Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 'சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை' - அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டின் போது ஸ்டாலின் 2 முக்கிய அறிவிப்பு 17 ஜனவரி 2026, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளைத் தொடர்ந்து, உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியுடன் தொடங்கி வைத்தனர். அலங்காநல்லூரில் உள்ள முக்கிய கோவில்களின் காளைகள் வாடிவாசல் வழியே முதலில் அவிழ்த்து விடப்பட்டன. "ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை" - தமிழ்நாடு முதல்வர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட்ட தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம், தங்க மோதிரம் போன்ற பரிசுகளை வழங்கினார். அதன்பிறகு பேசிய முதல்வர், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை உள்பட இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். "ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலேயே, கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசுப் பணியிடங்களுக்கு பணியமர்த்தி வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் செய்து தரப்படும்" என்று அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை... அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வழக்கம் போல் காளைகளை அணைந்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மூன்று சுற்றுகள் முடிவடைந்திருந்த நிலையில், 8 மாடுபிடி வீரர்கள், 4 மாடு உரிமையாளர்கள், 4 காவலர்கள் & தீயணைப்பு வீரர்கள், 4 பார்வையாளர்கள் (ஒரு பெண் உட்பட) என மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். முதல் சுற்றில், களம் கண்ட 105 காளைகளில் 16 காளைகள் பிடிபட்டன. முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், திரைப்பட நடிகர் சூரி ஆகியோரின் காளைகள் வெற்றி பெற்றன. முதல் சுற்றில் தகுதி பெற்றவர்கள் விவரம்: அகத்தியன், கருவனூர் - 3 கோகுல்ராஜ், கள்ளந்திரி - 2 அஜித், அலங்காநல்லூர் - 2 பிரசாத், மதுரை - 2 சூர்யா, வாடிப்பட்டி - 2 ஜல்லிக்கட்டை பார்க்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டை பார்வையிட்டு வருகின்றனர். பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பல்வேறு நாட்டில் இருந்து மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டு களிக்கின்றனர். "மதுரை ஜல்லிக்கட்டு போல எங்க ஊரில் ஏதும் நடக்காது. மதுரை மாடு பிடி வீரர்கள் ரொம்பவே சூப்பர். Happy Pongal happy jallikattu" என மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்தனர். வாடி வாசலுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்திற்குமான தொலைவு இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமாக இருப்பதால் தாங்கள் சிரமப்படுவதாக காளை உரிமையாளர்கள் கூறுகின்றனர். பரிசுகள் விவரம் 10-லிருந்து 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் முதன்மை பெறும் வீரர்கள் அனைவரும் இறுதிச்சுற்றில் விளையாடுவார்கள். சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழ்நாடு முதல்வர் சார்பாக வழங்கப்படும் காரும், இரண்டாவது சிறந்த மாடுபிடி வீரருக்கு மோட்டார் பைக்கும், மூன்றாவது சிறந்த மாடுபிடி வீரருக்கு இ-பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது. அதே போன்று களத்தில் சிறந்து விளையாடும் மாட்டின் உரிமையாளருக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக வழங்கப்படும் டிராக்டரும், இரண்டாவது சிறந்த காளைக்கு மோட்டார் பைக்கும், மூன்றாவது சிறந்த காளைக்கு இ-பைக்கும் வழங்கப்படுகிறது. இவை தவிர, அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட பலரும் ஏராளமான பரிசுகளை வீரர்களுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அறிவித்துள்ளனர். முதல்வர் வருகை காலை 10.00 மணி அளவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்வையிட வருகிறார். காலை 9.45 மணியளவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வரும் முதல்வர், களத்தில் விளையாடும் மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசளிப்பார். பிறகு பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி அலங்காநல்லூர் முழுவதும் வளர்த்த போது பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படக்குறிப்பு,2026 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது பாதுகாப்பு ஏற்பாடுகள் 108 ஆம்புலன்ஸ்கள் 12, பைக் ஆம்புலன்ஸ்கள் 2, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் உடனடியாக அழைத்துச் செல்லப்படுவர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20xjkl1y7o
  2. நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்து வெற்றி; தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் Published By: Vishnu 17 Jan, 2026 | 03:07 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற்றுவரும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (16) நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்து ஆகியன இலகுவாக வெற்றியீட்டின. ஆனால், மற்றொரு முன்னாள் உலக சம்பியன் தென் ஆபிரிக்கா தனது ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. குழு ஏ - அவுஸ்திரேலியா வெற்றி அயர்லாந்துக்கு எதிராக விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏ குழு போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்கான முயற்சியை ஆரம்பித்துள்ளது. அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 236 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 39.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து அமோக வெற்றியீட்டியது. ஸ்டீவன் ஹோகன், இலங்கை வம்சாவளியான நிட்டேஷ் செமுவல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 186 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தனர். இந்த வருட உலகக் கிண்ணத்தில் முதலாவது சதத்தைக் குவித்த ஸ்டீவன் ஹோகன் 111 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 115 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். நிட்டேஷ் சமுவேல் 101 பந்துகளை எதிர்கொண்டு பவுண்டறிகள் இல்லாமலேயே 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். வில் மலாஜ்ஸுக்கு 22 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஒலிவர் பீக் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர். முன்னதாகத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் 6 வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் இருவர் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். ரொப் ஓ'ப்றயன் 79 ஓட்டங்களையும் ப்ரெடி ஓகில்பி 49 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சார்ள்ஸ் லெகமண்ட் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: ஸ்டீவன் ஹோகன். சி குழு - இங்கிலாந்து வெற்றி ஹராரே தக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற சி குழுவுக்கான போட்டியில் பாகிஸ்தானை 37 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 46.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 210 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. காலெப் பெல்கொனர் 66 ஓட்டங்களையும் பென் டௌக்கின்ஸ் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஹ்மத் ஹுசெய்ன் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்துல் சுப்ஹான் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 46.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. பர்ஹான் யூசுப் மாத்திரம் திறமையாக துடுப்பெடுத்தாடி 65 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் அலெக்ஸ் க்றீன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜேம்ஸ் மின்டோ, ரெல்ஃபி அல்பர்ட் ஆகிய இருவரும் தலா 23 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: காலெப் பெல்கொனர் டி குழு - தென் ஆபிரிக்காவுக்கு ஏமாற்றம் நமிபியா விண்ட்ஹோக், ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி குழு போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்த முன்னாள் சம்பியன் தென் ஆபிரிக்கா தனது ஆரம்பப் போட்டியில் பெரும் ஏமாற்றம் அடைந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களைக் குவித்தது. முதலாவது விக்கெட் 31 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது. ஆனால், காலித் அஹமத்ஸாய், பைசால் ஷினோஸதா ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 152 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். காலித் அஹ்மத்ஸாய் 74 ஓட்டங்களையும் பைசால் ஷினோஸதா 81 ஓட்டங்களையும் பெற்று ஒரே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தனர். (183 - 3 விக்.) அதே மொத்த எண்ணிக்கையில் மேலும் ஒரு விக்கெட் சரிக்கப்பட்டது. உஸய்ருல்லா நியாஸாய் 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் கோர்ன் போத்தா 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பயண்டா மஜோலா 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 47.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் தனி ஒருவராக போராடிய ஜேசன் ரோவ்ல்ஸ் 98 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட கோர்ன் போதா (25), லெத்தாபோ பாலாமோலாக்கா (22), டெனியல் பொஸ்மான் (20) ஆகிய மூவரும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கதிர் ஸ்டனிக்ஸாய் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அப்துல் அஸிஸ் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: உஸெய்ருல்லா நியாஸாய். https://www.virakesari.lk/article/236231
  3. விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையணிந்த இளைஞர் கைது Jan 17, 2026 - 12:04 PM யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகரிலுள்ள நட்சத்திர விடுதியொன்றின் முன்பாக, விசேட அதிரடிப்படையினர் அணியும் காற்சட்டையை ஒத்த ஆடையை அணிந்திருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (16) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkhxm4pq0416o29nqb7zl9k7
  4. நுவரெலியாவில் அதிகாலையில் துகள் உறைபனி பொழிவு - படங்கள் இணைப்பு 17 Jan, 2026 | 11:49 AM இலங்கையில் "லிட்டில் இங்கிலாந்து" (Little England) என்று அழைக்கப்படும் நுவரெலியாவில் சனிக்கிழமை (17) சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய வானிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக பல்வேறு இடங்களில் புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்து படர்ந்து காணப்பட்டன. நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பனி பொழிந்து காணப்படுகின்றன. இதனால் தாவரவியல் பூங்கா புல்வெளிகள், கிரகரி வாவிக் கரையோரம், பூந் தோட்டங்கள், தேயிலை மரங்கள், அலங்கார மரங்கள் உள்ளிட்ட நீண்ட மரக்கறி தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மீது படர்ந்த ஐஸ் துகள்களின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் சுற்றுச்சூழல் முழுவதும் இரு கண்களையும் வசீகரப்படுத்தும் அளவில் வெள்ளை நிறத்தில் காணப்பட்டன. அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதால் அவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், பனிபொழிவால் தேயிலை, மரக்கறி மற்றும் மலர் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது இதில் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் உள்ளது. இதேவேளை காலை முதல் மாலை வரை கடும் உஷ்ணமான காலநிலையுடன் வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை வழக்கத்திற்கு மாறாக கடுங்குளிரும் நிலவி வருகிறது. மேலும், இப் பிரதேசத்தில் கடும் குளிர் 9.8 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளதால் துகள் உறைபனி ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/236263
  5. 5ஆம் ஆண்டில் சாதா 50மீற்றர் ஓட்டத்தில் (மறுக்க மறுக்க ஆசிரியை கட்டாயப்படுத்தி ஓடவிட்டார்) கடைசியாக ஓடிய எனக்குத்தானா அப்ப முதல் பரிசு!! முன்னுக்கு ஓடிய நண்பர்கள் இவன் எப்படா ஓடி முடிப்பான் என எல்லைக் கோட்டில் ஏளனமாகப் பார்த்தது எல்லாவற்றையும் தம்பர் இறும்பூத வைத்துவிட்டார்!
