Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர் –கருணா அம்மான் Vhg ஜனவரி 18, 2024 மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அநாகரிமாக நடந்துகொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் அணிதிரள்வதன் மூலமே எமது பலத்தினை வெளிப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரியாலயம் இன்று(18-01-2024) மட்டக்களப்பு கல்லடியில் திறந்துவைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், கட்சியின் உபதலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவருமான ஜெய சரவணா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டு கட்சி தலைமையகம் திறக்கப்பட்டதுடன் அதனை தொடர்ந்து கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கட்சி முக்கியஸ்தர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர், எங்களுடைய கட்சி இன்று ஆரம்பித்து ஏழு வருடங்கள் முடிவடைந்து இருக்கின்றது 2017 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 11-ம் தேதி எங்களுடைய கட்சியை நாங்கள் ஆரம்பித்தோம் அன்று அதற்கு பெரிய வரவேற்பை பெற்றிருந்தோம் முதல் முதலாக சுயேட்சையாக போட்டியிட்டு பிரதேச சபை தேர்தலில் 7 வட்டாரங்களை எமது கட்சி கைப்பற்றி இருந்தது அதனை நாங்கள் பாடிய வெற்றியாக பார்க்கின்றோம். இரண்டாவதாக வந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு இன்று 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை இந்த மக்கள் நமக்கு அள்ளி வழங்கியிருந்தார்கள் உண்மையிலேயே அவர்களின் நன்றியை ஒருபோதுமே மறக்கப் போவதில்லை இருப்பினும் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் என்னால் அன்று பாராளுமன்றம் செல்ல முடியாமல் போய்விட்டது அன்று இருந்தால் அம்பாறை மாவட்டத்தில் பாரிய மாற்றங்களை செய்து இருக்கலாம் அதனை அந்த மக்கள் உணர்ந்து கொள்வார்கள். அம்பாறை மாவட்ட மக்கள் எமது கட்சிக்கு பாரிய அத்திவாரம் இட்ட மக்கள் என்பதனை நாங்கள் மறந்து விடக்கூடாது இன்று 72 வருட வரலாற்றிலே முதன் முதலாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடித்தவன் என்று பெருமையை நாங்கள் அம்பாறை மாவட்டத்திலேயே நிருபித்து காட்டினோம் அந்த அளவிற்கு அந்த மக்கள் நமக்கு ஒத்துழைத்தார்கள். பொதுவாக உங்களுக்கு தெரியும் பழமொழி ஒன்று இருக்கின்றது நிறைவாகும் வரை மறைவாக இரு என்று நாங்கள் கடந்த காலங்களில் எம்மை தயார் படுத்துவதற்காக உண்மையிலே மறைவாக இருந்தது உண்மையான விடயம் தற்போது எங்களின் தேவையை மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் அது உங்களுக்கு தெரிந்த விடயம் இன்று அந்த வகையில் மீண்டும் நமது தலைமைச் செயலகத்தை ஆரம்பித்திருக்கின்றோம் இதில் அரசியல் பணிகளை தீவிரமாக விஸ்தரிப்பதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம். கடந்த வரலாற்றிலே எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இருக்கின்றார்கள் அவர்களுடைய செயற்பாடுகள் உங்களுக்கு நன்றாக தெரியும் அனைவரையும் குறிப்பிடவில்லை பாராளுமன்றம் என்பது தனிப்பட்ட குரோதங்களை விவாதிப்பதற்கான களமாக தான் அவர்கள் பாராளுமன்றத்தை பயன்படுத்துகிறார்களே தவிர பாராளுமன்றத்தின் வளங்களை கொண்டு வருவதற்காக அல்லது அங்குள்ள எம்முடைய மக்களின் தேவைகளை பூர்த்தியாவதற்குரிய செயல்பாடுகளை பாராளுமன்றத்தில் ஏற்படுத்தி அந்த வளங்களை கொண்டு வருவதற்காக அவர்கள் முயற்சிப்பதாக இல்லை. மாறாக பார்க்க போனால் எல்லா மாவட்டங்களையும் விட எங்களுடைய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் அநாகரிமான முறையில் பாராளுமன்றத்தில் சண்டையிடுவதும் கூச்சிடுவதும் தனிப்பட்ட விரோதங்களை பாராளுமன்றத்தில் பகிர்ந்து கொள்வது மாத்திரமே இவர்களது வேலையாக இருக்கின்றது இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள். ஆகவே எதிர்காலத்தில் சிறந்த தகுதியான பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும் பாராளுமன்றம் என்பது உங்களுக்கு தெரியும் மிக உயர்ந்த சபை ஒரு நாட்டிலே அந்த சபையின் ஊடாக மாறிய வேலை திட்டங்களை நாங்கள் முன் எடுக்க வேண்டும் அதனை நாங்கள் நிரூபித்து காட்டி இருக்கின்றோம் கடந்த காலங்களில். அவ்வாறான ஒரு நிலையை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கம் அதற்காக நாங்கள் பறந்து பட்ட அடிப்படையிலே வடக்கு கிழக்கு பிரதேசம் மாத்திரம் அல்ல இலங்கையில் இருக்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்குமான எங்களுடைய குரல் ஒலிக்கும் அதில் முக்கியமான ஒரு விடயத்தை இன்று உண்மையிலேயே எங்களுடைய துரதிஷ்டம் என்னவென்றால் கட்சிகள் அனைத்தும் பிரிந்து இருப்பதே உண்மையிலே ஒரு குடையின் கீழ் தமிழ் கட்சிகள் அனைத்தும் அனைத்து இரண்டு வருமாக இருந்தால் ஒரு பெரிய பலத்தை நாங்கள் ஏற்படுத்திக் காட்ட முடியும். ஆகவே எங்களுடைய பலவீனங்களை தான் எதிரிகள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் இன்னும் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு தான் இவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள் ஆகவே தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய காலம் இது பதவி பட்டங்களை தூக்கி எறிந்து விட்டு அனைத்து மக்களும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எங்களுடைய தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் தமிழ் மக்களின் இருப்பை தக்க வைக்க முன் வர வேண்டும் என்பதனை இவ்விடத்தில் நான் அன்பாக வேண்டிக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்களின் ஒத்துழைப்புக்கள் தேவை பலர் எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் ஆகவே வருகின்ற காலங்களில் எங்களுடைய மாவட்ட அமைப்பாளர்கள் இருக்கிறார்கள் அவர்களின் ஊடாக பல தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம். https://www.battinatham.com/2024/01/blog-post_767.html
  2. ஜெனீவாவை திருப்திப்படுத்த இரகசிய திட்டமா? சண்முகம் தவசீலன் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் இன மத நல்லிணக்கம் எனும் பெயரில் குருந்தூர் மலையில் இரகசிய கலந்துரையாடல் இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து குருந்தூர்மலை ஆலயம் சார்ந்தவர்கள் என சிலருக்கும் , பௌத்தமத குருமார்களுக்கும் இடையில் குருந்தூர் மலையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குந்தூர்மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது 2018 ம் ஆண்டு முதல் குந்தூர்மலை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் விகாரை விவகாரம் அப்பகுதி தமிழ் மக்களுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இடையே பாரிய முறுகல் நிலையை உருவாக்கி தொடர்ந்து வருகிறது குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமான முறையில் இராணுவ ஒத்துழைப்புடன் விகாரை அமைக்கும் பணியினை முன்னெடுத்த கல்கமுவ சாந்த போதி தேரர் குறித்த விகாரையின் விகாராதிபதியாக இருந்து குறித்த விடயங்களை முன்னெடுத்தார் இராணுவ ஆதரவுடனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது ஆதரவுடனும் கல்கமுவ சாந்த போதி தேரர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமான விகாரை அமைக்கும் பணியினை தொடரும் நிலையில் முரண்பாடுகள் தொடர்ந்து வருகிறது குறிப்பாக இந்த குந்தூர்மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் தொடர்பில் தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி ரி சரவணராஜா அவர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியை திறந்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிலையில் குறித்த குந்தூர்மலை விவகாரமானது சர்வதேச அளவில் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது இந்நிலையில் குறித்த விவகாரமானது வருகிற மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா அமர்வுகளில் பேசப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் குறித்த விகாரையின் விகாராதிபதியான கல்கமுவ சாந்த போதி தேரர் நீக்கப்பட்டதாகவும் புதிதாக குறித்த விகாரையின் விகாராதிபதியாக சியம்பலகஸ்கல விமலசார தேரர் நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது இந்நிலையில் இனமத நல்லிணக்கத்தினை மேற்கொள்ளவென வடகிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்ட குறித்த சியம்பலகஸ்கல விமலசார தேரர் தலைமையில், சிவசேனை அமைப்பின் வன்னி பிராந்திய இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் உள்ளிட்ட குழுவினர் மற்றும் குந்தூர்மலை ஆலயம் சார்ந்தவர்கள் என சிலர் , பெளத்த மத குருமார்களுக்கிடையில் இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் குறித்த இரகசிய கலந்துரையாடல் இடம் பெற்றிருக்கின்றது. குறித்த கலந்துரையாடல் தொடர்பாக குந்தூர்மலை ஆலயம் சார்ந்தவர்கள் என அழைக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தும் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்காது இரகசியமான முறையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று அவர்களுடன் புகைப்படங்களை எடுத்தது மட்டுமல்லாமல் புகைப்படங்களை வெளியே விடமாட்டோம் இது ஜனாதிபதிக்கு காண்பிக்கவே எனவும் தெரிவித்துள்ளனர் இருப்பினும் இவர்களது சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளிவந்துள்ளது குறித்த விவகாரமானது வருகிற மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா அமர்வுகளில் பேசப்படலாம் என்ற நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது அங்குள்ளவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுக்கிறோம் என்ற பிரச்சாரத்தை ஜெனீவா அமர்வுகளில் முன்னெடுக்கவே என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர் குறித்த சந்திப்பில் இவ்வாறான உள்நோக்கம் ஏதும் இருக்கலாம் என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.என குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜெனீவாவை-திருப்திப்படுத்த-இரகசிய-திட்டமா/175-331775
  3. திருமணமாகாத கில்லாடி ஜோடி சிக்கியது மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே, அவரது பணப்பையில் இருந்த தங்க நகைகள், தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் திருமணமாகாத ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொத்மலை, தவளந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசத்தில் வசிக்கும் திருமணமாகாத தம்பதி (17) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ்.ராஜசிங்க தெரிவித்தார். கொத்மலை, தவலந்தன்ன பகுதியைச் சேர்ந்த செல்லையா சசிகுமார் (வயது: 46) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையைச் சேர்ந்த சுபாஷ் செல்வராணி (வயது: 39) என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மிதியகல தெமோதர பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் வீட்டுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பண்டாரவளை நகருக்கு கடந்த 31ஆம் திகதி வந்துள்ளார். சந்தேகமடைந்த தம்பதிகள் வந்து “அம்மா எங்கே போகிறீர்கள்?” எனக் கேட்டுள்ளனர். என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? எனக் கேட்டு உடனடியாக பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர். சந்தேகநபர்கள் இருவரும், குறித்த பெண் நிதி நெருக்கடியால் அவதிப்படுவதை அடையாளம் கண்டுகொண்டதுடன், பொருளாதார நிலையில் இருந்து மீள குடும்பத்துக்கு தெரிவித்துள்ளனர். அப்பெண்ணுக்கு தைக்கப்பட்ட சில ஆடைகளை கொடுத்துள்ளனர். அதனை விற்பனை செய்துவிட்டு, தங்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துமாறு அலைபேசி இலக்கமொன்றையும் கொடுத்துள்ளனர். தைக்கப்பட்ட ஆடைகளை சிலவற்றை விற்பனை செய்துவிட்டு, சில ஆடைகள் மீதம் இருப்பதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த பெண் தெரிவித்துள்ளார். மறுமுனையில் பதிலளித்த தம்பதியினர், மீதமிருக்கும் ஆடைகளை எடுத்துக்கொண்டு நுவரெலியாவுக்கு வருமாறு கூறியுள்ளனர். குறித்த பெண் தனது மகனுடன் நுவரெலியாவிற்கு வந்ததையடுத்து, சந்தேகமடைந்த தம்பதியினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நுவரெலியா பொது சந்தைக்கு அருகில் வருமாறு கூறியுள்ளனர். அங்கு ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தனர். பயண சோர்வை களைப்பதற்காக, ரோல்ஸ் மற்றும் இனிப்பு பானத்தை கொடுத்துள்ளனர். அவ்விருவரும் அவற்றை வாங்கி பருகியுள்ளனர். அதன்பின்னர் பெண்ணும் அவரது மகனும் சுயநினைவை இழந்தனர், அவர்கள் சுயநினைவு திரும்பியபோது, அவர்கள் நுவரெலியா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதன் பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணிடம் தங்க வளையல், ஒரு ஜோடி காதணி, சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், 5000 ரூபாய் மதிப்புள்ள தொலைபேசி மற்றும் 5000 ரூபாய் பணம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். அவரது மகன் வைத்திருந்த விலையுயர்ந்த அலைபேசி என்பனவும் காணாமல் போயுள்ளன. சந்தேகநபர்களின் அடையாளம் தெரியவில்லை என தாயும் மகனும் கூறியதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற நுவரெலியா பொலிஸார், சுற்றிலும் உள்ள பல கடைகளின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, மிகவும் நுட்பமான முறையில் சந்தேக நபர்களை கைது செய்தனர். இதன்படி, சந்தேகநபர் பன்னில பிரதேசத்தில் இருந்தும், பெண் வட்டவளை பிரதேசத்தில் இருந்தும் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திய போது, சந்தேநபர் மூன்று மாதங்கள் சிறையிலிருந்து சில தினங்களுக்கு முன்னர், வெளிவந்துள்ளார். அதன் பின்னர், மீண்டும் இவ்வாறான சட்டவிரோத கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும், பல இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. கண்டி, யாழ்ப்பாணம், பண்டாரவளை ஜாஎல, குருநாகல் மற்றும் ஹட்டன் ஆகிய பொலிஸ் நிலையங்களில் சந்தேகநபர் மற்றும் சந்தேக நபரான பெண்ணுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இருவரையும் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் (18) ஆஜர்படுத்தியதையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும் 29 ஆம் திகதி வரையிலும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/திருமணமாகாத-கில்லாடி-ஜோடி-சிக்கியது/175-331791
  4. வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ் பல்கலையில் மாநாடு! adminJanuary 19, 2024 வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் yarl it hub மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் FiTEN Yarl 2024 மாநாடு இன்று காலை 09.30 மணி முதல் மாலை 04.00 மணிவரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெறவுள்ளது. தமிழ் பிரதேசத்தில் வளர்ந்து வரும் தொழில் முனைவோரை வலுப்படுத்தல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களை வளர்த்தல் எனும் தொனிப்பொருளில் இம் மாநாடு நடாத்தப்படவுள்ளது. உள்ளூர் உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மற்றும் தமிழ்நாட்டில் சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தல், பல வெற்றிபெற்ற தொழில் வல்லுனர்களின் தொழில் அனுபவ மற்றும் அறிவுப் பகிர்வுகள் என்பவற்றுடன் உள்ளூர் தொழில் முனைவோருக்கும், வெளிநாட்டிலிருந்து வருகைதரும் தொழில் முனைவோருக்கும், இடையில் தொடர்புகளை ஏற்படுத்தல் ஆகியன இம் மாநாட்டின் நோக்கங்களாகும். இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மற்றும் துறைத் தலைவர்களுடன், அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான நட்புறவுச் சந்திப்பு நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/199921/
  5. தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியவரும், விற்றவரும் விடுதலை! adminJanuary 19, 2024 மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண் மற்றும் கேக்கை விற்பனை செய்த பேக்கரியில் கடமையாற்றி வந்த ஆண் உட்பட இருவரையும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய 53 நாட்களின் பின்பு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வியாழக்கிழமை (18.01.24) வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்தார். கடந்த வருடம் நவம்பர் 26ம் திகதி பட்டிப்பளை கொக்கட்டிச்சோலையை சேர்ந்தவரும் காத்தான்குடி காவற்துறைப் பிரிவிலுள்ள நாவற்குடாவில் தற்போது வசித்துவரும் பாலிப்போடி உதயகுமாரி என்ற பெண் சம்பவதினமான 26ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளையிட்டு நகரத்திலுள்ள பேக்கரி ஒன்றில் பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கி அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வே.பிரபாகரன் அண்ணா தலைவர் என பெயரை பொறித்து வாங்கி எடுத்துக் கொண்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்றுள்ள நிலையில் அவரை பின் தொடாந்து சென்ற புலனாய்வு பிரிவினர் காவற்துறையினருடன் இணைந்து அவரை அந்தபகுதி வீதியில் வைத்து கைது செய்தனர். இதனையடுத்து குறித்த கேக்கை விற்பனை செய்த மட்டு நகரிலுள்ள பேக்கரியில் கடமையாற்றிவரும் கொக்கட்டிச்சோலையைச் சோந்த 35 வயதுடைய பரமேஸ்வரன் முனீஸ்வரன் என்பவரை கேக்கில் பிறந்தநாள் மற்றும் பிரபாகரனின் பெயரை பொறித்து கொடுத்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியல் 53 நாட்கள் வைக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை (18.01.24) குறித்த இருவரின் வழக்கை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இவர்களை நீதவான் வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்தார். https://globaltamilnews.net/2024/199916/
  6. இன்னும் இரண்டு சிங்களப் பெயராக்கும் என்று விட்டுவிட்டேன்! கார் 1 கிலோகிராம்290 ரூபாய் அம்புன் 1 கிலோகிராம் 190 ரூபாய்
  7. யாழ்கள உறுப்பினர்கள் அடுத்த தலைவராக யாரை விரும்புகின்றார்கள் என்பதை திரியின் மேலே உள்ள கருத்துக்கணிப்பின் மூலம் தெரிவிக்கலாம்😁
  8. வாட்ஸப்பில் கண்டது….. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சுமந்திரனும் செயலாளராக சிறியதரனும் பொறுப்பேற்று செயற்பட்டால் அதிக பட்சமாக 4-6 MPக்களை வடங்கு- கிழக்கில் பெற்று அந்த கட்சி இலக்கம் 1 தமிழ் அரசியல் கட்சியாக தொடர இயலும். சிறிதரன் தலைவரானால் அந்த கட்சி கஜேந்திகளின் கட்சி போன்று யாழ் தேர்தல் மாவட்டத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டு தேசிய பட்டியல் உட்பட 1-2MPக்களை மட்டுமே பெறும் கட்சியாக சுருங்கி விடும். மட்டகளபபில் சாணக்கியன் தனிப்பட்ட ரீதியான வெற்றியை பெறலாம். இதன் மூலம் இந்த கட்சி தேசிய பட்டியல் உட்பட 4 MPக்களை பெற்றுக்கொள்ளலாம் யோகேஸ்வரன் தலைவரானால் அந்த கட்சி அழிந்து விடும். வடக்கில் சிறிதரனும் கிழக்கில் சாணக்கியனும் தனிப்பட்ட செல்வாக்கில் வெற்றி பெறுவார்கள். அந்த கட்சி தன்னை காப்பாற்றி தேர்தல் அரசியலில் தொடர்ந்து வெற்றியை பெற வேண்டுமானால் தலைவர்- சுமந்திரன் செயலாளர்- சிறிதரன் பொருளாளர்- யோகேஸ்வரன் இளைஞர் அணி தலைவர் - சாணக்கியன் என்று நியமித்துக்கொண்டு பயணிப்பதே சிறந்த ஏற்பாடாக இருக்கும். இந்த ஏற்பாட்டை ஈழதமிழ் அரசியலை தீர்மானிக்கும் யாழ் மேட்டுகுடி +கற்றசமூகம், மன்னார் பவர் சென்றர் ( அமெரிக்கா+இந்தியா) இலங்கை அரசாங்கம், கொழும்பில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திர வட்டாரம் போன்றவை ஏற்றுக்கொள்ளும். அந்த கட்சியும் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்ள இயலும்.
