Everything posted by ஏராளன்
-
'கூட்டாக இனத்தை அழிக்கின்ற மனோநிலை ஸ்ரீலங்கா அரசிற்கு தொடர்ந்தும் இருந்திருக்கின்றது என்பதையே மனித புதைகுழிகள் வெளிப்படுத்தியுள்ளன" - செம்மணி மனித புதைகுழி அகழ்வை பார்வையிட்ட கஜேந்திரகுமார்
Published By: RAJEEBAN 27 JUL, 2025 | 11:28 AM கூட்டாக இனத்தை அழிக்கின்ற மனோநிலை ஸ்ரீலங்கா அரசிற்கு தொடர்ந்தும் இருந்திருக்கின்றது என்பதையே செம்மணி மனித புதைகுழியும் ஏனைய மனித புதைகுழிகளும் வெளிப்படுத்தியுள்ளன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- இதுவரையில் 89 உடல்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன, மேலதிகமாகவும் பல உடல்கள் உறுதிப்படுத்தப்படக்கூடிய நிலையில் காணப்படுகின்றன. இந்த மனிதப்புதைகுழி என்பது கிட்டத்தட்ட 96ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மூடிமறைக்கப்பட்ட ஒரு விடயம். அப்போது செம்மணியில் 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அன்றைய சந்திரிகாகுமாரதுங்க அரசாங்கம் அன்றைய வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை பயன்படுத்தி இது கிருஷாந்தி குமாரசுவாமி கொலைவழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட சோமரட்ண ராஜபக்ச எரிச்சலால், அரசாங்கத்தின் மீதான கோபத்தில் சொன்ன பொய் என்ற கோணத்தில் உலகையே நம்பவைத்ததுதான் அன்றைய காலத்திலிருந்து இன்றுவரைக்கும் காணப்படுகின்றது. போர் நடைபெற்ற கடைசிக்காலப்பகுதியிலே இடம்பெற்ற இனஅழிப்பை கூட மூடிமறைத்து ஒரு உள்ளக விசாரணை என்ற பெயரிலே, அதனையும் படிப்படியாக குறைத்து அதனையும் உண்மையும், நல்லிணக்க ஆணைக்குழுவுடன், எந்தவித குற்றவியல் விசாரணைகளையும் நடத்தாமல் மூடிமறைப்பதை தான் மாறிவந்த ஒவ்வொரு அரசாங்கமும் செய்துகொண்டிருந்தது. முற்றுமுழுதாக மறைப்பதற்கான ஒரு முயற்சியை சர்வதேச சமூகமும் சேர்ந்து செய்து வந்த செயலில்தான் இந்த செம்மணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரை செம்மணி கண்டுபிடிப்பு இரண்டு விடயங்களிற்கு முக்கியமானது. ஒன்று இன அழிப்பிற்கு இது ஒரு முக்கியமான ஆதாரம், கூட்டாக இனத்தை அழிக்கின்ற மனோநிலை ஸ்ரீலங்கா அரசிற்கு தொடர்ந்தும் இருந்திருக்கின்றது . அது ஒரு குறிப்பிட்ட சம்பவம் மாத்திரமல்ல, அது தொடர்ச்சியாக காலம்காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. செம்மணியொன்று, முல்லைத்தீவிலே கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி, மன்னார் இவை எல்லாம் எதனை வெளிப்படுத்துகின்றது என்றால் , கூட்டாக அழிக்கின்ற ஸ்ரீலங்கா அரசின் மனோநிலையையே இவை வெளிப்படுத்தியுள்ளன. சர்வதேச சமூகம் விசாரணைகளை இறுதிப்போரின் இறுதிகாலகட்டத்துடன் மட்டுப்படுத்த முயல்கின்ற நிலையில் செம்மணி மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட அவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணைகளை மட்டுப்படுத்துவது பொருத்தமற்றது, நீதியானது இல்லை என்பதை சொல்லிநிற்கின்றது, நிரூபித்திருக்கின்றது. அனைத்து கோணங்களிலும் நாங்கள் பார்க்கின்ற போது தமிழர்களின் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை தேடுகின்ற இந்த போராட்டத்தினை நாங்கள் அவதானிக்கின்ற போது செம்மணி ஒரு திருப்புமுனை என்றுதான் சொல்லவேண்டும். உண்மையிலேயே நாங்கள் கிருபாகரனிற்கும் நன்றி சொல்லவேண்டும். அவர் இந்த விடயத்தை எங்களிற்கு சொன்னது மாத்திரமல்ல, அவர் அரியாலை பகுதியை சார்ந்தவர் என்ற அடிப்படையிலே அந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை தனிப்பட்ட முறையில் அறிந்தவர் என்ற அடிப்படையில் இது செம்மணியின் ஒரு அங்கம் என்பதை எங்களிடம் ஆணித்தரமாக சொன்ன இடத்தில்தான் அவர் அந்தவிடயத்தை எடுத்து பொலிஸிற்கு முறைப்பாடு செய்து - தனக்கு எத்தனையோ அச்சுறுத்தல் வரக்கூடிய நிலையில்தான் அவர் இதனை செய்தவர். அதன் இன்னுமொரு பரிமாணமாக நாங்கள் இந்த செம்மணியின் முழுமையான விசாரணையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச்செல்வதற்கும், அதனை உறுதி செய்வதற்கும் நாங்கள் எங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்துவோம். https://www.virakesari.lk/article/221051
-
நாகப்பாம்பை கடித்துக் கொன்ற ஒரு வயது குழந்தை : ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்
பட மூலாதாரம்,ALOK KUMAR படக்குறிப்பு, பீகாரில், கோவிந்த் குமார் என்ற ஒரு வயது குழந்தை கடித்த பாம்பு இறந்துவிட்டது கட்டுரை தகவல் சீடூ திவாரி பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பீகார் மாநிலம் பெட்டியாவில் ஒரு வயது குழந்தை பாம்பைக் கடித்ததில் பாம்பு இறந்துவிட்டது. இதுதான் தற்போது மிகப்பெரிய செய்தியாக உருவெடுத்து பரபரப்பாகப் பேசப்படுகிறது. கடிபட்ட பாம்பு, அதிக நச்சுள்ள நாகப்பாம்பு என்று குழந்தையின் குடும்பத்தினர் கூறுகின்றனர். கடந்த வியாழக்கிழமை (2025, ஜூலை 24) நடைபெற்ற இந்த 'பாம்பு கடி' சம்பவத்திற்குப் பிறகு, அனைவரின் கவனத்தையும் அந்தக் குழந்தை ஈர்த்துள்ளது. பாம்பைக் கடித்த குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது. இந்த வித்தியாசமான சம்பவம், பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் தலைநகர் பெட்டியாவில் நடைபெற்றது. பெட்டியாவின் மஜ்ஹௌலியா தொகுதியில் மோச்சி பங்கட்வா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், சுனில் ஷா என்பவர் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சுனில் ஷாவின் ஒரு வயது மகன் கோவிந்த் குமார், இந்த குழந்தை தான் பாம்பைக் கடித்ததாகக் கூறப்படுகிறது. கோவிந்த் குமாரின் பாட்டி மதிசரி தேவி கூறுகையில், "கோவிந்தின் அம்மா வீட்டின் பின்புறம் வேலை செய்து கொண்டிருந்தார். விறகுகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தபோது விறகுகளுக்குள் இருந்து பாம்பு வெளியே வந்தது. அங்கே உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த கோவிந்த் பாம்பைப் பார்த்ததும், அதைப் பிடித்து கடித்துவிட்டான். அப்போதுதான் நாங்கள் அதைக் கவனித்தோம். அது ஒரு நாகப்பாம்பு." "பாம்பை பிடித்து கடித்த சிறிது நேரத்தில் குழந்தை கோவிந்துக்கு மயக்கம் வந்துவிட்டது. நாங்கள் குழந்தையை உடனடியாக மஜௌலியா ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றோம். அங்கிருந்து பெட்டியா மருத்துவமனைக்கு (அரசு மருத்துவக் கல்லூரி, GMCH) அனுப்பி வைத்தார்கள். குழந்தை இப்போது ஆரோக்கியமாக உள்ளது." மஞ்சோலியாவின் உள்ளூர் பத்திரிகையாளர் நயாஸ் கூறுகையில், "மருத்துவமனையில் இருந்து அந்தக் குழந்தை சனிக்கிழமை (2025, ஜூலை 26) மாலை வீடு திரும்பியது. இந்த அதிசய சம்பவத்தைப் பற்றி தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. ஆடி மாதத்தில் பாம்புகள் வெளியே வருவது வழக்கம், அப்போது பாம்புக் கடி தொடர்பான சம்பவங்களும் நடைபெறும். ஆனால் இதுபோன்ற சம்பவம் எங்கள் பகுதியில் முதல் முறையாக நிகழ்ந்துள்ளது" என்றார். பட மூலாதாரம்,ALOK KUMAR படக்குறிப்பு,பாம்பைக் கடித்த குழந்தை இப்போது ஆரோக்கியமாக உள்ளது காரணம் என்ன? குழந்தை கோவிந்த் குமார் சம்பவத்தன்று (2025, ஜூலை 24) மாலை பெட்டியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் குமார் சௌரப், குழந்தை மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார். "குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு வந்தபோது, குழந்தையின் முகம் வீங்கியிருந்தது. அதிலும் வாயைச் சுற்றி நன்றாகவே வீக்கம் இருந்தது. பாம்பை, அதன் வாய்க்கு அருகில் கடித்த குழந்தை, பாம்பின் ஒரு சிறு பகுதியை சாப்பிட்டுவிட்டதாகவும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்," என்று அவர் கூறுகிறார். "அந்த சமயத்தில் என்முன் இரண்டு குழந்தை நோயாளிகள் இருந்தனர். அதில் ஒரு குழந்தை நாகப்பாம்பை கடித்துவிட்டது, அடுத்து மற்றொரு குழந்தையை நச்சுள்ள பாம்பு கடித்துவிட்டது. இருவேறு விதமான சிகிச்சை அளித்த மறக்கமுடியாத சந்தர்ப்பம் அது. சிகிச்சையளிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளும் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளனர்." "ஒரு நாகப்பாம்பு மனிதனைக் கடிக்கும்போது, அதன் நச்சு நம் ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் நுழையும் விஷம் நியூரோடாக்சிசிட்டியை ஏற்படுத்துகிறது, இது நமது நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதால் மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது" என்று டாக்டர் குமார் சௌரப் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN படக்குறிப்பு,கோப்புப்படம் "மனிதன் விஷமுள்ள பாம்பைக் கடிக்கும்போது, அதன் நச்சு வாய் வழியாக நமது செரிமான அமைப்பை நேரடியாக சென்றடைகிறது. மனித உடல் அந்த விஷத்தை நடுநிலையாக்கி நச்சை வெளியேறுகிறது. அதாவது, மனிதர்களை பாம்பு கடித்தாலும், மனிதன் பாம்பைக் கடித்தாலும், இரு சந்தர்பங்களிலும் விஷம் வேலை செய்யும். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் விஷம் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது, மற்றொன்றில் மனித உடல் விஷத்தை நடுநிலையாக்குகிறது" என்று மருத்துவர் சௌரப் விளக்கமளித்தார். இருப்பினும், ஒரு மனிதன் பாம்பைக் கடித்தால், அது மோசமான விளைவையும் ஏற்படுத்தலாம் என்று டாக்டர் குமார் சௌரப் கூறுகிறார். "ஒரு மனிதன் பாம்பைக் கடிக்கும்போது, அவரின் உணவுக் குழாயில் அல்சர் போன்ற பிரச்னை இருந்தால் அல்லது ரத்தப்போக்கு ஏற்பட்டால் நிலைமை மோசமடையக்கூடும்" என்று டாக்டர் குமார் சௌரப் விளக்குகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மழைக்காலத்தில் பாம்பு கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும் 'பாம்புக் கடி தலைநகரம்' மழைக்காலத்தில் பாம்புக் கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 80 ஆயிரம் முதல் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் இறக்கின்றனர். இவற்றில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 58 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இதன் காரணமாக, இந்தியா 'உலகின் பாம்பு தலைநகரம்' என்ற குறிச்சொல்லைப் பெற்றுள்ளது. பீகார் மாநில சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் (HMIS) தரவுகளின்படி, ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை, பாம்பு கடியால் மாநிலத்தில் 934 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில், பாம்புக் கடி காரணமாக 17,859 நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வந்தனர். ஆனால் மத்திய அரசின் அறிக்கையின்படி, நாடு முழுவதும் பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை 'குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளது'. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிக்கையின்படி, பெரும்பாலான பாம்புக் கடி சம்பவங்களில், மிகக் குறைந்த அளவிலான நோயாளிகளே மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதனால், பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகிறது. மேலும், பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகளில் 70 சதவீதம் பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நிகழ்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxyl8q4rypo
-
அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.
