Everything posted by ஏராளன்
-
காணாமல் போகும் விளையாட்டு மைதானங்கள் - "ஏழைக் குழந்தைகளுக்கு தான் பாதிப்பு"
கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 15 நவம்பர் 2025 கோவை நகரில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தி வந்த 10 ஏக்கர் காலியிடத்தை ரூ.76 கோடிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஏலத்தில் விட அறிவிப்பு வெளியிட்டது, அரசியல் ரீதியான வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் யார் வந்தாலும், ஏழைக்குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான விளையாட்டு மைதானங்கள் புதிதாக உருவாக்கப்படாமல் இருப்பதாக விளையாட்டு அமைப்பினர் மற்றும் பொது ஒதுக்கீட்டு இடங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக கோவையில் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தும் காலியிடத்தை ஏலம் விடும் நடவடிக்கையை வீட்டு வசதி வாரியம் நிறுத்திவைத்துள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட கோவைப்புதுார் பகுதியின் மையப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவிலான காலி மைதானம் உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இந்த இடம், பல ஆண்டுகளாக காலியாக இருப்பதால் அந்த இடத்தில் காலையிலும், மாலையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். இதற்காக கோவை மாநகராட்சி சார்பில், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானத்திற்காக அரசியல் மோதல்! அதேபோன்று சுற்றுவட்டாரத்திலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் பல்வேறு குடியிருப்புகளைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் இந்த இடத்தில் கிரிக்கெட், கால்பந்து, பேட் மிண்டன், விளையாடுகிறார்கள். விடுமுறை நாட்களில் இங்கே குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களால் இந்த மைதானம் நிரம்பி வழியும். மாநகராட்சியுடன் இணைந்து குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டுச் சங்கங்களும் பராமரித்து வந்த இந்த மைதானத்தில் நிறைய விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடப்பது வழக்கமாகவுள்ளது. இந்நிலையில் இந்த காலியிடத்தை ரூ.76 கோடிக்கு ஏலம் விடுவதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கடந்த அக்டோபர் 9 ஆம் தேதியன்று டெண்டர் நோட்டீஸ் விட்டது. இதன்படி நவம்பர் 12 அன்று ஏலம் நடப்பதாக இருந்தது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஒரு வீரரை கூட இழக்காமல் முகலாயர்களை வீழ்த்தி இந்தியாவை வென்ற 'ஷேர்ஷா சூரி' ஒருவர் கூறுவது உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்க அறிவியல் கூறும் வழி "பாலில்லாமல் தயாரான ரசாயன நெய்" - திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் கசிந்த ஆவணங்கள் 36 வயது தேஜஸ்வி, 74 வயது நிதிஷ் குமாரிடம் தோற்க காரணம் என்ன? End of அதிகம் படிக்கப்பட்டது பல ஆண்டுகளாக பொதுமக்கள் மைதானமாகப் பயன்படுத்தி வந்த இந்த இடத்தை விளையாட்டு மைதானமாக மேம்படுத்தித்தர வேண்டுமென்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த நோட்டீஸ் அறிவிப்பு, கோவை தெற்கு பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைதானமாகப் பயன்படுத்தும் அந்த இடம் மொத்தம் 10.79 ஏக்கர் என்பதும், அவற்றில் 4.54 ஏக்கர் இடம் (1,97,916 சதுரஅடி பரப்பு) மருத்துவமனை உபயோகத்துக்காகவும், 6.25 ஏக்கர் இடம் (2,72,403 சதுரஅடி பரப்பு) பள்ளிக்கூடம் கட்டுவதற்கான உபயோகத்துக்காகவும் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த ஏல அறிவிப்பில் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஏலத்தை நிறுத்த வேண்டுமென்று கோவைப்புதுார் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அந்த வழக்கில், இந்த மனைப்பிரிவை உருவாக்கியதன் அடிப்படையில், இந்த நிலத்தின் உரிமையாளர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்பதால், வாரியமே அதை முடிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. ஆனாலும் பல ஆண்டுகளாக இந்த இடத்தை ஏலம் விடாமல் வாரியம் தவிர்த்துவந்தது. கடந்த ஆண்டில் தமிழகம் முழுவதும் வீட்டு வசதி வாரியத்தால் குடியிருப்புத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படாத 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களை, மீண்டும் நில உரிமையாளர்கள் வசமே ஒப்படைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதே போன்று அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள விற்பனை செய்யப்படாத இடங்களை விற்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் காலியிடங்களை ஏலம் விடும் பணியை வாரியம் துவங்கியது. நவம்பர் 12 அன்று ஏலம் விடுவதாக இருந்த நிலையில், அதற்கு 3 நாட்களுக்கு முன்பே, திமுகவினர் இதுபற்றி துறை அமைச்சர் முத்துசாமியிடம் பேசி, ஏலத்தைத் தடுத்து நிறுத்திவிட்டதாக மக்களிடம் தெரிவித்தனர். கோவைப்புதுார் பகுதிகளில் மக்களுக்கு இனிப்புகளை வழங்கி, பல இடங்களில் பிளக்ஸ் பேனர்களை வைத்து, பட்டாசு வெடித்தனர். ஆனால் ஏலம் கைவிடப்பட்டதாகவோ, மைதானம் அதே நிலையில் நீடிக்குமென்றோ அரசு அல்லது வீட்டுவசதி வாரியம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. படக்குறிப்பு, மைதானத்தை மீட்டு விட்டதாக அறிவித்து பட்டாசு வெடித்த திமுகவினர் இதனால் ஏலத்துக்கு முந்தைய நாளான நவம்பர் 11 ஆம் தேதியன்று, அதிமுக சார்பில் 'இந்த மைதானத்தை ஏலம் விடும் திட்டத்தைக் கைவிடவேண்டும்' என்ற கோரிக்கையுடன், குனியமுத்துார் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசிய போது, ''தமிழக அரசே இந்த மைதானத்தை ஏலம் விடுவதற்கு டெண்டர் விட்டநிலையில், அதை திமுகவினரே மீட்டு விட்டதாக பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது மக்களை ஏமாற்றும் நாடகம். இந்த மைதானத்தை முழுமையாக மீட்கும் வரையிலும் அதிமுகவின் போராட்டம் தொடரும்" என்றார். படக்குறிப்பு, மைதானம் ஏலம் விடப்படுவதை எதிர்த்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ''மைதானமல்ல; மருத்துவமனை, பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடம்!'' ஆனால் ஏலம் ரத்து செய்யப்பட்டது தெரிந்தபின்பே, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகச் சொல்கிறார் கோவைப்புதுார் பகுதி முன்னாள் திமுக கவுன்சிலர் முரளி. இவர் அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாகியாகவும் இருக்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய முரளி, ''கடந்த மாதத்தில் மைதானத்தை ஏலம் விட டெண்டர் விட்டதுமே, மாவட்டச் செயலாளர் ரவியிடம் தெரிவித்தோம். அவரும் துணை மேயர் வெற்றிச்செல்வனும் இணைந்து அமைச்சர் முத்துசாமியிடம் பேசிவிட்டனர். அவரும் உரிய அதிகாரிகளிடம் பேசி, ஏலம் விடும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறிவிட்டார். அது உறுதியானபின்புதான் நாங்கள் இனிப்பு வழங்கி பட்டாசுகளை வெடித்தோம். ஆனால் இதுதெரிந்ததும் அதிமுகவினர் அவசர அவசரமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.'' என்றார். அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில், வேலுமணி தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும், இந்த மைதானத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். அதேபோன்று அதிமுக ஆட்சியில்தான் விளையாட்டு மைதானம், பூங்கா உள்ளிட்ட பொது ஒதுக்கீட்டு இடங்கள் அதிகளவில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது என்று ஒரு பட்டியலையும் கொடுத்தார். இந்த மைதானத்தை ஏலம் விடுவது தொடர்பாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கோவைப்பிரிவு நிர்வாகப் பொறியாளர் ஜேக்கப்பிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''அந்த இடம் வீட்டு வசதி வாரிய மனைப்பிரிவில் மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடம். பல ஆண்டுகளாக காலியாக இருந்ததால் பொதுமக்கள் மைதானமாகப் பயன்படுத்திவந்தனர். இப்போது வாரியத்தின் இடங்களை மீட்டு விற்பனை செய்யும் நடவடிக்கையில் இந்த ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசின் அறிவுறுத்தலின்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் இந்த விளையாட்டு மைதானம் குறித்து அரசின் முடிவை தெரிந்து கொள்ள , துறையின் அமைச்சர் முத்துசாமியை பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவரிடம் பதில் பெறமுடியவில்லை. வணிக வளாகமாக மாறிய மைதானம்! சமீபத்திய ஆண்டுகளாக தமிழகத்தில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது ஒதுக்கீட்டு இடங்கள், வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது என்பது சர்வசாதாரணமாக நடப்பதாகக் குற்றம்சாட்டுகிறது தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கம். இவ்வமைப்பின் தலைவரான தியாகராஜன், இதுதொடர்பாக ஏராளமான ஆதாரங்களுடன் பெரும் பட்டியலை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், மாநகராட்சிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை அவர் காண்பித்தார். அதேபோன்று கோவை ராமநாதபுரம் பகுதியில் மாஸ்டர் பிளானில் 60 சென்ட் இடம் விளையாட்டு மைதானமாகவும், 100 அடி ரோடாகவும் இருந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற நடந்த முயற்சிகள், வழக்கு விபரங்களையும் வீரப்பத்தேவர் காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பகிர்ந்தனர். படக்குறிப்பு, தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத் தலைவர் தியாகராஜன் அங்குள்ள நுாறடி ரோட்டை 60 அடியாகக் குறைக்கவும், விளையாட்டு மைதானத்தை மனையிடமாக மாற்றவும் கோவை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு நகர ஊரமைப்புத்துறையும் கடந்த 2010 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. அதற்கு எதிராக குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கில், நுாறடி ரோடு, விளையாட்டு மைதானத்துக்கான ஒதுக்கீட்டை மாற்றக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை அந்த இடம் விளையாட்டு மைதானமாக மேம்படுத்தப்படவில்லை. ''ஒரு மனைப்பிரிவு உருவாக்கப்படும்போது அந்த மனைப்பிரிவில் பூங்கா, குழந்தைகள் விளையாடும் இடம், விளையாட்டு மைதானம் ஆகிய பொது ஒதுக்கீட்டு இடங்களைக் காண்பித்து, அதன்படியே தொழில்நுட்ப அனுமதி வழங்கப்படுகிறது. அந்த இடங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது என்பதுடன், ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை அதற்கான அறிவிக்கையை வெளியிட்டு அந்த இடங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல்கள் சட்டத்தில் (TAMIL NADU PARKS, PLAY-FIELDS AND OPEN SPACES (PRESERVATION AND REGULATION) ACT, 1959) உள்ளது.'' என்றார் தியாகராஜன். ஆனால் அதை அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் செய்வதில்லை என்பதுதான் இவர் உட்பட பலருடைய குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளின் ஒருமித்த குற்றச்சாட்டாகவுள்ளது. மதுரை மாநகராட்சி ஹார்வி நகரில் மதுரை மில் தொழிலாளர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் தனியாருக்கு ஒரு ஏக்கர் விளையாட்டுத் திடலை மோசடியாக விற்பனை செய்ததாக குற்றம் சாட்டுகிறார் ஜெகன். ஹார்வி நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் ஜெகன், ''நகருக்குள் இருந்த ஒரு ஏக்கர் பரப்பளவு விளையாட்டு மைதானத்தை மோசடியாக விற்பனை செய்துவிட்டனர். பட்டா ஆக்கிரமிப்பாளர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அந்த இடத்தை மருத்துவமனையாகப் பயன்படுத்தி வருகின்றனர். நாங்கள் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.'' என்கிறார். 'ஏழை குழந்தைகளுக்கு மைதானம் இல்லை' இதேபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்களும், பொது ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக ஏராளமான வழக்குகளை நடத்தி வருகின்றன. பொது ஒதுக்கீட்டு இடங்களில் விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்குவதே குறைவு என்ற நிலையில், அப்படி ஒதுக்கப்படும் இடங்களையும் வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதால் ஏழைக்குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களே இல்லாத நிலை ஏற்பட்டு வருவதாக விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஓய்வு பெற்ற விளையாட்டு ஆசிரியர் ரஞ்சித், ''முன்பெல்லாம் நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் ஆங்காங்கே விளையாட்டு மைதானங்கள் இருக்கும். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இப்போது நகரங்களில் பெரிய பெரிய ஸ்டேடியங்களை அரசு கட்டுகிறது. தனியாரால் நிறைய 'டர்ஃப்' போன்ற மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏழைக் குழந்தைகள் விளையாடுவதற்கான மைதானங்கள் மாயமாகிவருகின்றன. அரசு உடனே கவனிக்க வேண்டிய விஷயம் இது.'' என்கிறார். தமிழகத்தில் பொது ஒதுக்கீடு செய்யும் இடங்களைப் பராமரிக்க வேண்டியது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும். ஆனால் நகர ஊரமைப்புத்துறையின் ஒப்புதலுடனே இந்த இடங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதாகச் சொல்கிறார்கள் ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத்தினர். இதுகுறித்து கருத்து கேட்க அமைச்சர் முத்துசாமி, நகர ஊரமைப்பு இயக்குநர் ஆகியோரை தொடர்பு கொண்டபோது அவர்களிடம் பதில் பெறவே முடியவில்லை. படக்குறிப்பு, தமிழ்நாடு ஆர்டிஐ ஆர்வலர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹக்கீம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக, தங்கள் அமைப்பினர் வாங்கிய தகவல்களில் மாநிலம் முழுவதும் ஏராளமான பொது ஒதுக்கீட்டு இடங்கள், வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று கூறும் தமிழ்நாடு ஆர்டிஐ ஆர்வலர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹக்கீம், ''வசதி படைத்தவர்கள் பொழுதுபோக்குக்கும், உடற்பயிற்சிக்கும் எங்கேயும் செல்வார்கள். ஏழைகளுக்கு பூங்காக்களை விட்டால் வேறிடமில்லை. இந்த மைதானங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை எந்த வகையிலும் ஏற்கவே முடியாது.'' என்கிறார். மேலும் பிபிசி தமிழிடம் பேசிய அவர், கோவையில் மட்டும் பொது ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று குறிப்பிட்டார். இந்த வழக்குகள் சார்பு நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையிலும் விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதே போன்று தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3epkqwj8w9o
-
டிசம்பர் முதல் வாரத்தில் டெல்லி செல்கிறார் டில்வின்
Published By: Digital Desk 1 16 Nov, 2025 | 07:46 AM மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது டெல்லியில் உயர்மட்ட அரசியல் சந்திப்புகளில் டில்வின் சில்வா தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி குழு பங்கேற்கவுள்ளது. இலங்கை அரசியலிலும், பிராந்திய இராஜதந்திரத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா விஜயத்தை பார்க்கப்படுகிறது. ஜே.வி.பி.யின் ஆரம்ப கொள்கைப் பிடிப்புகளில், 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடியதில் டில்வின் சில்வா முக்கியப் பங்காற்றினார். இந்தியாவின் பிராந்தியத் தலையீட்டை அன்றும் கடுமையாக எதிர்த்த ஜே.வி.பி., தற்போது அதன் பொதுச் செயலாளரை இந்தியாவுக்கு அனுப்புவது, கட்சியின் நீண்டகால வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு பாரிய இராஜதந்திர மாற்றம் நிகழ்வதைச் சுட்டிக்காட்டுகிறது. அவர் இந்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் செல்கிறார். இந்த விஜயம் ஜே.வி.பி.யானது பிராந்திய சக்தியாகிய இந்தியாவுடன் நேரடி உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளத் தயாராகிவிட்டதைக் காட்டுகிறது. ஜனாதிபதி சீனாவிற்குப் பயணம் செய்து ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது அனைவரும் அறிந்ததே. ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வாவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்குப் பிறகு சீனாவில் நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயங்களின் போது ஜே.வி.பி.யின் தலைவர்கள் சீனாவுடன் முதலீட்டு உறவுகளை மேலும் வலுவாக முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்களை எடுத்தததாக செய்திகள் வெளியாகின. சீனாவுடனான உறவுகளைப் பலப்படுத்தியதன் பின்னணியில், இந்திய விஜயம் என்பது, இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்த விரும்பும் ஒரு கட்சி, பிராந்திய வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர சமநிலையை நிலைநாட்ட முற்படுவதைக் காட்டுகிறது. ஒரு நாடு சார்ந்து சாய்ந்துவிடாமல், இரு நாடுகளிடமிருந்தும் ஆதரவைப் பெற அல்லது அவர்களின் கவலைகளைத் தணிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இது அமைகிறது. இந்தச் சூழ்நிலையில், டில்வின் சில்வாவின் டெல்லி விஜயம், ஜே.வி.பி.யின் தலைவர்கள் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கான ஒரு முயற்சியாக பிரதிப்பலிக்கிறது. உயர் மட்ட அரசியல் சந்திப்புகளில் அவர் பங்கேற்பது, எதிர்காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றினால், இந்தியாவுடனான பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளைப் பேணுவதில் ஜே.வி.பி. உறுதியாக உள்ளது என்பதற்கான சமிக்ஞையாகும். மறுபுறம் இந்தியாவுடனான கடந்தகால முரண்பாடுகள் மற்றும் கடுமையான விமர்சனங்கள் தொடர்பில், இந்தியத் தலைமைக்கு நேரடியாக இராஜதந்திர விளக்கமளித்து, புதிய உறவுப் பாதையைத் தொடங்குவதற்கு இந்த விஜயம் ஒரு வாய்ப்பை வழங்கலாம். டில்வின் சில்வாவின் இந்திய விஜயம் என்பது ஜே.வி.பி.யின் இராஜதந்திரக் கொள்கையில் ஒரு வியத்தகு மாற்றத்தையும், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பிராந்திய வல்லரசுகளுடன் முரண்படாமல் சமநிலை உறவைப் பேணுவதற்கான விருப்பத்தையும் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230454
-
தமிழ் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு: தொல். திருமாவளவனிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை
