Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. "நான் ஆணையிட்டால்" திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலின் நடுவே, "அடிமைப் பெண்" திரைப்படத்திற்காக எம்ஜிஆர் புதுமையாக ஒரு விளம்பரத்தைச் செய்திருந்தார். "நானே எழுதி நானே நடித்த நாடகத்தில் நல்ல திருப்பம்..." என்ற பாடல் வரிகள் வரும் போது, திரையில் ‘விரைவில் வருகிறது அடிமைப் பெண்’ என்ற விளம்பரம் வரும். அடிமைப்பெண் திரைப்படத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி, ரத்னா, கே.ஆர். விஜயா மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்தனர். "அடிமைப் பெண்" திரைப்படத்திற்கான குதிரைச் சவாரிப் பயிற்சியில் நடிகை ரத்னா, குதிரையில் இருந்து தவறி விழுந்து காலை முறித்துக் கொள்ள, எம்ஜிஆரை எம்.ஆர். ராதா சுட, படம் நின்று போனது. சில காலம் கழித்து, ஜெயலலிதா மற்றும் ராஜஶ்ரீ,ஜோதிலட்சுமி போன்ற நடிகைகளை இணைத்து, எம்ஜிஆர் இப்படத்தை மீண்டும் தயாரித்தார். எம்ஜிஆர் இலங்கை சென்று திரும்பியபோது, அவரை வரவேற்கும் வகையில், "பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக..." என்ற பாடல் எழுதியிருந்தார் ஆலங்குடி சோமு. இந்த பாடலை எம்.எஸ்.வி இசையமைக்க சுசிலா பாடியிருந்தார். அந்தப் பாடலை ஆர்.எம். வீரப்பன் மெரீனா கடற்கரையில், நடந்த வரவேற்பு விழாவில் ஒலிக்கவிட்டார். பின்னர் இந்த பாடலை, ஆர்.எம். வீரப்பன் தனது தயாரிப்பான "நான் ஆணையிட்டால்" படத்திலும் பயன்படுத்தியிருந்தார்.
  2. 2004இல “சந்தைக்கு வந்த கிளி” என்ற தலைப்பில் யாழில் எழுதியிருந்தேன். தேடிப் பார்த்தேன் கிளி அகப்படவில்லை. எனது கிராமம் நகரத்திலிருந்து இரண்டு மைல் தள்ளியே இருந்தது. எனது கிராமத்திலே ஒன்றுக்கு மூன்று கடைகள் இருந்ததால் எங்கள் தேவை அங்கேயே பூர்த்தியாகிவிடும். முக்கியமான பொருட்கள் வாங்குவதாயிருந்தால் அல்லது வங்கி, அஞ்சல் அலுவலகம், சினிமா இப்படி ஏதாவதற்குப் போக வேண்டிய தேவை இருந்தால் மட்டுமே நகரத்துக்குப் போவோம். மரக்கறி, மீன்வகைகள்கூட கிராமத்திற்கு வந்துவிடும். இதில் மீன் கொண்டுவருபவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கே வருவார்கள். அவர்கள் நகரச் சந்தையில் கொள்வனவு செய்து ஒவ்வொரு கிராமங்களாக விற்று வருவார்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்கப்படாவிட்டால் மீன்கள் பழுதடைந்து விடும். அதானால் எல்லா வியாபாரிகளும் எப்பொழுதும் ஓட்டமும் நடையுமாகவே இருப்பார்கள். இதற்குள் வியாபாரிகளுக்குள் போட்டியிருப்பதால் நான் முந்தி நீ முந்தி என்று ஓடியோடியே வியாபாரம் செய்வார்கள். இதில் குறிப்பிடப் படவேண்டியது என்னவென்றால் எல்லா வியாபாரிகளும் பெண்களாகவே இருப்பார்கள். ஓலைப் பெட்டியில் மீன்களை வைத்து மூடியபடியே சுமந்து வருவார்கள். மீன்பெட்டியைக் கீழே வைத்து திறந்தவுடன் எல்லோரும் இன்றைக்கு என்ன மீன் என்று ஆவலாக எட்டிப் பார்ப்பார்கள். அதுவரைக்கும் இன்றைக்கு என்ன மீன் சமைக்கலாம் என்பது அவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸாகவே இருந்திருக்கும். நிட்சயமாக நண்டு, இறால், கணவாய் என்பது இவர்களிடம் இருக்காது. அவைகளை வாங்குவதாயின் சந்தைக்குத்தான் போக