Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள்

Featured Replies

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24ல் சிறகை விரித்து, சிகாகோ மண்ணில் 1981 அக்.,17ல் வாழ்வை முடித்துக் கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், பிறருக்கு எட்டாத கருத்துக்களை கொட்டியவர்.
 
'பத்து வயதானதொரு பாலகன்
உன் சன்னதியில் பாடியதும் நினைவில் இலையோ முத்து என இட்ட பெயர் முத்தாக
வேண்டுமென முறையீடு செய்ததிலையோ! தமிழில் ஒரு கவிமகனை
சிறுகூடல் பட்டிதனில்
தந்த மலையரசித் தாயே'-
 
என மலையரசி கோயிலில் கவிதை வடித்தவர். அப்போது அவரது வயது பத்து. அவர் கவிஞர் கண்ணதாசன். வேலை கேட்டு ஒரு பத்திரிகை அலுவலகம் சென்றவரிடம், 'ஏதாவது இதழ்களில் எழுதி இருக்கிறீர்களா' என கேட்க, 'ஆமாம்' என்றார் கவிஞர். 'என்ன பெயரில் எழுதுகிறீர்கள்' என சட்டென கேட்க, கொஞ்சமும் தயக்கமின்றி, 'கண்ணதாசன் என்ற பெயரில்...' என்றார். இப்படித்தான் பெயரும், எழுத்தும் அவர் வசப்பட்டது.
 
படைப்பாற்றல் : பெண்மையை போற்றி 'மாங்கனி' என்ற சிறு காப்பியம் படைத்தார். சங்கரர் வட மொழியில் எழுதிய கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில், 'பொன்மழை' யாகத் தந்தார். பஜகோவிந்தத்தை எளிய நடையில் மொழி பெயர்த்தார். பகவத்கீதைக்கு உரை விளக்கம் தந்தார்.
1944 - 1981க்கு இடையே அவர் 4ஆயிரம் கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேல் சினிமா பாடல்கள் எழுதியுள்ளார். தனது அனுபவங்களை கவிதையாக்கியவர். உதாரணமாக கண்ணதாசன்,
காங்கிரசில் இருந்து விலகினார். மீண்டும் அவரை காங்கிரசில் சேர்க்க தூதுவர் ஒருவரை
அனுப்பினார் காமராஜர். காமராஜரே நேரில் பேசாமல் தூது அனுப்பியது, கவிஞருக்கு வருத்தத்தை தந்தது. தனது ஆதங்கத்தை அப்போது 'பட்டணத்தில் பூதம்' என்ற படத்தில் வரும் பாடலில் தெரிவித்தார்... இப்படி:
 
'அந்த சிவகாமி மகனிடம்
சேதி சொல்லடி
எனை சேரும் நாள் பார்க்கச்
சொல்லடி
வேறு யாரோடும் நான்
பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல் தோகை ஏதடி'
 
என எழுதினார். சிவகாமி என்பது காமராஜரின் அன்னை பெயர்.
தத்துவங்களை எளிமையாக்கி பாமரரும் புரியும் வண்ணம் பாடல்களில் புகுத்திய சாதனை கவிஞருக்கே உரியது. அவரது 'அர்த்தமுள்ள இந்து மதத்தை' அவரது குரலிலேயே, தம்புரா இசைப் பின்னணியில் கேட்டுப்பாருங்கள். உலகமே உங்கள் வசப்பட்டதாய் உணர்வீர்கள். 270 நூல்களை எழுதியிருக்கிறார். அதில் வனவாசம் 30 பதிப்பு, மனவாசம் 20 பதிப்பையும் கண்டு சாதனை நிகழ்த்தி இருக்கிறது.
 
