Everything posted by ரசோதரன்
-
‘தமிழன்’ என மார்தட்டும் சமூகம், பாரம்பரிய அடையாளத்தை இழக்கிறதா? அழிவின் விளிம்பில் பனையேறிகள்!
விஷச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்படும் போதெல்லாம் கள் இறக்குவதை அரசு தடை செய்து வைத்திருப்பதற்கு எதிரான குரல்கள் கேட்கும். பின்னர் அவை அமைதியாக அடங்கிவிடும். சமீபத்தில் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வந்திருந்த கட்டுரை ஒன்று கீழே உள்ளது. இதை காட்சன் சாமுவேல் அவர்கள் எழுதியிருந்தார். https://www.jeyamohan.in/202235/ ******************************************************** பனை மரம், கள்: ஒரு விண்ணப்பம்: காட்சன் June 29, 2024 புதுக்கோட்டை மாவட்ட வேளாண் கூட்டமைப்பு செயலாளர் நடராஜன் அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பனை மர கள் நிபந்தனையின்றி விற்க அரசு அனுமதிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சங்க காலம் துவங்கி, தற்போது வரைக்கும் கள் மருந்தாகவும் உணவாகவும் இருப்பதை அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுரேஷ்குமார் அருள்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் பாலசுந்தரம் அவர்கள் ஆஜராகி சமீபத்தில் கள்ள சாராயம் குடித்த பலர் பலியாகியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி, இது போன்ற சம்பவங்களைத் தடுக்க பனை மர கள் விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும் என வாதாடினார். இதையடுத்து நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையானது அரசின் கொள்கை ரீதியான முடிவுகளுடன் தொடர்புடையது. எனவே இந்த வழக்கு குறித்து அரசு அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர். அடுத்த கட்ட விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். இந்த நான்கு வாரங்கள் பனை ஆர்வலர்களுக்கும் பனை சார்ந்து இயங்குகிறவர்களுக்கும் நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருதுகிறேன். நம்பிக்கையுடன் நமது வாதங்களை முன்வைத்தால், கனிந்துவரும் இக்காலத்தில் மாபெரும் மாறுதல்கள் நிகழ வாய்ப்புண்டு. அரசு தனது கொள்கை முடிவினை மாற்ற மக்கள் ஒன்று திரள வேண்டும். மக்களின் கோரிக்கைகள் அரசிடம் மிக வலிமையாக முன்னெப்போதும் இல்லாதவைகையில் ஆதாரங்களுடன் எடுத்து வைக்கப்படவேண்டும். ஒரு குறிப்பிடத் தகுந்த அசைவை இந்த நான்கு வாரங்களுக்குள் நம்மால் உருவாக்க முடிந்தால், மிகப்பெரும் மாற்றத்திற்கு வித்திடுகிறவர்களாக இருப்போம். ஒரு பண்பாட்டு அசைவை நேரில் காணும் பெறும்பேறு கிட்டும். பனங்கள், மரபு பனை மரக் கள் அல்லது பனங்கள் சங்க காலத்திலிருந்தே உணவாகவும் மருந்தாகவும் களிப்புண்டாக்கும் உற்சாக பானமாகவும் இருந்து வந்திருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில், தங்கள் வெளிநாட்டு மதுவை விற்பனை செய்வதன் மூலம் அபரிமிதமாக வரி வசூலிக்க முடியும் என நம்பினர். ஆனால், இவ்வித கடுமையான போதைக்கு பழகாத தமிழக மக்கள் ஆங்கிலேயரின் போதை வஸ்துக்களை விரும்பவில்லை. உற்சாகமளிக்கும் மருந்தான கள் கைவசமிருக்கையில் வெளிநாட்டு மதுவினை எவரும் சீண்டிக்கூட பார்க்கவில்லை. வரி வசூல் பாதிக்கும் என்ற ஒற்றைப் பார்வையில் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள், பனை மர கள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. இந்தியா சுதந்திர அடைந்த பின்பு, தமிழகத்தில் கழக ஆட்சியில் மீண்டும் இருமுறை கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன. இம்முறை கள்ளுக்கடைகளுக்கு, பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் பதனீர் இறக்கி கொடுக்கவேண்டும் என்றும், பனையேறிகள் தாமே கள் இறக்க அனுமதியில்லை என்றும் கூறப்பட்டது. பனையேறிகளிடம் வாங்கும் பதனீரை கள்ளுக்கடையில் வைத்து “கள் உறை” ஊற்றி புளிக்கச் செய்து கள்ளாக்கி விற்பனை செய்யப்பட்டது. இக்கடைகளில் பல்வேறுவிதமான போதை அளிக்கும் தாவரங்கள் மற்றும் மாத்திரைகள் சேர்க்கப்பட்டன என்ற கருத்துக்கள் பரவலாக இருக்கின்றன. இப்படித்தான் கள்ளில் கலப்படம் உருவாகியது. கள்ளுக்கடை என்பதை போதைக்கான ஒரு இடமாக சுவீகரிக்கும் போக்கு தமிழகத்தில் மேலோங்கியிருக்கிறது. அது உண்மைதான். இன்றும் டாஸ்மாக்கிற்கு எதிராக கள்ளுக்கடை