Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோன் கெரி என்ன சொன்னவர் எண்டு தெரியுமோ?

Featured Replies

சிரச தொலைக்காட்சியில் சடன என்ற பெயரில் மிகவும் பிரபலமான அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவது வழக்கம். கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் இலங்கையில் பிரதிநீதியமைச்சர் சுஜீவ சேரசிங்க கலந்து கொண்டவர். (சுமந்திரனும் வந்திருந்தவர்)

 

அவர் தன்ரை பேச்சிலை நான் இப்ப தான் ஜோன் கெரியுடனான சந்திப்பிலை கலந்து கொண்டு விட்டு வாறன். அவர் இனிமேல் இலங்கையின்ரை விவகாரங்களிலை அமெரிக்க தலையிடாது என எங்களுக்கு உறுதியாச் சொன்னவர். இது எங்களுக்குக் கிடைச்ச பெரிய வெற்றி எண்டு சந்தோசமாச் சொன்னவர். இதைப்பற்றி சுமந்திரன் ஐயா மூச்ச விட இல்லை.

 

இதுக்குள்ளை தங்கடை பேச்சும் வெற்றி எண்டு சம்பந்தன்ரை ஆக்கள் சொல்லுகினம்.

 

இலங்கையின்ரை எந்த விவகாரத்திலையும் தலையிட மாட்டம் எண்டு கெரி சொல்லியிருந்தால் இனப்பிரச்சினையைத் தீர்க்க என்னெண்டு உதவப் போகினம். சிலவேளை சிங்களவங்கள் தாறதை வாங்கிக் கொண்டு சத்தம் போடாமல் இருங்கோ எண்டு புத்தி சொல்லியிருப்பினமோ

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவோ.. இந்தியவோ.. சொறிலங்கவோ..  சுமந்திரனோ தமிழ் மக்கள் நம்பக் கூடிய பாத்திரத்தை தமிழ் மக்கள் விரும்பும் தீர்வில் தர முடியாது என்பதை தமிழீழ விடுதலைப்புலிகள் எப்பவோ எடுத்துக் காட்டி... இவைக்கு மாற்றீடுகளை..  தலையிடச் செய்யும் காரியத்திலும் புலிகள் வெற்றி பெற்றதால் தான் அவர்களை இவர்கள் எல்லோரும் கூட்டுச் சேர்ந்து கொத்துக் குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் வீசி அழித்தார்கள்.

 

இப்போது தமிழ் மக்களுக்கு.. இவர்கள் சொல்லக் கேட்பது தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டோம் என்ற திமிரில் பேசி வருகிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் விவேகமாகவும்.. ஆழமாகவும்.. சிந்தித்தும் செயற்பட்டால்.. இந்த ஆளும் வர்க்கங்களின் கூட்டுச் சதித்திட்டங்களை தாண்டி எதனையும் உருப்படியாக சாதிக்க முடியும். இன்றேல்.. தொடர் ஏமாற்றங்களே மிஞ்சும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்த சாணக்கியம்..?!

 

சிறீலங்காவில் 1983 இல் நிகழ்ந்த இனக்கலவரத்தின் போது தென்னிலங்கை வாழ் சிங்கள விசுவாசத் தமிழர்கள் உட்பட பலரும் ஜே ஆர், காமினி, லலித் அத்துலத்முதலி உட்பட்ட சிங்களத் தலைமைகள் ஏவிவிட்ட காடையர்களின் பிடியில் சிக்கி சித்திரவதைப்பட்டு இறந்ததும்.. துன்பப்பட்டதும் கண்டு அண்டை நாடான இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொஞ்சம் பதறித்தான் போனார்.

அவரின் பதட்டத்திற்கு காரணமாக இருந்தது தமிழர்கள் சிங்களவர்களால் துன்பப்படுத்தப்பட்டது என்பதிலும்.. அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அமெரிக்க - இஸ்ரேல் - பாகிஸ்தான் நெருக்கமே. அப்போது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது பனிப்போர் காலத்திற்கான ஒன்றாக இருந்ததுடன் அமெரிக்க எதிரியான சோவியத் யூனியனை மையப்படுத்தி அமெரிக்க ஆதரவு பாகிஸ்தானையும்.. எல்லையில் எப்போதும் போல தொந்தரவாக இருந்து கொண்டிருந்த சீனாவை எதிரிகளாகவும் நோக்கும் நிலையைக் கொண்டிருந்தது.

