Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாம்பியோவின் பயணத்தினை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளதா இலங்கை.? - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பியோவின் பயணத்தினை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளதா இலங்கை.? - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

Screenshot-2020-11-05-11-46-34-451-org-m

இலங்கை அமெரிக்க உறவின் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோவின் விஜயம் ஒரு வரலாற்று நிகழ்வென இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். மைக் பாம்பியோவின் விஜயம் இலங்கை அரசியல் பரப்பில் ஜேவிபி உட்பட பல தரப்பினரிடமும் அதிக கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இலங்கை ஆடசியாளர்கள் பாம்பியோவை எதிர் கொண்ட விதத்தையும் அதன் மறுபக்கத்தையும் தேடுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

முதலாவது மைக் பாம்பியோவும் இலங்கை ஜனாதிபதியும் சந்தித்த போது ஜனாதிபதி வெளிப்படுத்திய விடயங்களை நோக்குவோம்.

இலங்கையின் தேவை தொடர்ந்தும் கடன் பெறுவதல்ல வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் அதிக பொருளாதார வளர்ச்சியை அடைவதேயாகும். வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடையாக அமையும் அதிகாரத்துவ மைய நடைமுறைகளை நீக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.இலங்கை அதிக விவசாய வளர்ச்சியை அடைந்து கொள்வதற்கு தேவையான வளங்களைக் கொண்ட நாடாகும். எமது விவசாயத் துறையை நவீனமயப்படுத்த ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. அதற்கு உதவுங்கள்.

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை நடுநிலையானது. இலங்கை ஏனைய நாடுகளுடன் பேணிவரும் உறவு வரலாற்று கலாசார மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பின் பிரகாரம் முக்கியமானது.சர்வதேச தொடர்புகளின் போது நாட்டின் சுயாதீனத் தன்மை இறைமை ஆள்புல ஒருமைப்பாடு என்பனவற்றை விட்டுக் கொடுப்பதற்கு ஒரு போதும் நாம் தயார் இல்லை.

பிரிவினைவாதப் போரை முடிபுக்கு கொண்டுவந்ததன் பின்னர் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சீனா உதவியது. அதன் விளைவாக இலங்கை கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்ளவில்லை என்றார் கோட்டபாய ராஜபக்ச.

ஜனாதிபதியின் கலந்துரையாடலில் தெரிவித்த கருத்துக்கள் ஒவ்வொன்றும் இராஜதந்திர உத்தியைக் கொண்டவை. சீனாவைப் நிராகரிக்காத ஜனாதிபதி சீனாவுடனான உறவின் வரலாற்றையும் கலாசாரத்தையும் தொட்டுக் காட்டியதுடன் பிரிவினைவாதப் போருக்கு பின்னான சீன இலங்கை உறவின் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தியிருந்தார்.

சுயாதீனத்தையும் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் விட்டுக் கொடுக்க முடியாததென்பதுடன் அதிகாரத்துவ மைய நடைமுறைகளையும் நிராகரித்தார். அது மட்டுமல்ல எம்சிசி உடன்பாட்டின் முக்கிய பகுதியான விவசாய உற்பத்திக்கான தேவையை தொட்டுக் காட்டியதுடன் எம்சிசியிலிருந்து விவசாயத்தை வேறுபடுத்தி அதன் முடிபினை வெளிப்படுத்தியிருந்தார்.

இதன் மூலம் மைக் பாம்பியோவின் விஜயத்தின் மையத்தையே தகர்த்துவிட்டார். ஆனால் மைக் பாம்பியோ இலங்கை விஜயத்தின் போது தெரிவித்த கருத்துக்களை அவதானிக்கும் போது அமெரிக்காவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்ள முடியும்.

இலங்கை ஆசியாவில் மிகவும் வயது முதிர்ந்த ஜனநாயக நாடு என வர்ணித்த பாம்பியோ அமைதியான சபீட்சமுள்ள இறைமையுடைய இலங்கையோடு அமெரிக்கா உறவை பேணவுள்ளதாகவும் பாதுகாப்பு மற்றும் இலங்கைப் படைகளுடனான கூட்டுப் பயிற்சிகள் ஒத்துழைப்புக்கள் மற்றும் நீண்ட கால அபிவிருத்தி குறித்தும் ஜனாரதிபதி கோட்டபாயாவுடன் பேசியதாக பத்திரிகையாளர் மத்தியில் தெரிவித்தார்.

