Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும்

Featured Replies

``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும் #VikatanExclusive

303_thumb.jpg
 

``22 வருஷம் ஓடிடுச்சு. ஒருவேளை அன்னிக்கு இரவு சில்க்கை சந்திக்க நான் போயிருந்தால், அவளின் பிரச்னைக்குத் தீர்வு சொல்லியிருப்பேன். அதனால சில்க் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டிருக்கலாம். அப்படி நடக்கலை. அதனால, சில்க்கின் மரணத்துக்கு நானும் ஒரு காரணம்னு குற்ற உணர்வு இன்னைக்கு வரை எனக்கிருக்கு."

``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும் #VikatanExclusive
 

சில்க் ஸ்மிதா... சினிமாவில் இவர் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. 1980, 90-களில், இவர் பெயரை உச்சரிக்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை தன் வசீகர நடிப்பாலும், நடனத்தாலும், உடலமைப்பாலும் கவர்ந்த கவர்ச்சிக் கன்னி. ஹீரோ, ஹீரோயின்களைவிட, இவரின் கால்ஷீட்டுக்குப் பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் காத்திருந்த காலம் உண்டு. இந்தக் கவர்ச்சி காந்தம் சினிமா உலகில் வலுப்பெற்றிருந்த காலத்திலேயே, 1996-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி திடீரென மரணத்தைத் தழுவிக்கொண்டது. அவரின் நினைவு தினம் வருவதையொட்டி அவரின் தோழியும், நடிகையுமான அனுராதா, சில்க் ஸ்மிதாவுடன் நெருங்கிப் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார். 

சில்க் ஸ்மிதா

``சில்க் ஸ்மிதா, என் நெருங்கின தோழி. நிறைய படங்கள்ல சேர்ந்து வேலை பண்ணியிருக்கிறோம். ஆனா, அவங்க வயதிலும் சினிமாவிலும் எனக்கு சில ஆண்டுகள் சீனியர். ஆரம்பத்தில் நான் ஹீரோயினா நடிச்சுகிட்டு இருந்தேன். அப்போ கிளாமர் டான்ஸ்ல சில்க் பெரிய புகழுடன் இருந்தாங்க. 32 படங்கள்ல ஹீரோயினா நடிச்ச நிலையில, ஒரு படத்தில் கிளாமர் டான்ஸ் ஆடினேன். அந்தப் படம் பெரிய ஹிட். பிறகு, அப்படியான வாய்ப்புகளே எனக்கு நிறைய வர ஆரம்பிச்சுது. அவை ஹிட்டாச்சு. அதனால சில்க்கின் மார்கெட் சரிய தொடங்கினதாவும், சில்குக்கு என் மேல கோபம் இருந்ததாகவும் பேசப்பட்டுச்சு. நான் அதைப் பெரிசா எடுத்துக்கலை. அப்போகூட நாங்க இருவரும் பல படங்கள்ல ஒண்ணா வேலை பார்த்தோம். ஆனா, நாங்க பேசிகிட்டதில்லை. அதேநேரம், எங்களுக்குள் போட்டியோ, கோபமோ இருந்ததில்லை.

 

 

அனுராதா

இந்நிலையில சில்க் ஒரு தெலுங்குப் படத்தைத் தயாரிச்சு நடிச்சாங்க. `நீங்க இப்போ பீக்ல இருக்கீங்க. என் படத்தில் ஒரு டான்ஸ் ஆடுங்க'னு என்கிட்ட கேட்டாங்க. நானும் நடிச்சேன். அப்போதிலிருந்துதான் எங்க நட்பு படிப்படியா வளர ஆரம்பிச்சுது. `சில்க் ரொம்ப தலைக்கனம் உள்ளவங்க; திமிரு பிடிச்சவங்க; பெரிசா யாரையும் மதிக்க மாட்டாங்க'னு அப்போ பலரும் சொல்லுவாங்க. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்கிட்ட சில்க் ரொம்ப தைரியமா, திமிரா பேசுவாங்க. அதை, அவங்களோடு வொர்க் பண்ணின போது நானும் உணர்ந்தேன். அந்தக் கெத்தான குணம் எனக்குக்கூட இதுவரை வந்ததில்லை. ஆனா, எங்க நட்பு ஆழமான பிறகுதான், மத்தவங்க சொன்னதுல ஒண்ணுகூட உண்மையில்லை என்பதை உணர்ந்தேன்" என்கிற அனுராதா, சில்க் ஸ்மிதா உடனான நட்புத் தருணங்களைப் பகிர்கிறார்.

