Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

இமாலயப் பிரகடனமும் மகா சங்கமும் – நிலாந்தன்.

இமாலயப் பிரகடனத்தை செய்த உலகத் தமிழர் பேரவையானது,அது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அந்த அறிக்கையில் பின்வரும் தகவல்கள் காணப்படுகின்றன….

பிரகடனக்குழு மல்வத்த பீடாதிபதியை சந்தித்தபோது அவர் பின்வருமாறு கூறியுள்ளார்…“கடந்த காலங்களில் கட்சிகளுக்கிடையில் உருவாக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கைகள் இல்லாமல் போவதற்கு வீதிக்கு இறங்கிய பௌத்த பிக்குகள்தான் காரணமென்று தமிழ் பிரதிநிதிகள் கூறியது உண்மைதான் (இந்தச் சந்திப்பின் ஒவ்வொரு கூட்டத்திலும் GTF பிரதிநிதிகள் பலதைக் குறிப்பிட்டிருந்தனர். “பண்டா – செல்வா ஒப்பந்தம்”, “டட்லி – செல்வா ஒப்பந்தம்”, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான “போர்நிறுத்த ஒப்பந்தம்” மற்றும் அரசியலமைப்பின் “13 வது திருத்தம்” உட்படக் கடந்த காலத்தின் பல தலைவர்களுக்கிடையிலான ஒப்பந்தங்கள்). இனவாதத்தையும் வெறுப்பையும் போதிக்கும் இந்தப் பிக்குகளில் ஒரு சிறுபான்மையினர் உரத்த குரலில் இவற்றைப் பேசி வெற்றி பெற்றனர்.ஏனென்றால் சமாதானத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் நம்மில் பெரும்பான்மையானவர்கள் அந்தச் சந்தர்ப்பங்களில் போதுமான அளவு உரத்த குரலில் பேசவில்லை. எதிர்காலத்தில் நாம் அதைச் செய்ய வேண்டும்.”

பிரகடனக் குழு அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்தபோது அவர் பின்வருமாறு கூறியுள்ளார்……”சகோதரத்துவம்,சமத்துவம் மற்றும் சமாதானத்தை அடிப்படையாகக் கொண்ட இலங்கையை நாம் கட்டியெழுப்பிய அன்றைய நாளே இலங்கை என்ற நாடு உண்மையான வெற்றியைக் கொண்டதாக அமையும்”……..”எந்த மதத்தைச் சேர்ந்த மக்களையும் சமமாக உணரவைக்கும் போதுதான், வளமான மற்றும் வெற்றிகரமான இலங்கையை உருவாக்கியதாக எங்களால் கூற முடியும்”. மக்களிடம் செல்லும் மகத்துவமான பணியை நீங்கள் முன்னெடுத்துள்ளீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள்”.

பிரகடனக் குழு அமரபுர மகாநாயக்கரை சந்தித்தபோது அவர் பின்வருமாறு கூறியுள்ளார்……“தனியாகச் செல்வதற்கு அன்பு, ஞானம்,பொதுஅறிவு, கடினமாக உழைக்க வேண்டிய தேவை அவசியமில்லை. தனித்தனி வழிகளில் செல்வது எளிது. இருப்பினும், ஒன்றிணைவதற்கு, அன்பு, பொது அறிவு, ஞானம் ஆகியவற்றைக் கைக்கொண்டு நாம் கடினமாக உழைக்க வேண்டும். மக்களை ஒன்றிணைக்கும் மகத்தான வேலைத்திட்டம் ஒன்றினை நீங்கள் தொடங்குகிறீர்கள்.இது எளிதாக இருக்காது.இதற்குக் கடின உழைப்புத் தேவைப்படும். உங்கள் வழியில் பல தடைகள் வரும்.உறுதியையும், பொறுமையையும்,சகிப்புத்தன்மையையும் நீங்கள் கைக்கொள்ளுங்கள். ஈற்றில் நீங்கள் வெற்றியடைவீர்கள்.உங்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.”