. அது மட்டுமன்றி கோவிட்-19 காலப்பகுதியில் ஆறு பில்லியன் அ.டொலரினை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியதாகவும் வைரஸ் பரவல் காலத்தில் அமெரிக்காவுக்கு தேவைப்பட்ட உதவிகளை இலங்கை வழங்கியதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடும் போது சீனா ஒரு வேட்டையாடும் சக்தி என்றும் ஆனால் அமெரிக்கா நட்புச் சக்தி எனவும் குறிப்பிட்டதன் மூலம் பாம்பியோ இலங்கை பொறுத்து ஒரு மென் போக்கினை கடைப்பிடித்துள்ளதை அவதானிக்க முடிந்தது.

இலங்கை மண்ணில் இருந்து கொண்டு சீனாவை கண்டித்ததுடன் இலங்கையை அரவணைக்கும் போக்கினை வெளிப்படுத்தியதாக கூர்மை இணையத் தளம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது. ஆனாலும் மைக் பாம்பியோ இலங்கையை கையாண்ட விதம் தனித்துவமானதாகவே தெரிகிறது. அது ஒரு மென் போக்காகவே அமைந்துள்ளது.

வெளிப்படையாக கூறுவதானால் இலங்கை ஜனாதிபதியின் உரையாடலுக்கும் பாம்பியோவின் ஊடக கருத்திற்கும் அதிக வேறுபட்ட தொனி தெனட்படுகிறது. இலங்கை தனது நிலைப்பவாட்டில் விட்டுக் கொடுக்காத போக்கும் அமெரிக்காவின் நிலையில் தளர்வும் அவதானிக்க முடிந்தது.

இலங்கை விடயத்தில் அமெரிக்க வல்லரசின் இராஜாங்க செயலாளரது வெளிப்பாடு போன்று அமையாது இருந்ததுடன் சீன விடயத்தில் மட்டும் அதனைக் காணமுடிந்தது. இதனால் இலங்கைக்கு வருகை தந்த செயலாளர் பாம்பியோ 72 வருட உறவை பலப்படுத்திவிட்டுச் செல்வதைக் காணமுடிந்தது.

இரண்டாவது இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அமெரிக்க வெளியுறவுச் செயலாளருடனான பத்திரியாளர் சந்திப்பின் போது இலங்கையின் ஐக்கியம் நல்லிணக்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பாக நாம் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கிறோம்.

எமது நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றவும் உறுதியாக இருக்கிறோம். பக்கச்சார்பற்ற அணிசேரா நாடாக இலங்கை தொடர்ந்தும் பயணிக்கும்.அந்த வகையில் அமெரிக்காவுடனும் ஏனைய நாடுகளுடனும் இலங்கை இணைந்து பயணிக்கும் என்றார்.

மூன்றாவது மைக் பாம்பியோவின் விஜயத்தில் இந்தியா வருகை தந்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் இலங்கை வருகை தராததும் பாம்பியோ இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்திக்காததும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இது திட்டமிடப்பட்டதா அல்லது ஜனாதரிபதியின் கருத்துடன் நிலைமையை பாம்பியோ புரிந்து கொண்டாரா என்பது கேள்விக்குரியதே. ஆனால் சம்பிருதாய பூர்வமாகவேனும் பிரதமரை வெளிநாட்டின் இராஜாங்க செயலாளர் சந்திப்பது மரபாகும். இது வேறு ஏதேனும் விடயத்தை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது.இது ஒரு இராஜீக விடயமாக அமைந்துள்ளதாகவே தெரிகிறது. இதன் மூலம் அதிக மாற்றம் இலங்கைப்பரப்பில் சாத்தியப்பட வாய்ப்புள்ளது.

நான்காவது இதே சந்தர்ப்பத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அலரிமாளிகையில் இலங்கை இந்திய சமுதாயப் பேரவையின் புதிய தலைமையை கௌரவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. புதிய தலைவர் ராஜூ உட்பட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

sri-lanka-china-india-flags.jpg

ஐந்தாவது இந்திய தூதுவர் கோபால் பாக்லே உடனான சந்திப்பினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொண்டுள்ளது. வடக்கு கிழக்கின் அபிவிருத்தி இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு ஜெனீவா தீர்மானம் தொடர்பில் உரையாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே இலங்கை அரசாங்கம் இந்தியத் தரப்பு தமிழ் தரப்பு அமெரிக்கா தரப்பு சீன தரப்பு என பல முனையில் இலங்கையின் அமைவிடம் பொறுத்து நெருக்கடிக்குள்ளாகிவருகிறது. இதில் இலங்கை அரசாங்கம் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் செயல்படுவதனை ஜனாதிபதி பாம்பியோவை சந்தித்த போது வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் இலங்கை அணி சேராமை என்று குறிப்பிட்டுக் கொண்டு சீனாவை அதிகம் ஈர்க்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலங்கையின் புறச்சூழலும் அதனையே வலியுறுத்துகிறது. அமெரிக்காவின் வெளியுறவுச செயலாளர் மென் போக்கினைக் கடைப்பிடித்தாலும் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிபுகள் தரப் போகும் மாற்றம் எவ்வாறானதாக அமையும் என்பது மட்டுமல்ல அமெரிக்கா போன்று இந்தியா செயல்பட முனையுமா என்பது பிரதான கேள்வியாகும்.

