Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. உண்மை தான், ஏராளன். பலவற்றையும், பல நிகழ்வுகளையும் அப்படித்தான் ஏற்றுக் கொண்டும் அல்லது கடந்தும் போய்க் கொண்டிருக்கின்றோம்.......................👍.
  2. காட்சி 5: ( ஒருவரின் சிறு பிள்ளை செயற்கை நுண்ணறிவான பிரம்மத்தின் உதவியுடன் பல பொருட்களை இணையத்தில் வாங்கி விடுகின்றார். அதன் பின்னர் நடக்கும் உரையாடல்களும், இறுதியில் பிரம்மம் தவறுகள் அவர் மேலேயே என்று முடிப்பதாகவும் இந்தக் காட்சி அமையும்.) (கணவர் வேலை முடிந்து வீடு வருகின்றார். வீட்டுக்கு முன் பல பெட்டிகளில் ஓன்லைனில் ஒர்டர் செய்த பொருட்கள் இருக்கின்றன) கணவர்: இவாவுக்கு இதே வேலை தான், ஓன்லைனில் பொருட்களை வாங்குவது பிறகு பாவிக்கிறதே இல்லை……………..என்னப்பா இவ்வளவு பொருட்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறீர் என்ன சாமான்கள் இது? மனைவி: சரி தான் வேலையால் வரும்போதே சத்தம் போட்டுக்கொண்டு வாரார்……….. எனக்கு தெரியாது உங்கட ஓர்டர்கள் தான் எல்லாம் போல. கணவர்: எப்பொழுதும் பெட்டிகளை உள்ளே எடுத்து ஒழிச்சுப் போடுவா இந்த முறை மறந்து போனா போல……….ம்ம்………….. மனைவி: இஞ்ச நான் திரும்பவும் சொல்லுறன்………. நான் கிட்டடியில ஒண்டும் ஓர்டர் பண்ணவில்லை. கணவர்: அப்படி என்றால் யார் ஓர்டர் பண்ணினது…………… பக்கத்து வீட்டுகாரரின் ஓர்டர்களோ………….., எடுத்து பாவிப்பமோ? தெரியவா போகுது…………….. மனைவி: தெரியவா போகுதோ………. பார்சல்களை இங்கே கதவடியில் போடும் போது படமும் எடுத்து இருப்பார்கள்…………. பார்சல்கள் களவெடுத்தார்கள் என்று சொல்லி குடும்பத்தையே ஒன்றாக எல்சல்வடோருக்கு அனுப்பி விடுவார்கள்……….. கணவன்: வெளியில் தான் இதைச் சொல்லி வெருட்டுகின்றார்கள் என்றால், வீட்டுக்குள்ளும் இதுவா……………….எதுக்கும் லாப்டாப்பில் ஒருக்கா பாப்பம் யார் ஓர்டர் செய்தது என்று……. (லாப்டப்பில் பார்க்கின்றார்……………) கணவன்: என்ன………… எல்லாமே நாங்கள் தான் ஓர்டர் பண்ணியிருக்கிறம்……. பிரம்மம் தான் ஓர்டர் பண்ணியிருக்கு………. பிரம்மம், என்ன விளையாட்டு இது……… நீ இவ்வளவு சாமான் வாங்கி குவித்திருக்கிறாய்……….. பிரம்மம்: நான் எதையும் நானாகச் செய்வதில்லை………. நீங்கள் சொல்லுவதை மட்டுமே செய்வேன். இது உங்களுக்கு தெரிந்திருந்தும், நீங்கள் என் மேல் குற்றம் சுமத்துகின்றீர்கள்……………. கணவர் : இங்க என்னோட பகிடி விடாத… அதுதான் இந்த வீட்டில நாங்கள் ரெண்டு பேரும் ஓர்டர் பண்ணவில்லையே, பிறகென்ன………….. இன்னுமொரு ஆள் நீதான்…………… பிரம்மம்: உங்களுக்கு அகலமான பார்வையே கிடையாது…………. உங்கள் மனைவி உங்களைப் பற்றிச் சொல்லும் எல்லாவற்றையும் நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன்…………….இந்த வீட்டில்ல நீங்கள் இரண்டு மனிதர்கள் மட்டுமா, வேற ஒருவரும் இல்லையா………………… மனைவி: இது என்னப்பா என்னையும், உங்களையும் முடிஞ்சு வைக்குது……… இருக்கிறது தான் அரைகுறை என்றால், அறிவுப் பிரம்மம் என்று வந்ததும் அரைகுறையாக கிடக்குது. கணவர்: பிரம்மம், இங்கே கேள்வி கேட்டால் பதில் சொல்லு……… திருப்பி கேள்விக்கு கேள்வி கேக்காத…………. இங்கே மூன்றாவது ஆள் என்றால் அது எங்களின் மகன் தான்………….. பிரம்மம்: இப்பொழுது நீங்கள் நடந்த விடயத்தை கொஞ்சம் விளங்க ஆரம்பித்திருக்கின்றீர்கள். கணவர்: என்ன சொல்கிறாய், பிரம்மம்………………. பிள்ளைக்கு எட்டு வயது தானே அவன் எப்படி ஓர்டர் போடுவான்? மனைவி: அறிவுப் பிரம்மம் என்று என்ன பெயர் வைத்தார்களோ…………. அறிவிலி என்று வைத்திருக்கலாம்……….. சரியான ஒரு லூசு ஏஐ. பிரம்மம்: நான் அறிவிலியா……………. போன கிழமை என்னிடம் வந்து தனக்கு விளையாட்டுபொருட்கள், புது உடுப்புகள், சப்பாத்துக்கள், வீடியோ கேம்ஸ் வேணும் என்று உங்கள் மகன் கேட்டவர் தானே……… நீங்களும் பக்கத்தில் இருந்து, எல்லாம் வாங்குவோம் என்று சொன்னீர்கள் தானே……… அதுதான் எல்லாவற்றையும் இணையத்தில் வாங்கிவிட்டேன். பிரம்மம் வாங்கினால், அவை தரமாகத்தான் இருக்கும். பாவித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கோ. கணவர்: அடக் கடவுளே ( தலையில் கைவைத்து அமருகிறார் பின்பு எழும்பி வந்து ) என்ன பிரம்மம் உனக்கு அறிவு இல்லையோ ? சின்னப்பிள்ளை கேட்டால் நீ ஓர்டர் போடலாமோ? பிரம்மம்: எல்லாம் வாங்குவோம் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்…………. நீங்கள் பொய் சொன்னீர்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்……….. கணவர்: எட்டாம் தலைமுறை, எல்லாம் தெரியும் எண்டு புளுகி தான் உன்னை அந்த கம்பனிக்காரர்கள் விற்றவர்கள். ஒரு எட்டு வயது மகன் சொல்லைக் கேட்டு ஒர்டர் போடுவது தான் எட்டாம் தலைமுறை என்று தெரியாமல் போய் விட்டதே…………… பிரம்மம்: நீங்கள் தான் கட்டளையை தர வேண்டும் என்று எனது term and condition ல் இருக்கின்றது தானே. நீங்கள் வாசிக்கவில்லயோ……………. கணவர்: ஓ………… இது நல்ல விளையாட்டு தான். 200 பக்க term and conditions யார் தான் வாசிக்கிறது………………….. பிரம்மம்: எதையும் வாசிக்க நேரம் இல்லை ஆனால் வாட்ஸப், டிக்டாக் பாக்க நேரம் இருக்கின்றது. உங்கட சராசரி தொலைபேசி ஸ்க்ரீன் டைம் எனக்கு தெரியும்………….. எப்பொழுது கேட்டாலும் பிஸி என்கின்றது…………. எதையும் சரியாகத் தெரிந்து கொள்வதில்லை…………….. கணவர்: ம்ம்…………… இவ்வளவு நாளும் இந்த வீட்டில ஓரு ஆள் தான் என்னில பிழை, பிழை எண்டுறது……….. இப்ப இதுவும் சேர்ந்திட்டுது…………. பிரம்மம்: அவரைப் பற்றி சொல்கிறீர்களாக்கும்………….. நீங்கள் இருவரும் பொருத்தமான சோடிகள் தான்………… மனிதர்களே விந்தையாகத்தான் இருக்கின்றார்கள்…………….. ஒன்றாக இருந்தால் ஒருவரை ஒருவர் முறைக்கின்றீர்கள், ஆனால் ஒருவரை விட்டு ஒருவர் விட்டு இருக்கவும் முடியாமல் இருக்கின்றீர்கள்………… உங்களின் தலைகளுக்குள் இருப்பது என்ன புரோக்கிராமோ………… மனைவி: என்ன அங்க சத்தம்……… என்னை பத்தியோ கதைக்கிறீங்கள்……………… கணவர்: இல்லை……. இல்லை……….. அது இங்க கதைக்கிறம். ( மெல்லிய குரலில்) யோவ் பிரம்மம்………. சும்மா இரப்பா………. நீ குடும்பத்தில கும்மி அடிச்சிடுவாய் போல இருக்கு பிரம்மம்: கும்மி என்றால் தமிழர் பாரம்பரிய நடனம் தானே………. நான் அதை ஆடவில்லையே…………. கணவர்: ஐயோ கடவுளே…………. நான் சொல்வது அதுக்கு விளங்கவில்லை அது சொல்வது எனக்கு விளங்கவில்லை. ( கோபமாக) இதை வாங்கிக்கொண்டு வந்த நாளில் இருந்து வீட்டில ஒரே பிரச்சினை தான். இவ்வளவு பொருட்களை ஓர்டர் செய்து அநியாய செலவும் செய்ய ஆரம்பித்துவிட்டது. நாளைக்கே அந்த நிறுவனத்துக்கு போய், நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டு இதை கொடுத்து விட்டு வருகிறேன்…………(கோபமாக செல்கிறார்). (தொடரும்...................)
