Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவளும் அவளைப் பின்தொடரும் மிருகமும்

சாய் ராம்

தினமும் நடக்கும் விஷயம் தான்.

தன் அறையிலிருந்து வெளியே வந்தவுடன்

அவளை அந்த மிருகம் பின்தொடரும்.

அரூபமானது! வக்கிரமானது! நிழல் போல!

சூடான மூச்சுக்காற்றினைப் பின்கழுத்தில் உணர்வாள்.

பின்புறத்தில் அதன் பார்வையின் சூடு எரிச்சலூற்றும்!

பழமொன்று கெட்டு போனதைப் போன்ற

அதன் வாடை எங்கும் நிரம்பி இருக்கும்!

நெருக்கடியான ஜனக் கூட்டத்தில் காதில்

எதாவது முணுமுணுத்து கொண்டே இருக்கும்.

ஆட்களற்ற தார் சாலையில் அவள் நடக்கும் போது

உயர்ந்து எழும்பி இருக்கும் கட்டிடங்களின்

ஜன்னல்கள் அதன் கண்களாய் மாறியிருக்கும்.

காலங்கள் கடந்தாலும் அது அன்னியமாகவே இருக்கிறது.

அவளுடைய பதட்டம் குறையவே இல்லை.

 

http://sairams.com/2014/06/அவள்/

  • 3 weeks later...
  • Replies 338
  • Views 118.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

  • கரும்பு
    கரும்பு

    கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

  • துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒண்ணாங்கிளாஸ்

 

வீட்டுப்பாடம் எழுதிமுடித்த 

வீணா குட்டியின் 

நோட்டைச் சரிபார்க்கும் 

வேலையினி அப்பாவுக்கு

 

“கோணல் மாணலாக் கிறுக்கக் கூடாது

பூஜ்ஜியத்துல ஒம்பது கழியாதில்லே 

மின் குஞ்சுன்னு தப்பா எழுதலாமா” 

புரிந்து விட்டதாய்த் தலையசைத்து 

புன்னகைத்த வீணா குட்டியை   

“போதும்டா கண்ணு…போய் விளையாடு” என 

வெளியேற அனுமதித்தார் 

 

அப்பாவை அருகில் அழைத்து

உட்காரச் சொல்லி,ஒரு விளையாட்டை 

இப்படித்தான் தொடங்கினாள் வீணா குட்டி 

“அப்பா…நீ ஒண்ணாங்கிளாஸ் பையனாம் 

ஒனக்கு நான் டீச்சராம்

வீட்டுப்பாடம் எழுதுன நோட்டை 

விருட்டுன்னு எடுத்துட்டு வா பாக்கலாம்!”  :)  :) 

http://komaakoelango.blogspot.in/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு துளி இசையும் ஒரு பாம்புசட்டையும்

சுகிர்தராணி

அவள்

அந்த இசைக்கருவியை

இரு கைகளாலும் பற்றியிருக்கிறாள்

முலைமுதிரா இளம்பெண்ணின்

செழிப்பான கனவைப் போல

பருத்திக்கும் நீண்ட மூங்கிலது

உடலின் துளை களைப் பதுக்கிக்கொண்டு

ஓர் உயிர்பிரியும் இசையை

வழியவிடக் காத்திருக்கிறது

காமப்பழத்தின் விதைகளையும்

கொண்டாடாட்டத்தின் தானியங்களையும்

வலியூறிய இறகுகளையும்

தன்னுள் தளும்பியபடி சரிந்திருக்கின்றது

விரகம் மீதூறும்

மெல்லி முத்தத்தைச் சுவைப்பது போல

உதடுகுவித்து அவளதை இசைக்கிறாள்

காமத்திலும் காயத்திலும் புரண்ட இசை

கோடையின் சுழலாய் மேலும்புகிறது

அவள் இசைக்க இசைக்க

உடலெங்கும் தாழைக்காட்டின் வாசனை

உயிர் எப்போதோ உருகியிருந்தது

அவள் வாசித்து முடிந்ததும்

அவ்வறையில் எஞ்சியிருந்தன

ஒருதுளி இசையும் ஒரு பாம்புச்சட்டையும்

http://www.oodaru.com/?p=7648

  • கருத்துக்கள உறவுகள்

ஞானம்

சித்தார்த்தனைப் போல்

மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு

நடுராத்திரியில்

வீட்டைவிட்டு

ஓடிப்போக முடியாது என்னால்

முதல் காரணம்

மனவியும்,குழந்தையும்

என்மேல்தான்

கால் போட்டுக்கொண்டு தூங்குவார்கள்

அவர்கள் பிடியிலிருந்து

தப்பித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல

அப்படியே தப்பித்தாலும்

எங்கள் தெரு நாய்கள் எமன்கள்

லேசில் விடாது

என்னைப் போன்ற

அப்பாவியைப் பார்த்து

என்னமாய் குரைக்கிறதுகள்

மூன்றாவது

ஆனால்

மிக முக்கியமான காரணம்

ராத்திரியே கிளம்பிவிட்டால்

காலையில்

டாய்லெட் எங்கே போவது

என்பதுதான்.

-தபசி.

http://thooralkavithai.blogspot.ca/search/label/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இல்லாத என் வீடு

- ஆதிலட்சுமி:-

house1_CI.jpg

வெறிச்சோடிக் கிடக்கிறது என்வீடு

நீரின்றி இறந்துகொண்டிருக்கும்

மரங்களின் இலைகளால்

நிறைந்து கிடக்கிறது வாசல்.

கூரை களவாடப்பட்டு....மழைநீரில்

கரைந்துகொண்டிருக்கின்றன சுவர்கள்.

ஆளுயரத்துக்கு புற்றெடுத்துக் கிடக்கிறது

வீட்டின் பின்புறம்..