  9. மக்கள், பாமரர்- இன்று December 29, 2023 அறிவியக்கத்தில் செயல்படுவதில் ஓர் அடிப்படையான சிக்கல் உள்ளது. அதை ஒவ்வொரு நாளும் நடைமுறையில் நாம் சந்தித்தாலும் தெளிவாக உணர்ந்திருப்பதில்லை. நேற்றைய அறிவியக்கம் அதன் முழு ஆற்றலுடன் சில கருத்துக்களை விவாதித்து சமூகமனதில் நிறுவுகிறது. இன்றைய சமூகத்தில் சிந்தனையின் அடித்தளமாகவே அவை மாறிவிட்டிருக்கும். ஆனால் இன்றைய அறிவியக்கம் அக்கருத்துக்களின் போதாமையை உணர்ந்து முன்னகரும். அவற்றை வளர்க்கவும், மாற்றியமைக்கவும் முயலும். அப்போது அந்த முன்னகர்வுக்கு முதல் தடை என பெருகி முன்வந்து நிற்பவை சென்றகால அறிவியக்கம் உருவாக்கிய சிந்தனைகளாகவே இருக்கும். ‘அரசியல்சரிநிலை‘கள் என நாம் இன்று சொல்பவை எல்லாம் நேற்று சமூகத்தைச் சீண்டிய, கொந்தளிக்கச் செய்த புதிய சிந்தனைகளாக முன்வைக்கப்பட்டவை. கடும் எதிர்ப்பைச் சந்தித்தவை. மெல்லமெல்ல தங்களை நிறுவிக்கொண்டவை. இன்று அவை பொதுமக்களில் ஓரளவு சிந்திப்பவர்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளன. அவற்றை கடந்து செல்வதே பெரும் மீறல் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களை மீறி அச்சிந்தனைகளைக் கடந்துசென்றே ஆகவேண்டும். ‘மக்கள்’ என்னும் சொல்லின் புனிதமும் அவ்வாறாக ஒரு வகை அரசியல்சரிநிலையாக நிலைகொண்டுவிட்டது. பாமரர்களின் ‘களங்கமற்ற விழுமியங்கள்’ என்பதும் அவ்வாறே. ‘மக்கள்’ என்னும் கருத்துருவம் மானுட சிந்தனையில் பதினேழாம் நூற்றாண்டு முதல் உருவாகி வந்தது ஒரு மகத்தான முன்னகர்வு என்பதில் ஐயமில்லை. நாம் இன்று காணும் அரசியல், சமூகவியல் சூழலை உருவாக்கிய அடிப்படைச் சிந்தனையே அதுதான். ஜனநாயகம், மனிதாபிமானம், மானுட சமத்துவம், சமூகநீதி, தனிமனித உரிமை ஆகிய கொள்கைகள் எல்லாமே அதன் விளைகனிகள்தான். மக்கள் என்றால் என்ன? அவர்களிடம் அதிகாரம் எப்படி நிலைகொள்ள முடியும்? மிகச்சாமானியன் எப்படி அதிகாரத்தை கையாளக்கூடும்? பதினெட்டாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இந்த வினாக்களுக்கு விடையாக முக்கியமான நூல் ஒன்றையேனும் எழுதியிருப்பார்கள்.ஜான் ரஸ்கினின் Unto This Last ரூஸோவின் The Social Contract ஆகியவை அவ்வகையில் மகத்தான மானுட ஆவணங்களாகக் கருதப்படும் நூல்கள். அந்த அறிவியக்கம் கீழ்க்கண்ட கருத்துக்களை நிலைநாட்டியது. மக்கள் என்னும் கூட்டான சக்தியின் உள்ளக்கிடக்கையை ஒட்டியே அரசுகள் அமையவேண்டும், சட்டங்கள் அமையவேண்டும், ஒழுக்கங்களும் அறங்களும் அமையவேண்டும். மக்களின் முடிவே அறுதியானது. அந்த எண்ணம் சென்ற இரு நூற்றாண்டுகளில் வலுத்தபடியே வந்தது. ஓர் அரசியலாளர் மக்களின் உள்ளக்கிடக்கையை அறியும் ஆற்றல் கொண்டவராக இருக்கவேண்டும்.ஓர் ஆட்சியாளர் மக்களின் உள்ளக்கிடக்கையை நிறைவேற்றுபவராக திகழவேண்டும். ஒரு மக்கள்தலைவர் என்பவர் மக்களின் உள்ளக்கிடக்கையை சரியாக பிரதிநிதித்துவம் செய்பவராக அமையவேண்டும். இன்னொரு பக்கம், ஒரு தத்துவசிந்தனையாளன் மக்களின் கூட்டான உள்ளக்கிடக்கையை நோக்கிப் பேசி அதை கட்டமைப்பபவனாகத் திகழவேண்டும் என்று சொல்லப்பட்டது. ஒரு சமூகசீர்திருத்தவாதி மக்களின் கூட்டான உள்ளக்கிடக்கையை ஊடுருவி அதை மாற்றியமைப்பவனாக வேண்டும். எல்லா சிந்தனைகளும் மக்களை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன. எல்லா கலைகளும் மக்களை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் அறிபவர்கள், எல்லாவற்றையும் மதிப்பிடுபவர்கள், எல்லாவற்றையும் ஏற்பவர்கள் அல்லது மறுப்பவர்கள் மக்களே என்று கூறப்பட்டது. ஜனநாயகம் என்னும் நவீன அரசுவடிவம் நிலைகொள்ள மக்கள் என்னும் இந்தக் கருத்துருவம் மிகப்பெரிய பங்கு வகித்தது. ஆட்சியாளர்களின் கோணத்தில் வரலாற்றையும் தேசத்தையும் நிலத்தையும் சமூகத்தையும் பண்பாட்டையும் எல்லாம் மக்கள்த்திரளாக பார்க்க அது வழியமைத்தது. தனிமனிதர்களின் கோணத்தில் ஒவ்வொருவரும் தங்களை மக்கள் என்ற பேருருவ அமைப்பின் ஒரு துளியாக உணர வழியமைத்தது. தாங்கள் எவ்வளவு சாமானியராயினும் மக்கள் என்ற அமைப்பின் ஒரு பகுதி என்னும் நிலையில் உரிமைகளைக் கோரவும், போராடவும் ஆற்றல்கொண்டவர்கள் என்ற எண்ணத்தை அது ஒவ்வொருவரிடமும் உருவாக்கியது. இந்த இருமுனை நம்பிக்கையே ஜனநாயகத்தின் ஆதாரம். உலகமெங்கும் ஜனநாயக இயக்கங்கள் உருவாயின. ஜனநாயக அரசுகள் உருவாயின. அவை மக்கள் என்னும் கருத்துருவை வளர்த்துக்கொண்டே சென்றன. முன்பு தமிழில் நாம் இன்று சொல்லும் பொருளில் மக்கள் என்னும் சொல்லே இல்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். மக்கள் என்னும் சொல் மைந்தர்கள் என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்ட ஒன்று. குறிப்பிட்ட ஒரு திரளைச் சொல்ல மாக்கள் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது. சென்ற நூறாண்டுகளில் மக்கள் என்னும் அச்சொல் எப்படியெல்லாம் திரண்டு பொருள்கொண்டிருக்கிறது என்று பாருங்கள். ‘பெருமக்கள்’ என்னும் சொல் முன்பு சான்றோரை குறிக்க பயன்பட்டது. இன்று அது அனைத்து மக்களையும் குறிக்கிறது. அரசியல்கட்சிகளின் பெயர்களில் மக்கள் உள்ளது. வணிகநிறுவனங்களின் பெயர்களில் மக்கள் உள்ளது. மக்கள் திலகம், மக்கள் செல்வன், மக்கள் நீதி மையம், மக்கள் டிவி… எல்லா அரசியல்பேருரைகளும் எல்லா விளம்பரங்களும் மக்கள் மக்கள் என்றே பேசுகின்றன. மக்களால் ஏற்கப்பட்டுவிட்டால் அதன்பின் விவாதத்திற்கே இடமில்லை. அது உண்மை, அது சரியானது, அது தேவையானது, அது மாறாதது. ‘மக்கள் ஏற்றுக்கொண்டாயிற்று, அதற்குமேல் என்ன?’ என்ற பேச்சு நம் காதில் விழாத நாளே இல்லை. ஓர் ஊழல் அரசியல்வாதி தேர்தலில் வென்றுவிட்டால் உடனே அந்த வரி வந்து நிற்கிறது, ‘மக்களே சொல்லிவிட்டார்கள்’ ஜனநாயகம் உருவானபோது கூடவே உருவான வேறு இரு அமைப்புகள் ஜனநாயகத்தில் மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்தின. ஒன்று, பொதுக்கல்வி. இரண்டு, பொது ஊடகம். இரண்டுமே நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டு மிகப்பெரிய அளவில் வளர்ந்தன. பள்ளிக்கல்வி அல்லது பொதுக்கல்வி அமைப்பு அனைவருக்கும் சமானமான கல்வியை அளித்து சமானமான மனநிலைகள் கொண்ட மக்களை உருவாக்கியது. இது மக்கள் என்னும் கருத்துருவை வலிமைப்படுத்திய அம்சம். ஜனநாயகத்தின் ஆற்றலின் அடிப்படையும்கூட. நவீனக்கல்வி வழியாக உருவான ‘எழுத்தறிந்த’ சமூகம் நவீன ஊடகங்களை உருவாக்கியது. அச்சு ஊடகம் முதலில். பின்னர் வானொலி, சினிமா, தொலைக்காட்சி போன்ற பிற மின்னூடகங்கள். தொடக்கத்தில் மிகச்சில காலம் மட்டுமே ஊடகங்கள் செய்திகளை பரப்பவேண்டும் என்னும் நோக்கம் கொண்டிருந்தன. அறிஞர்களும் சமூகசீர்திருத்தவாதிகளும் அரசியலாளர்களும் அவற்றை தொடங்கி நடத்தினர். மிக விரைவிலேயே செய்தி என்பது ஒரு விற்பனைப்பொருள் என ஆயிற்று. ஊடகம் என்பது ஒரு பெருந்தொழிலாக மாறியது. ஊடகம் பெருந்தொழிலாக ஆனதுமே ‘விளம்பரம்’ என்னும் புதிய ஒரு நிகழ்வு அறிமுகமாகியது. அது பொருளியலின் முக்கியமான கூறாக மாறியது. மக்களின் கருத்தை திட்டமிட்டு உருவாக்கமுடியும் என்பது கண்டறியப்பட்டது. மக்களை ஊடகங்கள் வழியாக திரட்டமுடியும், நுகர்வோராகவும் தொண்டர்களாகவும் கட்டமைக்கமுடியும் என்று நிறுவப்பட்டது. மக்கள் என்னும் சொல்லை கற்பனாவாத நெகிழ்வுடன் சொன்ன ஜனநாயக முன்னோடிகள் எவருக்குமே தெரியாத ஒரு சரித்திர முன்னகர்வு இது. இன்றைய மக்கள் என்பவர்கள் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட திரள். உள்ளும், புறமும். ஜனநாயக அரசுகள் உருவாகி ஒரு தலைமுறைக்குள்ளாகவே அவற்றின் தொடக்க காலகட்டத்தில் இருந்த இலட்சியவாதம் இல்லாமலாகியது. அவையும் அதிகார அரசியலாடல் கொண்டவையாக மாறின. மன்னராட்சிக்காலத்தில் அதிகாரம் போர்கள் வழியாக வந்தது. இனப்போர்கள், தேசியப்போர்கள், மதப்போர்கள். ஜனநாயகத்தில் வென்றெடுக்கப்படவேண்டியவர்கள் மக்கள் என ஆகியது. ஆகவே எல்லா போர்களும் மக்களை வெல்வதற்கானவை ஆக மாறின. போர்கள் ஊடகங்களில் நிகழலாயின. மக்களைக் கவர்பவர்களுக்கு அதிகாரம், செல்வம் எல்லாமே அமைந்தன. புகழ் என்பது நேரடியாகவே பணமாகவும் அதிகாரமாகவும் மாறியது இன்றைய ஜனநாயக யுகத்தில்தான். எண்ணிப்பாருங்கள் எத்தனை மகத்தான கவிஞனாக இருந்தாலும் கம்பன் ஆட்சியாளனோ செல்வந்தனோ ஆகமுடியாது. மாபெரும் கலைஞர்களாக இருந்தாலும் ஆட்சியாளர்களின் கருணைக்கொடைகளை நம்பியே மன்னராட்சிக்காலத்தில் வாழமுடியும். நவீன ஊடகம் உருவானதுமே புகழ்பெற்ற கலைஞர்கள் மன்னர்களுக்குரிய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர். தியாகராஜ பாகவதர் தங்கத்தட்டில் உணவு உண்டார் என்பதும் அதனால் சீண்டப்பட்ட அக்கால உயர்குடிகளின் சீற்றமே அவருடைய அழிவுக்கு வழிவகுத்தது என்பதும் வரலாறு. அவ்வாறாக மக்கள் என்பது ஒருவகை நவீன தெய்வமாக ஆகியது. அதை வழிபடவேண்டும், கேள்வி கேட்காமல் பணியவேண்டும், அதற்கு படையலிடவேண்டும், அதை புகழ்ந்து துதித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதன் அருள்பெற்றவர்கள் அனைத்தையும் அடைவார்கள். பணம் ,புகழ் ,அதிகாரம் எல்லாமே அதன் கடைக்கண் பட்டால் வந்துசேரும். அது அனைத்துக் கல்யாணகுணங்களும் கொண்டது. அதன்மேல் சிறு விமர்சனம் வைத்தால்கூட அவன் அழிக்கப்படவேண்டிய எதிரி. மக்கள் என்னும் கருத்துருவை கடவுளின் இடத்துக்கு கொண்டுசென்றவர்கள் இடதுசாரிகள். அவர்கள் கடவுளை மறுத்து அங்கே மக்கள் என்னும் கருத்துருவை வைத்தனர். லெனின் முதலான இடதுசாரிகளின் எழுத்துக்களை வாசித்தால் முன்பு மதவாதிகள் கடவுளின் பெயரை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்களோ அப்படியே மக்கள் என்னும் பெயரை இவர்கள் பயன்படுத்துவதைக் காணலாம். இவர்களைப் பொறுத்தவரை அனைத்து அதிகாரமும் மக்களுக்குரியது. அனைத்துச் செல்வங்களும் மக்களுக்குரியவை. அனைத்து அறங்களும் மக்களால் முடிவெடுக்கப்படுபவை. மக்களின் எதிரிகள் அழித்தொழிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் மக்கள் என்பது கண்கூடான ஒன்று அல்ல, அது ஒரு கருத்துருவம். ஆகவே மக்களின்பொருட்டு மக்களின் பிரதிநிதிகளாகிய ‘நாங்கள்’ எல்லாவற்றையும் செய்வோம். நாங்கள் செய்பவை எல்லாம் உண்மையில் மக்களால் மக்களுக்காகச் செய்யப்படுபவைதான். எங்களை எதிர்ப்பவர்கள் மக்களை எதிர்க்கிறார்கள். அவர்களை மக்களின்பொருட்டு நாங்கள் அழிக்கிறோம். இன்றும் அதைத்தான் உலகமெங்கும் இடதுசாரி சர்வாதிகாரிகள் எல்லாமே சொல்கிறார்கள். இந்த மக்கள் என்னும் கருத்துரு அதன் வரலாற்றுப் பாத்திரத்தை வகித்துவிட்டு, அதன் நன்மைகளை எல்லாம் அளித்துவிட்டு, அதன் தீமைகளை வெளிக்காட்டும் காலகட்டம் வந்துவிட்டது என்று ஜனநாயக யுகம் உருவாகும் தொடக்ககாலத்திலேயே சிந்தனையாளர்கள் சொன்னார்கள் இயல்பாக திரண்டு உருவான ஒரு திரளை மக்கள் என உருவகித்தனர் முன்னோடியான ஜனநாயகச் சிந்தனையாளர்கள். நவீன அரசியலில் அந்த மக்கள்த்திரள் ஊடகவல்லமையால், ஆதிக்க நோக்குடன் செயற்கையாக கட்டமைக்கப்பட முடியும் என்னும் நிலை உருவானது. மக்களிடமிருந்து அதிகாரத்தை பெறுவதற்கு பதிலாக மக்களையே அதிகாரத்திற்கு ஏற்ப வடிவமைக்க முடியும் என நிரூபிக்கப்பட்டது. மக்கள் என்னும் கருத்துருவின் எதிர்மறைக்கூறுகளை முதன்மையாக வெளிக்காட்டியது ஃபாஸிசமும் நாஸிஸமும்தான். இனம், மொழி, மதம் போன்ற அடையாளங்களைக் கொண்டு மக்களை மிக எளிதாகத் திரட்டமுடியும் என அவை காட்டின. மிகப்பெரிய அழிவுச்சக்தியாக அந்த மக்கள் அதிகாரத்தை மாற்றமுடியும் என்று நிரூபித்தன. வரலாற்றில் மன்னராட்சியும், மதஆட்சியும் நிகழ்த்திய அழிவை விட அதிகமான பேரழிவை முஸோலினி, ஹிட்லர், ஸ்டாலின், போல்பாட் உள்ளிட்ட நவீன சர்வாதிகாரிகள் உருவாக்கிய மக்கள்அதிகாரம் நிகழ்த்திக்காட்டியது. அவர்களெல்லாம் மக்களின் ஏற்பு வழியாக அதிகாரத்தை அடைந்தவர்கள்தான். இந்த விவாதத்தில் மிகமுக்கியமான நூல், நான் முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து மேற்கோள் காட்டிவரும் நூல், வில்ஹெல்ம் ரீஹ் எழுதிய The Mass Psychology of Fascism. ஒரு தனிமனிதனின் சராசரி அறிவுத்தரம் அவனைப்போன்றவர்கள் ஒன்றாகி ஒரு திரளாக ஆகும்போது மிகமிகக் குறைகிறது என அந்நூல் வாதிடுகிறது. அதாவது நூறு புத்திசாலிகள் ஒரு கூட்டமாக ஆனால் முட்டாள்தனமான ஒரு கும்பல்தான் உருவாகும். அதிலுள்ள ஒவ்வொரு புத்திசாலியும் கும்பலாக செயல்படும்போது முட்டாளாகவே இருப்பான். பெருந்திரள் என்பது உணர்ச்சிகளால் ஆனது என்றார் ரீஹ். எதிர்மறை உணர்ச்சிகளே மேலும் வலுவானவை.எதிரிகள் மீதான வெறுப்பும் அச்சமும்தான் மக்களை ஒருங்கிணையச் செய்கிறது. ஒரு எதிரியை சுட்டிக்காட்டி, அதன் மேல் வெறுப்பை உருவாக்கி பிரச்சாரம் செய்யும் ஒருவர் மிக எளிதாக மக்களின்மேல் முற்றதிகாரத்தை அடையமுடியும். ஹிட்லரும் முஸோலினியும் அழிந்தாலும் இன்று உலகமெங்கும் அரசியல்வாதிகளின் அரசியல்நடவடிக்கை என்பதே எதிரிகளை சுட்டிக்காட்டி வெறுப்பை உருவாக்கி அதிகாரத்தை வெல்வதாகவே உள்ளது. சிந்தனைகள் பெருந்திரளைச் சென்றடைவது மிக அரிது. அடையாளங்களும், குறியீடுகளும், ஆசாரங்களும், உணர்ச்சிக் கூச்சல்களுமே பெருந்திரளைச் சென்றடைகின்றன. தர்க்கபூர்வமாக நிறுவப்படுவனவற்றை விட திரும்பத் திரும்பச் சொல்லப்படுபவையே மக்களால் ஏற்கப்படுகின்றன. மக்கள் அறிவாளிகளை விட தங்களைப்போன்ற அறிவுத்தரம் கொண்ட ஒருவரையே நம்பி ஏற்று கொண்டாடுகிறார்கள். திரள் பெரிதாகும்தோறும் அவர்கள் ஏற்றுக்கொள்பவர்களின் அறிவுத்திறன் குறைகிறது. இந்தச் சிந்தனைகள் முன்னர் ஜனநாயகத்தின் முன்னோடிச் சிந்தனையாளர்கள் மக்கள் என்னும் கருத்துரு பற்றி என்னென்ன சொன்னார்களோ அவற்றுக்கு நேர் எதிரானவை என்பதைக் காணலாம். வில்ஹெல்ம் ரீஹின் நூல் வெளிவந்து நூறாண்டுகளாகப்போகிறது. இன்றைய வணிக உலகின் விளம்பரக்கொள்கைகள் அனைத்துமே வில்ஹெல்ம் ரீஹ் கண்டுசொன்ன அடிப்படைகளை ஒட்டியே வடிவமைக்கப்படுகின்றன என்பது கண்கூடு. மக்களின் சிந்தனைகளை வடிவமைப்பவை கோடிக்கணக்கான ரூபாய் செலவில் திட்டமிட்டு செய்யப்படும் பிரச்சாரங்கள்தானே ஒழிய முன்னோடிச் சிந்தனைகள் அல்ல. மக்களை பிரச்சாரம் வழியாக தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும்படி செய்யமுடியும் என்பதற்கு வரலாறெங்கணும் உதாரணங்கள் உள்ளன. அந்தப் பிரச்சாரங்கள் மூன்று நிலைகள் கொண்டவை. ஒன்று, விரிவான களஆய்வு வழியாக மக்களின் மனநிலையும் தேவைகளும் கண்டடையப்படுகின்றன. இரண்டாவதாக, நிபுணர்களால் மக்களிடம் கொண்டுசெல்லப்படவேண்டிய கருத்துக்களும் அவற்றை கொண்டுசெல்லும் வழிமுறைகளும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. மூன்று மிகப்பெரிய பொருட்செலவில் அக்கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. மக்கள் சிந்தனை செய்வதற்குள்ளாகவே அக்கருத்துக்கள் மக்களின் மனதுக்குள் ஆழமாக நிறுவப்படுகின்றன. கட்சியரசியல், நுகர்வு, கேளிக்கை ஆகிய மூன்று தளங்களில் இன்றைய மக்கள் இடைவிடாமல் பிரச்சாரத்திற்கு இரையாகிறார்கள். சிந்திக்கவே விடாமல் அவர்கள் முற்றுகையிடப்படுகிறார்கள். அவர்களின் தெரிவுகள், ரசனைகள் எல்லாமே அரசியல்கட்சிகள், வணிக விளம்பரங்கள், கேளிக்கையூடகங்கள் ஆகிய மூன்று மாபெரும் பிரச்சார அமைப்புகளால் கட்டமைக்கப்படுகின்றன. உங்களைச் சூழ்ந்திருப்பவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கவனியுங்கள். மேலே சொன்ன மூன்றை மட்டும்தான். வேறெதையும் அவர்கள் கவனிக்க மாட்டார்கள், கவனிக்க அவர்களால் இயலாது. ஒரு சொல்கூட உள்ளே செல்ல வழி கிடையாது. அவர்கள் ஒருவகை இயந்திரங்கள்போல உள்ளிருக்கும் மென்பொருளில் பொறிக்கப்பட்டுள்ள ஆணைக்குக் கட்டுப்பட்டு இயங்குபவர்கள். இன்றைய சூழலில் மக்கள் என்னும் சொல்லுக்கு என்னதான் பொருள்? மக்கள் என்ற சொல்மீது ஏற்றப்பட்டுள்ள பழைய நெகிழ்வுகள், புனிதங்கள் ஆகியவற்றுக்கு என்னதான் மதிப்பு? (மேலும்) https://www.jeyamohan.in/195304/