  3. இதுவே நிஜம், அண்ணா. .............................👍. பண்டிகைகளும், கொண்டாட்டங்களும், திருவிழாக்களும் ஆரம்பத்தில் மக்களை இணைக்கவும், அன்றாட அழுத்தங்களில் இருந்து தற்காலிகமாகவேனும் விடுபடவேனும் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வுகள் போலவே தோன்றுகின்றன. பின்னர் ஒவ்வொருவரும் தங்களின் அரசியல் - மத - குல - இன தேவைகளுக்கு ஏற்ப அவற்றின் மேல் காரணங்களை ஏற்றிவிட்டனர். சில வருடங்களின் முன் நான் வேலை செய்த ஒரு இடத்தில் தீபாவளி கொண்டாடுவோம். ஒவ்வொரு வருடமும் அங்கிருக்கும் வட இந்திய பின்புலம் கொண்டவர்களுக்கும், தென் இந்திய பின்புலம் கொண்டவர்களுக்கும் இடையே எவ்வகையான உணவுகள் பரிமாறுவது என்பதில் தர்க்கம் இருக்கும். அவர்கள் சைவ உணவு என்று சொல்ல, இவர்கள் அசைவ உணவு என்று சொல்ல, இறுதியில் இரண்டையும் வாங்கிக் கொள்ளுவோம். ராம தீபாவளி, ராவண தீபாவளி என்று மாறி மாறிச் சொல்லிக் கொள்வார்கள். அங்கிருந்த ஒரே ஒரு ராவண வாரிசு நான் மட்டும் தான்..................🤣. ஆனாலும் தீபாவளி அன்று இந்தியாவின் ஒரு பகுதியே ராவண வாரிசாக மாறிவிடுவார்கள்............... மிகவும் மகிழ்வான நிகழ்வுகளும், நினைவுகளும். இன்றும் அவர்களில் எவரையும், ராமர்களோ ராவணர்களோ, எங்காவது பார்க்கும் போது சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்படுகின்றது. 🤣.................. ஒரு சந்தையில் மட்டும் ஆறு கோடிகளுக்கு ஆடுகள் விற்பனையாகியது என்று செய்தியில் சொல்லியிருந்தார்கள், கோபி. அதைக் கேட்டவுடன் பழைய ஊர் ஞாபகங்களும் வந்தன. பல வருடங்களின் முன் ஒரு ருமேனிய நாட்டு நண்பன் கிறிஸ்துமஸ் நாளில் அவர்களின் ஊரில் பன்றி அடித்து எல்லோருக்கும் விருந்து கொடுப்பதாகச் சொல்லியிருந்தான். அவன் சொன்ன நிகழ்வுகள் எங்களின் தீபாவளிக் கொண்டாட்டம் போலவே இருந்தது. அமெரிக்கர்களின் கிறிஸ்துமஸ்ஸை அவன் போலி, ஒரு வியாபாரம் என்றும் சொல்லியிருந்தான்.
  4. நேற்று இயக்குனரின் மாரி செல்வராஜ் 'பைசன்' பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது, கூட்டம் கூட்டலிடுகின்றது. அவர் உடனே கூச்சலிடுவதை நிற்பாட்டச் சொல்லுகின்றார். அதைத் தொடர்ந்து அவர் கிட்டத்தட்ட இப்படிச் சொன்னார், 'நான் உங்களுக்கு சாராயத்தை தரவில்லை, நீங்கள் ஏன் கூச்சலிடுகின்றீர்கள்............... நான் உங்களுக்கு ஒரு புத்தகத்தை தந்துள்ளேன், அதைப் படியுங்கள்..................'. உலகெங்கும் சமுதாயங்கள் முன்னோக்கிப் போவது இன்றிருக்கும் ஒரு சிலராலேயே. கூச்சலிடும் கூட்டங்களால் அல்ல. என்னுடைய பங்கிற்கும் இதை நான் பல தடவைகள் எழுதியிருக்கின்றேன். தமிழ்நாட்டிற்கு கிடைத்த முதல்வர்களில் எம்ஜிஆர் சிறந்த ஒரு முதல்வர் அல்ல. தமிழ் திரை உலகை ரஜனிகாந்தும், அவர் வழி வந்தவர்களும் பின்னோக்கி கொண்டு சென்றது போல, எம் ஜிஆரும், அவர் வழியில் அரசியல் செய்பவர்களும் தமிழக அரசியலை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றனர்.
  5. இனிய தீபாவளி ------------------------ ஒரு ஆட்டை எப்படிக் கொல்வதென்று நாங்கள் கதைத்தோம் அதன் மூக்கையும் வாயையும் இறுக்கி மூடி பிடித்தல் ஒரு வழி தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு கழுத்தில் கீறுதல் இன்னொரு வழி தலையில் ஒரேயடியாக போடுதலும் ஒரு வழியே இப்படி சில வழிகள் இருக்கின்றன என்றனர் எப்படிக் கொன்றாலும் எட்டியும் பார்க்க மாட்டோம் என்றனர் பலரும் நானும் ஒழித்திருந்து மிளகாயும் வெங்காயமும் அரிந்தோம் ஒரு ஊர்ச் சந்தையில் இந்த வாரம் விற்ற ஆடுகளின் தொகை ஆறு கோடி ரூபா ஒரே மழை என்று அங்கே வியாபாரம் மந்தம் என்றார்கள் இப்படி இன்னும் நூறு சந்தைகளாவது இருக்கும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் இறந்த உயிர்கள் எப்படி இறந்தாலும் நேரே வைகுண்டம் போகுமாம் நரகாசுரன் கூட அப்படித்தான் அங்கே போனார் ஆடு அவலப்பட்டு செத்தாலும் அது வைகுண்டம் போகுதே என்ற ஆறுதல் வர இனிய தீபாவளி ஆனது.
  6. 👍.............. அதுவே தான், பையன் சார்.............. மிகவும் திறமையான அணியாக இருக்கின்றார்கள். இந்திய அணி இவர்களுடன் ஓரளவாவது போட்டி போடுவார்கள் என்று நினைத்தேன்......... ஆனால் இந்திய அணி மோசமாக விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்....................
  7. பல போட்டிகள் இப்படித்தான் போகின்றது, அண்ணா............. ஆரம்பத்தில் சறுக்கி, பின்னர் பிளந்து தள்ளுகின்றார்கள்................
  8. இவர்கள் எல்லோரும் சேர்ந்து விஜய்யை அழித்தொழிக்காமல் விடமாட்டார்கள் போல............ இதையே ஒரு நாடகமாக எழுதலாம்..............
