Everything posted by ஏராளன்
-
அழகான புத்தகக்கடை
பகிர்விற்கு நன்றி.
-
செம்மணி மனித புதைகுழி : ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்
Published By: Vishnu 30 Aug, 2025 | 02:45 AM ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு, ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே குறித்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிறியவர்கள் மற்றும் சிசுக்களின் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. அத்துடன் ஒன்றுடன் ஒன்று அருகருகே புதைக்கப்பட்ட வரும், கால்கள் மடிந்த நிலையிலும் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவை அசாதாரணமாகவே புதைக்கப்பட்டுள்ளன என்பது கண்களுக்கு புலனாகின்ற போதிலும், மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதிகளை சட்ட வைத்திய அதிகாரி ஆய்வுகளுக்கு உட்படுத்தி, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே மேலதிக தகவல்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223745
-
பேடோங்டார்ன் ஷினாவத்ரா தாய்லாந்து பிரதமராக பதவி வகிப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை
தாய்லாந்து பெண் பிரதமர் நீக்கம் - தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த ஜூலை மாதம் பேடோங்டார்ன் ஷினவத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டார். 29 ஆகஸ்ட் 2025 தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவியில் இருந்து நீக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெறிமுறையை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னுடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் கடந்த ஜூலை மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஷினவத்ராவின் இந்த செயல் நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் நாட்டின் நலனை விட தனிப்பட்ட நலனையே முக்கியமாகக் கருதி, நெறிமுறைகளை பின்பற்ற தவறிவிட்டதாகவும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. யார் இந்த பேடோங்டார்ன் ஷினவத்ரா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தனது 37 வயதில் பிரதமராக பதவியேற்றார். இவர் தாய்லாந்து நாட்டின் இளம் தலைவராக அறியப்படுகிறார். 2024ம் ஆண்டு ஆகஸ்டில் தனது 37 வயதில் பிரதமராக பதவியேற்றார். மேலும் அந்நாட்டின் 2வது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர்.இவருக்கு முன்பாக 2011 - 2014ஆம் ஆண்டில் இவரின் உறவினரான யிங்லக் ஷினவத்ரா ஆட்சி செய்தார். இவர் தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் மகள். தாய்லாந்தில் பள்ளி படிப்பை முடித்தார். பின் இங்கிலாந்தில் உயர்கல்வியை முடித்தார். பின் 2021ஆம் ஆண்டு ஃப்யூ தாய் (Pheu Thai) கட்சியில் சேர்ந்தார். 2023-இல் கட்சியின் தலைவரானார். கடந்தாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரதமராக பதவியேற்றார். 2008ஆம் ஆண்டு முதல் இருந்து அந்நாட்டு நீதிமன்றத்தால் நீக்கப்படும் 5வது பிரதமர் ஆவார். அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னை அங்கிள் என அழைத்தார் ஷினவத்ரா அண்டை நாடான கம்போடியா எல்லையில் நிலவும் பதற்றங்களை தணிக்கும் நோக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கம்போடிய செனட் தலைவருமான ஹுன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ஹுன் சென்னை சமாதானப்படுத்தும் நோக்கில், அவரை 'அங்கிள்' என அழைத்த பேடோங்டார்ன், அவரின் தேவைகளை கவனித்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளார். இந்த உரையாடல் அடங்கிய ஆடியோ கசிந்ததை அடுத்து, இவருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. தாய்லாந்து, கம்போடிய எல்லையில் இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்டிருக்கும் சமயத்தில், ஹுன் சென்னிடம் தொலைபேசியில் பேசிய பேடோங்டார்ன், 'தாய்லாந்து ராணுவ தளபதி கூலாக தோன்றவே விரும்பினார்' எனக் கூறியுள்ளார். இது நாட்டின் அரசியல் செல்வாக்கு கொண்ட ராணுவத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். எனினும் இந்த தொலைபேசி அழைப்பை 'பேச்சுவார்த்தை யுக்தி' எனப் பேடோங்டார்ன் கூறினார். இனி ஹுன் சென்னுடன் தனிப்பட்ட உரையாடலில் ஈடுபடமாட்டேன் எனவும் அவர் கூறினார். ஹுன் குடும்பத்துடனான ஷினவத்ராவின் நட்பு பல தசாப்தங்களாக தொடர்கிறது. ஹுன் சென்னும், பேடோங்டார்னின் தந்தை தக்ஷின் ஷினவத்ராவும் நல்ல உறவில் இருந்துள்ளனர். ஆனால் தொலைபேசி உரையாடல் கசிந்த பின், ஹுன் சென், தக்ஷின் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தனர். பேடோங்டார்ன் சொல்வது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாட்டை மிகவும் நேசிக்கிறேன் என்றார் ஷினவத்ரா நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு பேடோங்டார்ன் ஷினவத்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நீதித்துறைக்கு உரிய மரியாதை அளித்து, நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார். "ஆனால், தாய்லாந்தை சேர்ந்தவராக இந்த நாட்டுக்காக உழைக்கிறேன் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மக்களின் உயிர்களை நான் மிகவும் மதிக்கிறேன். பொதுமக்களும் சரி, ராணுவ வீரர்களும் சரி." எனக் கூறிய அவர், நான் ஹுன் உடனான உரையாடலில் சொந்த நலனுக்காக எதுவும் கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் "மக்களின் உயிர்களை காப்பாற்றவே நினைத்தேன். அந்த உரையாடலில் அதைதான் வலியுறுத்தினேன்" என்றார். இந்த தீர்ப்பு தாய்லாந்து அரசியலில் மேலும் ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "ஓராண்டாக எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. இந்த நாடு, மதம், அரசாட்சியை மிகவும் நேசிக்கிறேன்" என்றார். அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பும்தாம் வேச்சயாசாய் தற்காலிக பிரதமராக செயல்படுவார். பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் பதவியில் இருந்து நீக்கியதால், துணை பிரதமர் பும்தாம் வேச்சயாசாய், இவருக்கு பதிலாக பிரதமராக (செயல்) பொறுப்பேற்பார். கடந்த ஜூலை மாதம் பேடோங்டார்ன் இடைநீக்கம் செய்யப்பட்டதில் இருந்து இவரே பிரதமராக செயல்பட்டு வருகிறார். பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தி புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly34v4z23do
-
வலிந்து காணாமலாக்கப்படல்கள்: மீறல்களின் தீவிரத்தன்மையை உணர்த்தும் மனிதப்புதைகுழிகள் குறித்து சுயாதீன விசாரணை அவசியம் - ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சே வலியுறுத்தல்
29 Aug, 2025 | 05:26 PM (நா.தனுஜா) இலங்கையில் பல தசாப்தகாலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் வாழ்ந்துவருவதாகவும், அந்நிலை தொடர்வதன் ஊடாகக் கடந்தகாலக் காயங்களை ஆற்றமுடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சே, மீறல்களின் தீவிரத்தன்மையை உணர்த்தும் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் நம்பத்தகுந்த சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு (30) காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் வெள்ளிக்கிழமை (29) கொழும்பில் அமைந்துள்ள அலரி மாளிகையில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருடனான தமது உடன்நிற்பை வெளிப்படுத்தி உரையாற்றிய ஐ.நா வதிவிடப்பிரதிநிதி, இலங்கையைப் பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமானது சுமை மிகுந்ததாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார். இலங்கையில் பல தசாப்தகாலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியாமல் வாழ்ந்துவருவதாகவும், அந்நிலை தொடர்வதன் ஊடாகக் கடந்தகாலக் காயங்களை ஆற்றமுடியாது எனவும் குறிப்பிட்ட அவர், இருப்பினும் அந்த உறவுகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நீதிகோரித் தொடர்ந்து போராடிவருவதாகத் தெரிவித்தார். இவ்வாறானதொரு பின்னணியில் நீதி மற்றும் நல்லிணக்கம் என்பன உறுதிப்படுத்தப்படாமல் நாடு என்ற ரீதியில் நிலையான வளர்ச்சியோ அல்லது அபிவிருத்தியோ சாத்தியமில்லை எனவும் மார்க் அன்ட்ரூ பிரான்சே எடுத்துரைத்தார். அதேபோன்று தற்போது யாழ். செம்மணியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப்புதைகுழியில் சிறுவர்களது மனித எலும்புக்கூடுகள் உள்ளிட்ட மனித எச்சங்களும், பாடசாலைப்புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், இது மீறல்களின் தீவிரத்தன்மையை உணர்த்துவதாகவும் குறிப்பிட்ட அவர், அண்மையில் நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செம்மணி மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிட்டதை நினைவுகூர்ந்ததுடன் இம்மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நம்பத்தகுந்த சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்தவேண்டியது அவசியம் எனத் தெரிவித்த ஐ.நா வதிவிடப்பிரதிநிதி, மனிதப்புதைகுழி அகழ்வு, கண்காணிப்பு, பகுப்பாய்வு மற்றும் விசாரணை என்பன உள்ளடங்கலாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயன்முறைகளில் பாதிக்கப்பட்ட தரப்பினர் உரியவாறு உள்வாங்கப்பட்டு, பங்காளிகளாக்கப்படவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் பிரஸ்தாபித்தார். அத்தோடு 'நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் குறித்த வழக்குகள் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி ஒத்துழைப்புடன் செயலாற்றுவதன் ஊடாகவே அவர்களது நம்பிக்கையைக் கட்டியெழுப்பமுடியும்' என்றும் மார்க் அன்ட்ரூ பிரான்சே சுட்டிக்காட்டினார். மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் இவ்விவகாரம் தொடர்பில் இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுதல் மற்றும் அவர்களுக்கு எதிராக வன்முறைகள் பிரயோகிக்கப்படல் என்பன குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்திய அவர், நீதியை நாடுவது என்பது ஒருபோதும் குற்றமாக இருக்கமுடியாது என்றார். 'குற்றங்களில் ஈடுபட்டவர்கள் முறையான விசாரணைகள் ஊடாகப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும். அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் தயாராக இருக்கிறது. அதற்கமைய கடந்தகால மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும்' எனவும் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/223723
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு Published By: Vishnu 29 Aug, 2025 | 07:16 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 187 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 174 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 37வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223736
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் போராட்டம் ஏற்பாடு
