Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரில் மறக்க முடியா அனுபவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


  போரில் மறக்க முடியா அனுபவம்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுமை.

 

சிறிலங்கா இராணுவம் எந்தவொரு இரசாயன தாக்குதலும் நடத்தவில்லை என்றால்????
யாரை நோக்கி சுண்டு விரலை நீட்டுகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உள்நாட்டுப் போர்: ரசாயன குண்டுத் தாக்குதலில் கருகி வீழ்ந்த மக்கள் - முன்னாள் போராளியின் தகவலும் ராணுவத்தின் பதிலும்

இலங்கை ராணுவத்தின் ரசாயண குண்டுத் தாக்குதலில் கருகி வீழ்ந்த மக்கள் - முன்னாள் போராளி வெளியிட்ட தகவல்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 17 மே 2023, 04:26 GMT

''எரி குண்டு என சொல்லப்படும் பாஸ்பரஸ் குண்டை (ரசாயன குண்டு) அடித்து எல்லா சனங்களும் (மக்களும்) கருகினார்கள். ஒரு மரம் கருகி, எப்படி கரி கட்டையாக விழுமோ, அப்படி தான் சனம் (மக்கள்) எல்லாம் இருந்தது. தொட்டால் கரி தான். ஒரு பயங்கரமான குண்டுத் தாக்குதலை தான் கடைசி கட்டத்தில் நடத்தி, எங்கள் மக்களை அழித்தது ராணுவம்" என கூறுகின்றார் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் பாபு கஜேந்தினி.

இலங்கை ராணுவத்தினால் நடத்தப்பட்டதாக கூறப்படும் ரசாயன குண்டுத் தாக்குதலில் நேரடியாக பாதிக்கப்பட்டு, தனது உடலில் காயங்களோடு வாழ்ந்து வரும் ஒரு முன்னாள் பெண் போராளி.

போராட்ட வாழ்க்கையிலிருந்து வெளியேறி, இன்று தனது குடும்பத்துடன் பாபு கஜேந்தினி வவுனியாவில் வாழ்ந்து வருகின்றார்.

தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தனக்கு தனது கணவர் முழுமையாக ஆதரவை வழங்கி வருவதாக கூறுகிறார்.

இந்த தம்பதியினருக்கு கல்வி கற்கும் வயதில் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இலங்கை தமிழர்கள் மத்தியில் மே 18, ஒரு துக்க தினமாகும்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

அந்த நாளை ஈழத் தமிழர்கள் இன்றும் துக்கத் தினமாக அனுஷ்டித்து வருகின்றார்கள்.

இவ்வாறு இறுதிக் கட்ட யுத்தத்தில் நடந்த அனுபவங்களை தேடி பிபிசி தமிழ், இலங்கையின் வடப் பகுதிக்கு சென்றது.

இதன்போது, பிபிசி தமிழ் குழுவினருக்கு, பாபு கஜேந்தினி என்ற முன்னாள் போராளியை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

விடுதலைப் புலிகள் மீதான பற்று மற்றும் தமிழ் மீதான பற்று காரணமாக, பாடசாலை காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இவர் இணைந்துக்கொண்டதாக கூறுகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவில் பணியாற்றிய இவர், பின்னரான காலத்தில் சுகாதார பிரிவில் பணியாற்றியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இறுதியாக கணினி பிரிவில் பாபு கஜேந்தினி பணியாற்றியுள்ளார்.

சண்டைகளின் போது, காயங்களுக்குள்ளாகும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு சிகிச்சைகளை அளித்து, அவர்களின் உயிரை காக்கும் பணியை பாபு கஜேந்தினி செய்துள்ளார்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட இறுதி தருணம் வரை, முள்ளிவாய்க்கால் பகுதியில் இவர் இருந்துள்ளார்.

2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம், உக்கிரமடைந்திருந்தது.

