Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம்

நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம்

  — கருணாகரன் —

யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டன.  ஈழத் தமிழரின் அரசியல் இன்னும் மூக்குச் சிந்தும் (அழுது புலம்பும்) நிலையிலிருந்து  மீளவில்லை. மட்டுமல்ல, அது உடைந்தும் நலிந்தும் சீர்குலைந்த நிலைக்குள்ளாகி, அதைத் தூக்கி வளர்த்தவர்களையே இன்று துக்கத்துக்குள்ளாக்கியுள்ளது. “பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் உருவாக்கியுள்ளன. கட்சிகளுக்குள்ளே உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் இயக்கங்கள் தோன்றிப் பின் மறைந்திருக்கின்றன. போரின் பின், யார் உயிருடன் இருக்கிறார்கள்? யாருக்கு அஞ்சலி செய்யலாம்? செய்யக்கூடாது? என்ற விடயத்தில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலும் இரண்டாக உடைந்திருக்கிறார்கள்….”  என இந்தத் துக்கத்தை பத்தியாளர் நிலாந்தனும் வெளிப்படுத்தியிருக்கிறார். நிலாந்தனுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ் மக்களுடைய கூட்டுத் துக்கமும் இதுவேதான்.

இந்தப் பலவீனமான – பரிதாபமான – பாதகமான நிலைமைக்குரிய கூட்டுப் பொறுப்பை, தமிழரின் தீவிர அரசியலைக் கேள்விக்கும் விமர்சனத்துக்கும் ஆய்வுக்கும் இடமின்றித் தொடரும் ஊடகர்கள், புத்திஜீவிகள், பத்தியாளர்கள், அரசியற் தரப்பினர், பல்கலைக்கழக சமூகத்தினர், தமிழ்ச் சிவில் சமூகத்தினர் உட்பட சில மதப் பிரமுகர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அவர்களுடைய கூட்டுத் தவறே இந்த நிலைக்குக் காரணமாகும். 

காரணம் எளியதே. 

யுத்தத்திற்குப் பிறகான சூழல் (Post – War period) என்பது முற்றிலும் வேறானது. அது தமிழ்ச் சமூகத்தையும் அதனுடைய அரசியலையும் புத்தாக்கம் செய்ய வேண்டியது. 

1.      அரசியற் சிந்தனை மாற்றத்தின் அடிப்படையில். துரோகி – தியாகி என்று கறுப்பு – வெள்ளையாக அரசியலைச் சுருக்கிப் பார்க்காமல், முடிந்த அளவுக்கு அனைத்துத் தரப்புகளோடும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கு முயற்சித்திருக்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தை ஒருங்கிணைத்துத் திரட்டி, அரசியல், பொருளாதார, அறிவியல் ரீதியாகப் பெரும் அணியாக்கியிருக்க வேண்டும். இதில் புலம்பெயர் மக்களையும் உள்வாங்கிருக்க முடியும். இதில் உள்ள சிக்கலான அக – புற நெருக்கடிகளைப் புரிந்து கொண்டு அவற்றைக் கையாளக் கூடிய எந்தத் தலைமையும் மேலெழவில்லை. அதனால் இவை எல்லாம் அப்படி நிகழவில்லை. 

அரசாங்கத்தோடு இணைந்து நிற்கின்ற தரப்புகளும்  தமிழ்த்தேசியத் தரப்புகளும் எப்படி ஒருங்கிணைந்து செயற்பட முடியும்? என்ற கேள்வி எழலாம். இதற்குச் சிறந்த பதில், இந்த இரண்டு தரப்புகளும் இவை இரண்டுக்கும் அப்பாலான சமூக விடுதலையுடன் கூடிய இனவிடுதலையை முன்னிறுத்தும் தரப்புகளைக் கூட தம்முடன் இணைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கவில்லை என்பதாகும். காரணம், இந்த இரண்டு தரப்பும் தேர்தல் அரசியலில் மட்டும் மையங் கொண்டிருந்ததேயாகும். அதற்கு அப்பால், விடுதலை அரசியலை இவை முன்னிறுத்திச் சிந்தித்திருந்தால், அதைப் பலப்படுத்தும் மூலோபாயம், தந்திரோபாயம், வேலைத்திட்டம் என்ற அடிப்படையிலேயே செயற்பட முயன்றிருக்கும். 

ஆகவே இதில் பெரும் தவறு நிகழ்ந்தது. இதைச் சுட்டிக்காட்டி, புத்தாக்க அரசியலை மேற்கொள்வதற்குரிய அழுத்தத்தைக் கொடுப்பதில் தமிழ்ச் சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் பத்தியாளர்களும் பல்கலைக்கழக சமூகத்தினரும் தவறி விட்டனர்.  பதிலாக இதைச் சுட்டிக்காட்டிய தரப்பினரை விலக்கம் செய்வதிலேயே இந்தத் தரப்பினர் குறியாக இருந்தனர். இன்னும் அப்படித்தான் உள்ளனர். கெட்டாலும் பரவாயில்லை, எந்தப் புத்திமதியையும் கேட்க மாட்டோம் என்ற பிடிவாதமும் அறியாமையும் இவர்களைச் சூழ்ந்துள்ளது. 

2.      தமிழ்ச் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மீள்குடியேற்றத்தையும் புனரமைப்பையும் அரசாங்கமே தனித்து மேற்கொண்டது. அதற்கான செயலணியைக் கூட யுத்தப் பாதிப்பு நடந்த வடக்குக் கிழக்கில் செயற்படுத்தவில்லை. யாரும் இதில் இடையீட்டைச் செய்யவில்லை. இதில் தமிழ்ப் புத்திஜீவிகளும் துறைசார் வல்லுனர்களும் பெரும் தவறிழைத்தனர். இதைப்பற்றி இந்தக் கட்டுரையாளர் மட்டுமே பல தடவை சுட்டிக்காட்டியிருந்தார் மேலும் சிலரும் பேசியுள்ளனர். தமிழ் அரசியற் கட்சிகள், அவற்றின் தலைவர்கள் (அரச ஆதரவு – எதிர்ப்பு இருதரப்பும்தான்) எவையும் இதைப்பற்றிச் சிந்தித்ததில்லை. இதனால் தமிழ்ச்சமூகம் பொருளாதார ரீதியாகம் சமூக நிலையிலும் நலிவடைந்து கொண்டே செல்கிறது. குறிப்பிடத்தக்க அளவுக்குப் புதிய தொழில்துறைகள் எதுவும் 15 ஆண்டுகளில் வடக்குக் கிழக்கில் உருவாக்கப்படவில்லை. இப்போது இந்தப் பிராந்தியத்திலுள்ள தமிழர்களுக்கான ஒரே தெரிவு நாட்டை விட்டு வெளியேறுதல். அல்லது அரச தொழில் வாய்ப்புகளில் சரணடைதல் மட்டுமே.

3.      தமிழ்ச்சமூகத்தின் அக – புற முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதில் நேர்மையான வழிமுறைகளை தமிழ்த்தேசியச் சக்திகள் எவையும் உரிய முறையில் கவனப்படுத்திச் செயற்படவில்லை. இதனால் இதை வேறு தரப்புகள் தமக்கிசைவாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதைக்குறித்த சமூகவியல், பொருளியல் ஆய்வுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் குறைந்த பட்சம் தமிழ்ப்பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்களாவது பங்களித்திருக்க முடியும். சற்று முயற்சித்திருந்தால், இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இதைக்குறித்த ஒரு கவனத்தை உண்டாக்கி, ஒட்டு மொத்தமாக அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு ஆய்வுகளைச் செய்திருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால், கள நிலையை பொதுவெளியில் சரியாக முன்வைத்திருக்க முடியும். அது செய்யப்படவே இல்லை. 