நாளைய போராட்டத்துக்கு கட்சி, இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்கவேண்டும் - கோவிந்தன் கருணாகரம் 29 Aug, 2025 | 06:51 PM வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் நாளை முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு கட்சி பேதமின்றி, இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்கவேண்டிய கடமை இருக்கிறது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாளை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். அதை முன்னிட்டு வடக்கு, கிழக்கு தழுவிய ஆர்ப்பாட்டம் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் நடைபெறவிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த பேரணிக்கு சிவில் சமூகங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். அதேபோன்று அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்கவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் இந்த பேரணிக்கு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் வேலை செய்துகொண்டிருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாங்களும் எங்களுடைய முழு ஒத்துழைப்பை கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம். காணாமல் ஆக்கப்பட்டோர் என்கிற விதத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பது மாத்திரமன்றி, இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அதாவது கடந்த போராட்ட காலங்களில் எங்களுடைய மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டதற்கு மேலாக பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று இறுதி யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், தங்களுடைய உறவினர்களினால் இலங்கை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள். அவர்களது நிலைமை பதினாறு ஆண்டுகளை கடந்தும் இன்னமும் அவர்கள் எங்கு, எவ்வாறு இருக்கின்றார்கள் என்கின்ற சந்தேகங்கள் எங்களுடைய மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்த புதிய அரசாங்கம் இன்று பல கடந்த கால சம்பவங்களுக்கான நீதியை கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களது நிலைமையும் கருத்தில் கொண்டு அவர்களுடைய உறவினர்கள் படும் துன்பங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் இருக்கின்றார்களா, இல்லையா, அவ்வாறு இருந்தால் அவர்களை கண்டுபிடித்து தங்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கவேண்டிய கடமைப்பாடு இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது. ஏனென்றால், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்ற தேர்தலின்போதும் ஏன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின்போதும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்து, இன்று வடக்கு, கிழக்கில் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்கின்றார்கள். அந்த வகையில் இந்த அரசாங்கத்திற்கு ஒரு பெரிய கடமை இருக்கிறது. இந்த தமிழ் மக்களது துயரங்களை நீக்குவதற்காக இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பது என்பது ஒரு விடயமாக இருந்தாலும், புதிய அரசியல் அமைப்பை கொண்டுவந்து, இன பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினைக் காண்போம் என்று கூறிய இந்த அரசு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் ஒரு நீதியை கொடுக்க வேண்டும். நாளைய தினம் நடைபெற இருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்துக்கு நாங்கள் கட்சி பேதமின்றி இன, மத பேதமின்றி அனைவரும் வலுச்சேர்க்க வேண்டிய ஒரு தேவையில், கடமையில் இருக்கின்றோம். அந்த வகையில் நாங்கள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாங்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் நாளை நடத்தவுள்ள பேரணிக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஆதரவளிக்க வேண்டும். இந்த பேரணியை ஒரு பிரமாண்டமான பேரணியாக நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எங்களுடைய மக்களுக்கு ஒரு அறைகூவல் விடுக்கிறது. ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கைது செய்யப்பட்டவுடன் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது கட்சி பேதங்களை மறந்து ஒன்றாக தெற்கிலே அணி திரண்டிருக்கிறார்கள். எங்களை பொருத்தமட்டில் பல விதமான கதைகள் இந்த கைது சம்பந்தமாக இருக்கின்றன. வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ அரச சொத்துக்களை பிழையாக பயன்படுத்தினார்கள் என்பது போன்ற காரணங்கள் பல இருக்கின்றன. இவ்விடயமாக தனிப்பட்ட ரீதியிலே எமது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இந்த கைது நடவடிக்கையை பற்றி தற்போதைய நிலைமையில் பெரிதாக விமர்சிக்கும் அளவிற்கு நாங்கள் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம். இன்றைய தினம் 29ஆம் திகதி அரசியல் கட்சிகள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முன்னெடுப்புடன் வடக்கு, கிழக்கில் இருக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் இந்த செம்மணி புதைகுழி உட்பட வடக்கு, கிழக்கில் இருக்கின்ற புதைகுழிகள் தொடர்பாகவும் கடந்த காலங்களில் வடகிழக்கில் ஏற்பட்ட போர்க்குற்றம் சார்பாகவும் ஒரு கையெழுத்துப் போராட்டத்தை நடத்தி ஐக்கிய நாடுகள் சபைக்கு அந்த கையெழுத்துகளை அனுப்புவதற்கு நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் ஒரே நாளில் அதாவது இன்றைய நாள் வடக்கு, கிழக்கு தழுவிய அந்த கையெழுத்துப் போராட்டத்தை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இருப்பினும், இன்றைய தினம் வடக்கில் அந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெறுகிறது. நாங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி. இந்த தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களுடன் கேட்டிருக்கிறோம்... இன்னும் ஒரு திகதியை தீர்மானித்து அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துகொள்ளும் ஒரு கையெழுத்துப் போராட்டமாக கிழக்கில் செய்ய வேண்டும் என்று. இன்று வடக்கில் நடைபெற்றாலும் இன்னுமொரு திகதியில் மிக விரைவில் கிழக்கில் அந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெறும். அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அரசாங்கம் அப்படி அரசியல் பழிவாங்கல் அல்ல. கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக கூறுகின்றார்கள். ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் இருப்பவர்களும் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் அதேபோன்று புதிதாக வந்த அரசாங்கமும் பல நூற்றுக்கணக்கான கொள்கலன்களை எவ்விதமான பாதுகாப்பு பரிசோதனைகளும் இல்லாமல் விடுவித்திருக்கின்றார்கள். அதுவும் ஒரு ஊழல்தான் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் எங்களைப் பொறுத்தளவில் ஊழல் செய்தவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் ஆட்சேபனை இல்லை என்றார். https://www.virakesari.lk/article/223735
-
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான 50 வீத வரி இன்று முதல் அமுல் !
அமெரிக்காவின் 50 % வரி விதிப்பால் ஐ போன் விலை உயருமா? - டிரம்ப் நிர்வாக முடிவுகளை ஆப்பிள் நிறுவனம் எப்படி கையாளுகிறது? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், இந்த புதிய வரிகள் ஐபோன்களுக்குப் பொருந்துமா? இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் மீது 50 சதவீத இறக்குமதி வரி என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் யுக்ரேன் போருக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது என குற்றம் சாட்டி, இதன் காரணமாகவே இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரிவிதிப்படுகிறது என்கிறார் டிரம்ப். புதிய வரிகளால் என்ன பாதிப்பு? இனி வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், இந்தப் புதிய வரி விகிதங்களின்படி அமெரிக்க அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அந்த நிறுவனம் பொருளின் விலையை உயர்த்தி வரிச் செலவை ஈடு செய்தால், இந்தச் சுமை முழுவதும் அமெரிக்க நுகர்வோரின் மீதுதான் விழும். அப்படி சுமத்த விரும்பாத நிறுவனங்கள், ட்ரம்பால் வரி விதிக்கப்படாத நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய விரும்பலாம். இதனால், வரி விதிக்கப்பட்ட நாடுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு வேலை இழப்பு ஏற்படலாம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வரி உயர்வின் நேரடி பாதிப்பை எதிர்கொள்வது அமெரிக்க நுகர்வோராகவே இருப்பார்கள் ஐபோன்களுக்கு எந்த அளவுக்கு வரி விதிக்கப்படும்? தற்போதைய சூழலில் ஐபோன்களுக்கு இந்தப் புதிய வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பெருமளவில் ஆசியாவில்தான் தயாராகின்றன. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து இறக்குமதி வரி குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுவந்த நிலையில், ஆகஸ்ட் ஆறாம் தேதி 'ஆப்பிள்' வெளியிட்ட செய்திக் குறிப்பில் அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப்போவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அறிவித்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன்களுக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்குப் பெறும் முயற்சியாகவே இந்தத் திட்டத்தை டிம் குக் அறிவித்திருப்பதாக 'ப்ளூம்பர்க்' கூறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தபோது, ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர்கள், பிற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்களிக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். ஜூலை மாத இறுதியில் அந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு பேசிய டிம் குக், அமெரிக்காவில் விற்பனையாகும் ஐ போன்களில் பெரும்பகுதி இந்தியாவில் தயாரிக்கப்படுவதாகவும் ஐபேட், ஐவாட்ச், மேக்புக் போன்றவை வியட்னாமில் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். செமி கண்டக்டர்கள் உள்பட எந்தெந்தப் பொருட்கள் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியமானவை என அமெரிக்காவின் வர்த்தகத் துறை ஆராய்ந்து வருதாகவும் அது நிறைவடையும்வரை அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் ஸ்மார்ட் போன்கள் மீது வரிகள் விதிக்கப்படாது என்றும் ப்ளூம்பர்க் கூறுகிறது. சீனாவில் பெருமளவில் ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனம் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்குப் பிறகு, தனது உற்பத்தியை வேறு பல நாடுகளுக்கும் பரவலாக்கியது. குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் ஐபோன் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இறக்குமதிகள் மீது வரிகளை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்ததையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஐபோன்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதற்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் இந்தியா மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், இந்த வரி விதிப்பு 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்குப் பிறகு வரிகள் அமலுக்கு வந்தபோது, இது 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதாகக்கூறி கூடுதலாக 25 சதவீத வரியை விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி அமலுக்கு வந்தது. எதிர்காலத்தில் ஐபோன்களுக்கு வரி விதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டா? பட மூலாதாரம், Getty Images "தற்போதைய கொள்கையின்படி இறக்குமதியாகும் செமிகண்டக்டர்கள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றுக்கு எவ்வித வரிகளும் கிடையாது. ஆகவே, ஐபோன்களைப் பொறுத்தவரை இந்த வரி விதிப்புப் பிரச்சனை இப்போதைக்குக் கிடையாது. எதிர்காலத்தில் என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது" என்கிறார் குளோபல் ட்ரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவின் நிறுவனரான அஜய் ஸ்ரீ வத்ஸவ். ட்ரம்பின் வரி விதிப்பு இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை பாதிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறார் கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச்சின் ஆய்வுப் பிரிவு இயக்குநரான தருண். "அமெரிக்காவைப் பொறுத்தவரை, சீனாவிற்கு வெளியிலும் போன்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தேவை. ஆகவே இதற்கு வரி விதிக்க மாட்டார்கள் எனக் கருதுகிறேன். மேலும் ஐபோன்களைப் பொறுத்தவரை உள்நாட்டிலும் மிகப் பெரிய அளவில் விற்பனை இருக்கிறது. ஆகவே வரி விதித்தாலும் பாதிப்பின் அளவு சற்று குறையும்" என்கிறார் தருண். இந்தியாவில் ஐபோன்களின் விலைகளில் மாற்றம் இருக்குமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவில் விற்பனைக்கு வரும் பெரும்பாலான ஐ போன்கள் உள்நாட்டிலேயே உற்பத்தியாகின்றன எதிர்காலத்தில் ட்ரம்ப் ஸ்மார்ட் போன்களுக்கும் வரிகளை விதித்தால் அமெரிக்காவில் நிச்சயம் அதன் விலைகள் உயரும். ஆனால், இந்தியாவில் என்ன ஆகும்? "இந்தியாவில் விலைகள் உயராது. காரணம், இந்தியாவில் விற்பனையாகும் போன்கள் இங்கேயே தயாராகின்றன. மிக உயர்ந்த ரகம் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் வெளிநாடுகளில் தயாராகிறது. ட்ரம்பின் வரி அந்நாட்டிற்குள் இறக்குமதியாகும் பொருட்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதால் இந்தியாவில் ஐபோன்களின் விலை உயர வாய்ப்பில்லை" என்கிறார் அஜய் ஸ்ரீவத்ஸவா. ஐபோனின் விலைகளைப் பொறுத்தவரை, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே விலையிலேயே விற்பனையாகிறது என்பதால், உள்ளுர் வரிகள் மட்டுமே விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார் பொருளாதார நிபுணரான பிரபாகர். ஐபோன்களுக்கு வரி விதித்தால் என்ன ஆகும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஐ போன்களுக்கு வரி விதிக்கப்பட்டால் பாதிக்கப்படுவது ஆப்பிள் நிறுவனமாகத் தான் இருக்கும். "ஐபோன்களைப் பொறுத்தவரை இந்தியாவில் ஒருங்கிணைப்பு மட்டும்தான் நடக்கிறது. இதற்கான உதிரி பாகங்கள் சீனாவில் இருந்துதான் வருகின்றன. போன்களுக்கு வரி விதித்தால், ஆப்பிள் நிறுவனம் பெரிய அளவில் பாதிக்கப்படும். அதனால்தான் இப்போதைக்கு வரி இல்லை. ஆனால், உற்பத்தியை அங்கே மாற்றச் சொல்லி அந்நிறுவனத்திடம் சொல்லிவருகிறார் ட்ரம்ப். ஆப்பிள் என்ன செய்யுமெனப் பார்க்க வேண்டும். அடுத்ததாக, இந்த வரியினால் பெரிய பாதிப்பு என்பது ஜவுளி, நகைகள், வாகன உதிரிபாக உற்பத்தி போன்றவற்றில்தான் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது வேறு சந்தைகளைப் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், வேறு சந்தைகள் எதிலும் இவ்வளவு விலை கொடுத்து நம் பொருட்களை வாங்க மாட்டார்கள். ஆகவே இந்தத் துறைகள் குறித்துதான் நாம் பெரிய அளவில் கவலைப்பட வேண்டும். இந்தியாவிலும் ஐபோன் உற்பத்தியாகிறது என்ற பெயரும் வேலைவாய்ப்பும்தான் இதனால் கிடைக்கிறது. வேறு பலன்கள் இல்லை" என்கிறார் பிரபாகர். அடுத்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோனில் புதிய, மேம்படுத்தப்பட்ட ஐபோன் 17 மாடலை வெளியிடவிருக்கிறது. செப்டம்பர் 9ஆம் தேதி இந்த புதிய மாடல் அமெரிக்காவில் வெளியாகவிருக்கிறது. இந்தியாவில் இந்த போனுக்கான முன்பதிவு செப்டம்பர் 12ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபோன் 17 மாடலைப் பொறுத்தவரை மொத்தம் நான்கு வேரியண்ட்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த நான்கு வேரியண்ட்களுமே இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தியாகவிருப்பதாக ஆப்பிள் வட்டாரங்களை மேற்கோள்காட்டி 'ப்ளும்பர்க்' இணையதளம் தெரிவிக்கிறது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c15ljz3n1v1o
-
கிழக்கில் தமிழர் இனழிப்பின் ஆரம்ப புள்ளி : அழிக்கப்பட்டடு காணாமல்போன அம்பாறை வயலூர் கிராமத்தின் 40 வருட நிறைவு
Published By: Vishnu 25 Aug, 2025 | 06:28 AM அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன வரிசையிலும் தமிழீழ போராட்ட வரலாற்றில் முதல் முதல் 1985- ஓகஸ்ட் 24 ம் திகதி விடுதலை இயக்கங்களுக்கும் சிங்கள பேரினவாத அரசுக்கும் இடையிலான சமாதான திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அப்பாவி விவசாயிகள் 40 பேர் படுகொலை செய்யப்பட்டு கிராமமே அழிக்கப்பட்டு வெளி உலகிற்கு வெளிவராது போன வரிசையிலும் தமிழர் இன அழிப்பின் ஆரம்ப புள்ளி வயலூர் கிராமம் என்பதுடன் இந்த இனஅழிப்பின் 40 வருட நினைவு தினம் 24-8-2005 ஞாயிற்றுக்கிழமை ஆகும். திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள சாகமத்திலிருந்து தெற்கு பக்கமாக 8 மையில் தொலைவில் வயலூர் கிராமம் 1972 ம் ஆண்டு காணியற்ற வறிய மக்கள் 200 குடும்பங்களை குடியமர்த்தப்பட்ட ஒரு கொலனியாக இருந்தது. அரசாங்கம் அக்கால பகுதியில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மரவள்ளிக் கிழங்கும், குரக்கனும் சாப்பிடுமாறும் உணவு விடுதிகளில் சோறு சமைக்க கூடாது என கேட்டுக் கொண்ட காலப்பகுதியில் இக்கிராமம் உணவு மற்றும் ஏனைய பயிர்ச் செய்கை அபிவிருத்திக்காக அதிமுக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற அரசாங்க த்தின் திட்டத்தின் கீழ் குடியமர்தப்பட்டது. இக் கிராமத்தை அடைவதற்கு சாகமத்திலிருந்து காட்டு வழிபாதை மட்டும் உள்ளதுடன் நான்கு சக்கர உழவு இந்திரங்கள் மாட்டுவண்டிகள் என்பவை விவசாயத்துக்கான உள்ளீடு மற்றும் உற்பத்திகளை ஏற்றிச் செல்வதற்கு உபயோகிக்கப்பட்டன, அதேவேளை ஏழைகள் வழமையாக இத்தூரத்தை நடந்து சென்று வந்தனர். இவர்கள் தடிகள், களிமண், ஒலை புல்லுகளினால் தமது இருப்பிடங்களை அமைத்து குடியமர்தப்பட்ட இவர்களுக்கு சுத்தமான குடிநீர், கடைகள் என்பன இருக்கவில்லை. இம் மக்கள் மலோரியா மற்றும் நீரிலான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டதுடன் தமது வைத்திய சேவையை பூர்த்தி செய்ய 10 மைலுக்கு அப்பால் அக்கரைப்பற்றுக்கு செல்ல வேண்டியிருந்தது. இருந்தபோதும் தமது விவசாயமான சோளம், குரக்கன், மரவள்ளி போன்ற பயிர்களை பயிர் தொடர்ந்து செய்துவந்ததுடன் அவர்களது ஆடுகள், கோழிகளை நரிகள், சிறுத்தைகள், திருடிச் சென்ற அதேவேளை காட்டுப்பன்றிகள் பயிர்களையும் நாசம் செய்தன. ஆயினும் அவர்கள் இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் மகிழ்சியாக தொடர்ந்து வாழ்ந்து வந்தனர். இத்தகைய ஒரு சமூகம் தான் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டது. இந்த யுத்த நிறுத்தம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜயவர்தனா தலைமையிலான அரசாங்க குழுவும். (ரி.யு.எல்.எப்) தமிழர் விடுதலைக் கூட்டணியிலான விடுதலை இயக்கங்களான தமிழீழ விடுதலைப்புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ், ரெலோ ஆகிய 5 இயக்கங்களுக்கும் இடையிலான திம்புவில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த சமயம் இராணுவப் படைகள் வகை தொகையின்றி அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தன. 1985ம் ஆண்டு 8ம் மாதம் 24 ம் திகதி அதிகாலைவேளை வயலூர் மக்கள் மீது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 40 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வயலூரின் தாக்குதலில் விதவையாக்கப்பட்ட பெயர் குறிப்பிடாத 5 பிள்ளைகளுக்கு தாயானவர் அவருக்கு 3 பெண்பிள்ளைகள் அவர் கூறும் பொழுது இராணுவத்தினரின் வெறியாட்டத்தில் எனது கணவர் கொல்லப்பட்டார். நாங்கள் வயலூரில் கிழங்கு, மாப்பொருட்களான மரக்கறிவகைகள், பழமரங்கள் செய்கைபண்ணி வாழ்ந்துவந்தோம். ஆனால் எங்களுக்கு சுத்தமான குடிநீர், கடைகள், பாடசாலை, வைத்தியசாலை இருக்கவில்லை. 1985.8.24 திகதி அதிகாலை 6 மணியிருக்கும் பொழுது நான் அடுக்களையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு தொகை மனிதர்கள் துப்பாகியுடன் எமது குடிசைகளை சுற்றி நின்று கொண்டிருப்பதை அவதானித்தேன் . நான் பீதியடைந்து வந்தவர்களைக் கண்டு மிகப்பயத்தில் நடுங்கினேன். நான் பதற்றப்பட்டிருப்பதை கண்டுகொண்ட அவர்கள் என்னை நெருங்கி சிங்கள மொழியில் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர். எனக்கு அவை விளங்கவில்லை, அப்பொழுது எனது கணவர் வந்ததால் நட்புணர்வு சைகைகளை காட்டி நாங்கள் தண்ணீர் கொண்டுவரும் வாளியை எடுத்துக் கொண்டு தங்களுடன் வருமாறு கேட்டனர். எனது கணவரும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார். குடிசைகளுக்குள் புகுந்து அங்கு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் யாவரையும் வெளியில் கொண்டதுடன் வயோதிபர் நோயாளிகள் என்போரை அப்பால் செல்லுமாறு கூறினர். பின் உடல் ஆரோக்கியமான இளைஞர்கள் அனைவரையும் தம்மோடு அழைத்துச் சென்றனர், இதில் பெண்களும் அடங்குவர். அங்கிருந்து கிழக்கு திசையாகக் காட்டுப்பாதை வழியாக நாங்கள் நடந்தோம். இராணுவச் சிப்பாய் ஆண்களை அழைத்து தமது காலை ஆகாரத்திற்கு முகம் கழுவுவதற்கு நீர் கொண்டுவருமாறு கேட்டனர். அப்பொழுது காலை 8 மணியிருக்கும் அவ்வாறே ஆண்கள் தண்ணீர் கொண்டுவந்ததும் சிப்பாய்கள் தமது காலை ஆகாரத்தை சாப்பிட்டனர். ஆனால் நாங்கள் பட்டினியாக இருந்தோம், ஒரு கோப்பை தேனீர் கூட கிடைக்கவில்லை. அவர்கள் தமது காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டதும் எல்லோரையும் தம்மோடு வருமாறு கூறினர், ஆனால் எங்கே என்று கூறவில்லை. அவர்கள் கட்டளைக்கு இணங்கி நாங்கள் காட்டுவழிபாதை ஊடாக சென்றோம். அப்பொழுது மற்றுமொரு இராணுவச் சிப்பாய்க் குழு ஒன்றை சந்தித்தோம். அக்குழுவிற்கு தலைமை தாங்கிய உத்தியோகத்தர் ஆண்களுடன் பெண்களை அழைத்து வந்ததை பிழையெனக் கண்டுகொண்டார். இரண்டாது குழு தலைவர் பெண்களிடம் வந்து தமிழிலே பேசினார். அவர் கூறும்போது நீங்கள் ஆண்களுடன் வரவேண்டியதில்லை, இராணுவ வீர்கள் தமக்கு அறிமுகமற்ற பகுதியில் இருக்கின்றனர். எங்களுக்கு ஆண்கள் தேவை அந்த மரத்தின் கீழ் சென்று மதியம் வரை காத்திருங்கள், ஆண்கள் திரும்பிவருவார்கள் என்றார். நாங்கள் அந்த மரத்தின் கீழ் காத்திருந்தோம், அவர்கள் குமரன் குளத் திசையில் சென்று கொண்டிருந்தனர். ஆனால் ஆண்கள் திரும்பிவரவில்லை. சூரியகதிர் தலையை சுட்டெரிந்தன, எமது ஆண்கள் திரும்பிவரும் அறிகுறி எதுவும் தென்படவில்லை. வீட்டில் இருக்கும் எமது குழந்தைகளுக்காகவும் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட எமது ஆண்களுக்காகவும் உணவு சமைக்க வேண்டியிருந்தது. எங்கள் குடிசைகளுக்கு திரும்பிவந்து உணவு சமைப்பதில் ஈடுபட்டோம், அப்பொழுது கொலை செய்தி வந்தது. இச் செய்தியை கொண்டுவந்தவர் உயிர் தப்பி வந்தவர். ஏனையவர்கள் குமரன் குளப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டு கிடக்கின்றனர் என கூறினார். இச் செய்தியை கேட்டு நாங்கள் அனைவரும் பாதுகாப்புக்காக உடுத்த உடையுடன் நடந்து சென்று திருக்கோவில், பனங்காடு, அக்கரைப்பற்று பிரதேசங்களில் உள்ள உறவினர்களிடம் தஞ்சம் புகுந்தோம். பின் படுகொலை செய்யப்பட்டவர்களை வயோதிபர்கள் அவ் இடத்துக்கு சென்று சடலங்களை பூர்விக கிராமத்துக்கு கொண்டுவந்து உரிய மரணச்சடங்குடன் புதைக்கப்பட்டனர். வயலூரில் எங்களின் சொத்துக்கள் யாவற்றையும் இழந்தோம். கே.வேலுப்பிள்ளை என்பவர் தனது 2 மகன்களான குழந்தைவேல் ஜெயகாந்தன்,(22) நாகலிங்கம்(22) மருமகன் சின்னவன் கந்தசாமி(30) தனது மூத்த சகோதரன் தம்பிப்பிள்ளை மாமா ஆன ஏரம்பு என்பவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. படுகொலையின் போது உயிர் தப்பிய வர்த்தகரான வைரமுத்து கனகசபை பின்பருமாறு கூறினார். அடிக்கடி வியாபார நிமித்தம் வயலூருக்குச் செல்லும் நான் 23 ம் திகதி பிற்பகல் 2 மாடுகள் பூட்டிய மாட்டுவண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு திருக்கோவிலில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தைக்காக பொருட்களை கொண்டுவர வயலூருக்கு போயிருந்தேன். அன்றிரவு மரவள்ளி கிழங்குகளை பிடுங்குவதற்காக அங்கு தங்கிருந்தேன். 