ஜனநாயகவழிப் போராட்டத்திலிருந்து விலகி ஆயுத வழி விடுதலைக்கு ஆதரவளிக்கத் தயாரான தமிழ் மக்கள்
தமிழீழ விடுதலைப் போரின் சரித்திரத்தில் 1984 ஆம் ஆண்டு முக்கிய திருப்புமுனையாக அமைந்திருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த வருடத்திலேயே ஜனநாயக வழி பேச்சுவார்த்தைகள் மீதான தமது நம்பிக்கையினை தமிழ் மக்கள் முற்றாகக் கைவிட்டிருந்தனர். அந்த வருடத்திலேயே ஜனநாயகவழி மிதவாத அரசியல்த் தலைவர்களைக் கைவிட்டு ஆக்ரோஷமான, ஆயுதம் ஏந்திய போராளிகளுக்கு தமது ஆதரவை வழங்க அவர்கள் முன்வந்திருந்தனர்.
தமிழர்களின் இந்த மாற்றம் சிங்களத் தலைமைக்கும் ஒரு பங்களிப்பினை வழங்கியிருந்தது. குறிப்பாக ஜெயவர்த்தனவுக்கும், இலங்கையின் சரித்திரத்திற்கும் இது பங்களிப்பினை வழங்கியிருந்தது. தமிழ் மக்கள் மீது தாம் தொடர்ச்சியாக நடத்திவந்த அடக்குமுறைகளுக்கூடாகவும், வன்முறைகள் மூலமாகவும் தமிழ் மக்களை வன்முறை நோக்கித் தள்ளுவதில் சிங்களத் தலைமை வெற்றி கண்டிருந்தது. அத்துடன், ஜனநாயக வழியில் அதுவரை தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசியலையும் அது குழிதோண்டிப் புதைத்தது. தமிழ் மக்களின் இந்த மனமாற்றத்திற்கு அரச, தனியார் ஊடகங்களும் பெரும்பங்காற்றியிருந்தன. சிங்கள அரசுத் தலைமையின் இனவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும், கொம்பு சீவிவிடும் கைங்கரியத்தை அவை கச்சிதமாகச் செய்துவந்தன. அவர்கள் மத்தியில் இருந்துகொண்டு, நடந்துவரும் இந்த அக்கிரமத்தைக் கவலையுடனும், மெளனமாகவும் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருந்தேன்.
செயற்றினற்ற , ஜனநாயக வழி மிதவாதத் தலைவர்களின் கைகளிலிருந்து தமிழ் மக்களுக்கான அரசியல்த் தலைமை, செயற்றிறன் மிக்க, ஆக்ரோஷமான ஆயுதம் ஏந்திய இளைஞர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும். இந்த மாற்றத்தை நான் என்னால் உணரவும், கண்டுகொள்ளவும் முடிந்தது. "விலகி நில்லுங்கள், உங்களால் நாம் பட்ட அடிகள் போதும், எங்களைத் திருப்பியடிக்க விடுங்கள்" என்று இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையினை நோக்கி ஆத்திரத்துடன் பேசுவதை நான் கண்டிருக்கிறேன்.
சித்திரையில் புலிகளால் நடத்தப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலும், அதற்குப் பழிதீர்க்க இராணுவம் நடத்திய பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் இளைஞர்களின் இந்தக் கூக்குரலுக்கு மேலும் வலுச் சேர்த்தன. வீதிகளில் அராஜகத்தில் ஈடுபட்ட இராணுவத்தையும், பொலீஸாரையும் மீண்டும் அவர்களது முகாம்களுக்கும், பொலீஸ் நிலையங்களுக்கும் திருப்பியனுப்பி அடக்கிவிடும் பலம் தமக்கு இருப்பதை பொதுமக்களும், இளைஞர்களும் முதன்முதலாக உணர்ந்துகொண்டதும் அப்போதுதான். இக்கணத்திலிருந்து சுமார் ஒருவருட காலத்திற்கு அவர்களால் இதனை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ள முடிந்திருந்தது.
