Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விகடன் தாத்தாவா? காந்தி தாத்தாவா?

Featured Replies

 

விகடன் தாத்தாவா? காந்தி தாத்தாவா?

 

விகடன் குழும சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் (28.12.1935 – 19.12.2014) அவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் பாக்கியவான்கள். அப்படியொரு மகோன்னத மனிதர் அவர். எங்கோ குக்கிராமத்தில், நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, கடையில் தொங்கும் ஆனந்த விகடன் பிரதிகளை அண்ணாந்து பார்த்து வியந்த சிறு துரும்பு நான். பின்னாளில் ஆனந்த விகடனில் பணியில் சேருவேன், அவரைச் சந்திப்பேன், பழகுவேன், அவரின் அபிமானத்தைப் பெறுவேன் என்றெல்லாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத நிலையில் இருந்தவன். அவரோடு பழகக் கிடைத்த வாய்ப்பால் ஆசீர்வதிக்கப்பட்டவனானேன். 

இன்று அவரின் முதலாண்டு நினைவு நாள். அவரைப் பற்றி எழுத விரும்புகிறேன். எழுத வேண்டும். எழுத எத்தனையோ உண்டு. ஒரு கட்டுரைக்குள் அடக்கிவிட முடியாது. தொடர் பதிவுகளாக எழுத வேண்டும். எங்கிருந்து தொடங்கலாம்? 

என் சிறு வயதிலிருந்தே தொடங்குகிறேன்.

விழுப்புரத்துக்கு அருகில் 10 கி.மீ தொலைவில் உள்ள காணை என்னும் கிராமத்திலிருந்துதான் என் நினைவுகள் தொடங்குகின்றன. நான்காம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரை அங்குதான் படித்தேன். பின்பு எட்டாம் வகுப்பிலிருந்து விழுப்புரம் மகாத்மா காந்தி உயர்நிலைப்பள்ளியில்!

காணை கிராமத்தில் வசித்தபோது, எங்கள் அப்பா தவறாமல் ஆனந்த விகடன் பத்திரிகை வாங்குவார். சௌந்தரம்மாள் என்னும் சக டீச்சர் வீட்டில் குமுதம் வாங்குவார்கள். எங்கள் வீட்டார் ஆனந்த விகடன் படித்து முடித்ததும் அதைக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் கொடுத்துவிட்டு, அவர்களிடமிருந்து குமுதம் பத்திரிகையை வாங்கி வந்து எங்கள் வீட்டில் தருவேன். இது வாரா வாரம் நடக்கும்.

அப்போதெல்லாம் நான் விகடனில் கதை, கட்டுரை எதுவும் படித்தது கிடையாது. ஜோக்ஸ் மட்டுமே படிப்பேன். சுருக்கமாக நாலைந்து வரிகளில் இருப்பதால்! வேடிக்கை என்னவென்றால், அது ஜோக், அதைப் படித்துச் சிரிக்க வேண்டும் என்கிற விஷயம் கூட எனக்குத் தெரியாது. அதில் உள்ள நுணுக்கம் எனக்குப் புரியாது. ஒரு தகவலாகவே அதைப் படிப்பேன். நான்காம் வகுப்பில் அவ்வளவுதான் என் ஞானம்.

உதாரணமாக, அந்தக் காலத்தில் விகடனில் நான் படித்த ஒரு ஜோக் சொல்கிறேன். மிருகக்காட்சிசாலையைப் பார்வையிட்டுக்கொண்டு இருப்பார்கள் ஒரு குடும்பத்தார். ஒரு கூண்டில் உள்ள நரியைப் பார்த்து, “இது என்ன நரி அப்பா?” என்று கேட்பான் பையன். “குள்ளநரி” என்பார் அப்பா. அடுத்த கூண்டில் உள்ள நரியைக் காட்டி, “இது என்ன நரிப்பா?” என்பான் பையன். “இது ஆர்டினரி” என்பார் அப்பா.