Published By: Vishnu 16 Nov, 2025 | 02:40 AM இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழதமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிரந்தர தீர்வினை பெற்று தர வேண்டும். அதற்கு தமிழக அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என தொல் திருமாளவனிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் வலியுறுத்தியுள்ளனர் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் 'கார்த்திகை வாசம்' மலர்க்கண்காட்சியை திறந்து வைக்க யாழ்ப்பாணம் வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் , இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 39 வருடங்களாக முடக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட விடயங்களை அமுல் படுத்தாமல் , ஒற்றையாட்சியின் கீழான 13ஆம் திருத்தம் என்கிற விடயத்தோடு நிற்கிறது. இதனால் தமிழ் மக்களின் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத நிலைமைக்கு சிக்கு பட்டு இருக்கிறோம். ஆகவே இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனில் இந்திய மத்தியஅரசு தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். இலங்கை பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இந்தியாவின் உதவி தேவை தெற்கில் இந்தியாவை எதிர்த்தவர்கள் கூட பொருளாதார காரணிகளுக்காக இந்தியாவுடன் ஒத்து போகும் நிலைமைக்கு வந்துள்ளனர். அதனால் இந்திய மத்திய அரசு இலங்கையுடனான பேரம் பேசும் தன்மை வலுப்பெற்று உள்ளது இந்த நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை சந்தித்த ஈழ தமிழர்கள் இந்த சந்தர்ப்பை பயன்படுத்த வேண்டும். அதனால் தொல். திருமாவளவனை சந்தித்து இந்த விடயங்களை தெளிவு படுத்தியுள்ளோம் தமிழகத்தின் ஆட்சியின் பங்காளி அவர். ஈழ தமிழர்களின் விடயம் தொடர்பிலும் , இன்றைக்கு இருக்க கூடிய 13ஆம் திருத்தம் தொடர்பிலும் அதில் உள்ள பிரச்சனைகள் தொடர்பிலும் மிக தெளிவாக எடுத்து கூறியுள்ளோம். அதேபோன்று இலங்கையில் உள்ள சட்டங்கள் தொடர்பிலும் தெளிவாக எடுத்து கூறியுள்ளோம். தமிழக அரசு , ஈழ தமிழர்கள் விடயங்கள் தொடர்பில் ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுக்க அவரின் ஒத்துழைப்பை மிக அவசியம். அதனை அவர் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தியுள்ளோம். விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் இனவழிப்புக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகிறது இன்றைக்கு உயிர்கள் பறிக்கப்படாது விடினும் எங்களுடைய இருப்பு இல்லாமல் போகிறது பொருளாதார ரீதியாக தமிழ் தேசம் பலவீனம் அடைந்துள்ளது. தமிழ் மக்களின் பொருளாதார இருப்பு , திட்டமிட்டு வேறு தரப்பினருக்கு மாற்றப்படுகிறது தமிழ் சிங்களம் முஸ்லீம் என்ற வேறுபாடு பேசாது நாம் இலங்கையர் என இந்த அரசாங்கம் கூறிக்கொண்டு தமிழர்களின் இருப்பை அழித்து வருகின்றனர். திட்டமிட்டு தமிழர்களை பலவீனப்படுத்தி வருகின்றனர். இதனை உலகத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளை ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழகம் ஈழ தமிழர்கள் விடயத்தில் தொடர்ச்சியாக மௌனம் காத்து வருவதும் தமிழ் மக்களுக்கு பலவீனமாக உள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஈழ தமிழர்கள் விடயத்தில் ஆக்கப்பூர்வமான விடயங்களை முன்னெடுத்து, அனைத்து தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வினை இலங்கை அரசாங்கம் வழங்க இந்தியவை அழுத்தம் கொடுக்க வைக்க வேண்டும் என அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இன்றைய சந்திப்பில் தொல் திருமாளவனிடம் நாம் வலியுறுத்தியுள்ளோம். https://www.virakesari.lk/article/230452
-
ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை மரபணு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்ன?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அடால்ஃப் ஹிட்லர் கட்டுரை தகவல் டிஃப்பனி வெர்தைமர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அடால்ஃப் ஹிட்லரின் ரத்த மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ ஆய்வு, அவரது வம்சாவளி மற்றும் உடல்நிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச நிபுணர்கள் குழு, அவரது ரத்தக் கறை படிந்த பழைய துணியைப் பயன்படுத்தி கடினமான விஞ்ஞான பரிசோதனைகளை மேற்கொண்டது. இதில், ஹிட்லருக்கு யூத வம்சாவளி இருந்ததாகப் பரவிய வதந்தி உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டது. அதோடு அவருக்கு பாலியல் உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கும் ஒரு மரபணுக் கோளாறு இருந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஹிட்லருக்கு சிறிய ஆணுறுப்பு இருந்ததா அல்லது ஒரே ஒரு விதைப்பை மட்டுமே இருந்ததா என்பன போன்ற பரபரப்பூட்டும் தலைப்புகளில் ஒருபுறம் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், ஹிட்லரின் டிஎன்ஏ-வில் ஆட்டிசம், ஸ்கிசோஃப்ரினியா, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்றவை மரபணு மூலம் ஏற்படுவதற்கான சாத்தியம் மிக உயர்ந்த அளவில் இருந்தது என்பதுதான் இதில் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு. அப்படியென்றால் அவருக்கு இந்த நரம்பியல் பிரச்னைகள் இருந்ததாகக் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பினால், இல்லை, அவருக்கு இந்த நோய்கள் இருந்தன என்று அர்த்தமல்ல என்று நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். அதே நேரம், இந்த ஆராய்ச்சி எதிர்மறையான பார்வைக்கு வழிவகுக்குமா, அது நெறிமுறை ரீதியாக சரியானதா என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இதனால், இதுகுறித்த ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. "இந்த ஆய்வை செய்ய வேண்டுமா என்று நிறைய யோசித்தேன்"என சேனல் 4இன் 'ஹிட்லரின் டிஎன்ஏ: ஒரு சர்வாதிகாரியின் ப்ளூபிரின்ட் (Hitler's DNA: Blueprint of a Dictator)' என்னும் ஆவணப்படத்தின் தொடக்கத்தில் பேராசிரியர் துரி கிங் கூறுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் பங்கேற்க அவரை அணுகியபோது, ஹிட்லர் போன்ற சர்ச்சைக்குரிய நபரை ஆய்வு செய்வதில் ஏற்படும் விளைவுகளை அவர் நன்கு அறிந்திருந்தார். "பரபரப்பை உருவாக்குவதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை," என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால், இந்த ஆய்வு ஒருநாள் யாராவது ஒரு நபரால் செய்யப்படும். குறைந்தது தனது கண்காணிப்பின் கீழ் நடந்தால், அறிவியல் தரநிலைகளுடனும், "முழு எச்சரிக்கைகளுடனும்" நடைபெறும் என்பதை உறுதிசெய்ய முடியும் என்பதால் இதைச் செய்ய விரும்பினேன் என்கிறார். பேராசிரியர் கிங் இத்தகைய முக்கியமான மற்றும் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகளில் அனுபவம் வாய்ந்தவர். இவர் 2012இல் லெஸ்டரில் கார் நிறுத்துமிடத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது ரிச்சர்டின் எலும்புக்கூட்டினுடைய அடையாளத்தை உறுதிப்படுத்திய மரபணு ஆய்வை வழிநடத்தியவர். பட மூலாதாரம், Gettysburg Museum of History படக்குறிப்பு, ஹிட்லரின் பதுங்கும் இடத்தில் இருந்த சோபாவில் இருந்து வெட்டப்பட்ட துணி. ரத்தக் கறையை கீழ்-இடது புறத்தில் தெளிவாகக் காணலாம். ஹிட்லரின் ரத்தக் கறை படிந்த துணி ரத்தக் கறை படிந்த அந்தத் துணி, 80 ஆண்டுகள் பழமையானது. அது இரண்டாம் உலகப் போரின் முடிவில், நேச நாட்டுப் படைகள் பெர்லினை நோக்கி முன்னேறியபோது, ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட அவரது நிலத்தடி மறைவிடத்தில் இருந்த சோபாவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. அந்தப் மறைவிடத்தை ஆய்வு செய்த அமெரிக்க ராணுவ கர்னல் ரோஸ்வெல் பி. ரோஸென்கிரென், இந்தத் துணியை ஓர் அபூர்வமான போர் நினைவுச் சின்னமாகக் கருதி எடுத்துச் சென்றார். இப்போது அந்தத் துணி அமெரிக்காவின் கெட்டிஸ்பர்க் வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் துணியில் உள்ள ரத்தம் உண்மையாகவே ஹிட்லருடையதுதான் என்று விஞ்ஞானிகள் உறுதியாகக் கருதுகிறார்கள். ஏனெனில், பத்து ஆண்டுகளுக்கு முன் ஹிட்லரின் ஆண் உறவினரிடம் இருந்து எடுத்த டிஎன்ஏ மாதிரியுடன் Y-குரோமோசோம் சரியாகப் பொருந்தியதால், இது ஹிட்லரின் ரத்தம் என்பதை விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள். தற்போது சக மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவுகள், ஆச்சர்யம் அளிக்கக் கூடியவை. வரலாற்றில் முதல் முறையாக ஹிட்லரின் டிஎன்ஏ அடையாளம் காணப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் ஆய்வில், மிக மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவருடைய மரபணு அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், ஹிட்லர் யூத வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ஆய்வு முடிவு முக்கியமானது. ஏனென்றால், 1920களில் இருந்து அவர் யூத மரபுகளின் வேர்களைக் கொண்டிருக்கலாம் என்று ஒரு வதந்தி பரவியிருந்தது. பட மூலாதாரம், Hulton Archive/Getty Images மேலும், அவருக்கு கால்மன் சிண்ட்ரோம் (Kallmann syndrome) எனப்படும் மரபணுக் கோளாறு இருந்திருக்கலாம் என்றும் ஆய்வு கூறுகிறது. இதனால் பருவமடைதல் மற்றும் பாலியல் உறுப்புகள் உருவாகும் முறை பாதிக்கப்படலாம். குறிப்பாக, சிறிய ஆணுறுப்பு மற்றும் விதைப்பை இறங்காமல் இருப்பது போன்ற நிலைகளுக்கு இது காரணமாக இருக்கலாம். இதுகுறித்து போர்க்கால பிரிட்டிஷ் பாடல்களில் கூறப்பட்ட வதந்திகளும் இருந்தன. கால்மன் சிண்ட்ரோம் பாலியல் உணர்வையும் பாதிக்கக்கூடும். இது மிகவும் சுவாரஸ்யமான கோணமாக இருப்பதாக, ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்று ஆசிரியரும் போட்ஸ்டாம் பல்கலைக்கழக விரிவுரையாளருமான அலெக்ஸ் கே குறிப்பிடுகிறார். "இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நிறைய சொல்கிறது. சரியாகச் சொன்னால், அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லையென்பதை வெளிப்படுத்துகிறது," என்று அவர் விளக்குகிறார். ஹிட்லர் வாழ்நாள் முழுவதும் அரசியலுக்காகத் தன்னை அர்ப்பணித்தது ஏன் என்பது குறித்தும், "அவருக்கு ஏன் தனிப்பட்ட வாழ்க்கை இல்லை" என்பது குறித்தும் வரலாற்றாசிரியர்கள் பல ஆண்டுகளாக விவாதித்து வருகிறார்கள். மரபணு சார்ந்த இந்தக் கண்டுபிடிப்புகள் அதற்கான விளக்கத்தை வழங்கக்கூடும். இத்தகைய கண்டுபிடிப்புகளே இந்த ஆய்வை சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். பேராசிரியர் துரி கிங் சொல்வது போல, இது "வரலாற்றையும் மரபியலையும் பிணைக்கும்" முயற்சி. பட மூலாதாரம், Tom Barnes/Channel 4 படக்குறிப்பு, மரபியல் நிபுணர் பேராசிரியர் துரி கிங் மற்றும் வரலாற்றாசிரியர் அலெக்ஸ் கே கவலை தெரிவிக்கும் மரபணு நிபுணர்கள் ஹிட்லருக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்பியல் அல்லது மனநலக் குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்று கூறும் முடிவுகள் மேலும் சிக்கலானவையாக, சர்ச்சைக்குரியவையாக உள்ளன. அவருடைய மரபணுவைப் பரிசோதித்து, பாலிஜெனிக் மதிப்பெண்களுடன் ஒப்பிட்டபோது, ஹிட்லருக்கு ஆட்டிசம், ஏடிஹெச்டி, ஸ்கிசோஃப்ரினியா, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்றவை இருப்பதற்கான சாத்தியம் அதிகம் இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இங்குதான் அறிவியல் ரீதியான சிக்கல் ஏற்படுகிறது. பாலிஜெனிக் மதிப்பெண் என்பது ஒருவரின் டிஎன்ஏ-வை ஆராய்ந்து, அவருக்கு ஒரு நோய் உருவாகும் சாத்தியம் என்ன என்பதை மதிப்பிடும் முறை. இதய நோய் அல்லது பொதுவான புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கான முன்கணிப்பை அறிய இது உதவுகிறது. ஆனால் இது ஒரு பெரிய மக்கள் தொகையின் தரவுகளுடன் ஒப்பிட்டு மதிப்பிடப்படுவதால், ஒரு தனிநபருக்கான முடிவுகளை வழங்கும்போது அது எப்போதும் துல்லியமானதாக இருக்காது. பிபிசி பார்த்த இந்த ஆவணப்படம் முழுக்க தொடர்ச்சியாக, இந்த டிஎன்ஏ ஆய்வு ஒரு நோயறிதல் அல்ல, மாறாக முன்கூட்டியே இருந்த சாத்தியத்தை வெளிப்படுத்தும் ஓர் அறிகுறி மட்டுமே என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது, ஹிட்லருக்கு இந்தப் பிரச்னைகள் அனைத்தும் இருந்தன என்று அர்த்தமில்லை, இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை மட்டுமே ஆய்வு முடிவு காட்டியுள்ளது. ஆனால் சில மரபணு நிபுணர்கள் இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம், Haacker/Hulton Archive/Getty Images படக்குறிப்பு, ஹிட்லர் மற்றும் அவரது மனைவி ஈவா பிரௌன் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்படும் பங்கர் கடந்த 2018இல் இதே ரத்த மாதிரியை ஆய்வு செய்த லண்டன் கிங்ஸ் கல்லூரியின் தடயவியல் மரபியல் பேராசிரியர் டெனிஸ் சின்டர்கோம்ப் கோர்ட், இந்த முடிவுகள் "மிகைப்படுத்தப்பட்டவை" என்று கருதுகிறார். "ஒருவரின் குணநலன்கள் அல்லது நடத்தையை இதன் மூலம் தீர்மானிப்பது பயனற்றது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "மரபணுவில் சாத்தியம் இருந்தாலும், அது எல்லோரிடமும் நோயாக வெளிப்படாது (incomplete penetrance). அதனால், இந்த ஆய்வு முடிவுகளை வைத்து ஒருவருக்கு நோய் இருக்கிறதா என்று நான் கணிக்க விரும்பவில்லை" என்று அவர் விளக்கினார். இதையே மரபணு விஞ்ஞானி சுந்தியா ராமன் எளிமையாகச் சொல்கிறார். அதாவது, "உங்கள் டிஎன்ஏவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாலேயே, அது உங்கள் உடலில் வெளிப்பட்டுவிடும் என்று அர்த்தமில்லை." ஆவணப் படத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆட்டிசம் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சைமன் பாரன்-கோஹனும் இதே கருத்தை முன்வைக்கிறார். "உடலியல் (மரபணு) தகவல்களில் இருந்து ஒருவரின் நடத்தை பற்றிய நேரடி முடிவுக்கு வருவது சரியானதாக இருக்காது" என்கிறார் அவர். "இவ்வாறான மரபணு முடிவுகளை வெளியிடும்போது எதிர்மறை கருத்து உருவாக வாய்ப்புண்டு. 'எனக்கு இருக்கும் மருத்துவ நிலை, இத்தகைய கொடூர செயல்களைச் செய்த ஒருவருடன் இணைக்கப்படுகிறதா?' என்று மக்கள் தவறாக நினைக்கக்கூடும்" என்று குறிப்பிடுகிறார். அதேபோல்,"எல்லாவற்றையும் மரபணுவோடு மட்டும் சுருக்கிப் பார்க்கும் மனப்பான்மை இதிலுள்ள ஒரு பெரிய ஆபத்து" எனக் கூறும் அவர், ஏனென்றால் பரிசீலிக்க வேண்டிய பல்வேறு காரணிகள் இன்னும் உள்ளன என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த 1889ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் அடால்ஃப் ஹிட்லரின் குழந்தைப் பருவ புகைப்படம் 'இதுவொரு மலிவான செயல்' இந்தக் கண்டுபிடிப்புகளை "ஒரு மலிவான செயல்" என்று கூறி, பிரிட்டனின் தேசிய ஆட்டிசம் சங்கம் இந்த ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "மேலும், தரமற்ற அறிவியல் ஆய்வைவிட, இந்த ஆவணப்படம் ஆட்டிசம் உள்ளவர்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத விதம்தான் எங்களை அதிர்ச்சியடையச் செய்தது," என்று ஆராய்ச்சி உதவி இயக்குநர் டிம் நிக்கல்ஸ் அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், "ஆட்டிசம் உள்ளவர்கள் இதைவிடச் சிறந்த அணுகுமுறைக்குத் தகுதியானவர்கள்," என்றும் அவர் வலியுறுத்தினார். பிபிசி இந்த விமர்சனங்களை சேனல் 4 மற்றும் ஆவணப்படத்தை தயாரித்த ப்ளிங்க் பிலிம்ஸ் நிறுவனத்திடம் முன்வைத்தது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், பேராசிரியர் சைமன் பாரன்-கோஹன் உள்ளிட்ட நிபுணர்கள் இது குறித்து தெளிவாக விளக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். "ஒருவரின் நடத்தை பல காரணிகளின் விளைவாக உருவாகிறது. அது மரபணுவால் மட்டுமே உருவாவதில்லை. மாறாக, குழந்தைப் பருவம், வாழ்க்கை அனுபவங்கள், வளர்ப்பு, கல்வி, கிடைக்கும் வாய்ப்புகள், சமூகம், கலாசாரம் உள்ளிட்ட பல அம்சங்களால் உருவாகிறது." "இந்த ஆவணப்படம் ஹிட்லரை பற்றி சில மரபணு சார்ந்த தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலும், அவர் ஒரு குறிப்பிட்ட முறையில் நடந்து கொள்வது 'முன்பே உயிரியல் ரீதியாக நிர்ணயிக்கப்பட்டது' என்று சொல்லவில்லை." பட மூலாதாரம், Stephanie Bonnas படக்குறிப்பு, "ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்தபோது, நான் ஒரே நேரத்தில் உற்சாகத்துடனும் கவலையுடனும் இருந்தேன்," என்று பேராசிரியர் தாமஸ் வெபர் கூறினார். ஆவணப்படத்தின் பெயரே, குறிப்பாக "Blueprint of a Dictator" என்ற இரண்டாம் பகுதி பலரின் கவனத்தையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. இந்தப் பெயரை "நான் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன்" என்று பேராசிரியர் துரி கிங் கூறுகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள வரலாற்றாசிரியர் பேராசிரியர் தாமஸ் வெபர், "சர்வாதிகாரி மரபணு என்ற ஒன்றே இல்லை" என்று தாங்கள் வலியுறுத்தி இருந்தபோது, இப்படிப்பட்ட தலைப்பு பயன்படுத்தப்பட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார். பிபிசியிடம் பேசுவதற்கு முன்பு வரை, அந்த ஆவணப்படத்தைப் பார்க்காத பேராசிரியர், டிஎன்ஏ பகுப்பாய்வு உற்சாகமூட்டுவதாகவும் கவலையளிப்பதாகவும் இருப்பதாகக் கூறினார். "ஹிட்லரை பற்றி நான் முன்பே சந்தேகித்த பல விஷயங்களை இந்த மரபணு ஆய்வு உறுதிப்படுத்தியதால், உற்சாகமாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஒருவரை தவறான பண்பு கொண்டவராக மாற்றும் ஒரு 'தீய மரபணு' இருப்பதாக நினைத்து, மக்கள் மரபியலை தவறாக அல்லது மிகையாகப் புரிந்துகொள்வார்களோ" என்று அவர் கவலை தெரிவித்தார். குறிப்பாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்டிசம் மற்றும் பிற சிக்கல்களுடன் வாழும் நபர்களால் இது எவ்வாறு புரிந்துகொள்ளப்படும் என்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். பொது மக்களுக்கு சிக்கலான அறிவியலை விளக்கும் ஒரு துல்லியமான ஆவணப்படத்தை உருவாக்குவதில் பல சிரமங்களும் ஆபத்துகளும் உள்ளன. "இது தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதால், சில நேரங்களில் விஷயங்களை எளிமைப்படுத்த வேண்டியிருக்கும்," என்று பேராசிரியர் கிங் கூறுகிறார். ஒரு விஞ்ஞானியாகத் தனது பொறுப்புகளையும் ஊடக உலகின் எதார்த்தங்களையும் சமநிலைப்படுத்துவதில் அவர் அனுபவம் வாய்ந்தவர். "ஆவணப்படத்தை தயாரிப்பவர்கள் வேறொரு வழியில் எடுத்திருந்தால், இது மிகப் பரபரப்பானதாக மாறியிருக்கும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. சில நுணுக்கங்களைப் பாதுகாக்க முயன்றுள்ளனர். மேலும் நாங்களும் தேவையான பாதுகாப்பு வரம்புகளைச் சேர்த்துள்ளோம்" என்று அவர் கூறினார். சேனல் 4, இந்த ஆவணப் படத்தின் பெயரைப் பாதுகாத்து, "டிஎன்ஏ-வை பொதுவாக 'வாழ்க்கையின் வரைபடம்' (blueprint of life) என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள்" என விளக்கியது. மேலும், தங்களின் பணி "பெரிய பார்வையாளர் வட்டத்தைச் சென்றடையும் நிகழ்ச்சிகளை உருவாக்குவதுதான். இந்த ஆவணப்படம் சிக்கலான அறிவியல் கருத்துகளையும் வரலாற்று ஆய்வுகளையும் அனைவருக்கும் எளிதாகக் கொண்டு சேர்க்க முயல்கிறது" எனவும் தெரிவித்தது. பட மூலாதாரம், Alamy படக்குறிப்பு, கடந்த 1945இல் நேச நாட்டுப் படைகளின் செய்தியாளர்கள் ஹிட்லரின் பதுங்கும் மறைவிடத்தில் சோபாவை ஆய்வு செய்கிறார்கள். நாற்காலியின் கைப்பிடியில் காணப்படும் கறை ரத்தக்கறை என்று கூறப்படுகிறது. நெறிமுறைகள் குறித்து எழும் கேள்விகள் இந்தத் திட்டத்தின் நெறிமுறைகள் குறித்தும் பல கேள்விகள் உள்ளன. 