அரசவை கவிஞர்
 
'சாண்டோ சின்னப்பா தேவரின் 'தெய்வம்' படத்தில்
 
'மருதமலை மாமணியே முருகையா, தேவரின் குலம் காக்கும் வேலையா'
 
என்ற பாடலை எழுதினார். இசைக்கருவிகளும் பாடலும் போட்டிபோட்டு ஒலித்த இந்தப் பாடலுக்கு இரண்டு அர்த்தம் கொள்ளலாம். சின்னப்பா தேவருக்கு இப்பாடல் மிகவும் பிடித்துப் போயிற்று. நிரப்பாத செக்கை கொடுத்து கவிஞரை பாராட்டினார்.
ஒரு கவியரங்கில் கவிதை வாசித்த பத்து பேருக்கு கரவொலி கிடைக்கவில்லை. காரணம், கவிஞர் கவிதை வாசிக்க வேண்டும் எனக் கூட்டம் காத்திருந்ததுதான். கடைசியில் கவிஞர் கவிதை வாசித்தார். கைதட்டல் அடங்க நேரமாயிற்று.கவிஞர் சொன்னார், 'யார் கவிதை வாசித்தபோது நீங்கள் கூச்சலிட்டீர்களோ அவர் எழுதிய கவிதைதான் இது. புகழ்பெற்றவர் என்பதற்காக கைதட்டல் என்பது நல்ல மரபல்ல. நீங்கள் கவிதையை ரசிக்கவில்லை. வாசித்த நபரின் புகழைப் பார்க்கிறீர்கள். இது நல்ல பண்பல்ல', என்றார். கவிஞரின் தமிழாற்றலை உணர்ந்தவர்
எம்.ஜி.ஆர்., அதனால்தான் அவர் முதல்வராக இருந்தபோது, கவிஞர் கண்ணதாசனை அரசவை
கவிஞராக்கினார்.மதுவிலக்கு அமலில் இருந்தபோது மதுகுடிப்பதற்கான பெர்மிட் பெற, அமைச்சர் கக்கனை சந்தித்தார். 'எனது பெர்மிட் என்ன ஆனது' என்ற அவரது குரலில் கோபம் கொப்பளித்தது. அமைச்சர் கக்கன், 'சற்று அமருங்கள். தமிழ் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காகவே பெர்மிட்டில் கையெழுத்திடாமல் வைத்திருக்கிறேன்' எனச் சொல்ல, கவிஞரின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.ஏசுகாவியம் எழுதுவதற்காக குற்றாலத்தில் பாதிரியார் தம்புராஜூடன் இருந்தார். தினமும் காலையில் குளித்து, நெற்றி நிறைய விபூதி பூசிய பின்பு, பகல் முழுவதும் ஏசுகாவிய எழுத்துப்பணி.அவர் மதுஅருந்துவார் என்பதை உணர்ந்த பாதிரியார், 'தேவையெனில் மாலையில் மதுஅருந்தி ஓய்வெடுங்கள்' என்றார்.
கவிஞரோ 'இப்பணி முடியும் வரை மது அருந்தமாட்டேன். இது உலக மக்களின் உயர்ந்த நூல் என்பதை என்மனம் சொல்கிறது' என்றார்.
 
கண்ணே கலைமானே
கேள்விகளுக்கு மதிநுட்பத்தோடு பதில் சொல்வார்.
'அரசியல் மேடைக்கும்,
இலக்கிய மேடைக்கும் என்ன வித்தியாசம்'
 
என்றதற்கு, 'அரசியல் மேடை மனிதனை முட்டாளாக்குவதற்காகப் போடப்படுவது, இலக்கிய மேடை முட்டாள்தனத்தை தெளிய வைப்பதற்காக போடப்படுவது' என்றார்.
 
'உங்கள் புத்தகத்தை படிப்போருக்கு நீங்கள் சொல்லும் புத்திமதி' என்ன என்றதற்கு,
'புத்தகத்தில் உள்ள கருத்துக்களை பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரை பின்பற்றாதீர்கள்' என போட்டு உடைத்தார் இதற்கும் ஒருபடி மேலே சென்று, 'எப்படி வாழக்கூடாது என்பதற்கு எனது வாழ்க்கையின் முற்பகுதியையும், எப்படி வாழ வேண்டும் என்பதற்கு காந்தியடிகளின் சுயசரிதையும் உங்களுக்கு வழிகாட்டும்' என்று வனவாசத்தில் சொன்னவர் கவியரசர்.
 
