Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அந்தரத்தில் உறைந்துபோன மழைத்துளி (ஒரு தந்தையின் கண்ணீர்த்துளிகள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சஞ்சயன் செல்வமாணிக்கம் அவர்கள் எழுதிய அவரது கண்ணீர்த்துளிகள். வாசித்து முடிந்தும் இன்னும் தந்தையின் கண்ணீரை வெல்ல முடியாது தோற்றுப்போகிறேன். சில முடிவுகள், சிலநிமிடக்கோபம் சிலரது வாழ்வை எவ்வளவு துயரங்களால் நிரப்பியிருக்கிறது என்ற உண்மையை தனது வாழ்வை அப்படியே ஒளிவு மறைவின்றி பலருக்கான பாடமாக எழுதி துணிச்சலோடு வெளியிட்டுள்ளார்.
 
இனி சஞ்சயனின் எழுத்துக்களை வாசியுங்கள்.
 
அந்தரத்தில் உறைந்துபோன மழைத்துளி
 
மாசி மாதம் 2014 ல் மலைகள் இணையத்தளத்தில் வெளிவந்த எனது பதிவினை இங்கு இணைத்திருக்கிறேன். 
 -------------------------------------------------------------------------------------------
Adsayaa.jpg
அன்பான எனது பூக்குட்டிக்கு!

நாளை உனக்கு பிறந்தநாள். வாழ்க்கையின் அற்புதமான பதின்மகாலங்களுக்குள் வாழப்போகிறாய் நீ. ஆனால் எனக்குள் இன்னும் நீ சிறு குழந்தையாகவே இருக்கிறாய். நீ வளர்ந்துகொண்டிருந்தாலும், எனக்குள் உன்  வயது இன்னும் மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. உண்மையைச் சொன்னால் நீ வளர்வதை நான் விரும்பவில்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

நாம் ஒன்றாய் வாழ்ந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இருப்பினும் எனக்கு  நீ தந்துபோன 8 இனிமையான வருடங்களும் நிலத்தடி நீர்போன்று தினமும் என்னை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கின்
றன. வற்றாத நிலத்திடி நீர் நீர் அது. எனக்குள் நான் உன்னையும், உன் அக்காளையும் பிரிந்த காலம் உறைந்துவிட்டிருக்கிறது போன்றே உணர்கிறேன். எனக்குள் நீ இன்னமும்  8 வயதுக் குழந்தையாகவும், அக்காள் 12 வயதுக் குழந்தையாகவுமே இருக்கிறீர்கள். 

2000ம் ஆண்டு இந்நேரம் உன் வரவை எதிர்பார்த்தபடியே வடமேற்கு நோர்வேயின் ஒரு வைத்தியசாலையில் தூங்கிவழிந்துகொண்டிருந்தேன். நீ இவ்வுலகுக்கு இரத்தமும் சதையுமாய் வந்திறங்கியபோது உன்னை வரவேற்றவர்களில் நான் முதன்மையானவன் என்பதில் எனக்குப் பெருமையுண்டு. உன்னை முதன் முதலில்  தொட்டுணர்ந்தவன் என்னும் பெருமைக்குரியவன் நான். அன்றுவரை ஒரு இளவரசிக்கு தகப்பனாய் இருந்த நான், நீ வந்ததும் இரு இளவரசிகளுக்கு தகப்பனானேன். என்னை காலம் தனது தோளில் பேரரசன்பொன்று தூக்கிச்சென்ற நாட்கள் அவை.

அந்நாட்கள் அத்தனை இனிமையானவை. இன்றைய நாட்கள் வறண்டுபோகும் என்று, காலம் ஏற்கனவே கணித்திருந்ததால், அவை அத்தனை தித்திப்பாய் இருந்தனவா? உன்னை நெஞ்சிலும், அக்காளை கையினுள்ளும் அணைத்தபடியே தூங்கிப்போன நாட்களை நினைத்துப்பார்க்கிறேன். அற்புதங்கள நிறைந்த காலங்கள் அவை. இவ்வுலகில் எனது பாடல்களைக் கேட்டபடியே தூங்கிப்போனவர்கள் நீங்கள் இருவரும் மட்டுமே. நீங்கள் தூங்கிப்போனதும் உங்களின் அமைதியான தூக்கத்தையும், ஆழமான மூச்சையும் பார்த்தபடியே இருந்திருக்கிறேன். கண்முடித் தூங்கும் உங்களின் சீரான மூச்சொலியில் மயங்கிக்கிடந்திருக்கிறேன். 

