Everything posted by கிருபன்
- IMG_6820.jpeg
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 12 கிளிநொச்சி சந்தையில் மரக்கறிகளை வாங்கி அவசர அவசரமாக வெளியே வந்த “பச்சை” இரணைமடுவுக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தார். உளமழுத்தும் இன்னல் முகம் முழுதும் நின்றது. வியர்வையில் தோய்ந்திருந்தார். இன்னுமிரண்டு நாட்களில் பயணம் சரிப்பட்டால் பிள்ளைகளைக் காப்பாற்றி விடமுடியுமென்ற வேண்டுதல். பச்சைக்கு அருகில் வந்தமர்ந்தார் கருவாட்டி யாபாரி மாசிலா. அவரின் பொய்க்கால் நன்றாகப் பழுதடைந்திருந்தது. வெண்புறா நிறுவனத்தில் புதிய பொய்க்கால் வேண்டிப் பதிவு செய்துள்ளதாக பச்சையிடம் தெரிவித்தார். இரணைமடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பச்சை, ஜன்னல் வழியாக மாசிலாவைப் பார்த்தார். மாசிலா தனது பொய்க்காலை சரிப்படுத்தி கொஞ்சம் ஆசுவாசமாக அமர்ந்திருந்தான். வீட்டில் நின்ற இரண்டு கிடாய்களுக்கும் தவிடு கரைத்து வைத்த “கொண்டோடி” சுகந்தா படலைக்குள் நுழையும் பச்சையை பார்த்தாள். புருஷனின் நடையில் ஏதாவொரு குழப்பமிருப்பதாக உணர்ந்தாள். “என்னன, ரத்தச் சோகை வந்த ஆக்கள் மாதிரி தெம்பில்லாம நடக்கிறியள்” என்று கேட்டாள். பச்சையிடம் பதிலில்லை. வாசலிலிருந்த வாளி நீரில் கால்களைக் கழுவி, வீட்டிற்குள் நுழைந்தார். இரண்டு கிடாய்களும் தவிட்டுத் தண்ணியை மூசி மூசி உள்ளிளுக்கும் சத்தம் மத்தியான வெயிலோடு கூடியிருந்தது. கறுத்து மினுமினுத்து நன்றாக உயர்ந்து நிற்கும் முதல் கிடாய் சித்திரனுக்கும், செவி நீண்ட கறுப்பு நிறத்திலான துடியான மற்ற கிடாய் அப்பனுக்குமென பாலத்தடி சிவன் கோவிலுக்கு நேர்த்தியாக வளர்த்தாள். ஆனால் பிள்ளைகளை காப்பாற்ற தெய்வத்தால் முடியாதென்றும், அது தெய்வத்தையே படைத்த மனுஷனாலேயே ஆகும் காரியமெனவும் பச்சை நம்பினார். தன்னிடமிருந்த பணத்தையும், சொத்துக்களையும் மனம் நிறுத்தி எண்ணினார். கனகாம்பிகைக் குளத்தடியில் ஏக்கர் கணக்கிலிருந்த தென்னந்தோப்பும், முறிகண்டியில் தரிசாகக் கிடக்கும் எழுபது ஏக்கர் நிலமும் வேண்டாமெனத் தோன்றியது. கையிருப்பிலிருந்த பணம் பல லட்சங்கள். வங்கியில் வைப்பிலுள்ள பணத்தையும் கணக்குப் போட்டார். தமிழீழ வைப்பகத்தில் இருக்கிற பணத்தை எடுப்பதில்லை என முடிவு செய்தார். சொத்துக்களை விற்பது இயக்கத்திற்கு தெரிந்தாலும் ஆபத்து நேரும். எதுவும் வேண்டாம். “உயிர். அந்த பொக்கிஷத்தை மட்டும் மீட்டுவிட்டால் போதுமானது. “எத்தனை காலம் இந்த மயிரெல்லாம் நீடிக்கப்போகிறது. இவர்கள் எல்லாம் அழிந்து போகுமொரு நாள் வராமலா போகும். நிலத்துக்காக சாவதெல்லாம் விஷர்த்தனம். ஆயுத வெறி. இத்தனை வசதிகளோடு இருக்கும் எனது பிள்ளைகள் ஏன் துவக்கெடுத்து சண்டை செய்ய வேண்டும்?” என்று கற்பூரத்தைக் கொளுத்தி பாலத்தடி சிவனை வழிபட்டார் பச்சை. “கொண்டோடி”சுகந்தாவிடம் பச்சைத் தண்ணீர் கேட்டால் கூட கிடைக்காது. கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டுக்கூட சனங்கள் பார்த்ததில்லை. இயக்கம் சனங்களிடம் நகையும், பணமும் கேட்ட காலத்தில் தன்னுடைய இரண்டு தோட்டையும் கழற்றிக் கொடுத்ததாக ஒரு வரலாறு சொல்லுவாள். ஏற்பாடுகள் எதனையும் சுகந்தாவிடம் பச்சை சொல்லவில்லை. அவளை நம்பமுடியாது. யாரிடமாவது வாய்தவறிச் சொல்லவும் செய்வாள். சித்திரன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்பன் பதினோராவது வகுப்பு. இருவரும் நல்ல கெட்டிக்காரர்கள். இந்தியாவிற்கு அழைத்துச் சென்று தனது பிள்ளைகளை பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கவேண்டுமென பச்சை ஆவலாதிப்பட்டார். முதன்முதலில் சித்திரனுக்கு தனது திட்டத்தைச் சொல்லலாமென பச்சை உறுதி பூண்டார். வீட்டுக்குப் பின்னாலுள்ள மாந்தோப்பில் கட்டிலில் உறங்கியிருந்த சித்திரனை தட்டியெழுப்பினார். எப்போதுமற்ற பழக்கமொன்றை எதிர்கொண்ட திகைப்பில் கொஞ்சம் நேரம் கதையாமல் இருந்தான். ஆனாலும் பச்சை கதைக்கத் தொடங்கினார். “சித்து, நாங்கள் இஞ்ச இருந்து வெளிக்கிடலாம், இயக்கம் நல்லா இறுகப்போகுது. பிள்ளையளை பிடிச்சு போருக்கு படைக்கப்போறாங்கள். நான் எல்லா ஏற்பாட்டையும் செய்திட்டன். நாளைக்கு பின்நேரமாய் இஞ்சயிருந்து வெளிக்கிட்டு போய்டலாம். பிறகு கடலால இந்தியாவுக்கு” “அப்பா, உங்கட திட்டம் சரி வருமே, ஏதேனும் தகவல் கசிஞ்சால் கூட இயக்கம் மன்னிக்காது. எல்லாத்தையும் பறிச்சுப்போட்டு உள்ள தள்ளிடுவாங்கள்” சித்திரன் ஒத்துக்கொண்டது நல்ல சகுனமென எண்ணினார். பச்சைக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. “அதைப் பற்றி நீ கவலைப்படாத. கொம்மாவை மட்டும் சம்மதிக்க வைச்சுப் போடு. அதுதான் இப்ப ஒரே தலையிடி.” என்றார். “நாங்கள் எல்லாரும் வெளிக்கிடப் போகிறம் எண்டால் அம்மா இஞ்ச தனிய இருப்பாவே, வரத்தானே வேணும்” காலில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு, நான் அம்மாவிட்ட கதைக்கிறன்” என்றான் சித்திரன். அன்றிரவு வீட்டில் கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. “இத்தனை சொத்துக்களையும், நிலங்களையும் அம்போவிண்டு விட்டிட்டு ஆள்தெரியாத ஊருக்கு எதுக்கு ஓடோணும். செத்தால் சாவம். எல்லாற்ற பிள்ளையளுக்கும் நடக்கப்போறது தானே எனக்கும் நடக்கப்போகுது. நான் அதைத் தாங்கிக் கொள்வன். ஆனால் இந்த ஊரை விட்டு என்னால வர ஏலாது” சுகந்தா மறுத்தாள். அப்பனுக்கு எந்த விருப்பும் வெறுப்பும் இல்லை. அவன் எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான். “சுகந்தா நாட்டில நடக்கப்போறது என்னெண்டு தெரியாமல் கதையாத, இஞ்ச இருக்கிற ஒருத்தரும் மிஞ்சப்போவதில்லை. அந்த நிலைமைக்குத் தான் இவங்கள் ரெடியாகுறாங்கள்”பச்சை சொன்னார். “உயிர் சாம்பலாய்ப் போனாலும் இந்த மண்ணில போகட்டும். இவ்வளவு சனமும் இஞ்ச இருக்க நாங்கள் மட்டும் சாகப்பயந்து ஓடித்தப்புறத நினைக்க குமட்டுது. அவமானம்” “எடியே வே*, உனக்கு அப்பிடியென்னடி கரப்பன் வியாதி. இஞ்ச ஆரோடையோ படுக்க நாள் பார்த்து வைச்சிருக்கிறியோ. நான் என்ன சொல்லுறனோ. அதைச் செய்” அப்பன் வெகுண்டு துடித்தான். அவனது கை நரம்புகளில் கொலைத்துடி எழுந்தது. பச்சையை நோக்கி நடந்து போய் பளார் என்று கன்னத்தில் அறைந்தான். சித்திரன் அதிர்ச்சி அடைந்து அப்பனை இழுத்துப் பிடித்தான். பச்சை கன்னத்தைப் பிடித்தபடி பார்வை மங்க அமர்ந்தார். உடல் சிவந்து தளும்பி அழுதார். சுகந்தா அப்பனை அரவணைத்து நின்றாள். மாந்தோப்பிலிருந்த கட்டிலில் அமர்ந்திருந்த பச்சையிடம் “ அப்போய், இவையள் வராட்டி என்ன நீங்களும் நானும் வெளிக்கிடுவம்” சித்திரன் சொன்னது அவ்வளவு தீவிரமாயிருந்தது. அது பச்சையின் உடலில் எரிந்தடங்க மறுத்த காயத்தின் எரிச்சலுக்கு குளிர் பரப்பியது. ஆனாலும் வேண்டாமென்று மறுத்தார். எல்லாரும் மனம் ஒத்து வெளிக்கிடுவம். அது விரைவிலேயே நடக்கும். பொறுத்திருப்பம்” என்றார். “அதுக்குள்ள தமிழீழம் கிடைச்சால் என்ன செய்யிறது” சித்திரன் கேட்டான். பச்சை தன்னுடைய கன்னத்திலிருந்த கையை எடுத்து “எழும்பிப் போடா மடப்*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்யாண்டி” என்று ஏசினார். ஒரு சில மாதங்களில் வன்னியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. “புலிகள் படையில் சேர்க” என்ற பிரச்சாரங்கள் வீதிகள் தோறும் நிகழ்ந்தன. பள்ளிக்கூடம் சென்று வருகிற இளவட்டங்களை நிறுத்தி வைத்து போராட்டத்தின் அவசியத்தையும் இக்கட்டையும் பிரச்சாரப் பிரிவு போராளிகள் முன்வைத்தனர். கதைத்து விளங்கவைத்து இயக்கத்தில் இணையுங்கள் என்பது மேலிடத்து ஆணையாம். சுகந்தாவுக்கு சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தின. சித்திரன் நாளும் பொழுதும் தாயிடம் ஒப்புக்கொள்ளல் வாங்கவே நேரம் செலவழித்தான். பச்சை முல்லைத்தீவுக்குச் சென்று ஓட்டியைச் சந்தித்து வந்தார். ஏற்கனவே நடந்ததைப் போல ஏமாற்றம் எதுவும் இந்தத் தடவை நிகழாதென ஓட்டிக்கு உறுதியளித்தார். சுகந்தா ஆடுகளையும் வீட்டிலுள்ள சில பொருட்களையும் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க விரும்பினாள். “எதுவும் செய்ய வேண்டாம். நாங்கள் இல்லையென அறிந்த பிறகு மாமாவே எல்லாவற்றையும் வந்து எடுத்துவிடுவார்” என்றான் சித்திரன். கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் பச்சை இறங்கினார். அங்கிருந்து இரணைமடுவுக்கு செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். சித்திரன் தன்னுடைய நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பன் வீரபத்திரர் கோவிலுக்குப் பின்புறமுள்ள பெரிய கல்லொன்றில் அமர்ந்திருந்தான். சுகந்தா தன்னுடைய நகைகளை எடுத்து ஒரு பெரிய தலையணைக்குள் பதுக்கினாள். தங்கத் தலையணை. அதற்கு மேல் எத்தனையோ மெழுகுத்தாள்களால் அரண் அமைத்தாள். எல்லோருக்குள்ளும் நெடிய வலி குறுக்குமறுக்காக தையலிட்டது. எதன்பொருட்டு நிலம் பிரிந்தாலும் வருந்துயர் ஆறாதது. அப்பனுக்குப் பின்னால் வந்து நின்றாள் நறுமுகை. அவளது கைகளில் பனங்காய் பனியாரம் நிரம்பியிருந்தது. நிலத்தின் வாசனையோடு கமழும் பொழுது. அப்பன் அவளை இறுகக் கட்டியணைத்து முத்தமிட்டான். அவளுடைய கைகள் தளர்ந்தன. மண்ணில் சிறுமுலைக்காம்புகள் தோன்றியதைப் போல பனங்காய்பனியாரம் சிதறுண்டன. கல்லின் மீது யாக்கைகள் கனன்றன. அமுதுண்ணும் பொலிவுடன் வண்டுகள் பறந்தன. அப்பனின் மூச்சில் சிவந்த உதடுகளால் நறுமுகை தாகம் பெருகி மிடறு எச்சில் விழுங்கினாள். அப்பனின் தவிப்புக்கூடியது. அவன் சொன்னான் “ நாங்கள் இஞ்ச இருந்து தப்பியோடப் போகிறம்” “எங்க” “இந்தியாவுக்கு. அப்பா ஏற்பாடு செய்திட்டார். படகில போகப் போகிறம்” “உங்கட குடும்பத்துக்கு என்ன விசரே, கடல் முழுக்க இயக்கம் தான். அலைகளையே எண்ணிக் கொண்டிருப்பினம். இதில நீங்கள் எங்க தப்பி, எங்க போகப்போறியள்” “தெரியேல்ல, நடக்கிறது நடக்கட்டும். எல்லாரும் போய், நான் மட்டும் நிண்டால் இயக்கம் என்னைத்தான் சிறையில அடைக்கும்” “நீ, போய் இயக்கத்திட்ட சொல்லு. அப்படியெண்டால் உனக்கு தண்டனை இருக்காது” “அய்யோ, குடும்பத்தைக் காட்டி குடுக்கச் சொல்லுறியோ, அம்மா பாவம்” “அப்ப, கடலில போய் சாகப்போறாய். அப்பிடித்தானே?” “நீ இயக்கத்தில போய் சொல்லிப்போடாத, எனக்கு பயமாயிருக்கு. எதோ ஒரு குறுகுறுப்பில உன்னட்ட சொல்லிட்டேன்” “எனக்கு அது வேலை கிடையாது. ஆனால் உங்கட அப்பா, இதுமாதிரி திட்டத்தில இருக்கிறார் என்று இயக்கத்துக்கு தெரியாமல் இருக்காது. ஊரில இருக்கிற முகவர்கள் ஆரேனும் மணந்து பிடிச்சிருப்பினம்” “எப்பிடி உறுதியாய் சொல்லுறாய் நறுமுகை” “இஞ்ச எதையும் ஆரும் ரகசியமாய் செய்து தப்ப ஏலாது. ஏனென்டால் இயக்கத்தை விடவும் அதைச் செய்ய உலகத்தில ஆளில்லை. ஆனா நீ உந்தப் பயணத்தில சேராத. எனக்காக மட்டுமில்ல, உனக்காகவும் சொல்லுறன்” என்று சொல்லிய நறுமுகை மண்ணில் விழுந்து கிடந்த பனங்காய் பணியாரங்களை ஊதி ஊதி அவனுக்கு தீத்திவிட்டாள். “இவ்வளவு உருசையாய் கிடக்கு” அப்பன் கேட்டான், “மண்ணில இருந்தெடுத்தால” என்ற நறுமுகை அங்கிருந்து புறப்பட்டாள். அப்பன் அதே கல்லிலேயே அமர்ந்திருந்தான். இரவு முழுவதும் அவனைக் காணாது தேடிய சித்திரன் அதிகாலையில் அப்பனைக் கண்டான். வீட்டிற்கு தன்னால் வரமுடியாதென மறுத்து அங்கேயே அமர்ந்தான். சுகந்தா சென்றழைத்தும், பச்சை கெஞ்சிக் கேட்டும் வரப்போவதில்லையென உறுதியாக கூறிவிட்டான். குறிப்பிட்ட நாளில் மூவரும் வீட்டிலிருந்து புறப்பட்டனர். அப்பன் அதே கல்லிலேயே அமர்ந்திருந்தான். சுகந்தா சென்று பயணம் சொன்னாள். அவன் கைகளை காட்டி செல் என்றான். இரண்டு நாட்கள் வெவ்வேறு இடங்களில் பதுங்கியிருந்த மூவரும் கடற்கரைக்கு ஓட்டியொருவரால் அழைத்துச் செல்லப்பட்டனர். பச்சை ஒரு தலைக்கு ஐம்பதாயிரம் ரூபாய்ப் படி பணத்தை அளித்தார். படகு இந்தியாவை நோக்கிப் புறப்பட்டது. அடுத்தநாள் காலையிலேயே படகு ஆளற்ற கரையை அடைந்தது. கண்டல் செடிகளும் தென்னைகளும் நிரம்பி நின்றன. “வந்திட்டமா” பச்சை ஓட்டியிடம் கேட்டார். “ஓம் அண்ணே, இன்னும் கொஞ்சத் தூரம் நடந்து போனால் ராமேஸ்வரம் கோவிலே வந்திடும். இறங்குங்கோ. அக்கா பார்த்து இறங்க வேணும்” என்றான் ஓட்டி. சித்திரன் பாய்ந்து இறங்கி தாய்க்கு கைகொடுத்தான். கடல் மணலில் புதையுண்ட பாதங்களை முன்நகர்த்தாமல் பின்நோக்கித் திரும்பி அவள் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி “என்ர பாலத்தடி சிவனே, அப்பனைக் காப்பாற்றிப் போடு” என்று வணங்கினாள். கொஞ்சத் தூரத்தில் நடந்து சென்றதும் ஓட்டி சொன்னதைப் போலவே விசாரணை அதிகாரிகள் அவர்களை அகதிகளாக பதிவு செய்தனர். பிறகு அவர்களை கூட்டிச் சென்றதொரு வாகனத்தில் ஏற்றினார்கள். வாகனம் சில நிமிட பயணத்துக்குப் பின்பு வீதிக்கு வந்தது. முல்லைத்தீவு என்று கடைப்பலகைகள் தொங்கின. பச்சை அதிகாரிகளிடம் கேட்டார் “ இஞ்சையும் ஒரு முல்லைத்தீவு இருக்கோ” “இருக்கு. அதுக்கு நீங்கள் விசுவமடுவாலையே வந்திருக்கலாம். ஏன் இப்பிடி சுத்தி படகில வந்தனியள்” – அதிகாரியொருவர் கேட்டார். பச்சைக்கு வியர்த்துவிட்டது. சித்திரனுக்கு நடுங்கத் தொடங்கியது. சுகந்தா தனது கைகளை மேலே உயர்த்தி என்ர அப்பனே, உன்னட்டையே கூட்டிக்கொண்டு வந்திட்டாய்” என்றாள். பச்சை அழுது புலம்பி அவர்களின் கையப்பிடித்து “தம்பியவே என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ” என்றார். “இயக்கத்தைச் சுத்திப் போட்டு போகலாமெண்டு நினைச்சியளோ” என்று கேட்டார்கள். “ ஓம். அதுக்கு என்ன, பிள்ளையள அம்மா அப்பா ஏமாத்தக் கூடாதோ?” “அம்மா, நீங்கள் வீட்டுக்கு போகலாம். இவர்களை மட்டும் விசாரணை செய்து விட்டு அனுப்பி வைக்கிறோம்” என்றார்கள். சுகந்தாவை இன்னொரு இயக்க வாகனத்தில் வீட்டில் கொண்டே இறக்கினார்கள். அவள் நேராக அப்பன் அமர்ந்திருக்கும் கல் நோக்கி ஓடினாள். அப்பன் அப்படியே அமர்ந்திருந்தான். “பிள்ளை, அம்மா வந்திட்டன். எழும்பி வா. இனி எங்கையும் போகேல்ல” “நானும் தான். இனி இதுதான் என்னோட இடம். என்னைப் பார்க்க ஆர் வந்தாலும் இங்க வரட்டும்” என்றான். இயக்கத்தினரால் விசாரணை செய்யப்பட்ட பச்சைக்கும் சித்திரனுக்கும் ஆறுமாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைப் பணமாக லட்சங்கள் அளிக்கப்பட்டன. பச்சை சிறைக்குள் தனது ஓட்டியை ஒருநாள் கண்டார். புலிச்சீருடையணிந்த அவனது இடுப்பில் கைத்துப்பாக்கி பட்டியில் இருந்தது. அவனுக்குப் பின்னால் பொய்க்காலால் தாண்டித் தாண்டி கருவாட்டு யாபாரி மாசிலா புலிச்சீருடையோடு வந்திருந்தார். பச்சைக்கு நடுநடுங்கியது. மாசிலாவை அழைத்த பச்சை “நீயும் இயக்கமே, என்னட்ட ஒருநாளும் சொன்னதேயில்லையே” என்றார். உங்களுக்கும் எனக்குமிடையே கருவாட்டில் விலைகுறைப்பதற்கு தானே பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. கருவாடு வாங்கிற எல்லாரிட்டையும் நான் இயக்கமெண்டு சொல்லி என்ன நடக்கப்போகுது “ என்றார். கல்லின் மீது அமர்ந்திருந்த அப்பன் ஒரு நாள் காணாமல் போனான். நறுமுகையையும் காணவில்லை. ஊரிலுள்ளவர்கள் தேடும் போது இருவரும் மறுகரையில் படகை விட்டு கீழே இறங்கினர். வேதாரண்யம் கடற்கரையில் மீனவர்கள் சிலர் அவர்களைக் கண்டனர். ஓடிச் சென்று அரவணைத்தனர். அப்பனும் நறுமுகையும் அவர்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் தாருங்கள் எனக்கேட்டனர். அளிக்கப்பட்ட நீரை அள்ளித்தரும் மீனின் வாசனையோடு பருகினர். “இருவரும் கணவன் மனைவியா” “ஓம்” “சின்னஞ்சிறுசுகளாக இருக்கிறீர்களே” “எங்கள் நாட்டில் எல்லோரும் சீக்கிரமாக வளர்ந்து விடுவோம்” “ஏன்” “துவக்கேந்த வேண்டும்” என்றான் அப்பன். https://akaramuthalvan.com/?p=1481
-
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்
வடக்கில் தொடர் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ள ரணில் புத்தாண்டில் நான்கு நாள் பயணமாக வடக்குக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் பங்குகொள்கின்றார். அன்று மாலை 7 மணி முதல் 9.30 வரை சிவில் சமூகப் பிரதிநிதிகளை அவர் சந்திக்கின்றார். 5ஆம்திகதி காலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும், மாலை 2 மணி தொடக்கம் 3 மணி வரையில் பூநகரிப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நகர மயமாக்கல் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொள்கின்றார். 6 ஆம் திகதி காலை 9 மணி முதல் 10 மணி வரையில் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் கிளிநொச்சி வளாகப் பீடாதிபதி உள்ளிட்ட விரவுரையாளர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து 10 மணிமுதல் 11.30 வரையில் சர்வமதப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் நலன்புரிச் சங்சத்தின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்கின்றார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை யாழ்.மாவட்ட செயலகத்தில் நிபுணர்களுடனான சந்திப்பும், 7 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் பனை தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது. (ஐ) https://newuthayan.com/article/வடக்கில்_தொடர்_சந்திப்புகளை_மேற்கொள்ளவுள்ள_ ரணில்
-
மனதும் இடம்பெயரும்
வாழ்த்துக்கள் சுமே ஆன்ரி! நூல் வரவுக்காகக் காத்திருக்கின்றோம். 😀 மூனா அண்ணாவின் அட்டைப்படத்தைக் காணவில்லை! நீங்கள்தான்! உங்கள் நீளமான பெயரில் தங்களுக்குப் பிடித்தமானவர்களைக் காண்கின்றார்கள்😊 மெசோ, மியா, சுமே, மேரி- இன்னும் எத்தனையோ!
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 11 இருண்டு கொட்டும் மழையில் வீட்டின் கதவு தட்டிக் கேட்டது. சிறிய கோடாக உடைந்திருந்த ஜன்னலில் கண் புதைத்துப் பார்த்த அம்மா, ரகசியமாய் சுதாகர் என்றாள். மீண்டும் கதவு தட்டும் சத்தம் கொஞ்சம் மூர்க்கமாக ஒலித்தது. என்னை அறைக்குள் போய் இருக்குமாறு கைகாட்டினாள். ஒரு நாடகத்தின் தொடக்கம் போல திரைவிலக வசனம் தொடங்கிற்று. “ஆர் வந்திருக்கிறது?” “நான் தான் சுதாகர் கதவைத் திறவுங்கள்”. அம்மா கதவைத் திறந்தாள். நனைந்திருந்தவரிடம் பெரிய துவாயைக் கொடுத்தாள். சேர்ட்டைக் கழற்றி உடம்பைத் துடைத்தார். அணிந்திருந்த ஜீன்சை கழற்றுவதற்கு முன்பாக பிஸ்டலை வெளியே எடுத்து தண்ணீரை துடைத்தார். ஒரு சாறமும் சேர்ட்டும் கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொன்னாள். சுடச்சுட இஞ்சி போட்டு ஒரு தேத்தண்ணி கொடுத்தாள். கொஞ்சம் இளைப்பாறிய பின் “இந்த நேரம் எதுக்கடா இஞ்ச வந்தனி” என்றாள். சின்னதொரு வேலையாய் ஊரெழு வரைக்கும் போய்ட்டு வந்தனான். கொஞ்சம் பிந்தீட்டுது. மழை வேற பேயாய் அடிக்குது. அதுதான் இஞ்ச வந்தனான்.” என்றார். “வேற எதுவும் திருகுதாளம் பண்ணிட்டு பாதுகாப்புத் தேடி இஞ்ச வரேல்ல தானே” அம்மா எச்சரிக்கையோடு கேட்டாள். அவர் கண்களைத் தாழ்த்தி தேத்தண்ணியைப் பார்த்தபடி ஆவி நுகர்ந்தார். பிறகு கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி தைரியத்தை வரவழைத்திருப்பார் என்றே தோன்றுகிறது. “அண்ணி, அப்பிடி ஒண்ட செய்திட்டு உங்களிட்ட வந்தாலும், நீங்களே என்னைச் சொல்லிக்குடுத்திடுவியள் தானே” சுதாகர் கேட்டார். “பின்ன, உங்களைப் பாதுகாத்து சனங்களுக்கு என்ன பயன்” அம்மா கேட்டதும் சுதாகருக்கு ஆத்திரமும் அடக்கமுடியாத அவமானமும் தோன்றியிருக்கலாம். உடனடியாக கதவைத் திறந்து வீட்டின் வெளியே போனார். மழையின் பேரிகை விடாது ஒலித்தது. திறந்திருந்த கதவின் வழியாக சாரல் புகுந்தது. “எடேய், நீ உள்ள வாறதெண்டால் வா. இல்லாட்டி நான் கதவைச் சாத்தப் போறன்” அம்மா குரல் கொடுத்தாள். “இல்ல நான் வெளியேயே படுக்கிறேன், வெள்ளனவா எழும்பிப் போகிறேன்” என்றார். “அடிசக்கை, பெரிய ரோஷக்காரன்ர வீம்பு. இதில கொஞ்சம் ரோஷம் உண்மையா இருந்திருந்தால் ஆர்மிக்காரனோட சேர்ந்து பிள்ளையள சுட்டுத் தின்ன மனம் வராது” என்று சொல்லி கதவை அடித்துச் சாத்தினாள். மழையை மிஞ்சி கதவில் ஒலித்தது இடி. அதிகாலையிலேயே எழுந்து சென்றுவிட்டார். அவர் படுத்திருந்த இடத்தில் சீவல் பாக்கு கொட்டுண்டு இருந்தது. அம்மா பூக்களை ஆய்ந்து வந்து அப்பாவின் படத்திற்கு வைத்தாள். நான் எழும்பி குளித்துமுடித்து படிக்க அமர்ந்தேன். முட்டைக் கோப்பியை அடித்து பொங்கச் செய்த அம்மாவின் முன்னேயே ஒரே மிடறில் அருந்தினேன். “இனிமேல் சுதாகர் வீட்டுக்கு வந்தால் அவனை அண்டக்கூடாது பெடியா” சொன்னாள் அம்மா. “ஓம் அம்மா, ஆளைப்பார்க்கவே பயமாய் இருக்கிறது. தாடியும் தலைமுடியும். கண்ணெல்லாம் பாழிருட்டு. விடிவற்ற முகம்” “இவங்களுக்கு எங்க விடியும். மாறி மாறி ஆக்களை காட்டிக் குடுக்கிறதும். கடத்திக் கொண்டே சுடுகிறதும் வேலையா வைச்சிருக்கிறாங்கள். உலகம் அழியிறதுக்கு முதல் இவங்களும் – இவங்களின்ர இயக்கமும் அழியவேணும்.” “எங்கட இயக்கம் இவங்களை அழிக்காதோ” “முந்தியொருகாலம் அதெல்லாம் செய்தவங்கள். இப்ப கொஞ்சம் யோசிக்கிறாங்கள் காட்டு யானை மாதிரி ஒருநாள் வெளிக்கிட்டால் எல்லாரையும் முறிச்சு எறிவாங்கள்” என்றாள் அம்மா. பல வருடங்களுக்குப் பிறகு அதிசயமாக காந்தி மாமா வீட்டிற்கு வந்திருந்தார். அமைதிக்காலமென்றாலும் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குள் வருவதற்கு இயக்கம் எல்லாப் போராளிகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. காந்தி மாமா வீட்டிற்கு வந்ததையடுத்து மீனும், கணவாயும் சமைத்தோம். “எப்பிடி மேலிடம் உனக்கு பெம்மிஷன் தந்தது. ஆச்சரியமாய் இருக்கு” கேட்டாள் அம்மா. “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் எண்டு சொல்றது இதைத்தான். பன்னிரெண்டு தடவை கடிதம் எழுதியிருக்கிறன். இண்டைக்குத் தான் அனுமதி கிடைச்சது” என்றார். “நல்ல விஷயம். நாளைக்கு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலுக்கு போவம். அங்க உனக்காக வைச்சவொரு நேர்த்தி செய்ய வேண்டியிருக்கு” என்றாள் அம்மா. “எனக்காக என்ன நேர்த்தி வைச்சனியக்கா?” “உன்ர அலகில ஐஞ்சடிக்கு வேல் குத்தி காவடி எடுக்கிறனென்டு ஒரு சின்ன நேத்தி” சொன்ன அம்மா கொடுப்புக்குள் சிரித்தாள். மாமா அதெல்லாம் ஒன்று பெரிய பிரச்சனை இல்லையென கண்ணைக் காட்டினார். காந்தி மாமாவின் இடது தோள்பட்டையில் விழுப்புண் தழும்பு மெழுகேறிக் கிடந்தது. எப்போதாவது அதனைத் தடவிக் கொள்கிறார். போராளி தனது விழுப்புண்ணின் தழும்பை தடவிப் பார்ப்பது எதனால்? அவர்களுக்கு ஏதோவொரு தியானத்தை அது வழங்குகிறதா? நினைவுகளை அது கொதிக்கச் செய்கிறதா? லட்சியத்தின் தீ வளர்க்க அந்த வருடல் அவசியமோ என்றெல்லாம் கேள்விகள் தோன்றின. கோயில் செல்ல ஆயத்தமாகி காந்தி மாமாவும் நானும் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தோம். அம்மா கதவைச் சாத்திவிட்டு “சரி வெளிக்கிடுவம்” என்றாள். வீதிக்கு வந்து பேருந்துக்காக காத்திருந்தோம். கோவில் வரை செல்லும் பேருந்து வருவதற்கு தாமதம் ஆனது. ஓட்டோ பிடிச்சால் போய்ட்டு வந்திடலாமென்றார் மாமா. அதுக்கு குடுக்கிற காசில பத்து நாள் வீட்டுச் சீவியம் போக்கிடலாம் சும்மா இரு காந்தியென்றாள் அம்மா. பேருந்து முடக்கத்தை தாண்டி வருவதைக் கண்டதும் “அம்மன் எங்களைக் கைவிடாது. வாகனம் வந்திட்டு பாத்தியோ” என்று ஆனந்தித்தாள். காந்தி மாமா வேட்டி உடுத்தியிருந்தார். அகலக் கரை அவருக்கு பிடித்தமானது என்று அம்மா சுன்னாகத்தில் வாங்கிவந்தது. எடுப்பாக ஒரு தங்கச் சங்கிலி. அணிய மாட்டேனென்று எவ்வளவு சொல்லியும் அம்மா வேண்டிக் கேட்டதால் அணிந்தார். நெற்றி நிறைந்த திருநீற்று பட்டை. “மாமா, வடிவான ஆள்தான் நீங்கள், இந்தியாவுக்கு போனால் விஜய்க்கு சகோதரனாய் நடிக்கலாம்” “சிறுவா, உனக்கு இண்டைக்கு மாட்டு இறைச்சியில கொத்துரொட்டி வாங்கித்தரலாமெண்டு நினைச்சனான். அதை கட் பண்ணிட்டன்” “மாமா, இப்ப நான் சொன்னதில என்ன பிழை.” “நீ சொன்னது எல்லாமும் பிழை தான் சிறுவா” என்று எனது காதைத் திருகினார். நான் செல்லமாக பாவனையழுகையை எழுப்பினேன். அம்மா எங்களிருவரையும் பார்த்து புன்னகைத்தாள். கோவிலை வந்தடைந்து மாமாவின் பெயரில் அர்ச்சனை செய்தோம். அடுத்த மாதத்தில் ஒருநாளில் அபிஷேகத்திற்கு அம்மா திகதி கேட்டு வந்தாள். வன்னியில நீங்கள் எந்த இடமென்று ஐயர் மாமாவிடம் கேட்டார். உடனடியாக ஜெயபுரம் என்றார் மாமா. என்ன வேலை செய்கிறீர்கள் அடுத்த கேள்வி வந்ததும் தேங்காய் யாபாரம் என்று சொன்ன மாமாவைப் பார்த்தேன். எத்தனையோ ஆண்டுகாலம் தேங்காய் யாபாரம் செய்யும் சிவத்தான் மாமாவை விடவும் உடல் மொழியைக் கொண்டு வந்திருந்தார். “மாமா, உங்கள நான் விஜய்க்கு அண்ணாவாக நடிக்கலாமெண்டு சொன்னது பிழைதான். நீங்கள் சிவாஜிக்கு அண்ணா” “என்ன தேங்காய் யாபாரியை வைச்சு சொல்லுறியோ” “ம். அப்பிடியே சிவத்தான் மாமா மாதிரியெல்லெ நிண்டனியள்” “பின்ன, இப்ப