பழுத்து விழுந்த பழங்களின் விதைகள்

முளைத்து நிற்கின்றன பற்றையாய்....

நாய்கள் வந்து சுதந்திரமாய்

மலங்கழித்துப் போகின்றன தரையில்.

எவரையும் காணாத துயரத்தில்

இரவு முழுவதும்

அழுதுவிட்டு போகிறது நிலவு.

அவ்வப்போது அடிக்கும் காற்றில்

மூக்கைத்துளைக்கிறது

அழுகிய பிணவாடை...

பிள்ளையின் ஆசைக்காய் கட்டிய

மாமரத்து ஊஞ்சல் அறுந்து தொங்குகிறது

தாலிக் கயிறாய்....

வெடித்த பலூனின் சிதறல்களாய்

பிள்ளைகளும் பறந்திட...

உடைந்த போத்தில்களையும்

உருப்படாத பொருட்களையும் களவாக

கொண்டுவந்து கொட்டுகிறது ஊர்ச்சனம்.....

அனுமதிக்கு விண்ணப்பித்து

ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகும்

வெந்த மனத்துடனும்

வளவுக்குள் நுழையமுடியாத் துயரத்துடனும்

வீதியில் நின்று,

என்வீட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109591/language/ta-IN/article.aspx

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Elango+kavithai-Kungumam+-17.06.2013.jpg
 

குங்குமம் - கவிதைக்காரர்கள் வீதியில் எனது கவிதைகள்

 

சினேகம்

ஒரு சரிவு தந்த
சினேகத்தைத் துண்டித்து 
விடைபெற 
வெகுநேரம் எடுத்துக் கொண்டது      
சற்று முன் பழக்கமான  
இலையை விட்டுப் பிரியும் 
கடைசி மழைத் துளி!
 

கோயிலுக்குப் போய் ...

கும்பிட்டுத் திரும்புகையில் 
கடவுள்க்கு  முன் 
அஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழ
ஒரு தடவைதான் 
குழந்தைக்குச் சொன்னோம் 
ஒன்பது தடவை குழந்தையை 
நமஸ்கரித்து எழுந்தார் 
கடவுள்
 

விடியல்

பச்சைப்புல் அடைகாக்கும் 
பனிமுட்டை உடைந்ததும் 
பிறந்தது பகல் 
 

மெளன அஞ்சலி

அடையாளம் தெரியாதவர்
ஆதரவற்ற பெரியவர்
யார் இறந்தாலும்
முதலில் கூடி மொய்க்கின்றன
மெளன அஞ்சலிக்கு வரும் ஈக்கள்
 

குரோடன்ஸ் குடி

மதுப்புட்டியில் வேர்விட்ட கொடி
வளைந்து நெளிந்து வளர்கிறது
குடி போதை  குரோடன்ஸ்
 
இருள் மழை 
எரியும் விளக்குடன் விளையாடி 
ஏமாறும் ஈசல்களின் 
இறகுகள் உதிர்வதில்லை 
இருள் மழையில்  
 

கிரகம்
எழுதி வைத்த கிரகத்தை
அதன் ஓடுபாதையில்
சுழற்றி விட
உதவும் கிரகம் எதுவென
உட்கார்ந்திருக்கும் கிரகங்களில்
ஒன்றைத் தேடிச் சுழற்கிறாள்
வெள்ளிக்கிழை தோறும்
பிள்ளையார் கோயிலில் அக்கா!
                                                                                                                                
-கொ.மா.கோ.இளங்கோ
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
 
இராமேசுவரத்தில் 
எல்லோரும் 
குளித்துக் 
கரையேறுகிறார்கள்! 
நாங்கள் 
குதித்துக் 
கரையேறுகிறோம்! 
பிறந்த குழந்தையின் 
நெற்றியில் 
வைக்கிறாள்... 
பிடி மண்ணாய் 
கொண்டுவந்த 
தாய் மண்! 
கடல் கடந்து 
பார்க்க 
வந்திருக்கின்றன 
சோறு வைத்த 
காக்கைகள்! 
படகில் ஏறினோம் 
படகுகளை 
விற்று! 
 
 
 
 
 
 
 
 
ஆழிப் பேரலைகளும் 
எங்கள் 
பெண்களை 
வீடு புகுந்து 
இழுத்துப் போய் 
கொல்லத்தான் 
செய்தன 
ஆனாலும்! 
இலங்கை 
வானொலியிலிருந்து 
நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து
கேட்கிறீர்கள்! 
நாங்கள் 
மரண அறிவித்தல் 
கேட்கிறோம்! 
முகாமிற்கு 
அருகில் உள்ள 
பள்ளியிலிருந்து 
கேட்கிறது... 
‘யாதும் ஊரே! 
யாவரும் கேளிர்!’ 
 
கவிஞர் வாலி
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரிநிர்வாணம்

சித்தாந்தன்

10253984_644790782237518_911230397256289

கனவை உடுத்தபடி

இரவிலசையும் நதி

தன் பூர்வீகமான சதுக்கத்தில் தேங்கியபின்

நான் வெளியேறிவிடுகிறேன்.

துக்கங்களிலிருந்து தூக்கங்களுக்கும்

தூக்கங்களிலிருந்து துக்கங்களுக்கும்

தூங்காமையின் அதிரூபமானஅசைவுகள்

உறையும் சாஸ்திரவெளியில்

புணர்ச்சியின் உச்சத்தை உணராதவளின் வலியுடன்

திரும்புகிறாள்

நூறாவதுமுறையும் கைவிடப்பட்டவள்.

