யப்படும். வடமராட்சிப் பிரதேசத்தில் மேற்சொன்ன உணவு வகைகளோடு கோழிக்கறி, கருவாடு, வெள்ளைக்கறி எனும் மிளகாய்த்தூளிடாத கத்தரிக்காய், வாழைக் காய்கறிகள், முட்டைப் பொரியல் மற்றும் மீனை வாலுடன் பொரித்த பொரியல், சுறாச்சுண்டல், கோழிக்குஞ்சு விறாத்துக்கறி என்பனவும் ஆக்கப்படுகின்றன (இரகுவரன், பா. 2012). இவ்வுணவு வகைகள் யாவற்றையும் மருத்துவிச்சி அல்லது அவளிடத்துக்கு ஒரு வயதான பெண் சுளகில் (முறம்) இட்டு கொத்திக்குப் படையல் வைப்பார். இதேவேளை பிள்ளை பிறந்து முதல் ஐந்து நாளும் தாய்க்கு வழங்கப்பட்ட உணவில் சிறிதை எடுத்து தாய் படுத்திருக்கும் பாயின் கால்மாட்டின் கீழ் வைப்பர். ஆனால் நெடுந்தீவில் இது ‘கொத்தி கிண்டல்’ எனும் தனிச்சடங்காகக் காணப்படுகின்றது. (விஜயரங்கன், நேர்காணல்,2024.06.04) வீட்டுமுற்றத்தின் ஒதுக்குப்புறமாக சிறு கிடங்கு ஒன்று வெட்டப்பட்டு பிரசவித்த தாய்க்கு வழங்கப்படும் உணவில் சிறிதளவை எடுத்து முதலில் கொத்திக்கு என்று இட்ட பின்பே ஒவ்வொரு நாளும் உண்ணக் கொடுக்கும் மரபு காணப்படுகிறது. இந்த உணவையும் ஐந்தாம் நாள் சுளகுப் படையலோடு இணைத்துக் கொள்வர். இது ‘கொத்திப்படையல்’ எனப் பொதுவில் சொல்லப்படுகின்றது. இப்படையலில் சிறப்பாகக் கொத்திக்கு அதிகம் பிடித்த பொருட்களாக வெற்றிலையும் சுருட்டும் படைக்கப்படுகின்றது. இப்படையலின் பின் தாய், சேயை வீட்டின் தலைவாசலுக்கு இட்டுவந்து புதுப்பாயினாலோ புதுச்சேலையாலோ புதுச்சுளகாலோ வசதிக்கேற்ப மூடிவிடுவர். அதன்பின் தென்னம்பாளையைக் கீறிக் கட்டி, தீப்பந்தம் (சூள்) தயாரித்து, அதனைக் கொளுத்தி மறைப்புள் மறைத்துள்ள தாயையும் சேயையும் ஒரு சுற்றுச் சுற்றி வந்தபின் பிரசவம் நிகழ்ந்த இடத்தில் ஒளியூட்டுவர். ‘தாயும் சேயும் சுகம் சுகம்’ என்று பாடியோ கூறியோ வாழ்த்துவர். மருத்துவிச்சி, பின்னர் வீட்டின் மூலை முடக்கெல்லாம்: “ஓடாதே கொத்தி ஒளியாதே கொத்தி பாங்காதே கொத்தி பதுங்காதே கொத்தி கொத்தி புறப்படு கொத்தி புறப்படு” என்ற பாடலையோ “செத்தைக்க பத்தைக்க நில்லாத எங்கட பிள்ளைய எங்கும் எடுக்காத கொத்தியாத்தே நில்லாம வோடு ஊர விட்டோடு கொத்தியாத்தே” என்ற பாடலைப் பாடியபடி படையலையும், பிரசவத்தின் போது பயன்படுத்திய பாய், தலையணை, தாய் குழந்தை பயன்படுத்திய துணிமணிகள் உள்ளிட்டவற்றோடு கொத்திப் பேயையும் (ஐதீகப்படி) அழைத்துக் கொண்டு ஆளரவமில்லா இடத்துக்கு மருத்துவிச்சி போவார். அங்கு உள்ள பால்மரங்களில் அவற்றை வைப்பார். குறிப்பாக ஆலமரத்தில் கொத்தி உறைவதாக நம்புவதால் அம் மரத்தடியையே தேர்வு செய்வர். கொண்டு சென்ற பொருட்கள் யாவற்றையும் அங்கே ‘கழிப்பு’ கழித்துவிட்டு, நெருப்பினையும் (சூள்) அணைத்துவிட்டு, காறி உமிழ் நீரைத் துப்பியபின் மருத்துவிச்சி திரும்புவார். கொண்டு சென்ற நெருப்பை அணைக்காவிட்டால் கொத்தி திரும்பவும் அவ்வீட்டுக்கு வந்து விடுவாள் என்பது ஐதீகம் (அனந்தராஜ்,2022). இதன்பின் மருத்துவிச்சி தன்வீடு திரும்புவார். ஆனால் சில இடங்களில் அவ்வாறில்லை. சடங்கை முடித்துவிட்டு வரும் மருத்துவிச்சி கிணற்றடியில் அல்லது வாசலில் வைக்கப்பட்டுள்ள நீரில் கைகால், முகம் அலம்பிக் காறித்துப்பி வீட்டினுள் வரவேண்டும். அதன் பின்பு மருத்துவிச்சி அவ்வீட்டுக் கூரையினைத் தட்டி ‘தாயும் பிள்ளையும் சுகமா?’ என மூன்று முறை வினாவுவார். வீட்டில் உள்ளவர்கள் ‘தாயும் பிள்ளையும் சுகம் சுகம்’ என்று விடையளிப்பர். அதன்பின் மருத்துவிச்சி நான்கு பக்கமும் மும்மூன்று முறை காறித் துப்புவார். மறைப்பை நீக்கி தாயையும் பிள்ளையையும் வெளியே வரச் சொல்லி வாழ்த்திப் பாடுவார். இத்தோடு மருத்துவிச்சியின் பணி முடிவுற்று, அவருக்குத் தக்க சன்மானம் வழங்கி மகிழ்வுடன் அனுப்பி வைப்பர். அதேவேளை நெடுந்தீவில் பிள்ளை பிறந்து 15 ஆம் நாள் கொத்திக்குக் காவல் செய்து காப்புக்கட்டும் வழக்கம் இருந்துள்ளது. இது ‘பௌமானம் காட்டல்’ எனப்படுகின்றது. கொத்தியை விரட்டும் அல்லது கழித்தல் பாடல்கள் சிலசில வேறுபாடுகளைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. நெடுந்தீவில்: “வீட்டைக் காராதே கொத்தி பாலைக் காராதே கொத்தி படுக்கையைக் காராதே கொத்தி” எனத்தொடங்கி படுக்கையில் தலைமாடு, கால்மாடு, விளக்கு, அம்மி, அடுப்படி, சோத்துப்பானை, காயச் சட்டி, மஞ்சள், உள்ளி, இஞ்சி, எண்ணெய் என்பவற்றைக் காராதே எனக்கூறிக் கூறி இறுதியில், “பிள்ளையைக் காராதே கொத்தி கொத்தி புறப்படு கொத்தி புறப்படு” எனப் பாடி முடிப்பர். யாழ்ப்பாணத்தில்: “செத்தேக்க நிற்கிறேன் என்று சொல்லாத கொத்தியாத்தை பத்தேக்க நிக்கிறேன் என்று சொல்லாத கொத்தியாத்தை” எனச் சாக்குப்போக்குச் சொல்லிப் பாடி வீட்டில், வீட்டுச் சூழலில் தங்கிநிற்கும் கொத்தியாத்தையை விரட்டுவர். கொத்திப் படையலைப் அப்படியே கழிப்பிடத்தில் கொண்டு சென்று கொட்டிவிடும் அல்லது போட்டுவிடும் வழக்கமே காணப்படுகிறது. ஆயினும் சில இடங்களில் படையலில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றிலும் சிறிது சிறிது கிள்ளியெடுத்து மூடுபெட்டியில் கொண்டு சென்று ஆலில் வைக்கும் வழக்கம் காணப்படுகிறது. சடங்கு யாவும் முடிந்த பின் படையலுக்கு நீர் தெளித்துவிட்டு அதனை மூத்தவர்கள் வயதானவர்கள் உண்ணும் வழக்கமும் உண்டு. கிழக்கிலங்கையில் கொத்தி வட இலங்கையைப் போலவே பிரசவ காலத்தில் மருத்துவிச்சி அழைக்கப்படுவாள். அதேபோன்று ஊர்க் குடிமகனான சலவைத் தொழிலாளிக்குப் பிரசவம் அறிவிக்கப்படும். அவனது வீட்டுப்பெண் மாத்துச்சேலை (மாற்றுச்சேலை) கொண்டு வருவார். இது அவரது உரிமையாகக் கருதப்படுகிறது. இன்றும் இந்த வழக்கம் மட்டக்களப்பில் உள்ளது. (மேகலா,சி.,2022) அக்கரைப்பற்று, ஆரையம்பதி போன்ற பிரதேசங்களில் முன்பு கொத்தி வழிபாடு காணப்பட்டதாகவும் இப்போது வழக்கொழிந்து விட்டதாகவும் (நேர்காணல், அபிசனா, களுவாஞ்சிக்குடி) அறிய முடிகின்றது. ஆனால் கொத்தியாத்தியை ஒத்த தெய்வமாக ‘குத்துக்கிழவி’ காணப்படுகிறார். அம்மன் ஆலயச் சடங்குகளில் கலையாடுகின்ற தேவாதியானவர் குத்துக்கிழவியாக உருமாறி அலங்கரித்து வந்து, சேலை மறைப்பில் மருந்தரைத்து, வந்திருக்கும் பக்தருக்கு வழங்குவார். அம் மருந்து தீரா நோயையும் தீர்க்கும் என்பது நம்பிக்கை. பார்வதி தேவி சனாதன முனிவர்களுக்கு அவர்கள் கேட்ட வரத்திற்கமைய கொடுத்துவிட்டு, பின் கிழவி ரூபத்தில் குடிசையொன்றில் காத்திருந்து, அவ்வழி வந்த இம் முனிவருக்கு நீரைக் கொடுத்துவிட்டு சிவனை மீட்டதாகவும், அவரே குத்துக்கிழவி ஆனதாகவும் கூறப்படுகிறது. பிரசவம் பார்த்துவிட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றுவிடும் என்ற கொத்தியின் கதையும் இதற்குச் சமமாக உள்ளது. இதேவேளை அக்கரைப்பற்றில் நூறு