இதில் உள்ள நகைச்சுவை நுட்பம் புரியாமல் ஒரு தகவலாகப் படித்தது இன்னமும் எனக்கு நினைவு இருக்கிறது.

அடுத்தடுத்த வருடங்களில் என் அறிவு கொஞ்சம் மேம்பட்டது. நகைச்சுவைத் துணுக்கைப் படித்தால் சிரிக்கவேண்டும் என்று தோன்றியது. அதில் உள்ள நகைச்சுவை அம்சம் என்னவென்று புரிபட ஆரம்பித்தது.

 அந்நாளில் விகடனில் படித்த இன்னொரு ஜோக்... கணவன் கையில் ஒரு காகிதம். அதில் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு மனைவியிடம் சொல்கிறான்... “இது நீ எழுதிய ஜோக்கா? யார் கிட்டேயும் காட்டாதே! சிரிக்கப் போறாங்க!”

அந்த வயசில், இந்த ஜோக்கில் உள்ள நகைச்சுவை எனக்குப் புரிந்தது ஆச்சரியம்தான்! ஆனால், அதற்குக் காரணம் என் அப்பா. அவர் ஜோக்கை விவரித்துச் சொல்வார். முதலில் என்னைப் படிக்கச் சொல்வார். அதில் என்ன புரிந்தது என்று கேட்பார். பின்பு அதில் உள்ள நகைச்சுவை அம்சத்தை விளக்குவார். இப்படியாக பத்திரிகை படிக்கும் ஆர்வத்தை எனக்குள் தூண்டியவர் என் அப்பா. பத்திரிகை என்றால், அந்நாளில் எனக்கு ஆனந்த விகடன் மட்டுமே! இரவலாக குமுதம் வாங்கி வருவேனே தவிர, அதைப் படித்ததாக நினைவு இல்லை. குமுதத்தில் சில அட்டைப்படங்கள் மட்டும் நினைவு இருக்க்கிறது. குமுதத்தின் அட்டைப் படங்கள் புதுமையாக இருக்கும். சர்க்கஸில் கூண்டுக்குள் வீரர்கள் மோட்டார்பைக் ஓட்டி சாகசம் செய்யும் படம், பிரமாண்ட யானையின் முகம் குளோசப்பில்... இப்படியான படங்கள் ரசனையாக இருக்கும். ஒரு முதலை ’ஆ’வென்று வாயைப் பிளந்திருக்கும் படம் ஒருமுறை டைட் குளோசப்பில் குமுதத்தில் வெளியானது இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது. குமுதத்தில் வெளியாகும் பாக்கியம் ராமசாமியின் ‘அப்புசாமி-சீதாப்பாட்டி’ தொடர்கதையை அப்பாவும் அம்மாவும் ஆர்வத்தோடு வாசிப்பார்கள்.

எனக்கு ஆனந்த விகடன் ஜோக்ஸ் மட்டும்தான்! பின்பு, படிப்படியாக தொடர்கதைகளும் படிக்க ஆரம்பித்தேன். 

அந்நாளில் பூவண்ணன் எழுதிய ‘ஆலம்விழுது’ என்னும் தொடர்கதை விகடனில் வெளியானது. ஒரு சிறுவன் தன் அப்பா தனக்கு அது வாங்கித் தரவில்லை, இது வாங்கித் தரவில்லை என்று குறைப்படுகிறான். அப்பா அவனிடமே தன் சம்பளம் மொத்தத்தையும் கொடுத்து, குடும்பத்தை அவனையே நிர்வகிக்கச் சொல்லுகிறார். அந்த அனுபவம் அந்தச் சிறுவனைப் பக்குவப்படுத்துகிறது என்பது தொடர்கதையின் அடிப்படைக் கரு.

