Everything posted by ஏராளன்
-
நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்
வெனிசுவேலா மீதான அமெரிக்க தலையீடு : ஜே.வி.பி கடும் கண்டனம்! Published By: Digital Desk 1 04 Jan, 2026 | 03:07 PM வெனிசுவேலாவிற்கு எதிரான அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டை கடுமையாகக் கண்டித்து, வொஷிங்டன் இறையாண்மையை மீறுவதாக மக்கள் விடுதலை முன்னணி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (04) மக்கள் விடுதலை முன்னணி அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், சுதந்திரமான, இறைமையுள்ள நாடான வெனிசுவேலாவுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கடத்திச் சென்று, அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ ரீதியிலான ஆக்கிரமிப்புத் தலையீட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். உலகின் எந்தவொரு சுதந்திர, இறைமையுள்ள நாட்டைப் போலவே வெனிசுவேலாவினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறைமை அதிகாரம் அந்நாட்டு மக்களுக்கே உரியது. அதனை மீறுவதற்கு எந்தவொரு வல்லரசுக்கும் உரிமை இல்லை. நவீன சமூகமும், அரச நிர்வாகமும் மிகவும் பண்பட்டதாக இருக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். ஜனநாயகம், மனித உரிமைகள், நாடுகளின் சுதந்திரம் மற்றும் இறைமை என்பன உலகமே ஏற்றுக்கொள்ளும் கோட்பாடுகளாகும். எந்தக் காரணத்திற்காகவும் அவற்றை மீறி, நாடுகளுக்குள் இராணுவத் தலையீடுகள் அல்லது ஆக்கிரமிப்புகளை மேற்கொள்வது நவீன நாகரிக உலகில் நியாயமானதல்ல. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவினால் வெனிசுவேலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான இராணுவத் தலையீட்டை உலகில் எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். எனவே, அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்ட இந்த இராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரான நாம், வெனிசுவேலாவின் இறைமை மற்றும் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம் எனக் குறிபிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235186
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
வெறும் 2 மணி 20 நிமிடங்களில் மதுரோவை பிடித்த அமெரிக்கா - ஒரு வீரரை கூட இழக்காமல் செய்து முடித்தது எப்படி? பட மூலாதாரம்,Donald Trump/ Truth Social கட்டுரை தகவல் கேரத் எவான்ஸ் வாஷிங்டன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மாதக்கணக்கில், அமெரிக்க உளவாளிகள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தனர். வெனிசுவேலா அரசுக்குள் இருந்தபடியே உளவு சொன்ன ஒருவரையும் (source) உள்ளடக்கிய ஒரு சிறிய குழு, 63 வயதான மதுரோ எங்கு உறங்குகிறார், என்ன சாப்பிடுகிறார், என்ன உடை அணிகிறார் என்பதோடு, உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கூறுவதுபோல், "அவரின் செல்லப்பிராணிகள்" வரையிலும் கண்காணித்து வந்தது. அதன்பிறகு, டிசம்பர் தொடக்கத்தில், 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' என்று பெயரிடப்பட்ட ஒரு திட்டம் இறுதி செய்யப்பட்டது. இது பல மாதங்கள் நீடித்த நுட்பமான திட்டமிடல் மற்றும் ஒத்திகைகளின் விளைவாகும். இந்த ஒத்திகைகளில், அமெரிக்கப் படையினர் (Elite troops), தாங்கள் நுழைய வேண்டிய வழிகளைப் பயிற்சி செய்வதற்காக, மதுரோவின் கராகஸ் பாதுகாப்பு இல்லத்தின் உண்மையான, முழு அளவிலான பிரதியையும் உருவாக்கியிருந்தனர். பனிப்போருக்குப் பிறகு இல்லாத வகையில் லத்தீன் அமெரிக்காவில் அசாதாரணமான அமெரிக்க ராணுவத் தலையீட்டிற்கு வழிவகுத்த அந்தத் திட்டம் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. இதுபற்றி, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவோ அல்லது ஆலோசிக்கப்படவோ இல்லை. துல்லியமான விவரங்கள் அனைத்தும் தயாரான நிலையில், உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் தாக்குதலைத் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலைகளுக்காக வெறுமனே காத்திருக்க வேண்டியிருந்தது. திட்டத்தின் ஆச்சரியக்கூறை (surprise element) அதிகப்படுத்த அவர்கள் விரும்பினார்கள் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். நான்கு நாட்களுக்கு முன்னதாகவே அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்திருந்த போதிலும், சிறந்த வானிலைக்காகவும், மேகமூட்டம் குறைவாக இருப்பதற்காகவும் அவர்கள் காத்திருக்கத் தீர்மானித்ததால், ஒரு தவறான தொடக்கம் (false start) ஏற்பட்டது. "கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முழுவதும் பல வாரங்களாக, அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் தயாராக இருந்தனர். சரியான நேரத்திற்காகவும், அதிபர் உத்தரவுக்காகவும் அவர்கள் பொறுமையாகக் காத்திருந்தனர்" என்று நாட்டின் மிக உயர்ந்த பதவியில் உள்ள ராணுவ அதிகாரியான ஜெனரல் டான் கெய்ன் சனிக்கிழமை காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 'அதிர்ஷ்டமும் தெய்வ ஆசியும்' பணியைத் தொடங்குவதற்கான உத்தரவு அதிபரிடமிருந்து இறுதியாக வெள்ளிக்கிழமை இரவு 10:46 மணிக்கு (கிழக்கு நேர மண்டலம் Eastern Daylight Time EDT) வந்தது. "நாங்கள் இதை நான்கு நாட்களுக்கு முன்பு, மூன்று நாட்களுக்கு முன்பு, இரண்டு நாட்களுக்கு முன்பு செய்யவிருந்தோம். பின்னர் திடீரென்று வாய்ப்பு உருவானது. அவர்களைப் போகச் சொன்னோம்" என்று சனிக்கிழமை அதிகாலைத் தாக்குதலுக்குப் பிறகு, ஃபாக்ஸ் & ஃப்ரெண்ட்ஸ் (Fox & Friends) நிகழ்ச்சியில் கூறினார் டிரம்ப். "அவர் எங்களுக்கு அதிர்ஷ்டமும் கடவுள் ஆசியும் உடனிருக்கும் என்று கூறினார்" என்று தெரிவித்தார் ஜெனரல் கெய்ன். டிரம்பின் உத்தரவு கராகஸில் நள்ளிரவுக்குச் சற்று முன்பு வந்தது. இது இரவின் பெரும்பகுதி இருளில் செயல்பட ராணுவத்திற்கு அவகாசம் அளித்தது. அதன்பிறகு, வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழியாக இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் நீடித்த அந்தப் பணி, வாஷிங்டனையும் உலகெங்கிலும் பலரையும் திகைக்க வைத்தது. அளவு மற்றும் துல்லியத்தின் அடிப்படையில், இது கிட்டத்தட்ட முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக இருந்தது. இது பல பிராந்திய சக்திகளிடமிருந்து உடனடி கண்டனங்களைப் பெற்றது. பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, வெனிசுவேலா தலைவரைக் சிறைபிடித்த வன்முறைச் செயல் முழு சர்வதேச சமூகத்திற்கும் மற்றொரு மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். டிரம்ப் வெள்ளை மாளிகையின் சூழல் அறியும் அறையிலிருந்து (Situation Room) இந்த நிகழ்வைப் பின்தொடரவில்லை. அதற்குப் பதிலாக, அவர் புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது மார்-எ-லாகோ கிளப்பில் தனது ஆலோசகர்களால் சூழப்பட்டிருந்தார். அங்கு அவர் சிஐஏ இயக்குநர் ஜான் ரேட்கிளிஃப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருடன் சேர்ந்து ராணுவ நடவடிக்கையை நேரடிலையில் பார்த்தார். "பார்க்க நம்ப முடியாத ஒரு விஷயமாக அது இருந்தது" என்று டிரம்ப் சனிக்கிழமை கூறினார். "நடந்ததைப் பார்த்திருந்தால், அதாவது, நான் அதை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பது போலப் பார்த்தேன். நீங்கள் அந்த வேகம், அந்த வன்முறை... ஆகியவற்றைப் பார்த்திருந்தால், அது ஒரு ஆச்சரியமான விஷயம். இந்த வீரர்கள் செய்தது ஒரு அற்புதமான வேலை." பட மூலாதாரம்,Donald Trump / TruthSocial படக்குறிப்பு,டிரம்ப் தனது புளோரிடா பண்ணை வீட்டிலிருந்து நடவடிக்கையை நேரலையில் பார்த்தார். கடந்த சில மாதங்களில், அதிபர் டிரம்ப், மதுரோ மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதம் (narco-terrorism) ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா ஆயிரக்கணக்கான படைவீரர்களை அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒரு விமானம் தாங்கிக் கப்பலும் டஜன்கணக்கான போர்க்கப்பல்களும் இணைந்து, அந்த பிராந்தியத்தில் பல தசாப்தங்களில் காணப்படாத அளவிலான மிகப் பெரிய ராணுவ குவிப்பு நடைபெற்றது. மேலும், அந்தப் பிராந்தியத்தின் வழியாக போதைப்பொருள்களை கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட டஜன் கணக்கான சிறிய படகுகளையும் அமெரிக்கா அழித்துள்ளது. ஆனால், 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' நடவடிக்கையின் முதல் அறிகுறிகள் வானில் தென்பட்டன. அமெரிக்க அதிகாரிகளின் தகவலின்படி, அந்த இரவு முழுவதும் நடந்த