Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆழ்ந்தடங்கிய தமிழ்ச் சான்றோன்.. வித்துவான் பொன். அ. கனகசபை..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

''தினகரன் வாரமஞ்சரி"

******************************

          06 - 06 - 2021

-------------------------------

 

ஆழ்ந்தடங்கிய தமிழ்ச் சான்றோன்..

வித்துவான் பொன். அ. கனகசபை..!!

***********************************************

 

ஈழத்தில் எங்கெல்லாம் தமிழ் ஓசை முழங்கியதோ, அங்கெல்லாம் குறிப்பிடத்தக்க மூன்று தமிழறிஞர்களில் ஒருவரின் குரலாவது நிச்சயம் ஒலித்திருக்கும்.

 

ஐம்பதுகளின் ஆரம்பம் முதல் சுமார் அரை நூற்றாண்டு காலம் அவர்கள் குரல் யாழ் குடாநாட்டுத் தமிழ் விழா மேடைகளில் தவறாது ஒலித்தது எனலாம்.

 

அந்த மூவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஒருவகையில் உறவினர்கள் கூட..

 

புகழ்பெற்ற புலவர்களையும், அறிஞர்களையும், தலைசிறந்த ஆசான்களையும், எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் பெற்ற பெருமைக்குரியது புங்குடுதீவு..

 

தமிழ்ச் செம்மொழி வளர்ச்சிக்குச் சலியாது தொண்டாற்றிய பேரறிஞர்களை, மண் மறவா மனிதர்களை, பெரு வள்ளல்களைப் பெற்றெடுத்த பூமி..

 

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கிய மூவர், 

 

யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று கல்லூரிகளில் தமிழ்ஒளி ஊட்டினர்.

 

புங்குடுதீவு மண்ணின் மைந்தர்களான மூவரில் க. சிவராமலிங்கம் அவர்களை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விரும்பி வரவேற்றுக்கொண்டது.

 

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி வித்துவான் சி. ஆறுமுகம் அவர்களை அன்புடன் அழைத்துக்கொண்டது.

 

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி வித்துவான் பொன். அ. கனகசபை அவர்களைக் கரம்நீட்டி வரவேற்றுக்கொண்டது.

 

வித்துவான் பொன். அ. கனகசபையின் பணிகள் குறித்து இங்கு நோக்குவோம்.

 

இவர் 'ஆழ்ந்தடங்கிய தமிழ்ச் சான்றோன்' எனப் பாராட்டுப் பெற்றவர்.

 

சங்க இலக்கியம் முதல் ஈழத்து இலக்கியங்கள் வரை துறைபோகக் கற்றவர். 

 

தமிழ் இலக்கிய, இலக்கணப் புலமை வாய்ந்தவர். சைவ சித்தாந்தச் செம்மலாக விளங்கியவர்.

 

இவர் சிறந்த காந்தியவாதியாக திகழ்ந்தவர். 

 

கதர் வேட்டி, கதர்ச் சட்டை, கதர்ச் சால்வை அணிந்து காட்சியளித்தவர்.

 

அமைதியான சுபாவம் கொண்டவர். ஆடம்பரமற்றவர். நிறைகுடம் தளம்பாது என்பதுபோல் அனைவருடனும் அன்பாகப் பழகியவர்.

 

இலங்கை காந்திய சேவா சங்கத்தில் இணைந்து மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளில் பெரும்பங்கு கொண்டு உழைத்தவர்.

 

தமது ஆசிரியப் பணிக்கு மேலாகச் சமூகச் சீர்திருத்தத்திற்காகப் பெரிதும் பாடுபட்டவர்.

 

தமிழ்ப்பணியே தன் பணியாகக் கொண்டு இறுதிவரை இயங்கியவர். அவரது பணிகள் அளவிடற்கரியன.

 

சுவாமி சுத்தானந்த பாரதியார், தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றோரைப் புங்குடுதீவுக்கு அழைத்து வந்து அவர்களது உரைகளை அங்குள்ள மக்கள் செவிமடுக்கச் செய்தவர்.

 

பல ஆலயங்களில் சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 

 

சைவத் திருமுறை, புராண உரையாளராகவும் விளங்கினார்.

 

இலக்கிய விழாக்கள், பட்டிமன்றங்கள், மாநாடுகள், சைவத் தமிழ் விழாக்கள், ஆலய உற்சவங்கள் என எங்கும் வித்துவான் பொன். கனகசபையின் குரல் ஒலித்தது எனலாம்.

 

யாழ்ப்பாணம் சிவயோக சுவாமியைத் தரிசித்தவர். அவரின் கட்டளைப்படி 'சிவதொண்டன்' இதழின் ஆசிரிய குழுவிலும் சேர்ந்து பணியாற்றியவர்.

 

வைத்தீஸ்வராக் கல்லூரியில் உயர்வகுப்பு மாணவர் பல நூற்றுக்கணக்கானோருக்குத் தமிழ், சமயம் கற்பித்தவர். 

 

இவரிடம் தமிழ் கற்ற மாணவர்கள் பலர் சிறந்த எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, பேராசிரியர்களாக, விரிவுரையாளர்களாக வாழ்வில் முன்னேற்றமடைந்தனர்.

 

பிறந்த மண்ணில் சேவையாற்ற விருப்பங்கொண்டு 1965 -ல் புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு மாற்றம் பெற்று வந்தார்.

 

இம்மகாவித்தியாலயத்தில் உயர்வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், சமயம் போன்ற பாடங்களைக் கரிசனையுடன் கற்பித்தார்.  

 

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இப்பாடங்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர்.

 

மாணவர்களுக்குத் தமிழ் இலக்கணத்தை இனிக்கும் வகையில் போதிக்கும் திறமை படைத்தவர். 