 

 

``சினிமாவில் பல ஹீரோ, ஹீரோயினுக்கும் மீறிய புகழை, தன் கிளாமர் டான்ஸால் சில்க் பெற்றாங்க. ஆனா, அந்தப் புகழ் அவருக்கு அவ்வளவு எளிதா கிடைச்சுடலை. சினிமா துறையினர் உட்பட பலராலும் பல விதத்துலயும் அவங்க நிறைய மனவேதனைகளை சந்திச்சிருக்காங்க. அந்தப் படிப்பினைகளிலிருந்துதான், தன்னைக் கோபக்காரி மாதிரி வெளிப்படுத்திகிட்டாங்க. வெளியே கோபமான ரூபத்தில் பேசினாலும், `இப்படிப் பேசிட்டோமே'னு பயமும் கவலையும் அவர் மனசுல இருக்கும். இப்படித் தனக்குத் தானே ஒரு வேலி போட்டுக்கிட்டாங்க. அதனால சில்க்கைப் பலரும் தப்பா பேசினாலும், அவரைக் கெட்ட எண்ணத்துடன் எளிதா நெருங்க முடியாம இருந்துச்சு. தன் மனசுல நிறைய வலிகள் இருந்தாலும் அவற்றை எப்போதும் பிறர்கிட்ட பகிர்ந்துக்க மாட்டாங்க. 

சில்க் ஸ்மிதா

சில்க்குக்கு டான்ஸ் வராது. அவரோட வசீகர முகமும், உடலமைப்பும் பெரிய ப்ளஸ். அதை கேரக்டர் மற்றும் டான்ஸ் தன்மைக்கு ஏற்ப சிறப்பா நளினத்துடன் வெளிப்படுத்துவாங்க. அந்த உடலமைப்பு வேறு எந்த நடிகைக்கும் வராது; இதுவரைக்கும் வரலை. அதனால் நானும் பலமுறை ஆச்சர்யப்பட்டிருக்கேன். அதைச் சில்க் கிட்டயே சொல்லியிருக்கேன். இருவருக்கும் ஓய்வுநேரம் கிடைச்சா, மீட் பண்ணுவோம். நிறைய பேசுவோம். காமெடியா பேசுவாங்க. சந்தோஷமான விஷயங்களைப் பத்திச் சொல்லுவாங்க. தன் மனசுல இருக்கிற எதார்த்தமான விஷயங்களைப் பத்தியும் சொல்லுவாங்க. ஆனால், தன் பர்சனல் விஷயங்களை யார்கிட்டயும் பகிர்ந்துக்க மாட்டாங்க. நானும் கேட்டதில்லை. ஒரு லிமிட்டுக்கு உண்டான வகையில் எங்கிட்ட பல விஷயங்களைச் சொல்லியிருக்காங்க" என்கிறார், அனுராதா.

 
 

 