பிரகடனக் குழு ராமான நிக்காய மகாநாயக்கரைச் சந்தித்தபோது அவர் பின்வருமாறு கூறியுள்ளார்…”நாம் அனைவருக்கும் சமமான இலங்கையை உருவாக்கும் போதுதான் நாட்டின் எந்தப் பகுதியிலும் பாதுகாப்பாக வாழ்வதை மக்கள் அனைவரும் உணரமுடியும்.இந்த மகத்தான முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் உங்கள் அனைவரையும் நான் ஆசீர்வதிக்கிறேன்”

மேற்கண்ட நான்கு மகாநாயக்கர்களும் கூறியவற்றை தொகுத்து பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது.அவர்கள் பிரகடனத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள் அல்லது பிரகடனத்தை எடுத்த எடுப்பில் எதிர்க்கவில்லை.

இலங்கைத் தீவின் மத அரசியல் வரலாற்றைத் தொகுத்துப் பார்த்தால் இது ஒரு முன்னேற்றம்.ஏனென்றால் கடந்த பல தசாப்த காலங்களில் சிங்களம் தலைவர்களுக்கும் தமிழ் தலைவர்களுக்கும் இடையே எட்டப்பட்ட எல்லா உடன்படிக்கைகளுக்கும் பௌத்தப்பிக்குகள் எதிராக காணப்பட்டிருக்கிறார்கள்.பல சமயங்களில் பௌத்தப்பிக்குகளே நேரடியாக எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியிருந்திருக்கிறார்கள்.அண்மை மாதங்களாக, குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னிருந்து, சிங்கள பௌத்தமயமாக்கல், நிலப்பறிப்பு போன்ற நடவடிக்கைகளில் பௌத்தப்பிக்குகள்தான் முன்னணியில் நிற்கின்றார்கள். இப்படிப்பட்டதோர் பின்னணியில்,சக்திமிக்க மகாநாயக்கர்கள் மேற்கண்டவாறு தெரிவித்திருப்பது நிச்சயமாக ஒரு முன்னேற்றம்தான்.இமாலய பிரகடனம் அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றது.ஆனால் அதற்கொரு அரசியல் வியாக்கியானம் உண்டு

இலங்கைத் தீவின் மகா சங்கம் எனப்படுவது அரசியலைத் தீர்மானிக்கும் நான்கு சக்திகளில் ஒன்று. முதலாவதாக நாடாளுமன்றம். இரண்டாவதாக படைத்தரப்பு. மூன்றாவதாக நீதி நிர்வாகக் கட்டமைப்பு. நான்காவதாக மகா சங்கம்.இந்த நான்கும்தான் இலங்கைத்தீவின் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பை கட்டியெழுப்பும் நான்கு தூண்கள் ஆகும்.எனவே இந்த நான்கு தூண்களுக்கும் இடையே நலன்சார் உறவு உண்டு.ஒன்று மற்றதைப் பாதுகாக்கும் விதத்தில் முடிவுகள் எடுக்கப்படும்.

இந்த அடிப்படையில் பார்த்தால்,இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பை, குறிப்பாக படைக்கட்டமைப்பை காப்பாற்ற வேண்டிய ஒரு தேவை மகா சங்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது.ஏனென்றால் அண்மை ஆண்டுகளில் இலங்கைத் தீவின் படைப்பிரதானிகள் சிலருக்கு எதிராக மேற்கு நாடுகள் தடை விதித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா இலங்கைத் தீவின் படைத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராகப் பயணத் தடை விதித்து விட்டது. கனடா மூத்த ராஜபக்சக்கள் இருவரும் உட்பட எனைய சில படை அதிகாரிகளுக்கு எதிராக தடை விதித்து விட்டது. மற்றொரு முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிராக அமெரிக்கா கடந்த ஆண்டில் தடை விதித்தது.சில படைத்தளபதிகள் வெளிநாடுகளில் வசிக்கும் தமது பிள்ளைகளை அல்லது வெளிநாடுகளில் கல்வி கற்கும் தமது பிள்ளைகளை சென்று பார்க்க முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக,வியத்மக அமைப்பின் காணொளி ஒன்றில் கேட்டதாக ஒரு ஞாபகம். ஐரோப்பிய நாடுகள் சிலவும் அவ்வாறு சில படைத்தளபதிகளுக்கு விசா வழங்க மறுப்பதாகத் தகவல்.