'ஹிட்லரின் அனுமதியையோ அல்லது அவரது நேரடி வாரிசின் அனுமதியையோ பெற முடியாத நிலையில், அவரது டிஎன்ஏ-வை ஆய்வு செய்ய வேண்டுமா? அவர் வரலாற்றின் மிகக் கொடூரமான குற்றங்களுக்குக் காரணமானவர் என்பதால், அது அவருக்கு தனியுரிமை என்ற ஒன்று இல்லாமல் போகிறதா?' என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. "இவர் ஹிட்லர். யாராலும் அணுக முடியாத மாய மனிதர் அல்ல. அவரின் டிஎன்ஏ-வை ஆய்வு செய்யக்கூடாது என்று யார் முடிவெடுக்கிறார்கள்?" என்று பேராசிரியர் கிங் கேட்கிறார். "விஞ்ஞானிகள் இதைத்தான் செய்கிறார்கள். இறந்த நூற்றுக்கணக்கான மனிதர்களின் டிஎன்ஏ ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொல்பொருள் துறையில் இது சாதாரண நடைமுறைதான். அதை நாம் எவ்வாறு விளக்குகிறோம் என்பதில்தான் சிக்கல் உருவாகிறது" என்று வரலாற்றாசிரியர் சுபத்ரா தாஸ் குறிப்பிடுகிறார். "உண்மைகள் சரியாக இருக்க வேண்டும், அனைத்தும் இருமுறை சரிபார்க்கப்பட வேண்டும்" என்றும் நெறிமுறை கோணத்தைப் பற்றித் தனக்கு கவலை இல்லை என்றும் கூறுகிறார் வரலாற்றாசிரியர் முனைவர் கே (Kay). ஹிட்லரின் டிஎன்ஏ ஆய்வு செய்யப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஹிட்லர் இறந்து 80 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவருக்கு நேரடி வாரிசுகளும், குழந்தைகளும் இல்லை. அவர் அளித்த துன்பம் அளவிட முடியாதது. அதை, அவரது டிஎன்ஏ ஆய்வில் உள்ள நெறிமுறை சிக்கலோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்" என்கிறார். சுவாரஸ்யமான விஷயமாக, ஐரோப்பாவின் பல ஆய்வகங்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டன. இறுதியில் அமெரிக்காவில் உள்ள ஓர் ஆய்வகம்தான் சோதனையை மேற்கொண்டது. இந்த ஆய்வு "கல்வித்துறையில் தேவையான அனைத்து நெறிமுறை மதிப்பாய்வு செயல்முறைகளையும் கடந்து முடிக்கப்பட்டது. மேலும் இது இரண்டு நாடுகளில் நடந்த மதிப்பாய்வுகளையும் உள்ளடக்கியது" என்று ஆவணப்பட தயாரிப்பாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். பட மூலாதாரம், General Photographic Agency/Hulton Archive/Getty Images படக்குறிப்பு, 1933ஆம் ஆண்டில் ஹிட்லர்... இந்த ஆய்வு அவசியமா? இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு ஒரே மாதிரியான பதில் இல்லை. பிபிசி பல மரபணு விஞ்ஞானிகளிடமும் வரலாற்றாளர்களிடமும் பேசியது. இந்தக் கேள்விக்கான பதில், நீங்கள் யாரிடம் கேட்கிறீர்கள் என்பதையே சார்ந்துள்ளது. ஆவணப் படத்தில் இடம்பெற்ற நிபுணர்கள், ஆம், இந்த ஆய்வு அவசியம் என்று சொல்வார்கள். "இந்த ஆய்வு ஹிட்லரின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது, அவர் இன்னமும் நம்மை ஈர்ப்பவராகவும், பயமுறுத்தும் ஒரு நபராகவும் உள்ளார்" என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. "கடந்த காலத்தின் பயங்கரவாதத்தைப் புரிந்துகொள்ள நம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்," என்கிறார் பேராசிரியர் வெபர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹிட்லர், பதுங்குமிடத்தில் தற்கொலை செய்து கொள்வதற்கு சற்று முன்பு ஈவா பிரௌனை மணந்தார். "நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில், இந்த விவாதங்கள் புதியவை அல்ல. நாம் திடீரென்று இந்தக் கருத்தை மக்களின் மனதில் விதைக்கவில்லை. ஹிட்லருக்கு சில மனநலக் கோளாறுகள் இருந்ததா என்பது குறித்து மக்கள் பல தசாப்தங்களாகப் பேசி வந்துள்ளனர்"என்கிறார் முனைவர் கே. ஆனால் எல்லா வரலாற்றாசிரியர்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. "ஹிட்லரின் செயல்களைத் தூண்டியது எது என்பதை விளக்க இதுவொரு சந்தேகத்திற்குரிய வழி என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் உட்ரெக்ட் பல்கலைக்கழக சர்வதேச வரலாற்று உதவிப் பேராசிரியர் இவா வுகுசிக். வெகுஜன வன்முறை எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யும் வுகுசிக், மக்கள் ஏன் இதில் ஆர்வம் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார். ஆனால் "நாம் தேடும் பதில்கள் டிஎன்ஏ சோதனையிலிருந்து கிடைக்கப் போவதில்லை"என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். மேலும், இந்த ஆய்வு சுவாரஸ்யமானது என்றாலும், இது வரலாற்றின் உண்மையான பாடங்களை மறைக்கும் அபாயம் இருப்பதாக வரலாற்றாசிரியர் ஆன் வான் மௌரிக் குறிப்பிடுகிறார். அதாவது, "சில சூழ்நிலைகளில் சாதாரண மனிதர்களே கொடூரமான வன்முறைகளில் ஈடுபடலாம், அதைத் தூண்டலாம் அல்லது அதைப் பொறுத்துக் கொள்ளலாம்" என்பதுதான் அந்தப் பாடம். ஹிட்லரின் (சாத்தியமுள்ள) சிறிய ஆணுறுப்பு போன்ற விவரங்களில் கவனம் செலுத்துவது, இனப்படுகொலை, வெகுஜன வன்முறை எப்படி செயல்படுகிறது, ஏன் நிகழ்கிறது என்பதைப் பற்றிய எந்தப் புரிதலையும் நமக்குக் கொடுக்காது என அவர் கூறுகிறார். இந்த ஆய்வு முடிந்து, தற்போது சக நிபுணர்கள் மதிப்பாய்வு செய்து வரும் நிலையில், ஒரு கட்டத்தில் இந்தக் கண்டுபிடிப்புகள் முழுமையாக வெளியே வரும். பேராசிரியர் வெபர் கூறுகையில், இந்த முடிவுகளை "மிகவும் கவனத்துடனும் நிதானத்துடனும்" பயன்படுத்த வேண்டும். ஆனால், இவை ஏதாவது ஒரு வகையில் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என அவர் நம்புகிறார். "ஆராய்ச்சி முடிவுகளின் சிறப்பு அதுதான். அதன் மதிப்பு 5 ஆண்டுகளுக்குப் பிறகோ, 150 ஆண்டுகளுக்குப் பிறகோ, 500 ஆண்டுகளுக்குப் பிறகோ தெரியலாம். இந்த ஆய்வு எதிர்காலத்திற்காக பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறுகிறார். ஆனால் இந்த முடிவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. "அறிவியலைப் பின்பற்ற வேண்டும். நமக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்" என்று முனைவர் கே கூறுகிறார். இது ஊடகங்களுக்கும் பொருந்தும். இந்த ஆய்வு எப்படி வெளியிடப்படுகிறது என்பதும் அதில் அடங்கும். "இந்த ஆவணப்படத்தைப் பார்ப்பவர்கள் துல்லியமாக எழுத வேண்டும். அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் சூழல் உருவாவதற்கோ அல்லது எதிர்மறை கருத்து உருவாவதற்கோ பங்களிக்கக்கூடாது" என்றும் அவர் குறிப்பிடுகிறார். "இதுபோன்ற ஆவணப்படங்கள் சமூகத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதவை. மக்களையும் நிகழ்வுகளையும் பாதிக்கக் கூடியது" என்று முனைவர் கே வலியுறுத்துகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3dn7zm733vo
-
பாகிஸ்தான் சர்வாதிகாரத்தை நோக்கி மீண்டும் நகர்கிறதா? ராணுவ தளபதிக்கு புதிய அதிகாரம்
15 நவம்பர் 2025, 04:21 GMT பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, ஃபீல்ட் மார்ஷல் முனீர், இனி கடற்படை மற்றும் விமானப்படை செயல்பாடுகளையும் மேற்பார்வை செய்வார். பாகிஸ்தான் ராணுவ தளபதியான ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு புதிய அதிகாரம் கொடுத்தும், கைது மற்றும் வழக்குகளிலிருந்து வாழ்நாள் விலக்கு அளித்தும் அந்நாட்டு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த முடிவு சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். வியாழக்கிழமை சட்டமாக ஆக்கப்பட்ட 27-வது அரசியலமைப்பு திருத்தம், நாட்டின் உயரிய நீதிமன்றங்கள் செயல்படும் முறையிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த முடிவை ஆதரிப்பவர்கள், இது ஆயுதப் படைகளின் நிர்வாகக் கட்டமைப்பில் ஒரு தெளிவைக் கொடுக்கும் என்றும், நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளைக் குறைக்க உதவும் என்றும் கூறுகிறார்கள். அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தானின் அரசியலில் ராணுவம் நீண்ட காலமாக முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. சில நேரங்களில் அரசை கவிழ்த்து ஆட்சியையும் பிடித்திருக்கிறது, பல நேரங்களில் பின்னால் இருந்து கட்டுப்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் தனது வரலாறு முழுவதுமே, மக்களாட்சிக்கும் (civilian autonomy) ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் மற்றும் ஜெனரல் ஜியா-உல்-ஹக் போன்ற ராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்கும் இடையே ஊசலாடி வந்திருக்கிறது. சிவில் மற்றும் ராணுவம் என இந்த இரு ஆட்சி முறைக்குமான சமநிலையை ஆய்வாளர்கள் 'கலப்பு ஆட்சி' (Hybrid Rule) என்கிறார்கள். இந்த அரசியலமைப்பு திருத்தம் அந்த சமநிலையை குலைத்து ராணுவத்திற்கு சாதகமான சூழலை உருவாக்குவதை நோக்கி நகர்வதாக ஒருசிலர் கருதுகிறார்கள். "என்னைப் பொறுத்தவரை இந்தத் திருத்தம், பாகிஸ்தான் கலப்பு ஆட்சி இல்லாமல், அதற்குப் பிந்தைய ஒரு ஆட்சிமுறையில் இருக்கிறது என்பதற்கான சமீபத்திய, பலமான அறிகுறி" என்கிறார் வாஷிங்டனில் உள்ள வில்சன் சென்டரின் தெற்காசிய நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன். "சிவில்-ராணுவ சமநிலை, எந்த அளவுக்கு அந்த சமநிலையைத் தவற முடியும் என்பதை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் அவர். நவம்பர் 2022 முதல் ராணுவ தளபதியாக இருக்கும் முனீர் இந்த சமீபத்திய திருத்தத்தின் மூலம் ஃபீல்டு மார்ஷலாகியுள்ளார். அவர் இனி கடற்படை மற்றும் விமானப்படை செயல்பாடுகளையும் மேற்பார்வை செய்வார். அவருடைய ஃபீல்ட் மார்ஷல் பட்டமும் சீருடையும் வாழ்நாளுக்குமானது. அதுமட்டுமல்லாமல், முனீர் ஓய்வு பெற்றபின்னரும் கூட பிரதமர் அறிவுரையின் பேரில் அந்நாட்டு அதிபர் அவருக்கு சில பொறுப்புகளையும் கடமைகளையும் வழங்குவார். அதனால் அவர் உயிரோடு இருக்கும்போது பொது வாழ்க்கையில் அவருக்கு ஒரு பிரதான பங்கு இருந்துகொண்டே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவை ஆதரித்தவர்கள், அது பாகிஸ்தான் ராணுவத்தின் நிர்வாக கட்டமைப்பில் ஒரு தெளிவை கொடுப்பதாக வாதிடுகிறார்கள். இந்த மாற்றங்கள், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு நவீன போர் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுவதற்கான 'விரிவான சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதி' என்று பிரதமர் ஷாபாஸ் ஷரிஃப் கூறியதாக பாகிஸ்தான் அரசு நடத்தும் செய்தி முகமையான அசோசியேடட் பிரஸ் ஆஃப் பாகிஸ்தான் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், மற்றவர்கள் இதை ராணுவத்துக்கு அதிகாரத்தைக் கொடுக்கும் ஒரு நகர்வாகவே பார்க்கிறார்கள். "மக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே ஒரு சமநிலையே இல்லை" என்கிறார் பத்திரிகையாளரும் பாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் இணைத் தலைவருமான முனிசே ஜஹாங்கிர். "ராணுவத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய சமயத்தில் அதற்குக் கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள்" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முனீர் ஓய்வு பெற்றபின்னரும் கூட அந்நாட்டு அதிபர் அவருக்கு சில பொறுப்புகளையும் கடமைகளையும் வழங்குவார். 'நீதித்துறை சுதந்திரமாக இயங்குவற்கான இடம் இல்லை' இந்த சர்ச்சைக்குரிய மாற்றங்களின் இரண்டாவது பகுதி நீதிமன்றங்களையும் நீதித்துறையயும் சார்ந்தது. இந்தத் திருத்தத்தின்படி, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கேள்விகளைத் தீர்மானிக்கும் புதிய 'மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம்' (Federal Constitutional Court – FCC) உருவாக்கப்படும். அதன் முதல் தலைமை நீதிபதி மற்றும் அதில் பணியாற்றும் நீதிபதிகளை பாகிஸ்தான் அதிபர் நியமிப்பார். "இது நியாயமான விசாரணை பெறும் உரிமையின் இயல்பையும் முறையையும் நிரந்தரமாக மாற்றுகிறது," என்று ஜஹாங்கீர் கூறுகிறார். "நீதிபதிகளை நியமிப்பதில் மட்டுமல்லாமல், அரசியலமைப்பு அமர்வுகளை அமைப்பதிலும் நிர்வாகத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஒரு வழக்குதாரராக நான் நியாயமான விசாரணை கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார் அவர். பத்திரிகையாளரும் வர்ணனையாளருமான ஆரிஃபா நூர், "நீதித்துறை இப்போது நிர்வாகத்திற்கு கீழ்ப்படிந்ததாக மாறியுள்ளது" என்கிறார். மேலும், "தற்போது நீதித்துறை சுதந்திரமாக இயங்குவற்கான இடம் இல்லை என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது" என்றும் அவர் கூறினார். இந்தத் திருத்தம் நிறைவேற்றப்படும் முன், அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றமே விசாரித்து வந்தது. இதனால், நீதிபதிகள் அரசியலமைப்பு தொடர்பான விவாதங்களையும் கேட்க வேண்டியிருந்ததால், குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகள் விசாரணைக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் நிலுவை வழக்குகள் அதிகரித்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். இந்நிலையில், இவ்விரு வகையான வழக்குகளையும் பிரித்தது நீதிமன்ற செயல்முறையை ஒழுங்குபடுத்த உதவியுள்ளதாக அவர்கள் வாதிடுகின்றனர். இதற்கு சில வழக்கறிஞர்களிடம் ஓரளவு ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனால் கராச்சியைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சலாஹுதீன் அஹமது, அந்த வாதத்தை நேர்மையற்றையதாகப் பார்க்கிறார். பாகிஸ்தானில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பெரும்பாலானவை உச்சநீதிமன்றத்தைச் சார்ந்தவையே அல்ல என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். "புள்ளிவிவர ரீதியாகப் பார்க்கும்போது, வழக்குகள் விரைவாக முடிவடைய வேண்டும் என்பதில் உண்மையாகக் கவலைப்பட்டிருந்தால், நீங்கள் அந்த வழக்குகளுக்கான சீர்திருத்தங்களில்தான் கவனம் செலுத்தியிருப்பீர்கள்." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் இந்தத் திருத்தம் சட்டமாக கையெழுத்தான அடுத்த சில மணி நேரத்தில், இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராஜிநாமா செய்தனர். தலைமை நீதிபதி பதவியை ராஜிநாமா செய்த பின் பேசிய அதர் மினல்லா, "நான் நிலைநிறுத்துவதாகவும் பாதுகாப்பதாகவும் சொல்லி சத்தியம் செய்த அந்த அரசியலமைப்பு இப்போது இல்லை" என்று கூறினார். நீதித்துறை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகக் கூறிய நீதிபதி மன்சூர் அலி ஷா, 27வது சட்டத் திருத்தம் உச்ச நீதிமன்றத்தை துண்டாடிவிட்டதாகவும் கூறினார். இந்த ராஜிநாமாக்கள் பற்றிப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், "உச்சநீதிமன்றத்தில் அவர்களின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டதால் அவர்களின் மனசாட்சி விழித்தெழுந்திருக்கிறது. அரசியலமைப்பின் உயர் அதிகாரத்தை நிரூபிக்க நாடாளுமன்றம் முயற்சி செய்துள்ளது" என்று கூறினார். இப்போது நீதிபதிகள் அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே எந்த நீதிமன்றங்களும் மாற்றப்படலாம். ஒருவேளை அதில் நீதிபதிகளுக்கு உடன்பாடு இல்லையென்றால், அவர்கள் நீதி ஆணையத்திடம் முறையிடலாம். ஒருவேளை அவர்கள் முறையிடுவதற்கான காரணம் செல்லாவிட்டால், அந்த நீதிபதிகள் ஓய்வு பெற்றுவிடவேண்டும். இந்த மசோதாவை ஆதரித்தவர்கள், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் நீதிமன்றங்களும் சரியாக நிரப்பப்படும் என்கிறார்கள். அதேசமயம் ஒருசிலர் இது மிரட்டலாகப் பயன்படுத்தப்படும் என்றும் வருத்தம் தெரிவிக்கிறார்கள். "ஒரு நீதிபதியை அவர் பணியாற்றும் மாகாணத்திலிருந்து வேறொரு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது, அரசின் விதியைப் பின்பற்ற அவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்" என்கிறார் அஹமது. இது பாகிஸ்தானின் சமநிலையை பாதிக்கும் என்றும் அவர் கூறுகிறார். "நம் நீதித்துறை கடந்த காலத்தில் சர்வாதிகாரிகளுக்கு ஒத்துழைத்துள்ளது. ஆனால் சில நேரங்களில் நிர்வாகத்தைத் தட்டிக் கேட்கவும் செய்துள்ளது. அந்த நம்பிக்கையை மக்கள் முழுமையாக இழக்கும் வகையில் நீங்கள் அதைப் பறித்துவிட்டால், அவர்கள் வேறு மோசமான பாதையில் செல்லும் நிலை ஏற்படும்" என்றும் அவர் கூறினார். அதை ஏற்றுக்கொள்ளும் குகல்மேன், "அடக்கி வைக்கப்படும் குறைகள் சமூக நிலைத்தன்மைக்கு நல்லதல்ல" என்றும் கூறினார். "இது சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதைக் குறிக்கிறது" என்று சொல்கிறார் நூர். கடந்த ஆண்டு செய்யப்பட்டிருந்த 26வது திருத்தம், பாகிஸ்தானின் தலைமை நீதிபதியை தேர்ந்தெடுக்கும் அதிகாரித்ததை சட்டத்தை இயற்றுபவர்களின் கையில் கொடுக்கும் வகையில் இயற்றப்பட்டதாகவும், சமீபத்திய திருத்தம் அதன் மீது புதிதாக கட்டியெழுப்பப்படுவதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் 28வது திருத்தம் குறித்த ஊகங்களும் தற்போது எழுந்திருக்கின்றன. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7r9yjpgw7o
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உண்மையில் இதன் அர்த்தம் யாழில் உறுப்பினராக இணைந்து பதிவு எதனையும் இணைக்காமலும் சுய ஆக்கங்கங்கள் இடாதவர்கள் இத்திரியில் வந்து வருகையை பதிவு செய்யவேண்டும் என்பதா அண்ணை?! டாப்பு கூப்பிடும்போது பிரசன்ஸ் சேர் என்பது போல இங்க யாரும் கூப்பிடாது விட்டாலும் நாமாக{பதிவு எதனையும் இணைக்காமலும் சுய ஆக்கங்கங்கள் இடாதவர்கள்} வந்து வருகையை அறிவிக்கவேண்டும் அப்படியா?!.