என்ர படையணி, இயக்கப்பெயர், தகட்டிலக்கம், ராங்க் எல்லாத்தையும் சொல்லவே முடியும்” “அதுவும் சரிதான். ஆனால் ஐயர் உங்களை இயக்கமெண்டு கண்டுபிடிச்சிட்டார்” “அதனால அற்புதமும் இல்லை. ஊழும் இல்லை. நான் அவரிட்ட அதை மறைக்கேல்ல. ஆனால் சொல்லவுமில்லை. அவ்வளவு தான்” நாங்கள் வீட்டினை அடைந்தோம். நாளைக்கு நல்லூர் கோவிலுக்கு போகலாமென நானும் மாமாவும் முடிவு செய்திருந்தோம். அம்மா கதவைத் திறந்து உள்ளே போனாள். கொஞ்சம் இருண்டிருந்தது. மின்விளக்குகள் ஒளிர்ந்தன. புட்டும் பழைய மீன்குழம்பும் ருசி குழைத்துண்டோம். மாமாவின் கைக்குழையல். உருசையூறும் கணம். அம்மா சின்ன வெங்காயத்தை உரித்து வைத்தாள். வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டது. அம்மா உடைந்த ஜன்னல் வழியாக கண்களை ஒத்திப் பார்த்தாள். சுதாகரும் அவனது கூட்டாளி தாடி ஜெகனும். சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களிடம் தகவல் சொன்னாள். மாமாவை மறைந்திருக்குமாறு சொன்னேன். அவர் அடுப்படிக்குள்ளிருந்த புகைக்கூட்டிற்குள் பதுங்கினார். அங்கே அதற்கான நிரந்தர ஏற்பாடுகளை ஏற்கனவே செய்து வைத்திருந்தோம். கதவைத் திறந்ததும் சுதாகர் உள்ளே வந்தார். அப்பாவின் புகைப்படம் முன்னே காய்ந்திருந்த பூக்களை விரல்களால் ஒவ்வொன்றாக தவர்த்திப் பார்த்துவிட்டு “அண்ணி, அண்டைக்கு நீங்கள் அப்பிடி கதைச்சிருக்க கூடாது. ஒரே கவலையாய் போயிற்றுது” என்றார். “பின்ன, நீங்கள் செய்யிற அநியாயத்த பார்த்துக் கொண்டு நாங்கள் ஐஸ்பழமே குடிக்கிறது. உங்களுக்கு கொலையெண்டால் கொப்புலுக்கி நாவல் பழம் தின்னுற மாதிரியெல்லே” “இஞ்ச எல்லாருக்கும் அப்பிடித்தான். முதலில ஆர் கொப்பு உலுக்கிறது எண்டு தான் போட்டி. மிச்சப்படி எல்லாரும் அப்படித்தான் நாவல் பழம் சாப்பிடினம்” “சுதாகர், உன்னை முந்தியொருக்கால் அவங்கள் சுட வெளிக்கிடேக்க மடிப்பிச்சை கேட்டு தப்ப வைச்சனான். இப்ப அப்பிடியெல்லாம் கருணை காட்ட மாட்டங்கள். நீ உதெல்லாத்தையும் விட்டிட்டு எங்கையாவது வெளிநாட்டுக்கு வெளிக்கிடு.” “அண்ணி, நீங்கள் வெருட்டுறத பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகுது. நாங்களும் போராளிகள் தான். இந்த நாட்டோட விடுதலைக்காக போராடத்தான் ஆயுதமேந்தினாங்கள். சுட்டால் சுடட்டும். அதுக்காக இவையளுக்கு பயந்து ஒடேலுமோ” “நீங்களும் போராளியள் எண்டு சொல்ல வெக்கமாய் இல்லையோடா, இல்ல கேக்கிறன். அரசாங்கம் தருகிற மாஜரின சனங்களின்ர பிணங்களில பூசி தின்னுறதெல்லாம் விடுதலைப் போராட்டம் இல்ல. விளங்குதா” “நாங்கள் எந்த இயக்கத்துக்கும் பயப்பிடேல்ல. உண்மையா போராட விரும்பினாங்கள். ஆனால் இண்டைக்கு நானும் தாடி ஜெகனும் எங்கட அமைப்பில இருந்து விலகலாமெண்டு முடிவெடுத்திட்டம். ஆனால் எங்கள ரைகேர்ஸ் மன்னிக்க மாட்டாங்கள். அவங்களிட்ட நாங்கள் சரணடையவும் மாட்டம். எங்கட வாழ்க்கையும் நாங்களுமெண்டு இருப்பம்” என்றார். “இயக்கம் மன்னிக்காது எண்டு என்னால உறுதியாய் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் உடன விலகிடுங்கோ. அதை எப்பிடியாச்சும் இஞ்ச உள்ள அரசியல்துறை செயலகங்களுக்கு தெரியப்படுத்துங்கோ” என்றாள் “இல்ல, அதுக்கான நேரமில்லை. நாங்கள் விலகப் போற தகவல் எங்கட அமைப்புக்குள்ள தெரிஞ்சு போச்சு. எங்கட லீடர் தோழருக்கு தெரிஞ்சால் அவ்வளவுதான்” என்றார் சுதாகர். “தெரிஞ்சால் என்ன செய்வாங்கள். நீ அந்த பேப்பர்காரனை சுட்டுக்கொண்டது, எம்.பியை சுட்டுக்கொண்டது, மானவர் பேரவை பெடியனைச் சுட்டுக்கொண்டது மாதிரி உன்னையும் சுடுவாங்கள் அதுதானே. “விதை விதைத்தவன் வினை அறுப்பான்” எண்ட பழமொழி எல்லாத்துக்கும் பொருந்தும். சுதாகர் நான் சொல்றத கேள். இப்பவே ஏதேனும் ஒரு அரசியல்துறை பேஸ்ல போய் சரணடையுங்கோ. அதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு” வீட்டின் முகப்பு வாசலில் வெள்ளை வேன் வந்து நின்றது. சுதாகர் அதைப் பார்த்து “அண்ணி, எங்கடை ஆக்கள் தேடி வந்திட்டாங்கள். என்னை காப்பாத்துங்கோ” என்று பயந்தடித்து அழுதார். தாடி ஜெகனுக்கு கால்கள் நடுங்கி கண்ணீரோடு மூத்திரமும் கழன்றது. அம்மா கதவை இறுகச் சாத்திவிட்டு தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள். கண்ணாடியில் கண்களைப் பதித்து வெளியே எத்தனை பேரெனப் பார்த்தாள். இருவர் மட்டுமே வந்திருந்தனர். ஒருவனுடைய வலது தோள்பட்டையில் ஏகே -47 ரக துவக்கு தொங்கிக் கொண்டிருந்தது. கதவைத் தட்டத் தொடங்கினார்கள். அம்மா கொஞ்சம் வேடிக்கை பார்த்தாள். வெளியே நின்றவன் பெரிதாக “ ரைகேர்சுக்கு வாலாட்டுற வே* கதவைத் திறவடி. உன்ர சாமானில வெடி வைக்கிறன்” என்று கூச்சல் போட்டான். “காந்தி இஞ்ச ஒருக்கால் வா” அம்மா மெதுவாக குரல் கொடுத்தாள். புகைக்கூண்டுக்குள் பதுங்கியிருந்த புலி கதவருகே வந்தது. “படத்தட்டுக்குப் பின்னால ஒரு உப்பு பையிருக்கு அதுக்கு கீழே உள்ள பெட்டியை எடுத்துக் கொண்டு வா” என்றாள். மாமாவிடம் கொண்டு வந்து கொடுத்தேன். பளபளக்கும் உலோகம். மாமா பிஸ்டலை ஏந்தி நின்றதும் இன்னும் வடிவு கூடியிருந்தார். சுதாகரும் தாடி ஜெகனும் விழிபிதுங்கி கீழே அமர்ந்திருந்தார்கள். ஒரு நாடகத்தின் தொடக்கம் போல திரைவிலக வசனம் தொடங்கிற்று. “ஆர் வந்திருக்கிறது” என்று கேட்டபடியே பதிலுக்கு நேரமளிக்காமல் கதவைத் திறந்தாள். மாமாவின் கையிலிருந்த உலோகத்திலிருந்து சத்தமற்று வெளிச்சம் மட்டுமே பாய்ந்தது. வாசலிலேயே ரத்தம் கொப்பளிக்க கிடந்த இரண்டு பிணங்களையும் அள்ளி ஏற்றிக் கொண்டு அதே வெள்ளை வேன் புறப்பட்டது. சுதாகரும் தாடி ஜெகனும் அதற்குள்ளேயே அமர்ந்திருந்தனர். காந்தி மாமா வாகனத்தை இயக்கினார். அம்மா ஓடிச்சென்று “காந்தி இவர்களை நீ எதுவும் செய்யக்கூடாது. அரசியல் துறையினரிடம் ஒப்படைத்து விடு” என்றாள். சரியென்று தலையசைத்தபடி மாமா புறப்பட்டார். அடுத்தநாள் காலையில் நான்கு பிணங்களைச் சுமந்த வெள்ளை வேன் ஒன்று வீதியின் நடுவே நின்றது. சடலங்கள் அடையாளம் காணப்பட்டன. சுற்றி நின்று பார்த்த சனங்கள் சுதாகரைப் பார்த்ததும் “ஓ…இவையளே பெடியள் கொஞ்சம் பிந்தினாலும், சரியாய் செய்து போடுவாங்கள்” என்றனர். வீட்டிற்கு வந்திருந்த மாமாவிடம் நீ அவர்களைச் சுட்டிருக்க கூடாது என்று கோபமாக கத்தினாள். இருவரும் தம்மைத் தாமே சுட்டுக்கொன்றார்கள் என்றார் மாமா. இரவு சாப்பிடும் போது கேட்டேன். “மாமா, அவர்களை நீங்கள் சுடேல்லையோ?” “சிறுவா, மாமாவோட பேர் என்ன” “காந்தி” “மாமா, பொய் சொல்லுவேனா” “இல்லை. ஆனால் சுடுவியள் தானே” மாமா உறுதியாக ஓமென்று தலையசைத்தார். “காந்தி நீயே சுட்டனி” கேட்ட அம்மாவைப் பார்த்து, உறுதியாக இல்லையென்று தலையசைத்தார். சூரியனாய் தகிக்கும் ஒருபெரும் கனவின் நெடும்பயணத்தில் அஞ்சாமல் துஞ்சாமல் நிமிர்வின் குரலாக எதிரொலிக்கும் ஒவ்வொரு கணத்திலும் வரலாற்றின் கடைவாயில் துரோகக் குருதி வழிந்தது. கொப்பளித்தடங்கிய எரிமலையின் நாளங்களில் தீயின் உறைதல் திவலையாய்த் தேங்கின. பலிபீடத்தின் விளிம்பில் பதுங்கியமர்ந்த புலியின் கண்களில் “எவ்வளவு வலிமையானது தியாகம்” என்ற திருப்தி. கண்களைத் திறந்தபடி பாயில் படுத்திருந்த மாமாவுக்கு திருநீற்றை பூசிய அம்மா, “வேதத்திலுள்ளது நீறு, வெந்துயர் தீர்ப்பது நீறு, போதந் தருவது நீறு, புன்மை தவிர்ப்பது நீறு” என்ற பதிகவரிகளை பாடிக்கொண்டே அருகில் அமர்ந்தாள். உறக்கத்தின் கிளைகள் மாமாவை அடர்ந்து மூடின. இதுவரை வஞ்சித்த இரவின் ஜன்னல் வழியாக காற்றுப் புகுந்தது. கருணையின் வளைவற்ற பாதையைப் போல நீட்டி நிமிர்ந்து ஆழ்ந்துறங்கிய மாமாவின் கைவிரல்களை முத்தமிட்டேன். எண்ணிறைந்த ஒளித்துளியுள் நினைவின் குளிராக எப்போதும் உள்ளது அன்றிரவு. https://akaramuthalvan.com/?p=1445
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
தன்மானமும், சுயகௌரவமும் : 1986ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டி! KaviDec 29, 2023 14:26PM சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்புகளில் விஜயகாந்திடம் பேரன்பும், வெளிப்படை தன்மையான வெள்ளந்தி தனமும் வெளிப்படும். வரம்புமீறி கேள்விகள், வார்த்தைகள் செய்தியாளர்களிடம் இருந்து வரும் போது பெரும் கோபமும் விஜயகாந்திடமிருந்து வெடித்து கிளம்பும். அரசியல்வாதியான பின்பு அந்த பழக்கம் மாறாதவராகவே விஜயகாந்த் வெள்ளந்தி தனமாக இருந்தார். அதுவே அவரது அரசியல் பின்னடைவுக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இப்போது இல்லை சினிமாவில் தொடக்ககாலத்திலேயே அதே போன்றுதான் இருந்திருக்கிறார் என்பதற்கான சான்றாக இருக்கிறது 1986ஆம் ஆண்டு சினிமா பத்திரிக்கைக்கு அவர் கொடுத்த பேட்டி. அவற்றில் இருந்து குறிப்பிட்ட பகுதி. விஜயகாந்த் பேட்டி புது நடிகன்னா மதிக்கமாட்டாங்க இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்’னு சொல்வாங்களே அதுதான். சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கிட்டவங்களில் ஒருத்தன் நான். சென்னை வந்து போய்க்கிட்டிருந்த நான், பாண்டி பஜார் ரோஹிணி லாட்ஜ்ல இருபதாம் நம்பர் ரூம்ல வந்து தங்கினேன். அந்த லாட்ஜ்ல சினிமா லட்சியத்தோடு பல இளைஞர்கள் இருந்தாங்க. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் இவங்களாம் அந்த லாட்ஜுலதான் இருந்தாங்க. முதல்ல, டைரக்டர் எம்.ஏ.காஜா, ‘இனிக்கும் இளமை’ படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்ப விளம்பரங்கள்ல என் நிஜப் பெயரான ‘விஜயராஜ்’ தான் இருந்தது. அப்புறம்தான் வேறு நடிகர் விஜயராஜ்ங்கிற பேர்ல வந்துகிட்டிருக்கார்னு தெரியவர, காஜாதான் உடனே விஜயகாந்த்னு பேர் வெச்சார். முதல் நாள் ஷூட்டிங், அடையாறு மேனன் பங்களாவில் நடந்தது. இந்த சினிமாவுலகிலே புது நடிகன்னா யாரும் மதிக்கக்கூட மாட்டாங்க. தீண்டத்தகாதவன் மாதிரி புதுமுகங்களுக்கு சாப்பாடு போடுவாங்க. அப்ப சுதாகர், மீரா, ராதிகாவெல்லாம் ஏற்கெனவே பாப்புலர். அவங்களுக்கெல்லாம் ஏக உபசரிப்புகள்! நான் ஒரு மூலையிலே நின்னுக்கிட்டிருப்பேன். ஆனா, ‘இனிக்கும் இளமை’ படம் வெளிவந்ததும், என் பெயர் கொஞ்சம் வெளியே தெரிய வந்தது. அதை வைத்து விடாம பல இயக்குநர்களைச் சந்தித்தேன். பார்க்கிறவர்கள் எல்லாருமே, ‘அதுதான் ஒரு ரஜினிகாந்த் இருக்காரே, நீ எதுக்கு ஒரு விஜயகாந்த்‘னு சொல்லுவாங்க. அன்னிக்கு அப்படிக் கேட்ட பலருடைய படத்துல இப்ப நான் ஹீரோ. நினைச்சுப் பார்த்தா தமாஷாத்தான் இருக்கு! ‘அகல் விளக்கு’ படத்துக்கு எனக்கு சான்ஸ் வந்தது. இந்தப் படத்துல தான் நிறைய அவமானங்கள். அப்போ ஷோபா ரொம்ப பாப்புலர். பிஸி ஆர்ட்டிஸ்ட். ‘அகல் விளக்கு’ படப்பிடிப்பு அன்னிக்குக் காலையிலேருந்து மத்தியானம் சாப்பாட்டு வேளை வரைக்கும் ஷோபா வரலை. எனக்கு நல்ல பசி. பசி பொறுக்காம கடைசியிலே மதியம் சாப்பிட உட்கார்ந்தேன். உடனே ஷோபா வந்துட்டாங்கனு சொல்லி, சாப்பிடக்கூட விடாம பாதியிலேயே எழுப்பி இழுத்துக்கிட்டுப் போனாங்க. ஒரு நிமிஷம் மனசு கலங்கிட்டேன். இதையெல்லாம் மீறி தட்டுத்தடுமாறி முன்னுக்கு வந்துக்கிட்டிருந்தேங்கறது உண்மை! டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்துக்கு என்னை புக் பண்ணினார். ‘ஒருதலை ராகம்’ படம் அப்போ நல்லா ஓடிக்கிட்டிருந்தது. அதில் நடிச்ச ஒரு நடிகர் தனக்குத்தான் அந்த ரோலைத் தரணும்னு டைரக்டர்கிட்ட பிரஷர் கொடுத்தாரு. ஆனால், தயாரிப்பாளர் சிதம்பரம் ‘நான் படம் பண்ண வந்திருக்கேன். என் இஷ்டப்படிதான் படம் பண்ணுவேன். என் படத்திலே ஒரு தமிழன் தான் நடிக்கனும்’னு சொல்லிட்டார். ‘சட்டம் ஒரு இருட்டறை’ ரிலீஸாச்சு. படம் நல்ல ஹிட். பல மொழிகள்ல அந்தப் படத்தை எடுத்தாங்க. அதுக்குள்ள ரோஹிணி லாட்ஜுலேருந்து பக்கத்துக் கட்டடத்துல ஒரு ரூமுக்கு மாறியிருந்தோம். அதிலதான் நானும் என் நண்பன் இப்ராஹிமும் இருப்போம். நான் ஷூட்டிங் போயிட்டா இப்ராஹிம்தான் என் பேன்ட், ஷர்ட்டெல்லாம் ‘வாஷ்’ பண்ணுவான். என்னைப் பார்க்க யார் வந்தாலும், அவன் டீ, காபி வாங்கிக்கிட்டு வருவான். ரூம்ல நானும் அவனும் மட்டும் இருப்போம். ‘சட்டம் ஒரு இருட்டறை’ ரிலீஸானதும், ரூம்ல ஏகக் கூட்டம். ஆனால், பல மாதங்கள் சினிமாக்காரங்க பின்னால் அலைஞ்சதனால் நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு எங்களால் புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் படம் ஒப்புக்கிட்டோம். அதுக்கப்புறம் சில படங்கள். எல்லாமே ஃபெயிலியர். மறுபடியும் ரூம்ல நானும் இப்ராஹிமும் மட்டும்தான்! ஒரு வருஷம் சும்மா இருந்தோம். அதுக்கப்புறம்தான் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் ‘சாட்சி’ படம் வந்தது. ஹிட் ஆச்சு. ஒரு வழியா நின்னேன்!