இதன்போது, இலங்கை ராணுவத்தினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பாபு கஜேந்தினி கடும் காயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

இவரது கை, கால், உடல் என உடம்பின் பல பகுதிகளில் தீ காயங்கள் காணப்படுகின்றன.

இலங்கை ராணுவத்தினால் நடத்தப்பட்டதாக கூறப்படும் ரசாயன குண்டுத் தாக்குதலிலேயே தான் இவ்வாறான காயங்களுக்கு உள்ளாகியதாக பாபு கஜேந்தினி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இலங்கை ராணுவத்தின் ரசாயன குண்டுத் தாக்குதலில் கருகி வீழ்ந்த மக்கள் - முன்னாள் போராளி வெளியிட்ட தகவல்

''மறக்க முடியாத அனுபவம் என்று சொல்ல போனால், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் தான். இறுதி யுத்தம் வரை நான் அவர்களோடு தான் இருந்தேன். நாங்கள் இருக்கும் இடத்தில் போராளிகளும் சரி, பொதுமக்களும் சரி கும்பலாக தான் இருப்போம். பங்கர் என்று சொன்னால், அந்த பங்கருக்குள் ஆட்களை விட்டு விட்டு, சின்னவர்களை உள்ளே விட்டு விட்டு, நாங்கள் பெரியவர்கள் வெளியில் நிற்போம். அந்த இடத்தில் எரிகணை வீச்சுக்கள் வந்தால், அந்த இடத்தில் அவ்வளவு பேரும் சிதறி போவோம். அப்படியாக இறுதி யுத்தத்தின்போது ஐந்தாம் மாதம் 10ம் தேதி பங்கருக்குள் எல்லாரையும் விட்டு விட்டு, நான் ஓரமாக இருந்தேன். உள்ளே போவதற்கு இடமில்லை. எரி குண்டு என சொல்லப்படும் பாஸ்பரஸ் குண்டை (ரசாயன குண்டு) அடித்து எல்லா சனங்களும் (மக்களும்) கருகினார்கள். ஒரு மரம் கருகி, எப்படி கரி கட்டையாக விழுமோ, அப்படி தான் சனம் எல்லாம் இருந்தது. தொட்டால் கரி தான். ஒரு பயங்கரமான குண்டுத் தாக்குதலை தான் கடைசி கட்டத்தில் நடத்தி, எங்கள் மக்களை அழித்தது ராணுவம். அந்த இடத்தில் எனக்கு நேரடியாக தாக்கம் இல்லை. அந்த வெப்பம் அடித்தது தான் எனக்கு ஒரு பக்கம் இப்படி இருக்கின்றது. எனது உடம்பு இப்படி தான் வெள்ளையாக இருக்கின்றது." என்கிறார் பாபு கஜேந்தினி.

இறுதிக் கட்டம் யுத்தம் இடம்பெற்ற தருணத்தில், அந்த பிரதேசத்தில் காணப்பட்ட நீர் நிலைகள் அனைத்தும் ரத்தமாகவே தெரிந்தது எனவும் அவர் கூறுகின்றார்.

''நாங்கள் வட்டுவாலுக்கு வந்து, தண்ணீரை பார்க்கின்றோமா? இரத்தத்தை பார்க்கின்றோமா என்ற நிலை தெரியாமல் இருந்தது. முழுக்க அப்படியே ரத்த வெள்ளம். தண்ணியா, ரத்தமா என்று தெரியாது. ரத்தமும் சதையுமாக தான் மக்கள் அதற்குள் கிடந்தனர். அதற்குள் தான் நாங்கள் இறங்கி வந்தோம்."

யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், கடும் காயங்களுடன் பாபு கஜேந்தினி ராணுவத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணுவம் இருந்ததை அறியாது, பொதுமக்களுடன் இணைந்து வருகைத் தந்த சந்தர்ப்பத்திலேயே தான் கைது செய்யப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

இலங்கை ராணுவத்தின் ரசாயண குண்டுத் தாக்குதலில் கருகி வீழ்ந்த மக்கள் - முன்னாள் போராளி வெளியிட்ட தகவல்

பொதுமக்களை போன்று வருகைத் தந்த தன்னை, பொதுமக்களே காட்டிக் கொடுத்ததாகவும், அதனாலேயே தானும் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.

குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பம் உங்களுக்கு எப்படி இருந்தது என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

"ஆரம்பத்தில் அது பாஸ்பரஸ் குண்டு (ரசாயன குண்டு) என்று எங்களுக்கு தெரியாது. கிபீர் தாக்குதல் நடப்படும். அந்த சந்தர்ப்பத்தில் அருகிலுள்ளவர்கள் காயப்படுவார்கள். தாக்கம் என்பது குறைவு. காயங்கள் கூடுதலாக இருக்குமே தவிர, உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும். அப்படி நினைத்துக்கொண்டு தான் இருந்தோம். திடீரென பாஸ்பரஸ் குண்டுகளை போட்டு மக்கள் கருகியதும், எங்களால் என்னவென்று ஊகிக்க முடியாத நிலைமையில் தான் அங்கு இருந்தோம். பிறகு தான் தெரியும் அது பாஸ்பரஸ் குண்டு என்று. முதல் தெரியாது எங்களுக்கு" என அவர் பதிலளித்தார்.

ராணுவத்தின் பதில்

இலங்கை ராணுவத்தின் ரசாயண குண்டுத் தாக்குதலில் கருகி வீழ்ந்த மக்கள் - முன்னாள் போராளி வெளியிட்ட தகவல்

பட மூலாதாரம்,SRI LANKA ARMY

இறுதிக் கட்ட போரின் போது, ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பல்வேறு சந்தர்ப்பங்களில், இலங்கை ராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில், போர் முடிவடைந்து 14 வருடங்களின் பின்னர் முன்னாள் போராளி ஒருவர் அதே குற்றச்சாட்டை மீண்டும் முன்வைக்கின்றார். இலங்கை ராணுவத்தின் பாஸ்பரஸ் குண்டு தாக்குதல் காரணமாக, தான் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்துகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் வினவியது.

இலங்கை ராணுவம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரசாயன குண்டுத் தாக்குதல்களை நடத்தவில்லை என அவர் பதிலளித்தார்.

''ராணுவம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரசாயன குண்டுத் தாக்குதல்களை நடத்தவில்லை. அவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால், அதனை கொள்வனவு செய்வதற்கு ஒரு இடம் இருந்திருக்க வேண்டும் அல்லவா? கொள்வனவு செய்ய முடியாது. இலங்கையில் எந்தவொரு ஆயுதமும் தயாரிக்கப்படாது. இன்றும் வெளிநாடுகளிடமிருந்தே ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்யும் போது, ரசாயன குண்டுகளை எவ்வாறு அவர்கள் தருவார்கள்? அவர்கள் அதனை தர மாட்டார்கள். எந்தவொரு நாடும் எமக்கு ரசாயன ஆயுதங்களை வழங்காது என்பதை முன்னிலைப்படுத்தியே, அந்த குற்றச்சாட்டை நிராகரிக்க எம்மால் முடியும்." என இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cx04e7pljjxo

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உள்நாட்டுப் போரில் பார்வையை இழந்த தமிழீழ முன்னாள் போராளி தற்போது எப்படி இருக்கிறார்?

இலங்கை உள்நாட்டு போர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெறும் சில புகைப்படங்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, 14 வருடங்கள் பூர்த்தியாகினாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் எதிர்கால சந்ததி வரை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு எதிர்கால சந்ததிக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கடல் கரும்புலி போராளியின் செய்தியே இது.

தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னெடுத்திருந்தது. அந்த அமைப்பில் இணைந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான போராளிகளில் கந்தசாமி சேயோனும் ஒருவராவார்.

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட இவருக்கு, தற்போது 36 வயது. 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கந்தசாமி சேயோன் இணைந்துகொண்டுள்ளார்.