திறக்கவேண்டும் என்பதும், கள்ள சாராயத்தை ஒழிக்க கள்ளுக்கடை திறக்கவேண்டும் என்பதும் இவ்வித நிலைப்பாட்டில் இருந்து வருகின்ற எண்ணங்களே. அவ்வித எண்ணங்களுக்கு சற்றும் பொருந்தா தொலைவில் இருப்பது பனை மரக் கள். பனை மரக் கள், கடைகளுக்கு வரும்போது அங்கே வருகின்ற “குடிகாரர்களை” திருப்திபடுத்தும் நோக்கில் போதையேற்றம் செய்யப்படுகின்றது. அப்படி போதையேற்றும் சூழலில் பலவித கலப்படங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்கின்றன. கள் விஷமாகிவிடும் நிகழ்வுகள் இப்படிப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட கள்ளுக்கடைகளிலேயே நடைபெறும். ஆகவே கள்ளுக்கடை என்ற ஒரு பிரம்மாண்ட தேவையற்ற, போலிகளை உருவாக்கும் வாய்ப்புள்ள கள்ளுக்கடைகளை திறப்பதை குறித்த தீங்கினை மக்கள் உணரவேண்டும். கள் இறக்குதல், பருகுதல் பகிர்ந்தளித்தல் – பனையேறியின் சுதந்திரம் . தான் இறக்கும் கள்ளினை தானே அருந்தவும் விற்பனையும் செய்ய இயலாத நாடு என்ன சுத்தந்திர நாடா? கருத்து சுதந்திரம் பேசுகிறவர்கள் உணவு சுதந்திரம் பேச முன்வராதது கொள்கை தடுமாற்றமன்றி வேறென்ன? ஒரு பனையேறிக்கு பனை மரத்தில் கள் கலயம் கட்டவும், அதிலிருந்து தனக்கு உரிய கள்ளை எடுத்துக்கொள்ளவும், எஞ்சியவற்றை விற்பனை செய்யவும் முழு உரிமை உண்டு. பனைமரத்தடி கள் விற்பனை – சரியான எளிய முன்னுதாரணம் பனை மரங்களில் ஏறி கள் இறக்கும் பனை தொழிலாளியே பனை மர கள் விற்பனையை செய்யும் அதிகாரம் பெற்றவர். அவரே அவரது கள்ளிற்கு பொறுப்பு. பனை மரத்தின் கீழ் கிடைக்கும் கள்ளில் வேறு போதை ஏதும் இடவேண்டிய அவசியம் ஒரு பனையேறிக்கு இருக்காது. விருப்பமுள்ளவர்கள் வந்து நேரடியாக வாங்கிச் செல்லுவார்கள். வீட்டில் ஆப்பத்திற்கும், கோழி குழம்பிற்கும் வேறு வகையான உணவுகள் தயாரிப்பதற்கும், சூட்டை தணித்து உடல் குளிர்ச்சிபெறவும், வயிறு மற்றும் தோல் சம்பத்தமான நோய்களுக்கு மருந்தாகவும் மக்கள் இதனை வாங்கிச் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. கள் – நகர்புற மக்களுக்கு வேண்டாமா? கூழுக்கும் ஆசை மீசைக்கு ஆசை என்ற நிலை தான் இது. கள் வேண்டுமென்றால் பனை மரம் வேண்டும். பனை ஏறுகிறவர்கள் இருந்தாலே பனை மரக் கள் கிடைக்கும். நகர்புறத்தில் கள்ளுக்கடைகள் திறந்தால் அவை பனை மரக்கள்ளாக இருக்காது. மக்களை ஏமாற்றும் ஒரு போலி கடையாகவே இருக்கும். ஆனால் நகரங்களிலும், புறநகர்பகுதிகளிலும் ஏராளமாக பனை மரங்கள் இருக்கின்றன. கள் விற்பனை செய்ய அரசு எடுத்திருக்கும் கொள்கை முடிவு தளர்த்தப்பட்டால், இவ்வித மரங்களில் இருந்து பனங்கள் இறக்கி விற்பனை செய்ய முடியும். பனங்கள் – வேலை வாய்ப்பு பெருக்கும் அரசு தன் கள் தடைச் சார்ந்த “கொள்கை முடிவினை” மாற்றினால். தமிழகம் முழுக்கவே சுமார் 10 லெட்சம் இளைஞர்களுக்கு உடனடியாக சுயதொழில் செய்ய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தமிழகத்தில் தற்போது 5 கோடி பனை மரங்கள் இருக்கின்றன என வைத்துக்கொண்டாலும், நேரடி மற்றும் மறைமுகமாக பல்வேறு வாலைவாய்ப்புகள் பெருகும். குறிப்பாக அதிக பனை மரங்கள் ஏறும்போது, ஓலைகள் மற்றும் பனை நார் பொருட்களாலான தொழில்கள் புத்துயிர் பெறும். நெகிழி பிரச்சனிகளை கட்டுக்குள் கொண்டுவர இது முக்கிய காரணியாக இருக்கும். கள் – கட்டுப்படுத்தப்பட்ட விற்பனை அரசு தற்போது பரிசீலிக்கவேண்டிய காரியங்கள் கள் இறக்க பனையேறுகிண்றவர்கள் அனைவரும் முறையாக லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும். (லைசன்ஸ் எளிமையாக கிடைக்க அரசு வழிவகை செய்யவேண்டும்) பனை மரம் ஏறுகிறவர், தான் கள் இறக்கும் பனைமரங்கள் இருக்குமிடங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள்ளேயே விற்பனை செய்யவேண்டும். மணி நேர கள் விற்பனை: பனை மரத்திலிருந்து இறக்கிய கள் சுமார் இரண்டு மணிநேரம் மிக நல்ல தரத்தில் இருக்கும். ஆகவே, காலை 6 – 8 மணி வரைக்கும், மாலை 4 – 6 மணி வரைக்கும் என அந்தந்த மாவட்டத்திற்கு என உகந்த நேரங்களை தெரிவு செய்யலாம். 