Jump to content

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1735
  • Joined

  • Last visited

  • Days Won

    42

Everything posted by Kavi arunasalam

  1. பத்திரிகைகளில் மட்டும் நல்ல நல்ல தலைப்பிடுகிறார்கள் என்ற நினைப்பு
  2. ஆண்டவன், ஆள்பவன், ஆளப்போகிறவன். இப்படிச் சொன்னாலே மூன்று காலங்களும் வந்துவிடும். ஆனால் நாங்கள் என்னவோ முக்காலத்திலும், கடந்த காலத்து ஆண்டவர்களைத்தான் தேடுகிறோம். கோயில் கட்டி வணங்குகிறோம். பொங்கல் படைக்கிறோம். காணிக்கை தருகிறோம். காவடி தூக்குகிறோம். தேரில் வைத்து இழுக்கிறோம்…இன்னும் என்னென்னவோ செய்கிறோம். நாங்கள் தமிழர்கள் என்பதால், எங்களை ஆண்டவர்கள் கந்தசாமி, சண்முகம், கதிரேசன், ஆறுமுகம், முருகன்,…. என்னும் பெயர்களுடன் இருக்கிறார்கள். நான் இரண்டாம் வகுப்பு படித்த போது, எனது சமயம் சைவசமயம் எனத்தான் படித்தேன். இப்பொழுது எனது சமயம் என்ன என்று கேட்டால் இந்து சமயம் என்றுதான் குறிப்பிடுகிறேன். என் சமயத்தையே என்னைக் கேட்காமல் மாற்றிவிட்டார்கள். ஆண்டவர்களில் மூன்றுபேர், படைத்தல், காத்தல், அழித்தல் என்று தங்களுக்கான பொறுப்புகளை தங்களுக்குள்ளேயே பிரித்து எடுத்துக் கொண்டார்கள். இதில் படைப்பவன், படைத்தலுடன் தன் வேலையை நிறுத்திக் கொண்டான். காத்தல், அழித்தல் செய்பவர்கள் கொஞ்சம் குளப்படி. தேவையில்லாத விடயங்களையும் செய்யக் கூடியவர்கள். அப்படிச் செய்யும் தில்லு முல்லுகள் எல்லாம் ஆண்டவனின் ‘திருவிளையாடல்கள்’ என்ற பதத்துக்குள் அடங்கிவிடும். அழித்தல் வேலை செய்த ஆண்டவனின் மாமனார் (பெண் கொடுத்தவர்), ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்துக்கு மருமகனை அழைக்கவில்லை. அது மருமகனுக்குப் பொறுக்கவில்லை. கோவம் தலைக்கேறி ஒரு தாண்டவமும் ஆடி, தனது வேலையாளான வீரபத்திரனை அனுப்பி, யாகத்தை அழித்து மாமனாரையும் கொலை செய்வித்தான் . இந்தக் கொலையை செய்ய ஆளை அனுப்பியவன் ஆண்டவன் என்பதால் ‘வதம்’ செய்வித்தான் என்று குறிப்பிட்டால்தான் சரியாக இருக்கும். அடுத்து காத்தல் செய்பவன். இவன் அழித்தல் செய்பவனை விட ஓவரான குழப்படிக்காரன். தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை கொடுக்கும் தீராத விளையாட்டுக்காரன். பெண்களை மயக்கும் மாயவன். பெரும் தந்திரசாலி. ஒரு தடவை நரகன் என்ற அரசனுடன் (பின்னாளில் நரகாசுரன்) பிரச்சனையாகிப் போனது. நரகன் பலசாலி. அவனுடன் மோதினால் காத்தல் வேலை செய்யும் தான் கந்தல் ஆகிவிடுவேன் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தான். நரகன் நல்லவன், அறிஞன், வீரன் என்பதெலாம் காத்தல் ஆண்டவனுக்குத் தேவைப்படாத விடயங்கள். தந்திரத்தால் நரகனை அழிக்கத் திட்டம் போட்டான். ‘நரகன் ஆண்களுடனையே போர் செய்வான். எக்காலத்திலும் பெண்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமாட்டான்’ என்ற தகவல் அவனுக்குக் கிடைத்தது. நரகனை போருக்கு அழைத்துத் தன் மனைவி சுபத்திரையிடம் ஆயுதம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தான். நரகன், பெண்களை மதிப்பவன். கொண்ட கொள்கையில் நிலையாய் நிற்பவன். போர்க்களத்தில் தன்னுடன் மோத