வவுனியாவிலிருந்து, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள வன்னி பிரதேசத்தில் உறவினரை பார்க்கச் சென்ற வேளையில், விடுதலைப் புலிகளினால் சேயோன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்தமையினாலேயே, சேயோன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தனது உறவு முறை சகோதரி ஒருவர், விடுதலைப் போராட்டத்தின்போது வீர சாவடைந்ததை, விசாரணைகளின்போது சேயோன், விடுதலைப் புலிகளிடம் தெரிவித்துள்ளார்.

''அவளை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தபோது, அவர்கள் என்னிடம் கேட்டார்கள், உங்கள் அக்கா இயக்கத்திற்கு வந்து வீர மரணம் அடைந்திருக்கின்றார். உங்களுக்கு எண்ணம் இல்லையா? உங்களுடைய வீட்டில் யாரும் பங்களிப்பு செய்யவில்லை," என விடுதலைப் புலி உறுப்பினர்கள், சேயோனிடம் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலி உறுப்பினர்களின் விசாரணைகளின்போது, சேயோன், விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

அன்று முதல் தனது விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார் சேயோன்.

விடுதலைப் புலிகள் கட்டாயப்படுத்தி, உங்களை இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்களா என பிபிசி தமிழ், சேயோனிடம் வினவியது.

''இல்லை. கட்டாய ஆட்சேர்ப்பானது 2008ஆம் ஆண்டு முதல்தான் ஆரம்பித்தது" என அவர் பதிலளித்தார்.

இலங்கை உள்நாட்டு போர்
 
படக்குறிப்பு,

சேயோன்

விடுதலைப் புலிகளுடன் இணைந்தது முதல் கரும்புலி வரை

2006ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் இணைந்ததை அடுத்து, தனக்கு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டதாக சேயோன் கூறுகின்றார்.

அதன்பின்னர் இரண்டாம் கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும், கடல் மற்றும் தரை ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த பயிற்சிகள் முடிவடைந்ததை அடுத்து, படையணிக்கு தான் அனுப்பப்பட்டதாக கூறிய அவர், தனக்கு கரும்புலியில் இணைவதற்கு விருப்பம் என விடுதலைப் புலிகளிடம் கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

''என்னை படையணிக்கு விடும்போது நான், இரண்டாம் கட்ட பயிற்சி முகாமின் போது கடிதம் கொடுத்தேன். கரும்புலியில் இணைய போகின்றேன் என கடிதம் கொடுத்தேன். எனக்கு ஒரு வாரத்தின் பின்னர் அனுமதி கிடைத்தது. அதன் பின்னர் கடல் கரும்புலியில் இணைந்தேன். புகழரசன் செவ்வானம் படையணியில் இணைத்தார்கள். யுத்தம் முடியும் வரை கடல் கரும்புலியாகவே எனது கடமை இருந்தது" என கந்தசாமி சேயோன் தெரிவிக்கின்றார்.

இலங்கை ராணுவத்துடன் நடுக்கடலில் நடந்த 86 சண்டைகளில், சேயோன் நேரடியாக மோதியுள்ளார்.

''தரையில் சண்டை பிடித்தால், புத்து, வீழ்ந்த மரங்கள், குழிகள் போன்றவற்றை பாதுகாப்பு அரணாக பயன்படுத்த முடியும். ஆனால் கடலில் முப்படைகளும் தாக்கும். விமானப்படை, கடற்படை, தரைப்படை என முப்படைகளும் தாக்கும் இடம் தான் கடல்.

கடலில் யுத்தம் நடந்துக்கொண்டிருக்கும் போதே, குண்டு வீசும் விமானங்கள் வரும். உலங்கு வானூர்தி தாக்குதல் இருக்கின்றது. கடலில் கடற்படையின் தாக்குதல் இருக்கின்றது. தரையிலிருந்து பீரங்கி தாக்குதல் இடம்பெறும். அவை மூன்றுக்கும் முகம் கொடுத்துதான் நாங்கள் சண்டை பிடிக்க வேண்டும்," என்றார் கந்தசாமி சேயோன்.