-
இந்தியா சார்பாக இரண்டாவது அதிவேக ரி20 கிரிக்கெட் சதமடித்தார் 14 வயது சூரியவன்ஷி
'எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் இல்லாமல் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்' - 14 வயது இந்திய வீரர் சூரியவன்ஷி Published By: Vishnu 15 Nov, 2025 | 07:29 PM (நெவில் அன்தனி) எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் என்னை கண்டிப்புடன் வளர்திராவிட்டால் நான் கிரிக்கெட்டில் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்' என இந்தியாவின் 14 வயதுடைய இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி தெரிவித்துள்ளார். கத்தாரின் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண உதய தாரகைகள் (Rising Stars) கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக இந்தியா சார்பாக இரண்டாவது அதிவேக ரி20 கிரிக்கெட் சதத்திற்கான இணை சாதனையை ஏற்படுத்திய பின்னர் வைபவ் சூரியவன்ஷி இதனைத் தெரிவித்தார். அப் போட்டியில் 32 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பூர்த்தி செய்து இந்தியா சார்பாக ரி20 போட்டிகளில் இரண்டாவது அதிவேக சதத்தைக் குவித்த ரிஷாப் பான்டின் சாதனையை சமப்படுத்தினார். இந்தியாவில் நடைபெற்றுவரும் முஷ்தாக் அலி கிண்ணத்துக்கான ரி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் குஜராத் அணிக்காக உர்வில் பட்டேலும் பஞ்சாப் அணிக்காக அபிஷேக் ஷர்மாவும் 28 பந்துகளில் சதங்களைப் பூர்த்தி செய்து இந்தியாவுக்கான அதிவேக சதங்களைப் பெற்ற சம சாதனையாளர்களாக இருக்கின்றனர். ரிஷாப் பான்ட் 2018இல் டெல்ஹி அணிக்காக 32 பந்துகளில் ரி20 சதத்தைப் பூர்த்திசெய்திருந்தார். ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி சார்பாக சூரியவன்ஷி 42 பந்துகளில் 11 பவுண்டறிகள், 15 சிக்ஸ்களுடன் 142 ஓட்டங்களைக் குவித்து 13ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் 14 வயது 232 நாட்களில் இந்திய தேசிய பிரதிநிதித்துவ அணிக்காக சதம் குவித்த மிகவும் இளைய வீரர் என்ற சாதனையைப் படைத்து சூரியவன்ஷி பெருமை பெற்றார். இதற்கு முன்னர் மிக இளம் வயதில் சதம் குவித்த வீரர் என்ற சாதனையை 2005இல் ஸிம்பாப்வே ஏ அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் ஏ அணி வீரர் முஷ்பிக்குர் ரஹிம் (ஆட்டம் இழக்காமல் 111) நிலைநாட்டி இருந்தார். அப்போது அவருக்கு 16 வயது 171 நாட்கள் ஆகும். ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில் சூரியவன்ஷி முதலாவது பந்தில் கொடுத்த பிடி தவறவிடப்பட்டது. அதனை சாதகமாக்கிக்கொண்ட சூரியவன்ஷி அதன் பின்னர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 342.85 ஆக இருந்தது. ரி20 போட்டிகளில் சதம் அடித்தவர்களில் நான்காவது அதி கூடிய ஸ்ட்ரைக் ரேட் இதுவாகும். இந்த வருடம் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் சார்பாக 35 பந்துகளில் சதம் குவித்து மிக இளைய வயதில் (14 வயது, 32 நாட்கள்) ரி20 சதம் குவித்தவர் என்ற சாதனைக்கு சூரியவன்ஷி சொந்தக்காரரானார். இது ஐபிஎல் இல் பெறப்பட்ட இரண்டாவது அதிவேக சதமாகும். பூனே வொரியர்ஸ் அணிக்கு எதிராக றோயால் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பாக கிறிஸ் கேல் 2013இல் 30 பந்துகளில் குவித்த சதமே ஐபிஎல் இல் பதிவான அதிவேக சதமாகும். 'இது எனது இயல்பான துடுப்பாட்ட பாணியாகும். இது ரி20 வடிவ கிரிக்கெட் ஆகும். எனவே எனது சொந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினேன். முதலாவது பந்தில் எனது பிடி தவறவிடப்பட்டது. ஆனால், எனது எண்ணத்தை நான் மாற்ற விரும்பவில்லை. இந்த மைதானத்தில் எங்களுக்கு கணிசமான மொத்த எண்ணிக்கை தேவைப்பட்டது. ஆடுகளம் துடுப்பாட்டத்திற் கு சிறப்பாக இருந்தது. அத்துடன் பவுண்டறி எல்லைகள் குறைந்த தூரங்களைக் கொண்டிருந்தது. எனவே நான் விளாசி அடித்தேன்' என போட்டியின் பின்னர் வைபவ் சூரியவன்ஷி கூறினார். அப் போட்டியில் இந்திய ஏ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களைக் குவித்தது. ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. 'எனது இந்த ஆற்றல் வெளிப்பாடுகளுக்கு எல்லா புகழும் எனது தந்தைக்கே உரித்தாகும்' என அவர் மேலும் கூறினார். 'சிறு பராயத்திலிருந்தே எனது தந்தை என்னைக் கண்டிப்புடன் வளர்த்தார். அப்போதெல்லாம் அவர் ஏன் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறார் என நான் சிந்திப்பேன். ஆனால், அதன் பலாபலன்களை மைதானத்தில் இப்போது நான் உணர்கிறேன். எனது கவனத்தை சிதறடிக்கவிடாமல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வைத்தார். அத்துடன் நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார். எனவே எனக்கு கிடைக்கும் எல்லா விடயங்களுக்கும் எனது தந்தைக்கே நன்றி கூறுவேன். ஏனேனில் அவர் இல்லாமல் நான் இந்தளவு உயர்ந்திருக்க மாட்டேன்' என்றார் சூரியவன்ஷி. https://www.virakesari.lk/article/230448
-
அடுத்த மாதம் முதல் இலவச பொலித்தீன் பைகள் இல்லை
பொலித்தீன் பைகளுக்குப் பதிலாக காகிதப் பைகள்? Nov 15, 2025 - 06:36 PM பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்றீடாகப் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொருட்களை வாங்கும் போது பொலித்தீன் பைகளுக்கு ஒரு தொகையை அறவிடும் முடிவு குறித்து கவனம் செலுத்தி, குறித்த மேற்பார்வைக் குழு இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, இந்த நடவடிக்கையின் மூலம் பொலித்தீன் பயன்பாடு குறைகிறதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும், பொலித்தீன் பைகளுக்காகச் செலுத்த வேண்டிய தொகையை எந்தத் தரப்பினர் தீர்மானித்தனர் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், பொலித்தீன் பைகளுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டினர். https://adaderanatamil.lk/news/cmi0aw09701n3o29nk1tts4aa
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு Nov 15, 2025 - 06:22 PM மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் இன்றைய தினம் (15) மாலை போராட்டக் களத்தில் விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தார். இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு எஸ்.ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்து கொண்டதோடு, போராட்டக் களத்தில் அங்கம் வகித்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கருத்து தெரிவிக்கையில், "மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும், இருப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வரும் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் இன்றைய தினம் 105ஆவது நாளைக் கடக்கின்றது." "ஜனாதிபதி அவர்களின் அமைச்சரவை அறிவிப்பை நாங்கள் சற்று பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதற்கமைவாக 105ஆவது நாளான இன்றைய தினம் சனிக்கிழமை (15) மாலை எமது போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுகின்றோம். எமது போராட்டம் என்ன கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டதோ, அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு." "எங்களுடைய முக்கியமான கோரிக்கை என்னவென்றால், மன்னார் மண்ணிலே கனிம மணல் அகழ்வுக்கான அனைத்து வித அனுமதிகளும் நிறுத்தப்பட வேண்டும். மேலும், மன்னார் தீவில் அகழ்வு செய்யப்படுகின்ற மணல், மண் தீவை விட்டு வெளியில் கொண்டு செல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்." "கொண்டு செல்லப்படும் மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எனவே, அரசாங்கம் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்காது என்ற நம்பிக்கையுடனே இந்தப் போராட்டத்தை நிறுத்துகிறோம். வெகு விரைவில் அரசாங்கம் கனிம மணல் தொடர்பாக அமைச்சரவை அனுமதியைப் பெற்று தேசிய கொள்கையாக அதனை அறிவிப்பார்கள் என்பதை நம்புகின்றோம்." "எதிர்வரும் காலத்தில் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொள்ளுவதற்காக எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை அரச அதிபர் தலைமையில் உடனடியாக அமைத்து, குறித்த குழுவினுடைய கண்காணிப்பின் கீழ் எல்லா விதமான செயல்பாடுகளையும் முன்னெடுப்பது சிறந்ததாக அமையும் என்பதை இப்போராட்ட குழு சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்." இதைத் தொடர்ந்து அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தலைமையிலான குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்திற்குச் சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர். -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmi0adulf01n2o29nq7bk4k1r
-
நாமல் ராஜபக்ஷ - எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பு!
எதிர்க்கட்சிகளின் பேரணி குறித்து சுமந்திரனுடன் நாமல் சந்திப்பு Nov 15, 2025 - 04:33 PM தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துள்ளார். இன்று (15) காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கருத்துத் தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது அத்தியாவசியமான விடயம் என்று கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்துவதற்காக, அரசியலமைப்புக்கு அமைய இந்தத் தேர்தல்களை நடத்துவது அத்தியாவசியம் என்றும் அவர் அங்கு வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சியின் பிரதான கட்சிகளில் ஒன்றான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இந்தப் பேரணி குறித்து அறிவிப்பது அத்தியாவசியமான விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmi06hda901mzo29ne087a0bk
-
யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!