  10. தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலும் தமிழர் அரசியலின் எதிர்காலப் போக்கும் January 14, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — தென்னிலங்கையில் அரசியல் கட்சிகள் அனேகமாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலுக்கு தங்களைத் தயார்படுத்துவதில் இறங்கியிருக்கும் நிலையில் தமிழர் அரசியலில் ஒரு கட்சியின் தலைவர் தெரிவு முன்னென்றும் இல்லாத கவனத்துக் குரியதாகியிருக்கிறது. திருகோணமலையில் இம்மாத இறுதியில் இலங்கை தமிழரசு கட்சியின் மகாநாட்டுக்கு முன்னதாக அடுத்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) நடைபெறவிருக்கும் தலைவர் தேர்தலே அதுவாகும். தமிழரசு கட்சியின் 75 வருடகால வரலாற்றில் இதுவரையில் ஏகமனதாகவே தலைவர் தெரிவு இடம்பெற்றுவந்திருக்கிறது. அதன் தாபகத் தலைவர் தந்தை செல்வா விரும்பியிருந்தால் தனது ஆயுட்காலம் வரைக்கும் கட்சியின் தலைவராக பதவி வகித்திருக்கமுடியும். ஆனால், அவர் அரசியல் கண்ணியத்துடன் ஒரு தடவை மாத்திரம் தலைவராக இருந்துவிட்டு வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்த அரசியல்வாதிகள் மாறி மாறி கட்சியின் தலைவர்களாகவும் செயலாளர்களாகவும் வரக்கூடியதாக ஒரு ஏற்பாட்டை வகுத்தார். வடக்கைச் சேர்ந்தவர் தலைவராக தெரிவானால் கிழக்கைச் சேர்ந்தவர் பொதுச் செயலாளராக வருவார். கிழக்கைச் சேரந்தவர் தலைவராகும்போது வடக்கைச் சேர்ந்தவர் பொதுச் செயலாளராவார். இந்த தெரிவுகள் எப்போதுமே பொதுச்சபையில் கருத்தொருமிப்பின் அடிப்படையில் இடம்பெறுவதை தமிழரசு கட்சி பாரம்பரியமாகப் பேணி வந்திருக்கிறது. ஒரு தடவை மாத்திரம் அதாவது 1973 ஆம் ஆண்டில் முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கமும் அன்றைய மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரையும் தலைவர்களாக வருவதற்கு போட்டி போடுகின்ற ஒரு நிலை தோன்றியபோது தந்தை செல்வா இராசதுரையை விட்டுக்கொடுக்க இணங்கவைத்ததாக கூறப்பட்டது. அந்த கட்டத்தில் கட்சியின் தலைவராக அமிர்தலிங்கம் வருவதையே தந்தை செல்வா விருப்பியதாக நம்பப்பட்டபோதிலும், இராசதுரைக்கு ஒரு வாய்ப்பைக் கொடுப்பதற்கு விரும்பியிருந்தாலும் கூட விட்டுக்கொடுக்குமாறு அமிர்தலிங்கத்தை இணங்கவைக்க அவரால் இயலுமாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே. 1970 களில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி உருவாக்கப்பட்ட பிறகு 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம்,1977 ஜூலை பொதுத்தேர்தல், 1983 கறுப்பு ஜூலை, ஆயுதப்போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து வந்த கொந்தளிப்பான சூழ்நிலைகளில் தமிழரசு கட்சி பற்றி எவரும் பேசவில்லை. உள்நாட்டுப் போரின் மத்தியிலான கணிசமான காலகட்டத்திலும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியே முக்கியத்துவம் குறைந்துபோன நிலையிலும் கூட தமிழரின் மிதவாத அரசியல் முகமாக தொடர்ந்து விளங்கியது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்வேறு தமிழ் கட்சிகளை மீண்டும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முதன் முதலாக எதிர்நோக்கிய 2001 டிசம்பர் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. பிறகு கூட்டணியின் தற்போதைய தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்கம் ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட வேறுபாடுகளை அடுத்து உதயசூரியன் சின்னம் தொடர்பில் மூண்ட சர்ச்சை காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசு கட்சியின் வீடு சின்னத்தில் 2004 ஏப்ரில் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டியேற்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த சகல பொதுத் தேர்தல்களையும் கூட்டமைப்பு வீடு சின்னத்திலேயே சந்தித்தது. தமிழரசு கட்சியே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் பழமையானதாகவும் வடக்கிலும் கிழக்கிலும் ஆதரவைக் கொண்ட பெரிய தமிழ்க் கட்சியாகவும் இருந்த காரணத்தாலும் தொடர்ச்சியாக தேர்தல்களில் கூட்டமைப்பு வீடு சின்னத்தில் போட்டியிட்டு வந்ததாலும் அந்த கட்சிக்கு மீண்டும் ஒரு தன்முனைப்பான வகிபாகம் கிடைக்கக்கூடியதாக இருந்தது. கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் குறிப்பாக ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக அரசியலுக்கு வந்த இயக்கங்களின் தலைவர்கள் தமிழரசு கட்சி ஆதிக்கம் செலுத்தும் போக்குடன் நடந்துகொள்வதாக அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். கூட்டமைப்பை தனியான சின்னத்தின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவில் பதிவுசெய்யவேண்டும் என்று அவர்கள் இடையறாது விடுத்துவந்த வேண்டுகோளை தமிழரசு தலைவர் இரா. சம்பந்தன் (அவரே கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோதிலும் கூட) ஒருபோதும் கருத்தில் எடுக்கவில்லை. அதனுடன் சேர்த்து வேறு முரண்பாடுகளும் நாளடைவில் கூட்டமைப்பில் விரிசலை ஏற்படுத்தின. தங்களுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடாவிட்டால் ஏனைய கட்சிகளினால் ஆசனங்களைப் பெறமுடியாது என்ற எண்ணத்தை தமிழரசு தலைவர்கள் வளர்த்துக் கொண்டார்கள் என்றுதான் கூறவேண்டும். கடந்த வருடம் முற்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல்களில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு முடிவுகள் வெளியான பிறகு கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வடக்கு, கிழக்கில் உள்ளுராட்சி சபைகளை அமைப்பதற்கு கூட்டுச் சேரலாம் என்று ஒரு யோசனையையும் சில தமிழரசு தலைவர்கள் முன்வைத்தனர். மற்றைய அங்கத்துவக் கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனியான கூட்டணியாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன. தமிழ் மக்கள் மத்தியில் தங்களுக்கு இருக்கக்கூடிய செல்வாக்கை அறிந்துகொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அந்த உள்ளூராட்சி தேர்தல்களை அந்த கட்சிகள் மாத்திரமல்ல தமிழரசும் கூட எதிர்பார்த்தது. ஆனால் தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதால் அதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. இன்று தமிழ் அரசியல் சமுதாயம் சிதறிக்கிடக்கிறது. பல கட்சிகள். பல தலைவர்கள். தங்களுக்கு பின்னால் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. தமிழரசு கட்சியிலும் ஐக்கியம், கட்டுக்கோப்பு என்று எதுவும் இருப்பதாக கூறமுடியாது. அதன் முக்கியஸ்தர்கள் தங்களுக்கென்று உருவாக்கிக்கொண்ட வெவ்வேறு கூடாரங்களின் ஒரு முகாமாகவே அது விளங்குகிறது. இவ்வாறான ஒரு பின்புலத்திலேயே தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தல் பற்றிய இன்றைய பரபரப்பை நோக்கவேண்டியிருக்கிறது. சம்பந்தன் அவர்களை அடுத்து 2014 ஆம் ஆண்டில் தமிழரசு கட்சியின் தலைவராக ஏகமனதாக தெரிவான மூத்த அரசியல்வாதி மாவை சேனாதிராஜா கடந்த பத்து வருடங்களாக அந்த பதவியில் இருந்துவருகிறார். அவரின் தலைமையின் கீழ் கட்சியின் மகாநாடு நீண்டகாலமாகக் கூட்டப்படவில்லை. அவரின் இடத்துக்கு ஒருவரை கருத்தொருமிப்பின் அடிப்படையில் தெரிவு செய்யமுடியாத காரணத்தினாலேயே மகாநாட்டுக்கு முன்னதாக அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழரசு கட்சியின் வரலாற்றில் இதுவே தலைவர் பதவிக்கான முதன் முதலான தேர்தல். அதில் பொதுச்சபையின் 275 உறுப்பினர்களே வாக்காளர்கள். பாராளுமன்ற உறுப்பினர்களான மதியாபரணம் ஆபிரஹாம் சுமந்திரனும் சிவஞானம் சிறீதரனும் சீனித்தம்பி யோகேஸ்வரனும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களில் சுமந்திரனும் சிறீதரனும் ஒரே காலத்தில் பாராளுமன்றப் பிரவேசம் செய்தவர்கள். ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் 2010 ஏப்ரில் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் வந்து பிறகு 2015 ஆகஸ்ட், 2020 ஆகஸ்ட் பொதுத் தேர்தல்களில் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். கடந்த 14 வருடங்களாக அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபரான சிறீதரன் 2010, 2015, 2020 பொதுத் தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட்டு தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு தெரிவானார். அவருக்கும் 14 வருட பாராளுமன்ற அனுபவம். யோகேஸ்வரன் 2010, 2015 பொதுத்தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகி பத்து வருடங்கள் உறுப்பினராக இருந்தார். தமிழரசு கட்சியின் பாரம்பரியத்தின் பிரகாரம் ஏகமனதாக தலைவரை தெரிவு செய்வதற்கு இந்த மூவருக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாவிட்டால் கட்சியின் வேறு ஒரு மூத்த முக்கியஸ்தரை தலைவராக ஏகமனதாக தெரிவுசெய்ய முயற்சிப்பதே கட்சியின் நலன்களுக்கு உகந்தது என்ற யோசனை சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டது. சுமந்திரன் மூன்று வாரகால வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழரசு கட்சியின் செயற்குழுவின் கூட்டம் கடந்த வாரம் சம்பந்தன் அவர்களின் கொழும்பு இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்துக்கு முதல் நாளே நாடு திரும்பினார். தேர்தலில் வெற்றி பெறுபவருடன் மற்றவர் கட்சியின் நலன்களைக் கருத்திற்கொண்டு ஒத்துழைத்துச் செயற்பட உறுதி பூண்டிருப்பதாக சுமந்திரனும் சிறீதரனும் முன்கூட்டியே அறிவித்திருந்தார்கள். கட்சியைப் பிளவுபடுத்தக்கூடிய எந்த நடவடிக்கையிலும் இறங்கப்போவதில்லை என்று அவர்கள் கூறினார்கள். கட்சி உறுப்பினர்களின் சில கூட்டங்களில் ஏற்கெனவே உரையாற்றிய சுமந்திரன் கிழக்கில் காரைதீவில் கூட்டமொன்றில் வைத்து தனக்கு இவ்வருடம் 60 வயதாகிறது என்றும் 65 வயதானதும் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடப் போவதாகவும் கூறினார். அதேவேளை கிழக்கில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் தனக்கு ஆதரவுதேடச் சென்ற சீறீதரன் ஆங்கில அறிவும் சட்ட அறிவும் மாத்திரம் தலைவராகுவதற்கு போதுமான தகுதிகள் அல்ல, அந்த இரு துறைகளிலும் புலமை இல்லாத பலர் சிறந்த அரசியல் தலைவர்களாக திகழ்ந்து மக்களுக்கு பெருஞ்சேவை செய்ததை வரலாற்றில் கண்டிருக்கிறோம் என்று செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறினார். காமராஜர், கருணாநிதி,எம்.ஜி.ஆர். பிரேமதாச என்று உதாரணங்களையும் அடுக்கினார். ஆங்கில அறிவும் சட்ட அறிவும் கொண்ட சேர்.