அப்போதும் கூட ஈழத்தமிழர்களின் "படித்த மேதாவி சாணக்கிய சட்டாம்பி அரசியல்வாதிகளான" அமிர்தலிங்கம் போன்றோர் இந்தியாவை மையப்படுத்தி ஏன் இந்தியாவின் தத்துப்பிள்ளைகளாகி இந்திய நலனைக் கொண்டு ஈழத்தில் தமிழ் மக்களின் அரசியலை இருப்பை பாதுகாக்க முடியும் என்று நம்பித்தான் செயற்பட்டனர். அவர்களைப் பொறுத்தவரை இந்தியா தான் எல்லாம்.அதன்சொற்படியே செயற்பட்டும் கொண்டனர்.

அவர்கள் இந்தியாவைத் தாண்டி வேறு எவரையும் அன்று தமிழர்களின் துன்பியல் தொடர்பில் ஆறுதல் ஆதரவு வேண்டி நாடிச் செல்ல முயலவும் இல்லை. தமிழர்களுக்கு சிங்களவர்களால் நேர்ந்த கதியை இந்தியாவைத் தவிர பிற உலகிற்கு தெளிவாகச் சொல்லக் கூட இவர்கள் முனையவில்லை. இந்திரா காந்தியின் முந்தாணைக்குள் தான் தமிழர்களின் நலன் அடங்கிக் கிடப்பதாக தவம் இருந்தனர். இந்திரா காந்தியும் அதையே பெரிதும் விரும்பினார். அன்றைய நிலையில் இந்திராவுக்கு ஈழத்தில் தமிழர்களுக்கு இருந்த பிரச்சனை பிராந்தியத்தில் தனது செல்வாக்கை சிங்கள அரசு மீது செலுத்தவும் சிங்கள அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை அளிப்பதாக இருந்தது.

அமிர்தலிங்கம் கோஷ்டியினர் டெல்லிக்கும் சென்னைக்கும் பறப்பதையே 1983 இல் இருந்து 1989 இறக்கும் வரை கொள்கையாகக் கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் தமிழ் மக்களுக்கு ஈட்டிக்கொடுத்த இராஜதந்திர வெற்றி என்று எதுவும் கிடையாது. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் இந்தியாவின் செல்வாக்கை தாண்டி வளரும் நிலைக்கு வந்த ஒரு கட்டத்தில் தான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் இந்திய ஒருமைப்பாடு இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதன்மையாக இருந்தது. ஈழத்தில் தமிழர்களின் அரசியல் அபிலாசை தீர வேண்டும் என்பதல்ல அன்று முக்கியமாக அந்த ஒப்பந்தத்தில் இடப்பெற்றிருந்தது.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கூட அமிர்தலிங்கம் கோஷ்டியினரின் இராஜதந்திர வெற்றியால் ஏற்பட்ட ஒன்றல்ல. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை கட்டுப்படுத்த போடப்பட்ட ஒப்பந்தம் அது. அதன் மூலம் கிடைத்ததை வைத்தே இன்று வரை அமிர்தலிங்கம் கோஷ்டியினரும் பிற தமிழர் விரோத தமிழ் ஆயுதக் கும்பல்களும் அரசியல் நடத்தி வருகின்றனர் என்பதையும் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும்.

1989 வாக்கில் ஏற்பட்ட சிங்கள அரசுத்தலைமை மாற்றங்கள் இந்தியப் படை விலகலுக்கும் இந்திய - சிறீலங்கா உறவு மோசமடையும் நிலைக்கும் இட்டுச் சென்றது. அன்று இந்தியாவின் வடகோடியில் முனைப்புப் பெற்றிருந்த காஷ்மீர் பிரச்சனையில் சிறீலங்காவின் அப்போதைய பிரேமதாச அரசு பகிரங்கமாகவே பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஆதரித்து கருத்து வெளியிட்டு வந்ததும் அன்றி இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டிருந்தது. அப்போதும் கூட ஈழத்தமிழர்களின் மத்தியில் இருந்து இந்தியாவால் பொறுக்கி எடுத்து வளர்க்கப்பட்ட வரதராஜப் பெருமாள் உட்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியினர் (இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரேமசந்திரன் உட்பட) இந்தியாவே தஞ்சம்.. இந்தியாவே எல்லாம் என்று ஈழத்தமிழர்களின் அரசியல் நலனை இந்தியாவை நம்பியே தீர்மானித்தனர். விடுதலைப்புலிகளைத் தவிர வேறு எவரும் இந்தியாவின் நலனுக்கு அப்பால் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை முன்னுறுத்திப் பார்க்க முன்வரவில்லை. அப்படிச் செய்வதை சாணக்கியமற்ற.. படிப்பறிவற்ற.. சட்டம் தெரியாத சின்னப்பொடியள்களின் மண்விளையாட்டாகவே காட்டி வந்தனர்.

