Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்வது கொடுப்பதற்கே - விவேகானந்தர்

Featured Replies

மறுபேச்சின்றி கீழ்ப்படிதல் -  விவேகானந்தர்

 

vivek_1862123f.jpg

 

யாருக்குக் கீழ்ப்படிதல் தெரியுமோ, அவனுக்குத் தலைமை தாங்கவும் தெரியும். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள்.
 
இந்த மேலை நாட்டினரிடையே சுதந்திர உணர்ச்சி தீவிரமானதாக இருந்தாலும், கீழ்ப்படிகிற உணர்ச்சியும் அதே அளவுக்குத் தீவிரமாக உள்ளது. நாமெல்லாம் மமதையுள்ளவர்கள். இந்த அகங்காரம் எந்த வேலையையும் நடக்க விடாது.
 
மகத்தான துணிச்சல், வரம்பில்லாத தைரியம், அபாரமான சக்தித் துடி துடிப்பு இவை எல்லாவற்றையும்விட முக்கியமாகப் பரிபூரணக் கீழ்ப்படிதல் இந்தக் குணங்கள் தனி மனிதனையும் தேசத்தையும் மறுமலர்ச்சி நிலைக்கு இட்டுச் செல்கின்றன.
 
இங்கே எல்லோரும் தலைமை தாங்க விரும்புகிறார்கள். கீழ்ப்படிய எவருமில்லை. பெரிய வேலைகளைச் செய்யும்போது, தலைவனின் கட்டளைகளை மறுபேச்சின்றிக் கீழ்ப்படிந்து நிறைவேற்ற வேண்டும்.
 
மடத்தின் சாக்கடையைச் சுத்தம் செய்வதில், எஞ்சியுள்ள எனது வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும் என்று எனது `குரு பாயி’ சகோதரர்கள் கூறினால் அந்தக் கட்டளையை எவ்வித எதிர்ப்பு முணுமுணுப்புமின்றி கீழ்ப்படிந்து கட்டாயமாக நிறைவேற்றுவேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
 
பொது நன்மையைக் கருதி வருகிற கட்டளையை, எவ்விதமான சிறு முணுமுணுப்புமின்றிக் கீழ்ப்படிந்து நிறைவேற்ற யாருக்குத் தெரிகிறதோ அவன் மட்டுமே உயர்ந்த தளபதியாக ஆகமுடியும்.
 
கீழ்ப்படிதலாகிற நல்ல குணத்தைப் பழக்கிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் உங்களது சொந்த நம்பிக்கையைக் கைவிட்டுவிடக் கூடாது. மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்காவிட்டால் எந்த வேலையையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவர, ஒரு மையப் புள்ளியில் திரட்டி ஒற்றுமைப்படுத்த முடியாது. தனிப்பட்ட சக்திகளை இப்படித் திரட்டி ஒரு மையத்தில் இணைக்காமல், எந்தப் பெரிய காரியத்தையும் நிறைவேற்ற முடியாது.
 
குறைகளை இதமாக எடுத்துச் சொல்லுங்கள்
 
எந்த ஒருவருடைய வழித்துறைகளையும் குலைக்காதீர்கள். குறை கூறுவதை அடியோடு விட்டுவிடுங்கள். வேலை செய்கிறவர்கள் சரியாக வேலை செய்து வருவதாக உங்களுக்குத் தெரிகிற வரையில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
 
அவர்கள் தவறிழைப்பதாகத் தோன்றும் போது, சாவாதானமாக அவர்களது பிழைகளை அவர்களுக்கு உணர்த்திக் காட்டுங்கள். எல்லாக் குழப்பங்களுக்கும் விஷமங்களுக்கும் மூலகாரணம் ஒருவரையொருவர் குற்றங் குறை கூறுவதுதான். பல இயக்கங்கள் நிலை குலைந்து வீழ்ச்சியுறுவதில் இதுவேதான் முக்கிய காரணமாக இருக்கிறது.
 