நடவடிக்கையின் போது, குண்டுவீசும் விமானங்கள், போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. "இது மிகவும் சிக்கலானது, மிகமிக சிக்கலானது. முழு இயக்கமும், தரையிறக்கங்களும், பயன்படுத்தப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையும்..." என்று ஃபாக்ஸ் செய்திகளுக்கு டிரம்ப் தெரிவித்தார். "எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக, எங்களிடம் ஒரு போர் விமானம் இருந்தது" என்றும் அவர் கூறினார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் கராகஸில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், நகரத்தின் மேல் புகை மேகங்கள் எழுந்ததை காண முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. "நான் மிகப் பெரிய சத்தத்தைக் கேட்டேன். ஒரு பெரும் வெடிப்புச் சத்தம்," என்று செய்தியாளர் அனா வனெஸ்ஸா ஹெரேரோ பிபிசிக்கு கூறினார். "அது அனைத்து ஜன்னல்களையும் அதிரவைத்தது. உடனே, முழு பார்வையையும் மறைத்துவிடும் அளவுக்கு ஒரு பெரிய புகை மேகத்தை நான் பார்த்தேன். நகரம் முழுவதும் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பறந்துகொண்டிருந்தன" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,LUIS JAIMES/AFP via Getty Images வானில் ஏராளமான விமானங்கள் பறப்பதைக் காட்டும் காணொளிகளும், வெடிப்புகளுக்குப் பிந்தைய நிலையை காட்டும் பிற காணொளிகளும் விரைவில் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. அவற்றில் ஒன்றில், குண்டுவெடிப்புகளால் எழுந்ததாகத் தோன்றும் புகை மேகங்கள் மேலெழும்ப, கராகஸின் மேல், தாழ்வான உயரத்தில் ஹெலிகாப்டர்கள் ஒரு அணிவகுப்பாகப் பறந்ததை காண முடிந்தது. "அதிகாலை சுமார் 1:55 மணியளவில், வெடிப்புச் சத்தம், கராகஸின் மேல் பறந்த விமானங்களின் ஓசையும் கேட்டு நாங்கள் விழித்தோம்" என்று டேனியலா என்பவர் பிபிசிக்கு கூறினார். "அனைத்தும் முழு இருளில் மூழ்கியது. அருகில் குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட வெளிச்சமே ஒரே ஒளியாக இருந்தது". "அபார்ட்மெண்ட் வாட்ஸ்ஆப் குழுவில் ஒருவருக்கொருவர் செய்தி அனுப்பிக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது என்பதையே புரியாமல், அந்த சத்தங்களால் அனைவரும் பயந்திருந்தனர்" என்றும் அவர் கூறினார். கராகஸின் பல பகுதிகளில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள், தீப்பற்றல்கள் மற்றும் புகை மேகங்களை காட்டும் பல காணொளிகளை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்து, சரியாக எந்த இடங்கள் இலக்காகத் தாக்கப்பட்டன என்பதைக் கண்டறிந்துள்ளது. இதுவரை, ஜெனரலிசிமோ பிரான்சிஸ்கோ டி மிராண்டா விமானப்படைத் தளம், லா கார்லோட்டா என அறியப்படும் விமானத் தளம், லா குவாய்ரா துறைமுகம் உள்ளிட்ட ஐந்து இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன என்பதை அது உறுதிப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,Reuters அமெரிக்க தாக்குதல்களில் சில வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிற ராணுவ இலக்குகளைக் குறிவைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பணி தொடங்குவதற்கு முன்பு கராகஸில் உள்ள மின்சாரத்தை துண்டிக்க டிரம்ப் பரிந்துரைத்தார். இருப்பினும் அவர் எப்படி என்று குறிப்பிடவில்லை. "எங்களிடம் உள்ள ஒரு குறிப்பிட்ட நிபுணத்துவம் காரணமாக கராகஸின் விளக்குகள் பெரும்பாலும் அணைக்கப்பட்டன. இது இருட்டாக இருந்தது மற்றும் அது கொடியது" என்று அவர் கூறினார். 'நாங்கள் வருவது அவர்களுக்குத் தெரியும்' கராகஸின் பல பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்த வேளையில், அமெரிக்கப் படைகள் நகருக்குள் நுழைந்தன. அதில், அமெரிக்க ராணுவத்தின் மிக உயரிய சிறப்பு நடவடிக்கை அலகான டெல்டா ஃபோர்ஸின் உறுப்பினர்களும் அடங்கியிருந்தனர் என்று, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்-க்கு தகவல் அளித்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் கனரக ஆயுதங்களுடன் இருந்ததோடு, மதுரோவின் பாதுகாப்பு இல்லத்தின் உலோகக் கதவுகளை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்குப் பயன்படுத்துவதற்காக ஒரு ப்ளோடோர்ச்சையும் எடுத்துச் சென்றிருந்தனர். ஜெனரல் கெய்னின் தகவலின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:01 மணிக்கு தாக்குதல்தொடங்கிய பிறகு, அந்தப் படையினர் மதுரோ இருந்த இடத்தை அடைந்தனர். கராகஸின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்தப் பாதுகாப்பு இல்லத்தை, கடுமையாக பாதுகாக்கப்பட்ட ராணுவ கோட்டை என்று டிரம்ப் விவரித்தார். "அவர்கள் எங்களுக்காகத் தயாரான நிலையில் காத்திருந்தார்கள். நாங்கள் வருவதை அவர்கள் அறிந்திருந்தார்கள்" என்று அவர் கூறினார். படைகள் அங்கு வந்தவுடன் எதிர்தாக்குதல் நடந்தது.. ஒரு அமெரிக்க ஹெலிகாப்டர் தாக்கப்பட்டாலும், அதனால் தொடர்ந்து பறக்க முடிந்தது. "மதுரோவின் வளாகத்திற்குள் நுழைந்த படை, வேகம், துல்லியம் மற்றும் ஒழுக்கத்துடன் செயல்பட்டது" என்று ஜெனரல் கெய்ன் தெரிவித்தார். "அவர்கள் அப்படியே உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள். உண்மையில் உடைக்க முடியாததாக அமைக்கப்பட்ட இடங்களையும் அவர்கள் உடைத்தனர். இதற்காகவே அமைக்கப்பட்டிருந்த எஃகு கதவுகளைக்கூட" என்று டிரம்ப் கூறினார். மதுரோவின் மனைவி சிலியா ஃப்ளோரஸும் பிடிபட்ட இந்த நடவடிக்கை நடைபெற்று கொண்டிருந்த போதுதான், வெளியுறவுத் துறை அமைச்சர் ரூபியோ இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அளிக்கத் தொடங்கினார். இந்த முடிவு, நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "நான் தெளிவாகச் சொல்கிறேன்: நிக்கோலஸ் மதுரோ ஒரு சட்டப்பூர்வமற்ற சர்வாதிகாரி. ஆனால் நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றியும், அதன் பின்பு என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த திட்டமின்றியும் ராணுவ நடவடிக்கையை தொடங்குவது பொறுப்பற்ற செயல்," என்று செனட்டில் ஜனநாயகக் கட்சித் தலைவராக இருக்கும் சக் ஷூமர் கூறினார். முன்கூட்டியே நாடாளுமன்றத்திற்கு விளக்கம் அளித்திருந்தால், அந்த நடவடிக்கை ஆபத்துக்குள்ளாகியிருக்கும் என்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரூபியோ தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெனிசுவேலாவில் தலைநகர் கராகஸைச் சுற்றியுள்ள பல இடங்களை அமெரிக்கா தாக்கியது. வெனிசுவேலா அதிபர் மதுரோ தன் வளாகத்திற்குள் அமெரிக்காவின் எலைட் படையினர் பெருமளவில் நுழைந்தபோது, ஒரு பாதுகாப்பு அறைக்குத் தப்பிச் செல்ல முயன்றதாக டிரம்ப் தெரிவித்தார். "அவர் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முயன்றார். ஆனால் அது பாதுகாப்பான இடமல்ல. ஏனெனில், சுமார் 47 விநாடிகளில் அந்தக் கதவை நாங்கள் வெடிக்கச் செய்திருப்போம்," என்று அவர் கூறினார். மேலும், "அவர் கதவு வரை வந்தார். ஆனால் அதை மூட முடியவில்லை. அவ்வளவு வேகமாக அவரைச் சுற்றி நெருங்கிவிட்டார்கள். அதனால் அவர் அந்த அறைக்குள் செல்லவே முடியவில்லை" என்றும் அவர் கூறினார். 2013-ஆம் ஆண்டு அதிபர் பதவியை ஏற்றுக்கொண்ட மதுரோ, கைது செய்யப்படும் போது எதிர்த்திருந்தால், அமெரிக்கா அவரை கொல்லக்கூடிய நிலையிலிருந்ததா என்ற கேள்விக்கு, "அது நடந்திருக்க வாய்ப்பு இருந்தது" என்று டிரம்ப் பதிலளித்தார். அமெரிக்கா தரப்பில் இரண்டு வீரர்கள் தாக்குதலுக்கு இலக்கானதாக அவர் கூறினார். ஆனால் எந்த அமெரிக்க வீரரும் உயிரிழக்கவில்லை. வெனிசுவேலா அதிகாரிகள் இதுவரை எந்த உயிரிழப்பையும் உறுதிப்படுத்தவில்லை. மதுரோவைக் கைது செய்ய வழிவகுக்கும் தகவலைத் தந்தால் 5 கோடி அமெரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் சனிக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரப்படி 4:20 மணிக்குள், மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் ஹெலிகாப்டர்களில் வெனிசுவேலா எல்லையை விட்டு வெளியேறப்பட்டனர். அவர்கள் அமெரிக்க நீதித்துறையின் காவலில், இறுதியாக நியூயார்க் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சரியாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர், மதுரோவை சிறைபிடித்த செய்தியை டிரம்ப் உலகுக்கு அறிவித்தார். "மதுரோவும் அவரது மனைவியும் விரைவில் அமெரிக்க நீதியின் முழு வலிமையையும் எதிர்கொள்ளப் போகிறார்கள்" என்று அவர் கூறினார். கூடுதல் தகவல்கள்: ரிஸ்டோபல் வாஸ்கெஸ் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crmlzlyj29go
-
ட்ரம்புக்கு நோய் ஏற்படும்! மடுரோ ஆட்சி வீழும் - பெரு சாமன்ஸ் கணிப்பு
சரியான காணொளி இது தான் அண்ணை.