ஆனால் விடுதலைப்புலிகளின் நகர்வுகளோ வேறுமாதிரி இந்ததன. அவர்கள் இந்தியா ஈழத்தமிழர்களின் பிரச்சனையை வைத்து தனது நலனை பாதுகாக்கிறது அல்லது பாதுகாக்க முற்படுகிறது என்று சரியாக அறிந்து அதன் வழி இந்தியாவை தமிழர்களின் வழிக்குக் கொண்டு வர அதற்கான வழிவகைகளைக் காண முயற்சித்தனர். இது மிதவாதிகள் என்றும் ஜனநாயக வாதிகள் என்றும் வன்முறையை வெறுப்போர் என்றும் (1977 இல் வட்டுக்கோட்டை பிரகடனத்தைக் கொண்டு வந்து இரத்தத் திலகம் இட்டு வன்முறைக்கு வழிகாட்டியவர்கள் இவர்கள் என்பதையும் இந்த இடத்தில் பதிந்து வைத்துக் கொள்வது நன்று.) தம்மை அடையாளப்படுத்தி அரசியல் செய்து வந்த அமிர்தலிங்கம் கோஷ்டியினருக்கும் மற்றும் இதர தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் எந்த மாற்றுச் சிந்தனையும் இன்றி இந்திய வழியில் போய் அதுபோடும் பிச்சையில் தான் தமிழர்களின் அரசியல் உரிமையை பெற முடியும் என்ற நம்பிக்கைக்கு நெருக்கடியாக அமைந்ததும் அன்றி இந்தியாவின் பார்வையில் அதன் நலனுக்கு எதிரானதாகவும் பட்டது.

இந்த நிலையில் தான் 1995 இல் பதவிக்கு வந்த இந்திய விசுவாசியான சந்திரிக்கா அம்மையாரும் சமாதானம் பேசி வந்து போரின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டுக்கு இந்தியாவால் கொண்டு வரப்பட்டார். அப்போதும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவராக இருக்கும் சம்பந்தன் உட்பட பலரும் மெளனமாக இருந்து சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் திட்டத்தை செயற்படுத்த உதவினர். இந்தியாவின் மறைமுக ஆதரவோடு அன்று நடந்த போரில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய மையமாக விளங்கிய யாழ்ப்பாணம் சிங்கள இராணுவத்தின் கைகளுக்குப் போனது. அப்போதைய இந்திய ஆளும் வர்க்கம் யாழ்ப்பாணம் மீட்சியை வரவேற்று கருத்து வெளியிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அதுமட்டுமன்றி யாழ்ப்பாண வெற்றியோடு விடுதலைப்புலிகளைப் பூண்டோடு அழித்து சிங்கள மேலாதிக்கத்தை இலங்கைத் தீவு எங்கனும் நிறுவி விட துடித்தார் சந்திரிக்கா. ஆனால் அதற்கு முதல் சர்வதேசத்தின் முன்னும் இந்தியாவின் முன்னும் தன்னை ஒரு சமாதான விரும்பியாகக் காட்டிக்கொள்ளவே சந்திரிக்கா விரும்பினார். தமிழ் மக்கள் முன்னும் தன்னை ஒரு பேரினவாதியாகக் காட்டிக்கொள்வதை சந்திரிக்கா அன்றைய நிலையில் வெளிப்படையாக விரும்பாத போதும் அவருக்குள் பேரினவாதச் சிந்தனைகளே பெரிதும் குடிகொண்டிருந்தன என்பதை மாங்குளம் வெற்றியோடு அவர்கள் நடந்து கொண்ட முறைகள் விளக்கி இருந்தன.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நோக்க வேண்டும். பொத்தல் விழுந்திருந்த சந்திரிக்காவின் சமாதான தேவதைக்கான முகத்திரையினூடு வெளித்தெரிந்த பேரினவாதத் தோற்றத்தை தையல் போட்டு மறைக்க வேண்டிய தேவை இருந்தது. அதைச் செய்ய தீவிரமாகப் பங்களிப்புச் செய்ய சிலர் தாமாகவே முன்வந்தனர். அப்படி முன்வந்தவர்களில் கதிர்காமர் அஷ்ரப் நீலன்-திருச்செல்வம் சம்பந்தன் ஆனந்தசங்கரி பிரேமச்சந்திரன் டக்கிளஸ் தேவானந்தா சித்தார்த்தன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அப்போதும் கூட பிரித்தானிய சமாதான ஏற்பாடுகளை இயன் பொக்சின் முயற்சிகளை.. ஈழப்பிரச்சனையில் பிரித்தானிய தலையீட்டை விரும்பாத இந்திய விசுவாசிகள் இயன் பொக்சின் முயற்சிகளுக்கு முடிவுகட்டி சந்திரிக்காவை சமாதான தேவதையாகக் காட்ட 1998 வாக்கில் ஒரு தீர்வுப்பொதியை உருவாக்கி தந்துவிட்டிருந்தனர். அந்தத் தீர்வுப்பொதியை வரைந்தவர்களில் நீலன் திருச்செல்வம் முக்கிமானவர். வரவேற்றவர்களில் சம்பந்தன் முக்கியமானவர்.

