Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. கிழக்கில் பிரதேசவாத அரசியல் இனியும் எடுபடாது-பா.அரியநேத்திரன் April 1, 2025 உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் வழமையான தேர்தல் கூட்டுக்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்றுள்ளன. வடக்கில் தமிழ்தேசிய கட்சிகள் சில ஒன்றிணையும் கூட்டுக்கள் ஒருபுறமும், கிழக்கில் தமிழ்தேசியத்திற்கு எதிரான பிரதேச வாதத்தை முன்னிலைப்படுத்தும் கூட்டு மறுபுறமும் இப் போது பேசும் பொருளாக உள்ளது. ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 15/03/2025, ம் திகதி இடம் பெற்று சரியாக ஒருவாரம் கடந்த நிலையில் கடந்த 22/03/2025, ல் கருணா என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், பிள்ளையானுடன் இணைந்து இருவரும் மேலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தனர். ஆனால் 2018ம் ஆண்டு கிழக்கு மாகாணத் தில் கோபாலகிருஸ்ணன், சட்டத்தரணி த.சிவ நாதன் ஆகியோரின் முயற்சியினால் உருவாக்கிய ஓர் அமைப்பே ‘கிழக்குத் தமிழர் ஒன்றியம்’ ஆகும். என 2018, உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தமிழ்தேசியத்துக்கு எதிராக பிரதேசவாத மூல தனமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பை கிழக்கு மக்கள் புறக்கணித்தனர் அதில் உள்ளவர்களே விலகியதே வரலாறு அந்த 2018, ஆரம்பித்து செயலற்றுக்கிடந்ததை தூசி தட்டி இப்போது 2025, உள்ளூராட்சி தேர்தலில் “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என படம் காட்டப்படுகிறதே தவிர இது எந்த மாற்றத்தையும் கொண்டுவரப்போதில்லை. கிழக்குமாகாணத்தில் அரசியல் பலத்தை கட்டி எழுப்பி அபிவிருத்திகளை செய்வதாகவும், தனித்துவமாக கிழக்கு மாகாணத்தை வழி நடத்துவதாகவும் ஊடகங்களில் கருத்து கூறிய பிள்ளையான், வியாழேந்திரன், கருணா இணைந்த வடகிழக்கு கொள்கைக்கு முரணாக பிரதேச வாத கருத்தையே இவர்கள் மீண்டும் உயிர்ப்பிப்பதாகவே இவர்களுடைய கருத்துகளும் செயற்பாடுகளும் எதிர்வரும் உள்ளூ ராட்சி சபை தேர்தலில் அமையும். இவர்கள் மூவரும் கிழக்கு என்ற பெயரை மட்டக்களப்பில் மட்டுமே பயன்படுத்தி அரசியல் செய்வதே கடந்தகால வரலாறாகும். இதையே தற்போதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் உள்ளூராட்சி தேர்தலில் பயன்படுத்துவார்கள் என்பதே உண்மை. பிள்ளையானும், வியாழேந்திரனும் செய்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் கருணா இணைந்த தன் மூலம் இருக்கும் செல்வாக்கும் இல்லாமல் போகும் நிலையே தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த 24/03/2025 ம் திகதி முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருடன் கருணா என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதர னுக்கும் ஐக்கிய இராச்சியம் தடை விதித்துள்ளது. அதற்கமைய இவர்கள் நால்வரும் ஐக்கிய இராச்சியத்திற்கான பயணங்களை மேற் கொள் வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய இராச்சியத்திற்குள் சொத்துக்களை சேகரித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கருணாவை பிரித்தானியா தடை செய்த செய்தி வந்து மறுநாள் 25/03/2025 கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பிரதானியில் ஒருவரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அடுத்த மாதம் ஏப்ரல் 1, வரை விளக்க மறியலில் வைக்கப் பட்டுள்ளார். கருணாவை பிள்ளையான் தமது அணியில் இணைத்தமையால் இருந்த செல்வாக்கும் இழக்கும் நிலைமையும், வியா ழேந்திரனை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைதால் இப்போது உள்ளூராட்சி சபைத்தேர்தலில் எதிர் பார்த்த ஆசனங்களை கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பெற முடியாமல் போகலாம். பிள்ளையான், வியாழேந்திரன், கருணா இந்த மூவரும் இணைந்து ஒருவாரம் கடக்கும் முன்னே இருவருக்கு முகத்தில் கரிபூசப் பட்டுள்ளது, கருணாவுக்கு பிரித்தானியா தடை போட்டுள்ளது, வியாழேந்திரன் ஊழல் தடுப்பு பிரிவால் கைதாகியுள்ளார். எஞ்சிய பிள்ளையான் செய்வதறியாது விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப்போன்று உள்ளூராட்சி சபை தேர்தலில் முகம்கொடுக்கிறார் இது நல்ல சகுனமாக அவர்களுக்கு இல்லை. அதற்காக இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது கிழக்கில் பல்வேறு கட்சிகளுக்கும் ஆதரவு சென்றடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இருந்தும் தேர்தல் பிரசாரங்கள் கிழக்கில் இன்னும் களைகட்டவில்லை மந்த நிலையிலேயே சகல கட்சிகளும், சுயேட்சை குழுக்க ளும் வேட்பாளர்கள் தனியாகவும், ஒரு சில ஆதர வாளர்களை அழைத்துக்கொண்டும் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு ஒவ்வொரு வட்டாரத்திலும் பத்து பதினாறு பேர் ஊர் களில் வேட்பாளர்களை பல கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் நிறுத்தி உள்ளதால் கட்சி அரசியலை விட ஊர் செல்வாக்கு, ஊர் சமூக செல்வாக்கு, அந்தந்த வேட்பாளர்களின் கடந்த கால செயல்பாடுகளை பொறுத்தும் மக்கள் வாக்களிப்பதால் பலர் தாம் யாருடைய ஆதரவாளர்கள் என்பதை வெளிக்காட்டாமல் மௌ னமாக இருந்து தேர்தல் தினத்தில் வாக்களிக்கலாம் என்ற மனோநிலையில்தான் கிழக்கு மாகாணத்தில் பலர் உள்ளதை அவதானிக்க முடிகிறது. தேர்தல் முறை கலப்பு தேர்தல் முறை என்பதால் கட்சி அரசியலை விட தனி நபர் செல்வாக்கே இந்த தேர்தலில் உறுப்பினர்களின் ஆசனங்களை நிர்ணயிக்கும். “நாடு அநுராவோடு ஊர் எங்களோடு” என கனவு காணும் சில தமிழ்த்தேசியகட்சிகளுக்கு வடக்கிலும்,கிழக்கிலும் ஊரும் அநுராவோடு உள்ள நிலையில் தற்போது பல தமிழ் இளைஞர்கள் இன்றும் தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகுவதாக தெரியவில்லை. இதற்கான முழுப்பொறுப்பும் அனைத்து தமிழ்தேசிய கட்சிகளையுமே சாரும். கடந்த பொதுத்தேர்தலில் கற்றுக்கொண்ட பாடத்தில் இருந்து எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தலி லும் அவர்கள் திருந்தியதாக இன்னும் இல்லை. கிழக்கில் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் இன்னுமொரு புதிய அணுகுமுறையை கடந்த பொதுத்தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டி யிட்டு படு தோல்வியை தழுவிய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக எல்லா பிரதேச சபைகளிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாநகர சபையிலும் போட்டியிடவில்லை அவர்கள் சுயேட்சை குழுக் களாகபோட்டியிடுவதையும் காணமுடிகிறது. இதில் இருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் போட்டி யிட சங்குச்சின்னத்தை ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு தமது குத்து விளக்கு சின்னத்தை மாற்றி சங்கு சின்னத்தை தமது கட்சி சின்னமாக காட்டி பிரசாரம் செய்தபோதும் தமிழ்மக்கள் அவர்களை பொதுத்தேர்தலில் ஒரு பொருட்டாக ஏற்கவில்லை இதனால் உள்ளூராட்சி சபை தேர்தலில் இந்த தடவை அநேகமான பிரதேச சபைகளில் சங்கு சின்னத்தை அவர்கள் கிழக்கில் பயன்படுத்தாமல் சுயேட்சையாகவும் பல சபைக ளில் போட்டியிடுவதையும் காணலாம். https://www.ilakku.org/கிழக்கில்-பிரதேசவாத-அரசி/