தாய்லாந்து - கம்போடியா மோதலின் மையமாக உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான 'சிவன் கோவில்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கம்போடியா மற்றும் தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள ப்ரே விஹார் கோயில் 26 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 27 ஜூலை 2025 தாய்லாந்து - கம்போடியா எல்லைப் பகுதியில் நடைபெற்று வரும் ராணுவ மோதலில் இதுவரை குறைந்தது 16 பேர் இறந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். வியாழக்கிழமை (2025, ஜூலை 25) காலை முதல் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. கம்போடியாவின் ராணுவ தளத்தின் மீது வான்வழி குண்டுவீச்சு நடத்தியதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளான தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையிலான சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கும் முந்தையது. கம்போடியா பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தபோது, இரு நாடுகள் இடையே எல்லை வகுக்கப்பட்டபோது, இந்த சச்சரவு தொடங்கியது. இந்த சிக்கலானது, 2008ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்துள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில் ஒன்றை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக கம்போடியா பதிவு செய்ய முயன்றபோது பதற்றமாக மாறியது. சிவாலயத்தை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக மாற்றுவதற்கு தாய்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே பல மோதல்கள் ஏற்பட்டதில், இரு தரப்பிலும் பல வீரர்களும் பொதுமக்களும் இறந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த மே மாதத்தில் நடைபெற்ற மோதலில் கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டபோது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் மேலும் அதிகரித்தன. கடந்த இரண்டு மாதங்களில், இரு நாடுகளும் பரஸ்பரம் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தாய்லாந்திலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்வதை கம்போடியா தடை செய்துள்ளதுடன், மின்சாரம் மற்றும் இணைய சேவைகளையும் துண்டித்துள்ளது. கடந்த சில வாரங்களாக, இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் படைபலத்தை அதிகரித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Play video, "தாய்லாந்து - கம்போடியா இடையே மோதல் ஏன்? அடுத்து என்ன நடக்கும்?", கால அளவு 3,25 03:25 காணொளிக் குறிப்பு, சிவன் கோவிலின் ஆயிரம் ஆண்டு வரலாறு கம்போடியாவின் சமவெளிகளில் உயரமான பீடபூமியின் விளிம்பில் அமைந்துள்ள ப்ரே விஹார் கோயில், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்கிறது யுனெஸ்கோ. இந்தக் கோவில் கம்போடிய மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கியமான மதத் தளம் என்பது குறிப்பிடத்தக்கது. 11ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயத்தின் பிரதான கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஒன்பதாம் நூற்றாண்டில் அங்கு உருவாக்கப்பட்ட துறவி மடம் ஒன்றே பிற்காலத்தில் மிகப்பெரிய ஆலயமாக கட்டப்பட்டது என்று ஆலய வரலாறு கூறுகிறது. தொலைதூர இடத்தில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ பாரம்பரிய தளம் நன்கு பாதுகாக்கப்படுகிறது. மிகச்சிறந்த கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் செதுக்கப்பட்ட கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ப்ரே விஹார் கோவில் தகராறில் சர்வதேச நீதிமன்றம் 1962 ஜூன் 15 அன்று தனது தீர்ப்பை வழங்கியது. தனது பிரதேசத்தில் ப்ரே விஹார் கோவில் இடிபாடுகள் இருக்கும் ஒரு பகுதியை தாய்லாந்து ஆக்கிரமித்துள்ளதாக, சர்வதேச நீதிமன்றத்தில் கம்போடியா புகார் அளித்திருந்தது. இந்த இடம், கம்போடிய மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கியமான மதத் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்தக் கோவில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து முடிவெடுக்கவும், 1954 முதல் அங்கு நிறுத்தப்பட்டுள்ள தாய்லாந்து படைகளை திரும்பப் பெற உத்தரவிட கோரியும் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது கம்போடியா. நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு எதிராக தாய்லாந்து முதற்கட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்தது, அவை நீதிமன்றத்தால் 1961 மே 26 அன்று நிராகரிக்கப்பட்டன. 1962 ஜூன் 15 அன்று அதன் இறுதித் தீர்ப்பில், 1904 ஆம் ஆண்டு பிராங்கோ-சியாமிஸ் ஒப்பந்தம் சர்ச்சைக்குரிய பகுதியை நீர்நிலைக் கோட்டின்படி வரையறுத்ததாகக் கூறியது. மேலும் கூட்டு எல்லை நிர்ணய ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வரைபடம், கம்போடியாவின் எல்லைக்குள் கோயிலைக் காட்டியது. இந்த வரைபடத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று தாய்லாந்து வாதிட்டது. மேலும், ''இந்த வரைபடத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை வரைபடத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அது தவறான எண்ணத்திலேயே செய்யப்பட்டிருக்கும்'' என்று தாய்லாந்து வாதிட்டது இருப்பினும், தாய்லாந்து உண்மையிலுமே அந்த வரைபடத்தை ஏற்றுக்கொண்டதாகவும், கோயில் கம்போடிய எல்லைக்குள் அமைந்துள்ளது என்றும் நீதிமன்றம் முடிவு செய்தது. அத்துடன், அங்கு நிறுத்தப்பட்டுள்ள ராணுவ அல்லது காவல்துறை துருப்புக்கள் அனைத்தையும் தாய்லாந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், 1954க்குப் பிறகு ஆலயத்தில் இருந்து அகற்றப்பட்ட அனைத்தையும் கம்போடியாவிற்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தற்போதைய மோதல் போராக மாறக்கூடும் என்று தாய்லாந்து எச்சரிக்கிறது எச்சரிக்கை விடுத்த தாய்லாந்து - காரணம் என்ன? எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி வெடிப்பில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, கம்போடியாவிலிருந்து தனது தூதரை தாய்லாந்து திரும்ப அழைத்துக் கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு வியாழக்கிழமை, தாய்லாந்தும் கம்போடியாவும் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டிக் கொண்டன. எல்லைக்கு அருகே தாய்லாந்து துருப்புக்களைக் கண்காணிக்க கம்போடிய ராணுவம் டிரோன்களை நிறுத்தியபோது மோதல் தொடங்கியதாக தாய்லாந்து கூறுகிறது. தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான மோதல் 'போராக உருவெடுக்கக்கூடும்' என தாய்லாந்து எச்சரித்துள்ளது. இந்த மோதலால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது கம்போடியா ஷெல் தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து குற்றம் சாட்டியுள்ளது. ராக்கெட்டுகள் வீசப்படும் எல்லைக்குள் உள்ள அனைத்து கிராமங்களையும் காலி செய்துள்ளது. பொதுமக்கள் மீது கிளஸ்டர் வெடிமருந்துகள் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் கிளஸ்டர் வெடிமருந்துகளைப் பயன்பாட்டிற்கு தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் தாய்லாந்து கிளஸ்டர் வெடிமருந்துகளை பயன்படுத்துவதாக கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தாய்லாந்து பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைதியை காக்க வேண்டுகோள் விடுக்கும் சர்வதேச நாடுகள் "விரோதப் போக்கை உடனடியாக நிறுத்தவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், மோதலை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்" என இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. "தாய்லாந்து-கம்போடியா எல்லையில் வன்முறை அதிகரிப்பது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த செய்திகள் கவலைகளை அதிகரிக்கின்றன" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட் வழக்கமான ஊடக சந்திப்பு ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். கம்போடியா மற்றும் தாய்லாந்துடன் அரசியல் மற்றும் உத்தி ரீதியிலான உறவுகளைக் கொண்டுள்ள சீனா, மோதல் குறித்து "ஆழ்ந்த கவலை" கொண்டிருப்பதாகக் கூறியது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வார்கள் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இரு நாடுகளிடமும் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்துள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c741j3pyeldo
-
இலங்கையில் முதல் அணுமின் நிலையத்திற்கான 5 தளங்கள்
Published By: DIGITAL DESK 2 27 JUL, 2025 | 11:30 AM (லியோ நிரோஷ தர்ஷன்) அணுசக்தி திட்டத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து சாத்தியமான தளங்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 4 முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற மீளாய்வுப் பணிக்கு பிறகு இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த அணு உள்கட்டமைப்பு மீளாய்வு பணிக்குழு, 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் கட்ட சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் மீளாய்வுகளில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயல்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பிட்டது. இந்த பணிக்குழுவில் பல்கேரியா மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களும் உள்ளடங்கியுள்ளனர். அணுசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவரகம் குறிப்பிட்டது. குறிப்பாக, உலை கொள்முதல் செய்வதற்கான ஒரு மேலாண்மை கட்டமைப்பை இலங்கை நிறுவியதுடன், விரிவான அணுசக்தி சட்ட வரைவையும் உருவாக்கியுள்ளது. மேலும் 2025-2044 ஆம் ஆண்டுக்கான தேசிய நீண்டகால எரிசக்தி திட்டத்தில் அணுசக்தியைச் சேர்த்துள்ளது. இலங்கையின் அணுசக்தி முயற்சி முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் அணுசக்தித் திட்ட அமலாக்க அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் எரிசக்தி அமைச்சு, இலங்கை அணுசக்தி அதிகாரச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை மன்றம் ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221050
-
இந்தியப் பெருங்கடல் அமைதிக்கான பிராந்தியம் - ரணில் விக்கிரமசிங்கவின் தெளிவுரை
