கடற்கரும்புலி மேஜர் புகழரசன்
கடலன்னையின் புதல்வர்கள் புவீந்திரன் / புகழரசன்.
புவீந்திரன்! அவன் ஒரு குழந்தை. வயது தான் பதினெட்டேயன்றி மனதால் அவன் பாலகன்.
மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது. சமூக அமைப்பின் ஏற்றத்தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ – எவரோ – அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும் தான்.
சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான். இரக்க சிந்தனையும் – உதவும் குணமும் அவனது உயிரோடு ஒட்டிப்போயிருந்த இயல்புகள்.
பக்கத்து வீட்டு அம்மா வந்து “தம்பி, ஒருக்கா அந்தக் கடைக்குப் போட்டு வாறியா அப்பன்?” என்றால், சொந்த வீட்டு வேலையைப் பாதியிலேயே போட்டுவிட்டு எழுந்து போய் விடுகின்றவன் அவன்.
ஊரில் எவருடைய வீட்டிலாவது, ஒரு நல்லது கெட்டது என்றால், அங்கு அந்தச் சிறுவன் ஏதாவது எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருப்பன்.
சப்பாத்து கட்டாயம் அணிய வேண்டிய அவனது பள்ளக்கூடத்தில் – ஏழை நண்பனொருவன் “அம்மா காசுக்கு கஸ்டப்படுறா….” ஏன்று மனவேதனைப்பட்ட போது, அப்பா ஆசையாக வாங்கித் தந்த சப்பாத்தை கழற்றிக் கொடுத்துவிட்டு, வெறுங்காலோடு வீட்டிற்கு வந்தவன் அவன்.
குடும்பத்தின் ஏழ்மை நிலையைச் சொல்லி, “காலையில் கூடச் சாப்பிடேல மச்சான்….” என்று விம்மிய உற்ற நண்பனிடம் – அவன் அடியோடு மறுக்க மறுக்க – கையில் கிடந்த தங்கச் சங்கிலியையே கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தவன் தான் புவீந்திரன்.
ஒரு மென்மையான உள்ளம் அவனுடையது. அவன் கோபமடைந்ததை நாங்கள் கண்டதில்லை. அப்படித்தான், சுய கட்டுப்பாட்டை மீறி கோபம் வந்தாலும் அது விநாடிக் கணக்கில் கூட நீடித்ததில்லை. அவனுடைய உதடுகள் கெட்ட வார்த்தைகளை உச்சரித்ததை ஒரு நாள்கூட நாங்கள் கேட்டதில்லை.
வீட்டில் அக்கா தம்பியோடு என்றாலும் சரி, பிற்காலத்தில் – இயக்க நண்பர்களோடு என்றாலும் சரி, சாதாரண சிறு சச்சரவு வந்தால் கூட அவன் தன்னைத்தானே நொந்து கொள்வானே தவிர, மற்றவர்களை அல்ல. சரி எது பிழை எது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும்; ஆனால்இ நியாயம் கதைக்க மாட்டான். போய் ஒரு மூலையில் இருந்து விக்கி விக்கி அழுதுகொண்டிருப்பான்.
அது பாசத்தால் பிணைந்திருந்த ஒரு குடும்பம். அக்காவிலும் தம்பியிலும் அன்பு நிறைந்த சகோதரனாக அவன் இருந்தான். அப்பாவுக்கு எல்லாமே குழந்தைகள் தான். குழந்தைகளுக்கு எல்லாமே அம்மாதான்.
அவனுக்குப் 12 வயதாய் இருக்கும்போது அந்தத் துயரம் நிகழ்ந்தது. திருகோணமலையிலிருந்த உறவினர்களிடம் போன அம்மா திரும்பி வரவில்லை. அந்தக் குழந்தைகள் பார்க்க முடியாத இடத்திற்கு இந்தியர்கள் அம்மாவை அனுப்பி அனுப்பிவிட்டார்கள். இனி எப்போதும் அவள் வரமாட்டாள். புவீந்திரன் அழுதான். அப்போது அவனுக்கு அது மட்டும் தான் தெரியும் – ஆனால், அம்மாவின் இழப்பு அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஆழமான ஒரு வடுவை ஏற்படுத்தியது.