வேண்டும். சந்தையில் அன்றைக்கு என்ன மீன் வகைகள் மலிவோ அது அவர்கள் பெட்டியில் நிறைந்து இருக்கும். சந்தையிலுள்ள விலையைவிட எப்படியும் இரண்டு மூன்று மடங்கு அதிகமாகவே அவர்கள் விலை சொல்வார்கள். அவர்கள் கூறும் விலைக்கு யாருமே வாங்கமாட்டார்கள். எல்லா அம்மாமார்களும் பேரம் பேசித்தான் வாங்குவார்கள். எனது வீட்டுக்கு அருகேயிருக்கும் ஒழுங்கையிலுள்ள அரசமரத்தடிதான் இந்த மினி சந்தை. இல்லத்தரசிகள் அந்த மரத்தடி நிழலில் காத்திருந்து அந்த வழியாகப் போகும் மீன் வியாபாரிகளை மறித்து மீன் வாங்குவார்கள். மரத்தடியில் வாங்குபவர் தொகை குறைவாயிருந்தால் வியாபாரி நிற்கமாட்டார். அவர் அடுத்த கிராமத்திற்குப் போக துரிதம் காட்டுவார். நான் பலமுறை அம்மாவுடன் இந்த இடத்திற்குப் போயிருக்கின்றேன். அம்மா பேரம்பேசி மீன் வாங்குவதை ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு சனிக்கிழமை நண்டு வேணும் என்று அம்மாவைக் கேட்டேன். சந்தைக்கு யாரும் போனால் சொல்லிவிடுகிறேன் என்று அம்மா சொன்னா. ஆனால் சந்தைக்குப் யாரும் போவதாகத் தெரியவில்லை. எனவே நானே போய் வாங்கி வருவதாக அம்மாவிடம் சொன்னேன். அம்மா சிரித்துக் கொண்டே, „ என்னாலையே இஞ்சை இவளுகளிட்டை கதைச்சு மீன் வாங்கேலாமலிருக்கு... நீ.. என்னத்தை வாங்கப் போறாய்..? உன்னை ஏமாத்தி பழுதானதெல்லாத்தையும் தந்து விடுவாளுகள்.. பிறகு அடுத்த கிழமை பாப்பம் „ என்றா. ஆனாலும் நான் நம்பிக்கை தெரிவித்ததால், எனது விருப்பத்துக்கு குறுக்கே நிற்க விருப்பமில்லாமல் பணத்தைத் தந்து வழியனுப்பி வைத்தா. நகரத்து மீன் சந்தை ஈக்களாலும், ஆட்களாலும் நிறைந்தே இருந்தது. ஏலம் கூறுவது, கூவி விற்பது, பேரம் பேசுவது என்று சந்தை சத்தத்தில் மூழ்கியிருந்தது. கையில் பையுடன் உள்ளே நுழைகிறேன். தரையில் அமர்ந்து பெட்டியின் மூடிமேல் மீன்களை பரப்பி வைத்து பெண்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். நண்டு பரப்பி வைத்திருந்த பெட்டியின் முன்னால் போய் நின்றேன். "வா... ராசா.. நண்டு வேணுமே.. நல்ல நண்டு.. பொம்பிளை நண்டு .. மலிவா போட்டுத்தாரன்.. எத்தினை வேணும்..?" வியாபாரியின் கனிவான பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அன்பான வரவேற்பு. நண்டுப் பெட்டியின் முன்னால் குந்தினேன். ஒரு நண்டின் காலைப் பிடித்துத் தூக்கிப் பார்த்தேன். பாரமாகத்தானிருந்தது. " பாத்தியே.. நல்ல சதையிருக்கு.." சொல்லியபடியே என் கையில் இருந்த நண்டை வாங்கி மீண்டும் பெட்டியில் வைத்தார் வியாபாரி. " என்ன விலை?" விலையைச் சொன்னார். அம்மா பேரம் பேசி வாங்குவது நினைவுக்கு வந்தது. வியாபாரி சொன்ன விலையை மனதுக்குள் இரண்டால் வகுத்துக் கொண்டேன். இப்போ அவர் சொன்ன விலைக்கு பாதி விலை கேட்டேன். பெரிதாக இடி விழத் தொடங்கியது. இடிவிழுந்தால் அர்ச்சுனா.. அர்ச்சுனா.. என்று சொல்லிக் கொண்டு இரண்டு கைகளாலும் காதைப் பொத்த வேண்டும் என்று சொல்வார்கள். இங்கும் காதை இறுகப் பொத்திக் கொண்டு அசிங்கம்.. அசிங்கம் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. வியாபாரியின் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகள் இதுவரை நான் கேட்காத