  2. இஸ்ரேலிய படையினர் 15 மருத்துவபணியாளர்களையும் மீட்பு பணியாளரையும் ஒவ்;வொருவராக சுட்டுக்கொன்ற பின்னர் பாரிய மனித புதைகுழிக்குள் புதைத்தனர் - ஐநா Published By: Rajeeban 01 Apr, 2025 | 11:49 AM இஸ்ரேலிய படையினர் 15 மருத்துவஉதவியாளர்களையும் மீட்பு பணியாளர் ஒருவரையும் ஒவ்வொருவராக சுட்டுக்கொன்ற பின்னர் பாரிய மனித புதைகுழியில் புதைத்தனர் என ஐநா தெரிவித்துள்ளது. பாலஸ்தீன செம்பிறை சமூகத்தின் பணியாளர்களும், சிவில் பாதுகாப்பு பணியாளர்களும் இஸ்ரேலிய படையினரால் சுடப்பட்ட தங்கள் சகாவை மீட்பதற்காக சென்றுகொண்டிருந்தனர் என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்காக அலுவலகம் ,அவர்களின் வாகனத்தில் செஞ்சிலுவை என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளது. ரபா நகரின் டெல் அல் சுல்தான் நகரில் இஸ்ரேலிய படையினர் அவர்களின் வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள ஐநா உயிரிழந்த ஒருவரின் கரங்கள் பின்னால் கட்டப்பட்டுள்ளன இதன் காரணமாக இவர் கைதுசெய்யப்பட்டே கொல்லப்பட்டுள்ளார் என கருதலாம் என தெரிவித்துள்ளது. எகிப்தின் எல்லையில் உள்ள ரபா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை ஆரம்பித்த மார்ச்23ம்திகதியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மற்றுமொரு செம்பிறை பணியாளர் காணாமல்போயுள்ளார். ஏழு நாட்களிற்கு முன்னர் சிவில் பாதுகாப்பு பணியாளர்களும் பாலஸ்தீன செம்பிறை சமூக பணியாளர்களும் அம்புலன்ஸ் மூலம் இந்த பகுதிக்கு வந்தனர் என தெரிவித்துள்ள பாலஸ்தீனத்திற்கான ஐக்கியநாடுகள் மனிதாபிமான அலுவலகத்தின் தலைவர் ஜொனதன் விட்டல்,அவர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து இலக்குவைக்கப்பட்டனர், பின்னர் அவர்களது உடல்களை எடுத்து பாரிய மனித புதைகுழிக்குள் புதைத்தனர் என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அவர்களின் உடல்களை அவர்களின் சீருடைகள் கையுறைகள் போன்றவற்றுடன் மீட்டோம், அவர்கள் உயிர்களை காப்பாற்றுவதற்காகவே இங்கு வந்தனர்,ஆனால் அவர்களின் வாழ்க்கையே மனித புதைகுழிக்குள் முடிந்துபோய்விட்டது என விட்டல் தெரிவித்துள்ளார். இந்த அம்புலன்ஸ்கள மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்டன,ஐநாவின் வாகனமும் மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கொல்லப்பட்டவர்களில் ஐநாவின்பணியாளர் ஒருவரும் உள்ளார் என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கியநாடுகளின் மனிதாபிமான அமைப்பின் தலைவர் பிலிப்பே லசரானி தெரிவித்துள்ளார். ரபாவில் கொல்லப்பட்ட எங்கள் சகாக்களின் உடல் நேற்று மீட்கப்பட்டது,மனிதாபிமான பணியாளர்களின் உடல்களுடன் சேர்த்து அவருடைய உடலை மீட்டோம்,அவர்கள் அனைவரும் ஆழமற்ற புதைகுழிகளில் கைவிடப்பட்டிருந்தனர்,இது மனித கௌரவத்தை மோசமாக மீறும் செயல்,என லசரானி சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். ஹெட்லைட்கள் அல்லது அவசரகால சமிக்ஞைகள் இல்லாமல் தங்கள் படையினரை நோக்கி சந்தேகத்திற்கு இடமான முறையில் முன்னேறிய பல வாகனங்கள் மீது தங்கள் படையினர்துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டமை ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த வாகனங்கள் அந்த பகுதிக்கு தாங்கள் வரவுள்ளமை குறித்து இஸ்ரேலிய படையினருக்கு தகவல் வழங்கவில்லை ,அந்த பகுதி மோதல் இடம்பெறும் பகுதியாக காணப்பட்டது,என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எனினும் டெல் அல் சுல்தான் பகுதி பாதுகாப்பான பகுதியாக கருதப்படுகின்றது,அந்த பகுதிக்கு செல்வதற்கு நாங்கள் இஸ்ரேலிய படையினருடன் தொடர்புகொள்ளவேண்டியதில்லை என செம்பிறைசமூகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/210816
  3. தமிழரசுக் கட்சி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று (31) இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக வீட்டிலிருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லையென வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேச சபைக்காக போட்டியிடும் அருள்ராஜா பிரேமாகரன் என்பவரின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று இரவு மரண வீடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் அந்தநேரத்தில் வீட்டில் மனைவி, பிள்ளைகள் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் பிரேமாகரன் தெரிவித்தார். இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வீட்டின் கூரையின் மீது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில் வீட்டின் உட்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீற் எரிந்துள்ளதாகவும் வேறு சேதங்கள் ஏற்படவில்லையெனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cm8y3k5cg00he10a6ppfpj5lq
  4. இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை - அரசுகள் தலையிடாக் கொள்கை லக்ஸ்மன் இழுவைப் படகுகள் மூலம் இழுத்தெடுக்கப்படுவது மீன்கள் மாத்திரமல்ல, எதிர்கால தலைமுறையையும், எதிர்கால வாழ்க்கையையுமாகும். இவ்வாறு அழிக்கப்படுமானால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களது கடலில் எதுவுமே இல்லாது போவதுடன், கடல் பாலைவனமாக மாறுகின்ற நிலை ஏற்படும். இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் இந்நாட்டில் உள்ள ஐம்பதாயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வட மாகாண கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இழுவைப் படகுகள் என்பது இந்தியாவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால், இந்தியாவில் இருக்கின்ற மீனவர்கள் கூட இதற்கு வன்மையான எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றார்கள். இந்த மீன்பிடி முறைமையை நிறுத்த வேண்டும். கடலுக்கு அடியில் வலைகளைப் பயன்படுத்தி மீன்களை அள்ளும் இழுவை மடி படகுகள் மூலம் இலங்கைக் கடலில் மீன் பிடியில் ஈடுபட அனுப்பப்படுவது இந்திய கூலித் தொழிலாளர்களே. அந்த செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. இந்திய மீனவர்கள் நமது நாட்டுக் கடற்பரப்பில் ஆக்கிரமிப்பு செய்வது குறித்து இந்தியாவின் அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அறிந்திருக்கின்றனர் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை புதிய அரசாங்கத்தின் காலத்தில் நடைபெற ஆரம்பித்ததல்ல. மிக நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்ற பிரச்சினையாகும். இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற் பரப்புக்குள் நுழைவதும், அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களுடைய உடமைகள் பறிமுதல் செய்யப்படுவதும், நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதும், தண்டனை வழங்கப்படுவதும், விடுவிக்கப்படுவதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறைந்தபாடுமில்லை. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வந்ததுமில்லை. இந்தநிலையில், கடந்த வாரத்தில் இந்திய இலங்கை மீனவர் சங்கத்தினர்களுக் கிடையிலான பேச்சுவார்த்தை வவுனியாவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படடுள்ளது. இருந்தாலும், இரு தரப்பினரும் இப்பிரச்சினைக்கான தீர்வு அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படக்கூடியது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இருந்தாலும், கடந்த வருடம் டிசெம்பர் மாதத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் முதல் உத்தியோகபூர்வ விஜயத்தில் புதுடெல்லியில் இந்தியப் பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் மீனவர் பிரச்சினையை ‘முக்கியமானது’ என அடையாளம் கண்டிருந்தனர். மீனவர்களின் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வுகாண வேண்டும் என்றும் அறிவித்திருந்தனர். ஆனால், மீனவர் பிரச்சினை விடயத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது அல்லது பெறுவது தொடர்பில் இனி பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை என மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் டிசெம்பர் இறுதியில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் நிறுத்தப்படமாட்டாது எனவும், தொழில்நுட்பம், தொழில்சார் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடல் தொடரும் என்றும் அவர் தெரிவித்ததற்கமைய இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகக் கொள்ளலாம். ஆனால், இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இராஜதந்திர மட்டத்தில் மாத்திரம் உள்ள பிரச்சினையல்ல. இராஜதந்திர ரீதியில் எவ்வளவு விவாதித்தாலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இந்திய