மிகக்குறிப்பாக அண்மையில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது பேரவையின் துணை ஆணையாளர் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்.மேலும் 10 படை பிரதானிகளின் பெயர்களை அடையாளம் கண்டிருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐநாவின் 46/1 தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைத் தீவில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஓர் அலுவலகம் ஐநா மனித உரிமைகள் ஆணையருடைய அலுவலகத்தில் பல மாதங்களாக இயங்கி வருகின்றது. இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் என்றைக்கோ ஒரு நாள் இலங்கை அரச படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தத் தக்கவை.

இவ்வாறு தமது யுத்த வெற்றி நாயகர்கள் மேற்கத்திய நாடுகளில் குற்றவாளிகளாகக் காணப்படும் ஒரு நிலைமை குறித்து மகாசங்கம் உஷாரடைந்து விட்டது. அந்த நிலைமையைத் தணிப்பதாக இருந்தால் மேற்கு நாடுகளோடு அவர்கள் ஏதோ ஒரு சமரசத்திற்குப் போகவேண்டும்.அந்த அடிப்படையில்தான் மேற்கைத் தளமாகக் கொண்ட ஒரு புலம் பெயர்ந்த தமிழர் அமைப்பு முன்னெடுத்த ஒர் இணக்க முயற்சியில் மகாசங்கம் ஈடுபாடு காட்டியிருக்கிறது.

இந்த விடயத்தில் உலகத் தமிழர் பேரவை கூறிய ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பது சிங்கள மக்கள் மத்தியில் பரவலாக காணப்படும் ஒரு கருத்து. அதேபோல பௌத்த மகா சங்கம் தீர்வுக்குத் தடை என்பது இலங்கைத் தீவின் பல ஆண்டுகால யதார்த்தம். எனவே இனப்பிரச்சினையில் துருவநிலைப்பட்டிருக்கும் இந்த இரண்டு தரப்புகளுக்கும் இடையில் ஓர் இணக்கத்தை கொண்டு வருவதே தமது அடிப்படை நோக்கம் என்று உலகத்தமிழர் பேரவையின் அறிக்கை கூறுகிறது. அதில் உண்மைகள் உண்டு.ஆனால்,அகுதற்குரிய மக்கள் ஆணையை உலகத் தமிழர் பேரவை எங்கிருந்து பெற்றது?

2009க்கு முன்னரும் சரி,பின்னரும் சரி தமிழ் மக்களின் அரசியலைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு என்பது மிகப்பெரியது. ஈழப் போரின் காசு காய்க்கும் மரங்களாக அவர்களே காணப்பட்டார்கள்.அதேபோல 2009க்கு பின்னர் அனைத்துலக அரங்கில் நீதி கேட்டுப் போராடும் எல்லாக் களங்களிலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பு பெரியது.இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியைக் கோரும் எல்லாப் போராட்டங்களிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் ஈட்டியின் கூர் முனை போல காணப்படுகின்றார்கள். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாடும் நாடுகளில் அதிக தொகையானவர்கள் வாழும் நாடு கனடா.அந்நாடு இனப்படுகொலைக்கு எதிராகவும் போர்க் குற்றங்களுக்கு எதிராகவும் அண்மை ஆண்டுகளில் தீர்மானகரமான சில நகர்வுகளை முன்னெடுத்திருக்கின்றது. இவை இலங்கைத்தீவின் அரசுக் கட்டமைப்புக்கு அச்சுறுத்தலானவை. இப்படிப்பட்டதோர் பின்னணியில்,ஒரு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பின் முயற்சிகளில் ஆர்வங் காட்டுவதன்மூலம் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கு மகாசங்கம் முயற்சிக்கிறது என்பது ஓர் அரசியல் விளக்கம்.

ஆனால் அதைவிட ஆழமான அறம் சார்ந்த,மதம் சார்ந்த, நீதிநெறி சார்ந்த சில கேள்விகளை இங்கே கேட்க வேண்டியிருக்கிறது.