பொன் இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோரின் காலத்தில் தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லையே என்றும் அவர் கூறினார். அதற்கு முன்னதாக, யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு பேட்டியொன்றை அளித்த வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் சுமந்திரனையும் விட தமிழரசு கட்சியின் தலைவராகுவதற்கு சிறீதரன் தகுதி வாய்ந்தவர் என்றும் அவருக்கு ஆங்கில அறிவு குறைவாக இருந்தாலும் ஆற்றல்வாய்ந்த மொழி பெயர்ப்பாளர்களை வைத்துக்கொண்டு சிறப்பாக செயற்பட முடியும் என்றும் கூறினார். சுமந்திரன் சட்டக்கல்லூரியில் நீதியரசரின் மாணவன். தனது மாணவன் தமிழரசின் தலைவராக வருவதை தான் விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவே அவர் காட்டிக்கொண்டார். அதுபோக, உண்மையில் சிறீதரன் ஆங்கில, சட்ட அறிவு குறித்து அவ்வாறு கருத்தை வெளியிட்டிருக்கவேண்டிய தேவையில்லை. அவருக்கு ஆங்கில அறிவு குறைவு என்பதால் தமிழரசு கட்சியின் தலைவராக வரமுடியாது என்று யாரும் பகிரங்கமாக கூறியதில்லை. அவர் விரும்பினால் இப்போது கூட சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு எந்த தடையும் கிடையாது. இது இவ்வாறிருக்க, நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்றம் வந்த சம்பந்தன் அவர்களை சிறீதரன் சந்தித்துப் பேசினார். திருகோணமலை தமிழரசு கட்சிக்கிளை உறுப்பினர்கள் தெரிவில் தனது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய சம்பந்தன் அந்த குறைபாடு சீர்செய்யப் படும்வரை கட்சியின் மகாநாட்டை ஒத்தி வைப்பதற்கு முயற்சிக்கிறார் என்ற ஒரு சந்தேகம் நிலவிய பின்னணியில் அவர் மகாநாடு திட்டமிட்டபடி நடைபெறவேண்டும் என்றும் தலைவர் தெரிவில் கட்சியின் பாரம்பரியம் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் சிறிதரனிடம் கூறினார். பொதுச்சபையில் கருத்தொருமிப்புடன் தலைவர் தெரிவாகக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் அரசியல் வலிமை சம்பந்தனிடம் தற்போது இல்லை. மறுநாள் புதன்கிழமை அவரின் வாசஸ்தலத்தில் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் ஏகமனதாக தலைவரைத் தெரிவு செய்வதற்கு மூன்று வேட்பாளர்களையும் இணங்க வைக்க முடியவில்லை. இறுதியில் சுமந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மூவரும் கலந்துபேசி ஒரு முடிவுக்கு வருவதற்கு ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், மூவரும் மறுநாள் பாராளுமன்றத்துக்கு அண்மையாக மாதிவெலவில் சிறீதரனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தபோதிலும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை. அதனால் தலைவரைத் தெரிவுசெய்வதற்கு தேர்தல் நிச்சயம் என்றாகிவிட்டது. சிறீதரனை ஆதரிக்கப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த யோகேஸ்வரன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப் போவதில்லை என்றும் பொதுச்சபையில் வைத்து தனது ஆதரவாளர்களிடம் சிறீதரனுக்கு வாக்களிக்குமாறு கேட்கப்போவதாகவும் யோகேஸ்வரன் கூறியதாக இந்த கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. எதிர்காலப் போக்கு : இந்த இருவரில் எவர் தமிழரசு கட்சியின் தலைவராக வந்தாலும், தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் தமிழர் அரசியலை வழிநடத்தும் கூட்டுப் பொறுப்புக்கு எவ்வாறு பங்களிப்பை வழங்கப்போகிறார்கள் என்பதே முக்கியமான கேள்வி. தமிழர் அரசியலின் செல்நெறியைத் தீர்மானிப்பதில் தமிழரசு கட்சிக்கே தனியான பங்கு இருப்பதாக கூறமுடியாவிட்டாலும், அதற்கு மற்றைய தமிழ்க் கட்சிகளை விடவும் கூடுதலான பாத்திரம் இருக்கிறது. உள்நாட்டு்ப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த 15 வருட காலத்திலும் அந்த பாத்திரத்தை எந்தளவுக்கு பயனுறுதியுடையதாக அந்த கட்சி கையாண்டிருக்கிறது என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஒரு தடவை நாம் திரும்பிப் பார்க்கவேண்டும். போரின் முடிவுக்குப் பிறகு வடக்கு,கிழக்கு தமிழர்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இருக்காத நிலையில் அவர்களுக்கு தலைமை தாங்கும் பாத்திரம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தானாகவே வந்துசேர்ந்தது. கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சி என்ற முறையில் அதில் கூடுதல் பொறுப்பு தமிழரசு கட்சிக்கும் அதன் அன்றைய தலைவர் சம்பந்தனுக்குமே இருந்தது. உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு ஏற்றமுறையில் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான வரலாற்று முக்கியத்துவ பாத்திரம் அவர்களுக்குரியதாகவே இருந்தது. ஆனால் அந்தப் பாத்திரத்தை அவர்கள் சரியாகக் கையாளவில்லை. இலங்கை தமிழர்கள் அவர்களது அரசியல் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள். சர்வதேச சமூகத்தின் தலையீடுகளினால் கூட இலங்கை அரசாங்கத்தை வழிக்கு கொண்டுவர முடியவில்லை. தமிழ் அரசியல்வாதிகளும் சில அவதானிகளும் புவிசார் அரசியல் நிலைவரங்கள் தமிழர்களுக்கு வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தபோதிலும் நிலைமை தலைகீழாகவே மாறியது. 1987 ஜூலை சமாதான உடன்படிக்கையின் மூலமாக மாகாணசபைகள் அறிமுகம் செய்யப்படுவதற்கு உதவிய இந்தியாவினால் கூட அந்த நோக்கத்துக்காக 36 வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை இலங்கை அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்துவதை இன்றுவரை உறுதிசெய்யமுடியவில்லை. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியங்களைக் காணவில்லை. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தையே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். தென்னிலங்கை சிங்கள அரசியல் சமுதாயத்தை பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கு சிறுபான்மை இனத்தவர்களின் நியாயபூர்வமான குறைந்தபட்ச அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு அரசியல் தீர்வைக் கூட காணவேண்டிய தேவை இருப்பதாக கருதுவதாக இல்லை. தீர்வைக் காண்பதற்கு தென்னிலங்கையை நிர்ப்பந்திக்கக்கூடிய நெருக்குதலைக் கொடுப்பதற்கான வழிமுறை எதுவும் தமிழ் அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவர்களை நம்பி போராட்டங்களில் இறங்குவதற்கும் தமிழ் மக்கள் தயாரில்லை. பல தமிழ்த் தலைவர்கள் கடந்த காலத்தில் தமிழர்களை வாழவைப்பதிலேயே நாட்டம் காட்டுகிறார்கள். அவர்கள் ஆயுதமேந்தப் போவதில்லை என்றபோதிலும் கடந்த கால ஆயுதப்போராட்டம் குறித்து பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தில் உள்ள தீவிரவாத நிலைப்பாடுகளைக் கொண்ட குழுக்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஒத்துழைப்பவர்களாகவே பல தமிழ் தலைவர்கள் நடந்துகொள்கிறார்கள். வெளிநாடுகளினாலும் கையாளப்படக்கூடியவர்களாக அவர்கள் இருப்பது ஒன்றும் இரகசியமானதல்ல. நடைமுறை யதார்த்தங்களை உணராதவர்களாக தமிழ்த்தேசிய அரசியலை வெறுமனே உணர்ச்சிமயமான கற்பிதங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் அவர்கள் கடந்தகால போராட்டங்களை காவியம் போன்று புகழ்பாடுவதில் திருப்தி காண்கிறார்கள். இவற்றை விடுத்து கடந்தகால கசப்பான அனுபவங்களில் இருந்து பெறக்கூடியதாக இருக்கும் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைச் சாத்தியமான பாதையை வகுக்கக்கூடிய ஆற்றல்களை இதுவரையில் வெளிப்படுத்த முடியாதவர்களாக தமிழ் அரசியல்வாதிகள் விளங்குகிறார்கள். ஒரு கட்சியின் நிலைப்பாட்டுக்கு மற்றைய கட்சி எதிர்வினையைக் காட்டுவதிலேயே காலம் கடந்துகொண்டிருக்கிறது. இவை தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சிந்தித்துப் பார்க்கவேண்டிய முக்கியமான விடயங்கள். பழைய தமிழரசின் அரசியலுக்கு புதிய தலைவர் தேவையில்லை. இறுதியாக தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் யார் வெற்றிபெறவேண்டும் என்பதில் ஏனைய தமிழ்க்கட்சிகள் உன்னிப்பான அக்கறையுடன் இருப்பது சுவாரஸ்யமான ஒரு அம்சமாகும். அதற்கான காரணத்தை புரிந்துகொள்வதில் தமிழர் அரசியலை உன்னிப்பாக அவதானித்துவரும் எவருக்கு சிரமம் இல்லை. ( ஈழநாடு ) https://arangamnews.com/?p=10364
  11. தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும் லக்ஸ்மன் தமிழ்த் தேசிய அரசியலானது தமிழர்களுடைய அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவேயன்றி, ஒரு அரசியல் கட்சியின், தனிப்பட்ட அரசியல்வாதிகளின் நலன் பேணுவதற்கானல்ல என்பதுடன் அவ்வாறானதாக இருக்கக்கூடாது என்பது அடிப்படை. தேர்தல்கள் வரும்போதும் ஆண்டுகள் பிறக்கும்போதும் வாக்குறுதிகள் பறக்க விடப்படுவதும் உறுதிகள் வழங்கப்படுவதும் தேசிய அரசியலிலும், தமிழர்களுடைய அரசியலிலும் புதிய விடயமல்ல. ஆனாலும், இந்த 2024இல் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான சுயநிர்ணய போராட்டத்திற்குச் சிறப்பானதொரு முடிவினை தருகின்ற ஆண்டாக இருக்கவேண்டும் என்று மாத்திரமே எதிர்பார்க்க முடிகிறது. ஏனெனில் எதிர்பார்ப்புகளுடனேயே வருடங்களைக் கடக்க வேண்டியதாகிப்போனது. வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட வரலாறு ஆயுதப் போராட்டத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதா என்று எல்லோரும் சந்தேகம் கொள்ளும் அளவுக்கான செயற்பாடுகளே அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொள்வதில் காலத்துக்குக் காலம் முன்னெடுக்கப்பட்ட போராட்ட முறைகள் மாற்றம் பெற்று ஜனநாயக வழி சாத்தியமற்றது என்ற முடிவின் பலனாகவே ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றன. இந்தியாவினுடைய உள் வருகையுடன் நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தை, இதனையடுத்து, ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் காரணமாகப் போராட்ட இயக்கங்கள் பல அரசியல் கட்சிகளாக மாறிப் போயின. ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடாக் கொள்கையை தொடர்ந்தும் கடைப்பிடித்தனர். ஆனாலும், 2009 மே மாதம் அதனையும் மௌனிக்கச் செய்த மாதமாகப் போனது. தமிழர்களுடைய அரசியல் உரிமைக்கான பிரச்சினை இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரையில் தீர்வை எட்டுவதற்கு முடியாததாகவே தொடர்கிறது. இலங்கை அரசியலமைப்பின் 22 திருத்தங்களில் எதுவும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷையை நிறைவேற்றவில்லை. அவற்றில் 13ஆவது திருத்தம் தவிர ஏனையவை இனப்பிரச்சினை கூர்மையடையவே வழி செய்திருக்கின்றன. 1987 இந்திய - இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தம் நாட்டின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அது இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக இல்லாது விட்டாலும் ஒரு ஆரம்பப்புள்ளியாக எடுத்துக் கொள்ளப்பட்டு நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று தற்போதும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. ஆனாலும், அதற்கு எதிராகச் செயற்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 13ஆவது திருத்தச் சட்டம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்பட்டிருந்தாலும் அதனைக்கூட இலங்கையின் ஆளும் அரசாங்கங்கள் மற்றும் பெரும்பான்மைச் சமூகம் முழுமையாக அமுல்படுத்துவதற்கான மனநிலையற்றவர்களாகவே இருக்கின்றனர். பல்வேறு கருத்துக்கள் காணப்பட்டாலும் கடந்த கால கசப்புணர்வுகள், முரண்பாடுகளை மறந்து தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுப்பதற்காகத் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரால் 2001ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழர்களின் ஏகோபித்த அரசியல் தரப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. தமிழ் மக்களுடைய அரசியல் நிலைப்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் அனைத்துத் தரப்பினரிடமும் பலமாக இருந்தது. ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 2009 மே 18க்குப் பின்னர் ஒவ்வொரு கட்சியாகக் கழன்று இப்போது சின்னத்தை வழங்கியிருந்த தமிழரசுக்கட்சி கடந்த வருடத்தில் தனித்துச் செயற்படும் முடிவை எடுத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு முதல் தேர்தலின் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உதய சூரியன் சின்னம் இல்லை என்றானது. அதன் பின்னர், கடந்த வருடத்தில் தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னம் எடுத்துச் செல்லப்பட்டதால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் குத்துவிளக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்ற ஒன்று இருக்கிறதா என்று வினவ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தந்தை செல்வாவினால் தமிழரசுக் கட்சி கிடப்பில் போடப்பட்டே தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதன்படி, இயக்கமின்றி இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக்கப்பட்டது என்பதே உண்மை. அது தமிழர்களின் அரசியல் சின்னமாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும், தமிழரசுக் கட்சியின் ஏகாதிபத்திய, மேட்டுக்குடி நிலைப்பாடு காரணமாகக் கூட்டாக இருந்த கட்சிகள் பல வெளியேறும் நிலை ஏற்பட்டிருந்தது. இதனை யாரும் மறுப்பதற்கில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனற்றுப்போனதும் அதற்குக் காரணம் எனலாம். தமிழர்களின் அரசியலைப் பலவேறு கட்சிகளாகி, தனித்து நின்று மேற்கொள்ள முடியாது என்பதனைப் புரிந்து கொண்டமையினால் உருவான கூட்டமைப்பு சிதைந்து போயிருக்கின்றது. ஆனாலும், தமிழ்த் தேசிய நலனைக் கருத்தில் கொள்ளாத அரசியலை நடத்துவதில் பயன் ஏதும் விளையாதென்பது புரிந்து கொள்ளப்படவில்லை. இருந்தாலும், தமிழ்த் தேசிய நலனும், அதன் நிலைப்பாடும் மாற்றமுறா வகையில் அரசியல் பயணம் தேவையாக இருக்கிறது என்ற கோரிக்கை இருந்து கொண்டே இருக்கிறது. வடக்கு, கிழக்கு தமிழர்களுடைய அரசியல் வரலாறென்பது கொள்ளை ரீதியாகவும், கோட்பாடு மற்றும் நிலைப்பாடு ரீதியாகவும் சீராகக் கட்டமைக்கப்பட்டது. அவ்வாறே இதுவரை காலமும் முன்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது எனக் கொண்டால் அதனை வழிப்படுத்துவதற்கான அரசியல் சரியான முறையில் இனிவரும் காலங்களிலும் செய்யப்பட்டாக வேண்டும். அந்த ஒழுங்கில்தான், தமிழர்களுடைய உரிமைகளுக்கான, அவர்களுடைய கோரிக்கைகளுக்கான அரசியலை தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் செய்கின்றனவா என்ற கேள்வி தோன்றும். அவ்வாறில்லையானால், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தங்களை இந்த வரன் முறைகளுடன் முன் நகர்த்த வேண்டியது காலத்தில் கட்டாயமாகும். தமிழ் மக்களின் இன முரண்பாட்டுச் சிக்கல் தோற்றம் பெற்றமை முதல் பேரினவாதிகளுடன் கொள்கை ரீதியான பல விடயங்களில் உடன்பாடுகள், இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தாலும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகளின் ஊடாக இதுவரையில் சீர்படுத்தப்படவில்லை என்பதே வரலாறு. ஆனால், தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதும், ஏமாந்ததும் காலங்காலமாக நடைபெற்று வந்திருக்கிறது. ஆயுத யுத்தம் மௌனிக்கச் செய்யப்பட்டுவிட்டது. அதனால் தமிழர்கள் தங்கள் போராட்டத்தை இராஜதந்திர ரீதியில் முன் நகர்த்தவேண்டிய கட்டாயத்துக்குப்படுத்தப்பட்டனர். ஆனால், அதனை யார் சரியாகச் செய்கிறார்கள் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகம். ஏனெனில் அரசியலைத் தமிழ் மக்கள் வெறுக்கும் அல்லது வேறு நிலைப்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுகின்ற நிலைமை உருவாகி வருகிறது. இதற்கு தமிழர்களின் அரசியல் தரப்பினரே பொறுப்பாகவேண்டும். தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக்கட்சி என மிதவாத அரசியலுடனும், ரெலோ, புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்எல்எவ், ஈ.என்.டி.எல்.எவ். என ஆயுத அரசியலுடனும் என தொடர்ந்த தமிழர்களுடைய விடுதலைக்கான முயற்சிகள் பலனற்றுப் போனதாகவே இருக்கின்றன என்றே சொல்லவேண்டும். இந்த இடத்தில்தான் தமிழர்களுடைய அரசியலை மக்களது அரசியலுரிமைக்கான அரசியலை யார் முன்கொண்டு செல்வது. சுயநலன்களுக்கு அப்பால், மக்களை அரசியல் மயப்படுத்துவதன் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற செயற்திட்டம் முன்னிற்கிறது. பூனைக் கண்ணை மூடிக்கொண்டிருப்பது பயனற்றதே. அந்தவகையில், தமிழர் அரசியலில் வெறுப்பு அரசியலை மேற்கொள்ளும் நிலைப்பாட்டிலிருந்து தமிழர் அரசியல் தரப்பினர் விடுபட்டு ஒன்றிணைந்த தமிழ்த் தேசிய அரசியல் உருவாவதற்கான வழிவகைகள் ஏற்படுத்த வேண்டும். அதன் ஒரு படியாக, தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தெரிவு வெறுமனே, சர்வதேச தொடர்புகளைக் கொண்ட, மொழி அறிவு என்பவைகளுக்கப்பால், தமிழ் மக்களின் அரசியலுரிமைகளை வென்றெடுப்பதற்காகச் சுயநலம் மறந்து ஒன்றிணைந்த அரசியலுக்கான, தமிழர்களை ஒன்றிணைப்பதாகத் தமிழ்த் தேசியத்தின் பாற்பட்டதாக இருக்கவேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசியமும்-தமிழரசுக்-கட்சியின்-தலைமையும்/91-331602