‘‘ விஜயகாந்த்துடன் நடிக்க மறுத்த நடிகைகள் ‘இந்த அவமான கட்டங்களைத் தாண்டிய பிறகு மட்டும் என்ன வாழ்ந்தது? அடுக்கடுக்காகத் திரைமறைவு சூழ்ச்சிகள் நடந்துக்கிட்டே இருந்தன. ‘பார்வையின் மறுபக்கம்’ படம் ஊட்டியில் ஷூட்டிங். எனக்கு ஜோடி ஸ்ரீப்ரியா. ஊட்டி போய்க் காத்துக் கிடந்தோம். அவங்க வரலை. விசாரிச்சா, என்னோடெல்லாம் அவங்க நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். இதை அவங்ககிட்டேயே கேட்டேன். அதே மாதிரி சரிதாவும் என்னோட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்குக் காரணமே புரியலை. ‘நான் அவங்ககூட நடிக்க விரும்பலை’ன்னு சொன்னதாக யாரோ சரிதாகிட்டே சொன்னாங்களாம். இந்த மாதிரி பிரச்னைகளை வளரவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, நானே நேரே சரிதா வீட்டுக்குப் போனேன். அவங்க அம்மாவும் தங்கையும் இருந்தாங்க. ‘இதப் பாருங்க… நான் உங்க பொண்ணுகூட நடிக்கமாட்டேன்னு சொல்லலை. யாராவது சொன்னதை நம்பாதீங்க. உங்க பொண்ணுகூட நடிச்சாத்தான் எனக்கு வாழ்க்கைங்கறதுக்காக நான் நேரா உங்க வீட்டுக்கே வந்து கேட்கிறேன்னு நினைக்க வேண்டாம். கலைஞர்களுக்குள்ள உட்பூசல் இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் வந்தேன்‘னு பளிச்சுனு சொல்லிட்டு வந்துட்டேன். அதேமாதிரிதான் ராதிகாவும் என்னோட நடிக்க விருப்பப்படலை! இன்னிக்கு இவங்கள்லாம் என்னோட நடிக்கிறாங்க. அதுக்குப் பிறகு ராதிகாவும் நானும் நிறைய படங்கள்ல நடிச்சோம், நடிச்சிக்கிட்டிருக்கோம். ஆரம்பத்தில் இவங்க, ‘நடிக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாங்க’னு சொல்றதை விட, என் பக்கம் திரும்பாம ஒதுங்கிக்கிட்டாங்க என்பதுதான் உண்மை. தப்பு இவங்க பேர்ல இல்லை. இவங்களுக்குப் பின்னால் பெரிய சக்திகள் இயங்கிக்கிட்டிருந்தது. ‘இவனோடெல்லாம் நடிச்சா, உங்க இமேஜ் கெட்டுடும்’ என்கிற பயமுறுத்தல் நிறைய இருந்தது. சாதாரண பெண்களுக்கே ‘தங்களுக்குப் பாதுகாப்பில்லை’னு எப்பவும் மனசுல ஒரு பயம் இருக்கும். சினிமாவில் இருக்கிற பெண்களுக்குக் கேட்க வேண்டுமா..? எப்பவும் Insecured-ஆ நினைப்பாங்க. இந்த ஃபீலிங், சம்பந்தப்பட்ட இந்த நடிகைகளுக்கும் இருந்ததில் வியப்பென்ன..? பின்னால் இந்த நடிகைகள் என்னோட நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் அவங்க மனசுல களங்கமில்லேனு புரிஞ்சுக்கிட்டேன். எய்தவங்க யாரோ, அம்பை நொந்து என்ன பயன்..?’’ ‘‘தங்கள் படங்கள்ல ஒரு நாளாவது என்னை நடிக்க வெச்சு, அதுக்குப் பிறகு அந்தப் படத்தையே கேன்ஸல் பண்ணிட்டு, ‘விஜயகாந்துக்கு நடிக்க வரலை. அதனாலதான் அந்தப் படத்தை எடுக்கலை’னு பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்கணும்னு இன்னிக்கும் ஆசைப்படற பெரிய மனிதர்கள் இருக்காங்க தெரியுமா? அதே சமயம் இவங்களே பினாமி மூலம் கால்ஷீட் கேட்கறதும் உண்டு. அவங்க மேலேயே நான் கோபப்படலை, நடிகைகள் மேலா கோபப்படப் போறேன்..? இன்னிக்குச் சொல்றேன், எழுதி வெச்சுக்குங்க. தன்மானத்தையும், சுயகௌரவத்தையும் இழந்து நடிச்சிக்கிட்டே இருக்கணும்கிற அவசியம் எனக்கில்லை. அப்படிச் செய்யவும் மாட்டேன். அதே சமயம், அடுத்தவங்க தன்மானத்தைக் குறைக்கிற மாதிரி நான் நடந்துக்கவும் மாட்டேன். இது நிச்சயம். என்னோட பழகினவங்களுக்கு தெரியும். அவமானத்தில் வளர்ந்தவங்களுக்கு மனசுல ஒருவிதமான கோபம் படிஞ்சு போயிடும். நாம பட்ட வேதனைகளை அடுத்தவனும் படனும்னு மத்தவங்களை அவமானப்படுத்துவாங்க. ஆனால், கடவுள் புண்ணியத்துல என் மனசுல அந்த மாதிரி எண்ணங்கள் வளரலை. “நாம பட்ட கஷ்டங்கள் மத்தவங்க படக்கூடாதுன்னு நினைக்கிறேன். நல்ல நடிகன்கிறதைவிட, நல்ல மனுஷன்னு பேர் எடுக்கிறதுதான் என் லட்சியம். இன்னிக்கு ஓரளவுக்கு அந்தப் பெயர் வாங்கியிருக்கேன். என் காம்பவுண்டுக்குள்ளே வந்து யாரும் அவமானப்படக்கூடாது. அதேமாதிரி பசியோட யாரும் திரும்பிப் போகக் கூடாது. தினமும் முப்பது, நாற்பது பேருக்காவது இங்க சாப்பாடு இருக்கும்.’’ ‘இது ஒருவிதமான ‘பப்ளிசிட்டி ஸ்டன்ட்’னு சொல்வாங்களே..?ன்னு கேட்டா அடுத்தவங்க சொல்றதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. தமிழ்நாடு முழுக்க ரைஸ் மில் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தினப்போ, எங்க மில்லில் மட்டும் ‘ஸ்டிரைக்’ கிடையாது. எங்க மில்லில் கூலியும் அதிகம். அவங்க வயிறு வாட விடவும் மாட்டேன். இதெல்லாம் நான் நடிகனாகறதுக்கு முன்னாடியே! நான் சாப்பாடு போடறதை விளம்பரம் பண்ணியா போடறேன்..? அதேமாதிரி என் சொந்தப் படமான ‘உழவன் மகன்’ ஷூட்டிங்கின்போது எனக்கு என்ன சாப்பாடோ, அதுதான் எல்லா தொழிலாளர்களுக்கும். சோத்துல வேறுபாடு காண்பிச்சா உருப்படவே முடியாது. கடவுள் உண்டுன்னு நான் நம்புகிற மாதிரி இதுவும் என் அடிப்படை நம்பிக்கை…’’ என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் விஜயகாந்த். https://minnambalam.com/cinema/self-esteem-and-self-respect-interview-given-by-vijayakanth-in-1986/
-
நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்!
நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்! எதிர்வரும் தைப்பொங்கலின் பின்னர் நாகப்பட்டினம் காங்கேசன்துறைக்கு இடையிலான சரக்குக் கப்பற்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தக் கப்பற்சேவைக்கான வளநிலைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் (28)நேற்று இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து வர்த்தகப் பரிமாற்றத்துக்காக டொலரைப் பயன்படுத்தல், இந்தியாவில் இருந்து சில பொருள்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்தல், சுங்கம் சாதகமான பதிலை வழங்கினால் இந்திய ரூபாவில் வர்த்தம் செய்தல், முதலீட்டாளரின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கான கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மண்ணெண்ணெய் இறக்குமதிக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தல் தமிழ் மக்கள் நெருக்கடிகள் இல்லாமல் வாழ்வதற்குத் தேவையான பொருள்களை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வர்த்தகர் ஒருவர் இறக்குமதிக்கான கோரலை வழங்கியுள்ளார். கோரல்களைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஏற்றுமதி, இறக்குமதிக் கட்டணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. கலந்துரையாடலில், யாழ். இந்தியத் துணைத்தூது வராலய அதிகாரி மனோஜ்குமார், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மாவட்டச்செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்.மாவட்ட வர்த்தகர்கள், மறவன்புலவு சச்சிதானந்தன், சிவசேனை அமைப்பினர், இந்திய, இலங்கை வங்கிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். https://newuthayan.com/article/நாகபட்டினம்_-_காங்கேசன்துறை_சரக்குக்_கப்பற்சேவை_விரைவில்!
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
கனல் தெறிக்கும் கண்களுடன் அனல் தெறிக்கும் வசனங்களைத் திரையில் பேசியவர். எல்லோரையும் அன்புடனும், சமமாகவும் நடத்தியவர். ஆழ்ந்த இரங்கல்கள்.
-
வடக்கிற்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
வடக்கிற்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்! December 27, 2023 வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே புகையிரத சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2023/199101/
-
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நாளை இரண்டு நிமிட மௌன அஞ்சலி
சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் அஞ்சலி ! By kugen சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை ,சாய்ந்தமருது ,பாண்டிருப்பு ,பெரியநீலாவணை, மாளிகைக்காடு ,காரைதீவு ,நிந்தவூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களினால் கடைப்பிடிக்கப்பட்டது. இதன் படி கல்முனை பௌத்த விகாரை, பாண்டிருப்பு நினைவாலம் ,காரைதீவு சுனாமி நினைவாலயம் , கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர். காரைதீவு கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவுத்தூபி முன்றலில் இந்துமத வழிபாடுகளுடன் நடைபெற்றது.இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், ஆலய நிர்வாகிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். இது தவிர மருதமுனை பகுதியில் Shams '97' சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் மருதமுனை மையவாடி சிரமதானமும் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்குமான துஆ பிரார்த்தனை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக இங்கு அமைக்கப்பட்ட பல தூபிகளில் மாலை அணிவிக்கப்பட்டு காலை வேளை பொதுச்சுடர் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை மருதமுனை மற்றும் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் சுனாமி அனர்த்த 19 வது ஆண்டு நினைவேந்தலும்இ சுனாமியால் உயிர் நீத்த உறவுகளுக்கான துஆ பிரார்த்தனையும் கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டு விஷேட துஆ பிராத்தனையும் இடம்பெற்றிருந்தது. நாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்ததினால் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதி அதிகமான உயிரிழப்புக்களையும், சேதங்களை சந்தித்த பிரதேசம் என்பதுடன் உலகை உலுக்கிய அனர்த்தங்கள் பல இருக்கிறது. அதில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள் கொண்டது. அந்த சுனாமியலையில் சிக்கி எமது நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டது. அதில் அம்பாறை மாவட்டத்தின் பாதிப்பு மிக அதிகம். உயிர்கள், உடமைகள்,சொத்துக்கள் என பலதையும் இழந்து நின்ற மக்கள் தமது துயரநாளின் 19 வருடங்கள் கடந்துள்ளதை எண்ணி துஆ பிராத்தனைகள், நினைவஞ்சலிகள் நாடுமுழுவதிலும் நடந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. https://www.battinews.com/2023/12/blog-post_495.html
-
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நாளை இரண்டு நிமிட மௌன அஞ்சலி
ஆழிப்பேரலையில் காவு கொல்லப்பட்டவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்! adminDecember 26, 2023 ஆழிப்பேரலையில் காவு கொல்லப்பட்டவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றது. உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது. சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படைத்து உறவினர்கள் அஞ்சலித்தனர். இதன்போது பெருமளவான பொதுமக்கள்,மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் உறவினர்கள் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் மல்கினர். கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2023/199028/