வார்த்தைகள். அத்தனையும் தமிழில்தான். தமிழில் இவ்வளவு கெட்ட வார்த்தைகளா? கேட்டதில் காது வெட்கப் பட்டது. ஆகவே எழுதுவது இயலாது. "...................... வந்திட்டார் bagஐயும் தூக்கிக் கொண்டு.................." பேச்சின் அதிர்ச்சியால், குந்தியிருந்த நான் இப்போ பின்னால் கைகளை ஊன்றி கால்களை நீட்டி தரையில் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன். சந்தையின் சத்தம் அடங்கியது போல இருந்தது. எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற பிரமை. கூனிக் குறுகியபடி மெதுவாக எழுந்து, காற்சட்டையில் ஒட்டியிருந்த மண்ணைக் கூடத் தட்ட முடியாதவயனாய் சந்தையை விட்டு வெளியே வந்தேன். " என்னாலையே இஞ்சை இவளுகளிட்டை கதைச்சு மீன் வாங்கேலாமலிருக்கு... நீ.. என்னத்தை வாங்கப் போறாய்..? ..." அம்மாவின் வார்த்தைகள் காதில் ஒலித்தன. ஓங்கி அழவேண்டும் போலிருந்தது. சந்தைக்கு வெளியேயும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவேயிருந்தது. தன்மானம் விடவில்லை அடக்கிக் கொண்டேன். பஸ் நிலையத்தில் எனது கிராமம் வழியாகப் போகும் 750 இலக்க பஸ் இற்குப் பின்புறமாக நின்று ஒரு பத்து வயதுச் சிறுவன் கேவிக் கேவி அழுது கொண்டிருந்ததை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.
  3. பாலமுரளி கிருஸ்ணா அநேகமாக அன்றைய இசையமைப்பாளர்களின் இசையில் குறைந்தது ஒரு பாடலையாவது பாடியிருப்பார். நான் முதலில் கேட்டது பாலமுரளி கிருஸ்ணாவின் , கலைக்கோயில் திரைப்படத்தில் இடம் பெற்ற “தங்கரதம் வந்தது வீதியிலே…” என்ற இந்தப் பாடலைத்தான். கே.வி.மகாதேவன் இசையில் திருவிளையாடல் படத்தில் பாலமுரளி கிருஸ்ணா பாடிய“ஒருநாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?” பாடல் அதிகம் இரசிக்கப்பட்ட பாடல். பாடலின் இசை, பாலமுரளி கிருஸ்ணாவின் குரல், அத்துடன் பாலையாவின் நடிப்பு என்று எல்லாமே அற்புதம்.
  4. ஜோன் மகேந்திரன் குறிப்பிடும் அந்தப் பெரிய நடிகர் நம்முடைய “புரட்டுத் தமிழனாக’ இருக்குமோ?
  5. கஸ்டம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அந்த நாட்களில் புலம்பெயர்வு என்பது போரின் பின்னணியில்தான் இருந்தது. இன்று போல இலவச தொலைத்தொடர்பு வசதிகள், சமூக ஊடகங்கள் எதுவும் இல்லை. ஊரில் ஏதாவது நிகழ்ந்தால், வேலை முடிந்தவுடன் பதற்றத்தோடன் ஓடி வந்து தொலைபேசியில் ஊருக்குப் பேசினாலே, அந்த மாத சம்பளத்தில் பாதி போய்விடும். அவசரத் தேவை என்று அவர்கள் கேட்டு பணம் அனுப்பினால், “எங்கடை வீட்டுக்கு அவசரத் தேவை ஒன்றும் கிடையாதுதானே” என்ற முணுமுணுப்பு இங்கே வந்துவிடும். முதல் புலம் பெயர்ந்தவர்கள், எப்போதும் நாட்டில் உறவுகளுடன் ஒட்டியே இருந்தார்கள். ஊரில் இருந்த உறவுகளின் வாழ்வாதாரத்தை இவர்களே பார்த்துக் கொண்டார்கள். இங்கே பிள்ளைகள், குடும்பம், அங்கே உறவுகள் எல்லாவற்றுக்குமாக முழு நேரம், பகுதி நேரம் என வேலைகள் செய்தார்கள். ஓய்வில்லை, பொழுது போக்குகள், விளையாட்டுக்கள் எதுவுமேயில்லை. வாழும் நாட்டவர்களோடு பழக முடியவில்லை. வாழும் நாட்டின் பழக்க வழக்கங்களுடன் ஒன்றிப் போக முடியவில்லை. தன் வரம்புக்கு மீறிய சுமைகள். அதைச் சுமந்து நடந்த கால்கள், இன்று தள்ளாட வைக்கிறது. அநேகருக்கு