  12. துமிந்த சில்வாவின் மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது. துமிந்த சில்வா, மேலும் நால்வருடன் இணைந்து 2011 ஆம் ஆண்டு அரசியல்வாதி பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டமைக்காக 2016 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது, இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உறுதி செய்தது. எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ச எதிர்பாராதவிதமாக துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்கினார். இந்த மன்னிப்பின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து மூன்று தனித்தனி அடிப்படை உரிமை மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர மற்றும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் கசாலி ஹுசைன், பிசி ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை பரிசீலித்த நீதிபதிகள் பி.பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு, மன்னிப்புச் செயல்முறை குறைபாடுள்ளது என்றும், எனவே சட்டத்திற்குப் புறம்பானது என்றும் ஏகமனதாக முடிவு செய்தது. https://thinakkural.lk/article/288371
  13. சர்வதேச நீதிமன்ற விவகாரம் நுட்பமாக கையாளும் இலங்கை சர்வதேச நீதி என்பது உலக நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களில் தங்கியுள்ளது. ரோஹிகின்ய முஸ்லிம்களுக்கு நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கத் தயங்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு சர்வதேச அரசியலை இலங்கை நன்கு கையாளுகின்றது, காய் நகர்த்துகின்றது. ஆனால் தமிழ்த்தரப்பு? அ.நிக்ஸன் காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளதை அமெரிக்கா கண்டித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் அமைதியாக இருக்கின்றன. ஆனாலும் அமெரிக்காவை விடவும் ஐரோப்பிய நாடுகள் காசாவில் நடக்கும் மனிதப்படுகொலைகளை கண்டிப்பதுடன் இஸ்ரேல் அரசு மீதும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. காசாவில் தொடரும் உயிரிழப்புகள் ஏற்க முடியாதவை என நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா அறிவித்துள்ளது. பலஸ்தீன காசா பகுதியில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை தெரிவித்து உரையாற்றும் போது இந்தியாவின் ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் இவ்வாறு கூறியிருக்கிறார். ஆனாலும் இஸ்ரேல் அரசுடன் இந்திய மத்திய அரசு கொள்கையளவில் கைகோர்த்திருக்கிறது. தென்னாபிரிக்க அரசு இன அழிப்பு என்று வழக்குத் தாக்கதல் செய்திருப்பதை இந்திய மத்திய அரசு இதுவரையும் பகிரங்கமாக வரவேற்கவில்லை. மதில்போல் பூனை போன்று உள்ளது. ஆகவே அமெரிக்க – இந்திய அரசுகள் இஸ்ரேலுடன் நிற்பதை அறிந்தே தென்னாபிரிக்கா தாக்கல் செய்த வழக்கை தமிழ்த்தேசிய அரசியலில் ஈடுபடும் தமிழ்க் கட்சிகளும் பகிரங்கமாக வரவேற்கவில்லை என்பது தெரிகிறது. தமிழ் சிவில் சமூக அமைப்புகளும் பாராட்டவில்லை. இஸ்ரேலுடன் இணைந்து கமாஸ் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்பதில் அமெரிக்க இந்திய அரசுகள் ஓரணியில் நிற்கின்றன. தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் வல்லரசுகளிடையே எழுந்துள்ள அரசியல் போட்டியில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா முற்று முழுதாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பாளனாக மாறியிருக்கிறார். அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளின் எதிராலியாக தென்னாபிரிக்கா, சர்வதேச நீதிமன்றத்தில் பலஸ்தீன மக்கள் சார்பில் காசாவில் நடப்பது இன அழிப்பு என்று பகிரங்கப்படுத்தி வழக்கும் தாக்கதல் செய்திருந்தாலும் அதனை பலஸ்த்தீன புலம்பெயா் அமைப்புகள் நன்கு பயன்படுத்தி வருகின்றன. சென்ற வியாழக்கிழமை ஆரம்பித்த முதல் நாள் விசாரணையில் தனது தரப்பு வாதங்களை தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. காசாவில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தென்னாபிரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க மாநில அரசுகளின் உறுப்பினர்கள் இருநூறு பேர் காசாவில் போர் போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். சென்ற ஒக்ரோபர் ஏழாம் திகதி போர் ஆரம்பிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்கும் குறைவான நிலையில் காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தையும் கடந்துள்ளதாகவும் இதனால் போரை நிறுத்துமாறும் அமெரிக்க உள்ளூர் பொது அமைப்புகளும் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியிருக்கின்றன. சர்வதேச நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க எழுநூறு இஸ்ரேல் மக்கள் விரும்பம் தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களே செய்தி வெளியிட்டிருக்கின்றன. இஸ்ரேலிய மக்களின் எழுபத்து ஐந்து சதவீதமான மக்கள் காசாவில் போர் நடப்பதை விரும்புகின்றனர் என்றும் இந்த நிலையில் எழுநூறு பொது மக்கள் பலஸ்தீன மக்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுகின்றன. இன அழிப்பு என்று தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கதல் செய்துள்ளதால் கணிசமான அளவு இஸ்ரேலிய மக்களுக்கு அச்சம் ஏற்பட்டு விட்டதாக அரபு ஊடகமான நியுஅரப் (newarab) என்ற ஆங்கில செய்தி இணையத்தளம் கூறுகின்றது. மியன்மாரில் ரோகின்கிய முஸ்லிம் மக்களுக்கு நடப்பது இன அழிப்பு என்று சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு விசாரணைக்கு முழுமையான ஆதரவு வழங்கி வரும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள வழக்குத் தொடர்பாக அமைதியாக இருக்கின்றது. சட்ட ஆதாரங்களை தேட வேண்டும் என்று மாத்திரம் பிரித்தானியா கூறியிருக்கிறது. அதேபோன்று கனடாவும் கூறுகின்றது. காசாவில் நடப்பது இன அழிப்புத் தொடர்பான சா்வதேசச் சட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கனடா வலியுறுத்தியிருக்கிறது. தென்னாபிரிக்க அரசு மேற்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது என்பதால், பிரித்தானிய, கனடா போன்ற நாடுகள் தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குக்கு ஆதரவு வழங்கத் தயங்குகின்றன. ஆகவே ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் குழப்பியிருந்த உலக அரசியல் ஒழுங்கு தற்போது இஸ்ரேல் – கமாஸ் போர் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து மேலும் குழப்பமடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கல் செய்த பின்னர் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையேயான உலக அரசியல் அணுகுமுறையில் முன்னுக்குப் பின்ன முரணான வாதங்கள் எழுந்துள்ளதையும் அவதானிக்க முடியும். இந்த அரசியல் சூழ்நிலையை இலங்கை நன்கு பயன்படுத்துகிறது குறிப்பாக முள்ளிவாய்க்கால் போரில் சுமார் நாற்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டும் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் காணாமல் போயிருப்பதாகவும் 2010 இல் வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இன அழிப்பு என்று எந்த ஒரு நாடும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. இதற்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச இந்தியாவைக் கையாண்ட அணுகுமுறையே காரணம் என்பது வெளிப்படை. நான்கு மாதங்களில் 23 ஆயிரும் மக்கள் கொல்லப்பட்ட பின்னர் காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கல் செய்ததை உணர்ந்தும் அச்சமடைந்த நிலையிலும் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. சர்வதேசத்தை நுட்பமாகக் கையாள ஆரம்பித்திருக்கிறார். தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதை மத்திய கிழக்கு நாடுகள் வரவேற்றுள்ளன. இப் பின்னணியில் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க சென்ற புதன்கிழமை பேச்சு நடத்தியிருக்கிறார். தூதுவர்களுடன் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் ஊடகங்களில் வெளிவரவில்லை. ஆனால் மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பாக ரணில் தூதுவர்களிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, ஏனைய கொழும்பில் உள்ள மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளின் தூதுவர்களையும் ரணில் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்று கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில் குழப்பியுள்ள உலக அரசியல் ஒழுங்குச் சூழலில் எந்த ஒரு சிறி நாடுகளின் ஒத்துழைப்புகளும் அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு தேவைப்படுகின்றன. அதேபோன்று சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஏதாவதொரு சிறிய நாடுகளைப் பயன்படுத்தக் கூடும் என்ற அச்ச நிலை இலங்கைக்குத் தற்போது உருவாகியுள்ளது. குறிப்பாக கனடா, இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று கூறி வருகின்றது. அதுவும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக கனடா புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளை மையமாகக் கொண்டு பேசி வருகின்றன. சில சமயங்களில் கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் தமிழ் இனஅழிப்பு என்பது இணைக்கப்பட்டால் அதனை மையமாகக் கொண்டு வேறு சில சிறிய நாடுகளைப் புலம்பெயர் தமிழர்கள் பயன்படுத்துவார்கள் என்று கருதியே அதனைத் தடுக்கும் முன்னேற்பாடுகளில் இலங்கையின் வெளியுலக இராஜதந்திர சேவை அதிகளவு கவனம் செலுத்துகின்றது. மத்திய கிழக்கு நாடுகளைச் சந்தித்து பலஸ்தீன மக்களுக்கு இலங்கை முழு ஆதரவு என்று ரணில் உறுதியளித்திருந்தாலும், அமெரிக்க – இந்திய அரசுகளைப் பகைத்துகொள்ளாத முறையில் இஸ்ரேல் அரசுடன் இலங்கை முழு அளவில் மறைமுகமாகக் கைகோர்த்திருக்கிறது என்பதுதான் உண்மை. 1983 இல் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் வடக்குக் கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து இஸ்ரேல் ஆலோசனை வழங்கியிருந்தமையும் தற்போது ஆதரவு வழங்கக் காரணம். இலங்கையைப் பொறுத்தவரை தற்போதைக்குச் சீனாவை ஓரளவுக்குத் தூரத் தள்ளிவைப்பது போன்றதொரு தோற்றத்தைக் காண்பித்தாலும், சீனாவுக்குத் தாக்கம் எழாத முறையில் அமெரிக்க – இந்திய அரசுகளை இலங்கை அரவனைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கான காரண – காரியம் என்பது குழப்பியுள்ள உலக அரசியல் ஒழுங்கு நிலைமைக்குள் கனடா ஊடாக வேறு சிறிய நாடுகளை புலம்பெயர் தமிழர்கள் நாடிவிடக் கூடும் என்ற அச்சமே. இலங்கையும் முற்று முழுதாகச் சீனாவின் பக்கம் செல்வதைத் தடுக்கும் நோக்கிலேயே ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பதைக் கனடாவின் பிரதான அரசியல் கட்சிகள் மூலமாக அமெரிக்கா சொல்ல வைக்கிறது என்ற அவதானிப்புகளும் இல்லாமில்லை. அதேநேரம் காம்பியா என்ற ஆபிரிக்காவின் சிறிய நாடு ஒன்றுதான் ரோஹின்கிய முஸ்லிம் மக்களுக்கு நடப்பது இனஅழிப்பு என்று சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறது. இதனை பிரித்தானியா முழுமையாக ஆதரித்து வருகின்றது. ஆகவே இவ்வாறான ஒரு பின்னணி புலம்பெயர் அமைப்புகளுக்கு வந்துவிடும் என்ற அச்சம் மற்றும் எதிர்வுகூறல் இலங்கைக்கு உண்டு. இதற்கு ஏற்ப பல அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இலங்கைத்தீவுக்குள்ளும் வெளியுலகத்திலும் ஆரம்பிக்கப்பட்டு அரங்கேறி வருகின்றன. இலங்கையின் இத் திட்டத்திற்கு ஜேர்மன், சுவிஸ்லாந்து போன்ற நாடுகளும் ஒத்துழைகை்கின்றன. ஆனால் தமிழ்த்தரப்பில் இந்த உத்திகள் எதுவுமே இல்லை. தமிழரசுக் கட்சியின் தலைவர் போட்டி, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது மற்றும் போலித் துவாரகா பற்றிய ஆய்வுகளையே தமிழ்த்தரப்பு செய்து கொண்டிருக்கிறது. பல தமிழ் ஊடகங்களும் இதற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. குறைந்தபட்சம் தென்னாபிரிக்க அரசைப் பாராட்டி ஜனாதிபதி சிறில் ரமபோசாவுக்குக் தமிழ்த்தேசியக் கட்சிகள் கடிதம் எழுதியிருக்கலாம். இன அழிப்பு என்று கூறிவரும் கனடாவின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான கென்சர்வேற்டீவ், லிபரல் கட்சி ஆகியவற்றின் தலைவர்களுக்குக் கடிதத்தின் மூலம் பாராட்டிருயிருக்கலாம். ஆகவே அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவும் இந்தியாவின் வஞ்சக அரசியல் செயற்பாட்டுக்குள்ளும் தமிழ்த்தேசியக் கட்சிகள் முடங்கியுள்ளன என்பதையே இது பகிரங்கப்படுத்துகின்றது. 