Edited by Athavan CH

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

விவேகானந்தர் மொழி: அன்பு செய்வது கடினம்

 

இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று ஒருவன் நம்பத் தொடங்கிய உடனே, அவனைக் காண்பதற்கான ஏக்கத்தால் பித்தனாவான். பிறர் தத்தம் வழியில் சென்று கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போது வாழ்ந்து வருகின்ற வாழ்வைவிட மிக உயர்ந்த வாழ்வு ஒன்று உள்ளது என்ற உறுதியைப் பெற்றவன், புலன்களே எல்லாம் அல்ல, அழிவற்ற, என்றுமுள்ள, இறவாத ஆன்ம இன்பத்தோடு ஒப்பிடும்போது எல்லைக்குட்பட்ட இந்த ஜடஉடல் வெறும் பூஜ்யம் என்ற உறுதி வரப்பெற்றவன், அந்தப் பேரின்பத்தைத் தானே உணரும்வரை பித்தனாகத்தான் ஆவான்.

 
இந்தப் பைத்தியம், இந்தத் தாகம், இந்த வெறிதான் ஆன்மிக `விழிப்புணர்வு’ எனப்படுவது. இது தோன்றிய பின்னரே ஒருவன் ஆன்மிகவாதியாகத் தொடங்குகிறான். ஆனால் இந்த நிலை தோன்ற நீண்ட காலம் தேவைப்படும்.
 
உருவங்கள், சடங்குகள், பிரார்த்தனைகள், தீர்த்த யாத்திரைகள், சாஸ்திரங்கள், மணிகள், மெழுகுவர்த்திகள், பூஜாரிகள் ஆகிய எல்லாமே வெறும் ஆயத்தங்கள்தான். இவை ஆன்மாவின் அழுக்குகளை நீக்குகின்றன. ஆன்மா தூய்மை அடைந்ததும், தன் சொந்த இருப்பிடத்தை இயல்பாகவே நாடுகிறது. அந்த இருப்பிடம் தூய்மை அனைத்திற்கும் உறைவிடமான இறைவனே.
 
பல நூற்றாண்டுகளாகத் தூசி படிந்து மூடிக் கிடக்கின்ற ஓர் இரும்புத் துண்டு காலங்காலமாக ஒரு காந்தத்தின் அருகே இருக்கலாம், எனினும் அதனால் கவரப்படாதிருக்கும்; தூசு அகற்றப்பட்டால் உடனே காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது. அதுபோலவே காலங்காலமாகப் படிந்த தூசும், மாசும், தீமையும், பாவமும் மூடியுள்ள மனித ஆன்மா, இந்த வழிபாடுகளாலும், சடங்குகளாலும், பிறருக்கு நன்மை செய்வதாலும் பிற உயிர்களை நேசிப்பதாலும், பல பிறவிகளுக்குப் பிறகு போதிய அளவு தூயதாக்கும்போது, அதற்கு இயல்பாயுள்ள ஆன்மிகக் கவர்ச்சி வெளிப்படுகிறது. அது விழிப்படைகிறது. இறைவனை நோக்கிச் செல்லப் பாடுபடுகிறது. என்றாலும் இந்த உருவங்களும் சின்னங்களும் வெறும் ஆரம்பமே; அவை உண்மையான இறையன்பு ஆகாது.
 
அன்பைப் பற்றிப் பேசுவதை எங்கும் கேட்கிறோம். இறைவனை நேசி என்று ஒவ்வொருவனும் சொல்கிறான். ஆனால் அன்பு செய்வது என்றால் என்ன என்பது மக்களுக்குத் தெரியுமா என்றால், கிடையாது. தெரிந்திருந்தால் அவ்வளவு எளிதாக அதைப் பற்றிப் பேச மாட்டார்கள். ஒவ்வொருவனும் தன்னால் அன்பு செய்ய இயலும் என்கிறான். ஐந்து நிமிடம்தான் அதற்குள் தன் இயல்பில் அன்பு இல்லை என்பதைக் கண்டுகொள்கிறான். அன்பைப் பற்றிய பேச்சு உலகில் நிறைந்துள்ளது. ஆனால் அன்பு செய்வது கடினம்.
 
  • தொடங்கியவர்

விவேகானந்தர் மொழி: நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் பொய்

 

swamiji_2368263h.jpg

 

 
துன்பங்களை நான் அறிவேன். அவை ஏராளம். நம்முள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ஊக்கம் குன்றி, துணிவை இழந்து துன்ப நோக்கு உடையவர்களாகிவிடுகிறோம். நேர்மையிலும், அன்பிலும், கம்பீரமாகவும், மேன்மையாகவும் உள்ள அனைத்திலும் நம்பிக்கை இழந்துவிடுகிறோம்.
 