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 10 ” பூமியை பாவங்களால் நிறைத்தவர்களுக்கு தண்டனையுண்டு. எங்கும் தப்பியோட முடியாதபடி நீதியின் பொறியில் அகப்படுவார்கள். கடந்த காலங்களுக்கான தீர்ப்பு வழங்கப்படும்” அதிவணக்கத்திற்குரிய பிதா இராயப்பு ஜோசப் அவர்கள் குழுமியிருந்த சனங்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அரச வன்கவர் படையினரால் கடுமையான நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்ட பிதா இராயப்பு ஜோசப் பின்வாங்கவில்லை. பயந்தொடுங்கி வெளிறவில்லை. நிகழ்ந்த மானுடப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென குரல் கொடுத்தார். நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு என்று சொல்லி உரையை நிறைவு செய்தார். அக்கா எதையும் கவனிக்காமல் இரண்டு கைகளையும் தூக்கி முட்டுக்காலில் நின்றாள். சாட்சியமற்ற வெளியில் உதிர மறுக்கும் உதிரச் சிறகுகள் குரூரமாய் வளர்ந்திருந்த நினைவது. மூர்க்கமாய் கொந்தளித்து பற்களை நெருமினாள். அக்காவைப் பிடித்துக் கொண்டேன். அவள் கேட்டாள் “எங்கட பாதர் சொல்ற தீர்ப்பு வழங்கப்படும் நாள் எப்ப வரும் தம்பி?” அவலத்தின் புன்சிரிப்புக்கு பதில்களற்று இரையானேன். சில நாட்களில் அக்காவின் உடல் வலுவிழந்திருந்தது. யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். உளநல மருத்துவ நிபுணரிடம் காண்பித்தேன். ஏற்கனவே அக்காவுக்கு வழங்கப்பட்ட மருந்துகளோடு சிலவற்றை அதிகரித்தார். வாய்ப்பிருந்தால் களவாவோடை அம்மன் கோவிலுக்கு கூட்டிச் செல்லுங்கள் என்றார். துக்க நிவாரணமற்ற வாழ்வு, சிதலங்களின் நீள் சுருள் குறுக்கு மறுக்காக ஓடிக்கிழித்த பாதையில் தனித்துவிடப்பட்டது. நரகத்தில் வெறித்து வருந்தும் பாவிகளாய் எஞ்சிய ஒவ்வொருவருமே சித்தமழிகிறோம் என்றாள் அக்கா. அவளை இறுக அணைத்து தலைதடவினேன். நாங்கள் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி பேருந்துக்காக நின்றோம். பீதி நிரம்பிய கண்களோடு சனங்கள் வாழப்பழகினர். எது நேர்ந்தாலும் தாங்கிக் கொள்ளுமளவு மரத்துப் போனார்கள். இராணுவத்தினர் வீதிகளின் இருமருங்கிலும் நின்று யாழ் நகரத்தை கண்காணித்தனர். “இயக்கத்தை அழிச்சிட்டினம் தானே, இப்ப ஆருக்கு பயப்பிடினம்” மாங்காய் விற்கும் சிறுவன் கேட்டான். “எடேய், தம்பியா மொக்குத்தனமாய் கதைச்சு செத்துப்போய்டாத. உன்னட்ட மாங்காய் வாங்கினது பிழையா போயிற்று” நடுநடுங்கி அங்கிருந்து விலகியோடினார் படித்த யாழ்ப்பாணன். மீளக்குடியமர்ந்து சில நாட்களிலேயே அக்காவைப் பீடித்த உளத்துயரினால் வன்னியில் வாழ முடியவில்லை. அவளை அமைதிப்படுத்தவோ சுகப்படுத்தவோ தெய்வங்களிடம் வல்லமை இல்லாதிருந்தது. சொந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு குடியிருந்தோம். செப்பனிடப்பட்டு இரண்டு அறைகள் கொண்ட கல்வீட்டில் உறங்கி விழித்தோம். ஏழாலையிலுள்ள பரியாரியார் ஒருவரிடம் அக்காவை அழைத்துச் சென்றோம். அவர் லேகியங்களையும், சூரணங்களையும் வழங்கி சுகமாகும் என்றார். ஆனால் அதற்கான எந்தச் சமிக்ஞைகளும் தோன்றவில்லை. நாளுக்கு நாள் அவளது பிரச்சனை அதிகமாயிற்று. அக்காவுக்கு விசர் என்று யாழ்ப்பாணத்திலும் சொல்லத் தொடங்கினர். வீட்டின் முன்னே நிற்கும் வாதாம் மரத்திலேறி ஊர் விழிக்க கத்தினாள். கோவிலில் தீபாராதனை நடந்து கொண்டிருந்த போது, தன்னுடைய பாவாடையைக் கழற்றி கருவறைக்குள் வீசிவிட்டாள். கட்டுப்படுத்த இயலாமல் அவளுக்கிருந்த ஒரே காலில் உருகுதடமிட்டு கயிற்றால் இறுக்கினோம். வீட்டிற்கு வந்தவர்கள் அக்காவுக்காக பரிதாபம் கொண்டனர். எங்களைப் போன்ற கல்மனம் கொண்டவர்கள் யாருமில்லையென சொல்லினர். தெய்வத்தை விடவுமா? என்றேன். “தம்பி, டாங்க் வருகிற சத்தம் கேக்குது, பங்கருக்குள்ள வா” அக்கா சொன்னாள். அவளுடைய கணுக்காலில் கயிற்றுத் தடம் நிரந்தரமாய் பதியத் தொடங்கியது. “சண்டை முடிஞ்சுது, இனி டாங்க்ம் வராது, கிபிரும் வராது. அமைதியாய் இரு” என்றேன். “போடா விசரா. சண்டை முடிஞ்சுதோ. நீயென்ன தளபதியே. சண்டை நடக்குது. எனக்குச் சத்தம் கேக்குது.” “எடியே வே*! கொஞ்சம் சும்மா இரடி. உதால போற ஆர்மிக்காரங்கள் கேட்டால் எங்கட கெதியென்ன” வீட்டிற்கு வந்திருந்த அத்தை நடுங்கிச் சொன்னாள். அக்கா பல ஆண்டுகளாய் உறங்காதவள். எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் பயனில்லை. அவள் யாருடனோ கதைத்துக் கொண்டே இருக்கிறாள். தன்னுடைய பெயரை ஒவ்வொரு நாளும் ஒன்றாகச் சொல்லுகிறாள். திடீரென அழத்தொடங்கி நிலத்தில் விழுந்து துடிக்கிறாள். அவளுக்குள் நிகழ்வது என்ன? ஒரு யுகத்தின் வீழ்ச்சியைப் பொடித்து அவளுக்குள் புதைத்தவர்கள் யார்? எப்போதாவது ஜன்னல் வழியாக நட்சத்திரங்களைப் பார்த்து உறைந்திருப்பாள். ஒருநாள் என்னையழைத்துக் கேட்டாள். “இண்டைக்கு வந்திருக்கிற நட்சத்திரங்கள் எல்லாமும் ஆர் தெரியுமா?” வானத்தைப் பார்த்தபடி கேட்டேன், ஆர்? “ஆரோ! எல்லாம் எங்கட குழந்தையள் தான். நாங்கள் இதுவரைக்கும் மண்ணுக்குள்ள புதைச்ச குழந்தையள். ஷெல்லடியிலையும், கிபிர் அடியிலையும் காயப்பட்ட அதுகளின்ர கடைசி நொடித் துடிப்ப மேல உத்துப் பார் என்றாள். நம்பவியலாதபடி எல்லா நட்சத்திரங்களும் துடியாய்த் துடித்தன. தானியங்கள் சொரிவதைப் போல அவை மண்ணில் விழுந்தன. வானில் யாவும் அழிந்திருந்தன. திடுமென மழை கொட்டத் தொடங்கிற்று. அக்கா வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை படுக்கைக்கு அழைத்துச் சென்று நித்திரை கொள் என்றேன். “எனக்கு நித்திரை வரவில்லை. நீ போய் படு” சலிப்புடன் தலையாட்டிவிட்டு விலகினேன். அக்கா கட்டிலிலேயே அமர்ந்திருந்தாள். இல்லாது போன காலின் எஞ்சிய துண்டத்தை பார்த்துக் கொண்டேயிருந்தாள். எக்காளச் சிரிப்போடு எழுந்து நின்றாள். மூதாதையர்களின் காலடியென மழை சீற்றம் கொண்டாடியது. தலையைத் தாழ்த்தி உச்சாடனமாய் அக்கா எதையோ சொல்லத் தொடங்கினாள். படுக்கையை விட்டு எழுந்து வந்து அவளைப் பார்த்தேன். முகம் முழுதும் ஆக்ரோஷத்தின் தீ பழுத்து அவளுடல் காயங்களால் துடிதுடித்தது. பக்கத்தில் செல்லப் பயந்தேன். யாரோடோ அவ்வளவு வேகமாக கதைக்கத் தொடங்கினாள் அக்கா. தெய்வத்தின் லட்சணத்தோடு அகோரம் பூண்டிருந்தாள். குருதியின் வரலாற்றுப் படலம் மிதக்கும் துயரத்திவலையாக அசையாதிருந்தாள். “அக்கா” என்றழைத்தேன். அவளால் முடிந்ததெல்லாம் இதுதான் என்பதைப் போல தன்னுடைய கையிலிருந்த சிறிய தீப்பெட்டியைத் தந்து அதனைத் திறந்து பார் என்றாள். யாரோ கடித்து மிச்சம் வைத்த பிஸ்கட் கடல் மணலும் குருதியும் ஒட்டி உலர்ந்திருந்தது. மீண்டும் மீண்டும் எதுவும் புரியாமல் பார்த்தேன். “இதென்னக்காக, ஆரோ சாப்பிட்ட மிச்ச பிஸ்கட்ட எடுத்து வைச்சிருக்கிறாய். அதில ரத்தம் வேற காய்ஞ்சிருக்கு” என்றேன். “இந்த பிஸ்கட்டும் அதில ஒட்டியிருக்கிற கடல் மணலும் ரத்தமும் தான் எங்கட மிச்சம்” “ஆர் சாப்பிட்ட மிச்சமிது” “எங்கட சந்ததியோட மிச்சம். அந்த மிச்சம் சாப்பிட்ட மிச்சம்” என்று சொல்லிக்கொண்டிருந்த அக்காவின் மீது இறங்கியதொரு நிழல் கண்டேன். கண்களை மூடித் திறந்தேன். அக்கா படுக்கையில் அமர்ந்திருந்து “என்னடா” என்று கேட்டாள். என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. மழை பாதாளம் வரை இறங்குகிறேன் என்பதைப் போல அடித்துப் பெய்தது. அன்றைக்கு மதியம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. வீட்டுக்கு பக்கமிருப்பதால் நானும் அம்மாவும் சென்றோம். அக்கா வீட்டிலிருந்தாள். அவளது கையில் கோவில் நூலைக் கட்டிவிட்டேன். அம்மா காலில் கயிற்றைக் கட்டி இரும்போடு இணைத்தாள். அன்னதானம் முடித்து திரும்பிவருகிற போது அக்கா யாரோடோ கதைப்பது கேட்டது. வாசலை எட்டிப் பார்த்தால் எவரின் செருப்பும் இல்லை. நாங்கள் உள்ளே சென்றோம். அக்கா, தனக்கருகே இருந்த கதிரையை நகர்த்தி வைத்து விட்டு, “இதில இருந்து கதையுங்கோ” என்றாள். அம்மா “ஆரடி மோளே வந்திருக்கிறது” என்று கேட்டாள். “உங்களுக்குத் தெரியாதம்மா. இயக்கத்தில பெரிய ஆள். பெயர் சொல்ல வேண்டாமாம்” அக்கா சொன்னாள். “எனக்கு பெயர் மறைக்கிற இயக்க ஆளை இண்டைக்குத் தான் கேள்விப்படுகிறன். சரி சாப்பிடுகிறாரோ. சமைக்கவா.கேள்” “வேண்டாம் அவர் வெளியால போய் மச்சம் சாப்பிடுகிறாராம். இண்டைக்கு நாங்கள் விரதமெண்டு யோசிக்கிறார்” “எடியே விசரி. வந்திருக்கிறவன் இயக்கமோ, அல்லது கோவில் தர்மகர்த்தாவோ. தெய்வத்துக்கு தானே விரதமிருக்கிறம். அது என்ன கேக்குதோ குடுக்கிறதுதான் விரதம். என்ன வேணுமெண்டு கேள்” “மீன் பொரியலாம்” “சரி அரைமணித்தியாலம் கதைச்சுக் கொண்டிரு. சமையல் முடிஞ்சிடும்” என்றாள் அம்மா. நான் அடுப்படிக்குள் நுழைந்து “என்னம்மா நீயும் அவளோட சேர்ந்து விசராட்டம் போடுகிறாய்” என்று கத்தினேன். அம்மா கண்ணீரை துடைத்து வீசினாள். “ஓலமிட்டு குரல் கரைக்குமளவு சாம்பலின் பாரம் நெஞ்சில இருக்கு, ஆனால் அழக் கூடாது. கழிவிரக்கம் காட்டி துயரத்திட்ட மண்டியிடக் கூடாது. இந்தக் குறுகிய வாழ்வில சித்தம் பிறழ்ந்து வாழ்றதெல்லாம் கொடுப்பினை மோனே. கொக்காவுக்கு எதுவும் தெரியேல்ல. அவளுக்குள்ள கொந்தளிப்புமிருக்கு அமைதியுமிருக்கு. ஆனால் நல்லாய் இருக்கிற எங்களிட்ட அமைதி எங்கயிருக்கு சொல்லு. அவள் ஆரோடையாவது கதைக்கிறாளே அது காணும். எனக்கு அது நிம்மதியாய் இருக்கு” என்றாள். அம்மா கீரி மீன் பொரியலோடு சோற்றைப் பரிமாறினாள். ஏற்கனவே கால் கட்டை கழற்றியிருந்தேன். அக்கா கூந்தலை அவிழ்த்து ஒற்றைக்காலில் நின்று கொண்டு சாப்பிடத் தொடங்கினாள். கண்கள் நிறம் மாறி ஒளிர்ந்தன. வயிறு திறந்து அலறுவதைப் போல அக்கா காற்றை விட்டாள். சோற்றுக் கவளங்களை எரியும் தீயில் வீசுவதைப் போல தனக்குள் தள்ளினாள். பசியின் காலடியில் அவளுடல் நடுங்குகிறது. அவளது பசியா? யாரின் பசிக்கு அக்கா உணவு உண்கிறாள்? அம்மாவை அந்தத் காட்சி தாளமுடியாது உருக்குலைத்தது. தட்டில் மீண்டும் சோறு பரிமாறினோம். புதிய கனவு மாதிரி அக்காவுக்குள் விழித்தெழுந்தது யார்? ஒற்றைக்காலுடன் நின்றுகொண்டே உணவுண்ட அவளின் ஆங்காரம் மெல்ல மெல்ல அடங்கியது. சோற்றுத் தட்டை வீசி எறிந்தாள். யாராலும் அறியமுடியாத மொழியின் தெய்வச் சடங்கா நிகழ்ந்து முடிந்தது. அக்கா அப்படியே சிறுநீர் கழிந்தாள். வீடெங்கும் வெக்கையும் கடல் வாசனையும் எழுந்தது. அம்மா எதுவும் சொல்லவில்லை. நடப்பவற்றை பார்த்தபடி இருந்தாள். சில நாட்களுக்குப் பிறகு ஒரு மழைப் பொழுதில் அக்கா நன்றாக உறங்கினாள். கடைக்குச் சென்று திரும்பிய அம்மாவுக்கு அதுவொரு திருக்காட்சியாக அமைந்தது. சிறிய போர்வையால் அவளது கால்களை மூடினேன். “பரியாரியிடம் போய் அவள் நித்திரை கொண்டதைச் சொல்லு” என்றாள் அம்மா. போகலாமென தலையசைத்தேன். அக்கா விழிக்கும் வரை அருகிலேயே இருந்தேன். ஒருக்களித்துப் படுத்தவள் மல்லாந்து கொண்டாள். அவளுடைய பாயின் விளிம்பில் பிள்ளையார் எறும்புகள் ஓடின. அக்காவின் முகத்தில் இறுமாப்பு சேர்ந்திருந்தது. எல்லாமும் புதைந்த கடைசித் திகதியில் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேற முடிவு செய்தோம். அக்கா வர மறுத்தாள். உந்தக் கெடுவார் ஆர்மிக்காரங்களிட்ட வந்து வாழ ஏலாது. என்னை ஆரேனும் சுட்டுக் கொல்லுங்கோ” என்று சத்தமாய் கத்தினாள். அன்றைக்குத் தான் இந்த இறுமாப்பை கடைசியாகக் கண்டது. அக்கா விசுக்கென விழித்தெழுந்து தலையிலடித்தபடி கேட்டாள். “நாங்கள் எப்பிடி தப்பினாங்கள்” “நாங்களும் தப்பேல்ல மோளே” என்றாள் அம்மா. திசை பிறழாது கடல் நோக்கி ஓடினாள். தன்னுடைய நிர்வாணத்தை வெறிகொண்டு படைத்து, “கடலே! மீதியற்று அழிந்து போ, லட்சோப லட்ச சனங்களின் பிணம் விழுங்கிய உன் அலைகளில் கொடுஞ்சாபம் படிந்திருக்கிறது. அழிந்து போ. பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும். தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக!” என்றாள். அலை ஒடுங்கி இருண்டது கடல். ஊர்ந்து வந்து அக்காவின் தாள் பணிந்து “என் மகளே! மன்னிக்க” என்றது. வானத்தில் சுடர்ந்த நட்சத்திரங்கள் துடிதுடித்தபடி நடப்பவற்றை பார்த்தன. அக்கா மேல்நோக்கிப் பார்த்து “பிள்ளைகளே! உங்களின் பொருட்டு எவரையும் மன்னிக்கேன், நீங்கள் அமைதி கொள்ளுங்கள். உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்”என்றாள். மோதித்தெறிக்கும் முழக்கத்தோடு மழை பொழிய கடல் மீது ஒலித்த அவளின் குரல் நூற்றாண்டின் முறையீடு. எம்மை வஞ்சித்த பூமி அஞ்சட்டும் என்றனர் சனங்கள். https://akaramuthalvan.com/?p=1388
-
பக்கத்து வீடு
நல்லவேளை சுமே ஆன்ரி 1998 இல் வீடு வாங்கவில்லை! எதிர்ப்பக்கம் 47 நம்பரில் எங்கள் நண்பர்கள் வாடகைக்கு இருந்தவீடுதான் எங்கள் வார இறுதிக் கொட்டகை! எங்கள் பார்ட்டிகளாலும், பேசிய “வார்த்தை”களாலும், சத்தத்தாலும் அந்தத் தெருவே அதிர்ந்துகொண்டிருக்கும்! கிழவனைக் கண்ட ஞாபகமே இல்லை!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்🎉🎂🎊
