Everything posted by ஏராளன்
-
முடங்கியது முகநூல்
பேஸ்புக் செயலிழப்பால் 100 மில்லியன் இழப்பு - சர்வதேச ஊடகங்கள் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் செயலிழந்தமையினால் ‘மெட்டா’ நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் நேற்று திடீரென செயலிழந்தன. ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ‘மெட்டா’ நிறுவனத்தின் வருமானம் 1.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/294626
-
ஏறக்குறைய 5% இலங்கையர்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இலங்கையின் சனத்தொகையில் ஏறக்குறைய 5% ஆனவர்கள் தற்போது குளுக்கோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். உலகில் குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று குளுக்கோமா. அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் மாத்திரமன்றி உலகெங்கிலும் குளுக்கோமா நோயாளர்கள் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பில் காணப்படுகின்றனர். “உலகத்தை எடுத்துக் கொண்டால், 3.54% குளுக்கோமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இலங்கையை எடுத்துக் கொண்டால், அது கிட்டத்தட்ட 5% ஆகும். இது நமது அதிகரித்த முதியோர் சனத்தொகை காரணமாகவும் இருக்கலாம்” என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கண் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், கண் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக நாட்டின் சுகாதார அமைப்பில் உள்ள திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வைத்தியர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். https://thinakkural.lk/article/294708
-
இந்தியா ஒரு நாடல்ல’ - ஆ.ராசா பேச்சுக்கு பாஜக கண்டனம்
06 MAR, 2024 | 02:24 PM இந்தியா ஒரு நாடல்ல என்ற திமுக எம்.பி. ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் கோவையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும்போது, “இந்தியா ஒரு நாடல்ல. ஒரே நாடு என்றால் ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும். எனவே இந்தியா நாடல்ல, இது துணைக் கண்டம். இங்கு தமிழ், மலையாளம், ஒரியா என பல மொழிகள் பேசும் தேசங்கள் உள்ளன. இத்தனை தேசிய இனங்களையும் சேர்த்தால் அது இந்தியா” என்று கூறியிருந்தார். இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவின் தலைவர் அமித் மாளவியா தனது ‘எக்ஸ்’ பதிவில், “திமுகவின் நிலைப்பாட்டில் இருந்து வெறுப்புப் பேச்சுகள் குறைவின்றி தொடர்கின்றன. சனாதன தர்மத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்த பிறகு இப்போது ஆ.ராசா இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக அழைப்பு விடுக்கிறார், பகவான் ராமரை கேலி செய்கிறார், மணிப்பூர் மக்களை இழிவுபடுத்தும் கருத்துகளை கூறுகிறார். ஒரு தேசமாக இந்தியா என்ற கருத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். காங்கிரஸும் இண்டியா கூட்டணியின் மற்ற கட்சிகளும் அமைதியாக இருக்கின்றன. இவர்களின் உத்தேச பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியும் மவுனம் காக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். அமித் மாளவியா தனது பதிவுடன் ஆ.ராசா உரையின் வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். மேலும் ஆ.ராசா உரையின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் இணைத்துள்ளார். இந்நிலையில் ஆ.ராசாவின் இந்தக் கருத்தை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட். கூறும்போது, “ஆ.ராசாவின் கருத்துகளை நான் 100 சதவீதம் ஏற்கவில்லை. இத்தகைய கருத்தை நான் கண்டிக்கிறேன்.ராமர் அனைவருக்கும் சொந்தமானவர், அனைத்தையும் உள்ளடக்கியவர் என்று நான் நம்புகிறேன். அது, ஆ.ராசாவின் சொந்த கருத்தாக இருக்கலாம். அதை நான் ஆதரிக்கவில்லை. ஒருவர் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார். https://www.virakesari.lk/article/178074
-
அய்யா வைகுண்டர் யார்? அவர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா?
பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 6 மார்ச் 2024, 08:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “சனாதன தர்மத்தைக் காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது, அவரின் சமீபத்திய சர்ச்சைகளுள் ஒன்றாக மாறியுள்ளது. ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. என்ன நடந்தது? அய்யா வைகுண்டரின் 192-ஆவது அவதார தின விழா மற்றும் ‘வைகுண்டசாமி அருளிய சனாதன வரலாறு' என்ற புத்தக வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் மார்ச் 4 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலம்; சனாதன தர்மத்தை காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என என்றார். இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில், “அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு புத்துயிரூட்டி, பெரிதும் வளப்படுத்தினார். சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி, விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதியை உறுதி செய்தார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,RAJ BHAVAN, TAMILNADU/X படக்குறிப்பு, தலைப்பாகை அணிந்துகொண்டு அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஆர்.என். ரவி. வலுக்கும் எதிர்ப்பு வைகோ வெளியிட்ட அறிக்கையில், “சாதி சமய வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்திய, சனாதனத்தின் எதிரியாகத் திகழ்ந்த அய்யா வைகுண்டரை சனாதனத்தின் காவலர் என்று ஆளுநர் உளறிக் கொட்டியிருக்கிறார். இந்துத்துவா கோட்பாட்டுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர் போல ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருவது கடுமையான கண்டனத்துக்குரியது” என தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி, “ஆளுநர் வெளியிட்ட புத்தகம், அய்யா வைகுண்டர் வரலாற்றை திரிக்கும் முயற்சி. சனாதனத்தின் வேராக மனுதர்மம் இருக்கிறது. சனாதனத்திற்கு எதிரான செயல்களைத்தான் அய்யா வைகுண்டர் செய்திருக்கிறார்." "பெண்ணடிமைத்தனம், சாதியத்திற்கு எதிரானவற்றை தான் செய்திருக்கிறார். இவை இரண்டுக்கும் ஆதரவானது சனாதனம். புராணமும் ஆகமங்களும் பொய்யானவை என கூறியிருக்கிறார். வைகுண்டரை அறிந்துகொண்டு தான் பேச வேண்டும். அவர் பேசியது தவறானது” என்றார். மேலும் பேசிய அவர், “பெண்கள் மேலாடை அணியக் கூடாது, குடத்தில் தண்ணீர் பிடிக்கக் கூடாது, தெருவுக்குள் வரக்கூடாது என்ற அடக்குமுறையெல்லாம் எதிர்த்தவர் அய்யா. இந்த வழிபாட்டில், உருவ வழிபாடு, பூஜை, புனஸ்காரம், ஹோமம் வளர்த்தல், யாகங்கள், மந்திரங்கள் இல்லை, அவரவர் தாய்மொழியிலேயே வழிபட முடியும். சமஸ்கிருதத்தில்தான் மந்திரம் சொல்ல வேண்டும் எனக்கூறும் சனாதனத்தை இதில் ஒப்பிடக் கூடாது” என்றார். அய்யா வைகுண்டர் வழிபாட்டின் தனித்துவம் என்ன? அய்யா வைகுண்டர் உண்மையில் சனாதனத்தைப் பாதுகாத்தவரா? அய்யா வைகுண்டர் வழிபாட்டை பின்பற்றுபவர்கள் என்ன சொல்கின்றனர்? பட மூலாதாரம்,FACEBOOK அய்யா வைகுண்டர் யார்? 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு பகுதியில் பிறந்தவர் அய்யா வைகுண்டர். “அவரின் இயற்பெயர் முத்துக்குட்டி” என்கிறார், வரலாற்று ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். அக்காலத்தில், கன்னியாகுமரி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ளடங்கியிருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மன்னரின் ஆட்சியின்கீழ் நாடார்கள், ஈழவர்கள் உள்ளிட்ட 18 தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது ஒடுக்குமுறைகள் நிலவிவந்தன. பெண்கள் மேலாடை அணியக் கூடாது, குடத்தில் தண்ணீர் பிடிக்கக் கூடாது, தெருவுக்குள் வரக்கூடாது என பல அடக்குமுறைகள் நிலவியதாக கூறுகிறார், ஆ.சிவசுப்பிரமணியன். பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டுமானால் வரி செலுத்த வேண்டும் என திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கொடும் அடக்குமுறைகள் நிலவியதாக குறிப்பிடுகிறார் அவர். இத்தகைய அடக்குமுறைகளை எதிர்த்து அய்யா வைகுண்டர் மக்களை ஒன்றுதிரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக வரலாற்று ஆய்வாளர்களும் அவரை பின்பற்றுபவர்களும் கூறுகின்றனர். “அய்யா வைகுண்டரை நாடார்கள் அதிகம் வழிபடுகின்றனர். அந்த சமூகத்தினருக்கு அவர் ஓர் எழுச்சியை உருவாக்கினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முலை வரி போட்டிருக்கின்றனர். இதுதவிர, பல்வேறு வரி கொடுமைகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் ஆளாகியிருக்கின்றனர். என்னென்ன வரிகள் போட்டிருக்கின்றனர் என்பதை அவரே பாடியிருக்கிறார். வரி கொடுக்கவில்லை என்றால் அடிப்பார்கள். ‘கருப்பட்டி கேட்டடிப்பான். பனை நுங்கு கேட்டடிப்பான்’ என அய்யா வைகுண்டரே பாடியிருக்கிறார்” என்கிறார், சிவசுப்பிரமணியன். அத்தகைய கொடுமைகளுக்கு ஆளான மக்கள், தங்களை மீட்க வந்தவராக அய்யா வைகுண்டரை கருதி அவரை கடவுளாக வழிபடும் போக்கு தோன்றியுள்ளது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக இயங்கினார்” என்கிறார் அவர். படக்குறிப்பு, ஆ. சிவசுப்பிரமணியன் அய்யா வைகுண்டர் வழிபாடு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இந்த வழிபாடு அகிகமாக இருக்கிறது. சென்னையில் மணலி புதூர் பகுதியில் இதற்கென வழிபாட்டுத்தலம் உள்ளது. கேரளாவில் பத்தனம்திட்டா, பொன்னானி உள்ளிட்ட பகுதிகளிலும் பெங்களூரு, மும்பையில், இடம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் சில பகுதிகளிலும் வழிபடப்படுகிறது. சாதிக்கு அப்பாற்பட்டு இந்த வழிபாடு நடத்தப்பட்டாலும் நாடார் சமுதாயத்தினரே அய்யா வைகுண்டரை பெரும்பாலும் வழிபடுகின்றனர். அய்யா வைகுண்டர் வழிபாட்டில் உருவ வழிபாடு இல்லை. வழிபாட்டு தலத்தில் நிலைக்கண்ணாடியைத்தான் வைத்து வழிபடுவர். பூஜைகள், அர்ச்சனைகள் இல்லை. பலியிடுதல், தீப ஆராதனைகள் கிடையாது. விளக்கேற்றி அதன் ஒளியைத்தான் வழிபடுவர். அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகிய இரண்டு நூல்கள்தான் இந்த வழிபாட்டின் அடிப்படை. “அகிலத்திரட்டு அம்மானை முற்றோதல் விழா ஊர்கூடி பத்து நாட்கள் நடத்துவர்” என்கிறார் சிவசுப்பிரமணியன். அய்யா வைகுண்டர் கோவிலுக்கு வரும் ஆண்கள், சட்டை அணிந்திராமல், தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும். “தலைப்பாகை அணிவது, சாதிய ஒடுக்குமுறைகளின் ஓர் அங்கம். எல்லோராலும் தலைப்பாகை அணிய முடியாது. அதை ஒழிக்கவே, தலைப்பாகை அணிந்து அவரை வழிபடுகின்றனர். இதுவொரு வகையில் மரபு மீறல்” என்கிறார், ஆ. சிவசுப்பிரமணியன். ஹோமம் வளர்த்து, வேதங்கள் ஓதுவது அய்யா வழி திருமணங்களில் இல்லை, கணவர் இறந்தால் தாலியை கழற்றும் வழக்கமும் இல்லை என வழிபாட்டாளர்கள் கூறுகின்றனர். “இப்படி, ஆகம, வேதங்களுக்கு எதிராகத்தான் வைகுண்டர் இருந்திருக்கிறார். ஆளுநர் ஆர்.என். ரவி சான்று வலு இல்லாமல் பேசக்கூடாது. குழந்தை திருமணம், கல்வி மறுப்பு, உடன்கட்டை ஏறுதல் எல்லாவற்றையும் தான் சனாதனமும் வைதீகமும் போதிக்கிறது. இதனை எதிர்த்தவர் வைகுண்டர். புனித நூல்களை எல்லோராலும் படிக்க முடியாது என்பதுதான் சனாதனம். வேதம் ஓதுவதை மறைந்திருந்து கேட்டவர்களின் காதுகளில் ஈயத்தைக் கரைத்து ஊற்றுவதுதான் சனாதனம். ஆளுநரின் பேச்சு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது.” என்றார், ஆ.சிவசுப்பிரமணியன். வழிபடுபவர்கள் என்ன சொல்கின்றனர்? தன் தாத்தாவின் காலத்திலிருந்து அய்யா வைகுண்டரை தங்கள் குடும்பம் வழிபடுவதாக கூறுகிறார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்சங்கர். “அகிலத்திரட்டு அம்மானையில் வாழ்க்கை நெறிமுறைகள் கூறப்பட்டிருக்கும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளும் பிரிவினைகளும் இருந்தன. சாதிய அடக்குமுறைகள் அதிகமாக இருந்தன. தீண்டாமையும் வரிகளும் விதிக்கப்பட்டன. அப்போது பனையேற்று தொழில்தான் முதன்மை தொழில். பதநீர் எடுப்பதற்கும் நுங்கு, ஓலை எடுப்பதற்கும் வரிகள் விதிக்கப்பட்டன. இதுகுறித்து அகிலத் திரட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் இதை எதிர்த்து சண்டை போடவில்லை, மக்களை ஒன்றுதிரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்” என்கிறார் அவர். 'விளக்கொளி போலே வீரம தாயிருங்கோ’ என கூறியிருக்கிறார். `இறைவன் முன்பு அனைவரும் சமம்` என்று கூறியவர். அனைத்து சாதி மக்களும் ஒன்றாக அமர்ந்து அன்னதானத்தில் சாப்பிடும் முறை பின்பற்றப்படுகிறது” என இந்த வழிபாட்டு முறை குறித்து பிரேம் சங்கர் தெரிவித்தார். பட மூலாதாரம்,BHAVAN, TAMILNADU/X வாக்குக்காக கவர நினைக்கிறதா பாஜக? பாஜக குறித்து பாலபிரஜாபதி கூறுகையில், “அய்யா வைகுண்டரை அவர்கள் (பாஜக) எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், அது நடக்காது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் இதுகுறித்து பேசியிருக்கிறாரா? தேர்தல் நேரத்தில், 4-5 மாவட்டங்களில் அய்யா வைகுண்டரை கணிசமான எண்ணிக்கையில் வழிபடுபவர்களை கவர வேண்டும் என பார்க்கிறார்கள்” என்றார். பாஜக என்ன சொல்கிறது? “ஆளுநர் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். அதுகுறித்து பாஜக சார்பாக என்ன சொல்ல முடியும்? ஆளுநரிடம்தான் கேட்க வேண்டும்” என, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அய்யா வைகுண்டர் அவதார விழா அன்று, அவரை நினைவுகூர்ந்து, தமிழ்நாடு பாஜக, பிரதமர் மோதியின் அதிகாரபூர்வ பக்கங்களில் பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. இந்தாண்டும் பிரதமர் ‘எக்ஸ்’ தளத்தில்,“அய்யா வைகுண்ட சுவாமிகளின் பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன். பிறருக்கு சேவை செய்வதற்கும், அனைவருக்கும் சமமான நீதியுடைய சமுதாயத்தை வளர்ப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அய்யா வைகுண்டர். மனிதகுலத்திற்கான அவரது பார்வையை நிறைவேற்றுவதற்கான, எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.” என பதிவிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cg3q65xy8n8o
-
என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி - நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய
Published By: RAJEEBAN 06 MAR, 2024 | 02:46 PM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி குறித்து நூல் ஒன்றை வெளியிடவுள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் 2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி முயற்சிகள் என்ற நூலை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது என தெரிவித்துள்ள அவர் இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர் முதல் 60 வருடங்களில் இந்த நிலை காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். என்னை அரசியலில் இருந்து அகற்றுவதற்கான அரசியல் பிரச்சாரம் இலங்கை அரசியலில் புதிய அம்சத்தை கொண்டுவந்தது எனவும் குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் ஆட்சிமாற்றங்கள் அமைதியான முறையிலேயே இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார். 2022 இல் இடம்பெற்ற சம்பவங்களால் நாட்டின் எதிர்காலத்திற்கு கடும் பாதிப்பு என தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ச சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிமாற்றத்திற்கான நடவடிக்கைகளின் நேரடி அனுபவங்களை தனது நூல் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/178075
-
மின் கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு - முழுமையான விபரம் இதோ!