 

இவரிடம் இலக்கணம் கற்பதே தனி இன்பமென மாணவர் பலர் என்னிடம் வாய்விட்டுக் கூறியுள்ளனர்.

 

இறுதிக் காலத்தில் மகாவித்தியாலயத்தின் உபஅதிபராகவும் கடமையாற்றினார்.

 

அற்பத் திறமை கொண்டோரும் தம்மைத் தமிழ்ப் பேரறிஞரெனத் தம்பட்டமடித்துத் திரிந்த அந்நாளில், வித்துவான் கனகசபை அமைதியான, செருக்கற்ற மனிதனாகத் திகழ்ந்தார். 

 

அவரை அறிந்தோர் இன்றும் அந்த அறிஞரை மறக்கமாட்டார்கள்.

 

புங்குடுதீவு நலன்புரிச் சங்கம், புங்குடுதீவு இளைஞர் கழகம், மகா வித்தியாலயப் பெற்றோர் ஆசிரியர் சங்கம், கிராமோதய சபை, யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையம், இலங்கை இந்து மாமன்றம் முதலிய பல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார்.

 

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றபின் மாணவர்களுக்கு இலவச வகுப்புகளை நடத்தி வந்தார்.

 

 அந்த மாணவர்கள் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதையிட்டுப் பெற்றோர் அவரின் சேவையைப் பெரிதும் பாராட்டினர்.

 

இலங்கை அரசின் சாகித்திய மண்டலத்தினால் வெளியிடப்பெற்ற ''ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்" என்ற அரிய நூலினைத் தமிழன்பர்கள் எவருமே மறந்திருக்கமாட்டார்கள்.

 

பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களால் தொகுக்கப்பெற்ற இந்நூல் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றை, வளர்ச்சிப் பாங்கை அறிந்திடப் பெரிதும் உதவுகிறது. 

 

இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளைத் தேடிக் கண்டறிந்து தொகுப்பதில் பெரும் பங்காற்றிய பெருமை வித்துவான் கனகசபை அவர்களையே சாரும். 

 

இவரது பயன்கருதாத இத்தமிழ்ப் பணியைப் பேராசிரியர் சதாசிவம் அவர்களே இந்நூலின் முகவுரையில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.

 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் புங்குடுதீவில் வாழ்ந்த இராமலிங்கச் சட்டம்பியார் என்னும் புலவரின் பாடல்களையும் இந்நூலில் இடம்பெறச்செய்த பெருமையும் வித்துவான் அவர்களையே சாரும்.

 

 இதுமட்டுமின்றித் தமிழ்ப் பேரறிஞர் மறைமலை அடிகளாரின் (சுவாமி வேதாசலம்) தாயார் புங்குடுதீவைச் சேர்ந்தவர் என்ற உண்மையையும் (இது ஆய்வுக்குரியது) வித்துவான் கூறியுள்ளார்.

 

 

புங்குடுதீவில் தலைமையகத்தைக் கொண்ட வட இலங்கை சர்வோதய இயக்கத்துடன் வித்துவான் நெருங்கிய தொடர்பு கொண்டவர். 

 

வட இலங்கை சர்வோதய இயக்க ஸ்தாபகர் - அறங்காவலர் 'தொண்டர்' க. திருநாவுக்கரசின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர்.

 

சர்வோதய இயக்கத்தின் பணிகள் பலவற்றுக்கும் உறுதுணையாக இறுதிக் காலம்வரை இருந்தவர்.

மரபு தவறாத வகையில் பல்வேறு கவிதைகளை எழுதியுள்ளார்.  

 

சிற்றம்பல நாடிகள் அருளிய ''திருச்செந்தூரகவல்" என்ற நூலுக்கு விளக்கவுரை எழுதினார். 

 

இந்நூலுக்கு இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அணிந்துரை அளித்துள்ளார்.  

 

இவர் எழுதிய விளக்கவுரை சைவத் தமிழறிஞர்களின் பாராட்டுப்பெற்றது. 

 

''திருவுந்தியார்" உரைவிளக்கம் - பொழிப்பும் எழுதினார்.

 

 ''கிராஞ்சியம்பதி கீதாஞ்சலி செந்தமிழ்மாலை" என்ற நூலையும் எழுதினார்.

 

பல்வேறு ஆலயங்களுக்குரிய ஊஞ்சல் பாக்களையும் வித்துவான் கனகசபை இயற்றியுள்ளார். 

சமய விளக்கக் கட்டுரைகள், இலக்கண விளக்கக் கட்டுரைகள் பலவற்றையும் எழுதியுள்ளார்.

 

கல்விப்பணி, சமயப்பணி, இலக்கியப்பணி, சமூக சீர்திருத்தப்பணி ஆதியாம் பல்வேறு துறைகளில் தடம்பதித்து அளப்பரிய சேவையாற்றிய வித்துவான் பொன். அ. கனகசபை அவர்களின் நாமம் என்றும் நம்மண்ணில் நின்று நிலைத்திடும் எனலாம்..!

 

- வி. ரி. இளங்கோவன்.

https://m.facebook.com/story.php?story_fbid=3979533042101195&id=100001336144679

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அன்னையர் நாடென்ற போதினிலே....!
ஒரு சக்தி பிறக்குது  மூச்சினிலே...!

இணைப்புக்கு நன்றி, விசுகர்....!

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி விசுகர்......! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி விசுகர்......! 

நன்றியண்ணா

புங்கை  அண்ணாவுக்கு தெரியும் 

உங்களுக்காக

இவர்  எனது  (தாய்  மாமன்) அம்மாவின்  மூத்த  சகோதரர்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

பெருமதிப்புக்குரிய சிவராமலிங்கம் வாத்தியாரிடம் நான் படித்திருக்கிறேன்......!  🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.