காமத்தின் மெல்லிசை மணக்கும் காற்றில்

கைகளாய் அசையும் இலைகளைமென்றபடி

வியர்வைப் பொருக்குலர்ந்த ஆடைகளை

மோகித்திருப்பவன்

இப்போதும் மறுதலிக்கிறான்

புணர்ச்சியின் முனகல்களில்லாத

அத்தனை பொழுதுகளையும்

காமத்துக்கும் வசீகரத்துக்குமிடையில்

நீளும் கோடுகளில்

புத்தனின் ஞானஉணர்ச்சியும்

யசோதரையின் காமஅணுக்கமும் முயங்கும்

கணத்திலொரு பிலாக்கணம்

தீ பற்றி எரிவதைக் கண்டவர்கள்

தங்களின் நிர்வாணங்களை

இல்லாத ஆடைகளால் மூடுகிறார்கள்

கூடுங் கூட்டத்தில்

காமம் மறைத்த சம்பாசணைகள் யாவும்

எரிநட்சத்திரங்களானதை

பின்னொருநாள் கண்டபோது

யசோதரையின் நிர்வாணத்தில்

புத்தர் பரிநிர்வாணமடைந்திருந்தார்.

oOo

http://tarunam.blogspot.co.uk/2014/08/kavithaikal.html

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
இரட்டிப்பு 
 
10685517_752484328132975_825989524819207
 
அந்தப் பூக்கள் இரண்டும் 
நறுமணத்தால் வேறுபட்டவை என்று 
யார் சொன்னது ??
அவை இரண்டும் நிறத்தால் ஒன்றுபட்டவை !!
அந்தப் பூக்கள் இரண்டும்-
மாலையில் வாடிவிடும் என்று
யார் சொன்னது ??
அவை இரண்டும் மாலையாகி. 
இரு மனங்களை இணைத்துவைப்பவை !!!
அந்தப் பூக்கள் இரண்டும்-
பேச முடியாத ஊமைகள் என்று
யார் சொன்னது !!
ஒவ்வொரு மந்திரம் மந்திரமாக..ஆண்டவனிடத்தில் 
அடியேனுக்காக மொழிபெயர்ப்பவை !!
அந்தப் பூக்கள் இரண்டும்--
ஆதவன் வருகை கண்டு -மலர்வதாக
யார் சொன்னது ?
என்னவளின் கூந்தலை..ஏழு உலகம் பார்ப்பதற்காய்..
அவள் விழியின் ஒளிபட்டுக் 
காலையிலே மலர்வது..
இன்று எனக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியே !!
******************************************
**நன்றியுடன் வேலணையூர் லிங்கா **
  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானொரு பெண்

ஸ்ரீபூர்ணா

naanoru-600x330.jpg

அப்படியே இருக்கட்டும்

நானொரு பெண்.

நான் உறுதியாக இருக்கிறேன்.

அதென்னை ஆணவக்காரி ஆக்குமென்றால், அப்படியே இருக்கட்டும்.

நான் எல்லாவற்றையும் எனக்கு பிடித்தபடி செய்கிறேன்.

அதென்னை பிடிவாதக்காரி ஆக்குமென்றால், அப்படியே இருக்கட்டும்.

நான் மனதில் பட்டதை பேசுகிறென்.

அதென்னை கலகக்காரி ஆக்குமென்றால், அப்படியே இருக்கட்டும்.

நான் யாரோடும் தேடிப் பழகி நட்பு பாராட்டுவதில்லை.

அதென்னை முசுடாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும்.

நான் மற்றவர்களிடமிருந்து என்னை பூட்டி வைத்துக் கொள்கிறேன்.

அதென்னை முரடாக்குமென்றாள், அப்படியே இருக்கட்டும்.

நான் தோல் தெரியும்படி புடவையும், ஷார்ட்ஸும் அணிகிறேன்,

அதென்னை வெட்கமற்றவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும்.

நான் பகட்டான தொண்டுப் பணிகளில் ஈடுபடுவதில்லை.

அதென்னை வெறுப்பு நிறைந்தவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும்.

தன்-பால் உறவில் எதுவும் தவறாகவோ இயற்கைக்கு மாற்றாகவோ இருப்பதாக எனக்குத் -தோன்றவில்லை

அதென்னை லெஸ்பியனாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும்.

நான் மிக நேசிக்கும் சில பெண்களுண்டு.

அதென்னை இருபால் ஈர்ப்பு கொண்டவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

அதென்னை கட்டுப்பாடற்றவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும்.

நான் உடலுறவை ஒரு தேவையாக பார்க்கிறேன்.

அதென்னை வேசியாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும்.

நான் எந்தக் காதலையும் எப்போதைக்குமானதென பார்ப்பதில்லை.

அதென்னை நம்பிக்கையற்றவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும்.

நான் திருமணத்தை அத்தியாவசியத் தேவையாக பார்க்கவில்லை.

அதென்னை சோர்வடைந்த மனமுடையவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும்.

நான் குழந்தைகள் மற்றவர்களுடையதாக இருக்கும் வரையே ரசிக்கிறேன்.

அதென்னை தாயாக தகுதியற்றவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும்.

நான் உறுதியான நம்பிக்கைகள் கொண்டிருக்கிறேன்.

அதென்னை கொடூரமானவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும்.

ஆம்! நான்

மனதளவு உடலையும் நேசிக்கும்,

புத்தகங்களளவு உடைகளையும் நேசிக்கும்,

ஆளுமையளவு பால் விருப்பங்களையும் நேசிக்கும்.