நீயோ கைசூப்பாது தூங்கமாட்டாய். உனக்குத்தெரியாமல் தினமும் உனது வலதுகட்டைவிரலை உன்வாயில் இருந்து வெளியில் எடுத்துவிடுவேன். அக்காளும் அதையே செய்வாள். இருப்பினும் மீண்டும் நீ கைசுப்பியபடியே தூங்கிப்போவாய். உனக்கு  5 - 6 வயதான பின்பும் நீ எனக்கு ஒளித்து ஒளித்து கைசூப்பியதை நான் நடு இரவுகளில் உன்னை பார்க்கும் போது கண்டிருக்கிறேன். அதன் பின்பான காலங்களில் ”அப்பா, கைசூப்புவதை எப்படி நிறுத்துவது என்று என்னைக் கேட்டிருக்கிறாய். நான் நீ தூங்கும்போது உனது கையை தடிவியபடியே கதைகள் பல ‌கூறி உன்னை தூங்கவைக்கும் போது ஆரம்பத்தில் ஒத்துழைக்கும் நீ, தூக்கத்தின் மயக்கத்தில் என்னை திட்டியதுண்டு. நானும் கோபப்பட்டதுண்டு. இன்று மட்டும், இன்று மட்டும் என்று  கெஞ்சியபடியே நீ என்னை பல நாட்கள் ஏமாற்றியதுமுண்டு. ஏமாந்த சோணகிரியாய் நானும் நடித்ததுண்டு. உங்களிருவரினதும் முத்தமழையினால் சளிப்பிடித்து கிடந்த நாட்கள் அவை. 

கடந்துபோன உனது பிறந்த நாட்களை நினைத்துப்பார்க்கிறேன். நீ பட்டியலிடும் பொருட்களில் முடியுமான அனைத்தையும் உனக்கு வாங்கித்தரவே விரும்புவேன். உனது பட்டியல் எப்போதும் உன் அழகிய பேச்சுப்போலவே நீண்டிருக்கும். சில நாட்களில் அக்காளின் கண்கள் பொறாமையால் சிவந்ததையும் கண்டிருக்கிறேன். அதேபோல் அக்காளின் பிறந்தநாட்களின்போது நீயும் பொறாமையால் சிவந்திருக்கிறாய்.  உங்களிருவரையும் சமாதானப்படுத்தும் கலை எனக்கு கைவந்திருந்ததால் உங்கள் கோபங்கள் பற்றி நான் கவலைப்பட்டதில்லை. 

வாழ்க்கையின் வீரியம் இன்று என்னை ஒரு தந்தையாய் நான் தோல்வியுற்றிருக்கிறேன் என்றே எண்ணவைக்கிறது. உண்மையும் அதுவே. கடமை தவறிய குற்றவுணர்ச்சியொன்று எப்போதும் நிழல்போன்று என்னைத்தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தினமும் நான் அதன் முன் தலைகுனிந்தபடியே நிற்கிறேன். வாழ்க்கை முழுவதும் நான் தலைகுனிந்திருக்கும் நீதிமன்றம் அது. இத்‌தோல்வி என்னை நிழல்போல தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதையும் புரிந்துகொண்டிருக்கிறேன்.

இதைக் கூறுவதில் வெட்கமில்லை எனக்கு. தோல்விகளை ஜீரணிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் பழகிக்கொள். அப்போதுதான் அவற்றில் இருந்து மீண்டுகொள்ள முயற்சிக்கலாம். அதேபோல் வெற்றிகள் எப்போதும் தொடர்ந்துகொண்டிருக்காது என்பதையும் நீ புரிந்துகொள்ளவேண்டும். 

உங்களைப் பிரியநேரிட்டது, எனது வாழ்வின் மிகப் பெரிய தோல்வி. அதற்கு  அகக்காரணிகள், புறக்காறணிகள் என்று எத்தனையோ காரணங்கள் இருக்கிறன என்று கூறி, அதிலுள்ள எனக்கான பங்கை நான் இலகுவாக எட்டிக்கடந்துவிடக் கூடாது. என்னிலும் பல தவறுகளும் இருக்கின்றன. அவற்றை நான் ஏற்றே ஆகவேண்டும். சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டும். தவறுகள் அற்ற மனிதன் அல்ல நான். நன்றும் தீதும் கலந்தவனே நான். எனது தவறுகளை, நான் கடந்துவந்த காலம் எனக்குக் கற்பித்திருக்கிறது. 