வருடங்களுக்கு முன், ‘குத்துக்கரையாக்கன்’ என்ற பேய் குழந்தை பிறந்து பன்னிரு நாட்களுக்குள் தூக்கிச் சென்று விடும் என்றும் அல்லது நோய் நொடியைக் கொடுக்கும் என்றும் கருதி ‘கடப்படியில்’ (தாய்பிள்ளை இருக்கும் அறை வாசல்) வேப்பிலை, இரும்பாலான பொருட்களைக் கட்டிவிடுவர். பூசாரியிடம் நீரோதிப் பெற்று காவலுக்கு வைப்பர். தற்போது இப்பேயின் பெயர் வழக்கற்றுப் போய், ‘காத்தணவு’ என்றே அழைக்கப்பட்டு வருகிறது. ஈழத்தில் கொத்தி வழிபாட்டிடங்கள் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் மற்றும் தீவுப்பகுதிகளில் கொத்தி வழிபாடு காணப்பட்டுள்ளது. ஏலவே கூறியது போல கிழக்கிலங்கையில் அக்கரைப்பற்று, ஆரையம்பதி போன்ற இடங்களில் முன்பு கொத்தி வழிபாடு காணப்பட்டுள்ளது. மலையகம், திருகோணமலை போன்ற இடங்களில் கொத்தி வழிபாடு இருந்ததா என்பதை அறிய முடியவில்லை. கொத்தித் தெய்வத்துக்கோ அன்றி பேய்க்கோ தனி உருவம் எதுவும் இல்லை. அது பெண்ணாகவே கூறப்படுகிறது. அக்கறைப்பற்றில் ‘குத்துக்கரையாக்கன்’ எனும் தெய்வப்பெயர் ஆண் பெயராகவும், பிற்காலத்தில் வழங்கும் ‘காத்தணவு’ எனும் சொல் (நேர்காணல் – சந்தோசனா, அக்கரைப்பற்று) பொதுப்பெயராகவும் உள்ளது. கொத்தி ‘பால்’ மரங்களில் உறைகின்றாள் என்பதே ஐதீகம். குறிப்பாக ஆலமரங்களில் அவள் விரும்பி உறைவதாகக் கூறப்படுகிறது. கொத்தி உறையும் ‘ஆல்’ கொத்தியால் எனப்படுகிறது. வடமராட்சியில் கொத்தியாலடி என ஒரு இடம் உண்டு. சுன்னாகத்தில் ‘றொட்டியாலடி’ எனுமிடமுண்டு. அதன் அர்த்தத்தை நேர்காணலில் கேட்டபோது யாவரும் தெரியாது என்றே கூறினர். கொத்தியாலடி என்பதே இவ்வாறு திரிபடைந்திருக்கலாம். கொத்தி சென்ற வீதிகள், இருந்த இடங்கள் என்பன இன்றும் கொத்தியொழுங்கை, கொத்தித்தெரு எனப்படுகின்றன. பொதுவாக வீட்டில் இருண்ட மூலை, ஆட்கள் அதிகம் புழங்காத இடம் கொத்தி மூலை எனப்படுகிறது. அதேபோல் ஆளரவமற்ற அமைதியான இடங்கள் ஊர் வழக்கில் கொத்திமூலை எனப்படுகின்றது. அது பய உணர்வின் அடிப்படையில் அமைந்ததாகும். கொத்திக்கான வழிபாடு பொதுவில் பிள்ளைப்பேறு நடந்த வீடுகளிலேயே நடைபெறுகின்றது. ஆயினும் வடமராட்சி, கரவெட்டிக்கு வடக்கே ஒரு கொத்தியார் கோயிலும், நெடுந்தீவில் குருக்கள் மடத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் மூன்றாம் வட்டாரத்தில் ஒரு கொத்தியார் கோயிலும் காணப்படுகின்றன. இதில் கரவெட்டிக் கோயிலை எம்மால் அடையாளப்படுத்த முடியவில்லை. வழிபாட்டு முறைகள் பிரசவ வீடுகளில் குழந்தை பிறந்து ஐந்தாம்நாள்; சோறு, பிட்டு என்பவற்றோடு மரக்கறி, மச்சம், மாமிசம் என்பன படைத்து வழிபடப்பட்டுப் பின் கொத்தியைக் கழித்து ஆளரவமற்ற பொது இடத்தில், ஆலமரத்தில் விட்டுவருதல் எனும் சடங்கு நடைபெறும். இச்சடங்கு பரியெரித்தல் அல்லது மருக்கைச்சடங்கு எனச் சுட்டப்படுகிறது. நெடுந்தீவு கொத்தியம்மன் கோயிலில் பூசாரிகளாக உள்ளவர்கள் ‘உடுக்கர் பரம்பரை’ எனக் கூறப்படுகின்றனர். இவ்வாலயக் கொத்தியம்மன் சூலவடிவிலேயே வழிபடப்படுகிறாள். இங்கு சித்திரா பௌர்ணமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் சடங்குகளில் பூரண கும்பம் வைத்தல், நிறைநாழி வைத்தல், சரக்குப் பொருட்கள் (பத்தியத்துக்கானது) வைத்துப் பாடல் பாடுதல் ஆகியன இடம்பெறும். பின் ஆலய பரிபாலனத்தவர்களால் நாயகப் பானையும் மற்றவர்களால் தனித்தனிப் பானைகளும் வைத்து பொங்கல் பொங்கப்படும். அன்று பந்தலமைத்து சித்திரபுத்திரனார் கதை, அபிராமி கதை போன்றன படிக்கப்படுகின்றன. தயிரடியன் கூட்டத்தினர் மாதா மாதம் மாறிமாறி விளக்கேற்றுகின்றனர். இங்கு ‘கல் போட்டு’ வணங்கும் முறை காணப்படுகின்றது. இது சாத்தானார் வழிபாட்டை ஒத்துள்ளது. மேலும் பிறந்த குழந்தையை முற்பத்தோராம் நாள் கோயிலில் கிடத்தி, பொங்கல் பொங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் காணப்படுகின்றது. சமகாலப் பயில்வு இன்று வீடுகளில் பிரசவங்கள் நடைபெறுவதில்லை. அதனால் ஊர் மருத்துவிச்சிகளும் இல்லாது போயினர். கொத்தி வழிபாடும் வழக்கிழந்து காணப்படுகின்றது. பேய்கள் பற்றிய நம்பிக்கையும் வலுவற்று வருகிறது. மரங்களின் கீழ் மயங்குதல், பயமுறுத்தும் ஓலம் முதலியனவற்றுக்கு அறிவியல் விளக்கங்கள் கூறப்படுகின்றன. முன்பே கொத்திக்கு கோயில்கள் இல்லை. நெடுந்தீவுக் கோயிலில் சித்திராப் பௌர்ணமி பூசைக்கு சமஸ்கிருத மந்திரம் சொல்லும் குருக்களை அழைக்கும் வழக்கம் உருவாகிவிட்டது. ஆயினும் கொத்தி, நாட்டார் நம்பிக்கைகளுக்கு உரிய தெய்வமாகவும் பேயாகவுமே கருதப்படுகின்றாள். மேன்னிலையாக்கம் பெறவில்லை; மாறாக செல்வாக்கு இழந்து வருகின்றாள். அவளின் பெயரிலான சொற்கள், வழக்காறுகள் தமிழில், தமிழ்ப் பண்பாட்டில் வழக்கொழிந்து வருகின்றன. நிறைவுரை பிறப்பு, இறப்புச் சார்ந்த மருத்துவ வசதிகள் குறைந்த காலத்தில் கடவுளை மட்டுமே நம்பிய தமிழ்ச் சமூகம் இருந்தது. அது கொத்தியை ஆத்தையாக வணங்கியது. பேயாக விரட்டியது; கழிப்புக் கழித்தது. இதில் உள்ள சமூகச் சிக்கலை நாம் முடிச்சவிழ்க்கலாம். பிரசவ காலத்தில் தாயாகக் கொண்டாடி, பின்பு பேயாக்கி விரட்டும் சடங்கு கொத்திக்கு நடைபெற்றது. அதேபோல வீடு குடிபுகுதல் போன்ற பிரவேசச் சடங்கில் வீட்டு வேலைகள் முடிந்து குடி புகுவதற்கு முதல்நாள், தச்சுப்பொங்கல் பொங்கி ‘தச்சன் காளி விரட்டல்’ நடைபெறும். இரு சடங்கிலும் உரியவர் படையல் படைப்பார். அவரே கொண்டு செல்வார். தகுந்த சன்மானம் வழங்கப்படும். அதன் பின் அவர்கள் வீட்டினுள் வருவதில்லை; வரமுடியாது. பிரசவத்தோடு தொடர்புறும் மருத்துவிச்சியும், மாத்துச்சேலை கொண்டுவரும் குடிமையும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். தீட்டுக்காலத்தில் தேவையின் பொருட்டு வீட்டினுள் விடப்பட்ட இவர்கள், தேவை நிறைவேற்றப்பட்ட பின் கொத்திப்பேயோடு சேர்ந்து வீட்டினுள் வராது தடுக்கப்பட்ட சமூக வரலாற்றின் ஆவணமாக கொத்தியாத்தை திகழ்கின்றாள். கொத்தி வழிபாட்டின் வீழ்ச்சியை சாதியத்தின் வீழ்ச்சியாகவும் கருதலாம். மனித வாழ்வியலில் நம்பிக்கைகள், வழக்காறுகள் உருவாவதும், தேய்வடைவதும் தவிர்க்க முடியாததுதான். தொடரும். https://www.ezhunaonline.com/god-of-obstetrician-koththi/1 point- ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