ஒரு பெண்

ஆம்! நானொரு பெண்,

அப்படியே இருக்கட்டும்.

http://www.eanil.com/?p=555

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதி கவனித்துக் கொண்டிருக்கிறான்

யமுனா ராஜேந்திரன்

gerry-judah.jpg

இரவு எட்டுமணி ஒரு நிமிடம் கழித்து

மதுவிடுதியில் அந்த வெடிகுண்டு வெடிக்கப்போகிறது

இப்போது 16 நிமிடங்கள் கடந்துவிட்டது

இன்னும் சிலருக்கு நுழைய நேரமிருக்கிறது

சிலர் வெளியேறலாம்

பயங்கரவாதி

ஏற்கனவே அந்தப்பக்கம் அகன்றுவிட்டான்

தூரம் எல்லாவிதமான சேதங்களிலிருந்தும்

அவனைக் காத்துவிடும்

சரி, அங்கே இடம் பெறும் காட்சிகள்

மஞ்சள் மேலங்கியணிந்த பெண்

அவள் உள்ளே நுழைகிறாள்

கறுப்புக் கண்ணாடி அணிந்த ஆண்

அவன் வெளியேறிவிட்டான்

ஜீன்ஸ் அணிந்த பையன்கள்

அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

பதினாறு நிமிடம் நான்கு நொடிகள் போயிற்று

சின்னஞ்சிறு பையன் அதிர்ஷ்டசாலி

அவன் ஸ்கூட்டரில் புறப்பட்டுவிட்டான்

உயரமானவன் அவன் உள்ளே போகிறான்

பதினோழு நிமிடம் நாற்பது நொடிகள்

ஒரு சிறுமி

தலையில் பச்சை நிற ரிப்பனுடன் விடுதி அருகில்

நடந்து போகிறாள்

பஸ் அவளை மறைத்துக்கொண்டுவிட்டது

பதினெட்டு நிமிடம் கடந்துவிட்டது

அந்தச் சிறுமியை காணோம்

உள்ளே போகுமளவு அவள் முட்டாளா என்ன

அல்லது

அப்படி அவள் போகவில்லையா

உடல்களை வெளியே கொண்டுவரும்போது நாம் பார்க்கலாம்

பத்தொன்பது நிமிடங்கள் கடந்துவிட்டது

யாரும் உள்ளே போகக் காணோம்

அதற்கு மாறாக ஒரு குண்டு ஆண் வெளியேறுகிறான்

அவன் தனது பாக்கெட்டை துழாவுவதுபோல்

தெரிகிறது, அப்புறம்

எட்டுக்கு ஒரு நிமிடத்துக்கு 10 நொடிகள் இருக்கும்போது

பாழாய்ப்போன கையுறைகளைத் தேடி அவன்

உள்ளே போகிறான்

இப்போது எட்டு மணி ஒரு நிமிடம்

நேரம், அது எப்படித்தான் இழுபடுகிறது

நிச்சயம் – இப்போது ஆகிவிட்டது நேரம்

இல்லை. சரியாக ஆகவில்லை

ஆமாம். இப்போது ஆகிவிட்டது

வெடிகுண்டு, அது வெடிக்கிறது

http://yamunarajendran.com/?p=1637

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் புதுச் சந்தை.

ஒட்டிய எண்சாண் வயிறு

நெஞ்சறை எலும்பின் தெரிவு

கை விரலுள் சுருட்டு

முகம் சொல்லும் மிரட்டு

உலகை மறந்த மயக்கம்

உறவைத் துறந்த கிறக்கம்

யார் பெற்ற மகனோ?

அழகிய தமிழ்மகன் இவனோ?

1535455_915483975128847_7505463805287878
  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இக் கணத்தின் யதார்த்தம்

ஷஸிகா அமாலி முணசிங்க

சேலைத் தலைப்பை இழுத்துக் கீழே தள்ளி விட்டு

பருத்த ஆண்கள் பேரூந்தில் ஏறுகையில்

தயக்கத்தோடு படியில் தொற்றிக் கொள்கிறேன்

பேருந்தின் கர்ப்பத்துக்குள்

மெதுமெதுவாகத் தள்ளப்படுகிறேன்

வியர்வையில் தெப்பமாகி

இடைவெளிகளிடையே நகர்த்தப்படுகிறேன்

விழுந்திடாதிருக்க முயற்சிக்கிறேன்

சரிகிறேன் எழுகிறேன்

சூழவும் எதுவும் தென்படாத அதியுச்ச தள்ளுகைகளிடையே

நான் சிந்திக்கிறேன்

‘யார் நான்

கவிஞரா

மிக அழகிய இளம்பெண்ணா

அவ்வாறும் இல்லையெனில்

உயர் பதவியேதும் வகிப்பவளா

காதலியா தாயா அன்பான மனைவியொருத்தியா

இதில் எது பொய்யானது

தீயாயெரியும் பேருந்தொன்றுக்குள் சிறைப்பட்டு

களைப்போடு துயருறும் விலங்கொன்றுதான் நானன்றி

இக் கணத்தில் வேறெவர்?’

யதார்த்தம் என்பது என்ன

பேருந்திலிருந்து இறங்கி

வீட்டில் காலடி வைக்கும் கணம்

குறித்துக் கனவு காண வேண்டுமா

குளிர்ந்த நீரில் உடல் கழுவி

தேனீரைச் சுவைக்கும் விதம் பற்றிச் சிந்திக்க வேண்டுமா

எனில் யதார்த்தம் எனப்படுவது இக் கணம்தான்

பெரும் காரிருளில் மூழ்கி

இருப்பின் துயரத்தை அனுபவிக்கும் விலங்கொன்றாக மட்டும்

என்னை நானே சந்திக்கும் இக் கணம்

‘நான்’ வீழ்ந்துடைந்து அழிந்துபோகும் இக் கணம்

கவிஞனான போதும்

இடரை அனுபவிப்பது இப் பேரூந்தினுள்ளேதான்

வைத்தியரோ வேறெவராயினுமொருவரோ

பெண்ணோ ஆணோ

தெள்ளத் தெளிவாகத் துயரனுபவிக்கும்

விலங்கொன்றன்றி வேறெவர்

இது இக் கணத்தின் யதார்த்தம்

இக் கணம் துயரத்திலிருந்து தப்பிக்கச் செய்யும்

கதவைக் காணக் கூடிய கணம்

பேரூந்திலிருந்து இறங்கிச் செல்ல முன்பு

வெளிச்சம் என்னை நெருங்கட்டும்

இவ் வாழ்வைப் பிணைத்திருக்கும் கயிறு தளர்ந்து போகட்டும்.

http://www.kalachuvadu.com/issue-183/page52.asp
  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துளி -01

தமிழினி

காலநதிக்கரையில்

எஞ்சிக்கிடக்கிறது

இத்துப்போனவொரு வாழ்க்கை.

