Everything posted by பிழம்பு
-
அத்துமீறும் இ.போ.ச ; செவ்வாயன்று வடக்கை முடக்கி போராட்டம்!
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே குழப்ப நிலை ஏற்பட்டது. இதையடுத்து சில நிமிடங்கள் வாகன நெரிசல் ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்துத்தெரிவித்த வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்க தலைவர்; இன்று காலை யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று குறித்த சாலை முகாமையாளரின் உத்தரவுக்கமைய சட்டவிரோத சேவையை வவுனியா நோக்கி முன்னெடுக்க முயன்றது. இதை அவதானித்த நாம் குறித்த சட்டவிரோத செயற்பாட்டை கண்டித்து அதை நிறுத்துமாறு வலியுறுத்தினோம். ஆனால் இ.போ.சவினர் அடாத்தாக சேவையை முன்னெடுக்க முயன்றனர். ஏற்கனவே இச்சட்டவிரோதம் குறித்து துறைசார் தரப்பினருக்கும் போக்குவரத்து அதிகார சபை, துறைசார் அமைச்சு, வடக்கின் ஆளுநர் ஆகியோரிடம் முறையிட்டிருந்ததுடன், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்துள்ளோம் ஆனாலும் இதுவரை எந்தவொரு தீர்வுக் கிடைக்காத நிலையே காணபடுகின்றது. அத்துடன் இ.போ.ச அடாத்தாக சட்டத்துக்கு முரணாக செயற்படுவதுடன் தனியார் போக்குவரத்து சேவையை முடக்கவும் முயன்று விபத்துக்கள் ஏற்படுவதற்கும், முரண்பாடுகளை உருவாகுவதற்கும் வலிந்து இழுக்கின்றனர். எனவே, இவ்வாறான இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மகாணம் தழுவிய ரீதியில் முழுமையான சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துமீறும் இ.போ.ச ; செவ்வாயன்று வடக்கை முடக்கி போராட்டம்!
-
35 ஆண்டுகளுக்குப் பிறகு பலாலி இராஜராஜேஸ்வரி ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்வதற்கு இராணுவ அனுமதி
27 Jun, 2025 | 12:35 PM யாழ்ப்பாணம் பலாலியில் அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு, மக்கள் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரமாக சென்று வழிபட இராணுவ அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (27) முதல் அமலுக்கு வந்துள்ளது. 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி, உள்நாட்டு யுத்தம் காரணமாக பலாலி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வெளியேறியிருந்தனர். அதன் பின்னர், பலாலி பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. இதில் ஆலயம் இருந்த பகுதியும் அடங்கும். இராணுவம், ஆறு மாதங்களுக்கு முன்பு சுதந்திரமாக ஆலயத்துக்கு செல்வதற்கான அனுமதியை அறிவித்திருந்தாலும், கடந்த காலங்களில் மக்கள் விசேட நாள்களில் மட்டுமே கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் ஆலயத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது உயர் பாதுகாப்பு வலயத்தினுள் ஆலயத்திற்கு மாத்திரமாக செல்வதற்கென பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை வழியாக வழிபாட்டுக்காக மட்டும் மக்கள் சென்று திரும்ப இராணுவ அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,கடந்த வருடம் மார்ச் 22ஆம் திகதி, பலாலி மற்றும் வயாவிளான் பகுதிகளில் உள்ள 234.83 ஏக்கர் விவசாய நிலங்களை மக்கள் பயன்பாட்டிற்காக விடுவித்திருந்தார். எனினும், உயர் பாதுகாப்பு வேலிகள் பின்நகர்த்தப்படாமல் அந்த நிலங்கள் அதே பாதுகாப்பு வலய எல்லைக்குள் காணப்பட்டதால், விவசாயிகள் நேரடியாக பயன்படுத்த முடியாமல், இராணுவ கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டபடி விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது, இராணுவம் இந்த பாதுகாப்பு வேலிகளை பின்நகர்த்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதால், விரைவில் விவசாய நிலங்களில் மக்கள் முழுமையாக சுதந்திரமாக விவசாயம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண மாவட்ட புதிய கட்டளை தளபதியாக பதவியேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமார, வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை வியாழக்கிழமை (26) சந்தித்த போதே, இந்த வேலிகளை பின்நகர்த்தும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு பலாலி இராஜராஜேஸ்வரி ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்வதற்கு இராணுவ அனுமதி | Virakesari.lk
-
சின்ன வெங்காய இறக்குமதி குறைப்பை வலியுறுத்தி அச்சுவேலி பத்தமேனி விவசாயிகள் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு
27 Jun, 2025 | 02:24 PM அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த சின்ன வெங்காய உற்பத்தியாளர்கள், நாட்டில் சின்ன வெங்காய இறக்குமதியை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீ மோகனிடம் மகஜர் ஒன்றை வெள்ளிக்கிழமை (27) கையளித்தனர். இது தொடர்பாக, யாழ். மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள், போராட்டத்தைத் தொடர்ந்து தங்களது கோரிக்கையை மகஜராக வழங்கினர். தொடர்ச்சியாக சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் வெங்காயத்திற்கு நிர்ணய விலை வழங்கப்படாததால் அதிக இழப்பை சந்திக்க நேரிட்டதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை, சின்ன வெங்காயத்தை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் வரையிலான காலப்பகுதியில், செலவுகள் அதிகமாக இருப்பதால், நிர்ணய விலைக்கு கீழ் விற்பனை செய்வது தங்களுக்கு பெரிய பாதிப்பாக உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து சின்ன வெங்காயத்தை அதிகளவில் இறக்குமதி செய்வது அவற்றின் விலையை குறைக்கச் செய்துள்ளதாகவும், இது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெரிய தடையாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே, உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், சின்ன வெங்காய இறக்குமதியை கட்டுப்படுத்தி, உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்ய வேண்டும் எனக் கோரி அவர்கள் மகஜரை கையளித்துள்ளனர். சின்ன வெங்காய இறக்குமதி குறைப்பை வலியுறுத்தி அச்சுவேலி பத்தமேனி விவசாயிகள் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு | Virakesari.lk
-
சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது !
27 Jun, 2025 | 02:51 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷவின் மனைவியின் சகோதரரும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது ! | Virakesari.lk
-
பலாலி சந்தையை விடுவிக்க வேண்டும் ; வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
27 Jun, 2025 | 04:10 PM யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு ஞாயிற்றுக்கிழமை (27) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தவிசாளர் தனது தலைமை உரையில் தெரிவித்ததாவது, எங்களுடைய மக்கள் இன்னும் 2400 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்றார்கள், அவர்களை மீள்குடியேற்றுவதற்காக எங்களுடைய சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதற்காக அனைவருடைய ஒத்துழைப்பும் தேவையாக இருக்கின்றது. எங்களுடைய பல உறுப்பினர்கள் கூட தமது சொந்த நிலங்களுக்கு திரும்பாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் தமது சொந்த நிலங்களுக்கு சென்று இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு நாங்கள் அவர்களுக்கான நிலங்களை பெற்றுக் கொடுப்பதோடு, அந்தப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தை தொடர்ந்து நடைபெறுகின்ற அபிவிருத்தி திட்டங்களையும் நாங்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. கடந்த ஏப்ரல் மாதம் மீள்குடியேற்ற அமைச்சினால் 182 மில்லியனுக்கும் மேற்பட்ட ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதும் அதற்கான வேலை திட்டங்கள் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கின்றது. எங்களுடைய சபையின் பக்கமும் ஒரு சில தவறுகள் இருக்கின்றன, அதற்கான மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இருக்கின்றது. நாங்கள் சபையை பொறுப்பெடுத்த பின்னர் அதனை விரைவு படுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. தொடர்ந்து சபைக்கான நிலையியற் குழுக்கள் அமைக்கப்பட்டதோடு , தீர்மானங்களும் எடுக்கப்பட்டது. இதன்போது பிரதேச சபைக்கு சொந்தமான பலாலி சந்தையை விடுவித்து தருமாறு கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானம் மாவட்ட இராணுவ தளபதிக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எழுத்து மூலம் அனுப்பப்படும். அத்தோடு கடந்த 2023 ஆம் ஆண்டு விடிவிக்கப்பட்டுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தை மீள அமைப்பதற்கு விரைவில் அதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என்றார். பலாலி சந்தையை விடுவிக்க வேண்டும் ; வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம் | Virakesari.lk
-
ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவிப்பு
27 Jun, 2025 | 05:04 PM படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல்செய்யவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் புதல்வர் ஜோசப்பரராஜசிங்கம் டேவிட் 20வருடங்களுக்கு பின்னர் வெள்ளிக்கிழமை (27) மட்டக்களப்புக்கு வருகைதந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசிங்கத்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதன்போது தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,பிரதி முதல்வர் டினேஸ் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டனர். புதூர் பகுதியில் உள்ள மயானத்தில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் நினைவுத்தூபியில் அவரின் மகன் மற்றும் பாராளுமுன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர்,பிரதி முதல்வர் சுடர் ஏற்றி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதிகோரி ஒவ்வொரு வருடமும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணி போராட்டத்தினை நடாத்திவருகின்றது. ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் கொலையில் முக்கிய சந்தேகநபராக பிள்ளையான் அவர்கள் நல்லாட்சிக்காலத்திலே கைதுசெய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து அவர் விடுதலைசெய்யப்பட்டார். அந்த விடுதலை பல சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. தென்னிலங்கையில் கூட நீதித்துறையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் அசாத் மௌலானாவின் வாக்குமூலம் இருந்தது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் அந்த வழக்கினை தள்ளுபடிசெய்து குற்றவாளி கூண்டிலிருந்து பிள்ளையானை நீக்கியிருந்தார்கள். ஆனால் காலம்மாறியிருக்கின்றது.அந்த படுகொலையினை செய்ததாக சந்தேகிக்கப்படும் ராஜபக்ஸ ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் தற்போது ஆட்சியில் இல்லை. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மீண்டும் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். பிள்ளையான் கைதானது ஈஸ்டர் குண்டுத்தாக்குதலா அல்லது திரிபொலியுடன் இணைந்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் உட்பட ஏனைய கொலைகளைப்பற்றியா என்பது நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனாலும் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் சார்பில் அவரின் படுகொலை வழக்கினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கின்றோம். இது தொடர்பான விடயங்கள் சில மாதங்களுக்கு முன்னர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் குடும்பத்தினரின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கவேண்டும். என்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார். இங்கு மூடிமறைக்கப்பட்ட,நீதி மறுக்கப்பட்ட பல படுகொலைகளை விசாரணைசெய்யப்படவேண்டும். இரு தினங்களுக்கு முன்னர் ஐநா மனித உரிமை ஆணையாளர் வந்தபோது அவர் எங்களிடம் சில விடயங்களை தெரிவித்திருந்தார் அதாவது காணாமல்ஆக்கப்பட்டவர்கள்,படுகொலைசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சி பத்து விடயங்களை முன்வைக்குமாறு கூறியிருந்தார். இதன்போது நாங்கள் முதலாவதாக ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் விசாரணையை மீளஆரம்பிக்கவேண்டும்,ரவிராஜ் படுகொலை,திருகோணமலை மாணவர்களின் படுகொலைகள்டு, மாணர்கள் கடத்தப்பட்டமை, இறுதி யுத்த காலப்பகுதியில் நேரடியாக கையளிக்கப்பட்டு காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் தொடர்பில் தெரிவித்திருந்தேன். இதேபோன்று அனந்தி சசிதரனின் கணவரின் வழக்கு போன்ற பல்வேறுவிடயங்களை தெரிவித்திருந்தேன். நாங்கள் நீதிக்கான போராட்டத்தினை கைவிடமாட்டோம். ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையில் நீதிகோரிய போராட்டத்தினை இலங்கை தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் என்பதை அவரின் மகனுக்கு நாங்கள் உத்தரவாதமளிக்கின்றோம் என்றார். படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவிப்பு | Virakesari.lk