ஆனால் இந்தியாவை கையாளும் ஆயுதங்கள் அனைத்தும் இலங்கை ஆட்சியாளரிடம் உண்டு என்பதையும் மறுக்க முடியாது. அப்படியாயின் இந்தக் களம் இலங்கைக்கானதாகவே அமையவுள்ளது என்ற முடிபுக்கு வரமுடியும். ஆனால் இந்தியத் தரப்பு தொடர்ச்சியாக இலங்கை விடயத்தில் கவனம் செலுத்துகிறதை அவதானி;கக முடிகிறது.

அதனால் ஏற்படப் போகும் அணுகுமுறைகள் இலங்கை ஆட்சியாளர் எதிர்பார்ப்பது போல் அமையுமா என்பது சந்தேகமானதே. காரணம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வருகைதர உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

http://aruvi.com/article/tam/2020/11/04/18843/

  • கருத்துக்கள உறவுகள்

பொம்பியோ தொடுத்த தாக்குதல்சீனாவின் பக்கத்திலா இலங்கை? – அகிலன்

 
mike-gota-696x384.png
 2 Views

கொழும்பு அரசியல் கடந்த வாரம் இராஜதந்திரக் காய் நகர்த்தல்கள் நிறைந்த ஒரு வாரமாகவே இருந்துள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் கொழும்பு வருகை, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பால்கே சம்பந்தனுடன் நடத்திய பேச்சு, சீனாவின் புதிய தூதுவர் இலங்கை வருகை என இராஜதந்திர அரசியல் சூடுபிடித்திருந்தது.

20 ஆவது திருத்தத்தின் மூலம் அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி தன்வசம் எடுத்திருக்கும் பின்னணியில், இந்த அரசியல் நகர்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான விஜயம் எதிர்பார்க்கப்பட்டது போலவே சர்ச்சைக்குரிய ஒன்றாக முடிந்திருக்கின்றது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு போட்டிக் களமாக இலங்கை அமைந்திருக்கிறது என்பதை இந்த விஜயம் மீண்டுமொருமுறை தெளிவாக உணர்த்தி இருக்கின்றது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளரும் தெளிவான சில செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கின்றார்.

பொம்பியோவின் இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கடுமையான அறிக்கை ஒன்றை சீனா வெளியிட்டிருந்தது. “இலங்கை மக்களை பொம்பியோ குழப்பக் கூடாது”  என்ற அர்த்தத்தில் சீனாவின் அந்த அறிவிப்பு ஒரு எச்சரிக்கைப் பாணியில் வெளிவந்திருந்தது. பொம்பியோ தன்னுடைய விஜயத்தின் போது இலங்கை மக்களைக் குழப்பக்கூடிய வகையில் சீனா குறித்து கருத்து வெளியிடுவார் என்பதை சீனா சரியாகவே கணித்திருந்தது. பொம்பியோவின் கொழும்பு வருகை இலங்கையில் தன்னுடைய இருப்பை எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் சீனா மிகவும் அவதானமாகவே இருந்திருக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவையும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் கூட்டாக ஊடக மாநாட்டை நடத்திய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், சீனா மீது தாக்குதலைத் தொடுப்பதற்கு அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். “இலங்கையை, சீனா சூறையாடுகின்றது” என்ற அர்த்தத்திலான அவரது கருத்து நிச்சயமாக இராஜதந்திர வட்டாரங்களை அதிர வைத்திருக்கின்றது. இது சீனாவுக்குக் கடும் அதிருப்தியையும் – சீற்றத்தையும் கொடுத்தது.

gota-mike.600.png

“நாங்கள் நண்பர்களாக வருகின்றோம், சகாக்களாக வருகின்றோம். ஆனால் சீனாவோ, இலங்கையின் இறையாண்மையை மோசமாக மீறும் வகையில் மோசமான உடன்படிக்கைகளையும், சட்ட மீறல்களையும் கொண்டு வந்திருக்கின்றது. இலங்கையின் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி பிறரை சூறையாடும் தன்மை கொண்டது” என பொம்பியோ கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தி சீனா மீதான தாக்குதலை நடத்தினார்.