சினிமா உலகில் கால்பதிக்க அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதாக இல்லை. 'கலங்காதிரு மனமே' என்ற பாடலுடன் துவங்கி, 'கண்ணே கலைமானே' என்ற பாடலுடன் நிறைவானார். 'சாத்தப்பனுக்கு மகனாக பிறந்தான். ஆனால் இவன்தான் சினிமா பாடல்கள் மூலம் எல்லா வாசல்களையும் திறந்தான்' என்கிறார் கவிஞரைப் பற்றி நெல்லை ஜெயந்தா.
'கண்ணதாசன் முறையாக தமிழ் படித்தவரில்லை' என, சில தமிழறிஞர்கள் சொன்னபோது, 'அதனாலென்ன, தமிழுக்கு கண்ணதாசனைத்தான் தெரிகிறது' என பதிலடி கொடுத்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். 'காட்டுக்கு ராஜா சிங்கம்.
 
கவிதைக்கு ராஜா கண்ணதாசன்' என காமராஜர் பாராட்டினார் என்றால், அர்த்தமில்லாமலா இருக்கும்?
 
 
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=yAN5bNPzOdY

 

இந்நாளில், அந்த மாபெரும் கவிஞனை நினைவு கூர்கின்றோம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவரது பாடல் ஒன்றுக்காகவே 'மகா கவிஞன்' என்ற கௌரவத்தை இவருக்கு அளிக்கலாம்!

 

அந்தப் பாடல்...

 

 

வீடு வரை உறவு.... வீதி வரை மனைவி..,

காடு வரை பிள்ளை... கடைசி வரை யாரோ...!

 

சென்றவனைக் கேட்டால் வந்து விடு என்பான்,

 

வந்தவனைக் கேட்டால்... சென்று விடு என்பான்..!

 

விட்டு விடும் ஆவி... பட்டு விடும் மேனி..!

 

 

கண்ணதாசன் என்ற மனிதன் மறைந்து போனாலும்... கண்ணதாசன் என்ற கவிஞன்.. தமிழ் வாழும் வரை வாழ்வான்!

இந்நாளில், அந்த மாபெரும் கவிஞனை நினைவு கூர்கின்றோம்.

  • தொடங்கியவர்

பாடல் ஒரு கோடி செய்தாய்!

 

kannadasan1_2158710h.jpg

ஓவியம்: முத்து
 

இன்று கண்ணதாசன் நினைவுநாள்

1960-களின் தொடக்கத்தில் சென்னை மேற்கு மாம்பலத்தில் நாங்கள் இருந்த காலம்; அப்போது நான் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவன். கங்கைகொண்டானைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர், ஜாபர்கான் பேட்டையில் வைத்திருந்த காயலான் கடையில் எனக்கு வேலை. அவருடைய வீடு அமைந்தகரையில். அவருக்கு மதியச் சாப்பாடு எடுத்துவர வேண்டும். அதுவும் என் வேலையில் சேர்த்தி. அந்த நாட்களில் தெருவுக்கு மூன்று நான்கு திமுக சார்பு மன்றங்கள் இருக்கும். ‘திராவிட நாடு’, ‘இனமுழக்கம்’ போன்ற பத்திரிகைகளைச் சுவரையொட்டிய சன்னமான கம்பியில் தொங்கவிட்டிருப்பார்கள். அந்த மன்றம் ஒன்றின் நூலகத்தில்தான் கிடைத்தது, காவியக் கழகம் வெளியிட்டிருந்த கவிஞர் கண்ணதாசனின் முதல் தொகுப்பு. படித்து முடித்ததும், அதுவரை காணாத புதுமையை உணர்ந்தது உள்ளம். அந்தத் தொகுப்பில் இருந்த ‘பிள்ளை ஒரு தொல்லை’ என்ற கவிதையின் பாடுபொருள் இன்றைக்கும் புதிதுதான். அந்தத் தொகுப்பின் நிறைய வரிகள் நெஞ்சில் வந்து அப்படியே அமர்ந்துகொண்டன.