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 09 அண்ணாவின் வித்துடலை குருதியூறும் நிலத்தினுள் விதைத்து மூன்றாம் நாள் அதிகாலையில் பெருங்குரலெடுத்து அழுதாள் அம்மா. திகைப்படைந்து எழுந்தவர்கள், மங்கலான உறக்கக் கலக்கத்தோடு பார்த்தார்கள். நீராடி விரிந்திருந்த ஈரக் கூந்தலோடு அண்ணாவின் புகைப்படத்துக்கு முன் அமர்ந்திருந்தாள். சிறிய குத்து விளக்கில் அணையாச் சுடர் ஈகித்திருந்தது. நேற்றிரவு படைக்கப்பட்ட சாப்பாட்டில் ஈரம் விலகியிருந்தது. அம்மா தண்ணீர் செம்பைத் தூக்கி கவிழ்த்துக் காட்டினாள். ஒரு சொட்டு நீரில்லை. மீண்டும் அழத்தொடங்கினாள். வாதையின் செதில்கள் அகலமறுத்துப் பெருகிய பொழுதாயிற்று. “என் நிழலில் மரணத்தின் நித்தியம் முழுமரமாய் வளர்ந்து நிற்கிறது. ஆனாலும் உதிரும் ஓரிலையின் நடுக்கம் கூட என் இதயத்தில் இல்லை. மீளவும் சொல்கிறேன். பீரங்கிகளினதும் போர்விமானங்களினதும் தாக்குதல்களால் பீதியாகமாட்டேன். விடுதலைக்காக போரிட்டு மடியுமிந்த வாழ்வு மகத்தானது. தெளிந்த வானத்தை விடவும் ஆகிருதியில் வலுத்தது என் பெருங்கனவு. இதோ இக்கணத்தில் தியாகத்தின் பலிபீடத்தில் கிடத்தப்பட்டுள்ளேன். என் விழுப்புண் மீது அழுந்தப் பதிந்திருக்கும் ரத்த வரிகளை மேற்கு வானில் தாழும் சூரியன் பார்க்கிறது. நெருப்பேந்தி நாளையது கிழக்கில் தோன்றுகையில் என் முகத்தைச் சூடி வரும். ஆகுதியின் இனிமையை அருளும் நிலத்தை எதனாலும் விழுங்கிவிட முடியாது.” வீரச்சாவு எய்துவதற்கு முன்பாக அண்ணா திரும்பத் திரும்ப சொன்ன வார்த்தைகள் இவையென களமுனையிலிருந்து வந்த படையணிக்காரர்கள் சொன்னார்கள். அண்ணா நன்றாக உரையாற்றுவான். கவிதைகள் எழுதவும் செய்வான். விடுப்பில் வந்திருந்த நாட்களில் எழுதிய சில கவிதைகளை அம்மாவிடம் கையளித்திருந்தான். ஒருநாள் நானும் அவனும் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பிய போது கொந்தளிப்பாக சிலவற்றைக் கதைத்தோம். “போரால் எதையும் பெறமுடியாது போனால், இத்தனை இழப்புகளும் வீண் அல்லவா” என்றேன். இத்தனை தியாகங்களும் வெறும் இழப்பாகவே எஞ்சுமென உன்னால் நினைத்துப் பார்க்க முடிகிறதா! போரை நம்பியதல்ல இந்தப் போராட்டம். எங்கள் வாழ்வுரிமையை போரின் வழியாக மட்டுமே வலியுறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை நம்பமுடியாதபடி காலம் தருவித்துவிட்டது. நீ சொல்வதைப் போல இழப்புக்கள் வீண் போனாலும் மிஞ்சியிருப்பவர்கள் நினைவு கூருவர். மாண்டவர்கள் இங்கேயே தான் இருப்பார்கள். ஏனென்றால் இந்த மண் அவர்களின் மேனி. எஞ்சியவர்களை அவர்கள்தான் சுமப்பார்கள். இறுதியில் இழப்பைத் தான் பெறுவோமென்றால் ஞாலத்தின் அறம் புழுத்துப்போகும். குமட்டல் வாடை மனுஷகுலத்தின் மீது ஈயெனப் பெருகும். அற்பமான நோய்களில் உலகு நொடியும். எம் இனத்தின் புராதனக் கண்ணீரும் குருதியும் அறத்தை விடவும் மேன்மையான ஆற்றலோடு தீவிரமாகும். இழப்பின் ஞாபகங்கள் பரம்பரை பரம்பரையாக எங்கள் மாதர்களின் ஆதிக்குகையுள் அனற்குழம்பெனக் கனன்று கருவாகி வெளியுமிளும். பூர்வீகச் சந்ததி பெருகும்” என்றான். உடலீரம் காய்ந்திருந்தது. அண்ணாவின் சொற்கள் சுதந்திரத்தின் பிரசங்கமென என்னுள்ளே வலுவாக உருகி இறங்கியது. “தியாகங்கள் எல்லாமும் ஞாபகங்களாய் எஞ்சினால், பாழான போரை பூமி நினைவில் வைத்துக் கொள்ளும். அது நன்மைக்கே” என்றேன். “போரை விடவும் பூமி பாழானது. ஏனெனில் போர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வழி மட்டுமே” என்ற அண்ணா நாயுண்ணிப் பழங்களைப் பிடுங்கி வாயில் போட்டான். இனிப்புச் சுரந்து இதமாய் உடல் மொழிந்தான். அன்றிரவு நேரமாகியும் நான் விழித்திருந்தேன். குப்பி விளக்கு வெளிச்சத்தில் ஓவியமொன்றை வரைந்து கொண்டிருந்தேன். வீட்டின் வெளியே அமர்ந்திருந்து அம்மாவும் அண்ணாவும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். களமுனையாகவிருக்கும் சொந்தவூரின் கோவில்களுக்கு விளக்கு வைக்குமாறு சொன்னாள். அண்ணாவுக்கு இறை பக்தி அதிகம். சிறிய வயது முதலே சைவ மடத்தில் தீட்சை பெற்று நடராஜருக்கு பூசை செய்தவன். அவனுடைய ஆச்சார நெறிகள் தீவிரமானவையாக இருந்தன. இயக்க வாழ்க்கையில் எல்லாமும் நொறுங்குண்டு தலைகீழானது. மாட்டிறைச்சியை விடவும் ருசியானது எதுவுமில்லை என்பது அண்ணாவின் உச்சாடனமாய் ஆகியிருந்தது. அண்ணாவுக்கு எட்டாம் நாள் படையல் வைக்கும் போது அம்மா மாட்டிறைச்சியையும் சேர்த்துக் கொண்டாள். சொந்தக்காரர்கள் சிலர் முகம் சுழித்து வேண்டாமென்றனர். “பிள்ளைக்கு பிடிச்சததான் வைக்கோணும், உங்களுக்கு பிடிச்சத வைக்க வேணுமெண்டால் நீங்கள் மோசம் போன பிறகு செய்து வைக்கிறன்” என்ற அம்மாவின் கூற்று பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. செம்பு தளும்ப தண்ணீர் வைக்கப்பட்டு தலை வாழை இலையில் மாமிசக் குழம்புகள் எல்லாமும் படைக்கப்பட்டன. முச்சந்தியில் கழிப்புக் கழித்து பூசணியை இரண்டாகப் பிளந்து குங்குமம் தடவி, எல்லாவற்றையும் சுளகொன்றில் பரப்பி வைத்துவிட்டு வந்தோம். வீட்டில் அனைவரும் நிறைவாகச் சாப்பிட்டனர். அம்மா உபசரித்து கவனித்தாள். தண்ணீர் என்று சபையில் யாரும் கேட்காத வண்ணம் எல்லோருக்கும் வழங்கப்பட்டுக் கொண்டே இருந்தது. வீட்டைச் சுற்றியும் புதுக்குடங்களில் குடிதண்ணீர் நிறைத்து வைத்திருந்தாள். அம்மாவுக்கு சித்தம் குலைந்திற்றோவென நொந்த சிலர் சிறிய தலையசைப்போடு எழுந்து சென்றனர். பிள்ளையின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள் அம்மா. “நான் சாகத் தயாரானவன், வீரச்சாவு அடைந்தால் அழாதேங்கோ. நீங்கள் என்னைப் பிரசவித்த தருணத்தை விடவும் பூமிக்குள் விதைக்கும் போது மங்கலம் கொள்வீர்கள்” என்றுரைத்த அண்ணாவின் குரல் அம்மாவின் ஞாபகத்தில் பொங்கி நுரைத்தது.”வந்து கொண்டிருக்கிறான், தேவலோகத்திலிருந்து என் மகன் வருகிறான்” அம்மா ஆனந்தித்து உறுதியாகச் சொன்னாள். பரவசமாகி தன்னுடைய முலைகளை எடுத்து வெளி நோக்கி விரல்களால் பிசுக்கி “பிள்ளைக்கு சரியான தண்ணி விடாய்” என்றாள். இரவு முழுதும் நிலவும் பனியும் விழித்திருந்தது. அம்மா அடிக்கடி குடங்களையும், படையலில் வைக்கப்பட்டிருந்த செம்பையும் சென்று பார்த்தாள். அளவு குறையவில்லை. வீட்டின் வாசலை விட்டு ஒதுங்கியிருந்தாள். அண்ணா உள்ளே செல்ல ஏதும் தடையாக இருக்கவே கூடாது என ஒழுங்குகள் செய்திருந்தாள். ஆவியாய் அலைக்கழியும் அண்ணாவுக்காக சொந்தக்காரர்கள் சிலரும் காத்திருந்தனர். அற்புதங்களுக்காக காத்திருந்த சனங்களின் கதைகள் இரவைத் தீண்டியது. வீட்டினுள்ளே ஒரு பல்லி சொன்னது. அதன் நீளவொலி எல்லோரையும் தன்பக்கம் திருப்பியது. செய்வினைகள் அறுப்பதில் வல்லவளாக இருந்த புறாக்குட்டி அத்தை “காயப்பட்டு துடிதுடித்து பங்கருக்குள்ள தாகமெடுக்க, தண்ணியில்லாமல் தன்ர ரதத்தையே அள்ளி நக்கியிருக்கிறான். அந்தச் சீவன்ர தாகம் பூலோகத்தில தான் இருக்கு. அவன் வருவான்” என்றாள். நான் பொறுமையிழந்து “ எங்களுடைய ஊகத்திற்கும் ஆசைக்கும் எதுவும் நடக்காது. விசர்த்தனமாய் கதைக்கிறத விட்டிட்டு எல்லாரும் போய் படுங்கோ” என்றேன். “இந்தப் பூமியில இரவு வாறதே ஆவிகளுக்காகத் தான். அதுகள் நடமாடுகிற ஒரு பொழுது இது. நீ நம்பாட்டி உள்ள போய் படன்ரா” என்ற கனகு பெரியப்பா சுருட்டை புகைக்கத் தொடங்கினார். “அவன் வந்து தண்ணி குடிப்பான். அதுவரைக்கு நான் முழிச்சிருப்பன்” அடைகாத்திருக்கும் தாய்மையின் தழல் குழம்பு வெடித்தது. “எடியே விசரி. இப்பிடி செத்த இயக்கப் பிள்ளையள் வந்து தண்ணி குடிக்க வெளிக்கிட்டால் எங்கட கடல் தண்ணி வத்தியிருக்குமெல்லே. உள்ளே போய் படு” என்று முஸ்பாத்தியாகச் சொன்ன காங்கேசந்துறை மாமாவை திரும்பிக்கூடப் பார்க்காமல் அம்மா தவிர்த்தாள். “உன்னுடைய முஸ்பாத்திக்கு அந்த செவிட்டுப் பரத்தை சிரிக்கலாம். இஞ்ச ஆரும் சிரிக்க மாட்டினம். எழும்பிப் போடா பு***ண்டி” கனகுப் பெரியப்பாவின் பேச்சில் எச்சரிக்கை தொனி தெரிந்தது. காங்கேசந்துறை மாமா பேச்சிழந்து வெட்கி நின்றார். அம்மாவுக்கு விழித்திருப்பது ஆறுதலாகவிருந்தது. ஆமை போலூர்ந்த இரவு தீர்ந்து போனது. ஆனாலும் செம்பிலோ, குடங்களிலோ தண்ணீர் அப்படியே இருந்தது. அம்மா செம்பு நீரை எடுத்து பூக்கன்றின் அடியில் ஊற்றிவிட்டு புதிய நீர் நிறைத்து வைத்தாள். அவளுக்குள் பிரார்த்தனையின் அழுகுரல் பூகம்பமாய் ஒட்டிக்கிடந்தது. தன்னையிழந்த ஞாபகமாய் அம்மா வீட்டுக்குள் நடமாடினாள். கல்லறைகளும் நடுகற்களும் நிறையும் விதியின் வசியத்தை வாழ்வென எண்ணும் வருத்தம் எனக்குமிருந்தது. சாவளிக்கும் அடைக்கலம் அரணாகவிருந்தது. “அண்ணா வந்து தண்ணி குடிக்கவில்லையெண்டு, கவலைப்படாதேயம்மா. அவன் உன்ர விரும்பத்தை விளங்கிக் கொள்வான்” என்றேன். “அவனுக்கு தண்ணி விடாய், பிள்ளையைத் தெய்வம் அப்பிடி கூட்டிக் கொண்டு போயிருக்க கூடாது. சீவனுக்கு தாகமிருக்கிறது சிவனுக்கு தெரியாமல் போச்சே” “அதுக்காக அவர் ஆவியா வந்து தண்ணி குடிப்பாரே ” “அடேய், அண்டைக்கு வந்து தண்ணி குடிச்சது அவன் தான். அவன் ஆவியில்லை. என்ர பிள்ளை தேவர். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு நிகர்த்த முதலாமவன்” மறக்கவியலாத தழும்பென பதில் உரைத்தாள் அம்மா. முகம் வெளிறி இயல்புக்கு வர முயன்றேன். தீ பெருகும் காலத்தின் முற்றுகையில் உதிர்காலத்து இலையென கணங்கள் பொசுங்கின. அலைகளின் ஓயாத முறையீடு போல அம்மா பெரும் பொழுதுக்காய் காத்திருந்தாள். பெருங்கூவலோடு மழையின் பெருவிழிகள் திறந்தன. உப்புதிர்க்கும் கடல் காற்று கூரையூடே புகுந்தது. கொடுஞ்சாபமென உறைந்திருந்த நிலப்புழுதி மணமெழுந்தது. இடியதிர மிகுந்து பரவிய மின்னல் ஒளியிழந்து உலர்ந்தது. அண்ணாவின் புகைப்படத்து குத்துவிளக்குத் திரியில் குருதியின் சுளிப்பு நிறம் கொண்டெரிந்தது. “அற்புதங்களின் வருகையை நிரூபிக்க அதிகம் சிரமப்படவேண்டியதில்லை” என்றாள் அம்மா. ஒழுகும் தாழ்வாரத்தின் கீழ் நின்று சிறுநீர் பொழியும் நாயின் கண்கள் சலனமடைந்திருந்தன. நிழல் மரவள்ளி மரத்தில் அடைந்திருந்த கோழிகள் நனைந்து நடுங்கின. அம்மா மழையில் நனைந்தபடி வீட்டுப் படலையைத் திறந்து வைத்தாள். “அவன் வருகிறான், தண்ணி விடாய்ல வருகிறான். இந்தத் தண்ணி போதாது.” என்றாள். துயர் ததும்பும் ஒரு முதுமுரம் மண்ணில் வேரூன்றி மழையில் நனைந்து கிளையசைப்பதைப் போல கையசைத்து சொல்லிக்கொண்டே இருந்தாள். “அவன் வருகிறான் அவனுக்கு சரியான தண்ணி விடாய்” அடுத்தநாள் காலையில் குடங்களில் தண்ணீர் இல்லை. செம்பு காய்ந்திருந்தது. வரலாற்றை தேடுபவளைப் போல வீட்டின் வாசல்வரை அண்ணாவின் காலடித்தடம் தேடி கண்ணீர் கசிந்தாள். கரைக்க இயலாது திணறும் சாம்பல் சேற்றில் அவள் கால்கள் புதைந்து விடுபட மறுத்தன. “அவன் வந்திருக்கிறான். ஆனால் நடந்து வரேல்ல. பறந்து வந்திருக்கிறான். பூமியில் தேவர்கள் நடக்க மாட்டார்கள் அல்லவா” என்றாள். இது நீண்டால் அம்மாவுக்கு சித்தம் பிசகிவிடுமென எண்ணிப் பயந்தேன். எங்கள் சொந்தக்கார பரியாரியிடம் விஷயத்தைச் சொல்லி மருந்து கேட்டேன். “அவளுக்கு சித்தம் நன்றாகவே இருக்கிறது. எங்களுக்குத் தான் பிசகிவிட்டது மோனே. நீ எழும்பிப் போ” என்றார். அம்மா வீட்டுக்குளேயே இருந்தாள். ஊரிலுள்ள குளங்களில் இருந்து கிணறுகள் வரை தண்ணீர் சுத்தமாக இருக்கிறதாவென கூலிக்கு ஆள் வைத்துப் பார்த்தாள். ஒவ்வொரு இரவும் அவள் அண்ணாவுக்காக காத்திருந்தாள். குடங்களையும், செம்பையும் வற்றிய நீரோடு கனவில் கண்டாள். அன்றைக்கு ஊரில் இன்னொரு வீட்டில் வீரச்சாவு. இரவு முழுவதும் அங்கிருக்கலாமெனத் தோன்றியது. ஆனாலும் அம்மாவை தனியாக விடுவது பயமாகவுமிருந்தது. நள்ளிரவு வீட்டுக்கு புறப்பட்டு வந்தேன். இரண்டு நாய்கள் தெருவின் முடக்கில் படுத்திருந்தன. ஒரு நாயின் குழைவொலி கொஞ்சம் துணையாகவிருந்தது. வீட்டின் படலையைத் திறந்து உள்ளே நுழைந்தேன். தாழ்வாரத்தின் கீழே அமர்ந்திருந்த அண்ணா சிதைந்து அறுந்து தொங்கும் காலைப்பிடித்தபடி குடத்திலிருந்து தண்ணீரைக் குடிக்கிறான். இரண்டு கால்களும் சிதைந்து ரத்தம் விலகித் தேங்கியிருந்தது. விடாய் அடங்காது நிலமெனக் கிடக்கும் குருதியை அள்ளி பருகுகிறான். அண்ணா….என்று பெருங்குரலெடுத்து அழுதபடி ஓடிப்போனேன். வீட்டினுள்ளிருந்து அம்மா சொன்னாள் “ எடேய், விசரா கொண்ணா வீட்டுக்குள்ள என்னோட இருக்கிறான். உள்ள வா” வாசலில் நின்று உள்ளே பார்த்தேன். சிதைந்து தொங்கிய கால்களோடு குருதி தேங்கிய சாணத்தரையில் அண்ணாவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள் அம்மா. என்னைக் கண்டதும் “ இவனுக்கு சரியான தண்ணி விடாய், பா**யை விட்டு வாய எடுக்க மாட்டேன் என்கிறான்” எனச் சொல்லி மகிழ்ந்தாள். அம்மா, என்றபடி அவளருகே ஓடினேன். அவள் என்னை அணைத்துச் சொன்னாள். “சந்ததி சந்தியாய் இவனுக்கு நாங்கள் தண்ணி வைக்கவேணும். அவன் எங்கட வாசலுக்கு பறந்து வருவான்” அண்ணாவின் கால்களைத் தொட்டுப் பார்த்தேன். குருதியின் நீளக் கனியென தணல் பழுத்திருந்தது. கைகளை விசுக்கென எடுத்துக் கொண்டேன். “சரியான வெக்கை என்ன! இதுதான் எங்கட ஞாபகமடா மோனே” என்றாள் அம்மா. https://akaramuthalvan.com/?p=1359