மனைவியை மிரட்ட சுருக்கு மாட்டிக்கொண்டவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு Nov 15, 2025 - 03:17 PM தற்கொலை செய்துகொள்வதாக மனைவியை மிரட்டுவதற்காக கழுத்தில் மாட்டப்பட்டிருந்த சுருக்கு இறுக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று (15) அதிகாலை உயிரிழந்தார். உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெ. சுரேந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த எட்டாம் திகதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சுரேந்தன், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் முரண்பட்டதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர் ஒரு கதிரையில் அமர்ந்துகொண்டு, கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை செய்யப்போவதாக மனைவியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். கைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே மதுபோதையில் அவர் உறங்கிவிட்டார். பின்னர் அவரது சகோதரன் அங்கு சென்று பார்த்தபோது, அவர் கழுத்தில் சுருக்குடன் குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்தார். உடனடியாக சகோதரன் அவரது கழுத்தில் இருந்த கயிற்றை அகற்றிவிட்டு, அவரைத் தரையில் படுக்க வைத்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmi03sbk301mwo29np80sl4we
-
டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
Nov 15, 2025 - 01:25 PM இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் மீனின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 425 கிராம் நிறையுடைய மெக்கரல் டின் மீன் 480 ரூபாவாகவும், 425 கிராம் நிறையுடைய ஜெக் மெக்கரல் டின் மீனின் 560 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmhzzsexu01mto29nhqcrpdc3
-
யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு அபராதம்
15 Nov, 2025 | 03:14 PM யாழில் உணவக கழிவு நீரினை வீதிக்கு வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்திய உரிமையாளர்களிற்கும் ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் சுகாதார பரிசோதகரினால், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரு வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியிருந்தமை, உணவகம் ஒன்றின் கழிவு நீரினை வீதிக்கு அப்புறப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் மூவருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது மூவரும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்த நீதிமன்று, அவர்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதித்தது. https://www.virakesari.lk/article/230426
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
2026 IPL : மதீஷ பத்திரனவை விடுவித்தது CSK! Nov 15, 2025 - 05:42 PM 2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி, அண்மைக்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக மாறியிருந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவை, வரவிருக்கும் தொடருக்காக அணியின் நிர்வாகம் விடுவிக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இவரை இந்திய ரூபா 13 கோடிக்கு சென்னை அணி தக்கவைத்திருந்தது. 2023 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக தனது முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற மதீஷ பத்திரன, தான் விளையாடிய முதல் தொடரிலேயே வெற்றி பெற்ற அணியில் ஒரு அங்கமானார். அந்தத் தொடரில் அவர் தனது அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரை அவர் 32 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மதீஷ பத்திரன மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அப்போதைய தலைவர் மகேந்திர சிங் தோனி கூட, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் மதீஷ பத்திரன கவனத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அவ்வாறு செய்தால், அவரால் நீண்டகால தொழில்முறை பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், சென்னை அணிக்கு மதீஷ பத்திரன தேவைப்பட்டால், எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ள வீரர்களின் ஏலத்தில் அவரை மீண்டும் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. ஏலத் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படவுள்ள வீரர்களின் பட்டியலை இந்திய நேரப்படி இன்று மாலை 3.00 மணிக்கு முன் வெளியிட வேண்டியிருந்தது. அதன்படி, மதீஷ பத்திரனவைத் தவிர, நியூசிலாந்து வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா உட்பட பல வீரர்களை விடுவிக்கவும் சென்னை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmi08z6ia01n1o29ng29mia8a
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
துடுப்பாட்டத்தில் இந்தியாவும் தடுமாறிய முதல் டெஸ்டில் பரிதாபகரமான நிலையில் தென் ஆபிரிக்கா 15 Nov, 2025 | 05:51 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக அமைந்த ஈடன் கார்ட்ன்ஸ் ஆடுகளத்தில் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்கா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 3 விக்கெட்கள் மீதம் இருக்க இந்தியாவை விட 63 ஓட்டங்களால் மாத்திரம் தென் ஆபிரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவும் அதன் முதல் இன்னிங்ஸில் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தது. பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியின் முதல் இரண்டு நாட்களில் 26 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. முதல் நாளான நேற்றைய தினம் 11 விக்கெட்களும் இன்றைய தினம் 15 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. இந்திய அணித் தலைவர் ஷுப்மான் கில் கழுத்தில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக 4 ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றார். இந்தப் போட்டியில் கே.எல். ராகுல் பெற்ற 39 ஓட்டங்களே இதுவரை துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக பதிவாகியுள்ளது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று சனிக்கிழமை (15) காலை தனது முதல் இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. இது தென் ஆபிரிக்கா முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 159 ஓட்டங்களைவிட 30 ஓட்டங்கள் அதிகமாகும். இந்தியாவின் முதலாவது இன்னிங்ஸில் ராகுலை விட வொஷிங்டன் சுந்தர் (29), ரிஷாப் பான்ட் (27), ரவிந்த்ர ஜடேஜா (27) ஆகியோரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் சைமன் ஹாமர் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மாக்கோ ஜென்சன் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 30 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆபிரிக்கா பெரும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. அணித் தலைவர் டெம்பா பவுமா மாத்திரமே மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். அவரை விட மாக்கோ ஜென்சன் (13), ரெயான் ரிக்கில்டன் (11), வியான் மெல்டர் (11) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. அவர் 6 ஓவர்களை மாத்திரமே வீசினார். உபாதைக்குள்ளான ஷுப்மான் கில் களத்தடுப்பில் ஈடுபடாததால் அணிக்கு தலைமை தாங்கிய ரிஷாப் பான்ட் தனது சுழல்பந்துவீச்சாளர்களில் நம்பிக்கை வைத்து அதில் வெற்றியும் கண்டார். ரவிந்த்ர ஜடேஜா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும். https://www.virakesari.lk/article/230440
-
நவம்பர் 2025 - இன்றைய வானிலை
கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை! 15 Nov, 2025 | 03:01 PM தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று சனிக்கிழமை (15) இரவு 11.00 மணி முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/230422
-
பாரம்பரிய பல்லுயிர் தலமாக தேர்வு: எலத்தூர் குளம், நாகமலை குன்றில் என்ன இருக்கிறது? பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, எலத்தூர் குளம் கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல்லுயிர் பாதுகாப்புச் சட்டம் 2002இன் படி, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள எலத்துார் குளத்தை மூன்றாவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக தமிழக அரசு கடந்த செப்டம்பரில் அறிவித்தது. அதற்கு அடுத்த மாதத்திலேயே அதற்கு மிக அருகிலேயே உள்ள நாகமலை குன்றை நான்காவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவித்தது. எலத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 கி.மீ. துார இடைவெளியில் அமைந்துள்ள இவ்விரு இடங்களையும் பாரம்பரிய பல்லுயிர் தலங்களாக அறிவித்திருப்பது, அவற்றின் மீது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்படி அந்த இடங்களில் என்ன இருக்கிறது? இவற்றின் சூழலியல் சிறப்புகள் என்ன? விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் கள ஆய்வுக்குச் சென்றது. ஊர்ப் பறவைகளை கவர்வதில் முக்கிய இடம் பிடித்த எலத்துார் குளம் எலத்துார் குளம் மொத்தம் 96 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. சுற்று வட்டாரத்திலுள்ள 21 கிராமங்கள்தான் இதற்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக உள்ளன. குளத்தில் இருந்து வெளியேறும் நீர், ஓடை வழியாகச் சென்று அரசூர் என்ற இடத்தில் பவானி ஆற்றில் கலக்கிறது. இந்தக் குளத்திற்குள் முட்புதர் காடுகள், கரைக்காடு, வறண்ட புல்வெளி, சதுப்பு நிலம், ஆழமான நீர்ப்பகுதி, ஆழம் குறைவான பகுதி, மண் திட்டுகள், ஏரிக்கரை எனப் பலவிதமான நில அமைப்புகள் உள்ளன. இதற்குள் குடைவேலம், நாட்டுக் கருவேலம், வேம்பு, அரப்பு, மூலிகைச் செடிகள் எனப் பலவிதமான மரங்களும், தாவரங்களும் இருக்கின்றன. குளத்திலுள்ள தண்ணீர் தெளிந்த நீராகத் தெரிகிறது. 134 விதமான மண்ணின் மரங்கள் கரைப்பகுதிகளில் உள்ளன. மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் உள்ள இந்தக் குளத்தில்தான் பல்லாயிரக்கணக்கான பறவைகள் இருந்தன. வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வலசை வருகின்றன. பட மூலாதாரம், ebird.org அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக் கழகத்தின் உலகளாவிய பறவைகள் கணக்கெடுப்புக்கான இ-பேர்ட் இணையதள தரவின் அடிப்படையில், 2024–2025ஆம் ஆண்டுக்கான ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் (Great Backyard Bird Count) எலத்துார் குளம் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் 23வது இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோன்று 2024 ஜனவரி 28 அன்று, தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அதிக பறவைகளைக் கொண்ட நீர்நிலையாகவும் எலத்துார் பதிவு பெற்றுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் சென்னை பெருவெள்ளத்தின்போது தொடங்கப்பட்ட 'சூழல் அறிவோம்' அமைப்பு, நீர்நிலைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தீபக் வெங்கடாசலம் 5 ஆண்டுகளாக எலத்துார் குளம் மற்றும் நாகமலை குன்று பற்றி ஆவணப்படுத்தியுள்ளார். ''கோவிட் காலத்தில் இந்தக் குளத்திற்கு வந்தபோது, பல்லாயிரக்கணக்கான பறவைகள் வருவதைப் பார்த்தோம். பறவை ஆராய்ச்சியாளர் ஜெகநாதன், இங்குள்ள பறவைகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த பெரிதும் உதவினார். அதன் பின்பே இந்தக் குளத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று தொடர்ந்து அங்கு வரும் பறவைகளை 5 ஆண்டுகளாகப் பதிவு செய்தோம்'' என்றார் தீபக் வெங்கடாசலம். படக்குறிப்பு, சூழல் அறிவோம், தலைமை ஒருங்கிணைப்பாளர் தீபக் வெங்கடாசலம் இந்தக் குழுவினர் இங்கு வரும் பறவைகளை ஆவணப்படுத்தி இ–பேர்ட் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில்தான் 2 ஆண்டுகளாக ஊர்ப்பறவைகள் கணக்கெடுப்பில் எலத்துார் குளம் முதலிடம் பெற்றுள்ளது. குளத்தை நவம்பர் முதல் வாரத்தில் பிபிசி நேரில் பார்வையிட்டது. அப்போது பெருமளவில் குளம் நிரம்பியிருந்தது. குளத்திற்கு நம்பியூர் பகுதியிலிருந்து சிறிய ஓடையில் தண்ணீர் வருகிறது. சமீப காலமாக அத்திக்கடவு–அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் மூலமாகவும் இந்தக் குளத்துக்கு தண்ணீர் வருகிறது. குளத்தின் நடுவிலுள்ள மரங்களிலும், நீர்ப் பகுதிகளிலும், தரையிலுள்ள புதர்க் காடுகளிலும் பல ஆயிரம் பறவைகள் தங்கியிருந்ததைப் பார்க்க முடிந்தது. நீர்க்காகம், கொக்கு, வாத்துகள் என பலவகை பறவைகள் பகல் நேரத்திலேயே அங்கிருந்தன. மாலையில் இருள் சூழும் நேரத்தில் கூட்டம் கூட்டமாக நுாற்றுக்கணக்கான பறவைகள் அணி அணியாக வந்து குளத்தில் தங்குவதற்கு (Roosting) இறங்கியது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. படக்குறிப்பு, எலத்தூர் குளம் 204 பறவையினங்கள் 'சூழல் அறிவோம்' ஆவணப்படுத்தியுள்ள தரவுகளின்படி, எலத்துார் குளத்தில் 204 பறவையினங்கள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 8 பாலுாட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் உள்பட 693 வகையான உயிரினங்கள் வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 77 வலசைப் பறவைகள் என்றும், அவற்றில் 47 தொலைதுார வலசைப் பறவைகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 125 விதமான உள்ளூர்ப் பறவைகள் உள்ளன. 64 பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. பன்னாட்டுப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் (அழியும் அபாயத்தில்) உள்ள 9 பறவைகள் இங்கு இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தியாவில் பாதுகாப்பு முன்னுரிமை பட்டியலில் (State of Indian Birds) உள்ள 52 விதமான பறவைகள் இங்கு வருவதும் தெரிய வந்துள்ளது. குளத்திற்கு அருகிலுள்ள செங்காளிபாளையத்தைச் சேர்ந்த பெண் விவசாயி தேவிகா, ''ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில்தான் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) இந்த குளத்திற்கு ஏகமாகப் பறவைகள் வரும். அதிலும் அந்தி நேரத்தில் பார்த்தால் கூட்டம் கூட்டமாகப் பறவைகள் வரும். அத்திக்கடவு–அவிநாசி திட்டத்திலும் தண்ணீர் வருகிறது. குளத்தில் அதிக தண்ணீர் தொடர்ந்து இருப்பதால் மீன்களும் அதிகமாக இருக்கின்றன'' என்றார். படக்குறிப்பு,தேவிகா, செங்காளிபாளையம் குளம், குன்று ஆகியவற்றின் அமைப்பு மற்றும் முக்கியத்துவத்தை சூழல் அறிவோம் குழுவினர், நம்முடன் நடை பயணம் மற்றும் மலையேற்றம் செய்து நேரில் விளக்கினர். குளத்திற்குள் கீச்சான், கரிச்சான்குருவி, குயில், புறா, சில்லை, அன்றில், தேன்சிட்டு, கொண்டலாத்தி, கதிர்குருவி உள்பட ஏராளமான உள்ளூர்ப் பறவைகள் இருப்பதை சூழலியல் ஆர்வலர் கேசவமூர்த்தி அடையாளம் காண்பித்தார். அவை இனப்பெருக்கம் செய்வதற்காக அங்குள்ள மரம், புதர், தரை எனப் பல இடங்களில் கட்டியுள்ள விதவிதமான கூடுகளையும் காண்பித்து, அந்தப் பறவைகளின் இனப்பெருக்க காலத்தையும் விவரித்தார். ரசாயனப் பொறியாளரான கேசவமூர்த்தி, 'இயற்கை நடை' என்ற சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''எலத்துார் குளத்தைப் பாதுகாப்பதில் இப்போது உள்ளூர் மக்களின் பங்களிப்பு பிரதானமாகிவிட்டது. அரசின் அறிவிப்புக்குப் பின், சூழலியல் ஆர்வலர்கள், பறவை ஆய்வாளர்கள், மாணவர்கள் அதிகளவில் வருகின்றனர். இங்கேயும் நாகமலை குன்றிலும் நாங்கள் இயற்கை நடைக்கு அழைத்துச் சென்று இங்குள்ள உயிர்ச் சூழல், பறவைகளின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொல்கிறோம்'' என்றார். படக்குறிப்பு, இயற்கை நடை ஒருங்கிணைப்பாளர் கேசவமுர்த்தி தொல்லியல் மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நாகமலை குன்று இந்த குளத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் நாகமலை குன்று உள்ளது. நாகமலை குன்றின் அடிவாரப் பகுதிகளையும், குன்றின் உச்சியிலுள்ள பாறைப் பகுதிகளையும் பிபிசி தமிழ் நேரில் பார்வையிட்டது. நாகமலை குன்றின் உச்சியிலும், மலையடிவாரத்திலும் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலே செல்ல 700க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளன. மலையின் அடிவாரத்தில் தனிப்பாறையில் ஆஞ்சநேயரின் புடைப்புச் சிற்பம் கொண்ட தனிக்கோவில் உள்ளது. நாகமலை குன்று பகுதியில் புலிக்குத்தி நடுகல், பாறைத்தட்டுகள் போன்ற வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தொல்லியல் சான்றுகள் அதிகம் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர் க.