100 நாள் கள் விற்பனை திட்டம்: ஒவ்வொரு மாவட்டமும் அவர்களுக்கு உகந்த 100 நாட்களை கள் விற்பனை நாட்களாக தெரிவு செய்யவேண்டும். இது காவல்துறை, பனையேறிகள் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகளுக்குமுள்ள உறவினை சீர்படுத்தும். ஒருவருக்கு 1 லிட்டர் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி: பனையேறியிடமிருந்து ஒருவர் ஒரு லிட்டர் கள் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கவேண்டும். பனையேறி அல்லாதோரிடம் ஒரு லிட்டருக்கும் அதிகமான கள் காணப்பட்டால் அவர்களை முறைகேடாக கள் வைத்திருப்பவர்கள் என காவல்துறை கைது செய்யலாம் பனை ஏறுகின்ற ஒவ்வொரு பனையேறியும் அந்தந்த கிராம முன்னேற்றத்திற்கு என்று குறைந்தபட்ச தொகையினை நிர்ணயித்து அதனை முன்பணமாக செலுத்த ஊக்கப்படுத்தலாம் பனையேறி ஒருவர் விற்கும் கள்ளில் ஏதும் கலப்படம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், வாழ்நாளில் அவர் மீண்டும் பனைமரம் ஏறாதபடி தண்டனை வழங்கலாம். (இதைவிட பெரிய தண்டனை ஒரு பனையேறிக்கு கிடையாது) மேலும் சில கருத்துக்கள் அரசு கவனத்திற்கு பனையேறிகள் என்பவர்கள் ஒற்றை ஜாதி கிடையாது. தமிழகம் முழுக்க எந்த ஜாதியைச் சார்ந்தவராகவும் ஒரு பனையேறி இருக்கக்கூடும். பனையேறிகளை கண்ணியத்துடன் நடத்தும் பொறுப்பு காவல்துறைக்கும் அரசுக்கும் உண்டு. உணவை பகிர்ந்தளிக்கும் உழவரைப் போன்று என ஒரு புரிதலுக்காக சொல்லலாம். அதற்கும் ஒரு படி மேல் நின்று பணி செய்கிறவர்கள் இவர்கள். பனையேறிகளை குற்றப்பரம்பரையினர் போன்று கையாளுகின்ற தன்மையினை காவல்துறை உடனடியாக கைவிடவேண்டும். பனையேறிகளுக்கு இழைத்த ஒட்டுமொத்த கொடுமைகளுக்கும் இழிவுகளுக்கும் பரிகாரமாக தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு தன்னை சீர்தூக்கி பார்த்து செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். பொதுவெளியில் பனையேறிகளிடம் மன்னிப்பு கோருவது நன்று. மக்கள் கவனிக்க கள் எனபதை உணவு, மருந்து மற்றும் நம் உரிமை என பாருங்கள். பனையேறிகளை தேடிச்சென்று சந்தியுங்கள். அவர்களிடம் நேரடியாக எதையும் வாங்குங்கள். பனையேறிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருங்கள். பனையேறிகளின் பிரச்சனையில் ஓங்கி குரல் கொடுங்கள். இன்னும் நான்கு வாரத்தில் தமிழக மக்களின் தீர்ப்பே சிறந்த தீர்ப்பாக ஐக்கோர்ட்டு சொல்ல வாய்ப்பிருக்கிறது. பனையேறிகளின் கவனத்திற்கு உங்கள் தொழில் உயர்வானது. நீங்கள் உயர்வானவர்கள். நீங்கள் உங்களை எவருக்காகவும் கீழிறக்கிக்கொள்ளாதீர்கள். கட்சிகளை கடந்து ஜாதிகளைக் கடந்து பனை சார்ந்த உறவுகளை கட்டியணைத்து அலையென புறப்படுங்கள். கள் நமது உணவு – கள் என்பது தமிழர் உணர்வு கள் நமது உரிமை கள் உண்பேன் என்பது உரிமைக் குரல் கள் விற்பேன் என்பது விடுதலை பயணம் அனைத்து நலங்”கள்” பெற்றிட இதனை தவறாது பகிருங்கள் பனை திருப்பணி. காட்சன் சாமுவேல் 9080250653
-
குறுங்கதை 17 -- நளபாகம்
🙃............. தில்லை ஐயா, நான் இன்னும் பல்லாயிரம் பிறவிகள் எடுத்தாலும் இந்தளவிற்கு என்னால் வரவே முடியாது. நீங்கள் 'வேற லெவல்' தில்லை ஐயா............ நீங்களும் அக்பரில் தானே சாப்பிட்டு இருப்பீர்கள்...... அதற்குப் பிறகா, போதுமடா என்று, சமைக்கப் பழகினீர்கள்.......🤣 🤣............. நீங்கள் சொன்ன பின் ஒரு சந்தேகம் வருகுது தான். எல்லா 'பீசுகளையும்' அவனே சாப்பிட்டு விட்டானோ........ ஆனால் குழம்பில் ஒரு அசைவ மணம் கூட இருக்கவில்லை.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
🤣......... என்ன பையன் சார்........ இவர் கடைசியில் நியூயோர்க் பிட்ச் மாதிரி ஆகிவிட்டாரா..... தூக்கிப் போட்டிட்டு அடுத்ததிற்கு காத்திருப்போம்........
-
குறுங்கதை 17 -- நளபாகம்
👍......... நீங்கள் சொல்வது போலவே சிலர் இருக்கின்றார்கள், அண்ணை, மிக நல்ல சமையல்காரர்கள். வேறு சில ஆண்களும் சமைப்பார்கள் தான், ஆனால் தரம் சராசரிக்கும் கீழே தான். பலர் சுத்தம்......... 🤣........ மேலே சொன்னதை விட, சுடு தண்ணீர் வைத்து விட்டே, எத்தனை குமிழிகள் வந்தாப் பிறகு அதை இறக்க வேண்டும் என்று கண்கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டு நிற்கும் சில ஆண்களும் இருக்கின்றார்கள்........... இந்த வகுப்பு தான் என்னுடைய வகுப்பு......🤣....... ஆனால் படைத்தவன் காப்பாற்றிவிட்டான்...............
-
குறுங்கதை 17 -- நளபாகம்
🤣..... கோவாவில் குழம்பு வைத்த அவர் அடிக்கடி இப்படியும் கேட்டுக் கொள்வார்: பத்து நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கிற ஒரு சாப்பாட்டை இரண்டு மணித்தியாலம் எடுத்து சமைக்க வேண்டுமா என்று.