தெற்கின் ஊடகங்களும் தமிழ் மக்களும்
கொழும்பு ஊடகங்கள் மீதான தமிழ் மக்களின் வெறுப்பும் இக்காலகட்டத்திலேயே அதீதமாக வளர்ந்துவந்தது. அப்பாவிகளின் படுகொலைகளை நியாயப்படுத்தியும், கொல்லப்பட்டவர்களைப் "பயங்கரவாதிகள்" என்கிற பெயரில் அழைத்து, தமது இராணுவத்தினரின் வீரச்செயல்கள் என்று அவை தலைப்பிட்டு எழுதியபோது தமிழ்மக்கள் கொதித்துப் போயினர். தமிழ் மக்களின் மீதான அரச இராணுவத்தின் படுகொலைகளைத் தாம் நியாயப்படுத்தும் ஒவ்வொரு கணமும் அதேபொதுமக்களை உறுதியும், தீவிர நிலைப்பாடும் கொண்ட ஆயுதம் ஏந்திய, இலட்சிய வெறிகொண்ட இளைஞர்களை நோக்கித் தள்ளிவிடுகிறோம் என்பதை இந்த ஊடகங்கள் உணரத் தவறிவிட்டிருந்தன.
என்னுடன் கூடவே பணிபுரிந்தவர்களும், ஏனைய ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களும் சித்திரையில் இராணுவம் நடத்திய அட்டூழியங்களை நியாயப்படுத்தியும், பாராட்டியும் எழுதி, அழிவுப்பாதை நோக்கி நாட்டை மேலும் மேலும் தள்ளியபோது நான் அடைந்த வேதனைக்கும் விரக்திக்கும் அளவே இருக்கவில்லை.
1984 ஆம் ஆண்டு சித்திரை 9 ஆம் திகதி இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய அக்கிரமங்களையும், பதிலடியாக தாக்கப்பட்ட நாகவிகாரை பற்றியும் அவர்கள் எழுதிய செய்திவிபரிப்புக்களை மீண்டும் அவர்கள் படித்துப் பார்க்கவேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். புலிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்க யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மீது இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலும், யாழ் அடைக்கலமாதா ஆலயம் மீது அவர்கள் வேண்டுமென்றே நடத்திய தாக்குதலும் பொதுமக்களை வெகுவாகப் பாதித்திருந்தது, குறிப்பாக யாழ்ப்பாண கரையோரம் எங்கிலும் வாழ்ந்துவந்த கத்தோலிக்கத் தமிழர்கள் இச்சம்பவங்களால் பெரிதும் உணர்வுரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆத்திரமேலீட்டால் உந்தப்பட்ட பொதுமக்கள் திரண்டுசென்று யாழ் நாகவிகாரையை அடித்து நொறுக்கினார்கள். புலிகள் இந்தச் சூழ்நிலையினைத் தமக்குச் சார்பாகப் பாவித்தார்கள், ஆனால் இச்சூழ்நிலை அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. இந்தநாட்களில் கிட்டு அங்கே இருந்தார். கொதிப்படைந்திருந்த மக்களுக்கு கைய்யெறிகுண்டுகளையும், பெற்றொல்க் குண்டுகளையும் அவரே வழங்கினார்.
சித்திரை 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் பற்றியும் அதன்பின்னராக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினரின் அட்டூழியங்கள், பொதுமக்களின் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே இங்கு எழுதியிருந்தேன். சரியான விசாரணைகளின்பின்னரே நான் அவற்றினை இங்கே பதிந்திருந்தேன். இரு சுயகெளரவம் மிக்க இனங்கள் இனமுரண்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றன என்கிற உண்மையினை சிங்களத் தலைவர்களும், அவர்களை ஆதரித்த ஊடகங்களும் பார்க்கத் தவறிவிட்டன. நீங்கள் ஒரு இனத்தை மகிழ்விக்க மற்றைய இனத்தை துன்புறுத்த முடியாது. நீங்கள் அப்படிச் செயற்படும்போது, பாதிக்கப்படும் இனம் நிச்சயம் ஆத்திரம் கொள்ளும். ஆத்திரம் கொள்ளும் அந்த இனம் பதில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கும். இலங்கையின் நலன்கள் இந்த இரு இனங்களினதும் நலன்களிலும் தங்கியிருக்கிறது. இவ்வினங்களின் மதங்கள், மொழிகள், தனித்தன்மை வாய்ந்த அவர்களின் அடையாளங்கள் என்று அனைத்தும் காக்கப்படும்போது மட்டுமே மொத்த நாட்டினதும் நலன்கள் காக்கப்படும்.