இலங்கை உள்நாட்டு போர்

முல்லைத்தீவிலிருந்தே விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் செயற்பட்டுள்ளது. முல்லைத்தீவிலேயே விடுதலைப் புலிகளின் படகுகளின் தளம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் போன்ற கடலில் படகுகளை இறக்கி, அவற்றை செலுத்திக் கொண்டு பருத்தித்துறை வரை சென்றே மோதல்கள் இடம்பெறும் என அவர் குறிப்பிடுகின்றார்.

தங்களின் விருப்பத்திற்கு அமைய சண்டையிட முடியாது எனவும், கட்டளைகளுக்கு கட்டுப்பட்டே சண்டைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

கண் பார்வையை இழந்த சேயோன்

வவுனியாவில் தற்போது வாழ்ந்து வரும் கந்தசாமி சேயோன், யுத்தம் காரணமாக தனது இரண்டு கண்களையும் இழந்துள்ளார்.

இலங்கை ராணுவத்துடனான யுத்தம், சேயோனை, இருள் சூழ்ந்த ஒரு வாழ்க்கைக்கு தள்ளியுள்ளது. இது அவரை மாத்திரமன்றி, அவர் சார்ந்த மனைவி மற்றும் குழந்தைகளையும் பாதித்து, எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னரே சேயோன், கார்த்திகாவுடன் திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்டுள்ளார்.

சேயோன், அந்த சந்தர்ப்பத்தில் தனது ஒரு கண் பார்வையை இழந்த நிலையில், வவுனியாவில் கடமையாற்றிய கார்த்திகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இலங்கை உள்நாட்டு போர்

அதன்பின்னரான காலத்தில் சேயோன், தனது இரண்டாவது கண்ணின் பார்வையையும் இயல்பாகவே இழந்துள்ளார்.

யுத்தம் ஏற்படுத்திய தாக்கமே, அவரது இரண்டாவது கண் பார்வை இழக்கப்படுவதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குண்டுத் தாக்குதலின் பின்னர், அதன் துகில்கள் இன்றும் கண்ணிற்குள் உள்ளதாக மருத்துவர்களினால் கூறப்பட்டுள்ளது.

சேயோன் எப்படி ராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்கானார்?

2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி சேயோன், ராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தங்களுடன் சண்டைக்கு சென்ற படகொன்று காணாமல் போன நிலையில், அந்த படகை தேடுமாறு தமக்கு கட்டளையொன்று பிறப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

''தேடுவதற்காக சென்ற போது, ` 35 மீட்டர் தூரத்தில் இலக்கொன்று தெரிவிக்கின்றது. அது எங்களுடைய படகு போல இருக்கின்றது. பார்ப்போம். சிக்னலை போட்டு பார்த்து விட்டு, அருகில் செல்வோம்` என அண்ணன் ஒருவரிடத்தில் சொன்னேன். அதற்கு அவர், "இல்லை. அது எங்களுடைய படகு தான். நேரடியாக போவோம் என சொல்லி, அங்கு சென்றார். ஆனால் அது கடற்படையின் படகு. கடற்படை எம்மை நோக்கி சுட ஆரம்பித்தது. ஒவ்வொரு படகிலும் ரேடார் இருக்கும். ஸ்கேனல் இருக்கும். ஸ்கேனலின் பைப்பில் பட்டு வெடித்தது. அது வெடித்த இடத்தில் நான் காயப்பட்டேன். வலது கை இயலாது. இடது கையால் இழுத்து இழுத்து ஊர்ந்து போய், மற்ற கரையில் இருந்து விட்டேன். மற்றவர்கள் கடற்படை படகை மூழ்கடித்து விட்டு, என்னையும் அழைத்து கொண்டு கரைக்கு வந்து விட்டார்கள். அந்த சண்டை வெற்றி என்றவுடனும், மேலதிக படகுகள் வராமையினாலும் கரைக்கு வந்தார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்."