சில்க் ஸ்மிதாவின் இறப்புப் பற்றிப் பேசுகையில், அனுராதாவின் குரல் உடைகிறது. ``அவளின் மரணம் இப்போ வரை மர்மமாகவே இருக்குது. அதற்கு இப்போவரை பல காரணங்கள் சொல்லப்படுது. நிறைய விஷயங்களை வெளிப்படையா சொல்ல முடியாதுங்க. அவங்க எப்படியான சூழல்ல இருந்து தவிச்சுட்டு இருந்தாங்கனு எனக்கு ஓரளவுக்குத் தெரியும். அதையெல்லாம் இப்போ பேசுறது சரிவராது. ஆனா, அவங்க ஒருத்தரைக் காதலிச்சாங்க. அந்தக் காதல் தோல்வியடைந்ததால், மனதளவில் வலிகளுடன் இருந்தாங்க. இந்த விஷயத்தைப் பத்தி ஓரளவுக்கு எங்கிட்ட பகிர்ந்துகிட்டாங்க. முழு விவரங்களும் எனக்குத் தெரியாது. அப்போ என் வீடு கே.கே.நகர்லயும், சில்க் வீடு சாலிகிராமத்துலயும் இருந்துச்சு. அவ திடீர்னு போன் பண்ணி வீட்டுக்கு வரச்சொல்லுவாள். நான் ஃப்ரீயா இருந்தா, உடனே போவேன். மனம்விட்டுப் பேசுவோம். 

சில்க் ஸ்மிதா

செப்டம்பர் 23, 1996-ம் ஆண்டு. அப்போ, ஒரு கன்னடப் படத்தைத் தயாரிச்ச சில்க், அதில் நடிச்சுட்டும் இருந்தாங்க. அந்தப் படத்தில் என் கணவர் சதீஷ்தான் நடன இயக்குநர். சில்க்கின் டான்ஸ் போர்ஷனை முடிச்சு அவளை அனுப்பிட்டு, பிற நடிகர்களின் டான்ஸ் போர்ஷனையும் முடிச்சுட்டு கணவர் எங்க வீட்டுக்கு வந்துட்டு இருக்கார். இரவு 9 மணி இருக்கும். சில்க்கிட்ட இருந்து எனக்கு போன் வந்துச்சு. `அனு, பிஸியா இருக்கியாடீ? என் வீடு வரைக்கும் வர்றியா? கொஞ்சம் பேசணும்'னு சொன்னாங்க. `இப்போதான் நானும் ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன். பிள்ளைக்குச் சாப்பாடு கொடுத்து தூங்க வைக்கணும். சதீஷூம் வீட்டுக்கு வந்துட்டு இருக்கார். அவர் வருவதற்குள் சாப்பாடு ரெடி பண்ணணும். நாளைக்குப் பிள்ளையை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டு, நேரா உன் வீட்டுக்கு வரேன். ஏதாச்சும் பிரச்னையா? போன்ல சொல்லு. ரொம்ப அவசர விஷயம்னா உடனே வரேன்'னு சொன்னேன். `பரவாயில்லை. நாளைக்கு வா. நேர்ல பேசுவோம்'னு சொல்லிட்டாங்க. அதனால நானும் வீட்டு வேலைகளை முடிச்சுட்டு தூங்கிட்டேன். காலையில சமையல் முடிச்சுட்டு, என் மகளை ஸ்கூலுக்கு அழைச்சுட்டுப் போகும் பரபரப்புல இருந்தேன். என் கணவர் சதீஷ் டிவியில நியூஸ் போட்டார். உடனே, `நடிகை சில்க் ஸ்மிதா மரணம்'னு ஃப்ளாஷ் நியூஸ் ஒளிபரப்பாச்சு. எனக்குப் பேரதிர்ச்சி. கதறி அழுதேன். உடனே சில்க் உடலைப் பார்க்க அவங்க வீட்டுக்குப் போனேன். நடிகை வித்யாவும் அப்போ அங்க வந்தாங்க. சில்க்கின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய விஜயா ஹாஸ்பிட்டல் கொண்டுபோயிருப்பதாகச் சொன்னாங்க. உடனே நாங்க இருவரும் ஹாஸ்பிட்டல் போனோம். சொந்தங்கள் இருந்தும், சில்க் தனிமை வாழ்க்கையைத்தான் வாழ்ந்தாங்க. ஹாஸ்பிட்டல்லதான் சில்க்கின் அம்மாவை முதன் முதலா பார்த்தேன். சில்க்கை கடைசியா பார்த்த அந்தத் தருணம் மறக்க முடியாதது.