Published By: DIGITAL DESK 2 27 JUL, 2025 | 12:41 PM (லியோ நிரோஷ தர்ஷன்) தாய்வானில் போர் ஏற்பட்டால் அது இந்தியப் பெருங்கடலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் அமைதிக்கான பிராந்தியம் என்பதை புவிசார் அரசியல் போட்டியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவத்தையும், இங்கு ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் அவசியத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அவற்றால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை விவரித்த அவர், உலகளாவிய மோதல்கள் மற்றும் வர்த்தகக் கொள்கைகளின் தாக்கம் குறித்து குறிப்பிட்டார். தாய்வானில் போர் ஏற்பட்டால் அது இந்தியப் பெருங்கடலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் அமைதிக்கான பிராந்தியம் என்பதை புவிசார் அரசியல் போட்டியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவத்தையும், இங்கு ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறது என்றார். மேலும், சமீபத்திய ஈரானிய-இஸ்ரேலிய மோதலைக் குறிப்பிட்ட அவர், எமது பிராந்தியத்திற்குள் ஊடுறுவி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. எந்தவொரு நாடும் அணுசக்தி ஆயுதங்களை வைத்திருப்பதோ அல்லது கையாள்வதோ ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல. அணு ஆயுதப் பரவல் தடுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் இறுதிக் கட்டத்தில் உள்ளதா என்ற கேள்விக்கு, 'அவ்வாறானதொரு நிலையில் ஈரான் இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே ஈரான் மீது தீர்மானத்தை எடுத்தது யார்?' எனக் கேள்வி எழுப்பினார். இது, சர்வதேச சட்டங்களுக்கு புறம்பான அல்லது ஒருதலைப்பட்சமான இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான இலங்கையின் நிலைப்பாட்டையும், பிராந்திய இறைமை குறித்த அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கொள்கையினால் இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகள் எதிர்கொள்ளும் வர்த்தகச் சவால்களையும் ரணில் விக்கிரமசிங்க அடிகோடிட்டு காட்டினார். அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கொள்கையினால் இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகள் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட வேண்டிய சூழலில் உள்ளன. இது, இலங்கையும் அமெரிக்காவுடன் வரிக் குறைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள தற்போதைய சூழலில் மிகவும் பொருத்தமானதாகும். வர்த்தகத் தடைகள் பிராந்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்பதையும், புதிய வர்த்தகக் கூட்டணிகளை உருவாக்குவதன் அவசியத்தையும் இது உணர்த்துகிறது. ரணில் விக்கிரமசிங்கவின் இந்த கருத்துக்கள், உலகளாவிய மோதல்கள், அணு ஆயுதப் பரவல் மற்றும் சர்வதேச வர்த்தகக் கொள்கைகள் ஆகியவை இலங்கை போன்ற சிறிய நாடுகளின் உள்நாட்டு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த இலங்கையின் வெளிப்படையான கவலைகளை பிரதிபலிக்கின்றன. இந்தியப் பெருங்கடல் ஒரு அமைதி மண்டலமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவரது வலியுறுத்தல், இலங்கையின் நீண்டகால வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும் உள்ளது. https://www.virakesari.lk/article/221041
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
வரலாறு மீண்டும் திரும்புமா? சாதனைகள் அரங்கேறிய நாளில் கணிப்புகளை பொய்யாக்கிய இந்திய ஜோடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 27 ஜூலை 2025, 01:52 GMT இந்த டெஸ்ட் தொடர் தனது இயல்பை (எதிர்பாராத்தன்மை) மாற்றிக்கொள்ளாது போல. ஆட்டம் முடிந்தது, எல்லாம் அவ்வளவுதான் என நினைக்கும் போதெல்லாம், இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மீண்டுவருவதை பார்க்கிறோம். நான்காம் நாளில் இந்தியா பெட்டியைக் கட்டும் என கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த நிலையில், உறுதியுடன் போராடி ஆட்டத்தை கடைசி நாளுக்கு எடுத்து சென்றிருக்கிறது இந்தியா. எவ்வளவு நேரம் தோல்வியை தள்ளிப்போட முடியும் என்ற கவலையுடன் இந்திய அணி நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. 544–7 என்ற வலுவான நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, தொடக்கம் முதலே ரன் சேர்ப்பதில் தீவிரம் காட்டியது. மழை பெய்திருந்ததால், ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வழக்கம் போல இந்திய பந்துவீச்சாளர்கள் லைன் அண்ட் லெந்த் பிடிக்காமல் பந்துவீசி ரன்களை வாரி இறைத்தனர். ஆடுகளத்தில் முன்னுக்கு பின் முரணான பவுன்ஸ் தென்பட்டது. பழைய வேகம் இல்லையென்றாலும் பும்ராவின் பந்துவீச்சில் நம்பிக்கை தெரிந்தது. நல்ல லெந்த்தில் டாசனுக்கு அவர் வீசிய பந்து ஒன்று எதிர்பாராத உயரத்துக்கு எழும்பியது. அடுத்த பந்தை அதே லெந்த்தில் வீசிய அவர், சரியாக ஆஃப் ஸ்டம்ப்பின் தலைப்பகுதியை தாக்கி டாசனின் விக்கெட்டை கைப்பற்றினார். டாசன் ஆட்டமிழந்ததும், களமிறங்கிய கார்ஸ், கேப்டன் ஸ்டோக் உடன் இணைந்து அடித்து விளையாட தொடங்கினார். சிராஜ் பந்தில் பவுண்டரி விளாசி, சதத்தை எட்டினார் ஸ்டோக்ஸ். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அடித்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஓரளவுக்கு சுமாராக பந்துவீசிய சுந்தர் பந்துவீச்சையும் ஸ்டோக்ஸ் விட்டுவைக்கவில்லை. ஒரே ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்து, சுந்தரின் லெந்த்தையும் ரிதத்தையும் சீர்குலைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிராஜ் பந்தில் பவுண்டரி விளாசி, சதத்தை எட்டினார் ஸ்டோக்ஸ் உணவு இடைவேளைக்கு முன்பாக, இந்தியாவை பேட் செய்ய வைத்திட வேண்டும் என்கிற திட்டத்துடன் இங்கிலாந்து விளையாடியது. கில்லின் கேப்டன்சி, வழக்கம் போல நேற்றும் சொதப்பலாகவே இருந்தது. ஜடேஜா பந்துவீச்சை எதிர்கொள்ள ஸ்டோக்ஸ் விரும்பமாட்டார் என்பதை மறந்துவிட்டு, நேரம் கடந்த பின்தான் ஜடேஜா கையில் பந்தை கொடுத்தார். சாதனைகளை நிகழ்த்திய இங்கிலாந்து புயல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த இங்கிலாந்து கேப்டனை ஜடேஜாவாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இங்கிலாந்து வீரர்களுக்கு இது சாதனைகளை நிகழ்த்துவதற்கான டெஸ்ட் போல. நேற்று ரூட் பல்வேறு சாதனைகளை செய்த நிலையில், இன்று ஸ்டோக்ஸ், தன் பங்குக்கு சிலவற்றை நிகழ்த்தினார். ஒரே டெஸ்டில் சதமும் 5 விக்கெட்களும் கைப்பற்றிய, நான்காவது இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார். முன்னதாக, டோனி கிரைக், இயன் போத்தம், கஸ் அட்கிட்சன் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ், காலிஸ் ஆகியோருக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்களுடன் 200 விக்கெட்களை கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். ஜடேஜா பந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது சிக்ஸர் அடிக்க முயற்சித்து, லாங் ஆன் திசையில் சாய் சுதர்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக 47 ரன்கள் குவித்த கார்ஸ் விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்ற, இங்கிலாந்து அணி 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து, 600 ரன்களுக்கு மேல் குவிப்பது, இது ஏழாவது முறையாகும். 6 இல் 5 டெஸ்ட்களில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. 2002 டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்டில், இந்திய அணி டிராவிட் சதத்தின் உதவியுடன் போராடி தோல்வியை தவிர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாய் சுதர்சன் உணவு இடைவேளைக்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில், 311 ரன்கள் பின்தங்கிய இருந்த இந்தியா இன்னிங்ஸை தொடங்கியது. ஒன்றரை நாட்களுக்கு மேல் தாக்குப்பிடித்தால்தான் தோல்வியை தவிர்க்க முடியும் என்கிற நெருக்கடியுடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால், சுதர்சன் விக்கெட்டுகளை இழந்தது. இந்த டெஸ்ட் தொடர் முழுக்க சுமாராக பந்துவீசிய வோக்ஸ், நேற்று சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பினார். 311 ரன்கள் பின்தங்கியிருக்கிறோம் என்பதை விட உணவு இடைவேளைக்கு முன்பு 15 ஓவர்கள் விக்கெட் இழக்காமல் விளையாடியாக வேண்டும் என்ற நெருக்கடியே அவர்களது விக்கெட்டை காவு வாங்கிவிட்டது எனலாம். ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை சரியான கோணத்தில் பேட்டை வைக்காமல் தடுக்க முயன்று, ஸ்லிப் திசையில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். முதல் ஓவரிலேயே விக்கெட் விழும் என எதிர்பார்க்காத சாய் சுதர்சன், முறையான தயாரிப்புகளின்றி அவசர அவசரமாக களத்துக்கு ஓடிவந்தார். கடுமையான உடற்சோர்விலும் மனச்சோர்விலும் இருந்த சுதர்சன், ஷார்ட் ஆஃப் லெந்த்தில் வோக்ஸ் வீசிய பந்தை தொடலாமா வேண்டாமா என்ற இரட்டை மனநிலையில், கடைசி நொடியில் பேட்டை உயர்த்தி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 'கோல்டன் டக்'காகி பெவிலியன் திரும்பினார். கில்லின் உச்சபட்ச ஆட்டம் கடைசியாக இந்திய அணியின் இரு தொடக்க வீரர்களும் ' டக் அவுட்' ஆனது, 1983 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சென்னை டெஸ்டில். அந்த டெஸ்டில் நான்காவது இடத்தில் களமிறங்கிய கவாஸ்கர் ஆட்டமிழக்காமல் 236 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆடுகளம் முதல் சில ஓவர்களுக்கு தாறுமாறாக ஸ்விங் ஆனதால், உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி விரைவில் சரணடையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அனுபவ வீரர் கேஎல் ராகுலுடன் கைகோர்த்த கில், தனது உச்சபட்ச ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராகுல் வழக்கம் போல, பந்தை தேய்த்துக் கொடுக்கும் வேலையை எடுத்துக்கொள்ள, தைரியமாக கில் பவுண்டரிகளை அடித்து விளையாடத் தொடங்கினார். கோட்டுக்கு (crease) வெளியே நின்றுகொண்டு, நல்ல லெந்த்தில் வீசப்பட்ட பந்துகளையும் ஹாஃப் வாலிகளாக மாற்றி கோடு கிழித்தது மாதிரி சில டிரைவ்கள் அடித்து, இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பாயிண்ட் திசையில் கில் கொடுத்த எளிமையான கேட்ச் வாய்ப்பை டாசன் தவறவிட்டார். இதை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட கில், அபாரமாக விளையாடி அதிரடியாக அரைசதத்தை கடந்தார். 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலி எடுத்த 655 ரன்களை கில் முந்தினார். ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சுனில் கவாஸ்கரின் சாதனையை (732) நெருங்குகிறார். மறுமுனையில், நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த ராகுல், தவறான லைன் அண்ட் லெந்த்தில் கிடைத்த பந்துகளை பின்னங்காலுக்கு சென்று பவுண்டரிக்கு அனுப்பவும் செய்தார். இந்திய அணி இந்தளவுக்கு போராடும் என்பதை இங்கிலாந்து நிச்சயம் எதிர்பார்த்திருக்காது. ஸ்டோக்ஸ் பந்துவீசாததை இந்திய பேட்ஸ்மென்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பந்துவீச்சாளர்கள், பீல்டர்கள் என ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியினரும் களத்தில் சோர்வில் இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் சுவாரசியமே இதுதான். எல்லா வித தடைகளையும் கடந்து எந்த அணி கடைசி வரை உறுதியுடன் நிற்கிறதோ அதுவே வெற்றிபெறும். தமிழக வீரர் ஜெகதீசன் அனுபவமுள்ள இஷான் கிஷனை தாண்டி இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி? இன்றும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்த சிஎஸ்கே வீரர் இந்திய அணிக்காக சாதிப்பாரா? சச்சின் சாதனையை நெருங்கிய ஜோ ரூட் - விவேகத்தை விட்டு ஆட்டத்தை தொலைத்த இந்தியா காயம்பட்ட ரிஷப் பந்தின் காலுக்கு குறி வைத்த இங்கிலாந்து - வியூகத்தில் கோட்டை விட்ட இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES ராகுல்–கில் இணை, கிட்டத்தட்ட 60 ஓவர்களுக்கு மேல் உறுதியுடன் விளையாடி, 174 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் ரன்னின்றி (0–2) ஆட்டமிழந்த பிறகு மூன்றாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்ப்பது, வரலாற்றில் இதுவரை 2 முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. 1977/78 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், மெல்பர்ன் டெஸ்டில் மொஹிந்தர் அமர்நாத்–குண்டப்பா விஸ்வநாத் (105), 1902 இல் லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆர்ச்சி மெக்லாரன்–ஸ்டான்லி ஜாக்சன் (102*). ஐந்தாம் நாளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆட்டம் நிச்சயம் ஒரு முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதியாக கூற முடியும். பந்த் உடற்தகுதியுடன் இல்லாத நிலையில், ராகுல்–கில் இருவரும் இன்று முடிந்தமட்டும் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியம். இந்தியா கடந்த காலத்தில் இதுபோன்ற கடினமான சூழல்களில், மனஉறுதியுடன் விளையாடி தோல்வியை தவிர்த்துள்ளது. 2001 ஈடன் கார்டன்ஸ் டெஸ்ட், ஒரு சிறந்த உதாரணம். டிராவிட்–லக்ஷ்மண் போல, ராகுல்–கில் அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தி, தோல்வியின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுப்பார்களா? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgn41n7e3eo
-
செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை கோரி நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!