ராஜன் தனது 'கொங்கு களஞ்சியம்' என்ற நுாலில் குறிப்பிட்டுள்ளார். குன்றில் 5 இடங்களில் உள்ள பாறை ஓய்விடங்கள் (Caves) பண்டைக்கால வேட்டைச் சமூகத்திற்கான வாழ்விடங்களாக இருந்திருக்கலாம் என்கிறது அவரது நுால். நாகமலை குன்றின் மலையடிவாரப் பகுதியில் இருந்த மரங்களில் பகல் நேரத்திலேயே ஏராளமான பறவைகள் இருந்தன. அந்தக் குன்றின் உச்சியில் ராசாளிக் கழுகுகள் இணையாக வசிப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறினர். அவற்றில் ஒரு ராசாளிக் கழுகு வெளியில் வலம் வந்ததையும் நேரில் பார்க்க முடிந்தது. படக்குறிப்பு, நாகமலை குன்று, முருகன் கோவில் நாகமலை குன்று உச்சியைச் சுற்றிலும் உள்ள பாறைப் பகுதிகளில் 3 இடங்களில் நீர்ச்சுனைகள் உள்ளன. அவற்றில் கந்தன் தேரை இருப்பதை நேரில் காண்பித்த சூழலியல் ஆர்வலர் கேசவமூர்த்தி, எலத்துார் குளத்திற்கும், நாகமலை குன்றுக்கும் ஓர் உணவுச் சங்கிலி இருப்பதையும் அவர் விவரித்தார். அரிய வகைப் பறவைகள் மட்டுமின்றி, அரிதான பல தாவரங்கள் இங்கு இருப்பதையும் தாவரவியல் வல்லுநர்களின் உதவியுடன் சூழல் அறிவோம் அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது. எலத்துார் பேரூராட்சியின் பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக் குழு (Biodiversity Management Committee), குளம் மற்றும் குன்று பகுதிகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. பறவைகளை நாட்டுத் துப்பாக்கி வைத்து வேட்டையாடுதல், மரம் வெட்டுதல், வலை விரித்து மீன்களைப் பெருமளவில் பிடித்தல், கால்நடை மேய்ச்சல், பேரூராட்சி குப்பைகளைக் குளத்தில் கொட்டுதல் போன்றவை சூழல் அறிவோம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக் குழுவின் முயற்சிகளால் பெருமளவில் தடுக்கப்பட்டு இருப்பதாக பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக் குழுவின் தலைவர் நாகராஜன் தெரிவித்தார். படக்குறிப்பு, நாகமலை குன்று உள்ளூர் மக்களின் கோரிக்கைகளும், வனத்துறையின் முன்மொழிவும் குளம் மற்றும் குன்றின் சூழலியல் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக சூழல் அறிவோம் குழுவினர், சுற்றுவட்டாரத்திலுள்ள 130க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை இங்கே அழைத்து வந்து 'இயற்கை நடை' என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இதைச் செய்து வருகின்றனர். ''பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்புச் சட்டம் (Biological Diversity Act, 2002) மக்கள் பங்களிப்பை உறுதி செய்வதால்தான், பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புத் தலம் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். இதில் இந்த இடங்களில் வளர்ச்சிப் பணிகளை மக்கள்தான் முடிவு செய்ய முடியும். இவை தவிர்த்து, அரசிடம் அடுத்த 5 ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு என சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்'' என்றார் தீபக். சூழல் அறிவோம், பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக்குழு மற்றும் உள்ளூர் சூழல் ஆர்வலர்கள் முன் வைக்கும் சில கோரிக்கைகள்: குளம் மற்றும் குன்றின் பகுதிகளில் பறவை வேட்டையை முற்றிலும் தடுக்க, 2 இடங்களிலும் வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமிக்க வேண்டும். அதில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புத் தல எல்லையை வரையறுத்து, நிறைய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். தாவரங்கள், உயிர்களின் வாழ்விடம் பாதிக்கும் வகையில் நில அமைப்பில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது. குளத்தில் நம்பியூர் கழிவுநீர் கலக்காமல் சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரையும் வேறு வழியில் வெளியே கொண்டு செல்ல வேண்டும். இந்தக் கோரிக்கைகள் குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகக் கள இயக்குநர் ராஜ்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''இத்தகைய தலங்களை பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்புக் குழுதான் பராமரிக்க வேண்டும். ஆனால் பறவைகள் வாழ்விடம் என்ற வகையில் வனத்துறையும் அதைக் காக்க வேண்டிய அவசியம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் ஆலோசனைப்படி சில முன்மொழிவுகளைத் தயார் செய்து வருகிறோம்'' என்றார். "வனத்துறைக்கு வெளியே உள்ள உயிர்ச்சூழல் முக்கியத்துவம் உள்ள இடங்களைப் பாதுகாக்க மத்திய அரசின் ஒருங்கிணைந்த உயிரியல் வாழ்விடப் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் நிதி கோரி முன்மொழிவு அனுப்பியிருந்தோம். அந்த நிதி கிடைக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்தார். வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமிக்க அனுமதி கிடைக்கும் வரை, தற்போது வனத்துறையினர் இவ்விரு இடங்களையும் அவ்வப்போது கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். ''நாகமலை குன்றை அப்படியே பாதுகாத்தால் போதுமானது. எலத்துார் கரையில் சூழல் நடை பயிலும் வகையில் ஒரு சிறிய நடைபாதை அமைத்து, சுற்றிலும் அங்குள்ள பறவைகள், அவற்றைப் பற்றிய தகவல்களைத் தரும் பலகைகளை வைக்கத் திட்டமிட்டுள்ளோம். கரைப் பகுதிகளில் ஆலமரங்களை நட்டுப் பராமரிக்கும் திட்டமும் உள்ளது. சூழல் சுற்றுலாவை உருவாக்கினாலும் அதுவும் அங்குள்ள மக்களின் பங்களிப்போடுதான் செயல்படுத்தப்படும்.' என்றார் கள இயக்குநர் ராஜ்குமார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg16k3xxlro
-
பிகார் தேர்தல்: 190 இடங்களுக்கு மேல் தே.ஜ.கூட்டணி முன்னிலை - தேஜஸ்வி யாதவ் பின்னடைவு
6 இடங்களில் மட்டுமே வெற்றி: பிகாரில் காங்கிரஸ் படுதோல்வி ஏன்? 5 முக்கிய காரணங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் 15 நவம்பர் 2025, 08:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிகார் சட்டப்பேரவையில் உள்ள 243 இடங்களில் 202 இடங்களை வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் மகா கூட்டணி மிகப்பெரிய மற்றும் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் நிலைமை இன்னும் மோசம். அக்கட்சி போட்டியிட்ட சுமார் 60 இடங்களில் 6 இடங்களை மட்டுமே வென்றது. இந்த முறை, பிகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 8.71 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 2020 சட்டமன்றத் தேர்தலில் அது 9.6 சதவீதமாக இருந்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் 70 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 19 இடங்களை வென்றிருந்தது. கடந்த சில தசாப்தங்களாக பிகார் அரசியல் ரீதியாக காங்கிரசுக்கு மிகவும் கடினமாக உள்ளது. 2015 இல் காங்கிரஸ் 27 இடங்களை வென்றது. 2010 இல், அது நான்கு இடங்களை மட்டுமே வென்றிருந்தது. இந்த முறை காங்கிரஸ் ஆறு இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதாவது ஒவ்வொரு பத்து வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். காங்கிரஸின் இந்த மோசமான செயல்பாடு எதிர்பாராததாகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம். ஆனால் தேர்தல் பிரசாரத்தின் போதே அதன் அறிகுறிகள் தென்பட்டதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 1990 முதல் பிகாரில் காங்கிரசுக்கு முதல்வர் இல்லை, பெரும்பாலான நேரம் மாநிலத்தில் கட்சி அதிகாரத்திற்கு அப்பால்தான் காங்கிரஸ் இருந்துள்ளது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஒரு வீரரை கூட இழக்காமல் முகலாயர்களை வீழ்த்தி இந்தியாவை வென்ற 'ஷேர்ஷா சூரி' இந்தியா அணுசக்தி நாடாக, சுதந்திரம் அடைந்த இரண்டே வாரங்களில் நேரு எடுத்த முக்கிய முடிவு உலகில் 60 லட்சம் பேரில் ஒருவருக்கு உள்ள 'தங்க' ரத்தத்தை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி தினசரி எத்தனை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கலாம் தெரியுமா? End of அதிகம் படிக்கப்பட்டது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரசுடன் தொடர்புடைய பெரும்பாலான தலைவர்கள், 'இந்த முடிவுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு' என்று எதிர்வினையாற்றியுள்ளனர். தேர்தல் முடிவுகளின் போது, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, "இந்தத் தேர்தல் பிகார் மக்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான போட்டி. தேர்தல் ஆணையம் வெற்றி பெறுகிறது" என்று கூறினார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், "இந்த முழு விளையாட்டும் போலி வாக்காளர் பட்டியல்கள் மற்றும் போலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றியது, எனது சந்தேகம் சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா, "மகா கூட்டணி ஒரு அரசாங்கத்தை அமைக்கும் என்று தோன்றியது. இந்த தோல்வி எதிர்பாராதது; காரணங்களை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்." என்று கூறியுள்ளார். இருப்பினும், காங்கிரஸின் இந்த மோசமான செயல்பாட்டிற்கு, சமூக அடித்தளமின்மை, பலவீனமான கட்சிக் கட்டமைப்பு, கூட்டணியுடன் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனக்குறைவு ஆகியவையே காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பலவீனமான சமூக அடித்தளம் பட மூலாதாரம், Getty Images பிகாரில் காங்கிரசுக்கு வலுவான சமூக அடித்தளம் இல்லை என்றும், கட்சியின் மோசமான முடிவுகளுக்கு இதுவே மிகப்பெரிய காரணம் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான சுரூர் அகமது கூறுகையில், "காங்கிரசுக்கு வலுவான சமூக அடித்தளம் இல்லை. உயர் சாதியினர் ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். அதேநேரம், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் கட்சியில் சேரவில்லை." "காங்கிரஸ் ஒரு சித்தாந்த அடிப்படையிலான கட்சி, ஆனால் சாதி மற்றும் சமூக இயக்கவியல் பிகார் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. தேர்தல் முடிவுகளை பாதிக்கும் அளவுக்கு வலுவான சமூக அடித்தளம் கட்சிக்கு இல்லை." அதே நேரத்தில், பிகாரின் முன்னணி இந்தி நாளிதழான பிரபாத் கபரின் மாநிலத் தலைவரான அஜய் குமார், பிகாரில் பலவீனமடைந்து வரும் தனது அடித்தளத்தை மீண்டும் ஒன்றிணைக்க காங்கிரஸ் எந்த தீவிர முயற்சியும் எடுக்கவில்லை என்று நம்புகிறார். "பிகாரில் காங்கிரசின் சமூக அடித்தளம் படிப்படியாக பலவீனமடைந்து வருகிறது. 2005 முதல், கட்சி அதன் பழைய அடித்தளத்துடன் மீண்டும் இணைவதற்கு உறுதியான முயற்சியை மேற்கொள்ளவில்லை. மக்களவைத் தேர்தலின் போது ராகுல் காந்தி தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினருடன் இணைய முயன்றார், ஆனால் இந்த தேர்தலில் அந்த முயற்சி தோல்வியடைந்தது" என்று அஜய் குமார் கூறுகிறார். காங்கிரஸ் கட்சி தனது சமூக அடித்தளத்தை வலுப்படுத்த எந்த தீவிர முயற்சிகளையும் எடுக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் கூறுகையில், "தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தி பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் தொடர்பான தீர்மானத்தை வெளியிட்டார், ஆனால் கட்சி அதை விளம்பரப்படுத்தவில்லை. இதன் விளைவாக, பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே கட்சியின் செல்வாக்கு பலவீனமாகவே இருந்தது. பாஜக மற்றும் ஜே.டி.யு.வின் வலுவான சமூக மற்றும் நிறுவன ரீதியான உத்திகள் தேர்தல்களில் சிறப்பாக பலன் தந்துள்ளன" கருத்தியல் சவால்கள் பட மூலாதாரம், Getty Images பாரதிய ஜனதா வலுவான இந்துத்துவா நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அக்கட்சி பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. ஹரியாணா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு, இப்போது பாஜகவின் தே.ஜ. கூட்டணி பிகாரிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜக தலைவர்கள் தங்கள் சித்தாந்த அடிப்படையை வெளிப்படுத்துவதில் எந்த தயக்கமும் காட்டவில்லை. மூத்த பத்திரிகையாளர் சுரூர் அகமது கூறுகையில், "காங்கிரஸ் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவால் என்னவென்றால், மக்களை அதன் சித்தாந்தத்துடன் இணைக்க முடியவில்லை. பிகார் மக்கள் காங்கிரஸின் சித்தாந்தம் மற்றும் உத்தி இரண்டையும் நிராகரித்துவிட்டனர். ஆனால் இந்த சவால் பிகாரில் மட்டும் அல்ல. இடது-மையவாத கட்சிகள் பிகாரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சவால்களை எதிர்கொள்வதால், காங்கிரஸ் தனக்குள்ளேயே ஆழமாக சிந்திக்க வேண்டும். மறுபுறம், வலதுசாரிக் கட்சிகள் இன்னும் வலுவடைந்து வருகின்றன." என்றார். சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் யுகத்தில் மக்கள் உணர்ச்சி ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடும் பிரச்னைகள் சித்தாந்தம் சார்ந்தவை, ஆனால் உணர்ச்சி ரீதியான தொடர்பு இல்லை. "சமூக ஊடகங்கள் மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டதாலும், தகவல்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதாலும், மக்கள் சிந்தனையை விட உணர்ச்சிவசப்பட்டே உள்ளனர். காங்கிரஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற இடது-மையவாதக் கட்சிகள் இந்த சவாலை எதிர்கொள்கின்றன. வலதுசாரிக் கட்சிகளைப் போல மக்களுடன் உணர்ச்சி ரீதியாக இணையவோ அல்லது அவர்களின் உணர்ச்சிகளைப் பாதிக்கவோ அவர்களால் முடியவில்லை" என்று சுரூர் அகமது கூறுகிறார். 'வாக்கு திருட்டு பரப்புரை எடுபடவில்லை' பட மூலாதாரம், Getty Images பிகார் சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் தனது அறிக்கையில் வேலையின்மை, சமூக நீதி, இடஒதுக்கீடு, இலவச மின்சாரம், மோசமான நலத்திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஆனால் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் 'வாக்கு திருட்டு' போன்ற பிரச்னைகளே ஆதிக்கம் செலுத்தின. காங்கிரஸ் தொடர்பான ஊடக செய்திகளிலும் இது பிரதிபலித்தது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மற்றும் 'வாக்கு திருட்டு' பிரச்னைகளுடன் பிகார் மக்களை காங்கிரசால் இணைக்க முடியவில்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இது தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மூத்த பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் கூறுகையில், "வாக்கு திருட்டை ஒரு தேர்தல் பிரச்னையாக மாற்றுவதை பிகார் மக்கள் புரிந்து கொள்ளவில்லை, இது காங்கிரசுக்கு சிக்கல்களை உருவாக்கியது." பிகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்பு, ஹரியாணா சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குகள் திருடப்பட்டதாகக் ராகுல் காந்தி கூறினார். பாரதிய ஜனதா மற்றும் தேர்தல் ஆணையம் மீது அவர் பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார். "பிகார் மக்களால் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள், அவர்களின் வாக்குகள் திருடப்படுவதாக ராகுல் காந்தி கூறிக் கொண்டிருந்தார்" என்று நச்சிகேதா நாராயண் கூறுகிறார். "ஒரு கட்சி தெளிவான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கும் போது, சுறுசுறுப்பாக இயங்கும் போது, மக்களுடன் இணைந்திருக்கும் போது சிறப்பாகச் செயல்படுகிறது. பிகார் தேர்தலிலும் காங்கிரஸ் தனது நிகழ்ச்சி நிரலை செயலாக்க தவறிவிட்டது." மறுபுறம், லாலுபிரசாத் ஆட்சி பற்றி முன்வைக்கப்படும் 'காட்டாட்சி' என்ற விமர்சனத்தை தேஜ கூட்டணி தொடக்கத்திலிருந்தே தனது பிரசாரத்தின் அடிப்படையாக வைத்திருந்தது. "தேஜ கூட்டணியின் மிகவும் வெற்றிகரமான உத்தி என்னவென்றால் தங்கள் ஆட்சியின் குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்தவோ அல்லது அது விவாதத்திற்கு வரவோ அனுமதிக்கவில்லை, மாறாக லாலுவின் சகாப்தத்தை தலைப்புச் செய்திகளில் வைத்திருந்தனர். விவாதமும் அதைச் சுற்றியே இருந்தது" என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "காங்கிரஸ் மற்றும் மகா கூட்டணி கட்சிகள் இந்த பிரசார போரில் தோற்றன" என்று சுரூர் அகமது கூறுகிறார். காட்டாட்சி என்று குறிப்பிட்டு தேஜகூ செய்த பிரசாரம் வெற்றிகரமாக அமைய, "அதனை எதிர்கொள்ள காங்கிரஸிடம் எந்தவொரு உத்தியோ அல்லது எதிர் வாதமோ இல்லை" என்று நச்சிகேதா நாராயண் கூறுகிறார். கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாமை பட மூலாதாரம், Getty Images பிகார் தேர்தலில், ஒருபுறம் புதிய கட்சிகளைச் சேர்ப்பதன் மூலம் தேஜகூ வலுவடைந்து வந்தது, மறுபுறம், மகா கூட்டணியின் முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையே ஒருங்கிணைப்பு இல்லாமையும், நம்பிக்கையின்மையும் காணப்பட்டன. மகா கூட்டணியில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த இரு கட்சிகளின் தலைவர்களும் பாட்னாவில் ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கூட்டாளிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாதது மகா கூட்டணியில் தெளிவாகத் தெரிந்தது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "பிகாரில், காங்கிரஸ் கட்சி தனது கட்டமைப்பை வலுப்படுத்துவதிலோ அல்லது கூட்டணியுடன் ஒருங்கிணைவதிலோ கவனம் செலுத்தவில்லை. மண்டல் கமிஷனுக்குப் பிறகு, லாலுபிரசாத் யாதவுடன் நீடிப்பதா அல்லது தனியே நிற்பதா என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டது. பிகாரில் மாநில காங்கிரசாரின் கருத்து எதுவாக இருந்தாலும், கட்சித் தலைமை ஆர்ஜேடியுடன் கூட்டணி வைப்பதை தேர்வு செய்தது. இந்தக் கூட்டணி பயன் தரவில்லை என்று தோன்றுகிறது" என்று அஜய்குமார் கூறுகிறார். காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி தொடர்பாக எழுந்த குழப்பமும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை செலுத்தியிருக்கலாம் என்று சுரூர் அகமது நம்புகிறார். இருப்பினும், காங்கிரஸ் மகா கூட்டணியிலிருந்து பிரிந்திருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று அவர் நம்புகிறார். "ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்திருந்தால், அது ஒரு பெரிய தவறாக இருந்திருக்கும். ஏனெனில் அவ்வாறு செய்திருந்தால், அதன் வாக்கு சதவீதம் மிகவும் குறைந்து பிகாரில் தன் இருப்பைக் காப்பாற்றவே காங்கிரஸ் போராடியிருக்கும்" என்று சுரூர் அகமது கூறுகிறார். "காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது ஒரு முக்கிய காரணியாக இருந்தது. சில தொகுதிகளில் நட்புரீதியான போட்டிகள் நடந்தன, இது தேர்தல் உத்திக்கு தீங்கு விளைவிக்கும்." என்று பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் கூறினார். கட்டமைப்பு பலவீனம், வேட்பாளர் தேர்வு பற்றி எழும் கேள்விகள் பிகாரில் காங்கிரஸ் கட்சியில் வலுவான களப் பணியாளர்கள் அல்லது அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் இல்லை. சமீபத்திய ஆண்டுகளில் கட்சி கட்டமைப்பு ரீதியாக இன்னும் பலவீனமாகிவிட்டதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். காங்கிரசின் வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். "காங்கிரசுக்குள் கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லை. நடுத்தர வர்க்கத்தினரும் சில ஊக்கமுள்ள மக்களும் காங்கிரசுடன் தொடர்புடையவர்கள், ஆனால் அது பெரிய அளவில் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவவில்லை. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி அல்லது பிகாரில் ஆர்ஜேடி போல பிகாரில் காங்கிரசுக்கு அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் இல்லை. இது பிகாரில் காங்கிரஸ் மிகவும் வலுவான நிலையில் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது" என்று சுரூர் அகமது கூறுகிறார். "ஒரு கட்சி தெளிவான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தால், சுறுசுறுப்பாக இருக்கும்போது, மக்களுடன் இணைந்திருக்கும் போது சிறப்பாகச் செயல்பட முடியும். இது காங்கிரஸ் கட்சியின் நீண்டகால பற்றாக்குறையாக இருந்து வருகிறது. பிராந்தியக் கட்சிகள் வலுவாக இல்லாத மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு வலுவான அமைப்பை உருவாக்கியுள்ளது. வலுவான பிராந்தியக் கட்சிகள் உள்ள உத்தரபிரதேசம், பிகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அதுபோன்ற ஒன்றை உருவாக்குவதில் காங்கிரஸ் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளது." என்று அஜித்குமார் தெரிவித்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதும் கூட கேள்விக்குரியதாக இருப்பதாக பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் நம்புகிறார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqjwk248jygo
-
ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிவிபத்து- 9 பேர் உயிரிழப்பு!