மின்சார கட்டணம் 35 சதவீதத்தால் குறைக்கப்படுவதே நியாயமானது - ஜனக ரத்நாயக்க Published By: DIGITAL DESK 3 06 MAR, 2024 | 11:27 AM (அ.நிவேதா) கடந்த 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் பொதுமக்கள் நலன்கருதி என்னால் முன்வைக்கப்பட்ட மின்கட்டணம் தொடர்பான பரிந்துரை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அமுல்படுத்தப்படுவதென்பது என்னுடைய தியாகத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கின்றேன். எனினும் இலங்கை மின்சாரசபை பெற்றுக்கொண்டுள்ள இலாபத்தை பொதுமக்களுக்கு உரியவாறு பகிர்ந்தளிக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்துவதாயின் மின் கட்டணம் 35 வீதத்தால் குறைக்கப்படுவதே ஆரோக்கியமானது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். நேற்றுமுன்தினம் (4) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீத மின்கட்டண குறைப்புக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் நேற்று கொழும்பிலுள்ள அவரது பிரத்தியேக அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுமக்களின் நலன்கருதி 21.9 சதவீதத்தால் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. இருந்தபோதிலும் கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட மின்சார கட்டண உயர்வால் இலங்கை மின்சார சபை பெற்றுக்கொண்ட இலாபத்தை அதன் பங்காளர்களான பாவனையாளர்களுக்கு உரியவாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது கட்டாயம். அது தொடர்பான தெளிவு பொதுமக்களுக்கு இருக்க வேண்டும். கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்திரம் இலங்கை மின்சார சபை வருமானமானது 62 பில்லியன்களாக பதிவாகியுள்ளது. அதேவேளை இவ்வாண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி காலப்பகுதிகளில் கிட்டத்தட்ட 35 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. அப்படியாயின் இலங்கை மின்சாரபை பெற்றுக்கொண்டுள்ள சுமார் 95 சதவீத இலாபத்தை பாவனையாளர்களுக்கு வழங்க வேண்டும். அதனை நேரடியாக மின்கட்டண குறைப்பின் ஊடாகவே வழங்க முடியும். அப்படியாயின் 22 வீதமென்ற மின்கட்டண குறைப்பை 35 வீதமாக குறைப்பதற்கு அரசாங்ம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே நியாயமும் கூட. கடந்த 2023ஆம் ஆண்டு மின்சார சபையின் ஐந்தொகையில் 60 பில்லியன் ரூபா வட்டித் தொகையானது இலங்கை மத்தியவங்கிக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் இலங்கை மத்திய வங்கியின் வருமான பட்டியலானது 40 பில்லியனாக பதிவாகியுள்ளது. அப்படியாயின் கடந்த ஆண்டு இலங்கை மத்தியவங்கியின் பிரதான வருமானமானது இலங்கை மின்சார சபையிடமிருந்து அறவிடப்பட்டுள்ளமை தெட்டத்தெளிவாக தெரிகிறது. இந்த பெருந்தொகை கட்டணத்துக்கு இலங்கை மின்சார சபையின் ஊழல் மற்றும் முறையற்ற திட்டமிடல்களே மிகப்பிரதான காரணங்களாகும். இந்தியா - இலங்கை மின்னணு வர்த்தக உடன்படிக்கை இந்தியா - இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான எல்லை தாண்டிய மின்னணு வர்த்தக உடன்படிக்கை வரவேற்கத்தக்கது. உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இதுபோன்ற எல்லை தாண்டிய வர்த்தக உடன்படிக்கைகள் வெற்றிகரமான ஒரு உபாயமாகவே பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இந்தியாவுடனான மின்னணு வர்த்தக உடன்படிக்கை வரவேற்கத்தக்கது. இதுபோன்ற ஒப்பந்தங்கள் கடந்த காலங்களிலேயே செய்யப்பட்டிருக்க வேண்டும். என்றாலும்கூட இவ்விரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உடன்படிக்கையானது அரசியல் தலையீடுகளற்ற வர்த்தக நோக்கத்தை மாத்திரம் முன்னிலை ப்படுத்துவதாக அமையுமென்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். யாரையும் பாதிக்காத வகையில் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக இந்த திட்டம் அமையுமானால் அது இலங்கைக்கு ஆரோக்கியமானதாக அமையும் என்றார். https://www.virakesari.lk/article/178046
-
யாழில் காலாவதியான குளிர்பானங்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு 28 ஆயிரம் தண்டம்
Published By: DIGITAL DESK 3 06 MAR, 2024 | 11:19 AM யாழ்ப்பாணத்தில் காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர் பகுதி மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்போது , காலாவதியான குளிர்பான வகைகளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த இரண்டு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, இருவரையும் கடுமையாக எச்சரித்த மன்று, ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டமும், மற்றைய நபருக்கு 08 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது. அத்துடன் கைப்பற்றப்பட்ட காலாவதியான குளிர்பானங்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178045
-
பால் குடிப்பது நல்லதா? யாரெல்லாம் பால் குடிக்கக் கூடாது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 6 மார்ச் 2024, 02:40 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் 'எங்கள் நிறுவனத்தின் பிஸ்கட்டில் அதிக பால் உள்ளது, எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை பாலில் கலந்து குடித்தால் உங்கள் பிள்ளைகள் பல சாதனைகளைப் புரிவார்கள்' போன்ற பால் தொடர்பான பல விதமான விளம்பரங்களை பல வருடங்களாக தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். உலகிலேயே அதிகமாக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா தான். 2022-23ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் மொத்த பால் உற்பத்தி 230.58 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. மாட்டுப்பால் என்பது மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான, ஆரோக்கியமான ஒரு பானம் என்ற கருத்து இந்திய சமூகத்தில் பரவலாக உள்ளது. இரவில் ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டு தூங்குவதை பலர் ஒரு தினசரி பழக்கமாக கடைபிடிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட குழந்தைப் பருவத்தைக் கடந்த பிறகு, மனிதனைத் தவிர வேறு எந்த மிருகமும் வாழ்நாள் முழுவதும் பால் குடிப்பதில்லை, குறிப்பாக வேறு மிருகத்தின் பாலை. பால் என்பது தினமும், எல்லோரும் குடிக்கக்கூடிய ஒரு பானம் தானா? அதிலுள்ள சத்துக்கள் என்ன? தினசரி எவ்வளவு பால் எடுத்துக்கொள்ளலாம்? யாரெல்லாம் பால் குடிக்கக்கூடாது? போன்ற பல கேள்விகளுக்கான பதிலே இந்தக் கட்டுரை. பட மூலாதாரம்,GETTY IMAGES அசைவம் சாப்பிடுவோருக்கு பால் அவசியமா? பால் என்பது கால்சியம், புரதம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த ஒரு பானம் தான், ஆனால் அசைவ உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்பவர்களுக்கு பாலை உணவில் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் எந்த பிரச்னையும் ஏற்படாது என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார். "புதிய கற்காலத்தின் போது மனிதர்களுக்கு பல விதமான சத்துக் குறைபாடுகள் இருந்தன. எனவே அதை பூர்த்தி செய்ய, கால்நடைகளை அதிகம் வளர்த்து, கிடைக்கும் பாலை தினமும் அருந்தும் வழக்கம் தோன்றியது. அந்த காலத்தில் விவசாய பொருட்களை மட்டுமே நம்பி இருக்க முடியாத நிலை இருந்ததால் தோன்றிய இந்த பழக்கம், 10,000 வருடங்களாக சமூகத்தில் தொடர்கிறது. இப்போது நமது டயட்டை சரியாக திட்டமிட்டால், பால் அவசியமில்லை" என்கிறார் மருத்துவர் அருண் குமார். "சைவ உணவுகளை மட்டுமே உண்பவர்கள் கண்டிப்பாக பால் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பிட்ட அளவு உள்ளது. எல்லோருக்கும் பால் ஒத்துக்கொள்ளுமா என்று கேட்டால், இல்லை. காரணம் பாலில் லாக்டோஸ் எனும் சர்க்கரை உள்ளது. அதை ஜீரணிக்க நமது குடலில் லாக்டேஸ் எனும் என்சைம் இருக்க வேண்டும். இந்த என்சைம் இல்லையென்றால் பல உடல்நலக் கோளாறுகள் உண்டாகும்" என்கிறார் மருத்துவர். பட மூலாதாரம்,DOCTORARUNKUMAR/FACEBOOK படக்குறிப்பு, குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார் பாலில் உள்ள சத்துக்கள் என்ன? "பொதுவாக பால் என்றாலே அதிகமாக எடுத்துக்கொள்ளப்படுவது பசும்பால் தான். அதற்கடுத்து எருமைப் பால். கலோரிகளைப் பொறுத்தவரை நூறு கிராம் பசும்பாலில் 67 கலோரிகள் உள்ளது, ஆனால் எருமைப் பாலில் 117 கலோரிகள் உள்ளது. இதனால் தான் எருமைப் பால் தொடர்ந்து குடித்தால் உடல் எடை கூடுகிறது" என்கிறார் மருத்துவர் அருண் குமார். "நூறு கிராம் பசும்பாலில் கால்சியம் சத்து 120 என்ற அளவிலும், எருமைப் பாலில் 210 என்ற அளவிலும் உள்ளது. புரதங்களைப் பொறுத்தவரை பசும்பாலில் 3.2 என்ற அளவிலும், எருமைப் பாலில் 4.3 என்ற அளவிலும் உள்ளது. ஆனால் இது கேசின் புரதம், அதாவது இவ்வகை புரதங்கள் ஜீரணத்திற்கு உகந்தவை அல்ல. இதனால் தான் நமது குடலில் லாக்டேஸ் என்சைம் இல்லையென்றால் பல உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும் என முன்னர் கூறியிருந்தேன். அதே போல கொழுப்பைப் பொறுத்தவரை பசும்பாலில் 4.1, எருமைப் பாலில் 6.5. எனவே எருமைப்பாலில் தான் சத்துக்கள் அதிகமாக உள்ளன" என்கிறார் மருத்துவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இயற்கையாக பால் என்பது பெரியவர்கள் குடிக்கக்கூடிய பானமாக இருந்ததில்லை என்கிறார் மருத்துவர் அருண் குமார். யாரெல்லாம் பால் குடிக்கக்கூடாது? தொடக்கத்தில் இந்த லாக்டேஸ் என்சைம் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளிடம் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் மனிதனின் தினசரி பால் அருந்தும் பழக்கத்தால் காலப்போக்கில் மனித உடல் தன்னை மாற்றிக்கொண்டது எனவும், எனவே இயற்கையாக பால் என்பது பெரியவர்கள் குடிக்கக்கூடிய பானமாக இருந்ததில்லை என்கிறார் மருத்துவர் அருண் குமார். "பால் என்பது அஜீரணக் கோளாறுகளுடன் நேரடி தொடர்புடையது. சிலர் மிகவும் சாதாரணமாக தினமும் ஒரு லிட்டர் பால் வரை குடிப்பார்கள். ஆனால் லாக்டோஸ் அலர்ஜி இருப்பவர்களுக்கு அரை கிளாஸ் பால் குடித்தால் கூட வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். இவர்கள் பாலை தவிர்க்க வேண்டும்." என்கிறார் மருத்துவர். "மாட்டுப்பாலில் அதிகளவு சத்துக்கள் உள்ளதால் இதை குழந்தைகளுக்கு கொடுப்பதால் எடை கூடும் தான், ஆனால் அதை மட்டுமே கொடுப்பது நல்லதல்ல. சில குழந்தைகள் மாட்டுப்பாலை குடித்துவிட்டால் வேறு உணவுகளை தவிர்த்து விடுவார்கள். அது ஆபத்தானது, ஏனென்றால் மாட்டுப்பாலில் இரும்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது." "ஒரு குழந்தை 13 லிட்டர் பால் குடித்தால் தான் ஒரு நாளுக்கு தேவையான இரும்பு சத்தைப் பெற முடியும். அவ்வளவு பால் குடிப்பது சாத்தியமில்லை. அது மட்டுமில்லாது பாலில் இருக்கும் அதிகப்படியான கால்சியம் கிடைக்கும் சிறிதளவு இரும்பு சத்தையும் பாதியாக குறைத்து விடும். எனவே ரத்தசோகை ஏற்படும்" எனக் கூறுகிறார் மருத்துவர் அருண் குமார். "ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தவிர சிறந்த உணவு வேறு எதுவும் இல்லை. ஆனால் சில குழந்தைகளுக்கு நான்கு மாதத்தில் கூட மாட்டுப்பால் கொடுக்கிறார்கள். இதனால் புரதம் சார்ந்த அலர்ஜி ஏற்பட்டு, வயிற்றில் இரத்தக் கசிவு ஏற்படும் வாய்ப்பு கூட உள்ளது. நீர்சத்து குறைபாடு முதல் சிக்கல்கள் உண்டாக வாய்ப்புள்ளது. 