தமக்கான தனிநாடு ஒன்று தேவையென்று உணர்ந்த தமிழர்களும், உதவிய ஜெயவர்த்தனவும்
தமிழ்மக்கள் தமக்கென்று தனியான நாடொன்று வேண்டும் என்கிற நிலைப்பாட்டிற்கு 1983 ஆம் ஆண்டில் வர ஜெயவர்த்தனவே காரணமாக இருந்தார் என்று நான் நினைக்கிறேன். 1983 ஆடியில் அவர்கள் மீது நடத்தப்பட்ட இனரீதியிலான வன்முறைகள் அவர்கள் தம்மைத் தனியான தேசம் என்று உணர வழிசமைத்தது. 1984 இல் நடைபெற்ற அவர்கள் மீதான தொடர்ச்சியான இராணுவ வன்முறைகள் இந்த உணர்வை அவர்கள் மனதில் உறுதிப்படுத்தியது. சித்திரைப் படுகொலைகளின் பின்னரான நாட்களில் நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தேன். என்னுடன் யாழ்ப்பாணத்தில் பேசிய இளைய போராளியொருவர் இப்படிக் கேட்டார், "தாக்குதல்களில் இருந்து தமதுயிரைக் காத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது இராணுவம் வேண்டுமென்றே தாக்கியது. அப்படி ஓடிக்கொண்டிருந்த பொதுமக்கள் சிங்களவர்கள் என்றால் ராணுவம் அப்படி நடந்துகொண்டிருக்குமா? அப்படியானால் தமிழர்களைத் தமது எதிரிகள் என்றல்லவா இந்த இராணுவம் பார்க்கிறது? அப்படியானால் தமிழர்கள் தனியான ஒரு தேசத்திற்குச் சொந்தக்காரர்கள் என்றல்லவா அர்த்தம்?" என்னிடம் பதில் இருக்கவில்லை.
1984 ஆம் ஆண்டு, சித்திரை மாத நடுப்பகுதியளவில் தமிழர்கள் தீர்க்கமான நிலைக்கு வந்திருந்தனர். எனது ஊரான அரியாலையில் வருடப் பிறப்பிற்கான விடுமுறையில் நின்ற நாட்களில் என்னிடம் பேசிய சில இளைஞர்கள், "ஜெயவர்த்தன தனது இராணுவத்தைக் கட்டியெழுப்புகிறார்.அவர் ஒருநாளுமே தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கப்போவதில்லை. நாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்கள். அவர்களின் தொனியில் இருந்த உறுதிப்பாட்டை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
இந்த அத்தியாயமும், இனிவருபவையும் இளைஞர்களின் உறுதிப்பாட்டின் விளைவுகள் குறித்து தொடர்ந்து விபரிக்கும்.
ஆயுத அமைப்புக்களும் அவர்களின் செயற்பாடுகளும்
1984 ஆம் ஆண்டுப்பகுதியில் ஐந்து பிரதான ஆயுத அமைப்புக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் மற்றும் ஈரோஸ் ஆகியனவே அந்த ஐந்தும் ஆகும். பிரபாகரன், சிறிசபாரட்ணம், பத்மநாபா, உமா மகேஸ்வரன் மற்றும் பாலகுமார் ஆகியோர் இந்த அமைப்புக்களின் தலைவர்களாக இருந்தனர். இவற்றுள் புலிகளே வீரியம் கொண்டு இயங்கினார்கள். அவர்களையடுத்து டெலொவும் ஈ.பி.ஆர்.எல்.எப் உம் செயற்பட்டு வந்தன. புளொட் அமைப்பும் ஈரோஸும் ஏறக்குறைய செயலற்றுக் காணப்பட்டன.
அமைப்புக்களின் தலைவர்கள் தமக்கென்று தனித்தனியான கொள்கைகள், அணுகுமுறை, திட்டமிடல் ஆகியவனவற்றைக் கொண்டிருந்தார்கள்.
பிரபாகரன் ஒரு அதிதீவிர தேசியவாதியாகத் திகழ்ந்தார். திறம்படப் பயிற்றப்பட்ட, இலட்சிய உறுதியும், கட்டுப்பாடும் கொண்ட படையணியொன்றினை அவர் கட்டிவந்தார். போரிடும் திறன், தனிமனிதவொழுக்கம், ஆயுதக் கைப்பற்றல் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது போராளிகளை அவர் வளர்த்தெடுத்தார். ஆயுதக் கைப்பற்றலில் அவருக்கென்று கொள்கையொன்று இருந்தது. "எந்தளவிற்கு இராணுவத்திடமிருந்தும், பொலீஸாரிடமிருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்ற முடியுமோ, அந்த அளவிற்குக் கைப்பற்றுங்கள். இந்திய இராணுவாத்திடமிருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள். உங்கள் எதிரியிடமிருக்கும் ஆயுதங்களை விடவும் சிறப்பான ஆயுதங்களைக் கொள்வனவு செய்துகொள்ளுங்கள்" என்பதே அது. இராணுவத்தினருடனும், ஏனைய போராளி அமைப்புக்களுடனும் ஒப்பிடும்போது நவீன ஆயுதப் பாவனையில் புலிகள் ஒரு படி முன்னால் நின்றிருந்தனர்.