-
ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் கர்ப்பப்பை புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பு – ஐ.நா. எச்சரிக்கை
ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் கர்ப்பப்பை புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பு – ஐ.நா. எச்சரிக்கை 03 Jan, 2026 | 04:50 PM உலகளவில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் ( cervical cancer) உயிரிழக்கிறார் என ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த நோய் முழுமையாகத் தடுப்பதற்கும் ஆரம்ப நிலையில் குணப்படுத்துவதற்கும் இயலும் என்றாலும், சமமற்ற சுகாதார அணுகுமுறைகள் காரணமாக பல உயிரிழப்புகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) முன்னெடுத்துள்ள கர்ப்பப்பை புற்றுநோய் ஒழிப்பு முயற்சியின் ஒரு பகுதியாக பேசிய ஜீனெட் என்ற பெண், “என் உடலே என்னை ஏமாற்றியது போல உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார். கர்ப்பப்பை புற்றுநோய் என கண்டறியப்பட்ட ஒரு ஆண்டுக்குள் அவர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கர்ப்பப்பை புற்றுநோய் என்றால் என்ன? கர்ப்பப்பை புற்றுநோய் என்பது பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் உள்ள கர்ப்பப்பையில் உருவாகும் புற்றுநோய் ஆகும். ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிட்டால், இது உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 6.6 இலட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டதுடன், 3.5 இலட்சம் பெண்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் நிறுவனம், இந்த நோயால் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் உயிரிழக்கிறார் என எச்சரித்துள்ளது. காரணம் என்ன? கர்ப்பப்பை புற்றுநோய் பெரும்பாலும் HPV (Human Papillomavirus) எனப்படும் வைரஸ் தொற்றுடன் தொடர்புடையது. இது பாலியல் தொடர்பு மூலம் பரவும் மிகப் பொதுவான வைரஸ் ஆகும். பாலியல் செயலில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது HPV வைரஸ் தொற்றுக்குள்ளாகலாம். பெரும்பாலும் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதை தானாகவே நீக்கிவிடும். ஆனால் சில வகை HPV தொற்றுகள் நீடித்தால், அசாதாரண செல்கள் உருவாகி பின்னர் புற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளது. தடுப்பு மற்றும் சிகிச்சை கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் கூடிய நோயாகும். உலக சுகாதார ஸ்தாபனத்தில் பரிந்துரைகளின் படி, 9 முதல் 14 வயதுடைய அனைத்து சிறுமிகளுக்கும் HPV தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதுடன் 30 வயதிலிருந்து பெண்களுக்கு கர்ப்பப்பை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக HIV தொற்றுள்ள பெண்களுக்கு 25 வயதிலிருந்து கர்ப்பப்பை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், இது மிகவும் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாகும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலகளாவிய முயற்சி 2020 ஆம் ஆண்டு, 194 நாடுகள் இணைந்து கர்ப்பப்பை புற்றுநோயை ஒழிப்பதற்கான உலகளாவிய திட்டத்தை தொடங்கின. அந்த நாள், நவம்பர் 17, தற்போது உலக கர்ப்பப்பை புற்றுநோய் ஒழிப்பு நாள் ஆகக் கடைபிடிக்கப்படுகிறது. 2030க்குள் அடைய வேண்டிய இலக்குகள்: * 15 வயதிற்குள் 90% சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி * 35 மற்றும் 45 வயதுகளில் 70% பெண்களுக்கு பரிசோதனை * நோய் கண்டறியப்பட்ட 70% பெண்களுக்கு முழுமையான சிகிச்சை இந்த இலக்குகள் நிறைவேற்றப்பட்டால், 2120 ஆம் ஆண்டுக்குள் 7.4 கோடி புதிய நோய் சம்பவங்களைத் தவிர்க்கவும், 6.2 கோடி உயிர்களை காப்பாற்றவும் முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் ஆகிய சர்வதேச அமைப்புகள், கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசி மற்றும் பரிசோதனை வசதிகளை சமமாக அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235114
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் நிக்கோலஸ் மதுரோ என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்க போர்க்கப்பலான USS Iwo Jima-வில் மதுரோ இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ராஷித் கான் தலைவர் Published By: Vishnu 02 Jan, 2026 | 03:23 AM (நெவில் அன்தனி) இலங்கையிலும் இந்தியாவிலும் இந்த வருடம் கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு உலகின் தலைசிறந்த சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ராஷித் கான் தலைவராக நியமிக்ப்பட்டுள்ளார். ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் 2024இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதிவரை ஆப்கானிஸ்தான் முன்னேறி இருந்தது. ராஷித் கான் தலைமையிலான உலகக் கிண்ண குழாத்தில் சகலதுறை வீரர் முன்னாள் அணித் தலைவர் குல்பாதின் நய்ப், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பஸால்ஹக் பாறூக்கி, சுழற்பந்துவீச்சாளர் முஜீஜ் உர் ரஹ்மான், வலதுகை வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் ஆகிய அனுபவசாலிகளும் இடம்பெறுகின்றனர். உலகக் கிண்ணத்துக்கு பெயரிடப்பட்டுள்ள அதே குழாத்திலுள்ள வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரிலும் விளையாட உள்ளனர். உலகக் கிண்ணத்துக்கு தங்களைத் தயார்படுத்தும் தொடராக இரண்டு அணிகளுக்கும் இது அமையவுள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 19இலிருந்து 22ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பலம் வாய்ந்த டி குழுவில் ஆப்கானிஸ்தான் இடம்பெறுகின்றது. இக் குழுவில் நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன. சென்னையில் பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள தனது ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்தை ஆப்கானிஸ்தான் எதிர்த்தாடும். ஆப்கானிஸ்தானின் ஏனைய போட்டிகள் பெப்ரவரி 11 எதிர் தென் ஆபிரிக்கா (அஹமதாபாத்) பெப்ரவரி 16 எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் (டெல்லி) பெப்ரவரி 19: எதிர் கனடா (சென்னை) மே. தீவுகள் மற்றும் ரி20 உலகக் கிண்ணம் ஆகயவற்றுக்கான ஆப்கானிஸ்தான் குழாம் ராஷித் கான் (தலைவர்), இப்ராஹிம் ஸ்த்ரான் (உப தலைவர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், மொஹம்மத் இஷாக், சிதிக்குல்லா அத்தல், தாவிஷ் ரசூலி, ஷஹிதுல்லா கமல், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், குல்பாதின் நய்ப், மொஹம்மத் நபி, நூர் அஹ்மத், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், பஸால்ஹக் பாறூக்கி, அப்துல்லா அஹ்மத்ஸாய். பதில் வீரர்கள்: ஏ.எம். கஸன்பர், இஜாஸ் அஹ்மத்ஸாய், ஸியா உர் ரஹ்மான் ஷரிபி https://www.virakesari.lk/article/234981
-
கூடியம் குகைகள் : 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த குகைக்குள் ஒரு திக் திக் பயணம்!
'2 லட்சம் ஆண்டுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த குகை'; நீங்களும் டிரெக்கிங் போகலாம் - Gudiyam Caves Tour திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் குகை குறித்து விவரிக்கிறது இந்த காணொளி. தயாரிப்பு - ஹேமா ராக்கேஷ் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - ஜனா #GudiyamCave #Tamilnadu இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
உலகக் கிண்ணத்துக்கு முன்னர் கமின்ஸ் உட்பட மூன்று ஆஸி. வீரர்கள் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் Published By: Vishnu 01 Jan, 2026 | 09:44 PM (நெவில் அன்தனி) இலங்கையிலும் இந்தியாவிலும் இந்த வருடம் கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழாத்தில் பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், டிம் டேவிட் ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் மூவரும் அடுத்த சில வாரங்களுக்குள் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். இந்த மூவரும் அண்மையக் காலமாக உபாதை காரணமாக சிகிச்சையுடன் ஓய்வுபெற்று வந்தனர். ஆனால், பெட் கமின்ஸ் மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் மாத்திரம் அணித் தலைவராக விளையாடி மீண்டும் ஓய்வு பெற்று வருகின்றார். அவுஸ்திரேலிய அணியின் தலைவராக மிச்செல் மார்ஷ் தொடர்ந்து செயல்படுவார். இதேவேளை, ஆறு சர்வதேச ரி20 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 13 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் ஒரு விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றியுள்ள சகலதுறை வீரர் கூப்பர் கொனலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற தொடர்களில் கொனலி விளையாடவில்லை. ஆனால், பேர்த் ஸ்கோச்சஸ் அணிக்காக பிக் பாஷ் லீக்கில் 166.66 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 170 ஓட்டங்களைப் பெற்றதாலும் 7.62 என்ற கட்டுப்பாட்டு பந்துவீச்சுடன் 5 விக்கெட்களைக் கைப்பற்றியதாலும் அவரை குழாத்தில் இணைத்துக்கொள்ள அவுஸ்திரேலியா தெரிவாளர்கள் தீர்மானித்தனர். அடம் ஸம்ப்பா, மெட் குனேமான், க்ளென் மெக்ஸ்வெல் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் நான்காவது சுழற்பந்து வீச்சாளராக கொனலி இடம்பெறுகின்றார். ஆனால் தலா 13 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள மிச்செல் ஓவென், பென் டுவார்ஷுய்ஸ் ஆகிய இருவரும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அவுஸ்திரேலிய குழாத்தில் பெட் கமின்ஸ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும் இந்த மாத இறுதியில் ஸ்கான் பரிசோதனையின் பின்னரே அவர் தொடர்ந்து விளையாடக்கூடிய உடற் தகுதியைக் கொண்டுள்ளாரா இல்லையா என்பது தெரியவரும். உபாதை காரணமாக ஆஷஸ் தொடரில் விளையாடாமல் இருந்த ஜொஷ் ஹேஸ்ல்வூட் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும் அவர் பூரண உடற்தகுதியைக் கொண்டிருந்தால் மாத்திரமே உலகக் கிண்ணத்தில் விளையாடக்கூடியதாக இருக்கும். டிம் டேவிட்டுக்கும் அதே கதிதான். இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அயர்லாந்து, ஓமான், முன்னாள் சம்பியன் இலங்கை, ஸிம்பாப்வே ஆகிய அணிகளுடன் பி குழுவில் முன்னாள் உலக சம்பியனான அவுஸ்திரேலியா இடம்பெறுகிறது. அவுஸ்திரேலியா தனது ஆரம்பப் போட்டியில் அயர்லாந்தை பெப்ரவரி 11ஆம் திகதியும் இரண்டாவது போட்டியில் ஸிம்பாப்வேயை 13ஆம் திகதியும் எதிர்த்தாடும். இந்த இரண்டு போட்டிகளும் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறும். அவுஸ்திரேலிய தனது மூன்றாவது போட்டியில் இலங்கையை கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் பெப்ரவரி 16ஆம் திகதி சந்திக்கும். இதே விளையாட்டரங்கில் ஓமானுக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் கடைசிப் போட்டி பெப்ரவரி 20ஆம் திகதி நடைபெறும். ரி20 உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய குழாம் மிச்செல் மார்ஷ் (தலைவர்), சேவியர் பாட்லட், கூப்பர் கொனலி, பெட் கமின்ஸ், டிம் டேவிட், கெமரன் க்றீன், நேதன் எலிஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், ட்ரவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மெட் குனேமான், க்ளென் மெக்ஸ்வெல், மெத்யூ ஷோட், மாக்கஸ் ஸ்டொய்னிஸ், அடம் ஸம்ப்பா. https://www.virakesari.lk/article/234976
-
ட்ரம்புக்கு நோய் ஏற்படும்! மடுரோ ஆட்சி வீழும் - பெரு சாமன்ஸ் கணிப்பு
- யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில்: தையிட்டியில் பதற்றம்!