மீனவர்கள் வடக்குக் கடலில் மீன்பிடிப்பது குற்றவியல் ஆக்கிரமிப்பு போன்ற நிலைப்பாடுகள் இலங்கையின் அமைச்சு வட்டம் வரையில் இருக்கின்ற நிலையில் இரு நாட்டு அரசுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைக்குச் சாத்தியமிருக்கிறதா? என்பது கேள்வியானதே. எது எவ்வாறானாலும், எங்களின் கடல் வளங்களையும், மீனவர்களையும் பாதுகாக்க இந்த விடயத்தில் எப்போதும் தலையீடு செய்து கொண்டுதான் இருப்போம் என்கிற நிலைப்பாட்டில் இலங்கை அரசும், ஏதோ நடப்பது நடக்கட்டும். நமது மீனவர்களைக் கட்டுப்படுத்தினால் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாகி அரசுக்கெதிரான சிந்தனையை ஏற்படுத்தி விடும் என்ற முடிவில் இந்திய அரசும், சுமுகமான மீன்பிடிக்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இந்திய மீனவர்களும் இருக்கையில் முரண்பாடே மிஞ்சும். இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையில் இருக்கும் தாண்டிய மீன்பிடி காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்திய மத்திய அரசும் தமிழ்நாட்டு அரசும் தீர்வைக் காண்பதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அந்த முயற்சி இலங்கை நாட்டின் இறமை, ஆட்புல ஒருமைப்பாட்டினைப் பாதிக்காத வகையில் இருந்தால் சரி. 1921ஆம் ஆண்டு இந்திய - இலங்கை பிரிட்டிஷினால் செய்து கொள்ளப்பட்ட மீன்பிடி ஒப்பந்தத்தின்படி, இந்திய மீனவர்களுக்குப் பாக்கு நீரிணையில் அதிக கடல்பகுதியும், இலங்கை மீனவர்களுக்கு குறைவான கடல் பகுதியும் பிரிக்கப்பட்டது. அதில் கச்சத்தீவு உள்ளிட்ட 28 கடல் மைல் பகுதிகள் இந்தியாவுக்கும் நெடுந்தீவு உள்ளிட்ட 12 கடல் மைல் கடல் பகுதிகள் இலங்கைக்கும் என பிரிக்கப்பட்டன. 1974இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதனால் இந்திய மீனவர்கள் பயன்படுத்தி வந்த 500 சதுர கி.மீ. கடல் இலங்கை வசமாகியது. இதனால், தமது பாரம்பரிய மீன்பிடி பகுதிகள் பறிபோனதாக இந்திய மீனவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால், 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6ஆம் சரத்துப்படி, இந்த 500 சதுர கி.மீ. பரப்பளவில் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க உரிமையுள்ளது. இருந்தாலும், பாக்கு நீரிணைப் பகுதியில் இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவதும் இழுவை வலைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதனாலேயுமே பிரச்சினைகள் எழுகின்றன. இந்திய இலங்கை மீனவர்களிடையே இருக்க வேண்டிய ஒற்றுமை சீர்குலைவுக்கும் இதுவே காரணம். பாக்கு நீரிணை கடல்பகுதியில் இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட இழுவை வலையைப் பயன்படுத்தக்கூடாது என்பது இலங்கை மீனவர்களின் ஒரு கோரிக்கை. இழுவைப் படகுகளின் செயற்பாட்டினால், இலங்கைக் கடற்பரப்பிலுள்ள மீனும் பிற வளங்களும் அழிகின்றன. அதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. நீண்டகாலத்தில் எதிர்கால மீன்பிடியே அழியவேண்டி ஏற்படலாம் என்பது அச்சமே. ஒவ்வொருவரும் தம் பக்கமே நிற்பர் என்பது போல் இந்திய அரசும், தமிழ் நாட்டு அரசும் தமிழக மீனவர்களின் பக்கமாகவே இருந்து விடுகின்றன. இதனால், பாதிக்கப்படுவது இருதரப்புமே என்பதுதான் உண்மை. கடந்த வாரத்தில் வவுனியாவில் நடைபெற்ற இந்திய-இலங்கை மீனவர் சங்க உறுப்பினர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையும் கூட அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவேளையில், கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் வாடும் இந்திய மீனவர்களைப் பார்வையிடுதலுடன் தான் நடைபெற்றிருக்கிறது. தீர்க்கப்படாமல் இழுபட்டுச் செல்லும் இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருந்தாலும், இழுவை மடிகளைக் கொண்ட ரோலர் படகுகள் கடல் வளத்தை நாசப்படுத்திக் கொண்டிருப்பதனை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என்றிருக்கையில், தீர்வு எவ்வாறு கிடைக்கும் என்பதுதான் இந்த இடத்தில் சிக்கலானது. இந்தச் சிக்கல் பார்த்தும் பாராமல் தொடருமா? அல்லது ஓயுமா? என்பது பதிலில்லா தொடரே. இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம், மீன்பிடிப் பகிஷ்கரிப்பு, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், அறிக்கைகள், ஊடக சந்திப்புக்கள் எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் எல்லை மீன்பிடிப் பிரச்சினை தீர்க்கப்படாதா என்ற சந்தேகம் ஏற்படுவதற்குத் தாமதிப்பும் இழுத்தடிப்புகளுமே காரணமாக இருக்கிறது. இந்தியா இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வை முன்வைக்கும் என்று எல்லோரும் எண்ணினாலும், தமிழக அரசும் பல வழிகளிலும் இந்திய மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய அரசை கோரினாலும் இந்திய மத்திய அரசாங்கமானது வருடத்தில் குறிப்பிட்ட அளவான நாட்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோருகிறதே தவிர ஏதும் நடைபெறவில்லை. ஆனாலும், இந்தியா கைக்கொள்ளும் அரசுகள் தலையிடாது மீனவர்களே தம் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வுக்கு வரட்டும் என்ற நிலைப்பாட்டைதான் நாம் விளங்கி நடந்து கொள்ளவேண்டும். இல்லையேல் இப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படப்போவதில்லை. அது தவிர, எல்லை தாண்டலை ஒரு குற்றமாகக் கொள்ளாது கைதுகளை விடுத்து ஏதோ நடக்கட்டும் என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை வரவேண்டும். 2025.03.31 https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசுகள்-தலையிடாக்-கொள்கை/91-354740
  5. வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் விளக்கமறியலை எதிர்வரும் 08ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் மார்ச் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 1ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மணல் அகழ்வு உரிமம் வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/வியாழேந்திரனின்-விளக்கமறியல்-நீடிப்பு/175-354815
  6. விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் தீப்பற்றியது! adminMarch 30, 2025 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் ஒன்று தீப்பற்றியதால் அவரது பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்கள் எழுப்பியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றனர். ரஷ்யாவின் லுபியங்காவில் அமைந்துள்ள எப்எஸ்பி தலைமையகத்திற்கு அருகில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் பாதுகாப்பு தொழில்நுட்பட மிக்க கார் ஒன்று திடீரென தீப் பற்றி எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு, அருகிலுள்ள உணவகத்தின் ஊழியர்கள் தீப்பற்றிய காரின் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிறது. அந்த வீடியோ காட்சிகளில் காரிலிருந்து அடர்ந்த கரும் புகை கிளம்புவதையும், காரின் பின்புறம் சேதம் அடைந்ததையும் காணமுடிகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் காரின் இயந்திரத்தில் தீப் பற்றியதாகவும், அதிலிருந்து புகை வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, வௌிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘புடின் விரைவில் இறந்துவிடுவார், இரு நாடுகளுக்கும் இடையிலான போரும் விரைவில் முடிவுக்கு வரும். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது’ என்று கூறினார். ரஷ்ய ஜனாதிபதி புடினின் கார் எரிந்ததை அடுத்து, அவரது மரணம் தொடர்பான தகவல்களை ஜெலென்ஸ்கி கணித்துள்ளதாக பல கதைகள் வெளிவருகின்றன. அதேநேரம் ரஷ்ய ஜனாதிபதி புடினின் உத்தியோகபூர் கார் ஒன்று தீப்பற்றியதால் அவரது பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2025/213999/