 

அந்நாளில் கவியரங்கக் கவிதையின் ஆரம்பத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தும் உண்டு. கண்ணதாசன் இப்படிப் பாடுவார்:

 

நின்னை யான் வணங்குவதும்

நீ என்னை வாழ்த்துவதும்

அன்னை மகற்கிடையே

அழகில்லை என்பதனால்

உன்னை வளர்த்துவரும்

ஒண்புகழ் சேர் தண் புலவர்

தன்னை வணங்குகின்றேன்

தமிழ்ப் புலவர் வாழியரோ!

கண்ணதாசன் காங்கிரஸில் இருந்த காலகட்டத்தில் அவருடைய பிறந்தநாள் விழா வருஷம்தோறும் தேனாம்பேட்டை மைதானத்தில்தான் நடக்கும்; கண்டிப்பாக, கவியரங்கம் நடக்கும். அந்தக் கவியரங்கங்களில் கவிஞர், கவிதை படிப்பதைக் கேட்பது ஓர் உன்னதமான அனுபவம். ஒருமுறை கேட்ட கடவுள் வாழ்த்துப் பாடல் இது:

தந்தைக்கோர் மந்திரத்தைச்

சாற்றிப் பொருள்விரித்து

முந்து தமிழில் முருகு என்று பேர் படைத்து

அந்தத்தில் ஆதி ஆதியில் அந்தமென

வந்த வடிவேலை வணங்குவதே என் வேலை

 

வசைக்கவி

கவிஞர் வசைக்கவி பாடினால் வசை பாடப்படுபவரே மயங்கிப்போவார். ஒருமுறை அண்ணாவை இந்த விதமாக விமர்சித்தார்:

‘வடிவோடு படமெழுதும் ஓவியனைப்

போர்க்களத்தில் உருட்டிவிட்டால் என்னாகும்?’

தி.மு.க-வை இப்படி:

கத்திரியில் வெண்டைக்காய்

காய்த்துக் குலுங்குமென்றால்

தத்துவத்தில் ஏதோ தகராறு என்று பொருள்

சிங்கந்தான் மான்குலத்தைச்

சீராட்டி வளர்க்குமென்றால்

அங்கத்தில் ஏதோ அடிவிழுந்தது என்றுபொருள்.

 

தியாகராய நகர் பேருந்து நிலையத்தின் அருகில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கவிஞர் பேசும்போது திமுகவை இவ்விதம் விமர்சித்திருக்கிறார்:

 

பேசிப் பழகிய பொய்

வாங்கிப் பழகிய கை

போட்டுப் பழகிய பை.

காங்கிரஸையும் அவர் விட்டுவைக்கவில்லை. ஒரு கவியரங்கத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் தொண்டர்களிடம் இப்படிக் கவி பாடினார்:

நாமென்ன ஆலை அரசர்களா

ஆடாத மேனியரா?

வேலை மிக அதிகம்; வேகம் மிகக் குறைவு

சோலை இளம் காற்றைச் சுவைப்பதற்கு

நேரம் இல்லை.

 

விமர்சனம் என்றில்லை; கலைவாணர்

என்.எஸ். கிருஷ்ணன், காருகுறிச்சி அருணாசலம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், நேரு முதலான ஆளுமைகள் மறைந்தபோது, அவர் எழுதிய இரங்கற்பாக்கள் படிக்கும்போது கண்கசிய வைத்துவிடும். அது மட்டுமல்ல, தான் இறப்பதற்கு முன்பு தனக்கே இரங்கற்பா பாடியவர் அவர்:

 

போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்

என்றவன்வாய் புகன்ற தில்லை;

சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்

என்றவன்வாய் சாற்ற வில்லை;

கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்

படுத்தவனைக் குவித்துப் போட்டு

ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும்

அவன்பாட்டை எழுந்து பாடு!