அப்பா என்னை இந்தத் தொடர்கதையைப் படிக்கச் சொன்னார். வாரா வாரம் தவறாமல் படிப்பேன். பின்பு, நான் படித்ததை கதையாகச் சொல்லச் சொல்லுவார் அப்பா. மனப்பாடம் செய்யவில்லை என்றாலும், கதை ஒரு புள்ளி பிசகாமல் என் நினைவில் இருக்கும். தடம் மாறாமல் சொல்லுவேன். அப்பா கொடுத்த இந்த அடிப்படைப் பயிற்சிதான் பின்னாளில் என்னை எழுத்தாளனாக, பத்திரிகையாளனாக மாற்றியது என்றால் மிகையில்லை.

அந்தத் தொடர்கதையைப் படித்தபின்பு, என் அப்பாவிடம் நான் அந்தச் சிறுவன் போல் குடும்பத்தை நிர்வகிக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அப்பா என்னிடம் ஒரு தொகை கொடுத்து, ஒரு பெட்டிக் கடை வைத்து நடத்தச் சொன்னார். நிஜமாகவே ஒரு டிரங்க் பெட்டிக்குள் கடை.

முதலில் அப்பாவும் நானும் போய் விழுப்புரத்திலிருந்து பேனா, பென்சில், குயர் கணக்கில் வெள்ளைப் பேப்பர், ரூல்டு பேப்பர், அரையடி, ஓரடி ஸ்கேல்கள், நாற்பது பக்க நோட், எண்பது பக்க நோட் என ஸ்டேஷனரி அயிட்டங்களாக வாங்கி வந்து டிரங்க் பெட்டியில் அடுக்கினோம். ஒவ்வொன்றின் விலையிலும் சில பைசாக்கள் அதிகம் வைத்து அதை என் பள்ளி மாணவர்களிடம் விற்பேன். போகப் போக, எது அதிகம் விற்பனையாகிறது என்று பார்த்து, அதை நிறைய அளவில் வாங்கி வந்து டிரங்க் பெட்டிக்குள் அடுக்குவேன். தவிர, என் பிசினஸ் அறிவு கொஞ்சம் மேம்பட, விழுப்புரத்தில் சுவாரஸ்யமாகக் கண்களில் படும் பொருள்களை வாங்கி வந்து, சக மாணவர்களிடம் ஆசை காட்டி விற்க ஆரம்பித்தேன். கோகோகோலா பாட்டில் போன்ற வடிவத்தில் ஓரங்குல உயர குட்டிப் பேனா, இப்படித் திருப்பினால் முருகர், அப்படித் திருப்பினால் பிள்ளையார் வடிவங்கள் தோன்றும் டாலர், ஸ்பிரிங் வளையல் என அப்போதைக்கு எது டிரெண்டாகத் தெரிகிறதோ அதை வாங்கி வந்து, என் பள்ளி மாணவர்களிடம் கூடுதல் விலை வைத்து விற்று, லாபக் கணக்கு வழக்கு பார்ப்பேன்.

 

ஆக, ஒரு தொடர்கதை என்னை அந்தச் சிறு வயதில் பிசினஸ்மேனாக்கிவிட்டது!

ஆலம்விழுது தவிர, நான் விகடனில் ரசித்துப் படித்த மற்றொரு தொடர்கதை தேக்கடி ராஜா. தேக்கடிக்கு சுற்றுலா சென்ற ஒரு சிறுவனும் சிறுமியும் அங்கே காட்டில் சிக்கிக்கொண்டு படும் அவதிகளும் அனுபவங்களும்தான் கதை என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. ஆனால்,  ஒரு யானை பிரமாண்டமாக நிற்க, அதன் காலடியில் சிறுவனும் சிறுமியும் பீதியுடன் ஓடுகிற மாதிரியான படம் மட்டும் ஞாபகத்தில் உள்ளது. துரத்தும் யானையிடமிருந்து தப்பிக்க அதன் சாணத்தை எடுத்துத் தலையில், உடம்பில் பூசிக்கொண்டு படுத்துவிடுவான் சிறுவன் என்கிற ஒரு தகவல் மட்டும் அந்தக் கதையில் படித்தது நினைவில் உள்ளது.