முழங்கால் முக்கிய பிரச்சினையாகிப் போனது. இலங்கையரின் பாரம்பரிய நீரழிவு நோயும் சேர்ந்து கொண்டிருக்கிறது. உடல் உழைப்பும், மன அழுத்தமும் சேர்ந்து இன்று அவர்களுடைய உடல்நலத்தை பாதித்திருக்கிறது. மூட்டுவலி, நீரழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவை (முதல் புலம் பெயர்ந்தவர்கள்) பலருக்கு இன்று சாதாரண நிலையாகவே போய்விட்டன. மகனோ? மகளோ? ‘இனி உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என இவர்களால் ஒதுங்கிப் போக முடியவில்லை. ஏனென்றால் இன்னமும் இவர்கள் தங்களது வடிவத்தை விட்டுக் கொடுக்காமல் பாரம்பரியம், பண்பாடு பேணுகிறார்கள். அதனால், முகநூலில் அவர் குறிப்பிட்டது போல் பிள்ளைகளும் தங்களது தேவைகளுக்கு இவர்களை இலகுவாகப் பயன்படுத்த முடிகிறது. நீங்கள் குறிப்ப்பிட்ட பணப் பிரச்சினை எல்லா இடத்திலும் இருக்கிறது. யேர்மனியில் ஓய்வூதியம் பெற வேண்டுமாயின் 67 வயதுவரை உழைக்க வேண்டும் 45 வருடங்கள் வேலை செய்திருந்தால் மட்டுமே வெட்டுக்கள் கொத்துக்கள் இல்லாமல் முழுமையான பென்சன் கிடைக்கும். வாழ்வாதாரத்துக்கு வரும் பென்சன் காணாது என்று சமூகநல உதவி கேட்டால் சொத்துக்களை காட்டு என்பார்கள். கடந்த பத்து வருடங்களில் சொத்துக்கள் விற்கப்படனவா? அல்லது மாற்றப்பட்டனவா? என்பதைச் சொல்லவும் வேண்டும். 80களில் வந்தவர்களில் ஓரளவு வயதில் முதிர்ச்சியாக இருந்தவர்களால் நல்ல பென்சன் எடுக்க வாய்ப்பில்லை. நான் யேர்மனிக்கு வந்த போது யாருமே எனக்கு முன்னர் அறிந்தவர்களாக இருக்கவில்லை. வழிகாட்ட யாரும் இருக்கவில்லை. பின்னாட்களில் வந்தவர்களுக்கு அந்த நிலை இல்லை. சொல்லித் தரவும் உதவிகள் செய்யவும் யாராவது இருக்கிறார்கள். எங்கள் வாழ்க்கையை மிக அடிமட்டத்தில் இருந்தே கட்ட எழுப்ப வேண்டி இருந்தது. இந்த நிலை அடுத்த சந்ததிக்கு இல்லை. அவர்களுக்கு ஏதும் தேவையென்றால் உடனே கண்ணுக்குத் தெரிபவர்கள் பெற்றோர்கள்தான். ஆக தொல்லைகளும், சுமைகளும் தொடரத்தான் செய்கின்றன. கோசன் சார் மொழி தெரியாது எழுந்து நின்று முழித்த கதையொன்றை போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறேன். அப்பொழுதெல்லாம் அகதியாகப் போன தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை சுவிஸ் நாட்டில் இருந்தது. யேர்மனியில் இருந்த தமிழர்களில் சிலர் அங்கு போவதற்கு களவாக ரயிலில் பயணிப்பார்கள். இரவு இரயிலில் பயணிகளின் சீட்டுக்கு அடியில் படுத்துக் கொண்டால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஒரு தடவை நம்மவர் ஒருவர் சீட்டுக்கு அடியிலே படுத்திருந்தார். அவர் படுத்திருந்த பெட்டிக்குள் வந்த ரிக்கெற் பரிசோதகர், “மோர்கன்” எனச் சொல்லிக் கொண்டு அங்கிருந்தவர்களின் ரிக்கெற்றை பரிசோதித்துக் கொண்டு வந்தார். திடேரென பயணிகளின் கால்களை விளக்கிக் கொண்டு நம்மவர் வெளியே வந்து எழுந்து நின்றார். பயணிகளும், பரிசோதகரும் திகைத்து நின்றிருந்தார்கள். (Guten) Morgen என்றால் காலை வணக்கம். ஆனால் கீழே படுத்திருந்த நம்மவருக்கு, எப்படி என் பெயர் ரிக்கெற் பரிசோதகருக்குத் தெரிந்தது? யாரோ போட்டுக் கொடுத்து விட்டார்கள். அது யாரா இருக்கும்? என்ற கேள்வி. அவரின் பெயர் மோகன்.