  7. GMT நேரப்படி நாளை செவ்வாய் 01 ஏப்ரல் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG எதிர் PBKS 13 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் நுணாவிலான் கிருபன் எப்போதும் தமிழன் அகஸ்தியன் பஞ்சாப் கிங்ஸ் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி வாதவூரான் ரசோதரன் தமிழ் சிறி குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
  8. ஐபிஎல் 2025 இன் 12வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களுடன் சுருண்டது. அஷ்வானி குமார் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ரியான் ரிக்கெல்ரனின் அதிரடியான ஆட்டமிழக்காது எடுத்த 62 ஓட்டங்களுடன் 12.5 ஓவர்களிலேயே இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 121 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  9. பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும் | Sri Lanka News | Ada Derana | Truth First செய்திகள் பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம் பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (30) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்தை முதல் தடவையாக பார்வையிட்ட அமைச்சர் விமான நிலையத்தின் விஸ்தரிப்புகள் தொடர்பிலும் அதன் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார். இதன் போது விமான நிலையத்தின் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் ஹர்ச அபய விக்ரம மற்றும் ஏனைய ஊழியர்களுடன் சேவைகள் தொடர்பில் கேட்டறிந்தார். இதன் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அமைச்சர், பழைய அரசாங்கம் போல் நாம் பொய் கூற மாட்டோம் விமான நிலையத்தின் திட்டமிடல் வரைபடம் உள்ளிட்ட பல்வேறு வேலை திட்டங்கள் நிறைவடைந்துள்ளன எனவே அதனுடைய திட்டமிடலுக்கு ஏற்ப நான்கு மாதங்களுக்குள் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கப்படும் என தெரிவித்தார். இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். https://adaderanatamil.lk/news/cm8wj9shi00gd10a66zsm12sr
  10. ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான குழு ஏப்ரல் 21க்கு முன்னர் வௌிப்படுத்தப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பான பல நபர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தெய்யந்தர பகுதியில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், "ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 21 ஆம் திகதி மீண்டும் ஈஸ்டர் தாக்குதல்களின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது." "பெரும்பாலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இதற்குப் பொறுப்பான ஒரு குறிப்பிடத்தக்க குழுவை அம்பலப்படுத்த முயற்சிக்கிறது," என்றார். https://adaderanatamil.lk/news/cm8vk9kfl00gwnr5txjy1pg4f
  11. கணணியில் ஒன்றுமில்லை! எல்லாம் கூகிள் கிளவுட்டில்தான்! அது எல்லாம் 2, 3 பூட்டுப் போட்டுப் பத்திரமாக இருக்கு😎
  12. GMT நேரப்படி நாளை திங்கள் 31 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI எதிர் KKR 17 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் 06 பேர் மாத்திரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி நந்தன் புலவர் அகஸ்தியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கந்தப்பு ஏராளன் ரசோதரன் நுணாவிலான் எப்போதும் தமிழன் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
  13. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. ஐபிஎல் 2025 இன் 10வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களையே எடுத்தது. அனிகெற் வேர்மா மாத்திரம் 74 ஓட்டங்களை சிறந்த அடிவீதத்தில் எடுத்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த அடித்தளத்தைக் வேகமாக அடித்தாடிக் கொடுத்ததால், ஃபஃப் டுபிளெஸிஸின் 50 ஓட்டங்களோடு 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஏழு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்குப் புள்ளிகள் இல்லை! -- ஐபிஎல் 2025 இன் 11வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிதிஸ் ராணாவின் மின்னல் வேக அடியில் எடுத்த 81 ஓட்டங்களுடன் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை எடுத்தது. பிற வீரர்களில் ரயான் பராக் 37 ஓட்டங்களை எடுத்து ஒத்துழைப்புக் கொடுத்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரச்சின் ரவீந்திரா முட்டையுடன் வெளியேறியதாலும் ருதுராஜ் கைக்வாட்டின் 63 ஓட்டங்களைத் தவிர பிறர் சோபிக்காததாலும் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய இரு போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @செம்பாட்டான் வெள்ளி திசையில் வீறு நடைகொண்டு முன்னேறுகின்றார். @suvy மீண்டும் துணை முதல்வராக அமைந்துள்ளார்.. இறுதிப் படிகளில் ஐவர் அப்படியே அமர்ந்துள்ளனர்!
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @யாயினி 🎉🎂🎊
  15. CSK ஆறு பந்தில் 20 ஓட்டங்கள் அடிப்பார்களா? வயசாளி வெல்ல உதவுவாரா? இல்லை! தோனி அவுட்!
  16. சரியான நேரத்தில் சரியான கூட்டு ? - நிலாந்தன் “அனுரவின் அரசாங்கத்தை வலுவான முறையில் எதிர்கொள்வதற்கும், தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்கும் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழி இல்லை” என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் இந்திய ஊடகவியலாளரான மீரா சிறீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். புதிய யாப்பு ஒன்று உருவாக்கப்படுமிடத்து அந்த யாப்பை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. தமிழர்கள் ஒரு தரப்பாகத் திரண்டு நின்றால்தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதனை பலமாக வெளிப்படுத்தலாம். மிகக் குறிப்பாக சுமந்திரனும் அவருடைய கூட்டாளிகளும் இணைந்து முன்பு தாங்கள் தயாரித்த “எக்கிய ராஜ்ய” என்கிற இடைக்கால வரைவை மீண்டும் மேசைக்கு எடுப்பதைத் தடுப்பது என்றால் தமிழ்த் தரப்பு ஐக்கியப்படுவது தவிர்க்கமுடியாதது. அதேசமயம் யாப்பை நோக்கி மட்டும் தமிழ்த் தரப்பு ஐக்கியப் படக்கூடாது, மாறாக தேர்தல்களை நோக்கியும் சமயோசிதமான,தந்திரோபாயமான கூட்டுக்களுக்குப் போகவேண்டும். அல்லது குறைந்த பட்சம் போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கைகளுக்காவது போகவேண்டும் என்பதனை நான் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன். அதற்கு ஒரு அடிப்படைக் கோட்பாட்டு விளக்கம் உண்டு. தேர்தல் கூட்டுகள் பெரும்பாலும் தந்திரோபாயமானவை. ஆனாலும் தமிழ்மக்கள் ஒரு தரப்பாக தங்களை பலப்படுத்த வேண்டும் என்று சிந்தித்தால், தேர்தலுக்கும் அங்கே ஒரு பங்கு உண்டு. தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு தரப்பாகத் தோற்கும் பொழுது பின்னர் நாடாளுமன்றத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தரப்பு பலமாக நின்று பேச முடியாது. எனவே ஒரு தரப்பாக தமிழ் மக்களைப் பலப்படுத்துவது என்று பார்த்தால் அது நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, மாகாண சபைகள்,உள்ளூராட்சி சபைகள் என்று எல்லாத் தேர்தல் களங்களிலும் தமிழ் தரப்பை ஆகக்குறைந்த பட்சம் தந்திரோபாய நோக்கத்தோடாவது ஒருங்கிணைக்க வேண்டும். ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தந்திரோபாய கூட்டுக்களுக்குத் தயாராக இல்லை. அவர்கள் கொள்கை வழிக் கூட்டுக்களுக்கே தயாராக இருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள்.