2 வயதுக்கு மேல் தான் மாட்டுப்பாலை நன்றாக ஜீரணிக்கும் சக்தி அவர்களுக்கு வரும்" என்கிறார் மருத்துவர் அருண் குமார். படக்குறிப்பு, ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன் தினசரி எவ்வளவு பால் குடிக்கலாம்? சில ஆண்டுகளுக்கு முன்பு 'கிரிக்கெட் வீரர் தோனிக்கு மிகவும் பிடித்த பானம் பால். தினமும் நான்கு லிட்டர் பசும்பால் குடிப்பதால் தான் அவரால் எளிதாக ஹெலிகாப்டர் ஷாட்களை அடிக்க முடிகிறது' என்ற செய்தி இணையத்தில் பரவியது. இதற்கு ஒரு பேட்டியில் பதிலளித்த தோனி, தான் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் வரை மட்டுமே எடுத்துக்கொள்வதாக கூறியிருந்தார். "தோனியைப் போல அனைவராலும் 1 லிட்டர் பாலை தினசரி எடுத்துக்கொள்ள முடியாது. அவர் செய்யும் உடற்பயிற்சிக்கு அது சரியாக இருக்கலாம். சராசரி மனிதர்களுக்கு அது ஆரோக்கியமானது அல்ல, ஆனால் 400 மில்லி வரையிலான பால் அல்லது 400 கிராம் தயிர் நிச்சயமாக எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். "இப்போது பல குடும்பங்களில் வாரத்தில் இரண்டு அல்லது ஒரு நாள் மட்டும் தான் அசைவ உணவு எடுத்துக்கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு தினமும் பால் எடுத்துக்கொள்வது நல்லது தான். ஆனால் முதியவர்களுக்கு பால் தொடர்பான அஜீரணக் கோளாறுகள் இருந்தால், மோராக 400 மில்லி வரை எடுத்துக்கொள்ளலாம்." என்கிறார் அவர். பட மூலாதாரம்,SARAVANAKUMARM/FACEBOOK படக்குறிப்பு, ஹோமியோபதி மருத்துவர் சரவண குமார். பாலுடன் சர்க்கரை சேர்த்து குடிக்கலாமா? "காலையில் 200 மில்லி, இரவில் 200 மில்லி என ஒரு நாளுக்கு 400 மில்லி வரை பாலை எடுத்துக்கொள்வது பாதுகாப்பான அளவு. ஆனால் பாலில் சர்க்கரை கலந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாலில் ஏற்கனவே போதுமான அளவு கலோரிகள் உள்ளதால், தொடர்ந்து பல வருடங்களுக்கு பாலில் சர்க்கரை சேர்த்து குடிப்பது உடலுக்கு ஆபத்தாக மாறிவிடும்" என எச்சரிக்கிறார் ஹோமியோபதி மருத்துவர் சரவண குமார். "உதாரணமாக ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து இருவேளை பால் குடிக்கிறோம் என்றால், ஒரு நாளுக்கு 40 கிராம் சர்க்கரை. அதுவே ஒரு மாதத்திற்கு என கணக்கு போட்டால் பாலுடன் மட்டுமே ஒரு கிலோவுக்கு அதிகமான சர்க்கரையை நாம் உட்கொள்கிறோம். குழந்தை பருவத்திலிருந்தே இதை செய்கிறோம் என்றால் சற்று யோசித்து பாருங்கள். எனவே சர்க்கரை இல்லாமல் பால் குடிப்பது ஒரு நல்ல வழியாக இருக்கும்" "அல்சர், லாக்டோஸ் அலர்ஜி இருந்தால் கண்டிப்பாக பாலை தவிர்க்க வேண்டும். அஜீரணக் கோளாறுகள் இருந்தால் பால் அருந்தக் கூடாது. கால்சியம் சத்து பெறுவதற்கு பால் தவிர்த்து பார்த்தால், அசைவம் உண்பவராக இருந்தால் ஆட்டுக் கால் சூப், முட்டையின் வெள்ளைக் கரு, ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். நெய், வெண்ணெய், நிலக்கடலை, கீரைகள் ஆகியவையும் கால்சியம் நிறைந்த உணவுகள்" என்று கூறுகிறார் ஹோமியோபதி மருத்துவர் சரவண குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஏ1 அல்லது ஏ2 பால், எது சிறந்தது? நாட்டு ரக மாடுகளின் ஏ2 ரக பால் புரதம் நிறைந்தது என்றும் ஏ1 ரகம் சார்ந்த வெளிநாட்டு மாடுகளின் பாலை தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் உட்பட பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்ற கருத்து உண்மையா என மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம். "இது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்துள்ளன. பாலில் உள்ள சில புரத அமைப்புகளில் வேறுபாடுகள் இருக்கிறது, ஆனால் ஏ1 பால் உடலுக்கு நல்லதல்ல என்பதற்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லை. நம் நாட்டு மாடுகளில் 98% ஏ2 ரக பாலை தரக்கூடியவை தான். எருமைப் பால் என்பது 100% ஏ2 தான். வெளிநாட்டு மாட்டினமான ஜெர்சி மாடுகள் கூட ஏ2 பாலை தான் கொடுக்கின்றன. சில வெளிநாட்டு இனங்கள் மட்டுமே ஏ1 ரக பாலைக் கொடுக்கின்றன." என்கிறார் மருத்துவர் அருண்குமார். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் கேட்ட போது, "ஏ1 பாலா, ஏ2 பாலா என ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. கடைகளில் அல்லது பண்ணைகளில் கிடைக்கும் பாலை நன்கு காய்ச்சி குடித்தாலே போதும்" என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cn3mg8rkxypo
-
செங்கடலில் முக்கிய இணைய கேபிள்கள் சேதம்; ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு
Published By: DIGITAL DESK 3 06 MAR, 2024 | 02:55 PM செங்கடலில் கடலுக்கடியில் உள்ள பல தகவல் தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே இணைய சேவை 25 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் அமெரிக்க அதிகாரியொருவரும் தெரிவித்துள்ளார். ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முக்கிய வழங்குனர்களின் கடலுக்கடியில் கேபிள்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து இணையச் சேவை தடைபட்டுள்ளது. 15 கேபிள்களில் நான்கு சமீபத்தில் துண்டிக்கப்பட்டதையடுத்து, போக்குவரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட எச்.ஜி.சி குளோபல் கம்யூனிகேஷன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசியா-ஆப்பிரிக்கா- ஐரோப்பா 1, ஐரோப்பா இந்தியா கேட்வே, சீகாம் மற்றும் டிஜிஎன் வளைகுடா உள்ளிட்ட நான்கு முக்கிய தொலைத்தொடர்பு வலையமைப்புகளின் கேபிள்கள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்தமைக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. கேபிள்கள் வேண்டுமென்றே வெட்டப்பட்டதா அல்லது கப்பல்கள் நங்கூரம் இடப்பட்டதன் மூலம் துண்டிக்கப்பட்டதா என்பதை கண்டறிய விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடங்கியதை அடுத்து, செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹவுத்தி கிளா்ச்சியாளா்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக்கொள்கின்றனர். இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் ஈரான் ஆதரவு ஹவுத்தி இயக்கம் கடலில் கப்பல்களைத் தாக்குவதுடன் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்களையும் நாசப்படுத்தக்கூடும் என யேமன் எச்சரித்தது. மேற்கு யேமனின் செங்கடல் கடற்கரையின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் தாங்கள் கேபிள்களை குறிவைத்து தாக்கியதை மறுத்ததோடு, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் இராணுவத் தாக்குதல்கள் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளனர். செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கடற்படை நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன் போர்க்கப்பல்கள் செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு உதவுகின்றன. ஆபிரிக்க தொலைத்தொடர்பு கேபிள் ஆபரேட்டர் சீகாம் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம், "ஆரம்ப சோதனையானது பாதிக்கப்பட்ட பகுதி தெற்கு செங்கடலில் உள்ள யேமன் கடல் எல்லைக்குள் இருப்பதைக் குறிக்கிறது" என்று கூறினார். செங்கடலில் கடலுக்கடியில் தொலைத்தொடர்பு கேபிள்கள் துண்டிக்கப்பட்டதை பென்டகன் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/178057
-
மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று ஆரம்பம்
பெங்களூரு சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்தது நோயல் செலஞ்சர்ஸ் 05 MAR, 2024 | 03:22 PM (நெவில் அன்தனி) பெங்களூரு, எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற யூபி வொரியர்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையிலான மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியுடன் இரண்டு அணிகளும் தங்களது முதலாம் கட்டப் போட்டிகளை நிறைவுசெய்துள்ளதுடன் பெங்களூருவில் நடைபெற்றுவந்து போட்டிகளும் முடிவுக்கு வந்தன. இன்று முதல் டெல்ஹியில் எஞ்சிய மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். யூபி வொரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா, எலிஸ் பெரி ஆகிய இருவரும் குவித்த அதிரடி அரைச் சதங்கள் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக்கு அடிகோலின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 198 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப விக்கெட்டில் சபினெனி மேகனாவுடன் 50 ஓட்டங்களைப் பகிர்ந்த ஸ்ம்ரித்தி மந்தனா, 2ஆவது விக்கெட்டில் எலிஸ் பெரியுடன் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். ஸ்ம்ரித்தி மந்தனா 50 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களையும் எலிஸ் பெரி 37 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களையும் குவித்தனர். அவர்களை விட மேகனா 28 ஓட்டங்களையும் ரிச்சா கோஷ் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யூபி வொரியர்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அணித் தலைவி அலிசா ஹீலி 55 ஓட்டங்களையும் தீப்தி ஷர்மா 33 ஓட்டங்களையும் பூணம் கெம்னார் 31 ஓட்டங்களையும் பெற்றனர். சமரி அத்தபத்து உட்பட வேறு எவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் சொஃபி டிவைன், சொஃபி மொலிநொக்ஸ், ஜோர்ஜியா வெயாஹாம், ஆஷா சோபனா ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்தப் போட்டியின்போது அலிஸா ஹீலியின் துடுப்பிலிருந்து சிக்ஸாக பறந்த பந்து அனுசரணையாளர்களின் காரின் பின் கதவுக் கண்ணாடியை செதப்படுத்தியது. https://www.virakesari.lk/article/177964
-
அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் அறிக்கை கோரல்
அரசியல்வாதிகள், அரச தரத்திலான அதிகாரிகள் உள்ளிட்ட 150,000இற்கும் அதிகமானோர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை கையளிக்க வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி வரை அவற்றை கையளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய இம்முறை முதல் தடவையாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது. அதற்கமைய, புதிய அதிகாரிகள் மற்றும் தனிநபர் பிரிவினர், புதிய சட்டத்தின் கீழ் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை வழங்க வேண்டியுள்ளது. ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை வழங்குவதற்கான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிருபம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் www.ciaboc.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/294583