இறுதியில் அந்தத் தீர்வுப் பொதி வந்த மாத்திரத்திலேயே சிங்கள எதிர் தரப்புக்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டது. அதில் ஐக்கிய தேசியக் கட்சி ஜே வி பி புத்த பிக்குகளின் பங்களிப்பு முதன்மையானது. விடுதலைப்புலிகள் அந்தத் தீர்வுப்பொதியில் எதுவும் உருப்படியாக அமையப் போவதில்லை.. அது சந்திரிக்காவின் போர் முகத்தை மறைக்க போடப்படும் முகமூடி என்று தீர்வுப்பொதிக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்ட போதே சொல்லிவிட்டனர். இறுதியாக நடந்தி முடிக்கப்பட்டதும் அதுதான். ஒரு வெற்றுப்பொதிக்கு பெரிய ஆர்ப்பாட்டம் அளித்தவர்களில் சம்பந்தன் உட்பட்ட சிலரும் அடக்கம்.

அதன் பின்னர் போர்க்கள நிலவரம் தலை கீழாக மாறி சிங்களப் படைகள் புலிகளிடம் அடிவாங்கி ஓடும் நிலை வந்தது. தானே ஏவிவிட்ட சிங்களப் படைகளை மீட்க தனது படைகளை தயார் செய்யும் துர்ப்பாக்கிய நிலையும் இந்தியாவுக்கு உருவானது. இந்த நிலையில் தான் இந்தியா விழித்துக் கொண்டது. பிராந்தியத்தின் தென்கோடியிலும் தனக்கு சவால் ஒன்று உருவாவதை அது உணர ஆரம்பித்தது. அந்தச் சவாலை விடுதலைப்புலிகள் சர்வதேசத்தின் ஆதரவோடு விடுக்கின்றனர் என்பதையும் இந்தியா உணரத்தலைப்பட்டது. ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு முடிவுரை எழுத வேண்டும் இன்றேல் தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு வேண்டும் என்ற நிலைக்கு வந்த இந்தியா அன்றைய பொழுதில் விடுதலைப்புலிகளுக்கு முடிவுரை எழுதுவதை தள்ளிவைத்துவிட்டு சமாதான வேடம் பூண்டு கொண்டது. சில உறுதிமொழிகளை அளித்து விடுதலைப்புலிகளை போர் நிறுத்தத்துக்குள் தள்ளியது. இருந்தாலும் விடுதலைப்புலிகளோடு ஏற்பட்ட கடந்த கால கசப்புக்களையும் விடுதலைப்புலிகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஒத்துவராத வகைக்கு கொண்டிருக்கும் அரசியல் கொள்கைகளையும் இந்தியா இலகுவாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

அந்த வகையில் விடுதலைப்புலிகளை முழுமையாக நம்புவதில்லை என்ற நிலைப்பாட்டில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சர்வதேசத்திடமே அவர்களைச் சிக்கவைத்து அதன் வழி அவர்களின் செயற்பாடுகளை முடக்கி தேவையான சரியான சந்தர்ப்பத்தில் அவர்களை அழிப்பதை இந்தியா திட்டமாக வரைந்து கொண்டது. இது விடுதலைப்புலிகளுக்கு தெரிய வந்த போது அவர்கள் ஏற்கனவே பின்னப்பட்டிருந்த வலையில் மாட்டிக் கொண்டிருந்தனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை அதன் தெற்குப் பிராந்திய பாதுகாப்பும் ஒருமைப்பாடுமே அதன் இருப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது.ஈழத்தில் அல்லது தமிழகத்தில் உள்ள தமிழர்களின் அரசியல் நலன் அல்ல. அந்த வகையிலேயே இந்தியாவின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. அதற்கேற்றவாறு முதலில் விடுதலைப்புலிகளுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டால் பின்னர் ஈழத்தில் தனக்கு வேண்டிய சக்திகளை வளர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் மத்தியில் தனது செல்வாக்கையும் நலனையும் பாதுகாக்கும் கொள்கைகளைப் பரப்பிவிடலாம் என்பதில் இந்தியா தெளிவாக இருந்து கொண்டது. இந்த விடயத்தில் 1987ல் அது கண்ட பாடம் அதற்கு இவ்வாறான ஒரு தெளிவைக் கொடுத்திருந்ததோடு ஈழத்தமிழர்களின் பலம் புலிகளே தவிர வேறு ஒன்றும் அல்ல என்பதையும் உணர்ந்து கொண்டிருந்தது. புலிகளை முடக்கி தனக்கு சார்ப்பான ஒரு அரசியல் நிலைப்பாட்டை ஈழத்தில் நிறுவுவதே இந்தியாவின் நோக்கம்.