ஓய்வாக இருக்கும் கருக்கல் பொழுதுகளில், அப்பா குழந்தைகளுக்கு ஆங்கிலப்படக் கதைகள் சொல்லுவார். சுதந்திரத்தை நோக்கிய எழுச்சிகளைத் தழுவியதாக அவை இருக்கும். வியட்நாம், கியூபா, தென்னாபிரிக்கா என அது நீளும். புவித்திரன் மட்டும் ஆர்வத்துடன் இருந்து கேட்பான். ஏற்கெனவே ஏழைகளுக்காகவும் பாதிக்கப்படுகின்றவர்களுக்காகவும் இரங்குகின்ற அந்த மனம்இ படக்கதைகளைக் கேட்கும் போது, ஒடுக்கப்படும் மக்களினங்களை நினைத்துப் பரிதாபப்படும். அவர்களின் அவலங்களை மனத்திரையில் போட்டுப் பார்த்துக் கொதிக்கும். அந்தப் போராட்டங்களின் நியாயத்தன்மையைப் புரியும். அடக்குகின்றவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணரும். அந்த மக்களோடு எங்களினத்தை ஒப்பிட்டுப் பார்த்து விழிக்கும். எங்கள் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தானும் ஈடுபட வேண்டுமென இறுகும்.
அந்த விழிப்புணர்வோடும் – மனவுறுதியோடும், இதயத்தைப் பிழியச் செய்கின்ற அம்மாவினுடைய நினைவுகளும் சேர்ந்து தான் – அவனை இயக்கத்திற்குப் போகவும் உந்தியிருக்கக்கூடும்.
புவீந்திரன் ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்தான். உறவினர் ஒருவரும் வந்திருந்தார். ஒரு தந்தைக்கு இயல்பாகவே இருக்கின்ற பிள்ளைப் பாசம் வெளிப்பாடு கண்ட போது – வந்தவர் அப்பாவிடம் சொன்னதை அப்பா மகனிடம் கேட்டார் – “தம்பி…. வெடிபட்டு உனக்கு காலும் ஏலாது…. இனி விட்டிட்டு வந்து…. வீட்டோட நிக்கலாம் தானே….” அப்பா இழுக்க மெல்லிய ஒரு சிரிப்போடு விழிகளை உயர்த்தி, ஓர் அரசியல் மேதையைப் போல அவன் விளக்கினான்;
“இயக்கத்திற்குப் போனது விலத்திக் கொண்டு வாறதுக்கில்லை; நான் போனது நாட்டுக்காகப் போராட…. திரும்பி வீட்டிற்கு வாறதுக்கில்லை. இந்தப் போராட்டத்தில் நான் சாகவும் கூடும். அதைப்பற்றி நான் கவலைப்படவும் இல்லை….” வந்தவரும் அப்பாவும் மௌனித்துப் போனார்கள்.
கூடித்திரிந்த பழைய நண்பர்கள் நீண்ட காலத்தின் பின் சந்தித்தார்களாம். ஏதேதோவெல்லாம் கதைத்த பின் பிரிகின்ற நேரத்தில், “நீ இப்ப நொண்டி தானேடா…. இனி உனக்கு ஏன் மச்சான் இயக்கம்…. விட்டிட்டு வாவன்ரா….” கேலி செய்தார்களாம்.
ஒரு மணித்துளி திகைத்துப் போனவன் – நின்று, திரும்பி, நிதானமாகச் சொன்னானாம்;
“எனக்குக் கால் தான் நொண்டி; என்ர மனம் நொண்டியாகேல்லை. ஒரு உறுப்புத்தான் ஊனமாப் போச்சுதே இல்லாம, உள்ளம் எப்பவும் உறுதியாய்த் தான் இருக்கிறது. அங்கங்கள் போறதைப் பற்றி எனக்குக் கவலை இல்லையில்லையடா…… மனசில உறுதிதான் வேணும். எனக்கு அது நிறைய இருக்கு. நான் சும்மா இருந்து சாகமாட்டன். பெரிய சாதனையொன்றைச் செய்து தான் சாவன்……” அந்த நண்பர்களுக்கு அப்போது அது புரியவில்லை; சிரித்துக் கொண்டு போனார்கள்; ஆனால், இப்போது விக்கித்து நின்றார்கள்.
