அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர்களின் நினைவோடு, யாழ் இணையம் தனது 27 ஆவது ஆண்டை நிறைவு செய்து இன்று (30.03.2026) 28 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காலம் முதல் பல்வேறு சவால்களையும் தொழில்நுட்ப மாற்றங்களையும் கடந்து, உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு தனித்துவமான குடிலாக யாழ் இணையம் மிளிர்ந்து வருகின்றது. எமது கடமையும் சமூகப் பொறுப்பும்ஒவ்வொரு ஆண்டும் நாம் வலியுறுத்துவது போலவே, கருத்தாளர்களாகிய உங்களிடம் மேலதிகமான சமூகப் பொறுப்பினையும் சகிப்புத்தன்மையையும் இந்த ஆண்டும் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக: தகவல் நம்பகத்தன்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI): இன்று ஊடக பலம் கொண்ட பெரும் சக்திகளால் திட்டமிட்டு பரப்பப்படும் தவறான மற்றும் உண்மையற்ற செய்திகள், பொதுமக்களால் உண்மையானவை என நம்ப வைக்கப்படுகின்றன. தாங்களே உலகின் பாதுகாவலர்கள் என்ற பிம்பத்தை இத்தகைய சக்திகள் கட்டமைக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறான ஒருதலைப்பட்சமான தகவல்களையே ஆதாரமாக வைத்து இங்கும் கருத்தாடல்கள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இதனுடன், தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் உண்மை போன்றே தோற்றமளிக்கும் காணொலிகள் (Deepfakes), குரல் பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் இந்த நிலையை இன்னும் சிக்கலாக்குகின்றன. எனவே, இத்தகைய திட்டமிட்ட பரப்புரைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பரப்பப்படும் தகவல்கள் குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதையும் இங்கே ஆதாரமாகப் பதிவிடும் முன்னர், அதன் நம்பகத்தன்மையை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை சரிபார்க்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகின்றோம். பண்பான விவாதம்: கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளுங்கள். தனிநபர் தாக்குதல்களையும், வீண் மனஸ்தாபங்களையும் தவிர்த்து, ஆரோக்கியமான கருத்தாடல் தளமாக யாழ் களம் தொடர ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மத மற்றும் உணர்வுப்பூர்வமான மதிப்பளிப்பு: மற்றவர்களின் மத நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் புண்படுத்தாத வகையில் எமது கருத்துப் பதிவுகள் அமைதல் வேண்டும். உலகளாவிய நெருக்கடிகளும் மனிதாபிமானமும்இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிகழும் போர்களும், அதனால் ஏற்படும் மனித அவலங்களும், பொருளாதார நெருக்கடிகளும் ஒட்டுமொத்த உலகத்தையுமே ஒரு பதற்றமான சூழலுக்குள் தள்ளியுள்ளன. இத்தகைய நெருக்கடி காலங்களில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களும், போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுமே பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். போரினால் சிதைக்கப்பட்ட ஒரு இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற வகையில், போரின் வலியை நாம் நன்கு அறிவோம். எனவே, இந்த 28 ஆவது அகவையில் தடம் பதிக்கும் இவ்வேளையில், பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க நம்மால் இயன்ற பொருளாதார மற்றும் அறப்பணிகளில் கைகோர்ப்போம். உலகெங்கும் அமைதி நிலவவும், அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் குரல்கள் ஒலிக்கவும் யாழ் இணையம் தொடர்ந்து ஒரு ஆக்கபூர்வமான தளமாக விளங்கும். தமிழ்த் தேசியமும் எமது பயணமும்தமிழ்த் தேசியச் சிந்தனையை வலுப்படுத்தி, எமது வரலாற்றைத் திரிபுகள் இன்றி அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பணியில் யாழ் இணையம் என்றும் உறுதியாக இருக்கும். தமிழக உறவுகளை எமது பலமாகக் கருதி, கட்சிப் பாகுபாடின்றி நாம் என்றும் நேசிப்போம். அதேவேளை, எமது விடுதலைப் போராட்ட வரலாற்றினைத் திரிபுபடுத்தி, தமக்கான அரசியல் பலத்தைச் சேர்க்க முயலும் சுயநலக் கட்சிகளை நாம் வன்மையாக எதிர்ப்போம். அத்தகைய சக்திகளைச் சுட்டிக்காட்டும் அனைத்து முயற்சிகளுக்கும் யாழ் இணையம் தனது முழுமையான ஆதரவினை வழங்கும். ஈழத் தமிழர்களைத் தமது நலன் சார்ந்து போலிப் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவோரை அடையாளம் கண்டு முறியடிக்க வேண்டிய விழிப்புணர்வு எமக்குத் தேவையாய் உள்ளது. புதிய தொடக்கம்இந்த 28 ஆவது ஆண்டில், இன்னும் அதிகமான புதிய உறுப்பினர்களை உள்வாங்க விரும்புகின்றோம். யாழ் இணையத்தின் பழைய உறுப்பினர்கள், உங்கள் சுற்றத்தாருக்கு இந்தத் தளத்தை அறிமுகம் செய்து, அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளையும் கருத்தாளர்களையும் உருவாக்க முன்வருமாறு வேண்டுகின்றோம். தமது உழைப்பையும் நேரத்தையும் அர்ப்பணித்து களத்தை வழிநடத்தும் மட்டுறுத்துனர்களுக்கும், ஆலோசனைகளை வழங்கும் நல்உள்ளங்களுக்கும், சுயமாகப் படைப்புகளை உருவாக்கித் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எமது மண்ணோடும் மக்களோடும் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய், ஒற்றுமையாய் பயணிப்போம். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி, யாழ் இணைய நிர்வாகம் 30 மார்ச் 2026