Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ. வரதராஜப்பெருமாள் அவர்களுடன் நேர்காணல்: தேர்தல் அரசியற் போட்டிக்குள் சிக்கியுள்ள 13உம் அரசியற் தடுமாற்றங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேர்காணல்: தேர்தல் அரசியற் போட்டிக்குள் சிக்கியுள்ள 13உம் அரசியற் தடுமாற்றங்களும்

நேர்காணல்: தேர்தல் அரசியற் போட்டிக்குள் சிக்கியுள்ள 13உம் அரசியற் தடுமாற்றங்களும் 

(அ. வரதராஜப்பெருமாள் அவர்களுடன் ஒரு செவ்வி) 

—        நேர்கண்டவர்: அரவிந்தன் — 

1987 இல் இலங்கை –இந்திய உடன்படிக்கையின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறைமையை உருவாக்கியது இந்தியா. 35 ஆண்டுகள் கடந்த பின்னும் மாகாணசபை முறைமை வெற்றியளிக்காத ஒன்றாகவே உள்ளது. மாகாணசபைகளுக்கான சட்டமூலமான 13 ஆவது திருத்தத்தை இலங்கை அரசு தொடர்ந்து பின்னடிக்கிறது. மாகாணசபை முறைமையும் 13 ஆவது திருத்தமும் தமிழர்களுடைய அரசியல் அபிலாஷைகளுக்குத் தீர்வைத் தராது என்கின்றது தமிழர்களின் ஒரு தரப்பு. இந்தியாவின் பங்களிப்பு தொடர வேண்டும். 13 ஐ நடைமுறைப்படுத்துவதில் இந்தியா அக்கறை காட்ட வேண்டும் என்கின்றது இன்னொரு தமிழ்த்தரப்பு. இதனால் இந்த விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்தச் சூழலில் இணைந்த கிழக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருடன் இந்தச் சூழமைவு பற்றி பேசியுள்ளோம். 

(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற வரதாரஜப்பெருமாள், அங்கே, பொருளியல் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பின் அரசியற் போராட்டங்களில் பங்கு பற்றியதன் காரணமாக சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசினால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டார்.   

1983 செப்டம்பரில் மட்டக்களப்பு சிறை போராளிகளால் தாக்கப்பட்ட போது, வரதராஜப் பெருமாள் சிறையில் இருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். விடுதலைப் போராளி அமைப்புகள் 1985ஆம் ஆண்டில் இலங்கை அரசுடன் நடத்திய திம்புப் பேச்சுவார்த்தைகளில் பெருமாளும் கலந்து கொண்டார். 

1987ஆம் ஆண்டில் இந்திய இலங்கை உடன்பாட்டை அடுத்து வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை வரதராஜப் பெருமாள் ஏற்றுக் கொண்டார்.  டிசம்பர் 1988 முதல் மார்ச் 1990 வரை இப்பதவியை வகித்து வந்தார்). 

1.         கேள்வி:- 

தமிழரின் அரசியலில் 13ஐப் பற்றிய பேச்சுக்கள் இப்போது தீவிரமாகியுள்ளன. இதனுடைய இன்றைய நிலை மற்றும் எதிர்காலச் சாத்தியங்கள் குறித்து உங்களுடைய அபிப்பிராயம் என்ன? 

பதில்:- 

பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாக்குளைப் பெறுகின்ற பிரதிநிதிகள் அவ்வப்போது இந்திய அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்கிற போது இலங்கையின் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தின்படி மாகாண ஆட்சி முறைமைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பகிர்வு விடயத்தை பத்தோடு பதினொன்றாக, அதுவும் ரகசியமாகவே கோரி வந்தார்கள். ஆனால், கடந்த முறை இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வந்தபோது நடைபெற்ற சந்திப்பின் போதும் அவ்வாறாகவே ரகசிய உரையாடல் நடந்திருக்கின்றது. அவ்வேளையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றும்படி இந்திய அரசுதான் தொடர்ந்து வெளிப்படையாகக் கோரி வருகின்றது. தமிழர்களின் பிரதானமான கட்சிகள் அது பற்றி வெளிப்படையாகப் பேசுவதுமில்லை – முறையாகக் கோருவதுமில்லை என்று குற்றம் சாட்டிய பின்னரே தமிழர்கள் மத்தியிலுள்ள கட்சிகள் பல அது தொடர்பாக குரலெழுப்பவும் கடிதங்கள் எழுதவும் தொடங்கியிருக்கின்றன. 13வது திருத்தம் தொடர்பாக தமிழர்கள் மத்தியில் உள்ள பிரதானமான கட்சிகள் உறுதியான அக்கறை காட்டவில்லையென்றால் மிக விரைவில் இந்திய அரசு மாகாண சபைகள் மற்றும் அதற்கான அதிகாரங்கள் பற்றிய தனது பேச்சுகளை நிறுத்திவிடும் என்று இந்திய வெளியுறவு செயலாளர் எச்சரித்தாரோ தெரியவில்லை. 