27 JUL, 2025 | 10:29 AM இலங்கையில் செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் செம்மணி படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு, மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். ‛‛செம்மணி புதைக்குழிக்கு நீதி வேண்டும். செம்மணி எங்கும் தமிழர் குருதி உள்ளது. சிங்களர் செய்த தமிழர் அநீதிக்கு நீதி வேண்டும். தோண்ட தோண்ட எலும்பு கூடு.. பார்க்க பார்க்க நொறுங்குது இதய கூடு.. இன்னும் எத்தனை சாட்சி வேண்டும்.. இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும்.. ஐநா உரிமை ஆணையமே.. நீதி வழங்க மறுக்காதே.. இனியும் மவுனம் காக்காதே.. இந்திய அரசே.. மத்திய அரசே.. குரல் கொடு.. குரல் கொடு.. பன்னாட்டு விசாரணைக்கு குரல் கொடு.. தமிழக அரசே தமிழக அரசே.. அழுத்தம் கொடு அழுத்தம் கொடு.. பன்னாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடு.. ” என்று கோஷமிட்டனர். https://www.virakesari.lk/article/221042
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
யாழ். செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் 26 JUL, 2025 | 09:06 PM யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் 11 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 09 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் போது, இன்றைய தினம் சனிக்கிழமை (26) அகழ்ந்து எடுக்கப்பட்ட 09 எலும்பு கூட்டு தொகுதியுடன் 90 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 101 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார். இதேவேளை, இந்த அகழ்வு நடடிக்கைளில் 46 சாட்சிய ஆதாரப் பொருட்கள் இதுவரை அகழப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221028
-
தமிழர் சிறைப்படுகொலை வீரர்களுக்கு அஞ்சலி - விடுதலை கவனயீர்ப்பு நிகழ்வுகள் கிட்டுப் பூங்காவில்
Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 06:25 PM இலங்கை சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளுக்கு நீதி வேண்டிய நினைவேந்தலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விடுதலையை நோக்கிய “விடுதலை” எனும் தொனிப்பொருளிலான கவனயீர்ப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வுகளில் சிறைப்படுகொலை நினைவேந்தல் மற்றும் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், விடுதலை நீர் கையளிப்பு, சிறைக்கூட உணர்வு கண்காட்சி ஆகியன இரு தினங்களாக நடைபெற்று வருவதோடு, தாயகத்தின் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து விடுதலை நீர் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வின் போது மதத் தலைவர்கள், அரசியற் கட்சிச் செயற்பாட்டாளர்கள், அரசியற் கைதிகளின் குடும்பத்தினர், விடுவிக்கப்பட்ட முன்னாள் அரசியற் கைதிகள், குடிமக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் பங்குகொண்டிருந்ததோடு, விடுதலை நீர் கையளிப்பிலும் ஈடுபட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/221024
-
தினசரி 7,000 அடி நடந்தால் புற்றுநோய், இதய நோய் அபாயம் குறையும் - புதிய ஆய்வில் தகவல்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜோஷ் எல்ஜின் பிபிசி செய்திகள் 26 ஜூலை 2025, 08:00 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் மூளை சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது போதுமானதாக இருக்கும் என்று ஒரு முக்கிய ஆய்வு கூறுகிறது. 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொதுவாக அடைய வேண்டிய இலக்காக கருதப்படுகிறது. ஆனால், அதைவிட எளிதாக அடையக் கூடிய, யதார்த்தமான இலக்காக இது இருக்கலாம். லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஒரு புதிய ஆய்வறிக்கை, புற்றுநோய், டிமென்ஷியா மற்றும் இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்னைகளின் அபாயம் குறைவதற்கும், இந்த எண்ணிக்கைக்கும் தொடர்புள்ளது என கண்டறிந்துள்ளது. மக்கள் தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக, தினசரி எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதை கண்காணிக்க, இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஊக்குவிக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும்" என்ற கருத்து நம்மிடம் உள்ளது, ஆனால் அது ஆதாரங்களை அடிப்டையாகக் கொண்டது அல்ல" என்கிறார் முன்னணி ஆராய்ச்சியாளர் மெலடி டிங். 10,000 அடிகள் என்ற எண்ணிக்கை, 1960-களில் ஜப்பானில் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில் முதன்முறையாக அறிமுகமானது. 1964 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, "10,000 அடி மீட்டர்" என்று பொருள்படும் 'மான்போ-கீ' என்ற பெடோமீட்டர் பிராண்ட் அறிமுகமானது. ஆனால், அதற்காக உருவாக்கப்பட்ட இந்த எண்ணிக்கை, "அந்தச் சூழலிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு", அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டுதலாக, இன்றும் பல உடற்பயிற்சி சாதனங்களாலும், செயலிகளாலும் பரிந்துரைக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர் மெலடி டிங் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தங்களது கண்டுபிடிப்புகள் எதிர்கால பொது சுகாதார நெறிமுறைகளை வடிவமைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஒரு முக்கிய ஆய்வில், உலகெங்கிலும் உள்ள 160,000 க்கும் மேற்பட்டவர்களின் உடல்நலம் மற்றும் செயல்பாடு குறித்த முந்தைய ஆய்வுகள் மற்றும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 2,000 அடிகள் நடப்பவர்களுடன் ஒப்பிடும் போது, 7,000 அடிகள் நடப்பவர்களுக்கு கீழ்க்கண்ட ஆபத்துகள் குறைவாக இருப்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதய நோய் - 25% குறைவு புற்றுநோய் - 6% குறைவு டிமென்ஷியா - 38% குறைவு மன அழுத்தம் - 22% குறைவு ஆனால், சில நோய்களைக் குறித்த புள்ளிவிவரங்கள், குறைந்த எண்ணிக்கையிலான ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டவை என்பதால், அவை மற்றவற்றை விட குறைவான துல்லியத்துடன் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், வெறும் 2,000 அடிகள் நடப்பது என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு சுமார் 4,000 அடிகள் நடப்பது என்ற மிதமான எண்ணிக்கை சிறந்த உடல்நலத்துக்குப் பங்களிக்கிறது என்று அந்த மதிப்பாய்வு குறிப்பிடுகிறது. பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகளுக்கு, 7,000 அடிகள் வரை நடந்தாலே போதுமான நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் அதைவிட அதிக அடிகள் நடந்தால் இதய ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உடற்பயிற்சி சாதனங்களில் தினசரி எத்தனை அடிகள் நடந்திருக்கிறோம் என்பதை எண்ணுவது ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறிவிட்டது. உடற்பயிற்சி செய்வதற்கான பெரும்பாலான நெறிமுறைகள், எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்ற எண்ணிக்கையை விட உடற்பயிற்சி செய்வதற்கு செலவிடும் நேரத்தை மையமாகக் கொண்டுள்ளன. உதாரணமாக, 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிரமான ஏரோபிக் பயிற்சியோ செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த அறிவுரையை மக்கள் புரிந்துகொள்வது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம், ஆனால் தற்போதைய நெறிமுறைகள் ஒரு முக்கியமான நோக்கத்திற்கு உதவுகின்றன என்று கூறுகிறார் டிங் . "நீச்சல் பயிற்சியில் ஈடுபடுதல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது உடல் குறைபாடுகளின் காரணமாக நடக்க முடியாதவர்கள் உள்ளனர்," என்றும் அவர் விளக்குகிறார். ஆனால், மக்கள் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்பதற்கான பரிந்துரையை, ஒரு "கூடுதல்" தகவலாக சேர்க்கலாம் என்றும், இது மக்கள் "நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படுவது குறித்து சிந்திக்க உதவும்" என்றும் அவர் கூறுகிறார். லண்டனின் புருனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, செடன்டரி பிஹேவியர் மற்றும் சுகாதார நிபுணரான மருத்துவர் டேனியல் பெய்லி, "ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது அவசியம்" என்ற கருத்து, ஆதாரமற்ற 'கட்டுக்கதை' என்ற கருத்தை இந்த ஆய்வு முன்வைக்கிறது என்று கூறுகிறார். சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொருத்தமான இலக்காக இருந்தாலும், மற்றவர்களுக்கு 5,000 முதல் 7,000 அடிகள் நடப்பது, "மிகவும் யதார்த்தமான மற்றும் அடையக் கூடிய இலக்காக" இருக்கலாம் என்று அவர் விளக்குகிறார். போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழகத்தின் மருத்துவ உடற்பயிற்சி உடலியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஆண்ட்ரூ ஸ்காட், நடப்பதற்கு எண்ணிக்கை முக்கியமல்ல என்று கூறுகிறார். "அதிகமாக நடப்பது எப்போதும் நல்லது" என்று கூறும் அவர், செயல்பாடு குறைவாக இருக்கும் நாட்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என்று மக்கள் அதிகமாக கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr797rrjm3eo
-
யாழில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்த கும்பல் கைது
26 JUL, 2025 | 05:08 PM யாழ்ப்பாணத்தில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்து, தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் அரசியல் கட்சி ஒன்றின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா தேவாலயத்தில் இருந்த சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மாதா சிலையையே இந்த கும்பல் அடித்து உடைத்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தேவாலயத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை (25) அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளரின் தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சற்று நேரத்தில் இந்த கும்பல் மது போதையில், தேவாலயத்திற்கு சென்றவர்களுடன் முரண்பட்டு அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். பின்னர் தேவாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து , இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்ச ரூபாய் பெறுமதியான மாதா சிலையை அடித்து உடைத்துள்ளனர். அத்துடன், தேவாலயத்தினுள் காணப்பட்ட ஏனைய பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர் சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகத்தினரால், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்னர். கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/221007 NPP தீவக அமைப்பாளரும் கைது என்ற செய்தி வாசித்தேன்.
-
காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு
காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காஸாவை பஞ்சம் வாட்டி வதைப்பதாக எச்சரிக்கைகள் வந்துள்ளதால் சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது. கட்டுரை தகவல் மையா டேவிஸ் பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது. உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், "ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம், காஸாவில் பஞ்சம் குறித்து தீவிரமான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை, மேலும் ஒன்பது பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் போர் தொடங்கியதிலிருந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. காஸாவிற்குள் உதவிப் பொருட்கள் நுழைவதை கட்டுப்படுத்தும் இஸ்ரேல், 'உதவிப் பொருட்கள் காஸாவிற்குள் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஹமாஸே பொறுப்பு' என்று கூறுகிறது. வரும் நாட்களில் வெளி நாடுகள் காஸாவிற்குள் வான்வழியாக உதவிப் பொருட்களை வீச அனுமதி வழங்கப்படும் என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் இந்த முறை, உதவி பொருட்களை கொண்டு செல்வதற்கு திறனற்றது என்று உதவி நிறுவனங்கள் முன்பே எச்சரித்திருந்தன என இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஜோர்டானும் பொருட்களை வீசும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், தங்கள் ராணுவம் இன்னும் இஸ்ரேலிடமிருந்து அனுமதி பெறவில்லை என்று ஜோர்டானின் ஒரு மூத்த அதிகாரி பிபிசியிடம் கூறியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS காஸாவிற்குள் வான்வழியாக உதவிப் பொருட்களை அனுப்ப இஸ்ரேல் வழங்கியுள்ள அனுமதியை, ''மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி'' என்று ஐ.நா விமர்சித்துள்ளது. காஸாவில் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்து வருவதால், சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், "உடனடியாக காஸாவிற்குள் உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் நீக்க வேண்டும்" என்று வெள்ளிக்கிழமையன்று வலியுறுத்தின. "காஸாவில் நடைபெற்று வரும் மனிதாபிமான பேரழிவையும்", போரையும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்கள் கூட்டு அறிக்கையில் வலியுறுத்தினர். மேலும், இஸ்ரேல் "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தனது கடமைகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என்றும் கூறியுள்ளனர். "பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய உதவிகளை தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "சர்வதேச சமூகத்தில் பலர் காட்டும் அலட்சியம், இரக்கமின்மை, உண்மையின்மை, மனிதாபிமானமின்மை ஆகியவற்றை விளக்க முடியவில்லை" என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார். அம்னஸ்டி இன்டர்நேஷனல் உலக சபையில் உரையாற்றிய அவர், மே 27 முதல் உணவு பெற முயன்றபோது 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF), ஐ.நா. தலைமையிலான அமைப்புக்கு பதிலாக உதவி பொருட்கள் விநியோகம் தொடங்கிய பின்னர் நடந்ததாகவும் தெரிவித்தார். பட மூலாதாரம்,EPA 2025 மே மற்றும் ஜூன் மாதங்களில் காஸா மனிதாபிமான அறக்கட்டளையில் பணியாற்றிய ஒரு அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர், "கேள்விக்கு இடமின்றி... போர்க்குற்றங்களை நேரில் கண்டேன்" என பிபிசியிடம் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். உணவு விநியோகம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் மற்றும் அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள் நேரடியாக வெடிமருந்துகள், பீரங்கி, மோட்டார் குண்டுகள் மற்றும் டாங்கி மூலம் தாக்குதல் நடத்தியதை பார்த்ததாக அந்தோனி அகுய்லர் கூறினார். "என் பணிக்காலத்தில் எங்கும், பொதுமக்களுக்கு எதிராக இவ்வளவு கடுமையான, தேவையற்ற, மற்றும் கண்மூடித்தனமான வன்முறையை நான் பார்த்ததில்லை. ஆனால் காஸாவில், ராணுவம் மற்றும் அமெரிக்க ஒப்பந்த நிறுவனங்களின் கீழ் பணியாற்றியபோதுதான், இதுபோன்ற கொடூரத்தை நேரில் அனுபவிக்க நேரிட்டது" என்று ஓய்வுபெற்ற அந்த வீரர் கூறினார். "ஒரு மாதத்திற்கு முன்பு தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட, அதிருப்தியடைந்த முன்னாள் ஒப்பந்த வீரரரிடம் இருந்து வந்த கூற்றுகள்" எனக் கூறி, "அவை முற்றிலும் தவறானவை" என்று காஸா மனிதாபிமான அறக்கட்டளை அவரது கருத்தை மறுத்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் பேச்சுவார்த்தைக் குழுக்களை கத்தாரில் இருந்து திரும்பப் பெற்ற பிறகு, புதிய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. ஹமாஸ் "உண்மையில் ஒப்பந்தம் செய்வதை விரும்பவில்லை" என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அவர்கள் இறக்க விரும்புகிறார்கள் என நான் நினைக்கிறேன்," என்றும் கூறினார். அமெரிக்காவின் இந்தக் கருத்துக்களைக் குறித்து ஹமாஸ் ஆச்சரியம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் முற்றிலும் முடிந்து போய்விடவில்லை என்று மத்தியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் இஸ்ரேலிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு தோஹாவுக்குத் திரும்புவார்கள் என ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியின் காஸா நிருபரிடம் தெரிவித்தார். 2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது, ஹமாஸ் தலைமையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் காஸாவில் போரைத் தொடங்கியது, இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதன் பின்னர் காஸாவில் 59,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் காஸாவில் உதவிப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை, இஸ்ரேல் முற்றிலுமாகத் தடுத்தது. பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஹமாஸுக்கு எதிரான தனது ராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்கி, இரண்டு மாத போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டது. மீதமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க, ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியது. பஞ்சம் ஏற்படப் போவதாக, உலகளாவிய நிபுணர்கள் எச்சரித்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேலின் நடவடிக்கை ஓரளவு தளர்த்தப்பட்டாலும், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது. காஸாவைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 90% க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவோ, அல்லது அழிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிக்கவுள்ளதாக, பிரான்ஸ் வியாழன்று அறிவித்தது. இந்த முடிவு இஸ்ரேலையும் அதன் முக்கிய கூட்டாளியான அமெரிக்காவையும் கோபப்படுத்தியது. அடுத்த நாள், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதி, பிரிட்டனும் பிரான்சை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலாது என்பதை ஸ்டார்மர் உணர்த்தியுள்ளார். இது "இஸ்ரேலுடன் பாலத்தீன நாட்டை உருவாக்கும் இரு நாடு தீர்வின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3v3xpl227zo