நன்மையின் நம்பிக்கையுரு கிங்கிலியர் தி. செல்வமனோகரன் பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது. அறிமுகம் நாட்டுப்புறவியலின் இயங்கு தளங்களில் ஒன்றாக மந்திரம் காணப்படுகின்றது. இறையியல், சமயவியல் பற்றிய கருத்தாக்கத்திற்கு சமமாகவும் சமாந்தரமாகவும் மந்திரம் முதன்மை பெறுகின்றது. ஆவியுலக நம்பிக்கை, முன்னோர் வழிபாடு போன்றன தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை மந்திரம், மனிதர்களிடம் – அந்நம்பிக்கைகளை உடைய இனக் குழுக்களிடம் செல்வாக்குற்றுள்ளது. ‘இயற்கையை, அதன் அதீத ஆற்றல்களைப் புரிந்து கொள்ள முடியாத ஆதிமனிதர்கள், அதன் மீதான திகைப்பு, பயம் என்பவற்றிலிருந்து விடுபட்டு அதனைக் கட்டுப்படுத்தவும் தனக்குத் தேவையான பயன்களைப் பெற்றுக் கொள்ளவும் உருவாக்கிய ஒன்றே மந்திரம்’ எனப்படுகின்றது. இது ஒலி ‘வழி’ நிகழ்த்தப்படுவது. கற்பனை ஒன்றைத் தோற்றுவிப்பதன் மூலம் உண்மையை – இயற்கையைக் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தின் வழி மந்திரம் உருவாக்கம் பெற்றது. அறிவும் திறனும் அதன் வழி தொழில்நுட்பமும் மேலோங்காத காலத்தில் உருவான ‘கற்பனையான தொழில்நுட்பம் (Thomson, Geroge, 1980:4) என மந்திரம் விளங்கப்படுகிறது. இது சமயத்துக்கும் முன் உருப் பெற்றதாகும். ஒரு விருப்ப நிறைவேற்றுக் கற்பனையான மந்திரம், மனிதர் தம் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் அடிப்படையாகக் கொண்ட சமயத்துக்கு முன்னோடியாகிறது. அதேவேளை மந்திரம், இயற்கை நிகழ்ச்சிகளை உற்று நோக்கியதன் விளைவு என்றும் கூறப்படுகின்றது. மந்திரமானது விருப்பு, சொல், செயல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. விருப்பின் அடிப்படையிலேயே மந்திரம் (சொல்) ஓதப்பட்டு செயல்நிலைப் (சடங்கு) படுத்தப்படுகின்றது. மந்திரங்கள் ஒத்தது ஒத்ததை உருவாக்குவது; ஒரு தடவை தொடர்பு கொண்டது எப்போதும் தொடர்பைக் கொண்டிருக்கும் எனக் (frazer 1976:52) கருதப்படுகின்றது. முதல்வகை மந்திரக் கருத்தியல் ஒத்த மந்திரம், தொத்து மந்திரம் என வகைப்படுத்தப்படுகிறது. திருமண வீட்டில் விதவையை முன்னிறுத்தாமை, ஒட்டி இருக்கும் இரட்டை வாழைப்பழங்களை உண்பவள் இரணைப் பிள்ளைகளைப் பெறுவாள் போன்றன இதற்கு உதாரணங்கள். கன்று ஈன்ற பசு மாட்டின் இளங்கொடியை பால் மரத்தில் (ஆல், கிளுவை, அத்தி..) கட்டுவதனால் பசு அதீதமாகப் பால் சுரக்கும் என்பதை தொத்து மந்திரத்திற்கு எடுத்துக்காட்டாக உரைப்பர். இம்மந்திரங்கள், மந்திரங்களின் வழி நிகழ்த்தப்படும் சடங்குகள் என்பவற்றின் நோக்கை அடிப்படையாகக் கொண்டு அவற்றைத் தூய மந்திரம் ( நன்மை பயப்பது), தீய மந்திரம் (தீமை விளைப்பது) என இரண்டாகப் பகுப்பர். தீய மந்திரங்களுக்கு உதாரணமாக பில்லி, சூனியம், வசியம் முதலானவற்றைக் கூறலாம். தூய மந்திரங்களோ மருத்துவம், யுத்தம், துன்ப நீக்கம் முதலியவற்றுக்கு உதவுவன. இச்சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் தெய்வங்களை, நன்மை செய்யும் தெய்வங்கள் அல்லது தீமையிலிருந்து காக்கும் தெய்வங்கள், தீமைக்கான தெய்வங்கள், நன்மைக்கும் தீமைக்குமாகப் பயன்படுத்தப்படும் தெய்வங்கள் என மூன்று வகையினதாக எடுத்தாளலாம். பில்லி, சூனியம், வசியம் போன்றன தீய மந்திரச் சடங்குகளிலிருந்து மக்களைக் காக்கும் தெய்வமாகவே கிங்கிலியர் உருநிலைப்படுத்தப்படுகிறார். கிங்கிலியர் கிங்கிலியர் பற்றிய ஆய்வுகள் தமிழ்ச் சூழலில் பெரிதும் முன்னெடுக்கப்படவில்லை. இத் தெய்வம் பற்றி பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை மட்டுமே நான்கு வரிகளாலான பந்தியில் (1996:56) குறிப்பிட்டுள்ளார். மாந்திரீகத் தொடர்புபட்ட தெய்வமாக இருத்தல் இதற்குக் காரணமாக இருக்கவும் கூடும். கிங்கிலியர் பற்றிய கதையாடல்கள் சில உண்டு. தங்களுக்கு நன்மை செய்யும் மூதாதையாகக் கிங்கிலி கருதப்படுகிறார். கருட புராணம் உள்ளிட்டவை, மரணத்துக்கு முன்பும் பின்புமாக உயிர்களை அச்சுறுத்தவும், பாதுகாத்து அன்பினைக் காட்டவும் இறந்த பின் அழைத்துச் செல்லவும் என மூன்று நபர்கள் வருகிறார்கள்; அவர்கள் யமதூதர்கள்; அவர்களே ‘கிங்கிரர்கள்’ என்கின்றன. கிங்கிரர் என்ற சொல்லே கிங்கிலி – கிங்கிலியர் என மருவியிருக்க வேண்டும். ஆனால் யமகிங்கிரர்கள் பாவஞ் செய்பவர்களையே அழைத்துச் செல்வர் என்றும் நன்மை புரிந்தவர்களை இறைத்தூதர்கள் – தேவர்களே அழைத்துச் செல்வர் என்ற மாற்றுக் கருத்தும் உண்டு. ‘குங்குலியம்’ துர்மணத்தை நீக்கி நறுமணத்தை தருவது போல தீமைகளை நீக்கி நன்மை பயப்பவர் குங்கிலியர். அச்சொல்லே மருவி கிங்கிலியர் என்பதாயிற்று என்பர். ஈழத்தில் கிங்கிலியர் வழிபாட்டிடங்கள் ஈழத்தில் தமிழர் வாழும் பாகங்களில் கிங்கிலியர் வழிபாடு காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் சங்கானை, திருநெல்வேலி, வசாவிளான், இருபாலை உள்ளிட்ட பிரதேசங்களிலும் கிளிநொச்சியில் முரசுமோட்டையிலும் இவ்வழிபாடு இருப்பதனை கள ஆய்வினூடாக எம்மால் உறுதிப்படுத்த முடிகிறது. பலாலி விமான நிலைய எல்லையில் இருந்த கிங்கிலியரையே தொண்ணூறு இடம்பெயர்வின் பின் வசாவிளானில் வைத்துக் வணங்குவதாக அவர்கள் கூறுகிறார்கள். யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் தனிக் காணிகளிலும், வீட்டு வளவினுள்ளும் சிறு கோயில் அமைத்தோ வெளியில் வைத்தோ வழிபடும் மரபே காணப்படுகின்றது. ஆனால் மட்டக்களப்பில் கிராமியக் கோயில்களில் பரிவாரமாக வைத்து வழிபடும் மரபும் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது. இதற்கு உதாரணமாக எருவில் கண்ணகையம்மன் ஆலயத்தில் கிங்கிலியர் பரிவாரத் தெய்வமாக இருப்பதைக் குறிப்பிட முடியும். திருகோணமலை ஆலங்கேணியில் தனிக்கோயில் உண்டு. பில்லி சூனியமும் கிங்கிலியர் பற்றிய கதைகளும் மாந்திரிகம் என்பது ஒரு மனிதன் தன் சகமனிதனை தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஆட்டுவிப்பதாகவோ அழிப்பதாகவோதான் கருதப்படுகிறது. பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதெல்லாம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் உத்திகள். காலம்காலமாய் மாந்திரிகம் என்பது அமானுசம் நிறைந்த ஒரு கலையாகவே கருதப்படுகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும், நம்பிக்கை என்கிற பெயரில்; பொருளையும் நிம்மதியையும் அழிக்கிறது. மந்திர சக்தி அல்லது சித்தி பெற்ற ஒருவர் ஒரு சாதாரண மனிதனை உடல் ரீதியிலும் மன ரீதியிலும் செயல் ரீதியிலும் ஈர்த்து கட்டுப்படுத்துவதே பில்லி ஆகும். அதாவது பில்லி மந்திரத்தால் ஒருவனை மனநோயாளியாக ஆக்கிவிட முடியும். நல்ல ஆரோக்கியமுள்ளவரை நோயாளியாக படுக்கையில் தள்ளிவிடவும் முடியும் எனப்படுகிறது. சூன்யம் என்றால் வெறுமை என்பது பொருள். சூன்ய மந்திரத்தால் எவரை வேண்டுமானாலும் அழித்து விடலாம், கைகால்களை முடக்கி விடலாம், சம்மந்தப்பட்டவருக்குத் தெரியாமலே வயிற்றில் வசிய மூலிகைகளைச் செலுத்திவிடலாம், கருவில் உள்ள குழந்தையைக் கூட கொன்றுவிடலாம் எனப்படுகிறது. மந்திரசக்தியால் மந்திரவாதியின் கட்டுபாட்டுக்குள் இருக்கின்ற சில தீய சக்திகளை