 

வண்டல் நடை

கவிதை ஒரு வகை சுகம் என்றால், கவிஞரின் உரைநடை, காவேரி வண்டல்போல வளமானது. அவருடைய புஷ்பமாலிகாவும், ஞானமாலிகாவும் உரைநடையில் சிறப்பம்சம் கொண்டவை. திமுகவிலிருந்து விலகுவதற்கு முன், ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் ‘தனியரசு’ பத்திரிகையில் எழுதிய ‘போய்வருகிறேன்’ கட்டுரை மறக்க முடியாதது. அதே போலத்தான் பைபிள் நடையின் சாயலில் அவர் எழுதியுள்ள இன்னொரு கட்டுரையும்.

 

அடுத்த வரி என்ன?

திருநெல்வேலியில் ‘கிழக்கே போகும் ரயில்’ படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்; நானும் நண்பர் சுப்பு. அரங்கநாதனும். ‘கோயில் மணியோசைதனைக் கேட்டதாரோ?’ என்ற வரியைத் தொடர்ந்து என்ன வரி வரும் என்று எதிர்பார்ப்பு. ‘கோயில் மணியோசைதனைச் செய்ததாரோ?’ என்று அடுத்த வரி வந்தது; மலைத்துப்போனோம். இரண்டு நாட்களுக்கு முன்புகூட ஒரு தொலைக்காட்சியில், ‘சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை/ ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை’ என்ற வரிகளை நடிகர் திலகம் பாடக் கேட்டதும் கண்ணில் ஏன் நீர் துளிர்த்தது?

 

‘பாடல் ஒரு கோடி செய்தேன் / கேட்டவர்க்கு ஞானம் இல்லை’ என்ற வரிகளை ‘கவிமூலம்’ கட்டுரை

ஒன்றின் முகப்பில் மேற்கோளாகக் காட்டியிருப்பேன். திரையிசைப் பாடல் உலகின் சாம்ராட் அவர்.

 

இன்றைக்கும் நான் வீட்டில் நல்ல மனநிலையில் இருக்கும்போது காலையில் குளித்துவிட்டு வந்து, தலைகாயக் காற்றாடியைச் சுழல விட்டுவிட்டுப் பாடுகிற வரிகள் இவை:

கண்கள் இரண்டும் என்று

உம்மைக் கண்டு பேசுமோ

காலம் இனி மேல் நம்மை

ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ?

(மன்னாதி மன்னன்)

சிருங்காரத்தின் தலைவன்

‘மலர்கள் நனைந்தன பனியாலே/ என் மனமும் குளிர்ந்தது நினைவாலே’ என்று ஆரம்பமாகும் பாடலில் ஓரிடத்தில் இப்படி வரும்:

சேர்ந்து மகிழ்ந்து போராடி

தலைசீவி முடிக்க நீராடி

கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி

 

பட்ட காயத்தைச் சொன்னது கண்ணாடி.

இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞர்களிலேயே சிருங்கார ரசத்தைக் கண்ணதாசன் அளவுக்கு வடிவாகச் சொன்னவர் வேறு யாரும் இல்லை; அதனால்தான் கண்ணதாசனிடம் இப்படிச் சொக்கிக்கிடக்கின்றேனோ என்று தோன்றுகிறது.