-
குறுங்கதை 17 -- நளபாகம்
நளபாகம் --------------- நல்ல கைப்பக்குவம் உள்ளவர் வாழ்வில் துணையாக கிடைத்தால் அது பெரும் அதிர்ஷ்டமே. மூன்று வேளைச் சாப்பாட்டிற்காகத் தான் வாழ்க்கையில் இந்த ஆட்டம் எல்லாம் என்று நடிகர் சிவாஜி கணேசன் சொன்னதாகச் சொல்லுவார்கள். அவரையும், அவருடைய மகன்களையும் பார்த்தால், அவர்கள் மூன்று வேளைகள் தான் சாப்பிட்டிருக்கின்றார்கள் என்று சொல்ல முடியவில்லை. 'எந்தக் கடையில் நீ அரிசி வாங்கினாய்.......' என்ற பாடல் வரிகள் அவர்களுக்காகவே எழுதப்பட்டும் இருக்கின்றது. இதில் இருக்கும் ஒரு சிக்கல் என்னவென்றால், கைப்பக்குவம் உள்ளவர் அவசரமாக சில வாரங்களுக்கு வேறெங்கும் போக வேண்டி வந்தால், வீட்டில் இருக்கும் மற்றவர்களின் நிலை என்ன என்பது தான். அக்கம்பக்கத்தில் நண்பர்கள், உறவுகள் இருப்பார்கள். அவர்கள் கொடுப்பார்கள் கூட. ஆனால் அந்தப் 'பக்குவம்' அங்கே இருக்காது. கொண்டு வந்து கொடுப்பவர்களிடம் வேண்டாம் என்று சொல்ல முடியாது, ஆனால் கொடுப்பது எல்லாவற்றையும் வாங்கி வீட்டில் வைத்தாலும், அவற்றை சாப்பிடவும் முடியாது. சில நேரங்களில் எதையுமே சாப்பிடமுடியாது. பல வருடங்களின் முன் வீட்டில் வந்து நின்ற ஒருவர் அன்று இரவுச் சாப்பாட்டிற்கு சம்பல் செய்ய தயாரானார். அவர் ஏற்கனவே ஒரு தடவை சில நாட்களின் முன் சம்பல் செய்திருந்தார். அப்போது மகன் சிறுவன். மகன் நேரே அவரிடம் போய் இன்று நீங்கள் சம்பல் செய்ய வேண்டாம், அம்மாவே செய்யட்டும் என்று சொன்னான். கொஞ்சம் வயதானவர். சத்தம் ஓய சில நிமிடங்கள் எடுத்தது. சில நாடுகளில் நல்ல உணவகங்கள் இருக்கின்றன போல. இங்கு அப்படி இல்லை. இந்திய உணவகங்கள் இருக்கின்றன. ஆனாலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் அவற்றுடன் தாக்குப் பிடிக்க முடியாது. நள மகாராஜா தான் சமையலில் மிகச் சிறந்தவர் என்பார்கள். இன்றும் உலகில் மிகப் பிரபலமான, மிகச் சிறந்த சமையல் வல்லுநர்கள் என்று சில ஆண்களையே சொல்கின்றனர். அன்னதான மடங்கள், விழாக்கள் என்று பெரிய சமையல்களையும் பொதுவாக ஆண்களே செய்து வருகின்றனர். எனக்குத் தெரிந்த வரையில் என் நண்பன் ஒருவன் போல உலகில் எவரும் வட்டம் வட்டமாக தோசை சுட மாட்டார்கள். வட்டாரி வைத்துக் கீறியது போல இருக்கும் அவன் சுடும் தோசைகள். பலவிதமான சமையல்களும் திறமாகவே செய்வான். சந்தேகம் இல்லாமல் அவன் நளனின் வழித் தோன்றல் தான். ஆனாலும் நளனின் வழித் தோன்றல்கள் மிகக் குறைவு என்பதே என் அனுபவம். இந்த வழித் தோன்றல்களுக்கு சரியான உதவி, ஒத்தாசை செய்யக் கூடிய நிலையில் கூட பெரும்பாலான ஆண்கள் இல்லை என்பது தான் நிஜம். 'நீட்டாக வெட்ட வேண்டிய வெங்காயத்தை நீ ஏன் குறுக்காக வெட்டினாய்....' என்று புலம்பி, என்னால் ஒருவர் ஒரு தடவை அமைதி இழந்தார். வெங்காயம் வதங்கி சுருங்கிய பின் நீட்டென்ன குறுக்கென்ன என்ன உள்ளுக்குள் நினைத்தேன், ஆனால் வெளியால் சொல்லவில்லை. இறைச்சி துண்டுகளை முக்கோணங்களாக வெட்ட வேண்டும் என்று சொன்னார்கள். வெளிப்பரப்பளவு கூடுமாம். நாங்கள் சட்டிக்குள் போட்டு அவி அவி என்று அவிக்கின்ற அளவிற்கு இறைச்சி துண்டின் பரப்பளவு ஒரு அரைப் பரப்பாக இருந்தால் கூட நன்றாக அவியுமே என்றும் தோன்றியது. ஆனாலும் மகாராஜாக்களை அமைதியிழக்க செய்யக் கூடாது என்று சத்தமில்லாமல் செங்கோண முக்கோணிகள் செய்வதில் கவனம் செலுத்தினேன். திருமணத்தின் முன் சில பேர்கள் சேர்ந்து ஒரு வீட்டிலோ அல்லது அறைகளிலோ இருக்கும் காலங்களில் எல்லாவற்றுக்குமே அட்டவணை இருக்கும், ஒவ்வொருவரும் சமைக்கும் நாட்கள் உட்பட. இப்படி இருக்கும் போது நாள் கிழமை நட்சத்திரம் எதுவும் பார்க்கப்படுவதில்லை. பெரும்பாலும் அசைவம் தான். அசைவ சமையல் அப்படி இப்படி இருந்தாலும் ஒரு மாதிரி, தக்காளிச் சாறு மற்றும் வேறு சில வஸ்துக்களையும் மேலால் ஊற்றி, சாப்பிட்டு விடலாம். நாலு பேர்கள் சேர்ந்து ஒரு இடத்தில் இருந்தார்கள். அன்று இரவு சமையல் பொறுப்பு இருக்கும் ஒருவர் தவிர மற்ற மூவரும் விளையாடப் போக ஆயத்தமானார்கள். சமையல் செய்ய வேண்டியவர் தொலைக்காட்சி பார்த்தபடியே இருந்தார். இவர்கள் மூவரும் நாலாவது நபருக்கு நீ தான் இன்று சமையல் என்று மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டுப்போனார்கள். விளையாடி விட்டு வந்து, குளித்து விட்டு, மூவரும் சட்டியைத் திறந்தனர். நல்ல பசி. சட்டி முட்ட முட்ட சிவப்பு நிறத்தில் குழம்பு. கோழிக் குழம்பு தான் என்று கரண்டியை விட்டு விட்டு எடுத்தனர். எதுவுமே கரண்டியில் வரவில்லை. சில இலைகள் மட்டுமே கரண்டியில் வந்து கொண்டிருந்தது. என்ன குழம்பு என்று கேட்டனர். கோவாக் குழம்பு என்று பதில் வந்தது.