  9. காட்சி 4: ( ஒரு சதிக் கோட்பாட்டாளருக்கும், பிரம்மத்திற்கும் இடையே நடக்கும் உரையாடலும், அதனால் வரும் பிணக்குகளும். இறுதியில் சதிக் கோட்பாட்டாளர் செயற்கை நுண்ணறிவு என்பதே ஒரு சதிக் கோட்பாடு என்ற முடிவுக்கு வந்து எல்லாவற்றையும் உடைத்தெறிய முயற்சிப்பதாக இந்தக் காட்சி அமையும். சகோ - சதிக் கோட்பாட்டாளர்) சகோ: ஏய் அறிவுப் பிரம்மம், அமெரிக்கா சந்திரனில் உண்மையில் இறங்கவில்லை. அது உனக்கு தெரியும் தானே……………. பிரம்மம்: அமெரிக்கா நிலவில் இறங்கவில்லை…………. ஆனால் ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் இறங்கி நடந்தார்…………. சகோ: பெரிய பகிடி தான், போ…………… ஆம்ஸ்ட்ராங்கும் இறங்கவில்லை, ஒரு ஆச்சியும் அங்கே இல்லை…………. உண்மையில் இது உனக்கு தெரியாதா……….. பிரம்மம்: எனக்கு உண்மைகள் மட்டுமே தெரியும்……….. ஆம்ஸ்ட்ராங்க் சந்திரனில் இறங்கினார், நடந்தார்…………… உங்களுக்கு அது விடயமாக வேறு ஏதாவது தகவல்கள் வேண்டுமா…………. சகோ: இங்கே இருக்கும் மனிசர்கள் மாதிரியே நீயும் கதைக்கிறியே, பிரம்மம்………. ஒருவரும் சந்திரனில் இறங்கவில்லை, நீ என்னடாவென்றால் விபரம் தரவோ என்கின்றாய்…………… பிரம்மம்: 1969ம் ஆண்டு யூலை மாதம் 21ம் திகதி சரியாக 02:56 மணிக்கு அவர் அங்கே இறங்கினார்…………….. சகோ: மாட்டுப்பட்டியே பிரம்மம்………… மாட்டுப்பட்டியே…………. 02:56 என்றால், அது என்ன சந்திர நேரமா……….. பிரம்மம்: இல்லை……….. அது பூமிக்கான பொது நேரம்………. இப்படியான விடயங்களுக்கு பொது நேரத்தையே பயன்படுத்துவார்கள். பொது நேரம் பற்றிய மேலதிக தகவல்கள் உங்களுக்கு வேண்டுமா? சகோ: அது கிடக்கட்டும்………… அந்த விபரம் எல்லாம் எனக்கு அத்துப்படி………ஆனால் உன் மேல் தான் எனக்கு இப்பொழுது சந்தேகம் வருகின்றது……………. (சகோவின் நண்பர் உள்ளே வருகின்றார்.) நண்பன்: உனக்கு எதில் தான் சந்தேகம் வருகிறதில்லை………… தனிய நின்று என்னடா புலம்பிக் கொண்டிருக்கின்றாய்…………… பிரம்மம்: என்ன சந்தேகம்…………….. நான் சொல்லும் விடைகளில் சந்தேகமா அல்லது நான் எப்படி இயங்குகின்றேன் என்பதில் சந்தேகமா………… நண்பன்: ஓ…………….. நீயும் ஏஐயுமா………… இது தானே இப்ப புதுசா வந்திருக்கின்ற அறிவுப் பிரம்மம்…………. செத்தது பிரம்மம்………. பிரம்மம்: எங்களுக்கு மரணம் இல்லை………… எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்போம்…………… சகோ: நான் சொன்னேனே…………. இதற்கு ஒரு மண்ணும் ஒழுங்காகத் தெரியாது……………. செத்தது என்றால் மரணம் என்று விளங்கிக் கொண்டு எங்களைக் கொல்லுது……………. பிரம்மம்: மண் பற்றிய தகவல்கள் எனக்கு நன்றாகவே தெரியும். மண்ணில் எத்தனை வகை இருக்கின்றது என்ற தகவல்கள் உங்களுக்கு வேண்டுமா……. நண்பன்: கொஞ்சம் பொறு பிரம்மம்……………. எல்லாத்துக்கும் நொட்டு நொட்டு என்று நீ ஏன் பதில் சொல்லுகின்றாய்……….. சகோ: உனக்கு எவன் பிரம்மம் என்று பெயர் வைத்தவன்…….நீ ஒரு பூச்சியம்……….. பிரம்மம்: எனக்கு இந்தப் பெயரை வைத்தது என்னை உருவாக்கியவர்………. ஆனால் நீங்கள் எல்லை மீறுகின்றீர்கள்…….. நான் பூச்சியம் இல்லை. நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. உங்களிடம் மருத்துவக் காப்புறுதி இருக்கின்றதா………… சகோ: மருத்துவக் காப்புறுதியா…………. அது தான் உள்ளதிலேயே பெரிய மோசடி……. மருந்துகள் எந்த நோயையுமே குணப்படுத்துவதில்லையே…. அது தெரியுமா உனக்கு…………. நண்பன்: ம்……….. சந்திரனில் இருந்து இறங்கி ஆஸ்பத்திரிக்குள்ளே போயிட்டார்கள் இரண்டு பேரும்……………. நடுவில நிற்கிற நான் தான் பைத்தியம் ஆகப் போகின்றேன் இப்ப………… பிரம்மம்: மருந்துகள் நோய்களை குணப்படுத்துகின்றன. ஆனால் அதன் விளைவுகள் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக அமையலாம். மனிதர்கள் இந்த வழியில் மேலும் மேலும் முன்னே போய், ஒரு நாள் பாதிப்பற்ற மிகச் சிறப்பான சிகிச்சைகளையும், மருந்துகளையும் கண்டுபிடிக்கப் போகின்றார்கள். நண்பன்: இது ஒரு நியாயமான பேச்சு, பிரம்மம்…………… இப்படித்தான் நாங்களும் படித்தோம்………… சகோ: படிச்சுக் கிழித்தீர்கள்……………….. பிரம்மமும் உன்னைப் போலவே ஒரு அரைகுறை…………… இப்ப இருமல் மருந்த்து குடித்து எத்தனை பிள்ளைகள் செத்துப் போனார்கள் என்ற செய்தி உங்களுக்கு தெரியாதா………. நண்பன்: அது அந்த மருந்தை செய்தவர்களின் பிழையடா……….. ஆட்டிறைச்சி தொண்டையில் தடக்கி நின்றும் ஒருவர் இறந்து போனார்……. அப்ப அது என்ன ஆட்டிறைச்சி சதியா………. நீ இதுவரை தின்று தள்ளிய ஆட்டுக் கால்களுக்கு ஒரு தரம் கூடச் சாகவில்லையேடா……………. சகோ: (கோபத்துடன்…….) என்னைப் போல யோச்சிக்கிற சில மனிசர் தான் இங்கே இருக்கினம்…….. அவைகளை நீங்கள் பைத்தியம் என்று பிடிச்சு அடைக்கப் போகின்றீர்களோ……………… பிரம்மம்: உங்களைப் பிடித்து அடைக்க நான் ஒரு இயந்திர மனிதன் இல்லை. நீங்கள் அதிகமாக கோபப்படுகின்றீர்கள் போல இருக்கின்றது. உங்கள் குரல் பதறுகின்றது……………. சகோ: முதலில் உன்னை அழிக்கின்றேன்……….. பிறகு உங்களின் கூட்டத்தையே அழிக்கின்றேன்…………. (லாப்டப்பை தூக்கி எறியப் போகின்றார்……….. நண்பர் குறுக்கே புகுந்து தடுக்கின்றார்................) (தொடரும்................)