-
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டு
சூடோபெட்ரின்: மெத்தபெட்டமைன் தயாரிக்கப் பயன்படும் இந்தப் பொருள் தமிழ்நாட்டுக்குள் எப்படி வருகிறது? பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்ட, அதனை மறுத்திருக்கிறது தமிழக காவல்துறை. போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான கவனம் தமிழ்நாட்டின் மீது திரும்பியிருக்கும் நிலையில், கடும் நடவடிக்கைகள் எடுத்துவருவதாகக் கூறுகிறது தமிழக அரசு. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? கடந்த சில நாட்களுக்கு முன்பாக, மேற்கு தில்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சூடோபெட்ரின் (Pseudoephedrine) என்ற தடைசெய்யப்பட்ட பொருள் 50 கிலோ அளவுக்குக் கைப்பற்றப்பட்டது. மெத்தாஃபெட்டமைன் என்ற போதைப் பொருளைத் தயாரிக்க இந்த சூடோபெட்ரின் உதவும் என்பதால், இவ்வளவு பெரிய அளவில் அந்தப் பொருள் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட மூலாதாரம்,@BJP4TAMILNADU/X எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இருந்து வந்த தகவல்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து தேங்காய்த் தூள் என அனுப்பப்பட்ட பொட்டலங்களில் சூடோபெட்ரின் இருந்ததாக இந்த நாடுகள் தெரிவித்திருந்தன. இதையடுத்துத்தான் சம்பந்தப்பட்ட கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு 45 முறை இதுபோல வெளிநாடுகளுக்கு இந்த போதைப் பொருள் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் பின்னணியில் ஜாபர் சாதிக் என்பவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைத் தேடுவதற்கான பணிகள் துவங்கின. சென்னையில் இருந்த அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸும் விடுக்கப்பட்டது. அவரது 8 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. ஜாபர் சாதிக் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்து வந்த நிலையில், அவரைக் கட்சியைவிட்டு நீக்குவதாக தி.மு.க. அறிவித்தது. அவருடைய சகோதாரர் அ. முகமது சலீம் என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். அவர் வி.சிகவிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இன்னமும் ஜாபர் சாதிக்கும் முகமது சலீமும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் உடனடியாக கையில் எடுத்துக்கொண்டன. முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி. பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இதனை முன்வைத்து ஆளும் கட்சி மீது கடுமையான தாக்குதலை நடத்தினர். எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் அ.தி.மு.க. நடத்தியது. இதன் உச்சகட்டமாக மார்ச் 4ஆம் தேதியன்று சென்னைக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் இதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். "ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் சார்பில், போதைப் பொருட்கள் தங்குதடையின்றி அனைத்து இடங்களிலும் புழங்கிவருகிறது என்பது என் மனதை உருக்கும் கவலை" என்று குறிப்பிட்டார் மோதி. தமிழ்நாடு காவல்துறை கூறுவது என்ன? பிரதமரின் பேச்சுக்கு பதில் சொல்லும் வகையில், கடந்த ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் எவ்வளவு போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் பிடிபட்டன என்பது குறித்த விவரத்தை தமிழக காவல்துறை வெளியிட்டது. காவல்துறை வெளியிட்ட தகவல்களின்படி, போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 470 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மாநிலம் முழுவதும் சேர்த்து 1914 கிலோ கஞ்சா, 2 கிலோ மெத்தபெட்டமைன், வலி நிவாரணியான டெபென்டடால் 100 எம்ஜி மாத்திரைகள் 70, 321 நைட்ரேசன் மாத்திரைகள், 2200 டைடால் மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில், தமிழ்நாட்டின் இரண்டு இடங்களில் மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையினரால் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருப்பதும் நடந்திருக்கிறது. மார்ச் 1ஆம் தேதி அதிகாலை மதுரைக்கு வந்த சேர்ந்த பொதிகை ரயிலில் இருந்து இறங்கிய நபரிடமிருந்து 15 கிலோ பவுடர், 15 கிலோ திரவ வடிவிலான மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. போதைப் பொருளுடன் பிடிபட்ட நபர், சென்னையைச் சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டார். அவர் தந்த தகவல்களின் அடிப்படையில், சென்னையில் இருந்து 3 பொட்டலங்களில் ஆறு கிலோ எடையுள்ள மெத்தபெட்டமைனை கைப்பற்றப்பட்டது. இந்த போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த அவர் திட்டமிட்டிருந்ததாக வருவாய் புலனாய்வுத் துறை கூறியது. மொத்தமாக மதுரையிலும் சென்னையில் மொத்தமாக கைப்பற்றப்பட்ட 36 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைனின் சர்வதேச மதிப்பு 180 கோடி ரூபாய் இருக்கும், என்றும் வருவாய் புலனாய்வுத் துறை குறிப்பிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கைக்கு கடத்தப்பட்ட போதைப் பொருள் இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, மார்ச் ஐந்தாம் தேதி ராமேஸ்வரம் கடல் பகுதியில் இலங்கையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகை வழிமறித்த வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அந்தப் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சாக்குப் பைகளைக் கைப்பற்றியதாகவும் அந்த சாக்குப் பைகளில் இருந்து 99 கிலோ எடையுடைய 111 பாக்கெட்களை எடுத்ததாகவும் தெரிவித்தனர். அந்தப் பாக்கெட்டுகளில் இருந்த பழுப்பு நிற பிசுபிசுப்பான பொருளை ஆய்வு செய்ததில், அது தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான ஹஷீஷ் என்பது தெரியவந்ததாக வருவாய் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. படகிலிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தங்களுக்கு இந்தப் பொருளை பாம்பனில் இருந்த ஒருவர்தான் தந்து, இலங்கையைச் சேர்ந்த ஒருவரிடம் தரச் சொன்னதாக கூறியதையடுத்து, அந்த நபரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து நடந்த விசாரணைகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட இந்த போதைப் பொருள் இலங்கைக்குக் கடத்தப்படுவதற்காக இங்கே கொண்டுவரப்பட்டதாக வருவாய் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. போதைப் பொருள் பயன்பாடு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதா? தமிழ்நாட்டில் போதைப் பொருள் அதிகரித்துள்ளதா, இல்லையா என்பதைச் சொல்லும் வகையில் நடப்பு வருடத்திற்கான புள்ளிவிவரங்கள் ஏதும் இதுவரை பதிப்பிக்கப்படவில்லை. 2022ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் தான் மிக சமீபத்திய புள்ளிவிவரம். மதுவிலக்குத் துறையின் 2023-24ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்புகளின்படி பார்த்தால், 2022ஆம் ஆண்டு 10,665 வழக்குகள் இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. 28,383 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. 63,848 மாத்திரைகள் பிடிபட்டுள்ளன. 98 கிலோ இதர போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளன. 2022ஆம் ஆண்டில், கஞ்சாவைத் தவிர்த்த பிற பொருட்கள் மிகக் குறைவாகவே பிடிபட்டுள்ளன. ஓபியம் அடிப்படையிலான ஹெராயின் 21 கிலோ 360 கிராமும், கொக்கையின் 104 கிராமும் சூடோஎஃபிட்ரின் 27 கிலோவும் எல்.எஸ்.டி. 1 கிலோ 640 கிராமும் மெதாபெட்டமைன் 18 கிலோ 111 கிராமும் பிடிபட்டுள்ளன. தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறதா என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். "சூடோஎஃபிட்ரின் கடத்தப்படுவது பல காலமாக நடந்துவருகிறது. சூடோஎஃபிட்ரின் என்பது ஒரு மருந்துப் பொருள். அது இருமல் மருந்துகளில் சேர்க்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனை தனி மனிதர்கள் யாரும் தயாரிக்க முடியாது. மருந்து நிறுவனங்கள்தான் தயாரிக்க முடியும். இந்திய அளவில் எந்தெந்த மருந்து நிறுவனங்கள் இதனைத் தயாரிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்." "அங்கிருந்து கசியும் மருந்துகள்தான் இப்படி கடத்தப்படுகின்றன. இந்த சூடோஎஃபிட்ரினை வைத்துத்தான் மெத்தபெட்டமைன் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கஞ்சாதான் அதிகம் பிடிபடும் போதைப் பொருளாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அதீதமான அளவில் திடீர் அதிகரிப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை" என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர். ஆனால், கடந்த சில நாட்களில் போதைப் பொருள் தொடர்பாக வெளியாகும் செய்திகளை வைத்துப் பார்த்தால், தமிழ்நாட்டில் திடீரென போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்ததைப் போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஆளும்கட்சி உடனடியாக சேதத் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியது. அரசு கூறுவது என்ன? நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்து இதுதொடர்பாக விளக்கமளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, குஜராத்தில்தான் போதைப் பொருள் அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்டார். "தமிழ்நாட்டில் கஞ்சா விளைவிக்கப்படுவதில்லை. ஆந்திர மாநிலத்தில் விளைகிறது. அந்த மாநில டிஜிபியுடன் பேசி அதனைத் தடுக்க முயற்சித்து வருகிறோம். கடந்த ஆட்சியில் அமைச்சரே கஞ்சா வியாபாரத்திற்கு ஆதரவாக இருந்தார். இப்போது அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. " "2019இல் 11,418 கிலோ கஞ்சாவும் 2020இல் 15,144 கிலோ கஞ்சாவும் 2021இல் 20,431 கிலோ கஞ்சாவும் 2022இல் 28,383 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தவிர, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடி, செங்கல்பட்டு, பெரம்பலூர் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒரு கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள்" என்று குறிப்பிட்ட அமைச்சர் ரகுபதி, அவர்கள் பா.ஜ.கவில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை வாசித்தார். மேலும், குஜராத்தில்தான் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கிடையில் சில குறிப்பிட்ட ரக மருந்துகளை வாங்கி போதைப் பொருளாக பயன்படுத்துவதைத் தடுக்க சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, X, H, H1 ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் மருந்துகளை விற்கக்கூடிய மருந்துக் கடைகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு சிசிடிவிகளை பொருத்த வேண்டுமெனக் கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/ckmv0mz33v7o
-
மின் கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு - முழுமையான விபரம் இதோ!
மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணம் குறைப்பு! மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணத்தை 3000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க நேற்று (05) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், மின் இணைப்பு மீளமைக்கப்படும் போது வாடிக்கையாளர்கள் செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் குறைக்கப்பட்டதால், தற்போது 30 யூனிட் பயன்படுத்தும் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய தொகை 540 ரூபாயிலிருந்து 390 ரூபாயாக குறைந்துள்ளது. 60 யூனிட்களை பயன்படுத்தும் ஒருவர் செலுத்த வேண்டிய தொகை ஒருவர் 1,620 ரூபாயிலிருந்து 1,140 ரூபாயாக குறைந்துள்ளது. 90 யூனிட்களை பயன்படுத்தும் ஒருவர் செலுத்த வேண்டிய தொகை, 3,990 ரூபாயிலிருந்து 2,800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 120 யூனிட் பயன்படுத்தியவருக்கு கட்டணம் 6,460 ரூபாயில் இருந்து, 4,900 ரூபாயாக குறையும் என தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/294549
-
ஹெய்ட்டியில் சிறை மீது ஆயுதகும்பல் தாக்குதல் - 3000க்கும் அதிகமானகைதிகள் தப்பியோட்டம்
ஹைதி: ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி, நாட்டை கலங்கடிக்கும் கேங்ஸ்டராக மாறிய கதை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜிம்மி 'பார்பெக்யூ' செரிசியர் 6 மார்ச் 2024, 04:51 GMT புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் ஹைதி நாட்டில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் நாட்டையே கலங்க வைக்கும் தாதாவாக மாறி அச்சுறுத்தி வருகிறார். அவரது பெயர் ஜிம்மி செரிசியர். ஹைதியில் தொடரும் வன்முறையின் காரணமாக அந்நாட்டு அரசாங்கம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. நாட்டின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்தும் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள், ஹைதி பிரதம மந்திரி ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்தத் தலைவர்களில் ஒருவர்தான் ஜிம்மி செரிசியர். இவர் 'பார்பெக்யூ' என்றும் அழைக்கப்படுகிறார். ஹைதியின் வன்முறை நிகழ்வுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஜி-9 அண்ட் ஃபேமிலி (G-9 and Family) என்ற மிகவும் சக்திவாய்ந்த ஆயுதக் குழுவின் தலைவர் இவர். சனிக்கிழமையன்று நாட்டின் பிரதான சிறைக்குள் நுழைந்த ஆயுதக் குழுக்கள், 3,700க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்த பின்னர் இந்த வன்முறை புதிய நிலைகளை எட்டியது. அந்தத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பிரதான சிறைச்சாலை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஹைதி நாட்டில் 2020ஆம் ஆண்டு முதல் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலைக்கு மற்றொரு சாட்சியாகும். நாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஆயுதக் குழுக்கள் முன்னெடுத்த போர், நாட்டில் வன்முறை பரவ அடிப்படையாக செயல்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஹைதியில் இப்போது பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸின் 80% நிலப்பரப்பை ஆயுதக் குழுக்கள் கட்டுப்படுத்துகின்றன. தலைநகரை ஆளும் ஆயுதக்குழுக்கள் ஜூலை 7, 2021 அன்று அதிபர் ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டது மிகவும் தீவிரமான தருணங்களில் ஒன்றாகும். இது அரசு நிர்வாகத்தில் ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது, அது இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளது. தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸின் 80% நிலப்பரப்பை இந்த ஆயுதக் குழுக்கள் கட்டுப்படுத்துகின்றன. வெவ்வேறு செய்தி அறிக்கைகளின்படி, சிறைச்சாலை மீதான இவர்களின் சமீபத்திய தாக்குதலின் நோக்கம், அதிபர் மொய்ஸின் மரணத்திற்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்த பிரதமர் ஹென்றி பதவி விலக வேண்டும் என்பதாகும். தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஹென்றி வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இன்றுவரை நடத்தப்படாததால் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. "ஹைதி தேசிய காவல்துறை மற்றும் ராணுவம் தங்கள் பொறுப்பை ஏற்று பிரதமர் ஏரியல் ஹென்றியை கைது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மீண்டும் சொல்கிறோம், மக்கள் எங்கள் எதிரி அல்ல. ஆயுதக் குழுக்களின் நோக்கம் மக்களுக்கு எதிராக செயல்படுவது அல்ல" என்று சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு செய்தியில் செரிசியர் கூறினார். ஆயுதக் குழு தலைவரான செரிசியர் கடந்த காலத்தில் ஹென்றியின் அரசாங்கத்திடம் பொது மன்னிப்பு கோரியிருந்தார். தனது குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். முன்னாள் போலீஸ் அதிகாரியான செரிசியர், சமீபத்திய ஆண்டுகளில் ஹைதியை உலுக்கி வரும் ஒரு முன்னணி ஆயுதக் குழுவின் தலைவராக மாறியுள்ளார். நாட்டின் வன்முறை அலைக்கு பின்னால் ஒரு முக்கிய புள்ளியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் கூற்றுப்படி, ஹைதியில் நடக்கும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு இவரே பொறுப்பு. இந்த காரணத்திற்காக, அமெரிக்காவும் ஐ.நாவும் இவர் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளன. அதிபர் மொய்ஸின் மரணத்திற்குப் பிறகு, நாட்டின் 'ஊழல்' அரசியல்வாதிகளுக்கு எதிரான புரட்சியை ஊக்குவிப்பதில் செரிசியர் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளார். அவரது விருப்பமான வழிகளில் ஒன்று சமூக வலைதளங்கள். தனது குழுவின் செய்தியை உலகுக்கு அறிவிக்க மட்டுமல்லாமல், அவரது ஆயுத குழுவுக்கு புதிய உறுப்பினர்களை ஈர்க்கவும் அது உதவுகின்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES காவல்துறை அதிகாரி முதல் கேங்ஸ்டர் வரை 'பார்பெக்யூ' என்ற அவரது புனைப்பெயருக்கான காரணம் என்ன என்பதே முதல் கேள்வியாக இருக்கும். அவரது அம்மா தெருவில் கோழி விற்றதே இதற்கு காரணம் என்று அவர் பேட்டிகளில் கூறியுள்ளார். ஆனால் ஹைதி வன்முறைகளை நேரில் கண்ட சில சாட்சிகளின் கூற்றுப்படி, அவர் பொதுவாக பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் உடல்களை எரிப்பதால் தான் இந்த புனைப்பெயர் வந்துள்ளது. ஒரு போலீஸ் அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய செரிசியர் இன்று ஜி-9 அண்ட் ஃபேமிலி என்ற குழுவின் தலைவராக உள்ளார். உலகின் அதிக வன்முறைகள் நிகழும் நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஹைதியின் மிகவும் ஆபத்தான ஆயுதக் குழுக்களின் கூட்டணி தான் இந்த ஜி-9 அண்ட் ஃபேமிலி. 2021ஆம் ஆண்டில் 17 அமெரிக்க மற்றும் கனேடிய மிஷனரிகளைக் கொண்ட குழுவைக் கடத்தியது உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் இந்த குழு ஈடுபட்டுள்ளது. 400 மாவோஸோ போன்ற சக்திவாய்ந்த குற்றவியல் அமைப்புகளுடன் இணைந்து செரிசியர் இதைத் தொடர்ந்து செய்து வருகிறார். ஏறக்குறைய 47 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதியின் தலைநகரில் பிறந்தார் செரிசியர். அவருக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடைகளோ அல்லது அவரது நாட்டில் உள்ள எந்த அதிகார அமைப்போ அவரது நடவடிக்கைகளை இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. செரிசியரின் குற்றவியல் வாழ்க்கை, அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தபோது தொடங்கியது. நவம்பர் 2017இல், போர்ட்-ஓ-பிரின்ஸ் நகருக்கு அருகில் இருந்த கிராண்ட் ரவைன் பகுதியில் மாஃபியாக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நடவடிக்கையில் பொதுமக்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இதில் செரிசியரின் பங்கு இருந்ததாக கூறப்பட்டது. அந்த தருணத்திலிருந்து, நாட்டில் செயல்படும் ஆயுதக் குழுக்களுடனான அவரது உறவும் தொடங்கியது. தொடக்கத்தில் டெல்மாஸ் 6 என்ற குழுவின் முக்கிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரானார். உள்ளூர் மற்றும் சர்வதேச அறிக்கைகளின்படி, செரிசியர் அந்த கும்பலிடமிருந்து அதிகாரத்தைப் பெற முடிந்தது. காவல்துறை செல்வாக்கு மற்றும் மொய்ஸின் அரசாங்கத்தின் உதவிகளும் அதற்கு காரணம். ஒரு போலீஸ் அதிகாரியாக அவர் சில அட்டூழியங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது, அதற்காக அவர் மீது சர்வதேச அமைப்புகள் சில தடைகளை விதித்தன. போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே நடந்த லா சலின் படுகொலையில் ஈடுபட்ட அதிகாரிகளில் இவரும் ஒருவர் என்று ஐ.நாவும் அமெரிக்காவும் சுட்டிக்காட்டியுள்ளன. அரசுக்கு எதிராக லா சலின் மக்கள் நடத்திய போராட்டத்தில், போலீஸ் மற்றும் குற்றவியல் குழுக்களின் ஒருங்கிணைந்த தாக்குதலால் பலர் கொல்லப்பட்டனர். உள்ளூர் மக்களின் போராட்டத்தை அடக்கவே இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டது என அமெரிக்கா கூறியது. அப்போது குறைந்தது 71 பேர் இறந்தனர். ஆனால் செரிசியர் எப்போதும் போல அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். பட மூலாதாரம்,REUTERS 'ஜி-9 அண்ட் ஃபேமிலி' உருவானது எப்படி? "நான் ஒரு கேங்க்ஸ்டர் அல்ல, நான் ஒருபோதும் அப்படி நடந்து கொள்ள மாட்டேன்," என்று அவர் செய்தி நிறுவனமான அல்-ஜசீராவிடம் 2021இல் ஒரு நேர்காணலில் கூறினார். "இது நான் எதிர்த்துப் போராடும் அரசு அமைப்பு செய்யும் வேலை. அந்த அமைப்பு பணத்தின் மூலம் ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறது. நான் ஒரு கேங்க்ஸ்டர் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்” என்று அவர் கூறியிருந்தார். 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில், போர்ட்-ஓ-பிரின்ஸின் சில இடங்களில் நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களில் செரிசியருக்கு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. "காவல்துறையை விட குற்றக் கும்பல்களிடம் சிறப்பான ஆயுதங்கள் உள்ளன. அதிகாரிகளின் ஆதரவும் அவர்களுக்கு உள்ளது" என்று ஹைதியின் 'மனித உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய கூட்டமைப்பின்' இயக்குநர் பிபிசியிடம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆயுத பலம் மற்றும் அதிகார பலத்துடன், போர்ட்-ஓ-பிரின்ஸின் பிராந்தியக் கட்டுப்பாட்டிற்கான போரைத் தொடங்கினார் செரிசியர். அங்கு தொடர்ச்சியான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. அது தலைநகரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பயங்கரவாதத்தை பரப்பியது. ஹைதியில் மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பின் தகவல்படி, செரிசியர் மற்றும் அவரது ஆயுதக் குழுக்கள் மக்களைக் கொல்வதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, அவர்களின் குடியிருப்புகளை தீயிட்டு எரிப்பதிலும் கவனம் செலுத்தியது. ஜூன் 2020 வரை நிலவிய அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, ஒன்பது ஆயுதக் குழுக்களை ஒன்றிணைத்தார் செரிசியர். அதற்கு ஜி-9 அண்ட் ஃபேமிலி என்று பெயரிட்டார். இந்த அறிவிப்பை தனது யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டார். ஆனால் 2021இல் அதிபரின் படுகொலை அவரது அமைப்புக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. சர்வதேச ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அதுவரை அவருக்கு கிடைத்த அரசாங்க பாதுகாப்பை இழக்க வழிவகுத்தது. இன்சைட் கிரைம் போர்ட்டல் தளத்தின் தகவலின் படி, மொய்ஸின் கொலைக்கு முன், ஜி-9 இன் நிதியில் 50% அரசாங்கப் பணத்திலிருந்து வந்தது, 30% கடத்தல்களிலிருந்து வந்தது, மீதமுள்ள 20% மிரட்டி பணம் பறித்தல் மூலம் திரட்டப்பட்டது. அதிபர் படுகொலைக்குப் பிறகு, அரசாங்க நிதியுதவி 30% குறைந்தது. இந்த வீழ்ச்சி தான் நாட்டின் அரசியல் கட்டுப்பாட்டை மரபுரிமையாகக் கொண்ட மக்களுக்கு எதிரான தனது போரைத் துவங்க செரிசியரைத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இந்த வார இறுதியில் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பிரதான சிறைச்சாலைக்குள் ஆயுதக் குழுக்கள் படையெடுத்ததை அடுத்து ஹைதியில் நிலைமை மோசமாக உள்ளது. ஹைதி பிரதமர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மொய்ஸின் படுகொலைக்குப் பிறகு பிரதமராகப் பதவி ஏற்றார் ஹென்றி. 2021 அக்டோபரில், அவர் ஒரு நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த சென்ற போது பலவந்தமாக தடுத்து நிறுத்தப்பட்டார். ஏனெனில் செரிசியரின் ஆயுதக்குழு உறுப்பினர்கள் அப்போது திடீரென்று தோன்றி பிரதமரை நோக்கி சுட்டனர். வெள்ளை நிற உடையை அணிந்துகொண்டு, சுற்றி ஆயுதமேந்திய நபர்கள் நிற்க, தலைவர் செரிசியர் அதே நினைவுச்சின்னத்தில் மலர் மாலையை வைத்து அஞ்சலி செலுத்தினார். இது நாட்டில் அவருக்கு இருந்த அசாதாரணமான சக்தியை வெளிப்படுத்தியது. நாட்டின் எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக நாசவேலை நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக செரிசியர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஹென்றியின் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையாக செரிசியரின் ஆட்கள் பெட்ரோல் ஏற்றிச் செல்லும் பல வாகனங்களை தடுத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு ஹைதியில் நிலைமையை மேலும் மோசமாக்கியது. அவரது ஜி-9 குழு, எதிரி குழுவான ஜி-பெப் உடன் தொடர்ந்து போரிட்டு வருகிறது. படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அதிபர் மொய்ஸை சில கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வந்தன. அந்த கட்சிகளுடன் ஜி-பெப் குழுவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இரு குழுக்களிடையே நடக்கும் துப்பாக்கிச் சூடு மற்றும் போர்கள் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டன. தொலைதூர கிராமங்களில் இருந்து தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் வரை இந்த சண்டைகள் பரவியுள்ளன. இத்தகைய சண்டைகள் அவர்களின் வட்டத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாது, புதிய உறுப்பினர்களை ஈர்க்கவும் உதவுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆயுதக் குழு தலைவராக மாறுவதற்கு முன்பு ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தார் செரிசியர். யூடியூப் மூலம் உத்தரவுகள் போர்ட்-ஓ-பிரின்ஸின் தெருக்களில் இருப்பது போலவே சமூக வலைத்தளங்களிலும் மிகுந்த செல்வாக்கை பெற்றுள்ளார் செரிசியர். "ஹைதியில் சமூக வலைத்தளங்களின் உதவி இல்லாமல் கொள்ளைக்காரர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்க முடியாது. இந்த நாட்டில் எப்போதும் குற்றவாளிகள் இருந்திருக்கிறார்கள், ஆனால் இந்த தளங்கள் இல்லாமல் அவர்கள் பிரபலமாக மாறியிருக்க முடியாது" என்று அயிதி டேமேன் என்ஜிஓ அமைப்பின் இயக்குனர் யுவன்ஸ் ரம்போல்ட் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் கூறினார். செரிசியர் தனது திட்டத்தை செயல்படுத்த சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினார். அவர் தனது யூடியூப் வீடியோக்களை ஜி-9 குழுவின் உருவாக்கத்தை பற்றித் தெரிவிக்க மட்டும் பயன்படுத்தவில்லை, ஹைதியின் தற்போதைய பிரதம மந்திரியை கைது செய்யும்படி காவல்துறைக்கு வீடியோ மூலம் கோரிக்கை வைத்தார். யூடியூப் மட்டுமல்லாது எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்) நாட்டைக் கைப்பற்றவும் தற்போதைய ஆளும் வர்க்கத்தை அகற்றவும் வலுவான அழைப்புகளை விடுத்துள்ளார். தனது யூடியூப் சேனலில் ஒரு நேர்காணலில் சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவம் பற்றி பேசினார் செரிசியர். "இந்த தொழில்நுட்பங்களை உருவாக்கியவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். நேரடியாக பொதுமக்களை அணுகி நாம் யார் என்பதை கூற தொழில்நுட்பம் வாய்ப்பளிக்கிறது. நான் பொய்களை கூறவில்லை," என்று அந்த நேர்காணலில் பேசியிருந்தார். மேலும், "நான் யார் என்று நான் தான் சொல்ல வேண்டும். அவர்கள் என்னைப் பற்றி சொன்னதில் 99 சதவிகிதம் பொய்கள் தான். என்னை தற்காத்துக் கொள்ள தொழில்நுட்பங்கள் எனக்கு நல்ல வாய்ப்பை அளித்துள்ளன" என்று கூறியிருந்தார் செரிசியர். https://www.bbc.com/tamil/articles/cn0wx0xq3q4o
-
45 போலி நோட்டுகளுடன் ஒருவர் கைது; பொத்துஹரவில் சம்பவம்!