புத்த பகவான் அகிம்சையை போதித்தவர். அனைத்து உலக இன்பங்களையும் துறந்து சந்நியாசம் பூண்டவர். அவரை அஹிம்சாமூர்த்தி என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட அஹிம்சா மூர்த்தியின் வழிவந்த மகா சங்கங்கள் இலங்கைத் தீவில் அஹிம்சையைப் போதித்தனவா?இனங்களுக்கு இடையிலான ஹிம்சைக்கு மகா சங்கமும் பொறுப்பு கூறுமா? இலங்கைத் தீவின் மகா சங்கம் மெய்யாகவே பௌத்த சிந்தனைகளை பின்பற்றி இருந்திருந்தால், இலங்கை தீவின் சிங்கள பௌத்த அரசு தலைவர்கள் உண்மையான பௌத்தர்களாக இருந்திருந்தால், இனப் பிரச்சினை என்ற ஒன்று தோன்றியிருக்குமா? ஒரு யுத்தம் நடந்திருக்குமா?

இல்லையே. எனவே கடந்த பல தசாப்த கால இன முரண்பாட்டுக்கும் வன்முறைகளுக்கும் அனர்த்தத்துக்கும் பௌத்த மகா சங்கம் பொறுப்புக் கூற வேண்டும். அது தொடர்பில் ஒரு மத நிறுவனம் என்ற அடிப்படையில் அவர்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முன் உதாரணத்தை காட்ட வேண்டும். கடந்த பல தசாப்த கால இலங்கைத் தீவின் அரசியலில் சிங்கள பௌத்த அரசாட்சி எனப்படுவது புத்த பகவானின் அடிப்படைப் போதனைகளுக்கு முரணாக இருந்தது என்பதனை துணிச்சலாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.சிங்களக் கூட்டுஉளவியலை சமாதானத்தை நோக்கித் தயார்படுத்துவதற்கு அது மிக அவசியம். கம்பூச்சியாவில் ஆயுத மோதல்களின் போது பௌத்தபிக்குகள் நல்லிணக்கத்தின் தூதுவர்களாக செயல்பட்டிருக்கிறார்கள்.அதேசமயம் பர்மாவில் ரோஹியங்கா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் பௌத்த மதகுருக்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உண்டு.

இலங்கைத் தீவு தன்னை தேரவாத பௌத்தத்தின் மகிமைக்குரிய சேமிப்பகமாகக் கூறிக் கொள்வதுண்டு. ஆனால் இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசியல் என்பது அந்த மகிமையை நிரூபிக்கும் ஒன்றாக இருக்கவில்லை. எனவே பௌத்த மகா சங்கங்கள் இறந்த காலத்துக்கு பொறுப்பு கூற வேண்டும். உலகத் தமிழர் பேரவை அதன் தனியோட்டதுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

https://athavannews.com/2023/1363995

  • கருத்துக்கள உறவுகள்

இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்? நிலாந்தன்.

adminDecember 24, 2023
Imalaya-prakadanam-1.jpeg?fit=1024%2C550

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது.  அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் கொங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள். தாயகத்தில் பெரும்பாலான கட்சிகள் அப்பிரகடனத்தை நிராகரித்துவிட்டன. குடிமக்கள் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தமிழரசுக் கட்சி இதுவிடயத்தில் அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. பிரகடனம் சம்பந்தரிடம் கையளிக்கப்பட்ட போது அவர் “இந்த முன்னெடுப்பை நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். ஆனால் சிறிதரனைப் போன்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் அதற்கு எதிர்ப்புக் காட்டியிருக்கிறார்கள்.

அப்பிரகடனத்தின் பின்னணியில் சுமந்திரன் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. பிரகடனமானது போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை அரசைக் காப்பாற்றும் உள்நோக்கமுடையது என்று புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன. இலங்கை வரலாற்றில்,மகா சங்கத்தோடு தமிழ்த்தரப்பு கையெழுத்திட்ட முதலாவது உடன்படிக்கை இது. ஆனால் அது நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ் மக்களால் பெருமளவுக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரகடனக் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் தரும் தகவல்களின்படி, பிரகடனக்குழு நேபாளத்துக்குச் சென்றபோது அதற்கு வேண்டிய வசதிகளை சுவிற்சலாந்து செய்து கொடுத்திருக்கின்றது. அந்த நாட்டின் இலங்கைக்கான தூதரகத்தில் முன்பு அரசியல் செயலராக இருந்த ஒருவர் மேற்படி சந்திப்புக்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்கிறார். ஆயின், அந்தப் பிரகடனத்தின் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்கு நாடுகளின் உள்நோக்கங்கள் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