2006 இல் விடுதலைப் புலிகளைத் தடை செய்த கென்சர்வேற்றீவ் கட்சி ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்புத்தான் என்று கூறுவதுடன், பதவிக்கு வந்தால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே பலஸ்த்தீன மக்களை ஆதரிப்பதாகக் காண்பித்துக் கொண்டு இஸ்ரேல் அரசின் பக்கம் இலங்கை நிற்பது போன்று அமெரிக்க இந்திய அரசுகளுக்குக் இரட்டை வேடம்போடுகின்றது. ஆனால் அரசு அற்ற சமூகமாகக் கடந்த எண்பது வருடங்கள் அரசியல் போராட்டம் நடத்தி வரும் ஈழத்தமிழ்த் தரப்பு, 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஏன் அமெரிக்க – இந்திய அரசுகளுக்கு மாத்திரம் விசுவாசமாக இருக்கின்றன? 2014 வரையும் தென்னாபிரிக்க அரசு ஈழுத்தமிழர் பக்கம் நின்றது. ஆனால் அதனைத் தமிழர் தரப்பு உரிய முறையில் கையாளவில்லை. பிரதிதி ஜனாதிபதியாக இருந்த சிறில் ரமபோசா 2020 இல் தென்னாபிரிக்க ஜனாதிபதியாக வரக்கூடும் என்று கணித்து அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச சிறிரமபோசவை இலங்கைக்குப் பல தடவைகள் அழைத்துப் பேசியிருக்கிறார். ஈழத்தமிழர் பிரச்சினை 2009 இல் முடிவடைந்து விட்டது என்றும் இலங்கையில் இன நல்லிணக்கமே அவசியம் என்றும் போதித்திருக்கிறார். இன்று இமாலயப் பிரகடனத்துக்கு தென்னாபிரிக்கா முழு ஆதரவு வழங்குவதுடன் ஈழத்தமிழர்கள் இலங்கையர்களாக வாழ முடியும் என்றும் கூற ஆரம்பித்துள்ளது. ஆகவே உல அரசியல் விவகாரங்களை அறிந்து நுட்பமாகக் கையாள்வதற்குரிய புதிய இளம் தலைமை ஒன்று ஆங்கில அறிவுடன் உருவாக வேண்டும். இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் வல்லரசாகத் தன்னைக் காணிப்பிக்க முற்படும் இந்தியா, சர்வதேச விவாகாரங்களில் இரட்டை வெளியுறவுக் கொள்கைகளோடு எவ்வாறு பயணிக்கிறது என்பதற்கும், சிறிய நாடான இலங்கை ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் இருந்து முற்றாக நீக்கம் செய்ய, மேற்கு மற்றும் ஐரேப்பிய நாடுகளையும் இந்தியாவையும் அதேநேரம் பொருளாதார உதவிகளைப் பெற சீனாவையும் எவ்வாறு நுட்பமாகக் கையாள்கின்றது என்பதற்கும் கண்முன்னே பல உதாரணங்கள், படிப்பினைகள் உண்டு. சர்வதேச நீதி என்பது உலக நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களில் தங்கியுள்ளது. ரோஹிகின்ய முஸ்லிம்களுக்கு நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்றுக்கொள்ளும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கத் தயங்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு சர்வதேச அரசியலை இலங்கை நன்கு கையாளுகின்றது, காய் நகர்த்துகின்றது. ஆனால் தமிழ்த்தரப்பு? http://www.samakalam.com/சர்வதேச-நீதிமன்ற-விவகாரம/
  14. உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்! வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தை மற்றும் நுவரெலியா ஆகிய பொதுச்சந்தைகளில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில், நேற்று நுவரெலியாவில் மொத்த காய்கறிகள் விலைகள்… காரட் 1 கிலோகிராம் 1,450 ரூபாய் ப்ரோக்கோலி 1 கிலோகிராம் 3,600 ரூபாய் முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 570 ரூபாய் முள்ளங்கி 1 கிலோகிராம் 160 ரூபாய் கிழங்கு 1 கிலோகிராம் 370 ரூபாய் நோகோல் 1 கிலோகிராம் 270 ரூபாய் குடைமிளகாய் சிவப்பு 1 கிலோகிராம் 800 ரூபாய் குடைமிளகாய் மஞ்சள் 1 கிலோகிராம் 700 ரூபாய் துளசி 1 கிலோகிராம் 2600 ரூபாய் சீன முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 1,300ரூபாய் சிவப்பு முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 3,200ரூபாய் செலரி 1 கிலோகிராம் 700 ரூபாய் கொத்தமல்லி தழை 1 கிலோகிராம் 450ரூபாய் பனிப்பாறை 1 கிலோகிராம் 2300 ரூபாய் சாலட் 1 கிலோகிராம் 1600ரூபாய் சிவப்பு சாலட் 1 கிலோகிராம் 1800ரூபாய் மிஞ்சி 1 கிலோகிராம் 900ரூபாய் இதேவேளை, தம்புள்ளை மொத்த விற்பனை நிலையத்தில் பழங்களின் மொத்த விலைகள் வருமாறு… சர்க்கரை வாழைப்பழம் 1 கிலோகிராம் 110 ரூபாய் புளி வாழைப்பழம் 1 கிலோகிராம் 110 ரூபாய் கார் 1 கிலோகிராம்290 ரூபாய் அம்புன் 1 கிலோகிராம் 190 ரூபாய் கொய்யா 1 கிலோகிராம் 280 ரூபாய் தர்பூசணி 1 கிலோகிராம் 140 ரூபாய் அன்னாசிப்பழம் 1 கிலோகிராம் 400 ரூபாய் அல்போன்சா 1 கிலோகிராம் 1700 ரூபாய் அவகேடோ 1 கிலோகிராம் 290 ரூபாய் ஆகிய விலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. http://www.samakalam.com/உச்சம்-தொட்ட-மரக்கறி-வில/
  15. வல்வை பட்டப்போட்டியில் “ஆகாய விமானம் தாங்கிய போர் விமானம்” முதலிடம் பெற்றது! adminJanuary 16, 2024 யாழ்ப்பாணம் வல்வை உதயசூரியன் கடற்கரையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற மாபெரும் பட்டப் போட்டியில் 60ற்கு மேற்பட்ட பட்டங்கள் வானில் பறந்து போட்டியில் பங்கெடுத்திருந்தன. போட்டியில் முதலாம் இடத்தினை, “ஆகாய விமானம் தாங்கிய போர் விமானம்” என்ற பட்டம் பெற்றது. அதற்கான பரிசினை அந்த பட்டத்தினை வடிவமைத்த வினோதன் பெற்றுக்கொண்டார். இரண்டாம் இடத்தினை ” விண்வெளியில் நிலை நிறுத்திய செயற்கை கோள்” என்ற பட்டம் பெற்றது. அதற்கான பரிசினை , அந்த பட்டத்தினை வடிவமைத்த பிரசாந்த் பெற்றுக்கொண்டார். மூன்றாம் இடத்தினை ” ஏலியன்ஸ் மர்ம தாக்குதல் விமானம்” என்ற பட்டம் பெற்றது. அதற்கான பரிசினை அந்த பட்டத்தினை வடிவமைத்த கம்ஸன் பெற்றுக்கொண்டார். https://globaltamilnews.net/2024/199807/
  16. Oats with Honey எனும் சிறுவர்களுக்கான வண்னப்படங்களுடனான புத்தகம் Julian Cappelli யும் மூனா என்று அழைக்கப்படும் A T செல்வகுமாரனும் சேர்ந்து உருவாக்கியது. இந்தப் புத்தகம் தமிழில் உள்ள நாட்டார் பாடலை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. “பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசியில்லை” எனும் பாடலை தமிழர் ஒருவரின் வீட்டில் சிறுவன் பாடியதை ஜூலியன் கப்பெல்லி கேட்டு, அதன்மீது ஈர்க்கப்பட்டு மூனா அண்ணாவுடனான உரையாடல் மூலம் பாடலின் உள்ளார்ந்த அர்த்தங்களைப் புரிந்து, அப்பாடலைச் சற்று நீட்டி இந்த உலகில் உயிரனங்கள் வாழ தேனீக்களின் அவசியமான பங்களிப்பையும், அந்தப் பங்களிப்பை சிறுவர்கள் அறியவேண்டியும் இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளனர். #……# இதோ அந்த தமிழ் நாட்டார் பாடல்.. கூகிள் தேடலில் யாழ் இணையத்தில் இப்பாடல் உள்ளதும் தெரியவந்தது. “பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசி இல்லை. முற்றிய நெற்கதிரே அரிசி கொஞ்சம் தருவாயோ?” இதற்கு நெற்கதிர் “நானெப்படித்தர முடியும்? என்னை வளர்க்கும் வயலிடம் போய்க் கேள்” என்றது. வயலிடம் போன எலியார் “பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசியில்லை. முற்றிய நெற்கதிரே நெல்லை வளர்த்த வயலே கொஞசம் அரிசி தருவாயா?” என்று கேட்டது. அதற்கு வயல் “நானெப்படி தர முடியும் என்னை ஈரமாக்கி உதவும் நீரைப் போய்க் கேள்“ என்றது. நீரிடம் போன எலியார் “பாயசம் வைக்க வேணும் பானையிலோ அரிசியில்லை. முற்றிய நெற்கதிரே நெல்லைவளர்த்த வயலே வயலில் பாய்ந்த நீரே கொஞ்சம் அரிசி தருவாயோ” என்றது. அதற்கு வயலில் பாய்ந்த நீர் “நானெப்படித் தரமுடியும் என்னை வரம்பு கட்டி இங்கே பாய விட்ட உழவனைப் போய்க் கேள்” என்றது. உழவனிடம் போன எலியார் “பாயசம் வைக்க வேணும் பானையிலோ அரிசியில்லை முற்றிய நெற்கதிரே கதிரைவளர்த்த வயலே வயலை நனைத்த நீரே நீரைப்பாய்ச்சிய உழவா கொஞ்சம் அரிசி தருவாயோ?” என்றது. உழவன் எலியாருக்கு அரிசி கொடுத்தார். எலியார் பாயாசம் வைத்தார் என்று நிறைவுபெறும். #*****# சிறுவர்களுக்கான இந்தப் புத்தகத்தில் Olli எனும் சிறுவன் காலை உணவுக்காக ஓட்ஸ் கஞ்சி தயாரிக்க விரும்புகின்றார். ஆனால் ஓட்ஸ் இல்லை. ஓட்ஸைக் கண்டுபிடிக்க கூக்கபுரா பறவை காட்டிய பாதையில் ஓட்ஸ் வயலுக்குப் போகின்றார். தமிழில் எலியார் நெற்கதிரைக் கேட்பதில் ஆரம்பிப்பது போல ஆங்கிலத்தில் ஓட்ஸ் கதிரை Olli கேட்பதில் கதை தொடங்குகின்றது. சிறுவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ரைம்களைக் கொண்ட அற்புதமான புத்தகம். மூனா அண்ணாவின் கைவண்ணத்தில் நிறைய அழகான விளக்கப்படங்கள் உள்ளன. ஒவ்வொரு ரைமின் உரையும் படிக்க எளிதானது மற்றும் இந்த புத்தகம் சிறுவர்களைப் படிக்க தூண்டுவது போலவும், பயன்படுத்தப்படும் வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் ஒவ்வொரு ரைமைச் சுற்றியுள்ள படங்களாலும் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதையும் காணலாம். அனைத்து விளக்கப்படங்களும் மிகவும் அருமையாக உள்ளன. சிறுவர்களுக்கான நேர்சரி ரைம்ஸ் புத்தகத்தைத் தேடுபவர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன். அமேஸனில் புத்தகம் வாங்க: Hard cover, paperback, kindle edition எனக் கிடைக்கின்றது. https://amzn.eu/d/4RTqDmU
  17. வடக்கில் படங்காட்டிய ஜனாதிபதி கிழக்கில் படங்காட்டிய ஆளுநர் - நிலாந்தன் புதிய ஆண்டு பிறந்த கையோடு ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு விழா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார். வடக்கில் ஜனாதிபதி பல்வேறு தரப்புகளையும் சந்தித்தார். தொழில் முனைவோர்,பல்கலைக்கழகப் பிரமுகர்கள்,குடிமக்கள் சமூகம் என்று சொல்லப்பட்டவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இசைத்துறையில் விளையாட்டு துறையில் பளு தூக்கும் போட்டியில் சாதனை புரிந்தவர்கள், வடக்கில் கல்விப் பெறு பேறுகளில் சாதனை புரிந்தவர்கள், அரச உயர் அதிகாரிகள், தனது கட்சிப் பிரதிநிதிகள் என்றிவ்வாறாக பல்வேறு தரப்பட்டவர்களையும் சந்தித்திருக்கிறார். அவர் யாரைச் சந்திக்க வேண்டும் ,சந்திக்கக் கூடாது என்பதனை அவருக்கு இணக்கமான வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தீர்மானித்திருக்கிறார்கள். குறிப்பாக யூ எஸ் ஹோட்டலிலும் பல்கலைக்கழக சமூகத்தின் மத்தியிலும் உரையாற்றும் பொழுது, அவர் பேசியவற்றின் சாராம்சம் என்னவென்றால், மாகாண சபைகளுக்கு போதிய அதிகாரங்கள் உண்டு; மேல் மாகாணத்தில் கட்டியெழுப்பப்பட்டு இருப்பதுபோல பிராந்திய பொருளாதாரங்களைக் கட்டி எழுப்புங்கள்; மாகாண சபைகளின் நிதி அதிகாரம் அதற்குப் போதுமானது; முதலீட்டுக்கு எனது கையைப் பார்த்துக் கொண்டிராதீர்கள்; புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி உதவிகளையும் துறை சார்ந்த உதவிகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்; அதற்கு நாம் ஒத்துழைப்போம்… என்பதுதான். அதிலும் குறிப்பாக அவர் பொருளாதார வளர்ச்சிக்கு உதாரணங்களாக ஜப்பான், கொரியா,பிரித்தானியா போன்ற ஒற்றையாட்சி நாடுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார். அங்கேயெல்லாம் கூட்டாட்சி இல்லை, ஆனாலும் அந்நாடுகள் பொருளாதாரரீதியாகச் செழிப்பாகக் காணப்படுகின்றன என்ற பொருள்பட யூஎஸ் ஹோட்டலில் அவர் பேசியிருக்கிறார். மாகாண சபைகள் இயங்காத ஒரு பின்னணியில், இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கம் இல்லாத ஒரு ஜனாதிபதி, மாகாண சபைகளுக்கு உள்ள நிதி அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார். விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வடமாகாண சபையானது முதலமைச்சர் நிதியம் ஒன்றை உருவாக்க முயற்சித்தது. ஏற்கனவே அதையொத்த நிதியம் மேல் மாகாணத்தில் உண்டு. ஆனால் மத்திய அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் ஜனாதிபதி கூறுகிறார், 13ஆவது திருத்தத்துக்குள் எல்லா அதிகாரங்களும் உண்டு என்று. அப்படியென்றால் அவர் 2015 இலிருந்து பிரதமராக இருந்த காலகட்டத்தில் கூட்டமைப்போடு சேர்ந்து உருவாக்க முயற்சித்த “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வு முயற்சிக்குப் பொருள் என்ன? மாகாண சபைக்குள்ள அதிகாரங்கள் போதும் என்றால் எதற்காக அப்படி ஒரு ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய ஏற்பாட்டை குறித்து சிந்தித்திருக்க வேண்டும்? இது பற்றி யாராவது அவர்களிடம் கேள்வி கேட்டார்களோ தெரியவில்லை. ஆனால் வழமையாக இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று கேட்கும் வடக்கு இந்த முறை அது போன்ற கேள்விகளைக் கேட்கவில்லை என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்குச் சொன்னதாக ஒரு தகவல். இவ்வாறு ஜனாதிபதி வடக்கில்,படம் காட்டி,படம் எடுத்து,ரியோ கிறீம் ஹவுசில் ஐஸ்க்ரீமும் அருந்தி, பதின்மூன்றுக்குள் எல்லாம் உண்டு என்று கூறிய அதே காலப்பகுதியில்,கிழக்கில் அவருடைய ஆளுநர் பெருமெடுப்பில் ஒரு பண்பாட்டு பெருவிழாவை ஒழுங்குப்படுத்தியிருந்தார். கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன் நோர்வேயின் அனுசரணையோடு பேச்சுவார்த்தைகள் நடந்த காலகட்டத்தில், திருகோணமலையில் நடந்த “மானுடத்தின் ஒன்று கூடலுக்குப்” பின் அங்கே நடந்த மிகப்பெரிய அளவிலான ஒன்றுகூடல் அதுவென்று கூறலாம். அதை ஒரு மெகா நிகழ்வாக ஆளுநர் திட்டமிட்டு நடத்தியிருக்கிறார். அதற்கு