அதன்படி இந்தியாவின் தேவைகள் எதிர்பார்ப்புக்கள் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஓரளவு நிறைவேறி இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவே எல்லாம் என்ற நிலைக்கு மீண்டும் தமிழர்களை கொண்டு செல்லும் நிலையை சம்பந்தன் போன்றவர்கள் உருவாக்கி வருகின்றனர். இது மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை இந்தியா தனது நலனுக்காக பாவிக்கும் நிலையில் வைத்திருப்பதை செய்யுமே தவிர தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க ஒருபோதும் உதவாது.

தமிழ் மக்களுக்கு இன்று அவசியமானது விடுதலைப்புலிகள் கொண்டிருந்த திடமான அரசியல் மற்றும் இராஜதந்திரக் கொள்கைகளே. விடுதலைப்புலிகளிடம் திடமான இராஜதந்திரக் கொள்கைகள் இருந்த போதும் அவை பூரணத்துவம் அற்றனவாக இருந்தன. அதற்குக் காரணம் தமிழர் தரப்புக்களிடம் ஒருவித கண்மூடித்தனமான இந்திய விசுவாசம்.. காதல்.. ஒட்டிக் கொண்டிருந்தது தான்.

ஈழத்தமிழர்கள் இந்த நிலையைக் கடந்து சர்வதேச அளவில் பல நாடுகளோடும் நெருங்கிய உறவுகளை உருவாக்கிக் கொண்டு இந்தியாவிற்கு தம்மீதுள்ள ஆதிக்கத்தை விடுவித்துக் கொண்டு அல்லது கட்டுப்படுத்திக் கொண்டு இந்தியா மீதும் அதன் கொள்கை வகுப்பாளர்கள் மீதும் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு தமது அரசியல் இராஜதந்திர வெளிவிவகார கொள்கைகளை தொடர்புகளை பலப்படுத்துவதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி இந்தியா ஈழத்தமிழர்கள் மீது செலுத்தும் சுதந்திரமான தலையீட்டுக் கொள்கைக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்கு முடிவு வராமல் ஈழத்தில் தமிழர்களுக்கு அவர்கள் விரும்பும் வடிவில் அரசியல் விடுதலையை இந்தியாவும் சிறீலங்காவும் வழங்க இடமளிக்கப் போவதும் இல்லை.

35 வருட போர் அவலங்களைக் காட்டி (இவ்வளவு அவலங்களையும் தந்தவர்களில் இந்தியாவின் பங்களிப்பே அதிகம்) அதில் இருந்து விடுதலை பெற்றுத்தருகிறோம் என்ற பாணியில் இந்தியா ஈழத்தமிழர்களை சரிக்கட்டி விடலாம் என்று நினைக்கிறது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் போர் அரசியலை ஈழத்தமிழர்கள் தெரிவு செய்ய இருந்த அத்தனை காரணிகளும் அப்படியே இந்தியாவால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கு முடிவு கட்ட சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல.. இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் விரும்பமில்லை. அப்படி முடிவு கட்டிவிட்டால் இந்தியாவின் தென்கோடியில் தனக்கு எழும் சவால்களை தமிழர்களை வைத்து சரிக்கட்ட வாய்ப்புக்கிடைக்காது என்ற ஒரு பயம் இந்தியாவிடம் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது கூட தமிழர்களின் துன்பியலை தனது ஒருமைப்பாடு இறையாண்மையை பிராந்திய ஆதிக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்க இந்தியா பயன்படுத்துகின்றதே அன்றி அதற்கு தமிழர்கள் அவர்கள் விரும்பும் வடிவில் அரசியல் உரிமைபெற்று இந்தியாவின் நிரந்தர நண்பர்களாக வாழ வேண்டும் என்ற அக்கறை கிடையாது.