ஆக, வாழ்வைப் புதிதாகத் தொடங்கும்போது மன்னிப்பவர்களாக, அன்புடையவர்களாக, எளிமையானவர்களாக, கள்ளம் கபடம் அற்றவர்களாக இருந்த மக்கள் வயது முதிரும்போது பொய்மையே பூண்ட போலிகளாகிவிடுவதைக் காண்கிறோம். அவர்களுடைய உள்ளங்கள் சிக்கல் நிறைந்தவை ஆகிவிடுகின்றன. பார்வைக்கு அவர்கள் மிகவும் அமைதியாக இருக்கலாம். அவர்கள் சீற்றம் கொள்வதில்லை. அவர்கள் ஒன்றும் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் சீற்றம் கொள்வதும் பேசுவதும் அவர்களுக்கு நல்லது.
 
நமது குழந்தைப் பருவம் முதலே, காலமெல்லாம், நமக்கு வெளியேயுள்ள ஏதோ ஒன்றின்மீது பழி சுமத்தவே நாம் முயன்றுவருகிறோம். நாம் எப்போதும் பிறரைத் திருத்தத்தான் கங்கணம் கட்டுகிறோமே தவிர, நம்மையே திருத்திக்கொள்ள முயல்வதில்லை. நமக்குத் துயரம் வந்தால், ஆ! இது என்ன பேய் உலகம்! என்கிறோம். பிறரைச் சபிக்கிறோம். என்ன முட்டாள் பைத்தியங்கள் என்கிறோம். நாம் உண்மையிலே அவ்வளவு நல்லவர்கள் என்றால் அத்தகைய பேயுலகில் நாம் ஏன் இருக்க வேண்டும்? இது பேய்களின் உலகம் என்றால் நாமும் பேய்களே.
 
இல்லாவிடில் நாம் ஏன் இங்கே இருக்க வேண்டும்? இந்த மனிதர்கள் எவ்வளவு சுயநலம் பிடித்தவர்கள் என்றால் அவர்களது கூட்டத்தில் நாம் ஏன் இருக்க வேண்டும் சற்றே சிந்தியுங்கள். நமது தகுதிக்கு ஏற்றதையே நாம் பெறுகிறோம். உலகம் கெட்டது. நாம் நல்லவர்கள் என்று சொன்னால் அது பொய். அப்படி ஒருபோதும் இருக்கமுடியாது. அது நமக்கே நாம் சொல்லிக்கொள்ளும் ஒரு பெரும் பொய்.
 
கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடம் இதுவே. வெளியிலுள்ள எதையும் சபிக்காமலும் வெளியிலுள்ள ஒருவர் மீதும் பழி சுமத்தாமலும் இருக்கத் தீர்மானியுங்கள். மனிதனாக இருங்கள். எழுந்து நில்லுங்கள். பழியை உங்கள் மீதே சுமத்திக்கொள்ளுங்கள். எப்போதும் அதுவே உண்மை என்பதை அப்போது காண்பீர்கள். உங்களையே வசப்படுத்திக் கொள்ளுங்கள்.
 
நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும். பிறரைக் கவனிப்பதைச் சிறிது காலம் விட்டுவிட வேண்டும்.
 

"இங்கே எல்லோரும் தலைமை தாங்க விரும்புகிறார்கள். கீழ்ப்படிய எவருமில்லை. ".

"இங்கே எல்லோரும் தலைமை தாங்க விரும்புகிறார்கள். கீழ்ப்படிய எவருமில்லை. ".

இந்த இந்திய பிரச்சினை கனடாவிலும் தொடர்கிறது. எல்லோரும் மற்றோரை வேலை வாங்குவதிலேயே குறி. அதனால் தான் கடந்த பத்து ஆண்டுகளாக தென்னிந்திய திராவிடரை மேற்கு வேலைக்கு உள்வாங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இந்திய பிரச்சினை கனடாவிலும் தொடர்கிறது. எல்லோரும் மற்றோரை வேலை வாங்குவதிலேயே குறி. அதனால் தான் கடந்த பத்து ஆண்டுகளாக தென்னிந்திய திராவிடரை மேற்கு வேலைக்கு உள்வாங்குகிறது.