-
குறுங்கதை 16 -- அதிகப்பிரசங்கி
👍.... இங்கு களத்திலேயே சுய ஆக்கத்தில் இதே சாயலில் ஒன்று எழுதியிருந்தேன், அக்கா. அதை மறந்தே விட்டேன்...... 'நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்' என்ற தலைப்பில்.
-
குறுங்கதை 16 -- அதிகப்பிரசங்கி
🤣........... வரும் சுவி ஐயா........ புத்தம் புது, இதுவரை வந்தே இருக்காத, நீங்கள் பார்த்தே இருக்காத.......... 'விளம்பரத்தை விட்டு விட்டு கதையை ஒழுங்காக எழுதடா........' என்று எனக்குள் இருந்து ஒரு குரல் சொல்லுது.............🤣.
-
அம்பேத்கரின் பத்து கடிதங்கள்
'அருஞ்சொல்' இதழ் அம்பேத்கரின் பத்து கடிதங்களை வெளியிட்டிருக்கின்றது. அம்பேத்கரின் கடிதத் தொகுப்புகள் ஒரு புத்தகமாக வெளிவந்திருக்கின்றது. அதில் இருந்து பத்து கடிதங்களை தெரிந்தெடுத்து வெளியிட்டிருக்கின்றனர். இரண்டு கடிதங்கள் இங்கு கீழே உள்ளது. அம்பேத்கர் நேருஜிக்கு எழுதியது ஒன்று, மற்றயது நேருஜி எழுதிய பதில் கடிதம். அன்றைய அரசியல்வாதிகளின் ஆற்றலும் திறமையும், இன்று அரசியலில் இருப்போரின் ஆற்றலும் திறமையும் அன்று மலையாகவும், இன்று மடுவாகவும் இருக்கின்றது. அதே நேரத்தில், வசதி வாய்ப்புகளில், அன்று அரசியலில் இருந்தோர் மடுவாகவும், இன்று இருப்போர் மலையாகவும் இருக்கின்றனர். https://www.arunchol.com/book-of-ambedkar-letters ************************* 26, அலிப்பூர் சாலை, தில்லி, தேதி: 14 செப் 1956. அன்புக்குரிய பண்டிட் ஜி, நான் இப்போது எழுதி முடித்த ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலின் உள்ளடக்கப் பகுதியின் அச்சிடப்பட்ட இரண்டு கையேட்டு நகல்களை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். புத்தகம் அச்சகத்தில் உள்ளது. உள்ளடக்கத்தைப் பார்க்கையிலேயே இது எவ்வளவு கடுமையான உழைப்பைக் கோரும் பணி என்று உங்களுக்குப் புரியும். 1956 செப்டெம்பரில் புத்தகம் விற்பனைக்கு வந்துவிடும். ஐந்து வருடங்கள் இந்தப் புத்தகத்திற்காக உழைத்துள்ளேன். புத்தகத்தின் தரத்தை உள்ளடக்கக் கையேடு சொல்லும். அச்சிடுவதற்கு மிகவும் அதிகமாகக் கிட்டத்தட்ட ரூ. 20,000/- வரை செலவாகும். இது என்னுடைய சக்திக்கு மிஞ்சியது. எனவே எல்லாத் தரப்பினரிடமும் விளம்பரம் செய்துகொண்டிருக்கிறேன். புத்தரின் 2500 வருட நினைவைக் கொண்டாடும் இந்த வருடத்தில், அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் ஆய்வாளர்களுக்கும் எல்லா நூலகங்களுக்கும் வழங்கும் விதமாக இந்திய அரசு ஐந்நூறு பிரதிகளை வாங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். பௌத்தத்தின்மீது தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை அறிவேன். எனவேதான் இதை உங்களுக்கு எழுதுகிறேன். இந்த விஷயத்தில் எனக்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன். தங்கள் உண்மையுள்ள, பி.ஆர். அம்பேத்கர். ___________________________________________________________________ எண்:2196-றிவிபி/56, புதுதில்லி, செப்டம்பர் 15, 1956. அன்பான அம்பேத்கர், தங்கள் 14ஆம் தேதிக் கடிதத்திற்கு. நீங்கள் கேட்டுக்கொண்டபடி அதிக அளவு உங்கள் புத்தகத்தின் பிரதிகளை வாங்க இயலுமா என்பது சந்தேகமே. புத்த ஜெயந்தியில் வெளியீடுகளுக்கென ஒரு தொகையை ஒதுக்கியிருந்தோம். அந்தத் தொகை தற்போது பூர்த்தியாகிவிட்டது. உண்மையில் எதிர்பார்த்ததைவிட அதிகமாகிவிட்டது. எங்களால் நிதி அளிக்கப்பட வேண்டிய பௌத்தம் குறித்த சில நூல்கள் இதனால் மறுக்கப்பட்டது. இருந்தும் தங்கள் கடிதத்தைப் புத்த ஜெயந்தி கமிட்டியின் தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அனுப்பிவைக்கிறேன். புத்த ஜெயந்தியின்போது வெளிநாட்டினர் பலரும் வருவார்கள். தில்லியிலோ மற்றெங்கோ விற்பனைக்கு வைப்பீர்களென்றால் அதிக அளவில் புத்தகம் விற்பனையாக வாய்ப்புள்ளது என்று கருதுகிறேன். தங்கள் உண்மையுள்ள, ஜவஹர்லால் நேரு.