24 ம் திகதி காலை அப்பகுதியை விட்டு புறப்படும் போது அவ்குடியிருப்பு பகுதி முழுவதும் இராணுவம் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. நான் விவசாயிகளுடன் ஒரு குடிசையில் இருந்தேன். நான் கைது செய்யப்பட்டாலும் பின் விடுவிக்கப்பட்ட போது நான் எடுத்துச் சென்ற பணமும் சைக்கிளும் காணாமல் போயிருந்தது. இராணுவத்தினர் என்னை செல்லுமாறு சொன்னதால் நான் சென்றேன். ஆனால் குமரன் குளப் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள இடத்தில் மறைந்திருந்தேன். சிறிது நேரத்தில் துப்பாகி வேட்டுக்கள் கேட்டன, பின் இராணுவத்தினர் தமது வாகனத்தில் சென்ற பின்பு நான் அந்த இடத்துக்கு சென்று பார்த்தபொழுது அவர்கள் சுடப்பட்டு இறந்து கிடந்தார்கள். ஆயினும் இரு விவசாயிகள் காயத்துடன் கிடந்தனர், ஒருவருக்கு வாய்க்குள் துப்பாகி வைத்து வெடிவைக்ப்பட்டுள்ளது. இவர் இறக்கவில்லை மற்றவரின் பெயர் நடராஜா நான் இச் செய்தியை வயலூருக்கு சென்று கூறினேன். இதில் 40 க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக கனகசபை உறுதிப்படுத்தினார். வயலூர் கிராம விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டு 23 வருடங்களின் பின்பு 2008ம் ஆண்டு தான் முதல் முதலாக இப்படுகொலை பற்றி வெளியுலகிக்கு கொண்டுவரமுடிந்தது. இருந்த போதும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அரசுடன் முதல் முதல் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் தமிழ் மக்களை சிங்கள பேரினவாத அரசின் படையினரால் பௌத்த கோட்பாடு அடிப்படையில் வயலூர் கிராமம் தமிழ் இன அழிப்பின் ஆரம்ப மையப்புள்ளி என்பதுடன் இது ஒரு கிராமத்தையே அழித்த கறைபடியாத படுகொலையாகும். இக் கிராமம் காடுகளாகிவிட்டது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் சமாதான பேச்சுவார்த்தையின் போது முதல் முதல் நிகழ்ந்த ஒரு படுகொலை என்பதுடன் அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான படுகொலைகள் மூலம் பேரினவாத அரசு தமிழ் மக்களின் பூர்வீக தாயகத்தில் பொத்துவில் தொடக்கம் நீலாவணைவரை தங்கவேலாயுதபுரம், பெத்துவில், குண்டுமடு, அக்கரைப்பற்று, திராய்க்கேணி, வீரமுனை, சென்றல்காம், மல்வத்தை, அம்பாறை நகர், காரைதீவு, கல்முனை, நிந்தவூர் போன்ற தமிழ் கிராமங்கள் இராணுவத்தினராவும் ஊர்காவல்படையினராலும் சுற்றிவளைத்து சிறுவர், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியம் படுகொலை செய்யப்பட்டதுடன் அவர்களது வாழ்விடங்கள் தீ வைத்து எரித்து உடைத்து அழித்தனர். இவ்வாறு தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் பல கிராமங்கள் அழிக்கப்பட்டன. இருந்தபோதும் அந்த அழிக்கப்பட்ட வரலாறுகள் வெளியுலகிற்கு கொண்டுவரப்ப டவில்லை. இதனால் தற்போதைய சமூதாயத்துக்கு தமிழ் மக்களுக்கு நடந்த படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ் மக்களுக்கு நடந்த படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் அந்தந்த காலத்தில் அதற்கான நினைவேந்தல்களை செய்யவேண்டும் என்பது தமிழ்களின் கடமையாகும். இருந்த போதும். தமிழ் இன அழிப்பின் ஆரம்ப புள்ளியாக இந்த மாவட்டத்தில் ஆட்சியாளர்களால் அட்டவணை போட்டு நடாத்தப்பட்ட தமிழின அழிப்புக்களை பறைசாற்றி நிற்கின்றது என்பதை அனைவரும் உணர்ந்து அதற்கான செயற்பாடுகளை செய்யவேண்டும். https://www.virakesari.lk/article/223282
-
தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?
த.வெ.க. மாநாட்டில் தூக்கி வீசப்பட்டது யார்? - போட்டி போடும் 2 இளைஞர்கள் பட மூலாதாரம், X/@TVKITWingOfficial படக்குறிப்பு, மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடைபெற்றது. கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய்யை நெருங்க முற்பட்டு, பவுன்சர்களால் தூக்கியெறியப்பட்டதாக ஏற்கனவே ஒரு இளைஞர் புகார் கூறிய நிலையில் தற்போது வேறொருவர் தானே தூக்கியெறியப்பட்டதாகக் கூறுகிறார். மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய்யின் ராம்ப் வாக்கின்போது, அவரை நெருங்க முயன்றதால் தூக்கியெறியப்பட்டதாக ஏற்கனவே ஒரு இளைஞர் புகார் கூறிய நிலையில், தற்போது வேறு ஒரு இளைஞர் தான்தான் தூக்கியெறியப்பட்டதாகக் கூறியிருக்கிறார். மதுரை மாவட்டம் பாரபத்தியில் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் நடந்து வருவதற்கான நடைபாதை ஒன்று அமைக்கப்பட்டது. அந்த நடைபாதையில் விஜய் நடந்துசெல்லும்போது பாதுகாப்பிற்காக சில பவுன்சர்கள் வந்தனர். கூட்டத்திற்கு வந்தவர்கள் அந்த நடைபாதையை நெருங்கிவிடாதபடி ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அதையும் மீறி சில இளைஞர்கள் அந்த நடைபாதையில் ஏறினர். அப்போது விஜய்யுடன் வந்த பவுன்சர்கள் அவர்களைத் தூக்கி கீழே வீசினர். இந்தக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் நேரலையாகவே ஒளிபரப்பாயின. இதற்குப் பிறகு, 'அவ்வாறு தூக்கி வீசப்படும் நபர் என்னுடைய மகன் தான்' எனக் கூறி, குன்னம் தாலுகாவில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷம் என்பவர், ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். ஆனால், இதனை சந்தோஷத்தின் மகன் சரத்குமார் மறுத்தார். திடீர் திருப்பமாக ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று பெரம்பலூர் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சந்தோஷமும் அவரது மகன் சரத்குமாரும் புகார் ஒன்றை அளித்தனர். அந்தப் புகாரில், பவுன்சர்கள் தன்னைத் தூக்கியெறிந்ததால் தனது "மார்பு மற்றும் வலது விலா எலும்பில் அடிபட்டு வலி அதிகமாகிவிட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். தனக்கு யாருமே உதவிக்கு வராததால் விஜய் மீதும் பாதுகாப்புக்கு வந்த பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். படக்குறிப்பு, குன்னம் காவல்நிலையத்தில் சரத்குமார் புகார் அளித்தார். முதலில் கூறியதை மாற்றிப் பேசியது ஏன் என ஊடகங்கள் கேட்டபோது, "கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்தேன். பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டது நான் தான்" எனக் கூறினார். சரத்குமார் அளித்த புகாரின்பேரில் குன்னம் காவல்நிலையத்தில் த.வெ.க. தலைவர் விஜய், அடையாளம் தெரியாத பவுன்சர்கள் என பத்து பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பிறகு அந்த வழக்கு மதுரை மாவட்டம் கூடகோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் சிவகுமாரிடம் கேட்டபோது, "சரத்குமார் என்பவர் எதற்காக இப்படிச் சொல்கிறார் என்பதே தெரியவில்லை. அவர் ஒரு வீடியோவில் மாநாட்டிற்கு 9 மணிக்கு வந்ததாகச் சொல்கிறார். அவர் ரயிலில் சென்றிருக்கிறார். அரியலூரில் இருந்து அந்த ரயிலே காலை 9 மணிக்குத்தான் வரும். இதிலிருந்தே அவர் சொல்வது பொய் என்பதை உணர்ந்துகொள்ளலாம். அவருடைய தாயார் வீடியோவில் பேசியதும் நான் இவரைத் தொடர்புகொண்டு பேசினேன். அப்போது அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்றுதான் கூறினார். இப்போது மாற்றிச் சொல்கிறார்" என்கிறார் சிவகுமார். இந்த நிலையில், மேலும் ஒரு திருப்பமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது இன்ஸ்டாகிராாம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், "தூக்கிவீசப்பட்ட இளைஞர் நான் தான், பவுன்சர்கள் தூக்கி வீசியவுடன் கம்பியைப் பிடித்து கொள்வேன், எனக்கு ஒன்றும் ஆகவில்லை" எனக் கூறியிருந்தார். பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, அந்த ராம்ப்பின் அந்த இடத்தில் இருப்பது நான்தான் என்கிறார் அஜய் இது குறித்து அஜய்யிடம் பிபிசி கேட்டபோது, "மதுரை மாநாட்டில் ராம்ப்பில் ஏறியதும் பவுன்சர்கள் என்னைத்தான் தூக்கிப் போட்டார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் தேவையில்லாமல் விஜய் மீது புகார் கொடுத்தார்கள். யார் வேண்டுமானாலும் நேரில் வந்தால் அது நான்தான் என நிரூபிப்பேன். அந்த நபர் சொல்வது பொய்" என்று தெரிவித்தார். ஆனால், ராம்பில் ஏற முயன்ற பலர் இதுபோல தூக்கிவீசப்பட்ட நிலையில், அப்படி தூக்கிவீசப்பட்ட நபர்களில் சரத்குமாரும் ஒருவராக இருக்கலாம் அல்லவா என அஜய்யிடம் கேட்டபோது, அப்படியிருப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறார். "அந்த ராம்ப்பின் அந்த இடத்தில் இருப்பது நான்தான். வீடியோவில் இருப்பதும் நான்தான். வேறொருவர் இருந்ததாகச் சொல்வது பொய்" என்கிறார் அஜய். இப்போது சரத்குமார் அளித்த புகார் மதுரைக்கு மாற்றப்பட்டிருப்பதால் அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரையும் சரத்குமார் சந்தித்திருக்கிறார். இது குறித்துப் பேசுவதற்காக சரத்குமாரைத் தொடர்புகொண்டபோது, அவர் அழைப்புகளை ஏற்கவில்லை. அவருடன் அங்கே சென்ற இந்தியத் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரனிடம் இது குறித்துக் கேட்டபோது சரத்குமார் ஊடகங்களிடம் பேச தயங்குவதாகத் தெரிவித்தார். "நாங்கள் தொழிலாளர்களுக்காக கட்சி நடத்துகிறோம். சரத்குமாரின் தாயார் கட்டடத் தொழிலாளர் என்பதால் அவர் எங்கள் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். சரத்குமார் பிஎஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறார். அவர் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், இதுபோல வீடியோ வெளியானதும், அவருடைய தாயார் இது குறித்து வீடியோவில் பேசினார். ஆனால் சரத்குமார் அதனை மறுத்தார். இதையடுத்து நான் சரத்குமாரைத் தொடர்பு கொண்டு பேசினேன். கட்சியில் கெட்ட பெயர் வந்துவிடும் என்பதால் அப்படிப் பேசியதாகத் தெரிவித்தார். இதற்குப் பிறகு அவருடைய தாயாரும் பாட்டியும் அழுதுகொண்டேயிருந்தார்கள். பிறகு அவரே முன்வந்து தான்தான் தூக்கிவீசப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டார். பிறகு பெரம்பலூரில் புகார் கொடுத்தோம். வழக்கு மதுரைக்கு மாற்றப்பட்டு, எஃப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டது. இதனால், மதுரைக்கும் சென்று எஸ்பியைச் சந்தித்தோம்" என்றார் ஈஸ்வரன். ஆனால், தற்போது அஜய் என்பவர் தான்தான் தூக்கிவீசப்பட்டதாகத் தெரிவித்திருப்பது குறித்துக் கேட்டபோது, "சரத்குமாரிடம் கேட்டபோது, ராம்ப்பில் ஓடியது தான் அல்ல என்றாலும் தூக்கி வீசியது தன்னைத்தான் என்கிறார். அஜய் என்பவர் நிறைய நண்பர்களோடு சென்றதால் அவரிடம் நிறைய வீடியோக்களும் புகைப்படங்களும் இருக்கின்றன. சரத்குமாரிடம் இல்லை. அப்படியே அஜய் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டாலும், அவரைத் தூக்கி வீசியதும் தவறுதானே?" என்கிறார் ஈஸ்வரன். இது தொடர்பாக போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் ஈஸ்வரன் தெரிவித்தார். இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம் கேட்டபோது, "முதலில் புகார் சொன்ன அந்த இளைஞர் தகவல்களை மாற்றி மாற்றிச் சொல்கிறார். அவரிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை. இருந்தும் எவ்வித முகாந்திரமும் இன்றி காவல்துறை வழக்குப் பதிவுசெய்திருக்கிறது. இப்போது வேறு ஒரு இளைஞர் அது தான்தான் எனக் கூறியிருக்கிறார். வழக்கைப் பதிவுசெய்வதற்கு முன்பாகவே, இதுகுறித்து முழுமையாக விசாரித்திருக்க வேண்டும்" என்கிறார் சி.டி.ஆர். நிர்மல்குமார். இது தொடர்பாக பேசுவதற்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy5p63r2y66o
-
பருத்தித்துறை பிரதேச சபை ஏல்லைக்குள் பொலித்தீனுக்கு தடை