-
இந்திராகாந்தி பிறப்பித்த அவசரகால நிலையின் போது செய்யப்பட்ட உடன்படிக்கையே இன்று இந்திய மீனவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்படுவதற்கு காரணம் - ஜெய்சங்கர்
இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சியின் போது பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையின்போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையே இன்று இந்திய மீனவர்களை இலங்கைகைதுசெய்வதற்கு காரணம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கை காரணமாக இந்திய மீனவர்களிற்கு சில இடங்களில் மீன்பிடிப்பதற்கு இருந்த உரிமை தாரைவார்க்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் எமது மீனவர்கள் கைதுசெய்யப்படுவது குறித்து நாங்கள் கேள்விப்படுகின்றோம்,அவசரகாலநிலையின் போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையே இதற்கு காரணம் இந்த உடன்படிக்கை காரணமாக இலங்கை கடற்பரப்பின் சில பகுதிகளில் எங்கள் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமை கைவிடப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். அக்காலப்பகுதியில் உண்மையான நாடாளுமன்றம் செயற்பட்டிருந்தால் நாடாளுமன்ற விவாதங்கள் இடம்பெற்றிருக்கும் இந்த முடிவு நிராகரிக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ள அவர் அந்த உடன்படிக்கையின் விளைவுகளை இன்றும் தமிழ்நாட்டில் காணமுடிகின்றது என தெரிவித்துள்ளார். இந்திராகாந்தி பிறப்பித்த அவசரகால நிலையின் போது செய்யப்பட்ட உடன்படிக்கையே இன்று இந்திய மீனவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்படுவதற்கு காரணம் - ஜெய்சங்கர் | Virakesari.lk
-
அரச வைத்தியசாலைகளில் பல கருவிகள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடு : தனியாரிடம் வாங்கி வருமாறு நோயாளர்களுக்கு அறிவுறுத்தல் : வைத்தியர் சமல் சஞ்சீவ
Published By: Digital Desk 3 27 Jun, 2025 | 05:18 PM செயற்கை முழங்கால் மாற்று உபகரணங்கள் மற்றும் பிற அறுவை சிகிச்சை கருவிகள் போன்ற முக்கியமான மருத்துவப் பொருட்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கி வருமாறு சொல்வது, தற்போது பல அரச வைத்தியசாலைகளில் வழக்கமான விடயமொன்றாக மாறிவிட்டது. ஏனெனில் அவைகள் அதிகளவில் கையிருப்பில் இல்லை என சுகாதார தொழில் வல்லுநர்களின் தேசிய அமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இந்தப் பொருட்கள் பின்னர் அறுவை சிகிச்சைக்காக நேரடியாக அறுவை சிகிச்சை அறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் உபகரணங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட விசேட வைத்திய நிபுணர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமான விடயம் ஒன்று இல்லை என அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சுகாதார அமைப்பில் உள்ள பாரிய சிக்கலை எடுத்துக்காட்டுகிறது எனவும், வைத்தியசாலைகளால் வழங்கப்பட வேண்டிய மருத்துவ உபகரணங்களுக்கு நோயாளிகள் அதிக அளவு பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார். தனியார் மருத்துவ நிறுவனங்களிடமிருந்து செயற்கை முழங்கால் கருவிகளை வாங்க நோயாளிகள் ரூபாய் 350,000 க்கும் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பணம் செலுத்திய பின்னர் நிறுவன ஊழியர்கள் அறுவை சிகிச்சைக்காக உபகரணங்களை அறுவை சிகிச்சை தனியார் மருந்து நிறுவனங்களிடமிருந்து செயற்கை முழங்கால் கருவிகளை வாங்க நோயாளிகள் ரூ.350,000 க்கும் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பணம் செலுத்திய பிறகு, நிறுவன ஊழியர்கள் அறுவை சிகிச்சைக்காக உபகரணங்களை அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், அண்மையில் அதே வைத்தியசாலையில் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்களின் சட்டவிரோத விற்பனை தொடர்பான சம்பவத்துடன் வேறுபட்டதல்ல என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார். "ஏழை நோயாளிகளால் அறுவை சிகிச்சைகளுக்கு இவ்வளவு அதிகமான செலவுகளை தாங்கிக் கொள்ளமுடியாது". பல மாதங்களாக போதுமான அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்காததற்கு மருத்துவ வழங்கல் பிரிவை அவர் குற்றம் சாட்டினார். இது இந்த சட்டவிரோத மோசடிகள் தொடர அனுமதித்ததாக அவர் கூறினார். நாட்டின் இலவச சுகாதார முறையை மருந்து நிறுவனங்கள் இதுபோன்று தவறாகப் பயன்படுத்துவதை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது. சுகாதார அமைச்சு தனது பட்ஜெட்டை நிர்வகிக்கவும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை முறையாக வழங்கவும் ஏன் தவறிவிட்டது என்பது குறித்து முழுமையான விசாரணையை தொடங்குமாறு அவர் ஜனாதிபதியை வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதார நிலைமை ஓரளவு முன்னேற்றம் கண்டிருந்தாலும், சுகாதார அதிகாரிகளின் சீரற்ற முகாமைத்துவம் காரணமாக சுகாதார அமைப்பில் உள்ள சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இறுதியாக, தனிப்பட்ட இலாபத்திற்காக மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக உடனடியாக முறையான விசாரணையை ஆரம்பிக்குமாறு வைத்தியர் சஞ்சீவ ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அரச வைத்தியசாலைகளில் பல கருவிகள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடு : தனியாரிடம் வாங்கி வருமாறு நோயாளர்களுக்கு அறிவுறுத்தல் : வைத்தியர் சமல் சஞ்சீவ | Virakesari.lk
-
புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது
Editorial / 2025 ஜூன் 26 , பி.ப. 01:21 - 0 - 52 இதுவரை இல்லாத முற்றிலும் புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது. இந்த புதிய ரத்த வகையை இப்போது சர்வதேச ரத்த மாற்றச் சங்கமும் அங்கீகரித்துள்ளது. EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை உலகிலேயே ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்த வகை ரத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகடிவ், பி பாசிட்டிவ், பி நெகடிவ் என ஏகப்பட்ட ரத்த வகைகள் உள்ளன. எமர்ஜென்சி காலத்தில் ரத்தம் தேவைப்படும் போது உட்படப் பல சூழல்களில் இந்த ரத்த க்ரூப் முக்கிய தேவையாக இருக்கிறது. இதற்கிடையே இப்போது ஆய்வாளர்கள் முற்றிலும் புதிய வகை ரத்தத்தைக் கண்டுபிடித்துள்ளனர். குவாடா நெகடிவ் அல்லது EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயர் வைத்துள்ளனர். இதுவரை உலகில் இருக்கும் வேறு எந்தவொரு ரத்த வகையைப் போலவும் இது இல்லை. முற்றிலும் தனித்துவமான ரத்த வகையாக இது இருக்கிறது. கடந்த மாதம் வரை உலகிலேயே இவர் ஒருவருக்கு மட்டுமே இந்த ரத்த வகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் மிகவும் அரிதான ரத்த வகையாக குவாடா நெகடிவ் மாறியுள்ளது. குவாடா நெகடிவ் என்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ரத்தத்தின் பெயர். இந்த குவாடா நெகடிவ் வகையில் EMM ஆன்டிஜென் இருக்காது. இதன் காரணமாகவே இதை EMM நெகடிவ் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆன்டிஜென் பொதுவாகச் சிவப்பு ரத்த அணுக்களில் இருக்கும்.. மேலும் இது ஒரு High-incidence antigens ஆகும். உலகில் உள்ள கிட்டதட்ட அனைத்து மனிதர்களிடமும் இந்த வகை ஆன்டிஜென்கள் இருக்கும். அப்படி இருக்கும்போது இந்த நபரிடம் மட்டும் ஆன்டிஜென்கள் இல்லாதது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு ரத்த வகையைப் புதிதாக அங்கீகரிக்க பல்வேறு கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த புதிய ரத்த வகை அந்த அனைத்து கண்டிஷன்களும் பூர்த்தி செய்கிறதாம். மேலும், உலகில் இதுவரை 47 ரத்த வகைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் இது 48ஆவது ரத்த வகையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. Tamilmirror Online || ஒருவருக்கு மட்டுமே இருக்கும் புதிய ரத்த வகை French scientists discover new blood type in Guadeloupe woman - CBS News
-
“செம்மணி புதை குழியில் புதைக்கவில்லை”
எஸ்.ஆர்.லெம்பேட் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக கடந்த 16 வருடங்களுக்கு மேலாக நாங்கள் வீதியில் நின்று போராடி வருகிறோம்.தமது உறவுகளுக்காக போராடிய எத்தனையோ தாய்மார்கள் மரணித்து விட்டனர்.எனினும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் மட்டுமே எங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த 'நீதிக்கான நீண்ட காத்திருப்பு' எனும் கருப்பொருளில் 'காணாமல் ஆக்கப்பட்டோரின் கண்ணீர்க்கதை' ஆவணப்படம் திரையிடலும்,கருத்துப் பகிர்வும் வியாழக்கிழமை (26) காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,, இசைப்பிரியன் தயாரிப்பில் வெளியிடப்பட்ட நீதிக்கான நீண்ட நாள் காத்திருப்பு காணாமல் போனோரின் கண்ணீர்க்கதை ஆவணப்படம் மன்னாரில் வெளியிடப்பட்டது. வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டத்திலும் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் நிலை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக தாய்மார் பட்ட கஷ்ட துன்பங்களை ஏனையோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் மன்னாரிலும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.இந்த ஆவணப் படத்தை தயாரித்த இசைப்பிரியன் இன்று எங்களுடன் இல்லை. ஆனால் அவர் எங்களுடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக போராடி குரல் கொடுத்தவர்.அவர் மரணித்தாலும் அவர் எங்களுக்காக குரல் கொடுத்தவர்.அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும். கடந்த 16 வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நாங்கள் வீதியில் நின்று போராடி வருகிறோம்.தமது உறவுகளுக்காக போராடிய எத்தனையோ தாய்மார்கள் மரணித்து விட்டனர்.எத்தனையோ பேர் வலு இழந்து விட்டனர். எத்தனையோ வருடங்களாக போராடி விட்டோம்.எமக்கு நீதி கிடைக்கவில்லை.இதற்கு பின்னரும் இந்த அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நீதியை பெற்றுத் தருமா? என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.அம்மாக்களும் போராடி சோர்வடைந்து விட்டனர். எவ்வாறாக இருந்தாலும் நாங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் மட்டுமே எங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.காலம் தாமதிக்கும் நீதி மறுக்கப்படுகின்ற நீதி என கூறுகின்றனர்.ஆனால் அவ்வாறு இருக்காது. வடக்கு கிழக்கில் எத்தனையோ மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. செம்மணி புதை குழியில் நான்கு வயது முதல் 15 வயதுக்குட்பட்டவர்களின் எலும்புக்கூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஒரு பிள்ளையை ராணுவம் பிடித்துச் செல்லும் போது தாய் ஒருவர் மேலும் ஒருவரை துணைக்கு அழைத்துச் சென்றிருப்பார்.இந்த தாய் இவ்வாறு நிலை ஏற்படும்.தன்னை மண்ணுக்குள் புதைப்பார்கள் என்று நினைத்து அங்கே சென்றிருக்க மாட்டார். இவ்வாறு சென்றவர்களையே ராணுவம் கொலை செய்து மண்ணுக்குள் புதைத்துள்ளனர்.அவர்கள் அனைவரும் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் ஒவ்வொருவரும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும்.நீதியையும்,நியாயத்தையும் தட்டிக் கேளுங்கள். என அவர் மேலும் தெரிவித்தார். இதன் போது உயிரிழந்த இசைப்பிரியனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு,ஆவணப்படமும் திரையிடப்பட்டது.குறித்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,பொது அமைப்பு,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || “செம்மணி புதை குழியில் புதைக்கவில்லை”
-
படகு கட்டுமானத் தளம் காரைநகரில் விரைவில்!
யாழ்ப்பாணம் 37 நிமிடம் நேரம் முன் படகு கட்டுமானத் தளம் காரைநகரில் விரைவில்! காரைநகர் பிரதேசத்தில் படகுகளை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்று தனது செயற்பாடுகளை எதிர்வரும் ஜூலை முதல் ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த நிறுவனம் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது. படகுகளை உற்பத்தி செய்தல்.படகுகளைப் பழுதுபார்த்தல், படகுகளை விநியோகம் செய்தல் என்பன இந்த நிறுவனத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகு கட்டுமானத் தளம் காரைநகரில் விரைவில்!