கடைசியாக இயங்கிய உள்ளூராட்சி சபைகளின் கடைசி கட்டத்தில் காரைநகரில் ஒரு பிரச்சினை வந்தது. அங்குள்ள சுயேட்சைக் குழு தமிழ்த் தேசியக் கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைக்க விரும்பியது. அது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு நான் உரையாடினேன். அவர்கள் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி குறிப்பிட்ட சுயேட்சைக் குழுவுக்கு ஆதரவளிக்க முன்வந்தார்கள். அதேசமயம் அந்த உரையாடலின் போது, செல்வராசா கஜேந்திரன் என்னிடம் சொன்னார், “அண்ண இது போன்ற விடயங்களில் நீங்கள் என்ன கேட்டாலும் நாங்கள் செய்வோம். ஆனால் ஐக்கியத்தைப் பற்றி மட்டும் கேட்டு விடாதீர்கள்” என்று. அந்தளவுக்கு அவர்களுக்கு ஐக்கியம் அலர்ஜிக்காக இருந்தது. இருக்கலாம். அரங்கில் நம்பிக் கூட்டுச்சேர முடியாத சக்திகளே அதிகமாக இருக்கலாம். ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால், ஒரு தரப்பாக தமிழ் மக்களை பலப்படுத்துவது என்று சொன்னால் அதனை தந்திரோபாயமாகத்தான் செய்யலாம். அதுவும் தேர்தல் வழியில் தந்திரங்கள்தான் அதிகம். நான் திரும்பத்திரும்பக் கூறும் ஒர் உதாரணம் உண்டு. சுத்தமான தங்கத்தை வைத்து ஆபரணங்களைச் செய்ய முடியாது. தங்கத்தில் நகை செய்ய வேண்டுமானால் குறிப்பிடத்தக்க அளவுக்கு செப்பைக் கலக்க வேண்டும் வேண்டும். இந்த பூமியிலே பெரும்பாலான விடயங்கள் அப்படித்தான். அதிலும் அரசியலில், குறிப்பாக தேசியவாத அரசியலில்,அதுதான் நடைமுறைச் சாத்தியமானது. அரசியலில் புதுமையானது,நீதியாயானது,புனிதமானது, சரியானது, பிழையானது…போன்ற அனைத்துமே சார்புக் கணியங்கள்தான். ஒப்பீட்டு முடிவுகள்தான். நடைமுறை வாழ்வில் முழுப் புனிதமானது எதுவும் இல்லை. முழுத் தூய்மையானது எதுவும் இல்லை. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரையும் முசோலினியையும் தோற்கடிப்பதற்காக இரண்டு கொள்கை எதிரிகள்தான் கூட்டுச் சேர்ந்தார்கள். அதாவது முதலாளித்துவமும் கொம்யூனிசமும் கூட்டுச்சேர்ந்தே இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்தன. கொள்கைப்படி பார்த்தால் அது ஒரு பிழையான கூட்டு. ஆனால் அது உலகப்போரை நிறுத்திய கூட்டு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்பொழுது உருவாக்கியிருக்கும் கூட்டில் இருப்பவர்களில் அநேகர் முன்பு வெவ்வேறு கூட்டுக்களில் இருந்தவர்கள்; வெவ்வேறு தரப்புகளோடு சேர்ந்து உழைத்தவர்கள். இறந்த காலத்தைக் கிண்டினால் யாருமே புனிதரில்லை. ஏன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தான். கஜேந்திரக்குமாரின் தகப்பனார் குமார் பொன்னம்பலம் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின்னணியில் 1980களின் இறுதிக் கட்டத்தில் கொழும்பில் உள்ள தனது இல்லத்தின் பாதுகாப்புக்கு புளட், டெலோ ஆகிய இயக்கங்களின் ஒத்துழைப்பைப் பெற்றிருந்தார். அவருடைய வீட்டுக்கு பாதுகாப்பு பணிக்காகச் சென்ற தமது அனுபவத்தை ஏற்கனவே சிவாஜிலிங்கம் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்.புளொட் இயக்கத்தின் சிவநேசனும் அவ்வாறு கூறியுள்ளார். ஆனால் அதற்காக பின்னாளில் குமார் சிந்திய இரத்தத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதுதான் அரசியல். ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தந்திரோபாயமாகக் கூட்டுக்களை வைத்துக் கொள்வதற்குத் தயாராக இல்லை.கொள்கை வழிக் கூட்டுக்கே தங்கள் தயார் என்று திரும்பத்திரும்பக் கூறிவருகின்றது.தங்கள் கொள்கையில் வழுக்காதவர்கள் என்று கூறுவதன் மூலம் மற்றவர்களை கொள்கைகளில் வழுக்கியவர்கள் என்று முத்திரை குத்தி வந்தது.அதன் விளைவாக கடந்த 15 ஆண்டுகளாக அவர்களால் தாங்கள் முன்வைக்கும் இலட்சியத்தை நோக்கி அவர்களுடைய சொந்தக் கட்சியையும் கட்டியெழுப்ப முடியவில்லை;தமிழ் மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை. இப்பொழுது யாப்புருவாக்க முயற்சியில் தமிழ் மக்கள் பேரவையின் முன் மொழிவின் அடிப்படையில் ஒன்றுசேர வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் பேரவையை செயல்படாத நிலைக்கு தள்ளியதில் அவர்களுக்குப் பொறுப்பு இல்லையா? அவர்கள் நினைத்திருந்தால் தமிழ் மக்கள் பேரவையை அதன் அடுத்தகட்டக் கூர்ப்புக்குக் கொண்டுபோய் இருந்திருக்கலாம்.பேரவை என்ற தாயின் முடிவுக்குக் காரணமாக இருந்து கொண்டு அந்தத் தாய் ஈன்ற பிள்ளையாகிய முன்மொழிவை இப்பொழுது காவுகின்றார்கள். அப்படித்தான் பொது வேட்பாளரின் விடயத்திலும் முன்னணி அந்த கூட்டுக்குள் இணைந்து இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாகப் போயிருக்கும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிகழ்ந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் தொடக்கத்தில் இருந்தே பொது வேட்பாளரை முன்னணி எதிர்த்தது. மட்டுமல்ல, பொது வேட்பாளருக்கு ஆதரவானவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள், முதுகெலும்பில்லாதவர்கள் என்று கூறியது.பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் சந்திப்புகளின்போது குடிமக்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை நோக்கி கஜேந்திரன் பின்வருமாறு சொன்னார் “இந்த முயற்சியில் நீங்கள் வெற்றிபெற்றால் நாங்கள் இப்பொழுது வைத்திருக்கும் இரண்டு ஆசனங்களையும் இழந்து விடுவோம் என்று எங்களுக்குத் தெரியும்.அதை நன்கு தெரிந்து கொண்டுதான் உங்களை எதிர்க்கிறோம்” என்று. ஆனால் பொது வேட்பாளருக்கு முன்னணியின் தீவிர ஆதரவாளர்கள் பலரும் வாக்களித்தார்கள். தேர்தல் முடிவுகளின் பின் பொது வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளை கஜேந்திரக்குமார் தமிழ்த்தேசியத் தன்மை மிக்க வாக்குகள் என்று கூறினார். அதெப்படி வெளிநாட்டின் ஏஜென்ட்கள் தமிழ் தேசிய தன்மைமிக்க வாக்குகளைத் திரட்டலாம்? கெட்ட கூட்டு எப்படி நல்ல விளைவைத் தரும் ? தமிழ் மக்கள் பேரவையின் சிதைவுக்குக் காரணமாக இருந்த ஒரு தரப்பு கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளின் பின் அதே பேரவையின் முன் மொழிவை கையில் எடுத்திருப்பது எதைக் காட்டுகின்றது? ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் எடுத்த முடிவு தீர்க்கதரிசனமற்றது என்பதைத்தானே? பொது வேட்பாளரைத் தவறு என்று கூறிவிட்டு அவர் பெற்ற வாக்குகளைத் தேசியத் தன்மை மிக்கவை என்று கூறுவது எதைக் காட்டுகின்றது? எட்டு மாதங்களுக்கு முன்பு அவர்கள் எடுத்த முடிவு தவறானது என்பதைத்தானே?பொது வேட்பாளருக்காக முன்னணியில் நின்று உழைத்த ஒரு சிவில் சமூகச் செயற்பாட்டாளர் கூறுவதுபோல “முன்னணியானது சரியான வேளைகளில் பிழையான முடிவை எடுக்கிறது. பிழையான வேளைகளில் சரியான முடிவை எடுக்கின்றது” என்பது சரியா ? இப்பொழுது முன்னணி எடுத்திருக்கும் முடிவானது சரியான வேளையில் எடுக்கப்பட்ட சரியான முடிவா? கடந்த 15 ஆண்டுகால அனுபவத்திலிருந்தும் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் முன்னணி அப்படி ஒரு முடிவை எடுத்திருக்குமாக இருந்தால் அதை வரவேற்க வேண்டும். ஒப்பீட்டளவில் பெரிய கூட்டை முன்னணி உருவாக்கியிருக்கிறது.அதை வளர்த்தெடுக்க வேண்டும்.ஒப்பீட்டளவில் யார் தேசத்தைத் திரட்டும் நம்பிக்கைகளை பலப்படுத்துகின்றார்களோ,அந்த நம்பிக்கைகளுக்காக உண்மையாக உழைக்கின்றார்களோ,அவர்களை தமிழ்மக்கள் ஆதரிக்க வேண்டும். பொது வேட்பாளருக்குப் பின் மீண்டும் ஒப்பீட்டளவில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஒரு கூட்டை முன்னணி உருவாக்கியிருக்கிறது. அது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்பதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட எல்லாக் கட்சிகளுக்கும் உண்டு.குறிப்பாக வாக்களிக்கப் போகும் மக்களுக்கு உண்டு. https://www.nillanthan.com/7257/#google_vignette