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! 03 Jan, 2026 | 12:59 PM சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக சனிக்கிழமை (03) காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி விகாரையில் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியாவில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235109- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ‘சிறைபிடிப்பு' : அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பட மூலாதாரம்,Reuters 3 ஜனவரி 2026, 09:12 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படையால் சிறைபிடிக்கப்பட்டதாக, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் இருக்கும் இடம் மற்றும் தாக்குதல்களால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை. அதேசமயம், மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை தெரிவித்துள்ளார். வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது டிரம்ப் நிர்வாகம் பல வாரங்களாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெனிசுவேலா அதிபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமெரிக்காவில் குற்றச் செயல்களை பரப்புவதில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டுகிறார். பட மூலாதாரம்,Reuters இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ கூறியுள்ளார். முன்னதாக, அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில், வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் வெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அவற்றில் ராணுவத் தளங்களும் அடங்கும். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அந்த நாட்டில் அவசரநிலையை அறிவித்திருந்தார். நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள லா கார்லோட்டா ராணுவ விமான நிலையம் மற்றும் ஃபுவர்டே டியூனா பிரதான ராணுவத் தளம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றன. இந்த இரண்டு இடங்களிலும் நடந்ததாகக் கூறப்படும் வெடிப்புகளின் காணொளிகளும் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ், சனிக்கிழமை அதிகாலையில் வெனிசுலா தலைநகர் கராகஸில் நடந்த வெடிப்புகள் மற்றும் விமானங்கள் பறந்தது குறித்த தகவல்கள் பற்றி டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் அறிந்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப் கூறியது என்ன? வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "வெனிசுவேலாவிற்கும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோவிற்கும் எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியது. தனது மனைவியுடன் இருந்த நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்." என்று கூறியுள்ளார். மேலும், "இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. இது குறித்த விவரங்கள் தொடர்ந்து வரவுள்ளன. இன்று காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு) மார்-எ-லாகோவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஜே.டி. வான்ஸ் கூறியது என்ன? வெனிசுவேலா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "அதிபர் டிரம்ப் பல வழிகளை முன்வைத்தார், ஆனால் இந்த செயல்முறை முழுவதும் அவர் மிகத் தெளிவாக இருந்தார்: போதைப்பொருள் கடத்தல் நிறுத்தப்பட வேண்டும், திருடப்பட்ட எண்ணெய் அமெரிக்காவிற்குத் திருப்பித் தரப்பட வேண்டும் என்பதில்" எனத் தெரிவித்துள்ளார். "அதிபர் டிரம்ப் தான் சொல்வதை நிச்சயம் செய்வார் என்பது மதுரோவுக்கு புரிந்திருக்கும். இந்த சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட எங்கள் துணிச்சலான படைகளுக்கு பாராட்டுகள்." என்றும் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார். மதுரோ மீது நியூயார்க்கில் வழக்கு பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் (கோப்புப் படம்) மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை தெரிவித்துள்ளார். மதுரோ மீது "போதைப்பொருள்-பயங்கரவாத சதி, கொக்கைன் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல், அமெரிக்காவிற்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருக்க சதி" ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். "அவர்கள் விரைவில் அமெரிக்க நீதிமன்றங்களில் அமெரிக்க மண்ணில் அமெரிக்க நீதியின் முழு தாக்கத்தையும் எதிர்கொள்வார்கள்" என்று போன்டை கூறுகிறார், ஆனால் மதுரோவின் மனைவி மீது என்ன குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பதை அவர் கூறவில்லை. "இந்த இரண்டு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்ய, நம்பமுடியாத மற்றும் மிகவும் வெற்றிகரமான பணியைச் செய்த எங்கள் துணிச்சலான ராணுவத்திற்கு மிகப்பெரிய நன்றி," என்றும் போன்டை தெரிவித்துள்ளார். நேரில் கண்டவர்கள் கூறியது என்ன? காணொளிக் குறிப்பு,வெனிசுவேலாவை அமெரிக்கா தாக்கிய தருணம் வெனிசுவேலா தலைநகர் கராகஸில் வசிக்கும் பிபிசி செய்தியாளர் வனேசா சில்வா, தனது வீட்டு ஜன்னலிலிருந்து ஒரு வெடிப்பைக் கண்டார். வெடிப்பின் சத்தம் மிகப்பெரியதாகவும், "இடியை விட வலிமையானதாகவும்" இருந்ததாகவும், இதனால் தனது வீடு அதிர்ந்ததாகவும் அவர் கூறினார். கராகஸ் ஒரு பள்ளத்தாக்குப் பகுதி, எனவே அந்த சத்தம் நகரத்தைச் சுற்றி எதிரொலித்தது. "என் இதயம் துடித்தது, கால்கள் நடுங்கின," என்று அவர் கூறினார், "வெடிப்புகள் இவ்வளவு நெருக்கமாக நிகழ்ந்ததைக் கண்டு பயந்ததாகவும்", "அவை மிகவும் துல்லியமாகத் தெரிந்ததாகவும்" கூறினார். நகரத்தில் இப்போது அமைதி நிலவுகிறது, ஆனால் எல்லோரும் இன்னும் பரபரப்பாக ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்பி, நிலவரத்தை அறிந்து வருகிறார்கள் என்று அவர் கூறினார். தனது உறவினர் ஒருவர் வானத்திலிருந்து ஏதோ விழுவதைக் கண்டார் என்றும், பத்து வினாடிகள் கழித்து ஒரு பெரும் வெடிப்பு சத்தத்தைக் கேட்டார் என்றும் வனேசா கூறினார். பட மூலாதாரம்,AFP via Getty Images இதுவரை தெரிய வந்தது என்ன? வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து கீழ்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளன. வெனிசுவேலாவின் மீது அமெரிக்கா ஒரு "பெரிய அளவிலான தாக்குதலை" நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, "நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்" என்றும் அவரது சமூகவலைத்தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரோவைக் கைது செய்யும் இந்த நடவடிக்கையை அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படை மேற்கொண்டதாக அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளனர். வெனிசுவேலா தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளதுடன், "இராணுவ ஆக்கிரமிப்பை" நிராகரித்து கண்டிப்பதாகவும் கூறியுள்ளது. வெனிசுலாவுக்கு எதிராக மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ எதிர்பார்ப்பதாக குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ கூறுகிறார். பனிப்போருக்குப் பிறகு அமெரிக்கக் கண்டத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் திரட்டல் இதுவாகும், மேலும் பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்தைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது என்று பிபிசி செய்தியாளர் கிராண்ட் எழுதுகிறார். விடை தெரியாத 6 கேள்விகள் அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் எங்கு இருக்கிறார்கள் ? தாக்குதல்களால் ஏதேனும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டனவா? தாக்குதலுக்குப் பிறகு வெனிசுவேலாவின் பகுதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு என்ன? எத்தனை தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அவை எங்கு நடந்தன? டிரம்ப் இந்த ராணுவ நடவடிக்கையை எடுக்க முடிவு செய்ததற்கான காரணங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் (டிரம்ப் அறிவித்துள்ள செய்தியாளர் சந்திப்பில் இது பற்றிய தகவல்கள் தெரிய வரலாம்) முன்னதாக, வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ இந்தத் தாக்குதல்களைக் கண்டித்ததுடன் தேசிய அவசரநிலையையும் அறிவித்திருந்தார். தனது நாட்டின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களைக் கைப்பற்றுவதற்கான அமெரிக்காவின் முயற்சி இது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. அவற்றில் ராணுவத் தளங்களும் அடங்கும். மறுபுறம், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை வெனிசுவேலா கண்டித்துள்ளது. "அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கத்தால் வெனிசுவேலா மீது நடத்தப்பட்ட மிகவும் கடுமையான ராணுவ ஆக்கிரமிப்பை வெனிசுவேலா சர்வதேச சமூகத்தின் முன் நிராகரிக்கிறது, கண்டிக்கிறது" என்று வெனிசுலா அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images முன்னதாக, கராகஸில் நடந்த தாக்குதல்கள் "வெனிசுவேலாவின் மூலோபாய வளங்கள், குறிப்பாக அதன் எண்ணெய் மற்றும் கனிமங்களைக் கைப்பற்றுவதையும்" மற்றும் "நாட்டின் அரசியல் சுதந்திரத்தை உடைப்பதையும்" நோக்கமாகக் கொண்டவை என்று வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார். வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவசரநிலையை செயல்படுத்த உத்தரவிட்டிருந்தார். அனைத்து தேசிய பாதுகாப்புத் திட்டங்களும் "சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான சூழ்நிலைகளில்" செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். "நாட்டின் அனைத்து சமூக மற்றும் அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,லோபஸ் (வலது) 2014 முதல் மதுரோ (இடது) ஆட்சியின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வருகிறார். இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ லோபஸ் கூறியுள்ளார். வெளிநாட்டு துருப்புக்களின் இருப்பை வெனிசுவேலா "எதிர்க்கும்", நாடு முழுவதும் உடனடியாக ராணுவப் படைகள் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஒரு காணொளி உரையில் ஸ்பானிஷ் மொழியில் பேசிய விளாடிமிர் பட்ரினோ லோபஸ், வெனிசுவேலாவிற்கு எதிரான "மிக மோசமான ஆக்கிரமிப்பை" எதிர்கொள்ள ஒன்றுபட்ட எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்தார். அனைத்து ஆயுதப் படைகளும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற 'மதுரோவின் உத்தரவுகளை' வெனிசுவேலா பின்பற்றி வருவதாகவும் கூறினார். "அவர்கள் எங்களைத் தாக்கியுள்ளனர், ஆனால் எங்களை அடிபணிய வைக்க அவர்களால் முடியாது" என்று வெனிசுவேலா பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn0yd1vwy0ko- பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!