எதிரிகளின் மீது ஏவிவிட்டு அவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவதே ஏவல் மந்திரத்தின் முக்கிய பண்பாகும். இந்த மந்திரத்தின் மூலம் ஒருவரை முற்றிலுமாக கைவசப்படுத்தி அவரை ஏவலாளாக ஆக்கிவிடமுடியும். தனது சொந்த விருப்பத்தின்படி செயற்பட்டு, இலாபத்தையும் வெற்றிகளையும் அநுபவித்து வரும் ஒருவனை மந்திரங்களால் தடுத்து அவன் மனதை பல வழிகளில் திசை திருப்பிவிட்டு கீழ் நிலைக்குத் தள்ளுவதே செய்வினையின் முக்கிய செயலாகும். மந்திர வழியிலோ மருத்து வழியிலோ ஒரு பொருளை ஆடையில், உடம்பில் தடவி விட்டு அல்லது உண்ணக் கொடுத்து அவர்களை வசியப்படுத்துவதே வைப்பு என்பதன் அர்த்தமாகும். இவ்வாறான விடயங்களை எழுதுவது மூடநம்பிக்கைகளை பரப்புவதாகக கருதப்பட்டாலும் இவற்றோடு ஒட்டி நிகழ்த்தப்பட்ட சடங்குகள், வழிபடப்பட்ட தெய்வங்கள் என்பன நாட்டார் வழிபாட்டில் முதன்மைப் பெறுவதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். “ஆட்டின் பித்தெடுப்பேன் அடியடியாய் மண்ணெடுப்பேன் கொண்டை மயிர் எடுப்பேன் – மச்சி உன்ன கொண்டு வர என் காலடிக்கு” “உள்ளான் குருவியின்ர உள்ளிருக்கும் பித்தெடுத்து சேர்த்தி மருந்தரைத்து மச்சி உன்ன சேர வைப்பேன் என் காலடிக்கு” “கரையாக்கன் பூவாயின்றி கை வசமாய் கொண்டு வந்து வைரவனை முன் நிறுத்தி உன்ன வரவழைத்தன் காலடிக்கு” “போறாக வன்னியனார் பொத்துவிலப் பார்ப்பமெண்டு – என்ன மருந்துகளை போட்டு மயக்குறாளோ தேவடியாள்” (பாலசுந்தரம், இ.,1979:418-420) எனும் நாட்டார் பாடல்வரிகளின் ஊடாக மட்டக்களப்புப் பிராந்திய மக்களின் மந்திரங்கள், சடங்குகள் தொடர்பான நம்பிக்கைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தீயமந்திரங்களின் வழி தமக்கு விருப்பமில்லாத, பகையான மனிதர்களை அவர்களது குடும்பங்களைத் துன்பப்படுத்தவும், சீரழிக்கவும் செய்யப்படுகின்ற பில்லி, சூனியம், செய்வினை போன்றன பெருந்துயரங்களை, தொடர் மரணங்களைத் தரவல்லன. இவை, குறித்த வீட்டில் இருந்து அல்லது காணியிலிருந்து எடுக்கப்பட்டதன் பின், கிங்கிலியரை சூலத்திலோ கல்லிலோ வாலாயம் பண்ணி காணியின் ஒரு சிறுபகுதியைப் புனிதமாக்கி அங்கு அத்தெய்வத்தை நிலைநிறுத்துவர். பிற்காலத்தில், இயந்திரத்தட்டில் ஆவாகனம் செய்து பூஜையறையில் வைத்து வழிபடும் முறையே முதன்மை பெற்று இன்றுவரை காணப்படுகின்றது. நம்பிக்கை தரும் நம்பிக்கையுருவாகக் கிங்கிலியர் நம்பப்படுகிறார். அவர் தீமையிலிருந்து காப்பவர். இது தொடர்பான கதைகளை களவாய்வின் போது கேட்க முடிந்தது. கந்தையா பூரணம் என்பவர் வீட்டில், அவர்களுடைய உறவினரால் செய்வினை செய்யப்பட்டது என்றும், அதனால் ஐம்பத்தொரு நாட்களுக்குள் கந்தையாவும் அவருடைய இரு மகள்களும் மரணித்தனர் என்றும், அதன் பின் சாத்திரியார் வருகை தந்து தலைமயிர் உள்ளிட்ட பில்லி – சூனிய – செய்வினைப் பொருட்களை வீட்டு வாயிலிலிருந்து எடுத்தார் என்றும், வாயில்லா ஜீவன் ஒன்றின் இறப்போடு இவை வலுவிழக்கும் என்று கூறி வெள்ளை நிறக் கல் ஒன்றில் கிங்கிலியரை ஆவாகனம் செய்து படலை (gate) அருகே வைத்துவிட்டு விளக்கேற்றி வணங்குமாறு கூறினார் என்றும், அதன் பின்பு வீடு அமைதி கண்டது என்றும் அறிய முடிந்தது. தன் கணவன் மரணத்துக்கு அருகிருப்பவர்கள் செய்த பில்லி, சூனியமே காரணம் என நம்பிய தங்கம்மா சாத்திரியின் உதவியோடு அதனைத் தேடி எடுத்ததாகவும் பின் கிங்கிலியரை வைத்து வழிபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. பில்லி, சூனியத்தால் வயல் விளைச்சலின்றி பாழடைகிறது என நம்பிய கிளிநொச்சி முரசுமோட்டை வயல்காரர் ஒருவர் தனது வயலின் நடுவே கிங்கிலியரை வைத்து வழிபட்டு வருகின்றார். இந்தக் கதைகள் பில்லி, சூனியம், வசியம் முதலான தீமைசார் நடத்தைகள் பற்றிய நம்பிக்கைகள் ஆழ இவர்களிடம் வேரூன்றி இருப்பதைக் காட்டுகிறது. அந்தத் தீமைகளை விலக்கவல்ல தெய்வமாக கிங்கிலியரை இவர்கள் முழுமையாக நம்புவதையும் அவதானிக்க முடிகிறது. மனித இனக்குழுவின் வரலாற்றுத் தொடக்க காலத்தில் இருந்து இன்று வரை, இவ்வாறான நம்பிக்கைகள் மக்களிடம் நிலவிவருகின்றன. இவை அறிவியலுக்கு ஒவ்வாதவை என அறிஞர்கள் வாதிடவும் எள்ளல் செய்யவும் கூடும். ஆயினும் நிதர்சனத்தில் மக்களிடையே இந்நம்பிக்கைகள் இன்றும் நிலவி வருகின்றன என்பதே உண்மை. திருகோணமலை – ஆலங்கேணி, கிண்ணியா பகுதியில் கிங்கிலியருக்குக் கோயில் அமைத்த மார்க்கண்டு இராசமாணிக்கம் பன்னீர்செல்வம் அவர்கள், குளக்கோட்டன் கந்தளாய்க் குளத்தை கட்டியபோது அதற்கு காவல் தெய்வமாக கிங்கிலியரை ஸ்தாபித்தான் என்றும் தான் சிறு வயதில் மாடு மேய்க்கச் சென்றபோது அத்தெய்வம் தன்னில் ஏறியதாகவும் பின்பு தான் இந்த கோயிலை அமைத்ததாகவும் கூறுகிறார். அங்கு பில்லி, சூனியம் பற்றிய கருத்தாடல் இல்லை. மக்கள் இடர் களையும் தெய்வமாகவே கிங்கிலியர் கருதப்படுகிறார். பீடத்தில் ஒரு கல் வைத்து வழிபடப்படுகிறது. வடமராட்சியில் துரும்பர் குளத்தருகே கிங்கிலியர் வழிபாடு இருந்ததாகவும் அது துரும்பர் தெய்வம் எனக் கூறப்பட்டதாகவும் ஊரவர்கள் சிலர் அடையாளப்படுத்தினும், கிங்கிலியர் சாதியத்துக்கு அப்பாலான தீய மந்திரச் சடங்குகளால் பாதிக்கப்பட்ட மக்களின் தெய்வமாக இருப்பதையே காணமுடிகின்றது. கிங்கிலியர் கல்லாலான தெய்வமாகக் காணப்பட்டாலும் சிற்சில இடங்களில் சூலத்திலும் வைத்து வழிபடப்படுகிறார். அவருக்கென ஒரு உருவம் எங்கும் கூறப்படவில்லை. ஆனால் சிற்சில கதைகள் கூறப்படுகின்றன. தன்னுடைய அம்மம்மாவின் இளமைக் காலத்தில் அவர் தன் ஆச்சியுடன் (அம்மா) அதிகாலையில் தங்களது பனங்காணியில் பழம் பொறுக்கச் செல்வதாகவும் ஒரு நாள் முழு நிலவின் ஒளியினால் நேரம் தெரியாது மிக வேளைக்குச் சென்றதாகவும் அப்போது ஒரு நிழல் ஆச்சிக்குப் பின்சென்ற தனது அம்மம்மாவைக் கிளித்தட்டு மறிப்பது போல மறித்ததாகவும் அதனைக் கண்ட ஆச்சி அவரை ஏசிக் கூப்பிட்டதாகவும் அந்த நிழல் உடனே விலகி வழிவிட்டதாகவும் அதன் பின்பு இருவரும் கோயில் வாசலில் இருந்து விட்டு பின்பு விடியற்பொழுதில் பனம்பழம் பொறுக்கிச் சென்றதாகவும் கூறப்பட்டது (நேர்காணல் : திருமதி.சி. செல்வமனோகரி) சாமப்பொழுதுகளில் வெள்ளை வேட்டி, நீண்ட சால்வை, தோளில் தொங்க வெண்மையான சுருள் முடியும் தாடியும் கையில் பிரம்பும் கொண்டு காற்சதங்கைச் சத்தம் கேட்க, வீதியால் காவலுக்கு கிங்கிலியர் நடந்து போவாராம் (நேர்காணல்: திருமதி.