-
பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை கல்வித் திட்டம் – பிரதமர்
கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டம் அறிமுகம் 24 July 2025 கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து, ஜூலை 23 ஆம் திகதி பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் இதனைக் கூறினார். புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய விளக்கங்கள் இந்த சீர்திருத்தம் குறித்த விளக்கங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அசோக டி சில்வா ஆகியோர் ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு வழங்கினர். பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், பல்வேறு முக்கிய விடயங்களை தெளிவுபடுத்தினார்: * கற்றல் மற்றும் மதிப்பீட்டில் மாற்றம்: "ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகும் முறைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த தொகுதி முறையில் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் கற்றுக்கொள்ளவும், மதிப்பீடு செய்யப்படவும் வாய்ப்புகள் கிடைக்கின்றன," என்று பிரதமர் விளக்கமளித்தார். * க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: புதிய பாடத்திட்ட வழிகாட்டுதலின்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும். * அமுலாக்கத்தின் தொடக்க நிலை: 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தத்தின் கீழ், 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே புதிய கல்வித் திட்டம் கற்பிக்கப்படும். இந்த சீர்திருத்தத்தைக் கண்காணிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம் இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யப் போதுமான கால அவகாசம் இருப்பதாகவும், சீர்திருத்தம் இறுதியானது என்று கூற முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இந்த சீர்திருத்தம் குறித்த கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்க ஊடகவியலாளர்களுக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். * வகுப்பறை மாணவர் எண்ணிக்கை: ஒரு வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 - 30 ஆகக் குறைக்க வேண்டும் என்பதே இலக்கு. தற்போது 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பறைகள் உள்ளன. கல்வி அமைச்சர் மற்றும் செயலாளரின் உத்தரவின்படி அதிக மாணவர்களை வகுப்பறைகளுக்குள் உள்வாங்கும் முறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை மட்டுமே உள்வாங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். * ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை: ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு செய்வதற்கு முன், பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை முதலில் நீக்க வேண்டும் என்றும், இது உடனடி செய்யக்கூடிய காரியமல்ல என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். புலமைப்பரிசில் பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து, கல்வி முறையின் சுமையைக் குறைப்பதே சீர்திருத்தத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். * முன்பள்ளிப் பருவ வளர்ச்சி மையங்கள்: முன்பள்ளி குழந்தைப் பருவ வளர்ச்சி மையங்களை நடத்துவது மற்றும் அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்த முழுமையான கண்காணிப்பை கல்வி அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த சீர்திருத்தம் பரிந்துரைப்பதாக பிரதமர் கூறினார். * ஆசிரியர் பயிற்சிக்கு முக்கியத்துவம் இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த கல்விப் பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன, ஆசிரியர் பயிற்சிக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முன்மொழியப்பட்ட ஐந்து தூண்களிலும் ஆசிரியர் பயிற்சி உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் பயிற்சிப் பாசறைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்தோர் போன்ற சமூகத்தினர் மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் ஊடகப் பிரிவு https://tamil.news.lk/current-affairs/kalviyai-alavitum-parampariyap-paritcai-muraikku-marraka-tokuti-murai-module-kalvit-tittattai-arimukam
-
சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்
கிருஷாந்தி குமாரசுவாமி கொலையின் குற்றவாளி சோமரட்ண ராஜபக்ச அளித்த சாட்சியம் ஊடாக நாங்கள் செம்மணியை அணுகவேண்டும் - உள்நாட்டு பொறிமுறை சரியான விதத்தில் வேலைசெய்யவில்லை - ரஜீவ்காந் Published By: RAJEEBAN 26 JUL, 2025 | 08:00 PM கிருஷாந்தி குமாரசுவாமி கொலையின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரட்ண ராஜபக்ச என்கின்ற வீரர் நேரடியாக அளித்த சாட்சியம் ஊடாக நாங்கள் இந்த செம்மணியை அணுகவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது கிருஷாந்தி குமாரசுவாமி கொலையின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரட்ண ராஜபக்ச என்கின்ற வீரர் நேரடியாக அளித்த சாட்சியம் ஊடாக நாங்கள் இந்த செம்மணியை அணுகவேண்டும் என்ற பார்வை எனக்கு இருக்கின்றது. 300 முதல் 600 வரையிலான பேரை கொலை செய்து எங்களிடம் மேலதிகாரிகள் தருவார்கள் - தந்தார்கள், இங்கு கொண்டுவந்து அவர்களை புதைத்திருக்கின்றோம் என அவர் சாட்சியம் வழங்கியிருந்தார். அதன் பின்னர் சர்வதேச அமைப்புகள் சர்வதே மன்னிப்புச்சபை போன்றன மேற்கொண்ட முயற்சிகள் மூலம் 99ம் ஆண்டு வரையிலே அகழ்வு பணியை மேற்கொண்டு சுமார் 19 எலும்புக்கூடுகளை அப்போதே கண்டுபிடித்திருந்தார்கள். அதுமட்டுமின்றி இன்று கட்டிடங்களிற்கான அகழ்வு வேலை இடம்பெற்றபோது சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதற்கான வழக்குதொடுக்கப்பட்டு பின் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, நேற்றுவரை 90 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு இனஅழிப்பின் சான்றாக, ஒரு இனத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட பெரும் கொலையாக நாங்கள் பார்க்கவேண்டும் - பல சிங்கள சகோதரர்கள் எங்களுடன் பேசும்போது, தர்க்கம் செய்யும்போது விடுதலைப்புலிகளின் கொலைகளை பற்றியெல்லாம் பேசுகின்றார்கள். அதுவல்ல இங்கு பிரச்சினை, விடுதலைப் புலிகளை அரசாங்கம் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியுள்ளது, பாதுகாப்பு படையினர் என்ற பெயரிலே மக்களை பாதுகாக்க வந்தவர்கள் கொலை செய்திருந்தால், அது மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த நாட்டிலே இராணுவீரர்கள் வெற்றிவீரர்களாக அனைவராலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதேநாட்டின் பிரஜைகளை கொன்றொழித்தவர்களை எவ்வாறு வெற்றிவீரர்களாக கொண்டாடுவது என்ற கேள்வி ஒரு சமூகத்திற்கு இருக்கின்றது. எனவே அந்த அடிப்படையில் சோமரட்ண ராஜபக்ச உயிரோடு இருக்கின்றார், உத்தரவிட்ட உயர் அதிகாரிகள் இருக்கின்றார்கள், அவர்களிற்கு எல்லாம் தலைமை தாங்ககூடிய, முப்படை தளபதியாக இன்றைய ஜனாதிபதியிருக்கின்றார், எனவே இதற்கான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இந்த பாரிய குற்றங்களை இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும், இதற்காக உள்நாட்டு பொறிமுறை சரியான விதத்தில் வேலைசெய்யவில்லை என தமிழ் மக்களாகிய நாங்கள் உணர்கின்றோம், இங்கிருக்கும் மலையக சகோதரர்கள் அதனை உணர்கின்றார்கள். எனவே தான் சர்வதேச நீதி விசாரணையொன்று அவசியம் என நாங்கள் வலியுறுத்துகின்றோம். https://www.virakesari.lk/article/221027
-
கிளிநொச்சி வலய கல்வி பணிமனை, துணுக்காய் கல்வி வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை - ஜோசப் ஸ்டாலின்
Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 11:51 AM கிளிநொச்சி வலய கல்விப் பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் விசேடமாக விஞ்ஞானம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் ( ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (25) கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்த நிலையிலேயே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி வலயக் கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதில் விசேடமாக விஞ்ஞானம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் (ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. இது மட்டுமின்றி சில பாடசாலைகள் நடத்த முடியாத அளவிலே ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதற்கு ஒர் தீர்வும் வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. கிளிநொச்சி வலயத்தில் மாத்திரம் 75 பேர் இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர். ஆனால் 35 புதிய ஆசிரியர்களே அங்கு கடமைக்கு திரும்பி வந்துள்ளனர். இதேபோன்று முல்லைத்தீவு துணுகாய் வலயம் போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. அது மட்டுமின்றி கல்வியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வளங்களும் பற்றாக்குறையாக காணப்படுகின்றன. வடமாகாண ஆளுநருகு்கு இது தொடர்பான முழுமையான அதிகாரங்கள் காணப்படுகிறது. எனவே இதற்கான உரிய தீர்வினை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கே கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/220986
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
ஜோ ரூட் குவித்த அபார சதத்தின் உதவியுடன் இந்தியாவை விட 186 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து Published By: VISHNU 26 JUL, 2025 | 12:46 AM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிராக மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது அண்டர்சன் - டெண்டுல்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட் குவித்த அபார சதத்தின் உதவியுடன் பலமான நிலையை அடைந்துள்ள இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் மீதம் இருக்க 186 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. போட்டியின் 3ஆம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (25) தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்களை இழந்து 544 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 11 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த ஜோ ரூட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 248 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகளுடன் 150 ஓட்டங்களைக் குவித்தார். தனது 157ஆவது டெஸ்ட போட்டியில் விளையாடும் ஜோ ரூட் 38ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இதனிடையே டெஸ்ட் கிரிக்கெட்டில் சில மைல்கல் சாதனைகளையும் ஜோ ரூட் நிலைநாட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மொத்த எண்ணிக்கையை 13,409 ஓட்டங்களாக உயர்த்தியதன் மூலம் சச்சின் டெண்டுல்காரின் 15,921 ஓட்டங்களுக்கு அடுத்ததாக அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளார். இந்தியாவின் ராகுல் ட்ராவிட் (13,288), தென் ஆபிரிக்காவின் யக்ஸ் கல்லிஸ் (13,289), அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங் (13,378) ஆகியோரை பின்தள்ளியே ஜோ ரூட் இரண்டாம் இடத்தை அடைந்தார். அத்துடன் 38ஆவது சதத்தைத் குவித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கார் (51 சதங்கள்), யக்ஸ் கல்லிஸ் (45), ரிக்கி பொன்டிங் (41) ஆகியோருக்கு அடுத்ததாக குமார் சங்கக்காரவுடன் (38) 5ஆம் இடத்தை ஜோ ரூட் பகிர்ந்துகொண்டுள்ளார். ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் ஜோ ரூட் 1128 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த விளையாட்டரங்கில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதலாவது வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினர். லோர்ட்ஸ் விளையாட்டரங்கிலும் அவர் 1000க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளார். அங்கு அவர் 2166 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார். இது இவ்வாறிருக்க, இந்த டெஸ்ட் போட்டியில் 71 ஓட்டங்களைப் பெற்ற ஒல்லி போப்புடன் 3ஆவது விக்கெட்டில் 144 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் மற்றம் ஜெமி ஸ்மித் ஆகியோருடன் 5ஆவது விக்கெட்டில் 150 ஓட்டங்களையும் பகிர்ந்த பின்னர் ஜோ ரூட் ஆட்டம் இழந்தார். (499 - 5 விக்.) மொத்த எண்ணிக்கை 491 ஓட்டங்களாக இருந்தபோது பென் ஸ்டோக்ஸின் தொடையில் ஏற்பட்ட தசை இழுப்பு காரணமாக தற்காலிகமாக ஓய்வுபெற்றார். அப்போது அவர் ஜோ ரூட்டுடன் 142 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தார். கிறிஸ் வோக்ஸ் 7ஆவதாக ஆட்டம் இழந்த பின்னர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் களம் புகுந்து 66 ஓட்டங்களிலிருந்து துடுப்பாட்டத்தைத் தொடர்ந்து ஆட்ட நேர முடிவில் 77 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவருடன் லியாம் டோசன் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 117 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியர்கள சதங்கள் குவித்த போதிலும் இந்த டெஸ்டில் இதுவரை சதம் குவிக்கவில்லை. ஆயஷஸ்வி ஜய்ஸ்வால் (58), சாய் சுதர்சன் (61), ரிஷாப் பான்ட் (54) ஆகியோர் அரைச் களைப் பூர்த்திசெய்தனர். பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 73 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/220967
-
தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!