கடையிலிருந்து ஆனந்த விகடன் வாங்கி வரச் செல்லுவேன். அப்போது, கடையின் முகப்பில் உள்ள கருநீல நிற விளம்பரப் பலகையில் ‘இந்த வாரம் ஆனந்த விகடன் வாசித்தீர்களா?’ என்கிற எழுத்துக்களோடு விகடன் தாத்தா சிரிக்கும் படம் இருக்கும். நான் வெகு காலம் விகடன் தாத்தாவை காந்தி தாத்தா என்றே நினைத்துக்கொண்டிருந்தேன்.

விகடனில் நான் பணியில் சேர்ந்து பத்தாண்டுகளுக்குப் பின்னர், சேர்மன் பாலசுப்ரமணியன் கொஞ்சம் கொஞ்சமாக விகடனிலிருந்து விலகத் தொடங்கியிருந்தார். விகடனில் பத்தாண்டுகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கு விருதும் சான்றிதழும் அளித்துக் கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் சேர்மன் பாலசுப்ரமணியன் அவர்களிடமிருந்து பத்தாண்டு விருதை அவர் கையால் வாங்கப் பெற்ற கடைசி செட் அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன்.

அந்தக் காலகட்டத்தில், விரைவில் சேர்மன் விகடன் குழுமத்தை விட்டு முற்றிலுமாக ஒதுங்கிவிட உத்தேசித்துள்ளார் என்பதை அறிந்த நிலையில், நான் அவருக்கு ஒரு நீண்ட கடிதம் கம்போஸ் செய்து, அவர் மேஜையில் வைத்துவிட்டு வந்தேன். அதன் சாராம்சம் வேறொன்றுமில்லை. மேலே இந்தப் பதிவில் சொன்ன அத்தனையும்தான்! சின்ன வயதிலிருந்தே எப்படி விகடனை நான் படித்து வருகிறேன், ரசித்து வருகிறேன் என்பதை விவரித்து, மேலே சொன்ன இத்தனைத் தகவல்களோடும், இன்னும் கூடுதலாக சில விஷயங்கள் சேர்த்தும் என் கடிதத்தில் எழுதியிருந்தேன். சென்னை வந்து செட்டிலான ஆண்டில், அதாவது 1984-ல் ஆனந்த விகடனில் பணியில் சேர விரும்பி விண்ணப்பம் அனுப்பியதும், அப்போது நான் தேர்வு செய்யப்படாமல் ஆம்ப்ரோ பிஸ்கட் கம்பெனி வேலையில் சேர்ந்ததும், அங்கே இரண்டு ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டு, சாவி பத்திரிகையில் வாய்ப்பு கிடைக்க, அங்கே போய் சேர்ந்து 1995 வரை பணியாற்றியதும், சாவி பத்திரிகையை சார் ஒரு கோபத்தில் மூடியதும், மீண்டும் விகடனில் பணியில் சேர முயன்று விண்ணப்பம் அனுப்பியதும், இந்த முறை என் விண்ணப்பம் ஏற்கப்பட்டு பணியில் சேர்ந்ததும் என ‘விகடனும் நானும்’ என்கிற ஒரு முழுச் சரித்திரத்தையே அதில் சொல்லியிருந்தேன். மொத்தம் 10 தாள்களுக்கு மேல் பிரிண்ட் எடுத்ததாக ஞாபகம்.