06 MAR, 2024 | 10:28 AM பொத்துஹர பிரதேசத்தில் 5000 ரூபா பெறுமதியான 45 போலி நோட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை சோதனையிட்டபோதே அவரிடமிருந்து இந்த போலி நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொல்பிதிகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார். இவர் ஏற்கனமே பணம் அச்சடிக்கும் இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. https://www.virakesari.lk/article/178035
-
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தேர்தல் பத்திரம்: அவகாசம் கேட்ட எஸ்.பி.ஐ - தேர்தலுக்கு முன் ஊழலை மறைக்கும் முயற்சி என குற்றச்சாட்டு பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்குமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திங்கட்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. இந்தச் செயல்முறை 'மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும்' பணி என்று கூறிய எஸ்பிஐ கால அவகாசத்தை நாடியது. ஆனால் ஜூன் 30ஆம் தேதிக்குள் நாட்டில் மக்களவை தேர்தல் முடிந்துவிடும். தேர்தல் பத்திரம் அரசமைப்பிற்கு விரோதமானது என்று கூறி உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பிரிவு கடந்த மாதம் அதை ரத்து செய்தது. ஏப்ரல் 12, 2019 முதல் அன்று வரையில் விற்கப்பட்ட பத்திரங்களின் விவரத்தை 2024 மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்குமாறு தேர்தல் பத்திரங்களை விற்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் பத்திரங்களைப் பெயர் குறிப்பிடாமல் வைத்திருப்பது தகவல் அறியும் உரிமை மற்றும் பிரிவு 19 (1) (ஏ) ஆகியவற்றை மீறுவதாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் வேறு சில ஏற்பாடுகளைச் செய்யும் முறையை ஊக்குவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அப்போது கூறியிருந்தார். பத்திரங்கள் பற்றிய தகவலைத் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் மார்ச் 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறை. இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. இதை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். தாங்கள் விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தனது பெயரைக் குறிப்பிடாமல் நன்கொடை அளிக்கலாம். மோதி அரசு 2017இல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டம் 2018 ஜனவரி 29ஆம் தேதி அரசால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES எஸ்பிஐ என்ன சொன்னது? ’ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ இது தொடர்பாக திங்கள்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிக்க விரும்புவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் தரவுகளை டிகோடிங் செய்வது மற்றும் அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அதைப் பூர்த்தி செய்வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்கக் கடுமையான வழிகள் பின்பற்றப்பட்டுள்ளன. இப்போது நன்கொடையாளர்கள் பற்றிய தகவல்களையும் அவர்கள் எவ்வளவு தொகைக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள் என்ற தகவலையும் பொருத்திப் பார்ப்பது ஒரு சிக்கலான செயல்முறை என்று அது குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை 2018 ஜனவரி 2ஆம் தேதி வெளியிடப்பட்டது என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிக்கை 2018ஆம் ஆண்டு மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டம் தொடர்பானது. அங்கீகரிக்கப்பட்ட வங்கி, எல்லா சூழ்நிலைகளிலும் தேர்தல் பத்திரம் வாங்குபவரின் தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று அதன் விதி 7 (4)இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றம் இந்தத் தகவலைக் கேட்டாலோ அல்லது குற்றவியல் வழக்கில் புலனாய்வு அமைப்புகள் இந்தத் தகவலைக் கேட்டாலோ மட்டுமே வாங்குபவரின் அடையாளத்தைப் பகிர முடியும். “தேர்தல் பத்திரம் வாங்குபவர்களின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்கும் வகையில் பத்திரங்களின் விற்பனை மற்றும் அதைப் பணமாக்குவது தொடர்பான விரிவான நடைமுறையை வங்கி தயாரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் இவை பின்பற்றப்படுகின்றன," என்று வங்கி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES "எங்கள் எஸ்ஓபியின் பிரிவு 7.1.2இல் தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் கேஒய்சி தகவல்களை சிபிஎஸ் (கோர் பேங்கிங் சிஸ்டம்) இல் உள்ளிடக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் கிளையில் விற்கப்படும் தேர்தல் பத்திரங்களின் மைய தரவு ஒரே இடத்தில் இல்லை. அதாவது வாங்கியவரின் பெயர், பத்திரத்தை வாங்கிய தேதி, வழங்கப்பட்ட கிளை, பத்திரத்தின் விலை மற்றும் பத்திரத்தின் எண் போன்ற விவரங்கள். இந்தத் தரவு எந்த மைய அமைப்பிலும் இல்லை,” என்று வங்கி தெரிவித்தது. "பத்திரம் வாங்குபவர்களின் அடையாளம் ரகசியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக, பத்திர வழங்கல் தரவு மற்றும் பத்திரத்தைப் பணமாக்கிய தரவு ஆகிய இரண்டும் தனித்தனி இடங்களில் பராமரிக்கப்படுகின்றன மற்றும் எந்த மைய தரவுத்தளமும் பராமரிக்கப்படவில்லை." ”தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட கிளைகளில் அதை வாங்கியவர்களின் தகவல்கள் சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்படும். பின்னர் இந்த சீல் செய்யப்பட்ட கவர்கள் மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் பிரதான கிளைக்குக் கொடுக்கப்படும்.” மைய தரவு இல்லை பட மூலாதாரம்,GETTY IMAGES “ஒவ்வொரு அரசியல் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் ஏதேனும் ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்தக் கணக்கில் மட்டுமே அந்தக் கட்சி பெற்ற தேர்தல் பத்திரங்களை டெபாசிட் செய்து பணமாக்க முடியும். பணமாக்கலின்போது, அசல் பத்திரம், பே-இன் ஸ்லிப் ஆகியவை சீல் செய்யப்பட்ட கவரில் மும்பையில் உள்ள எஸ்பிஐ கிளைக்கு அனுப்பப்படும்," என்று வங்கி குறிப்பிட்டது. "அத்தகைய சூழ்நிலையில், இரண்டு தகவல் தொகுப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாகச் சேமிக்கப்பட்டன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது அவற்றைப் பொருத்துவது, அதிக நேரம் தேவைப்படும் பணியாக இருக்கும். பத்திரங்களை யார் வாங்கினார்கள் என்பது பற்றிய தகவலை வழங்க ஒவ்வொரு பத்திரத்தின் வெளியீட்டு தேதியுடன் நன்கொடையாளர் வாங்கிய தேதியைப் பொருத்த வேண்டும்”. ''இது ஓரிடத்தின் தகவலாக இருக்கும். அதாவது பத்திரம் வழங்கப்பட்டதா, யார் வாங்கினார்கள் என்ற தகவல் இருக்கும். இரண்டாவது தகவல் தொகுப்பு பின்னர் வரும். அதாவது இந்தப் பத்திரங்களை அரசியல் கட்சி அதன் அங்கீகரிக்கப்பட்ட கணக்கில் பணமாக்கியிருப்பது தொடர்பான தகவல்கள். பின்னர் வாங்கப்பட்ட பத்திரங்கள் பற்றிய தகவலை பணமாக்கப்பட்ட பத்திரங்கள் பற்றிய தகவலுடன் நாங்கள் பொருத்த வேண்டும்." கால அவகாசத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாக வாதிட்ட எஸ்பிஐ, “எல்லா இடங்களில் இருந்தும் தகவல்களைப் பெறுவது மற்றும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் உள்ள தகவல்களைப் பொருத்துவது என்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாக இருக்கும். தகவல்கள் வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளன," என்று கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2019ஆம் ஆண்டில், தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள். "பத்திர எண் போன்ற சில தகவல்கள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வாங்குபவரின் பெயர், கேஒய்சி போன்ற பிற விவரங்கள் ஆவண வடிவில் சேமிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் பத்திரங்களை வாங்குபவர்களின் அடையாளம் எந்த வகையிலும் வெளிப்படுத்தப்படக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்.” அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. “ஒவ்வொரு கட்டத்தின் முடிவிலும், பணமாக்கப்பட்ட பத்திரங்கள் சீல் செய்யப்பட்ட உறைகளில் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கிளைகளால் மும்பை பிரதான கிளையிடம் ஒப்படைக்கப்படும். இரண்டு வெவ்வேறு தரவுத் தொகுப்புகள் இருப்பதால் நாங்கள் 44,434 செட் தகவல்களை டிகோட் செய்ய வேண்டும், பொருத்திப் பார்த்து அவற்றை ஒப்பிட வேண்டும்," என்று வங்கி கூறியது. "எனவே பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பில் நிர்ணயம் செய்யப்பட்ட மூன்று வார கால அவகாசம், முழு செயல்முறையையும் முடிக்கப் போதுமானதாக இருக்காது. மேலும் உத்தரவைக் கடைப்பிடிக்க எங்களுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம்," என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் வரை கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவை சிலர் விமர்சித்து வருகின்றனர். நாட்டில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செய்யப்படுகிறது என்பது அவர்களது வாதம். 'தேர்தலுக்கு முன் ஊழலை மறைக்க முயற்சி' பட மூலாதாரம்,GETTY IMAGES "பத்திரங்கள் வாங்கப்பட்டது மற்றும் அதைப் பணமாக்கியது ஆகிய இரண்டு தகவ்ல்களுமே சீல் செய்யப்பட்ட உறைகளில் மும்பை கிளையில் உள்ளன. இந்த விவரம் வங்கி சமர்ப்பித்துள்ள வாக்குமூலத்தில் உள்ளது. எனவே வங்கி உடனே இந்தத் தகவல்களை ஏன் வெளியிட முடியாது?" என்று ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ், ’எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "22,217 பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்களை, பணமாக்கல் விவரங்களுடன் பொருத்த நான்கு மாத கால அவகாசம் தேவை என்று வங்கி கூறுவது முட்டாள்தனமானது,” என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். நன்கொடையாளர்களின் தகவல்களைத் தெரிவிக்க எஸ்பிஐ, தேர்தலுக்குப் பிறகு வரை கால அவகாசம் கேட்பது, ’தேர்தலுக்கு முன்பு வரை மோதியின் உண்மையான முகத்தை மறைக்கும் கடைசி முயற்சி’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பட மூலாதாரம்,SCREENGRAB “நன்கொடை வியாபாரத்தை மறைக்க நரேந்திர மோதி தனது முழு பலத்தையும் பயன்படுத்தியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் குறித்த உண்மையைத் தெரிந்து கொள்வது நாட்டு மக்களின் உரிமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் இந்தத் தகவலை தேர்தலுக்கு முன் பகிரங்கப்படுத்தக் கூடாது என்று எஸ்பிஐ ஏன் விரும்புகிறது?” என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே கிளிக்கில் பெறக்கூடிய தகவல்களுக்காக ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கேட்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு சுதந்திர அமைப்பும் 'மோதானி குடும்பமாக' மாறி அவரது ஊழலை மறைக்க முயல்கின்றன. தேர்தலுக்கு முன் மோதியின் ’உண்மையான முகத்தை’ மறைக்க இது ‘கடைசி முயற்சி’ என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார். எஸ்பிஐயின் மனு குறித்து அதிருப்தி தெரிவித்த சிபிஐஎம் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி "இது நீதியைக் கேலி செய்வதாகும். மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வையும் மோதியையும் காப்பாற்றவே எஸ்.பி.ஐ கூடுதல் காலஅவகாசம் கேட்கிறதா?” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேர்தல் பத்திரங்கள் குறித்துப் பல செய்தியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் எஸ்பிஐயின் இந்தத் தேர்தல் பத்திரங்களில் ஒரு ரகசிய எண் இருப்பதாகவும், அதன் மூலம் அவற்றை அடையாளம் காண முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த அறிக்கையின் இணைப்பைப் பகிர்ந்த சீதாராம் யெச்சூரி, “இப்படி இருக்கும் பட்சத்தில் எஸ்பிஐ ஏன் கூடுதல் அவகாசம் கோருகிறது. இது ஆளும் பாஜகவை பாதுகாப்பதற்கான தெளிவான முயற்சியாகத் தெரிகிறது," என்று எழுதியுள்ளார். “எதிர்பார்த்தபடியே மோதி அரசு எஸ்பிஐ மூலம் மனு தாக்கல் செய்து தேர்தல் பத்திரம் வாங்குவோர் குறித்த தகவல்களை வெளியிட தேர்தல் முடியும் வரை அவகாசம் கோரியுள்ளது. இந்தத் தகவல் இப்போது வெளிவந்தால் லஞ்சம் கொடுத்த பலர் பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளின் விவரங்களும் அம்பலமாகும்” என்றார் உச்ச நீதிமன்றத்தின் பிரபல மற்றும் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண். ஓய்வு பெற்ற கமடோர் லோகேஷ் பத்ரா ஒரு நன்கு அறியப்பட்ட ஆர்டிஐ ஆர்வலர். அவர் தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத்தன்மைக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். “கடந்த 2017-2018ஆம் ஆண்டில், பத்திரங்களின் விற்பனை மற்றும் பணமாக்கல் நடவடிக்கையை நிர்வகிக்கத் தனிப்பயனாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை எஸ்பிஐ நிறுவியது. 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை மொத்தம் 22217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன. விற்கப்பட்ட 22,217 பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்குவது எஸ்பிஐக்கு கடினமாக இருக்கக்கூடாது,” என்று வங்கியின் மனு குறித்து அவர் தனது ’எகஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/crg9zy7dwwno