 

அப்போ

இனி தமிழன் அங்கெல்லாம் வேலைக்குப்போகமுடியாது.... :(

  • தொடங்கியவர்
விவேகானந்தர் மொழி: நான்கு கொடைகள்
 
vivekananthar_2272431f.jpg
 
நாம் போதுமான அளவு உணவு அளித்து வந்துள்ளோம். நம்மைவிட அதிகமான ஈகைக்குணம் வாய்ந்த தேசம் எதுவும் இல்லை. பிச்சைக்காரன் கூடத் தனது வீட்டில் சிறு துண்டு ரொட்டி இருக்கிற வரையில் அதில் பாதியை தானம் செய்துவிடுவான். இத்தகைய அதிசயத்தைப் பாரத நாட்டில் மட்டுமே காணமுடியும். உணவு தானம் செய்தது போதும். மற்றுமுள்ள இரண்டு தானங்களாகிய ஆத்மீக ஞானத்தையும் உலகியல் ஞானத்தையும் அளிக்க முற்படுவோம்.
 
நம்மிடம் வீரமிருந்து நமது உள்ள உறுதி குலையாததாக இருக்குமாயின், பரிபூரண உண்மை உள்ளத்துடன் நாம் இந்த வேலையாகிற சக்கரத்தில் நமது தோள்களைப் பதியவைத்துத் தள்ளுவோமாயின், இருபத்தைந்து ஆண்டுகளில் பிரச்சினை தீர்ந்துவிடும். போராடுவதற்கு எதுவும் எஞ்சியிராது. பாரத தேசம் முழுவதும் மீண்டும் ஒருமுறை ஆரிய பூமியாகிவிடும்.
 
வியாசரை நான் போற்றி வணங்குகிறேன். மகாபாரதத்தை இயற்றியவரான வேத வியாசர் கூறுகிறார்.
 
“இந்தக் கலியுகத்தில் அரிய சாதனை ஒன்று இருக்கிறது. மற்ற யுகங்களில் அநுஷ்டிக்கப்பட்டுவந்த தபோ முறைகளும் கடினமான யோக அநுஷ்டானங்களும் இக்காலத்தில் அநுஷ்டிக்கக் கூடியனவாக இல்லை. இக்காலத்தில் நாம் செய்யக்கூடிய உயர்ந்த சாதனை தானதர்மம்தான்.
 
தானங்களில் எல்லாம் தலையாயது ஆத்மீக ஞானம் புகட்டுதல்; அதற்கடுத்து உலகியல் அறிவு கற்பித்தல்; இதற்கு அடுத்து ஒருவனுடைய உயிரைக் காப்பாற்றுதல்; கடைசியாக உணவும் நீரும் அளித்தல்.
 
ஆத்மீக ஞானம் அளிப்பவன் ஓர் ஆத்மாவைப் பல பிறவிகளிலும் பிறந்து உழலாமல் காப்பாற்றுகிறான். உலகியல் அறிவு புகட்டுகிறான் ஆத்மீக ஞானத்தை அடைவதற்காக மனிதர்களின் கண்களைத் திறந்துவிடுகிறான். மற்ற தானங்களெல்லாம், உயிரைக் காப்பாற்றுதல்கூட இந்த இரு தானங்களைவிட மிகத் தாழ்ந்த படிகளில்தான் உள்ளன. ஆதலால் ஆத்மீக அறிவு புகட்டுவதே அனைத்திலும் சிறந்த பணி; நாம் செய்யக்கூடிய மற்றவிதமான தொண்டுகளெல்லாம் தாழ்ந்தவை என்பதை நீங்கள் அறிந்துணர வேண்டுவது அவசியம்.
 
மனிதனுக்கு ஆத்மீக ஞானம் அளிக்கிறவன்தான் மனித குலத்துக்குப் பேருபகாரம் செய்தவனாவான். ஆத்மீக முறையே நமது வாழ்க்கையின் எல்லா நடவடிக்கைகளுக்கும் உண்மையான அஸ்திவாரம். ஆகவேதான் மனிதனுடைய ஆத்மீகத் தேவைகளில் உதவியவர்கள் மிகுந்த சக்தியும் செல்வாக்கும் பெற்று விளங்கினார்கள்.
 