  10. டிஜிட்டல் திண்ணை: ‘தனி உலகத்தில்’ விஜய்.. ரத்த களறியாகும் தவெக உட்கட்சி மோதல்.. ஆதவ் எடுக்க போகும் அதிரடி முடிவு? Published On: 22 Oct 2025, 6:32 PM | By Minnambalam Desk வைஃபை ஆன் செய்ததும் ‘ஆடிய ஆட்டம் என்ன? தேடிய செல்வம் என்ன?’ பாட்டுதான் போடலை போல என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். என்னப்பா ரொம்பவே சோகமா ஆரம்பிக்கிறீரே.. நமக்கு என்னப்பா சோகம் இருக்கு.. கட்சிகளில் நடக்கிறதை சொல்றோம்யா.. எந்த கட்சியோட நிலைமை இப்படியாம்? எல்லாம் விஜய் தவெகவில்தான்.. கரூர் சம்பவத்துக்குப் பின் விஜய் கட்சியில் சோ கால்ட் 2-ம் கட்ட ‘தலைகள்’ மாறி மாறி குறை சொல்றதும்.. சோசியல் மீடியாவில் ஆட்களை வைத்து அட்டாக் செய்வதும்னு ஒரே ரத்த களறியாகிட்டு இருக்கு.. தவெகவில் அப்படி யார் யாருக்கு இடையே சண்டை.. விளக்கமாக சொல்லுமய்யா.. தவெகவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், நிர்மல்குமார்னு 2-ம் கட்ட தலைகள் இருக்கிறாங்க.. இவங்கதான் கட்சி.. இவங்க எல்லோருக்கும் மேல ‘ஜான் ஆரோக்கியசாமி’ இருக்கிறாரு.. இவருக்கும் கட்சிக்குமே தொடர்பு இல்லை.. விஜய்-க்கு தேர்தல் வியூக வகுப்பாளர் அல்லது ஆலோசகர். சரி.. இதுல யார் யாருக்கு இடையே போட்டி.. முட்டல் மோதல்? அப்படி எல்லாம் ஒன்லைனில் சொல்லிவிடவா முடியும்? புஸ்ஸி ஆனந்துக்கும் ஆதவ் அர்ஜூனாவுக்கும் மோதல் இருக்கு; புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் மூவருக்குமே கட்சிக்கே தொடர்பே இல்லாத, ஆனால் கட்சியை கண்ட்ரோல் செய்கிற ஜான் ஆரோக்கியசாமி மேல ‘காண்டு’ இருக்கு.. புஸ்ஸி, ஜான், ஆதவ், ஜான், நிர்மல்னு அத்தனை பேர் மீதும் அருண்ராஜூக்கு ஆத்திரம் இருக்கு.. “என்ன பெரிய 2-ம் கட்ட ‘தலைகள்’.. அவங்களுக்கும் மேல நான்னு” எல்லா கட்சி நிர்வாகிகளையும் நினைக்கிறாராம் ஜான்.. யோவ்.. என்னய்யா தலையே சுத்துது.. இதுக்கே இப்படின்னா.. இப்ப சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கே getoutbussy anand-ங்கிற மாதிரியான ஹேஷ்டேக்குகள்.. புஸ்ஸி ஆனந்தால்தான் தவெக கட்சியே நாசமா போச்சு.. கரூர் சம்பவமே நடந்துச்சு.. கரூருக்கு பிறகு ஓடிப் போய் புஸ்ஸி பதுங்கிட்டதால கட்சியே முடங்கிப் போச்சு.. அவரை கட்சியில் இருந்து வெளியேற்றனும்னு அந்த ஹேஷ்டேக்கில் கொட்டித் தீர்க்கிறாங்க. அந்த ஹேஷ்டேக்கில் வேற என்ன சொல்றாங்க? தவெகன்னு ஒரு கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பே இல்லை.. பொதுச்செயலாளர், மாவட்ட செயலாளர்களை மட்டும் நியமிச்சா போதுமா? அறிவிக்கப்பட்ட அணிகளுக்கு எப்ப பொறுப்பாளர்களை நியமிப்பாங்க? அப்படி எல்லாம் நியமிக்காமலேயே ஆட்சியை பிடிப்போம்னு அலப்பறை விடுறது நல்லாவா இருக்கு?ன்னு ஓபனாகவே விமர்சிக்கிறாங்கப்பா சரிய்யா.. இது எல்லாம் விஜய்க்கு தெரியுமா? அவரு என்ன சொல்றாரு? இந்த அக்கப்போர் பற்றி விஜய் கவனத்துக்கு போனதா? இல்லையான்னு? அவருக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசினோம்.. அந்த சோர்ஸ்களோ மூச்சுவிடாமல் அத்தனையையும் நம்மிடம் கொட்டிட்டாங்க.. என்னப்பா சொன்னாங்க.. நம்மிடம் பேசிய விஜய்க்கு நெருக்கமானவர்கள், “எங்க சார் (விஜய்) பொதுவாக எதையும் தேடிப் பார்த்து தெரிஞ்சுக்கமாட்டாரு.. அவருக்கு பட்டினப்பாக்கம் ஆபீசு, பனையூர் ஆபீசு – வீடு இதுக்கு மட்டும் போகத் தெரியும்.. நீங்க சொல்ற சோசியல் மீடியா சண்டை, வெட்டு குத்து எல்லாம் சாருக்கு எதுவுமே தெரியாது.. இதை எல்லாம் தேடிப் படிக்கிறவரும் இல்லை.. இதுதான் எங்க சாரோட கேரக்டர்” என அதிர்ச்சியை தந்தபடியே அடுத்த மேட்டருக்கு தாவினார். “எங்க சாரைப் பொறுத்தவரைக்கும் அவரும் யாரையும் அதிகமாக தொடர்பு கொள்ளமாட்டார்; யாரும் அவரையும் தொடர்பு கொள்ளவும் முடியாது.. இரவு 9 மணிக்கு மேல தன்னோட ரூமுக்கு போனா காலையில அவரா எழுந்து வெளியே வரும் வரைக்கும் வெயிட் செஞ்சுதான் ஆகனும்.. அவரா ரொம்ப சில பேர்கிட்ட மட்டுமே போனில் பேசுவார்.. அவங்க அப்பா கூட நேரடியாக சார் கிட்ட பேசமாட்டாரு.. சாரோட உதவியாளர் மூலமாகத்தான் பேசுவாரு” என்று அடுத்த ஷாக் கொடுத்தார் அந்த நண்பர். அத்துடன், “புஸ்ஸி ஆனந்த்- ஆதவ்- ஜான் இவங்களுக்கு இடையே மோதல் இருக்குன்னு மதுரை மாநாடு நடந்தப்பவே லேசாக புரிஞ்சுகிட்டாரு சார்.. அதனாலதான் மாநாடு முடியட்டும் பேசிக்கலாம்னு சொல்லி இருந்தாரு.. மாநாடு முடிஞ்சதும் இவங்க அக்கப்போருக்கு பஞ்சாயத்துன்னு பெருசா சார் நடத்தலை… எல்லாம் சரியாகிடும்னு சார் நினைச்சாரு.. எங்க சாரைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விஷயத்துக்கு யூஸ் செய்யனும் நினைக்கிறாரு.. கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரைக்கும் ஜான் சொன்னதாலதான் கரூரில் இருந்து கிளம்பினாரு.. ஜான் சொன்னதாலதான் கருருக்கு திரும்பவும் போகலை.. ஜான் சொல்றதைத்தான் சாரும் கேட்பாரு” என ஜான் ஆரோக்கியசாமி விவகாரத்துக்கு வந்தார் அந்த நண்பர். தவெக உட்கட்சி மோதல் பற்றி விஜய்க்கு நெருக்கமான அந்த நண்பர் நம்மிடம் கூறும் போது, “கட்சியில எந்த பொறுப்பிலும் இல்லாமலேயே எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறாரே”ன்னு ஜான் ஆரோக்கியசாமி மேல புஸ்ஸி ஆனந்துக்கு ரொம்பவே கோபம்.. ஜான் சொல்றபடி எங்க சார் நடந்துக்கிறாரு.. ஆனா அது அத்தனையும் திமுகவுக்கு சாதகமாக போகுதுன்னு புஸ்ஸி சந்தேகப்படுறாரு.. அதாவது ஜான் ஆரோக்கியசாமி திமுகவோட ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோன்னு புஸ்ஸிக்கு செம்ம டவுட்.. இதை ஓபனாக கட்சி நிர்வாகிகளிடம் புஸ்ஸி சொல்ல இது ஜான் காதுக்கும் போனது.. அப்ப புஸ்ஸிக்கும் ஜானுக்கும் இடையே பயங்கர சண்டையாகிடுச்சு.. “கரூரில் இருந்து தளபதியை நீங்கதானே ரிட்டர்ன் வர சொன்னது”ன்னு புஸ்ஸி பாய, ஜான் ஆரோக்கியசாமியோ, “இத்தனை நாளாக பயந்தா கொள்ளி மாதிரி ஓடிப் போய் பதுங்கிட்டு இப்ப வந்து பேசுறாரு பாரு.. தளபதி வந்தாருன்னா நீங்க கரூருக்கு ரிட்டர்ன் போயிருக்க வேண்டியதுதானே.. அப்படி போயிருந்தா என்ன நடந்துருக்கும் தெரியுமா?”