இந்த நிலையில்.. டெல்லிக்கும் சென்னைக்கும் கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் பாலம் போடும் பறந்து திரியும்.. அமிர்தலிங்கம் கோஷ்டியினரின் கடந்த கால அரசியலையா மீண்டும் சம்பந்தன் போன்ற நவீன சாணக்கியர்கள் செய்து ஈழத்தில் இந்திய நலன் காக்கும் அரசியல் செய்யப் போகின்றனர்..???!

இந்தியா எமது நண்பனா எதிரியா என்பது அது எம்மோடு வைத்துக் கொள்ளும் நட்பின் உண்மைத் தன்மையில் இருக்கிறது. அதற்காக இந்தியா மட்டுமே எமது நண்பன் என்றிருப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

தமிழீழ தேசிய தலைவர் சொன்னது போல் ஆசியாவின் கைகளுக்கு மாறி வரும் உலகின் பொருண்மிய பலம் இந்தியாவை நம்பி நடக்க முனைவதிலும் இந்தியா எம்மை நாடி வர நடப்பதுதான் அவசியம். இந்தியா எமது நண்பன் என்பது இந்தியாவையே நம்பு என்பதாகாது..!

எனவே மேற்குறிப்பிட்ட விடயங்கள் மற்றும் கடந்த காலங்களில் புலிகள் சம்பந்தப்படாத மற்றவர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த தவறுகள் தொடர்பில் சம்பந்த சாணக்கியர்கள்.. சிந்திக்க வேண்டிய நேரம் இது. நாடு கடந்த தமிழீழ அரசும் பரிசீலிக்க வேண்டிய விடயம் இது.

செய்வார்களா.. அல்லது மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி கதைதானா...???!

புலிகளின் மீள்வரவு வரை.. அரசியல் நிச்சயம் என்பது நிரந்தரமில்லை ஈழத்தில் தமிழர்களுக்கு..!

 

-----------------------------

 

ஜனவரி 2010 இல் எழுதியது. இப்ப யதார்த்தமாகி நிற்குது.

 

http://kundumani.blogspot.co.uk/2010/01/blog-post_15.html

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் திடீர் பாசம் ஒன்றும் ஈழத்தமிழரின் கண்ணீரிலல்ல.

 

Superpowers_in_World.png

அமெரிக்க வல்லாதிக்க அரச கடற்படை இன்று (15-05-2009) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஈழத்தில் வன்னியில் யுத்த வலயத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க அல்லது அவர்களுக்கான மனிதாபிமான உதவியை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் இந்தியக் கடற்படையின் ஒத்துழைப்போடு தான் இதனை முன்னெடுக்க முடியும் என்றும் கூறி இருக்கிறது.

ஐநாவே கடந்த 5 மாதங்களாக போரில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று அறிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத அமெரிக்கா, சிறீலங்கா சிங்கள அரசு முன்னெடுக்கும் தமிழின அழிப்புப் போர் முடிவடையும் தறுவாயில்.. இப்போ திடீர் என்று தமிழ் மக்கள் மீது பாசம் காட்டுவது ஒன்றும் அவர்கள் மீதான அக்கறையில் அல்ல.

ஐநா பாதுகாப்புச் சபைக்கு சிறீலங்கா விவகாரத்தை பிரிட்டனும் பிரான்சும் அமெரிக்காவும் கொண்டு வந்ததே தமது பார்வையிலிருந்தும் கவனிப்பில் இருந்தும் விலகிச் செல்லும் சிறீலங்காவை தமது வழிக்குக் கொண்டு வரவே அன்றி ஈழத்தமிழர் மீதான அக்கறையில் அல்ல.

பாதுகாப்புச் சபையில் சிறீலங்கா தொடர்பான விவாதம் நிகழ்வதை சீனாவும் ரஷ்சியாவும் வலுவாக எதிர்த்து வந்ததுடன் இவ்விரண்டு நாடுகளும் விடுதலைப்புலிகளுடனான போர் என்ற தொனியில் தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு செய்யும் போருக்கு பகிரங்க ஆதரவு வழங்கியதுடன் ஆயுத மற்றும் இராணுவ உதவிகளையும் குறைவின்றி தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கின்றன.