  6. உண்மைதான். கண்ணதாசன் சபையினிலே இரவும் இல்லை பகலும் இல்லை ஒரே கொண்டாட்டம்தான்.
  7. "என்ன சார் இப்படி சொல்லிப் போட்டீங்க?" முகநூலில் அவர் குறிப்பிட்டிருப்பது தொன்னூறுகளில் நடந்த இடம் பெயர்வுகளைப் பற்றியதாக இருந்தது. ஆனால் அதற்குமுன்பே, எண்பதுகளில் பெரிய அளவில் இடம் பெயர்வுகள் நடந்திருந்தன. பல சிரமங்களின் மத்தியில் தான் அந்த வாழ்க்கை இருந்தது. 1983, 1984 காலப்பகுதியில் பலருக்கும் யேர்மனி ஒரு இடைநிலையாக இருந்தது. இங்கிருந்து தான் பலர் பிற நாடுகளுக்குப் போனார்கள். 1985-இல் இங்கிலாந்து ஈழத் தமிழர்களுக்காக கதவைத் திறந்தபோது, பலர் எளிதாக அங்கு சென்றுவிட்டார்கள். ஆனால் இது தொடர்ந்தால் கட்டுக்குள் இருக்காது, முழுத் தமிழர்களும் வந்துவிடுவார்கள் என்ற பயத்தில், அந்தத் திறந்த கதவை இங்கிலாந்து மெதுவாக மூடிக் கொண்டது. மற்ற நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் யேர்மனியில் அந்த நேரத்திலிருந்த வாழ்க்கை எளிதானதல்ல. சிலரால் ஒரு மாதம் கூடத் தாங்க முடியாமல் திரும்பிப் போய்விட்டார்கள். "நான் அவனைப்போல திரும்பப்போக ஏலாது. காணி வித்து அம்மா அனுப்பியிருக்கிறா? நகை வித்து அனுப்பினவையள்…" என்று பலர் புலம்பிக்கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன். யேர்மனியில் அகதிகளை ஏற்றுக் கொள்வதில் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி கொள்கைகளைக் கொண்டிருந்தன. நான் இருந்த Baden-Württemberg மாநிலத்தில், அகதிக்கான விசாரணையை நேரத்தில் நடத்தாமல் இழுத்தடித்தார்கள். விசாரணை நடந்த பிறகும் முடிவுகள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால், சுமார் இரண்டு வருடங்கள் அகதிகள் முகாம்களிலேயே நான் இருந்தேன். சாப்பாடு, உடை ஆகியவையுடன், மாதச் செலவுக்கு கையில் 60 மார்க்குகள் தந்தார்கள். என்னுடன் பழகிய சிலர் கனடா, பரீஸ், கொலண்ட், டென்மார்க், லண்டன் போன்ற நாடுகளுக்குப் போய்விட்டார்கள். அவர்களில் சிலர் யேர்மனியின் வடமாநிலங்களில் அகதிகளைக் ஏற்றுக் கொண்டு வேலை செய்ய அனுமதிக்கிறார்கள் என்ற செய்தியை நம்பி அங்கே போய் புதிய விண்ணப்பம் செய்தார்கள். ஆனால் கைரேகையில் மாட்டிக்கொண்டு, மீண்டும் முகாமுக்குத் திரும்பி வந்தார்கள். ஒருவாறு, 1986 இலையுதிர் காலத்தில் வசந்தம் வீசத் தொடங்கியது. அகதிகளுக்கு வேலை செய்ய அனுமதி அப்போது கிடைத்தது. வேலை கிடைத்தவர்கள் முகாமைவிட்டு தனியாக வீடு எடுத்துக்கொண்டு வசிக்கலாம் என்ற ஒளி மின்னத் தொடங்கியது. ஆனால், ஒருவர் அகதிக்கான உரிமை பெறும்வரைக்கும், அவர் வசிக்கும் நகரத்தைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்ற அறிவுறுத்தலும் அப்போது இருந்தது. இன்னும் பல சிரமங்களும் அதனோடு சேர்ந்த நல்ல அனுபவங்களும் கிடைத்திருக்கின்றன. இன்றுவரை அவை நினைவில் இருக்கின்றன. கோசான் சார், இப்போ சொல்லுங்கள். நாங்கள் அனுபவித்த சிரமங்கள் கூடுதலா இல்லையா?