ச. இராஜேஸ்வரி) யமதூதர்களான கிங்கிரர்களின் கருமைத் தோற்றத்துக்கு மாறாக வெண்மை இங்கு சுட்டப்படுவது கவனத்திற்குரியது. வெண்மை பொதுவில் தூய்மையின் – நல்லதன் குறியீடாகவே கருதப்படுகின்றது. இங்கு தோற்றப்பொலிவு சொல்லப்பட்டாலும் ‘உருவவியல்’ முன்னிறுத்தப்படவில்லை. அனைத்துத் தகவல் வழங்கிகளினாலும் கிங்கிலியர் அருவமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வழிபாட்டு முறை கிங்கிலியரை வீடுகளில் வைத்து ஆதரிப்பவர்கள் பொதுவில் பொங்கல் பொங்கி மடை பரவுகின்றனர். சில இடங்களில் கோழி, ஆடு பலியிடப்படுவதும் மச்சம் சமைத்து படைக்கப்படுவதாகவும் அறிய முடிகிறது. திருகோணமலை ஆலங்கேணி கிங்கிலியர் கோயிலில் வைகாசி அமாவாசை தோறும் மழை மடை பரவி வழிபடுவதோடு கருத்தக் கடா ஆடு பலியிடப்படுவதையும் அறிய முடிகின்றது. மந்திர சித்திக்காகவும் காரிய சித்திக்காகவும் அட்சரம் போட்டு கிங்கிலியரை அதிலே ஆவாகணம் செய்து அந்த இயந்திரத்தகட்டை வெற்றிலையிலே வைத்து இரு கைகளாலும் ஏந்தி சுடலையில் நின்றும் தமக்கு ஏதுவான இடங்களில் நின்றும் உருச் செபிப்பர் (கணபதிப்பிள்ளை, க., 1996:53). இதன் ஊடாக தமது எண்ணம் சித்திக்கும் என்பது அவரது நம்பிக்கை. இத்தெய்வம் தம்மை துயரங்களில் இருந்து காக்கும் என்ற நம்பிக்கையின் வழி நேர்த்திக்கடன் வைப்பதும் பொங்கல் இடுவதும் நடைபெற்று வருகின்றது. சமகாலப் பயில்வு இன்று பில்லி, சூனியம், வசியம் முதலான தீய மந்திரங்கள், சடங்குகள் பற்றிய நம்பிக்கைகள் வலுவிழந்து வருகின்றன. அவற்றை உரையாடுவதும் எழுதுவதும் அநாகரிகமானதாக கருதப்படுகின்றது. அது படிப்பறிவற்ற காட்டுமிராண்டிகளின் நம்பிக்கை என்று கருதப்படுகின்றது. அதற்குச் சமாந்தரமாக துன்புற்றவர்களிடம் இவை பற்றிய நம்பிக்கைகள் தொடர்கதைகளாக காணப்பட்டுவருகின்றன. இணையத்தில் கிங்கிலியர் என தட்டச்சு செய்யும் இடத்து கிங்கிலியர் மந்திரம் – இயந்திரம் பற்றிய குறிப்புகள், மந்திரங்கள், இயந்திரத் தகடுகள், அவற்றின் விலைகள், அசைவப் பலியுடன் படையல் எனும் பெறுபேறுகள் அதிகம் கிடைப்பதே இதற்கு உதாரணம். இவை நவீன சமய ‘வர்த்தக’ முறைகளாக, இந்நம்பிக்கையின் வீழாத் தொடர்ச்சியின் சான்றுகளாகக் காணப்படுகின்றன. ஆனால் கிங்கிலியர் வழிபாடு மிகவும் வலுவிழந்த நிலையிலேயே காணப்படுகின்றது. சாதாரண மக்களுக்கு கிங்கிலியர் பற்றித் தெரியாது இருக்கின்றமையை களவாய்வின் வழி அவதானிக்க முடிந்தது. இதற்கு மூன்று காரணங்களை பிரதானமானவையாகச் சுட்டலாம். பில்லி, சூனியம் முதலான நம்பிக்கைகள் வலு இழந்து வருதல். கிங்கிலியர், கிங்கிலிய வைரவராக – வைரவராக மேல்நிலை ஆக்கமும் உருமாற்றம் அல்லது உருமறைப்புச் செய்யப்படுகின்றமை. பொதுவாக கிராம வழிபாடுகள் கைவிடப்பட்டு வருகின்ற தன்மை. இங்கு கூறப்பட்ட மூன்றாவது விடயம் பொதுவானது எனினும் முதல் இரண்டு விடயங்களும் கிங்கிலிய வழிபாட்டுக்கு மட்டுமே உரியவை. இன்றைய சமூகத்தில் ஏற்பட்டு வரும் பகுத்தறிவு வாதம், சமய ஈடுபாடற்ற அல்லது சமயத்துக்கு நேரம் ஒதுக்க முடியாத பொருளாதார நோக்குடைய இயந்திர வாழ்வு, பழமையைக் கைவிடுதல், புதுமை நாட்டம், மதமாற்றம் முதலான பல காரணிகள் இதன் பின்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தன்னிலைப்பட்ட தெய்வத்தை சமஸ்கிருதமயமாதல் என்னும் பிராமண மயப்படுத்தும் மேல்நிலை ஆக்கச் செயல்முறை கிங்கிலி எனும் தெய்வத் தொன்மத்தை அழிப்பு நிலை செய்து வைரவராக உயர்நிலைப்படுத்துகின்றது. இதன் வழி கிங்கிலியர் மக்களின் நம்பிக்கைகளில் இருந்து காணாமல் போய்க் கொண்டிருக்கின்றார். முடிவுரை மக்களின் காவல் தெய்வமாக வறுமை, துயர் என்பனவற்றில் இருந்து மட்டுமின்றி பிறரால் தம்மை, தமது குடும்பத்தை அழிவுக்கு உட்படுத்தும் நோக்கோடு செய்யப்பட்ட தீமைகளான பில்லி, சூனியம், வசியம் உள்ளிட்டவற்றைத் தடுத்து அழித்து காப்பாற்றும் நம்பிக்கை உருவானவர் கிங்கிலியர். அரூப தெய்வமாக, பேதமற மக்களால் பொதுநிலையில் வழிபடப்பட்ட தெய்வமே கிங்கிலியர். மக்களின் தெய்வமாய் நன்மையின் படிமமாய் எந்த உருவுமற்று கல்லிலும் சூலத்திலும் தனி வழிபாடுகளின் வழி வழிபடப்பட்ட தொன்மத் தெய்வம் கிங்கிலியர். இது சிறுகோயில், பரிவாரத் தெய்வம் என்ற நிலையில் இரண்டாம் கட்ட வளர்நிலையினைப் பெற்றது. ஆயினும் நம்பிக்கைகள், மந்திரங்கள், சடங்குகள் என்பனவற்றில் ஏற்பட்ட நம்பிக்கையீனம், பகுத்தறிவுச் சிந்தனை வளர்ச்சி இவ்வழிபாட்டில் கீழ்நிலையை ஏற்படுத்தின. ‘கிங்கிலியசுவாமி’ ‘கிங்கிலியத் தகடாக’ உருமாற்றம் பெற்றார். இன்று அவர் பூஜை அறைகளில் இயந்திரத் தகடாகவும் உடலில் அச்சரக்கூடுகளாகி அணிகலன்களாகவும் மாற்றம் பெற்று வர்த்தகப் பண்டமாக்கப்பட்டுள்ளார். தொடரும். https://www.ezhunaonline.com/folk-god-kingiliyar/1 point- ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
மக்கள் மயப்பட்ட வைரவர் வழிபாடு தி. செல்வமனோகரன் April 14, 2024 | Ezhuna அறிமுகம் இந்திய மண்ணில் தோற்றம் பெற்ற தொன்மைச் சமயங்களில் ஒன்றான சைவத்தின் தொன்மைப் பிரிவுகளில் ஒன்று வைரவம். இது வடநாட்டில் தோற்றம் பெற்றதாகவே பெரிதும் நம்பப்படுகிறது. காவல் தெய்வமாகச் சித்தரிக்கப்படும் வைரவரை சிவனின் அம்சமாகவும் மகனாகவும் புராணங்கள் கூறுகின்றன. இவர் பிரமனின் தலையைக் கொய்தவராகவும், வானவரிடம் கபாலத்தில் இரத்தத்தைப் பெற்றவராகவும், அந்தகாசுரனை வதைத்தவராகவும் சிறுதொண்டர் நாயனாரிடத்துப் பிள்ளைக்கறி பெற்றவராகவும் கூறப்படுகிறார். உக்கிரப் போர்த் தெய்வமாகச் சுட்டப்படுகின்ற இவருக்கு சோதிட நூல்களால் கலக நாளாகக் குறிப்பிடப்படும் செவ்வாய்க்கிழமையே, குறிப்பாகத் தைமாத செவ்வாய்க்கிழமை, உகந்த நாளாகவும் சிவந்த செவ்வரத்தம்பூ உகந்த மலராகவும் பரணி நட்சத்திரம் (போருடன் தொடர்புடையது) உரிய நட்சத்திரமாகவும் கூறப்படுகிறது. புராணங்கள், இவரை “மஹா வைரவர், கால வைரவர், உக்கிர வைரவர், வடுகநாதர், சட்டைநாதர்” எனப் பலவாறு சித்தரிக்கின்றன. சிவ பராக்கியம் எனும் நூல் அஷ்ட வைரவர்களைக் குறிப்பிடுகிறது. இவ் வைரவரின் தோற்றப் பொலிவு பற்றிப் பல விடயங்கள் கூறப்படினும் பொதுவில் கைகளில் கபாலம், தண்டம், தமருகம், சூலம் என்பவற்றை ஏந்தியரவாகக் கூறப்படுகிறார். உக்கிரப் பார்வை, கோரப் பற்கள், சிலம்பு, சிங்கினி மாலை, பாம்பு போன்றவைகளுடன் கூர்மையான வாள், திரிசூலம், பாசம், அங்குசம், வச்சரம், அக்கினி, கதை, வில், அம்பு, தண்டம், கபாலம், சங்கு, சக்கரம், உலக்கை போன்றவற்றுடன் விளங்குபவராகவும் கூறப்படுகிறார். நாய் வாகனத்தை (தெய்வஞாளி, சுவனம்) உடையவராகச் சித்தரிக்கப்படுகிறார். சாதாரணமாக ஒரு மரத்தின் கீழ் திரிசூல வடிவில் இருப்பது முதல் சகல ஆலயங்களிலும் பரிவார தெய்வமாகவும், வைரவர் கோயிலில் கர்ப்பக் கிரக மூர்த்தியாகவும், வீடுகளிலே காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும், எல்லைத் தெய்வமாகவும் வைரவர் வழிபாடு இடம்பெற்று வருகின்றது. இங்கு வைரவர் வழிபாடானது பண்டைய ஐதீகம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபடப்பட்டு