  6. வடக்கு கடலில் அபூர்வமான குளிர் நிலை : காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது – நாகமுத்து பிரதீபராஜா 17 Jan, 2026 | 11:34 AM கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature – SST) அசாதாரணமாகக் குறைவாக, அதாவது வழக்கத்தை விட அதிக குளிராக காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்த குளிர்ந்த கடல் நீர் வடக்கிலிருந்து கிழக்கு கரையோரமாக இலங்கையின் தெற்குப் பகுதிகளுக்கு கடத்தப்படுவதாகவும், அதன் காரணமாக தெற்கு பகுதியில் காணப்படும் சற்றே அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறைக்கப்படுவதாகவும் அவர் விளக்கியுள்ளார். உலகளாவிய ரீதியில் பல நாடுகளின் வானிலை மற்றும் காலநிலைப் பாங்குகளைத் தீர்மானிப்பதில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மிக முக்கியமான காரணியாக விளங்குகிறது என்றும், அதனால் வடக்கு பிராந்தியக் கடற்பரப்பில் தற்போது காணப்படும் இந்த அசாதாரண குளிர் நிலை குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ‘டித்வா’ புயலுக்குப் பின்னரான நாட்களில் இலங்கையில் பதிவாகும் அதிகூடிய வெப்பநிலை பெரும்பாலும் இரத்தினபுரி மாவட்டத்திலேயே பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலைப் பாங்குகளில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதும் தெளிவாகிறது எனக் குறிப்பிட்ட அவர், காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களில் பொதுமக்களும், அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளும் மிகுந்த கரிசனையுடன் அணுகுவது காலத்தின் அவசியமாகும் எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/236259
  7. கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் Published By: Vishnu 17 Jan, 2026 | 04:29 AM கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் முத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (16) முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். அந்தவகையில் முல்லைத்தீவு - தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர்கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமை அகவணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர்களின் திரு உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தன. மேலும் தேரவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட மாவீரர்களின் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டிருந்தன. https://www.virakesari.lk/article/236240
  8. இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் Jan 17, 2026 - 10:38 AM இன்று (17) அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை 8.0 பாகை செல்சியஸாக நுவரெலியா வானிலை மையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பண்டாரவளை பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 11.6 பாகை செல்சியஸ் எனவும், பதுளை பிரதேசத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.4 பாகை செல்சியஸாகவும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, பொலன்னறுவை பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 பாகை செல்சியஸ் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (17) வரட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் துகள் உறைபனி ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என அந்த முன்னறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkhujyq6040zo29n4kn8hm3t
  9. யாழ் பல்கலைக்கழக பொங்கு தமிழ் நிகழ்வுக்கு மாணவர் ஒன்றியம் அழைப்பு Published By: Vishnu 17 Jan, 2026 | 03:14 AM ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதே பொங்கு தமிழ் நிகழ்வு ஆகும். யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001 இல் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது. அதன்போது, தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம் போன்ற மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. அந்தவகையில் இந்த பொங்குதமிழ் நிகழ்வானது வருடாவருடம் அனுஷ்க்கப்படுவது வழமை. அதன்படி நாளை மதியம் 12 மணியளவில் யாழ். பல்கலைக்கழக பொங்கு தமிழ் தூபியில், பொங்குதமிழ் நிகழ்வை அனுஷ்டிக்க அனைத்து மாணவர்களும், பொதுமக்களும் உணர்வோடு அணி திரளவேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/236233
  10. கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல் டேனியல் புஷ் மற்றும் பவுலின் கோலா பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty கிரீன்லாந்தை இணைக்கும் தனது லட்சியங்களுக்கு ஆதரவளிக்காத நாடுகள் மீது வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், கிரீன்லாந்து விவகாரத்தில் மற்ற நாடுகள் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், அவர்கள் மீது வரிகளை விதிக்க முடியும் என்று டிரம்ப் கூறினார். எந்தெந்த நாடுகள் மீது புதிய வரிகள் விதிக்கப்படக்கூடும் என்றோ அல்லது தனது இலக்கை அடைய எந்த அதிகாரத்தைப் பயன்படுத்தப் போகிறார் என்றோ டிரம்ப் குறிப்பிடவில்லை. கிரீன்லாந்து டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதற்குச் சொந்தமாக தனி அரசாங்கம் உள்ளது. டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன், மற்ற நாடுகளும் அவரது திட்டத்தை எதிர்க்கின்றன, அமெரிக்காவில் உள்ள பலரும் இதுகுறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். டிரம்ப் இந்த கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், இரு கட்சிகளையும் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற தூதுக்குழு கிரீன்லாந்திற்குச் சென்றிருந்தது. அந்தத் தூதுக்குழு டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மற்றும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் ஆகியோரைச் சந்தித்தது. கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல்
  11. அமெரிக்கா இரானை தாக்கினால் ரஷ்யா, சீனா பதிலடி கொடுக்குமா? அரபு நாடுகளின் பதற்றம் என்ன? பட மூலாதாரம்,Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரானில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற பேச்சு நிலவி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை இது குறித்துப் பேசியுள்ளார். இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது அமெரிக்காவிற்குள் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு கருத்தாக உள்ளது. அமெரிக்கா ஏற்கனவே 1953-ஆம் ஆண்டில் இரானில் அரசாங்கத்தை மாற்றியிருந்தது. ஆனால் 1979-இல் நடந்த இஸ்லாமியப் புரட்சி, அமெரிக்காவுக்கு ஆதரவான அந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றியது. 1953-இல் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து, இரானில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முகமது மொசாடெக்கை பதவியிலிருந்து அகற்றி, அதிகாரத்தை பஹ்லவியிடம் ஒப்படைத்தன. முகமது மொசாடெக் இரானின் எண்ணெய் துறையைத் தேசியமயமாக்கியவர். மேலும் மன்னரின் (ஷா) அதிகாரத்தைக் குறைக்க விரும்பினார். போர் நடக்காத காலத்தில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவரைப் பதவியிலிருந்து இறக்க அமெரிக்கா மேற்கொண்ட முதல் முயற்சி இதுவாகும். ஆனால் இதுவே கடைசியாக இருக்கவில்லை. அதன் பிறகு, இது அமெரிக்க வெளியுறவுத் திட்டத்தின் ஒரு அங்கமாகவே மாறியது. 1953-இல் அமெரிக்கா நடத்திய இந்த ஆட்சி கவிழ்ப்பு, 1979-ஆம் ஆண்டின் இரான் புரட்சிக்கு வழிவகுத்தது. இத்தனை ஆண்டுகாலம் கடந்த பின்னரும், இரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான கசப்பான உணர்வுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யா நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1979 இஸ்லாமியப் புரட்சியின் போது தற்போது இரானில் ஆயதுல்லா அலி காமனெயியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி அமெரிக்கா பேசி வருகிறது. இத்தகைய சூழலில், அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்தினால், யார் அதனுடன் நிற்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. இரானின் முக்கிய கூட்டாளிகளான ரஷ்யாவும் சீனாவும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை வெளிப்படையாக எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இரு நாடுகளும் வாய்மொழியாக மட்டுமே தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் என கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது கூட, ரஷ்யாவும் சீனாவும் வாய்மொழி கண்டனங்களை மட்டுமே தெரிவித்திருந்தன. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கும் இரானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆழமடைந்துள்ளது என்பது தெளிவாகிறது. இரான் டிரோன்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியுள்ளது. பதிலுக்கு ரஷ்யா பொருளாதார மற்றும் ராணுவ உறவுகளை விரிவுபடுத்தி, இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர சார்புநிலையை அதிகரித்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த ரஷ்யாவிற்கு இரான் ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்தாலும், அமெரிக்காவுடன் நேரடி மோதலில் ஈடுபடும் அளவுக்கு ரஷ்யா அதற்கு நட்பு நாடு அல்ல. கடந்த ஆண்டு தாக்குதலின் போது கூட ரஷ்யா அவ்வாறு செய்யவில்லை. ஜனவரி 13 அன்று, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "மேற்கத்திய நாடுகள் இரான் மீது விதித்துள்ள சட்டவிரோதத் தடைகள், அங்கு பொருளாதார மற்றும் சமூக சவால்களை உருவாக்கியுள்ளன. இதனால் சாதாரண இரான் குடிமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.'' என்றார் ''மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்தி, இரானிய அரசை நிலைகுலையச் செய்யவும் பலவீனப்படுத்தவும் வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. இரானின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் இத்தகைய வெளிநாட்டுத் தலையீடுகளை நாங்கள் கண்டிக்கிறோம்" என்றார். மேலும், "2025 ஜூன் மாதத்தில் நடந்தது போன்ற மற்றொரு தாக்குதலை இரான் மீது நடத்த காரணங்களைத் தேடுபவர்கள், இத்தகைய நடவடிக்கைகள் மத்திய கிழக்கு மற்றும் உலகளாவிய சர்வதேச பாதுகாப்பில் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்," என குறிப்பிட்டார். சீனா அமெரிக்காவை எதிர்த்துப் போரிடுமா? பட மூலாதாரம்,Getty Images உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியான சீனா, இரான் மீதான அமெரிக்காவின் அச்சுறுத்தல்களைக் கண்டித்து வருகிறது. ஆனால், அது அமெரிக்காவை நேரடியாக எதிர்த்துப் போரிடுமா? சீனாவிற்கும் இரானுக்கும் இடையே "விரிவான உத்தி சார்ந்த கூட்டாண்மை" உள்ளது. இருப்பினும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதைப் போல, சீனா தனது கூட்டாளிகளுக்குப் போர்க்களத்தில் நேரடியாக ஆதரவு அளிப்பதில்லை. பொருளாதார ரீதியாக நிலைத்திருக்க (எண்ணெய் விற்பனை) மற்றும் ராணுவத் தொழில்நுட்பத்திற்காக சீனாவைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இரான் சிக்கியுள்ளது. அதே நேரத்தில், இரானுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதங்களையும் வழங்கத் தான் தயாராக இல்லை என்பதை சீனா தெளிவுபடுத்தியுள்ளது. "இரான் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம். இரானிய அரசாங்கமும் மக்களும் தற்போதைய சிரமங்களை முறியடித்து, நாட்டில் நிலைத்தன்மையைப் பேணுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.'' என சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியது. ''சர்வதேச உறவுகளில் பலத்தைப் பயன்படுத்துவதையோ அல்லது அச்சுறுத்துவதையோ நாங்கள் எதிர்க்கிறோம். மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு உகந்த நடவடிக்கைகளை அனைத்துத் தரப்பினரும் எடுப்பார்கள் என்று நம்புகிறோம்" என கூறியுள்ளது. இரான் தொடர்பான சீனாவின் நிலைப்பாடு அமெரிக்காவிற்கு எதிராக ஆக்ரோஷமாக இல்லை. ஏனெனில், அமெரிக்காதான் சீனாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி. இரு நாடுகளுக்கும் இடையே விரோதப் போக்கு இருந்தபோதிலும், சீனா அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளைத் தொடர்ந்து பராமரிக்கவே விரும்புகிறது. ஜி-7 நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,Getty Images இரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் அங்குள்ள அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஜி-7 நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன. "கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர்களுடன் இணைந்து, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளாகிய நாங்கள், இரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. "மக்களுக்கு எதிராக இரான் அதிகாரிகள் மேற்கொண்டு வரும் கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இரானிய அதிகாரிகள் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், வன்முறையைத் தவிர்க்கவும், இரானிய குடிமக்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்'' என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images துருக்கி கூறுவது என்ன? துருக்கி இஸ்ரேலுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசினாலும், அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் அணுகுமுறை மாறுகிறது. ஜனவரி 13 அன்று, துருக்கிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஓமர் செலிக், ''இரானின் உள்நாட்டு விவகாரங்களில் உலகம் தலையிடக்கூடாது. அந்தப் பிரச்னைகளை எப்படித் தீர்ப்பது என்பதை இரான் மக்களே தீர்மானிக்க வேண்டும்.'' என்றார். குறிப்பாக இஸ்ரேலை விமர்சித்த அவர், போராட்டங்களை இஸ்ரேல் தனது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் எந்தவொரு வெளிநாட்டு தலையீடும் "இன்னும் மோசமான விளைவுகளுக்கு" வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார். "எங்கள் அண்டை நாடான இரானில் எந்த குழப்பத்தையும் நாங்கள் காண விரும்பவில்லை. இந்தப் பிரச்னைகள் இரானின் சொந்த உள்நாட்டுச் செயல்முறைகள் மற்றும் தேசிய விருப்பத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். இஸ்ரேலிய அதிகாரிகள் பொறுப்பற்ற நிலைப்பாட்டை எடுக்க முயற்சிக்கின்றனர். இது பிராந்தியம் முழுவதும் இன்னும் பெரிய பிரச்னைகளை உருவாக்கும்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images கடந்த ஆண்டு இரான் 12 நாட்கள் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க குண்டுவீச்சை எதிர்கொண்டது. இந்த நிகழ்வுகள் பிராந்தியத்தில் இரானின் பலவீனத்தை தெளிவாக படமிட்டுக் காட்டின. இரான் அதிகாரிகள் தங்களின் வளைகுடா அண்டை நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் தாங்கள் தாக்கப்பட்டால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம் என கூறியுள்ளனர். வளைகுடா பிராந்தியத்தில் இரான் நடத்தும் எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவிடமிருந்து மிகக் கடுமையான எதிர்வினையைத் தூண்டும். அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பைத் தொடர்ந்து இராக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நீண்ட உள்நாட்டுப் போரின் போது சிரியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அண்டை நாடான ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் மற்றும் செங்கடலுக்கு அப்பால் சூடானில் நடக்கும் மோதல்கள் குறித்தும் செளதி அரேபியா கவலை கொண்டுள்ளது. அரபு ஆட்சியாளர்களுக்கும் இரானுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் சுமுகமானவை அல்ல. இரானின் அணுத் திட்டத்தையும் அந்த நாடு அரபு ஆயுதக்குழுவுக்கும் வழங்கும் ஆதரவையும் கட்டுப்படுத்தும் புதிய இரானிய ஆட்சி அமைந்தால், அதனை அரபு நாடுகள் வரவேற்கும் என கூறப்படுகிறது. ஆனால் இரண்டு ஆண்டாக பிராந்தியத்தில் நடந்த போருக்கு பிறகு மத்திய கிழக்கில் உள்ள பல அரசாங்கங்கள் இப்போது இரானில் ஏற்படும் அமைதியின்மை நிலைத்தன்மையை விட அதிக குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், அதன் தாக்கம் தங்கள் சொந்த நாடுகளை அடையக்கூடும் என்றும் அஞ்சுகின்றன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அரபு நாடுகளின் அச்சம் இரான் மீதான எந்தவொரு தாக்குதலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் டாங்கர்களின் போக்குவரத்தைப் பாதிக்கும் என்று அரபு நாடுகள் அஞ்சுவதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' தெரிவித்துள்ளது. பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்த குறுகிய கடல் பகுதி, இரானை அதன் அரபு அண்டை நாடுகளிடமிருந்து பிரிக்கிறது. உலகின் மொத்த எண்ணெய் போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே நடைபெறுகிறது. எந்தவொரு சாத்தியமான தாக்குதலிலும் தாங்கள் ஈடுபடமாட்டோம் என்றும், இரானை தாக்க அமெரிக்கா தங்களின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் இரானுக்கு செளதி உறுதி அளித்துள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது. கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி செவ்வாயன்று செய்தியாளர்களிடம், கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க உதவுவதற்காக தனது நாடு அமெரிக்கா மற்றும் இரானுடன் தொடர்பில் உள்ளது என்றார். இரானுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கை குறித்தும் டிரம்ப் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை, மேலும் அவரது ஆலோசகர்களுடன் இந்த உத்தி குறித்து விவாதித்து வருகிறார் என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். "செளதி அரேபியா இரானின் போட்டியாளராகக் கருதப்படுகிறது. ஆனால் திரைக்குப் பின்னால், செளதி அரேபியா, ஓமன் மற்றும் கத்தார் ஆகியவை இரானிய ஆட்சியைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியும் உலகளாவிய எண்ணெய் சந்தைகளுக்கு பெரிய இடையூறுகளை ஏற்படுத்தி இறுதியில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று அமெரிக்காவை நம்ப வைக்க முயற்சிக்கின்றன" என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இந்த நாடுகள் தங்கள் சொந்த நாடுகளில் ஏற்படக்கூடிய எதிர்வினை மற்றும் உறுதியற்ற தன்மை குறித்து மிகவும் கவலை கொண்டுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgyjxv23kjo
  12. பணப்பரிமாற்ற ரசீது. வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை பரராஜசிங்கம் ஐயாவின் மலசல கூடத்தை பூரணப்படுத்த குழிவெட்டும் படங்கள்.