அந்தக் கடிதத்தை ஒரு கவரில் போட்டு, மேலே ஒரு துண்டுச் சீட்டில் சிறு குறிப்பாக, “சார், வணக்கம். இது சற்று நீளமான கடிதம். தாங்கள் இதை உடனே படிக்க வேண்டும் என்பதில்லை. தவிர, உங்களின் பொன்னான நேரத்தை இந்தக் கடிதத்தின் மூலம் வீணடிக்கவும் எனக்கு விருப்பமில்லை. எனவே, இதை நீங்கள் படிக்கவே இல்லை என்றாலும், நான் வருத்தப்பட மாட்டேன். கடவுளுக்குப் படைக்கும் நைவேத்தியப் பொருளை அவர் எடுத்து உண்கிறாரா, இல்லையா என்பது பற்றி பக்தன் கவலைப்பட மாட்டான். கடவுளுக்குப் படைத்தாகிவிட்டது என்கிற மனத் திருப்தி மட்டுமே அவனுக்குப் போதுமானது. அந்த நிலையில்தான் நானும் இருக்கிறேன். ஏதோ, தங்களிடம் மனம் விட்டுச் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. எழுதிவிட்டேன். மற்றபடி வேறு ஒன்றுமில்லை” என்று எழுதி, கையெழுத்துப் போட்டு வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அட்டெண்டர் பெருமாள் என்னிடம் வந்து, “சார் உங்களை அழைத்து வரச் சொன்னார்” என்றார். ஓடினேன்.

உள்ளே அவர் அறைக்குள் நுழைந்தேன். நாற்காலியில் அமர்ந்திருந்த அவரின் கைகளில் என் கடிதம் படபடத்துக்கொண்டிருந்தது. நான் உள்ளே நுழைந்ததும், “ரவிபிரகாஷ்...!” என்று பாசமும் நேசமும் நெகிழ்ச்சியும் ஆனந்தமும் அழுகையுமாகக் கதறியபடி எழுந்து வந்து என்னை இறுக அணைத்துக்கொண்டார். “உங்களை மாதிரியானவங்களோட இந்த அன்பும் இந்த வாஞ்சையும்தான் ரவி எனக்குப் பெரிய சொத்து!” என்று அழுகையில் தழுதழுத்தார். 

சேர்மனின் இந்த முகம் எனக்குப் புதியது. அதுவரை அவரை ஒரு கண்டிப்பான ஆசிரியராக, கறாரான பத்திரிகையாளராக, கனிவான முதலாளியாக மட்டுமே பார்த்திருந்த நான், அவரை என் கடிதம் இத்தனை தூரம் நெகிழ்த்தி கண்கலங்கச் செய்துவிடும் என்று தெரியாததால், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் சற்று நேரம் பேச்சு வராமல் விக்கித்து நின்றேன். பின்னர் தடாலென்று அவரின் கால்களில் விழுந்து “என்னை ஆசீர்வதியுங்கள் சார்!” என்றேன். நானுமே உணர்ச்சியின் பிடியில் இருந்தேன்.

அதுவே அவருடனான எனது நெருக்கமான கடைசி சந்திப்பு. அதன்பின் சில முறை அவரை திருமண விழா, பாராட்டு விழா போன்றவற்றில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று சந்தித்துப் பேசிவிட்டு வந்துள்ளேன்.

சில ஆண்டுகளுக்கு முன், அவர் கோயமுத்தூரில் உடல் நலமின்றி இருக்கிறார் என்று கேள்விப்பட்டு, அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உடனே வந்து பார்க்க விரும்புகிறேன்” என்றேன். “வேண்டாம். நானே இன்னும் சில நாளில் சென்னை வந்துவிடுவேன். அப்போது வந்து சந்தியுங்கள்” என்றார்.

அவரின் மகள் திருமண வரவேற்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். கல்யாணக் கூட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாகப் பார்த்துவிட்டு வந்தேன். பின்னர் தனியாக ஒருமுறை அவரின் வீட்டுக்குச் சென்று பார்த்து, ஒரு மணி நேரமாகிலும் பேசிவிட்டு வரவேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

அவர் எங்கே போய்விடப் போகிறார், நான் எங்கே போய்விடப் போகிறேன்... நாளை பார்த்துக்கொள்ளலாம், அடுத்த வாரம் போய்ப் பார்க்கலாம் என்று நாளைக் கடத்திக்கொண்டே இருந்துவிட்டேன்.