ஆத்மிகத் துறையில் பலத்துடனும அசைக்க முடியாமலும் விளங்குகின்ற மனிதன், தான் விரும்பினால், மற்றெல்லாத் துறைகளிலும்கூட வலிமையுடன் விளங்கமுடியும். மனிதனுக்கு ஆத்மிக பலம் ஏற்படுகிறவரை அவனால் தனது வாழ்க்கையின் உலகியல் தேவைகளைக்கூட நன்கு பூர்த்திசெய்துகொள்ள முடியாது.
 
 
  • தொடங்கியவர்

விவேகானந்தர் மொழி: கடவுள், இயல்பின் ஒரு பகுதி

 

vivek_2397781f.jpg

 

 
இந்தப் புற உலகம் வெறும் நிமித்தம் மட்டுமே. நாம் காண்பன எல்லாம் நம் உள்ளங்களிலிருந்து வெளிப்படுத்தப்பட்டவை. முத்துச் சிப்பிக்குள் நுண்ணிய மணல் புகுந்துவிடுகிறது. அது அந்தச் சிப்பியை உறுத்துகிறது. அந்த உறுத்தலின் விளைவாகச் சிப்பியில் ஒருவிதத் திரவம் சுரக்கிறது. அது அந்த மணலை மூடிக் கொள்கிறது. அதன் இறுதி விளைவே அழகிய முத்து.
 
நாம் எல்லோரும் செய்வதும் இதுதான். புறப்பொருட்கள் நமக்கு சூசகங்களை மட்டுமே தருகின்றன. அவற்றின்மீது நாம் நமது லட்சியங்களை ஏற்றி நமக்கான பொருட்களை உண்டாக்கிக் கொள்கிறோம். இந்த உலகைத் தீயவர்கள் முழு நரகமாகக் காண்கின்றனர். நல்லவர்கள் பூரண சொர்க்கமாகக் காண்கின்றனர்.
 
காதலர்கள் காதல் நிரம்பியதாகவும், வெறுப்பவர்கள் வெறுப்பு நிரம்பியதாகவும் காண்பார்கள். போராளிகளுக்கு இந்த உலகில் போரைத் தவிர எதுவும் தெரியாது. அமைதியை நாடுவோர் அமைதியைத் தவிர வேறெதையும் காண மாட்டார்கள். அவ்வாறே நிறைமனிதன் இறைவனைத் தவிர வேறு எதையும் காணமாட்டான்.
 
எனவே நாம் மிக உயர்ந்த நமது லட்சியத்தையே எப்போதும் வணங்குகிறோம். லட்சியத்திற்காகவே லட்சியத்தின்மீது அன்பு செய்யும் நிலையை நாம் அடையும்போது எல்லா வாதங்களும் சந்தேகங்களும் என்றென்றைக்குமாக அழிந்துவிடும்.
 
கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியுமா, முடியாதா? அதுபற்றி யாருக்குக் கவலை? ஆனால் லட்சியம் ஒருநாளும் என்னைவிட்டுப் போகாது. ஏனெனில் அது எனது சொந்த இயல்பின் ஒரு பகுதி. நான் இருக்கிறேனா என்ற சந்தேகம் எழுந்தால் மட்டுமே லட்சியத்தைப் பற்றிய சந்தேகமும் எழும். அதைப் பற்றிச் சந்தேகம் வராதபோது இதைப் பற்றியும் சந்தேகம் வர வழியில்லை.
 
  • தொடங்கியவர்

விவேகானந்தர் மொழி: பலவீனர்களால் ஆண்டவனை அடைய முடியாது

 

vivek_2405687f.jpg

 

“என் சோகம் சொல்லி மாளாது” - என்று சொல்வது ஆன்மிகம் ஆகாது. அது வெறும் காட்டுமிராண்டித்தனம். ஒவ்வொருவனுக்கும் சுமக்க அவனது சொந்தச் சுமை உள்ளது. நீங்கள் சோகமாக இருந்தால், மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள். உங்கள் துக்கத்தை வெற்றி கொள்ள முயலுங்கள்.