22 வருஷம் ஓடிடுச்சு. ஒருவேளை அன்னிக்கு இரவு சில்க்கை சந்திக்க நான் போயிருந்தால், அவளின் பிரச்னைக்குத் தீர்வு சொல்லியிருப்பேன். அதனால சில்க் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டிருக்கலாம். அப்படி நடக்கலை. அதனால, சில்க்கின் மரணத்துக்கு நானும் ஒரு காரணம்னு குற்ற உணர்வு இன்னைக்கு வரை எனக்கிருக்கு. மத்தவங்க பர்சனல் விஷயத்துல தலையிடமாட்டாள்; தன் பர்சனலையும் பிறர்கிட்ட பகிர்ந்துக்க மாட்டாள். ரொம்ப நல்ல மனுஷி. போல்டான பெண். ஆனா, இப்படி ஒரு தவறான முடிவைத் தேர்ந்தெடுத்துக்கிட்டு, தன் 35 வயசுலயே இறந்துட்டாள். சினிமா துறை அழகான, சிறந்த நடிகையை இழந்துடுச்சு. அவளோட இடத்தை இப்போவரை எந்த நடிகையாலும் ஈடுசெய்ய முடியலை" எனக் கண்ணீருடன் முடித்தார் அனுராதா.

 

https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/137590-actress-anuradha-talks-about-her-friend-silk-smitha-memories.html

  • தொடங்கியவர்

சில்க் ஸ்மிதா... மரணமில்லா நாயகி! 


 

 

silk-smitha

சில்க் ஸ்மிதா

 

எந்தப் புண்ணியவான் பேரு வைத்தானோ... மிகச்சரியாகதான் பெயர் வைத்திருக்கிறார்கள், விஜயலட்சுமி என்று. ஆந்திராவில் இருந்து கோடம்பாக்கத்துக்கு விஜயமானாரோ... அப்போதிருந்தே, ஜெயம்தான்.

ஒவ்வொரு படங்களும் வரிசை கட்டி வாசற்கதவைத் தட்டின.  அது அதிர்ஷ்டலட்சுமி என்பதை விஜயலட்சுமி புரிந்து உணர்ந்துகொண்டார். பிறகென்ன... லட்சுமி கடாட்சத்துக்கு குறைவே இல்லை. 

 

1537711808.jpg

1960ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 2ம் தேதி, ஆந்திராவின் ஏலூருவில் பிறந்தார். பிறந்தது ஆந்திரம் என்றாலும் பூர்வீகம் என்னவோ கரூர்தான். இவர்களிடம் சொல்லாமலேயே வீட்டுக்குள் புகுந்து உட்கார்ந்து கொண்டு ஆட்சி செய்தது வறுமை. பசியோடு இருக்கும் சூழலில், படிக்கவும் வழியில்லை. படிக்கவும் புத்தி செல்லவில்லை. 

1537711761.jpg


இவரின் அழகில் எல்லோரும் மயங்கினார்கள். அந்த மயக்கம்தான்  இவரை பயமுறுத்தியது. உடலையும் மானத்தையும் காக்க, தனக்குத் தெரிந்த ஒப்பனைக்கலைக்குள் நுழைய முடிவு செய்து, சென்னைக்கு வந்தார். ஒப்பனையே இல்லாமல், இத்தனை அழகா என்று மொத்த கோடம்பாக்கமே மூக்கில் விரல் வைத்தது. ‘இந்தப் பொண்ணுக்கிட்ட ஏதோ இருக்கு. முக்கியமா, அவ கண்ணுல ஒளி தெரியுது’ என்று அந்தப் பெண்ணிடம் எப்படியோ பேசி சம்மதம் வாங்கினார் வினுசக்ரவர்த்தி. 


விஜயலட்சுமியின் வாழ்க்கைச் சக்கரம் அன்று முதல் வேகமாகச் சுழலத் தொடங்கியது. அதுதான் வண்டிச்சக்கரம். விஜயலட்சுமி. ஸ்மிதாவானார். படத்தில் நடித்த சிலுக்கு... பேருடன் ஒட்டிக்கொண்டது. தமிழ் ரசிக நெஞ்சங்களிலும் பச்சை குத்தப்பட்டது போல பச்சக்கென ஒட்டிக்கொண்டது.