29 Aug, 2025 | 04:29 PM பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (29) சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் ஆரம்பமானது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தவகையில் 9ஆம் மாதத்தினை பன விதை நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு 10000/- பனை விதைகள் நாட்ட தீர்மானிக்கப்பட்டது. சபை எல்லைக்குள் மூன்று மாதத்திற்குள் பொலித்தீன் பாவனையை முற்றாக கட்டுப்படுத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. சபை வீதிகளை ஊரிக்களி மண் பயன்படுத்தி அமைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. உக்காத கழிவு பொருட்களை பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட இடத்தில் கொட்டுவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் மூன்று மாத காலங்களுக்கு சுழற்சி முறையில் அனுமதி கொடுப்பதாகவும் ஒரு உழவு இயந்திர பெட்டி குப்பைக்கு ரூபா 5000 அறவிடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. சபை அமர்வில் 20 உறுப்பினர்களில் 18 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/223713
-
அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை சீட் பெல்ட் கட்டாயம் – போக்குவரத்து அமைச்சகம்
அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் பயணிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம் – பிமல் ரத்நாயக்க 29 Aug, 2025 | 04:23 PM அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக இதனை நடைமுறைப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார். அத்துடன், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பாடசாலை பஸ்கள், அலுவலக சேவைப் போக்குவரத்து பஸ்கள், சுற்றுலா பஸ்கள் மற்றும் ஏனைய பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு சுமார் 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, சுமார் 2,000 ரூபாவாக இருந்த ஆசனப் பாட்டிகளின் விலை தற்போது 5,000 முதல் 7,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையினால் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நீண்ட தூர சேவை பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகள் அணிவதைக் கட்டாயமாக்குவது தொடர்பாக மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், இது குறித்து அண்ணளவாக அனைவரும் தமது விருப்பத்தைத் தெரிவித்ததாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியதுடன், அதனால் எதிர்காலத்தில் நீண்ட தூர சேவை பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகள் அணிவதைக் கட்டாயமாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விசேடமாக Citra Innovation Lab நிறுவனத்தின் ஊடாக இந்தக் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் பயணிகள், சாரதிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்ட 2100 பேரிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அது சம்பந்தமான அறிக்கையொன்றை அந்த நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். அத்துடன், தேவையான சட்டத் திருத்தங்களைச் செய்து, அதிவேக நெடுஞ்சாலைக்குள் வாகனங்கள் நுழையும்போது வாகன உதிரிப் பாகங்களின் தரத்தைப் பரிசோதித்து புள்ளிகள் வழங்கும் முறையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்ததுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், வாகனங்களின் டயர்கள் தேவையான தரத்தில் இல்லாவிட்டால், அதிவேக நெடுஞ்சாலைக்குள் வாகனத்தை நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். முச்சக்கர வண்டிகள், வான்கள் உட்பட தனியார் போக்குவரத்துத் துறையின் சாரதிகளுக்காக நலன்புரி நிதியமொன்றை உருவாக்குவதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், இது தொடர்பான சட்டமூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். நீண்ட தூர சேவை மற்றும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களின் நிறுத்துமிடம் தொடர்பான தேவையான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், புகையிரத சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான தேவையான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும், துறைமுகங்கள் தொடர்பான தேவையான நவீனமயமாக்குவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும் இரண்டு உப குழுக்களை நியமிப்பதும், அவற்றுக்கு உறுப்பினர்களை நியமிப்பதும் இதன்போது இடம்பெற்றது. இதற்கு மேலதிகமாக, கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் பணிகள் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிப்பது மற்றும் நிர்மாணிக்கும் பணிகளை நிறைவு செய்வது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய விடயங்கள் தொடர்பாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டு, பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச அதிகாரிகள் பலரும் இணைந்திருந்தனர். https://www.virakesari.lk/article/223712
-
"போட்டியாளர் அல்ல , கூட்டாளி" - மோதியின் பயணம் குறித்து சீன ஊடகங்கள் எழுதுவது என்ன?
பட மூலாதாரம், Reuters 58 நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 என இரண்டு நாட்கள் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO)மாநாட்டில் அவர் பங்கேற்பார். கூடுதல் வரிவிதிப்புகள் காரணமாக அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகளில் பதற்றம் நிலவும் நேரத்தில் பிரதமர் மோதியின் சீனப் பயணம் கவனிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் மிகவும் பதற்றமான நிலையில் இருந்தன. ஆனால் சமீபத்தில் இரு நாடுகளும் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர். மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், குறிப்பாக டிரம்பின் 'வரிவிதிப்பு போருக்கு'ப் பிறகு, இந்த புதிய இராஜதந்திர செயல்பாடு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோதியின் வருகையை சீன ஊடகங்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றன என்பதை காணலாம். மூலோபாய சுயாட்சியின் முக்கியத்துவம் "சீன வெளியுறவு அமைச்சர் வாங்யியின் கடந்த வார இந்திய பயணம், மோதியின் வருகைக்கான தயாரிப்பாக பரவலாகப் பார்க்கப்படுகிறது" என்று சீனாவின் அரசு செய்தித்தாளான 'சீனா டெய்லி' எழுதியுள்ளது. உலகளாவிய நிலைமையைச் சமாளிக்க சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது என்று அந்நாளிதழ் எழுதியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான அழுத்தம் காரணமாக, சுதந்திர வர்த்தகம் மற்றும் சர்வதேச ஒழுங்கிற்கு சவால்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளதோடு, அமெரிக்காவின் வரிவிதிப்பு அழுத்தத்திலிருந்து தப்பிக்க முடியாது என்ற உண்மையை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று சீனா டெய்லி எழுதுகிறது. "ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால் இந்தியா அமெரிக்காவுடன் மோதல் சூழ்நிலையில் சிக்கியது. அதன் பிறகு இந்தியா மூலோபாய சுயாட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது." சீனாவை ஒரு போட்டியாளராகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ பார்ப்பதற்குப் பதிலாக, இந்தியா அதை ஒரு கூட்டாளியாகவும் அதன் உயர்தர வளர்ச்சியை ஒரு வாய்ப்பாகவும் பார்க்க வேண்டும் என்றும் அந்த நாளிதழ் எழுதியுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மோதியின் பயணத்திற்கு முன்னோட்டமாக சீன வெளியுறவு அமைச்சரின் இந்திய வருகை இருந்தது ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அர்ஜுன் சாட்டர்ஜி 'சீனா டெய்லி'யில் எழுதிய ஒரு கட்டுரையில், பிரதமர் மோதி பங்கேற்கும் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் மீது இப்போது அனைவரின் பார்வையும் இருப்பதாகக் கூறியுள்ளார். டிரம்பின் வரிவிதிப்புகளுக்குப் பிறகு சீனா இந்தியாவுடன் ஒற்றுமையைக் காட்டியுள்ளது என கூறும் அவர், அமெரிக்க நடவடிக்கையை அச்சுறுத்தும் செயலாக சீனா கருதுவதாகவும் எழுதுகிறார். இந்தியா தனது விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால்வளத் துறையின் நலன்களில் சமரசம் செய்யாது என்று பிரதமர் மோதி தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். பசுமை விவசாயம், குறிப்பாக நைட்ரஜன் பயன்பாட்டு திறன், இந்தியாவும் சீனாவும் வேகமாகச் செயல்படும் ஒரு பகுதி என்று அர்ஜுன் சாட்டர்ஜி குறிப்பிடுகிறார். இது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒரு சிறந்த படியாக இருக்கும் என்பது அவரது கூற்றாக உள்ளது.. இணைப்பு, இரு நாடுகளுக்கும் இடையே மக்களின் பயணம், விவசாயம் அல்லாத வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் கூட்டாண்மை ஆகியவற்றில் தியான்ஜின் உச்சிமாநாட்டில் ஏதேனும் ஒப்பந்தம் ஏற்பட்டால், ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான போட்டி இருந்தபோதிலும் இது நடைமுறை ஒத்துழைப்புக்கான ஒரு வழியாக இருக்கலாம் என்று அவர் எழுதுகிறார். அமெரிக்கா, சீனா என இரண்டையும் சமாளிக்கும் முயற்சி அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua) மற்றும் வேறு சில நிறுவனங்களின் செய்திகள், பிரதமர் மோதியின் வருகையை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவை இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரிகள் குறித்த பிரச்னையை விவாதிக்கின்றன. ஆகஸ்ட் 27 முதல் இந்திய ஏற்றுமதிகளில் அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத 'அபராத வரி' விதித்துள்ளதை 'சின்ஹுவா' செய்தி குறிப்பிடுகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் மீதான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதே காரணம் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, சுமார் 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும். சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும், இந்தியா எந்த அழுத்தத்தையும் தாங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். ஜிஎஸ்டியில் விரைவான சீர்திருத்தங்களை அவர் அறிவித்துள்ளார். மறுபுறம், இந்தியா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்று ஸ்தம்பித்துள்ளது பட மூலாதாரம், Getty Images அதே நேரத்தில், தேசியவாத செய்தி வலைத்தளமான 'குவாஞ்சா' (Guancha), 'சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் அமெரிக்காவுடனான தனது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க இந்தியா விரும்புகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்' என்று எழுதியுள்ளது. "மோதி கடந்த ஆண்டு முதல் தனது அமெரிக்க சார்பு கொள்கையை சமநிலைப்படுத்த முயற்சித்து வருகிறார், ஆனால் அவர் சீனா மற்றும் ரஷ்யாவுடன் எவ்வளவு தூரம் செல்வார் என்பது தெளிவாகத் தெரியவில்லை." இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் Quad இரண்டிலும் ஒரு பகுதியாக இருந்த போதிலும், எந்த ஒரு குழுவுடனும் கட்டுப்பட்டு இயங்க மறுக்கிறது. ஆயினும்கூட, கூட்டு அறிக்கையில் கையெழுத்திடாதது மற்றும் ஆங்கிலத்தை வேலை மொழியாக மாற்றக் கோருவது என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பல சந்தர்ப்பங்களில் சீனா மற்றும் ரஷ்யாவுக் முயற்சிகளுக்கு இந்தியா சவாலாக இருந்திருக்கிறது. குவாஞ்சாவில் வெளியிடப்பட்ட செய்தி, "இந்தியா 'இரு தரப்புடனும் விளையாடும்' கொள்கையுடன் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சமநிலையை பராமரிக்க முயற்சிக்கிறது. இருப்பினும், டிரம்ப் 2.0 சகாப்தத்தில் இந்த சமநிலை கடினமாகி வருகிறது." என கூறுகிறது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ejxn7n7l8o
-
யாழ். நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு : தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு!
