Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்தம் வாழ்ந்த வீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்து போன ஒரு கணத்தைப் போல இந்தக் கணம் இல்லை. அப்போது சுவாசித்த காற்று வேறு, இப்போது சுவாசிக்கும் காற்று வேறு. அப்போது உடலில் இருந்த அணுக்களின் எண்ணிக்கையல்ல இப்போது இருப்பது. கடந்த வினாடியை விட ஒரு வினாடி வயது அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு கணத்தின் பிறப்பும் முந்தைய கணத்தின் இழப்பிலிருந்தே பிறப்பெடுக்கிறது. இழப்புகள் வலிமிகுந்தவை. அவை வார்த்தைகளுக்குள் அடங்காமல் திமிறிச் சிதறுகின்றன.

மனதின் பரணில் அடைகாக்கும் நினைவுகள் கால்நூற்றாண்டுத் தூசிகளுடன் பத்திரமாய் இருக்கின்றன. உதறுகையில் எழும் தும்மலில் காலங்கள் கண்களுக்கு முன்னால் விரியும். 

ஒவ்வொரு முறை கிராமத்து வீட்டுக்குச் செல்லும் போதும் எனக்குள் எழும் கலவையான உணர்வுகளை இனம் காண முடிவதில்லை. அந்த ஓட்டு வீட்டின் முற்றம் ஒரு காலத்தில் சத்தங்களின் சங்கமமாய் இருந்தது. விளையாட்டின் சிரிப்பொலிகள் உடைந்து சிதறிக் கிடக்கும் முற்றங்கள் அவை. ஏழு சின்னஞ் சிறுசுகளின் விளையாட்டு தேசம் அந்த முற்றம் தான். அம்மா அப்பா அப்புப்பன் அம்மச்சி என பதினோரு குரல்களின் கூடுகை அந்த முற்றம் தான்.

வீட்டின் படிக்கட்டுகளில் அமர்ந்து கதைகள் பேசுவது எங்கள் பிடித்தமான மாலை நேரப் பொழுது போக்கு. சிரிப்புகள், சண்டைகள், திட்டுகள் என அந்தப் படிக்கட்டுகளில் விழுந்து படிந்த கதைகள் இப்போது தனிமையில் காத்திருக்கின்றன. பாலை நிலத்தில் பெய்யும் மழை போல எப்போதேனும் என்றாகிப் போனது ஊர் பயணம். பிடுங்கி எடுத்து நகரத்தில் நடப்பட்டாலும் இன்னும் வேர்களின் துழாவல் கிராமத்து நிலங்களில் தான்.

எப்போது அந்த வீட்டுக்குப் போனாலும் படிக்கட்டில் அமர்வேன். நினைவுகள் சுழன்றடிக்கும். கவலைகளையெல்லாம் பெற்றோரின் தோள்களில் சுமத்தி விட்டு பிள்ளைகளெல்லாம் ஆடிப் பாடிய ஆனந்த நினைவுகள் கால்களுக்குள் சிலிர்ப்பாய் வழியும். அந்த பனைக்காலக் கனவுகளின் கருப்பட்டிச் சுவையும், அது தாண்டிய மாம்பழக் காலக் கனவுகளும், அதிகாலையில் பெய்யும் அடைமழைபோல மனதுக்குள் தளும்புகின்றன.

"உள்ளே சேர்ல வந்து இரி மோனே" 

அம்மாவின் குரல் மட்டும் காலங்கள் கடக்கக் கடக்க அன்பினால் கனத்துக் கொண்டே இருக்கிறது. எனக்கு சேரில் அமர்வதை விட படிகளில் அமர்வதே பிடித்திருக்கிறது. படிகளில் தூசு இருக்கும், அழுக்கு இருக்கும் என்பது அம்மாவின் கவலை. அதில் மட்டும் தான் எனது பால்யகாலத்தின் பரவச நினைவுகள் அடுக்கடுக்காய் இருக்கின்றன. அந்த காற்று என்னை வந்து விசாரிப்பதாய் எனக்குத் தோன்றும். அந்த மாமரம் என்னைப் பார்த்ததும் ஆனந்தத்தில் புன் சிரிப்பதாய்த் தோன்றும். பின்பக்கப் புளியமரம் எனது வருகை பார்த்து எட்டிப் பார்ப்பதாய் மனம் சிலிர்க்கும்.