4.      வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் பலமான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. ஏன், சம்பிரதாயமாகக் கூட அது நிகழவில்லை. இன்னும் கடந்த காலத் தவறுகள், பிரச்சினைகளுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் பகைமை நிலையே நீடிக்கிறது. அத்துடன் இன்னொரு தமிழ்  பேசும் சமூகத்தினரான மலையக மக்களுடனான அரசியல் உறவையும் வளர்க்கவில்லை. இதனால்தான் தற்போது தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டைத் தனியே வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சமூகத்துக்குள் மட்டும் மட்டுறுத்திப் பார்க்கும் அவலம் நேர்ந்திருக்காது. இதிற்கூட இன்னும் நெருக்கடியே உண்டு. தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் மட்டுமல்ல, எத்தகைய அரசியல் நிலைப்பாட்டையும் ஒரு முகப்பட்டு எடுப்பதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகளிடத்தில் கூட ஒருங்கிணைவும் புரிந்துணர்வும் இல்லை. இந்தப் பலவீனத்தைப் புரிந்து கொள்வதில் கூட இன்னும் அரசியற் கட்சிகள், அவற்றின் தலைமைகள் உள்ளிட்ட தமிழ்ச்சக்திகள் எவையும் உருப்படவில்லை. 

5.      எதிர்ப்பு அரசியல் – இணக்க அரசியல் இரண்டுக்கும் இடையிலான அர்த்தப்பாடுகளில் உள்ள குழப்பமாகும். உண்மையில் தமிழ்த் தரப்பு இவை இரண்டையும் அதன் சரியான பொருளில் இங்கே மேற்கொள்ளவில்லை. இங்கே எதிர்ப்பு அரசியல் என்பது, செயற்தன்மையற்ற தனியே வாய்ச் சவாடல் அரசியலாகவும் இணக்க அரசியலானது, சரணடைவு அரசியலாகவுமே சுருங்கிப்போயுள்ளது. இவை இரண்டினாலும் எந்தப் பெரும்பயன்களும் மக்களுக்குக் கிடையாது. மட்டுமல்ல, இவை எந்த வகையிலும் ஒடுக்கப்படும் மக்களுடைய விடுதலைக்குரியவை இல்லை. 

இதனால்தான் தமிழ்ச் சமூகம் தமிழ் அரசியற் சக்திகளிடத்திலும் அதை வலியுறுத்துவோரிடத்திலும் நம்பிக்கையற்றிருக்கிறது. எவரிடத்திலும் நம்பிக்கை கொள்ள முடியாது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான பொறுப்பையும் இந்தச் சக்திகளே ஏற்க வேண்டும். வெறுமனே புலம்புவதால் பயனில்லை.  

கூடவே பகையை மறப்பதற்கான களமும் காலமும் இதுவாகும். 

எந்த வகையிலும் இலங்கையில் இனிமேல் முரண்பாடுகளை மீளுருவாக்கம் செய்ய முடியாது. அப்படி மீள வளர்த்தால் அதனால் பாதிப்புக்குள்ளானோரே தொடர்ந்தும் பாதிப்பைச் சந்திக்க நேரும். அரசுக்கும் ஆட்சித் தரப்பினருக்கும் அதனால் பெரிய சேதங்கள் ஏதும் ஏற்படாது. அதுதான் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

இதற்கு நான்கு காரணங்கள் உண்டு. 

1.      பிராந்திய சக்தியான இந்தியா தொடக்கம் அவுஸ்திரேலியா, யப்பான் மற்றும் மேற்கு நாடுகள் அனைத்தும் இலங்கையின் முரண்பாட்டைத் தணிவு நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றே வலியுறுத்தின – இன்னும் அப்படித்தான் சொல்கின்றன. நல்லிணக்கம், பகை மறப்பு, கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் தீர்வை எட்டுங்கள் என்றே எல்லா நாடுகளும் வலியுறுத்துகின்றன. இதைச் செய்ய வேண்டியது அரசாங்கம் மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பும்தான். முக்கியமாகத் தமிழ்த்தரப்புமாகும். ஆனால், இது நிகழவில்லை. இதனால் இந்த நாடுகள் அனைத்தும் இலங்கையின் இனப்பிரச்சினையில் தமது கவனக்குவிப்பை மட்டுப்படுத்தியுள்ளன. அதாவது இது தொடர்பாக  அவை சீரியஸாக இல்லை. எனவே இலங்கை அரசை விடச் சர்வதேச சமூகத்தை நம்பிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்கே பாதிப்பும் ஏமாற்றமும் ஏற்படும். 

2.      செயற்பாட்டு அரசியல் இல்லாதொழிந்து விட்டது. இதனால் அரசின் ஒடுக்குமுறையையும் இனவாத நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தும் பலமற்றுப் போனது. ஆகவே அரசின் இனவாதச் செயற்பாடுகளை எந்த வகையிலும் மட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அரகலய போன்றதொரு மக்கள் போராட்டத்தை (சர்வதேச சமூகத்தின் ஆதரவோடு) மேற்கொள்வற்கு தமிழ்ச்சமூகத்தினால் முடியுமா? முடியாது என்பதே வெளிப்படையான பதில். காரணம், அப்படியான அரசியற் கூருணர்வும் அர்ப்பணிப்பு மனப்பாங்கும் இன்று தமிழர்களிடத்தில் இல்லாதொழிந்துள்ளது. 

3.      பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதேசங்களையும் மீள்நிலைப்படுத்துவதற்கான பணிகளைச் செய்வதற்கு அரசாங்கம் இடமளிக்கவில்லை என்றொரு புலுடா தொடர்ந்து விடப்படுகிறது. ஆனால், இதைக் கடந்து பலர் தனியாகவும் கூட்டாகவும் பல விதமான பணிகளைச் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். எந்த அரசியற் கட்சியையும் விடத் தனியாட்களாகவும் அமைப்புகளாகவும் செய்து வரும் பணி பெரிது. இதைச் சிவில் செயற்பாட்டாளர்களும் பல்கலைக்கழக மாணவர் சமூகமும் அரசியற் கட்சிகளும் செய்யாது ஒதுங்கின. இதனால் தாம் கையறு நிலைக்குள்ளாகியுள்ளதாகத் தமிழர்களிற் பெரும்பாலானோர் சிந்திக்கின்றனர். இதை எதிர்கொண்டு எழுவதற்குப் பதிலாக தாம் தப்பித்தால் போதும் என்று விலகிச் செல்கின்றனர். 

4.      தமிழ் மக்கள் சமாதானத்திலும் அமைதித் தீர்விலும் பற்றுக் கொண்டவர்கள். அதையே அவர்கள் நாடுகிறார்கள் என்ற நம்பிக்கை பிற சமூகங்களிடம் வலுப்பெறவில்லை. தாம் சமாதானத்தின் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறோம் என்று சத்தியம் செய்தாலும் அதை நம்பக்கூடிய சூழல் இன்னும் பிற சமூகங்களிடம் உருவாகவில்லை. இதைப்பற்றிய மீளாய்வும் கள ஆய்வும் மிக அவசியமானது. சமாதானத்திலும் தீர்விலும் மெய்யாகவே எமக்குப் பற்றிருக்குமானால் இந்த ஆய்வைச் செய்து, அதற்கான பரிகாரமும் காணப்பட வேண்டும். இல்லையெனால் இந்த மாதிரி அணிகள், குழுக்கள், பிரிவுகள் என்றே நிலைமை நீடிக்கும். 