  8. தேங்காய் சீனிவாசன் ஏழெட்டு திரைப்படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். சில படங்களில் வில்லனாகவும் வந்து போயிருக்கிறார். ஆனாலும் அவரது நகைச்சுவை நடிப்பு எனக்குப் பிடிக்கும். ‘மஞ்சள் பூசி தஞ்சம் பொண்ணட ராமா..’ என்ற இந்தப் பாடல் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. கோவை சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வர பாடியிருப்பார்கள்.
  9. அந்த வயதில் அநேகமானவர்கள் உங்களை, என்னைப் போலவே இருந்திருப்பார்கள். கடைக்கு பொருட்களை வாங்கி வரும்படி அனுப்பினால் அதிலும் ஏதாவது அமுக்குவதுண்டு. “இண்டைக்கு சந்தையிலே ஏதும் வாங்க வேணுமோ?” என்று கேட்டாலே போதும், “பெடியனுக்கு ஏதாவது காசு தேவைப் படுது” என்று அம்மாவுக்குப் புரிந்து விடும். என்ன ஒரு ஜம்பத்தைந்து சதம் இருந்தால் போதும். ஒரு மெட்னி ஷோ பாத்து விடலாம். அதுக்காக கீரையில் இரண்டு சதம் மீனில் பத்து சதம்… என்று கணக்குப் போட்டு எவ்வளவு சிரமத்தின் மத்தியில் காசு சேர்த்திருக்கிறேன். இப்போ எல்லாம் கணக்குப் போடுவதில்லை. அம்மா மாதிரி மனைவி இல்லை.
  10. இதே எண்ணம் எனக்கும் இருந்தது. பாப்பரசர் மறைவு என்பதால் நாகரீகம் கருதி படத்தை வேறு விதமாக அமைத்தேன்.
  11. அதை பொன்னம்பலம் மாஸ்டரிடம் கொடுத்தோம். அவர் அந்தப் பணத்தை பாடசாலை வாசிகசாலைக்கு புத்தகங்கள் வாங்குவதற்குத் தந்துவிட்டார்.
  12. இந்தக் கதை எனது ‘நெஞ்சில் நின்றவை’ பதிவுகளில் வெளிவந்ததுதான். கோபிசங்கர் எழுதியிருக்கும் ‘தண்டனையே குற்றம்’ https://yarl.com/forum3/topic/301723-தண்டனையே-குற்றம்-t-gobyshanger/ இந்த நினைவை எனக்கு மீண்டும் நினைவூட்டியிருக்கிறது 1968, ஒன்பதாவது வகுப்பு. இரசாயனவியல் ஆசிரியரான பொன்னம்பலம் மாஸ்ரர்தான் எங்களது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அதுவும் ஒரு சில மாதங்களே. திடீரென அவருக்கு இடமாற்றம் வந்ததால் நல்லதொரு ஆசிரியரை இழக்கும் நிலை எங்களுக்கு. அவருக்கு பிரியாவிடை வைப்பதற்கு மேல் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்து 9, 10, 11, 12 விஞ்ஞான வகுப்பு மாணவர்களிடம் தலைக்கு இரண்டு ரூபா (அப்போதெல்லாம் இரண்டு ரூபா என்பது பெரிய காசு) வாங்கிக் கொண்டார்கள். இந்த பிரியாவிடை விடயத்திற்கு பொறுப்பாக இருந்தது 12வது படித்துக் கொண்டிருந்த மாணவர் தலைவன் ரவி. அவன் நாட்டில் ஒரு சட்டத்தரணியாகி, பருத்தித்துறை நகரபிதாவாக இருந்து சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டான். ரவியின் தம்பி சபா எனது வகுப்பில்தான் படித்துக் கொண்டிருந்தான். ஆதலால் இந்த பிரியாவிடை விடயம் எங்களது வகுப்பிலும் தடல் புடலாகப் பேசப்பட்டது. பிரியாவிடை நிகழ்ச்சிக்கு சில வாரங்களுக்கு முன்னால் அதிபர் தங்கராஜா மாஸ்ரரிடமிருந்து நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாணவர்களிடம் ஒரு குழப்பமான சூழ்நிலை. இதில் முன்ணணியில் செயற்பட்டு வந்த ரவி, சபா இருவருக்கும் தன்மானப் பிரச்சினை. பாடசாலை பிரியாவிடை