  17. மனோஜ் சவப்பெட்டி மீது ஏறியது கொடுமையான செயல்! தமிழ் சினிமாவில் புரட்சிகரமான பங்களிப்பை அளித்த இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகனும், நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா, கடந்த மார்ச் 25, 2025 அன்று தனது 48-வது வயதில் மாரடைப்பால் காலமானார். இவரது திடீர் மறைவு திரையுலகையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மனோஜின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், அவரது மறைவுக்கு மன அழுத்தமே காரணம் என்று சிலரும், அது உண்மையல்ல என்று மற்றவர்களும் பேசி வருகின்றனர். இதனிடையே, மனோஜின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது ஏறி வீடியோ எடுத்த சிலரின் அநாகரிக செயலும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் பாரதிராஜா, மார்ச் 25 அன்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு படுத்திருந்தார். வெகு நேரமாகியும் அவர் எழாததால் குடும்பத்தினர் பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. மூன்று வாரங்களுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். மரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வைத்திய பரிசோதனைக்கு சென்றபோதும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு அவரது உயிரை பறித்துவிட்டது. இது அவரது குடும்பத்தினரையும், திரையுலகையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மனோஜின் மறைவுக்கு மன அழுத்தமே காரணம் என்று சிலர் கூறி வந்தனர். சிறு வயதிலிருந்தே இயக்குனராக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்த மனோஜ், தனது தந்தை பாரதிராஜாவின் விருப்பத்தால் நடிகராக மாறினார். 1999-ல் ‘தாஜ்மஹால்’ படம் மூலம் அறிமுகமான அவர், ‘சமுத்திரம்’, ‘கடல் பூக்கள்’, ‘அல்லி அர்ஜுனா’, ‘அன்னக்கொடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால், முன்னணி நடிகராக வெற்றி பெற முடியாத நிலையில், பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 2023-ல் ‘மார்கழி திங்கள்’ படத்தை இயக்கி, இயக்குனராகவும் அறிமுகமானார். இருப்பினும், இயக்குனராக பெரிய வெற்றியைப் பெற முடியாத வருத்தம் அவருக்கு இருந்ததாகவும், அதுவே மன அழுத்தத்திற்கு வழிவகுத்து, இதய நோயை ஏற்படுத்தியதாகவும் சிலர் பேசினர். ஆனால், இயக்குனர் பேரரசு இதை மறுத்து, மனோஜின் மறைவுக்கு மன அழுத்தம் காரணமல்ல என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், “மனோஜ் மன உளைச்சலில் இறந்தார் என்று பேசுபவர்களிடம் அவர் தனது மன உளைச்சலை பகிர்ந்தாரா? நான் பாரதிராஜாவின் அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வேன். அங்கு மனோஜை பார்க்கும்போது, அவர் எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார். அவரது மறைவுக்கு உடல்நிலை மட்டுமே காரணம், மனநிலை அல்ல. தேவையில்லாமல் பழி சுமத்தக் கூடாது,” என்று தெரிவித்தார். பேரரசுவின் இந்த கருத்து, மனோஜின் மரணம் குறித்து வெளியாகியிருந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது. மனோஜின் மறைவு செய்தி அறிந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பல பிரபலங்கள் வந்திருந்தனர். அவர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். சூர்யா, பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தபோது, சிலர் மனோஜின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது ஏறி, அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்தனர். இதைப் பார்த்து பிரபலம் ஒருவர் கடும் வருத்தம் தெரிவித்தார். “இதெல்லாம் எவ்வளவு மோசமான செயல் தெரியுமா? மதியம் வரை சாப்பிட்டு தூங்கியவர், உயிர் இல்லாமல் இருக்கிறார். அந்த வருத்தத்தில் குடும்பமே அழுது கொண்டிருக்கும்போது, சிலர் வீடியோ எடுக்கிறேன் என்ற பெயரில் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். அடுத்தவர்களின் கஷ்டத்தை கூட காசு பார்க்க பயன்படுத்துகிறார்கள்,” என்று அவர் குமுறினார். இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற செயலாக கண்டிக்கப்பட்டது. https://akkinikkunchu.com/?p=318401
  18. கிழக்கில் உரிய விசாரணை முன்னெடுக்காது விடுதலையான அரசியல்வாதிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் பழைய கச்சேரி மண்டபத்தில் பிரதி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கவில்லை இதற்கு முதலிலே அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அரசியல்வாதிகள் பழிவாங்கப்பட்ட வரலாறு இருக்கின்றது. 1950 ,60,70,80, 90, 2000 க்கு பிற்பட்ட காலமாக இருக்கலாம் இப்படிப்பட்ட பல்வேறு விடையங்கள் நாட்டிலே நடந்திருக்கின்றது. 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பொலிஸ் திணைக்களத்துக்கு ஒரு விடுமுறையை வழங்கி மக்களுக்கும் எதிர்கட்சிக்கும் சிறுபான்மைக்கும் எதிராக வன்முறையை கட்டவிழ்துவிட்டது அப்படிப்பட்ட நாட்டிலே நாங்கள் வாழுகின்றோம். எனவே, நாங்கள் பழிவாங்கும் செயற்பாடுகளுடன் செயற்பட்டிருந்தோம் என்றால் எவ்வளவே வேலையை செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் சட்டரீதியாக ஒப்புவிக்கப்படுவதன் பிரகாரம் நாங்கள் அவர்களுக்கு எதிராக சரியான முறையில் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம். கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் கூட எதிர்வரும் காலங்களில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதுவும் அரசியல் பழிவாங்கல் அல்ல பிழை செய்திருந்தால் உங்களுக்கு எதிராக அரசாங்கம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம். இதற்கு தான் மக்கள் எங்களுக்கு அனுமதியளித்துள்ளனர். பட்டலந்தை ஆணைக்குழு தொடர்பான விவாதம் இப்போதாவது வந்தது என்பது சந்தோஷமானது. சம்பவம் துக்கமான விடையமாக இருந்தாலும் அரசியல் ரீதியாக இப்போது பெரும் விவாதமாக எடுக்கப்படுகின்றது இந்த நாட்டில் மக்கள் விடுதலை முன்னணிக்கு நடந்தது என்று பார்ப்பதை விட இது ஒரு உதாரணம் இந்த நாட்டில் சட்டவிரோதமான படுகொலைகள் அரச ஒடுக்கு முறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் இருந்தது என சொல்வதற்கான ஒரு உதாரணம் இது இது நீண்ட ஒரு கறுப்பான யுகத்தில் ஒரு உதாரணம் இது பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்று வருகின்றதுடன் நடைபெற்ற எல்லா விடயங்கள் தொடர்பாக விசாரிக்கப்படும் அரசாங்கத்தை பொறுப்பெடுக்கும் போது உண்மை அறியும் ஆணைக்குழுவை நியமித்து இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுவோம் என தெரிவித்தோம். அதற்காக மக்கள் 5 வருடத்துக்கு ஆட்சியை தந்துள்ளனர். அதன் பிறகு மக்கள் ஆட்சியை தரப் போகின்றனர். எனவே படிப்படியாக அறிக்கை செய்யப்பட்ட விடையங்களை ஒரே தடவையில் தீர்மானிக்க முடியாது எனவே இந்த விடயங்களை செய்ய 6 மாதகாலம் செல்லும். இந்த அடிப்படையில் உண்மையறியும் ஆணைக்குழு முக்கியமாக நல்லிணக்கத்தை கட்டியொழுப்புவதற்கு சாதகமாக இருக்கும் அதேவேளை நல்லிணக்கத்தை குலைக்கின்றதாக இருக்க முடியாது இது ஒரு நீண்ட தூர பயணம். நாட்டில் ஜனநாயக ரீதியாக ஒரு பாரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளோம் இவ்வாறு எந்தவொரு நாட்டிலும் ஜனநாயக ரீதியாக மாற்றம் இடம்பெறவில்லை அந்த அடிப்படையில் இன்று பாரிய மாற்றம் வந்துள்ளது இருந்தபோதும் ஆங்காங்கே பழைய ஆட்சியாளர்களின் எச்சங்கள் வெளிவருவது இருக்கின்றது இருந்த போதும் ஒட்டு மொத்தமான மக்கள் இந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டுள்ளனர். வாழ்க்கை சுமை படிப்படியாக குறைந்து வருகின்றது. ஊழல் மோசடி இலல்லாத கலாச்சாம் மற்றும் அரசியல் கலாச்சாரம் இடம்பெற்றுள்ளது. கடந்த காலங்களில் அமைச்சரே அல்லது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பல வாகனங்களில் பிரயாணித்தனர். அதற்கு டீசல், பெற்றோல் மக்களின் பணத்தில், ஆனால் இன்று நாங்கள் வாகனத்தை குறைத்து பாதுகாப்பு இல்லாமல் செய்தமையால் யாரே ஒருவருடைய சாப்பாட்டு தட்டில் உணவு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களால் மக்களுக்கு வரப்பிரசாரங்கள் இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது எனவே, இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதே ரீதியில் நாட்டில் ஒரு குரோதத்தை வளர்க்க இடமளியோம். அந்த வகையில் எல்லோரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவோம் எனவும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=318404