- விக்ரமாதித்யன், கவிஞர்,

 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/article6507842.ece?homepage=true&theme=true

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

அறிஞர் அண்ணாவுடன் அரசியலில் முரண்பாடு பிரிந்து விட்டார்.ஆனால் இருவரும் பத்திரிகைகளில் இலைமறைகாயாக சுகம் விசாரித்துக் கொள்வார்கள். ஒருமுறை அண்ணாவுக்கு சுகவீனம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்பொழுது எழுதிய பாடல் காதல் பாடலில் சுகம் விசாரிப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10441037_584504991674965_758533937209639

 

கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை !

உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.அப்போத அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ்

பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார்.அக்கவிதையே அக்கவி எழுதிய கடைசி கவிதை.

மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -

இங்கு மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்

தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற

தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை !

 
FB

 —

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கே ஒரு கவிஞன் இரங்கற்பா பாடிக்கொண்ட புதுமையைச் செய்தவர் கவியரசு கண்ணதாசன்...

பாரியொடும் கொடைபோகப் பார்த்தனொடும்
கணைபோகப் படர்ந்த வல்வில்
ஓரியொடும் அறம்போக உலகமறை
வள்ளுவனோ டுரையும் போக
வாரிநறுங் குழல்சூடும் மனைவியொடும்
சுவைபோக, மன்னன் செந்தீ
மாரியொடுந் தமிழ்போன வல்வினையை
என்சொல்லி வருந்து வேனே!

தேனார்செந் தமிழமுதைத் திகட்டாமல்
செய்தவன்மெய் தீயில் வேக,
போனாற்போ கட்டுமெனப் பொழிந்ததிரு
வாய்தீயிற் புகைந்து போக,
மானார்தம் முத்தமொடும் மதுக்கோப்பை
மாந்தியவன் மறைந்து போக,
தானேஎந் தமிழினிமேல் தடம்பார்த்துப்
போகுமிடம் தனிமை தானே!

பாட்டெழுதிப் பொருள்செய்தான் பரிதாபத்
தாலதனைப் பாழுஞ் செய்தான்;
கேட்டழுத பிள்ளைக்கோர் சிறுகோடும்
கீறாமற் கிளைமு றித்தான்;
நாட்டழுகை கேளாமல் நந்துயரும்
காணாமல் நமனெனும்பேய்
சீட்டெழுதி அவன் ஆவி திருடியதை
எம்மொழி யாற்செப்பு வேனே!

பொய்யரையும் இசைபாடிப் புல்லரையும்
சீர்பாடிப் புகழ்ந்த வாயால்,
மெய்யரையும் வசைபாடி வேசையையும்
இசைபாடி விரித்த பாவி,
கையரையும் காசின்றிக் கடைநாளில்
கட்டையிலே கவிழ்ந்த தெல்லாம்
பொய்யுரையாய்ப் போகாதோ புத்தாவி
கொண்டவன் தான் புறப்ப டானோ!

வாக்குரிமை கொண்டானை வழக்குரிமை
கொண்டானை வாத மன்றில்
தாக்குரிமை கொண்டானைத் தமிழுரிமை
கொண்டானைத் தமிழ் விளைத்த
நாக்குரிமை கொண்டானை நமதுரிமை
என்றந்த நமனும் வாங்கிப்
போக்குரிமை கொண்டானே! போயுரிமை
நாம்கேட்டால் பொருள்செய் யானோ!

கட்டியதோர் திருவாயிற் காற்பணமும்
பச்சரிசி களைந்தும் போட்டு
வெட்டியதோர் கட்டையினில் களிமண்ணால்
வீடொன்றும் விரைந்து கட்டி
முட்டியுடைத் தொருபிள்ளை முன்செல்லத்
தீக்காம்பு முனைந்து நிற்கக்
கொட்டியசெந் தமிழந்தக் கொழுந்தினிலும்
பூப்பூத்த கோல மென்னே!

போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்
என்றவன்வாய் புகன்ற தில்லை;
சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்
என்றவன்வாய் சாற்ற வில்லை;
கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்
படுத்தவனைக் குவித்துப் போட்டு
ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும்
அவன்பாட்டை எழுந்து பாடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.