2026 பாடசாலை நேர அட்டவணை மற்றும் ஆசிரியர் பயன்பாடு தொடர்பாக கல்வி அமைச்சு புதிய அறிவுறுத்தல் Published By: Vishnu 03 Jan, 2026 | 03:52 AM புதிய கல்விச் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நேர அட்டவணை மற்றும் கல்விசார் ஆளணியினரைப் பயன்படுத்தல் தொடர்பாக கல்வி அமைச்சு புதிய அறிவுறுத்தல் கோவையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டிலும் பாடசாலை நடைபெறும் நேரம் தற்போது நடைமுறையில் உள்ளதைப் போலவே காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தொடரும் என அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த கல்விச் சீர்திருத்தச் செயன்முறை, 2026 ஆம் ஆண்டிலிருந்து தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிவுறுத்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235081- அமெரிக்காவின் டெஸ்லாவை முந்தியது சீனாவின் BYD!
அமெரிக்காவின் டெஸ்லாவை முந்தியது சீனாவின் BYD! Published By: Digital Desk 1 03 Jan, 2026 | 11:05 AM சீனாவின் BYD நிறுவனம் 2025ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக மாறியுள்ளது. இதுவரை, அமெரிக்க நிறுவனமான டெஸ்லா முன்னனி நிறுவனமாக திகழ்ந்தது. டெஸ்லாவின் வாகன விற்பனை தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ள நிலையில், BYD நிறுவனம் வலுவான போட்டியாளராக மாறியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/235099- கீழடி நகரை மக்கள் கைவிட்டது ஏன்? சுமார் 1,170 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது? ஆய்வில் புதிய தகவல்
கீழடி நகரை மக்கள் கைவிட்டது ஏன்? சுமார் 1,170 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது? ஆய்வில் புதிய தகவல் பட மூலாதாரம்,Archaeological Survey of India படக்குறிப்பு,கீழடி கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரைக்கு அருகில் கண்டறியப்பட்ட கீழடி தொல்லியல் தளத்தில் வாழ்ந்திருந்த மக்கள், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தைக் கைவிட்டு வெளியேறினர். சுமார் 1,150 ஆண்டுகளுக்கு முன்பாக இது நடந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் அந்த இடத்தைக் கைவிட்டு அகன்றதற்கான காரணத்தை விவரிக்கிறது சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று. அக்டோபர் 25ஆம் தேதி Current Science ஆய்விதழில் "Luminescence chronology of sediments from the prehistoric civilisation sites along the Vaigai river, India" என்ற கட்டுரை வெளியானது. இந்த ஆய்வுக் கட்டுரையை ஆமதாபாத் நகரில் உள்ள Physical Research Laboratory-ஐ சேர்ந்த ஆய்வாளர்களும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இணைந்து எழுதியுள்ளனர். கீழடி தொல்லியல் தளத்தில் கிடைத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த முடிவுகள், அங்கு வாழ்ந்து வந்த மக்கள் அந்த இடத்தைக் கைவிட்டு அகன்றதற்கான காரணத்தைப் புலப்படுத்துவதாக இந்த ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. அதாவது, அருகிலுள்ள வைகை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே, அங்கு வாழ்ந்த மக்களை அந்த இடத்தை விட்டு செல்லத் தூண்டியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த நிகழ்வு சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்திருக்கலாம் என்றும் இவர்களது ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் துறை அகழாய்வுகளை நடத்தியது. இந்த அகழாய்வில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கண்டறியப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வுகளுக்குப் பிறகு, 2017ஆம் ஆண்டில் இருந்து மாநில தொல்லியல் துறை அங்கு தொடர்ந்து அகழாய்வுகளை நடத்தி வருகிறது. இங்கு கிடைத்த விரிவான கட்டடத் தொகுதிகளும் இங்கு கிடைத்த தொல் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த முடிவுகளும் கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கிலேயே ஒரு நகரம் இந்தப் பகுதியில் இயங்கியிருக்கலாம் என்ற செய்திகளைத் தந்தன. இந்த நிலையில் கீழடியில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் சில ஓஎஸ்எல் எனப்படும் Optically Stimulated Luminescence ஆய்வுக்கு சில ஆய்வாளர்களால் அனுப்பப்பட்டன. அந்த ஆய்வின் முடிவுகள், கீழடியில் வாழ்ந்த மக்கள் வைகையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக, சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறியிருக்கலாம் எனத் தெரிய வந்திருப்பதாக ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது 'யோனியில் புகையிலை' - மேற்கு ஆப்பிரிக்க பெண்கள் இந்த போதைப் பொருளுக்கு அடிமையானது ஏன்? கொரோனா 2020: கப்பல்கள் நிறுத்தப்பட்டபோது கடல் விலங்குகளின் வாழ்க்கை எப்படி மாறியது? சௌதி - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே பதற்றம் அதிகரித்தால் பாகிஸ்தானுக்கு என்ன பிரச்னை? கீழடி நகரை மக்கள் கைவிட்டது ஏன்? சுமார் 1,170 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது? ஆய்வில் புதிய தகவல் End of அதிகம் படிக்கப்பட்டது படக்குறிப்பு,கீழடி தொல்லியல் தளம் ஆய்வுக் குழிகளில் கிடைத்தது என்ன? தற்போது வைகை நதி, கீழடி தொல்லியல் தளத்தில் இருந்து வடக்கில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் ஓடுகிறது. அந்நதியின் வெள்ளப் படுகையில்தான் இந்த தொல்லியல் களம் அமைந்திருக்கிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இந்தப் பகுதி ஒரு நகரமாக இருந்திருக்கலாம் என இங்கு கிடைத்த பொருட்களை கரிமப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது தெரிய வந்தது. ஆனால், கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்தபோது வெளிவந்த கட்டடத் தொகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டால் படிவதைப் போன்ற மண் படிவங்கள் காணப்பட்டன. அந்தப் படிவங்களை ஆய்வுக்கு உட்படுத்த சில ஆய்வாளர்கள் முடிவெடுத்தனர். கீழடி பள்ளிச்சந்தை திடல் மேட்டில் தோண்டப்பட்ட இரண்டு ஆய்வுக் குழிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில்தான் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த இரண்டு குழிகளிலும் களிமண், நுண்ணிய வண்டல், மணல், சரளைக் கற்கள் ஆகியவை இருந்தன. மேலும் இந்தக் குழிகளிலும் கிடைத்த மண் படிவங்கள் பொதுவாக நுண்துகள்களாகவும் பல்வேறு வகைகளைக் கொண்டனவாகவும் இருந்தன. இந்த இரண்டு குழிகளிலும் மேற்பகுதியானது களிமண் படிவங்களால் மூடப்பட்டிருந்தது. இப்போது இந்த மண் படிவங்களைச் சேகரித்து, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தித்தான் கீழடி எப்போது கைவிடப்பட்டது, ஏன் கைவிடப்பட்டது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்தக் குழிகளில் வேறு சில அம்சங்களும் தெரிய வந்தன. முதலாவது ஆய்வுக் குழியில் 50 செ.மீ. முதல் 170 செ.மீ. ஆழத்தில் திட்டமிட்டு கட்டப்பட்ட கட்டட அமைப்புகள் தென்பட்டன. ஒரே அளவிலான செங்கற்களால் கட்டப்பட்ட ஒரே மாதிரியான கட்டுமானங்களாக இவை இருந்தன. இதே குழியில் 2 மீட்டர் ஆழத்தில் உடைந்த கூரை ஓடுகளும் காணப்பட்டன. நீண்ட சுவர்கள், கால்வாய்கள் ஆகியவையும் தென்பட்டன. இந்தக் கால்வாய்கள் வெவ்வேறு அகலங்களைக் கொண்டிருந்தன. நுணுக்கமான களிமண்ணை வைத்து தரைத்தளங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டுமானங்களின் மீது நுண்ணிய வண்டல் - களிமண் படிவங்கள் காணப்பட்டன. இதன் அடிப்பகுதி கரடுமுரடான மணல் அடுக்குகளைக் கொண்டிருந்தது. இரண்டாவது அகழாய்வுக் குழியில் ஏராளமான பானை ஓடுகள், சுடுமண் பொருட்கள், களிமண் கலைப் பொருட்கள் ஆகியவை கிடைத்தன. அது பானை தயாரிக்கும் பகுதியாக இருந்திருக்கலாம் என்பதை இந்தப் பொருட்கள் சுட்டிக்காட்டின. இங்கும் வண்டல் - களிமண் படிவங்கள் காணப்பட்டன. ஆனால், முதல் ஆய்வுக் குழியோடு ஒப்பிட்டால், இங்கு படிவங்களின் தடிமன் அதிகமாக இருந்தது என்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை. இந்த இரண்டு ஆய்வுக் குழிகளிலும் கிடைத்த படிமங்கள் பெரும்பாலும் வண்டல் மண்ணாலும் களிமண்ணாலும் ஆனவையாக இருந்தன. சில வண்டல் படிவங்களின் இடையிடையே பானை ஓடுகளும் கிடைத்தன. முதலில், அதிக விசையுடன் மண் படிமங்கள் உருவான பிறகு, விசை குறைந்த நிலையில் அடுத்த நிலை படிங்கள் உருவானதை இது குறிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆய்வு எப்படி நடத்தப்பட்டது? கீழடியின் ஐந்தாம் கட்ட அகழாய்வில் - அதாவது 2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் - பள்ளிச்சந்தை திடல் மேட்டில் தோண்டப்பட்ட இரண்டு அகழாய்வுக் குழிகளில், வெவ்வேறு பண்பாட்டு அடுக்குகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஓஎஸ்எல் காலக்கணிப்புக்கு அனுப்புவதற்காக 0.8 மீட்டர், 1.5 மீட்டர், 2.8 மீட்டர், 3.9 மீட்டர் என வெவ்வேறு ஆழங்களில் மொத்தமாக நான்கு மாதிரிகள் சேரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் ஆமதாபாத்தில் உள்ள பௌதீக ஆராய்ச்சி ஆய்வகத்தின் Atomic, Molecular and Optical Physics Division-இல் உள்ள லுமினிசன்ஸ் ஃபிஸிக்ஸ் மற்றும் அப்ளிகேஷன் க்ரூப் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. முதல் குழியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் OSL காலத்தைப் பொறுத்தவரை, 80 செ.