நேருக்கு நோ் எதையும் பேசுவது, அதீத முன்கோபம், சற்றே அதிகமான ஈகோ, பிடிவாதம், பொறுமையின்னை, முட்டாள்த்தனமான இரக்கம், சுயத்தின் ஒடுக்குதலை மறுப்பது இப்படியானவற்றின் கலவையே நான். எனது பலவீனங்கள் உங்கள் இருவரின் வாழ்க்கையை பெரிதும் பாதித்திருக்கிறன. என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்களது குழந்தைக்காலங்கள் மகிழ்ச்சியாய் இருந்த அளவு வேதனையாயும் இருந்திருக்கின்றன. 

வாழ்க்கை என்பது எவ்வளவு வீரியமானது என்பதையும், இருமனிதர்களுக்கிடையிலான உறவு என்பது எவ்வளவு சிக்கலானது என்பதையும் நீங்கள் இருவரும் வாழ்ந்து கழிக்கும்போது உணர்ந்துகொள்வீர்கள். உங்கள் வாழ்வில் பிரச்சனைகள் வராதிருக்கவேண்டும் என்று நான் விரும்பலாம். ஆனால் யதார்த்தம் அதுவாயிருக்காது. எனவே உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள், வாழ்வின் சகல பகுதிகளையும் வரவேற்றுக்கொள்ள. எனது தவறுகளில் இருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

இந்த உலகில் வாழ்ந்த, வாழும் எல்லோரையும் வாழ்க்கை, தன்னிஸ்டத்துக்கு இழுத்து பந்தாடியபடியே சென்றுகொண்டிருக்கறது. நீங்களும் நிட்சயமாக ஒரு நாள் பந்தாவீர்கள். நான் பந்தாடப்பட்டு நிமிர்ந்து நிற்க முயற்சிக்கும்போது வயது 48ஐ கடந்துகொண்டிருக்கிறது. நான் எடுத்துக்கொண்ட சில முடிவுகள் உங்கள் இருவரின் வாழ்க்கையை மட்டுமல்ல, என்வாழ்க்கையையும் தலைகீழாய் புறட்டிப்போட்டிருக்கிறது. ஆனாலும் எனது முடிவில் இருந்து நீங்களும் நானும் நன்மை, தீமை இரண்டையும் சந்தித்திருக்கிறோம், கற்றிருக்கிறோம் என்றே எண்ணுகிறேன். பிரச்சனைகளுக்கான தீர்வுகளை தேடிக்கொள்ளப் பழகிக்கொள்ளுங்கள். பிரச்சனைகளுடனேயே வாழ்வதில் ஏற்பில்லை எனக்கு. உங்கள் வாழ்வினை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும், மற்றவர்கள் அல்ல. 

எனது சின்ன மகளே! நேரம் நடுநிசியை நெருங்க இன்னும் இரண்டுநிமிடங்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் நீ இந்த நிமிடத்துக்காய் துங்கிவழிந்தபடியே காத்திருப்பாய். சில நாட்களில் தூங்கியிருப்பாய். உன்னை  தூக்கத்தில் இருந்து எழுப்பி, முத்தமிட்டு  அணைத்து பரிசில்களை  தரும்போது நீ அற்புதமானதொரு தேவதையாய் மாறியிருப்பாய். அதன் பின் என் நெஞ்சில் காலைப்போட்டபடியே உரையாடிக்கொண்டிருப்பாய். அன்றைய நாளுக்கான திட்டங்களை நீ இளவரசிபோன்று அறிவித்துக்கொண்டிருக்க இளவரசியின் சேவகன்போன்று நான் கேட்டுக்கொண்டிருப்பேன். 

நேரம் நடுநிசி.  

எனது பூக்குட்டிக்கு அப்பாவின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் செல்வத்திற்கு அப்பாவின் முத்தங்கள். உன்னை அள்ளி எடுத்து முத்தமிடவேண்டும்போலிருக்கிறது. உனது வாசனையை மனது உணர்கிறது. 