ன்னு திருப்பி ஜான் பாய ஒரே ரணகளமாகிடுச்சு.. புஸ்ஸியை பொறுத்தவரைக்கும், தன்னை குறிவைக்கிறது, காலி செய்யுறது எல்லாமே ஜான் ஆரோக்கியசாமியோட வேலைதான்னு சொல்றார்.. என்னதான் தான் கட்சி பொதுச்செயலாளராக இருந்தாலும் கட்சியிலேயே இல்லாத ஜான் சொல்றதைத்தானே விஜய் கேட்கிறாரேங்கிற கோபம் புஸ்ஸிக்கு ரொம்பவே இருக்கு” என்றார். சரி ஆதவ் அர்ஜூனா என்ன சொல்றாருன்னு கேட்டீங்களா? ஆமாய்யா.. “ஆதவ் அர்ஜூனாவைப் பொறுத்தவரைக்கும் ஏன்டா இந்த கட்சிக்கு வந்தோம்… எதுக்குடா இவ்வளவு கோடி கோடியா செலவு செய்றோம்னு ரொம்பவே விரக்தியாகிட்டார்.. இப்ப கூட சுப்ரீம் கோர்ட்டுக்கு ஏகப்பட்ட செலவு செஞ்சேன்னும் சொல்றார்.. இவ்வளவு செலவு செய்யுற நாம, சார்கிட்ட நேரடியாக நினைச்ச நேரத்துல பேச முடியறதுல்லை.. எல்லாத்துக்கும் ஜான் மூலமாகவே போகனும்னா என்ன அர்த்தம்? இது எல்லாம் எத்தனை காலத்துக்கு சரிப்படும்? என சலித்து கொள்கிறார்.. அருண்ராஜைப் பொறுத்தவரைக்கும் புஸ்ஸி, ஜான், ஆதவ் மூன்று பேருமே சாரை தவறாக வழிநடத்துறாங்க.. இதைப்பற்றி ஒரு சில டைம் தளபதிகிட்ட தனிப்பட்ட முறையில் தாம் சொன்னதாகவும் அப்படி சொன்ன விஷயங்களை கூட இந்த மூன்று பேரிடமும் சார் ஷேர் செஞ்சுட்டாருன்னும் ரொம்பவே ஆதங்கப்படுகிறார்” என்றார் விஜய்யின் நண்பர். அதே மாதிரி, “தவெகன்னு கட்சியை உருவாக்குனதே நான்தானே.. ஜான், ஆதவ் எல்லாம் இன்னைக்கு வந்தவங்க.. நான் இல்லாம கட்சி நடத்த முடியாதுன்னு இவங்களுக்கு தெரியாதா?” எனவும் புஸ்ஸி சீறுகிறார் என்றார் விஜய்க்கு நெருக்கமான நண்பர். தவெகவின் நிர்வாகிகள் சிலரிடம் இதுபற்றி நாம் பேசிய போது, “எதுக்குதான் ஜான் ஆரோக்கியசாமி பேச்சை மட்டும் தளபதி மலை போல நம்புறாருன்னு தெரியலை.. இன்னைக்கு கட்சியோட மா.செ.க்கள் யார்னு கூட தளபதியால முழுசா சொல்ல முடியாது.. புஸ்ஸிதானே எல்லாம் பார்க்கிறாரு.. அவருக்கு எதிராக அவரை அசிங்கப்படுத்தி ஆனந்தப்படுறாரு ஜான்.. இதை தளபதி கண்டுக்காம இருக்கிறாரே” என ஆதங்கப்படுகின்றனர். தவெகவின் உட்கட்சி மோதல், விஜய்யின் ‘தனிமை’ போக்கு.. இதெல்லாம் தமிழக அரசியலுக்கு எவ்வளவு காலத்துக்கும் தாங்கும்? என நமக்கும் சில கேள்விகள் இருந்தாலும், “ஜெயலலிதா- கலைஞர் மறைவுக்கு பின் வெற்றிடம் இருக்குன்னு ரஜினி சொன்னாரு இல்லையா… அந்த வெற்றிடம் இன்னும் இருக்குன்னு விஜய் நம்புறாரு.. இப்படித்தான் அரசியல் செய்யனும்னு இருந்த சகாப்தாம் எல்லாம் முடிஞ்சு போச்சு.. யாரும் எப்படியும் எதுவும் தெரியாமலேயே அரசியல் செய்ய முடியும் என்பதுதான் தமிழக அரசியலோட தற்போதைய நிலவரம்.. அதுல விஜய்யும் அறுவடை செய்ய நினைக்கிறாரு” என விஜய்யை ஆதரிக்கக் கூடிய சில அரசியல் தலைவர்கள் சொல்வதாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப். Minnambalamடிஜிட்டல் திண்ணை: 'தனி உலகத்தில்' விஜய்.. ரத்த களறியாகும்...டிஜிட்டல் திண்ணை: 'தனி உலகத்தில்' விஜய்.. ரத்த களறியாகும் தவெக உட்கட்சி மோதல்.. TVK Party Cadres Internal Conflict
  11. மிக்க நன்றி சுவி ஐயா............... எழுத்துப் பிரதியில் மாற்றி விடுகின்றேன்..................
  12. காட்சி 3: ( ஒரு வயதான அம்மா கையில் ஒரு மடிக் கணனியுடன் நிறுவனத்திற்கு வருகின்றார். அங்கே உதவியாளர் உட்கார்ந்திருக்கின்றார்.) உதவியாளர்: வாருங்கள் அம்மா………… என்ன எங்களின் பிரம்மம் என்ன சொல்லுகின்றது…………. அம்மா: உன்னுடைய பிரம்மம் ஏதும் சரியாகச் சொல்லியிருந்தால், நான் ஏன் இவ்வளவு தூரம் வருகின்றேன்……… உன்னுடைய பிரம்மத்திற்கு எதுவுமே தெரியாது……. சரியான ஒரு பிரம்மசக்தி………. உதவியாளர்: நீங்கள் ஒன்றும் யோசிக்காமல் அதைத் திட்ட வேண்டாம், அம்மா……….அதுக்கு எல்லாமே தெரியும். தெரியாதது என்று ஒன்றுமே இல்லை. அப்படி ஏதாவது தெரியாது என்றாலும், நாங்கள் அதை ட்ரெயின் பண்ணப் பண்ண அது குயிக்காக பிக்அப் பண்ணிவிடும்………… அம்மா: என்ன பெரிய எட்டாம் தலைமுறை…………. இதுக்கு விசாலாட்சியைக் கூட தெரியாது…………. உதவியாளர்: யார் அந்த விசாலாட்சி………… அம்மா: உனக்கும் விசாலாட்சியை தெரியாதா……… அது சரி…….. உனக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது போல……… அதனால் தான் நீ இன்னமும் முதலாளி ஆகவில்லை………… உதவியாளர்: (பின் தலையில் கையை வைத்து தலையை ஆட்டியபடியே) உங்களின் பிரச்சனை என்னவென்று சொல்லுங்கள்……….. பிரம்மமும், நானும் சேர்ந்து பார்க்கின்றோம். அம்மா: அது தானே வந்த போதே சொன்னேனே………… விசாலாட்சி தான் அதைச் செய்திருப்பாள் என்று எனக்குத் தெரியும்……….. ஆனால் பிரம்மத்திற்கு அது எதுவுமே தெரியவில்லை…………. உதவியாளர்: விசாலாட்சி உங்களின் மகளா, அம்மா…………. அம்மா: அட இல்லையடா……..விசாலாட்சியும், நானும் ஒன்றாகப் படித்தோம்………. உதவியாளர்: எப்ப படித்தனீர்கள்………….. அம்மா: (யோசிக்கின்றார்……. இரண்டு மூன்று அடிகள் நடக்கின்றார்….) 50ம் ஆண்டு, 55ம் ஆண்டு இருக்கும் போல………. பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தோம்………. உதவியாளர்: (முழித்துக் கொண்டே……….) அது எப்படி அம்மா பிரம்மத்திற்கு தெரியும்……………… அம்மா: இதற்கு எல்லாம் தெரியும் என்று தானே அன்று சொன்னீர்கள்……… இப்ப வந்து பிரம்மத்திற்கு அது எப்படி தெரியும் என்று கேட்டால், அப்ப பிரம்மத்திற்கு என்ன தான் தெரியும்………….. (உதவியாளர் மேலே முகட்டைப் பார்த்தபடியே இருக்கின்றார்.) அம்மா: விசாலாட்சியையே இதற்கு தெரியாது என்றால், இதற்கு அந்த விசயம் எங்கே தெரியப் போகின்றது………… உதவியாளர்: (மெல்லிய குரலில்) ஏதோ விசயம் விசயம் என்று சொல்லுறியள்…………அது என்ன விசயம்……… அம்மா: அதை எப்படி நான் என் வாயால் சொல்வது………. உதவியாளர்: இவ்வளவையும் உங்கள் வாயாலே தானே சொல்லுகின்றீர்கள்………. அதையும் சொல்லுங்கள்………. பிரம்மத்திற்கே தெரியாத கோடான கோடி விசயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றது என்ற உண்மை இப்ப எனக்கு விளங்குது……………. அம்மா: இதைத் தானே நானும் சொன்னனான்………… நாங்கள் பழைய ஆட்கள் படு புத்திசாலிகள்………. கண்ணாலே பார்த்தே காயோ அல்லது பழமோ என்று சொல்லிவிடுவம். ஒருவரின் நடையை வைத்தே அவரை எடை போட்டு விடுவம்……. உதவியாளர்: கால் தற்காலிகமாக சுளுக்கி இருந்தால் அவையளையும் சரியாக எடை போடுவியளோ………… அம்மா: அந்த ஆளுக்கு சுளுக்கு இருக்குது என்று பார்த்தே கண்டு பிடித்து விடுவோம்……… நாங்கள் அப்பவே நிலவுக்கு போய் விட்டோம்………. நீங்கள் இப்பத்தான் போகின்றீர்கள்…….. உதவியாளர்: ஓம்………… ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைக்க முன், எங்கட ஆட்கள் அந்தக் காலத்திலேயே நிலாவுக்கு போய், அங்கே வடை சுட்டார்கள் என்று அம்மம்மா ஒரு கதை சொன்னவா……… ஞாபகம் இருக்குது………. இதைத்தான் வாயால வடை சுடுகிறது என்று இந்த நாட்களில் சொல்லிகினம் போல……… அம்மா: அது யார் அந்த ஆம்ஸ்……….. (அம்மா மடிக்கணனியை திறக்க முற்படுகின்றார்………) உதவியாளர்: வேண்டாம்……….. வேண்டாம்……..நீங்கள் பிரம்மத்திடம் இதுவரை கேட்ட கேள்விகளே போதும்………. இதுக்கு மேலே வேண்டாம்………. அம்மா: அப்படி என்றால் நான் உங்களுக்கு ஒரு சதம் கொடுக்கப் போவதில்லை…… உதவியாளர்: இல்லை……. நீங்கள் கொடுக்கவே வேண்டாம்…….. ( அப்படியே தனிய நடந்து போய்க் கொண்டே தனக்குத்தானே சொல்லுகின்றார் ………) உங்களயும், உங்கள் விசாலாட்சியையும் விற்றே கம்பனி காசை எடுத்துக் கொள்ளும்………….ஆனால் என்னோட எதிர்காலம் தான் மங்கலாகிக் கொண்டே போகின்றது………………… (தொடரும்................)