இடைவிடாது கொட்டிக்கொண்டிருக்கும்

விசத்தேள்களாக நினைவுகள்

குடைவதால் நெஞ்சினில்

நீங்காத மரணவலி.

"சாகத்தானே போனதுகள்.

சாகாமல் ஏன் வந்ததுகள்."

குறுக்குக்கேள்விகளால்

கூண்டுக்குள்ளேயே

பிணமாகிக்கனக்கிறது

போராடப்போன மனம்.

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2683:-86-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீட்பு

உமா(ஜேர்மனி)

நெஞ்சுடைந்து வார்த்தைகள் தொலைந்து நின்றோம்

கவிதைகளும் கனவுகளும் தம் அர்த்தத்தை இழக்க

அழகாய் புலர்ந்த பொழுதுகளின் குரூர கணங்களில்

நாம் மரணித்தோம்.

தெய்வமென்றும் மலரென்றும் பதுமையென்றும்

பெருங்கதை பேசிய சம்பிரதாய வேலிகளிற்குள்

எங்கள் உடல்களும் உணர்வுகளும் சிதைக்கப்பட்டன.

ஒரு நான்கு வயதுக்குழந்தை

ஒரு பள்ளிச்சிறுமி

ஒரு தாய்

ஒரு கன்னியாஸ்திரி

ஓர் அறுபத்தைந்து வயது மாது

இதில் நாங்கள் யாராகவிருந்தாலும்…..

ஆதிக்கச்சுவடுகளைத் தொடர்ந்த கற்கையின்

ஆண்மையின்குறி

கடித்துத் துப்ப

இரு முலைகளும் ஒரு யோனியும்

கொண்ட சடங்களானோம்.

கையை விரித்து

சுதந்திரமாய் காற்றைப் பிடித்து விளையாடி

எமது இருப்பை உணர்தல் என்பதும்

இருளில் சங்கமித்தல்

பிடித்த ஆடைகளை அணிதல்

கோபத்தை வெளிக்காட்டல்

குற்றப்பத்திரிகையின் அங்கமாய்

மரணத்தாலும் அத்துமீறல்களாலும்

தண்டிக்கப்பட்டன.

காலகாலமாய்

குருதியும் நிணமும் தோய்ந்து

சிதைந்த உடலமாய்

நாற்றம் பிடித்த

விசாலமான சுவர்களிற்குப் பின்னும்

பாழடைந்த கிணறுகளுக்குள்ளும்

மௌனித்திருந்த எம் ஆன்மாவை

மீட்டு வருவோம்

சுயத்துடன்

பெண்ணிற்கான

ஒரு வெளியைச் சிருஷ்டிப்பதற்காக.

https://thoomai.wordpress.com/2015/05/27/மீட்பு/

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 21 தந்தையர் தினக்கவிதை: அப்பா!

அ.ஈழம் சேகுவேரா (முல்லைத்தீவு)

ஜூன் 21 தந்தையர் தினச்சிறப்புக்கவிதை:  அப்பா!

கட்டபொம்மனும்
கர்ண மகாராசனும்
எல்லாமே எனக்கு
என்னுடைய அப்பாதான்.
எனது எதிர்காலத்துக்கு
இன்றும்
சொல்லத்தெரிந்தது
“அப்பா போல வரணும்.”
நான் அறிந்த
கணிதமும் இலக்கியமும்
அப்பாதான்.

அப்பாவின்
கடின உழைப்புக்கு
அவரது தலைப்பாகைதான்
சாட்சியம்.
அதில் உப்பு பூத்திருக்கும்
அழகைக்காணும் போதெல்லாம்
எனக்குள்தான்
எத்துண பூரிப்பு.
எத்துண மாற்றம்.
அம்மாவின் அடுக்களை
பண்டத்தை விடவும்
எனது நாசிக்கு அதிகம்
பழக்கப்பட்டது
அப்பாவின் வியர்வை
நாற்றம்தான்.
முகம் ஒற்றிக்கொள்ளும்
தோள் துப்பட்டாவை
தலைப்பாகையாக
உடுத்திக்கொள்ளும் போதுதான்
இருக்கிறதே மிடுக்கு,
ஏழு தலைமுறைக்கான
நிமிர்வு எனக்கு.

ஆனாலும்
வாழைக்குணம் அப்பாவுக்கு.
குலை போட்டும்
குனிவாய் வாழைகள்.
அப்பாவும் குனிகிறார்
நான் கனிவதற்காக.
சிறு வயதில்
அந்தக்குனிவில்
சவாரி விட்டவன் நான்.
ஆனால் எனது முதுகில்
யாரும் சவாரி
விட்டுவிடக்கூடாது
என்பதற்காகத்தானே
அப்பா இத்தனைக்கும்
கஸ்டப்படுகின்றார்.