 

https://arangamnews.com/?p=10777

  • கருத்துக்கள உறவுகள்

//இந்தப் பலவீனமான – பரிதாபமான – பாதகமான நிலைமைக்குரிய கூட்டுப் பொறுப்பை, தமிழரின் தீவிர அரசியலைக் கேள்விக்கும் விமர்சனத்துக்கும் ஆய்வுக்கும் இடமின்றித் தொடரும் ஊடகர்கள், புத்திஜீவிகள், பத்தியாளர்கள், அரசியற் தரப்பினர், பல்கலைக்கழக சமூகத்தினர், தமிழ்ச் சிவில் சமூகத்தினர் உட்பட சில மதப் பிரமுகர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அவர்களுடைய கூட்டுத் தவறே இந்த நிலைக்குக் காரணமாகும்//

தோற்கடிக்கப்பட்ட இனம், ஒருவரில் மாத்திரமே குற்றத்தைப் போட்டுவிட்டு தப்பித்துக் கொள்வதையே இன்றுவரை பார்க்க முடிகிறது .. நிலமை இப்படியிருக்க மேலே பட்டியிலிடப்பட்டவர்களின் கூட்டுத் தவறே தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்றால் எத்தனை பேர் இதனை ஏற்றுக்கொள்வார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2024 at 16:58, கிருபன் said:

அரகலய போன்றதொரு மக்கள் போராட்டத்தை (சர்வதேச சமூகத்தின் ஆதரவோடு) மேற்கொள்வற்கு தமிழ்ச்சமூகத்தினால் முடியுமா? முடியாது என்பதே வெளிப்படையான பதில். காரணம், அப்படியான அரசியற் கூருணர்வும் அர்ப்பணிப்பு மனப்பாங்கும் இன்று தமிழர்களிடத்தில் இல்லாதொழிந்துள்ளது. 

இதுதான் உண்மையான காரணமா? கண்ணுக்கு முன்னால் இருக்கும் ஒற்றைக் காரணத்தை விட்டிவிட்டு இல்லாத காரணம் ஒன்றை ஏன் இவர் தேடுகிறார்?
அரகலய சிங்களவர்களால் தமது பொருளாதார பிரச்சினைகளுக்காக நடத்தப்பட்ட ஒரு எதிர்ப்பு. தமிழர்கள் சிங்கள அரசிற்கெதிரான போராட்டம் ஒன்றைச் செய்வதைக் கனவிலும் நினைக்க முடியுமா? காணாமலாக்கப்பட்டவர்கள், காணி விடுவிப்பு என்று சில நடத்தும் போராட்டங்களே நசுக்கப்படும் நிலையில், அரகலய போன்றதொரு போராட்டத்தைத் தமிழர்கள் நடத்தினால் அரசு என்ன செய்யும் என்கிற விவஸ்த்தை வேண்டாமா? அதுசரி, அந்த அரகலயவைக் கூட அரசு எப்படி அடித்து துரத்தியது என்பதாவது இந்த பத்தி எழுத்தாளருக்குத் தெரியுமா? 

On 24/5/2024 at 16:58, கிருபன் said:

நல்லிணக்கம், பகை மறப்பு, கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் தீர்வை எட்டுங்கள் என்றே எல்லா நாடுகளும் வலியுறுத்துகின்றன. இதைச் செய்ய வேண்டியது அரசாங்கம் மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பும்தான். முக்கியமாகத் தமிழ்த்தரப்புமாகும்.

ஆக, பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பே நல்லிணக்கத்தையும் ஆரம்பிக்க வேண்டும். சரி, என்ன செய்யலாம் என்பதையாவது இவர் கூறுவாரா? 
 

On 24/5/2024 at 16:58, கிருபன் said:

 செயற்பாட்டு அரசியல் இல்லாதொழிந்து விட்டது. இதனால் அரசின் ஒடுக்குமுறையையும் இனவாத நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தும் பலமற்றுப் போனது. ஆகவே அரசின் இனவாதச் செயற்பாடுகளை எந்த வகையிலும் மட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

அரசுடன் நல்லிணக்கமாகப் போய்க்கொண்டே அதன் ஆக்கிரமிப்பை எப்படித் தடுப்பது என்பதையாவது இவர் கூறுவாரா? 

On 24/5/2024 at 16:58, கிருபன் said:

பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதேசங்களையும் மீள்நிலைப்படுத்துவதற்கான பணிகளைச் செய்வதற்கு அரசாங்கம் இடமளிக்கவில்லை என்றொரு புலுடா தொடர்ந்து விடப்படுகிறது.

அரசு செய்யும் என்று தமிழர்கள் ஒருபோதுமே நம்பியிருக்கவில்லை. தம்மைத்தாமேதான் பார்த்துக்கொள்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2024 at 16:58, கிருபன் said:

தமிழ் மக்கள் சமாதானத்திலும் அமைதித் தீர்விலும் பற்றுக் கொண்டவர்கள். அதையே அவர்கள் நாடுகிறார்கள் என்ற நம்பிக்கை பிற சமூகங்களிடம் வலுப்பெறவில்லை. தாம் சமாதானத்தின் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறோம் என்று சத்தியம் செய்தாலும் அதை நம்பக்கூடிய சூழல் இன்னும் பிற சமூகங்களிடம் உருவாகவில்லை.

அட, இதை இன்னுமாடா சொல்லிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்? 2009 இற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளுடனும் சமாதனாம் குறித்துப் பேசிக்கொண்டுதானே வருகிறோம்? அரசுகள், பிறநாட்டு அரசுகள், சர்வதேச அமைப்புக்கள் என்று தமிழர்கள் பேசாத இடம் என்று ஒன்றிருக்கிறதா? தமிழர்கள் சமாதானக் கதவினை இறுக மூடிவைத்திருக்கிறார்கள் என்று இவருக்கு யார் சொன்னது? இல்லாத காரணத்தைக் கண்டுபிடித்து அரசியல் பந்தி எழுதுகிறார் என்று நினைக்கிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்பரசியலின் காலம் முடிந்தது (02)

எதிர்ப்பரசியலின் காலம் முடிந்தது (02)

— கருணாகரன் —

தமிழர்களுடைய எதிர்ப்பு அரசியலின் காலம் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியோடு – 2009 உடன் – முடிந்து விட்டது.  தமிழரசுக் கட்சியே எதிர்ப்பரசியலைத் தொடக்கி வைத்தது. தான் தொடக்கி வைத்த எதிர்ப்பரசியலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் அது திணறியது. அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர்கள், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள். அதாவது விடுதலை இயக்கங்கள். அதனுடைய உச்சம் விடுதலைப்புலிகள் ஆகும். 

எதிர்ப்பரசியலைப் பல பரிமாணங்களில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர். அரசைத் திணற வைக்கும் அளவுக்கு அதிருந்தது. தமக்கான கட்டுப்பாட்டுப் பிரதேசம், அதற்கான ஆட்சிக் கட்டமைப்பு, அதற்குரிய படைத்துறைகள், அரசை நிலைகுலைய வைக்கும் பல்திறன் தாக்குதல்கள் – விரிந்த போர், அதற்குள்ளும் மக்களைத் தம் வசமாக வைத்திருக்கும் அரசியல் உத்திகள் என இது விரிந்திருந்தது. இது பற்றிய விமர்சனங்கள், மாற்று அபிப்பிராயங்கள் இருந்தாலும் எதிர்ப்பரசியலில் புலிகளின் இடம் முக்கியமானது. 

2009 இல் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதோடு இவை அனைத்தும் முடிவுக்கு வந்தன. 