-
புலமைப் பரீட்சையும் அன்பளிப்புகளும்
புலமைப் பரீட்சையும் அன்பளிப்புகளும் December 22, 2023 — எழுவான் வேலன் — ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களை பரிசு மழையால் மூழ்கடிக்கும் பழக்கம் ஒன்று இப்போ ஆரம்பமாகியிருக்கிறது. வறுமையான பிள்ளைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புலமைப் பரிசில் திட்டம் இப்போ பெற்றோரை வறுமையாக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த புலமைப் பரீட்சையை நோக்கமாகக் கொண்டு முதலாம் ஆண்டிலிருந்தே பிள்ளைகளுக்கு ரியுசன் ஆரம்பிக்கப்படுகிறது. அன்றிலிருந்து ஐந்து வருடத்துக்கு ரியுசன் காசு கட்ட வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள். (புலமைப் பரீட்சை முடிந்த பின் கட்டப்படுகின்ற ரியுசன் காசு வேறு கணக்கு) நான்காம் ஆண்டுக்குப் போனதும் புலமைப் பரீட்சை கற்பிக்கும் ஆசிரியர்களின் பொறுப்பில் பிள்ளை ஒப்படைக்கப்படுகின்றது. இரண்டு வருடத்துக்கு அவர்கள் காசை உறிஞ்சிக் கொள்வார்கள். இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலான இடங்களில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரே பிரத்தியேக வகுப்பாக இதை பாடசாலைக்கு வெளியே நடத்துவதாகும். ஆரம்பத்தில் பிள்ளை சித்தியடைந்தால் பிள்ளையின் மகிழ்ச்சிக்காக ஆசிரியர் சக மாணவர்கள் என அனைவருக்கும் இனிப்புக்கள் பகிர்வதைக் காணக் கூடியதாக இருந்தது. பின்நாட்களில் இது குறித்த ஆசிரியருக்கும் தலைமை ஆசிரியருக்கும் விருந்து படைப்பதாக மாற்றமடைந்து இன்று விருந்துடன் ஆசிரியைகளுக்கு சேலையும் ஆசிரியர்களுக்கு சேட், வேட்டி என்பன கொடுப்பதாக மாறியிருக்கிறது. பதினைந்து ஆசிரியர்கள் இருக்கும் ஒரு பள்ளிக் கூடத்தில் மூன்று பிள்ளைகள் மட்டும் சித்தியடைந்தால் ஒரு பெற்றோர் ஐந்து ஆசிரியருக்கு சாப்பாடும் ஆடைகளும் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிறார். இன்றைய பொருளாதார நெருக்கடியில் ஐந்து பேருக்கும் ஆகக் குறைந்தது பதினைந்தாயிரம் ரூபா செலவழிக்க வேண்டியேற்படுகிறது. சேலை வாங்கிக் கொடுக்காத பிள்ளைகளை அழைத்து சில ஆசிரியர்களும் பெற்றோர்களும் பேசிய நிகழ்வுகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் அந்தப் பிள்ளையும் பெற்றோர்களும் அவமரியாதைக்கும் குற்ற உணர்வுக்கும் உள்ளாகிறார்கள். என்ன கடன் பட்டாவது இந்த விடயத்திலிருந்து விடுபடுவதற்காக ஆசிரியர்களை மகிழ்விக்க முயல்கிறார்கள். உண்மையில் பிள்ளைகளிடம் கைநீட்டி அன்பளிப்புப் பெறும் ஆசிரியர்களே அவமரியாதைக்கும் குற்ற உணர்வுக்கும் உள்ளாக வேண்டியவர்கள். அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கப்படும் சேலை, சேட், சாப்பாடு என்பன ஒரு வகை இலஞ்சமேயாகும். ஒழுக்கத்தினையும், நேர்மையினையும், கடமையினையும் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடசாலைகள் பிள்ளைகளின் பிஞ்சு மனதில் அன்பளிப்பு என்ற பெயரில் இலஞ்சத்தினையும், நேர்மையீனத்தினையும் கடமை துஸ்பிரயோகத்தினையும் நடைமுறை ரீதியாகக் கற்றுக் கொடுக்கின்றன. இந்த மாணவர்கள் நாளை பெரிய பதவிகளுக்குப் போகும் போது தான் செய்கின்ற கடமைகளுக்கெல்லாம் அன்பளிப்பை எதிர்பார்ப்பவர்களாக மாறுவது ஒன்றும் ஆச்சரிப்படத்தக்க விடயமில்லை. ஆசிரியர்கள் தங்கள் கடமைக்கு அன்பளிப்புப் பெறுவதில்லை அது தனது கடமை அந்தக் கடமையை ஆற்றுவதற்காகத்தான் அரசு சம்பளம் தருகின்றது என்பதை நடைமுறை ரீதியாகக் கடைப்பிடிப்பார்களாக இருந்தால் பிள்ளையும் அந்த ஒழுக்கத்தை ஆசிரியர்களிடம் இருந்து கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ளும். மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்துக்கு முதல் வைத்து நோக்குகின்ற ஆசிரியர்கள் மாணவர்களின் மனதில் கடமையைச் செய்வதற்கு அன்பளிப்பு எனும் எண்ணங்களை ஏன் விதைக்கிறார்கள் என்பதும் இதனை அப்பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட கல்வி அதிகாரிகள் வரை கண்டு கொள்ளாதிருப்பதன் நோக்கம்தான் என்ன என்பதும் விளங்கவில்லை. என்ன கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை எமது பாடசாலையில், எமது வலயத்தில் எத்தனை மாணவர்கள் புலமைப் பரீட்சை சித்தியடைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதுதான் எல்லாருக்கும் நோக்கமாக இருக்கிறது போல்த் தெரிகிறது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள், தங்கள் கௌரவத்துக்காக, புகழுக்காக பிள்ளைகளைப் பிழிய அதிபர்களும் கல்வி அதிகாரிகளும் தங்கள் பாடசாலை, வலயம் என்பவற்றை உயர்த்துவதற்காக பெற்றோர்களைப் பிழிகிறார்கள் போலத் தெரிகிறது. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையே இன்று மாணவர்களை மிகவும் கொடுமைப்படுத்துகின்ற பரீட்சையாக இருக்கின்றது. பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் கௌரவத்துக்காக சிறுவர்கள் பலிக்கடாவாக்கப்படுகின்றனர். நான்காம் ஆண்டில் இந்தச் சித்திரவதை தொடங்கி விடும். கிட்டத்தட்ட இரண்டு வருட கடும் பயிற்சி அதன் பிறகு பரீட்சை. இந்தக் காலப்பகுதிக்குள் காலை முதல் அந்தப் பிள்ளை தூங்கும் வரை பல பெற்றோர்கள் ஓய்வின்றிப் பிள்ளையை வருத்துகிறார்கள். என்னதான் சிறுவர் உரிமை பற்றிப் பேசினாலும் கல்வி என்ற பெயரில் இந்தப் பிள்ளைகளின் உரிமை பறிக்கப்படுவதை நாம் எல்லோரும் கண்டும் காணாதது போல் இருந்து வருகிறோம். புலமைப் பரீட்சை முடிவு வந்தவுடன் சித்தியடையாத மாணவர்களின் மனம் நோகா வண்ணம் நடந்து கொள்ளும்படி சில சமூக ஆர்வலர்கள் முகநூல்களில் எழுதுவதுடன் இது முடிந்துவிடுகிறது. இவற்றின் ஊடாக எந்தப் பெற்றோரும் பெரியளவுக்கு விழிப்புணர்வு பெற்றதாக இல்லை. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் பந்தயத்தில் தாம்தான் முந்த வேண்டும் என்ற நோக்கு இருக்கிறதே தவிர தனது பிள்ளையின் உளநிலை பற்றி அக்கறைப்படுவதாக இல்லை. இந்தப் போக்கு இவ்வாறு வளர்ந்திருப்பதனையும் இதனால் பிள்ளைகள் பாதிக்கப்படுவதனையும் கல்வி அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் அறியாமல் இல்லை. இருந்த போதும் புலமைப் பரீட்சையினை அரசு ரத்து செய்வதாக இல்லை. காலத்துக்குக் காலம் கல்வி அமைச்சர்கள், அதிகாரிகள் இது தொடர்பாக பேசுவார்களே தவிர உருப்படியான காரியம் எதையும் செய்வதாக இல்லை. இதற்குக் காரணம் பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதில் சரியான பொறிமுறையை எவரும் கண்டுபிடிக்கவில்லை என்பது புலனாகின்றது. புலமைப் பரிசில் கொடுப்பதுதான் இந்தப் பரீட்சையின் நோக்கம் என்றால் அதற்கு எவ்வளவோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் புலமைப்பரிசிலை விட பாடசாலை அனுமதிதான் கல்வி அமைச்சுக்கு சிக்கலான விடயமாகத் தெரிகிறது. புலமைப் பரிசு, பாடசாலை அனுமதி என்பவற்றைத் தாண்டி நாட்டுக்கு நற்பிரசைகளை உருவாக்குவதை மறந்து ஆசிரியர்களும் சமூகமும் செயற்படுகின்றது. புலமைப் பரீட்சையின் ஊடாக அன்பளிப்பு என்ற பெயிரில் இலஞ்சம் பெறும் மனோபாவம் ஒன்று உருவாகப் போவதை எவரும் உணர்வதாக இல்லை. இன்று வளர்ந்து வந்து கொண்டிருக்கும் இந்த அன்பளிப்புப் பண்பாட்டை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவது ஒவ்வோர் ஆசிரியர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும் இதனை மீறுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த சீர்கெட்ட அன்பளிப்பு இலஞ்சம் நிறுத்தப்பட வேண்டும். இதனை கல்வி அதிகாரிகள் செய்ய முன்வரவேண்டும். அடுத்த ஆண்டில் இந்நடவடிக்கை தொடருமாக இருந்தால் அனைத்து ஆதாரங்களுடனும் வெளிப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம். https://arangamnews.com/?p=10273
-
செயற்கை நுண்ணறிவு உருவாக்கி படங்கள்
prompt 1980களில் யாழ்பாணம் நெல்லியடி வீதியில் மழை தூறிக்கொண்டிருக்கும்வேளை மாட்டுவண்டிகள் நிரையாகச் செல்கின்றன
- IMG_6718.jpeg
- IMG_6719.jpeg
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
கிருபனைத் தவிர்த்து!😁
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
@ஈழப்பிரியன் ஐயா, போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வருகின்றதோ அப்போது பார்க்கலாம். குறைந்தது பத்துபேர் கலந்துகொண்டால்தான் நடத்தமுடியும்
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 08 அபாயம் நெருங்கியதென அச்சப்பட்டு அசையாது நின்றான் சங்கன். கலவரத்தோடு உடல் வியர்த்து மூச்செறிந்தவன் சட்டென கருவறைக்குள் பதுங்கினான். அவனை விழிப்புற வைத்த சத்தம் சில நிமிடங்களிலேயே வெட்டுண்டது. அரிய விலங்கென மடிந்திருந்த தன்னுடலைத் தளர்த்தி விரித்தான். ஆறடி உயரமான ஆகிருதி. தலையுயர்த்தி எழுந்தான். வைரவர் விக்கிரகத்தை அடியோடு தகர்த்து அதனடியிலிருந்த தகடுகளை எடுத்தான். பழமையான ஐம்பொன் சிலைகளை ஈரச்சாக்கில் போட்டான். உண்டியலைப் பிளந்து நாணயங்களை மணல் நிரப்பப்பட்ட சிறிய பைக்குள் போட்டான். தாள் காசுகளை ஈரமான உள்ளாடைக்குள் சுருட்டி வைத்தான். தன்னுடைய தடயங்கள் ஏதேனும் விடுபட்டு இருக்கிறதாவென மீளாய்வு செய்தான். எதுவுமில்லை. காலடித்தடங்களையும் அழித்து கோவிலை விட்டு வெளியேறினான். எத்தனையோ களமுனைகளில் வேவு பார்த்து வென்ற கண்கள். எதிரியின் காலடி வரை ஊர்ந்து சென்று நோட்டமிட்ட தீர உடல். எத்தனையோ பகலிரவுகள் சடமென உருமாறி பகைவர் வழியில் அமைந்திருந்த வல்லபம் சங்கனுடையது. மனுஷ வாடையறியும் கூர் நாசி. பாம்பின் லாவகமாய் நிலம் நீந்தி மறைபவன். தேரைகள் மறைந்து கொள்ளும் இடுக்குகளில் கூட இருந்தான் என்பார்கள். எதிரின் தோல்வியைத் தீர்மானிக்கும் வேவுக்காரன். இயக்கத்தின் தலைவரால் பலமுறை கெளரவிக்கப்பட்டவன். தளபதிகளின் நேசன். சங்கன் பணியாற்றிய களமுனையில் எதிரிகளின் முன்னேற்ற நடவடிக்கைகள் அதிரடியாக முறியடிக்கப்பட்டன. மண்ணை அபகரிக்கும் வன்கவர் வெறியர்களுக்கு எதிரான போராட்ட வரலாற்றில் சங்கன் ஒரு சுருட்டை பாம்பு. அவனிருந்த இடத்தை யாரும் அறியார். எதிரிகளின் காலடிக்குள் மிதிபட்டும் மனுஷ பாவனை காட்டாமல் மரக்குத்தியென கிடந்தது தப்பியவன். அத்தனையும் தடயமற்று அழிந்து போயிற்றே என்று கலங்கிய கண்களையும் துடைக்காமல் சாக்குப்பையை சுருக்கிட்டு கட்டினான். பசி எரிந்து உளம் புகையும் ஏழ்மையின் வயிற்றில் துடிதுடிக்கும் புழுவான வாழ்வு சங்கனுக்கு நேர்ந்திருந்தது. கோவிலை விட்டு வெளியேறி கோபுரத்தை வணங்கினான். கற்பூரச் சட்டியில் இரண்டு பெட்டி காவடி கற்பூரத்தை வைத்துவிட்டு மெல்ல நடக்கத்தொடங்கினான். கொஞ்சத் தூரத்திலேயே அவனைத் தன்னுள் புகுத்தியது இருள். அதிகாலையிலேயே வைரவர் கோவில் பூசாரியின் ஓலம் சனங்களை அழைத்தது. ஐம்பொன் சிலைகள், தகடுகள், உண்டியலென ஒன்றும் மிச்சமில்லாமல் துடைத்து வழிக்கப்பட்டிருந்தது. சூறையில் வேர் பிளந்து தரைவிழுந்த மரமென கருவறை விக்கிரகம் தூக்கி வீசப்பட்டிருந்தது. சனங்கள் மண்ணைவாரி தம்மிலடித்துக் கொண்டனர். “எங்கட ஊர்க்காரன் வைரவரில கை வைச்சிருக்க மாட்டான். கேணியடிக்காரர்கள் தான் வேலையைக் காட்டியிருக்கினம்” முதல் அனுமானத்தைச் சொன்னார் செல்லையா. “அண்ணா என்னவாய் இருந்தாலும் பொலிஸ்ல போ கேஸ் குடுப்பம். அதுதான் முறையாய் இருக்கும்” என்றவர் கொக்குவில் மாமா. “இவ்வளவு சண்டைக்குள்ள தப்பி, கஷ்டப்பட்டு திரும்பவும் ஊருக்கு வந்தோமெண்டு நினைச்சு கோயிலை புனரமைப்புச் செய்தால், களவெடுத்துக் கொண்டு போறாங்களே” என்றனர் ஊர்ப்பெண்கள். “இப்ப நீங்கள் என்ன செய்யப்போறியள். கேணியடி ஊருக்குள்ள புகுந்து ஒவ்வொருத்தனையும் பழி சொல்லி அடிக்கப் போறியளோ” என்று குரல் உயர்த்தினார் விநாயகம். “முதலில கேஸ் குடுக்கலாம். வெளிக்கிடுங்கோ” அழுத்தமாகச் சொன்னார் கொக்குவில் மாமா. “எல்லாத் துன்பத்துக்கும் இவங்கள் தான் காரணம். இவங்களிட்ட போய் நிண்டு எங்கட தெய்வத்தோட சிலை களவு போட்டுதெண்டு முறைப்பாடு கொடுக்க எனக்கு விருப்பமில்லை” என்றார் செல்லையா. “நீங்கள் சொல்றதெல்லாம் நூறுவிதம் சரிதான், ஆனால் வேற என்னதான் வழி. தொடர்ந்து களவு கொடுத்திட்டு இருக்கேலுமோ” கொக்குவில் மாமா கேட்டார். “நாட்டைப் பறிச்சு வைச்சிருக்கிறவனிட்ட போய், கோயிலில களவு போச்செண்டு