 
பலவீனர்களால் ஆண்டவனை அடைய முடியாது. ஒருபோதும் பலவீனர்களாக இருக்காதீர்கள். வலிமை படைத்தவர்களாக இருக்க வேண்டும். உங்களுள் அளவற்ற பலம் இருக்கிறது. இல்லாவிடில் எப்படி எதனையும் வெற்றிகொள்ள முடியும்? எப்படிக் கடவுளை நெருங்க முடியும்?
 
அதேசமயம் அளவுக்கு மீறிய களிப்பையும் தவிர்க்க வேண்டும். மிதமிஞ்சிய அந்த நிலையில் இருக்கும் மனத்தில் அமைதி தோன்ற முடியாது. அது சஞ்சல நிலையிலேயே இருக்கும். மிதமிஞ்சிய களிப்பை எப்போதும் தொடர்ந்துவருவது துன்பம். கண்ணீர்த் துளிகளும் சிரிப்பொலியும் மாறிமாறி வருபவை.
 
மக்கள் பெரும்பாலும் மனத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு ஓடுகின்றனர். மனம் மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் விளங்கட்டும்.
 
அதேவேளையில், அமைதியாக இருக்கட்டும். மிதமிஞ்சிய நிலையில் களிக்கும்படி ஒருபோதும் மனத்தை விட்டுவிடாதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு மிதமிஞ்சிய நிலைக்கும் ஓர் எதிர் நிலை உண்டு.
 

பலவீனமானவர்களால் ஆண்டவனை மட்டுமல்ல ஒன்றையுமே அடைய முடியாது.  :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் அடையமுடியாமலே போய்விட்டது! :D

அதுதான் அடையமுடியாமலே போய்விட்டது! :D

 

நீங்கள் சொல்வது புரியுது வாலி ஐயா. ஆனால் அதுதான் உண்மை.  :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இரண்டே வழிகள்

 

swamiji_2427212h.jpg

 
சக்கரத்திற்குள் சக்கரங்களாக உள்ள இந்த உலகம் ஒரு பயங்கர இயந்திரம். நாம் அதில் கையை வைத்து மாட்டிக்கொண்டோமானால் நம் கதை முடிந்தது. குறிப்பிட்டதொரு கடமையைச் செய்து முடித்ததும் ஓய்வாக இருக்கலாம் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் நினைக்கிறோம். ஆனால் அந்தக் கடமையில் ஒரு பகுதியைச் செய்து முடிக்கும் முன்பே மற்றொரு கடமை தயாராகக் காத்திருக்கிறது. உலகமாகிய இந்த மகத்தான சிக்கலான இயந்திரத்தால் நாம் அனைவரும் இழுத்துச் செல்லப்படுகிறோம்.
 
இதிலிருந்து மீள இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று, அந்த இயந்திரத்தைப் பற்றிய கவலைகளை எல்லாம் விட்டுவிட்டு, அதனை அதன் போக்கில் போகவிட்டு விலகி நிற்பது, அதாவது ஆசைகளை விடுவது. சொல்வதற்கு இது மிகவும் எளிது. ஆனால் செயலுக்கு வரும்போது பெரும்பாலும் முடியவே முடியாதது. கோடியில் ஒருவரால்கூட இது முடியுமா என்பது எனக்குச் சந்தேகமே. மற்ற வழி, சம்சாரத்தில் மூழ்கி, செயலின் ரகசியத்தை அறிந்து கொள்வது.
 
இதுதான் கர்ம யோகத்தின் வழி, உலக இயந்திரத்தின் சக்கரங்களிலிருந்து விலகி ஓடாதீர்கள். அதனுள்ளேயே நின்று செயலின் ரகசியத்தை அறிந்துகொள்ளுங்கள். உள்ளிருந்தபடியே சரியான முறையில் வேலை செய்தால் வெளியேறவும் முடியும். வெளியேறுவதற்கான வழியும் இந்த இயந்திரத்தின் வழியாகத்தான் உள்ளது.
 
செயல் என்றால் என்ன என்பதைக் கண்டோம். இயற்கையின் அஸ்திவாரத்தின் ஒரு பகுதியே செயல். அது எப்போதும் நடந்துகொண்டேதான் இருக்கும். இறைவனை நம்புபவர்கள் இதை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வார்கள்.
 