போராட்டத்தை இயங்குநிலைக்குள் வைத்திருப்பதிலும் பிரபாகரன் தனக்கென்று ஒரு கொள்கையினை வைத்திருந்தார். நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டதன்படி அவரது கொள்கைகள் ஏனையவர்களிடமிருந்து வேறுபட்டவனையாகக் காணப்பட்டன. "உங்களை இயங்குநிலைக்குள் வைத்திருக்க இராணுவம் ஏற்படுத்தித்தரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்துங்கள். இராணுவத்தைத் தொடர்ச்சியாகச் சீண்டிக்கொண்டிருங்கள். அவர்கள் பொதுமக்களைத் தாக்கும்போது அவர்கள் தமது பாதுகாப்பிற்காக எம்பின்னால் அணிதிரள்வார்கள்" என்று அடிக்கடி அவர் தனது போராளிகளுக்குச் சொல்லிக்கொண்டிருப்பார். இந்தக் கொள்கையினையே வெற்றிகரமான தளபதிகள் கைக்கொண்டுவந்ததாக தனது சகாக்களுடனான கலந்துரையாடல்களின்போது பிரபாகரன் கூறிவந்திருக்கிறார். பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இதேவகையான வழிமுறையினைக் கைக்கொண்டதாகவும், அவ்வியக்கத்தின் இயங்குநிலைக்கான சந்தர்ப்பங்களை இஸ்ரேலிய இராணுவத்தினரே ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
வெலிக்கடைச் சிறைப்படுகொலைகளின்போது தமது தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரை இழந்திருந்த டெலோ அமைப்பினர் தமக்கென்று கொள்கையொன்றினை வைத்திருக்கவில்லை. இந்தியாவிடமிருந்தும், ரோ அமைப்பினரிடமிருந்துமே சிறீசபாரட்ணம் கட்டளைகளைப் பெற்றுவந்தார்.
பத்மநாபா மாக்சியவாதியாக தன்னை காட்டிக்கொண்டார். அதனால் சமூகத்தின் அடிப்படை மட்ட மக்களான விவசாயிகள், தொழிலாளிகள் உட்பட அனைவருக்கும் அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனூடாக மக்கள் எழுச்சிப் போராட்டமாக விடுதலைப் போராட்டத்தினை மாற்றவேண்டும் என்று அவர் பேசிவந்தார். இராணுவ ரீதியில் போராட்டத்தை இயக்குவதை அவர் எதிர்த்தார். மக்களை இராணுவ ரீதியிலான போராட்ட வழிமுறை பாதிக்கும் என்று அவர் வாதாடினார். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்று அறியப்பட்டவை அனைத்துமே அவ்வமைப்பிற்குள் இயங்கிவந்த சிறிய இராணுவ அமைப்பினால் நடத்தப்பட்டவை மட்டுமே. ஆனால், தமது அமைப்பிற்கென்று பலமான ஆயுத வளத்தை அவர்கள் அப்போது கொண்டிருந்தனர்.
உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பு அதிகளவான உறுப்பினர்களைக் கொண்டிருந்தபோதும்கூட அவரது அமைப்பு ஏறக்குறைய செயலற்ற நிலையிலேயே இருந்துவந்தது.தேசிய புரட்சிபற்றி அவர் தொடர்ந்து பேசி வந்தார். அவரைப் பொறுத்தவரை, தமிழ் ஈழ விடுதலை என்பது அந்த தேசிய போராட்டத்தின் ஒரு அங்கம் என்று கருதப்பட்டது.
ஈரோஸ் அமைப்போ எப்போதும்போல் தமக்குள் ஒருவிடயம் தொடர்பாக முடிவெடுக்கும் திராணியற்று, தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், விவாதங்கள் என்று தமது காலத்தைக் கடத்தி வந்தது.