பள்ளி முடிந்தும்
வீடு திரும்பாத
என்னைத்தேடி
அம்மா தெரு ஏறுவா.
நான் வயல் இறங்குவேன்.
எனது கால் கழுவி
வரப்பிருத்தி விடும் அப்பா
எனது சட்டையில்
அழுக்குச்சேராதிருக்க
சேறு குளிக்கிறார்
நெடுநாளும்.

அப்பா சேறு மிதித்திட்டு
வரப்புகளோடு
நடந்து வருவார்.
அதை படம்பிடித்துப் பெரிதாய்ச்
சுவரில மாட்டிட் வேண்டுமென்று
எனக்குள் நெடுநாளாய்
நிரம்பவே ஆசை.
நிறைவேறவே இல்ல.
கடதாசியை எடுத்து வரைந்தும்
திருப்தி காணாத நான்
கண்ணாடி முன்னே
அதிக நேரத்தை
செலவழித்திருப்பேன்
வேடமிட்டு அப்பாபோல
மீசை வைச்சு
அழித்து அழிச்சு
நேர்த்தி வரும் வரைக்கும்.
ஆனால் அப்பாபோல
சுருட்டிழுப்பு ஒத்திகை பார்த்து
அவர் ஒத்தடம் கொடுத்த வடுக்கள்
இப்பொழுதும்
எனது நடத்தையை
ஒழுங்காற்றிக்கொண்டிருக்கும்
அப்பாவின் இன்னுமொரு முகம்.

அப்பாவுக்கு
மூத்த பிள்ளை நான்தான்
ஆனாலும் தலைப்பிள்ளை
வயல்தான்.
அம்மாவை விடவும்
அவருக்கு நல்ல துணை
மயிலையும் சிவலையும்.
அப்பா அதிகம் நேசிப்பது
அவைகளைத்தான்.
அவரது
சொத்துச்சுகம் எல்லாமே
அந்த திண்ணை வீடும்
கொல்லைப்புறமும் தான்.
அப்பா கைகளை
தலையணையாகக்கொண்டு
(இ)ராஜ தூக்கம் போடும்
அந்த மாமர நிழலுக்கு
மட்டும்தான் அப்பாவின்
கனவுகளின் கனதி புரியும்.
அந்த தென்னைகளுக்குத்தான்
எத்தனை வயசு.
அதன் கீழிருந்து அப்பா
அண்ணாந்து விடும்
பெரு மூச்சில்தான்
அவற்றின் மூப்பை
அளவிட முடியும்.

அப்பாவுக்கு ஆயுசு கெட்டி.
பழஞ்சோற்றில் பசி போக்குவதும்
மோரில தாகம் தணிக்கிறதும்தான்
அவரது உடல் தெம்பு.
ஆங்கே வீழ்ந்து கிடக்கும் மரங்களை
குற்றிகளாக வீடு சேர்க்கும்போது
நான்
அப்பாவின் உடல்
திரட்சிகளை
கணக்கெடுத்தவாறல்லவா
பின் தொடர்ந்திருக்கிறேன்.

எனக்கு
“புதியதொரு உலகை”
காட்டியது அப்பாதான்.
வயலில இறங்கி
நடக்க ஆரம்பிச்சிட்டா
அவர் பின்னே
எனது விடுப்பு கேள்விகள் போகும்.
நாட்டு நடப்புகள் அத்தினையும்
அப்பாவுக்கு அத்துப்படி.
ஆர்வமிகுதியால்
விடுமுறை நாள்களில் கூட
கட்டுச்சோற்றோடு வயலுக்கு
ஓ(டி)டுவன்.
அப்பா வயலில நிற்கிற
ஒவ்வொரு நிமிசமும் கூடக்கூட
வயல் காட்சி மீது பிடிப்பும்
அதிகரிச்சுக்கொண்டே போகும்.
பொழுது சாய்கிற
நாழிகை மீதுதான்
கோபம் அதிகமாக வரும்.
பலம் கொண்டவரை
நிலத்தை உதைப்பன்
வலிக்கு அப்பா மருந்திடுவார்.

(இ)ராத்திரி பூராவும்
எனது சுகமான தூக்கம்
அப்பாவின் நெஞ்சில்.
அவரது நெஞ்சு மயிர் பிடித்து
பழகிப்போன
இந்தக்கைகளுக்குள்
எழுதுகருவியை திணித்தது
என்னவோ அப்பாதான்.
ஆனாலும் அந்த
மண்வெட்டி பிடித்த
கைகளைப்பற்றி
எழுதும்போதுதானே
எந்த எழுதுகருவி
பிடிக்கும் கைக்கும்
பெருமை சேர்(க்)கிறது.

 

 

 http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2766:-21-&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பதிவு.  இதை நீங்களோ நானோ எழுதினால், பத்திரிக்கையில் போடமாட்டார்கள்.  ஊடக தர்மம்?

தமிழரசிக்குட்டி
ஓவியமொன்று வரைந்திருந்தாள்.

அதில்
பெருமழை பெய்துகொண்டிருந்தது
சூரியன் படுபிரகாசமாய்
ஒளிர்ந்து கொண்டிருந்தது
அரைநிலா ஒன்றும் இருந்தது
நட்சத்திரங்களும் கூட
தூவப்பட்டிருந்தன
கொஞ்ச மேகங்களும்
அதனூடாக
சில பறவைகளும் பறந்திருந்தன.

"எல்லாமே இருக்கிறது
இரவா,பகலா
கோடையா,மழையா" என்றேன்.
"வானம்" என்றாள்..!

--- கு.விநாயகமூர்த்தி

https://www.facebook.com/vinayaga.moorthy.5070?hc_location=ufi

நல்ல பதிவு.  இதை நீங்களோ நானோ எழுதினால், பத்திரிக்கையில் போடமாட்டார்கள்.  ஊடக தர்மம்?