  13. நேர்மறையான மாற்றங்களைச் செய்யும்போது எதிர்ப்புகள் வருவது இயல்பு - பிரதமர் 16 Jan, 2026 | 05:36 PM நேர்மறையான மாற்றங்களைச் செய்யும்போது எதிர்ப்புகள் வருவது இயல்பு. நாட்டிற்குத் தேவையான சிறந்த குடிமகனை உருவாக்கும் நோக்கில் நாம் ஆரம்பித்துள்ள நவீன கல்வி முறையை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்பு குறித்துத் தெளிவுபடுத்துவதற்காகச் சிலாபம் கல்வி வலயத்தின் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுடன் இன்று வெள்ளிக்கிழமை (16) மாதம்பை செடெக் (SEDEC) நிறுவன மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பிரதமர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றபோது, ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பிரதான துறையாகக் கல்வித்துறை இனங்காணப்பட்டிருந்தது எனவும், இவ்வாறான சமூக மாற்றங்களை முன்னெடுக்கும்போது ஒரு சிறிய தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பக்கூடும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். எவ்வாறாயினும், சிறுவர் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் புதிய கல்வி மறுசீரமைப்பு முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வின்போது, 176 பாடசாலைகளையும் சுமார் 76,000 மாணவர்களையும் கொண்ட சிலாபம் கல்வி வலயம் குறித்த சுருக்கமான அறிமுகத்தைச் சிலாபம் வலயக் கல்விப் பணிப்பாளர் முன்வைத்தார். கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதற்காக வடமேல் மாகாணக் கல்வி அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் பிரதமருக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. அத்தோடு, கலந்துகொண்ட கல்வி அதிகாரிகள் தமது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டதோடு, கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அதற்கான தயார்நிலை குறித்துப் பிரதமரின் கவனம் ஈர்க்கப்பட்டது. அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், தவறுகளை இனங்கண்டு அவற்றைச் சரிசெய்து முன்னெடுக்கப்படுகின்ற புதிய கல்வி முறையின் கீழ், பிள்ளைகளுக்குத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது, சிறுவர் பாதுகாப்புக் கொள்கைகள் பேணப்படும் வகையில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தக் கல்வி மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதில் புத்தளம் மாவட்டக் கல்வி அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பானது, கல்வி மறுசீரமைப்பைக் குழப்ப முயற்சிக்கும் தரப்பினரின் நோக்கங்களை முறியடிக்கும் அளவிற்குப் பலமானதாக இருக்கின்றது என்பதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். தொழிற்கல்விக்காக ஒதுக்கப்பட்ட ஆகக்கூடிய வரவுசெலவுத் திட்ட நிதி, இக்கல்வி மறுசீரமைப்பின் ஊடாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கிடையிலான டிஜிட்டல் வளங்களின் சமத்துவமின்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிப் பிரச்சினைகளை நீக்குவதற்காகத் தற்போது உரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 6ஆம் தரக் கல்வி மறுசீரமைப்பைத் தற்காலிகமாக நிறுத்தியதன் மூலம் அநீதி இழைக்கப்பட்ட மாணவர்களுக்கு விரைவில் நீதியைப் பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம். கல்வியை ஒரு பாரிய மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும் இந்தப் பயணத்தில் மக்களின் அங்கீகாரம் மிகவும் முக்கியமானதாகும்" எனப் பிரதமர் தெரிவித்தார். இந்நிகழ்வில் வடமேல் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பி.எம்.சி.கே. வன்னிநாயக்க, உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி, பாடசாலை அதிபர்கள், மகா சங்கத்தினர் மற்றும் கத்தோலிக்க மதகுருமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/236214
  14. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக பூமிக்குத் திரும்பிய வீரர்கள்! - காரணம் இதுதான் 16 Jan, 2026 | 02:32 PM சர்வதே விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் 4 விண்வெளி வீரர்களும் நேற்று வியாழக்கிழமை (15) அதிகாலை அவசர அழைப்பின் பேரில் பூமிக்குத் திரும்பியதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதே விண்வெளி நிலையத்தில் தங்கி, ஆய்வுகளை மேற்கொண்ட விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவருக்கு அவசர சிகிச்சை வழங்கவேண்டிய தேவை காணப்படுவதால் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. க்ரூ -11 (Crew-11) என்ற விண்வெளிப் பயணத் திட்டத்தின் கீழ் ஜெனா கார்ட்மேன் (Zena Cardman), மைக் பின்கே (Mike Fincke) ஆகிய இரண்டு அமெரிக்க வீரர்கள், ஜப்பான் வீரர் கிமியா யூயி (Kimiya Yui), ரஷ்ய வீரர் ஒலெக் ப்ளாட்டோனோவ் (Oleg Platonov) ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் 1ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பூமியிலிருந்து அனுப்பப்பட்டனர். இந்த வீரர்கள் “ஸ்பேஸ் எக்ஸ்” (SpaceX) நிறுவனத்தின் “ட்ராகன்” (Dragon) விண்கலத்தில் சென்றுள்ளனர். இவர்களது விண்வெளி ஆய்வுப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை மேற்கொள்ளப்படும் என திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆய்வில் ஈடுபட்டிருந்த குறித்த நான்கு வீரர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதால் வீரர்கள் குழுவை அவசரமாக பூமிக்கு திரும்ப அழைக்க நாசா தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதனையடுத்து, கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை மாலை ட்ராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு 10 மணிநேர பயணத்தை மேற்கொண்டு படிப்படியாக உயரத்தை குறைத்து பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையத் தொடங்கியது. பின்னர், விண்வெளி வீரர்கள் சான் டியாகோ அருகே பசுபிக் கடற்பரப்பில் நேற்று அதிகாலை பாதுகாப்பாக தரையிறங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவ்வேளை, கடலில் நீந்திய டொல்பின்களை கண்டு ரசித்ததாக வீரர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், அவர்கள் கடற்படை கப்பலின் மூலம் மீட்கப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தின் 25 ஆண்டுகால வரலாற்றில், விண்வெளியிலிருந்து இதுபோன்று அவசர தேவை கருதி வீரர்களை பூமிக்கு திருப்பி அழைத்த முதல் நிகழ்வு இதுவே என தெரிவிக்கப்படும் அதேவேளை தனியுரிமை கருதி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட வீரர் யார் என நாசா வெளியிட மறுத்து வருகிறது. https://www.virakesari.lk/article/236181
  15. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு - 37 பேர் காயம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 பாலமேடு ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயற்சி செய்யும் மாடுபிடி வீரர்கள் 16 ஜனவரி 2026, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 37 பேர் காயமடைந்தனர். இதில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 16) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் பங்கேற்பதற்காக 600-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 489 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் உடல் தகுதியின்மை மற்றும் மது அருந்தி வந்தது என 24 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 465 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். பாலமேடு ஜல்லிக்கட்டைப் பார்க்க நடிகர் சூரி வந்திருந்தார். ஜல்லிக்கட்டில் பங்கேற்றிருந்த அவருடைய காளை வெற்றி பெற்றது. இறுதிச்சுற்று உட்பட மொத்தம் 10 சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இன்று நடைபெற்ற போட்டியில் மொத்தம் 37 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார், டிராக்டர், பைக் மற்றும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. ஒன்பதாவது சுற்று நிலவரம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒன்பது சுற்றுகள் முடிவுற்ற நிலையில், இதுவரை மாடுபிடி வீரர்கள் 8 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 11 பேர், பார்வையாளர்கள் 11 பேர், அரசு ஆரம்ப சுகாதார ஊழியர் ஒருவர் என மொத்தம் 31 பேர் காயமடைந்துள்ளனர். ஒன்பதாவது சுற்றில், களம் கண்ட 817 மாடுகளில், 135 மாடுகள் பிடிபட்டுள்ளன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அஜித், பொந்துகம்பட்டி - 12 பிரபாகரன், பொதும்பு - 11 கார்த்தி, நாமக்கல் - 11 