இலங்கை உள்நாட்டு போர்

வலது கண் பார்வையை இழந்த சேயோன், பின்னரான காலத்தில் இடது கண் பார்வையையும் படிப்படியாக இழந்துள்ளார்.

மோதலின் போது இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தினால் தனது கண்ணுக்குள் சில துகில்கள் காணப்படுகின்றமையும், ஒரு கண்ணில் ஏற்பட்ட ரத்த அழுத்தமும் பார்வை இழக்கப்படுவதற்கான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.

அதேவேளை, தனது ஒரு கால் சதையில் மாத்திரமே செயற்படுவதாக கூறிய அவர், அதனை எம்மிடம் காண்பித்தார்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைத் தந்து, ராணுவத்திடம் சரணடைந்ததாக கூறுகின்றார் சேயோன்.

அதன்பின்னரான காலத்தில் தனக்கு ராணுவம் புனர்வாழ்வளித்து, தன்னை பெற்றோரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ராணுவம் தன்னை மிகவும் அரவணைத்து, தனக்கான மருத்துவ உதவிகளை வழங்கி புனர்வாழ்வு அளித்ததாகவும் அவர் கூறுகின்றார்.

''பழைய காலத்து ஆட்கள் கூறுவார்கள் எதிரியையும் அணைக்க வேண்டும் என்று. அவர்கள் என்னை எதிரியாக நினைக்கவில்லை. அரசாங்கம் எதிரியாக நினைக்கவில்லை எங்களை. சகோதரன் மாதிரி நினைத்து, டாக்டர் கிளினிக் போட்டு கொடுத்த நேரத்திற்கு தவறாமல் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, கிளினிக்கை முடித்த பின்னர் புனர்வாழ்வில் விட்டார்கள்." என கூறுகின்றார் சேயோன்.

இலங்கை உள்நாட்டு யுத்தம்
 
படக்குறிப்பு,

சேயோன் - கார்த்திகா

காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சேயோன் - காதலை பகிர்ந்த மனைவி கார்த்திகா

யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட சேயோன், வவுனியாவில் வாழ்ந்து வந்துள்ளார்.

இதன்போது, தனது ஒரு கண் பார்வையை மாத்திரமே இழந்திருந்த சேயோன், வவுனியாவில் பணிப் புரிந்த கார்த்திகாவை சந்தித்துள்ளார்.

சேயோனின் காதலை முதலில் ஏற்க மறுத்த கார்த்திகா, பின்னரான காலத்தில் தனது விருப்பத்தை தெரிவித்து, திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

''பேக்கரி பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்தேன். அப்போது நாளாந்தம் வருவார். இவருடைய நண்பர்களும் வருவார்கள். போன் நம்பரை கேட்பார். நான் கொடுக்க மாட்டேன். சோடா வாங்கி குடித்து விட்டு போவார். எனக்கு கொஞ்சம் காது பிரச்னை. உனக்கு காது பிரச்னை, எனக்கு ஒரு கண் பிரச்னை என்று இவர் சொன்னார். இப்படி நாளாந்தம் சோடா குடிக்க வரும் இவர், ஒரு நாள் சோடாவை குடித்து விட்டு, உனக்கு விருப்பமாக இருந்தால், இந்த சோடா அரைவாசியை குடி என்று சொன்னார். போன் நம்பரை கேட்டார்.

எனக்கு விருப்பம் இருந்தது. திடீரென்று சொல்ல முடியாது தானே. போன் நம்பரை விளையாட்டாக நான் சொன்னேன். இவர் பாடமாக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. போயிட்டு, ஐந்து நிமிடங்களில் தொலைபேசியில் அழைத்தார். பிறகு நாளாந்தம் கதைப்பார். நானும் சரி சொல்லிவிட்டேன். எங்களுடைய வீட்டில் விருப்பம் இல்லை. இவருடைய அம்மா, அப்பாவிற்கு விருப்பம். பிறகு இவருடைய வீட்ட நான் போய் விட்டேன்.