அதற்குள் அவரைக் காலம் கடத்திக்கொண்டு போய்விட்டது!

 



(இன்னும் சொல்வேன்) 

 

 

 

2)

விகடனில் முதல் நாள்..!

 

s.balu.jpg
 
னந்த விகடன் எனும் கோட்டைக்குள் நுழைந்து, பெரியவர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களைச் சந்தித்ததை நினைவுகூர்கிறேன். 

அதற்கு முன் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்! ஆனந்த விகடன் பொன்விழா கொண்டாடிய நேரத்தில் நான் சென்னை வந்திருந்தேன். 1980, நவம்பர் மாதத்தில், மூன்று நாள் விழா நடந்தது. கிராமத்திலேயே பிறந்து வளர்ந்திருந்தபடியால், மிகுந்த கூச்ச சுபாவத்துடன் இருந்த நான், ஆர்வம் இருந்தும் விழாவில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டேன். ஆனால், விழா பற்றிய செய்திகளை ஆனந்த விகடனில் படித்து மகிழ்ந்தேன். ஆனந்த விகடனில் வேலைக்குச் சேர வேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளத்தில் வலுவாக எழுந்தது. ஆனாலும் உள்ளூர ஏதோ பயம்; தயக்கம்!

இந்நிலையில், ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, எந்தத் திட்டமும் இல்லாமல், ஒருநாள் கிளம்பி ஆனந்த விகடன் அலுவலகம் போனேன். இப்போதுள்ள அதே இடம்தான்! ஆனால், அப்போது விகடன் அலுவலகத்தின் முன்னால் எந்தக் கட்டடமும் இல்லை. மவுன்ட் ரோடிலிருந்து பார்த்தாலே விகடன் ஆபீஸ் தனியாகத் தெரியும். ’ஆனந்த விகடன்’ என மிக நீளமான போர்டு கண்ணில் படும். உள்ளே போக, வெளியே வர என இரண்டு ‘கேட்’டுகள்! 

உள்ளே போனேன். கீழே, வரவேற்பாளர் ஒருவர் டைப்ரைட்டிங் மெஷினோடு உட்கார்ந்திருந்தார். நான் போனதும் தடுத்து நிறுத்தி, “யாரைப் பார்க்கணும்?” என்றார். “ஆசிரியரை” என்றேன்.  “அப்பாயின்ட்மென்ட் இருக்கா?” என்றார். “இல்லை” என்றேன். “எதற்காகப் பார்க்கணும்?” என்றார். “வேலை கேட்கலாம்னு...” என்று இழுத்தேன். ”அப்படி உட்கார்ந்து அப்ளிகேஷன் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க. வீட்டுக்கு லெட்டர் வரும். அப்புறம் வந்து பாருங்க” என்றார். நான் பேப்பர், பேனா எதுவும் கொண்டு போயிருக்கவில்லை. அதனால், “சரி சார், நாளைக்கு வந்து பார்க்கிறேன்” என்று சொல்லி, விடைபெற்று வந்துவிட்டேன்.

அதற்கப்புறம் ஒரு மூன்று வருடம் பாண்டிச்சேரி வாசம், விழுப்புரத்தில் சொஸைட்டி ஆபீசில் வேலை, காணையில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் நடத்தியது எனப் பலவிதமாகக் கழிந்தது.