முன்பெல்லாம் உனக்கு என்ன விருப்பமாய் இருக்கும் என்று நான் அறிவேன். எதை வாங்கிவந்தாலும் விரிந்த கண்களுடன் மகிழ்ச்சியில் துள்ளுவாய் நீ. இப்போது நீ வளர்ந்துவிட்டாய். உனது விருப்பு வெறுப்பகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இன்று, உனக்கு எதையாவது வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். பல கடைகள் ஏறி இறங்கினாலும் எதை வாங்குவது என்று என்னால் தீர்மானிக்க முடியவில்‌லை. நான் எதையாவது வாங்கி அது உனக்கு பிடிக்காதுபோய்விட்டால் என்று யோசிக்கிறேன். அல்லது இதைவிட வேறு எதை வாங்கினால் உனக்குப் பிடிக்கும் என்றும் யோசித்ததுண்டு. 

உன் பதின்மக்காலங்கள் இன்று ஆரம்பிக்கின்றன. எதிர்வரும் 6 வருடங்கள் உனது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆண்டுகளாக இருக்கும். அந்த ஆண்டுகளின்போது உன் தோழனாய், தந்தையாய், வழிகாட்டியாய், ஆசானாய், சேவகனாய், விகடகவியாய் இருக்கவேண்டும் என்று எ‌த்தனையோ கனவுகள் எனக்குள் இருந்தன. உன்னையும் அக்காளையும் பயமற்றவர்களாக, துணிந்தவர்களாக, என்னை நண்பனாக உணர்பவர்களாய், சமூகப்பொறுப்புள்ளவர்களாக, மனிதநேயமுள்ளவர்களாக, மற்றவர்களுக்கு முன்மாதிரியானவர்களாக வளர்க்கவேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன். அவை நான் எதிர்பாரதவகையில் திசைமாறியிருக்கின்றன. வாழ்க்கையில் தோல்விகளை ஏற்றுக்கொள்ளப்பழகிவிட்டால் அவற்றின் வீரியம் பலமடங்கு குறைந்துவிடும் என்பது சிறிது சிறிதாக புரியத்தொடங்கியிருக்கிறது, எனக்கு. வாழ்க்கையில் வெற்றிகளை விட தோல்விகளே அதிகமாய் வரும். அதற்கு உன்னை தயார்படுத்திக்கொள். தோல்விகளை எதிர்பார்க்காததால்தான் நான் இன்று இந்தளவு தடுமாறிப்போயிருக்கிறேன்.

எம்மிடையேயான பௌதீக இடைவெளி அதிகரித்திருப்பதை நான் மிக நன்றாகவே உணரக்கூடியதாக இருக்கிறது. மனரீதியாக அது வேதனையானது. மிகவும் வேதனையானது. எப்போதும் அது என்னை குற்றவாளிக்கூண்டில் நிறுத்திக்கொண்டே இருக்கிறது. அங்கு தினமும் நான் தலைகுனி்ந்தே இருக்கிறேன். எனது மிகப் பலவீனமான அரங்கும் அதுதான். அதை நன்கு அறிந்தவர்கள், என்னை தாக்கி குற்றுயிராக்கும் களமும் அதுதான். ஆனால் மனரீதியாக உங்களுடனான இடைவெளி அதிகரிக்கவில்லை என்பதை நான் நன்கு அறிவேன். அங்கு இடைவெளி என்பதற்கு இடமேயில்லை.

உன்னைக் கண்டும், உன்னுடன் பேசியும் 8 மாதங்கள் கடந்திருக்கின்றன. உன்னையும் அக்காளையும் தேடி இங்கிலாந்து வந்து சந்திக்கமுடியாது திரும்பிய நாட்களுமுண்டு. முன்பைப்போல் சிலருடன் வாதாடவோ, வாக்குவாதப்படவோ, எனது உரிமைகனை வாதாடிப்பெறவோ எனக்குள் இப்போது திராணியுமில்லை, மனதில் சக்தியுமில்லை. அவர்களுடன் எதுவித தொடர்பும் அற்றிருக்கவே விரும்புகிறேன். அதற்காக உங்களுக்கான, என்னால் முடிந்த கடமைகளை, பொறுப்புக்களில் இருந்து நான் விலகிக்கொள்ளப்போவதில்லை. 