வந்திருப்பது ஒரு பெண் என்பதால், தன் ஆயுதங்களை எடுக்காமல் அமைதியாக நின்றான். கணவன் சொல் கேட்டு சுபத்திரை அம்பு விட்டாள். நரகன் செத்துப் போனான். “நரகன் அழிந்துவிட்டான். இந்நாளை இனி வரும் காலங்களில் நன்னாளாகக் கொண்டாடுங்கள்” என்று மக்களுக்கு ஆணையிட்டான். காத்தல் வேலை செய்தாலும், தன்னுடைய மச்சான் செய்யும் அழித்தல் வேலை அவனுக்குப் பிடித்திருந்தது போலே, இரணியனை கொலை (வதம்) செய்தான். பரசுராமன் என்று மாற்றுப் பெயரில் போய் தன் தாயையே கொன்றான். கெளரவர்களில் ஒருத்தனை மட்டும் விட்டு விட்டு எல்லோரையும் அழித்தான்.. என்று அவனின் காத்தல் வேலை அழித்தலாகத் தொடர்ந்தது. இதை எல்லாம் கேள்விப் பட்ட எங்களை ஆண்ட கந்தனுக்கும் கை துருதுருக்க அவனும் சூர பத்மனை கொலை (வதம்) செய்து, ஆண்டாண்டு காலமாக அதை நினைவு கூரவும் செய்திருக்கிறான். இப்படிப் போகிறது எங்களை ஆண்டவர்கள் கதை. அமைதி தேடி ஆண்டவர்களின் இருப்பிடத்துக்குப் போனால், ஆண்டவர்கள் எல்லாம் கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு பயமுறுத்துகிறார்கள். கால்களில் யார் யாரையோ போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னிகளை ஒன்றுக்கு இரண்டாக அணைத்து வைத்துக் கொண்டு காட்சி தருகிறார்கள். ஆனாலும் நாங்கள் அங்கே போய்த்தான் அமைதியைத் தேடிக் கொள்கிறோம். ஆண்டவன் கொலை செய்தாலும் அவனை குற்றம் சொல்லக் கூடாது. படித்தவனை ஏன் கொன்றாய்? பாமரனை ஏன் வதைத்தாய்? என்றெல்லாம் நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். அப்படிக் கேட்டால் ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகிப் போவோம்.
  3. முற்றவெளிக்கு வந்தாயிற்று. ஆகவே கொஞ்சம் இதைப்பற்றி பேசிக் கொள்ளலாம். ஒரு நிகழ்ச்சி, மண்டபத்துக்குள் நடைபெறுமாயின், அந்த மண்டபம் பாதுகாப்பானதா? ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், மக்கள் உடனடியாக வெளியேற வழிகள் இருக்கின்றனவா? போன்ற பல விடயங்கள் பற்றிய அவதானங்கள் மண்டப உரிமையாளரிடமே இருக்கின்றன. நிகழ்ச்சி ஒரு பொது வெளியில் நடைபெறுவதாயிருந்தால் அதற்கு யார் பொறுப்பாக இருக்க வேண்டும்? நான் இருக்கும் நாட்டில் இப்படியான நிகழ்ச்சிகள், பொது வெளியில் நடைபெறுவதாயின், அதற்கான பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட்டதன் பின்னாலேயே நிகழ்ச்சி நடத்துவதற்கு நகரசபை அனுமதி வழங்கும். தாயகத்தில் நகரசபைகள் இந்த விடயத்தில் நகராத சபைகள். ஒரு நடிகை வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு படத்தில் ஆடிய நடனம் பலரால் விரும்பிப் பார்க்கப் பட்டது. அவர் அந்த நடனத்தை வைத்தே பல நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார். அந்த நடனத்தைத்தான் முற்றவெளியில் ஆடப் போகிறார். நடனத்தைப் பார்க்க இளைஞர்கள் வரப் போகிறார்கள். அதில் சிலர் கூத்தடிக்கப் போகிறார்கள். இவற்றை எல்லாம் நகரசபையோ அல்லது மாநகரசபையோ கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாதா? அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஒழுங்குகளைச் செய்திருக்கக் கூடாதா? நாற்காலிக்கு நாண்டு கொண்டிருக்கும் அரசியல் தலைகள் ஆலோசனை