-
இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!
நடுக்கம் 2.7 அளவில் தானா வந்தது............ கடற்கரை ரோட்டால் பருத்தித்துறையிலிருந்து தொண்டமானாறு வரை போய்ப் பாருங்கள்....... நடுக்கத்தையும், குலுக்கத்தையும் ஆறு ரிக்டர் அளவிற்கு மேல உணர்வீர்கள்............... அந்த ரோட்டை போடவே மாட்டம், தொடவே மாட்டம் என்று விட்டு வைத்துள்ளனர்.........🫣.
-
தமிழகத்துக்கு தண்ணீா் இல்லை – கர்நாடக முதலமைச்சர் திட்டவட்டம்!
நாளுக்கு எட்டாயிரம் கன அடி நீர் வீதம் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு இப்போது ஒத்துக் கொண்டுள்ளனர். மழை பெய்யும் இந்த நாட்களிலேயே இப்படி என்றால், காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத பல மாதங்களில் ஒரு துளி நீரையும் தமிழ்நாடு கர்நாடகாவிலிருந்து எதிர்பார்க்க முடியாது. வெள்ளம் கரை புரண்டு ஓடும் சில நாட்கள் தவிர, காவிரியில் ஓடும் நீரின் அளவு வெகுவாகக் குறைந்து விட்டது என்றே சொல்கின்றனர். எங்களுக்கே போதிய நீர் இல்லை, உங்களுக்கு கொடுக்கவே முடியாது என்று கர்நாடக அரசும் முறைத்துக் கொண்டு நிற்கத்தான் போகின்றது. இது எத்தனையோ வருடங்களாக இபப்டியே போய்க் கொண்டிருக்கின்றது. தமிழ்நாடு மாற்று வழிகளை, மாற்றுப் பயிர்கள் உட்பட, தேட வேண்டிய காலம் ஏற்கனவே வந்துவிட்டது.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
தமிழ்நாட்டு, அமெரிக்க அரசியல்கள் பற்றி கதைப்பது இலகுவானது, அண்ணை. நேரமும் நல்லாவே போகும். இலங்கைத் தமிழ், ஈழ அரசியல் பற்றிக் கதைப்பது நமக்கு நாமே வைக்கும் சூனியம் ஆகவும் முடியலாம். சில வேளைகளில் இங்கு போட்டுத் தாக்குதாக்கென்று தாக்கிவிடுவார்கள். 'இது உனக்குத் தேவையா.....' என்று எங்களை நாங்களே பின்னர் நொந்து கேட்பதை விட, பல இடங்களில் முன்னரே உசாராக இருப்பதும் தேவையாக இருக்கின்றது............🤣.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
❤️............ நல்ல ஒரு கருத்து. சமீபத்தில், 'கீற்று' இதழில் என்று நினைக்கின்றேன், காமராஜர் அவர்களுக்கு எதிராக ஒரு கட்டுரை வந்திருந்தது. அவர்கள் தீவிர இடதுசாரிகள், எழுத்திலும் கொஞ்சம் தீவிரம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். வேறு எவரும் காமராஜரை சொந்தம் கொண்டாடக் கூடாது, அவர் காங்கிரஸின் சொத்து என்றார்..........🤣.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
🤣........... நண்டுக் கூட்டுக்குள்ள அகப்பட்ட நண்டு போல இரண்டு பக்க மீனவர் பிரச்சனைக்குள்ளும் மாட்டுப்பட்டிருந்த அமைச்சர் டக்ளஸிற்கு இந்த ஆஸ்பத்திரி பிரச்சனை இப்போதைக்கு ஒரு வரம் தான்........... ஆனாலும் அந்த மருத்துவரை தொடர்ச்சியாக நம்பவும் முடியாது..... அவர் டக்ளஸிற்கும் 'மண்டைக்குள்ள சரக்கில்லை.......' என்று ஒரு காணொளி விடக் கூடியவர்........🤣.
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
🤣...... வெளியில் அவ்வளவாகத் தெரியாத, சமூக ஊடகங்களில் பிரபலம் தேடாத, ஆனால் உண்மையில் போற்றப்பட வேண்டிய சில எம்மவர்கள் பல இடங்களிலும் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். இங்கும் அப்படியான சிலர் இருக்கின்றார்கள்.
-
குறுங்கதை 16 -- அதிகப்பிரசங்கி
🤣............ 'இந்தியன் - 2' போல ஆகி விட்டது............... 'இந்தியன் - 3' வேண்டவே வேண்டாம், நாங்கள் வேணும் என்றால் சும்மாவே டிக்கட் காசை கொடுத்து விடுகின்றோம் என்று மீம்ஸ்ஸுகள் பறந்து கொண்டிருக்கின்றன........🤣.