நமது படைப்பும் முயற்சியும் காத்திரமாக இருக்குமானால் நிற்சயம்  பிரசுரம் ஆகும் என்றே நினைக்கிறேன் சேயோன் அண்ணா

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீடென்பது… ஞாபகங்கள்

தர்மினி

 
மாங்கிளைகள் முறிய
தென்னங்கன்றுகள் புகைய
வீடும் எரிந்தடங்க
வேலிக் கருக்குகள் கீறக்குருதிக்கால்களோடு
ஊர் விட்டுத் தப்பிய நினைவு.
.
அலைச்சலின் களைப்போடு சில மாதங்கள் கடந்து
ஊர் மீண்டதாய் நினைவு.
.
மண் குழைத்து நிலம் பூசி
பனையோலைக் குடிலொன்று இணக்கி
செத்தைப் பல்லிகள்
சாரைப்பாம்புகள்
இரையும்வண்டுகளோடு  
மழை இரவில் மரமொன்று பாறிச் சரிய
அணிலரித்த குரும்பை நிலம் அதிர்த்த
கூதலுக்குக் கணகணப்பாய்
ஓலைப்பாயில் உறங்கி ,விடிந்தெழும்பி
தாவாரத்தில் ஓடும் வெள்ளம்
தாண்டக் கடுதாசிக் கப்பல் விட்டதாக நினைவு.
 .
உறக்கமில்லா ராப்பொழுதாய் ஒரு நாள்.
மார்கழி மாசச் செக்கலில் வீடு எரிந்தடங்க
மீண்டும்….. வீடிழந்த நினைவு .
.
கிடுகுகள் இழைத்து
பனையோலைகள் மிதித்து
சாம்பல்மேடு தவிர்த்து
கிணறு,கடப்பு வடக்கு,கிழக்குத்திசை பார்த்து                              
வாசல்செதுக்கிக் குடிலொன்றெழுப்பி
 ‘வீடெனில் …..இனிக் கல்லால் மட்டுமே’
குடியெழுப்பும் மனிசரை எரிக்கும் கோபத்தோடு அம்மா சொன்னதாக ஞாபகம்.
 .
அம்பலவி துளிர்த்து
செவ்விளநீர் மரம்  குலைகள் கனக்க
நெல்லி முற்றி  நிலம் பரவ
வீடு வெளிச்சமான ஞாபகம்.
.
குசினிக் கரை வாடாமல்லி நிறம் வெளுத்து உதிர முன்னர்
ஆமி வரப்போகுதென்று  கதைவர
 வளவுமூலையில் பங்கர் வெட்டிய நினைவு.
.
வடக்குத் தெற்காகப் பெரும்பச்சை அலையாக எழும்பி
வான் முழக்கமிட்டு ஊருக்குள் ஆமி வந்தது.
.
கரி கொண்ட காணி!
சாம்பற் பறக்கக் கிடந்ததைக் கடைசியாகப் பார்த்தது நினைவாயுண்டு.
.
‘கோடை விடுமுறைக்கு வீடு போகவில்லையா? ‘                        
நட்புகள் விசாரணை.
அங்கிருக்கும்  ஊரில் எங்கிருக்கிறதென் வீடு?
 
 
 
 
  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை

லீனா மணிமேகலை

அவனை எழுதிவிட முடியாமல் தோற்கிறேன்
ஒரு நாக்கிலோ, ஒரு வார்த்தையிலோ
ஒரு புகைப்பட சட்டத்திற்குள்ளோ
அடங்கிவிட முடியாமல் பிதுங்குகிறது
அவன் என்ற சலனம்

 

எரிவதற்கு எதையும் விட்டுவிடாமல் அணைத்துவிடும்
அவனிடமிருந்து எதையாவது ஒளிப்பதற்கு
திணறுகிறது மொழி

 

வலிக்கிறது ஆனால் வலிக்கவில்லை
இடையில் வரும் வரிகளில் அவனை
சேர்க்க முடியவில்லை

 

தழும்பாக மறுக்கும் காயத்தில்
வழிந்துக் கொண்டிருக்கும் ரத்தமும் அவன்
ஊறிக் கொண்டிருக்கும் ரத்தமும் அவன்
இடையில் எந்த கவிதையையும் நிகழ்த்த முடியவில்லை

 

களிப்பின் எந்த எழுத்தில் அவன் தரிசனம் தருகிறான்
என்பதை கூட்டி கழித்துப் பார்ப்பதில் இருக்கும்
கிளர்ச்சி
எழுதுவதில் தேறவில்லை

 

விசித்திரமான மிதவையாக
என்னை இழுத்துச் சென்றுக்கொண்டிருக்கும் அவன்
இதுவரை காட்டியதெல்லாம்
அறிந்திராத திணைகள்
புழங்காத திசைகள்

 

புனைவாக மறுக்கும் அவனை அழுத்தமாக முத்தமிடுகிறேன்
அதன் ஈரம் ஆவியாகி மேகமாகி மழையாகி நதியாகி
கடலாகி
நிறைக்கிறது என் வெற்றிடங்களை
புன்னகைக்கிறேன்
அந்தக் கணம் நான் என்கிறான்
மேலும் புன்னகைக்கிறேன்
அப்படியாவது அவன் வடிவம் பெறட்டும்
 
  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொலை இயந்திரம்

– நரோபா

 