இலங்கையில் வைத்து, இலங்கைக்குப் பெருமளவு பொருளாதார கட்டுமான உதவிகளைச் செய்து வரும் சீனா மீது இவ்வாறான தாக்குதல் ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நடத்துவார் என்பது எதிர்பார்க்காத ஒன்றுதான். இலங்கை அரசுக்கு இது பெரும் சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இதன் மூலம் சொல்லப்பட்ட செய்தி முக்கியமானது.

சீனாவோ இவ்வாறான தாக்குதல் ஒன்றை எதிர்பார்த்திருந்தது போல, சில நொடிகளிலேயே அதற்குக் கடுமையான பதிலடி ஒன்றைக் கொடுத்தது. கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட ருவிட்டர் குறிப்பில், “மன்னிக்கவும். இராஜாங்க அமைச்சர் பொம்பியோ. நாம் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதில் பிஸியாக இருக்கின்றோம். உங்களது ஏலியன் எதிர் பிறிடேட்டர் விளையாட்டுக்கான அழைப்பில் எமக்கு அக்கறையில்லை.  என்றும் போல அமெரிக்கா இரட்டைப் பாத்திரத்தை ஒரே நேரத்திலேயே விளையாட முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவகையில் நையாண்டித் தனமான ஒரு குறிப்பைத்தான் சீனா தனது பிரதிபலிப்பாக வெளியிட்டது.

பொம்பியோவுடன் இணைந்து ஊடகவியலாளர்களைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, தாம் வெளிவிவகாரங்களில் நடுநிலைக் கொள்கையை கடைப்பிடிப்பதாகவும், அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இலங்கை வழமையாக அவ்வாறுதான் கூறுகின்றது.

“விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் முடிவின் பின்னர் சீனா இலங்கையின் அபிவிருத்திக்கு உதவியது” என்பதை பொம்பியோவுடனான பேச்சின் போது, சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் காரணமாக இலங்கை சீனாவின் கடன்பொறியில் சிக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். “இலங்கைக்கும், வெளி நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல விடயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன கலாச்சார மற்றும் வரலாற்றுக் காரணிகள், அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆகியனவே சில முன்னுரிமைக்குரிய விடயங்கள் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, வெளிநாட்டு உறவுகளை பேணுவதற்காக எந்த சூழ்நிலை உருவானாலும் இலங்கையின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சீனா தொடர்பில் பொம்பியோ அதிரடியாகத் தெரிவித்த கருத்துக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலாகவே ஜனாதிபதியினதும், வெளிவிவகார அமைச்சரினதும் கருத்துக்கள் உள்ளன. அமெரிக்காவை இந்தக் கருத்துக்கள் திருப்திப்படுத்தும் என்பது எதிர்பார்க்கக் கூடியதல்ல. சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதை தம்மால் ஏற்க முடியாது என்பதை இலங்கை மண்ணில் வைத்தே அமெரிக்கா இந்தளவுக்கு கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம்  வெளிப்படுத்தியிருப்பது இலங்கைக்கு மறைமுகமாக விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கைதான்.

இலங்கையுடன் இரண்டு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடுவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது. ஒன்று SOFA மற்றது எம்.சி.சி. இந்த இரண்டு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடப்பண்ணுவதற்கான அழுத்தத்தைத்தான் அமெரிக்கா கொடுத்தது என ஜே.வி.பி. போன்ற அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், “அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட இலங்கை கைச்சாத்திடாது” என ஜனாதிபதி கோட்டாபய சிங்கள வாரப் பத்திரிகை ஒன்றுக்கு உறுதியாகக் கூறியிருக்கின்றார்.

இலங்கையைப் பொறுத்தவரையில், சீனாவின் முதலீடுகள் அதற்கு முக்கியம். பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதால், சீனாவின் கடன் உதவிகளும் அதற்குத் தேவை. பலமான பொருளாதாரத்தைக் கொண்டதாக சீனா இருப்பதால், அதற்கான வாய்ப்புக்களும் அதற்கு அதிகம். இலங்கை என்னதான் அணிசேராக் கொள்கை என்று சொல்லிக் கொண்டாலும், சீனாவுடனான உறவு அதற்கு முக்கியம். அதனால், அந்த உறவை இலங்கை தொடரத்தான் போகின்றது.

இந்தியாவின் ஆதரவுடன் சீனாவுக்கு எதிரான வார்த்தைப் போரை கொழும்பில் ஆரம்பித்த அமெரிக்கா, இலங்கையைப் பணிய வைப்பதற்கு வைத்திருக்கும் உபாயங்கள் என்ன? இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறப்போகும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அதனை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்

https://www.ilakku.org/mike-pompeo-china-sri-lanka/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.