கடந்த 5 வருடங்களும் என்னை முழுவதுமாய் சிதைத்துப்போட்டிருக்கின்றன. தனிமையான வாழ்வு என்னை மிகவும் பலவீனமாக்கியிருக்கிறது. உண்மையைச் சொன்னால் என்ன, பயமாக இருக்கிறது, மிகவும் பயமாயிருக்கிறது. ஆனால் நான் என்னை மீட்டுக்கொண்டபடியே, என் வயோதிபக்காலங்களுக்கான வாழ்க்கையை திட்டமிட்டுக்கொள்ளவேண்டும். இப்போது போன்றே எனது வயோதிபக்காலங்களும் இன்றைய நாட்களை விட  கொடுமையான தனிமையில் கடந்துபோகும் என்றே நினைக்கிறேன். நினைக்கவே பயம்  மனதினைக் கவ்விக்கொள்கிறது. 

தினமும் ஏதோ ஒருவகையில் உங்களிருவரின் நினைவுகள் வராதிருந்ததில்லை. அது பள்ளிசெல்லும் ஒரு குழந்தையின்வடிவில், தந்தையுடன் விளையாடும் சிறுமியின்வடிவில், கடையில் தனக்கு விரும்பியதை வாங்கும் ஒரு பெண்குழந்தை வடிவில், அல்லது தந்தையின்  கழுத்தை கட்டியிருக்கும் கைக்குழந்தைவடிலோ என்னால் உங்களை பார்க்கமுடிகிறது. சில நேரங்களில் அக் குழந்தைகள் என்னைப்பார்த்து புன்னகைக்கும்போது நீங்கள் புன்னகைப்பதாகவே எனக்குத்தோன்றும். எல்லாக் குழந்தைகளிலும் உங்களைக்காணும் கலை எனக்கு வாய்த்திருக்கிறது. அது தரும் ஆறுதல் எல்லையற்றது. எப்பொதும் போல குழந்தைகளும் என்னுடன் மிகவும் இலகுவாக ஒட்டிக்கொள்கிறார்கள். அவர்களுடன் பேசிப் பழகி, சிரித்து விளையாடி மகிழும்போது அது தரும் ஆறுதல் அலாதியானது. வெய்யிலில் நிழலின் சுகம் போன்றது அது.

எனது நண்பர் ஒருவரிடத்தல் உன் வயதிலும்,  உன் அக்காவின் வயதிலும் இரு பெண்குழந்தைகள் இருக்கிறார்கள். உங்களிருவரையும் அவர்கள் காண முடிகிறது. அவர்களின் செயல்கள், கதைகள், கோபங்கள், சினுங்கல்கள், தந்தையை வெருட்டும் பேரழகு, தந்தைக்கு அவள் வழங்கும் முத்தம் என்று அவளின் செய்கைகள் அனைத்திலும் உங்களைக்காண்கிறேன். உங்களை எவ்வாறு வளர்க்கவேண்டும் என்று நினைத்தேனோ அவ்வாறு அவர்கள் வளர்ந்துகொண்டிருக்கிறாள். அவர்கள் என்னில் காட்டும் அன்பில் கரைந்துபோகிறேன். 

சில வேளைகளில் சுயபரிதாபத்தில் நான் மூழ்கிப்போயிருப்பதுண்டு. அதிலும் ஒரு சுகமிருக்கிறது. முன்பெல்லாம் உங்களிருவரைச் சுற்றியே இருந்தது எனது முழு உலகமும். இப்போதெல்லாம் எக்கச்சக்கமான நேரம் வீணே தனிமையில் கழிந்துபோகிறது. என் அப்பா மதுபானம் பாவிப்பதில்லை என்று முன்னைய நாட்களைப்போன்று, இனி நீ, பெருமையாய் கூறிக்கொள்ள முடியாது. வெட்கமாய் இருக்கிறது இதை எழுத. ஆனாலும் உங்களிடத்தில் எதையும் மறைப்பதற்கில்லை. உன்னிடம் பொய்கூறி என்னை நானே ஏமாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை. எதையும் ஒளிவு மறைவின்றி பேசியும், எழுதியும் பழகியவன் நான். எனது வாழ்வின் வெற்றியையும் தோல்வியையும் எழுதுவதில் எனக்கு தயக்கமில்லை என்னும் ஒரு பக்குவ நிலைக்கு நான் வந்துகொண்டிருக்கிறேன் என்றே எண்ணுகிறேன்.