போட்டிருக்கும் சட்டையை முதலில் கழட்ட வேண்டும்
கசங்கி இருந்தாலும் பரவாயில்லை,
ஈரத்தில் ஒட்டியிருந்தாலும் கூட,
காயும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
கிழித்தாவது எறியத்தான் வேண்டும்.
ஆனால் வேறு சட்டை வேண்டுமே என கேட்பது காதில் விழுகிறது
அதற்குதான் சித்தாந்த பயிற்சி இருக்கிறதே.
தனக்கான சட்டையை தானே நெய்து கொள்பவன் மனிதன்.
முடியவில்லை என்றாலும் பாதகமில்லை.
எப்படியும் வேறொருவன் கழட்டிப் போட்டது கிடக்கும்.
கிடைக்கவில்லை என்றால்தான் என்ன?
சட்டை இருப்பது போல்
ஒரு பாவனை செய்துகொள்ளக்கூட
திராணியற்றவனா என்ன?
காலரை இழுத்துவிட்டுக் கொள்ளவும்
பித்தான்களைக் கழட்டி மாட்டவும்
வயிற்றை எக்கி உள்ளிழுத்தால்
நம்பகத்தன்மை கூடும்.
விளையாட்டாகவே செய்யலாம்
கடமையுணர்ச்சி கொஞ்சம் இருந்தால் இன்னும் உசிதம்
ஆகச்சிறந்த கொலை இயந்திரம்
இப்படித்தான் தயாராகிறது.

 

http://padhaakai.com/2015/11/15/killing-machine/

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 பேய்களும் பூசாரிகளும்

சூரியகலா கருணாமூர்த்தி (மலேசியா)

 

பேய்களுடன் ஆன
எனது தொடர்பு

பூசாரிகளுக்குப் பிடிப்பதில்லை.

எனக்குப் பேய்கள் …

முருங்கை மரத்தில் தொங்க
கற்றுக்கொடுத்தன

நடு நிசி இரவில்
இஷ்டம் போல் சுற்றித்திரிய
கற்றுக்கொடுத்தன

அயல் உடலில்
அன்னியம் இல்லாது
ஊடுருவ கற்றுக்கொடுத்தன

விரட்டு விரட்டு என
எனக்கு வேண்டாதவரை
விரட்ட கற்றுக்கொடுத்தன

எனக்கே எனக்காக
பேய்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த
வித்தைகளை

பூசாரிகளுக்குப்
பிடிப்பதில்லை.

எனக்கும் பேய்களுக்குமான
தொடர்பு
மிக மிக வேகமாக
வளர

நானும் பேயாகி இருந்த நேரம் …

பூசாரிகள்
மாறிப்போய் இருந்தனர்.

அவர்கள்
முருங்கை மரம் ஏர
பழகிக்கொண்டிருந்தனர்.

 

http://www.oodaru.com/?p=9597

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடல் மற்றும் நீ

 

Barack Obama

 

- ஆதி பார்த்தீபன்

நான் கடலை விழுங்கி விட்டேன்
வயிற்றினுள் மீன்கள் அழுதன 
குற்றவுணர்ச்சி தாளாது பிறகொரு
துளியாகி சிப்பியொன்றுக்குள் வற்றியிருந்தேன்
அரிய முத்தென எடுத்து
உன் மாலையில் கோர்த்தாய்
வியர்வை பட்டுக்கரைந்தொழுகிய என்னை
உப்பென மறுபடி நிலத்தில் எறிந்தாய்
மீண்டும் கடலாகிய என்னுள்
மீன்களின் இனப்பெருக்கம்
புணர்வொலியில் விரக்தியுற்று
மீண்டும் என்னை
ஒரு பக்கத்திலிருந்து மறுபக்க நானே
விழுங்கி கொண்டிருக்கிறேன்
ஒரு கடலே கடலை விழுங்கிக்கொண்டிருக்கிறது
வித்தியாசமான விளையாட்டென அதை
நீ கற்றுக்கொண்டாய்
என்னில் மீளவும் கால் நனைத்து
திரும்பிய உன்னை ஏதோ வேகத்தில் அள்ளியணைக்க வருகிறேன்
கடல் குரோதம் என்கிறாய்
மீன்கள் என்னில் முள்ளாய் கிழிக்கின்றன ரத்தமொழுக
உன்னிடம் திரும்புகிறேன்
வாளியில் அள்ளி எடுத்து – நீ கடலுக்கா மீன்களுக்கா சொந்தமென கேட்டவுன்னை பார்த்து சிரித்து
கைநழுவி விழுகிறேன் – நானே
கடலும் மீனும்
அதன் ஜீவனுமாய் இருக்கின்றேன்
.

http://www.nanilam.com/?p=8312

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாம்பல் பறவை
குட்டி ரேவதி


ஒரு சாம்பல் பறவையைப்போல்
அம்மரத்தின் கீழ்
அதன் நிழல் அமர்ந்திருந்தது

வீதியின் நீண்ட மெளனத்தையே
வாரிச் சுருட்டிக்கொள்வதைப்போல்
பெருக்கிக்கொண்டே வந்தாள்
துப்புரவுப்பெண்

இங்குதான்
அவன் என்னைக் காத்திருக்கச் சொன்னான்
என் காதலையும்

அந்தப் பெண்
மெளனத்தைச் சுமந்துகொண்டு
என்னைத் திரும்பிப் பார்த்தவாறே
எப்பொழுதோ சென்றுவிட்டாள்

கண்ணீராய் வழியத் தொடங்கிவிட்டது
இருள். பூப்பெய்தத் தயாரான
உடலின் பரவசத்துடனும் மிரட்சியுடனும்
காத்திருக்கிறேன்

இதோ... தூரத்தில்
மழையை இறக்கப்போகும் கனமேகம்போல்
வந்துகொண்டிருக்கிறான்
இன்பம் தாளாமல்
என் உடலில்
செந்நட்சத்திரங்கள் துளிர்க்கத் தொடங்கிவிட்டன

மரமோ
ஒரு சாம்பல்பறவையைப்போல் அமர்ந்திருக்கிறது
எச்சலனமுன்றி 

 


http://keetru.com/literature/poems/kuttyrevathi_10.php

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.