கேமிரா இல்லாமல் கூட படமெடுப்பார்கள். பிலிம் ரோல் இல்லாமல் கூட படமெடுப்பார்கள்.ஹீரோவோ ஹீரோயினோ இல்லாமல் கூட படமெடுப்பார்கள். அப்போது சில்க் இன்றி அமையாது சினிமா உலகு என்பது எழுதப்படாத வெற்றி ஃபார்முலாவானது. படத்தில் ஒரு சின் வந்தாலும், ஒரு பாட்டுக்கு வந்தாலும்... போஸ்டர்களிலும் பேனர்களிலும் சில்க்கின் முகம், முக்கியத்துவத்துடன் பளிச்சிட்டது. 


முதலில் மலையாளப் படத்தில் அறிமுகம் கிடைத்தாலும் வண்டிச்சக்கரம் இவரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. 81ம் ஆண்டு, பாரதிராஜா தன்னுடைய அலைகள் ஓய்வதில்லை படத்தில், அற்புதமான கேரக்டரைத் தந்திருந்தார். இவரும் மிகச்சிறப்பானதொரு நடிப்பை வழங்கியிருந்தார். 


இதன் பிறகு, கங்கைஅமரன் இயக்கிய கோழி கூவுது படத்தில், அருமையான கேரக்டர் ரோல் கிடைத்தது. இந்த முறை கிளாமரும் கேரக்டருமாக சேர்ந்து கலக்கினார். இதே வருடத்தில்தான் இன்னொரு வெளிச்சம்... சில்க்கின் மீது விழுந்தது. 


இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவின் இயக்கத்தில், கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறையில் ஒரு கேரக்டர். முக்கியமாக ஒரு பாட்டு. பொன்மேனி உருகுதே...பாடலை எப்படி மறக்கமுடியும். கமலும் சில்க்கும் நடனமாடுகிற அசைவுகள், அந்தக் காலத்தில் பிரபலம். பாடலின் உடைகள் கூட பேசப்பட்டன. 


அதன் பிறகு...  உழைப்பு, உழைப்பு, உழைப்பு. கடுமையாக உழைத்தார்.  அடுத்து வந்ததுதான் சகலகலாவல்லவன். மீண்டும் கமலுடன். ஏவிஎம், கமல், இளையராஜா என்கிற கூட்டணியுடன் நேத்து ராத்திரி யம்மா பாடல் பட்டிதொட்டியெங்கும் சில்க்கைக் கொண்டுபோய் சேர்த்தது. 
ஒரு கவர்ச்சிக்கன்னியை, செக்ஸ் நடிகையை, டான்ஸ்க்கு வருகிற நடிகையை, தமிழ் கூறும் நல்லுலகம் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பாவித்தது, அநேகமாக சில்க் ஸ்மிதாவைத்தான்! முன்பும் பின்பும் அப்படியொரு பந்தப் பிணைப்பு எவருக்கும் அமையவில்லை. 

 


மூன்று முகம், தங்கமகன், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, சில்க் சில்க் சில்க், நீங்கள் கேட்டவை, அன்று பெய்த மழையில்... என்று பல படங்கள். காலையில் தமிழில் நடிப்பார். மதியத்தில் தெலுங்குக்கு வாயசைப்பார். மாலையில் மலையாளப் பெண்குட்டியாவார். இரவில் விமானமேறி, ஹிந்திப்படத்தில் மறுநாள் நடிப்பார். காலுக்குச் சக்கரமும் தோளுக்கு றெக்கையும் கொண்டு பறந்தார். 


இப்படித்தான்... சூரியன் கொஞ்சம் மந்தமாகவும் சோகமாகவும் உதித்த ஓர் நாளில், இடியென செய்தி, தமிழகம் முழுவதும் இறங்கியது. இந்தியா முழுவதும் பரவியது. ’சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டார். சேதி கேட்ட காற்றே கண்ணீர்விட்டது. திரையுலகமே முடங்கிப்போனது.


