கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
Mar 19, 2026 - 07:11 AM
ஈரானுக்குச் சொந்தமான 'தெற்கு பார்ஸ்' இயற்கை எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் பாதுகாப்புப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான ஈரானின் தெற்கு பார்ஸ் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அந்த எரிவாயு வயலுக்கு அருகில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், அமெரிக்கா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் இந்தத் தாக்குதலின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
அதன்படி, கத்தார் நாட்டின் ராஸ் லாஃபான் தொழில் நகரத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், அங்குள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமொன்று சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டார் மீது ஈரான் 5 ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், அவற்றில் 4 ஏவுகணைகளை கட்டார் முறியடித்த போதிலும், ஒரு ஏவுகணை ராஸ் லாஃபான் நகரில் விழுந்து வெடித்ததாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள கட்டார், இது தனது தேசிய பாதுகாப்புக்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் நேரடி அச்சுறுத்தல் எனத் தெரிவித்துள்ளது. அத்துடன், தனது இறையாண்மையைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ள கட்டார், அங்குள்ள ஈரான் இராணுவத்தினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் பணியாளர்களை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, சவுதி அரேபியாவின் ரியாத் நகர் மீது ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை முறியடிக்கப்பட்ட போது, அதன் சிதறல்கள் விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப்படை தளம் மற்றும் அபுதாபி நகர் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ள போதிலும், அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன.
ஈரானின் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலும் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. முதன்முறையாக வடக்கு ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், ஈரானின் தாக்குதலில் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்த 3 விமானங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கட்டார் அமீர் ஆகியோருடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
https://adaderanatamil.lk/news/cmmwst1y30002356p13s3r9de
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.