வருகின்றது. ஈழத்தில் வைரவர் வழிபாடு ஈழத்து நாட்டாரியல் வழிபாட்டில் முக்கிய காவல் தெய்வமாக வைரவர் காணப்படுகின்றார். முத்தலை சூலத்தை வழிபட்ட மக்கள் அதனை காலனித்துவ காலத்தில் அந்நியரின் மேல் உள்ள பயத்தின் நிமித்தம் தேவை ஏற்படும் பொழுது கிறிஸ்தவ சிலுவையாகவும் (இரு தலைகளையும் மடித்து) பாவித்தனர். இச்சூலத்தை திறந்த வெளிகளில் உள்ள வேம்பு, அரசு, நாவல், ஆல், புளி, மருது போன்ற மரங்களில் கீழ் குத்தி வைத்து வழிபட்டனர். இவையே பின்னர் வைரவராக மாறி உருவ வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்துள்ளது. ஈழத்தில் வைரவர் வழிபாடு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பெரும்பான்மையாக நாட்டாரியல் தெய்வமாகவும், பெருந்தெய்வமாகவும் வழிபடப்படுகின்றது. ஆகமம் சாராத வைரவர் வழிபாட்டிலே வீடுகளில், கோயில்களில், பயிர்ச்செய்கை நிலங்களில், மயானங்களில் இடம்பெறும் வைரவர் வழிபாடுகள் முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றன. இத் தெய்வத்திற்கு மடை பரவுதல் – வடை மாலை சாத்துதல், பொங்கல், மிருகபலி போன்றன செய்து வழிபடும் மரபு இற்றைவரை காணப்படுகிறது. அத்தோடு வைரவருக்கு பிரதேசப் பண்பாட்டுக் கூறுகளுக்கு இணங்கவும் வழிபாடியற்றப்படுகிறது. காவல் தெய்வங்களை காணிக்குள் வைத்து வழிபடும் முறை பொதுவாக எல்லாப் பிரதேசங்களிலும் காணப்படுகின்றது. ஆனால் ‘வைரவன் பந்தல்’ அமைத்து வழிபடும் முறை மட்டக்களப்பு பிரதேசத்தவரின் தனித்துவமான முறையாகும். வைரவர் வழிபாட்டின் போது ஒவ்வொரு ஊருக்கும் ஏற்ற வகையில் வீட்டின் புறம்பாக, எதிர்ப்பக்கம் நோக்கிய வகையில் ‘வைரவர் பந்தல்கள்’ அமைக்கப்பட்டிருக்கும். நிரந்தரமாக அமைக்கும் பந்தலினைப் பலமான மரங்களினாலும், கற்களினாலும் வடிவமைப்பார்கள். தற்காலிக பந்தலினை வேம்பு மற்றும் பூவரசம் கம்பினை கொண்டு தட்டுப்பந்தல் வடிவில் அமைத்து தென்னம் ஓலைகளால் வேய்ந்து தென்னங் குருத்துக்களால் சுற்றி வளைத்து அலங்கரிப்பர். வீட்டில் உள்ள வைரவன் பந்தல்களிலே வருடாவருடம் குறித்த பரம்பரையினரை சேர்ந்தவர்களால் வைரவர் சடங்கானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது “வைரவருக்குச் செய்தல்‟ எனப்படும். வீடுகளில் தீய சக்திகளின் பார்வையினால் தமது குடும்பத்திற்கு எந்தவித கெடுதலும் இடம்பெறாமல் இருப்பதற்காகவும், தமது வீட்டையும் குடும்ப உறுப்பினர்களையும் வைரவர் காப்பார் எனும் நம்பிக்கையிலும், நோய் நீக்கம், நீண்ட ஆயுள், சந்ததி விருத்தி, தனம், தானியம், செல்வ விருத்தி ஏற்படுவதற்காகவும் பாரம்பரியமாக வைரவர் வழிபாடு இடம் பெறுகின்றது. வழிபாட்டு முறைகள் இங்கு பெரும்பாலும் ஆதி வைரவரை அழைத்தே சடங்கு நடாத்தப்படுகின்றது. சில இடங்களில், வீடுகளில் கல்யாண வைரவர், கொங்கை வைரவர், திரிசூல வைரவர், கபால வைரவர், நரசிங்க வைரவர் போன்றோரை அழைத்தும் சடங்கு நடாத்தப்படும். சடங்கு இடம்பெறுவதற்கு முன்னர் தீட்டுக்கள் இன்றி புனிதத் தன்மையைப் பேணும் பொருட்டும், தீய சக்திகளின் பார்வை விலகும் பொருட்டும், மஞ்சள் நீர் தெளித்து வீட்டைக் கழுவி சுத்தம் செய்து சமுத்திர நீர் போன்ற புனித தீர்த்த நீரைத் தெளித்து, வீடு வளவுகளை காவல் செய்து வீட்டினுள் சாம்பிராணி, குங்கிலியம் போன்றவற்றினால் புகையிட்டு வீட்டு முன் வாசலில் வேப்பமிலைப் பத்திரத்தினாலான தோரணம் கட்டுவர். வைரவர் உக்கிரமான தெய்வம் ஆகையால் இரவு வேளைகளிலே இச் சடங்கானது இப்பிரதேசங்களில் நடாத்தப்படுகின்றது. சில இடங்களில் இச் சடங்கு இடம்பெறும் நாள் அன்று “அம்மனுக்குச் செய்தல்” எனும் “சர்க்கரை அமுது படைத்தல்” படையல் சடங்கானது பகல் வேளையும், இரவு வேளைகளில் “பேச்சியம்மனுக்கு” “பள்ளயச்சடங்கும்” நடைபெறும் வழக்காறு உண்டு. இவ் வழக்காற்று முறைகளின் போது உற்றார் உறவினர்கள், அயலவர்கள் குறித்த குடும்பத்தினருடன் இணைந்து சடங்கிற்கான பங்களிப்பினை மேற்கொள்வார்கள். இவ் வேளை சமூகத்தினர் இடையே பரஸ்பர தொடர்பு, ஒற்றுமை முதலான விழுமியப் பண்புகள் விருத்தியடைகின்றன. வீடுகளில் வைரவருக்குச் சிலை அமைத்து வழிபடும் மரபு காணப்படுவதில்லை. திரிசூலம் அல்லது இரட்டைத் திரிசூலம், கல், தென்னம்பாளை, கமுகம் பாளை, செவ்விளநீர், கருங்காலிப் பொல்லு (தண்டம்) என்பன வைரவர் குறியீடாக வைக்கப்பட்டு “மடை வைத்தல்” சிறப்பாக இடம் பெறுகின்றது. வீடுகளில் பூசை வழிபாடானது குறித்த பரம்பரையைச் சேர்ந்த ஒருவரினாலோ அல்லது பூசகரை அழைத்தோ இடம்பெறும். மட்டக்களப்பு தெய்வ வழிபாட்டு முறையில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் விசேடமான மடைப் பொருட்கள் காணப்படுகின்றன. அரிசிமா ரொட்டி, தவிட்டு ரொட்டி, கஞ்சா ரொட்டி போன்ற ரொட்டி வகைகளும், செவ்விளநீர், கரும்பு, கதலி வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் போன்ற நார்ப்பழ வகைகளும் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பஞ்சாமிர்தம், பாணக்கம், துள்ளுமா, உளுந்து வடை, பூக்கள், வெற்றிலை, பாக்கு, வில்வம் பத்திரம், வேப்பம் பத்திரம் என்பனவும் சிறப்பாக சிவப்பு நிற மலர்கள், கள்ளு, சாராயம் போன்றவையும் வைக்கப்பட்டு மடை அலங்கரிக்கப்படும். ஆதி வைரவரை அழைத்து சடங்கு செய்யும் சில வீடுகளில் கஞ்சா ரொட்டி, கள்ளு, சாராயம் போன்றவற்றை வழிபாட்டின் போது சேர்த்துக் கொள்வது குறைவு. ஆனால் ஏனைய சில வைரவ மூர்த்தங்களை அழைத்து வழிபாடு செய்கின்ற இல்லங்களில் மதுப் பொருட்கள் வைத்து வழிபடப்படும் மரபு காணப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் வைரவருக்கு தேன் வைத்து வழிபடப்பட்டிருந்த முறையே பிற்காலத்தில் மதுப்பொருட்களாக மாற்றமடைந்து இருக்கலாம். ரொட்டி செய்யப்படும் போது சில இடங்களில் தேங்காய்ப்பூ, உப்பு என்பன கலந்தும் சில இடங்களில் தனி மாவினாலும் செய்வர். மணி ஒலி எழுப்புதல், தீபம் காட்டுதல், உடுக்கை ஒலித்தல், வைரவ தோத்திரங்கள், காவியங்கள் பாடுதல் என்பவற்றோடு சில இல்லங்களில் வைரவர் உருக்கொண்டு வந்து கலையாடுதல், வாக்குச் சொல்லுதல் என்பனவும் இடம்பெறும். சடங்கு வழிபாடு நிறைவு பெற்றதும் தண்ணீர் தெளித்து மடை பிரிக்கப்பட்டு பிரசாதங்கள் பகிர்ந்து அளித்தலுடன் வீட்டுச் சடங்கு நிறைவுபெறும். வைரவர் சடங்கு வழிபாடுகளில் பொதுவாக மண்டபம் அமைத்தல், மண்டபம் காவல் பண்ணுதல், கும்பம் வைத்து மடைகள் வைத்தல், கலையாடுதல், தேவாதிகளை கட்டுக்கு வைத்து ஆட்டத்தை ஊக்குவித்தல், தேவாதிகளை யாரும் கட்டினால் வெட்டி ஆடுதல், காவியம் பாடுதல், பள்ளயம் அல்லது பலி கொடுத்தல், வழிபடுதல் முதலிய சடங்கு நிகழ்ச்சிகள் இடம்பெறும். வைரவர் சடங்கின் போது தெய்வம் ஆடுதலில் உடுக்கை, தவில், சிலம்பு, அம்மானைக் காய், சாட்டை