“பிரபல கரும்புலி போறார்” – இப்படித்தான் தோழர்கள் அவனுக்குப் பகடி சொல்லுவார்கள்.ஆனையிறவில் வெடிபட்டு நரம்பறுந்து சூம்பிப் போனதால் – ‘பெல்ட்’ போட்டுக் கட்டியிருக்கும் இடது காலை இழுத்து, இழுத்து ஒரு புன்சிரிப்போடு புவீந்திரன் போவான்.
அவனை ஒரு ‘கரும்புலிப் பைத்தியம்’ என்று சொல்லலாம். அவனது நினைவுகள் கனவுகள் எல்லாமே, ஒரு கரும்புலித் தாக்குதலைச் சுற்றித்தான் இருந்தன.
எவருமில்லாத தனியறையொன்றில் ஏதாவது ஒரு கடற்கரையோர வரைபடத்தை விரித்து வைத்து விட்டு, நீண்ட மெல்லிய ஒரு தடியோடு புவீந்திரன் அருகில் நிப்பான். தன்னைத் தளபதியாகவும், அருகில் வீரர்கள் நிற்பதைப் போலவும் உருவகப்படுத்திக் கொண்டு வரைபடத்தை தடியால் தொட்டுக்காட்டி, அவன் காற்றுக்கு விளங்கப்படுத்திக் கொண்டிருப்பான்.
“……டோரா இதாலதான் வரும்……”
“……உங்கட வண்டியள் இந்த மாதிரி வியூகத்துல அதைக் குறுக்கால மறிச்சு அடிக்கும்……”
“……அந்த நேரம் – இந்த விதமாகப் பக்கவாட்டில்இ உச்ச வேகத்தில வந்து புவீந்திரன் இடிப்பான்……”
“……டோரா புக்கையாகும்……” ஒளித்திருந்து பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு, அவனைப் பார்க்க சிரிப்புத்தான் வரும்.
புவீந்திரன்!
அவன் ஒரு வித்தியாசமான போராளி மட்டுமல்ல் வித்தியாசமான மனிதனும் கூட. அவன் அமைதியானவன்; ஆனால் சோம்பேறியல்ல. உற்சாகமானவன்; ஆனால் குளப்படிக்காரனல்ல. அவனோடு வாழக்கிடைத்த நாட்கள் எங்களுக்கு வரப்பிரசாதம்.
அவனுக்குமட்டுமே உரிய சில உயர்ந்த பண்புகள் இருந்தன. இவற்றை அவனிடத்தில் மட்டும் தான் காண முடியும்.
இயல்பாகவே அவனுக்கிருக்கின்ற இரக்க குணம். அடுத்தவர்கள் அவனில் இரக்கப்படும் விதமாக அவனை இயக்குவிக்கும்.
இயலாத காலோடும் கூட சில சமயங்களில் எங்களது நெஞ்சுருகும் விதமாக அவன் செயற்படுவான்.
கிணற்றடியில் உடுப்புத் துவைத்துக் கொண்டிருக்கும் நண்பன், அவசர வேலையொன்றிற்கான அழைப்பின் பேரில் துவைப்பதைப் பாதியில் விட்டு விட்டு அவதிப்பட்டு போனானென்றால் – அவன் திரும்பி வரும் போது அவனது உடுப்புக்கள் முற்றத்து வெயிலில் உலர்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்டவன் தான் புவீந்திரன்.
முகாமிற்கு யாராவது வெளி ஆட்கள் வந்துவிட்டால் அவர்களை உபசரிக்க, அன்றைய ‘முறைஆளை’த் தேடித்திரிந்து, பின் மூலையில் போய்ப் பிடித்து வந்து விடுவதற்கிடையில் வந்தவர்களுக்குத் தேநீர் கொடுத்துவிட்டு அவன் பேணிகளைக் கழுவிக்கொண்டிருப்பான். அதுதான் புவீந்திரன்.