உங்களிருவரையும் பிரிந்தபோது, இந்தப் பிரிவானது என்னை இந்தளவுக்கு பாதிக்கும் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. தனிமை என்பது மிகவும் கொடுமையானது. நான் வாழ்ந்திருக்கும் அறையின் காற்றிலும், சுவர்களிலும் தனிமை அடர்ந்து படிந்துபோயிருக்கிறது. அதை தொட்டுணரலாம் என்னுமளவுக்கு அதன் தாக்கத்தை நான் உணர்வதுண்டு. 

இப்போது பல ஆண்டுகளாய் மனச்சோர்வுடனும், மன அழுத்தத்துடனும் போராடிக்கொண்டிருக்கிறேன். ஆரம்ப நாட்களில் பல மாதங்கள் இரவு பகலாய் தூங்கியபடியே காலத்தை கடந்துகொண்டேன். மனிதர்களுடனான தொடர்பை நிறுத்திக்கொண்டேன். அதீத அவசியமின்றி வெளியே செல்லவில்லை. அழுது அழுது தீர்த்தேன். எனது சிறிய அறைக்குள்ளேயே அடைந்துகிடந்தேன். இவை ஒரு சக்கரத்தைப்போன்று என்னைச் சுற்றிக்கொண்டே இருந்தன. அதில் இருந்து வெளியேறமுடியாது தடுமாறிக்கொண்டும் இருந்தேன். 2012ம் ஆண்டு தனிமையை வெல்லவும், மனஅழுத்தத்தை வெல்லவும், சுயநம்பிக்கையை மீட்டுக்கொள்ளவும் ஸ்பெயின் நாட்டில் 760 கி.மீ பாதயாத்திரையை மேற்கொண்டிருந்தேன். ஆனால் நான் சுயநம்பிக்கையை மீட்டுக்கொண்டஅளவுக்கு என்னால் மனஅழுத்தத்தில் இருந்து மீண்டுகொள்ளமுடியவில்லை. இப்பொதெல்லாம் தனிமையில் இருந்து மீண்டுகொள்ள வாசிப்பும், எழுத்தும், நண்பர்களும், பொதுவேலைகளும் பெரிதாய் உதவுகின்றன. நானும் அவற்றில் கரைந்துபோகிறேன். காலம் பெருவேகத்தில் கடந்துபோய்க்கொண்டிருக்கின்றது. 

திடீர் என உருவாகும் இடைவெளியும் அது கொடுக்கும் தனிமையும் மிகக் கொடியது. உங்களிருவருடன் கழிந்த காலைப்பொழுதுகள் அழகானவை. உங்களிருவரையும் துயிழெழுப்பி, அணைத்து அள்ளித் துக்கி, ஆயிரம் கதைபேசும் உங்களின் கதைகளுக்குள் என்னை மறந்து, உனது நீண்ட தலைமுடியினை உனக்கு விலிக்காதவாறு வாரிக்கட்டி, பாடசாலையில் இறக்கிவிடும்போது கிடைக்கும் முத்தத்தின் சுகமே தனி. 

இப்போதெல்லாம் அக்காலைப்பொழுதுகள் வெறுமனே ஏக்கங்களுடன் கழிந்துபோகின்றன. என்னைக் கடந்துபோகும் சாலையோரத்துக் சிறுமிகளில் நீயும் அக்காளும் இருந்துகொண்டே இருக்கிறீர்கள். அவர்களின் கண்கணில் உங்களின் ஈரம் தெரிவதாய் உணர்கிறேன். அவர்களின் புன்னகையில் நீங்கள் புன்னகைக்கிறீர்கள்.

2008ம் ஆண்டு இலைதுளிர்காலத்து மாலை உங்களிருவருடனும் சற்று உரையாடவேண்டும் என்று கூறி உங்களை அழகான அமைதியான ஒரு கடற்கரைக்கு அழைத்துப்போனேன். அன்று காலை நான் சில முக்கிய முடிவுகளை எனக்குள் எடுத்திருந்தேன். அவற்றை உங்களுக்கு உங்கள் மொழியில் உங்களை கலவரப்படுத்தாது கூறுவதே எனது நோக்கமாய் இருந்தது.