பார்த்திபன், திருமணப்பதி - 8 பார்த்திபன், நத்தம் - 8 ஏழாவது சுற்று நிலவரம் ஏழாவது சுற்றில், களம் கண்ட 678 மாடுகளில், 122 மாடுகள் பிடிபட்டுள்ளன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அஜித், பொந்துகம்பட்டி - 12 பிரபாகரன், பொதும்பு - 11 கார்த்தி, நாமக்கல் - 11 ஏழாவது சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: நவீன்குமார், ஆண்டார்கொட்டாரம் - 2 ஆறாம் சுற்று நிலவரம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில், ஆறாம் சுற்றில் களம் கண்ட 601 மாடுகளில் 112 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அஜித், பொந்துகம்பட்டி - 12 பிரபாகரன், பொதும்பு - 11 கார்த்தி, நாமக்கல் - 11 ஆறாம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: கார்த்தி, நாமக்கல் - 11 பார்த்திபன், திருமணப்பதி - 8 கௌதம், ராஜக்காள்பட்டி - 4 மணிகண்டராஜா, சின்னாளபட்டி - 2 மூன்றாவது சுற்று நிலவரம் பாலமேடு ஜல்லிக்கட்டு மூன்றாம் சுற்றில் களம் கண்ட 295 காளைகளில் 45 காளைகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பிரபாகரன், பொதும்பு - 11 தமிழரசன், சின்னப்பட்டி - 6 துளசிராம், மஞ்சம்பட்டி - 4 மூன்றாம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பிரபாகரன், பொதும்பு - 11 ஶ்ரீநாத், விக்கிரமங்கலம் - 2 இரண்டாவது சுற்றின் முடிவில் காலை 12.00 மணி நிலவரப்படி பரிசோதனைக்கு வந்த 239 காளைகளில், 238 காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிக்கப்பட்டன. ஒரு காளை மட்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இரண்டாவது சுற்று முடிவில், 3 மாடுபிடி வீரர்கள், 2 உரிமையாளர்கள் மற்றும் ஒரு பார்வையாளர் என மொத்தம் 6 பேர் காயமடைந்தனர். வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு நிசான் கார், டிராக்டர், மோட்டார் பைக் மற்றும் தங்க நாணயம் ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. அதேபோன்று ஒவ்வொரு சுற்றிலும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மெத்தை, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த போட்டியில் சுமார் ஆயிரம் காளைகளும் 800 மாடுபிடி வீரர்களும் களம் இறங்க உள்ளனர். 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகள் மதுரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்துறை ஆகியவை சார்பாக போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை சார்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 12 ஆம்புலன்ஸ்கள் , 2 பைக் ஆம்புலன்ஸ்கள் , ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில் அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்படுவர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mklgz32j2o
  16. ஐசிசி 19இன் கீழ் உலகக் கிண்ணம்: ஐக்கிய அமெரிக்காவை DLS முறைமையில் வென்றது இந்தியா 15 Jan, 2026 | 09:38 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக புலாவாயோ குவின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (15) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை (DLS) பிரகாரம் இந்தியா 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. ஐக்கிய அமெரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 107 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 21 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. பிற்பகல் 5.10 மணியளவில் தடைப்பட்ட இப் போட்டி 2 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தொடர்ந்தபோது இந்தியாவுக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் வெற்றி இலக்கு 34 ஓவர்களில் 96 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது. இந்தியா 17.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வெற்றி இலக்கை அடைவதற்கு முன்னர் இந்தியா தனது இளம் அதிரடி வீரர் வைபவ் சூரியவன்ஷி உட்பட நால்வரை 70 ஓட்டங்களுக்கு இழந்தது. அபிக்யான் குண்டு அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவை வெற்றி பெறச்செய்தார். அவரை விட அணித் தலைவர் அயுஷ் மஹாத்ரே 19 ஓட்டங்களையும் விஹான் மல்ஹோத்ரா 18 ஓட்டங்களையும் கனிஷ்க் சௌஹான் ஆட்டம் இழக்காமல் 10 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிட்விக் அப்பிடி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா 35.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஹெனில் பட்டேலின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் 9 அறிமுக வீரர்களைக் கொண்ட ஐக்கிய அமெரிக்க இளையோர் அணி பெரும் சிரமம் அடைந்தது. அறிமுக வீரர்களில் ஒருவரான நிட்டிஷ் சுதினி திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4 பவுண்டறிகளுடன் 36 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் அத்னித் ஜாம்ப் (18), சஹில் கார்க் (16), அர்ஜுன் மஹேஷ் (16) ஆகிய மூவர் 15 ஓட்டங்களுக்கு மெல் பெற்றனர். பந்துவீச்சில் ஹெனில் பட்டேல் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 7 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: ஹெனில் பட்டேல். https://www.virakesari.lk/article/236131
  17. அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் Jan 16, 2026 - 04:14 PM அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ அல்லது சொத்து சேதங்களோ ஏற்படவில்லை என்பதுடன், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkgr42z403zvo29n76m2khx4
  18. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடு வசதி இல்லாமல் வாழும் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் - ஜனாதிபதி Published By: Vishnu 16 Jan, 2026 | 08:49 PM பு.கஜிந்தன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடு வசதி இல்லாமல் வாழும் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை (16) வீட்டுத் திட்ட மானியத்திற்கான காசோலைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையாற்றுகையில் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து பல காலங்கள் கடந்தாலும் இன்னும் பூர்த்தியடையாத வீட்டு திட்டங்களை பூர்த்தி செய்யும் முகமாக இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனவும், வட மாகாண மக்கள் யுத்த காலத்திலும் மற்றும் யுத்த காலத்திற்குப் பிறகும் பல இடப் பெயர்களை சந்தித்துள்ளனர் எனவும், நீண்ட காலமாக சொந்த வீடு இல்லாமல் வாழ்வது இலகுவான விடயம் அல்ல எனவும் தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டும் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், நாட்டில் முதல் முறையாக வட மாகாண மக்கள் நம்பிக்கை செலுத்தக்கூடிய வகையில் ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், முதலாவதாக மிகவும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எமது அரசாங்கம் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நிவர்த்தி செய்யும் எனவும் தெரிவித்தார். மேலும், வரவு செலவு திட்டத்தின் ஊடாக கல்விக்காக அதிக நிதியை இம்முறை ஒதுக்கியுள்ளதாகவும், மக்களுக்கு ஒரு சிறந்த வருமான வழியை ஏற்படுத்த வேண்டும் எனவும், விசேடமாக யாழ்ப்பாணத்தில் விவசாயத்துறை, சுற்றுலாத்துறை , கடற்றொழிற்துறை மற்றும் சிறு கைத்தொழில் துறை போன்றன இப் பகுதி மக்களுடைய வாழ்வாதாரமாக இருக்கின்றன எனவும், இவ் அனைத்து துறையையும் மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், யுத்த காலத்தில் முரண்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் இனவாதத்துடன் வாழ்ந்தனர் எனவும், இந்த முரண்பாட்டின் ஊடாக எவருமே நன்மை அடையவில்லை எனவும், மாறாக பாதிப்புக்கள் மட்டுமே மிஞ்சின எனவும் குறிப்பிட்டார். மேலும் அதிமேதகு சனாதிபதி தெரிவிக்கையில், மீண்டும் எமது நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் எந்த ஒரு இனவாதத்திற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், நாம் அனைவரும் அமைதியாக ஒற்றுமையாக சகோதரத்துடன் வாழும் ஒரு நாடு எமக்கு தேவை எனவும், இத்தோடு சிறப்பான பொருளாதாரத்துடனும் சிறந்த பொழுதுபோக்குடனும் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கை எமக்கு தேவை என்றும் குறிப்பிட்டதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பான உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், அது தற்போது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளது என தெரித்த அதிமேதகு சனாதிபதி