அவ்வாறு ஒரு பிரகடனத்தை உருவாக்குவதால் மேற்கு நாடுகளுக்கு என்ன நன்மை? பிரகடனமானது ரணில் விக்கிரமசிங்க இப்பொழுது முன்னெடுத்து வரும் உண்மை மட்டும் நல்லினக்க ஆணைக்குழுவுக்கு மேலும் பலம் சேர்க்கும். அதாவது அவர் பொறுப்புக்கூறும் விடயத்தில் முன்னேறுவது போன்ற ஒரு தோற்றத்தை அது கட்டியெழுப்ப உதவும். அதன்மூலம் பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறும் வழிகளை இலகுவாக்கும்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டால் அது ஒப்பீட்டளவில் தமக்கு அனுகூலமானது என்று மேற்கு நாடுகள் சிந்திக்கின்றன. எனவே தேர்தலை நோக்கி ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு உண்டு. போர்க்குற்றங்களுக்கு எதிரான பரிகார நீதியை அழுத்தமாக கேட்பது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள்தான். இந்த விடயத்தில் கனடாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருக்கின்றது. எனவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பு ஒன்றை மகா சங்கத்துடன் உடன்பாட்டுக்கு வர வைப்பதன் மூலம் சிங்கள பௌத்தர்களின் பயங்களைக் குறைக்கலாம் என்று மேற்கு நாடுகள் சிந்திக்கின்றனவா?

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யூலி சுங் “சமூகங்களுக்கு இடையேயான புரிதலை விசாலமாக்குவதற்கும்,நீடித்த நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான இந்த முயற்சியை நாங்கள் பாராட்டி வரவேற்கிறோம்” என்று தனது ரூவீற்றறில் எழுதியுள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸ் தூதுவர் சிறி வோல்ட் பிரகடனக் குழுவைச் சந்தித்தபின், “இந்தச் சந்திப்பும், ஐக்கியத்திற்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட பன்மைத்துவமும் அமைதியும் கொண்ட இலங்கையை உருவாக்கும் முன்னெடுப்பிலான இமாலயப் பிரகடனத்தை ஆதரிப்பதும் எமக்குப் பெருமை தருவதாகும். நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.” என ரூவீற் செய்துள்ளார்.

பொதுவாக மேற்கு நாடுகளில் நல்லிணக்க முயற்சிகளை மகா சங்கம் முழுமனதாக ஆதரித்தது கிடையாது. ஆனால் இமாலய பிரகடனத்தை மகா சங்கம் எடுத்த எடுப்பில் எதிர்க்காததற்குக் காரணம் என்ன? இலங்கையில் மகா சங்கம் எனப்படுவது இலங்கை அரசுக் கட்டமைப்பின் ஒரு பகுதி. அது ஒரு மத நிறுவனம் என்பதை விடவும் அரசியல் நிறுவனம் என்பதே அதிகம் பொருத்தமானது. பல நூற்றாண்டு காலமாக அரசியல் செய்த ஒரு நிறுவனம். அதற்கு வேண்டிய பாரம்பரியமும் அனுபவமும் அவர்களுக்கு உண்டு. அந்த அடிப்படையில் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை பாதுகாப்பதற்கு அவர்களுக்கு இது போன்ற பிரகடனங்கள் தேவை.

பிரகடனக் குழு மல்வத்த பீடத்தை சந்தித்த பொழுது எதிர்பார்த்ததற்கு மாறாக மகாநாயக்கர் அதிகம் சினேகபூர்வமாகப் பழகியதாக பிரகடனக் குழுவினர் தெரிவிக்கின்றார்கள். பொதுவாக விருந்தாளிகள் வரும் பொழுது மகாநாயக்கர்கள் தமது உதவியாளர்களை பிரித் ஓதுமாறு பணிப்பதுண்டு. ஆனால் பிரகடனக் குழுவுக்காக அவரே பிரித் ஓதியிருக்கிறார். “கடந்த காலங்களில் கட்சிகளுக்கிடையில் உருவாக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கைகள் இல்லாமல் போவதற்கு வீதிக்கு இறங்கிய பௌத்த பிக்குகள்தான் காரணமென்று தமிழ் பிரதிநிதிகள் கூறியது உண்மைதான்……இனவாதத்தையும் வெறுப்பையும் போதிக்கும் இந்தப் பிக்குகளில் ஒரு சிறுபான்மையினர் உரத்த குரலில் இவற்றைப் பேசி வெற்றி பெற்றனர். ஏனென்றால் சமாதானத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் நம்மில் பெரும்பான்மையானவர்கள் அந்தச் சந்தர்ப்பங்களில் போதுமானஅளவு உரத்த குரலில் பேசவில்லை. எதிர்காலத்தில் நாம் அதைச் செய்ய வேண்டும்” என்றும் மகாநாயக்கர் கூறியுள்ளார்.