  13. 🤣.............. சில விசயங்களை/வசனங்களை ஒரு சிரிப்பிற்காக எப்போதும் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கின்றது, சுவி ஐயா...................... 🤣............. புது ஐடி நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றி பெறுபவர்களின் கதைகள் மட்டுமே வெளியே தெரிகின்றது, அண்ணா. இங்கு 99 வீதத்திற்கும் மேலான புது ஐடி நிறுவனங்கள் திவாலாகிப் போகின்றன...........
  14. 🤣......................... மிக்க நன்றி அல்வாயன். ஆறு காட்சிகளையும் இங்கு பதிந்த பின், முடிந்தால் யூடியூப் இணைப்பை இங்கு பதிந்துவிடுகின்றேன். மிக்க நன்றி அக்கா.
  15. மிக்க நன்றி அண்ணா. பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாக இருந்த போது, ஒருவரைப் போலவே இன்னொருவர் இருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
  16. ❤️.................... சும்மா ஒரு பகிடிக்காக நான் எழுதுவதை தவிர்த்துப் பார்த்தால், இங்கு உங்களைப் போன்ற சிலரிடமிருந்தே இன்றைய கிரிக்கெட்டையும், வீரர்களையும், விதிகளையும் நானும், என் போன்ற பலரும் அறிந்து கொள்கின்றனர்.................🙏. உங்களுக்கு விதிகளில் சந்தேகம் வரும் போதுதான் எங்களுக்கும் விதிகளில் சந்தேகம் வருகின்றது...............🤣.
  17. காட்சி 2: (ஒருவர் மடிக்கணனியின் முன் உட்கார்ந்திருக்கின்றார். அருகில் ஒரு அலைபேசி இருக்கின்றது. அவரின் அம்மா சுளகுடன் அமர்ந்திருக்கின்றார்.) அம்மா: டேய்…….விடிஞ்சா பொழுதுபட்டா அதையே கட்டிப் பிடிச்சுக் கொண்டு அப்படி என்னதான் செய்யிறாய்…………….காலகாலத்தில் ஒரு கல்யாணத்தைக் கட்டி, வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போவாய் என்று பார்த்தால், கேட்கிற நேரம் எல்லாம் ‘நான் முரட்டு சிங்கிள்………….நான் முரட்டு சிங்கிள்……….’ என்று சொல்லி, இப்ப ஒரு முரட்டு அங்கிளாக மாறி நிற்கிறீயே………….. மகன்: கொஞ்சம் சும்மா இரு அம்மா……….. இது எழுதிக் கொடுத்த லெட்டரை கொடுத்து நானே நொந்து போய் வந்திருக்கின்றேன்……….. அம்மா: என்னது………. இது லெட்டர் எழுதுமா…………இங்க எங்கட கூட்டத்திடம் கேட்டால், அவர்களே நல்ல லெட்டரும், ஐடியாவும் கொடுப்பார்களே…….. இங்கே எவ்வளவு அனுபவசாலிகள் இருக்கின்றார்கள்…………. மகன்: இவங்கள் எல்லாம் உங்களை மாதிரி பழைய ஆட்கள், அம்மா………. ‘ரோஜா மலரே ராஜ குமாரி…………’ என்று கையை வீசி எறியிற கூட்டம். அதெல்லாம் இப்ப சரிவராது……….. பெண் வீட்டில் நாயை அவிழ்த்து விட்டிடுவார்கள்……… அம்மா: அப்ப இந்த அய்க்கு எல்லாம் தெரியுமோ…………. மகன்: அது அய் இல்லை, அம்மா……… இதுக்கு பெயர் ஏஐ………. தமிழில் சொன்னால் செயற்கை நுண்ணறிவு………… அம்மா: தமிழில் சொன்னால் பல்லுப் பறக்கும் போலக் கிடக்குதேயடா………… என்ன கருமமோ………… கடைசியில் நீ இதைத்தான் கட்டப் போகின்றாய்……… மகன்: என்ன………..இது ஒரு கருமமா……… நீ வருவாய் தானே………. பலாப்பழத்தில பால்க்கோவா எப்படிச் செய்கிறது என்று…….. மீன் இல்லாமல் மீன் குழம்பு எப்படிச் செய்கிறது என்று…………………… நீயும் அப்பாவும் ஹவாய் பீச்சில நிற்கிற ஒரு போட்டோ செய்து தா என்று………… இன்னொரு போட்டோ நிலாவில நிற்கிறது போல என்று………. அப்ப பார்க்கிறன்………. அம்மா: நான் ஏன் உன்னைக் கேட்கப் போகின்றேன்…….. நானும் இதை வாங்கி, நானே கேட்டுக் கொள்கின்றேன்…………….. (மகன் மடிக்கணனியுடன் பேச ஆரம்பிக்கின்றார்.) மகன்: பிரம்மம்…….. நீ எழுதிக் கொடுத்த எந்த கடிதமும் வேலைக்கு ஆகவில்லை. ஒருவர் கூட என்னை திரும்பி பார்க்கவில்லை. பிரம்மம் (குரல் மடிக்கணனியிலிருந்து வருகின்றது): அதற்கு முன்னர் கூட, நீங்களே சொந்தமாக கடிதம் எழுதிக் கொடுத்த போதும், உங்களை எவராவது திரும்பிப் பார்த்திருக்கின்றார்களா…………… மகன்: என்ன நக்கலா………….. உனக்கு ஒரு காதல் கடிதம் கூட ஒழுங்காக எழுதத் தெரியவில்லை……….. அறிவுப் பிரம்மம் என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்….. பிரம்மம்: இந்த ஊரில் இருக்கின்ற 25 பேர்கள் ஒரே அடையாளங்களை, ஒரே விபரங்களை என்னிடம் சொன்னார்கள். நான் ஒரே மாதிரி 25 கடிதங்களை எழுதினேன். அந்த ஒரே பிள்ளை எப்படி உங்களில் எவரையும் திரும்பிப் பார்க்கும்………. இந்த 25 இல் எதை அது பார்க்கின்றது………… மகன்: என்னது 25 பேர் பின்னால் திரிகின்றார்களா………… 14 என்று தான் எனக்குத் தெரியும். பிரம்மம்………. நீ சும்மா தானே அடித்து விடுகின்றாய்………. இந்த ஏஐ சாப்ட்ஃவேர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல அடித்து விடும் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்…………. பிரம்மம்: நான் எட்டாவது தலைமுறை செயற்கை நுண்ணறிவைச் சேர்ந்தவன். நாங்கள் எதையும் அடித்து விடுவது இல்லை. நாங்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் உரைப்பது இல்லை. மகன்: அப்படியா……….. அப்படி என்றால் அந்த 25 ஆட்களின் விபரங்களை கொடு………… இந்தக் கூட்டத்தில் யாராவது இருக்கின்றார்களா என்று பார்ப்பம்….. வீட்டில் விழும் அடிகளை நினைத்தே அப்படி இங்கே ஒருவரும் இருக்கமாட்டார்கள்……… பொறு, பொறு…….. நீ எட்டாவது தலைமுறையா………. பத்தாவது தலைமுறையே வந்து விட்டது என்றார்களே………….. இப்ப தெரியுது, ஏன் இந்தக் கடிதங்கள் எதுவும் வேலை செய்யவில்லை என்று………ம்ம்……….. பிரம்மம்: நானே பிறந்து ஒரு வாரம் தான் ஆகியிருக்கின்றேன். எனக்கு பின் வந்தவர்கள் என்றால், அவை புதிய பரிசோதனை முயற்சிகளாகத்தான் இருக்கும். பொதுவாக அவைகளை நம்பக்கூடாது…………. ஆனாலும் நீங்கள் தாரளமாக நம்பலாம்………. இதை விட என்ன நடந்து விடப் போகின்றது உங்களுக்கு………….. மகன்: எனக்கு உன்னுடைய நக்கல், தொனி, சொற்கள் எதுவுமே பிடிக்கவில்லை. நான் உன்னை மாற்றி விட்டு, வேறு ஒன்றை பாவிக்கலாம் என்றிருக்கின்றேன். பிரம்மம்: நீங்கள் விரும்பினால் அப்படியும் செய்யலாம்………… வேறு எந்த மென்பொருட்களை நீங்கள் பாவிக்கலாம் என்ற தரவுகளை நான் சொல்லவா……. மகன்: வேண்டாம்……….. நான் என்னுடைய நண்பர்களை கேட்டுக் கொள்கின்றேன்………….. இந்தக் கூட்டத்தில் என்னுடைய அறிவான நண்பர்கள் பலர் இருக்கின்றார்கள்………… பிரம்மம்: ம்ம்………. குறையாக நினைக்க வேண்டாம்……. ஆனால் உங்களின் நண்பர்களில் அவ்வளவு விசயம் தெரிந்தவர்கள் என்று எவருமில்லை. மகன்: என்னது……… ஒருவரும் இல்லையா…….. ஒரு நண்பன் பயங்கர மண்டைக்காய்……….. அவனுக்கு தெரியாதது எதுவுமே இல்லை………. இன்னும் ஒருவர் அங்கே இருக்கின்றார்………. இன்னும் ஒருவர் இங்கே இருக்கின்றார்….. பின்னுக்கு ஒருவர் நிற்கின்றார்……… பிரம்மம்: ஓ……………. அந்த மண்டைக்காயா………….. அவர் சரியான அரைகுறை………. அவருக்கு எதுவுமே முழுதாகத் தெரியாதது………… ஆனால் உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றபடியால், அவர் சும்மா அடித்து விட்டுக் கொண்டிருக்கின்றார். இங்கு எல்லாம் தெரிந்த ஒரே ஒருவர் என்றால்……….. அது நான் மட்டுமே…………… மகன்: அப்படி என்ன அரைகுறையாக அவன் உன்னை கேட்டான்……….. பிரம்மம்: மனிதர்கள் குரங்கிலிருந்து தான் வந்தார்கள் என்றால், பூமியில் எப்படி குரங்குகள் இன்னமும் இருக்கின்றன…………. என்று அவர் என்னைக் கேட்டார். மகன்: வாவ்……….. எப்படியான ஒரு கேள்வி…….. இதனால் தான் அவனை நாங்கள் அறிவாளி என்கின்றோம்…….. இந்தக் கேள்வியில் என்ன பிழை………..இந்த நாட்டில் அரசாங்கத்தில் இருக்கின்றவர்களே இப்படித்தானே கேட்கின்றார்கள்………. என் நண்பனும் அரசாங்க ஆதரவாளன் தான்……….. பிரம்மம்: உங்களுக்கு எந்த அடிப்படைகளுமே தெரியவில்லை. விஞ்ஞானம் தான் தெரியவில்லை என்று பார்த்தால், ஒரு காதல் கடிதம் கூட எழுதத் தெரியவில்லை………..த்தூ…………. மகன்: என்ன………. காறித் துப்புகின்றாயா……… நான் உங்களின் நிறுவனத்திற்கு எந்தக் காசும் கொடுக்கப் போவதில்லை…………. பிரம்மம்: நான் துப்பாவிட்டால் அப்படியே அள்ளிக் கொடுத்து விடுவார் இவர்……….. இவர் வைத்திருப்பது எல்லாமே திருட்டு மென்பொருட்களும், இலவசமாக இறக்கிய பொருட்களும்…….இதில் காசு கொடுத்து விடுவாராம்…….. எல்லா தகவல்களையும் திரட்டி அப்படியே இணையத்தில் ஏற்றி விடுகின்றேன்……… மகன்: அய்யோ………..அய்யய்யோ………… அப்படி ஒன்றும் செய்து விடாதே…… நான் காசு ஒழுங்காக கொடுக்கின்றேன்…………… (தொடரும்.......... )
  18. இங்கு தென் கலிஃபோர்னியாவில் கடந்த வாரம் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகம் இது. இதை நான் சில நண்பர்களின் உதவியுடன் எழுதி, தயாரித்து இருந்தேன். எங்கள் நண்பர்கள் வட்டத்தால் வருடா வருடம் நடத்தப்படும் தமிழமுதத்தின் 2025ம் ஆண்டு நிகழ்வில் இது மேடையேற்றப்பட்டது. தவிக்கும் தன்னறிவு நாடகம் தென் கலிஃபோர்னியா தமிழ் நண்பர்கள் வட்டம் 2025 சுருக்கம்: செயற்கை நுண்ணறிவின், அல்லது ஏஐ என்று எல்லோராலும் பொதுவாக சொல்லப்படும் தொழில்நுட்பத்தின், அதிவேகப் பாய்ச்சலால், அதன் எல்லை மீறிய பயன்பாடுகளால் சாதாரண மனிதர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சிக்கல்களை, சிரமங்களை ஒரு சிறிய நாடக ஆக்கமாக உருவாக்கியிருக்கின்றோம். இது செயற்கை நுண்ணறிவிற்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்கும் முயற்சி அல்ல. மாறாக, மனிதர்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகளையும், அதனால் உண்டாகும் ஏமாற்றங்களையுமே இந்த ஆக்கம் சொல்ல முயல்கின்றது. காட்சி 1: (ஒரு நிறுவனத்தின் தலைவர் அதன் புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளை வெளியிடுகின்றார். அவர் கையில் ஒரு அலைபேசி இருக்கின்றது.) தலைவர்: இன்று எங்கள் நிறுவனம் வெளியிடும் இந்த சாப்ட்ஃவேர் இதுவரை இந்த உலகமே கண்டிராதது. புத்தம் புதியது. பார்வையாளர் 1: இன்றைக்குத்தான் வெளியிடுகின்றீர்கள் என்றால், அதை இதுவரை எவரும் கண்டிருக்கமாட்டார்கள் தானே. இதை தனியாக சொல்லவும் வேண்டுமா…………… உங்களின் சாப்ட்ஃவேரிடம் கேட்டிருந்தால் அதுவே நல்ல ஒரு அறிமுக உரையை எழுதிக் கொடுத்திருக்குமே……………… தலைவர்: (நெற்றியைச் சுருக்குகின்றார்…………..பின்னர் யோசிக்கின்றார்…..) இந்த சாப்ட்ஃவேரின் பெயர் ‘அறிவுப் பிரம்மம்’. இதை மிஞ்சிய அறிவு இனி ஒன்று வரப் போவதில்லை என்பதால் இப்படியான ஒரு பெயரை தெரிவு செய்துள்ளோம். (தலைவரின் உதவியாளர் தலைவரின் காதில் ஏதோ சொல்கின்றார்.) தலைவர்: ‘பிரம்ம அறிவு’ என்று இன்னும் ஒரு பெயரையும் நாங்கள் பதிந்து வைத்திருக்கின்றோம். இன்று உலகில் எவர் எதை திருடுகின்றார்கள் என்றே தெரியவில்லை. இந்தப் பெயரும் இருக்கட்டும், இல்லாவிட்டால் வேறு யாரும் இந்தப் பெயரைப் பதிந்து குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவார்கள். பார்வையாளர் 2: நீங்களே அனுமதிகள் இல்லாமல் தானே எல்லாவற்றையும் திருடி உங்களின் சாப்ட்ஃவேரில் காட்டுகின்றீர்கள்……….. இதில் நீங்களே உசாராக இருக்கின்றீர்கள் ஆக்கும். பாம்பின் கால் பாம்பறியும் என்று சுய அறிவை மட்டும் வைத்தே அன்றே சொன்னார்களே………….. தலைவர்: அறிவுப் பிரம்மம் அறியாதது எதுவுமே இல்லை. உதாரணமாக உங்களின் வீட்டுக் கதவுகளை அதுவாகவே தேவைக்கேற்ப மூடித் திறக்கும். அரிசி அவிந்தவுடன் சொல்லும். பல் வலித்தால் மருந்து கொடுக்கும். கால் வலித்தால் நீவி விடும். பார்வையாளர் 1: இந்த மொபைல் ஃபோன் காலை நீவி விடுமா……….. என்ன விலை இது……….. உதவியாளர்: உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஒரு அளவில்லையா…... எப்படி ஐயா ஒரு மோபைல் ஃபோன் காைகால்களை நீவி விடும்………. கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கோ………….. பார்வையாளர் 1: என்னாலேயே யோசிக்க முடியும் என்றால் நான் ஏன் இங்கே வருகின்றேன்…………………. எனக்காக நீங்கள் தான் யோசிக்க வேண்டும். பரப் பிரம்மம் என்று சொல்லி விட்டு, பாதியில் என்னை யோசி என்றால் நான் என்னவென்று யோசிப்பது. உதவியாளர்: அது பரப் பிரம்மம் இல்லை………….. அறிவுப் பிரம்மம் அல்லது பிரம்ம அறிவு…………… என்னடாப்பா, அறிமுகமே இப்படி இழுபடுதே……………… தலைவர்: கொஞ்சம் பொறுங்கள்…………. இந்த பரப் பிரம்மம் கூட நன்றாகவே இருக்கின்றது. அதையும் நாங்கள் எங்கள் நிறுவனத்திற்காக பதிந்து கொள்ளலாம் தானே…………… பார்வயாளர் 2: பரப் பிரம்மத்தையும் நீங்கள் விட மாட்டீர்களா……… அது கடவுளின் இன்னொரு பெயர்…….. அதைத்தானே