ஆனால், இனப்பிரச்சினையின் – இன ஒடுக்குமுறையின் – அனைத்துப் பிரயோக நிலையும் அப்படியேதானுள்ளது. இப்போது கூட ஆயுதப் போராட்டமொன்றைச் செய்வதற்கான அத்தனை நியாயங்களும் உண்டு. அதைத் தொடரக் கூடிய அளவுக்கு பயிற்சி பெற்றவர்களும் தாராளமாக உள்ளனர். சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், சுகு ஸ்ரீதரன், துரைரத்தினம், சித்தார்த்தன், முருகேசு சந்திரகுமார், நடராஜா கமலாகரன் போன்ற தலைவர்களிலிருந்து இந்தக் கட்டுரையாளர் உள்பட பல பத்தியாளர்கள், ஆயிரக்கணக்கான போராளிகள் வரை அதற்கான அனுபவத் தகுதியோடுள்ளனர். 

ஆனால், கள யதார்த்தம்?

இதுதான் ஊன்றிக் கவனிக்க வேண்டியது. 

ஆகவே எதிர்ப்பரசியலை மேற்கொள்வதாக இருந்தால், அது புலிகளை விடப் பன்மடங்கு வீரியமுள்ளதாகவும் பல பரிமாணத்தைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். 

அதைச் செய்வதற்கு யாருண்டு? எந்தத் தரப்பு உள்ளது?

எதிர்ப்பரசியல் என்பது ஆயுதப் போராட்டத்தின் வழியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. மக்களை அணிதிரட்டிச் செய்யலாம் என்று சிலர் சொல்லக் கூடும். 

ஆம், குறைந்த பட்சம் அரகலயவைப் போலாவது மேற்கொள்ளலாம். அதாவது மக்கள் இயக்கங்களாகவோ மக்களின் அணிதிரளல்களாகவோ எழுச்சியடைந்து ஆட்சித் தரப்பை அசைப்பதாக இருக்க வேண்டும்.

அதைச் செய்ய முடியாமலிருப்பது ஏன்?

அப்படி எதுவும் நிகழவில்லையே. 

அதற்கான சூழலும் ஏது நிலைகளும் தமிழ்ச் சூழலில் தாராளமாக இருந்தன. இருக்கின்றன. இதைப் புரிந்து கொண்டு, மக்கள் இயக்கத்தைக் கட்டுவதற்கும் மக்களை அணி திரட்டுவதற்கும் எந்தத் தமிழ்த் தலைவர்களும் முயற்சிக்கவில்லை.  (திரட்டப்பட்ட – திட்டமிடப்பட்ட போராட்டங்கள் எல்லாமே பிசுபிசுத்துப் போனதாகத்தான் இருந்தன).

அதற்குப் பெரும் அர்ப்பணிப்பைச் செய்ய வேண்டும். அதற்கும் அவர்கள் தயாரில்லை. உண்மையான நிலைமை என்னவென்றால், இதற்கான ஆளுமைகள் இன்று இல்லாமற் போய் விட்டன. அல்லது தமது ஆளுமையையும் ஆற்றலையும் இவர்கள் வெளிப்படுத்தத் தவறி விட்டனர். 

இன்றுள்ள அரசியற் கட்சிகளைச் சற்று ஆழ்ந்து நோக்கினால் ஒரு உண்மை தெளிவாகப் புலப்படும். எஸ்.ஜே.வி. செல்வநாயத்தைச் சொல்லியே தமிழரசுக் கட்சி இன்னும் உயிர் வாழ்கிறது. அப்படித்தான் பத்மநாபாவைச் சொல்லி ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் சிறி சபாரத்தினத்தைச் சொல்லி ரெலோவும் உமா மகேஸ்வரனை வைத்து புளொட்டும் செயற்படுகின்றன. இப்படித்தான் பிரபாகரனை (புலிகளை) வைத்துப் பல தரப்புகளும் பிழைத்துக் கொள்கின்றன. எவையும் தமது தொடக்க நிலைத் தலைவர்களைக் கடந்து, புத்தடையாளமாக எழுச்சியடையவில்லை. 

தாம் ஒரு பேராளுமை என்ற உணர்வோடு எழுந்து ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டவோ, மக்களை எழுச்சியடைய வைக்கவோ, புதிய அரசியலை முன்மொழிந்து அதை முன்னெடுக்கவோ முடியாமலே பலரும் உள்ளனர். 

இன்னொரு நிலையில் சொல்வதானால், பேரிழப்புகளையும் பெரும் தியாகங்களையும் செய்த மக்களின் முன்னால், இந்தத் தலைவர்கள் எதையும் செய்ய முடியாதவர்களாக – எதையும் செய்வதற்குத் தயாரில்லாதவர்களாகச் சிறுத்துள்ளனர். 

இதனால்தான் இவர்களில் பலரும் தமது மெய்யான விருப்புக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் அப்பால், புலிகளின் நிழலில் தமது அரசியலைச் செய்கின்றனர். சரி பிழைகளுக்கு அப்பால், புலிகள் மேற்கொண்ட அர்ப்பணிப்பு அவர்கள் மீதான மதிப்பை இன்னும் பெரும்பாலான தமிழ் மக்களிடம் வைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவே ஒவ்வொரு தரப்பும் முயற்சிக்கிறது. 

இதற்கப்பால், தமது சிந்தனையின் வீரியத்திலும் செயற்பாட்டுப் பெறுமதியிலும் சுயமாக நிற்க முடியாமலே அனைத்துத் தரப்பும் உள்ளன. 

தமது சிறுமைகளையும் இயலாமைகளையும் மறைத்துக் கொள்வதற்காக இவர்கள் மேற்கொள்ளும் உத்திகள் அல்லது உபாயங்களே –

1.      சர்வதேச சமூகத்துக்கு எமது (தமிழ் மக்களின்) ஒற்றுமையைக் காட்ட வேண்டும். தமிழ் மக்கள் தேசமாகத் திரண்டு நிற்க வேண்டும் (கட்சிகளாகிய – தலைவர்களாகிய நீங்களே ஒன்றாகத் திரண்டு நிற்கக் கூடிய நிலையில் இல்லை. ஆனால், மக்கள் ஒன்றாகத் திரண்டு நிற்க வேண்டுமாம்).

2.      இலங்கை அரசுடன் எந்த நிலையிலும் சமரசத்துக்கோ விட்டுக் கொடுப்புக்கோ செல்ல முடியாது. அரசையும் அதை ஆதரிக்கின்ற சிங்கள மக்களையும் தொடர்ந்து எதிர்க்க வேண்டும். (ஆனால் இவர்கள் அவ்வப்போது அரசோடும் ஆட்சித் தரப்புகளோடும் சிங்கத் தலைமைகளோடும் தேவைக்கேற்ப விட்டுக் கொடுப்புகள், கூட்டுச் சேர்க்கைகள், டீல்களை வைத்துக் கொள்வார்கள்). தாம் மட்டும் எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னுக்கு நிற்க மாட்டார்கள். 

3.      பிராந்திய சக்தியாகிய இந்தியாவின் வழிகாட்டலின்படியே நாம் செயற்பட வேண்டும் (இதில் ஏகப்பட்ட குழப்பங்கள். இந்தியாவை நம்ப முடியாது என்று சிலரும் இந்தியாதான் தமிழருக்கு ஆதரவாக இருக்கும் எனச் சிலரும் உள்ளனர்)

4.      அரசாங்கமும் சிங்களத் தரப்புமே பொறுப்புக் கூறல், நீதியை வழங்குதல், தீர்வை முன்வைத்தல், பரிகாரம் காணுதல் போன்றவற்றுக்கு முழுப்பொறுப்பு. (தமக்கு – தமிழ்த்தரப்புக்கு – இதில் எந்தப் பொறுப்பும் இல்லை எனச் செயற்படுதல்). ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள தரப்பு என்ற வகையில் அரசுக்கு கூடுதல் பொறுப்புண்டு. அதற்காக நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று சொல்லித் தப்பி விட முடியாது. 