-
குறுங்கதை 16 -- அதிகப்பிரசங்கி
அதிகப்பிரசங்கி ------------------------ இன்றைய நிலையில் இப்படி ஒரு தலைப்பில் எவ்வளவு தான் மூடி மூடி எழுதினாலும் பூசணிக்காய் வெளியே தெரிவதை என்னால் தடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இங்கு, இந்தப் பூமியில், எதுவுமே புதிது இல்லை என்று சொல்வார்கள். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் எல்லாமே முன்னரும் பல தடவைகள் நடந்தவையே என்பார்கள். வரலாறு அடிக்கடி திரும்பி வரும் என்பது மிகப் பிரபலமான ஒரு கூற்று. ஒரே மாதிரியான மனிதர்களும், வாழ்க்கைகளும், சம்பவங்களும் கூட திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருக்கின்றன. கணினி மென்பொருட்கள் செய்யும் துறை மற்றைய பல துறைகளுடன் ஒப்பிடும் போது புதியது. அதனால் கொஞ்சம் நெகிழ்வான கட்டமைப்பும், தளம்பலான திட்டமிடலும் கொண்டது. ஒரு புதிய மென்பொருளை செய்வதற்கு எவ்வளவு செலவு எடுக்கும் என்ற கேள்விக்கு மிகத் தோராயமான ஒரு பதிலே கிடைக்கும், அது எப்படியான, எவ்வளவு சிக்கலான அல்லது சிக்கல் இல்லாத மென்பொருளாக இருந்தாலும். மொத்த செலவையும் சரியாக பிரித்து பிரித்து கூறுவதும் கடினம். மற்ற துறைகளில் இவை எல்லாம் ஏற்கனவே மிகக் கறாராக நடைமுறையிலிருக்கும். அப்பொழுது வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் புதிய ஒரு மென்பொருளை செய்வதற்கு பலரை இந்தியாவில் பணிக்கு அமர்த்தினார்கள். ஒரு இந்திய நிறுவனத்தில் இருந்து தற்காலிகமாக அவர்களை வேலைக்கு எடுத்திருந்தனர். அவர்களில் சிலர், ஒரு நாற்பது பேர்கள் வரையில், எங்கள் நிறுவனத்தின் இங்கு அமெரிக்காவில் இருக்கும் ஒரு அலுவலகத்தில் வேலை செய்ய வந்திருந்தனர். பொதுவாக ஆறு மாதங்கள் என்றே வருவார்கள். பின்னர் இவர்கள் திரும்பிப் போக, வேறு சிலர் வருவார்கள். ஆறு மாதங்கள் அமெரிக்கா வந்து போனாலே அவர்கள் கைகளில் நிறையவே மிஞ்சும். அதனால் இங்கே வருவதற்கும், வந்த பின் இங்கேயே தங்குவதற்கும் அவர்களிடையே ஒரு போட்டி இருக்கும். அது பல வேளைகளில் ஆரோக்கியமற்ற ஒன்றாகவே இருக்கும். புதிய மென்பொருள் மிக மெதுவாகவே முன்னேறிக் கொண்டிருந்தது. அங்கேயும், இங்கேயும் என்று ஏராளமானவர்களை வேலை செய்வதற்கு எடுத்துப் போட்டிருந்தனர். ஆனால் எல்லோருக்கும் கொடுப்பதற்கும் வேலையும் இல்லை, திட்டமிடலும் சரியாக இல்லை. வேலைக்கு எடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் திறமையானவர்கள் என்றும் இல்லை. சிலர் மிகவும் ஆரம்பகட்ட நிலையில் கூட இருந்தனர். பணம் செலவாகுது, ஆனால் பொருள் வருகுதில்லையே என்று எங்களின் நிர்வாகம் பொறுமை இழந்து கொண்டிருந்தது. பத்து புதிய மென்பொருட்களை திட்டமிட்டால் அதில் இரண்டு சரியான நேரத்திற்கு, சரியான தரத்துடன் செய்ய முடிந்தால் அதுவே ஒரு வெற்றி. பத்தில் ஐந்து சுத்தமான தோல்வியாக முடியும். மிகுதி மூன்றும் இழுபட்டு இழுபட்டு, பல மாற்றங்களுடன் முடிக்கப்படக்கூடும். இதனால் வேலை போனால், போனால் என்ன போகும் தான், இன்னுமொரு நிறுவனத்தில் வேலைக்கு போய்ச் சேர வேண்டியது தான். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு போல, இதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வழக்கமே. மூன்று வருடங்கள் ஓடின ஒரு முடிவும் இல்லாமல். இங்கிருந்து அவர்களில் சிலர் இந்தியா போக, அங்கிருந்து சிலர் இங்கு புதிதாக வந்தனர். சிலர் இந்தியா போகாமல் ஏதேதோ செய்து இங்கேயே மூன்று வருடங்களாக இருந்து கொண்டும் இருந்தனர். புதிதாக வந்தவர்களில் ஒருவர் மெதுமெதுவாக இங்கிருக்கும் அவர்களின் ஆட்களை ஒருவர் ஒருவராக குற்றம் சொல்ல ஆரம்பித்தார். எந்த வேலையும் செய்வதில்லை, எந்த வேலையும் தெரியாது, பொறுப்பு இல்லை, நேரத்திற்கு வருவதில்லை, இப்படி ஒன்று மாறி இன்னொன்று என்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. புதிதாக வந்த அந்த மனிதர் திறமையானவர் தான், ஆனால் அவர்களின் ஆட்களை எடுத்தெறிந்து பேசிக் கொண்டிருந்தார். அவர்களின் பக்கத்தில் ஒரு நிர்வாக வரிசையும் இருந்தது. இறுதியில் அவர்களின் நிர்வாகத்தையும் இவர் குற்றம் சொல்ல ஆரம்பித்தார். இவர்கள் எல்லோரும் எங்கள் நிறுவன ஆட்களுடன் மிகவும் பணிவாக நடந்து கொள்வார்கள். ஏனென்றால் நாங்கள் அவர்களுக்கு 'முதலாளிகள்' போல. எங்களின் நிறுவனத்தில் இவர்கள் எல்லோரும் தற்காலிக வேலைக்கு வந்திருப்பதால் அப்படி நினைத்துக் கொள்கின்றனர். இந்தியாவிலிருந்து வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். பலருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இவரும் ஒரு தமிழர் தான். என்னிடம் வந்தார். அவர்களின் ஆட்கள் மேல் உள்ள எல்லா குற்றச்சாட்டுகளையும் எனக்கும் சொன்னார். இவர் ஏன் இப்படி அவசரப்படுகின்றார் என்று யோசனையாக இருந்தது. ஒருவேளை சில வருடங்களாக இவரின் நிறுவனம் இவரை அமெரிக்கா அனுப்பாதது கூட காரணமாக இருக்கலாமோ என்று தோன்றியது. அதை விட செத்தாலும் இவர்களை விட்டுப் போகாத பிறப்பால் வரும் சில அடையாளங்களையும், பிரிவுகளையும் இவர்கள் காவிக் கொண்டு திரிவதும் இன்னொரு காரணமாகக் கூட இருந்திருக்கும். அந்த வருடம் கிறிஸ்மஸ் வாரத்திற்கு முன் வாரம். அவர்களின் நிர்வாகத்தினருடன் எங்கள் நிர்வாகம் கதைத்தது. எங்களின் நிறுவனம் இரண்டே இரண்டு வாரக் கெடு கொடுத்தது. முடிந்தது, கிளம்புங்கள் என்று சொன்னது. புதுவருடம் பிறந்த பொழுது இவர்களில் எவரும் எங்கள் நிறுவனத்தில் வேலையில் இல்லை. நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனம் இந்தியாவில் இருக்கும் இன்னொரு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் அந்த வருடம் கைச்சாத்திட்டனர்.