தரக் கூடாதா? நிகழ்ச்சியில் குழப்பம் வந்தபின் எல்லோரும் உடனடியாக கைகளை நீட்டியது நிகழ்ச்சி நடத்தியவரை நோக்கித்தான். இளைஞர்கள் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? என்ற பாணியில்தான் செய்திகள் வெளியிடப்பட்டன. இதற்கிடையில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும் இருக்கிறார்கள். குறைந்த பட்சம் அந்தக் கேவலத்தைச் செய்தவர்களைக் கண்டு பிடித்து சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கத் தெரியாவர்கள், குற்றத்தை இலகுவாக மற்றவர் மேலே போட்டுவிட்டு பேசாமல் இருந்து விட்டார்கள். மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நின்று புலம்புவது புலம் பெயர்ந்தவர். வெள்ளை, பட்டு வேட்டிகள் அழுக்குப் படாமல் தங்கள் பாட்டில் அரசியல் பேசப் போய்விட்டார்கள். இத்தனைக்கும் நிகழ்ச்சி இடையில் தடைப் பட்டாலும் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. அந்தத் தகவலை தென்னிந்திய ஊடகங்களில் இருந்துதான் என்னால் அறிய முடிந்தது. இதை எழுதுகின்ற போது இந்த ஒரு செய்தியையும் பதிந்து விடுகிறேன். யேர்மனியில் நான் வாழும் நகரம் ஸ்வேபிஸ் ஹால் என்று ஏற்கனவே அறியத் தந்திருக்கிறேன். இந்த நகரத்தில் இப்பொழுது தமிழர்களுக்கு நிகழ்ச்சிகள் (கல்யாணம், பிறந்தநாள்,..) நடத்துவதற்கு யாருமே மண்டபம் தருவதில்லை. காரணம் நாங்கள் அப்படி.
  4. படத்துக்கு நல்ல விமர்சனங்கள்தான் கிடைத்திருக்கிறது. பார்ப்பதற்காக காத்திருக்கிறேன்.
  5. காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? அதுபோல்தான்.
  6. Putthan, இறுதிச்சடங்கு நிறுவனத்தில் நடந்த விடயங்களும் அதனால் உரிமையாளர் ஜோகன், தண்டனை பெற்று சிறைக்குப் போனதும்தான் உண்மையான சம்பவம். மற்றும்படி, அன்றியா, அல்போன்ஸ் எல்லாம் புனைவு.
  7. யாழில் பதியப்பட்டிருந்த ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்தேன். 2014இல் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவத்தை அவரது கதை எனக்கு நினைவூட்டியது. அதைத்தான், “அப்பா அது நீதானா?” என இங்கே தந்திருக்கிறேன் இதற்குமேல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்க முடியாது என்று அன்றியாவுக்கு புரிந்து விட்டது. ஆனாலும் படுக்கையில்தான் இருந்தாள். அன்றியாவுக்கு அதிகம் பிடித்த இரவுகள் என்றால் அது ஞாயிறு இரவுகள்தான். அந்த இரவுகளில்தான் அடுத்தநாளின் சுமைகள் இல்லாமல் அன்றியா அதிகமாகத் தூங்குவாள். திங்கட் கிழமைகளில், ஏறக்குறைய நண்பகலை பொழுது நெருங்கும் நேரத்தில்தான் படுக்கையைப் பிரிந்து அவள் எழுந்து வருவாள். இந்தத் திங்கட்கிழமை மட்டும் அவளுக்கு சுகமானதாக இருக்கவில்லை. திங்கட்கிழமைகளில் அன்றியாவுக்குச் சொந்தமான, ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரோறண்ட்டுக்கு ஓய்வுநாள். வாரம் ஆறு நாட்கள் சுறுசுறுப்பாக ரெஸ்ரோறண்ட்டில் இருக்கும் அவளுக்கு, வாரத்தில் திங்கள் ஒருநாள் மட்டும்தான் ஓய்வு. ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட், அவளது தந்தை அல்போன்ஸோ அவளுக்கு விட்டுப்போன சொத்து. ‘ஒரு உணவு விடுதி பத்து வருடங்கள் நன்றாகப் போகும் அதற்குப் பின்னால் ஆட்டம் காணத் தொடங்கும்’ என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்ரோறண்ட் முப்பது வருடங்களாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது. உழைப்பை மட்டுமல்ல தனது ஆயுளையும் அதற்குத்தான் அல்போன்ஸோ அர்ப்பணித்திருந்தார். ‘அரக்கனின் உயிர் ஏழு கடல்தாண்டி, ஒரு பெரிய மலையில் ஒரு பொந்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது’ என்று சின்ன வயதில் கதைகள் கேட்டிருக்கிறோம். அதுபோல்தான் அல்போன்ஸின் உயிரும், ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான் அது இருந்தது. அல்போன்ஸுக்கு, பொழுது புலர்ந்து மறைவது எல்லாம் டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான். ஒருநாள் வேலை முடிந்து நள்ளிரவில் அல்போன்ஸ் வீட்டுக்கு வந்த போது, பத்து வயதான அவனது மகள் அன்றியா தனது கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனது மனைவி அஞ்சலிக்கா வீட்டில் இல்லை. அவள் தனக்கான வாழ்க்கையைத் தேடிக் கொண்டு இன்னொருவனிடம் போய்விட்டாள் என்று அல்போன்ஸுக்கு அடுத்த நாள்தான் தகவல் கிடைத்தது. அதற்குப் பிறகு அன்றியாவுக்கு எல்லாமே அல்போன்ஸ்தான். “அப்பா அது நீ இல்லையா? எப்போதும் என்னுடன் இருப்பாய் என்று நம்பினேனே? ஏமாந்து விட்டேனா?” அன்றியாவால் அதற்குமேல் படுக்கையில் புரள முடியவில்லை. எழுந்து கொண்டாள். கட்டிலின் அருகே இருந்த அலுமாரியில் இருந்து அந்தக் குடுவையை எடுத்துக் கொண்டாள். வரவேற்பறையின் ஷோபாவில் அமர்ந்திருந்த அவளது பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையிலேயே இருந்தது. அந்தப் குடுவைக்குள்தான் அல்போன்ஸ் இருந்தான். அதற்குள்ளேதான் அன்றியாவும் தன் உயிரை வைத்திருந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அல்போன்ஸ் இறந்து போய்விட, அன்றியா தன் பலம் எல்லாம் இழந்து விட்டதை உணர்ந்தாள். எத்தனைபேர் வந்து ஆறுதல் சொல்லி இருப்பார்கள். அத்தனையும் அவளைத் தேற்றவில்லை. அவளது அப்பா இல்லாத வீடு அவளுக்குப் பிடிக்கவில்லை. எங்காவது ஓடி விடலாமா? என யோசித்து, தனியாக, சோகத்தில் விழுந்திருந்த போதுதான், தன் தந்தையின் உடலை அடக்கம் செய்வதில்லை, மாறாக எரித்து விடுவது என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. நண்பர்கள், உறவினர்கள் எல்லாம், “அடக்கம் செய்து விடு” என்று சொல்லிப் பார்த்தார்கள். அன்றியா, தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. யேர்மனியில், பொதுவாக, இறந்தவரின் சாம்பலை மயானத்தில்தான் புதைப்பார்கள். அது மயானத்தில் உடலத்தைப் புதைப்பது போல ஒரு இடத்தில் புதைக்கப்படும். அதற்கான செலவு சில ஆயிரங்கள் ஆகும். அந்தப் பணத்தைச் செலுத்த வசதியில்லாதவர்கள் அதற்கென்று இருக்கும் குறிப்பிட்ட இன்னொரு மயானத்தில் பலரது சாம்பல் குடுவைகளுடன் ஒன்றாகப் புதைப்பார்கள். இவ்வளவையும் சம்பந்தப்பட்ட அலுவலகர்களே உரியவர்களின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்வார்கள். அவர்களே நிர்ணயிக்கப்பட்ட நாளில் சாம்பலைக் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் முன்னிலையிலேயே