பிறகு மூத்த மகள் பிறக்கவிருந்த போது, எனது குடும்பத்துடன் சேர்ந்துக்கொண்டேன். இவருக்கும் நான்கு, ஐந்து வருடங்கள் பார்வை இல்லாது போய்விட்டது. மூத்த மகளை தெரியும், இரண்டாவது மகளை தெரியும். கடைசி மகளை தெரியாது. கடைசி மகள் வயிற்றில் இருக்கும் போது தான் பார்வை முழுமையாக இல்லாது போனது. போராட்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்." என தனது காதலை பிபிசியுடன் பகிர்ந்துக்கொண்டார் சேயோனின் மனைவி கார்த்திகா.

விவசாயத்தையும், கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் தையல் போன்ற தொழில்களை வாழ்வாதார தொழில்களாக செய்து, தங்களது வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்கின்றது சேயோன் குடும்பம்.

https://www.bbc.com/tamil/articles/c25eql84gg1o

  • கருத்துக்கள உறவுகள்

எல்டிடியின் முன்னாள் 'கடல் கரும்புலி' இப்போ எங்கே எப்படி வாழ்கிறார்? அவரின் நிலை என்ன? | Srilanka

Srilanka News: Ex LTTE Soldier இப்போது என்ன செய்கிறார்? போரில் இவர் எப்படி கண்ணை இழந்தார்?

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் போர் முடிந்த 14 ஆண்டுகளுக்கு பிறகும் தாக்குதல் தடயங்கள் - கள நிலவரம்

 
Play video, "இலங்கை உள்நாட்டுப் போர்: இறுதி யுத்தம் நடந்த முள்ளிவாய்க்கால் இப்போது எப்படி உள்ளது?", கால அளவு 4,32
04:32p0fp87kn.jpg
காணொளிக் குறிப்பு,

இலங்கை உள்நாட்டுப் போர்: இறுதி யுத்தம் நடந்த முள்ளிவாய்க்கால் இப்போது எப்படி உள்ளது?

19 மே 2023, 10:14 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கை உள்நாட்டுப் போரின்போது 2009ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தம் நடந்த இடம் இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது?

இந்த இடத்தில் 14 ஆண்டுகள் கடந்த பிறகும்கூட அப்போதைய பல பொருட்களைக் காண முடிகிறது. பிபிசி குழு அங்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதன் முழு விவரங்களை இந்தக் காணொளியில் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2023 at 17:57, ஏராளன் said:

இலங்கை ராணுவத்தினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பாபு கஜேந்தினி கடும் காயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

இவரது கை, கால், உடல் என உடம்பின் பல பகுதிகளில் தீ காயங்கள் காணப்படுகின்றன.

இலங்கை ராணுவத்தினால் நடத்தப்பட்டதாக கூறப்படும் ரசாயன குண்டுத் தாக்குதலிலேயே தான் இவ்வாறான காயங்களுக்கு உள்ளாகியதாக பாபு கஜேந்தினி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

 

கொடுத்த வெளிநாடுகளும் கூட்டு இனக்கொலையாளிகளும் தமிழினப்படுகொலையை ஏற்க மறுப்பதன் அடிப்படையே, சிறிலங்கா தங்களையும் காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் சிறிலங்காவைப் பாதுகாத்துத் தமக்கு தற்காப்புநிலையெடுக்கிறார்கள். உண்மையான இதயசுத்தியோடு மனித உரிமைகள் குறித்துக் கவலைப்படுவதாயின் திருமதி கயேந்தினி பாபு அவர்களது இந்தப் பதிவை ஏற்று விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அதுதான் நீதிக்கான நேர்மையான அணுகுமுறையாக இருக்கமுடியும். ஆனால் செய்வார்களா? அல்லது இதுபோன்ற வாழும் சாட்சிகளையும் அழிக்கத் துணைபோவார்களா?

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.