நீயோ சிறியவள். அக்காளோ சற்று விபரம் தெரிந்தவள். நீயோ என்னுடன் வாகனத்தின் முற்பகுதியில் உட்கார்ந்திருப்பது நீதான் என்று அடம்பிடித்துக்கொண்டு, நீயே என்னுடன் உட்கார்ந்துகொண்டாய்.

கடற்கரையில் இறங்கி சற்று‌நேரம் நடந்தபின் மீண்டும் வானகத்தினுள் உட்கார்ந்திருந்து உங்களுடன் உரையாடினேன்

அப்பா தனியேசென்று வாழ முடிவெடுத்திருப்பதாய் கூறியபோது நீங்கள் இருவரும் அமைதியானீர்கள். அக்காள் இதை எதிர்பார்த்திருந்தவள் போன்று அடுத்து நான் என்ன சொல்லப்போகிறேன் என்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளிடம் அழுத்தமான ஒரு மௌனம் குடிவந்திருந்தது.  நான் உங்களுக்கு, அப்பாவின் மனநிலையை முடியுமானவகையில் விளக்கினேன். 

இரு பெரிய மனிதர்களின் மனதின் முறிவும், எதிரிகளாய் ஒருவரை ஒருவர் நோக்கும் மனப்பான்மையையும், குற்றுயிராக்கும் வார்த்தைகளும், ஈகோவும், வெறுப்பும், அமைதியே அற்றுப்போன வாழ்க்கையையும், சண்டைகள் நிரம்பிய நாட்களையும் நீங்கள் இருவரும் சில வருடங்களாக கண்டு, உணர்ந்து, அனுபவத்திருக்கிறீர்கள் என்பதால், நீங்கள் இருவரும் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. நான் உங்களை வந்து பார்ப்பேனா என்று நீ கேட்டாய். எங்கே வாழப்போகிறாய் என்றாள் அக்கா. உன்னை அடிக்கடி வந்துபார்ப்பேன் அம்மா, என்றேன் உன்னிடம். அக்காவிடம் ஒஸ்லோ என்றேன். வீடு திரும்பியபோது நாம் எவரும் அதிகமாகப் பேசிக்கொள்ளவில்லை.

அன்றைய நாள் முழுவதும் நீங்கள் இருவரும் என் அருகிலேயே இருந்தீர்கள். அதன்பின்பான ஒரு நாள் நான் உங்களைவிட்டு ஒஸ்லோவுக்கு புறப்பட்டேன். அதன்பின் சில மாதங்களில் நீங்களும் நாம் வாழ்ந்திருந்த ஊரைவிட்டு புறப்பட்டீர்கள். உங்களிருவருக்கும் அந்தக்கிராமத்தைவிட்டு புறப்படவே விருப்பம் இருக்கவில்லை. உங்கள் வாழ்வின் முதல் இடப்பெயர்வாக அது இருந்தது. எனது வாழ்வில் மிகவும் வேதனையை ஏற்படுத்திய இடப்பெயர்வாக இருந்தது அது.

உனது பிறந்தநாள். மதியப் பொழுது::

நீ எங்கே வாழ்கிறாய் என்பதை அறியாதததால், உன்னைப் பார்ப்பதற்காய் உனது பாடசாலையில் காத்திருக்கிறேன். உணர்ச்சிகளின் கொந்தளிப்பின் உச்சியில் நின்றுகொண்டிருக்கிறேன். அழாமலேயே கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. அதை மறைத்துக்கொள்ள பெரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். 

உ‌ன்னை அழைத்துவருவதாய் கூறியிருக்கிறார்கள். நீ எப்படி இருப்பாய் என்று நினைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கடந்த 8 மாதங்களிலும் நீ நிட்சயமாக வளர்ந்திருப்பாய். என்னைக் கடந்துபோகும் மாணவிகளில் உன்னைத் தேடுகின்றன எனது கண்கள். அப்பா என்று ஓடிவந்து கட்டிக்கொள்ளமாட்டாயா என்று மனம் எதிர்பார்க்கிறது. தவியாய் தவிக்கிறது மனது. எதிரிக்கும் வரக்கூடாத நிலை இது.