சொல்லுறதோ” செல்லையாவின் பதில் கேள்வியில் கோபம் அதிகரித்திருந்தது. ஒரு வெள்ளைத்துணியில் சில்லறையை முடிந்து கோவில் வாசலில் கட்டிய செல்லையா “இந்த அநியாயத்த செய்தவன் எவனாயிருந்தாலும், இன்னும் ரெண்டு நாளில இங்க வந்து நிப்பான். வைரவர் பொல்லாதவர். அவற்ற கோபத்துக்கு ஆளானால் அவன்ர குலம் தழைக்காது” என்றார். சில நாட்களிலேயே யாழ்ப்பாணத்திலிருந்து கேதீஸ்வர குருக்கள் வரவழைக்கப்பட்டார். விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. களவாடியவனே விரைவில் எல்லாப் பொருட்களையும் கொண்டு வந்து ஒப்படைப்பான் என அருள் வாக்கு சொன்னார் பூசாரி. சனங்களும் அப்படி நிகழவேண்டுமென விரும்பினர். சங்கன் திருடிய பொருட்களை முந்திரித் தோப்பொன்றில் புதைத்து வைப்பது வழக்கம். ஏற்கனவே தாமரைக்குள முருகன் கோவிலில் திருடிய தங்க வேல் ஒன்றும் அங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வியாபாரப் பேரம் சரியாகப் படியவில்லை. பத்தர் காந்தியோடு மல்லுக்கு நின்றான். “இந்த வேல உருக்கி தங்கக்கட்டியா மாத்திறத்துக்கு எனக்கு கூலி வேண்டாமடாப்பா, ஆனால் நான் சொல்ற விலைக்கு தா” “பத்தரே, நான் சொல்றது தான் காசு. உங்களால வாங்க முடியுமா, முடியாதாவெண்டு சொல்லுங்கோ. எனக்கு உங்கட கூலி இனாமெல்லாம் வேண்டாம்” “உனக்கு உதவி செய்ய இஞ்ச வேற ஆருமில்லை. என்னைத் தவிர எந்தப் பத்தனும் இந்த வேலைக்கு துணிய மாட்டான். விளங்கி நட” “பத்தரே, கரட்டி ஓணான் வெருட்டி**க்குமாம். நீங்கள் அதுக்குத் தான் முயற்சிக்கிறியள். அது என்னட்ட சரிவராது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனான். ஐம்பொன் சிலைகளையும் தகடுகளையும் புதைத்துவிட்டு, சில்லறைகளை எண்ணி முடித்தான். இரண்டாயிரத்து நான்கு ரூபாய் இருந்தது. முந்திரித் தோப்பிலிருந்து வீட்டுக்கு போகிற வழியிலிருந்த முருகன் கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் குற்றியை இட்டு கும்பிட்டான். “முருகனே, நான் செய்யிறது பிழை தான். ஆனால் வேற என்ன செய்ய ஏலும் சொல்லு. இத்தனை துன்பங்களைத் தந்த அரசாங்கத்தையே தண்டிக்காத நீ, உன்னட்ட களவெடுத்த என்னையும் தண்டிக்க மாட்டாய் என்றொரு நம்பிக்கை. என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று உன்திரு வடியை உறுதியென்றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க” என்று பாடிக்கொண்டான். எதிர்ப்பட்ட எல்லோரும் சங்கனைப் பார்த்து அகமகிழ்ந்து புன்னகைத்தனர். “சங்கன் நாளைக்கு ஒரு கிணறு வெட்டிருக்கு வாறியோ” வழிமறித்த கிளியனிடம் வருகிறேன் என்றான். கொக்குவில் மாமா பொலிஸ் ஸ்டேசனில் முறைப்பாடு கொடுத்தார். கோவிலில் களவாடியவனை பிடித்து தரவேண்டுமென ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் கடிதம் எழுதி அளித்தார். இவ்வளவு தாமதமாக வந்து முறைப்பாடு தந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியுமென பொலிஸ் ஆவேசம் கொண்டது. “தெய்வம் பிடிச்சுத் தருமெண்டு வெயிட் பண்ணினாங்கள். அது நடக்கேல்ல, அதுதான் உங்களிட்ட வந்திருக்கிறம்” என்றார். பொலிஸ்காரர்கள் புல்லரித்துப் போனார்கள். கண்டிப்பாக அவனை கைது செய்துவிடுவோமென சிலர் நம்பிக்கையளித்தனர். இந்தச் செய்தியை ஊர்முழுவதும் தேநீரோடு பருகியது. சங்கன் எல்லாவற்றையும் அவதானிக்கத் தவறுவதில்லை. வீட்டு முற்றத்தில் மண்ணள்ளித் தின்னும் நந்திக்கடலின் கையில் லேசாக அடித்து நெஞ்சோடு தூக்கி அணைத்தான். சமையலிலிருந்த மலரினி வெளியே வந்து உங்கட மோளுக்கு ஒரு லோட் மண் வாங்கினால், இருபது வயசு மட்டும் சாப்பிடக் காணும்” என்றாள். வீட்டுக்குப் பின்னாலிருந்த சிறிய கொட்டிலில் இரண்டு போதல்களில் கள்ளு இருந்தது. பொரித்த சூடை மீனோடு கள்ளைக் குடித்து முடித்து அங்கேயே உறக்கம் கொண்டான். மலரினியும் சங்கனும் போராளிகளாக இருந்தவர்கள். ஒரே களமுனையில் சந்தித்துக் கொண்டவர்கள். வேவு அணிக்கு தலைமை தாங்கிய சங்கன் களமுனையிலுள்ள ஏனைய படையணிகளுக்கு வழங்கிய தகவல்கள் மாபெரும் வெற்றிகளை அளித்தது. மலரினி மகளிர் படையணியொன்றின் முக்கியமான தாக்குதல் அணித்தலைவியாக இருந்தாள். நிலமும் பனையும், களமும் சேனையும் சொந்தமாகவிருந்த நாட்களில் இருவரும் காதல் உறவெய்தினர். பின்னர் எல்லாமும் கானலெனக் கலைந்தவொரு காலத்தில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டனர். போராளிகளாகவிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்பு திருமணம் செய்தனர். முதற்குழந்தை இறந்து பிறந்தது. பின்னர் வந்துதித்த பெண் குழந்தைக்கு நந்திக்கடல் என்று பெயர் சூட்டினான் சங்கன். பல்வேறு களவுச் சம்பவங்களை ஆராய்ந்து பொலிஸ் தேடுதலை நடத்தியது. கோவிலில் நிகழ்த்தப்படும் களவுகளில் மட்டுமே எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லையென ஒரு சிறந்த புள்ளியை இனங்கண்டார்கள். திறமையாக திட்டமிடப்பட்டு ஒரு குழுவால் செய்யப்படுவதாக உத்தேசித்தார்கள். தடயமில்லாத ஒன்றின் பின்னால் பயணிக்க இயலாது. அது ஒன்றாகவோ நூறாகவோ கூட இருக்கலாம். பொலிஸ் கைவிரித்தது. எங்கும் பிடி கிடைக்காமல் துருவித் துருவி விசாரித்தனர். சங்கன் கூலி வேலைக்குச் சென்றான். கிணறு வெட்டுவது உடல் வருத்தும் பணி. தசை தசையாக நோவெழும். வயிறு முட்ட கள்ளுக் குடித்தாலும் அலுப்புத் தீராது. இன்று வேலை முடிந்ததும், நேராக பத்தர் ஒருவரைப் பார்க்கச் செல்ல வேண்டும். இவனோடு இயக்கத்தில் இருந்த தோழமை. இப்போது வட்டக்கச்சியில் இருக்கிறான். பொன்னுருக்கும் கூடம் வைத்து சின்னச் சின்ன வேலைகள் செய்வதாக அறிந்திருந்தான். ஒருதடவை சென்று அவனிடம் கதைத்துப் பார்க்கலாமென சங்கனுக்குத் தோன்றியது. வட்டக்கச்சியிலுள்ள வெத்திலை பத்தரின் வீடு தேடிக் கண்டுபிடித்தான். உள்ளே இரண்டு நாய்கள் கட்டப்பட்டிருந்தன. வெளியே நின்று பட்டாம்பூச்சி என்று அழைத்தான் சங்கன். இரண்டு கைகளுமில்லாது வீட்டு வாசலில் வந்து நின்றவொரு உருவம் “நீங்கள் ஆர்” என்று கேட்டது. சங்கனால் அந்தக் குரலை உணர முடிந்தது. “பட்டாம்பூச்சி நான் வியட்நாம். உந்த நாயளைப் பிடி மச்சான்” என்றான். அந்த உருவம் அற்புதமொன்றைக் கண்டதைப் போல திகைப்படைந்து சங்கனை நோக்கி ஓடிவந்தது. அப்போதுதான் பட்டாம்பூச்சியின் முகத்தைப் பார்த்தான் சங்கன். தீக்காயத்தின் தழும்பு மெழுகெனவிருந்தது. கண்கள் எரியும் திரியென சிவந்திருந்தன. வெறிகொண்ட சூனியம் தங்கிய மேனி. “பட்டாம்பூச்சி நாயளைப் பிடி, நான் வியட்நாம்” என்றான். பட்டாம்பூச்சி நாய்களை விரட்டினான். உள்ளே வாங்கோ என்பதைப் போல ஒரு தலையசைப்பு. சங்கன் அவனைக் கட்டித்தழுவினான். பட்டாம்பூச்சி பெருங்குரலெடுத்து விம்மி அழுதான். “ஏன் மச்சான் இப்பிடி குழந்தையள் மாதிரி அழுகிறாய், அழாதே” என்றான். “நீ வீரச்சாவு எண்டு கேள்விப்பட்டனான். அதுவும் ஆனந்தபுரம் பொக்சில. அங்க நிண்டனியோ” பட்டாம்பூச்சி கேட்டான். “நீ கேள்விப்பட்ட மாதிரியே வீரச்சாவு அடைஞ்சிருக்கலாம். ஆனால் இப்ப கிடந்தது உத்தரிக்க வேண்டியிருக்கு” “இயக்கத்திலையும் சரி, சாவிலையும் சரி முடிவு நாங்கள் எடுக்க ஏலாது. ஏற்கனவே எழுதின தாளில கோடுபோட முடியாதெல்லே” “டேய், பட்டாம்பூச்சி தத்துவம் கதைக்கிறது இன்னும் குறையேல்ல. நீ எங்க காயப்பட்டனி. இப்படி எரிஞ்சு போய் இருக்கு” தன்னுடைய இல்லாத கைகளின் மீதத்தைக் காட்டி “இது ரெண்டும் மாத்தளனில போனது. அதுக்குப் பிறகு மெடிஸ்ல இருந்தனான். அங்க பொஸ்பரஸ் குண்டு முகத்தை எரிச்சுப்போட்டுது” “இப்ப முந்திய விட நல்ல வடிவாய் இருக்கிறாய் மச்சான்” “ஓமடா, வெளிநாட்டில தான் கலியாணம் பார்க்கினம். போட்டோவ பார்த்த ஒரு பிள்ளையும் நீ சொன்ன மாதிரி சொல்லுதில்லை.” “ஏன் இஞ்ச இருக்கிற பிள்ளையை நீ கலியாணம் செய்ய மாட்டியோ. உனக்குத் தானே தொழிலிருக்கு” “இப்ப என்ர முடிவுகளை நான் எடுக்கிறதில்லை. நான் எடுத்த முடிவுகள் முள்ளிவாய்க்காலோட முடிஞ்சுது. இனிமேல் அக்காமார் சொல்றத கேட்டு நடப்பம்” “அதுசரி, உன்னட்ட ஒரு விஷயம் சொல்லவேணும். அது எங்கட இயக்க ரகசியத்துக்கு ஒப்பானது. நீ ஆரிட்டையும் சொல்லமாட்டேன் என்றால் சொல்லுகிறேன்” “வியட்நாம் எனக்கு எந்த ரகசியமும் நீ சொல்ல வேண்டாம். நான் அதை வைச்சு என்ன செய்யேலும் சொல்லு” “இல்ல,நீ எனக்கொரு உதவி செய்ய வேணும். அது உன்னால மட்டும் தான் முடியும்” “எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்ல. சரி என்ன விஷயம் சொல்லு” சங்கன் எல்லாவற்றையும் சொல்லி இறுதியில் “அந்த வேல் இப்பவும் என்னட்டத் தான் இருக்கு. நீ உருக்கித் தரவேணும். எங்களை மாதிரியிருந்து இண்டைக்கு கஷ்டப்படுகிற ஆக்கள் நிறையப் பேர் இருக்கினம். அவையளுக்கு பிரிச்சு குடுக்கலாம்” என்றான். பட்டாம்பூச்சி சரியென்று தலையசைத்தான். மூன்று நாட்கள் கழித்து அதனை எடுத்துவரும்படி சொன்னான். சங்கன் சந்தோசத்தோடு விடைபெற்றுச் சென்றான். மழையும் மின்னலும் இரவில் விழுந்தன. சங்கன் நனைந்து நடுங்கியபடி நெருப்புக்குச்சியைத் தட்ட முயற்சித்தான். சிறுஞ்சுடர் அணிந்த அவளது கண்கள் சங்கனைப் பார்த்தது. அவளது கழுத்தில் அணியப்பட்டிருந்த அலங்கார நகையைக் கழற்றி பையில் போட்டான். கைகளைத் துடைத்து மீண்டுமொருமுறை நெருப்புக்குச்சியைத் தட்டினான். அம்மன் முகத்தில் மழைநீர் சொட்டிக்கொண்டிருந்தது. சங்கன் அவளது நெற்றியில் குங்குமமிட்டு வணங்கினான். கையில் கிடைத்த ஐம்பொன் சிலைகளையும் கைப்பற்றி அங்கிருந்து வெளியேறினான். கோவிலின் வெளிப்புற கதவடியில் கறுப்பு நிறச்சேலை அணிந்த குமரியொருத்தி ஆங்காரமாய் சங்கனை இடை மறித்தாள். அவனால் எதுவும் செய்ய இயலவில்லை. எடுத்தவற்றையெல்லாம் என் கழுத்தில் அணிவித்து உன் உயிரைக் காப்பாற்று என்றாள். “நீ ஆர், உனக்கேன் அணியவேண்டும்” “நான் தெய்வம். உன்னைக் காத்து நிற்கும் தெய்வம்” “சமாதானத்துக்கான யுத்தம், நல்லிணக்கத்திற்கான அரசு, போர்க்குற்ற உள்ளக விசாரணை போல காத்து நிற்கும் தெய்வம், எவ்வளவு பெரிய பம்மாத்து. சனியனே தள்ளி நில்” என்று சுட்டியலை எடுத்து ஓங்கிய சங்கனைக் கண்டு தெய்வம் மறைந்தது. மின்னல் விழுந்தது. இடி முழங்கிற்று. எப்போதும் போல் காற்றின் அரவம் அன்றில்லை. சங்கன் முந்திரித் தோப்புக்குள் நுழைந்து மண்ணைத் தோண்டி நகையையும் சிலைகளையும் புதைக்க ஆயத்தமானான். அப்போது மின்னல் வெளிச்சமொன்று பூமியில் விழுந்தது. அவனின் முன்னே ஓருருவம் நிற்பதைப் போல எண்ணினான். வெளிச்சத்தில் அந்த உருவத்தின் முகத்தைக் கண்டான். ஒளிதுலங்கிய கண்கள். விடுதலையின் கனல் சுமந்த நிமிர்வின் மேய்ப்பன். கம்பீரத்தின் ஞானம் தரித்தவன். திகைப்புக்கும் மிரட்சிக்கும் உள்ளாகிய சங்கன் “தெய்வமே எங்களை ஏன் கைவிட்டாய்” என்று எழுந்தோடிப் போனான். அவனை இறுக அணைத்தபடி அந்த உருவம் சொல்லிற்று. “ஒரு மகத்தான தோல்வியைக் கூடத் தராது யுத்தம் தான் எங்களை கைவிட்டது. இதன்பொருட்டு என்னோடு பொருதாதே இளையவனே” மீண்டும் ஒரு இடி மின்னல். சங்கனை அணைத்த உருவம் அப்போதில்லை. முந்திரித்தோட்டம் முழுதும் சுழன்று பார்த்தான் எவருமில்லை. எடுத்து வந்த பொருட்களை புதைத்தான். அங்கிருந்து வீட்டுக்கு நடக்கலானான். அந்தப் பேரிருளிலும் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்து மண்ணள்ளித் தின்னும் நந்திக்கடலைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு “தெய்வம் எங்களைக் கைவிடாது” என்றான். நந்திக்கடல் தனது கைகளில் கிடந்த மண்ணை சீற்றம் கொண்டு குருதியால் துருப்பிடித்த இரவின் முகத்தில் எத்தினாள். https://akaramuthalvan.com/?p=1335
-
துவாரகா உரையாற்றியதாக...
இந்த வருட மாவீரர் நாளில் துவாரகா எனும் பெயரில் கொள்கைப் பிரகடனம் செய்தவரையும், அவரை இயக்கும் சேரமான், அப்துல்லா, கிருபாகரன் போன்றோரையும் முட்டுக்கொடுக்கும் இன்பராசா, காசி ஆனந்தன், நெடுமாறன் போன்றோரையும் வெளிப்படையாகக் கண்டிக்க முடியாமல் உள்ளதே. தலைவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருப்பதனாலா? அப்படி என்றால் இப்படியான நம்பிக்கையுள்ளவர்களைத்தான் இந்தக்கும்பல் குறிவைத்து செயற்படுகின்றது என்பது புரியவில்லையா?
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
@நந்தன், ஒரு வாரத்தின் பின்னரும் வலி இருந்தால் கட்டாயம் வைத்தியசாலை போகவேண்டும்
-
துவாரகா உரையாற்றியதாக...
ஆதாரங்கள் இருந்தால் செருகிவிடுங்கள்! ஆங்கில ஆசிரியர் நன்றாக தமிழ் கதைக்கின்றார்!