சீனா இவ்வுதவிகளோடு மட்டும் நின்று விடாமல் இந்தியாவின் சிறீலங்கா சிங்கள அரசு நோக்கிய நட்புறவு ரீதியான வலிந்த நகர்வுகளை முறியடிக்கும் வகையில் இந்தியா சிறீலங்காவுக்கு வலிந்து வழங்கி வரும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளுக்கு அதிகப்படியாக தனது உதவிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் இந்தியா சிறீலங்காவுக்கு வழங்கிய 100 கோடி இந்திய ரூபாய் கடனுக்கு போட்டியாக மில்லியன் டொலர்கள் கடனை தூக்கி வீசியது சீனா. அதுமட்டுமன்றி சிறீலங்காவின் தென்கோடித் துறைமுகமான அம்பாந்தோட்டை துறைமுகத்தை குறிவைத்து 1 பில்லியன் டொலர் அபிவிருத்தி என்ற போர்வையில் அதனை தனதாக்கிக் கொண்டதுடன் அந்த நிதியும் சிறீலங்காவை வந்தடைய இருக்கிறது.

விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாக்கி.. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக்கி அதில் சிறீலங்காவை மயங்க வைத்து அதனூடு தமது நலன் காக்கலாம் என்றிருந்த அமெரிக்கா மற்றும் இந்தியாவின் எதிர்பார்ப்புக்களை மிஞ்சி சீனாவினதும் ரஷ்சியாவினதும் ஈரானினதும் மற்றும் சில அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு அரபுலக நாடுகளினதும் சிறீலங்காவுடனான நெருக்கம் அதுவும் விடுதலைப்புலிகளின் கதை கிட்டத்தட்ட முடிந்ததாகக் கூறப்படும் நிலையில் அதிகரித்துள்ளமை அமெரிக்காவையும் இந்தியாவையும் தூக்கிவாரிப் போட்டுள்ளது.

இந்த நிலையில் சிறீலங்காவின் மீதான தமது பிடி மேலும் இழகி.. மோசமாகி தமது கட்டுக்குள் அடங்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் தான் சிறீலங்காவுக்கான சர்வதேச நாணய நிதிய கடனையும் அமெரிக்கா தள்ளி வைத்தது. தமிழ் மக்களின் மீதான அக்கறையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாக சிலர் இதனைச் சித்தரிக்க முயல்கின்றனர். அது உண்மையில் மிகத் தவறானது. தமிழர்களுடனான சிங்கள அரசின் போரில் சிங்கள அரசுக்கு ஆயுத உதவி மற்றும் உளவுத்தகவல்களை வழங்கி அமெரிக்கா உதவி வந்ததை அண்மையில் ரணில் விக்கிரமசிங்கே பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தது ஒன்றே போதும் அமெரிக்காவின் இந்த நகர்வுகள் எவையும் தமிழ் மக்களின் நலன் கருதியதல்ல என்பதை நிரூபிக்க.

சுருங்கக் கூறின் விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களின் போராட்டத்தையும் மையமாக வைத்து தமது நலன்களை பாதுகாக்க இந்தியாவும் அமெரிக்காவும் பெரிய திட்டம் வகுத்திருந்த நிலையில் சீனாவும் ரஷ்சியாவும் விசயத்தில் முந்திக் கொண்டுள்ளன. குறிப்பாக சீனா தத்துரூபமாகக் காய் நகர்த்த அதனை தனக்கே உரித்தான சிறப்பு முறையில் கையாள்கிறது சிறீலங்கா என்பதே யதார்த்தம்.

04+09+039.jpg

//இன அழிப்புப் போரை எதிர்கொண்டு சொந்த மண்ணின் விடுதலைக்காய் போராடும் ஈழத்தமிழர்கள்.//

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை மையமாக வைத்து அதனைப் பயங்கரவாதமாக்கி தமிழர்களை இலங்கைத் தீவிலின்றும் அழிக்க வேண்டும் என்ற இனவெறியை சிறீலங்கா பன்னெடுங்காலமாகக் கொண்டிருப்பினும் இன்று சர்வதேச நாடுகள் மத்தியில் நிலவும் சிறீலங்காவை மையமாக வைத்த இந்து சமுத்திரத்தில் ஆதிக்கத்துக்கான போட்டா போட்டிச் சூழலை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அதில் தனது நீண்ட நாள் கனவை நனவாக்க நினைக்கிறது சிங்களச் சிறீலங்கா.

ஆனால் இந்தச் சூழ்நிலைகளை எல்லாம் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தும் இந்திய உபகண்டத்தில் தமிழர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யாமல் விட்டமை என்பதற்கு தமிழர்களுக்கு தார்மீக ரீதியில் உதவ பிராந்தியத்தில் பலம் பொருந்திய அரசோ அல்லது தமிழர்கள் மத்தியில் தமது பலத்தை நிரூபிக்கக் கூடிய ஒற்றுமையோ இருக்கவில்லை என்பதே முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.