பௌத்த மகா சங்கங்கள் இதுவரை வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் கருத்துக்களின்படி அவர்கள் இமாலய பிரகடனத்தை எதிர்க்கவில்லை என்பது ஒரு தொகுக்கப்பட்ட அவதானிப்பு. பௌத்த மகா சங்கம் எதிர்க்கவில்லை என்றால்,அது சிங்களபௌத்த கட்சிகளின் முடிவுகளில் பெருமளவு தாக்கத்தைச் செலுத்தும். அதே சமயம் இப்பிரகடனம் ரணிலைப் பிணையெடுக்கக்கூடியது என்பது எதிர்க்கட்சிகளுக்கு உவப்பானது அல்ல. எனினும் மகா சங்கத்தைப் பொறுத்தவரை அது கட்சி கடந்து சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பை எப்படி பாதுகாப்பது என்றுதான் சிந்திக்கும்.

ஒருபுறம் நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றும் தகமை ரணிலுக்கே இருப்பதாக மகா சங்கம் கருதுகின்றது. எனவே ரணிலைப் பலப்படுத்த இப்பிரகடனம் உதவும். இன்னொருபுறம்,அவர்களுடைய போர்வெற்றி நாயகர்களான ராஜபக்சக்களையும் படைப் பிரதானிகளையும் பாதுகாக்க வேண்டும். ஏற்கனவே கனடா மூத்த இரண்டு ராஜபக்சக்களுக்கும் படைப்பிரதானிகளுக்கும் எதிராகத் தடைகளை விதித்திருக்கிறது. அமெரிக்காவிலும் நிலைமை இறுக்கமாக இருக்கிறது. சில ஐரோப்பிய நாடுகள் முன்னாள் படைத் தளபதிகளுக்கு விசா வழங்குவதில்லை. கடைசியாக நடந்த ஐநா கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் உதவி ஆணையாளர் மேலும் 10 படைத் தளபதிகளைக் குறித்துப் பிரஸ்தாபித்திருந்தார். எனவே சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகிய படைக்க கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டிய தேவை அதே அரசு கட்டமைப்பின் மற்றொரு பகுதியான பௌத்த மகா சங்கத்துக்கு உண்டு. அந்த அடிப்படையில் இது போன்ற பிரகடனங்களின் மூலம் மேற்கு நாடுகளைத் திருப்திப்படுத்தி,நல்லிணக்க முயற்சிகளைத் தமக்கு பாதுகாப்பான எல்லைக்குள் இருந்தபடி, ஊக்குவித்து, தமது படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க மகா சங்கம் முயற்சி செய்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமா?

மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால்,தெளிவாகத் தெரிவது என்னவென்றால், ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாக்க வேண்டிய தேவை மேற்கு நாடுகளுக்கு உண்டு;பன்னாட்டு நாணய நிதியத்துக்கு உண்டு ;பௌத்த மகா சங்கத்துக்கு உண்டு;ராஜபக்சங்களுக்கு உண்டு. எனவே,மேற்கண்ட எல்லாருடைய நலன்களையும் ஒரு பொதுப்புள்ளியில் இணைப்பதற்கு இமாலயப் பிரகடனம் உதவுமா?