போன்றனவாகும். 

இந்தக் கோரிக்கைகள் பலவும் அடிப்படையில் நியாயமானவையே. 

ஆனால், இதைச் செய்வதற்கு (செயற்படுத்துவதற்கு) உரிய அழுத்தத்தைக் கொடுப்பதற்கு எத்தகைய பொறிமுறைகள் தமிழ்த்தரப்பில் உருவாக்கப்பட்டன? மேற்கொள்ளப்பட்டன? 

பாராளுமன்ற உரைகள், ஊடக அறிக்கைகள், அவ்வப்போது நடத்தப்படுகின்ற ஊடகச் சந்திப்புகள், அங்கங்கே நடக்கின்ற சிறிய அளவிலான சில மணி நேரப்போராட்டங்களுக்கு அப்பால் எந்தப் பெரிய அரசியல் நடவடிக்கையும் எந்தத் தரப்பினாலும் மேற்கொள்ளப்படவில்லை. 

வெளிச் சக்திகளை (பிராந்தியச் சக்தியான இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும்) தமிழ் மக்களுடைய (தமிழ் பேசும் மக்களுடைய) அரசியல் நியாயத்தின் பக்கம் நிற்க வைப்பதற்கான அக – புறச் சூழலைக் கூட உருவாக்கவில்லை. இதற்கான இராசதந்திரப் பொறிமுறையோ, அதைச் செயற்படுத்தக் கூடிய அணியோ, கவனத்திற்குரிய ஆளுமையோ உருவாகவும் இல்லை. 

பதிலாக  வெறும் கட்டாந்தரையாகவே தமிழர்களின் எதிர்ப்பரசியற் களம் கடந்த 15 ஆண்டுகளாக இருக்கிறது. இந்தக் கட்டாந்தரையில் எத்தகைய நன்மையான பயிர்கள் வளர முடியும்?

இதற்கு அப்பால் 1980 களில் இருந்ததைப்போல, தமிழ் – சிங்கள முரண்பாட்டை (பகையை) வளர்ப்பதற்கும் ஆயுதப் பயிற்சியைத் தருவதற்கும் இந்தியா உட்பட எந்தத் தரப்பும் தற்போது தயாரில்லை. மட்டுமல்ல, பிரிவினையை ஊக்கப்படுத்தவும் எந்த நாடும் முன்வரவில்லை. 

ஆக எதிர்ப்பரசியல்  என்பது செயற்பாட்டு வடிவத்தில் தமிழ்ச்சமூகத்திடம் முழுதாக இல்லாதொழிந்து விட்டது. 

இதைப் புரிந்து கொள்ளாமல், அல்லது மக்களை ஏமாற்றுவதற்காக அரசின் குற்றங்களையும் தவறுகளையும் ஒடுக்குமுறைகளையும் பற்றி சும்மா பேசிக் கொண்டிருப்பதும் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்பதும் தொலைக்காட்சி உரையாடல்களில் ஆக்ரோமாகப் பேசுவதும் எதிர்ப்பு அரசியல் அல்ல. 

அது வெறுமனே ஒரு ஒரு தலைப்பட்டசமான ஊடகப் பணி – ஒற்றைப்படைத்தன்மையான (கறுப்பு – வெள்ளை) அரசியல் விமர்சனம் மட்டுமே. 

அதற்கு அப்பால், அதற்கு எந்த வகையான அரசியற் பெறுமானமும் இல்லை. மக்கள் விழித்துக் கொண்டால், அதற்குப் பலமும் கிடையாது. 

அரசியற் பெறுமானம் என்பது, முன்னெடுக்கப்படும் அரசியல் உண்டாக்கும் நல்விளைவுகளாகும். 

இதை (இந்த உண்மையை – இந்த யதார்த்தத்தை) ப் புரிந்து கொண்டு, 2009 க்குப் பிறகு போருக்குப் பிந்திய அரசியலை தமிழர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். 

முதற்கட்டுரையிற் குறிப்பிட்டதைப்போல அப்படி ஒரு முன்னெடுப்பைச் செய்திருந்தால், இன்று தமிழர்கள் இருந்திருக்கக் கூடிய சூழல் வேறாக இருந்திருக்கும். அதாவது இப்படிக் கையறு நிலையில் நின்று புலம்பும் துயர நிலையைச் சந்தித்திருக்க வேண்டியதில்லை. 

என்பதால் எந்த நிலையிலும் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு தீர்வை எட்டவே வேண்டும் என்பதே நம்முன்னே உள்ள ஒரே தெரிவாக உள்ளது. 

அதைத் தவிர வேறு தெரிவுகளுண்டா? 

அப்படியென்றால் அது என்ன? எப்படியானது? என்று எதிர்ப்பரசியலை முன்மொழிவோர் சொல்ல வேண்டும். 

மக்கள் தேசமாகத் திரண்டு என்ன செய்வது? அதனுடைய அடுத்த கட்டம் என்ன? என்று அவர்கள் தெளிவாக்க வேண்டும். 

 

 

https://arangamnews.com/?p=10789

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

தாம் ஒரு பேராளுமை என்ற உணர்வோடு எழுந்து ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டவோ, மக்களை எழுச்சியடைய வைக்கவோ, புதிய அரசியலை முன்மொழிந்து அதை முன்னெடுக்கவோ முடியாமலே பலரும் உள்ளனர். 

இன்னொரு நிலையில் சொல்வதானால், பேரிழப்புகளையும் பெரும் தியாகங்களையும் செய்த மக்களின் முன்னால், இந்தத் தலைவர்கள் எதையும் செய்ய முடியாதவர்களாக – எதையும் செய்வதற்குத் தயாரில்லாதவர்களாகச் சிறுத்துள்ளனர். 

இதனால்தான் இவர்களில் பலரும் தமது மெய்யான விருப்புக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் அப்பால், புலிகளின் நிழலில் தமது அரசியலைச் செய்கின்றனர். சரி பிழைகளுக்கு அப்பால், புலிகள் மேற்கொண்ட அர்ப்பணிப்பு அவர்கள் மீதான மதிப்பை இன்னும் பெரும்பாலான தமிழ் மக்களிடம் வைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவே ஒவ்வொரு தரப்பும் முயற்சிக்கிறது. 

இதற்கப்பால், தமது சிந்தனையின் வீரியத்திலும் செயற்பாட்டுப் பெறுமதியிலும் சுயமாக நிற்க முடியாமலே அனைத்துத் தரப்பும் உள்ளன. 

தமது சிறுமைகளையும் இயலாமைகளையும் மறைத்துக் கொள்வதற்காக இவர்கள் மேற்கொள்ளும் உத்திகள் அல்லது உபாயங்களே –

 

இதை (இந்த உண்மையை – இந்த யதார்த்தத்தை) ப் புரிந்து கொண்டு, 2009 க்குப் பிறகு போருக்குப் பிந்திய அரசியலை தமிழர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். 

முதற்கட்டுரையிற் குறிப்பிட்டதைப்போல அப்படி ஒரு முன்னெடுப்பைச் செய்திருந்தால், இன்று தமிழர்கள் இருந்திருக்கக் கூடிய சூழல் வேறாக இருந்திருக்கும். அதாவது இப்படிக் கையறு நிலையில் நின்று புலம்பும் துயர நிலையைச் சந்தித்திருக்க வேண்டியதில்லை. 

என்பதால் எந்த நிலையிலும் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு தீர்வை எட்டவே வேண்டும் என்பதே நம்முன்னே உள்ள ஒரே தெரிவாக உள்ளது. 

அதைத் தவிர வேறு தெரிவுகளுண்டா? 

