கிழக்கு மாகாணம் என்னதான் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தபோதிலும், அந்த மாகாணம் தொடர்ச்சியாக சிறிலங்காவிலும், பிரபாகரனின் தமிழீழத்திலும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. இலங்கையின் சிங்களவரைப் பொறுத்தவரையிலும், தமிழர்களைப் பொறுத்தவரையிலும் கிழக்கு மாகாணம் ஒரு பலவீனமான இணைப்பாகவே இருந்துவருகிறது. ஏனென்றால், இம்மாகானம் தமிழரும் சிங்களவரும் சமமாக வாழ்ந்துவருவதனால், தமிழரைப் பெரும்பான்மையினராகக் கொண்டதென்றோ, சிங்களவரைப் பெரும்பான்மையினராகக் கொண்டதென்றோ கூறமுடியாத நிலை காணப்படுகிறது. முஸ்லீம்களையும் நாம் எடுத்துக்கொண்டால், ஏறத்தாள மூன்று இனங்களும் சமமாக வாழ்வதால், இம்மாகாணம் இலங்கையினைப் பொறுத்தவரைய்லும், தமிழரின் ஈழத்தைப் பொறுத்தவரையிலும் பலவீனமான தொடர்ச்சியாகவே காணப்படுகிறது.
கிழக்கு மாகானத்தின் சேர்ப்பின்றி, இலங்கையினை பிரிவுபடாத ஒற்றை நாடாக வைத்திருப்பது சாத்தியமற்றது. அதேபோல, கிழக்கு மாகாணம் இல்லாது புலிகளின் ஈழமும் பூரணப்படாது. ஆகவே, கிழக்கு மாகாணமே இந்த விடயத்தில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அது எந்தப் பக்கம் சாய்கின்றதோ, அதுவே இலங்கை ஒற்றைநாடா அல்லது இரு நாடுகளா எனும் நிலையினைத் தீர்மானிக்கப்போகிறது.
கிழக்கு வடக்கைக் காட்டிலும் வறுமையானதாக, அபிவிருத்தியில் குன்றியதாக இருந்தாலும்கூட, புலிகளின் போராளிகளில் கணிசமானவர்கள் கிழக்கைச் சேர்ந்த போராளிகளே. ஆனால், தளபதிகளில் பெரும்பாலானவர்கள் வடக்கைச் சேர்ந்தவர்கள். கிழக்கைச் சேர்ந்த போராளிகள் பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொண்டபோதும்கூட, அவர்களுக்கான மரியாதை அமைப்பினுள் வழங்கப்படவில்லை.
இரு பிரிவுகளுக்கிடையிலான பிணக்குகளுக்கும், அதனூடான இழப்புக்களுக்கும் காரணமான முதலாவது தலைமைக்கெதிரான கிளர்சி நடந்தது கூட கிழக்கில்த்தான். இது பலருக்குத் தெரியாது இருந்தாலும்கூட, முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
"மிக அண்மைக் காலம்வரையில் கிழக்கு மாகாணப் போராளிகள், தலைமைக்கெதிரான கிளர்ச்சியை ஒருபோதும் நினைக்காதவர்களாகவும், அமைப்பினுள் ஏற்படக்கூடிய பிளவுகளை எதிர்ப்பவர்களாகவுமே இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால், அவ்வப்போது தலைமைக்கெதிரான சில கிளர்ச்சிகள் தோற்றம்பெற்றபோது, வடக்கிலிருந்து அனுப்பப்படும் அணிகள் கிழக்கில் போராளிகளுக்கிடையே பிளவுகளை உண்டாக்கி, தலைமைக்கெதிரான அவர்களின் கிளர்ச்சியைத் திசை திருப்பியே வந்திருக்கிறார்கள். 1986 இல் புலிகள் டெலோ இயக்கம் மீது தாக்குதலை ஆரம்பித்த வேளை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த புலிகளின் தளபதிகளில் ஒருவரான கடவுள் என்பவர் கிழக்கு மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும், டெலோவுக்கெதிராக தாம் நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென்றும் தெரிவித்திருந்தார். ஆனால், இதனால் ஆத்திரப்பட்ட புலிகளின் தலைமைப்பீடம் வடக்கிலிருந்து பொட்டு அம்மாணையும், குமரப்பாவையும் கிழக்கிற்கு அனுப்பி கிழக்கில் அமைப்பில் பிளவுகளை உருவாக்கியது. அதேபோல, 1987 இல் கிழக்கில் வாழ்ந்த சிங்களவர்கள் மீதான புலிகளின் தாக்குதல் முயற்சிகளையும் மட்டக்களப்பில் பிறந்த புலிகளின் தளபதியான பிரான்ஸிஸ் என்பவர் முழுமையாக நிராகரித்திருந்தார். ஆனால், 1987 இல் கிழக்கில் சிங்களவர்களைக் கொல்லுமாறு வடக்குத் தலைமை உத்தரவிட்டிருந்ததுடன் அதற்கு பணிய மறுத்த பிரான்ஸிஸ் சந்தேகத்திற்கிடமான முறையில் கொல்லப்பட்டிருந்தார்".
இந்தக் காரணிகள் அனைத்தினதும் விளைவாகவும், வடக்குத் தலைமையின் மாற்றாந்தாய் மனப்பாங்கினாலும், பிரதேசத்தின் அமைவிடத்தின் யதார்த்தினை மனதில்க் கொண்டுமே 2004 இல் புலிகளுக்கெதிரான கிளர்ச்சியில் கருணா இறங்கவேண்டி ஏற்பட்டது. பிரபாகரனின் செல்லப்பிள்ளையாகவும், புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராகவும், கிழக்கின் மைந்தனாகவும் இருந்த கருணா தான் பிறந்த மண்ணிற்கே மீண்டும் வந்து தலைமைக்கெதிரான கிளர்ச்சியை ஆரம்பித்தார்.
தன்னால் வலிந்து இயக்கத்தில் சேர்க்கப்பட்ட கிழக்கின் சிறுவர்கள் எவருமே வடக்கின் போர்முனைகளுக்கு அனுப்பப்படப்போவதில்லை என்கிற உத்தரவாதத்தினை வழங்கவேண்டும் என்று தலைமையிடம் அவர் நிபந்தனை முன்வைத்தார். எதிர்பார்த்ததைப்போலவே பிரபாகரன் இந்த வாக்குறுதியை வழங்க மறுத்து விட்டார். அதன் பின்னர் கிழக்கு மாகாணப் புலிகள் தனித்து இயங்கும் சுயாதீனத்தை தலைமை வழங்கவேண்டும் என்று கருணா கோரிக்கை வைத்தார். ஆனால், வன்னிக்கு வா, பேசித்தீர்க்கலாம், கருத்து வேறுபாடுகளைக் களையலாம் என்று பிரபாகரன் கருணாவுக்குக்ப் பதிலனுப்பினார்.
பிரபாகரனின் வேண்டுகோளை வெளிப்படையாகவே நிராகரித்து, வன்னிக்குச் செல்ல மறுத்ததன் மூலம் கருணா புலிகளின் சரித்திரத்திலேயே முதலாவதான தலைமைக்கெதிரான கிளர்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
பாகம் ஒன்று - முற்றும்