மீ ஆழத்தில் கிடைத்த மாதிரியின் வயது 670 (± 40) ஆண்டுகளாக இருந்தது. அதே குழியில் 1.5 மீட்டர் ஆழத்தில் கிடைத்த மாதிரியின் வயது 1,170 (± 60) ஆண்டுகளாக இருந்தது. இரண்டாவது குழியில் 2.9 (2.8) மீ ஆழத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரியின் வயது 940 (± 70) ஆண்டுகளாக இருந்தது. 3.8 (3.9) மீட்டர் ஆழத்தில் கிடைத்த மாதிரியின் வயது 1,140 (± 70) ஆண்டுகளாக இருந்தது. "இந்த ஓஎஸ்எல் காலக் கணிப்பின்படி பார்க்கும்போது சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் போன்ற தீவிர இயற்கை நிகழ்வுகளால் இந்தப் பகுதிகள் கைவிடப்பட்டு இருக்கலாம். இது படிப்படியாக நிகழ்ந்திருக்கலாம்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்களில் ஒருவரான எஸ். சத்தியசீலன். பட மூலாதாரம்,keeladimuseum.tn.gov.in படக்குறிப்பு,கீழடி அகழாய்வுத் தளம் - வான்வழிப் பார்வை அந்த காலகட்டத்தில் வைகை நதி எப்படி இருந்தது? அந்தக் காலகட்டத்தில் வைகை நதியின் போக்கு எவ்வாறு இருந்தது என்பதையும் இந்த ஆய்வுக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. பனியுகத்திற்குப் பிந்தைய ஹோலோசீன் காலகட்டத்தின் பிற்பகுதியில் இந்திய துணைக் கண்டத்தின் காலநிலை நிலையானதாக இருக்கவில்லை என்றும் தென்னிந்தியாவின் பெரும்பாலான ஆறுகள் ஏற்ற இறக்கமான காலநிலை சூழலை எதிர்கொண்டன என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. அந்தக் காலகட்டத்தில் வைகை ஆற்றல்மிக்க நதியாகவும் பரந்த வடிநிலப் பகுதிகளையும் வெள்ளச் சமவெளி பகுதிகளையும் கொண்டிருந்ததாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. "வைகை நதி பல முறை தனது பாதையை மாற்றியுள்ளது. பூமியின் மேல் ஓட்டில் ஏற்பட்ட மாற்றங்களாலும் வெள்ளப் பெருக்கின் காரணமாகவும் இந்தப் பாதை மாற்றங்கள் நடந்துள்ளன. இதுபோல நதி தனது பாதையை மாற்றுவதும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளங்களும் 1,250 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ந்து நடந்தன. இதனால், நதிக் கரையோரம் இருந்த குடியிருப்புகள் அழிந்தன. அதன் அடிப்படையில் பார்க்கும்போது தற்போது கிடைத்துள்ள ஓஎஸ்எல் காலக்கணிப்பு (1,170 ஆண்டுகளுக்கு முன்) வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட காலத்தையும் குடியிருப்புகள் அழிந்த நிகழ்வையும் அதன் மீது வெள்ளப் படிமங்கள் ஏற்பட்ட காலத்தையும் குறிக்கிறது" என்கிறார் சத்தியசீலன். கீழடியைப் பொறுத்தவரை, ஆரம்பக் காலத்தில் குடிசைகளில் இருந்து குடியிருப்புகள் துவங்கியிருக்க வேண்டும் என்கிறார் அவர். "பிறகு அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டு, அது ஒரு நகரமாகியிருக்க வேண்டும். அந்தப் பகுதியில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது மிகச் செழிப்பான விவசாயம் நடந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இந்தப் பகுதி கைவிடப்பட்டதைப் பொறுத்தவரை, அது ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்காது, படிப்படியாக நடந்திருக்கும். அங்கிருந்த மக்கள், வட பகுதியில் ஆறு ஓடியதால் மற்ற மூன்று திசைகளில் நகர்ந்திருக்க வேண்டும்" என்கிறார் சத்தியசீலன். ஆகவே, 1,170 - 1140 ஆண்டுகளுக்கு முன்பு வைகையில் ஏற்பட்ட வெள்ளங்களின் விளைவாக இங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து நகர்ந்துள்ளார்கள் என்கிறது இந்தப் புதிய ஆய்வு. இதனால், அங்கிருந்த குடியிருப்புகள் அழிந்து அதன் மீது வெள்ளத்தால் ஏற்பட்ட மண்ணும் வண்டலும் படிந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgx04z36ypo- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டு செயற்பாடு. அண்ணை, பயனாளிகளுடன் கதைக்க தேவையில்லை. சரியான பயனாளியின் வங்கி விபரம் தந்தால் அதற்கு பணத்தை வைப்புச் செய்யலாம்.- 400 ஆண்டுகளுக்குப் பிறகு டென்மார்க் அஞ்சல் சேவை கடிதங்களை விநியோகிப்பதை நிறுத்தவுள்ளது.
முடிவுக்கு வந்தது டென்மார்க்கின் தபால் சேவை பாரம்பரியம்! 03 Jan, 2026 | 08:46 AM டென்மார்க்கில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த தபால் சேவை பாரம்பரியம் அந்நாட்டுத் தபால் நிர்வாகத்தால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டென்மார்க்கில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் 30 ஆம் திகதியுடன் கடிதங்களை விநியோகிப்பதை நிறுத்தவும், நாடு முழுவதும் உள்ள 1,500 சிவப்பு நிறத் தபால் பெட்டிகளை அகற்றவும் அந்நாட்டுத் தபால் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மக்கள் தற்போது தகவல்தொடர்பு மற்றும் ஆவணப் பரிமாற்றங்களுக்கு இணையவழி முறைகளை அதிகம் பயன்படுத்துவதால், பாரம்பரிய தபால் சேவையின் பயன்பாடு குறைந்துள்ளதே இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235087- திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை : 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு கடற்கரையில் நடைபெற்றது
திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை : 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு கடற்கரையில் நடைபெற்றது Published By: Vishnu 02 Jan, 2026 | 07:24 PM திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (02) மாலை 6.00 மணியளவில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நிழற்படங்களுக்கு மலர்தூவி, வளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருகோணமலை பிரதான கடற்கரைச் சந்தியிலுள்ள காந்தி சிலைக்கு அருகாமையாக மாலைப் பொழுதில் தினமும் இளைஞர்கள் நின்று கதைப்பது வழக்கம். 02.01.2006 அன்றைய மாலைப் பொழுதும் மாணவர்கள் பலர் அவ்விடத்தில் கூடிநின்று கதைத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஒன்றில் வந்த இனம் தெரியாத நபர்கள் அந்த இளைஞர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டுக் கோட்டைப் பக்கமாகச் சென்றனர். கைக்குண்டு வெடித்ததில் திருமலை புனிதஜோசப் கல்லூரி மாணவரான யோகராஜா பூங்குழலோன் என்பவர் காயமடைந்தார். இவரை ஏனைய மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோது அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் அங்கு சுமார் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் கடற்கரையில் நின்ற மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடத்தொடங்கினர். இதற்கிடையில் காயமடைந்த மாணவர்களுக்கு அருகில் விரைந்த கடற்படையினர் அவர்களை நிலத்தில் விழுத்தி கண்மூடித்தனமாகத் தாக்கினர். மாணவர்கள் இச்சம்பவம் பற்றி தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறியபோதும் மாணவர்களைச் சப்பாத்துக் கால்களால் மிதித்து முழங்காலில் நிக்க வைத்து சுட்டுக் கொன்றதாக அக்காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் லோகிதராசா ரொகான், சண்முகராஜா சஜீந்திரன், மனோகரன் வசீகர், தங்கத்துரை சிவானந்தன், யோகராஜா கேமச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன் குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் செய்தி செளியிட்டிருந்த சுகிர்தராஜன் என்ற ஊடகவியலாளரும் படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/235073- நியூயோர்க் நகரத்தின் முதல்வராக இந்திய ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்த மம்டானி இன்று பதவியேற்கிறார்.