செய்வதால் மாணவர்கள் தனியாக பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தத் தேவையில்லை என்பது அதிபரின் வாதம். மாணவர்களிடம் நிதி வசூலித்த பின்னால் நிறுத்த முடியாது என்பது மாணவர் தலைவரது கருத்து. இவர்களுக்கு நடுவில் பாவம் மாணவர்களாகிய நாங்கள். பிரியாவிடை நிகழ்ச்சியை மாணவர்கள்தான் நடத்த வேண்டும் என்பதில் ரவி பிடிவாதமாக இருந்தான். அவனுக்குப் பின்னால் சில ஆசிரியர்களும் இருந்தார்கள் என சாடைமாடையாக சிலர் பேசிக் கொண்டார்கள். அதிபர் தங்கராஜா மாஸ்ரரோ அமைதியாக இருந்தார். மாணவர்களிடம் வசூலித்த பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென அதிபரிடமிருந்து இறுதி அறிவிப்பு வந்தது. எனக்கு மனதுக்குள் சந்தோசம். பிரியாவிடைக்கு அம்மாவிடமிருந்து பணம் வாங்கியாயிற்று. பணம் திருப்பித் தரப்பட்டால் அதை எனது வேறு தேவைக்குப் பயன் படுத்தலாமென கணக்குப் போட்டுக் கொண்டேன். நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட விசயம் அம்மாவுக்கு எங்கே தெரியப் போகிறது? கணக்குகள் எப்பொழுதும் சரிவராது. நான் போட்ட கணக்கும் தப்பாகப் போயிற்று. ஒருநாள் மாணவர் தலைவரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. “அதிபர் தங்கராஜா மாஸ்ரர் எங்களது நிகழ்ச்சியை மறுப்பதால் கச்சேரியிலுள்ள கல்வித் திணைக்களத்தில் இது விடயமாக முறைப்பாடு செய்ய உள்ளோம் ஆகவே நாளை காலை எட்டு மணிக்கு விஞ்ஞான வகுப்பு மாணவர்கள் பாடசாலை முன்னால் கூடவும். போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் போக்குவரத்துக்கான செலவாக ஒரு ரூபா கொண்டு வரவும்” அநேகமான மாணவர்கள் ரவியின் பின்னால் நின்றார்கள். போதாதற்கு சபா எனது வகுப்பிலிருந்து எல்லோருக்கும் உரு ஏத்திக் கொண்டிருந்தான். ஆகவே இவர்களது பேச்சுக்கு எடுபடுவது தவிர வேறு மார்க்கம் எனக்கிருக்கவில்லை. முதலில் அம்மா இந்த விடயத்துக்கு ஒத்துவரவில்லை. ஆனாலும் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் பங்கு கொள்வதை அறிந்த பின்னரே ஒரு ரூபா தந்தார், அதுவும் மனமேயில்லாமல். கச்சேரிக்கான பயணம் பாட்டுக்கள் துள்ளளுடன் மகிழ்வாக இருந்தது. கச்சேரி வாசலில் எங்கள் வண்டிகள் மறிக்கப்பட்டன. வாசலிலேயே நாங்கள் கொண்டு போன புகார் வாங்கப்பட்டது. “உடனடியாக எல்லோரும் பாடசாலை திரும்ப வேண்டும்” என கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டோம். தங்கராஜா மாஸ்ரருக்கு கச்சேரியிலும் அதிக செல்வாக்கு இருந்தது பின்னர்தான் தெரியவந்தது. எது எப்படியோ எனது முதல் போராட்டம் மூன்று ரூபாக்கள் நட்டத்துடன் தோற்றுப் போனது. அடுத்தநாள் வகுப்பறை கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது. ‘நேற்று பாடசாலைக்கு வரரத மாணவர்கள் அதற்கான காரணத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் இருந்து எழுத்து மூலமாகப் பெற்று அதிபரிடம் சமர்ப்பித்து அதன் பின்னரே வகுப்பறைக்கு வரவும்’ பாண்டிய மன்னனின் பிரம்படியை விட தங்கராஜா மாஸ்ரரின் பிரம்படி எப்படியிருக்குமென்று அந்த சிவனுக்கே