-
போதைக்கு எதிராக சங்கானையில் மாபெரும் கவனவீர்ப்பு போராட்டம்!
யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் போதைக்கு எதிராக சங்கானையில் மாபெரும் கவனவீர்ப்பு போராட்டம்! சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்றையதினம் சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாபெரும் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போதைப்பொருள் பாவனையானது அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதன் தாக்கம் மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், குடும்பத்தவர்கள் என சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரிடத்திலும் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் குடும்பங்களிடையே பல்வேறு விதமான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு போதைப்பொருள் பாவனையில் இருந்து அனைவரையும் மீட்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "போதை அற்ற வாழ்வே ஆரோக்கியத்திற்கான வழி, எம் சமூகத்தை அழிக்கும் மது எமக்கு தேவைதானா?, அரசே புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்காதே, மது ஒழிப்பில் ஈடுபடும் ஜனாதிபதிக்கு கை கொடுப்போம், போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள்" எனும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனல்தினர் ஏற்பாடு செய்த இந்தப் போராட்டத்திற்கு சங்கானை பிரதேச செயலகத்தினர், வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர், சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தினர், மானிப்பாய் பொலிஸார், வட்டுக்கோட்டை பொலிஸார், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர், அந்திரான் தோற்பொருள் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். போதைக்கு எதிராக சங்கானையில் மாபெரும் கவனவீர்ப்பு போராட்டம்!
-
வடமராட்சியில் நடைபெற்ற மாபெரும் வர்த்தக சந்தை!
வடமராட்சியில் நடைபெற்ற மாபெரும் வர்த்தக சந்தை! யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, போக்கறுப்பில் இன்று (26) மாபெரும் வர்த்தக சந்தை காலை 9 மணியளவில் ஆரம்பமானது. இச் சந்தையானது வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் நிதிப் பங்களிப்பில் இடம்பெற்றது. நிகழ்வானது விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றி, வரவேற்பு நடனத்துடன் தமிழர் பாரம்பரிய முறைப்படி இடம்பெற்றது. இச்சந்தை நிகழ்வில் வடமராட்சி கிழக்கு உள்ளுர் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தமது கைவினை பொருட்கள் மற்றும் உலர் உணவுகள், மரக்கறி வகைகள், ஆடைகள் என்பவற்றை காட்சிப்படுத்தி தமது வர்த்தக நடவெடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி, சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-
செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
“அணையா விளக்கில்” அமைச்சரை தடுத்தது தவறு - வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி தெரிவிப்பு! செம்மணி மனிதப் புதைகுழிக்கான போராட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த அமைச்சர் சந்திரசேகரனை சிலர் தடுத்தமை கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் ரட்க்கை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதனை வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் கலந்து கொண்டிருந்த வேளையில் சிலர் அவரை தடுத்தனர் அது தவறு அதற்கு நாம் மனம் வருந்துகிறோம். செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதி வேண்டி போராடும் தாய்மார்கள் என்ற வகையில் எமது நீதிக்கான பயணத்தில் ஒன்றிணைவபவர்களை புறக்கணிப்பது எமது நோக்கம் அல்ல. அமைச்சர் எமது போராட்டத்திற்கு வருகை தந்தது நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்ற எமக்கு சாதகமான விடயம் அவரும் இந்த போராட்டத்திற்கு கலந்து கொண்டவராய் பொறுப்பு கூறுவதாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். “அணையா விளக்கில்” அமைச்சரை தடுத்தது தவறு - வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி தெரிவிப்பு!
-
கெஹெலியவின் குடும்பத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
26 Jun, 2025 | 03:01 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி , மூன்று மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (26) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் 43 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கெஹெலியவின் குடும்பத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் | Virakesari.lk கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் 26 Jun, 2025 | 05:15 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று வியாழக்கிழமை (26) கொழும்பு மேல் நீதிமன்ற விசேட விசாரணைக் குழுவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். தரமற்ற இம்யூனோ குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் 13 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் இலங்கையில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் விசாரணைகளில் அடிப்படையில், தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவத்தின் பிரதான குற்றவாளிகளாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன. பிரதான குற்றவாளிகளில் 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்ற விசேட விசாரணைக் குழுவில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைக்காக 350க்கும் மேற்பட்ட சாட்சியாளர்கள் கொழும்பு மேல் நீதிமன்ற விசேட விசாரணைக் குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற ஹியூமன் இம்யூனோ குளோபியுலின் தடுப்பூசியை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியமை மற்றும் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக அயுசுலேட் பயோ டெக் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜனக பெர்ணான்டோ, சுகாதார அமைச்சின் மருத்துவ வினியோக பிரிவின் பணிப்பாளராக இருந்த வைத்தியர் கபில விக்ரமநாயக்க, மருத்துவ வினியோக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சாந்த்தனி சொலமன், கணக்காளர் ( விநியோகம்) நெரான் தனஞ்சய,கை இருப்பு கட்டுப்பாட்டாளர் சுஜித் குமார, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சிறி சந்ர குப்த, வைத்திய விநியோக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேரத் முதியன்சலாகே தர்மசிறி ரத்னகுமார ஹேரத், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவசர கொள்முதல் நடவடிக்கைகள் குறித்த கொள்முதல் குழுவின் உறுப்பினர் வைத்தியர் ஜயநாத் புத்பிட்டிய, சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க, மருத்துவ வினியோகபிரிவின் பணிப்பாளர்களில் ஒருவரான வைத்தியர் அரம்பேகெதர துஷித்த சுதர்ஷன ஆகியோர் சந்தேக நபர்களாக சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அது குறித்த விசாரணைகள் தொடர்ந்தன. சி.ஐ.டி.