மேலும், இந்தியா அக்கறை காட்டாவிட்டால் மாகாணசபை அமைப்பு முறையையே ராஜபக்ஸாக்களின் அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பின் மூலம் இல்லாதொழித்து விடுமோ என்ற பயமும் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய கட்சிகளின் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறலாம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் முதலமைச்சர்களாவதற்கும், அமைச்சர்களாவதற்கும்,சபை உறுப்பினர்களாவதற்கும் அவர்களிற் பலர் இரவு பகலாக கனவுகளுடன் இருப்பதுவும் தெரிந்ததே. 

13வது தொடர்பான எதிர்காலச் சாத்தியங்கள் என்பது இந்தியப் பிரதமருக்கென கடிதம் கொடுத்துள்ள கட்சிகள் அது தொடர்பாக எவ்வாறு தொடர்ந்து செயற்படப் போகின்றன, இந்திய அரசாங்கம் எந்த அளவுக்கு அக்கறையுடன் இவ்விடயத்தில் ஈடுபாடு காட்டிச் செயற்படப் போகிறது? மேலும் இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தில் எந்தளவுக்கு மனப்பூர்வமாக ஈடுபாடு காட்டப் போகிறது என்பவற்றைப் பொறுத்தே அமையும்.    

2.         கேள்வி:- 

இலங்கை – இந்திய உடன்படிக்கை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றியே பேசப்படுகிறது. இப்பொழுது இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதப்படுகிறது. இந்தப் பலவீனமான நிலைமைக்குக் காரணம் என்ன? 

பதில்:- 

2009 வரை தமிழ்ச் சமூகத்தின் மிக மிகப் பெரும்பான்மையினர் தமிழீழக் கனவுலகில் இருந்தார்கள். 2009லிருந்து 2012ம் ஆண்டு வரை மிகப் பெரும்பான்மையான தமிழ் மக்களின் பிரதிநிதிகள் 13வது திருத்தத்தின்படியான மாகாணசபைகள் தும்புக் கட்டையாலும் தொடக்கூடாத அளவுக்கு தீண்டத் தகாதவைகள் என்றார்கள். அதற்குப் பின்னர் மாகாண சபைகளின் பதவிகளில் அமர்ந்தபோதும் அது பயனற்றது என்பதை எப்படியாயினும் நிரூபிப்பதில் தங்களின் ஆளுமைகளையும் திறமைகளையும் பிரயோகித்தார்கள். 2015ந்திலிருந்து 2019வரை ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி உடையதாக புதிய அரசியல் யாப்பைத் தாங்கள் கொண்டுவரப் போவதாகக்கூறி கிடைத்த அரிய வாய்ப்பை பயனற்றதாக்கினார்கள். இப்போது ராஜபக்ஸாக்கள் மாகாணசபை முறையையே இல்லாமற் செய்து விடுவார்களோ என்று அச்சம் கொண்டு இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள விழித்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.   

3.         கேள்வி 

1987ல் மாகாண சபை முறைமையை புலிகள் நிராகரித்த சூழலில் நீங்கள் அதனைப் பொறுப்பேற்றிருந்தீர்கள். அதனால் பல நெருக்கடிகளையும் சந்தித்திருந்தீர்கள். 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது மாகாணசபையை வலுப்படுத்துமாறு கேட்கப்படுகிறது. இதில் உங்களுடைய பாத்திரம் என்ன? இந்த வரலாற்றின் போக்கென்ன? 

பதில்:- 

இப்பொழுது நான் ஒரு சாமான்யன். சமூக அரசியற் பார்வையாளன். என் ஆத்ம திருப்திக்காக அரசியல் பொருளாதார விடயங்கள் தொடர்பில் எழுதுகிறேன் – பேசுகிறேன். இலங்கையின் மாகாண சபைகள் தொடர்பில் என்னுடைய பாத்திரம் என்ன என்று குறிப்பாகக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். அந்த விடயத்தில் நான் பெற்றுள்ள அனுபவங்களையும் எனது அரசியல், பொருளாதார மற்றும் அரசியல் யாப்பு தொடர்பான சட்ட அறிவையும் யாராவது என் மீது நம்பிக்கை கொண்டு பகிர்ந்து கொள்ள விரும்பினால் அவர்களோடு உரையாடுவேன். அதற்கு மேல் இவ்விடயத்தில் எனக்கு வேறெந்தவொரு பங்கும் பாத்திரமும் இருப்பதாக நான் உணரவில்லை. அதற்கான சாத்தியங்களும் இல்லை. 