அதேசமயம்,உள்ளூரில் உலகத் தமிழர் பேரவைக்கு வேறு ஒரு உள்நோக்கம் இருக்க முடியும் என்று யாழ்ப்பாணத்தில் ஊடக வட்டாரங்களில் ஊகங்கள் உண்டு. சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் இடையே இப்பொழுது இடைவெளி அதிகம். சுமந்திரனுக்கு நெருக்கமான சாணக்கியன் ரணிலின் மீது அளவுக்கு மிஞ்சி வாய்வைத்து விட்டார். அதனால் இடைவெளி மேலும் அதிகரித்திருக்கின்றது. ஆனால் அடுத்த ஜனாதிபதியாக ரணில் வருமிடத்து, அப்படி ஒரு இடைவெளியை வைத்திருப்பது மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குப் பாதுகாப்பாக இருக்காது. எனவே சுமந்திரனை ரணிலை நோக்கிக் கொண்டு செல்லும் நோக்கத்தோடு இப்படி ஒரு பிரகடனம் உருவாக்கப்பட்டதா? என்பது அந்த ஊகம். இந்தப் பிரகடனம் அதன் இறுதி அர்த்தத்தில் ரணிலைப் பிணையெடுக்கும்.அவ்வாறு சுமந்திரனுக்கு நெருக்கமான அமைப்பொன்று ரணிலைப் பிணையெடுத்து,அவருடைய நன்மதிப்பை வென்று,அதன்மூலம் சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கலாம் என்று ஒரு விளக்கம் கூறப்படுகின்றது.

இருக்கலாம். மேற்படி பிரகடனம் ரணிலைப் பிணையெடுப்பதற்கு உதவும் என்பது வெளிப்படையானது. அது மேற்கு நாடுகளின் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலை சிங்கள பௌத்த நோக்கு நிலையிலிருந்து முன்னெடுப்பதற்கும் உதவலாம். போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைப் பாதுகாப்பதற்கு உதவலாம்.சில சமயம் சுமந்திரனுக்கு ரணிலுக்குமிடையில் இடைவெளியைக் குறைக்க உதவலாம். ஆனால்,தமிழ் மக்கள் தமது அரசியல் இலக்குகளை வென்றெடுப்பதற்கு அது உதவப் போவதில்லை.

 

https://globaltamilnews.net/2023/198931/

  • கருத்துக்கள உறவுகள்

 