ஜோஹ்ரான் மம்தானி உமர் காலித்துக்கு அனுப்பிய குறிப்பில் கூறியுள்ளது என்ன? பட மூலாதாரம்,Getty Images 5 மணி நேரங்களுக்கு முன்னர் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் 2020-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் மாணவர் தலைவர் உமர் காலித்துக்கு, நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். உமர் காலித்துக்கு கைப்பட ஒரு குறிப்பை எழுதியுள்ள மம்தானி, "நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்," என்று அதில் குறிப்பிட்டுள்ளார். நியூயார்க் நகர மேயராக மம்தானி பதவியேற்ற பிறகு, உமர் காலித்தின் துணைவர் பனோஜோத்ஸ்னா லஹிரி இந்த குறிப்பை வியாழக்கிழமை அன்று சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துள்ளார். டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் சிறையில் இருக்கும் உமர் காலித்துக்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இருப்பினும், டிசம்பர் மாதம் அவரது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜோஹ்ரான் மம்தானி என்ன எழுதியுள்ளார்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜனவரி 1 ஆம் தேதி நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி பதவியேற்றார். உமர் காலித்தின் துணைவர் பனோஜோத்ஸ்னா லஹிரி, மேயர் மம்தானியின் குறிப்பை எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துள்ளார். மம்தானி எழுதியுள்ள அந்தக் குறிப்பில், "அன்புள்ள உமர், கசப்புணர்வு குறித்தும், அது நம்மை ஆக்கிரமிக்க விடாமல் தடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் பெற்றோரைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய பனோஜோத்ஸ்னா லஹிரி, ''11,700 கிலோமீட்டர் தூரம் இருந்தபோதிலும், இந்த கைப்பட எழுதப்பட்ட குறிப்பு சிறையிலுள்ள உமர் காலித்துக்கும், நியூயார்க் நகரத்தின் இந்திய வம்சாவளி மேயர் ஜோஹ்ரான் மம்தானிக்கும் இடையே ஒரு உணர்ச்சிகரமான பிணைப்பை உருவாக்கியுள்ளது'' என்று கூறினார். மேலும், "உமரின் பெற்றோர் மம்தானியையும் வேறு சிலரையும் அமெரிக்காவில் சந்தித்தனர். அவர்கள் அவர்களுடன் நீண்ட நேரம் செலவிட்டனர். அந்தச் சமயத்தில்தான் மம்தானி இந்தக் குறிப்பை எழுதினார்," என்றும் தெரிவித்துள்ளார். உமர் காலித் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மூன்று வாரங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்திருந்தார். ஜாமீன் நிபந்தனைகள் காரணமாக, உமர் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை என்றும், அவர் தனது முழு நேரத்தையும் வீட்டிலேயே கழித்ததாகவும் லஹிரி கூறினார். அவரது கூற்றுப்படி, உமரின் பெற்றோர் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவிற்குச் சென்று மம்தானி உட்பட பலரைச் சந்தித்தனர். உமரின் பெற்றோரான சஹிபா கானம் மற்றும் சையத் காசிம் ரசூல் இலியாஸ் ஆகியோர், அமெரிக்காவில் வசிக்கும் தங்களது மூத்த மகளைச் சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்தனர். அவர்களது மூத்த மகள் தனது தங்கையின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருந்ததால், திருமணத்திற்கு முன்பாக அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டனர் என்கிறார் அவர். உமர் காலித் எப்போது கவனம் பெற்றார்? பட மூலாதாரம்,Getty Images ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் முனைவர் பட்ட மாணவரான உமர் காலித், டெல்லி கலவரம் தொடர்பான சதி குற்றச்சாட்டில் 2020 செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முதல் தகவல் அறிக்கையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவித்திருந்தாலும், UAPA (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்) கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் அவர் இன்னும் நீதிமன்றக் காவலில் உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது ஜாமீன் மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 2025-இல், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பைத் ஒத்திவைத்தது. மம்தானி இதற்கு முன்பும் வெளிப்படையாக உமர் காலிதுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். ஜூன் 2023-இல், பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக நியூயார்க்கில் நடைபெற்ற 'ஹவ்டி டெமாக்ரஸி' நிகழ்வில், உமர் காலித் சிறையிலிருந்து எழுதிய குறிப்புகளின் பகுதிகளை மம்தானி வாசித்தார். "வெறுப்பு மற்றும் கும்பல் கொலைகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்த டெல்லி ஜே.என்.யு ஆராய்ச்சி மாணவர் உமர் காலித்தின் கடிதத்தை நான் வாசிக்கப் போகிறேன். அவர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டத்தின் கீழ் 1,000 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரது வழக்கு விசாரணை இன்னும் தொடங்கவில்லை," என்று மம்தானி அப்போது மக்களிடையே பேசினார். உமர் காலித்தின் பெயர் முதன்முதலில் பிப்ரவரி 2016-இல் மாணவர் தலைவர் கன்ஹையா குமாருடன் இணைந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது. அதற்குப் பிறகு, பல்வேறு விவகாரங்கள் மற்றும் அவர் வெளியிட்ட சில கருத்துகளால், உமர் காலித் தொடர்ந்து செய்திகளில் இடம் பெற்றுவருகிறார். மேலும், ஊடகங்கள் தன்னைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை உருவாக்கியுள்ளன, அதன் காரணமாக சிலரின் வெறுப்புக்குப் பலியாகி வருகிறேன் என்று உமர் காலித் பலமுறை கூறியுள்ளார். 2020 ஜனவரியில், உமர் காலித் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சவால் விடுத்து, '''டுக்டே-டுக்டே' கும்பலை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்மையாக இருந்தால், மேலும் அவர் சொல்வதில் நேர்மையானவராக இருந்தால், 'டுக்டே-டுக்டே' உரை தொடர்பாக என்னை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு, யார் வெறுப்பு பேச்சு பேசினார், யார் துரோகி என்பதும் தெளிவாகி விடும்." என்றார் ஜூலை 2016-இல் ஹிஸ்புல் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் பரவலான வன்முறையும் போராட்டங்களும் வெடித்தன. புர்ஹான் வானியின் இறுதி ஊர்வலத்தில் பெரும் கூட்டம் கூடியது. அதனைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கில் புர்ஹான் வானியைப் புகழ்ந்து உமர் காலித் ஒரு பதிவை எழுதியிருந்தார். அது பரவலாக விவாதிக்கப்பட்டது. விமர்சனங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே அந்தப் பதிவை உமர் காலித் நீக்கிவிட்டார். இருப்பினும், அதற்குள் சமூக ஊடகங்களில் எதிர்ப்புகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அதே சமயம், பலரும் அவருக்கு ஆதரவாக நின்றனர். ஆகஸ்ட் 2018-இல், டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப் வெளியே அடையாளம் தெரியாத சிலரால் உமர் காலித் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 'அச்சமில்லாத சுதந்திரத்தை நோக்கி' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றிருந்தார். வெள்ளை சட்டை அணிந்த ஒருவர் உமர் காலித்தை அணுகி, அவரைத் தள்ளிவிட்டு துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், உமர் காலித் கீழே விழுந்ததால் அவர் மீது குண்டு படவில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு உமர் காலித் கூறுகையில், "அவர் என் மீது துப்பாக்கியை நீட்டியபோது நான் பயந்தேன், ஆனால் கௌரி லங்கேஷுக்கு என்ன நடந்தது என்பது எனக்கு நினைவுக்கு வந்தது," என்றார். காலித்துக்கு ஆதரவாக அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் பட மூலாதாரம்,@RepMcGovern மம்தானியைத் தவிர, அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் பலர் உமர் காலிதுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜிம் மெக்கவர்ன் மற்றும் ஜேமி ராஸ்கின் தலைமையில் உமர் காலித்துக்கு ஆதரவாக ஒரு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ராவுக்கு எழுதிய கடிதத்தில், உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்குமாறு இந்திய அதிகாரிகளுக்கு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காலித்தின் வழக்கு விசாரணையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மெக்கவர்ன் மற்றும் ராஸ்கின் ஆகியோருடன் இணைந்து கிரிஸ் வான் ஹோலன், பீட்டர் வெல்ச், பிரமிளா ஜெயபால், ஜான் ஷாகோவ்ஸ்கி, ரஷிதா த்லைப் மற்றும் லாயிட் டோகெட் ஆகிய ஜனநாயகக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், விசாரணை ஏதுமின்றி காலித் தொடர்ந்து காவலில் வைக்கப்படுவது சர்வதேச சட்ட நெறிமுறைகளை மீறும் செயல் என்று அவர்கள் கூறியுள்ளனர். மெக்கவர்ன் இந்தக் கடிதத்தை எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துள்ளார். இம்மாத தொடக்கத்தில் உமர் காலித்தின் பெற்றோரைச் அமெரிக்காவில் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளின் இந்தக் கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் செயல் என்று கூறியுள்ளார். இதுகுறித்து கன்வல் சிபல் எக்ஸ் தளத்தில் கூறுகையில், "இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்க அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் இத்தகைய தலையீடுகள், ஏற்கனவே டிரம்பின் கொள்கைகளால் கடும் அழுத்தத்தில் இருக்கும் இந்தியா-அமெரிக்க உறவுகளை மேலும் மோசமாக்குகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் இந்தியாவில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் செய்தித் தொடர்பாளர்களாக மாறுவதற்குப் பதிலாக, அமெரிக்காவின் சொந்தப் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய வெளிநாட்டுத் தலையீடுகள் இந்தியாவில் உள்ள தேசவிரோத சக்திகளுக்கு எதிராகவே அமையும், ஏனெனில் தேசவிரோத சக்திகள் இந்தியாவின் பாதுகாப்பைக் குறிவைக்கும் ஒரு பெரிய அமைப்பின் அங்கமாகக் கருதப்படுகிறார்கள்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3wzpl3v5l6o- விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கிய சிலர் கைது - சாகர காரியவசம்