தெரியும். நெருப்பில் சுட்டு நுனி கறுத்திருந்த பிரம்பு நினைவில் வந்து கலக்கியது. எல்லோரையும்விட அதிகமாகக் கலங்கிப் போயிருந்தது ரவியும், சபாவும்தான். எல்லோரும் ரவியின் வீட்டில் கூடினோம். தனது மகனால்தான் இவ்வளவும் என்பதை அறிந்து ரவியின் தந்தை எங்களுக்கு உதவ வந்தார். அவர் தங்கராஜா மாஸ்ரரை அவரது இல்லத்தில் சந்தித்து எங்களுக்காக கதைத்துப் பார்த்தார். பாடசாலைக்கு வரமுடியாமற் போனதற்கான காரணத்தை எழுத்து மூலமாக ஒவ்வொரு மாணவரும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் தங்கராஜா மாஸ்ரர் உறுதியாக இருந்தார். சரி ஏதாவது ஒரு காரணத்தை எழுதி கொண்டுபொய்க் கொடுங்கள். பிரச்சினை வராது என்று ரவியின் தந்தை உறுதி தந்தார். இது விசயமாக வீட்டில் கேட்டால் அங்கேயும் பூசை நடக்குமென்பதால் நாங்களே கடிதங்களைத் தயாரித்துக் கொண்டோம். எனது அம்மம்மா காலமாகிவிட்டார் என்று எனக்கான காரணத்தைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிக் கொண்டேன். அடுத்தநாள் கடிதங்களுடன் மண்டபத்தில் கூடினோம். மண்டபதின் ஒரு வாசலினூடகத்தான் அதிபரின் அறைக்குச் செல்ல வேண்டும். நான்கு நான்கு பேராக உள்ளே அழைத்தார்கள். துணிவுள்ளவர்கள் (இல்லையென்றாலும் இருப்பதாகக் காட்டிக் கொண்டு) முன்னுக்குப் போனார்கள். உள்ளே போனவர்கள் பிறிதொரு வாசலினூடக அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தார்கள். எனது முறை வந்தது உள்ளே போனேன். என்னுடன் சங்கர், முகுந்தன், நடராஜா ஆகியோரும் உள்ளே வந்தார்கள். முறிந்து சிதறிய பிரம்புத் துகள்கள் நிலத்தில் இருந்து பயமுறுத்தின. தங்கராஜா மாஸ்ரரைப் பார்க்கும் துணிவில்லை. முகத்தை எவ்வளவு பாவமாக வைத்திருக்க முடியுமோ அப்படி வைத்திருந்தேன். கிளாக்கர் வந்து எங்களிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டார். என்ன எழுதியிருக்கு? சிங்கம் கர்ஜித்தது. நாலு பேருக்கும் அம்மம்மா செத்துப் போச்சாம் கிளாக்கர் ஏளனமாகச் சொல்லி விட்டு கடிதங்களை மேசையில் வைத்தார். பரீட்சையில்தான் பார்த்து எழுதுவார்கள் என்று சொல்வார்கள். கடிதத்தில் உள்ள காரணத்தையும் பார்த்து எழுதியதை அன்றுதான் பார்த்தேன். தங்கராஜா மாஸ்ரர் கிளாக்கரை நோக்கி கண் அசைத்தார். சுவரைப் பார்த்தபடி நால்வரும் நிறுத்தப் பட்டோம். குனிந்து கால் பெருவிரலை கைகளினால் பிடிக்கும் வண்ணம் பணிக்கப்பட்டோம். நாலுபேருக்கும் ஒரே அம்மம்மாவா? வேறை வேறையா? தங்கராஜா மாஸ்ரர் கேட்பது கேட்டது. அதுக்குப் பிறகு எதுவுமே நினைவில்லை. சுளீர், சுளீர் என்று பிற்பக்கத்தில் பிரம்பின் இரண்டு இழுவைகள். தண்ணீரில் இருந்து வெளியில் போட்ட மீன் கூட என்னளவுக்குத் துள்ளியிருக்காது. வகுப்பறைக்கு வந்தால் எனக்கு நாலு, எனக்கு மூன்று , எனக்கு இரண்டு என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள். பேசும் நிலையில் நானில்லை. மூன்று ரூபா கொடுத்து இரண்டு சுளீர் வாங்கிய கெட்டித்தனத்தைப் பற்றி பேச என்னயிருக்கிறது?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.