யாழ். மேல் நீதிமன்றத்தில் 1996இல் நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேருக்கான ஆட்கொணர்வு மனு தாக்கல் 29 Aug, 2025 | 04:22 PM கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (29) தாக்கல் செய்யப்பட்டது. சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிமான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் குறித்த வழக்கானது தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமை (29) திகதியிடப்பட்டது. இருப்பினும் நீதிவான் விடுமுறையில் இருந்த காரணத்தினால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/223711
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ரணில் விக்ரமசிங்க! 29 Aug, 2025 | 04:17 PM கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (29) மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியசாலையிலிருந்து வெளியேறினாலும் ரணில் விக்ரமசிங்க வீட்டில் தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து அவரது குடும்ப வைத்தியர் கண்காணிப்புடன் இருத்தல் வேண்டும் எனவும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், ரணில் விக்ரமசிங்க உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223710
-
இலங்கை மத்திய வங்கி 75 ஆம் ஆண்டு நிறைவு : புதிய 2000 ரூபா நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
29 Aug, 2025 | 02:51 PM இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் வெள்ளிக்கிழமை (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. புழக்கத்திற்கான நினைவு நாணயத்தாளாக இது வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 5 ஆவது நினைவு நாணயத்தாள் ஆகும். தேசிய அபிவிருத்திக்கான அடித்தளமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான மத்திய வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், "சுபீட்சத்திற்கான ஸ்திரத்தன்மை" என்ற என்ற ஆண்டு நிறைவு தொனிப்பொருளுக்கு ஏற்ப இந்த நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே.எம்.ஏ.என். தௌலகல, உதவி ஆளுநர் கே.ஜி.பி. சிறிகுமார, நாணயத் திணைக்களத்தின் ஆளுநர் பீ.டீ.ஆர். தயானந்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/223698
-
சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்!
பெய்ஜிங் ராணுவ பேரணியில் பங்கேற்கும் புதின், கிம் ஜாங் உன் - அமெரிக்காவுக்கு சீனா சொல்லும் செய்தி என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் லாரா பிக்கர் சீன செய்தியாளர், பிபிசி நியூஸ் 29 ஆகஸ்ட் 2025, 08:11 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பெய்ஜிங்கின் மையத்தில் நடக்கவுள்ள ராணுவ அணிவகுப்பில் ஒன்றாக பங்கேற்பது ஒரு மிகப் பெரிய தருணமாக இருக்கும். இது ஷி ஜின்பிங்கிற்கு ஒரு முக்கியமான ராஜதந்திர வெற்றியாகவும் அமையும். சீன அதிபர் நீண்ட காலமாக உலகிற்கு பெய்ஜிங்கின் வலிமையை வெளிப்படுத்த முயற்சி செய்து வருகிறார். அவர் தன்னை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மட்டுமின்றி, வலுவான ராஜதந்திரியாகவும் நிறுவிக்கொள்ள விரும்புகிறார். டிரம்பின் வரிக்குவரி யுத்தம் உலகம் முழுவதும் பொருளாதார உறவுகளை சீர்குலைத்து வரும் நிலையில், சீனா ஒரு நிலையான வர்த்தகப் பங்காளி என்று அவர் முன்வைக்கிறார். யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதில் அமெரிக்க அதிபர் வெகு தொலைவில் உள்ளார். இந்நிலையில், ஷி ஜின்பிங் புதினை பெய்ஜிங்கிற்கு வரவேற்கத் தயாராகி வருகிறார். திடீரென அறிவிக்கப்பட்ட கிம் வருகையும் முக்கியத்துவம் குறைந்தது அல்ல. கடந்த வாரம் தென் கொரிய அதிபருடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜான் உன் சந்திப்பு 2019-ல் நடைபெற்றது. இந்த சந்திப்பு ஜின்பிங்கிற்கு ஏன் முக்கியம்? உலகில் தனிமைப்படுத்தப்பட்ட சர்வாதிகாரியுடனான டிரம்பின் முந்தைய ராஜதந்திர முயற்சிகளில் எந்த முடிவும் எட்டவில்லை. உலக கவனத்தை ஈர்த்த இரண்டு உச்சிமாநாடுகள் நடந்தாலும், எந்த உறுதியான முன்னேற்றமும் அடையப்படவில்லை. இப்போது டிரம்ப் மீண்டும் முயற்சி செய்ய விரும்புவதாக சமிக்ஞை காட்டுகிறார். இதற்கிடையில், இந்த முழு ஆட்டத்தையும் தீர்மானிக்கும் சக்தி தன்னிடம்தான் இருப்பதாக சீன அதிபர் சமிக்ஞை செய்கிகிறார். கிம், புதின் இருவரிடமும் அவருக்கு உள்ள செல்வாக்கு ஒரு வரம்பிற்குட்பட்டது என்றாலும், எந்தவொரு ஒப்பந்தம் இறுதியாவதிலும் அவரின் முக்கியத்துவம் நிரூபணமாகலாம். செப்டம்பர் 3ஆம் தேதி அணிவகுப்பில் சீனா தன்னுடைய ராணுவ வலிமையை வெளிக்காட்டும். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு நடக்கிறது. அப்போதுதான் சீனாவின் சில பகுதிகளில் ஜப்பானின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த கொண்டாட்டத்தை ஷி ஜின்பிங் வேறு ஏதோவொன்றைக் வெளிக்காட்டுவதற்காக பயன்படுத்துகிறார். இந்த நிகழ்வு நடக்கும் நேரமும் முக்கியமானது. அக்டோபர் இறுதியில் டிரம்ப் அந்த பிராந்தியத்திற்கு வரக்கூடும் என்றும், அப்போது ஷி ஜின்பிங்கைச் சந்திக்க அவர் தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை கூறியிருந்தது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் வரி பற்றிய ஒப்பந்தம், அமெரிக்காவில் டிக்டாக் விற்பனை, யுக்ரேன் போர் நிறுத்தம் அல்லது தீர்வுக்கு புதினை சம்மதிக்க வைக்க சீனாவால் முடியுமா என்ற கேள்வி உட்பட பல பிரச்னைகள் பற்றி அவர்கள் விவாதிக்கலாம். பட மூலாதாரம், Getty Images இப்போது ஷி ஜின்பிங் கிம் மற்றும் புதின் இருவரையும் சந்திப்பதன் மூலம், தாம் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக டிரம்புடன் பேசுகையில் அவர் உணர மாட்டார். உண்மையில், இரு தலைவர்களுடனும் அவருக்கு நெருங்கிய உறவு இருப்பதால், அமெரிக்க அதிபரிடம் இல்லாத பல தகவல்கள் அவரிடம் இருக்கக்கூடும். ரஷ்யா, வட கொரியா இரண்டும் மேற்கத்திய உலகின் பார்வையில் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகின்றன. புதினை விட கிம் அவரது ஆயுதத் திட்டத்தின் காரணமாக நீண்ட காலமாகவே மேற்கு நாடுகளின் இலக்காக ஆனவர். யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு அவர் ஆதரவு அளித்த பின்னர் அவருக்கு எதிரான கண்டனங்கள் மீண்டும் கூடுதலாகின. இப்படிப்பட்ட சூழலில், பெய்ஜிங்கில் இருந்து வந்திருக்கும் அழைப்பு கிம்முக்கு ஒரு பெரிய சாதகமாகும். கடைசியாக ஒரு வட கொரியத் தலைவர் சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றது 1959-ல்தான். 2019-ல் சீனா-வட கொரியா உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரு தலைவர்கள் சந்தித்த பின்னர் ஷி, கிம்முக்கு இடையில் வெளிப்படையான சந்திப்புகள் குறைவாகவே நடந்துள்ளன. 2018-ல் ட்ரம்ப் உடனான உச்சிமாநாட்டு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கிம் ஜாங் உனின் முதல் வெளிநாட்டுப் பயணமும் பெய்ஜிங்கிற்குத்தான், அப்போது அவர் பியாங்யோங் அணுசக்தித் திட்டத்தைப் பற்றி விவாதிக்கச் சென்றார். இது சீனாவிற்கு நன்மையா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்புக்கு முன்பாக, ரஷ்ய, வட கொரிய நாட்டுத் தலைவர்களை சீன அதிபர் சந்திப்பது அவருக்கு சாதகமாக அமையலாம். சமீபத்திய ஆண்டுகளில், ரஷ்யா-வட கொரியா கூட்டணியிலிருந்து ஷி ஜின்பிங் கிட்டத்தட்ட தனித்து நிற்பதாக தோன்றியது. அது சீனா பங்கேற்க விரும்பாத கூட்டணியாக இருக்கலாம். யுக்ரேன் போரில் நடுநிலைமை வகிக்க சீனா வெளிப்படையாக முயற்சித்தது. அமைதியான தீர்வுக்காக முறையிட்டது. ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் போரில் ரஷ்யாவிற்கு ஆயுதங்களும், உதிரிபாகங்களும் சீனா வழங்குவதாக குற்றம் சாட்டின. புதினுடனான கிம்மின் நெருக்கம் சீனா-வட கொரியா இடையிலான உறவுகளை சிதைத்துவிட்டது என்று சிலர் ஊகித்தனர். ஆனால் அடுத்த வாரம் கிம்மின் பெய்ஜிங் வருகை இந்த அனுமானம் தவறு என்பதை நிரூபிக்கிறது. வட கொரியத் தலைவர் எளிதில் கைவிட முடியாத உறவு சீனாவுடனானது. அவர்களது பொருளாதாரம் சீனாவை பெரிதும் சார்ந்துள்ளது, அவர்களது உணவு இறக்குமதியில் சுமார் 90 சதவிகிதத்தை சீனாவே வழங்குகிறது, புதின் மற்றும் ஜின்பிங்குடன் மட்டுமின்றி, இந்தோனீசியா, இரான் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் ஒரே மேடையில் நிற்பது கிம்முக்கு கூடுதல் நியாயத்தை அளிக்கிறது. ஷி ஜின்பிங்கைப் பொருத்தவரை, டொனால்ட் டிரம்ப் உடனான சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இது ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகும். ஒரு அதீத வரி, வர்த்தகப் போரைத் தவிர்த்து ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் 90 நாள் இடைநிறுத்தம் நடைமுறையில் உள்ளது, ஆனால் நேரம் குறைந்து கொண்டே வருகிறது. பேச்சுவார்த்தைகளின் போது ஜின்பிங் தரப்பு வலுவாக இருக்க வேண்டும். அவரிடம் கொடுப்பதற்கு பல விஷயங்கள் உள்ளன. டிரம்ப் கிம் ஜாங் உன்னை சந்திக்க முயற்சித்த போது, சீனா அவருக்கு உதவியது. ஷி ஜின்பிங் மீண்டும் அந்த உதவியைச் செய்ய முடியுமா? இன்னும் முக்கியமான கேள்வி என்னவென்றால், யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் சீனாவால் என்ன பாத்திரம் வகிக்க முடியும். மேலும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால்: ஷி ஜின்பிங், புதின், கிம் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்திப்பது சாத்தியமா? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy98z9veld9o
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
பிறந்தநாளை முன்னிட்டு அத்தியாவசிய பால்மா வகைகள் வழங்கி வைக்கப்பட்டது 26/08/2025
-
சிறு பொறிகள் - நிலாந்தன்
பகிர்விற்கு நன்றி @கிருபன் அண்ணை.