  19. காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம் 30 Mar, 2025 | 01:00 PM கிளிநொச்சியில் வலிந்து காணாமல் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தங்கள் கையினால் கையளித்த தங்களது உறவுகளை மீட்டு தருமாறு கோரியும் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தியும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210620
  20. பிரித்தானியாவின் தடையை வரவேற்கிறோம் ; முன்னாள் ஜனாதிபதிகளையும் உள்ளடக்கவேண்டும் - வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் 30 Mar, 2025 | 01:54 PM போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடைவிதித்துள்ளதை நாம் வரவேற்ப்பதுடன் சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இவ்வாறான தடைகள் விதிக்கப்படவேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதிக்கு முன்பாக அவர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், இலங்கை அரசானது நீண்டகாலமாக பொறுப்புக்கூறலில் இருந்து தவறியுள்ளது. இதனால் நாம் சர்வதேச நீதிகோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகிறோம். இன்று போர்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாக சில இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடைவித்துள்ளதன் மூலம் இனப்படுகொலைஒன்று இங்கு நடந்துள்ளதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை உணரமுடியும். இவ்வாறு தடைவிதிக்கப்படவேண்டிய இன்னும் பல இராணுவத்தினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளும் உள்ளனர். அவர்கள் மீதும் இவ்வாறான தடைகளை விதிக்கவேண்டும். அனைத்துலக நாடுகளும் இந்த பயணத்தடைகளை விதித்து குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி சர்வதேச பொறிமுறையூடாக எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும். இதுவே எமது எதிர்பார்ப்பு இதேவேளை 19காணாமல் போனஉறவுகள் உயிருடன் இருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தினர் அண்மையில் கூறியுள்ளனர். அவர்கள் உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை.நாம் தந்த சாட்சியங்களில் ஒன்றைகூட அந்த அலுவலகத்தினர் கண்டுபிடிக்கவில்லை. மாறாக சர்வதேசத்துக்கு அப்பட்டமான பொய்களை சொல்கின்றனர். பொய்யான அறிக்கைகளை அவர்கள் வெளியிடுகின்றனர். எனவே எமது மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். இந்தநிலையில் சர்வதேச நீதிப்பொறிமுறையூடாகவே எமக்கான நீதியை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றனர். https://www.virakesari.lk/article/210625
  21. எதிர்காலத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை மாறும் - ஜனாதிபதி! எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 'வெற்றி நிச்சயம் - கிராமம் நமதே' எனும் தொனிப்பொருளில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நேற்று மித்தெனியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். பல கட்சிகளாகப் பிரிந்து போட்டியிடுகின்றனர். வெற்றிபெற்ற பின்னர் இணைந்து ஆட்சியமைக்கின்றனர். அவ்வாறெனின் எதற்காகப் பிரிந்து போட்டியிட வேண்டும். எவ்வாறு போட்டியிட்டாலும் இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கும். தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் மீட்டுவருவதுடன், எதிர்வரும் காலங்களில் முழுமையாக நாட்டை நாம் மீட்டெடுப்போம். இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து இலங்கைக்கு பாரியதொரு தொகை கிடைக்கப்பெறும். தனியார் நிறுவனம், காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து இலங்கை மின்சார சபைக்கு விற்பனை செய்யவுள்ளது. குறைந்த விலையில் மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் நாம் அண்மையில் கையெழுத்திட்டோம். தெற்காசியப் பிராந்தியத்தில் இன்னும் 3 அல்லது 4 வருடங்களில் குறைந்த மின்கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் எனத் தாம் உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://www.hirunews.lk/tamil/401595/எதிர்காலத்தில்-மிகக்-குறைந்த-மின்சாரக்-கட்டணத்தை-கொண்ட-நாடாக-இலங்கை-மாறும்-ஜனாதிபதி
  22. ‘பட்டலந்த அறிக்கை’ என்னும் ‘பூமராங்’ முருகானந்தம் தவம் ஜே .வி.பியினரின் (மக்கள் விடுதலை முன்னணி) ஆயுதக் கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கவென 1988, 1989களில் நடத்தி செல்லப்பட்டதாகக் கூறப்படும் ‘பட்டலந்த வதை முகாம்’ தொடர்பான ‘பட்டலந்த அறிக்கை’ 25 வருடங்களின் பின்னர், தூசி தட்டப்பட்டு வெளியே எடுக்கப்பட்டு தற்போதைய ஜே.வி.பி., என்.பி.பி. அரசினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நாள் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையில், அந்த அறிக்கை தொடர்பில் இலங்கையில் மீண்டும் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச ஆட்சி புரிந்த காலத்தில், இளைஞர் விவகார, தொழில் வாய்ப்புக்கள் அமைச்சராகவும், பின்னர் கைத்தொழில் அமைச்சராகவும் இருந்த ரணில் விக்ரமசிங்கவே இந்த ‘பட்டலந்த வதை முகாம்’ சூத்திரதாரியென்ற குற்றச்சாட்டுக்கள் மீண்டும் முன்வைக்கப்பட்டு, அவரைக் கைது செய்ய வேண்டும், குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்ற குரல்கள் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளன. ஆட்சியாளர்களும் நாம் விசாரணை நடத்துவோம், நீதி வழங்குவோம் என உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவில் கிரிபத்கொட- பியகம வீதியின் சந்தியிலிருந்து தெற்காக சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் உரத் தொழிற்சாலை ஒன்று உள்ள பகுதியிலேயே இந்த பட்டலந்த வதை முகாம் இருந்தது. இந்த பட்டலந்த வதை முகாமில் வைத்தே ஜே.வி.பி. ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பலர் படுகொலை செய்யப்பட்டனர். இளைஞர், யுவதிகள் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்படுவதை இந்த வதை முகாமின் சூத்திரதாரியென குற்றம்சாட்டப்படும் அப்போதைய அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. இவ்வாறான நிலையில், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1995இல் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய பட்டலந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டதையடுத்து, 1988, 1989களில் பட்டலந்த உரத் தொழிற்சாலையில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதியில் நடத்திச் செல்லப்பட்ட வதை முகாம் தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகின. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிர் தப்பியவர்கள் தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகளை ஆணைக்குழு முன்னிலையில் அடையாளப்படுத்தினர். இந்நிலையில், ‘பட்டலந்த வதைமுகாம்’ படுகொலைகள் பற்றி குற்றத்தடுப்பு பிரிவினராலும், ஜனாதிபதி ஆணைக் குழுவினராலும் ரணில் விக்ரமசிங்க விசாரணை செய்யப்பட்டிருந்தார். ஆனால், அந்த விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை. அதன் பரிந்துரைகள் வெளிப்படுத்தப்படவும் இல்லை. அறிக்கை சந்திரிகா அரசினால் இருட்டடிப்பு செய்யப்பட்டது. இவ்வாறான நிலையில், ‘பட்டலந்த வதைமுகாம்’ சித்திரவதைகள், படுகொலைகளை, அதுதொடர்பிலான ஆணைக்குழு அறிக்கையினை மக்களும் இந்த நாடும் மறந்து விட்டன. ஏன்? பட்டலந்த வதைமுகாமில் தமது ஆயிரக்கணக்கான தோழர்களை இழந்த இன்றைய ஆட்சியாளர்களான ஜே.வி.பியினர் கூட, பட்டலந்த அறிக்கையை மறந்து விட்டனர். இவ்வாறான நிலையில்தான், கடந்த 06-03-2025 அன்று அல்-ஜஸீரா தொலைக்காட்சிக்கு முன்னாள் ஜனாதிபதியும் ‘பட்டலந்த வதைமுகாம்’சூத்திரதாரியென குற்றம் சாட்டப்படுபவருமான ரணில் விக்ரமசிங்க வழங்கிய பேட்டியும் அதில் ஜே.வி.