சாம்பல்க் குடுவை அடக்கம் செய்யப்படும். இறந்தவரின் சாம்பலை வீட்டுக்குக் கொண்டு சென்று வைத்திருக்கவோ, கடலிலோ,ஆறுகளிலோ கரைக்கவோ, தோட்டத்தில் தாக்கவோ துளியும் அனுமதிக்க மாட்டார்கள். அது சட்டப்படி பிழையானதொரு செயலாகும். “இது சட்டப்படி பிழையானது. பிடிபட்டால் பெரும் சிக்கலாகி விடும்” இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனத்தின் முதலாளி ஜோகன், அன்றியாவுக்கு அறிவுரை சொன்னார். “என்னால் உங்களுக்கு ஒரு சிக்கலும் வராது” சொல்லிக் கொண்டே தனது பணப்பையை அன்றியா திறந்தாள். அல்போன்ஸின் உடல் எரிக்கப்பட்டு, அவனது சாம்பல் அழகான ஒரு குடுவைக்குள் அடக்கப்பட்டு அவளிடம் வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து அன்றியாவின் கட்டிலோடு சேர்ந்திருந்த அலுமாரிக்குள் அவளது தந்தை அல்போன்ஸ் இருந்தார். வெள்ளி,சனிக்கிழமைகளில்தான் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்டோரண்ட் நிறைந்திருக்கும். மற்றைய நாட்களில் ஓரளவு வாடிக்கையாளர்கள்தான் உணவருந்த வருவார்கள். ஞாயிற்றுக் கிழமையான அன்றும் வாடிக்கையாளர்கள் பெரும் அளவில் இல்லை. அன்றியா, உணவுகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த செய்தி அவளுக்குக் கிடைத்தது. அவளுக்குச் செய்தியைச் சொன்னவர் உணவருந்த வந்த ஒரு வாடிக்கையாளர். “ கேள்விப் பட்டனீயோ அன்றியா? ஜோகனை அறெஸ்ற் செய்திட்டாங்களாம்” “எந்த ஜோகன்?” “இறுதிச் சடங்கு நடத்துற ஜோகன்” “ஏன்? அவருக்கு என்ன பிரச்சினை?” “தில்லு முல்லுதான். ஏகப்பட்ட விசயங்கள். நூறு யூரோப் படி சவப் பெட்டிகளை வாங்கி, அப்பிடி இப்பி டி சோடிச்சு, ஏமாத்தி ஆக்களைப் பாத்து விலையை ஆயிரம், இரண்டாயிரம் எண்டு கூட்டிக் குறைச்சுக் குடுத்துப் பணம் பாத்திருக்கிறான்..” “இதிலை என்ன பிழை இருக்கு? அது வியாபாரம். வாங்கிறாக்களை அவர் ஒண்டும் கட்டாயப் படுத்த இல்லையே” “இல்லைத்தான். ஆக்களுக்கு நல்ல விலையான சவப்பெட்டிகளைக் காட்டிப் போட்டு, அடக்கம் செய்யிற போது சாதாரண பெட்டியை மாத்திப் போடுவான். சவப் பெட்டிக்கான காசும் கொம்பனிக் கணக்குக்குப் போகாது. அவன்ரை தனிப்பட்ட எக்கவுண்டுக்குத்தான் போகும்” “அப்பிடி இருக்குமெண்டோ? என்னைப் பொறுத்த வரையிலை அவர் ஒரு நல்ல மனுசன்” “ நீ அப்பிடிச் சொல்லுறாய். கனக்க விசயம் இருக்கு அன்றியா. உடலை எரிச்சுப் போட்டு, ஆக்களின்ரை அவசரத்துக்கு, ஆளாளுக்கு சாம்பல்களை மாத்தியும் குடுத்திருக்கிறான். அங்கை வேலை செய்தவன் பொலிஸுக்கு அறிவிச்சுப் போட்டான். ஆள் மாட்டிட்டான்” ஷோபாவில் இருந்த அன்றியாவின் பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையில் இருந்தது. “அப்பா உள்ளே இருப்பது நீதானா?” இது ஒரு உண்மைச் சம்பவம் “ஸ்வேபிஸ் ஹால் நகரத்தைச் சேர்ந்த, இறுதிச் சடங்கு நிறுவனத்தின் பொறுப்பாளர் ஜோகன் (33), அதிக பணத்தைப் பெற்றுக் கொண்டு, இறுதிச் சடங்குகளில், மலிவான சவப்பெட்டிகளில் இறந்தவர்களை அடக்கம் செய்தார் என்பதும், 60 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு இறந்தவர்களின் சாம்பல்களை மாற்றியும் கொடுத்திருக்கிறார் என்பதும், நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இது மனித நேயம், உணர்வுகள், உறவினர்களின் துக்கம் பற்றியது. இவை அனைத்தும் இங்கே மதிக்கப்படவில்லை, குற்றவாளி உறவினர்களின் நம்பிக்கையை மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். 