அப்படியென்றால் அது என்ன? எப்படியானது? என்று எதிர்ப்பரசியலை முன்மொழிவோர் சொல்ல வேண்டும். 

மக்கள் தேசமாகத் திரண்டு என்ன செய்வது? அதனுடைய அடுத்த கட்டம் என்ன? என்று அவர்கள் தெளிவாக்க வேண்டும். 

கா(ஆ)த்திரமான எழுத்து! யார் கருணாகரன் அவர்களை ___ ஆக்கப்போகிறார்களோ?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பொதுவேட்பாளர் என்ற ‘மாயமான்’
 

பொதுவேட்பாளர் என்ற ‘மாயமான்’

 — கருணாகரன் —

(03)

“தமிழ் மக்கள் தேசமாகத் திரள வேண்டும்” என்பதை மந்திர உச்சாடனம் போல, ஒரு சாரார் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடக்கம் “தமிழ்ப் பொது வேட்பாளர்(?)”என்ற எண்ணக் கருவை வலியுறுத்துவோர் வரையில் இதில் உள்ளடக்கம். 

அப்படித் தேசமாகத் தமிழ் மக்கள் திரண்டால் அதற்கு அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று இவர்களுக்குத் தெரியாது. அதைப்பற்றி அவர்கள் எங்கேயும் எதுவும் சொன்னதில்லை. (சொல்லப்போவதுமில்லை. ஏனென்றால் அதைப்பற்றி இவர்களுக்கு எதுவுமே தெரியாது). அதைச் சொல்ல வேண்டுமானால், அதற்குரிய செயலுக்குச் செல்ல வேண்டும். அதொரு போராட்டம். அதைப்பற்றி முறையாகத் திட்டமிட வேண்டும். அதொரு பெரும்பணியாகும். அதற்கான அர்ப்பணிப்பையும் உழைப்பையும் கொடுக்க வேண்டியதாகும். இப்போதுள்ளதைப்போல தேர்தற் கூட்டுக்காக (பதவிகளுக்காக) மட்டும் கட்சிகள் கூடிப் பேசுவதோ, அதே தேர்தல் விடயங்களுக்காக உடைந்து உடைந்து பிரிந்து செல்வதோ அல்ல. 

அதைப்போல “சிவில் சமூகப் பிரதிநிதிகள்”, “பல்கலைக்கழக சமூகத்தினர்”  என்ற போர்வையில் அரசியற் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவதாலோ, அவர்களுடைய மேடைகளைப் பகிர்வதாலோ எந்தப் புத்தாக்கமும் நிகழ்ந்துவிடாது. அல்லது  புலம்பெயர் ஊட்டங்களுக்காகவும் சில தொண்டு அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்காகவும் ஓடித்திரிவதாலும் தமிழரின் அரசியலில் முன்னேற்றத்தைக் காண முடியாது. இந்தத் தரப்புகளோடு மல்லுக் கட்டுவதை விட மக்களிடம் சென்று வேலை செய்தால், அது அந்த மக்களுக்கான ஆறுதலாகக் கூட இருக்கும்.

யுத்தம் முடிந்த கையோடு பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், பாதிக்கப்பட்ட மக்களோடு உளஆற்றுகைப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களோடு வேலை செய்கின்ற அனுபவத்தில் சொல்கிறேன், லட்சக்கணக்கான மக்கள் உள நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, சமூக  நெருக்கடி, அரசியல் நெருக்கடி எனப் பல பிரச்சினைகளிலிருந்து மீள முடியாமல் தத்தளிக்கின்றனர். சொந்த மக்கள் (உடன்பிறந்தவர்களைப் போன்றவர்கள்) இப்படி நெருக்கடியில் தவிக்கும்போது எப்படி உங்களால் இந்த மக்களிடம் இறங்கி வர முடியாமல், தலைவர்களையும் பிரமுகர்களையும் மதபீடங்களையும் மட்டும் சுற்ற முடிகிறது? எப்படி பிறருடைய நிகழ்ச்சி நிரலில் இயங்கக் கூடியதாக உள்ளது?

உண்மையான மக்கள் நேயம் (மனித நேயம்) என்பது என்ன? 

“தேசமாகச் சிந்தித்தல் என்று சொல்கிறீர்களே!” அது இந்த மக்களை அடிப்படையாகக் கொண்டதுதானே! அதாவது,  தேசம் என்பது பிரதானமாக மக்களை உள்ளடக்கியதுதானே!  அந்த மக்களின் உளநிலையை அறிந்த மருத்துவர்களிடமும் மெய்யான சமூகச் செயற்பாட்டாளர்களிடத்திலும் உரையாடி அறிந்து பாருங்கள்,  உண்மை என்னவென்று தெரியும். யதார்த்த நிலை என்னவென்று புரியும். அதை அப்படியே ஒரு வர்ணமாகத் தீட்டிப் பாருங்கள். தேசம் இருண்டுபோயிருக்கும். அந்தளவுக்குத் துயரும் அவலமும் நிரம்பிய பரப்பு அது. 

எளியதொரு (வலிய) உண்மை. வடக்குக் கிழக்கில் சாப்பிடாமல் பாடசாலைக்குச் செல்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அறிந்து பாருங்கள். உங்களுடைய பிள்ளை ஒரு வேளையாவது உண்ணாமல் பாடசாலைக்குச் சென்றதா? என்பதையும் ஒரு தடவை உங்கள் இதயத்தில் கை வைத்துச் சொல்லுங்கள். 

இப்படிப் பல விடயங்கள் உண்டு. இதையெல்லாம் ஒரு போதுமே இவர்கள் சிந்திக்கப்போவதில்லை. 

ஆனாலும் தேசமாகத் திரண்டால், அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வியை இந்தக் கட்டுரையிலும் எழுப்புவோம். இனியாவது பதில்  சொல்கிறார்களா என்று பார்ப்போம். 

தவிர, தமிழ் மக்கள் தேசமாக – ஒன்றாகத் திரள்வதொன்றும் புதிய விசயமேயல்ல. 

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மக்கள் அப்படித் தேசமாகத் திரண்டே  உள்ளனர். தமிழரசுக் கட்சியை, பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணியை, பிறகு இயக்கங்களை, பிறகு விடுதலைப்புலிகளை, கூடவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை, அது உடைந்து சிதறிய பிறகும் தமிழ்த்தேசியக் கட்சிகளை எல்லாம் தமிழ் மக்கள் ஆதரித்து நிற்பது தேசமாகத் திரண்ட (அந்த உணர்வின்) அடிப்படையில்தானே!. 

ஏன், 2010, 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தையும் வாக்களித்த முறையையும் ஒரு தடவை படமாக வரைந்து பாருங்கள். தமிழீழ வரைபடம் அப்படியே தெரியும். 

அது தமிழ்த் தேசியக் கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைய – தேசமாகத் திரண்டு வாக்களித்ததால்தானே வந்தது. 

இந்த 60 ஆண்டுகளிலும் ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய நெருக்கடிகள், சவால்கள், உயிர் அச்சுறுத்தல்கள், இழப்புகள், அலைச்சல்களின் மத்தியிலும் தங்கள் விடுதலை வேட்கையையும் அரசியல் உணர்வையும் தமிழ் மக்கள் விட்டு விடவில்லை. (இதைப் புரிந்து கொள்ளக் கூடிய அறிவுக் கண்ணை இன்று சிலர் இழந்து விட்டனர் போலும்).

இவ்வாறு அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தேசமாகத் திரண்டு நிற்கும் மக்களுக்கு கிடைத்தது என்ன? தமிழ்த்தலைமைகள் பெற்றுக் கொடுத்தது என்ன? இந்தக் கேள்வியை இந்தக் கட்டுரையாளரும் தனக்குள் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்.