யினர் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டதாக குற்றவியல் சட்டக் கோவையின் 120/3 ஆம் அத்தியாயம் பிரகாரம் அறிக்கைச் சமர்ப்பித்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் முதல் சந்தேக நபரான பயோ டெக் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜனக பெர்ணான்டோ தொடர்ந்த்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் பிணையில் உள்ளனர். மேலும் கடந்த வாரம் இவ்வழக்கு மாளிகாந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது சி.ஐ.டி. அதிகாரிகளுடன் மன்றில் ஆஜரான பிரதி சொலசீட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம ஆய்வுக்காக வழங்கப்பட்ட மருந்த்து மாதிரிகளின் உள்ளடக்கம் குறித்து நீதிமன்றத்திற்கு பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பித்து உப்பு நீர் மற்றும் பாக்டீரியாவால் மாசுபட்ட கரைசலை வழங்க அரசாங்கம் 14.44 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் இந்த தரமற்ற மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான சி.ஐ.டி. விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் அறிவித்தார்.இது தொடர்பில் மாளிகாகந்த நீதிவான் லோச்சனி அபேவிக்ரமவுக்கு சி.ஐ.டி. குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் விதிவிதாங்களின் படி இறுதி அறிக்கையை கையளித்தது. அதன்படி கெஹலிய உள்ளிட்ட சந்தேக நபர்கள் தொடர்புபட்டு தருவிக்கப்பட்ட தரமற்ற சுவாச நோயாளர்களுக்கு வழங்கபப்டும் ஹியூமன் இம்யூனோ குளோபியுலின் மருந்தில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷம் அடங்கிய பாக்டீரியா உள்ளடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஜெர்மனி நாட்டின் ஆய்வகத்திலிருந்து அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம மன்றில் தெரிவித்தார். இதனைவிட குறித்த விசாரணையுடன் தொடர்புபட்ட புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் ' ரிடொக்ஸி மெப்' எனும் மருந்தின் உள்ளடக்கத்தில் புற்று நோயுடன் போராடக் கூடிய எந்த புரோட்டினும் உள்ளடங்கியிருக்கவில்லை எனவும் வெறும் சோடியம் குளோரைட் மட்டுமே அதில் அடங்கியிருந்ததாகவும் அந்த ஆய்வு கூட அறிக்கைகள் உறுதி செய்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம குறிப்பிட்டார். இந்த பின்னிணயிலேயே இந்த விடயத்துடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழாமும் நியமிக்கப்பட்டுள்ளது. சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முர்து பெர்ணான்டோ விடம் விடுத்த எழுத்து மூல வேண்டுகோளை பரிசீலித்து இந்த நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை நிரந்தர மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரிக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி இந்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மஹேன் வீரமன் அமாலி ரணவீர பிரதீப் அபேரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகளை கொண்டதாக பிரதம நீதியரசரால் பெயரிடப்பட்டுள்ளது. அரசுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட தீங்கைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதிச் சேவை சட்டத்துக்குஇ 2018 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஒரு சிறப்பு வழக்காகக் கருதி நிரந்தர மூன்று பேர் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று சட்டமா அதிபர் கோரியிருந்தார். இதற்கமைய பிரதம நீதியரசர் நீதிபதிகளை நியமித்த நிலையில் சட்டமா அதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல்ச் செய்துள்ளார். தரமற்ற ஹியூமன் இம்யூனோ குளோபியுலின் தடுப்பூசியை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியமை மற்றும் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக அயுசுலேட் பயோ டெக் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜனக பெர்ணான்டோ, சுகாதார அமைச்சின் மருத்துவ வினியோக பிரிவின் பணிப்பாளராக இருந்த வைத்தியர் கபில விக்ரமநாயக்கஇ மருத்துவ வினியோக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சாந்த்தனி சொலமன் கணக்காளர் ( விநியோகம்) நெரான் தனஞ்சயஇகை இருப்பு கட்டுப்பாட்டாளர் சுஜித் குமாரஇ சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சிறி சந்ர குப்த வைத்திய விநியோக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேரத் முதியன்சலாகே தர்மசிறி ரத்னகுமார ஹேரத்இ முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அவசர கொள்முதல் நடவடிக்கைகள் குறித்த கொள்முதல் குழுவின் உறுப்பினர் வைத்தியர் ஜயநாத் புத்பிட்டியஇ சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க மருத்துவ வினியோகபிரிவின் பணிப்பாளர்களில் ஒருவரான வைத்தியர் அரம்பேகெதர துஷித்த சுதர்ஷன ஆகியோருக்கு எதிராகவே வழக்கு தொடர சட்ட மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் | Virakesari.lk
-
வார இறுதி நாள்களில் சேவையை மேற்கொண்ட கடுகதி புகையிரத சேவை யூலை 7 முதல் தினசரி சேவையாக முன்னெடுக்கப்படும்
வார இறுதி நாள்களில் சேவையை மேற்கொண்ட கடுகதி புகையிரத சேவை யூலை 7 முதல் தினசரி சேவையாக முன்னெடுக்கப்படும் - யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன்! 6 Jun, 2025 | 03:46 PM இதுவரை காலமும் வார இறுதி நாள்களில் சேவையை முன்னெடுத்து வரும் குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை (26) கருத்து கூறுகையில், பொதுமக்களால் புகையிரத திணைக்களம் மற்றும் துறைசார் தரப்பினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இதுவரைகாலமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் குறித்த புகையிரதம் தனது சேவையை முன்னெடுத்துவந்தது. இந்நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு தகது சேவையை முன்னெடுப்பதுடன் கொழும்பு கோட்டையிலிருந்து 5.45 யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிப்பதுடன் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை மதியம் 11.49 வந்தடையவுள்ளது. அதன்பின்னர் காங்கேசன்துறையை 12.13 சென்றடையும். மீண்டும் மாலை 1.50 க்கு காங்கேசன்துறையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கும் குறித்த புகையிரதம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து 2.12 புறப்பட்டு கொழு்ம்பு கோட்டையை முன்னிரவு இரவு 8.33 சென்றடையும். அதேவேளை கல்கிசையை முன்னிரவு இரவு 8.55 சென்றடையும் ஒழுங்கில் சேவையை முன்னெடுக்கவுள்ளது. இதேநேரம் குறித்த கடுகதி புகையிரத சேவைக்கான ஆசன முற்பதிவுகள் அடுத்த ஒருசில தினங்களில் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்திருந்த யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அத்தியட்சகர் அதனை புகையிரத திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் முன்னெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை இதுவரைகாலமும் 5.45 க்கு கொழு்ம்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்ட யாழ் தேவி புகையிரதமானது எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் காலை 6.35 மணிக்கு தனது சேவையை ஆரம்பிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வார இறுதி நாள்களில் சேவையை மேற்கொண்ட கடுகதி புகையிரத சேவை யூலை 7 முதல் தினசரி சேவையாக முன்னெடுக்கப்படும் - யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன்! | Virakesari.lk