ஜம்மு - காஷ்மீரில் குண்டுவெடிப்பு; 7 பேர் பலி, 27 பேர் காயம் 15 Nov, 2025 | 10:26 AM இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு- காஷ்மீரின் முக்கிய நகரமான ஸ்ரீநகரில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ரீநகரின் தெற்கே உள்ள நவ்காம் பகுதியில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (14) இரவு இந்த இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் வெடிப்பு நடந்த நேரத்தில் வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த பொலிஸார் மற்றும் தடயவியல் குழு அதிகாரிகள் ஆவார். இந்த வெடிப்பு சம்பவத்தில் ஸ்ரீநகர் நிர்வாகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களில் மேலும் ஐந்து பேர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பின் எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230399
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
ஜடேஜாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் : சிஎஸ்கே முடிவால் யாருக்கு லாபம்? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா 'ஐபிஎல் டிரேட்' உறுதியாகியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக விளங்கிய ஜடேஜாவையும், ஆல்ரவுண்டர் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ஏலத்தைத் தவிர்த்து 'டிரேட்' மூலமாகவும் வீரர்களை வாங்க முடியும். 2009ம் ஆண்டு முதலே ஐபிஎல் டிரேட்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பல அணிகள் இதில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் இதில் ஆர்வம் காட்டியதில்லை. 16 சீசன்களில் அந்த அணி ஒரேயொரு முறை ராபின் உத்தப்பாவை டிரேட் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வாங்கியது. இப்போது அதே அணியிலிருந்து சாம்சனையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தங்கள் அணிகளின் முக்கிய அங்கமாகக் கருதப்பட்ட வீரர்கள் மாறியது ஏன்? இந்த டிரேட் யாருக்கு பெரிய அளவில் லாபகரமாக அமைந்திருக்கிறது? இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும் விஷயங்கள் என்ன? பட மூலாதாரம், Getty Images இரு அணிகளின் முக்கிய அங்கமாக இருந்த வீரர்கள் ஜடேஜா, சாம்சன் இருவருமே தங்கள் அணிகளில் நெடுங்காலம் முக்கிய வீரர்களாக இருந்தவர்கள். 2012ம் ஆண்டு முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ஜடேஜா, 12 சீசன்கள் அந்த அணிக்காக ஆடியிருக்கிறார். ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் என 200 போட்டிகளில் சூப்பர் கிங்ஸுக்காக ஆடியிருக்கிறார் அவர். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி அந்த அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும், அந்த அணியோடு மூன்று முறை (2018, 2021, 2023) ஐபிஎல் பட்டமும் வென்றிருக்கிறார் அவர். அதேசமயம் சஞ்சு சாம்சன் 11 ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். 155 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடிய அவர், இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி சுமார் 32 என்ற சராசரியில் 4219 ரன்கள் (அனைத்து போட்டிகளிலும்) எடுத்திருக்கிறார். அந்த அணிக்காக அதிக ரன்கள் எடுத்திருப்பவர் அவர்தான். மேலும், 2021ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த சாம்சன், 2022 சீசனில் அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். 2024ல் அவர் தலைமையில் அந்த அணி மூன்றாவது இடம் பிடித்தது. இப்படி அந்த அணிகளின் பெரிய அங்கமாக இருந்த வீரர்களை இரு அணிகளும் டிரேட் செய்ய முன்வந்தது பலருக்கும் ஆச்சர்யமளிப்பதாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் சொன்ன காரணம் என்ன? இந்த டிரேட் உறுதியான பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கத்தில், அந்த அணியின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் பேசிய வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில் இது மிகவும் கடினமான முடிவாக இருந்ததாகக் கூறிய அவர், தரமான இந்திய டாப் ஆர்டர் பேட்டர்களை மினி ஏலத்தில் எடுப்பது கடினம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார். "ஒரு டாப் ஆர்டர் இந்திய பேட்டரின் தேவையை அணி உணர்ந்தது. ஏலத்தில் அதிக இந்திய பேட்டர்கள் இருக்கமாட்டார்கள் என்பதால் இந்த 'டிரேட் விண்டோவில்' ஒருவரை கொண்டுவருவது என்று முடிவு செய்தோம். சிஎஸ்கேவின் வெற்றிப் பயணத்தில் முக்கிய அங்கமாக இருந்த ஜடேஜாவை விடுவது எளிதான முடிவாக இருக்கவில்லை. சிஎஸ்கே நிர்வாகம் எடுத்த முடிவுகளிலேயே இதுதான் கடினமானது என்றுகூட சொல்லலாம். இந்த சமயத்தில் அணியின் எதிர்கால மாற்றத்தை (transition) கருத்தில் கொண்டு இந்த கடினமான முடிவை எடுத்திருக்கிறோம். ஜடேஜாவோடு கலந்துபேசி சுமுகமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார் காசி விஸ்வநாதன். அதுமட்டுமல்லாமல், அணியின் பல வீரர்கள் தங்கள் கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்துக்கான ஓர் அணியைக் கட்டமைக்கும் நோக்கோடு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதுபற்றிப் பேசிய அவர், "தன் 'வைட் பால்' கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் ஜடேஜாவும் மாற்றம் தரும் வேறு வாய்ப்புகளுக்குத் தயாராகத்தான் இருந்தார். சாம் கரணும் எங்களுக்கு சீரான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார். நான் முன்பே சொன்னதுபோல் இவர்கள் இருவரையும் விடுவது மிகவும் கடினமான முடிவுகளுள் ஒன்று. அணியின் பல வீரர்கள் தங்கள் கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்துக்கான ஒரு அணியை அடுத்த ஒருசில ஆண்டுகளில் கட்டமைப்பது மிகவும் முக்கியம்." என்றார். இந்நிலையில், சாம்சனை எதிர்காலத்துக்கான ஒரு வீரர் என அவர் குறிப்பிட்டார். "சஞ்சு சாம்சன் சுமார் 4500 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும் ஒரு அனுபவ ஐபிஎல் பேட்டர். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். அவருக்கு கிட்டத்தட்ட 30 வயது தான் (31 வயது) ஆகிறது. அதனால் எதிர்காலத்துக்கு இது நல்ல முடிவாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்" என்று சாம்சனை டிரேட் செய்ததற்கான காரணத்தை அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தோனி, ரெய்னா தவிர்த்து சூப்பர் கிங்ஸுக்காக 200 போட்டிகள் ஆடிய ஒரே வீரர் ஜடேஜா தான் ராஜஸ்தான் ராயல்ஸ் & ஜடேஜா சொன்னது என்ன? இந்த டிரேட் பற்றிப் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார் சங்கக்காரா, "ஜடேஜா மீண்டும் அணிக்குத் திரும்புவது சிறப்பான தருணம். அவருக்கு இந்த அணியை, ரசிகர்களை நன்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளில் அனைத்து ஏரியாவிலும் பங்களிக்கக்கூடிய ஒரு சிறந்த வீரராக அவர் உருவெடுத்திருக்கிறார். அவருடைய அனுபவம், அமைதியான தன்மை, போட்டித்தன்மை ஆகியவை ஒரு நல்ல எதிர்காலத்தை நாங்கள் கட்டமைக்க உதவும்" என்று கூறினார். சாம் கரண், ஜடேஜா இருவரும் தங்களுக்கு பல பரிமாணங்களில் உதவுவதாக அவர் தெரிவித்தார். "சாம் கரண் கொஞ்சம் வேறு மாதிரியான வீரர் என்றாலும், அவரும் முக்கியமான சில பரிமாணங்கள் கொண்டுவருகிறார். அவர் பயமறியாத வீரர். எளிதில் தன்னை தகவமைத்துக்கொள்பவர். நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்கக்கூடியவர். பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பங்களிக்கக்கூடியவர்" என்றும் அவர் கூறினார். 2008 மற்றும் 2009 சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜடேஜா, முதல் ஐபிஎல் சீசனில் அந்த அணியோடு சாம்பியன் பட்டமும் வென்றார். அந்த அணியோடு மீண்டும் இணைவது பற்றிப் பேசிய ஜடேஜா, "எனக்கு முதல் மேடையும், முதல் வெற்றிச் சுவையையும் கொடுத்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ். இங்கு மீண்டும் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இது எனக்கு ஒரு அணி மட்டுமல்ல. இது என் வீடு. இங்குதான் என் முதல் ஐபிஎல் கோப்பையை வென்றேன். இப்போது இருக்கும் வீரர்களோடு இணைந்து இன்னும் நிறைய கோப்பைகள் வெல்ல ஆசைப்படுகிறேன்" என்றார். இந்த டிரேட் மூலம் யாருக்கு வெற்றி? இரண்டு அணிகளுமே பெரிய வீரர்களை டிரேட் செய்திருந்தாலும், இதனால் யாருக்கு அதிக லாபம் என்ற விவாதங்களும் எழவே செய்திருக்கின்றன. இதுபற்றிப் பேசிய தமிழ்நாடு ஆண்கள் அண்டர் 19 அணியின் தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான யோ மஹேஷ், சூப்பர் கிங்ஸுக்கு சற்று கூடுதல் லாபம் என்று தெரிவித்தார். "இந்த டிரேடைப் பொறுத்தவரை இரண்டு அணிகளுக்குமே வெற்றி தான். இரு அணிகளுமே அவர்களுக்கு இருந்த வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறார்கள். ஏனெனில், சாம்சன் பல கட்டங்களை நிரப்புகிறார். அவர் ஒரு நீண்ட காலத்துக்கான வீரர், ஒரு நல்ல டாப் ஆர்டர் பேட்டர், சிறந்த கீப்பர், அதுமட்டுமல்லாமல் கேப்டன்ஸி அனுபவம் கொண்ட வீரரும் கூட. சூப்பர் கிங்ஸுக்கு தேவையாக இருந்த பல வெற்றிடங்களை அவர் நிரப்புகிறார்" என்று கூறினார் யோ மஹேஷ். நீண்ட நாள்களாக ஒரு தரமான கீப்பரை சூப்பர் கிங்ஸால் வாங்க முடியாமல் இருந்த நிலையில், இந்த டிரேட் அவர்களுக்கு சாதமாக அமைந்திருப்பதாகக் கூறினார் அவர். மேலும், இவ்விரு வீரர்களின் வயதைக் கணக்கில் கொள்ளும்போது, சூப்பர் கிங்ஸுக்கு இந்த ஒப்பந்தம் சற்று கூடுதல் சாதகமாக அமைந்திருப்பதாக அவர் கூறினார். சாம்சனுக்கு 31 வயதாகும் நிலையில், ரவீந்திர ஜடேஜா அடுத்த மாதம் 37 வயதில் அடியெடுத்து வைப்பார். "சாம்சன் - சூப்பர் கிங்ஸ் எதிர்காலத்துக்கான அடித்தளம்" சாம்சனை மையமாக வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒரு அணியைக் கட்டமைக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் கூறுகிறார் யோ மகேஷ். "சாம்சன் ஒரு சிறந்த வீரர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு பெரிய 'பிராண்ட்'. அவருக்கு நல்ல பெயரும் மதிப்பும் இருக்கிறது. மார்க்கெட்டிங் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் அது சூப்பர் கிங்ஸுக்கு பெரிய சாதகம். அதுமட்டுமல்லாமல் சாம்சன் தமிழ் பேசக்கூடியவர். ரஜினிகாந்த் ரசிகர் வேறு. இதெல்லாம் நம் ரசிகர்களுக்குப் பிடித்துப்போகும். சாம்சனை நம்முள் ஒருவனாக அவர்கள் பார்க்கத் தொடங்குவார்கள். அது ருதுராஜ் கெய்க்வாடுக்கு நடக்கவில்லை" என்றார் அவர். அதுமட்டுமல்லாமல் சாம்சனை உடனடியாக கேப்டனாக்குவது நல்லது என்றும் அவர் கருதுகிறார். "18 கோடி ரூபாய் கொடுத்து ஒரு பெரிய வீரரை வாங்கிவிட்டு, சிஎஸ்கே தாமதம் செய்யக்கூடாது. அவரை உடனடியாக கேப்டனாக்கவேண்டும். ருதுராஜ் போன்று அவருக்கு அந்த ரோலில் செட் ஆக அவகாசம் எடுத்துக்கொள்ளாது. அவர் ஏற்கெனவே ஒரு அணியை பல ஆண்டுகளாக வழிநடத்தியிருக்கிறார். சொல்லப்போனால் அவர் தலைமையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு சீரான முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. அதனால், அவர் எளிதாக அந்த இடத்தை நிரப்பிவிடுவார்" என்கிறார் யோ மகேஷ். சாம்சனை கேப்டனாக்கும் முடிவு ருதுராஜ் கெய்க்வாட் மீதான நெருக்கடியையும் குறைக்கும் என்கிறார் அவர். 2022, 2023 சீசன்களில் ஒரு பேட்டராக அவர் எப்படி சோபித்தாரோ, அதே மாதிரியான செயல்பாட்டை கேப்டன் பதவி இல்லாதபோது அவரால் நெருக்கடியின்றி கொடுக்கமுடியும் என்பது அவரது வாதமாக இருக்கிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சூப்பர் கிங்ஸ் அணியின் கீப்பராக யார் செயல்படுவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது கீப்பர் யார்? தோனியா, சாம்சனா? இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவரும் சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருப்பதன்மூலம், கீப்பராக யார் செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஒருசில வல்லுநர்கள், இது தோனி 'இம்பேக்ட்' வீரராக விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றார்கள். அவர் முழங்கால் பிரச்னையால் தொடர்ந்து அவதிப்படுவதால் இப்படியொரு வாதத்தை சிலர் முன்வைத்தனர். அதேசமயம் தோனியின் சிறப்பே அணி ஃபீல்டிங் செய்யும்போது அவர் கொடுக்கும் பங்களிப்புதான் என்பதால், அவர் ஃபீல்டிங்கில் இருக்கவேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த விஷயம் பற்றிப் பேசிய யோ மகேஷ், "சொல்லப்போனால் தோனி அறிவிக்கப்படாத ஒரு 'இம்பேக்ட்' வீரராகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார். கடைசி 10 பந்துகள் இருக்கும்போதுதான் ஆடவருகிறார். அவருடைய பெரிய பங்களிப்பு என்பது ஃபீல்டிங்கில் இருக்கும்போதுதான். அதேசமயம் வேறு கேப்டன்கள் இருக்கும்போது அவரும் மெல்ல தலையீட்டைக் குறைத்துக்கொண்டிருக்கிறார். இப்போதும் அதுதான் நடக்கும் என்று நம்புகிறேன். ஒருசில போட்டிகள் சாம்சன் செட் ஆகும் வரை அவர் கீப்பிங் செய்துவிட்டு, மெல்ல அவர் அந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்" என்றார். சாம்சன் தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருவதால் அவர் நிச்சயம் கீப்பிங் செய்யவே விரும்புவார் என்று குறிப்பிட்டார் யோ மகேஷ். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் அடித்து சிஎஸ்கேவை வெற்றி பெற வைத்தார் ஜடேஜா ஜடேஜா: சென்னையின் இழப்பும், ராயல்ஸின் லாபமும் ரவீந்திர ஜடேஜா சென்னையில் இருந்து சென்றிருப்பது உணர்வுபூர்வமாக ரசிகர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவித்தார் யோ மகேஷ். "இத்தனை ஆண்டுகள் ரசிகர்கள் அவரை தங்களுள் ஒருவராகப் பார்த்திருக்கிறார்கள். அவரும் அதை திரும்ப வெளிப்படுத்தியிருக்கிறார். இதை ஒரு வீடு என்றே கருதியிருக்கிறார். அவரும், அஷ்வினும் ஒன்றாகப் பந்துவீசி எதிரணிகளை தடுமாற வைத்த தருணங்கள், ஜடேஜா பாய்ந்து பிடித்த கேட்ச்கள், 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியின் கடைசி 2 பந்துகளில் பௌண்டரிகள் அடித்து அவர் வெற்றி பெறவைத்த அந்தத் தருணம்... இப்படி பல்வேறு தருணங்கள் சென்னை ரசிகர்களுக்கு அவரை மிகவும் நெருக்கமாகக் கொண்டுவந்து வைத்துள்ளன" என்றார் அவர். கடந்த 2 சீசன்களாக ஜடேஜாவின் பந்துவீச்சில் ஏற்பட்ட சிறு சரிவு அணி நிர்வாகம் இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூட அவர் கருதுகிறார். கடந்த சீசன் 32.40 என்ற சராசரியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த ஜடேஜா, 2024 சீசனில் 46.13 என்ற சராசரியில் 8 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். அதேசமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவரால் சிறப்பாக செயல்படமுடியும் என்று சொல்லும் யோ மகேஷ், அதற்கான காரணத்தையும் கூறுகிறார். "கடந்த 2 ஆண்டுகளாக சேப்பாக்க ஆடுகளம் முன்பு போல் சுழலுக்கு ஒத்துழைக்கவில்லை. அது ஜடேஜாவின் செயல்பாட்டில் பிரதிபலித்தது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸின் ஹோம் கிரவுண்டான சவாய் மான்சிங் ஸ்டேடியம் அவருக்கு உகந்ததாக இருக்கும். அது பெரிய மைதானம். பந்து கொஞ்சம் மெதுவாகவும், கீழ் தங்கியும் செல்லும். அங்கு சராசரி ஸ்கோரே 160 - 170 போலத்தான் இருக்கும். அங்கு ஜடேஜாவால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியும்" என்று யோ மகேஷ் கூறினார். கடந்த சீசன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சுழற்பந்துவீச்சே பிரதான பிரச்னையாக இருந்ததாகவும், அதை ஜடேஜா மூலம் அவர்கள் ஓரளவு தீர்த்திருப்பதாகவும் யோ மகேஷ் நம்புகிறார். அதுமட்டுமல்லாமல், சமீப ஆண்டுகளாக ஆல்ரவுண்டர்கள் இல்லாமல் அந்த அணி பல போட்டிகளில் 5 பிரதான பௌலர்களை மட்டுமே வைத்து களமிறங்கும் சூழ்நிலை பல போட்டிகளில் ஏற்பட்டிருக்கிறது. ஜடேஜா, சாம் கரண் ஆகியோரின் வருகை மூலம் அந்த பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் அவர். இதனால் தான் இந்த டிரேட் இரண்டு அணிகளுக்குமே வெற்றிகரமானது என்று குறிப்பிடுகிறார் யோ மகேஷ். எதிர்காலத்தை கணக்கில் கொள்ளும்போது சூப்பர் கிங்ஸுக்கு கூடுதல் லாபம் என்று சொல்லும் அவர், சாம்சனை ராயல்ஸ் இழந்ததை விட, ஜடேஜாவை சூப்பர் கிங்ஸ் இழந்தது உணர்வுபூர்வமாக பெரிய இழப்பு என்றும் கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8ey35nwwlpo
-
நவம்பர் 2025 - இன்றைய வானிலை
மட்டக்களப்பில் கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 15 Nov, 2025 | 02:46 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பேய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியாக மழைபெய்யுமானால் சில பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் பாதிக்கப்படும் நிலைமைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேநேரம், கடந்த 11.11 2025 உருவான காற்றுச் சுழற்சி நகர்வதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கன மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை, இம்மழை எதிர்வரும் 20.11.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது. கனமழைக்கு வாய்ப்புள்ளதனால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/230421
-
பொய்யரை கண்டுபிடிக்க நாம் தவறுவது ஏன்? ஒருவர் கூற்று உண்மையா பொய்யா என்றறிய அறிவியல் கூறும் வழி