இப்படித் திரண்டு நிற்கும் தமிழ் மக்களுடைய சமூக, அரசியல், பொருளாதார விடுதலையையும் மேம்பாட்டையும் (தேவைகளையும்) நிறைவேற்ற முடியாத போதுதான், மக்கள் இந்த அரசியலை விட்டு (தமிழ்த்தேசியத் தரப்பை விட்டு) விலகிச் செல்ல முற்படுகிறார்கள். இது ஆபத்தான ஒரு நிலையே. ஆனால், இதைப் புரிந்து கொண்டு மாற்றங்களை நிகழ்த்தாத வரையில் மக்கள் மாறிச் செல்வதைக் கட்டுப்படுத்த முடியாது. 

தங்களை வைத்து  அல்லது தங்களை ஏமாற்றி இந்தத்  தலைமைகளும் அவர்களுக்குத் தொண்டு  செய்வோரும் அரசியற் பிழைப்பு நடத்துகின்றனர் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுகிறது. அது இவர்களின் மீது சலிப்பையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. கோபத்தை உண்டாக்குகிறது. 

இதைச் சமாளித்துக் கொள்வதற்கு இன்னொரு பெரிய புரட்டைச் செய்ய முற்படுகின்றன தமிழ்த் தலைமைகள். நடக்கவே நடக்காத இன்னொரு பெரிய புலுடாவை விடுகின்றன. 

ஆம், தமிழ் தலைமைகளும் அவர்களுக்குக் காவடி தூக்குகின்ற தமிழ் ஊடகர்களும் இப்படியான தோல்விச் சூழலில்தான் மக்களைத் திசை திருப்பும் புதிய தந்திரோபாயங்களைச் செய்கிறார்கள். 

இதற்கு ஒரு எளிய உதாரணத்தையும் வரலாற்று உண்மையையும் கூறலாம். 

1970 களில் தமிழரசுக் கட்சியின் “வாய்ச் சவடால்” அரசியலுக்கு பெரிய தொய்வு ஏற்பட்டது. அதுவரையிலும் வீராவேசப் பேச்சுகளையும் பெரும் பிரகடனங்களையும் (பார்க்க – அன்றைய சுதந்திரன் பத்திரிகையை) செய்து வந்த தமிழரசுக் கட்சியினால் அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது. (இப்போது தமிழ்த் தேசிய அரசியற் தரப்புகளின் மீது ஏற்பட்டிருப்பதைப் போன்ற நிலை அது. தமிழரசுக் கட்சிக்கான மதிப்பு என்பது அது 1950, 60 களில் நடத்திய மக்கள் போராட்டங்களினாலும் மலையக மக்களுக்கான உரிமையைப் பற்றிப் பேசியதாலும் உருவானதுதான். பின்னாளில் அது அவ்வாறெல்லாம் செயற்படாமல் பிரமுகர் அரசியலுக்குள் தேங்கி விட்டது). 

இதனால் அதன் மீது மக்களுக்குச் சலிப்பும் நம்பிக்கையீனமும் ஏற்பட்டது. தமிழரசுக் கட்சியை விட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியோடும் கொம்யூனிஸ்ற் பாட்டியோடும் ஐக்கிய தேசியக் கட்சியோடும் மக்கள் சாயத் தொடங்கினர். அது அரசியல் ரீதியான தீர்வை எட்டமுடியாதென்று தெரிந்தாலும் தமது ஏனைய பிரச்சினைகள், தேவைகளாவது தீர்க்கப்படும் என்ற நிலையில் உருவாகியது. மக்களுக்கு இது தவிர்க்க முடியாததாக இருந்தது. 

இதைத் திசைமாற்றுவதற்கே தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கமும் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது. கூடவே தமது அரசியலுக்கு எதிராகச் சிந்திப்போரைத் துரோகிகளாகக் கட்டமைக்கவும் கூட்டணியினர் முற்பட்டனர். 

தமிழ் விடுதலைக் கூட்டணியை அப்பொழுது அதொரு புதிய உள்ளடக்கமாக – மாற்று ஏற்பாடாகத்  தமிழரின் அரசியலில் நோக்கப்பட்டது. அதுவரையிலும் எதிரெதிராக  நின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருவாகியது இந்தப் புதிய பார்வையைக் கொடுத்தது. 

ஆனால், அடுத்து வந்த ஐந்து ஆண்டுகளில் அதனுடைய வரட்சியை – பிம்ப உடைவை –  மக்கள் இனங்கண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அத்தனை பேச்சுகளும் பொய்த்துப் போயின. 

அரசியல் உள்ளடக்கமற்ற, செயலற்ற, பாராளுமன்றக் கதிரைகளையும் பதவிச் சுகங்களையும் அடிப்படையாகக் கொண்ட அரசியற் போக்கின் தோல்வியாக அது அமைந்தது. 

இதுதான் 2009 க்குப்பிறகு தமிழ் அரசியல் அரங்கிலும் நிகழத் தொடங்கி, இப்பொழுது உச்சக்கட்டத்துக்கு வந்துள்ளது. 2009 க்குப் பிறகான – போருக்குப் பிந்திய காலத்தைச் சரியாகக் கையாளத் தெரியாமல், தவறியதன் விளைவே இதுவாகும். 

2009 க்குப் பிறகான காலம் முற்றிலும் வேறு. அது தமிழ் மக்களுடைய வாழ்க்கையில் மிகமிகக் கடினமானதாகும். நினைத்துப் பார்க்கவே முடியாத பேரவலப் பரப்பு அது. போரின் தோல்வியை முழுதாகவே தலையிற் சுமந்து கொண்டிருந்த காலம் அது. இழப்பின் துயரமும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலையும், வாழ்வை மீளக் கட்டியெழுப்பப்படுகின்ற பெரும்பாடுகளும் மக்களை அழுத்திக் கொண்டிருந்தன. இதை விட பல்லாயிரக்கணக்கான போராளிகள் சிறையில் இருந்தனர். சிறையிலிருந்து (தடுப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டு வந்தவர்களுக்கும் அடுத்து என்ன என்ற கேள்வியே முன்னின்றது. அவர்களைக் கண்காணிக்கும் படைத்துறையும் புலனாய்வாளர்களும். மறுபக்கத்தில் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தீராத்துக்கமாக நின்றது. மாற்றுத் திறனாளிகள் என்ன  செய்வதென்று தெரியாதிருந்தனர். (இன்னும் அப்படித்தான் உள்ளனர்). போதாக்குறைக்கு ஊர்கள் எல்லாம் இராணுவமயமாகியிருந்தது. 

இந்தச் சூழலில் அடுத்த கட்ட அரசியல் எத்தகைய வடிவத்தை எடுப்பது, எவ்வாறான முன்னெடுப்பைச் செய்வது என்று தெரியாத தேக்கத்துக்குள்ளாகியிருந்தது. அதைப்பற்றிய ஆய்வுகளோ உரையாடல்களோ எதுவும் செய்யப்படவே இல்லை. இவ்வாறான உலக அனுபவங்கள் உள்வாங்கப்படவும் இல்லை.  மேலும் மக்களுடைய இந்தப் பிரச்சினைகளுக்கு தமிழ்த்தரப்பின் உருப்படியான எந்த வேலைத்திட்டங்களும் களப்பணிகளும் ஆற்றப்படவே இல்லை. இந்தப் பதினைந்து ஆண்டுகளில் எந்தக் கட்சியாவது ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஏதாவது திட்டங்களை உருவாக்கியதா? பணிகளைச் செய்ததா? 