இந்திய நாடாளுமன்றத்தின்மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதவியேற்பு 25 JUL, 2025 | 12:57 PM புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த திமுக வழக்கறிஞர் வில்சன் தொமுச தலைவர் சண்முகம் எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும் அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் நேற்றுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது. அவர்களுக்குப் பதில் புதிய உறுப்பினர்களாக 6 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகினர். அவர்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், திமுகவைச் சேர்ந்த ராஜாத்தி(கவிஞர் சல்மா), எஸ்.ஆர். சிவலிங்கம், பி.வில்சன் ஆகிய 4 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அவையை நடத்தி வரும் துணைத் தலைவர் ஹரிவன்ஷிடம் வாழ்த்து பெற்றனர். “மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான் சட்டத்தினால் நிறுவப்பட்டதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்க இருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் விழுமிய முறைமையுடன் உறுதிகூறுகிறேன்” என தமிழில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக்கொண்டனர். மற்றவர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அவை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும். இதேபோல் மக்களவையும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/220904
-
சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்
Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 03:50 PM வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (26) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. https://www.virakesari.lk/article/221004
-
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை
படமும் இணைப்பின் மூலமும் தவறாக இணைத்துவிட்டேன், மாற்றுமாறு முறைப்பாடு செய்துள்ளேன். தவறுக்கு வருந்துகிறேன்.
-
மிகச்சிறிய முஸ்லிம் நாடான மாலத்தீவு இந்தியாவுக்கு ஏன் முக்கியம்? 4 காரணங்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி தமிழ் 44 நிமிடங்களுக்கு முன்னர் சுமார் 1,200 தீவுகளை உள்ளடக்கிய மிகச்சிறிய நாடு தான் மாலத்தீவு. உலக அளவில் பூகோள ரீதியாக மிகவும் சிதறுண்ட நாடாக மாலத்தீவு உள்ளது. வெறும் 5.21 லட்சம் மக்கள் தொகையே கொண்ட மாலத்தீவில், ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்குச் செல்ல படகுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 1965ஆம் ஆண்டு மாலத்தீவு பிரிட்டனிடமிருந்து முழுமையாக சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மாலத்தீவு அரசியலமைப்பு ரீதியான இஸ்லாமியக் குடியரசாக மாறியது. சுதந்திரம் பெற்றதிலிருந்து, மாலத்தீவின் அரசியலிலும் மக்களின் வாழ்க்கையிலும் இஸ்லாம் முக்கிய பங்கு வகித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு மாலத்தீவில் இஸ்லாம் அரசு மதமாக மாறியது. மாலத்தீவு உலகின் மிகச் சிறிய இஸ்லாமிய நாடு. மாலத்தீவின் 60வது சுதந்திர தினம் இன்று(ஜூலை 26) கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இது பிரதமர் மோதியின் மூன்றாவது மாலத்தீவு பயணம் ஆகும். 2023 ஆம் ஆண்டு முகமது முய்சு அதிபரான பிறகு மாலத்தீவுக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் நரேந்திர மோதி ஆவார். மாலத்தீவில் முய்சு ஆட்சிக்கு வர அவரது இந்திய எதிர்ப்பு பிரசாரமும் ஒரு முக்கிய காரணமாகும். முந்தைய மாலத்தீவு அசு 'இந்தியாவுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையைப் பின்பற்றி வந்தது. முய்சு அந்தக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். சீனாவுடனான உறவுகளை முய்சு மேலும் வலுப்படுத்தினார். 7.5 பில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்ட மாலத்தீவு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது, இந்தியா அந்நாட்டை காப்பாற்றியது. இதனால் முய்சு இந்தியா மீதான தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுதியுள்ளது. அதிபரான பிறகு, முய்சு முதலில் துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனாவுக்கு பயணம் செய்தார். இதற்குப் பிறகு, இந்தியாவுடனான கசப்பை நீக்க முய்சு ஒரு முயற்சியைத் தொடங்கினார். முன்னதாக இந்தியா குறித்து மாலத்தீவு அரசின் சார்பில் ஆக்ரோஷமான அறிக்கைகள் வந்தபோதும், இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் பொறுமையும் நிதானமும் வெளிப்பட்டன. இத்தகைய சூழ்நிலையில், ஏழரை பில்லியன் டாலர்கள் மட்டுமே பொருளாதாரம் கொண்ட ஒரு மிகச் சிறிய நாட்டின் மீது இந்தியா ஏன் இவ்வளவு நிதானத்தைக் காட்டியது என்ற கேள்வி எழுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES 1. மாலத்தீவின் இருப்பிடம் மாலத்தீவு அமைந்துள்ள இடம்தான் அதற்கு சிறப்பு. மாலத்தீவு இந்தியப் பெருங்கடலின் முக்கிய கடல் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் இந்தப் பாதைகள் வழியாக சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த பாதை வழியாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு எண்ணெய் வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மாலத்தீவுடனான இந்தியாவின் உறவுகள் மோசமடைவது எந்த வகையிலும் நல்லதாகக் கருதப்படவில்லை. மாலத்தீவு ஒரு முக்கியமான கடல்வழிப் பாதை என்றும், உலகளாவிய வர்த்தகத்தில் சிறப்புப் பங்கைக் கொண்டுள்ளது என்றும் வங்கதேசத்திற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் வீணா சிக்ரி கூறுகிறார். "இந்தப் பாதை இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. மாலத்தீவுடனான நல்லுறவு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பையும் உறுதி செய்யும். இந்தியாவின் கடல்சார் கண்காணிப்பிலும் மாலத்தீவின் ஒத்துழைப்பு முக்கியமானது" என்று சிக்ரி கூறுகிறார். "மாலத்தீவு அமைந்துள்ள இடங்களில், முக்கியமான கடல் பாதைகள் உள்ளன. இந்தப் பாதைகள் பாரசீக வளைகுடாவிலிருந்து கிழக்கு ஆசியா வரை செல்கின்றன. இந்தியாவும் வர்த்தகத்திற்காக இந்தப் பாதையைப் பயன்படுத்துகிறது" என்று சிந்தனைக் குழுவான ORF இன் மூத்த உறுப்பினரான மனோஜ் ஜோஷி கூறுகிறார். 2.பூகோள ரீதியாக இந்தியாவுடனான நெருக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES மாலத்தீவு இந்தியாவிற்கு மிக அருகில் உள்ளது. மாலத்தீவு இந்தியாவின் லட்சத்தீவிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவிலும், இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து 1,200 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மனோஜ் ஜோஷி கூறுகையில், "சீனா மாலத்தீவில் கடற்படை தளத்தை அமைத்தால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு சவாலாக இருக்கும். சீனா மாலத்தீவில் வலுவாக மாறினால், போர் போன்ற சூழ்நிலையில் இந்தியாவை அடைவது சீனாவுக்கு மிகவும் எளிதாகிவிடும். சீனா மாலத்தீவில் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. சீனா மாலத்தீவில் கடற்படை தளத்தை உருவாக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா எச்சரிக்கையாக இருப்பது அவசியம்." என்கிறார். மேலும் மனோஜ் ஜோஷி கூறுகையில் "மாலத்தீவு இன்னும் இந்தியாவிற்கு ஒரு சவாலாகவே உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அழைத்திருந்தாலும், மாலத்தீவு அதிபர் முய்சு பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக அவ்வாறு செய்துள்ளார். மாலத்தீவின் பொது மக்கள் கருத்து இன்னும் இந்தியாவிற்கு எதிராக உள்ளது. முய்சு இதைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றார். முய்சு இந்தியாவுடனான உறவை மேம்படுத்தியிருப்பது, விருப்பத்தின் பேரில் அல்ல கட்டாயத்தால் நிகழ்ந்துள்ளது" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES 3. மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு மாலத்தீவு சீனாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சீனாவின் லட்சியத் திட்டமான பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை மாலத்தீவு வெளிப்படையாக ஆதரித்து, ஈடுபாடு காட்டுகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை தடுப்பதில் மாலத்தீவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மாலத்தீவின் பல முக்கிய திட்டங்களில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இவற்றில், கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டம் ( Greater Malé Connectivity Project ) சீனாவிற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாதுகாப்புத் துறையில் சீனா தங்களுக்கு உதவும் என்று மாலத்தீவு கூறியிருந்தது. பின்னர் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், "சீனாவுடன் நாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் பாதுகாப்பு உதவியையும் வழங்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்படும்" என்று எழுதியிருந்தது. சீனா மாலத்தீவில் 200 மில்லியன் டாலர் செலவில் சீனா-மாலத்தீவு நட்புப் பாலத்தைக் கட்டி வருகிறது. மாலத்தீவில் சீனாவின் அதிகரித்து வரும் இருப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கடந்த ஆண்டு ஜனவரியில், முய்சு சீனாவுக்கு சென்றார், இரு நாடுகளும் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு வருடாந்திர மதிப்பாய்வு 2018 இன் படி, டிசம்பர் 27, 2016 அன்று, மாலத்தீவின் மாலே விமான நிலையத்தை ஒட்டியுள்ள ஒரு தீவை சீனா 50 ஆண்டுகளுக்கு $4 மில்லியனுக்கு குத்தகைக்கு எடுத்தது. ஃபெய்தூ பினோல்ஹு என்பது தலைநகருக்கு அருகிலுள்ள ஒரு மக்கள் வசிக்காத தீவாகும், இது சீனாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டது. பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் கீழ் சீனா இந்தியப் பெருங்கடலில் தனது இருப்பை அதிகரித்து வருகிறது, இதற்காக மாலத்தீவில் பல திட்டங்களில் சீனா பங்கெடுத்து வருகிறது. புதிய திட்டங்களுக்கு ஏலச் செயல்முறையிலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை மாலத்தீவு ஜூலை 2016 இல் இயற்றியது. இந்த செயல் சீனாவிற்கு சாதகமாகக் கருதப்பட்டது. "பாரசீக வளைகுடாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் தொடர்ந்து பாதுகாப்பாக வந்தடைவதற்கு அரபிக் கடலில் ஒரு இராணுவ கட்டமைப்பை உருவாக்க சீனா விரும்புகிறது. மறுபுறம், மாலத்தீவுகள் சீனாவிற்கு எளிதான இடமாக மாறி விடக்கூடாது என்று இந்தியா விரும்புகிறது" என்று மனோஜ் ஜோஷி கூறுகிறார். 4. இந்தியா மீதான முய்சுவின் நிலைப்பாடு "மே 10 ஆம் தேதிக்குப் பிறகு, மாலத்தீவில் எந்த வடிவத்திலும் இந்திய ராணுவ வீரர்கள் இருக்க மாட்டார்கள். சீருடையில் இருந்தாலும் சரி, சிவில் உடையில் இருந்தாலும் சரி, இந்திய ராணுவத்தினர் இனி மாலத்தீவில் இருக்க மாட்டார்கள். இதை நான் முழு உறுதியுடன் சொல்கிறேன்" என்று முய்சு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியிருந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி முய்சு சீனாவுக்கு சென்றார். இதன் பின்னர் அவருடைய பேச்சுகளில் இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் விமர்சனங்களை முன் வைத்தார். "மாலத்தீவுகள் ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் அது தன்னை அச்சுறுத்த யாருக்கும் உரிமை தராது" என்று முய்சு கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "அச்சுறுத்தும் நாடு 4.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள உதவியை வழங்காது" என்று கூறியிருந்தார். அனந்தா மைய சிந்தனைக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திராணி பாக்சி கூறுகையில், மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு இன்னும் இருப்பதால் இந்தியாவிற்கும் மாலத்தீவு முக்கியமானது. "மாலத்தீவுகள் இந்தியாவை நேசிக்காது, ஆனால் அது ஒரு பாதுகாப்பு சவாலாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று பாக்சி கூறுகிறார். கிழக்கு-மேற்கு கப்பல் போக்குவரத்து பாதைக்கு அருகில் இருப்பதால், மாலத்தீவு சீனாவிற்கும் மிகவும் முக்கியமானது. வளைகுடாவிலிருந்து சீனாவிற்கு வரும் அனைத்து எண்ணெய் பொருட்களும் இந்தப் பாதை வழியாகவே வருகின்றன. இது தவிர, மாலத்தீவுக்கு அருகிலுள்ள டியாகோ கார்சியாவில் அமெரிக்கா ஒரு முக்கியமான கடற்படைத் தளத்தைக் கொண்டுள்ளது. 1988ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி இராணுவத்தை அனுப்பி அப்துல் கயூமின் அரசாங்கத்தைக் காப்பாற்றினார். 2018 ஆம் ஆண்டில், மாலத்தீவு மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டபோது, இந்தியா தண்ணீரை கப்பலில் அனுப்பியது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியுஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6273lx2x5ko