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கிய சிலர் கைது - சாகர காரியவசம் 02 Jan, 2026 | 05:26 PM (நமது நிருபர்) விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்களென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2026 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு சிறந்ததாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய தலைவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர்கள் மறக்கடிக்கப்பட்டுள்ளார்கள். விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். நல்லதை செய்யாமல் இந்த ஆண்டு எவ்வாறு நல்லதாக அமையும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு தமிழர்களை இவ்வாறு கைது செய்து சிங்கள இனம் நன்றி மறந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/235061- நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு முப்படைகளின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்களின் ஒரு நாள் சம்பளம் 372 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு 02 Jan, 2026 | 04:31 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்களும் தங்களது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். அதன்படி, முப்படைகளால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொகை 372,776,918.28 ரூபாவாகும். இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவினால் 250 மில்லியன் ரூபாவும், கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பனகொடவினால் 73,963,879.71 ரூபாவும், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்கவினால் 48,813,038.97 ரூபாவும் கையளிக்கப்பட்டதோடு இதற்கான காசோலைகள் நேற்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகோந்தாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/235049- நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம் 02 Jan, 2026 | 01:15 PM நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்றைய தினம் (2) தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த பௌத்த பிக்குகள் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறித்த விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாளைய தினமும் (3) ஒரு போராட்டம் நடத்தப்படவுள்ளது. கடந்த போராட்டமொன்றில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் குறித்த குழுவானது இன்றைய தினம் அங்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235025- ‘தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு
‘தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு Jan 2, 2026 - 06:00 PM 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அந்தத் திட்டங்களின் செயல்பாடுகளை ஒரே நிறுவனத்தின் கீழ் மேற்பார்வை செய்வதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் "தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை" தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத் திட்டங்கள் மற்றும் தற்போதைய செயல்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக தேசிய வீட்டமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 10,200 மில்லியன் ரூபா செலவில் செயல்படுத்தப்படும் வீட்டுத் திட்டம் மற்றும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக 5,000 மில்லியன் ரூபா செலவில் செயல்படுத்தப்படும் வீட்டுத் திட்டங்களின் திட்டமிடல், செயல்பாடு மற்றும் நிறைவு செய்யவுள்ள காலக்கெடு தொடர்பில் ஜனாதிபதி இதன்போது அவதானம் செலுத்தினார். மேலும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கடந்த ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் முடிக்கப்படாத வீட்டுத் திட்டங்களை விரைவாக முடிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmjwuqkdr03g2o29n5nag3r9k- 2025இல் உலகளவில் 128 ஊடகவியலாளர்கள் கொலை! - பட்டியல் வெளியிட்டது சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு
2025இல் உலகளவில் 128 ஊடகவியலாளர்கள் கொலை! - பட்டியல் வெளியிட்டது சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு 02 Jan, 2026 | 05:02 PM 2025ஆம் ஆண்டில் உலகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists - IFJ) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 128 ஊடகவியலாளர்கள் ஊடக சேவையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டதாக IFJ குறிப்பிட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட 128 ஊடகவியலாளர்களில் 119 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவர். கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் 74 பேர் மேற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் 56 பேர் காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர்க்காலச் சூழலில் கொல்லப்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், ஆபிரிக்காவில் 18 பேர், சீனா உள்ளிட்ட ஆசியா - பசுபிக் நாடுகளில் 15 பேர், அமெரிக்காவில் 11 பேர், ஐரோப்பிய நாடுகளில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவில் 4 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உலகளவில் 533 ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/235055- CEB யோசனை குறித்த பொது மக்களின் கருத்து கோரல் விரைவில்
CEB யோசனை குறித்த பொது மக்களின் கருத்து கோரல் விரைவில் Jan 2, 2026 - 08:02 PM 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதிக்கான எதிர்பார்க்கப்படும் செலவு 137,016 மில்லியன் ரூபாவாகும் எனவும், தற்போதுள்ள கட்டணங்களின் கீழ் கிடைக்கும் வருமானம் 113,161 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தனது யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய, 13,094 மில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறை நிலவுவதால், மொத்த மின்சாரக் கட்டணத்தை 11.57% சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை முன்மொழிந்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்த யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) கையளித்துள்ளது. இதில் நிலையான கட்டணம் மற்றும் அலகுக் கட்டணம் ஆகிய இரண்டையும் அதிகரிக்க மின்சார சபை பிரேரித்துள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு அமைய, வீட்டுப் பாவனை மின்சாரக் கட்டணங்கள் முதல் 60 அலகுகள் வரை இரண்டு கட்டங்களாகக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. முதல் 30 அலகுகள் (0-30): ஒரு அலகுக்குத் தற்போது அறவிடப்படும் 4.50 ரூபா கட்டணத்தை 5.29 ரூபாவாக அதிகரிக்கவும், மாதாந்தக் கட்டணத்தை 80 ரூபாவிலிருந்து 14.11 ரூபாவால் அதிகரித்து 94.11 ரூபாவாக மாற்றவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 அலகுகள் வரை ஒரு அலகுக்கு அறவிடப்படும் 8 ரூபா கட்டணத்தை 9.41 ரூபாவாக அதிகரிக்கவும், மாதாந்த நிலையான கட்டணத்தை 37.03 ரூபாவால் அதிகரித்து 247.03 ரூபாவாக நிர்ணயிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. 61 முதல் 90 அலகுகள் வரை ஒரு அலகுக்குத் தற்போது அறவிடப்படும் 18.50 ரூபா கட்டணத்தை 21.76 ரூபாவாக அதிகரிக்க யோசிக்கப்பட்டுள்ளது. 91 முதல் 120 அலகுகள் வரை ஒரு அலகுக்கு 24 ரூபாவாக உள்ள கட்டணத்தை 28.23 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. 121 முதல் 180 அலகுகள் வரை ஒரு அலகுக்கு 41 ரூபாவாக உள்ள கட்டணத்தை 48.23 ரூபாவாக அதிகரிக்க யோசிக்கப்பட்டுள்ளது. 181 அலகுகள் அல்லது அதற்கு மேல் ஒரு அலகுக்கு 61 ரூபாவாக இருந்த கட்டணத்தை 71.76 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த வகைகளுக்கான மாதாந்த நிலையான கட்டணங்களையும் இதற்குச் சமாந்தரமாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அறநிலையங்களில் முதல் 30 அலகுகள் வரை ஒரு அலகுக்கு 4.50 ரூபாவாக உள்ள கட்டணத்தை 5.29 ரூபாவாக அதிகரிக்கவும், 75 ரூபாவாக இருந்த மாதாந்தக் கட்டணத்தை 88.23 ரூபாவாக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. 31 முதல் 90 அலகுகள் வரை அலகு ஒன்றின் விலையை அதிகரிக்கவும், அந்த வகையின் மாதாந்தக் கட்டணத்தை 35.27 ரூபாவால் அதிகரிக்கவும் கோரப்பட்டுள்ளது. 91 முதல் 120 அலகுகள் வரை அலகு ஒன்றின் விலையை 9.41 ரூபாவாகவும், 121 முதல் 180 அலகுகள் வரை அலகு ஒன்றின் விலையை 22.35 ரூபாவாகவும் அதிகரிக்க யோசிக்கப்பட்டுள்ளது. 181 அலகுகள் அல்லது அதற்கு மேல் அலகு ஒன்றின் விலையை 26 ரூபாவிலிருந்து 30.59 ரூபாவாக அதிகரிக்கக் கோரப்பட்டுள்ளது. கைத்தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களில் 300 அலகுகள் அல்லது அதற்குக் குறைவான அலகு ஒன்றின் விலை 8 ரூபாவிலிருந்து 9.41 ரூபாவாக அதிகரிக்கக் கோரப்பட்டுள்ளது. 300 அலகுகளுக்கு மேற்பட்டவைக்கு அலகு ஒன்றின் விலை 17 ரூபாவிலிருந்து 20 ரூபாவாக அதிகரிக்க மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. எனினும், இலங்கை மின்சார சபையினால் பராமரிக்கப்படும் மின்சார வாகன மின்னேற்றும் நிலையங்களின் (EV Charging Stations) கட்டணங்களில் எவ்வித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் இந்த யோசனையை ஆய்வு செய்து, அது குறித்துப் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஜனவரி மாதம் இரண்டாவது வாரமளவில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 6 வார காலப்பகுதிக்குள் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதித் தீர்மானத்தைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjwz39dm03g9o29nohkdrc5h- “கைலாசா” நித்யானந்தா புதிய ஆண்டில் மக்களுக்குச் சொன்ன செய்தி!
“கைலாசா” நித்யானந்தா புதிய ஆண்டில் மக்களுக்குச் சொன்ன செய்தி! 02 Jan, 2026 | 03:43 PM அனைத்தையும் சாட்சியாகப் பார்க்கத் தொடங்கினால் இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு புதிய பிறவியாக அமையும் என்று சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியான நித்யானந்தா தெரிவித்துள்ளார். புத்தாண்டு செய்தியாக நித்தியானந்தா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். “இந்த 2026ஆம் ஆண்டில் நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். சாட்சி பாவம். அனைத்தையும் சாட்சியாகப் பார்க்கத் தொடங்கினால் இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு புதிய பிறவியாக அமையும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவின் முடிவில் “பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் திருவண்ணாமலையில் பிறந்த நித்யானந்தா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பல நாடுகளிலும் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி பிரபலமடைந்தார். அத்துடன் பல பாலியல் குற்றச்சாட்டுக்களிலும் சிக்கி உலகளவில் பேசப்படும் இவர், இந்திய பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலிருந்து வெளியேறி, கைலாசா என்ற தீவை உருவாக்கி, அங்கு தனது சீடர்களுடன் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் இறந்துவிட்டதாக செய்திகள் பரவியபோதும் அதை அவரும் அவரது சீடர்களும் மறுத்துவந்ததோடு, நித்யானந்தா உரையாற்றுவது போன்ற பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்நிலையிலேயே தற்போது நித்யானந்தா புத்தாண்டு செய்தியொன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/235029 - யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில்: தையிட்டியில் பதற்றம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.