102 குற்றங்களை அவர் செய்திருக்கிறார் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இவற்றுக்காக மூன்று வருடங்களும் எட்டு மாதங்களும் சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்படுகிறது” என்று தலைமை நீதிபதி 15.10.2014, புதன்கிழமை தனது தீர்ப்பில் கூறினார்
  8. Putthan, உங்களின் இந்த ஆதங்கம் என்னிடத்திலும் இருக்கிறது. பேனை பெரிதாக்கி பெருச்சாளியாக்கி பேயாகவும் காட்டியிருக்கிறார்கள். “நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டது கவலை அளிக்கிறது. ஆனலும் நிலமையைச் சீராக்கி, நிகழ்ச்சி தொடர்ந்தது” என்று தென்னிந்திய கலைஞர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், சில தென்னிந்திய ஊடகங்களும் அறியத்தந்திருக்கிறார்கள். இதற்குள் எம்மவர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து இழிந்த அரசியலும் செய்திருக்கிறார்கள். பொலிஸ் அதிகாரி சிங்களத்தில் வேண்டுகோள் விடுத்த போது, “தமிழில் கதை” என்று கத்தினார்கள். அவர் தமிழில் வேண்டுகோள் விடுத்த போதும் எம்மவர்களுக்குப் புரியவில்லை என்பது வேதனை. புலம் பெயர்ந்தவர்கள், தாயகத்தில் வந்து முதலீடு செய்துதான் பணம் பார்க்க வேண்டிய நிலையில் இல்லை. அவர்கள் பொது நலன் கருதியோ, தங்கள் புகழ் விரும்பியோ தாயகத்துக்கு உதவ முன் வரலாம். அதை தங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் திறன் அங்கு இல்லை என்பதைத்தான் நடந்த சம்பவம் காட்டியிருக்கிறது. வீழ்ந்திருந்து கொண்டு இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் வீரம் பேசப் போகிறோம்?
  9. எல்லாம் சரி. துயர் வரும் முன் காப்பதுதானே அறிவு. இந்தக் கட்டுரையை நிகழ்ச்சிக்கு முன்னர், நிலாந்தன் எழுதியிருக்கலாம். முடியட்டும், பிறகு போய் சங்கு ஊதலாம் எனும் விதமாகவே நான் இந்தக் கட்டுரையைப் பார்க்கிறேன். இனி இப்படி நடக்க விடமாட்டேன் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற பாணியில் கூட, சூளைமேட்டுச் சூரர் சமீபத்தில்அறிக்கை விட்டிருந்தார். இத்தனைக்கும் பல ஆண்டுகளாக இருக்கும் ஈழ மீனவர்களின் பிரச்சனைகளை கடற்தொழில் அமைச்சராக இருந்தும் கூட, தீர்க்க முடியாமல்தான் அவர் இருக்கிறார். “உன் பழங்காலக் கதை இங்கே யாரைக் காக்கும்?” என்றொரு பாடல் வரி இருக்கிறது. எங்கள் மூதாதையர் அப்படிச் செய்தார். இப்படி வாழ்ந்தார் என்று சொல்லிக் கொண்டே இருந்தால், நாங்கள் அங்கேயே தங்கி விட்டோம் என்றுதான் கருத வேண்டும். வெளியே வர இன்னும் பல காலங்கள் தேவைப்படும். நிகழ்ச்சியை திட்டமிடாததால்தான் குழப்பம் வந்ததா? அல்லது திட்டமிட்டு குழப்பினார்களா? என்பது கேள்வி. என்னைப் பொறுத்தவரையில், புலம்பெயர் தமிழர் ஒருவர்நீ ட்டிய கரத்தை, (அது அவரது வியாபார நோக்கமோ? அல்லது சமூக நலனோ?)தாயகத்தில் காயப்படுத்தியிருக்கிறார்கள். கட்டுரையாளர் அதற்குத் தாளம் போட்டிருக்கிறார்.