கிராமத்தில் குப்பை கொட்டிக்கொண்டிருந்தது போதும்; சென்னை வந்து செட்டிலாகி, ஏதேனும் வேலை தேடிக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து, 1984-ம் ஆண்டு, காணை கிராமத்திலிருந்து நானும் என் தம்பியுமாகக் கிளம்பி, மாத வாடகை ரூ.100/-க்கு சென்னை எம்.ஜி.ஆர். நகரில், வள்ளலார் தெருவில் ஓர் இடம் பார்த்துக் குடியேறினோம். உடனே, ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர் எனப் பல பத்திரிகைகளில் அதுவரை வெளியாகியிருந்த என் சிறுகதைகளை ஜெராக்ஸ் எடுத்து இணைத்து, ஆனந்த விகடனில் வேலைக்கு விண்ணப்பித்தேன். அடுத்த சில நாள்களில், ‘தற்சமயம் தங்களுக்குப் பொருத்தமான வேலை எதுவும் காலி இல்லாததால், தங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலிக்க இயலவில்லை’ என விகடனிலிருந்து பதில் வந்தது.
 
அதன்பின், நண்பர் மார்க்கபந்து மூலம் ‘ஆம்ப்ரோ’ பிஸ்கட் கம்பெனியில் சேர்ந்ததும், பின்னர் எழுத்தாளர் புஷ்பாதங்கதுரையின் சிபாரிசில் 1987-ம் ஆண்டு ‘சாவி’ பத்திரிகையில் சேர்ந்ததும் தனிக் கதை.

1995 மார்ச் இறுதியில் சாவி பத்திரிகை நிறுத்தப்பட்டதும், ஓர் அரைப் பக்கத் தாளில், எந்த மேலதிக விவரமும் இல்லாமல், ‘சாவி பத்திரிகையில் பணியாற்றினேன். பத்திரிகை இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. தங்களிடம் பணியாற்ற விரும்புகிறேன்’ என்று ஆனந்த விகடனுக்குச் சிக்கனமாக இரண்டே வரிகளில் விண்ணப்பம் எழுதிப் போட்டேன். மேலும், குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி-யும், அப்போது அதன் ஆசிரியராக இருந்த  சுஜாதாவும் முன்பு வாக்களித்ததை மனதில் கொண்டு, அங்கேயும் ஒரு அப்ளிகேஷன் தட்டிவிட்டேன். 

இதனிடையில், ஓவியர் அரஸ் சிபாரிசின்பேரில், அன்றைய உள்துறைச் செயலர் நாகராஜன் புதிதாகத் தொடங்கியிருந்த சுதேசமித்திரன் நாளேட்டில் (அப்போது சுதாங்கன் அதற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்தார்.) போய் வேலைக்கும் சேர்ந்துவிட்டேன். அந்தப் பத்திரிகை தொடர்ந்து வெளிவராது என, அங்கு சேர்ந்த மூன்றாம் நாளே என் உள்ளுணர்வு சொல்லியதால், வேலையிலிருந்து நின்றுவிட்டேன்.

குமுதத்திலிருந்து (சுஜாதாவிடமிருந்து) அழைப்பு வந்தது. போனேன். ‘இங்கே சப்-எடிட்டர் வொர்க் மாதிரி தற்சமயம் எதுவும் இல்லை. கொஞ்ச நாள் ரிப்போர்ட்டரா இருங்க. சமயம் வந்ததும் சப்-எடிட்டராகலாம்’ என்றார். மறுத்துவிட்டு வந்துவிட்டேன்.

மறுநாள் காலையில், ஓவியர் அரஸ்ஸுக்கு போன் செய்து, நான் சுதேசமித்திரனிலிருந்து விலகிவிட்ட தகவலைச் சொன்னேன். “அதிருக்கட்டும்... விகடனுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கீங்களா?” என்றார். “ஆமாம்” என்றேன். “உடனே வந்து, இங்கே ராவ் சாரைப் பாருங்க” என்றார்.

அன்றைக்கே போனேன். ஓவியர் அரஸ் அனுப்பியதாகச் சொல்லி, ராவ் சாரைப் பார்க்க வேண்டும் என்றேன். அவர் வந்திருக்கவில்லை. காத்திருந்த நேரத்தில் வீயெஸ்வி சார் அழைப்பதாகத் தகவல் வந்தது. மேலே படியேறி, விகடன் எடிட்டோரியலுக்குப் போனேன். வீயெஸ்வி சாரின் தனியறைக்கு வழிநடத்தப்பட்டேன்.