உன்னை சந்திக்கமுடியாது என்றும். உன்னை சந்திப்பதற்கு எனக்கு அனுமதியில்லை என்று தமக்கு கூறப்பட்டுள்ளதாக அதிபரிடம் இருந்து பதில்கிடைத்தது. என்னைச் சுதாரித்துக்கொள்ள சில நிமிடங்களாகின. கண்ணீரை அடக்கமுடியவில்லை. பாடசாலையைவிட்டு வெளியேறியபோது இருந்த மனநிலையை எப்படி எழுதுவது என்று புரியவில்லை. வாழ்வின் மிக மிக வேதனையான கணம் அது. வீதியில் கால்கள் நடந்துகொண்டிருக்க நான் என்னையறியாமலே அழுதுகொண்டிருந்தேன். சில மணிநேரங்களின் பின்பே மனம் ஒரு கட்டுக்குள் வந்தது.

பாடசாலைடுடிந்தபின் பெரும் போராட்டத்தின்பின் உன்னை சந்திக்கக்கிடைத்தது. நீ மிகவும் வளர்ந்திருந்தாய், உயர்ந்திருந்தாய். நாம் தனித்திருந்தபோதும், பேரூந்திலும் நீ என்மீது சரிந்துகொண்டாய். என் கைகள் உன் கைகளை பற்றியிருந்தது, உன் கையும்தான். முன்னைய நாட்களைப்போன்று என்னுடன் விளையாடினாய், பெரிதாய் சிரித்தாய், செல்லமாய் கோபித்தாய், கட்டளையிட்டாய், சற்று தூங்கியும்போனாய் என் தோழில். அந்த இரண்டுமணிநேரங்களில் நான் மீண்டும் சற்று உயிர்த்திருந்தேன். உன்னிடம் இருந்து விடைபெற்ற கணங்கள் மிகவும் கொடியவை. இருதடவைகள் என்னை ஓடிவந்து கட்டிக்கொண்டாய். நான் வாய்விட்டு அழுதேன். உன் கண்ணில் கண்ணீர் வழிய ” அப்பா அழாதீங்கோ, I love you appa"  என்றாய். நான் சத்தமாய் அழுதபடியே விடைபெற்றேன். 

இப்படியான சந்தர்ப்பங்களில் வாழ்வின் மீதான பிடிப்பு அற்றுப்போய், ஏன் வாழவேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கும். சில மனிதர்களில் பெரும்வெறுப்பும், பழிதீர்க்கும் எண்ணமும் ஏற்படும். இப்படியான எண்ணங்களை மனதில் இருந்து அகற்ற நான் பெரும்பாடுபடுகிறேன். தோல்வியுமுறுகிறேன். விழுவதும், எழுவதும், மீண்டும் விழுவதுமே வாழ்க்கை கடந்துகொண்டிருக்கிறது.

என் எழுத்து எனது தோல்விகளை பேசவும், ஜீரணிக்கவும், பகிரவும் பெரிதும் உதவியிருக்கிறது. இந்தப்பதிவும் அடிப்படியே. இப்பதிவை எழுதி திருத்தி அனுப்பும் வரையில் பல தரம் இதை வாசிக்கநேர்ந்தது. அந்நேரங்களில் உன்னை பாடசாலையில் சந்திக்க வந்திருந்த காட்சி மீண்டும் மீண்டும் கண்முன் வரும். என்னையறியாமல் அழுவேன். அந்தக் கணத்தில், அன்று நான் உணர்ந்த அத்தனை உணர்ச்சிகளையும் உணரக்கூடியதாய் இருக்கும். பலதையும் எழுதிவிடலாம். அவை மனதை ஓரளவு அமைதிப்படுத்தலாம். ஆனால் உங்களிருவரின் அருகாமைபோலாகுமா அது? 

பூக்குட்டி, உன்னைக் கட்டிக்கொண்டு ஓவென்று கதறி அழவேண்டும் போலிக்கிறது.

வாழ்க்கை ஏன் இவ்வளவு கொடியதாய் இருக்கிறது?

அன்புடன் 
அப்பா
 

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னை அறியாமலேயே கண்ணில் நீர் வந்துவிட்டது. நன்றி சாந்தி பகிர்வுக்கு.

இப்போது தான் முகப்புத்தகத்தில் படித்துவிட்டு கனத்த மனதுடன் யாழ் களம் வந்தேன். நீங்களும் இணைத்துள்ளீர்கள்.

அந்த பெண்பிள்ளைகளுக்கு இரண்டு அம்மாக்கள் என்று தான் தோன்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.