பி. ஆயுத கிளர்ச்சியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை, மற்றும் படுகொலை பற்றிய கேள்விக்கு அவர் கூறிய பதில்களும் மீண்டும் பட்டலந்த வதைமுகாமை மக்கள் முன் கொண்டு வந்துள்ளதுடன், அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாக, அப்போது ஆயுத கிளர்ச்சியாளர்களாக இருந்தவர்களும் தற்போது ஆட்சியாளர்களாக உள்ளவர்களுமான ஜே.வி.பியினர், அந்த ‘பட்டலந்தை வதைமுகாம்’ தொடர்பான அறிக்கையை 25 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மாளிகையிலிருந்து எடுத்து தூசு தட்டி, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டம் பாயும் எனவும் அறிவித்துள்ளனர். இதனால் தற்போது நாட்டில் உள்ள அனைத்து நெருக்கடிகளும் மறக்கடிக்கப்பட்டு ‘பட்டலந்த அறிக்கை’ முன்னிலைப்படுத்தப்படுகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ‘பட்டலந்த வதை முகாம்’ செயற்பட்ட காலத்தில் அந்த வதைமுகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள், ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கானோரைப் படுகொலை செய்த தற்போதைய ஆட்சியாளர்களான ஜே.வி.பியினர். ‘பட்டலந்த அறிக்கை’யைத் தயாரிக்க உத்தரவிட்ட அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவினரின் கட்சியினரும் இந்த ஜே.வி.பியினரால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில், 2005இல் இந்த ஜே.பி.யினர் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க அரசின் பங்காளிகளாக இருந்ததுடன், அமைச்சர்களாகவும் பதவி வகித்தனர். அப்போது ஜே.வி.பியினருக்கு இந்த ‘பட்டலந்த அறிக்கை’ தேவைப்படவில்லை.அதன்பின்னர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிபீடம் ஏற இதே ஜே.வி.பியினர் பேராதரவு வழங்கியதுடன், பக்க பலமாகவும் இருந்தனர். அப்போதும் இந்த ‘பட்டலந்த அறிக்கை’யை வெளியே கொண்டுவர வேண்டுமென்பதில் இவர்கள் கிஞ்சித்தும் அக்கறை காட்டவில்லை. அதன் பின்னர், 2015இல் ரணில் விக்ரமசிங்க அரசுக்கும் ஆதரவளித்தனர். அப்போதும் இந்த ‘பட்டலந்த அறிக்கை’யை வெளியே கொண்டுவர வேண்டுமென்பதில் எந்த அக்கறையும் காட்டவில்லை. தற்போது தமது ஆட்சி அமைந்த நிலையில் கூட, அல்-ஜஸீரா தொலைக்காட்சி ‘பட்டலந்த அறிக்கை’ தொடர்பில் கேள்வி எழுப்பும் வரை அந்த அறிக்கை தொடர்பில் ஒரு துரும்பைக்கூட இந்த ஜே .வி.பியினர் நகர்த்தவில்லை. அல்-ஜஸீரா தொலைக்காட்சி ‘பட்டலந்த அறிக்கை’ தொடர்பில் கேள்வி எழுப்பிய பின்னர்தான் ஏதோ அப்போதுதான் ‘பட்டலந்த வதைமுகாம்’ தொடர்பான அறிக்கை ஒன்று இருப்பதனை அறிந்து கொண்டதுபோல, துடித்தெழுந்து அதை ஜனாதிபதி மாளிகையின் இருட்டறையிலிருந்து தேடிக் கண்டுபிடித்து எடுத்ததாகக் கூறி பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.-என்.பி.பி. அரசின் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க அந்த ‘பட்டலந்த அறிக்கை’யை சமர்ப்பித்து உணர்ச்சிகரமாக உரையாற்றியதும் சபாநாயகர் கண்கலங்கியதும் ஜே.வி.பி.-என்.பி.பி. அரசின் அமைச்சர்கள் எம்.பிக்கள் இறுகிய, துயரம் தோய்ந்த முகங்களுடன் அமர்ந்திருந்தது எல்லாம் அப்பட்டமான அரசியல் நாடகம். நடிப்பு கடந்த காலங்களில் சந்திரிகா அரசாங்கம், ராஜபக்‌ஷ அரசாங்கம் ஆகியவற்றில் பங்காளிகளாக இருந்த போது, இந்த ‘பட்டலந்த அறிக்கை’ தொடர்பில் வாய்திறக்காதவர்கள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தாதவர்கள், தற்போது இவர்கள் சித்திரவதைக்காரர் என்று குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து. 2015இல் அரசாங்கத்தை அமைத்த போது கூட, ‘பட்டலந்த அறிக்கை’யைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தாதவர்கள் ஒருவருக்கும் தெரியாத இந்த அறிக்கையை அல்-ஜஸீரா தொலைக்காட்சி கண்டுபிடித்து அறிவித்ததையடுத்தே அது தொடர்பில் தெரிந்து கொண்டவர்கள் போல, உணர்ச்சிவசப்படுவது, கண்கலங்குவது, துயரமடைவது ஜே.வி.பி.-என்.பி.பி. ஆட்சியாளர்களின் அரசியல் நாடகமின்றி, நடிப்பின்றி வேறு என்னவாக இருக்க முடியும்? அதேவேளை, ‘பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை’ தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 16ஆம் திகதி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், முழுமையான அரசியல் அவதூறு பிரசாரத்தை நோக்கமாகக் கொண்டு ‘பட்டலந்த ஆணைக்குழு’ நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. அறிக்கையின் முடிவுகளில், ஒரு அமைச்சராக, பொலிஸ் கண்காணிப்பாளர் மூலம் பொலிஸாருக்கு வீட்டு வசதி வழங்குவது எனக்கு சரியாக இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளை ஐ.ஜி.பியிடம் ஒப்படைத்து, அவர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பதே சரியான முறையாக இருக்க வேண்டும். இந்தச் செயலுக்கு நளின் டெல்கோடாவும் நானும் மறைமுகமாகப் பொறுப்பு என்று ஆணைய அறிக்கை கூறுகிறது. ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற விடயங்கள் எதுவும் எனக்கு பொருந்தாது. 1988இல் ஜே.வி.பி. மேற்கொண்ட ஏராளமான பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான முடிவுகள் மற்றும் அவதானிப்புகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளன. பின்னணியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயம், ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாதச் செயல்களை விரிவாக விவரிக்கிறது. முழு வரலாறும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைத் தவிர, வேறு எந்த குற்றச்சாட்டுகளும் எனக்கு பொருந்தாது. அந்த அறிக்கையை நான் முழுமையாக நிராகரிக்கிறேன் என்று கூறியுள்ளார். எனவே, ஆட்சிபுரிந்த அனுபவமற்ற ஜே .வி.பி.-என்.பி.பி. ஆட்சியாளர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றவாளியாக்க வேண்டும், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அனுதாப வாக்குகளை அள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், அவசரப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த இந்த ‘பட்டலந்த அறிக்கை’ விவாதத்திற்கு வரும்போது, பட்டலந்த வதைமுகாமில் சித்திரவதைப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஜே.வி.பியினரைப் பற்றி மட்டுமல்லாது, அப்போது ஆயுதக் கிளர்ச்சி என்ற பெயரில் ஜே.வி.பியினரால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களின் படுகொலைகளையும் அம்பலப்படுத்தப் போகின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து ஜே.வி.பி.-என்.பி.பி. ஆட்சியாளர்கள் வீசிய ‘பட்டலந்த அறிக்கை’ என்னும் ‘பூமராங்’ இறுதியில் ஜே.வி.பி. என்.பி.பி. ஆட்சியாளர்களையே மோசமாகத் தாக்கப் போகின்றது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பட்டலந்த-அறிக்கை-என்னும்-பூமராங்/91-354662
  23. இராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் ; சரத் பொன்சேகா தெரிவிப்பு! மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் என்று முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை குறித்து ஊடகங்களிடத்தில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜகத் ஜயசூரிய, வசந்த கரன்னாகொட ஆகியோர் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிட்டவர்கள் அல்லர். பின்வரிசையில் நின்றவர்கள். போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதனை விசாரிக்க வேண்டும். நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவர்களில் இருவரைப் பற்றி பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் விமர்சித்துள்ளேன். அதேபோன்றே போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திரசில்வா எதுவித தவறும் செய்யவில்லை என்று உறுதிபட என்னால் கூறமுடியும். மனித உரிமை மீறல்கள் ஈடுபட்டவர்கள் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றார். https://newuthayan.com/article/இராணுவத்தினர்_மனித_உரிமை_மீறல்களில்_ஈடுபட்டிருந்தால்_தண்டிக்கப்பட_வேண்டும்_;_சரத்_பொன்சேகா_தெரிவிப்பு!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.