  10. நியூசிலாந்தில், எனது அம்மாவின் சாம்பலை அடுத்த நாளே வீட்டுக்கு கொண்டு வந்து தந்தார்கள். யேர்மனி சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் சாம்பலோடு சம்பந்தப்பட்ட விடயம் ஒன்று என்னிடம் கைவசம் இருக்கிறது. எழுதலாம் என்று பார்க்கிறேன். சர்வாதிகார நாட்டுப் பட்டியலிலே போட்டிருப்பார்கள்😛
  11. ‘’எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை..” இந்த சினிமா பாட்டு நினைவுக்கு வந்தது
  12. ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்தேன். கதை நீளமானதாக இருந்தாலும், வழமை போல, அவரது எழுத்து நடை, கதையை இடைவிடாமல் வாசிக்க வைத்தது. இலங்கை, பிரான்ஸ், கியூபா என்று கதையுடன் சேர்த்து நானும் பயணித்த அனுபவம் கிடைத்தது. அழகாகச் சொல்லி முடித்தார். பிரான்ஸுக்குப் பக்கத்தில்தான் யேர்மனி இருக்கிறது. இரண்டுமே ஐரோப்பிய வலயத்துக்குள்தான் இருக்கின்றன. ஆனால் இறந்தவர்களின் சாம்பல் விடயத்தில், இரண்டு நாடுகளிலும் நடை முறையில் மாற்றங்கள் இருப்பதை, ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்த போது என்னால் அறிய முடிகிறது. யேர்மனியில், பொதுவாக, இறந்தவரின் சாம்பலை மயானத்தில்தான் புதைப்பார்கள். அது மயானத்தில் உடலத்தைப் புதைப்பது போல ஒரு இடத்தில் புதைக்கப்படும். அதற்கான செலவு சில ஆயிரங்கள் ஆகும். அந்தப் பணத்தைச் செலுத்த வசதியில்லாதவர்கள் அதற்கென்று இருக்கும் குறிப்பிட்ட இன்னொரு மயானத்தில் பலரது சாம்பல் பேழைகளுடன் ஒன்றாகப் புதைப்பார்கள். அதற்கான செலவு 400 யூரோக்கள் மட்டுமே! இவ்வளவையும் சம்பந்தப்பட்ட அலுவலகர்களே உரியவர்களின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்வார்கள். அவர்களே நிர்ணயிக்கப்பட்ட நாளில் சாம்பலைக் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் முன்னிலையிலேயே சாம்பல் பேழை அடக்கம் செய்யப்படும். இறந்தவரின் சாம்பலை வீட்டுக்குக் கொண்டு சென்று வைத்திருக்கவோ, கடலிலே கரைக்கவோ, தோட்டத்தில் தாக்கவோ துளியும் அனுமதிக்க மாட்டார்கள். அது சட்டப்படி பிழையானதொரு செயல். சிலர் சுவிஸ் நாட்டுக்கு இறந்தவரின் சாம்பலை அனுப்பச் சொல்லிவிட்டு, ( அதற்குப் பணம் கொடுக்க வேண்டும்) அங்கே சென்று, தங்கள் விருப்பம் போல் செய்து கொள்வார்கள். ஒரு சிலர் தங்கள் நாட்டுக்கு இறந்தவரின் சாம்பலை எடுத்துச் சென்று, சம்பிரதாய முறைப்படி கடமைகள் செய்ய விரும்புவார்கள். இறந்தவரின் சாம்பலை அவர்கள் தம்மோடு எடுத்துச் செல்வதற்கு எந்த அனுமதியும் கிடையாது. சம்பந்தப்பட்ட அலுவலகர்களே சாம்பலை நேரடியாக குறிப்பிட்ட நாட்டுக்கு, குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள். அனுப்புவதற்கான கட்டணம் தனியாக செலுத்த வேண்டும். எந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்கிறோமா அந்த நாட்டுச் சுங்க அலுவலகம் ஊடாகப் பெற்றுக் கொள்ள ஆவன செய்வார்கள். இறந்தவரின் சாம்பலை கியூபாவுக்கு கொண்டு செல்வதையும், அதை விமானத்தில் கையில் வைத்திருப்பதாகவும், ‘சித்திரப் பேழை’யில் சொல்லி இருப்பது எனக்குப் புதுமையாக இருந்தது. பிரான்ஸ் நாட்டு நடைமுறை அப்படி.
  13. பெரிய பெரிய கட்டுரைகளையே ஒரே மூச்சில் வாசிக்கும் உங்களுக்கே, இதை வாசிப்பதற்கு இன்னும் சில வருடங்கள் வேணும் என்றால் எனக்கு இன்னும் ஒரு ஆயுள் வேண்டும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.