அவர்கள், மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து, இத் திட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியதாகவும் இத் திட்டம் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும், எமது பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நன்மை அளிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை நாங்கள் இத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்த உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் எமது இளம் சமுதாயத்திற்கு மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார். இதே போன்று சுற்றுலாத்துறையை எடுத்துக் கொண்டால் எமது நாட்டிற்கு பெரிய பங்களிப்பை இந்த சுற்றுலாத்துறை வழங்குகின்றது எனவும், வடக்கில் அழகிய கடற்கரைகள் மக்களை கவரக்கூடிய பல இடங்கள் இருந்தாலும் சக்தி வாய்ந்த சுற்றுலாத்தலம் ஒன்று இங்கு இல்லை எனவும், இதன் குறைபாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், இங்குள்ள விமான நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எம்மால் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மிக வேகமாக காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், வட மாகாணத்தில் சிறந்த சுற்றுலாத் தலம் ஒன்றை அமைப்பது எமது தேவையாக உள்ளது எனவும், இளைஞர் யுவதிகளுக்குசிறப்பான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும், நல்ல ஒரு பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறான பொருளாதாரத்தை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பாக எமது அரசாங்கம் செயற்பட உள்ளதாகவும்தெரிவித்ததுடன், மேலும், இதற்கு மேலாக எனது நோக்கம் சிதறடிக்கப்பட்ட மனங்கள் மற்றும் உள்ளங்களை ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், நான் ஒருபோதும் மக்களை கைவிடமாட்டேன் என்று குறிப்பிட்ட சனாதிபதி அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/236228
  19. போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடையாது Jan 16, 2026 - 05:34 PM - 0 அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது என்றும், எந்தப் பிரஜை, நகரம், கிராமம், ஏழை, பணக்காரன், சிங்களவர், தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல் பரவும் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு பலமாக செயல்படுத்தப்படும் என்றும், அது ஒருபோதும் பின்வாங்கப்படும் ஒரு செயற்பாடாக இருக்காது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். மேலும், ஒரு சமூகமாக மக்கள் தமது பொறுப்பை நிறைவேற்றவும், அதற்காக ஒரு பாரிய பாதுகாப்பு அரணாக ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மக்களுக்கு அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (16) பிற்பகல் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். போதைப் பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு தீவிர பங்களிப்பை வழங்கிய வட மாகாண முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, "முழு நாடுமே ஒன்றாக" தேசிய வேலைத்திட்டம் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ஒரு வேலைத்திட்டம் மாத்திரமன்றி, அதற்கு ஆளான பிள்ளைகளுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களுக்கு சிறந்த தொழிற்பயிற்சி வழங்கி, கிராமத்திற்கும் நாட்டிற்கும் பயன்மிக்க பிரஜைகளாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டமாகும் என்றும் தெரிவித்தார். நாட்டில் முதல் முறையாக, தெற்கு மற்றும் வடக்கு மக்களால் சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்பகமான அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதிகாரத்தை இழந்த இனவாத குழுக்கள் சிறிய, சிறிய இடங்களில் இனவாதத்தை மீண்டும் தூண்ட முயற்சித்தாலும், நாட்டில் மீண்டும் எந்த இனவாத போக்கும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தினார். மேலும், வட மாகாணத்தில் கிராமப்புற வீதிகளின் அபிவிருத்திக்காக கடந்த ஆண்டு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டும் அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அந்தப் பணத்தை முறையாகப் பயன்படுத்தி மக்கள் அந்த அபிவிருத்திப் பலன்களைப் பெறுவதை உறுதி செய்ய அரசியல் வாதிகளும், அரச அதிகாரிகளும் பங்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எமது நாடு எமது இளைஞர்கள் எமது அரச பொறிமுறையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள போதைப் பொருளை ஒழிப்பதற்காகவே நாம் உங்களை சந்திக்கிறோம்.நாடென்ற வகையில் எமக்கு பெருமளவு எதிர்பார்ப்புகள் உள்ளன. எமது நாட்டை உலகில் வளமான நாடாக முன்னேற்ற வேண்டும்.எமது நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். எமது நாட்டில் பலமான பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். எமது நாட்டில் அமைதி , சகோதரத்துவம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். எமது நாட்டின் பிள்ளைகளுக்கு அவை மிகவும் அவசியமான விடயங்களாகும். ஆனால் இந்த அனைத்து எதிர்பார்ப்புகளும் ஒரு சவாலின் காரணமாக சாத்தியமாக்குவதில் தடையை எதிர்கொண்டுள்ளது. அது தான் இந்தப் போதைப் பொருள் அச்சுறுத்தல். எந்தவொரு இடத்தையும் எந்தவொரு பிரஜையையும் எந்தவொரு நகரம் அல்லது கிராமம் என்ற பேதமின்றி இந்த அச்சுறுத்தல் பரவியுள்ளது. இந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும். எமது பெற்றோர், தமது பிள்ளைகள் குறித்து பாரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவர்களை வளர்த்து பாரிய எதிர்பார்ப்புடன் கல்வி புகட்டுகின்றனர். ஆனால் அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் பிள்ளைகளை அடிமையாக்கும் போதைப் பொருள் அச்சுறுத்தலினால் வீணாகிறது. வறியவர்கள், செல்வந்தர்கள் மற்றும் தமிழ்,சிங்களம், முஸ்லிம்கள் என்ற பாகுபாடின்றி இந்த அச்சுறுத்தல் பரவியுள்ளது. இந்த போதைப் பொருளின் ஊடாக பெறப்படும் பெருந்தொகையான பணம் எமது அரச பொறிமுறையை ஆக்கிரமித்துள்ளது. சிறைச்சாலைகளுக்குள் கைதானவர்கள் இந்த வர்த்தகத்தை செய்கின்றனர். பொலிஸார் சிறந்த சேவையை செய்யும் நிலையில் ஒரு சிலர் இதில் சிக்கியுள்ளனர். சுங்கத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ,குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் என்பவற்றில் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள் இதற்குள் அகப்பட்டுள்ளனர். அது மாத்திரமன்றி அரச சேவையிலுள்ள முக்கிய இடங்களில் இந்த அச்சுறுத்தலில் சிக்கியுள்ள அதிகாரிகள் உள்ளனர். பிள்ளைகள் இதற்கு இறையாகியிருந்தால் அரச சேவை போதைப் பொருள் வர்த்தகர்களின் இறையாக மாறியிருந்தால் நாம் நாடென்ற வகையில் எங்கு செல்கிறோம்? அதனால் கட்டாயம் இந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும். இந்த போதைப் பொருள் வர்த்தகத்திற்கு அரசியல் பாதுகாப்பு பிரதானமான காரணமாக இருந்தது. சில பிரதேசங்களில் உள்ள அரசியல்வாதிகள் போதைப் பொருளை அடையாளப்படுத்தி அழைக்கப்பட்டனர். ஆனால் தற்போது அரசியில் வாதிகளுக்கு ஆதரவு வழங்காத அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம். சில சமயங்களில் இதனை தடுப்பதற்காக உள்ள நிறுவனங்களின் பிரதானிகள் கூட இத்தகையோருடன் தொடர்பு வைத்திருந்தனர். கைது செய்யப்பட வேண்டிய நபரை விடுதலை செய்யும் வகையில் சாட்சியங்கள் தயார்படுத்தப்பட்டன. சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நிறுவனங்களின் பிரதான கதிரைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வரலாறு உள்ளது. ஒரு காலத்தில் இவ்வாறான அதிகாரிகளை பணம் கொடுத்து தம் பக்கம் திருப்பினார்கள். சில காலம் அதிகாரிகள் அவர்களுக்கு அடிபணிந்து செயற்பட்டார்கள்.இன்று அந்த நிலைமை முற்றாக மாறியுள்ளது. கைது செய்வதற்கான பொறிமுறை தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் ஆங்காங்கே சில விடயங்கள் நடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தயவு செய்து அவர்களுடனான தொடர்பை கைவிடுமாறு அந்த அனைத்து அதிகாரிகளிடமும் கோருகிறேன்.தெரிவு செய்வதற்கு இரண்டு பாதைகள் உள்ளன. அவர்களுடனான தொடர்பை கைவிட வேண்டும் அல்லது தொழிலை விட்டு விலகிச் செல்ல வேண்டும். போதைப் பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகத்தினருடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணிபுரிய ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். பொலிஸாரும் பாதுகாப்புப் படையும் இதனை ஒழிக்க பெரும் பங்காற்றுகின்றனர். போதைப் பொருளுடன் தொடர்புள்ள அதிகாரிகளினால் நேர்மையான அதிகாரிகளுக்கும் அவமரியாதையே ஏற்படுகிறது. போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்கான பொறிமுறையை பலப்படுத்த பின்வாங்க மாட்டோம். பொலிஸ் அதிகாரிக்கு தகவல் வழங்கப் பயப்படுவதாக ஒரு காலத்தில் கூறப்பட்டது. தகவலை வழங்கிய பின்னர் யார் அந்த தகவலை வழங்கினார் என்பது போதை வியாபாரிக்கு சென்றுவிடும். இவை ஆங்காங்கே நடைபெற்ற சிறு சம்பவங்களாகும்.