மொத்த தமிழகமும் தங்கள் வீட்டில் ஏதோ ஒரு மரணம் சம்பவித்துவிட்டதாக கலங்கியது. பரிதவித்ததது. பதைபதைத்தது. ‘என்னாச்சு... ஏன்... எதனால...’ என்று கூடிக்கூடி பேசி ஆற்றிக்கொண்டது.


‘என்னாச்சு... ஏன்... எதனால...’ என்கிற கேள்விகள், இன்னும் கேள்விகளாகவே! பதில் கிடைத்தபாடில்லை. 


விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதாவுக்கு, எல்லாமே ஜெயமானது. வாழ்க்கையைத் தவிர! 


வாழவேண்டுமே என்று ஆசைப்பட்டு ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்து, தமிழகத்தில் இருந்து மொத்த இந்திய மொழிகளிலும் வலம் வந்து, தடக்கென்று ஒரு நாள்... விண்ணுக்குச் சென்றுவிட்டார். 


கண்களாலும் பேச்சாலும் உடல் மொழியாலும் உடற்கட்டாலும் ஆட்டத்தாலும் மக்களைக் கட்டிப் போட்ட சில்க் ஸ்மிதாவுக்கு, மனதில் கொடுத்த அந்த உயர்ந்த இடத்தை இன்று வரை எவருக்கும் தரவில்லை. 


சில்க்கின் இடத்தை சில்க்கால் மட்டுமே நிரப்பமுடியும். 


இன்று... செப்டம்பர் 23ம் தேதி, சில்க் ஸ்மிதா இறந்தநாள்! 


நூற்றாண்டு கொண்டாடிய தமிழ் சினிமா, அடுத்த நூற்றாண்டு கொண்டாடும் போதும் மக்களின் மனங்களில் மாறாப் புகழுடனும் இடத்துடனும் வீற்றிருப்பார் சிலுக்கு! 

https://www.kamadenu.in/news/cinema/6474-silk-smitha.html

நேர்வே ரடம்மன் என்னுமிடத்தில் சில்க் தன் பெண்டாட்டி என்று சொல்லிக் கொண்டு ஒருவர் திரிகிறார்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, lusu said:

நேர்வே ரடம்மன் என்னுமிடத்தில் சில்க் தன் பெண்டாட்டி என்று சொல்லிக் கொண்டு ஒருவர் திரிகிறார்

ரடம்மனிலை  சிலுக்கின்ரை கலை நிகழ்ச்சி ஏதும் நடந்ததோ? :27_sunglasses:

பà¯à®©à¯à®®à¯à®©à®¿ à®à®°à¯à®à¯à®¤à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, lusu said:

நேர்வே ரடம்மன் என்னுமிடத்தில் சில்க் தன் பெண்டாட்டி என்று சொல்லிக் கொண்டு ஒருவர் திரிகிறார்

 

உண்மையா இருக்கும்.

இலண்டணில் அரவிந்தன் என்று  ஒருவர் முன்னால் கவர்ச்சி நடிகை மாதிரியை கட்டினார். விசா கிடைக்கல்ல... இவர் இங்க இருந்து ஏஜன்சி அலுவல் பார்க்க , போடாங் ......கொய்யால எண்டு, பட்சி பறந்து விட்டது.

முதல் மரியாதை படத்தில் நடித்த ரஞ்சனியை, கேதீஸ்வரன் என்று ஒருவர் கட்டிக்கொண்டு வந்து, இரண்டு பேருமா டிராவல் ஏஜன்சி நடத்தினார்கள்.

சரிவரல்ல...... ஆள் கிளம்ப.... நம்மாளு... நெடுந்தீவில பிரதேச சபை எலக்சனில நின்றார்.

என்ன பொருத்தம் இவரும் ட்ராவல் ஏஜென்சி தான் வைத்திருக்கிறாராம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.