நமது உதவியை எதிர்பார்க்கின்ற அளவிற்கு அவர் திறமையற்றவர் அல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். இந்தப் பிரபஞ்சம் எப்போதும் நடந்து கொண்டிருந்தாலும், நமது லட்சியம் சுதந்திரம், நமது லட்சியம் சுயநலமின்மை. கர்ம யோகத்தின்படி, செயல் புரிவதன் மூலமாக அந்த லட்சியத்தை அடைய வேண்டும்.
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

விவேகானந்தர் மொழி: கொள்வது கொடுப்பதற்கே

vive_2442828h.jpg

 


நாம் அனைவரும் பிச்சைக்காரர்களே. நாம் எதைச் செய்தாலும் பிரதிபலனை எதிர்பார்க்கிறோம். நாம் அனைவரும் வியாபாரிகள். வாழ்க்கையில் நாம் வியாபாரிகள், தர்மத்தில் நாம் வியாபாரிகள், மதத்தில் நாம் வியாபாரிகள், அந்தோ! அன்பிலும் நாம் வியாபாரிகளே.

நீ வியாபாரம் செய்ய வந்திருக்கிறாயானால், அது கொடுக்கலும் வாங்கலும் பற்றியதானால், விற்பதும் வாங்குவதும்தான் உனது ஒரே எண்ணமானால் வியாபார விதிகளைப் பின்பற்று. வியாபாரத்தில் நல்ல காலம் உண்டு. கெட்ட காலமும் உண்டு. விலை உயர்வதும் தாழ்வதும் உண்டு. எப்போது வேண்டுமானாலும் நஷ்டங்கள் வரும்.

கண்ணாடியில் உன் முகத்தைப் பார்ப்பது போன்றது அது. அங்கு உன் முகமே பிரதிபலிக்கிறது. நீ முகத்தைக் கோணலாக்கிக்கொண்டால் கண்ணாடியிலும் கோணல் தெரியும், நீ சிரித்தால் அங்கும் சிரிப்பு. இதுதான் வாங்கலும் விற்றலும், கொடுப்பதும் கொள்வதும்.

நாம் சிக்கிக்கொள்கிறோம். எப்படி? கொடுப்பதால் அல்ல; கொடுத்ததற்காக எதையோ எதிர்பார்ப்பதால். நமது அன்பிற்குப் பிரதியாக துயரத்தைப் பெறுகிறோம். ஏன்? அன்பு செய்ததால் அல்ல, பிரதியாக அன்பை எதிர்பார்த்ததால்தான்.

தேவை தீர்ந்த இடத்தில் துயரம் இல்லை. ஆசை, தேவை இவையே எல்லா துயரங்களுக்கும் தந்தை. ஆசைகள், வெற்றி தோல்வி நியதிகளுக்குக் கட்டுப்பட்டவை. ஆசைகள் துயரத்தை விளைவித்தே தீரும்.

எதையும் வேண்டாதீர்கள். பிரதியாக எதையும் விரும்பாதீர்கள். நீங்கள் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிடுங்கள். சேமிப்பதற்காக நீங்கள் வாழ்க்கையில் புகுந்தீர்கள்.

கைகளை இறுக மூடிக்கொண்டே எடுக்க விரும்புகிறீர்கள். ஆனால் இயற்கை உங்கள் தொண்டையைக் கையால் அழுத்தி, உங்கள் கைகளை விரியச் செய்கிறது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நீங்கள் கொடுத்தேயாக வேண்டும்.

`நான் கொடுக்க மாட்டேன்’ என்று நீங்கள் சொல்லும் அந்தக் கணமே அடி விழுகிறது. நீங்கள் காயம் அடைகிறீர்கள். கதிரவன், கடலிலிருந்து நீரை முகர்ந்துகொள்வது, அதனை மழையாகத் திரும்ப அளிப்பதற்கே. கொள்வதற்கும் கொடுப்பதற்கும் ஆனதோர் எந்திரம் மட்டுமே நீங்கள். கொள்வது கொடுப்பதற்கே.