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் பல்லப் கோஷ் அறிவியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் "பொய் சொல்லும் நபரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே கண்டுபிடித்தாலும், அது பகுத்தறிவதன் மூலமாகவே இருக்கும். நாம் அதிகமாக மதிக்கும் 'உள்ளுணர்வின்' அடிப்படையில் அல்ல" என்கிறார் 170க்கு மேல் ஐ.க்யூ (IQ) கொண்டவரான சர் ஸ்டீபன் ஃப்ரை. பிபிசியின் 'தி செலிபிரிட்டி டிரெய்ட்டர்ஸ்' (The Celebrity Traitors) என்ற கேம் ஷோவில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு சற்று முன் அவர் இப்படிக் கூறினார். அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது, அவரது கோட்பாடு நிச்சயம் உண்மையாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஏனெனில், அந்த நிகழ்ச்சியில் இருக்கும் 16 "விசுவாசமான" போட்டியாளர்கள், தங்கள் மத்தியில் இருக்கும் "துரோகிகளை" கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், கேம் ஷோ தொடங்கி ஏழு எபிசோடுகள் கடந்த பிறகுதான் "விசுவாசமான" போட்டியாளர்கள் தங்கள் மத்தியில் இருந்த மூன்று பொய்யுரைக்கும் "துரோகிகளில்" ஒருவரையே கண்டுபிடித்துள்ளனர். பெரும்பான்மையாக சொல்லப்படும் வழக்கமான 'ஞானத்திற்கு' முரணாக சர் ஸ்டீபனின் கோட்பாடு உள்ளது. அதாவது, பல நூற்றாண்டுகளாக மக்கள் முகங்களைப் பார்த்தே ஒருவர் சொல்வது உண்மையா, பொய்யா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம் என்று நம்பினார்கள். இது ஒருவரது உடலில் நிகழும் மாற்றங்களைப் பகுப்பாயும் ஃபிசியோக்னோமி (physiognomy) என்றழைக்கப்படும் ஒரு பண்டைய முறை. கடந்த 19ஆம் நூற்றாண்டில் குற்றவாளிகளை அடையாளம் காண இது பயன்படுத்தப்பட்டது. அதாவது, பெரிய தாடைகள், கன்னக் கதுப்பின் எலும்புகள், சமச்சீரற்ற முக அம்சங்கள், தட்டையான அல்லது பெரிதாக இருக்கும் மூக்கு, வலிமையான கண்புருவ முகடுகள் போன்றவை "நாகரிகம் குறைவான" மனிதர்களுடன் தொடர்புடைய அம்சங்களாகக் கருதப்பட்டன. இத்தகைய தோற்றம் உடையவர்கள் சந்தேகத்திற்குரிய நபர்களாகக் கருதப்படும் அபாயம் இருந்தது. நிச்சயமாக, இது முற்றிலும் மடமைத்தனமான பார்வைதான். இது சமூக ரீதியாகவும் இன ரீதியாகவும் உருவாக்கப்படும் தப்பெண்ணங்களுடன் தொடர்புடையது. இதற்கும் அறிவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் இந்தக் கருத்து முற்றிலுமாக மதிப்பிழந்துள்ளது. இருப்பினும், சில நவீன ஆய்வுகள், ஒருவர் தம்மை எவ்வளவு தூரம் கவர்கிறார், அவர்களின் முக சமச்சீர்மை, முகபாவனைகள் ஆகியவற்றின் அடிப்படையில், மனிதர்களை நம்புவது, சந்தேகிப்பதில் மக்கள் ஈடுபடுவதாகக் கூறுகின்றன. இதன் மூலம், நேர்மையற்ற ஒருவரது முகத்தைக்கூட மற்றவர்களின் பார்வைக்கு மிகவும் நம்பகமான ஒன்றாகக் காட்டலாம் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். அழகாக இருந்தால் நல்லவரா? மக்கள் வெளிப்புறத்தில் தெரியும் மேலோட்டமான அம்சங்களில் அதிக கவனம் செலுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 2000ஆம் ஆண்டில் வெளியான ஓர் ஆய்வு, கவர்ச்சிகர தோற்றம் கொண்ட மக்கள் மிகவும் நேர்மறையாக உணரப்படுவதாகக் கூறுகிறது. அதாவது, அவர்கள் அதிக புத்திசாலிகளாக, திறமையானவர்களாக, நம்பகமானவர்களாக கருதப்படுகிறார்கள் என்று அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. "எது அழகாக இருக்கிறதோ அது நல்லதாக இருக்கும் என்ற அனுமானம் இருக்கிறது" என்று கவன்ட்ரி பல்கலைக் கழகத்தின் உளவியலாளரும் விரிவுரையாளருமான ரேச்சல் மோலிட்டர் கூறுகிறார். "உங்களை ஒருவர் கவர்ந்திழுப்பதாகக் கருதினால், நேர்மறையான குணங்களாக நீங்கள் கருதும் குணங்களை அவர் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள்" என்கிறார் ரேச்சல். படக்குறிப்பு, ஒருவர் பொய் சொல்கிறாரா என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்கிறார் சர் ஸ்டீபன் ஃப்ரை கவர்ச்சி, அழகு ஆகியவை குறித்த பார்வை உலகம் முழுவதும் நீண்ட காலமாக பெருமளவில் வேறுபடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 2015இல் வெளியான மற்றோர் ஆய்வு, கவர்ச்சி மற்றும் நம்பகத்தன்மை பற்றிய கருத்துகளை ஆராய்ந்தது. ஒரு முகம் மிகவும் பொதுவானதாகவோ அல்லது சராசரியான ஒன்றாகவோ மாறும்போது, மிகவும் கவர்ச்சிகரமான, நம்பகமான முகமாகவும் அது மாறுகிறது என்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. அதன்படி, ஒருவர் குறிப்பிட்ட அளவிலான கவர்ச்சியைக் கொண்டிருந்தால் அவர் மீதான நம்பகத்தன்மை அதிகமாக இருக்கிறது. அதுவே ஒருவர் அந்த வரம்பை மீறும் அளவுக்கு கவர்ச்சியாக இருக்கும்போது, அவர் குறித்த பிறரின் நம்பகத்தன்மை குறையத் தொடங்குகிறது. தன்னியக்கமாக, சுயநினைவின்றி வெளிப்படும் நமது "அனிச்சையான நம்பிக்கை", மகிழ்ச்சியாகவும் நட்புறவு கொண்ட வகையிலும் தோன்றக்கூடிய முக அம்சத்தாலும் தூண்டப்படலாம். கடந்த 2008ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மேற்கொண்ட தொடர் சோதனைகளில் இது நிரூபிக்கப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முகபாவனைகளை, உடலியல் மாற்றங்களை வைத்து ஒருவர் பொய் சொல்வதைக் கண்டுபிடிக்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள். இந்தச் சோதனையில் பங்கேற்றவர்கள், கோபம், சோகம் அல்லது நடுநிலையான உணர்ச்சிகளை வெளிப்படுத்திய முகங்களைவிட, மகிழ்ச்சியான அல்லது புன்னகைக்கும் பாவனைகளைக் கொண்ட முகங்களை அதிக நம்பிக்கையானவை என மதிப்பிட்டனர். பிரெஞ்சு தன்னார்வலர்கள் மத்தியில் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், மிகவும் உண்மையானதாக மதிப்பிடப்பட்ட புன்னகைகளைக் கொண்ட முகம் நம்பத் தகுந்தது என்றும் கருதப்பட்டதைக் கண்டறிந்தது. அதுமட்டுமின்றி, அத்தகைய முகங்களைக் கொண்டவர்கள் அதிக வருமானம் ஈட்டுபவராக இருக்கலாம் என மக்களை நினைக்க வைப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்தது. சன்கிளாஸ், முகக்கவசம், முகத்தை மறைக்கும் வகையில் இருக்கும் நீளமான முடி ஆகியவை, நம்பகத்தன்மை அளவைக் குறைப்பதாகக் கூறுகிறார் உளவியலாளர் ரேச்சல். என் முகம் எவ்வளவு நம்பகமானது? என் முகம் எவ்வளவு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கிறது எனக் கூறுமாறு சில ஆய்வாளர்களிடம் கேட்டேன். இது சற்று ஆபத்தானதாகத் தெரிந்தாலும், எனக்கு ஆர்வமாக இருந்தது. அவர்கள் முதலில், என் முகம் எவ்வளவு சமச்சீராக இருக்கிறது என்பதைப் பார்த்தார்கள். சமச்சீர் என்பது முகத்தின் இருபுறமும் எவ்வளவு சீராக இருக்கிறது என்பதாகும். படக்குறிப்பு, பல்லப் கோஷ் தனது சொந்த முகத்தின் நம்பகத்தன்மையை ஆராயுமாறு ஆய்வாளர்களிடம் கேட்டுக்கொண்டார் "மக்கள் பெரும்பாலும் சமச்சீரான முகங்களை மிகவும் அழகானவையாகக் கருதுகிறார்கள். அழகான முகங்கள் பெரும்பாலும் நம்பகமானவையாக கருதப்படுகிறது" என்று கூறினார் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் உளவியல் மற்றும் குற்றவியல் துறையில் விரிவுரையாளராக இருக்கும் மிர்சியா ஸ்லோடானு. அதோடு ஹேலோ விளைவு என்ற ஒன்றும் உள்ளது. அதாவது, ஒருவர் ஒரு வழியில் நல்ல விதமாகத் தென்பட்டால், அவர் பிற விஷயங்களிலும் நல்லவராக இருப்பார் என்று கருதுவது. உளவியலாளர் மிர்சா ஸ்லோடானு, "அனைவரிடமும் சிறிய அளவிலான சமச்சீரற்ற தன்மை இயல்பாக இருக்கும்" என்று விளக்கினார். ஆகையால், "சில சமச்சீர்மை அம்சங்கள் ஒருவரை நல்லவராகக் காட்டலாம். ஆனால், ஒரு முகம் மிகச் சரியானதாக இருந்தால் அது விசித்திரமாகவோ அல்லது இயற்கைக்கு மாறானதாகவோ தோன்றத் தொடங்குகிறது" என்கிறார் முனைவர் ஸ்லோடானு. இந்தக் காரணத்தாலேயே, டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட முகங்கள் அல்லது ரோபோக்களின் முகங்களின் சமச்சீர் மிகுந்த துல்லியத்தன்மை, பார்ப்போருக்கு விசித்திரமாகத் தோன்றுகிறது. படக்குறிப்பு, பல்லப் கோஷின் முகத்தில் உள்ள சமச்சீர்மையை முனைவர் மிலேவா ஆராய்ந்தார் (இந்தப் புகைப்படங்கள் தன்னார்வலர்களுக்கு காட்டப்பட்டவை அல்ல) என் முகத்தை எப்படி அதிகம் நம்பகமான ஒன்றாகத் தோன்ற வைப்பது என்பதைக் காட்ட, மற்றொரு ஆய்வாளரான முனைவர் மிலா மிலேவா என் புகைப்படத்தில் சில திருத்தங்களைச் செய்தார். அவர் முக சமச்சீர்மையை சிறிது மாற்றி, என் உதடுகளில் புன்னகையைக் கொண்டு வந்தார். கூடுதலாக ஒரு படி மேலே சென்று, என் முகத்தை இளமையானதாகவும் பெண்மை கொண்டதாகவும் மாற்றிக் காட்டினார். அதாவது, பெண் முகங்கள், குரல்கள், பெயர்கள் பெரும்பாலும் ஆண் முகங்களைவிட நம்பகமானவையாகக் கருதப்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, ஒரு முகம் எவ்வளவு பெண்மையுடன் தெரிகிறதோ, அவ்வளவு நம்பகமானது என மக்கள் நினைக்கிறார்கள். இந்த மாற்றங்களைச் செய்த பிறகு, அவர் 26 தன்னார்வலர்களுக்கு வெவ்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட என் முகத்தின் வெவ்வேறு வடிவங்களைக் காட்டினார். ஒவ்வொரு நபரும் 35 முகங்களின் புகைப்படங்களில் ஒன்றாக என் முகத்தையும் பார்த்தார்கள். அந்தத் தன்னார்வலர்கள் ஒவ்வொரு முகத்திற்கும், 1 (நம்பகமானதல்ல) முதல் 9 (மிகவும் நம்பகமானது) என்ற அளவுகோலில் மதிப்பிட்டனர். இது ஓர் அதிகாரபூர்வ அறிவியல் ஆய்வு இல்லை. ஆனால் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே இருந்தன. அதாவது மக்கள் என் முகத்தின் இளைய, புன்னகைக்கும், பெண்மை கூட்டப்பட்ட வடிவத்தின் மீது அசல் முகத்தைவிட அதிகமாக நம்பிக்கை வைத்தனர். இந்தச் சோதனையின் இறுதியில் நான் எளிமையான விஷயத்தை கற்றுக் கொண்டேன். அதாவது நான் கொஞ்சம் கூடுதலாகச் சிரித்தால், மக்கள் என் அறிவியல் கட்டுரைகளை அதிகமாக நம்பக்கூடும். படக்குறிப்பு, குழு மனப்பான்மை மக்களின் முடிவுகளை அதிகம் பாதிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் மக்களின் மந்தை மனோபாவம் ஆரம்பத்தில் பார்த்த கேம் ஷோவில் இருப்பதைப் போல, துரோகிகளைக் கண்டறிவதை பொறுத்தவரை, குழு மனப்பான்மை காரணமாக யாரை நம்புவது என்பது பற்றிய கேள்வி மிகவும் சிக்கலான ஒன்றாக மாறுகிறது. முனைவர் மோலிட்டர் ஏமாற்றுவதில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் துரோகிகளாக கேம் ஷோ நிகழ்ச்சியில் வந்தவர்களுடைய மிகப்பெரிய ரசிகராகவும் உள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த இந்த ஆண்டின் போட்டியாளர்கள் ஒரேயொரு பொய்யரை அடையாளம் காண்பதற்குக் கூட இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டதற்கான காரணம் குறித்து அவருக்குச் சொந்தக் கருத்து உள்ளது. அதாவது "குழு மனப்பான்மை மோசமான முடிவுகளை எடுக்கவே வித்திடுவதாக" அவர் வாதிடுகிறார். "துரோகத்திற்கான சான்றுகள் மெல்லியதாகவோ, தெளிவற்றதாகவோ இருந்தாலும்கூட, மந்தை மனநிலை கொண்ட மக்களை அது கூட்டாகப் பிழை செய்வதற்கு இழுக்கிறது," என்று கூறுகிறார் அவர். மக்களின் மனம், குழு சிந்தனையில் எழக்கூடிய, பெரும்பாலும் தவறாக இருக்கக்கூடிய அனுமானத்தை ஆதரிக்காத ஆதாரங்களை புறக்கணிப்பதாகவும் கூறுகிறார். ஒருவர் எவ்வளவு நம்பகமானவர் என்பது குறித்து மக்களுக்கு எண்ணங்கள் எழுவதன் வேகமும் இந்தப் பிரச்னையின் ஒரு பகுதியாக இருக்கலாம். இது ஒரு நபரின் நம்பகத்தன்மையை தவறாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, துல்லியமான சமச்சீர்மை இருப்பது, ரோபோ முகங்கள், டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட முகங்கள் மீது மக்களுக்கு ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது நம்பிக்கையை அளவிடக்கூடிய திறன் என்பது, மனித பரிணாம வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே உருவாகிவிட்டதாக முனைவர் மிலேவா விளக்குகிறார். "நமது முன்னோர்கள் ஒருவர் நண்பரா, பகைவரா என்பதை ஒரு நொடியில் சொல்ல வேண்டியிருந்தது. இது மிகவும் விரைவான சிந்தனைச் செயல்முறை. நம்பகத்தன்மை குறித்த நிலையான எண்ணங்கள் நமக்குள் உருவாவதற்கு ஒரு விநாடியில் பத்தில் ஒரு பங்கு நேரமே ஆகிறது" என்று அவர் விளக்குகிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அனிச்சையாக ஏற்படும் நமது நம்பிக்கைகள் விரைவாக உருவாகும் அதேவேளையில், அவை மிக மோசமானவை என்று மிலேவாவின் ஆராய்ச்சி காட்டுகிறது. பொய்யர்களை கண்டுபிடிக்க நாம் தவறுவது ஏன்? பொய் கண்டறிதலுக்கான அறிவியல் அணுகுமுறைகள், ஏமாற்றுதலின் சமூகப் பங்கு ஆகியவற்றில் நிபுணரான மிர்சியா ஸ்லோட்டானு, விரைவாக உருவாகும் நமது அனிச்சையான நம்பிக்கை மோசமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார். நம்பத்தகுந்த நபர்களையும் பொய் சொல்பவர்களையும் கண்டறிவதில் நாம் மிகவும் திறமையானவர்கள் என்று நமக்கு நாமே கருதிக் கொள்கிறோம் என்பதையும் ஆனால் உண்மையில் அப்படி இல்லை என்பதையும் அவர் கண்டுபிடித்துள்ளார். "வியர்வை, நேராகக் கண்களைப் பார்க்காதது, முகம் சிவத்தல், நடுக்கம் அல்லது பிற உடலியல் குறிப்புகளைத் தேடுவதன் மூலம் நம்மால் ஒரு பொய்யைக் கண்டுபிடித்துவிட முடியும் எனக் கருதுகிறோம். ஆனால், உண்மையில், இந்தக் குறிப்புகள் நம்ப முடியாத அளவுக்கு சுற்றியிருக்கும் சூழல் சார்ந்தவையாக உள்ளன. இவை ஏமாற்றுதலின் நம்பகமான குறியீடுகள் இல்லை" என்று கூறுகிறார் ஸ்லோடியனு. பட மூலாதாரம், Getty Images "ஒருவர் பதற்றமாக, கூச்ச சுபாவமுள்ளவராக இருப்பதால் வியர்த்துக் கொண்டிருக்கலாம் அல்லது கண்களை நேராகப் பார்க்காமல் இருக்கலாம். அதற்காக அவர்கள் பொய் சொல்வதாகப் பொருள் இல்லை. பெரும்பாலும், இந்த சமிக்ஞைகளை நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோம். ஏனெனில், அவை நேர்மையற்ற தன்மையைக் குறிப்பதாக நாம் கருதுகிறோம். ஆனால் உண்மையில் அவை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஏற்படும் அசௌகரியம் அல்லது உணர்ச்சித் தூண்டுதலின் அறிகுறிகளே" என்றும் அவர் விளக்கினார். பல்வேறு சோதனைகளில், தன்னார்வலர்கள், ஒருவரின் வீடியோவை பார்த்து, அவர் சொல்வது பொய்யா, உண்மையா என்பதைக் கண்டறிய, வியர்த்தல், விலகி வேறுபுறமாகப் பார்ப்பது, முகம் சிவத்தல் போன்ற வழக்கமான குறிப்புகளைப் பயன்படுத்தினார்கள். முனைவர் ஸ்லோடானுவும் அவரது குழுவினரும் சோதனைகளில் பங்கெடுத்த தன்னார்வலர்களால் உண்மை மற்றும் பொய்க்கு இடையிலான வித்தியாசத்தை அறிய முடியவில்லை என்பதையும், போலி உணர்ச்சிகள் அல்லது கற்பனையான கதைகள் போன்ற பல்வேறு வகையான பொய்களைக் கண்டறிவதில் அவர்கள் சிறந்து விளங்கவில்லை என்பதையும் கண்டறிந்தனர். மீண்டும் குழு மனப்பான்மையுடன், தவறான பதிலையே உறுதி செய்வதில் அதிகமான மக்கள் ஈடுபட்டது துல்லியத்தன்மையை மேலும் குறைத்தது. "அறிவியல் ஆய்வுகளைப் பார்க்கும்போது, அதைப் பிரதிபலிக்கும் எங்கள் சொந்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்க்கும்போது, மக்கள் பொய்களைக் கண்டுபிடிப்பதில் சிறந்தவர்கள் அல்ல என்பது புரியும். அதாவது இது அடிப்படையில் ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டு, கையில் இருப்பது பூவா, தலையா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு நிகரானதுதான்" என்று முனைவர் ஸ்லோட்டானு கூறினார். பொய்யர்களால் பிறரை முட்டாளாக்க முடிந்தது எப்படி? ஆரம்பத்தில் கூறிய நிகழ்ச்சியில் பங்கெடுத்த துரோகிகளால் இவ்வளவு காலம் அனைவரையும் முட்டாளாக்க முடிந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இதில் போட்டியாளர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் முக்கியப் பங்கைக் கொண்டிருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியெனில், தி செலிபிரிட்டி டிரெய்ட்டர்ஸ் நிகழ்ச்சியில் இருந்து கிடைத்த பாடம் என்ன? நாம் நம்பும் நபர்களால் எளிதில் ஏமாற்றப்படலாம் என்பதுதானா? இது உண்மையெனில், அது எப்போதும் மோசமான விஷயமாக இருப்பதல்ல என்று முனைவர் ஸ்லோட்டியனு கூறுகிறார். பொய் சொல்வது நீண்டகாலமாக மிகவும் மோசமான விஷயமாக கருதப்படுகிறது என்று விளக்கும் அவர், "ஆனால் உண்மையில், கொஞ்சம் பொய் சொல்லும் திறனும், சில நேரங்களில் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் திறனும் இருப்பது சமூகத்தில் உதவிகரமாக இருக்கும்" என்கிறார். எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சிறிய விஷயங்களில் பொய் கூறலாம். அதாவது, அவர்கள் நன்றாக இருக்கிறார்கள், எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகிறீர்கள். அல்லது கூடுதலாக ஒரு துண்டு கேக் சாப்பிடுவது நல்லது எனக் கூறுகிறீர்கள். இவை மோசமான பொய்கள் அல்ல. அவை நட்பை உருவாக்கிக் கொள்ளவும், நல்ல உறவுகளைப் பராமரிக்கவும், மக்கள் நல்லவிதமாக உணர்வதற்கும் உதவுகின்றன. இந்த வகையான பொய்கள், "பசை" போலச் செயல்பட்டு, மக்களை இணைக்கிறது. ஒருவர் உண்மையைத்தான் பேசுகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ளவும் விஞ்ஞானிகள் சில பரிந்துரைகளைக் கூறுகிறார்கள். அதாவது, நமது சொந்தச் சார்பு நிலைகளைப் புரிந்து கொள்வது, நமக்கு உடனடியாக ஏற்படும் முதல்கட்ட எண்ணங்களையே முற்றிலுமாக நம்பாமல் இருப்பது, உள்ளுணர்வுகளை மட்டுமே அதிகமாக நம்புவதைத் தவிர்ப்பதும், அதற்கு உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அடிப்படையில் பார்த்தால், சர் ஸ்டீபன் ஃப்ரை கூறியது சரிதான். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm2w7yvvmy2o
-
மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!
மருந்து வகைகளின் பெயர்களை தெளிவாக எழுதுமாறு வைத்தியர்களுக்கு எச்சரிக்கை! 15 Nov, 2025 | 11:32 AM இலங்கையில் உள்ள வைத்தியர்களுக்கு இலங்கை மருத்துவ சபை முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். வைத்தியர்கள் மருந்துச் சீட்டுகளில் தெளிவற்ற முறையில் மருந்து வகைகளின் பெயர்களை எழுதுவதால் மருந்துகளை அடையாளம் காண சிரமமாக உள்ளமாக மருந்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் முறையிடுவதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் மருந்துச் சீட்டுகளில் மருந்து வகைகளின் பெயர்களை எழுதும் போது தெளிவாகவும் மருந்து பரிந்துரைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களுக்கு அமையவும் எழுத வேண்டும் என இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. மருந்துச் சீட்டுகளில் உள்ள மருந்து வகைகளின் பெயர்கள் தெளிவற்றதாக இருக்கும் போது நோயாளிகள் தவறாக மருந்துகளை பெற்றுக்கொள்ள கூடும் எனவும் இது உயிருக்கு மிகவும் ஆபத்தானது எனவும் இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. மருந்து பரிந்துரைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை மீறும் வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மருத்துவ சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/230411
-
பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பத்திநாயக்க பதவி நீக்கம்!
Published By: Digital Desk 1 15 Nov, 2025 | 01:36 PM பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பத்திநாயக்க, ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக பிரதி பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக லலித் பத்திநாயக்க தொடர்ந்தும் பணியாற்றுவார் என குறிப்பிடப்படுகிறது. மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக பணியாற்றிய சஞ்சீவ தர்மரத்ன, குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதால், குறித்த வெற்றிடத்திற்கு லலித் பத்திநாயக்கவை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், பிரதி பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன தற்போது பணியாற்றி வருகிறார். https://www.virakesari.lk/article/230414
-
நாமல் ராஜபக்ஷ - எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பு!
15 Nov, 2025 | 01:15 PM (இணையத்தள செய்திப் பிரிவு) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது தேசிய மக்கள் சக்கி அரசாங்கம் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமை தொடர்பான 21ஆவது பொதுக்கூட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 21ஆவது பொதுக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்காவிட்டாலும், ஒரு முக்கிய எதிர்க்கட்சி என்ற வகையில், பொதுக்கூட்டம் தொடர்பிலும் பிரச்சினைகள் குறித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தெரிவிப்பது அவசியம் என நாமல் ராஜபக்ஷ தனது Xதளத்தில் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230415