இன்று ஐரோப்பிய பிரதிநிதிகளும் ஐநாவும் ஒபாமாவும் மேனனும் சிதம்பரமும் கருணாநிதியும் மற்றும் ஜெயலலிதாவும் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை காட்டுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்கல்ல. தமது நாடுகளின், அரசுகளின் மற்றும் தமது சொந்த அரசியல் நலன்களை காக்கும் நோக்கில் சிறீலங்காவை பயன்படுத்தவும் அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்குமே ஆகும். இதற்காகவே தான் சீனாவும் வியட்நாமும் ரஷ்சியாவும் சிறீலங்காவை அரவணைக்கின்றன.

இந்த அரவணைப்புக்களின் சுகத்தில் தான் சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத தேசம் தமிழின அழிப்பை, மிக வசதியாக இத்தனை மனித உரிமை மீறல்களையும் பகிரங்கமாகச் செய்து கொண்டு ஐநாவைக் கூட எதிர்த்து மிடுக்காகப் பேசிக் கொண்டு செய்ய முடிகிறது.

இதன் பின்னணியில் ஈழத் தமிழர்கள் இன்று அனுபவிக்கும் துன்பியல் என்பது உண்மையில் தமிழர்களுக்கு என்றான ஒன்றல்ல. ஒட்டுமொத்த உலகுக்குமானது.

இன்றைய புதிய உலகு ஒழுங்கில் இது மனித உரிமைகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவால் என்பதற்கும் மேலாக இனங்களின், மக்களின் விடுதலை என்பது அவர்கள் எந்த வல்லாதிக்க சக்தியை அரவணைக்கிறார்களோ அதன் பால்பட்டே அமையும் என்ற உண்மையையும் உலகுச் சொல்லி இருக்கிறது. அதாவது மக்களின் வாழ்வுரிமை என்பது வல்லாதிக்க சக்திகளை, ஆதிக்க சக்திகளை அரவணைப்பதால் பெறப்படுமே அன்றி வேறு வழியில் அது அமைய முடியாது என்பதே ஆகும். எனி என்று மாறுமோ இந்த நிலை என்பது கேள்விக் குறியாகவே இருக்க, அது மாறுவதற்கிடையில் ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டு அல்லது முழுமையாக அடிமைப்படுத்தப்பட்டு இலங்கைத் தீவு முழுமைக்கும் சிங்கள இராட்சியம் அமைக்கப்பட்டு விடும் என்பது மட்டும் திண்ணம்.

 

----------------------------

 

மே 15 - 2009 இல் எழுதியது.. அப்பவே அமெரிக்காவின் இந்தியாவின் உண்மை முகத்தை புடம்போட்டுக்காட்டிட்டுது.

 

http://kundumani.blogspot.co.uk/2009/05/blog-post_4541.html

  • கருத்துக்கள உறவுகள்

 

. இதைப்பற்றி சுமந்திரன் ஐயா மூச்ச விட இல்லை.

 

இதுக்குள்ளை தங்கடை பேச்சும் வெற்றி எண்டு சம்பந்தன்ரை ஆக்கள் சொல்லுகினம்.

 

 

 

அமெரிக்கா தலையிடாவிட்டால் தானே கூட்டமைப்பு இந்தியாவிற்குத் தலையாட்டலாம். ஆகவே அவர்களுக்கு வெற்றி தானே :D

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் சுரேசையும், விக்கியரையும் பேச விடாமல் செய்தது சம்பந்தருக்கு வெற்றி தானே. :)

  • தொடங்கியவர்

தனக்குக் கட்டுப்படாமல் சீனாவுடன் கூட்டு வைத்த மகிந்தவை தட்டி வைக்கவே தமிழர் பிரச்சினையை அமெரிக்கா கையிலெடுத்தது. இப்போது தனது செல்லப்பிள்ளை ரணில் வந்துவிட்டதால் தமிழர் பிரச்சினையாவது இனப்படுகொலையாவது யுத்தக்குற்றமாவது மண்ணாங்கட்டியாவது.. எல்லாமே அரசியல் சதுரங்கம்...

  • கருத்துக்கள உறவுகள்

சதுரங்கத்தில் நாமும் காய்களை சரியாக நகர்த்தாத வரை வெற்றி என்பது எம்மை விட்டு விலகியே செல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.