போன்ற கருவிகள் பயன்படுத்தப்படும். இவ்வேளை வாக்குச் சொல்லுதல், தீய சக்திகளை விலக்குதல், கழிப்புச் சடங்கு, பலியிடுதல் போன்றவை இடம்பெறும். இங்கு பலியிடலுக்காக ஆடு, கோழி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இன்று பலியிடலின் மாற்றீடாக நீத்துப் பூசணிக்காய் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு வைரவருக்குரிய சிறப்பு வாய்ந்த தோத்திரம், காவியம், அகவல், தாலாட்டு என்பன பாடப்படுகின்ற வழக்கம் காணப்படுகின்றது. சுடலைக்கு அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவினர் சுடலை வைரவர் வழிபாட்டினை மேற்கொள்வர். இவ் வழிபாட்டின் போது பனை ஓலைகளினால் இழைத்த பெட்டி ஒன்றினுள் கள்ளு, சாராயம், கஞ்சா ரொட்டி, மொந்தன் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைக்கப்பட்டு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு குறித்த ஒரு இடத்தில் மடை வைக்கப்பட்டு தேங்காய் உடைத்து, கற்பூர தீபம் ஏற்றி குறித்த குடும்பத்தினைச் சேர்ந்த நபரின் மண்டாட்ட வேண்டுதலுடன் சுய வழிபாட்டு முறையில் வைரவர் வழிபாடு இடம்பெறும். வைரவர், ஆகமக் கோயில்களில் பரிவார மூர்த்திகளில் ஒருவராகவும் காவல் தெய்வமாகவும் கூறப்படுகிறார். மகோற்சவ ஆரம்பத்தில் கிராம சாந்தியில் வைரவ வழிபாடு இடம்பெறுகின்றது. ஆலய உற்சவ காலங்களின் போது இக் கிரியையானது குறித்த ஆலயத்தில் உள்ள கிராமத்திற்கு எந்தவித இடையூறும் நேர்ந்திடா வண்ணம் மேற்கொள்ளப்படும். உற்சவம் முடிவடைந்ததும் வைரவர்க்குரிய விசேட அபிடேக ஆராதனையுடன் பூசை இடம்பெறும். வைரவர் கோயிலை காவல் செய்யும் தெய்வம் மாத்திரமல்ல, அவர் சுற்றாடலையும் காக்கின்றார். மகோற்சவ காலங்களில் வைரவரைக் கட்டுதல், வைரவர் சாந்தி செய்தல் முதலானவை நடைபெறுவதையும் அவதானிக்கலாம். ஈழத்தில் சிறு தெய்வமாக, பெருந்தெய்வமாக வைரவ வழிபாடு பெருஞ்செல்வாக்குற்றுக் காணப்படுகிறது. இதற்குப் பின்வரும் காரணங்களைச் சுட்டலாம். கந்தபுராணச் செல்வாக்கு. ஈழத்தில் ஆதிக்க மதமான சைவம் (இந்து சமயத்துள்) இருத்தலும், வைரவர் சிவனின் அம்சமாக எடுத்துரைக்கப்படுதலும். ஒல்லாந்தர் கால சமய அடக்குமுறை அல்லது ஆதிக்க சக்திகளுக்கு எதிரான குரல். சூல வழிபாட்டு முறை – எளிய வழிபாட்டு முறை சைவ மேனிலையாக்கம் அல்லது சமஸ்கிருத மயமாதல் “யாழ்ப்பாணக் கலாசாரம், கந்தபுராணக் கலாசாரம்” என்பார் பண்டிதமணி. கந்தபுராணம் முன்னிறுத்தும் சிவகுமாரர்களுள் வைரவர் ஒருவர் என்பதும் அவர் உக்கிர அம்சமாக சுட்டப்படுவதும் இங்கு உற்று நோக்கத்தக்கது. வைரவ வழிபாடு எப்போது ஈழத்திற்கு வந்தது என்பது தெளிவாக உரைக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த ஈழத்தில் சுதேச சமயமான சைவ சமயத்தை நிலைநாட்ட அக்கால மக்கள் பயன்படுத்திய உபாயமாகவும் முக்கிய செயற்பாடாகவும் அமைந்தது திரிசூல வழிபாடாகும். இத் திரிசூல வழிபாடு என்பது பெரிதும் வைரவர் வழிபாடாகவே அமைந்திருந்தது. சுதேச சமய நடைமுறைகளைப் பின்பற்றுதல் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்ட அச்சூழலில் மரங்கள், நீர்நிலைகள், விவசாய உற்பத்தி நிலங்கள், சில மறைவிடங்கள் என்பவற்றில் இவ் வைரவ வழிபாடு நிகழ்த்தப் பெற்றுள்ளது. ஒல்லாந்த அரசின் அடக்குமுறைக்கெதிரான மௌனக் குரலாகவும் குறியாகவும் சூலத்தைக் குறிப்பிடலாம். அதேவேளை பரமனை மதித்திடாத பங்கையாசனனுக்கு நிகழ்ந்ததே ஒல்லாந்தருக்கும் நிகழும் என்பதைக் குறியீடாக சைவ வழிபாட்டினூடு உணர்த்தியிருக்கக் கூடும். வானவர் தலையைக் கொய்ததன் குறியீடான மண்டையோட்டு மாலையைக் குறிப்பதாக அமைந்த உழுந்துவடை மாலையும் குருதி பெற்ற கதையினடையாளமாக சிவப்புநிற செவ்வரத்தம் பூ தரித்தலும் ஒல்லாந்தருக்கான எச்சரிக்கையாகவும் அல்லது சுதேச சமயத்தை ஒடுக்கும் அதிகாரத்திற்கு எதிராக மக்களைக் கொதி நிலையில், உணர்ச்சிப் பிரவாகத்தில் வைத்திருக்கும் செயற்பாடாகவும் வைரவ வழிபாடு முன்னிறுத்தப்பட்டிருக்கலாம். தாம் தாம் விரும்பிய நிலையிலும் வகையிலும் மிருகபலி, மடை பரவுதல் தொட்டு ஆகமப் பண்பாடு வரை வைரவ வழிபாடு அகலக் காலூன்றி நிலைத்து நின்றது. ஆகமப் பண்பாட்டை முன்னிறுத்தி சைவ மீட்டுருவாக்கத்தைச் செய்த ஆறுமுகநாவலர் சிவபெருமானின் மகன்களில் ஒருவராக வைரவரைச் சுட்டி அவ் வழிபாட்டை உள்ளீர்த்தமை யாழ்ப்பாணத்தில் அவ் வழிபாட்டுக்கான மேனிலையாக்கத்தையும் ஸ்திர நிலையையும் வழங்கியது. யாழ்ப்பாணத்தின் அவ்வவ் சமூகத்தின் நோக்கிற்கேற்ப வைரவர் காலவைரவர், வடுகவைரவர், ஆதிவைரவர், கபாலவைரவர், நரசிம்மவைரவர், கிங்கிலியவைரவர் எனப் பலவாறு வழிபடப்பட்டு வருகின்றார். அதேபோல ஆலயம் அல்லது சூலம் அமைந்திருக்கும் இடத்தை வைத்துக் கொண்டு இத்தியடி வைரவர், சுடலை வைரவர், ஆலடி வைரவர் எனப் பலவாறு சுட்டப்படுகிறார். ஆகமக் கோயில்களில் வடுகநாதராகவும், ஷேத்திர பாலகராகவும் காளியின் தலைவராகவும் சுட்டப்படுகிறார். இணுவில், தெல்லிப்பளை, உரும்பிராய், சிறுப்பிட்டி, வடமராட்சி உள்ளிட்ட பல இடங்களில் ஆகம மயப்பட்ட, ஆகம மயப்படாத மிருகபலியோடு கூடிய நாட்டாரியல் பண்புகள் நிறைந்ததான வைரவர் வழிபாட்டு மரபுகள் இன்றுவரை காணப்படுகின்றன. சமகாலப் பயில்வுகள் காலனித்துவ அதிகாரத்திற்கெதிரான, ஒலி வெளிப்படாத, ஆழ ஊடுருவித்தாக்கும் கலகக் குரலாகவே போர்த் தெய்வமான வைரவரும் ஆயுதமான திரிசூலமும் கட்டமைக்கப்பட்டன. ஜனநாயகமான, பேதமற்ற – சாதியக் கட்டுமானம் தாண்டிய மக்கட் தெய்வமாக வைரவர் விளங்குகின்றார். நாவலர் வைரவரை சிவனினம்சமான மகனாக எடுத்துரைத்து மேனிலைத் தெய்வமாக்கினார். இதன்வழி நாட்டாரியல் வழிபாடு, ஆகம வழிபாடு எனும் இருதள மரபிற்குரியதாக, சிறுமரபு – பெருமரபு என வைரவ வழிபாடு மாற்றமுற்றது. பின் இருபதாம் நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம், இலவசக் கல்வி, போன்றனவும் நகரமயமாதலும் வைரவ வழிபாட்டை பெருமரபாக்கின. இன விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி, பேரினவாதத்தின் ஒடுக்குமுறை, போர் என்பன வைரவ வழிபாட்டை மீள் முக்கியத்துவம் பெறச் செய்தன. 1995 இல் ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னான மீள் வருகை புதிய அசைவியக்கங்களை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தியது. இராணுவக் கட்டுப்பாடு, மின்சாரம், தொழில்நுட்பத் தொடர்பாடல் வசதிகள், பொருளாதாரத் தடைநீக்கம், திறந்த பொருளாதாரம், சடுதியான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் (சட்ட ரீதியாவும், களவாகவும்), பொருளாதார ஏற்றம், கல்வி என்பன அவற்றுள் சில. இதன் வழி வாழ்க்கைத் தரம் உயர்கிறது. யுத்தத்தின் நேரடித் தாக்கம் ஓரளவு