இந்தியாவின் உதவிகளையும் பெற்றிருக்கிறார். அதன்மூலம் தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பண்பாட்டு ரீதியிலான பிணைப்புக்களைப் பலப்படுத்தும் முயற்சிகளை வடக்கிலிருந்து கிழக்கிற்கும் விஸ்தரிக்கும் ஒரு எத்தனம் அது. அப்படி ஒரு பண்பாட்டு விழாவிற்கு இந்தியா பக்கத்துணையாக இருக்கிறது என்பது சிங்கள கடும்போக்குவாதிகளை கோபப்படுத்துமா? அல்லது பயப்படுத்துமா? என்பதனைப் பொறுத்திருந்து பார்க்கலாம். குறிப்பாக ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவுதல் நிகழ்ச்சிக்கு பயிற்சியாளர்கள் முதற்கொண்டு, சிறப்பு விருந்தினர்கள்,அறிவிப்பாளர்கள் வரை தமிழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள். பொங்கல் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்களை அந்த மைதானத்தில் திரட்டி, நூற்றுக்கணக்கில் பெண்களை ஆட வைத்து, தமிழ் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். அந்நிகழ்வில் உரையாற்றிய சாணக்கியன் தமிழர்களின் தலைநகர் என்று அழைக்கப்படும் திருகோணமலை என்று உச்சரிக்கிறார். திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களின் மூலம் அதிகம் சிங்கள மயப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் மாவட்டம் திருக்கோணமலை ஆகும். இப்பொழுதும் அங்கே குன்றுகளாகக் காணப்படும் பிரதேசங்களில் விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் ஒளிப்படத்தை, வாகன ஊர்தியில் எடுத்துச் சென்றபோது தாக்கப்படும் அளவுக்கு அங்கு தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உண்டு. அப்படிப்பட்ட ஒரு மாவட்டத்தில் பெருமெடுப்பில் ஒரு தமிழ்ப் பண்பாட்டு விழாவை ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒழுங்கமைத்திருக்கிறார். அவர் ஓர் அரச ஊழியர். ஜனாதிபதியின் பிரதிநிதி. ஆனால் நிகழ்வில் அவருக்கு தரப்பட்ட முக்கியத்துவம்; அவரை அங்கு கூடியிருந்தவர்கள் வரவேற்ற விதம்; என்பவற்றைத் தொகுத்துப் பார்க்கும்பொழுது அவருக்கு அங்கே ஒரு கதாநாயக அந்தஸ்து வழங்கப்பட்டது. அவர் பேசுவதற்காக மேடையை நோக்கி வந்த பொழுது “அலப்பறை கிளப்புறோம்” என்ற ரஜினி படப்பாடல் ஒலிக்க விடப்பட்டது. அவர் ஒரு கதாநாயகனைப் போல மேடையை நோக்கி வந்தார். வரும் வழியில் நடனம் ஆடிய பெண்கள் அவரை நிறுத்தி கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அதாவது ஒரு நிர்வாக அதிகாரி கதாநாயகனாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அந்த பண்பாட்டு விழா நடந்து கொண்டிருந்த அதே மாகாணத்தில், மட்டக்களப்பில், மயிலத்தமடுவில் மேய்ச்சல் தரையை மீட்பதற்கான போராட்டம் 125ஆவது நாளைக் கடந்து விட்டது. அது மட்டுமல்ல, கிழக்கில் அண்மையில் பெய்த கடும் மழையால்,பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி நிவாரணங்களை வழங்கி வருகின்றது. அந்த ஒளிப்படங்கள் முகநூலில் பகிரப்படுகின்றன. ஒரு பகுதி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு மாகாணத்தில், இது போன்ற மெகா பண்பாட்டு நிகழ்வுகள் அவசியமா என்ற கேள்விகள் உண்டு. மேய்ச்சல் தரைக்காகப் போராடும் விவசாயிகள் வெள்ளத்தில் நிற்கிறார்கள்; அவர்களுடைய நாட்டு மாடுகளை வெட்டிக் கொல்லப்படுகின்றன அல்லது சுருக்கு வைத்துப் பிடிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத ஒர் ஆளுநர்,காளை மாடுகளை அடக்கும் போட்டிகளை ஒழுங்குபடுத்துகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன. செந்தில் தொண்டமான் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மக்களைக் கவரும் விதத்தில் எதையாவது செய்ய முயற்சிக்கின்றார். எனினும் சிங்கள பௌத்தமயமாக்கலையும் நிலப்பறிப்பையும் அவரால் தடுத்துநிறுத்த முடியவில்லை. அதில் அவருடைய அதிகாரம் வரையறைக்கு உட்பட்டது என்பதனை பௌத்த மதகுருமார் நிரூபித்து வருகிறார்கள். அவ்வாறு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத ஓர் ஆளுநர், வெள்ள அனர்த்த காலத்தில், பெருமெடுப்பில், பெருந்தொகை நிதியைச் செலவழித்து, ஒரு பண்பாட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். அதில் அவர் கதாநாயகனாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார். எனவே கடந்த வாரம் வடக்கிலும் கிழக்கிலும் நடந்தவைகளைத் தொகுத்துப் பார்த்தால், மிகத் தெளிவான ஒரு செய்தி கிடைக்கின்றது. வடக்கில் ஜனாதிபதி பதின்மூன்றாவது திருத்தத்துக்குள் அதாவது மாகாண சபைக்குள் நிதி அதிகாரம் உண்டு என்று கூறுகிறார். கிழக்கில் அவருடைய ஆளுநர் கதாநாயகனாக மேலெழுகிறார். 13ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் ஆளுநர் ஒருவர் கிழக்கில் தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டும் விழாக்களை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார். அதனால் அவருக்கு வரவேற்பும் கவர்ச்சியும் அதிகரித்திருக்கின்றன. 13ஆவது திருத்தத்தின் கீழ் மத்திய அரசின் பிரதிநிதியாக காணப்படும் ஆளுநர் ஒருவர் கதாநாயகனாக மேலுயர்ந்துள்ளார். அதன் மூலம் ஆளுநர் சக்தி மிக்கவர் அவர் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்பிக்கையூட்ட முயற்சிக்கப்படுகின்றது. இவற்றின் மூலம் மாகாண சபையை ஒரு பலமான அதிகார கட்டமைப்பாக வெளிக்காட்டும் உள்நோக்கம் உண்டு. இதில் இந்தியாவை திருப்திப்படுத்தும் உள்நோக்கமுமுண்டு. வடக்கில் ஒரு சந்திப்பின்போது ஜனாதிபதி இந்தியாவுக்கும் மன்னாருக்கும் இடையிலான தரைப்பாலம் பற்றியும் பேசியிருக்கிறார். அவர் அதை நிறைவேற்ற மாட்டார் என்பது புத்திசாலியான யாருக்கும் விளங்கும். ஆனால் அவர் அப்படிச் சொல்கிறார். 13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்வைப்பதன் மூலம்,இந்தியாவைத் திருப்திப்படுத்தும் வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம், கிழக்கில் பண்பாட்டு பெருவிழாவில் இந்தியாவின் உதவிகளை பெற்றதன் மூலம்,அவர் இந்தியாவை சந்தோஷப்படுத்த விளைகிறார். மாகாண சபைகளைப் பலமானவைகளாகக் காட்ட முயற்சிக்கின்றார். https://www.nillanthan.com/6477/
  18. நானும் புதுவருடம் பிறந்த அன்று பார்த்தேன். மிகவும் சவாலான சூழலிலும் மனிதர் தம்மைக் காத்துக்கொள்ள போராடுவர் என்பதும் நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் உள்ளவர்கள் என்பதும் தத்ரூபமாகக் காட்டப்ப்டிருந்தது. 60 நாள்வரை தாக்குப்பிடித்த நூமா இறந்தது கொடிய தருணம். நரமாமிசம் உண்ணமாட்டேன் என்று இறுதிவரை இருந்தார். முன்னர் ஏற்பட்ட காயத்தின் தொற்றினால் இறந்தார். அவரின் இறப்பு எஞ்சியோருக்கு மேலும் ஓர்மத்தைக் கொடுத்து இருவர் பத்து நாட்கள் மிகவும் சவாலான பனிமலையைக் கடந்து, 60 km க்கு மேல் உறைபனிக்குள் நடந்து சிலி நாட்டுக்குள் மனிதர்களை ஓர் ஆருக்கு எதிர்ப்பக்கம் சந்திக்கின்றார்கள். அது எஞ்சியோரை மீட்க உதவுகின்றது. கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு படம்.
  19. போதமும் காணாத போதம் – 14 திருவாசகப்பிள்ளை மாமா அதிகாலையிலேயே வீட்டுக்கு வந்திருந்தார். அமிலம் வேகித் தோலுரிந்தது மாதிரி முகமிருந்தது. தீட்சை அணிந்த மேனியில் வாசனை கமழ்ந்தது. செந்தளிப்பும், புன்சிரிப்பும் உடைந்த மாமாவைப் பார்க்கவே பயமாகவிருந்தது. “நீ கதைச்சால் தான், அவன் விளங்கிக் கொள்ளுவான். மனசு மாறுவான்” என்று அம்மாவிடம் சொன்னார். குங்குமம் இயக்கத்தில் சேர்ந்துவிட்டானா! என்று வியந்தேன். ஊரை உலையில் போட்டு கஞ்சியாக குடித்துவிடும் நரியவன். அவனிடம் இனி மரியாதையாக நடக்கவேண்டுமேயென நினைத்து தலையிலடித்தேன். ஆனால் இயக்கத்துக்கு போனவனை மனசு மாற்றச்சொல்லி அம்மாவிடம் வந்து கேட்கும் மாமாவைப் பார்த்தால் கொஞ்சம் பரிதாபமாகவே இருந்தது. சொந்தச் சகோதரியாக இருந்தாலும் இவ்வளவு நம்பியிருக்க வேண்டாம். தன்னுடைய பிள்ளை இயக்கத்துக்கு போனதும் “பால்ராஜ் மாதிரி ஒரு சண்டைக்காரனோட போய் நில்லு. உனக்கு ரத்தம் கொடுத்தது நானில்லை, நிலம். இரத்தம் நிலத்தினது. என்றவள் அம்மா. மாமாவையும் அம்மாவையும் ஊடறுத்து என்னுடைய ஷெல்லை இறக்கினேன். அவன் இயக்கத்துக்கு போனால், அவனுக்கு அழிவில்லை. அங்கயிருக்கிற மிச்சப்பேரை நினைச்சுத்தான் எனக்கு கவலை” என்றேன். எடேய், அவன் இயக்கத்துக்கு போகேல்ல, யெகோவா சபையில சேர்ந்திட்டானாம்” என்று சொன்ன அம்மா சிரித்தாள். “என்ர தெய்வமே. இயக்கத்துக்கு இன்னும் நல்ல காலமிருக்கு” ஆறுதலடைந்தேன். மாமாவின் நெற்றியில் அழியாது காய்ந்திருந்த திருநீற்றை பிளந்தறுக்கும் ரகசியமாய் வேர்வை இறங்கியது. கொஞ்சம் நிமிர்ந்தமர்ந்து “அவனை நேற்றே வீட்டிலிருந்து வெளியேறுமாறு சொல்லியிட்டன்” என்ற மாமா எழுந்தார். “குங்குமம் இப்ப எங்கயிருக்கிறான்” என்று கேட்டேன். கைவிரித்து தெரியாதென்றார். மாலையில் யெகோவாவின் ராஜ்ஜியத்தை அறிவிக்கும் சபைக்குச் சென்றேன். கொய்யா மரத்தடியிலிருந்து பைபிளை வாசித்த குங்குமம் என்னைக் கண்டதும் பரபரப்படைந்து மூடி மறைத்தான். என்ன குற்றமிழைத்தான், ஏன் பதறுகிறான். சிறியவர்களாக இருந்தபோது காகிதத்தைச் சுருட்டி பீக்காட்டில் புகைத்த பீடிக்கு கூட அஞ்சாதவன் குங்குமம். என்னை அமரச் சொல்லி கதிரையை எடுத்துத் தந்தான். “பைபிள் என்ன சொல்லுகிறது” என்று எழுதப்பட்ட புத்தகமொன்றும் இருந்தது. காவற்கோபுரம் வண்ணமயமான சஞ்சிகை. ஒருமுறை விக்டர் பிரதரிடமிருந்து வாங்கிச் சென்றேன். ஏதேன் தோட்டத்தில் கனியுண்ணும் ஆதாமும் ஏவாளும் கண்சொருகி தித்திக்கும் கணத்தை வரைந்திருந்தார்கள். பாம்போ அதனை வேடிக்கை பார்த்தது. பாவத்தின் விளைவுகளை அறியாத மானுடரின் மூதாதையர்களை கையிலேந்தியபடி வீட்டுக்குள் சென்றேன். வாசலில் அமர்ந்திருந்த உண்ணி ஆச்சி, “கையில என்ன புத்தகமடா மோனே” என்று கேட்டாள். காவற்கோபுரம், பிரதரிட்ட வாங்கி வந்தனான் என்றேன். “பிரதரோ, அது ஆரடா?” புத்தகத்தை வந்து பார்த்தாள், உலக முடிவு எப்போது என்று எழுதப்பட்டிருந்தது. எடேய் சனியனே, உந்த வேதக்காரற்ற தரித்திரியத்தை வீட்டுக்குள் கொண்டு வந்து வைச்சிருக்கிறியே, உனக்கு பாவமாய் தெரியேல்லையோ. எடுத்து எரிச்சுப் போடுவன்” என்றாள். “விழிப்புடன் இருங்கள். ஏனென்றால் உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது” – மத்தேயு அதிகாரத்திலிருந்து அச்சிடப்பட்டிருந்த வாசகத்தை ஆச்சிக்கு முன்நின்று சத்தமாக வாசித்தேன். ஆச்சி கழுத்தில் கிடந்த உண்ணிகளை பிய்த்து எறிந்து வருகிற ரத்தத்தை விரல்களில் தொட்டுப் பார்த்தாள். உண்ணி ஆச்சி இருந்திருந்தால் குங்குமத்தை தோலுரித்திருப்பாள். இவனின் நல்ல காலத்துக்கு ஆச்சி இறைபதம் அடைந்திருந்தாள். நாங்கள் இருவரும் கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் விக்டர் பிரதர் வந்து சேர்ந்தார். வணக்கம் சொன்னார், எழுந்து நின்று வணங்கினேன். அமரும்படி சைகை செய்தார். அம்மா சொன்னதைப் போலவே குங்குமத்தை வீட்டுக்கு அழைத்து வந்தேன். அன்றிரவு பைபிளும் கையுமாக இருந்தான். நீண்ட பிரார்த்தனையைப் போல ஒளிவீசும் குப்பி விளக்கில் வாசித்தான். நுளம்புக்கடி தாங்காது வலைக்குள் உறங்கினேன். விடியும் வரை பைபிளோடோயிருந்தான். தழும்பேறிய சிலுவையைப் போல என் மனத்துள் குங்குமம் உயர்ந்தான். ஏற்றுக்கொண்டதில் தீவிரமாகவிருப்பவன் மதிப்புடையவன். காலையில் ஒன்றாக காட்டுக்குப் போனோம். இரண்டு போராளிகள் சைக்கிளில் வீதியைக் குறுக்கறுத்துப் போயினர். காட்டில் கருமம் முடித்து அடிகழுவி எழுந்தோம். “நான் செய்தது பிழையில்லை. ஆனால் அப்பா நடந்து கொண்ட விதம் குரூரமானது. வேதத்துக்கு மாறினால் இவருக்கு என்ன பிரச்சனை” குங்குமம் பனிவிலக்கும் பூமியோடு கதகதப்பை உருவாக்கினான். “மச்சான், நீ விரும்புறது தான் உன்ர சமயம். தெய்வம். அதில எவரும் தலைநீட்டேலாது. அது அப்பாவா இருந்தாலும் பொருந்தும்” என்றேன். “இறுதி நாளில் உலகம் அழிந்து தேவனின் அரசு நிறுவப்படுகையில் திருவாசகப்பிள்ளை யெகோவாவை நம்புவார். அதுவரைக்கும் என்னை ஏசட்டும். நான் வீடு வீடாகச் சென்று ராஜ்ஜத்தை பிரச்சாரம் செய்யப் போறன்” என்றான். வீட்டுக்கு வந்தோம். இயக்கத்தின் பிரச்சார பிரிவுப் போராளிகள் மூவர் வந்து நின்றனர். மாலையில் எங்களுடைய கிராமத்தில் நடைபெறவிருக்கும் தெருநாடகமொன்றிற்கு வரும் கலைஞர்களை வீட்டில் தங்கவைக்க முடியுமாவென அம்மாவிடம் கேட்டார்கள். மறுப்பாளா அவள். இரவு இங்கேயே சாப்பிட வேண்டுமென வேண்டினாள். அவர்கள் பெருவிருப்புடன் தலையசைத்துச் சென்றனர். “இவர்கள் எல்லோரையும் ஒருநாள் யெகோவா மன்னிப்பார்” என்றான். குங்குமத்தின் நல்ல காலம், அம்மா அவர்களை வழியனுப்பச் சென்றிருந்தாள். அவள் காதில் விழுந்தால் மன்னிப்பெல்லாம் இல்லை. உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றுவாள். ஜென்மம் தீர்ந்தாலும் படலை திறக்காள். குங்குமம் இவையெல்லாவற்றையும் அறிந்திருந்தும் துடுக்குத்தனமாய் நடந்தான். அம்மா சாப்பாடு போடுகிறேன் என்ற போது வேண்டாமென மறுத்தான். விரதமிருப்பதாக கூறினான். எப்போது பசித்தாலும் சாப்பிடு என்றாள். மாமா வீட்டுக்கு வந்தார். பைபிள் படித்துக் கொண்டிருந்த குங்குமம் எழுந்து ஆச்சியின் கொட்டிலுக்குப் போனான். “இவனை ஏன் வீட்டில அண்டி வைச்சிருக்கிறாய்” என்று அம்மாவோடு சண்டை போட்டார். “மாமா அவனை நீங்கள் குறைச்சு மதிப்பிடாதேங்கோ. இப்ப பழைய குங்குமம் இல்ல” என்றதும் “ஓமோம், படிச்சு கம்பெஸ்க்கெல்லே போய்ட்டான்” என்று நக்கல் அடித்தார். தனக்குப் பிடிச்ச சமயத்தில சேர்கிறதொண்டும் ராஜ துரோகம் இல்ல. இப்பிடி அவனைப் போட்டு எதையாவது செய்து கொண்டிருந்தால், நான் இயக்கத்திட்ட போய் சொல்லிப்போடுவன். மதவுணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருக்கிறது பாரிய குற்றம்” என்றேன். “நாங்கள் பார்க்காத இயக்கத்தை இப்ப எங்களுக்கு நீங்கள் காட்டுறியள்” என்றார். “அப்பிடி வைச்சுக் கொள்ளுங்களேன்” என்று சொன்னதும் “இனிமேல் இந்த