-
கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத கடற்தொழில் முறை நிறுத்தப்பட்டது போல் வடக்கிலும் நிறுத்தப்பட வேண்டும் - முன்னாள் தலைவர் அன்னராச
Published By: VISHNU 06 MAR, 2024 | 02:44 AM கிழக்கு மாகாண ஆளுநர் எவ்வாறு சட்டவிரோத தொழில் முறையை கிழக்கு மாகாணத்தில் நிறுத்தினாரோ அவ்வாறு வடக்கு மாகாண ஆளுநரும் வடக்கு கடற்பரப்பில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத தொழில் முறைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழிலாளர் சமாசத்தின் முன்னாள் தலைவர் அன்னராச வேண்டுகோள் விடுத்தார் இந்திய மீனவர்களின் அத்துமீறல் களை நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தினால் முன்னேடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழில் முறைகளுக்கு எதிராக மீனவர்கள் போராடிய போது அவர்களை அழைத்து சட்டவிரோத தொழில் முறைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்த்துடன் உடனடியாகவே சட்டவிரோத தொழில் முறைகளை நிறுத்தியுள்ளார் .அதேபோல் தான் வடக்கு மாகாண ஆளுநரும் வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத தொழில் முறைகள்,முறையற்ற தொழில் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களை அழைத்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/178023
-
ஒரே சீனா கொள்கையை ஆதரிக்கிறோம் - ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது அமர்வில் இலங்கை அறிவிப்பு
Published By: VISHNU 06 MAR, 2024 | 02:27 AM (நா.தனுஜா) 'ஒரே சீனா கொள்கைக்கு' தாம் ஆதரவளிப்பதாகவும், மனித உரிமைகள்சார் விவகாரங்களைக் கையாள்வதில் சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பைப் பெரிதும் வரவேற்பதாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது அமர்வில் அறிவித்திருக்கும் இலங்கை, இறையாண்மையுடைய எந்தவொரு தேசத்தினதும் உள்ளக விவகாரங்களில் பிற தரப்பினரால் ஏற்படுத்தப்படும் தலையீடுகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ முடியாது எனத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை (1) வாசிக்கப்பட்டதுடன், அத்தோடு உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு அன்றைய தினமே ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவினால் பதில் வழங்கப்பட்டது. இந்நிலையில் திங்கட்கிழமை (4) இலங்கை நேரப்படி பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரின் 12 ஆவது அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதனையடுத்து உயர்ஸ்தானிகரின் அறிக்கைகள் தொடர்பில் உறுப்புநாடுகளின் பங்கேற்புடனான விவாதம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற 55 ஆவது கூட்டத்தொடரின் 13 ஆவது அமர்வில் உறுப்புநாடுகளின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் விதமாக உரையாற்றிய ஹிமாலி அருணதிலக மேலும் கூறியதாவது: உலகளாவிய ரீதியில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளின் இயலுமை மற்றும் செல்வாக்கு என்பவற்றுக்கு அப்பாற்பட்டு நியாயமான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். குறிப்பாக தற்போது காஸாவில் சர்வதேச சட்டங்களும், மனித உரிமைகளும் மிகப்பாரதூரமாக மீறப்பட்டுவருகின்றன. எனவே காஸாவில் உடனடியாகப் போர்நிறுத்தம் அவசியம் என்பதுடன், மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்போருக்கான உதவிகள் அவர்களை உரியமுறையில் சென்றடையவேண்டும். மாறாக இத்தகைய மிகமோசமான மீறலைக் கருத்திலெடுக்கத்தவறுவது சர்வதேச மனித உரிமைகள் சார்ந்து இயங்கும் கட்டமைப்பின் நேர்மைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும். அதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது அரசியல்மயப்படுத்தப்படல் மற்றும் துருவமயப்படுத்தப்படல் போன்ற காரணிகளால் அதன் உண்மையான இலக்குகளை அடைந்துகொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்படும். எனவே பேரவையின் ஸ்தாபகக்கொள்கைகளுக்கு அமைவாக, தேசிய ரீதியிலான சவால்கள் மற்றும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறானதொரு பின்னணியில் உலகின் தென்பகுதியில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம்செலுத்திவிட்டு, ஏனைய பகுதிகளில் இடம்பெறும் மீறல்கள் தொடர்பில் பாராமுகமாக இருப்பது ஏற்புடையதல்ல. இலங்கை விவகாரத்தைப் பொறுத்தமட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொருத்தமற்ற நடவடிக்கைகள் எவ்வகையிலும் பயன்தராது. எனவே இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முற்றாக நிராகரிக்கும் அதேவேளை, எமது நாட்டுக்கு நன்மையளிக்கக்கூடியதும், ஏற்புடையதுமான பேரவையின் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருக்கின்றோம். மேலும் நாம் 'ஒரே சீனா கொள்கைக்கு' ஆதரவளிப்பதுடன், மனித உரிமைகள்சார் விவகாரங்களைக் கையாள்வதில் சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பைப் பெரிதும் வரவேற்கின்றோம். அத்தோடு இறையாண்மையுடைய எந்தவொரு நாட்டினதும் உள்ளக விவகாரங்களில் பிற தரப்பினரால் ஏற்படுத்தப்படும் தலையீடுகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ முடியாது என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178021
-
சுழிபுரம்: புத்தர் சிலையை அகற்றா விட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் - சுகாஷ் எச்சரிக்கை!
Published By: DIGITAL DESK 3 06 MAR, 2024 | 09:10 AM சுழிபுரத்திலே புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதாக எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம். அந்த தகவல் உண்மையானது. சவுக்கடி பிள்ளையார் கோவிலுக்கு பின்பாகவும் இராணுவ முகாமிற்கு முன்பாகவும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கோயிலை ஆக்கிரமிக்கின்ற வகையிலே இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் தமிழர் தாயகம் எங்கும் தற்சமயம், அதுவும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் ஆக்கிரமிப்புகள் மிகத் தீவிரம் பெற்றுள்ளது. அதனுடைய அடுத்தகட்ட பரிமாணம் தான் இந்த புத்தர் சிலை. இந்த புத்தர் சிலையை உடனடியாக அகற்றும்படி நாங்கள் இராணுவத்தினரிடம் கூறுகின்றோம். நீங்கள் அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க விட்டால் நாங்கள் வெகு விரைவில் இந்தப் பிரதேசம் மக்களோடும், இராணுவ முகாமை சுற்றியுள்ள அமைப்புகளுடனும் கதைத்து விட்டு, விசேடமாக மீனவர் அமைப்புகளுடன் கதைத்து விட்டு இதற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றோம். அப்போது அந்தப் போராட்டங்கள் என நாங்கள் மக்களுக்கு அறிவிப்போம். மக்கள் அனைவரும் இந்த இடத்திற்கு வர வேண்டும். இல்லையேல் தமிழர் தாயகம் பறிபோகும் இதை எவராலும் தடுக்க முடியாது. நாங்கள் கதைப்பதை கூட இராணுவம் அச்சுறுத்தி படம் எடுக்கின்றார்கள். தங்களைக் கதைக்க வேண்டாம், படம் எடுக்க வேண்டாம் என அச்சுறுத்தல் செய்கின்றார்கள். அச்சுறுத்தலை தாண்டித்தான் நாங்கள் இந்த இடத்தில் நிற்கின்றோம். ஏனென்றால் இது நமது மக்களின் எதிர்கால இருப்புடன் சம்பந்தப்பட்ட விடயம். மக்களே வெளிப்படையுங்கள் அல்லது இந்த நாட்டில் தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்படப் போகின்றது - என்றார். https://www.virakesari.lk/article/178027
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
“மோடி சுட்ட வடை” – தமிழ்நாடு முழுவதும் வடை விநியோகித்து திமுக நூதன பிரச்சாரம் 05 MAR, 2024 | 01:38 PM “மோடி சுட்ட வடை” என தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு வடை கொடுத்து திமுக நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக எல்லோருக்கும் எல்லாம் என்கிற பெயரில் பொதுக்கூட்டத்தை மூன்று நாட்களாக நடத்தி வருகிறது. மேலும் பல பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவார் என புதுவிதமான நூதன பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டனர். மோடி சுட்ட வடை எனக்கூறி, தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு வடை கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட மேடை அருகே கிரைண்டர் மூலம் மாவாட்டி மோடியின் முகமூடி அணிந்தவாறு அங்கேயே சுட சுட வடை சுட்டு கூட்டத்திற்கு வந்த சிறுவர், சிறுமிகள், பெண்கள் என அனைவருக்கும் இது மோடி சுட்ட வடை என்று பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரம் மூலம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. கூட்டம் ஆரம்பித்து முடியும் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடைகள் வழங்கப்பட்டது. சிவகங்கையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொது மக்களுக்கு பிரதமர் மோடியின் உருவப்படம் மற்றும் மோடி சுட்ட வடை என்கிற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களில் வைத்து உளுந்த வடைகளை விநியோகம் செய்தனர். திருச்சியிலும் இந்த நூதன பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்து கொண்டு, மோடி சுட்ட வடை, மோடி சுட்ட வடை எனக்கூறி பொதுமக்களுக்கு வடை கொடுத்தனர். மேலும் கோவை, பொள்ளாட்சியில் காவி நிறத் துண்டுகளுடனும், மோடியின் முகமூடி அணிந்தும் பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில், வடை வழங்கினர். பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாகவும், அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என கூறியும் பிரசாரம் செய்தனர். வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன்; மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் செயல்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டி காட்டும் வகையில் பதாகைகளையும் அவர்கள் கையில் ஏந்தி முழக்கம் எழுப்பினர். இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் திமுகவினர் பிரதமர் மோடியை விமர்சித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/177954
-
மாலைதீவு- சீன பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து
Published By: SETHU 05 MAR, 2024 | 01:37 PM மாலைதீவும் சீனாவும் பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பாக தெரிவிக்கையில், சீனாவின் இராணுவ உதவிகள் தொடர்பாக திங்கட்கிழமை ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டதாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இந்த ஒப்பந்தம் பலப்படுத்தும் என மாலைதீவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மாலைதீவில் உள்ள 89 இந்தியப் படையினரம் மே 10 ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டும் என மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹம்மட் முய்ஸுவின் அரசாங்கம் உத்தரவிட்டு சில வாரங்கில் சீன- மாலைதீவு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கசான் முனுமூன், சீனாவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புகளுக்கான அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஸாங் பாவோகுன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் உத்தியோபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், சீனாவுக்கு இராணுவ உதவிகளை இலவசமாக வழங்க சீனா இணங்கியுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/177953
-
விபத்தில் பலியான அருட்தந்தை ; மன்னார் அடம்பன் பகுதியில் பொது மக்கள் போராட்டம் ; வீதி தடை அமைக்குமாறு கோரிக்கை
Published By: DIGITAL DESK 3 05 MAR, 2024 | 03:51 PM மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடன் அமைத்து தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை (05) வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று திங்கட்கிழமை (4) அடம்பன் பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் மோதி அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தொடர்ச்சியாக குறித்த வீதியில் விபத்துக்கள் இடம் பெறுவதாகவும், வாகனங்கள் வேகமாக பயணிப்பதாகவும் தெரிவித்து குறித்த வீதியில் வீதித்தடை ஒன்றை அமைக்குமாறு கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த வீதியில் வீதித்தடை ஒன்றை அமைக்குமாறு முன்னதாகவே பிரதேச சபை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசப்பட்டும் இதுவரை எந்த வித வீதித்தடைகளும் அமைக்கப்படாமையினால் தொடர்சியாக இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மக்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த உதவி மாவட்ட செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பொறியியலாளர், பொலிஸார் பொது மக்களுடன் கலந்து பேசிய நிலையில் விரைவில் விபத்துக்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்த நிலையில் மக்கள் போராட்டத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177972
-
பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!
கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பில் சேர்த்த பிரான்ஸ் - முழுவிவரம் பட மூலாதாரம்,REUTERS 5 மார்ச் 2024, 06:25 GMT கருக்கலைப்பு உரிமையை தனது அரசியலமைப்பில் வெளிப்படையாக உள்ளடக்கிய உலகின் முதல் நாடாகியுள்ளது, பிரான்ஸ். பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் சுதந்திரமாக கருக்கலைப்பு செய்வதற்காக 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசியலமைப்பைத் திருத்த வாக்களித்தனர். வாக்கெடுப்பின்போது, நாட்டின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில், 780 பேர் பெண்கள் கருக்கலைப்பிற்கு ஆதரவாக வாக்களித்தனர், 72 பேர் எதிராக வாக்களித்தனர். வாக்குகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பினர். அதிபர் எமானுவேல் மக்ரோங் இந்த நடவடிக்கையை "பிரெஞ்சு பெருமை" என்று குறிப்பிட்டார். இது உலகத்திற்கு ஒரு செய்தியை அனுப்பியது. இருப்பினும் கருக்கலைப்பு எதிர்ப்பு குழுக்கள் வத்திக்கானைப் போலவே இந்தத் திருத்தத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பு 1975 ஆம் ஆண்டு முதல் சட்டப்பூர்வமாக உள்ளது. ஆனால், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி சுமார் 85% பொது மக்கள் கருக்கலைப்பு உரிமையை பாதுகாக்க அரசியலைப்பில் திருத்தம் செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பல நாடுகள் தங்கள் அரசியலமைப்பில் இனப்பெருக்க உரிமைகளை உள்ளடக்கியிருந்தாலும், கருக்கலைப்பு அரசியலமைப்பு உரிமை என உத்தரவாதம் அளித்த முதல் நாடு பிரான்ஸ். இது நவீன பிரான்சின் அரசியலமைப்பில் ஏற்கொள்ளப்பட்டுள்ள 25-ஆவது திருத்தமாகும். மேலும், 2008க்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தமாகும். சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் "என் உடல், என் விருப்பம்" என்ற வாசகம் ஒளிரச்செய்து கருக்கலைப்பு ஆதரவாளர்கள் கொண்டாடினர். வாக்கெடுப்புக்கு முன், பிரதமர் கேப்ரியல் அட்டல் நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு உரிமை "ஆபத்தில் உள்ளது" , "முடிவெடுப்பவர்களின் தயவில்" உள்ளது என்று கூறினார். "நாங்கள் அனைத்து பெண்களுக்கும் ஒரு செய்தியை சொல்கிறோம்: உங்கள் உடல் உங்களுக்கு சொந்தமானது, உங்களுக்காக யாரும் முடிவு செய்ய முடியாது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,TOM NICHOLSON/REX/SHUTTERSTOCK நாடாளுமன்றத்தில் வலதுசாரிகளின் எதிர்ப்புக்கு ஆதரவு கிடைக்காத நிலையில், அதிபர் மக்ரோங் அரசியலமைப்பை தேர்தல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். கருக்கலைப்பு விமர்சகர்கள் இந்த திருத்தம் தேவையற்றது என்று கூறுகிறார்கள், மேலும் அதிபர் தனது இடதுசாரி நற்சான்றிதழ்களை அதிகரிக்க இந்த காரணத்தை பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்ட பின், 1975 முதல் அந்தச் சட்டம் ஒன்பது முறை புதுப்பிக்கப்பட்டது - ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கருக்கலைப்புக்கான அணுகலை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் அந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரான்சின் அரசியலமைப்பு கவுன்சில் - சட்டங்களின் அரசியலமைப்புத் தன்மையை தீர்மானிக்கும் அமைப்பு - ஒரு கேள்வியையும் எழுப்பவில்லை. கடந்த 2001 ஆம் ஆண்டில் வந்த தீர்ப்பில், 1789-ஆம் ஆண்டு மனித உரிமைகள் பிரகடனத்தில் பொதிந்துள்ள சுதந்திரக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, கருக்கலைப்புக்கு பிரான்ஸ் அரசியலமைப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இந்த நடைமுறை அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். பல சட்ட வல்லுநர்கள் கருக்கலைப்பு ஏற்கெனவே அரசியலமைப்பு உரிமை என்று கூறுகிறார்கள். பட மூலாதாரம்,@HYUNXDE/X அமெரிக்காவில் 2022-இல் உச்ச நீதிமன்றம் சார்பில் கருக்கலைப்பு உரிமை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்சில் கருக்கலைப்புச் சட்டத்திற்கு அரசியலமைப்பு பாதுகாப்பு வழக்க வேண்டி, தற்போது இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து, அதனை அரசியலைமப்பு உரிமையாக்குவதற்கு முன், மாநிலங்கள் தாங்களாவே, கருக்கலைப்பை தடை செய்ய முடிந்துள்ளது. அது பெண்களின் கருக்கலைப்பு உரிமையை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், தற்போது பிரான்ஸின் அரசியலமைப்பில் கருக்கலைப்பை உள்ளடக்கிய நடவடிக்கை பலதரப்பட்ட மக்களால் வரவேற்கப்படுகிறது. "இந்த உரிமை (கருக்கலைப்பு) அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதனால், பிரான்ஸ் அந்த ஆபத்தில் இல்லை என்று நினைக்க எங்களுக்கு இப்போது வரை எந்தச் சான்றும் இல்லை" என்று ஃபாண்டேஷன் டெஸ் ஃபெம்ம்ஸ் உரிமைக் குழுவைச் சேர்ந்த லாரா ஸ்லிமானி கூறினார். "ஒரு பெண்ணிய ஆர்வலராகவும், ஒரு பெண்ணாகவும் நிறைய உணர்ச்சிகள் உள்ளன," என்று அவர் கூறினார். பிரான்ஸ் கத்தோலிக்க ஆயர்களால் ஏற்கனவே எழுப்பப்பட்ட கவலைகளை எதிரொலிக்கும் வகையில், "ஒரு மனித உயிரைப் பறிக்க எந்த 'உரிமையும்' இருக்க முடியாது" என்று வத்திகான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/clwe2xwleego
-
ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது: அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Published By: SETHU 05 MAR, 2024 | 12:23 PM அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது என என அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது. 2021 ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்கப் பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக, கொலராடோ மாநில குடியரசுக் கட்சி உட்கட்சித் தேர்தல் வாக்குச்சீட்டுகளில் ட்ரம்பின் பெயர் இடம்பெற முடியாது என கொலராடோ மாநில நீதிமன்றம் கடந்த டிசெம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. இது தொடர்பாக மேன்முறையீட்டு வழக்கு அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், கொலராடோ உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக 9:0 விகிதத்தில் அமெரிக்க சமஷ்டி உச்சநீதிமன்ற நீதிபதிகள் திங்கட்கிழமை (04) தீர்ப்பளித்தனர். மேற்படி குற்றச்சாட்டின் கீழ் போட்டியிடுவதை தடுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு கிடையாது எனவும், அமெரிக்கப் பாராளுமன்றத்துக்கே அத்தகைய அதிகாரம் உள்ளது எனவும் அமெரிக்க உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பானது அமெரிக்காவுக்கான ஒரு பெரும் வெற்றி என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொலராடோ உட்பட 15 மாநிலங்களில் குடியரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தல் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177943
-
ஹெய்ட்டியில் சிறை மீது ஆயுதகும்பல் தாக்குதல் - 3000க்கும் அதிகமானகைதிகள் தப்பியோட்டம்
ஹைதியில் சிறையை தாக்கிய முன்னாள் காவல்துறை அதிகாரி; தப்பியோடிய 3700 கைதிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹைதியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பிரதான சிறைக்கு வெளியே டயர்களுக்கு தீ வைக்கப்பட்டது கட்டுரை தகவல் எழுதியவர், ஹென்றி ஆஸ்டியர் மற்றும் ஜியான்லூகா அவாக்னினா பதவி, பிபிசி நியூஸ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் ஹைதி நாட்டின் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரச் சிறைக்குள் ஆயுதமேந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அந்நாட்டு அரசு 72 மணி நேர அவசர நிலையை அறிவித்தது. இந்த சிறைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 3,700 கைதிகள் தப்பினர். வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆயுத குழுக்களின் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். அவரை வெளியேற்றும் நோக்கில் செயல்படும் ஆயுத குழுக்கள், தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸின் 80% பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆயுதக் குழுவின் தலைவராக முன்னாள் காவல்துறை அதிகாரி ஹைதியில் ஆயுத குழுக்களினால் நிகழ்த்தப்படும் வன்முறை பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது. இரண்டு சிறைச்சாலைகள் வார இறுதியில் தாக்கப்பட்டதாக அரசாங்க அறிக்கை கூறுகிறது, ஒன்று தலைநகரிலும் மற்றொன்று அருகிலுள்ள குரோயிக்ஸ் டெஸ் பொக்கெட்ஸ் எனும் நகரிலும். குழுக்களின் இந்த 'கீழ்ப்படியாமை' செயல்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதற்கு பதிலடியாக உடனடியாக இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதாகவும் அரசு கூறியது, இந்த ஊரடங்கு இந்திய நேரப்படி திங்கட்கிழமை 01:00 மணிக்கு தொடங்கியது. சிறைச்சாலைகள் மீதான ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு முன்பாக அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்ப மற்ற காவல் நிலையங்கள் தாக்கப்பட்டதாகவும் ஹைதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போர்ட்-ஓ-பிரின்ஸின் சிறையில் உள்ள கைதிகளில், 2021ஆம் ஆண்டு அதிபர் ஜோவெனல் மொய்ஸ் கொல்லப்பட்டது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட குழுவின் உறுப்பினர்களும் அடங்குவர். கென்யா தலைமையிலான பன்னாட்டுப் பாதுகாப்புப் படையை ஹைதிக்கு அனுப்புவது குறித்து விவாதிக்க வியாழன் அன்று பிரதமர் நைரோபிக்கு சென்றபோது, இந்த வன்முறை சம்பவங்கள் தொடங்கின. பிரதமரை பதிவியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற நோக்கில் ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலை அறிவித்தார் ஆயுதக் குழுவின் தலைவர் ஜிம்மி செரிசியர் ("பார்பெக்யூ" என்ற புனைப்பெயர் கொண்டவர்) "நாங்கள் அனைவரும், அதாவது மாகாண நகரங்களில் உள்ள ஆயுதக் குழுக்களும் தலைநகரில் உள்ள ஆயுதக் குழுக்களும் ஒன்றுபட்டுள்ளோம்" என்று போர்ட்-ஓ-பிரின்ஸில் நடந்த பல படுகொலைகளுக்கு காரணமானவராக கருதப்படும் இந்த முன்னாள் காவல்துறை அதிகாரி கூறுகிறார். தலைநகரின் பிரதான சிறைச்சாலையை வலுப்படுத்த உதவுமாறு ஹைதியின் போலிஸ் தொழிற்சங்கம் ராணுவத்திடம் கேட்டிருந்தது, ஆனால் அதற்குள் சனிக்கிழமை சிறைச்சாலை தாக்கப்பட்டது. சிறைச்சாலையின் கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன, அதிகாரிகள் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தது. தப்பிச் செல்ல முயன்ற மூன்று கைதிகள் முற்றத்தில் பிணமாகக் கிடந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைக்குள் சென்ற ஏஎப்பி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் தோட்டாக்களால் துளைக்கப்பட்ட சுமார் 10 உடல்களைக் கண்டதாகக் கூறினார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய சிறை ஊழியர் ஒருவர், "அதிபர் மொய்ஸின் கொலைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் கொலம்பிய வீரர்கள் உட்பட 99 கைதிகள் துப்பாக்கி சூட்டிற்கு பயந்து தங்கள் அறைகளில் முடங்கிவிட்டனர்" என்று கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பியோடியதால் சிறை அறைகள் காலியாக உள்ளன அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை அன்று போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களை உடனடியாக ஹைதியை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசா சேவைகளை மூடுவதாக பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. ஹைதி பல ஆண்டுகளாக ஆயுதக் குழுக்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 2021இல் அதிபர் மோயிஸ் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. 2016 முதல் அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதால் அதிபர் பதவி காலியாக உள்ளது. ஒரு அரசியல் ஒப்பந்தத்தின் கீழ், பிப்ரவரி 7க்குள் பிரதமர் ஹென்றி பதவி விலக வேண்டும். ஆனால் திட்டமிட்டு தேர்தல் நடத்தப்படாததால் அவர் இன்னும் பதவியில் நீடிக்கிறார். கிளாட் ஜோசப், அதிபர் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டபோது தற்காலிக பிரதமராக செயல்பட்டவர் மற்றும் இப்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். பிபிசியிடம் பேசிய ஜோசப், ஹைதி நாடு ஒரு 'கொடுங்கனவில்' வாழ்ந்து வருவதாக கூறினார். முடிந்தவரை பிரதமர் பதவியில் நீடிக்க ஹென்றி விரும்புவதாகவும் ஜோசப் கூறுகிறார். "பிப்ரவரி 7ஆம் தேதி பதவி விலக முதலில் ஒப்புக்கொண்டு, பின்னர் மறுத்துவிட்டார். அவர் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தாலும், அவர் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. ஆனால் இப்போது இந்த குற்றவாளிகள் அவரை பதவி விலகுமாறு கட்டாயப்படுத்த வன்முறை வழிகளைப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது" என்கிறார் ஜோசப். கடந்த ஆண்டு ஹைட்டியின் ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்ட வன்முறையில் 8400 பேர் கொல்லப்பட்டனர் என்று ஜனவரியில் வெளியான தனது அறிக்கையில் ஐ.நா. கூறியுள்ளது. இது 2022இல் பலியானவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் எனவும் ஐ.நா. கூறியுள்ளது. வன்முறையால் பல மருத்துவமனைகள் செயல்படாமல் உள்ளன. அரசியல் வெற்றிடம் மற்றும் அதீத வன்முறையின் மூலம் வெளிப்படும் கோபம், அரசாங்கத்திற்கு எதிரான பல போராட்டங்களுக்கு வழிவகுக்கிறது. அரசு எதிர்ப்பாளர்கள் இப்போது பிரதமரின் ராஜினாமாவைக் கோருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/ce9ry752e15o