-
யாழ் நூலக எரிப்பு முதல் பட்டலந்தை வதை முகாம் வரை - ரணில் விக்ரமசிங்க மீதான 3 முக்கிய குற்றச்சாட்டுகள்
பட மூலாதாரம், PMD SRI LANKA கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல்நல குறைவால் கொழும்பு தேசிய மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை அரசியல் பாரிய மாற்றங்களை கடந்த சில தினங்களில் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அரசியல் ரீதியில் பிரிந்திருந்த எதிர்கட்சிகள் தற்போது ஓரணியாக திரண்டுள்ளமை, இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக செயற்பட்ட அனைவரும் இன்று அவர்களுடன் இணைந்தவாறே ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளமை விசேட அம்சமாகும். இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் கைது உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. ரணிலின் கைது தொடர்பில் சர்வதேச கவனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் சர்வதேச நாடுகளின் முக்கியஸ்தர்கள் தமது கவலையை வெளியிட்டு வருகின்றனர். இதன்படி, கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமது நஷீத் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட தருணத்திலேயே மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி தனது எக்ஸ் வலைத்தளத்தில் இந்த தகவலை பதிவொன்றாக வெளியிட்டிருந்தார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் பழிவாங்கல் என இந்திய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், SHASHI THAROOR/X படக்குறிப்பு, சசி தரூர் உடன் ரணில் விக்ரமசிங்க தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார். பொருத்தமற்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை தெரிவதாகவும் அவர் கூறுகின்றார். சுகயீனமுற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு மனிதாபிமான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டுக்காக பல பத்தாண்டுகளாக பணியாற்றிய ரணில் விக்ரமசிங்க மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இம்முறை இலங்கை விஜயத்தின் போது தான் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்ததையும் அவர் இந்த பதிவின் ஊடாக நினைவுப்படுத்தியிருந்தார். பட மூலாதாரம், ERIK SOLHEIM /X படக்குறிப்பு, எரிக் சொல்ஹெய்மின் எக்ஸ் பதிவு இதேவேளை, இலங்கையின் உள்நாட்டு போர் இடம்பெற்ற காலப் பகுதியில் இலங்கைக்கான நோர்வின் சமாதான தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம்மும் தனது எக்ஸ் தள பதிவில் கவலையை வெளியிட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலும், தெற்காசியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பல தலைவர்களுடன் இணைந்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு கோருவதாக அவர் கூறுகின்றார். தடுப்பு காவலில் இருக்கும் அவரின் உடல்நிலைமை தெடர்பில் அனைவரும் கவலையடைவதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இலங்கை 2022ம் ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வீழ்ச்சி கண்ட போது, அதனை மீட்டெடுக்க முன்னின்று செயற்பட்ட தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் கூறுகின்றார். ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என கூறிய அவர், இந்த குற்றச்சாட்டுக்கள் ஐரோப்பாவில் எந்த குற்றமாகவோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகவோ கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊழலை எதிர்த்து போராடும் முயற்சிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ள எரிக் சொல்ஹெய்ம், ஆனால் உண்மையான பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். ரணில் விக்ரமசிங்க மீது இலங்கையிலுள்ள குற்றச்சாட்டுகள் என்ன? முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பல பத்தாண்டுகளாகவே காணப்பட்டு வருகின்றன. ரணில் விக்ரமசிங்க, இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு நபராக கருதப்படுகின்றார். 1970ம் ஆண்டு காலப் பகுதியில் அரசியல் வாழ்க்கைக்குள் பிரவேசித்த இவர், ஐந்து தடவைகள் பிரதமராகவும் ஒரு தடவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். அது தவிர, பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், எதிர்கட்சி தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்த பெருமை ரணில் விக்ரமசிங்கவை சாரும். எனினும், 1970ம் ஆண்டு காலப் பகுதி முதல் இன்று வரை ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பட மூலாதாரம், PMD SRI LANKA யாழ் நூலகம் எரிப்பு தெற்காசியாவிலேயே மிக பெறுமதி வாய்ந்த பெரிய நூலகமாக கருதப்பட்ட யாழ்ப்பாணம் நூலகம் 1981ம் ஆண்டு தீ வைக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது. இந்த நூலகத்தில் அந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் பெறுமதி வாய்ந்த 97000 புத்தகங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம் நூலக எரிப்பானது, இலங்கையின் இனப் பிரச்னையின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியினரின் தலைமையில் தென் பகுதி மக்களை அழைத்து சென்று நூலகத்தை தீக்கிரையாக்கியமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், யாழ்ப்பாணம் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்திற்கு ரணில் விக்ரமசிங்க மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாகவே மன்னிப்பு கோரியிருந்தார். ''எமது ஆட்சிக் காலத்தில் நூலகத்திற்கு தீ வைக்கப்பட்டது. அது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். அது தொடர்பில் நான் மன்னிப்பு கோருகின்றேன்'. என 2016ம் ஆண்டு நாடாளுமன்ற அமர்வொன்றில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். பட்டலந்தை சித்திரவதை முகாம் பட மூலாதாரம், GOVERNMENT PRESS படக்குறிப்பு, ஆணைக்குழுவின் அறிக்கையின் முதல் பக்கம் இலங்கையில் 1987 முதல் 1989ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களை தடுத்து வைப்பதற்கான உருவாக்கப்பட்டதாக கூறப்படும் முகாமே இந்த பட்டலந்தை சித்திரவதை முகாம் என சொல்லப்படுகின்றது. கம்பஹா மாவட்டத்தின் பியகம என்ற பகுதியில் இந்த சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. கிளர்ச்சியில் ஈடுபட்ட மற்றும் அதற்கு ஆதரவு வழங்கியோரை இந்த சித்திரவதை முகாமுக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதாகவும், சிலர் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், சிலர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த பட்டலந்தை சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டதாக கூறப்படும் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியில் இருந்தது. பட மூலாதாரம், BATALANDA COMMISSION REPORT படக்குறிப்பு, வீட்டுத் திட்ட வளாகத்தின் வரைபடம் அரச உரக் கூட்டுத்தாபனத்தின் வீட்டுத் திட்டத்திலேயே இந்த சித்திரவதை முகாம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அப்போதைய வீடமைப்புத்துறை அமைச்சராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்திருந்தார். இந்த பின்னணியில், இந்த சித்திரவதை முகாமிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விடயம் தொடர்பில் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் அறிக்கைகள் இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் கூட விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. பட மூலாதாரம், GOVERNMENT PRESS படக்குறிப்பு, ஆணைக்குழு உறுப்பினர்கள் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் இலங்கையின் 2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் பதவியை வகித்து வந்திருந்தனர். இந்த காலப் பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக சிங்கப்பூர் பிரஜையான அர்ஜீன் மகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மத்திய வங்கி பிணைமுறி விநியோகத்தில் 11,450 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜீன் மகேந்திரன், தனது உறவினருக்கு மோசடியாக முறையில் இந்த பிணைமுறி விநியோகத்தை மேற்கொண்டதாக கூறப்பட்டது. அதையடுத்து, இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அர்ஜீன் மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளார். இந்த விவகாரத்திலும் ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு - நாளை விசாரணை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க உடல்நிலை முடியாமை காரணமாக தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நாளைய தினம் (26) நடைபெறவுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அழைத்து வருவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கொழும்பு மருத்துவமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்நிலை தொடர்பில் கவனம் செலுத்தி, விசேட மருத்துவர்களின் தீர்மானத்திற்கு அமையயே இறுதி முடிவு எடுக்கப்படும் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் டொக்டர் பிரதீப் விஜேசிங்க ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருந்தார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் நாளைய தினம் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்த எதிர்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. ''வைராக்கியம் மிக்க அரசியலுக்கு எதிராக குரல் எழுப்புவோம். 26ம் தேதி கொழும்பிற்கு வாருங்கள்'' என தெரிவிக்கும் வகையிலான சமூக வலைத்தள பதிவொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6261xep83yo
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு Published By: VISHNU 25 AUG, 2025 | 07:15 PM 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள் ஆயுத தாரிகளால் இடைமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது சம்பந்தமாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சார்பாக AMM.ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை, திங்கட்கிழமை (25) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள படி உரிய இடத்தில் புதைக்கப்பட்டுள்ள மனித எச்சங்களை தோண்டி எடுப்பதற்கான கட்டளையை நீதிவான் நீதிமன்ற நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலதிக நடவடிக்கைகளை களுவாஞ்சிக்குடி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். முறைப்பாட்டாளர் சார்பாக குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. பின்னர் சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியின் , கடற்கரை எல்லைப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தின் கௌரவ நீதவான் நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் சம்பவ இடத்தினை சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளப்படுத்தியதுடன் , பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தி இதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கட்டளை இட்டார். இவ் வழக்கு திங்கட்கிழமை (25) காலை 9.30 மணிக்கு மீள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223356
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் போராட்டம் ஏற்பாடு
25 AUG, 2025 | 04:48 PM (எம்.நியூட்டன்) சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம், அதனை வலுப்படுத்த பேதங்களற்ற வகையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (25) நடத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் ஐ.நா பிரதிநிதி யாழ்ப்பாணத்துக்கு வந்து செம்மணியின் தடயங்களை பார்வையிட்டார். அவரது இந்த செயலால், நீதிக்கான சமிக்ஞை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் அத்தனையும் கலைந்துவிட்டது. ஐ.நாவின் பிரதிநிதி உள்ளக பொறிமுறையை எம்மிடம் திணித்துச் சென்றதைப் போன்று அவரது கருத்து இருக்கிறது. நாம் சர்வதேச விசாரணையையே கோருகின்றோம். அதனையே இன்றும் வலியுறுத்துகின்றோம். எனவே, எமக்கு உள்ளக பொறிமுறை வேண்டாம். அதில் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே, எதிர்வரும் 30ஆம் திகதி செம்மணியில் போராட்டம் ஒன்றை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளோம். அந்தப் போராட்டத்துக்கு மதத் தலைவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என அனைவரும் பேதங்களற்ற வகையில் ஒன்றுதிரண்டு போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்கள். https://www.virakesari.lk/article/223336
-
ராமநாதபுரம்: மேலும் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகளா? புதிய தொழில்நுட்பத்தால் என்ன ஆபத்து?