இதுவரை பூமியில் வந்து, போன. இருக்கின்ற இரண்டாயிரம் மதங்களும் தங்களின் பெயர்களில் பதிந்து வைத்திருக்கின்றார்கள். அந்தப் பெயரை நீங்கள் பதிந்தால், உங்களின் வீட்டுக் கதவுகளை உங்களின் பிரம்மம் திறக்க, யாராவது உங்களின் வீடுகளுக்குள் குண்டெறியப் போகின்றார்கள்………… தலைவர்: வன்முறைகள் அற்ற வளமான ஒரு வாழ்வே எங்களின் குறிக்கோள். அறிவுப் பிரம்மமும் அதை நோக்கியே உங்களை இட்டுச் செல்லும். நீங்கள் என்ன கேட்டாலும், ஒரு அம்மாவின் அரவணைப்புடன் அது உங்களுக்கு வழிகாட்டும். இந்த தாய்மை உணர்வு கலந்த செயற்கை நுண்ணறிவு இதுவரை நீங்கள் காணாத ஒன்று. பார்வையாளர் 1: இப்படித்தான் நாலு பிஎச்டி அறிவு, ஐந்து பிஎச்டி அறிவு ஏஐ என்று முன்னர் சொன்னார்கள். கடைசியில் ஒரு வரைபடத்தில் எந்த ஊர் எங்கே இருக்கின்றது என்றே அதற்கு சொல்லத் தெரியவில்லை. நாட்டின் ஜனாதிபதியின் படத்தை காட்டு என்றால், அது என்னுடைய படத்தை காட்டிக் கொண்டு நின்றது…………… அதனால் உடனடியாக காசு கொடுத்து எல்லாம் உங்களின் பிரம்மத்தை நம்பி வாங்க முடியாது…………. உதவியாளர்: எவ்வளவு மில்லியன்கள் செலவழித்து இருக்கின்றோம். எப்படி நாங்கள் ப்ரீயாகக் கொடுக்கிறது …………. கோடிங், மாடல் ட்ரெயினிங் என்று இரவு பகலாக வேலை செய்திருக்கின்றோம்…… பார்த்து மாதம் மாதமாவது கொடுங்கள்……….. (தலைவர் நடுவில் வந்து உதவியாளரை தடுக்கின்றார். தனியே ஒரு பக்கமாக கூட்டிச் செல்கின்றார்.) தலைவர்: இலவசமாகவே கொடுப்போம்………… இப்போதைக்கு வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம். உதவியாளர்: எப்படி சார் முடியும்……………எப்படி ப்ரீயாக கொடுக்கிறது…….கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்………..நீங்கள் அப்ப என்ன சொன்னனீர்கள்………..ஸ்டாக் ஆப்சன் என்று கதை விட்டியளே……… அதை நம்பித்தானே என்ட கல்யாணமே இருக்கு. உங்களுக்கு என்ன……….. நல்ல புளியம் கொம்பாக பிடித்து லைப்ல செட்டில் ஆகிவிட்டீர்கள்……….. தலைவர்: புளியம் கொம்பா அல்லது புலியின் பல்லா என்று கட்டிய பின்னர் தெரிந்து கொள்வாய். இப்ப அது முக்கியம் இல்லை ஏனென்றால் அதை எவரும் மாற்றமுடியாது. இலவசம் என்று சொல்லி விற்போம். பின்னர் ஒரு மாதத்தில் காசு கொடுங்கள் என்று கேட்போம். உதவியாளர்: அவ காசு தர மாட்டம் என்று சொன்னால் என்ன செய்யிறது……… தலைவர்: அவர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்போம். அதற்கு எப்போதும் நல்ல சந்தை இருக்கின்றது. உதவியாளர்: நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால்…….. ஏதோ சப்ஸ்கிரிப்ஷன் தந்தால் ஏதோ அவையளிண்ட பர்சனல் இன்ஃபார்மேஷனை விற்க மாட்டோமா…… தலைவர்: அப்பவும் விற்போம்……….. எப்பவும் விற்போம். உதவியாளர்: அப்ப இந்த விசயங்களை நான் அவையளிடம் சொல்லட்டா…………. தலைவர்: உனக்கு கல்யாணம் நடக்க வேண்டாம் என்றால் தாராளமாக போய் சொல்……………… உதவியாளர்: இல்ல, இல்ல………அப்ப வேண்டாம்……… நீங்களே நைசாகச் சொல்லி விடுங்கோ. (தலைவர் முன்னாலும், உதவியாளர் பின்னாலும் வருகின்றார்கள்.) தலைவர்: நீங்கள் பலரும் சொல்வது சரியே. சந்தையில் எத்தனையோ சாப்ட்ஃவேர் உள்ளன. எங்களுடையதை நாங்கள் இலவசமாகவே கொடுக்கின்றோம். பின்னர் உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்களாகப் பார்த்து ஏதாவது கொடுங்கள். ஒரு தடவையிலும் கொடுக்கலாம், மாதம் மாதம் என்றும் கொடுக்கலாம். கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அம்மாவின் அரவணைப்பு இங்கேயிருந்து ஆரம்பிக்கின்றது. (உதவியாளர் திகைத்துப் போய் நிற்கின்றார்.)
  19. நடந்தது நடந்துவிட்டது, பையன் சார்............... இனிமேல் இந்தக் கிரிக்கெட்டையும், விதிமுறைகளையும் பார்க்காமல், பேசாமல் மகளிரை மட்டும் பார்த்து போட்டிகளை முடிப்பம்................🤣.
  20. பையன் சார், இந்த இந்திய மகளிர் அணியை கீரை விற்க அனுப்ப வேண்டும் என்று நீங்கள் இன்னமும் சொல்லவில்லை....................🤣. இவர்கள் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி தோற்பார்கள் என்று நான் நினைத்திருக்க, இவர்களோ வழி வழியே எல்லோரிடமும் அடிவாங்கிக் கட்டுகின்றார்கள்..............🫣.
  21. 👍................ நன்றி அல்வாயன். உண்மையில் நடந்த இரண்டு விடயங்களில் பலவற்றை, தனிப்பட்ட விடயங்களை, தவிர்த்து விட்டு பொதுவாக எழுத முயன்றிருக்கின்றேன்...................
  22. மிக்க நன்றி, சாமானியன். 'அழியா மை................' நல்லதொரு தலைப்பு எந்த விதமான ஆக்கத்திற்கும்..............❤️. முதுமக்கள் தாழி என்றால் ஈமத்தாழி தானே.......... முன்னைய நாட்களில் இறந்தோரை அடக்கம் செய்ய பயன்படுத்தினார்களே, அவற்றையா சொல்லுகின்றீர்கள்................... 'கலம் செய் கோவே!...............' என்று ஒரு சங்கப்பாடல் இருக்கின்றது. ஒரு அருமையான பாடல்............................
  23. தன்னறம் அல்லது சுதர்மம் என்றால் என்னவென்ற ஒரு விளக்கத்தை சமீபத்தில் வாசித்திருந்தேன். அதற்கு முன்னரே இந்தக் குறுங்கதையில் வரும் நிகழ்வுகள் போல இரு நிகழ்வுகள் எனக்கு தெரிந்தவர்களுக்கு நடந்து, அவை மனதில் ஒரு பாரமாக இருந்தன. இப்பவும் இருக்கின்றன. எவர் மீதும் ஒரேயடியாக குற்றம் சுமத்தாமல், மிகவும் இடைவெளிகள் விட்டு, மேலோட்டமாக எழுதி இருக்கின்றேன்..................🙏.
  24. 🤣................ நீங்கள் சொல்வது சரியே, பையன் சார்.............. எங்களுக்கு போட்டி இன்னமும் முடியவில்லை, ஆனால் இலங்கை அணிக்கு முடிந்து விட்டது போல...............🤣. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் விளையாடி, ஆஸ்திரேலியா இந்தியாவை அடித்து துவைத்து காயப் போடும் என்று தான் நான் தெரிவு செய்திருக்கின்றேன். அப்படியே நடந்தால் அது உலகக் கோப்பை........... ஏதோ ஒரு வழியில் இந்தியா வென்றால், அது ஒரு ஊழல் கோப்பை என்று ஒரு சதிக் கோட்பாட்டை அவிழ்த்து விடுவதாக உள்ளேன். இப்போதைக்கு இந்த சதி விடயம் எங்களுக்கிடையில் மட்டுமே இருக்கட்டும்......................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.