ஆனையிறவில் வெடிபட்டுக்காயம் மாறி வந்தவனுக்கு, யாழ். மாவட்ட நிர்வாகச் செயலகத்தில் தட்டச்சு பொறிப்பது பணி. அங்கொன்றும், இங்கொன்றுமாக எழுத்துக்களைத் தேடித்தேடிக் குத்திக் கொண்டிருந்தவன் – கொஞ்ச நாட்களில் மற்றவர்கள் மெச்சக் கூடிய அளவுக்கு அதில் தேர்ச்சி பெற்றான்.
அறிக்கைகள், கடிதங்கள், விபரக்கோவைகள், அது இது என்று நாளாந்தம் அவனுக்கு வேலைகள் குவிந்து போய்க் கிடக்கும். அப்படி இருக்கும் போதும் – கவிதை, கட்டுரைகள் எழுதிக் கொண்டு வந்து, “இதையும் ஒருக்கால்……” என்று கெஞ்சுகிற நண்பர்களிடம் முகம் சுளிக்காமல் வாங்கி சட்டைப் பைக்குள் மடித்து வைப்பான். காலை மாலை இரவு என இழுபட்டு நள்ளிரவு கடந்து 1, 2 மணிவரை இருந்து கூட தனக்குரிய வேலையை முடிக்கின்ற அந்தப் போராளி அதன் பிறகும் விழித்திருந்து நண்பர்களுடையதையும் அடித்துக் கொடுக்கின்ற நண்பன்.
புவீந்திரன்! புலிவீரர்களின் வாழ்வுக்கு நீ ஒரு பாடம்.
உன்னோடு வாழ்ந்த நாட்கள், எக்காலத்திலும் தேயாத பசுமையான நினைவுகள்.
சூம்பிக் கிடக்கும் காலோடும் உன்னைத் தூக்கிக் கொண்டு போய் கடலில் இறக்கிவிடும் போதெல்லாம் – சிறுபிள்ளை மாதிரித் தத்தளித்து தத்தளித்து கைளைக் காலை விசுக்கி – ஓயாத முயற்சியோடு அலைகளோடு போராடி நீ நீந்தப் பழகினாய்.
“பயிற்சிக் காலம் போதாது. ஒருத்தன்கூட சரியாய் அடிக்க மாட்டான்……” என்று சொன்னவர்களிடம் சவால் விட்டுஇ பயிற்சி முகாமிலிருந்த அத்தனை பேருக்கும் சாள்ஸ் அண்ணன் ‘ரச்’ தந்த போது – வெடிபட்ட காலை அவரே சரியாய் எடுத்து விட்டுஇ ரைபிள் பிடித்துச் சொல்லித்தர – நீ மட்டுமே ஒரு ‘புல்’லும், ஒரு ‘நைனும்’ அடித்து, சாள்ஸ் அண்ணனின் பெயரைக் காத்தாய்.
எதுவுமே தெரியாத அப்பாவிக் குழந்தையான உன்னிடம், நல்லதற்ற ஒரு வார்த்தையைச் சொல்லி “இன்னாரிட்டைக் கேட்டுப்பார் அர்த்தம் சொல்லுவார்……” என்று அனுப்பிவிட்டால் – அங்கு போய் நல்ல கிழி வாங்கிக்கொண்டு வந்து, விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு முன்னால் அசடு வழிய நிற்பாய்.
கால் இயலாமல் இருந்தும், மெல்ல மெல்லப் படகோட்டப் பழகி – கிளாலிக் களத்தில் எதிரிகளைக் கலைத்து விரட்டும் சண்டைகளில், அலைகளைக் கிழித்துச் செல்லும் எங்களது சண்டைப் படகுகளுக்கு ஓட்டியாக இருந்தாய்.
இன்னும்… இன்னும் இவையெல்லாம், எக்காலமும் ஓயாமல் எங்கள் இதயங்களில் நினைவலைகளாய் மோதும்.
புவீந்திரன்!
சாதனையொன்றைச் செய்து தான் சாவேன் என்றாயா? சாகும் போது நீங்கள் படைத்தது ஒரு சாதனையல்ல் அது சாதனைகளின் ஒரு குவியல்.