இது ஒட்டுமொத்த பொலிஸாருக்கும் அவமானமாகும்.எனவே அதனை மாற்ற வேண்டும். எமது நாட்டு பொதுமக்களும் போதைப்பொருளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். உங்கள் பிள்ளை இந்த போதைக்கு அடிமையானால் என்ன நடக்கும். அந்தப் பிள்ளையின் முழு வாழ்க்கையும் நாசமாகும். பாரிய எதிர்பார்ப்புடனே அந்தப் பிள்ளைகளை வளர்த்திருப்பார்கள். அந்த எதிர்பார்ப்பு முழுமையாக வீழ்ச்சி அடையும். பொருமளவான இளைஞர்கள் இதற்கு அடிமையாகியுள்ளனர். ஏனைய பெற்றோர்களைப் போலவே அவர்கள் மீதும் பெற்றோர் அன்பு செலுத்தினார்கள். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும். இது எந்த வகையிலும் பின்வாங்கும் முன்னெடுப்பல்ல. வடக்கு இளைஞர்கள் ஒரு காலத்தில் யுத்தத்தில் சிக்கி பெரும் அழிவைச் சந்தித்தனர். பெற்றோர் தமது பிள்ளை குறித்து சந்தேகத்துடன் வாழும் நிலை ஏற்பட்டது. யுத்தம் நிறைவடைந்து குறுகிய காலத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டது. இதனை தோற்கடிப்பதில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையும் உறுதியாக உள்ளனர். எமக்கு மக்களின் உதவி தேவை. போதைக்கு அடிமையானவர் யார் என ஊர்மக்களுக்குத் தெரியும். ஆனால் ஊர்மக்கள் அவருடன் மோதுவதற்குப் பயப்படுகின்றனர். போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு நாம் பயப்பட வேண்டுமா? அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இந்த விடயத்தை ஆராய்வோம் நாடுமுழுவதும் ஒரு பாதுகாப்பு அரணாக ஒன்றாக பிணைந்து இந்த அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக திடஉறுதிக்கு வருவோமானால் இதனை தோற்கடிக்கலாம். போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க வேண்டும். அவர்களும் எமது பிள்ளைதான். அவர்களை மீட்டெடுக்கத் தவறியுள்ளோம். மாணவர்கள் கூட இதற்கு இறையாகியுள்ளனர். எமது பொறுப்பை தவறவிட்டுள்ளோம். முன்னர் சில நகரங்களில் தான் இந்த அச்சுறுத்தல் இருந்தது. தற்பொழுது சகல இடங்களிலும் பரவியுள்ளது. இதனுடன் இணைந்து குற்றச் செயல்களுடன் தொடர்புள்ள கும்பல்களும் உருவாகின. ஆயுதங்கள் அவர்களின் கைகளுக்குச் சென்றன.இந்த நிலை சில தசாப்தங்களாக வளர்ந்தன. அரச அதிகாரிகள்அவர்களுடன் கைகோர்த்திருந்தனர். போதைப் பொருள் பயன்படுத்துவோரை மாத்திரம் கைது செய்வதால் பயனில்லை.இதனை மேல் மட்டத்தில் இருந்து ஒழிக்க வேண்டும். இளம் வயதினர் சிறைகளில் உள்ளனர். போதைப் பொருளை ஒழிப்பது மாத்திரமன்றி அடிமையானவர்களுக்கு எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும். புனர்வாழ்வு நிலையங்களுக்கு அடிமையானவர்களை ஒப்படையுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பிள்ளையை மீள ஒப்படைப்போம். உங்கள் பிள்ளை இறையாகும் வரை காத்திருக்க வேண்டாம். அச்சுறுத்தல் உங்கள் வீட்டின் கதவு வரை வந்துள்ளது. கதவை மூடிவைப்பதால் எந்தப் பயனுமில்லை. அது கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து விடும். பிள்ளையை எந்தளவு பாதுகாத்தாலும் சமூகத்தில் அந்த அச்சுறுத்தல் இருந்தால் உங்கள் முயற்சியால் பயன் ஏற்படாது. எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் இந்த போதைப் பொருளை முற்றாக ஒழிப்போம். அதற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். மக்கள் ஒன்றாக வாழும் நாடு தேவை. பல ஆண்டுகள் பிரிந்து சந்தேகத்துடன் வாழ்ந்ததால் என்ன பயன் கிடைத்தது.?எமது நாட்டில் ஒருபோதும் இனவாதம் ஏற்படாத ஒற்றுமையாக வாழும் நாட்டை உருவாக்க வேண்டும். இனவாதம் எந்தவொரு இடத்திலும் தலைதூக்க இடமளியோம். போயா தினத்தில் 'சில்' எடுப்பதற்காக சிரிமகா போதியை தாண்டி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள். அங்கு இருப்பது குரோதம் தான். பல விகாரைகளை தாண்டி யாழ்ப்பாணத்திற்கு வழிபட வருகிறார்கள். அதே போன்று சிலர் ஒவ்வொரு போயா தினத்திலும் காணிக்காக, அன்றி விகாரைக்கு எதிராக ஒன்று திரள்கிறார்கள். அவர்களின் யாருடைய காணியாவது அங்கு உள்ளதா என ஆராயுமாறு புலனாய்வு பிரிவிற்கு அறிவித்துள்ளேன். அதிகாரம் இழந்த இனவாத குழுக்கள் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல்கிறார்கள். எந்த இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம். மக்கள் மோதிக்கொள்ளும் நாடன்றி நல்லிணக்கத்துடன் வாழும் நாடே எமக்குத் தேவை. இலக்கியம்,கலை,இசை மற்றும் திரைப்படத்துறையில் புதிய நிலைமைகளை இங்கு ஏற்படுத்த வேண்டும். மற்றவர்கள் குறித்து குரோதத்துடன் பார்க்கும் நிலைமையை மாற்ற வேண்டும். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை சிறிதளவேனும் மீற மாட்டேன். தெற்கில் சிங்கள அரசாங்கம் உள்ளது. வடக்கிற்கு தமிழ் அரசாங்கம் தேவை என முன்னர் கோரப்பட்டது. தெற்கில் இருக்கும் அரசாங்கம் தமது அரசாங்கமாக மக்கள் கருதவில்லை. ஒரு சிலரது குடும்பங்கள்,உறவினர்களுக்காக அமைக்கப்பட்ட அரசாங்கங்களே இருந்தன. மக்களின் அரசாங்கம் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள மக்களும் தெற்கில் உள்ள மக்களும் தமக்கான அரசாங்கம் உருவாகியுள்ளதாக கருதுகின்றனர். 2025 பல துறைகளில் வெற்றிகளை அடைந்த வருடமாகும். இந்த வருடம் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க இருக்கிறோம். அரச துறைக்கு 75 ஆயிரம் பேரை இணைக்கவும் பொலிஸிற்கு 10 ஆயிரம் பேரை இணைக்கவும் இருக்கிறோம். தமிழ்மொழியில் பேசும் பொலிஸார் எமக்குத் தேவை. பொலிஸிற்கு சென்று தமது மொழியில் முறையிடக் கூடியதாக இருக்க வேண்டும். இராணுவத்திற்கும் ஆட்சேர்க்க இருக்கிறோம். அவற்றுக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்புமாறு யாழ்ப்பாண பெற்றோர்களை கோருகிறோம். சகல மொழிகளிலும் பேசும் பொலிஸ் மற்றும் சகல மொழிகளிலும் செயலாற்றும் இராணுவமும் அவசியம். வறுமையை முற்றாக ஒழிக்கும் அரசாங்கமாக எமது அரசாங்கம் திகழும். வீடு, வருமானம், பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்வு, மற்றும் உளரீதியான நிம்மதியுடன் எமது நாட்டு மக்கள் வாழும் நிலைமையை உருவாக்க வேண்டும். அதற்கு சில காலம் செல்லும். நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டை உறுதியாக முன்னெடுப்போம். வடமாகாண பாதைகளை நிர்மாணிக்க 5000 மில்லியன் ரூபா ஒதுக்கியிருந்தோம்.இந்த வருடமும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளுக்கு மத்தியிலும் போதைப் பொருளை ஒழிப்பது பிரதானமானது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு கொழும்பில் நாம் தொடங்கினோம். இன்று, அதன் வட மாகாண நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. போதைப்பொருள் அரக்கன் மக்களைச் சூழ்ந்துள்ள நிலையில், போதைப்பொருள் அரக்கனைச் சுற்றி வேறு அரக்கர்கள் உள்ளனர். வறுமையும் போதைப்பொருளும் ஒன்றோடொன்று இணைந்த இரண்டு தலைப்புகள். எனவே, வறுமை ஒழிப்பும் இந்தத் திட்டத்துடன் இணைந்திருக்க வேண்டும். அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி, Clean Sri Lanka திட்டமும், வறுமையை ஒழிப்பதற்கான சமூகசக்தி திட்டமும் அந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் அனைத்து வகையான அபிவிருத்தித் திட்டங்களையும் எதிர்க்கும் அரசியல்வாதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ளனர். அழைக்கப்பட்ட போதிலும், சில அரசியல் கட்சிகள் இன்று இந்த இடத்திற்கு வரவில்லை. இருப்பினும், அனைத்து அரச அதிகாரிகளும் இன்று இங்கே உள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார். https://adaderanatamil.lk/news/cmkgtzm6g0403o29nccuu9mp9
  20. ஓம் அக்கா. என்னால் வீட்டினுள் செல்ல முடியாது. இந்த படங்கள் பிளம்பிங் செய்யும் தம்பி எடுத்து அனுப்பி உள்ளார். இந்த நிலையில் உள்ள மலசலகூடத்தை தான் 3 சகோதரர்களும் பாவித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்க கவலையாக உள்ளது. நாளை தான் மணல், சல்லி, சீமந்து, கம்பி என்பன வழங்குவார்களாம். உடனடியாக வேலையை தொடங்க கேட்டுள்ளேன். மலசலகூடத்தையும் தூய்மைப்படுத்த கேட்டுள்ளேன். இவர்கள் டிசம்பர் 3ஆம் திகதி நிகழ்விற்கு சகோதரியுடன் வந்தவர்கள், பிந்தியபடியால் தூக்கி இறக்குவதும் ஏற்றுவதிலும் உள்ள சிரமம் காரணமாக ஆட்டோவில் இருந்தவர்கள். அப்போதே மலசலகூடம் திருத்தும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன் பின்னர் நடந்ததெல்லாம் விந்தைதான்!