-
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் மறைப்பதற்கு எதுவுமில்லை; ஹரிணி அமரசூரிய
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் மறைப்பதற்கு எதுவுமில்லை; பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் எமது அரசாங்கத்திலிருந்தாலும் நடவடிக்கை என்கிறார் பிரதமர் ஹரிணி அமரசூரிய 25 JUL, 2025 | 03:38 PM (எம்.ஆர்.எம்.வசீம்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை நாங்கள் முன்னெடுத்துச்செல்வோம். அதில் மறைப்பதற்கு எங்களுக்கு ஒன்றும் இல்லை. அனைத்து விடயங்களையும் முன்வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் எமது அரசாங்கத்துக்கு கீழ் இருக்குமானால், அவர்களுக்கும் சட்டத்தை ஒரேமாதிரி யாக செயற்படுத்த நடவடிக்கை எடுப்போமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு மேலதிக கேள்வியாக முஜிபுர் ரஹ்மான் கேட்ட வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். முஜிபுர் ரஹ்மான் தனது கேள்வியின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சாரா உயிரிழந்ததாக இறுதியாக தெரிவிக்கப்பட்ட டீ.என்.ஏ. அறிக்கையை நாங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று அன்று எதிர்க்கட்சியில் இருந்த நீங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிரகாரம் தற்போது இந்த தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் விசாரணை ஆரம்பித்திருக்கிறது. அதற்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்கத் தயார். ஆனால் தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்தவர் தற்போது அரசாங்கத்தில் இருக்கும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகர, அன்று சாய்ந்தமருதில் குண்டு வெடித்தபோது, அந்த இடத்துக்கு ஆரம்பமாக வந்தது இராணுவத்தினராகும். அப்படியானால் சாராவுக்கு என்ன நடந்தது? அவரை யார் கடத்திச்சென்றார்கள் என்பது தொடர்பான தகவல் இராணுவத்துக்கு தெரிந்திருக்க வேண்டும். அநுர ஜயசிங்கவுக்கு தெரியாமல் இராணுவத்தினர் அங்குவர முடியாது.அவரும் அந்த சந்தர்ப்பதில் தெரிந்திருக்காவிட்டாலும் பின்னராவது இதனை தெரிந்திருப்பார். அன்றைய அரசாங்கத்துக்கு இந்த தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாக ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார். அப்படியானால் அன்றைய அரசாங்கத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்த அநுர ஜயசிங்க, தற்போது அரசாங்கத்தின் பிரதி அமைச்சராக இருக்கும் நிலையில், அவருக்கு கீழ் உள்ளவர்களே தற்போது இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும்போது, அந்தி விசாரணை எவ்வாறு நீதியான விசாரணை என தெரிவிக்க முடியும்? என்றார். அதற்கு பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில், அநுர ஜயசிங்க 2024லேயே பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019லே இடம்பெற்றது. இந்த தாக்குதல் தொடர்பில் 2019இல் இருந்து விசாரணை இடம்பெற்று வருகிறது. அப்போது விசாரணைகளை சுயாதீனமாக நடத்த இடமிருந்தது. ஆனால் செய்யவில்லை. இவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது இந்த விசாரணையை மேற்கொள்ளவில்லை. அதுதான் பிரச்சினை. ஆனால் நாங்கள் விசாரணை மேற்கொள்வோம். யாரும் குழப்பமடைய தேவையில்லை. எமது பிரதி அமைச்சர் இததொடர்பில் பாராளுமன்றத்திலும் தெரிவித்திருக்கிறார். குற்றப்புலனாய்வு பிரிவிலும் வாக்குமூலம் வழங்கி இருக்கிறார். இவர்களுக்கு பல வருடங்களாக செய்ய முடியாமல் போன இந்த வேலையை, தற்போது நாங்கள் மேற்கொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இருப்பது தொடர்பில் எங்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை நாங்கள் முன்னெடுத்துச்செல்வோம். அதில் மறைப்பதற்கு எங்களுக்கு ஒன்றும் இல்லை. அனைத்து விடயங்களையும் முன்வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார். அதேநேரம் சமிந்த விஜேசிறி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடமை, பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற தவறியமைக்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவது வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பாக அமைவதால் அந்த விபரங்களை தற்போது வெளியிட முடியாது. என்றாலும் அறிக்கையை ஆராய்ந்து பார்க்க யாருக்குவேண்டுமானாலும் முடியும். அத்துடன் விசாரணைகளின் முடிவில் சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைய தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்துக்கு கீழ் தண்டனை பெற்றுக்கொடுக்க எமது அரசாங்கம் பின்வாங்கப்போவதில்லை. அதேநேரம் இதற்கு பொறுப்புக்கூக்கூடிய அதிகாரிகள் தற்போது அரசாங்கத்துக்கு கீழ் இருக்குமானால், அவர்களுக்கும் சட்டத்தை ஒரே மாதிரி செயற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/220921
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
சச்சின் சாதனையை நெருங்கிய ஜோ ரூட் - விவேகத்தை விட்டு ஆட்டத்தை தொலைத்த இந்தியா பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES கட்டுரை தகவல் எஸ். தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண்டர்சன்–சச்சின் தொடரில், இந்த டெஸ்டில்தான் இங்கிலாந்து பெரும்பாலான செஷன்களை கைப்பற்றியிருக்கிறது. செஷன்களை அதிகம் கைப்பற்றியும் தொடரில் பின்தங்கியுள்ள இந்திய அணி, தொடரில் முதல்முறையாக பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்றாம் நாளில் பேட்டிங்கிற்கு சாதகமான சீதோஷ்ண நிலை நிலவியதை இங்கிலாந்து அணி பயன்படுத்திக்கொண்டது. இனி, இந்த டெஸ்டை இங்கிலாந்து பறிகொடுப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. அதேபோல இந்தியா வெல்வதற்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த தொடரில் முதல்முறையாக முன்றாம் நாள் முடிவிலேயே ஆட்டம், எந்த திசையில் செல்லப் போகிறது என்பதை யூகிக்க முடிகிறது. இரண்டாம் நாளை இங்கிலாந்துக்கு தாரைவார்த்த இந்தியா, முன்றாம் நாளிலும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இன்னிங்ஸ் மீண்டும் தொடங்கியவுடன் ரூட்டும் போப்பும் எந்த சிரமமுமின்றி ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர். நேற்றும் லைன் அண்ட் லென்த்தில் கோட்டைவிட்ட பும்ரா, கால் பக்கமாக தொடர்ச்சியாக பந்துவீசி அடிவாங்கினார். ஆடுகளம் முழுக்கவும் பேட்டிங்கிற்கு சாதகமாக தட்டையாக மாறியதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. விக்கெட்டுக்கு வாய்ப்பு இருப்பது போல தெரியவில்லை என்றால், குறைந்தபட்சம் ரன் வேகத்தையாவது கட்டுக்குள் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், விக்கெட் கிடைக்காத அதிருப்தியில், விவேகத்தை தொலைத்து கண்டதையும் முயன்று ரன்களை வாரி இறைத்தனர். ரன் ரேட்டை கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு முனையில் ஜடேஜாவை விரைவாக கொண்டுவந்திருக்க வேண்டும். ரூட், போப் இருவரும் வலக்கை பேட்ஸ்மேன்கள் என்பதால், அதுவொரு நல்ல உத்தியும் கூட. ஆனால், இந்திய கேப்டன் கில் அதையும் செய்யவில்லை. பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதில் கோட்டை விட்ட கில் சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்பான இந்திய அணியின் அணுகுமுறை இந்த தொடர் முழுக்கவே, மோசமாக உள்ளது. 'சைனாமேன்' குல்தீப் யாதவ், தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இங்கிலாந்து அணி, 68 ஓவர்கள் விளையாடிய பிறகு, நேற்று வாஷிங்டன் சுந்தர் பந்துவீச அழைக்கப்படுகிறார். இதற்கும் லார்ட்ஸ் டெஸ்டில் அட்டகாசமாக பந்துவீசி, தனது கரியரின் சிறந்த பந்துவீச்சை அவர் பதிவுசெய்திருந்தார். கில்லின் கேப்டன்சி, உள்ளுணர்வை அடிப்படையாக கொண்டதாக தெரியவில்லை. பயிற்சியாளர்கள், அனலிஸ்ட்கள் கொடுக்கும் ஆலோசனையின்படி களத்துக்கு செல்கிறார். திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை எனில், வியூகத்தை மாற்றாமல் அதையே திரும்பத் திரும்ப முயன்று பார்த்து சோர்ந்துவிடுகிறார். இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் அப்படியே கில்லுக்கு நேரெதிராக இருப்பதை பார்க்கலாம். வாய்ப்பே இல்லாத ஒன்றை கூட, தனது வியூகத்தை பயன்படுத்தி, கடைசி வரைக்கும் முயன்று நிகழ்த்திக்காட்டுகிறார். பட மூலாதாரம்,CLIVE MASON/GETTY IMAGES கடைசியில், ரூட்–போப் பார்ட்னர்ஷிப்பை, வாஷிங்டன் சுந்தர்தான் உடைத்தார். சுந்தரை சீக்கிரம் கொண்டுவந்திருந்தால், இவ்வளவு ரன்களை போப் குவித்திருக்க மாட்டார். பந்து தாறுமாறாக எல்லாம் திரும்பவில்லை என்றபோதும், காற்றில் டிரிஃப்டை (Drift) பயன்படுத்தி, வலக்கை பேட்ஸ்மேனுக்கு வெளியே பந்தை கொண்டுசென்றார். சுந்தரின் டிரிஃப்டை கணிக்க முடியாமல்தான் போப் தவறான லைனில் ஆடி, ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அபாயகரமான பேட்ஸ்மேனான புரூக், இறங்கிவந்து விளையாட முயன்று ஸ்டம்பிங் ஆனார். வழக்கம் போல, கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாவிட்டாலும், போப்பின் இன்னிங்ஸ் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, தலை, உடல் இரண்டையும் முன்னகர்த்தி அவர் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டு ரன் சேர்த்த விதம் அபாரமாக இருந்தது. ஒரு பேட்ஸ்மேனுக்கு கால் நகர்வுக்கு நிகராக தலை நகர்வும் அவசியம். சுழற்பந்து வீச்சையும் நன்றாகவே எதிர்கொண்டு ரன் குவித்தார். அவருடைய துருதுருப்பான பேட்டிங், இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் இயன் பெல்லை ஞாபகப்படுத்தியது. நாயகனாக மிளிர்ந்த ஜோ ரூட் சந்தேகமே இன்றி நேற்றைய நாளின் நாயகன் ஜோ ரூட்தான். இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ரூட் அளவுக்கு சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட ஒரு பேட்ஸ்மேன் வேறு எவருமில்லை. எப்போது ரன் சேர்த்தார் என்று தெரியாத அளவுக்கு, நேற்றைய நாள் முழுக்கவும் அடக்கமாக ரன் சேர்த்தார். ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப் உள்பட தனக்குப் பிடித்தமான ஷாட்களையும் தேவைக்கேற்ப பயன்படுத்தி சதத்தை எட்டினார். இந்த தொடர் முழுக்க பிரமாதமாக விளையாடாவிட்டாலும், தொடரில் இங்கிலாந்து முன்னணியில் இருப்பதற்கு ரூட்டின் பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணம். இங்கிலாந்து பேட்டிங் வரிசையில் இருந்து ரூட்டை எடுத்துவிட்டால், அது ஒரு சாதாரண அணியாக மாறிவிடும். நேற்று ஒரே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில், டிராவிட், காலிஸ், பாண்டிங் என மூன்று ஜாம்பவான்களையும் முந்தினார். கம்போஜ் பந்தை ஃபைன்லெக் திசையில் தட்டிவிட்டு தனது 38வது சதத்தை பதிவுசெய்த அவர், அதிக சதங்கள் எடுத்தவர்கள் வரிசையில், சங்கக்காராவை சமன்செய்தார். பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES ரூட் சதத்தை கடந்த பிறகு, இந்தியா முழு நம்பிக்கையும் இழந்துவிட்டது. களத்தில் இந்திய வீரர்களின் உடல்மொழி, அதிர்ஷ்டத்தில் விக்கெட் ஏதும் கிடைக்காத என ஏங்குவதை போலிருந்தது. பும்ரா வழக்கத்தை விட வேகம் குறைவாக பந்துவீசியது, அவர் உடற்தகுதி குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கம்போஜ் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. சராசரியாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் அவருடைய பந்துகளை மிகவும் அலட்சியமாக இங்கிலாந்து வீரர்கள் எதிர்கொண்டு ரன் குவித்தார்கள். பிரசித் கிருஷ்ணாவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாமோ என்று நிச்சயம் அணி நிர்வாகம் நினைத்திருக்கும். தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக, 20 விக்கெட்களை வீழ்த்துவதுதான் இலக்கு என கில் பேட்டி கொடுத்தார். ஆனால், மேட்ச் வின்னர்களை அணியில் சேர்க்காமல், 10-20 உதிரி ரன்களுக்கு ஆசைப்பட்டு ஆல்ரவுண்டர்களை வைத்து அணியை நிரப்பினால், 20 விக்கெட்கள் எடுக்க முடியாது என்பதை கில் இப்போது உணர்ந்திருப்பார். பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES இங்கிலாந்து அணி, ஒரே நாளில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பும்ராவை, 28 ஓவர்கள் பந்துவீச பணித்துள்ளார் கேப்டன் கில். அணித் தேர்வில் கவனம் செலுத்திருந்தால், பும்ராவுக்கு இவ்வளவு வேலைப்பளு ஏற்பட்டிருக்காது. கடைசி 3 விக்கெட்களை விரைவாக இழந்தாலும், ஸ்டோக்ஸ் களத் நிற்பதால், நான்காம் நாளில் பெரிய ஸ்கோரை பதிவுசெய்ய இங்கிலாந்து முயற்சிக்கும். நான்காம் நாளில், மதிய உணவு இடைவேளை வரை விளையாடினாலே, பெரிய லீடை (Lead) இங்கிலாந்து எட்டமுடியும். பிறகு, 150 ஓவர்களுக்கு மேல் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு இந்தியா தள்ளப்படும். தசைப்பிடிப்பால் ரிட்டர்ட் ஹர்ட் ஆன ஸ்டோக்ஸ், வோக்ஸ் ஆட்டமிழந்த பிறகு, மீண்டும் களத்துக்கு வந்தது, அவர் உடற்தகுதி குறித்த சந்தேகங்களை களைந்தது. பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES இந்தியா தோல்வியை தவிர்க்க முடியுமா? இந்தியா தோல்வியை தவிர்க்க வேண்டுமானால், கேஎல் ராகுல் எண்ணிலடங்கா பந்துகளை எதிர்கொள்ள வேண்டும். கடைசி 3 இன்னிங்ஸ்களாக ரன்னின்றி தவிக்கும் கேப்டன் கில், பெரிய இன்னிங்ஸ் ஒன்றை விளையாடியாக வேண்டும். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் சொன்னபடி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், தொடரின் இறுதிக்கட்டத்தில் வீரர்களுக்கு உடலும் மனதும் சோர்ந்து போயிருக்கும். ஆரம்பகட்டத்தில் இருந்த ஆக்ரோஷம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டு வரும். தோல்வியின் விரக்தியில் இருக்கும் அணி, நிதானத்தை இழந்து நிறைய தவறுகளை செய்யத் தொடங்கும். கில் தலைமையிலான இந்திய அணி, இப்போது அப்படிப்பட்ட நிலையில் தான் உள்ளது. இரண்டாம் நாளின் கடைசியில் புதிய பந்தை எடுக்காதது, புதிய பந்தை அனுபவம் இல்லாத கம்போஜிடம் கொடுத்தது, தவறான நேரத்தில் பவுன்சர் பொறியை கையில் எடுத்தது என இந்தியா செய்த தவறுகள் அநேகம். நான்காம் நாள் ஆட்டத்தில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து இந்திய அணி எழுச்சி பெறுமா என்று பார்ப்போம். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ye388y7l2o
-
ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
பாராளுமன்றத்தின் சிறந்த ஆளுமை : அரசியல்வாதிகளுக்கு உதாரணம் காலஞ்சென்ற இரா. சம்பந்தன் - அரசியல் கட்சி தலைவர்கள் Published By: VISHNU 25 JUL, 2025 | 10:30 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பாராளுமன்றத்தில் காணக்கிடைத்த மிகச் சிறந்த ஆளுமையாகவும் அரசியல்வாதிகளுக்கு உதாரண புருஷராகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற இரா.சம்பந்தன் திகழ்ந்தார் என அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய, டபிள்யூ.ஏ.ஏக்கநாயக்க, லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இதன்போது, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில், இரா. சம்பந்தன் இந்த பாராளுமன்றத்தில் நாங்கள் காணுகின்ற மிக அபூர்வமான ஆளுமையாகும். சம்பந்தனின் அரசியல் என்பது வெவ்வேறு யுகங்களாக ஆராயப்பட வேண்டியது. சரிதம் எழுதப்படும் போது ஒவ்வொரு யுகங்களில் அவரின் பங்களிப்பு இருந்துள்ளது. தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக எப்படி செயல்பட்டது என்பது பற்றி நிறைய பேசலாம். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வகிபாகத்தை அவர் வகித்தார். அதற்கு இந்த சபையில் பலரும் சான்று பகிர்வார்கள். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று பிரார்த்திக்கின்றேன். என்றார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ரிஷாத் பதியூதின் கூறுகையில், இரா.சம்பந்தன் இந்த நாட்டில் எல்லோருக்கும் முன்னுதாரமாக திகழ்ந்தவர். நல்ல பண்பான அரசியல் தலைவர். திருகோணமலை மாவட்ட மக்களால் நன்கு நேசிக்கப்பட்டவர். அவர் சகல பிரச்சினைகளின் போதும் அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பங்கு வகித்தார். நடுநிலையான போக்கையும், சிறந்த அரசியல் அறிவையும் கொண்ட சம்பந்தன் ஐயாவை இழந்துள்ளோம். இவரை சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உயர்ந்த அந்தஸ்துள்ளவராக இருந்ததுடன், எதிர்க்கட்சித் தலைவராகவும். இருந்தார். இவர் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு உதாரண புருஷராவார் என்றார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறுகையில், தேசிய அரசியலில் சிறந்தவொரு நபராக சம்பந்தன் இருந்தார். எப்போதும் அரசியல் தீர்வுக்காக முன்னின்றார். பலரும் பயங்கரவாத தீர்வை தேடிப் போன போது, அந்த விடயத்தில் அரசியல் தீர்வு காண செயற்பட்டார். அவர் ஜனநாயக முறைமையில் பாராளுமன்றத்தில் இருந்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சித்தார். அவரின் குடும்பத்தினருக்கும் அவரின் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார். இலங்கை தொழிலாலளர் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கூறுகையில், சம்பந்தன் ஐயாவுடன் எனக்கு நெருக்கமான உறவு இல்லாவிட்டாலும் அவரின் அனுபவங்கள் அவரின் ஆலோசனைகளை பெற்றுள்ளேன். என்னால் கூறக் கூடிய முன்னுதாரணத்திற்கு அவரையே குறிப்பிடுவேன். மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கும் சம்பந்தன் ஐயாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. அவருக்கு எமது மறியாதை எப்போதும் இருக்கும் அவரின் மறைவு தொடர்பில் அவருடைய குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/220966
-
98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை: புட்டு புட்டு வைத்தார் ஜனாதிபதி
கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் பாடசாலைகளை மூடுவதற்கு முற்பட வேண்டாம் - பிரேம்நாத் சி தொலவத்த 25 JUL, 2025 | 06:08 PM (எம்.மனோசித்ரா) கல்வி மறுசீரமைப்பிற்கு 20 எதிர்ப்பினை வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று எமது ஆட்சியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. எது எவ்வாறிருப்பினும் கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் எந்தவொரு பாடசாலையையும் மூடுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்துவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 10 மாதங்களில் எவ்வாறு கல்வி மறுசீரமைப்பினை முன்னெடுப்பார்கள்? 20 ஆண்டுகளாக கல்வி மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பினை வெளியிட்ட இவர்கள், எமது ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையே தற்போது நடைமுறைப்படுத்துகின்றனர். எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் போனமையில் சுனில் ஹந்துன்னெத்தி போன்றோர் பிரதான காரணமானவர்களாவர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கல்வி மறுசீரமைப்பு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது இவர்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைகழக கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்த சந்தர்ப்பங்களிலும் அவர்கள் அவற்றுக்கு வாய்ப்பளிக்கவில்லை. இந்த அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்கள் கடந்த காலங்களில் நாட்டுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியவர்களாவர். ஆனால் இன்று அவர்கள் எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எமக்கு அழைப்பு விடுக்கின்றனர். சரியான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் ஒத்துழைப்பினை வழங்குவோம். பாடசாலைகளை மூடுவது தொடர்பிலும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். எமது ஆட்சி காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லை. எனவே இந்த அரசாங்கமும் எந்தவொரு பாடசாலையையும் மூடுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என வலியுறுத்துகின்றோம். கல்வி மறுசீரமைப்பு எனக் கூறிக் கொண்டு பாடசாலை கட்டமைப்பில் கைவைக்க வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம். வரலாறு மற்றும் அழகியல் பாடங்களை தெரிவு பாடத்தொகுதிக்குள் உள்ளடக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றோம். முதலில் அரசாங்கம் ஆளுந்தரப்பினருக்கு இது தொடர்பான உண்மைகளைக் கூற வேண்டும். அதன் பின்னர் எம்முடன் கலந்தாலோசிக்கலாம் என்றார். https://www.virakesari.lk/article/220942
-
ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்குப் பொருத்தமானவராக இரா. சம்பந்தன் இருந்தார் - பிமல் ரத்நாயக்க 25 JUL, 2025 | 05:41 PM (எம்.ஆர்.எம்.வசீம்) காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கும் பொருத்தமானவராக இருந்தார். அந்த அதிஷ்டம் நாட்டுக்கு கிடைக்காவிட்டாலும் அவரின் குணாம்சங்களை கொண்ட தலைவர்கள் அந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய, டபிள்யூ.ஏ.ஏக்கநாயக்க,லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத சிறந்தவொரு அரசியல்வாதியாக இரா.சம்பந்தன் இருந்தார். அவரின் மறைவு தொடர்பில் அவரின் குடும்பத்தினருக்கு எமது கவலைகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அவருடன் நான் 2001 முதல் 2010 வரையிலும் 2015 முதல் 2020 வரையிலும் எதிர்க்கட்சியில் இருந்துள்ளேன். அதன்போது எமது கொள்கைகள் எதுவாக இருந்தாலும் இந்த பாராளுமன்றத்தில் வேறு அரசியல்வாதிகளிடம் இருந்து மாறுபட்ட ஒருவராக இருந்தார். அவரின் அரசியல் கொள்கைகளில் நூறுவீதம் இணங்காதவர்களாக இருந்தாலும் நாங்கள் எப்போதும் மதிப்பளிக்கும் தலைவராக இருந்துள்ளார். இவருக்கும் எமக்கும் இடையிலான வயது வேறுபாடுகள் இருந்தாலும் மிகவும் மதிக்கத்தக்க ஒருவராக அவரை பார்த்தோம். அவருடன் 2010 - 2019 வரையிலான காலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பான குழுவில் நெருக்கமாக பழகக் கிடைத்தது. சகல கூட்டங்களிலும் கலந்துகொண்டார். அவர் திம்பு பேச்சுவார்த்தையில் இருந்து பல்வேறு அனுபவங்களை கொண்டவர். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அரசியலமைப்பை தயாரித்தாலும் அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று கூறியிருந்தார். இவரின் இந்தக் கருத்து மிகவும் முக்கியமானதாக பார்க்கின்றோம். அவர் உரையாற்றும் போது மனசாட்சிக்கு இணங்கிய பலமான உரையாக இருக்கும். அவ்வாறானவர்கள் இன்னும் இருப்பார்களாக இருந்தால் பாராளுமன்றத்தின் தரம் இன்னும் மேலுயரும். அவர் இந்த நாட்டின் பிரதமர் பதவி மற்றும் ஜனாதிபதி பதவிக்கும் பொருத்தமானவர் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த நாட்டுக்கு அந்த அதிஷ்டம் கிடைக்காவிட்டாலும் அவரின் குணாம்சங்களை கொண்ட தலைவர்கள் அந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும். இதனால் அவரின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கௌரவமளிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/220936