வீட்டுக்கும் நான் வரப்போறதில்லை” என்றார் மாமா. குங்குமம் ஊழியக்காரனாக தொடர்ந்து செயற்பட ஆரம்பித்தான். இரண்டு மாதங்களுக்கிடையில் சொந்தக்காரப் பெண்ணொருத்தி உட்பட எட்டுப்பேரை சபையில் இணைத்துக் கொண்டான். திருமுழுக்கு நடைபெறும் நாளையும் அவர்களுக்கு குறித்தனர். குங்குமம் களப்பணி அறிக்கையை கொடுத்து டேவிட் பிரதரிடம் பாராட்டுக்களை வாங்கியதாகச் சொன்னான். அவனிடமிருந்த நரித்தனமும் கெடு நினைப்புக்களும் இல்லாமல் சாதுவாகியிருந்தான். யெகோவாவின் அற்புதமே ஓங்குக! என்று ஒருதடவை மனதுக்குள் சொன்னேன். உண்ணி ஆச்சி வாசலில் அமர்ந்திருக்கிறாள். அவளுடைய காலுக்கடியில் கறுப்பன் வால் சுருட்டி படுத்திருந்தான். முகத்தில் வளர்ந்திருந்த உண்ணிகளை பிய்த்தெறிந்து ரத்தம் கசிய குந்தியிருந்து “என்னடா மோனே” என்று கேட்டாள். என்னுடைய கையில் கிடந்த துண்டுப் பிரசுரத்தை வாங்கிப் பார்த்தாள். “தமிழீழ விடுதலைக்கு தோள் கொடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. பார்த்துவிட்டு தருவித்தாள். “இவன் குங்குமம் எங்க” கேட்டாள். அவன் யெகோவா சபையில இருக்கிறான். “அவனைக் கவனமாய்ப் பார், பெரிய பாரத்தை சுமந்து நெடுந்தூரம் போகப்போறான்” என்றாள். குங்குமம் சிலுவையில் அறையைப்பட்டு வானத்துக்கு உயர்ந்து நின்றான். அவனுடைய கால்கள் அசையமுடியாமல் ஆணியில் இறுக்கப்பட்டிருந்தன. முள்முடியில் ஒரு செம்போத்து அமர்ந்திருந்து அவனை கீழ்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது. குங்குமத்தின் முகம் மலர்ந்து புன்னகைத்தபடியிருந்தது. கண்ணீர் வழிந்து ஒழுகியது. கண்களைத் திறந்தேன். சித்தம் படபடத்தது. தலைமாட்டிலிருந்த செம்புத் தண்ணீரைக் குடித்தேன். எழுந்து வெளியே வந்தேன். வாசலில் உண்ணித் தோல்கள் பரவியிருந்தன. ஆச்சியின் காலடிகள் வீட்டு முற்றத்திலிருந்து கிணற்றடி வரைக்கும் அழியாமல் இருந்தது. குசினிக்குள்ளிருந்த அம்மாவிடம் ஓடிச்சென்றேன். வானொலியில் திருச்சி லோகநாதன் “நெஞ்சம் கனிந்து முருகா என்று மனதில் நினைக்கின்ற நேரமெல்லாம்” என்று பாடிக்கொண்டிருந்தார். பாடலைக் கேட்டபடி அப்பம் சுட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் ஆச்சி கனவில் சொன்னதை தெரிவித்தேன். ஒருநாள் மாலையில் குங்குமம் வீட்டிற்கு வந்திருந்தான். யெகோவா சபையின் வேலையாக மூன்று நாட்களில் கொழும்புக்கு செல்லவிருப்பதாக சொன்னான். இயக்கத்திடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் அது கிடைத்துவிட்டால் பிரதர் டேவிட்டோடு பயணமென்றான். ஆச்சி கனவில் வந்து சொன்னவவற்றை ஒரு சொல்லும் விடாமல் குங்குமத்துக்கும் அறிவித்தேன். “என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள். எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்” என கர்த்தரிடமும் ஆச்சியிடமும் பிரார்த்தித்து விட்டேனென குங்குமம் சொன்னான். ஒன்றாக அமர்ந்திருந்து சாப்பிட்டோம். அவனுக்குப் பிடித்தது மண்சட்டியில் வைக்கப்பட்டிருந்த மீன் குழம்பு. அம்மா நிறைவாகச் சாப்பிடுமாறு சொன்னாள். நிலவூறி வளர்ந்த இரவுக்கு சந்தோஷத்தை காணிக்கையாக்கினோம். குங்குமம் கொழும்புக்குச் சென்று நான்கு நாட்களில் தொடர்பு கொண்டான். வன்னியன் தொலைத்தொடர்பு நிலையத்தில் நானும் அம்மாவும் சென்றும் கதைத்தோம். அங்குள்ள சபையின் தலைமைக்காரியத்தில் இருப்பதாகச் சொன்னான். நன்றாக படித்து சமயக்குருவாக ஆகிவிடு என்றேன். குங்குமம் சரி மச்சான் என்று சொல்லி தொடர்பை துண்டித்தான். மாமாவுக்கு அவன் கொழும்பு சென்றடைந்ததைப் போய்ச் சொன்னேன். இறுகிப் போய் கேட்டு, தலையை மட்டும் ஆட்டினார். இயக்கம் பிரச்சாரத்தின் மூலம் ஆட்களை படையில் சேர்க்கும் ஒரு களமுனையை திறந்திருந்தது. சைக்கிளில் செல்லும் இளையோரை வழிமறித்து “வயது என்ன” என்று கேட்கும் போராளிகள், போராட்டத்தின் அவசியத்தைக் கூறி ஐந்து நிமிடங்கள் பேச எண்ணுவார்கள். பதினெட்டு வயது என்றால் அவர்களுடன் கதைப்பார்கள். குறைவான வயதென்றால் போகலாம் என்பார்கள். “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை” என்பதைப் போல போராட்டம் வீதியில் பிரச்சாரம் செய்தது. நாங்கள் எங்களுடைய கிராமத்தை விட்டு இடம்பெயருமளவுக்கு யுத்தம் தொடங்கியது. யெகோவா சபைக்குள்ளிருந்த புத்தகங்களையும், பைபிள்களையும் ஒரு மூட்டையில் கட்டி நடக்க ஆரம்பித்தேன். இடம்பெயர்ந்து போன இடத்தில் மரத்தடியொன்றின் கீழே அமர்ந்திருந்தோம். அங்கே சமையல் செய்து, உண்டு, உறங்கி நான்கு நாட்களாகியும் பைபிளையே வாசித்தேன். “அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்” என்ற வாசகத்தில் வேரூன்றி நின்றேன். கொழும்பில் நடந்த தாக்குதல் ஒன்றில் இராணுவத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வரத் தொடங்கின. சூரியன் பண்பலைச் செய்தியில் அது தற்கொலைத் தாக்குதல் என உறுதியளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இராணுவ அணிவகுப்பில் நடந்த இந்தத் தாக்குதலில் பலியான சிப்பாய்களின் எண்ணிக்கை பற்றிய விவரம் எதுவும் அப்போது தெரியவில்லை. வன்னியின் வான்பரப்பில் போர்விமானங்கள் ஆவேசங்கொண்டு புகுந்தன. ஆறுக்கும் மேற்பட்ட போர்விமானங்கள் புலிகளை இலக்கு வைத்து குண்டுகளை வீசின என்று ஊடகங்கள் தெரிவித்தன. வழமை போல சனங்களின் பிணங்களை அடுக்கி, வன்னியே ஓலமிட்டது. நாங்களிருக்கும் இடத்தைத் தேடிக்கண்டு பிடித்த அரசியல் போராளிகள் மாமாவை அழைத்து உங்களுடைய மகன் வீரச்சாவு அடைந்து விட்டார் என்று சொல்லினர். “தம்பியவே, அவன் உங்கட கொம்பனியில இல்லை, கொழும்பில இருக்கிறான். அதுவும் யெகோவா சபையில. அவங்கள் சண்டைக்கு எதிரானவங்கள். ரத்தம் குடுக்கவே மாட்டங்கள். நீங்கள் மாறி வந்து நிண்டு கதைக்கிறியள்.” அய்யா. உங்கட மகனுக்கு குங்கும சிலையோன் தானே பேர். “ஓம்” “அவர் டேவிட் பிரதரோட இருந்தவர் தானே” “ஓம்” “இப்ப ஒரு மாசத்துக்கு முன்ன கொழும்புக்கு போனவர் தானே” “ஓம் “ “நாலு நாளுக்கு முன்னம் கொழும்பில நடந்த தாக்குதலில ஒரு இராணுவத்தளபதியை அடிச்சம் தானே. அதில கரும்புலியாய் இருந்ததில ஒருவர் உங்கட மகன் “மேஜர் இம்மானுவேல்” வீரச்சாவு அடைந்தார். மாமா ஓம்…ஓம்…ஓம்… என்பதைச் சொல்லிக் கொண்டே இருந்தார். விஷயம் கேள்விப்பட்ட அம்மாவும் நானும் சனங்களை விலத்திக்கொண்டு மாமாவிடம் ஓடிச் சென்றோம். ஓம்….ஓம்…ஓம் என்று சொல்லிக் கொண்டிருந்த மாமாவைப் பார்க்க இயலாது இருந்தது. ஏற்பற்ற பார்வையால் பூமியைப் பார்த்தார். வானத்தைப் பார்த்தார். அவனது தியாகத்தின் சாகசத்தில் உறைந்து நின்றேன். என்னைக் கண்டதும் கட்டியணைத்து “அவன் உன்னட்டையாவது உண்மையைச் சொல்லியிருக்கலாம் தானே” என்றார். “ஓம்” அன்றிரவு மரத்தின் கீழே உறங்கச் சென்ற போது “உனக்கு அவன் இயக்கமெண்டு உண்மையிலும் தெரியாதோ” கேட்டாள் அம்மா. “இல்லையம்மா, உங்களுக்குத் தெரியுமோ” அம்மா எதுவும் சொல்லாமல் நின்றாள். அவளது ரகசிய காப்புக்களை தகர்க்க இயலாது. “உண்ணி ஆச்சி, கனவில சொன்ன பாரம் இப்ப தான் எனக்கு விளங்குது அம்மா” என்றேன். “அண்டைக்கு அவன் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கோ” “என்னம்மா” “பரலோகப் படைகளின்ர யெகோவா எங்களோடு இருக்கிறார். யாக்கோபின்ர கடவுள் எங்களுக்கு பாதுகாப்பான அடைக்கலமாக இருக்கிறார். தேசங்களின் மத்தியில் நான் உயர்ந்திருப்பேன். பூமியில் உயர்ந்திருப்பேன்” என்றானே, மறந்திட்டியோ! “எதோ சொன்னவன் தான். இப்ப நீங்கள் சொல்லும் போது தான் ஞாபகம் வருது” “அவனை இனி நீயில்லை நானில்லை. தேசமும் மறக்காது” என்றாள். அன்றைக்கு ஆச்சியின் கனவை சொன்ன போது “இஞ்ச எல்லாப்பிள்ளையளும் பாரம் தான் சுமக்கினம். அவனும் சுமக்கட்டும். அது சிலுவையோ, துவக்கோ. என்னவென்றாலும் கவலைப்பட எதுவுமில்லை” என்ற அம்மாவின் வார்த்தைகளையும் என்னால் மறக்க முடியாது. https://akaramuthalvan.com/?p=1556
  20. 😁 அந்தத் தைரியத்தில்தான் ஆசான் மினக்கெட்டு எழுதுகின்றார்!
  21. நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. நாட்டின் மிக நீளமான கடல்வழிபாலம் என்ற சிறப்பை பெற்ற இந்த பாலம் மும்பை சிவ்ரியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிகிறது. நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது ‘மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்’ என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு ‘அடல் சேது’ என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணி 2018-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி தொடங்கியது. சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது. ரூ.17 ஆயிரத்து 843 கோடி செலவில் பிரமாண்டமாக வடிவம் பெற்றுள்ள இந்த பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது. மும்பை- நவிமும்பை இடையே 15 கி.மீ. பயண தூரத்தையும், 1 முதல் 1½ மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக பயண நேரத்தையும் குறைக்கிறது. இந்த பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இந்த பிரமாண்ட பாலத்தை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இவை உள்ளிட்ட வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். மதியம் 12.15 மணிக்கு நாசிக் வரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் தேசிய இளைஞர் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். பின்னர் மும்பை வரும் அவர் பிற்பகல் 3.30 மணிக்கு கடல்வழி பாலத்தை திறந்து வைக்கிறார். இதையடுத்து நவிமும்பையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். மாலை 4.15 மணியளவில் இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாநிலத்தில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடியிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில் ரூ.8 ஆயிரத்து 700 கோடி மதிப்பீட்டில் மும்பை எல்ேலா கேட் முதல் மெரின் டிரைவ் வரை 9.2 கி.மீ. தூரம் அமைக்கப்படும் சுரங்கப்பாதைக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த சுரங்கப்பாதை கிழக்கு புறநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்த சுரங்க்பாதை மும்பை வளர்ச்சிக்கு மற்றொரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்படுகிறது. ‘பாரத் ரத்னம்’ என்ற நகை தொழில் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். மகாராஷ்டிரத்தில் முடிவுற்ற மற்றும் தொடங்கி வைக்கும் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாகும். விழாக்களில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நவிமும்பை பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகையையொட்டி மும்பை, நவிமும்பை மற்றும் நாசிக் நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. https://akkinikkunchu.com/?p=265490
  22. காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு – பின்னணியில் புலிக்குட்டி? adminJanuary 12, 2024 யாழ்ப்பாணம் – மண்டைதீவு காவலரண் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைதான இருவர், பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நால்வரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள ஊர்காவற்துறை காவற்துறையினரின் காவலரண் மீது நேற்று முன்தினம் புதன்கிழமை (10.01.24) இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இருவரை காவற்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (11.01.24) முற்படுத்தினர். அதன் போது, போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வுக்கு அனுப்பிய சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவும், ஏற்கனவே காவற்துறைஉத்தியோகஸ்தர் ஒருவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்ததாகவும், இதன் பின்னணியில் “புலிக்குட்டி” என்பவரின் குழு செயற்பட்டதாகவும , கைது செய்யப்பட்ட இருவரும் ” புலிக்குட்டி” குழுவை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, கைது செய்யப்பட்ட இருவரும் , அவர்களின் நண்பர் ஒருவரின் பதிவு திருமணத்தை முன்னிட்டு , வீடொன்றில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த போதே கைது செய்யப்பட்டனர் எனவும், காவற்துறையினர் கூறும் புலிக்குட்டி என்பவரை இவர்களுக்கு தெரியாது என மன்றுரைத்தார். அதனை தொடர்ந்து இரு சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல ஊர்கவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஊர்கவற்துறை காவற்துறையினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை சம்பவம் தொடர்பில், மேலும் நால்வரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர், https://globaltamilnews.net/2024/199665/
  23. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணில் எடுத்துள்ள தீர்மானம்! 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், பொதுத் தேர்தலை எதிர்வரும் 2025 ஜனவரியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக்குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான வருடம் எனக் கூறப்பட்டதுடன், இந்த வருடத்தில் குறைந்தது 3 தேர்தல்களாவது நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக இந்த வருடத்தில் முக்கியமான தேர்தலாக இருக்கும் ஜனாதிபதித் தேர்தலை மாத்திரம் நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையிலேயே இந்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலை மாத்திரம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அதேபோன்று, அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தம்மிக பெரேரா உள்ளிட்ட நால்வரின் பெயர்களை ஆராய்ந்து வருவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/ஜனாதிபதித்-தேர்தல்-தொடர்/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.