‘கனன்’ எடுத்தது சாதனை. அது இரண்டாக இருந்தததும் ஒரு சாதனை. ஒரே தாக்குதலில் இரண்டு ‘பிப்ரி’ எடுத்தது இன்னொரு சாதனை. டோரா ஒன்றை முழுமையாக நொருக்கியது அடுத்த சாதனை. ஒரு கடற்தாக்குதலில் அதிக படையினர் கொல்லப்பட்டது வேறொரு சாதனை.
“ஆசிரில ட்ரெயினிங் தரேக்கை நாங்கள் ஒரு டோரா அடிக்க வேணும் எண்டு சாள்ஸ் அண்ணன் சொல்லறவர்……” என்று அடிக்கடி கூறும் நீ, “இப்ப நாங்கள் அடிக்கப் போறம். ஆனால், அதைப் பார்க்கிறதுக்கு அவர் தான் இல்லை” என்று கவலைப்படுவாய்.
அந்தத் தாக்குதல் திட்டம் உருவாக்கப்பட்டது.
கட்டைக்காட்டிலிருந்து, பலாலிக்கு ரோந்து செல்லும் டோராவை, பருத்தித்துறைக்கு மேலே இடைமறித்து மூழ்கடிக்க வேண்டும். கட்டைக்காட்டிலிருந்து 18 மைல் தூரத்திலும், காங்கேசன் துறையிலிருந்து 16 மைல் தூரத்திலும் அந்தத் தாக்குதல் மையம் இருந்தது.
மணியரசனும் நீயும் தலைவரிடம் போனீர்கள். உங்கள் வாழ்வின் உச்ச உயர் நாள் அதுவாகத்தான் இருந்திருக்கும்.
உள்ளப் பூரிப்பின் சிகரங்களைத் தொட்டிருக்கக்கூடிய அந்த நாளில், எங்கள் மனவுணர்வுகள் எப்படியிருந்திருக்கும் என்பதை, வார்த்தைகளில் வடித்தெடுக்க முடியாது.
சோகம் பரவிய முகத்தோடு, உன்னைக் கைதொட்டுத் தடவி “எந்தக் காலிலையப்பன் வெடி பிடிச்சது?……” என்று, அக்கறையோடு தலைவர் விசாரித்த போது மெய் சிலிர்த்து நின்று சிரித்தாயாம்.
எல்லாமே தயார். சக்கை வண்டி; சண்டைப்படகுகள்; தாக்குதற் கருவிகள்; தாக்கும் வீரர்கள்; மணியரசன், நீ…… எல்லாமே. ஏறக்குறைய பதினைந்து நாட்கள். அவனுக்காகக் கடல் மடியில் நீங்கள் காத்திருந்தீர்கள்.
நள்ளிரவிலேயே நிலைக்குப் போய்விட வேண்டும். இருளை ஊடறுத்து உங்கள் விழிகள் பகைவனைத் தேடிக் கொண்டிருக்கும்.
மறுநாள் மதியமோ, மாலை வரையோ அந்தத் தேடல் நீடிக்கும், எதிரி வரமாட்டான். ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தோடு திரும்பி வருவீர்கள்.
உற்சாகம் குன்றாமல், உறுதி குலையாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் போனீர்கள்.
29.08.1993. நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவன் கடலில் வந்தான்.
பொங்கியெழும் எங்கள் கடலில் பகைவன் உலா வரவா? காத்திருந்த வேங்கைகளின் ஆவேசமான பாய்ச்சல்.
தனியறையில் வரைபடத்தை விரித்து வைத்து, நீ காற்றுக்கு விளங்கப்படுத்துகிற அதே தாக்குதல் திட்டம்; எங்கள் கண்ணெதிரே கடலில் நடந்து முடிந்தது.
அப்போது நாங்கள் சிரித்தோம். இப்போது…… இரண்டு ‘கனன் பீரங்கி’களையும் 2 ‘பிப்ரி கலிபர்’களையும் மூழ்கிக்கொண்டிருந்த ‘டோரா’விலிருந்து தோழர்கள் எடுத்துக் கொண்டு வந்தார்கள்.
புவீந்திரன் வரமாட்டான்….!
மணியரசனும் வரமாட்டான்….!
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (புரட்டாதி – ஐப்பசி 1993).
https://thesakkatru.com/black-sea-tiger-mejor-pugazharasan/