குறைந்ததனால், மக்கள் தெய்வமாக யுத்தத்தின் அடையாளமாக இருந்த வைரவரை மக்கள் தம் மனங்கட்கேற்ப, சாந்த சொரூபியாக ‘ஞான வைரவராக’ மாற்றி விடுகின்றனர். ஆகம மரபுவழி ஆலயங்கள் புனருத்தாரணம் செய்யப்படுகின்றன. பிராமணர்கள் பூசை செய்ய நியமிக்கப்பட்டு அலங்கார உற்சவங்கள் நடைபெறுவனவாக வைரவர் கோயில்கள் மாறின. சில ஆலயங்களில் இரதோற்சவங்களும் நடைபெறுகின்றன. ஆயினும் சமகாலத்தில் வைரவர் வழிபாட்டில் சுதேச பாரம்பரியங்களில் கலப்புகள் ஏற்படுத்தப்படுகின்றது. இதனால் கலப்புறு பண்பாடு தோற்றம் பெறுகிறது. ஆகம விதிமுறைகளுக்கு உட்பட்ட அம்சங்களும், ஆகம விதிமுறைகளுக்கு உட்படாத அம்சங்களும் இணையும் போது இங்கு புதிய கலப்புறு பண்பாட்டம்சங்கள் தோன்றி இரண்டு முறையான வழிபாடுகளையும் ஒரே தளத்தில் இடம்பெறச் செய்கின்றன. வைரவருக்கு உயிர்ப்பலி அதிகமாக கொடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஒரு சில இடங்களிலேயே உயிர்ப் பலி மேற்கொள்ளப்படுகின்றது. நகரமயமாதல், உலகமயமாதல், மேனிலையாக்கம் எனும் தளக்கூறுகளின் வழி ஏற்பட்ட சமூக அசைவியக்கமாகவே நாட்டார் பண்பாட்டின் அடையாளமாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண வைரவர் வழிபாடு, பெருமரபாக சமஸ்கிருத மயமாதலுக்குள்ளான பெருந் தெய்வமாகி சமூக, சாதி அந்தஸ்தை நிலைநாட்டுவதற்கான சமூகக் குறியீடாக சூலக் குறியீட்டைப் புறந்தள்ளி, கருங்கற் தெய்வமாக எழுச்சி பெற்று நிற்பதை இன்று அவதானிக்க முடிகிறது. இம் மேனிலையாக்கம் இன்று வடக்கு, கிழக்கு மட்டுமின்றி இலங்கை முழுவதும் மிகவும் வேகமாக நிகழ்ந்து வருவதைக் காணமுடிகிறது. நிறைவுரை சமஸ்கிருத மயமாதலுக்கும் சாதி, வர்க்கப் படிநிலைக்கும் இடையேயான இயங்கு நிலை அவதானத்திற்கு உரிய ஒன்றாகும். அதிகாரமிகு சாதியத்திற்கும் சமஸ்கிருத மயமாதலுக்கும் இடையிலுள்ள உறவுநிலை கெட்டித்த தன்மையுடையதாகும். அதனாலேயே கீழ்நிலையிலிருந்து மேலெழ விரும்பும் குறித்த மனிதர், குறித்த சாதி, குறித்த வர்க்கம் அதிகார மனிதர்களின் சாதிக்கோ வர்க்கத்திற்கோ சமமாகத் தன் அந்தஸ்தை ஆக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. இம் முயற்சிக்கு அனுசரணை செய்வன பொருளாதாரம், அதிகாரம், சடங்கு எனும் தகுதிப்பாடுகளாகும். இவற்றில் பெரும்பான்மையைத் தனதாக்கிக் கொள்வதன் மூலம் தன்னதிகாரத்தை – சமூக அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதன் வெளிப்பாடே சுடலை வைரவரும் கிணற்றடி வைரவரும் முச்சந்தி வைரவரும் ‘ஞான வைரவரான’ வரலாறு. ஆகவே இதில் சாதிய, வர்க்க அமைதி கிடைக்கின்றதே அன்றி உண்மையான ஆன்மீக அமைதி சாத்தியமற்றுப் போகின்றது. தொடரும். https://www.ezhunaonline.com/folk-god-vairavar-in-sri-lanka/1 point- ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்
பள்ளிகளுக்கு பதில் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில்; காசா சிறுமிக்கு ஏற்பட்டுள்ள சோக முடிவு காசா மக்களின் யதார்த்த வாழ்வை ஆவணப்படுத்தும் விருப்பத்தில், Palestine Chronicle எனும் ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார். கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் தொடங்கிய இஸ்ரேல் காஸா மோதலில் தற்போதுவரை 58,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தொடர் மோதலால் காஸாவில் 2.3 மில்லியன் குடியிருப்பாளர்கள் பட்டியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்தப்போரில் காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகுக்குத் தெரிவித்த பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்த Watson Institute for International and Public Affairs’ Costs of War project எனும் அறிக்கை, காசா மீதான இஸ்ரேலின் போரில் 232 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. இந்த எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 13 பத்திரிகையாளர்கள். அதுமட்டுமின்றி, உலகப் போர்கள், வியட்நாம் போர், யூகோஸ்லாவியாவில் நடந்த போர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போர் என உலகில் நடந்த எந்தப் போர்களையும் விட காஸாவில் நடக்கும் போரில் அதிகளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது. இதற்கிடையே, குறிப்பாக தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவதை அடுத்து, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும், காஸா மக்களும் தாங்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை வீடியோக்களாகப் பதிவேற்ற ஆரம்பித்தனர். இதில் குழந்தைகள் பலரும் இணைந்து கொண்டனர். அப்படி துணிச்சலாக குரல் கொடுத்த குழந்தைகளில் ஒருவர்தான் லாமா நாசர் எனும் 11 வயது குழந்தை. இவர் தனது வீடியோக்களில் தனது நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகிற்கு தெரிவித்து வந்தார். Palestine Chronicle எனும் ஊடகத்திற்கும் செய்திகளை வழங்கி லாமா நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார். நகரத்தில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தின் மீது விழுந்த இஸ்ரேலிய குண்டு, அக்கட்டத்தை மொத்தமாக சிதைத்தது. இந்தத் தாக்குதலில் லாமா, அவரது பெற்றோர், அவரது சகோதர சகோதரிகளும் உயிரிழந்தனர். Palestine Chronicle ஊடகத்திற்கு கடைசியாக அவர் அளித்த வீடியோவில், “காசா என்பது குழந்தைப் பருவமும் வேதனையும் ஒன்று சேர்ந்த இடம். அங்கு உள்ள சிறுவர்கள், உலகின் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் ஒன்றில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் ஆக்கிரமிப்பு காரணமாக குழந்தைகள் கடினமான மற்றும் பேரழிவு தரும் சூழ்நிலைகளை கடந்து செல்கின்றனர். காசாவில், குழந்தைகள் பட்டினியால் அவதிப்படுகிறார்கள். சாப்பிட உணவு இல்லை. சாப்பிட உணவு இல்லை. மேலும், அவர்கள் தொற்றுநோய்கள், குறிப்பாக போலியோ பரவலால் அவதிப்படுகிறார்கள். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகள் பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் அழித்ததால், குழந்தைகள் கல்வி கற்கும் உரிமையை இழந்துள்ளனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள் அல்லது தங்கள் குடும்பங்களுக்கு தண்ணீர் வேண்டி வரிசையில் நிற்கிறார்கள். காசாவின் குழந்தைகள் உலகில் உள்ள எந்தக் குழந்தையையும் போலவே அமைதியாக வாழ விரும்புகிறார்கள். இனப்படுகொலையை நிறுத்துங்கள்!” எனத் தெரிவித்திருக்கிறார். https://thinakkural.lk/article/3190730 points - கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
Important Information
By using this site, you agree to our Terms of Use.