 

http://tamil.thehindu.com/society/spirituality/விவேகானந்தர்-மொழி-கொள்வது-கொடுப்பதற்கே/article7328962.ece?widget-art=four-rel

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

விவேகானந்தர் மொழி: சுற்றிவரும் தீப்பந்தம்

vivek_2466950f.jpg

கல்வி, பயிற்சி இவை அனைத்தின் லட்சியமும் இந்த மனிதனை உருவாக்குவதாகவே இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக நாம் மேற்பூச்சு பூசி அழகுபடுத்த முயன்றுவருகிறோம். அகத்தே ஒன்றும் இல்லாதபோது புறத்தை அழகுபடுத்துவதால் என்ன பயன்? எல்லா பயிற்சிகளின் பயனும் நோக்கமும் மனிதனை வளரச் செய்வதே.

தன் சகோதர மக்கள்மீது ஆதிக்கம் செலுத்துபவன், அவர்கள்மீது மாய வலையை வீசியதுபோன்று அவர்களைக் கவர்பவன் ஆற்றலின் ஒரு சுரங்கமாகிறான். அத்தகையவன் தயாராகும் போது, விரும்புகின்ற எதையும் அவனால் செய்ய முடியும். அவனது ஆளுமையின் ஆதிக்கம், எதன்மீது செலுத்தப்பட்டாலும் அதனைச் செயல்பட வல்லது ஆக்கும்.

இது உண்மை என்றாலும் எந்தப் பௌதீக நியதிகளும் இதற்கு விளக்கம் தர முடியாது. வேதியியல் அறிவாலோ பௌதீக நூல் அறிவாலோ எப்படி அதை விளக்குவது? ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும், கார்பனும் இத்தனை மூலக்கூறுகள், இன்னின்ன நிலைகளில், இந்த அளவு என்றெல்லாம் குறிப்பிட்டு ஆளுமை என்ற புதிரை விளக்க முடியுமா?

ஆனாலும் இது உள்ளது என்பது நமக்குத் தெரியவே செய்கிறது. அது மட்டுமின்றி, இதுதான் ஆளுமை, இதுவே உண்மை மனிதன்; வாழ்வதும், இயங்குவதும், செயல்புரிவதும் அவனே. அந்த உண்மை மனிதனே ஆதிக்கம் செலுத்துகிறான்; தன் சகோதர மக்களை இயக்குகிறான்; பின்னர் உலகிலிருந்து வெளியேறுகிறான். அவனுடைய அறிவும் நூல்களும் செயல்களும் அவன் விட்டுச்சென்ற சுவடுகள் மட்டுமே. இதை நினைத்துப் பாருங்கள்.

மாபெரும் ஆச்சாரியர்களைச் சிறந்த தத்துவ அறிஞர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். தத்துவ அறிஞர்களால் மிக அரிதாகவே பிறருடைய அக ஆழங்களில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முடிந்தது. ஆனால் அவர்கள் மிகச் சிறந்த நூல்களை எழுதவே செய்தார்கள். மாறாக, ஆச்சாரியா்களால் தங்கள் வாழ்நாளில் நாடுகளையே ஆட்டிவைக்க முடிந்தது.

இந்த வேறுபாட்டிற்குக் காரணம் ஆளுமைதான். ஆதிக்கம் செலுத்துகின்ற ஆளுமை தத்துவ அறிஞர்களிடம் வலிமை குன்றியதாக உள்ளது; மாபெரும் தீர்க்கதரிசிகளிடம் வலிமை மிக்கதாக விளங்குகிறது. முன்னதில் அறிவு தொடப்படுகிறது. பின்னதில் வாழ்வு தொடப்படுகிறது.

ஒன்றில் அது ஒரு வேதியியல் முறை மட்டுமே சில ரசாயனப் பொருட்களைச் சேர்த்து வைக்கிறோம்; அவை மெல்ல இணைந்து, தகுந்த நேரத்தில் பளீர் என ஒளி வீசலாம்; சிலவேளைகளில் ஒளிராமலும் போகலாம். மற்றொன்றிலோ, அது பிறவற்றையும் எரியச் செய்தவாறே விரைந்து சுற்றிவரும் தீப்பந்தம் போன்று இருக்கிறது.

http://tamil.thehindu.com/society/spirituality/விவேகானந்தர்-மொழி-சுற்றிவரும்-தீப்பந்தம்/article7402953.ece?widget-art=four-all

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.