4.         கேள்வி:- 

இலங்கை அரசியலில் 13வது என்பதே சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. சில தரப்புகள் 13ஆவதை நிராகரிக்கின்றன. உங்களுடைய நிலைப்பாடு என்ன? 

பதில்:- 

பல கட்சிகள் கொண்ட ஜனநாயக அமைப்பில் எல்லோரும் எல்லா விடயங்களையும் ஏற்பார்கள் என்றில்லை. பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொள்வதையே மக்கள் அபிப்பிராயம் என்கிறோம். எனினும், பெரும்பான்மை என்ற வகையில் மேற்கொள்ளப்படும் இன மேலாதிக்கம் மற்றும் சாதி மேலாதிக்கங்கள் எதிர்க்கப்பட வேண்டியவை. 

இங்கு தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார சமூக உரிமைகள் என வருகின்றபோது தமிழர்களிற் பெரும்பான்மையானவர்களின் அந்தந்த காலகட்டங்களிற் கொள்கின்ற – வெளிப்படுத்துகின்ற அபிலாஷைகளையே தமிழர்களின் அபிலாஷைகள் எனக் கொள்வதே சரியானதாகும். அதுவும் அந்த அபிலாஷைகள் நடைமுறைச் சூழலுக்கும் சாத்தியங்களுக்கும் பொருத்தமானவையாகவும் அமைய வேண்டும். ஒரு சமூகத்தின் விருப்பங்கள் அதி உச்சமானவையாக இருக்கக் கூடாது என்றில்லை. ஆனால் அவை ஏனைய இனத்தவர்களை, சமூகப் பிரிவினர்களை அச்சுறுத்தபவையாகவோ அல்லது ஆபத்துக்கு உள்ளாக்குபவையாகவோ அமையக் கூடாது. மேலும் அவற்றை அடைவதற்கு எந்தப் பாதைகளின் ஊடாக எத்தனை படி முறைகளினூடாக செல்ல வேண்டும் – செயற்பட வேண்டும் என்பவற்றை கவனத்திற் கொண்டு அரசியல் சமூக  செயற் திட்டங்களை முன்னடுப்பதுவும் பிரதானமானதாகும். 

இங்கிருப்பது மக்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகம். எனவே இங்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை மட்டுமல்ல தமிழப் பேசும் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் அரசியல் யாப்பின்13வது திருத்தத்தின்படி அமைந்த அதிகாரப் பகிர்வை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அது அவர்களின் விருப்ப வெளிப்பாடு மட்டும்தானா அல்லது அதை எப்படி சாதிக்கப் போகிறார்கள் என்ற கேள்விகளுக்கான விடைகளை பொறுத்திருந்தே பார்க்கலாம். 

13வது திருத்தத்தை நிராகரிப்பவர்கள் தமிழ் மக்களின் பெரும்பான்மையான பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறபோதே அந்த நிராகரிப்பு தமிழ் மக்களின் நிராகரிப்பாக அமையும். அந்த நிலைமை இப்போது இல்லை. 

5.         கேள்வி:- 

வடக்கு – கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

பதில்:- 

கிழக்கு மாகாணம் தனியாக இருக்கும்போது கிழக்கில் வாழும் தமிழர்களின் வீதாசாரமும் முஸ்லிம்களின் வீதாசாரமும் ஏறத்தாழ சமமாகும். கிழக்கு தனியாக இருக்கின்ற போது ஒரு முஸ்லிம் இனத்தவரும் முதலமைச்சராகலாம். அது இணைந்த வடக்கு கிழக்கில் சாத்தியமாகாது. வடக்கும் கிழக்கும் இணைந்தால் முஸ்லிம் மக்களின் சனத்தொகை 20 சதவீதத்தை அண்மித்ததாகவே இருக்கும். மொத்த இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கம் எப்படி செயற்படுகிறதோ அவ்வாறாக இணைந்த வடக்கு கிழக்கில் தமிழின மேலாதிக்கம் செயற்படும் எனும் அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவுகின்றமை புரிந்த கொள்ளப்படக் கூடிய ஒன்றே. 

அந்த அச்சத்தை நீக்குவதற்கு தமிழர்களின் பெருந்தன்மை எனும் வகையிலான வாக்குறுதிகள் பயன்பட மாட்டா. மாறாக முஸ்லிம் மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக நலன்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தமிழர்கள் மத்தியிலுள்ள பெரும்பான்மையான அரசியற் பிரதிநிதிகளுக்கும் முஸ்லிம் மக்களின் மத்தியிலுள்ள பெரும்பான்மையான அரசியற் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஓர் உறுதியான – வெளிப்படையான உடன்பாடு ஏற்படும் வரை வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்லிம் மக்கள் ஏற்க மாட்டார்கள். அவ்வாறான உடன்பாடில்லாதவரை தமிழர்களின் வடக்கு – கிழக்கு இணைப்பு கோரிக்கையை முஸ்லிம் மக்கள் தமது இனத்துக்கு எதிரான கோரிக்கையாகவே பார்ப்பார்கள். 