இந்தக் கேள்விகளும் இங்கே பேசப்படும் விடயங்களும் யாரையும்  குறை சொல்லுவதற்காகவோ குற்றம்சாட்டி நிராகரிப்பதற்காகவோ சொல்லப்படவில்லை. இவற்றைக் குறித்து இப்போதாவது சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நேச விமர்சனமாக – ஒரு திறந்த உரையாடலுக்கான முன்வைப்பாக இங்கே சுட்டப்படுகிறது. எவரையும் நிராகரிப்புச் செய்வதன் மூலம் நம்மை – மக்களையே பலவீனப்படுத்த முடியும். மக்களைப் பலப்படுத்துவதாக இருந்தால் அனைத்துத் தரப்பும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். கவனிக்கவும் செயற்பட வேண்டும் என்பதை. 

இந்த நிலைமையைக் குறித்துச் சீரியஸாகக் கவனமெடுக்கப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். ஆனால், அந்தச் சுட்டுதல் – கவனப்படுத்தல் – புறக்கணித்து ஒதுக்கப்பட்டது. அவர்கள் வேறு எதிராளர்களாகவே நோக்கப்பட்டனர். இப்போது கூட இவ்வாறான போக்கே தொடர்கிறது. இது எவ்வளவு பெரிய அவலம்? 

பதிலாக அத்தனை சுமைகள், தேவைகள், அவலங்களின் மத்தியிலும்  மக்கள்  அரசின் மீது கடுமையான கோபத்தையும் அதிருப்தியையும் கொண்டிருந்தனர்.  இதை (அரசின் மீதான எதிர்ப்புணர்வை) பயன்படுத்தி, அரசியல் அறுவடையைச் செய்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. (அப்பொழுது அனைத்துத் தமிழ்த்தேசிய லேபிலாளர்களும் ஒன்றாகவே இருந்தனர்). 

மக்கள் வழங்கிய பேராதரவையோ, மக்களின் அவல நிலையையோ அவர்களுடைய பிரச்சினைகளையோ புரிந்து கொண்டு, மக்களுக்கான அரசியலைச் செய்வதற்கு கூட்டமைப்பும் அதனோடு இசைந்து நின்ற தரப்புகளும் முன்வரவில்லை. முக்கியமாகக் காலகாலமாகத் தமிழ்த் தலைமைகளின் அரசியல் விருப்புகளுக்கெல்லாம் தம்முடைய வாழ்க்கையையும் உயிரையும் உடல் உறுப்புகளையும் கொடுத்த மக்களுக்காக இவர்கள் தம்மை அர்ப்பணித்துப் பணி செய்யவேல்லை. அவர்களுடைய பேரிடர் காலமாகிய அந்தக் காலச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களோடு ஒன்று கலந்து நிற்பதற்குப் பதிலாக, அரசு எதையும் செய்ய மறுதலிக்கிறது – தடுக்கிறது என்று சாட்டுப் போக்குகளைச் சொல்லித் தப்பித்துக் கொண்டனர். அரசு தடுத்தால், அதை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். அந்த நெருக்கடியை உடைத்தெறிந்திருக்க வேண்டும். அதுதானே போராட்ட அரசியல் – விடுதலைக்கான அரசியல்!

பதிலாகப் “பிரமுகர் அரசியல்” விளையாட்டில்தான் இவை ஈடுபட்டன. இதில் விடுதலை இயக்கங்களில் இருந்து வந்தவர்களும் (செயற்பாட்டு அரசியலில் உள்ளவர்களும்) பெருந் தவறை இழைத்தனர். பங்கேற்பு அரசியல் (Participation politics), பங்களிப்பு அரசியல் (Contribution politics) அர்ப்பணிப்பு அரசியல் (Commitment politics) என்பதையெல்லாம் கைவிட்டு, பிரகடன அரசியலுக்கு  (Declaratory politics)த் தாவிச் சென்றனர். பிரமுகர் அரசியல் –  அதாவது   பிரகடன அரசியல்  (Declaratory politics) தானே வசதி!

ஆனால், அதொரு அபாயமான சுருக்குக் கயிறு என்பதை இவர்கள் புரிந்து கொள்ளத் தவறினர். அந்தச் சுருக்குக் கயிறு இப்பொழுது இவர்களுடைய கழுத்தில் விழுந்துள்ளது. 

இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் இந்த நிலையைத் திசை திருப்பவுமே “பொதுவேட்பாளர்” என்ற “அதிசயக் கிளியை” இப்பொழுது “அலாவுதீனின் அற்புத விளக்காக”க் காட்ட முற்படுகின்றனர். இதற்குத்தான் ஐக்கியம், ஒருங்கிணைவு, தேசமாகத் திரள்வோம், சர்வதேசத்துக்கு எம்மை நிரூபிப்போம் என்ற “சவாடல்கள்” எல்லாம். 

“இதனுடைய அரசியற் பெறுமானம், அடுத்த கட்ட அரசியல் என்ன என்று கேட்டால், “இதொரு பரீட்சார்த்த முயற்சி. வெற்றி தோல்வி எல்லாம் சாதாரணம், இதை விட சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்து என்ன பயனைக் காண்பீர்கள்? எந்த அடிப்படையில் – எந்த நம்பிக்கையில் அவர்களுக்கு வாக்களிப்பது?… ” என்றெல்லாம் வினோதமாகக்  கேட்கிறார்கள். 

பழகிய, பழைய அரசியற் சிந்தனையில் இப்படித்தான் கேள்விகள் எழும். போருக்கு முந்திய – போர்க்கால அரசியல் மனநிலையைக் கொண்டிருந்தால் இப்படித்தான் கேட்கவும் தோன்றும். 

இது போருக்குப் பிந்திய – புத்தாக்க அரசியலுக்கான – நிலைமாறு காலகட்ட அரசியற் சிந்தனையில் நாம் புதிய தந்திரோபயங்களைக் குறித்துச் சிந்தித்தால், இந்தக் கேள்விகள் முட்டாள்தனமானவை என்றே விளங்கும். அதற்குச் செல்லாதவரையில் பழைய குப்பைக்குள் பொன்முட்டையைத் தேடுவதாகத்தானிருக்கும். 

“இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவார், ஏமாற்றுவார்…? என்ற பாடல்தான் இந்த வரிகளை எழுதும்போது நினைவில் வருகிறது. 

ஏனென்றால், ஒரு பக்கம் தீவிரவாதப்படுத்தப்பட்டுள்ள இனவாத அரசின் தீராத ஒடுக்குமுறை. மறுபக்கம் நம்முடைய தலைமைகளே நம்மைப் பலியிடும் அவலம். 

இரண்டு அபாய நெருக்குவாரங்களின் மத்தியில்தான் தமிழ் மக்களுடைய விடுதலை அரசியலை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 

சிந்திப்போம். 

(அடுத்த கட்டுரையில் இனவாத அரசின், பேரினவாத ஒடுக்குமுறையின் புதிய வடிவத்தையும் அதை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றியும்  பார்ப்போம்)

 

 

https://arangamnews.com/?p=10816

  • கருத்துக்கள உறவுகள்

/பேரிழப்புகளையும் பெரும் தியாகங்களையும் செய்த மக்களின் முன்னால், இந்தத் தலைவர்கள் எதையும் செய்ய முடியாதவர்களாக – எதையும் செய்வதற்குத் தயாரில்லாதவர்களாகச் சிறுத்துள்ளனர்/

- சுயநலத்துடன் செயற்படுவதால் சிறுத்துள்ளனர். அதுமட்டுமல்ல இப்பொழுது மக்கள்தான் தவறான முடிவு எடுத்தார்கள் எனப் பாதிக்கப்பட்ட மக்களின் மேல் குற்றம் சாட்டுகிறார்கள். இதுதான் இன்று இந்தக் கட்சிகளின் நிலை. 

இந்தக் கட்டுரைகளை இணைத்தமைக்கு நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.