  21. முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பெண் கணினி பொறியலாளர் கைது 16 Jan, 2026 | 11:11 AM முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் பெண் கணினி பொறியியலாளரை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயதுடைய கணினி பொறியாளர் என குற்றப் புலனாய்வுத் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது நிர்வாண புகைப்படங்களை தனது முன்னாள் காதலி வாட்ஸ்அப் குழு மூலம் பகிர்ந்து கொண்டதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் பிரிவினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த முறைப்பாட்டடின் அடிப்படையில் வடக்கு மாகாண குற்றப் புலனாய்வுத் பிரிவினர் விசாரணை தொடங்கியபோது சந்தேகநபரான பெண் முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ்அப் குழுவிற்கு பகிரந்துள்ளமை தெரியவந்ததுள்ளது. பின்னர் குற்றப் புலனாய்வுத் பிரிவினர் குறித்த பெண் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த பெண் அவர் சுமார் ஐந்து ஆண்டுகளாக முன்பு முன்னால் காதலடன் உறவை பேணிவந்துள்ளார். அவர்களின் காதல் முறிவை தொடர்ந்து, அந்த பெண் உணர்ச்சி ரீதியான துயரத்தையும் மனக்கசப்பையும் அனுபவித்ததால் முன்னால் காதலனை பழிவாங்கும் நோக்குடன் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236148 காதலர்கள் ஜாக்கிரதை!
  22. யாழில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி : மக்களுடன் உரையாடினார் ! 16 Jan, 2026 | 12:25 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று வெள்ளிக்கிழமை (16 ) காலை பலாலி–அன்ரனிபுரம் வீதி வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டார். காலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயிற்சியின் போது, வீதியோரங்களில் இருந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் இளைஞர்களுடன் ஜனாதிபதி சுருக்கமாக உரையாடியதுடன், அவர்களின் தினசரி வாழ்வாதார நிலவரங்கள், அடிப்படை தேவைகள் மற்றும் பிரதேசத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், குறித்த பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், வீதி அபிவிருத்தி மற்றும் பொது சேவைகள் தொடர்பான விடயங்களிலும் அவர் கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்த திடீர் நடைப்பயிற்சி பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்ததுடன், அவரை நேரில் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய இந்த நடைப்பயிற்சி எந்தவித இடையூறும் இன்றி நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/236163
  23. தாய்லாந்தில் மீண்டுமொரு கிரேன் சரிந்து கார்களின் மீது விழுந்ததில் 2 பேர் பலி! ; “மரண வீதி”யானது நெடுஞ்சாலை! 16 Jan, 2026 | 11:36 AM தாய்லாந்து நாட்டில் நேற்றும் (15) மற்றுமொரு கிரேன் சரிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் நொறுங்கி, சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்து இடம்பெற்றதற்கு முதல்நாள் (14) நகோன் ரச்சசீமா மாகாணத்திலிருந்து சிகியோ மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரயில் மீதும் கிரேன் ஒன்று விழுந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மற்றுமொரு கிரேன் விழுந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பெங்கொக்கிலிருந்து சமுதத் சகோன் மாகாணத்தின் பாங்குன் தியான் வரை ரமா 2 என்ற நெடுஞ்சாலையில் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று அப்பகுதியில் மேம்பால வீதி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதே அங்கிருந்த கிரேன் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளன. அவ்வேளை அவ்வாகனங்களுக்குள் இருந்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் மீட்புக்குழுவினர் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில் பெரும் சிரமங்கள் இருப்பதாக கூறப்படும் அதேவேளை அங்கு வேறு வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனவா என்பதை அறியவும் கடினமான நிலை ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அப்பகுதியில் இரும்புத்தகடுகள் தொங்கிக்கொண்டிருப்பதால் மேலும் இடிபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மீட்புக்குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளனர். அந்த நெடுஞ்சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 150 பேர் உயிரிழந்த காரணத்தினால் நேற்றைய விபத்துக்குப் பின்னர், குறித்த அவ்வீதி “மரண வீதி” என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/236157
  24. 16ஆவது ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் ஆரம்பம் – மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியுடன் தொடக்கம் 15 Jan, 2026 | 09:28 PM (நெவில் அன்தனி) 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் முதலாவது வெற்றியை மேற்கிந்தியத் தீவுகள் பதிவுசெய்தது. ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்படும் இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தைப்பொங்கல் தினமான இன்று வியாழக்கிழமை (15) ஆரம்பமானது. ஸிம்பாப்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் ஹராரே டக்காஷிங்க விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த சி குழுவுக்கான போட்டி சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுக்கொண்டன. விண்ட்ஹோக், ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற தன்ஸானியாவுக்கு எதிரான டி குழு போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தன்ஸானியா 34 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. தன்ஸானியாவின் மொத்த எண்ணிக்கையில் 27 உதிரிகளே அதிகூடிய எண்ணிக்கையாக பதிவானது. துடுப்பாட்டத்தில் டிலான் தக்கார் (36), தர்பன் ஜோபன்புத்ரா (19), காலிதி ஜுமா (12), அக்ரி ஹியூகோ (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் விட்டெல் லோஸ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிக்கா மெக்கென்ஸி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷக்குவான் பெலே 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 29 ஓவர்கள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது. மெற்கிந்தியத் தீவுகள் 21 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 124 ஓட்டஙகளைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது. மொத்த எண்ணிக்கை 20 ஓட்டங்களாக இருந்தபோது ஸக்கரி கார்ட்டர் (8) ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து தனேஸ் பிரான்சிஸ் 52 ஓட்டங்களையும் ஜுவெல் அண்ட்றூ 44 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர். எவ்வாறாயினும் அவர்கள் இருவர் உட்பட நால்வர் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (114 - 4 விக்.) ஷமார் அப்ள் (4 ஆ.இ.), ஷக்குவான் பெலே (6 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றி இலக்கை அடைய உதவினர். பந்துவீச்சில் அகஸ்டினோ முவாமெலே 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரேமண்ட் பிரான்சிஸ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்:ஷக்குவான் பெலே https://www.virakesari.lk/article/236130
  25. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 பாலமேடு ஜல்லிக்கட்டில் காளையை அடைக்க முயற்சி செய்யும் மாடுபிடி வீரர்கள் 16 ஜனவரி 2026, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார் டிராக்டர் பைக் மற்றும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் நிகழ்ச்சி தொடங்குகியது. ஊர் கோவில் காளைகள் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. படக்குறிப்பு,பாலமேடு ஜல்லிக்கட்டை காணவந்த நடிகர் சூரி துணை முதல்வர் வருவதற்குத் தொடர்ந்து தாமதம் ஆனதால், ஆட்சியர் பிரவீன் குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். அதைத் தொடர்ந்து , கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் பாலமேடு கிழக்குத் தெரு மஞ்சமலை கோவிலை சேர்ந்த காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. 2 மணி நேரம் தாமதம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கும் என ஜல்லிக்கட்டு குழுவினர் மற்றும் அரசு தரப்பு அறிவித்திருந்தனர். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேட்டுக்கு வர தாமதமான நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 2 மணி நேரம் தாமதமாக காலை 9 மணியளவில் போட்டி தொடங்கியது. வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு நிசான் கார், டிராக்டர், மோட்டார் பைக் மற்றும் தங்க நாணயம் ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. அதேபோன்று ஒவ்வொரு சுற்றிலும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மெத்தை, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த போட்டியில் சுமார் ஆயிரம் காளைகளும் 800 மாடுபிடி வீரர்களும் களம் இறங்க உள்ளனர். 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகள் மதுரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்துறை ஆகியவை சார்பாக போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை சார்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடையும் வீரர்களை காப்பாற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸ்கள் 12, பைக் ஆம்புலன்ஸ்கள் 2, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில் அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்படுவர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mklgz32j2o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.