6.         கேள்வி:- 

தமிழரின் அரசியற் பிரச்சினைக்கு இந்தியா, இலங்கை, மேற்குலகம், சீனா என்பவற்றில் எதனுடனான உறவு சாதகத்தைத் தரும்? 

பதில்:- 

தமிழரின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்தியா மட்டுமே உதவும் என்றும் மேற்குலகு நாடுகளும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஒட்டியே செயற்படுவன என்றுமே தமிழர்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்களில் பெரும்பான்மையினர் கூறுகின்றனர். எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கமே தீர்வுக்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இலங்கை அரசாங்கங்கள் தானாக இதுவரை செயற்படவில்லை என்பதுவும் அனுபவமாகும். இலங்கை அரசாங்கத்தை செயற்பட வைப்பதற்கு இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் உதவி தேவை என்பதே தமிழர்கள் மத்தியிலுள்ள பொதுவான அபிப்பிராயமும் எதிர்பார்க்கையாகவும் உள்ளது. 

சீனா இதுகாலவரை தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஒன்று – எனவே இவ்விடயத்தில் வெளிநாடுகள் எதுவும் தலையிடக் கூடாது என்ற நிலைப்பாட்டுடன் அது பற்றி இலங்கை அரசுடன் எந்த வகையிலும் பேசுகின்ற நடைமுறைகளைக் கொண்டிருக்கவில்லை. மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா தொடர்பாக அச்சம் அல்லது விரோதம் கொண்டுள்ள நாடுகளின் அரசுகளுக்கு துணையாக நிற்பதன் வழியாகவே சீனா தனது சர்வதேச உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது. 

சீனா தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் சாதகமானதான நிலைப்பாடு கொள்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சீனாவை தமிழர்கள் பகைமை நாடாகக் கொள்வது அவசியம்தானா என்பது இங்கு விடை காணப்பட வேண்டிய கேள்வியாகவே உள்ளது.    

7.         கேள்வி:- 

13 பொருத்தமற்றது: சமஷ்டி அல்லது அதற்கு மேலாக என அ.இ.த.காங்கிரஸ் (கஜேந்திரகுமார்) சொல்கிறதே? 

பதில்:- ஒற்றையாட்சியை பிடிவாதமாகக் கொண்டு பிரதேச சுயாட்சியையும் எதிர்த்து வந்த தமிழ்க் காங்கிரஸ் கட்சியை சமஷ்டி என்ற கோரிக்கையை வைத்து தமிழரசுக் கட்சியின் தலைமை தமிழர்களிடமிருந்த ஓரம் கட்டியது. இன்று ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரன் அதே சமஸ்டியை வைத்து ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வைக் கோரும் தமிழரசுக் கட்சியை தமிழ் மக்களிடையே இருந்து ஓரம் கட்டுவதற்கு முயற்சிக்கிறார். 

இது அடுத்து வரும் தேர்தலுக்கான வாக்கு வங்கியை தக்க வைப்பதற்கும் விரிவுபடுத்துவதற்குமான போட்டி – தேர்தல் அரசியல் போட்டி. அடுத்து வரும் தேர்தலில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலமாக என்ன சொல்லப் போகின்றார்கள் என்பது தமிழர்களின் அடுத்த கட்ட பிரதானமான அரசியற் போக்கைத் தீர்மானிக்கும் எனக் கூறலாம்.  

 

https://arangamnews.com/?p=7312

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2022 at 16:52, கிருபன் said:

அந்த அச்சத்தை நீக்குவதற்கு தமிழர்களின் பெருந்தன்மை எனும் வகையிலான வாக்குறுதிகள் பயன்பட மாட்டா. மாறாக

சம்பந்தரின் விட்டுக்கொடுப்பை விட வேறென்ன முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

சம்பந்தரின் விட்டுக்கொடுப்பை விட வேறென்ன முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்?


தமிழர்களாகிய நாம் ஒரு ஒடுக்குமுறைக்கெதிரான அரசியல் நிலைப்பாடாக அல்லது கோட்பாடாகத் தமிழீழ தனியரசை(அது மேற்கு ஐரோப்பியரின் வருகைவரை தமிழரசாக இருந்தமை வரலாறு) அமைக்க முனைகின்றோம். அதனுள் ஒரேமொழிபேசும் வேறுபட்ட பண்பாட்டியல்படையோரிடையே, இடையிலே ஏற்பட்ட நம்பிக்கையீனங்கள் களையப்பட்டுப் புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டு வட-கிழக்குத் தமிழ்பேசும் மக்களாக ஒன்றிணைவதற்கான முயற்சிகள் அவசியமானது. இது இருபகுதியின் இருப்புக்கும் தேவையானதுமாகும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.