 
இலங்கையில், குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டங்களில், இலங்கையில் நடந்த மனித உரிமை அநியாயங்களுக்கு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை அடைவதற்கு உழைப்பது கனடியத் தமிழர் பேரவையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் நிலையான நீண்டகால சமாதானத்தை உருவாக்குவதற்கான செயல்முறைக்கும் ஆதரவளிக்கும் போது, கனடியத் தமிழர் பேரவையானது இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களுக்கான ஆணையை விட்டுக் கொடுக்காது, சமரசம் செய்யாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றோம்.
கனடிய தமிழர் பேரவையின் முழுமையான ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------
கனடிய தமிழர் பேரவை ஊடக வெளியீடு
21/12/2023
கனடியத் தமிழர் பேரவை (CTC) இமாலயப் பிரகடனத்தைக் கையளிப்பதற்காக மகிந்த ராஜபக்சாவை சந்தித்தமையால் எமது மக்களுக்கு ஏற்பட்ட வலியை உணர்ந்து ஆழமாக வருந்துகிறது.
இந்த ஆண்டு 2023 ஏப்ரலில் உலகத் தமிழர் பேரவையின் (GTF) பிரதிநிதிகள் மற்றும் இலங்கையில் உள்ள பல்வேறு பௌத்த உயர் மதபீடங்களின் மூத்த பௌத்த பிக்குகள் நேபாளத்தின் நாகர்கோட்டில் உரையாடல்களை மேற்கொண்டு இமாலயப் பிரகடனத்தை உருவாக்கினார்கள்.
(பிரகடனத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது).
இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, இரு தரப்பினரையும் உள்ளடக்கிய தூதுக்குழு இலங்கையில் பல்வேறு சந்திப்புகளை நடத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிஸ் மற்றும் கனடா நாட்டு இராஜதந்திரிகள் உட்பட இலங்கையின் முக்கியமான அனைத்து மதத் தலைவர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், இலங்கை ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், பெரும்பாலான தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள், இன்னாள் சபாநாயகர்கள், அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் தூதுக்குழுவினர் சந்தித்து உரையாடியிருந்தார்கள்.
இமாலயப் பிரகடனத்தைக் கையளித்து, தேசிய உரையாடலை ஆரம்பிக்க நாடு முழுவதும் உள்ள மக்களிடம் இந்த முன்னெடுப்பு எடுத்துச் செல்லப்படும் என்பதைத் தெரிவிப்பதே இந்தச் சந்திப்புகளின் பிரதான நோக்கமாகும். இமாலயப் பிரகடனத்தைப் பெற்றுக்கொண்ட அனைவரும் இந்த முன்னெடுப்புக்குத் தமது முழு ஆதரவைத் தருவதாக கூறியதோடு மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர்கள் தலைமையில் இலங்கையில் நிரந்தர சமாதானத்துக்கான அரசியல் முன்னெடுப்புகள் நடைபெறக்கூடிய சூழலை உருவாக்க இத் தேசிய உரையாடல் உபயோகமாக அமையுமெனவும் குறிப்பிட்டிருந்தார்கள்.
இமாலயப் பிரகடனத்தின் பன்மைத்துவ ஈடுபாட்டிற்கான ஆணையின் ஒரு பகுதியாக, தற்போதைய இலங்கை நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவையும் தூதுக்குழுவினர் சந்தித்திருந்தனர். இமாலயப் பிரகடனம் மற்றும் அர்த்தமுள்ள உரையாடலுக்கான முக்கியத்துவத்தைப் பற்றி இலங்கையில் செல்வாக்குள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பு மற்றும் சந்திப்பின் படங்கள், புலம்பெயர் தமிழர்களிடமும், கனடியத்தமிழர்களிடமும் வேதனை தரும் வகையில் தீவிரமாக உணர்வுகளைத் தூண்டியுள்ளன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். கனடியத் தமிழர் பேரவை உண்மையிலேயே இது குறித்து ஆழமாக வருந்துகிறது. இவ்வாறான வேதனை உணர்வினை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதைக் கனடியத் தமிழர் பேரவை தனது நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இமாலயப் பிரகடனத்தின் முதன்மையான நோக்கமும், அதைத் தொடர்ந்து நடைபெறும் அனைத்துச் சந்திப்புகளும், ஈழத்தமிழர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய உரையாடலை ஆரம்பிப்பதாகும். அத்துடன் தீவில் உள்ள அனைத்து முக்கிய பங்குதாரர்களையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்துவதாகும். நாங்கள் அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. அவ்வாறான வேலைத்திட்டம் இலங்கையில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தலைவர்களைச் சார்ந்த விடயமாகும்.
கனடிய தமிழர் பேரவை 2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) பங்கேற்பது உட்பட உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்காகக் கடுமையாக முன்னின்று உழைத்து வருகின்றது.
இலங்கையில், குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டங்களில், இலங்கையில் நடந்த மனித உரிமை அநியாயங்களுக்கு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை அடைவதற்கு உழைப்பது கனடியத் தமிழர் பேரவையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் நிலையான நீண்டகால சமாதானத்தை உருவாக்குவதற்கான செயல்முறைக்கும் ஆதரவளிக்கும் போது, கனடியத் தமிழர் பேரவையானது இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களுக்கான ஆணையை விட்டுக் கொடுக்காது, சமரசம் செய்யாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றோம்.
தூரதிர்ஷ்டவசமாக, இமாலயப் பிரகடனத்தின் உண்மையான நன்நோக்கம் குறித்துத் தவறான விளக்கங்கள் பரப்பப்பட்டுக் கனடியத் தமிழர் பேரவை அலுவலகர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராகத் தேவையற்ற தாக்குதல்கள் நடந்துவருகின்றன. நீண்டகாலமாக கனடியதமிழர் பேரவையின் பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டுதல் மற்றும் சமாதானத்துக்கான பணியையும் முன்னேற்றத்தையும் இழிவுபடுத்தும் இத்தகைய செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மேலதிக தகவல்கள் மற்றும் ஊடக விவரங்களுக்கு, கீழுள்ள மின்னஞ்சல் முகவரியோடு தொடர்பு கொள்ளவும்: info@canadiantamilcongress.ca
  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2023 at 11:19, கிருபன் said:

தமிழ் மக்கள் தமது அரசியல் இலக்குகளை வென்றெடுப்பதற்கு அது உதவப் போவதில்லை.

சிந்தனைக்குரிய சிந்தனை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.