"வாடே.. யாத்ற நல்லா இருந்துதா ?" 

என பிரியத்துடன் ஒலிக்கும் அப்பாவின் குரல் இப்போது நினைவுகளில் மட்டும். அவருடைய விரல்களைப் பிடித்து நடந்த வரப்புகள் இப்போது தனிமையின் ஏக்கத்தில். அந்த கிராமத்தின் மூலைகளில் இன்னும் கலையாமல் இருக்கக் கூடும் அவருடைய சுவடுகள். அந்த வயல்வெளிகளில், மூவோட்டுகோணம் செல்லும் ஒற்றையடிப்பாதைக் கரைகளில் இன்னும் அழியாமல் கிடக்கக் கூடும் சில சொற்கள். அத்தனையும் அழிந்து அடுத்த தலைமுறைகள் முளைத்தெழுந்தாலும் இதயத்தின் பக்கங்களில் மட்டும் நேசம் மணக்க மணக்க இன்னும் மிதக்கிறது அவர் பார்வையும், அரவணைப்பும்.

பயணங்கள் இனிமையானவை. ஊரடைதல் என்பது மீட்படைதல். சத்தம் வாழ்ந்த வீட்டை மௌனத்தின் மடிகளில் பார்ப்பது மனதைப் பிசைந்தாலும், பாதம் படுகையில் திருவிழா ஒலிபோல தரையைப் பிளந்து கை நீட்டுகின்றன சிரிப்பொலிகள். 

எல்லோருடைய மனதிலும் நிச்சயம் இருக்கக் கூடும் இழந்து போன வலிகளின் நினைவுகள். மீண்டெடுக்கத் துடிக்கும் ஆனந்தத்தின் மிச்சங்கள். தவற விட்ட சந்தப்பங்களின் குற்ற உணர்வுகள். கால இயந்திரம் உண்டென்றால் எல்லோரும் போக விரும்பும் இடம் மழலைக்கால வீடாகத் தான் இருக்கும். நதிக்கரையில் பிறக்கும் நாகரீகம் போல மழலைக்கரைகளில் தான் பிறக்கிறது வாழ்க்கையின் உன்னத தருணங்கள். அது தான் சத்தங்கள் வாழ்ந்த இடம். அதன் பின் சத்தம் அநாகரீகமாகி விடுகிறது. மௌனமே கலாச்சாரத்தின் போலி அடையாளமாகிவிடுகிறது.

வாழ்க்கை அற்புதமானது. நாம் மழலையாய் விளையாடிய நினைவுகளை மீண்டெடுக்க நம்முடைய மழலைகள் உதவுகின்றனர். நமது குழந்தைகளாகவும், பெற்றோராகவும் பல வேளைகளில் அவர்களே கண்ணாமூச்சி ஆடுகிறார்கள். புதிய இடங்கள் புதிய அனுபவங்களைத் தருகின்றன. நமது குடும்ப வாழ்க்கை நமது பெற்றோரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டுமெனும் ஏக்கம் உள்ளுக்குள் அணையாமல் எரிகிறது. ஆனந்தங்கள் கூடுவிட்டுக் கூடுபாய்கின்றன. நிகழ்வுகள் ஒரு படியிலிருந்து இன்னொரு படிக்குத் தாவுகின்றன. உணர்வுகள் எழுதப்படாத கவிதைகளாகவும், இசைக்கப்படாத பாடலாகவும் கனவுகளின் படிக்கட்டுகளைக் கடந்து நம் இதயத்தைத் தட்டிக் கொண்டே இருக்கின்றன.

இப்போது சத்தமாய் இருக்கும் என் வீட்டைப் பற்றி என் பிள்ளைகள் நாளை சொல்லக் கூடும்.

இது, சத்தம் வாழ்ந்த வீடு !



by சேவியர்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் நிலத்தில் படுக்க மிகவும் பிடிக்கும்.நன்றி சுபேஸ் இணைப்பிற்க்கு.

வாசிக்கும் பொழுது சொந்த அனுபவத்தை உணர்வது போன்ற வலி.
 

இணைப்பிற்கு நன்றி சுபேஷ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.