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
கனடா என்று ஒரு ஞாபகம். கேரளா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளிற்கு போய் ஒவ்வொரு வகுப்புகளும், பாடசாலை அல்லது பல்கலை வகுப்புகள், கொண்டாடும் ஒன்றுகூடல் பற்றி இவர் சில வருடங்களின் முன் கருத்தொன்று எழுதி, அது கொஞ்சம் பிரபலமாக ஓடித் திரிந்தது ஞாபகம். இவருடைய பாடசாலை வகுப்பு கேரளா போனது, ஆனால் இவர் போகவில்லை என்றும் ஞாபகம்.........
-
ஆபிரகாம் லிங்கன் முதல் டிரம்ப் வரை.. துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அமெரிக்க ஜனாதிபதிகள் பட்டியல்
சிகாகோவில் தினமும் எட்டுப் பேர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்து கொண்டிருந்ததாக ஒரு தடவை சொன்னார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் தினமும் எட்டுச் சூட்டுச் சம்பவங்களும் நடந்து கொண்டிருந்தன என்றும் சொன்னார்கள். இது எல்லாம் மிகவும் சமீபத்தில். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை, வேணுமென்றால் இந்த எண்ணிக்கை இன்று இன்னும் அதிகம் தான் ஆகியிருக்கும். இங்கு இன்னும் எத்தனையோ பெரும் நகரங்களில் இதுவே தான் நிலைமை. எத்தனை தலைவர்கள் சுடப்பட்டார்கள் என்பது ஆச்சரியமில்லை. மற்றவர்கள் எவரும், அடுத்த வரிசை தலைவர்கள் உட்பட, சுடப்படவில்லை என்பதே பெரிய ஆச்சரியம். எத்தனை துப்பாக்கிகள் வீடுகளில் இருக்கின்றன என்கின்றீர்கள்............. 500 மில்லியன்கள் என்று ஒரு கணக்கு இருக்கின்றது!! இங்கு தினமும் நடக்கும் பெரும்பாலான சூட்டுச் சம்பவங்கள் உள்ளூர் செய்திகளில் கூட வருவதில்லை. ஒரு பிரிவு மக்கள் அவர்களே சுட்டு, அவர்களே செத்துக் கொண்டிருக்கின்றனர். நிஜமான 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்'...........
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
🤣...... வீட்டில் இரு பிள்ளைகளும் சிறுவர்களாக இருந்த நாட்களில் மத்தியானம் சாப்பிட்டுக் கொண்டே இரவுக்கு என்ன சாப்பாடு என்று தாயைக் கேட்பார்கள். இனித்தான் யோசிக்க வேண்டும் என்று அவரும் சொல்லுவார். இப்ப என்னுடைய நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தான், 'இனித்தான் யோசிக்க வேண்டும்' .........🤣. நான் தான் ஆரம்பிக்கின்றேன் என்றாலும், உண்மையில் இங்கு களத்தில் உள்ள சிலரும் சேர்ந்து தான் இவை எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது............🙏.
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
கண் கலங்க வைத்து விட்டீர்கள், தில்லை ஐயா........... 'கடவுளே......' என்று சொல்வதை விட வேறு என்ன சொல்வதென்றும் எனக்குத் தெரியவில்லை....🙏.
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
இவர்களை என்னவென்று சொல்வது, ஏராளன். இந்த மாதிரியான சில செயல்கள் தான் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இல்லாமல் செய்கின்றன..........😌.
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
👍..... அந்தச் சிறுபெண் வெளிநாட்டு நாணயங்களை சேகரிப்பவர் என்பதால் அவர்களுக்கு சில அமெரிக்க நாணயங்களை கொடுக்க வேண்டும் என்றே நினைத்தேன், ஆனால் என்னிடம் நாணயங்கள் எதுவும் இருக்கவில்லை. நான் செய்ய நினைத்தது ஒரு பிராயச்சித்தமே.......... திட்டவட்டமாக தெரியாத ஒன்றிற்காக சந்திக்கும் எல்லா மனிதர்களையும் சந்தேகித்து கொண்டே இருப்பது எங்கள் வாழ்வில் ஒரு அன்றாட நிகழ்வாகிவிட்டது......... நாங்கள் எல்லோரும் சேர்ந்து இப்படியான ஒரு சூழலை உருவாக்கி விட்டோம் போல........
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
❤️........... இது தான் உண்மை, சுவி ஐயா. மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்று நினைத்து ஒரு விடயத்தை ஆரம்பிக்க வேண்டுமா, அல்லது மனிதர்கள் தீயவர்கள் என்று நினைத்து ஆரம்பிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்பதே சரியான தெரிவாக இருக்கக்கூடும்..............
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
இந்த நாட்டுக்கு இரண்டு முகங்கள்.............