-
கிளிநொச்சியில் எரிபொருள் தாங்கி வாகனம் தடம் புரண்டது
26 Jun, 2025 | 04:47 PM கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் தாங்கி வாகனம் இன்று வியாழக்கிழமை (26) அதிகாலை தடம் புரண்டுள்ளது. முத்துராஜவெலவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த குறித்த எரிபொருள் தாங்கி இன்று அதிகாலை 1.மணிக்கு தடம்புரண்டது. குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை பெருமளவான டீசல் வெளியேறிதனால் பொது மக்கள் அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
-
வலி. வடக்கில் விடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அருகில் உள்ள இராணுவத்தின் முன்னரங்க வேலிகளை நகர்த்த கோரிக்கை
26 Jun, 2025 | 04:55 PM வலி வடக்கில் விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் , யாழ் . மாவட்ட கட்டளை தளபதியிடம் கோரியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் ராசிக குமார இன்றைய தினம் வியாழக்கிழமை (26) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். சந்திப்பின்போது, வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்குரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத போதிலும் தற்காலிக பின்னரங்க வேலியை அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. மேலும், மக்களிடம் காணிகளை மீளக்கையளிக்கும்போது அங்கு களவுகள் இடம்பெறுவதாக மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அதற்கு அமைவான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அவற்றைக் கையளிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார். வடக்கில் நிலவும் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் இராணுவத் தளபதி ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இந்தச் சந்திப்பின் இறுதியில் நினைவுச் சின்னங்களை ஆளுநரும், இராணுவத் தளபதியும் பரிமாறிக்கொண்டனர். வலி. வடக்கில் விடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அருகில் உள்ள இராணுவத்தின் முன்னரங்க வேலிகளை நகர்த்த கோரிக்கை | Virakesari.lk
-
"கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் ஒரு மாலைப்பொழுது" - கனடாவில் பிரதமர்
26 Jun, 2025 | 05:46 PM பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பொதுநலவாயக் கல்வி அமைப்பின் (COL) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 2025 ஜூன் 24 ஆம் திகதி கனடாவின் வான்கூவர் நகரை சென்றடைந்தார். அங்கு அவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசாங்கம், பொதுநலவாயக் கல்வி அமைப்பு மற்றும் கனடாவின் உலகளாவிய விவகாரங்கள் (Global Affairs Canada) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார். அத்தோடு, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த "கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் ஒரு மாலைப்பொழுது" எனும் தலைப்பிலான சிறப்பு சமூக கலந்துரையாடலில் கலந்துகொண்டார். இந்நிகழ்வு, கனடாவில் வசிக்கும் சமயத் தலைவர்களுக்கும் இலங்கை சமூகத்தினருக்கும் பிரதமருடன் கலந்துரையாடுவதற்கான ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது. "கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் ஒரு மாலைப்பொழுது" - கனடாவில் பிரதமர் | Virakesari.lk
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது 26 Jun, 2025 | 07:28 PM செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் வியாழக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய வியாழக்கிழமை (26) இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி, சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுகள் இடம் பெற்றன. மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் புதை குழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் 45 நாட்களுக்கு இரண்டாம் கட்ட அகழ்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி அகழ்வுகளுக்கான செலவீன பாதீடு சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றும் என்ற உத்தரவிற்கு அமைய வியாழக்கிழமை (26) இரண்டாம் கட்ட அகழ்வுகளை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினத்துடன் இதுவரை 22 மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 45 நாட்களுக்கு பாதீட்டு அளவு உள்ளதால் முதல் 15 நாட்களுக்கு அகழ்வு பணிகள் சிறிய இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது | Virakesari.lk
-
மனிதப் படுகொலை, ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும் - இலங்கைக்கான ஈரானிய தூதுவர்
26 Jun, 2025 | 07:34 PM (இராஜதுரை ஹஷான்) நெருக்கடியான சூழநிலையில் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானத்தை செயற்படுத்தினால் உலக பொருளாதாரம் மற்றும் உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் இந்த தீர்மானத்தை நாங்கள் அமுல்படுத்தவில்லை என இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் தெரிவித்தார். மனிதப் படுகொலை மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும். உலக அமைதியை ஈரான் என்றும் வலியுறுத்துகிறது. இருப்பினும் எமது தேசியம் மற்றும் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதற்கு எதிராக போராடும் பொறுப்பு எமக்கு உண்டு எனவும் ஈரானிய தூதுவர் குறிப்பிட்டார். கொழும்பில் உள்ள ஈரானிய தூதரகத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சர்வதேச யுத்த சட்டங்களுக்கு எதிராகவே இஸ்ரேல் செயற்படுகிறது. காஸாவின் உண்மை நிலையை சகல உலக நாடுகள் நன்கறியும்.அங்கு நாளாந்தம் சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட சிவில் பிரஜைகள் கொல்லப்படுகிறார்கள். மனிதப் படுகொலை மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும்.அனைவருக்கும் பொதுவான கடப்பாடுகள் உள்ளன. உலக நாடுகளின் அமைதியை ஈரான் என்றும் வலியுறுத்துகிறது. அனைத்து பிரச்சினைகளுக்கும் இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாகவுள்ளோம்.இருப்பினும் ஒருசில நாடுகள் இராஜதந்திர கொள்கையை பின்பற்றவில்லை. எமது தேசிய மற்றும் இறையாண்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. ஈரான் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு அமைவாகவே செயற்படுகிறது. மக்களின் அபிலாசைகளும்,அரச தீர்மானங்களும் தற்போதைய நிலையில் ஒருமித்ததாக உள்ளது. நெருக்கடியான சூழநிலையில் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானத்தை செயற்படுத்தினால் உலக பொருளாதாரம் மற்றும் உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் இந்த தீர்மானத்தை நாங்கள் அமுல்படுத்தவில்லை. தற்போதைய நெருக்கடியான சூழலில் இலங்கை ஈரானுடன் இணக்கமாக பொதுவான வெளிவிவகார கொள்கையில் செயற்பட்டுள்ளது.இலங்கை எமது வரலாற்று ரீதியிலான நண்பன் என்றே குறிப்பிட வேண்டும்.இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார். மனிதப் படுகொலை, ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும் - இலங்கைக்கான ஈரானிய தூதுவர் | Virakesari.lk
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு?
தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய வெப் தொடரை இயக்கியுள்ளார். புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் புத்தத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. Published:20 Jun 2025 9 PMUpdated:20 Jun 2025 9 PM ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள The Hunt - The Rajiv Gandhi Assassination Case (வேட்டை - ராஜீவ்காந்தி கொலை வழக்கு) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்தத் தொடரை குக்குனூர் மூவீஸுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பலகோணங்களில் கதைகள் இருக்கும் சூழலில், புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins (தொண்ணூறு நாள்கள்: ராஜிவ் காந்தியின் கொலையாளிகளைத் தேடிய உண்மைக் கதை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடரை உருவாக்கியுள்ளனர். இந்தத் தொடரில், அமித் சியால், சாஹில் வைத், பகவதி பெருமாள், டேனிஷ் இக்பால், கிரிஷ் சர்மா, வித்யுத் கார்கி, ஷபீக் முஸ்தபா, அஞ்சனா பாலாஜி, பி. சாய் தினேஷ், ஸ்ருதி ஜயன், கௌரி மேனன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ள அமித் சியால், "இது வெறும் க்ரைம் விசாரணை ட்ராமா இல்லை, எப்படிக் கண்ணுக்குப் புலப்படாத கைகள் வரலாற்றை வடிவமைக்கின்றன என்பதைப் பற்றியது. இந்தக் கதாபாத்திரம் அதிகாரத்தையும் துக்கத்தையும் நீதியின் இருண்ட மூலைமுடுக்குகளையும் ஆராய்வது எனக்குச் சவாலானதாக இருந்தது. உண்மை மற்றும் எதிர்த்து நிற்கும் தன்மையில் வேரூன்றியிருக்கும் ஒரு பாத்திரத்தில் நடித்ததற்குப் பெருமைகொள்கிறேன்" எனப் பேசியுள்ளார். தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளார். இவருடன் ரோஹித் பனவாலிகர் மற்றும் ஸ்ரீராம் ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வருகின்ற ஜூலை 4ம் தேதி இந்தத் தொடர் வெளியாகவிருக்கிறது. Also Read ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு? - Vikatan
-
கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது
Editorial / 2025 ஜூன் 19 , பி.ப. 02:58 - 0 - 35 முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மேலும் இரண்டு மகள்களான சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி நயனிகா ரம்புக்வெல்ல ஆகியோரும் அமலியின் கணவரும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வின் கூற்றுப்படி, ரூ. 134 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அறிவிக்கப்படாத சொத்துக்கள் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.இதில் ரூ. 40 மில்லியன் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ. 20.5 மில்லியன் மதிப்புள்ள பென்ஸ் கார் மற்றும் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 40 நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவை அடங்கும். மூன்று சந்தேக நபர்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மற்றொரு மகளையும் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்தது. அவர்கள் புதன்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால், விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். Tamilmirror Online || கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது
-
மஹிந்த, மைத்திரி, ரணில், பசில்: கால்நடை ஊழலில் சிக்குவர்
முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, ஹரிசன், விஜித் விஜிதமுனி டி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் 110 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கால்நடை இறக்குமதி ஊழலில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பதி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் யாரும் தப்பிக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார். "அவர்களில் யாருக்கும் எந்த கருணையும் காட்டப்படாது" என்று அவர் கூறினார். பால் கறப்பதற்காக பசுக்களை இறக்குமதி செய்வது என்ற போர்வையில் வயதான பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். Tamilmirror Online || மஹிந்த, மைத்திரி, ரணில், பசில்: கால்நடை ஊழலில் சிக்குவர்
-
தெல்லிப்பழைப்பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்; சீரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!
தெல்லிப்பழைப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளைப் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளாக சீரமைத்துத்தருமாறு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜே/213 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள செல்லத்துரை வீதியில் சமிக்ஞை விளக்கு மாத்திரம் காணப்படுகின்றது. சுமார் 500 முதல் 550 பயணிகள் வரை இந்த வீதியைப் பயன்படுத்துகிறார்கள். ஜே/227 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கோயில்குளம் வீதியில் 1000 முதல் 1500 பயணிகள் வரை வீதியைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் புகையிரதக்கடவைக்கு சமிக்ஞையும் பாதுகாப்புக் கடவையும் இல்லை. ஜே /234 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சந்தை வீதியில் காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்குரிய பாதுகாப்புக்கடவை சமிக்ஞை இல்லை. ஜே / 235 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள குரு வீதியில் காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்குரித்தான ரயில் கடவையை 200 முதல் 225 வரையான பயணிகள் பயன்படுத்துகின்றனர். இதில் சமிக்ஞை விளக்குள்ள பொழுதிலும் பாதுகாப்புக்கடவை இல்லை. ஜே/236 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மாவிட்டபுரம் மயிலிட்டி வீதியில் அமைந்துள்ள மாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்குரிய ரயில் கடவையை 500 முதல் 600 வரையான பயணிகள் பயன்படுத்தும் நிலையில் சமிக்ஞை விளக்கு மாத்திரமே உள்ளது. ஆனால் பாதுகாப்புக்கடவை காணப்படவில்லை. ஜே/237 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பொன்னு சீமா வீதியிலுள்ள ரயில் கடவை 100 முதல் 125 பயணிகள் வரை பயன்படுத்துகின்றனர். சமிக்ஞை விளக்குள்ள பொழுதிலும் பாதுகாப்புக் கடவை இல்லை. இதுவரை இந்தக் கடவைகளில் 4 விபத்துகள் பதிவு செய்யப்பட் டுள்ளதுடன் ஓர் உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இவை குறித்து விரைந்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர். தெல்லிப்பழைப்பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்; சீரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!