ராமநாதபுரம்: 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறு அமைக்க அனுமதி அளித்தது யார்? அடுத்தது என்ன? படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 25 ஆகஸ்ட் 2025, 03:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் மாவட்டத்தின் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. அடுத்தக்கட்டமாக, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்து, இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால், அந்த மாவட்டமே 'மொத்தமாக அழிந்துவிடும்' என கவலையை வெளிப்படுத்துகின்றன, விவசாய, மீனவ மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள். ஆனால், மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்துள்ளார். ஹைட்ரோகார்பன் சோதனை கிணறு - என்ன நடந்தது? ராமநாதபுரம் மாவட்டத்தின் காவிரி படுகையில் உள்ள 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க திட்டமிட்டுள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அதற்கு அனுமதி வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் 31.10.2023 அன்று விண்ணப்பித்தது. அப்போதே தமிழ்நாடு அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என அரசியல் மட்டங்கள் உட்பட பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. படக்குறிப்பு, இத்திட்டம் அமைந்தால் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் (சித்தரிப்புப்படம்) மத்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கையின் (HELP - Hydrocarbon Exploration Licensing Policy) அடிப்படையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலத்தின் போது (OALP) ஓ.என்.ஜி.சி நிறுவனம் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி 1,403 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியின் முதல்கட்டமாக சுமார் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை ஹைட்ரோகார்பன் கிணறுகளை, கிணறு ஒன்றுக்கு உத்தேசமாக ரூபாய் 33.75 கோடி செலவில் ரூபாய் 675 கோடி ரூபாய் செலவில் தோண்ட திட்டமிட்டு சோதனை கிணறுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று விண்ணப்பித்திருந்து. மத்திய அரசு, சுற்றுச்சூழல் சட்டத்தில் மாற்றம் செய்து கடந்த 16, ஜனவரி 2020ல் வெளியிட்ட அரசாணையின் படி, முன்னர் எண்ணெய் மற்றும் எரிவாயு "ஆய்வு" கிணறுகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பித்த முறையை மாற்றி, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கும் வகையில் திருத்தம் செய்தது. அதன்படி, பொதுமக்களிடம் கருத்து கேட்பதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. அதாவது, கடலுக்குள் அல்லது கடலுக்கு வெளியே அமைக்கப்படும் இத்தகைய சோதனை ஆய்வு கிணறுகள் B2 பிரிவின் கீழ் வருகிறது, இத்தகைய B2 பிரிவு திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு தேவையில்லை என்பது தான் அந்த திருத்தம். ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தை ஆய்வு செய்த மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், 20 இடங்களில் சோதனை கிணறு அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேப்பங்குளம், பூக்குளம், சடயநேரி, கீழச்சிறுபோது, வல்லக்குளம், பனையடிஏந்தல், காடம்பாடி, நல்லிருக்கை, அரியக்குடி, காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஆழமலந்தல், சீனங்குடி அழகர்தேவன் கோட்டை, அடந்தனார் கோட்டை, ஏ.மணக்குடி ஆகிய 20 இடங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் 35 எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன. அதில் தற்போது 28 கிணறுகளில் இருந்து எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 20 இடங்களில் 2,000-3,000 மீட்டர் ஆழத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் என்பது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னிச்சையான அமைப்பாகும். 'B' பிரிவு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் அதிகாரம் பெற்ற அமைப்பாக இது உள்ளது. ஆணைய உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன? ஓஎன்ஜிசியின் முன்மொழிவு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்தின் முன்வைக்கப்பட்டது. ஆனால் அப்போது ஓஎன்ஜிசி தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற மாநில வல்லுநர் மதிப்பீட்டு குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த கிணறு துளையிடும் பணிக்கான அனுமதி என்பது தற்காலிகமானது தான் என்றும் எண்ணெய் அல்லது வாயு கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் கிணறுகள் மூடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உருவாகும் எச்சங்களும் கழிவுநீரும் முறையாக சுத்திகரிக்கப்பட வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி எண்ணெய் வளம் உள்ளதா என்று தேடுவதற்கு மட்டுமே, வணிக ரீதியிலான பணிகளுக்கு தனியாக சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தது என்ன? மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், அடுத்ததாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க வேண்டும். அப்படி, அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் அந்த 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படும். 'கடல்வளம் அழியும்' ஆனால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல்வளம் அழிந்துபோகும் என்கிறார், தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் தலைவர் நல்லதம்பி. இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளில் சில பாக் நீரிணை, மன்னார் வளைகுடா கடற்கரையிலும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மன்னார் வளைகுடா பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோள காப்பகமாக (Biosphere Reserve) உள்ளது. "இத்திட்டத்தின்படி, தொண்டி முதல் ஏர்வாடி வரையில் 20 கிணறுகள் வரவுள்ளன. நிலையான மீன்வளத்துக்கான தீர்வுகளை ஆராய்ந்து வரும் சூழலில் அதற்காக நடவடிக்கை எடுக்காமல் கடல் வளம், மீன்வளத்தை அழிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார். படக்குறிப்பு, ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்கப்படவிருக்கும் இடங்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் வளம் குறைந்து போயுள்ளதால், எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படும் சூழலில் இது பிரச்னைகளை மேலும் அதிகரிப்பதாக அவர் கூறுகிறார். "மீன்கள் உற்பத்தி மூலம் வேலைவாய்ப்பு, அந்நிய செலாவணி ஆகியவற்றை ராமநாதபுரம் மாவட்டம் அளிக்கிறது. அப்படியான சூழலில் கடல் வளத்தை பாதிக்கும் இதுபோன்ற திட்டங்கள் எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். நிலத்தில் ஒரு பிரச்னை என்றால் அது ஒருசில பகுதிகளுக்கு தான் இருக்கும், கடலில் பாதிப்பு என்றால் பல நூறு கிலோமீட்டருக்கு பாதிப்பு ஏற்படும்." என நல்லதம்பி கூறுகிறார். கடலில் வாழும் ஃபைட்டோபிளாங்டன் எனும் நுண்ணிய தாவரம் உலகுக்கு ஆக்சிஜனை வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்கும் செயல்முறையில் இந்த ஃபைட்டோபிளாங்டன் பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் ஆக்சிஜன் குறையும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 'விவசாயம் பாதிக்கப்படும்' இத்திட்டத்தால் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார், காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மலைச்சாமி. "ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ள பகுதிகள் வைகை ஆற்றின் கடைமடை பகுதிகள். இயற்கை வழித்தடமாக இருந்த சித்தார்கோட்டை கால்வாய் என்ற பகுதிக்குள் உள்ள ஒரு ஊரும் இதன்கீழ் வருகிறது. வைகை ஆற்றை ஒட்டி இருக்கும் இந்த கிரமாங்களில் 80,000 ஏக்கர் பாசனப்பரப்பு இருக்கிறது. புன்செய் நிலங்கள் 1.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இத்திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் வேளாண்மை, ஆற்றின் வளம் பாதிக்கப்படும். குறிப்பாக வைகை, தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றான ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயின் வழித்தடங்கள் பாதிக்கப்படும்." என்றார். "நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு" இத்திட்டத்தால் நிலத்தடி நீர் மிகுந்த பாதிப்படையும் என்கிறார், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன். "இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும். ரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலந்து மாசுபடும். தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேப்பங்குளம் போன்ற இடங்களில் இந்த கிணறுகள் அமைந்தால் அதன் நிலவளமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். " என தெரிவிக்கிறார், பேராசிரியர் ஜெயராமன். பட மூலாதாரம், PROFEESOR JAYARAMAN படக்குறிப்பு, 'இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் ரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலந்து மாசுபடும்' - பேரா. ஜெயராமன் இத்திட்டத்துக்கு எதிராக மக்கள், விவசாயிகளை அணிதிரட்டி பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக ஏல அறிவிக்கை வெளியான போது, அதை திரும்பப் பெறக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதியிருந்தார். கடந்த 2020ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு, காவிரி டெல்டா பகுதிகளில் இதுபோன்ற திட்டங்களை அமைக்க முடியாத வகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியது. அந்தச் சட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில் திருத்த வேண்டும் என்பது 'பூவுலகின் நண்பர்கள்' போன்ற சூழலியல் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது. தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம், THANGAM THENNARASU FB படக்குறிப்பு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அளித்துள்ள அனுமதியை உடனே திருமப் பெற அரசு அறிவுறுத்தியுள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (ஆக. 24) வெளியிட்ட அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கிய செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அளித்துள்ள அனுமதியை உடனே திரும்பப் பெற அரசு அறிவுறுத்தியுள்ளது." என தெரிவித்தார். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவு என்றும் மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாநில அரசு இத்தகைய உறுதியை தெரிவித்துள்ள நிலையில், இத்திட்டத்துக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த பிரபாகரன் வீர அரசு. பிரதமர் மோதி 2021ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை இந்தியா குறைக்கும் என கூறியிருந்தார். உலக நாடுகள் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை குறைத்துவரும் வேளையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது சரியான முடிவு அல்ல என்கிறார் பிரபாகரன் வீர அரசு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78zyj33j9do
-
வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு - விசாரணை திகதி அறிவிப்பு
மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது அண்ணை, ஓய்வுபெற்ற நீதிபதி இளஞ்செழியன் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியா பணியாற்றிய போது தீர்ப்பு வழங்கி இருந்தார். இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என்பதால் ஆயுள்தண்டனை தான்.
-
செம்மணி மனித புதைகுழி: இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு தொடக்கம்
Published By: VISHNU 25 AUG, 2025 | 08:37 PM செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட நிலையில், பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. இந்நிலையில் 33ஆவது நாளான திங்கட்கிழமை (25) மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் ஆரம்பமானது. இன்றைய தினம், ஏற்கனவே இருந்த அகழ்வு தளங்களை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (26) பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை கடந்த 06ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 150 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அவை முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது மேலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான பாதீடுகளை தயாரிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. https://www.virakesari.lk/article/223358
-
மாம்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட உகந்த பழமா? ஆய்வில் தெரியவந்த அறிவியல் உண்மை
அண்ணை, நீங்க கண்ட 2 கறுத்தக்கொழும்பானும் கண்ணால பார்த்து மகிழ்ந்தது மட்டுமே! சாப்பிடவில்லை. இந்த வருடம் கொஞ்சம் கூட காயத்தது, பழமாக முதலே கிளி, அணில், வௌவால் சாப்பிட்டுவிடுவார்கள். அதிஸ்டவசமாக மாம்பழ வியாபாரி தம்பிமார் இருவர் வந்து 100 பழங்களாவது பிஞ்சும் முத்தலும் பெரிதும் சிறிதுமாக பிடுங்கி எமக்கு 20 பழங்கள் தந்தவர். யாரிடமோ முற்பணம் கொடுத்து ஏமாந்த கதையைச் சொல்ல மிகுதிக் காய்களை அம்மா காசு வாங்காது கொடுத்துவிட்டார். 5 - 6 மாங்காய் அழுக, 10 பழத்திற்கு மேல் சாப்பிட்டேன்! ஆனால் முதலிரு நாட்களில் இருந்த சுவை பிந்திப் பழுத்த பழங்களில் இல்லை. நன்றாப் பழுக்காத பழம் தான் எனக்குப் பிடிப்பது. அண்ணை, உடலுழைப்பின்மை தான் பிரதான காரணமாக எனக்குத் தோன்றுகிறது. நன்றி அண்ணை.