நேர்முகத் தேர்வு மாதிரி இல்லாமல், சாவியில் நான் என்ன பண்ணிக்கொண்டு இருந்தேன், சாவி எப்படிப்பட்டவர் என்று பொதுவான கேள்விகளையே அவர் கேட்டார். நானும் யதார்த்தமாகப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன். இதற்குள் ராவ் சார் வந்துவிட, அவர் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார் வீயெஸ்வி.

ராவ் என்னைக் கேட்ட ஒரே கேள்வி... “அரஸ் உங்களுக்கு ரொம்ப ஃப்ரெண்டா?”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குக் குழப்பமாக இருந்தது. ஃப்ரெண்டுதான் என்று சொன்னால், சிபாரிசுக்கு இங்கே இடமில்லை என்று சொல்லி மறுத்துவிடுவார்களா அல்லது அவர் இங்கே எனக்கு பலமாக சிபாரிசு செய்திருந்து, ‘ஃப்ரெண்டெல்லாம் இல்லை. தெரியும்’ என்று பட்டும்படாமல் சொல்லி வைக்கப்போக, அதனால் வாய்ப்பு நழுவிவிடுமா என்று குழப்பமாக இருந்தது. ‘இதைச் சொல்லலாமா, அதைச் சொல்லலாமா என்று குழப்பம் வந்தால், எது உண்மையோ அதைச் சொல்லிவிடுவதே மேல்’ என்று ஒரு பொன்மொழி உள்ளது. அதன்படி செயல்பட்டு, “ஆமாம். நல்ல நண்பர். பத்திரிகை ரீதியாகப் பழக்கம்” என்றேன்.

பின்னர், நாங்கள் மூவருமாய் ஆசிரியர் பாலசுப்ரமணியனின் அறைக்குள் போனோம். சாவி சாரை முதன்முதல் பார்த்தபோது உண்டான அதே உதறல் இவர் முன்பும் எனக்கு ஏற்பட்டது. “வாங்கோ... உக்காருங்கோ!” என்றார் எங்கள் மூவரையும்.

வீயெஸ்வி என்னை ஆசிரியருக்கு “சாவியிலிருந்து வந்திருக்கார். ரவிபிரகாஷ்” என்று சுருக்கமாக அறிமுகப்படுத்த, “அப்ளிகேஷன் பார்த்தேன். எங்க கிட்டேர்ந்து பதில் வரதுக்குள்ள குமுதத்துக்குப் போயிருக்கீங்க. சுதேசமித்திரன்ல சேர்ந்திருக்கீங்க. ஏன் இந்த அவசரம்?” என்றார் ஆசிரியர் எடுத்த எடுப்பில்.

“இங்கே நிச்சயம் வேலை கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை. நாலு இடத்துல கல் விட்டுப் பார்த்தா ஏதாவது ஒரு காய் விழாதாங்கிற நப்பாசைதான்! திடீர்னு சாவி பத்திரிகை மூடப்பட்டதும், நடுக்கடல்ல விழுந்து தத்தளிக்கிற மாதிரி ஓர் உணர்வு. அவசரத்துக்கு எந்தக் கட்டையாவது கிடைக்காதா பிடிச்சுக்கன்னு அலைபாய்ஞ்சேன். அதான்..!” என்றேன்.

“குமுதத்துல ஏன் சேரலை?” என்றார்.

“எனக்கு ரிப்போர்ட்டிங் வராது. தெரியாது. அரசியல்வாதிங்க கிட்டேயும், சினிமாக்காரங்க கிட்டேயும் பேட்டிக்காகக் காத்திருக்க எனக்குப் பிடிக்காது. சாவியிலும் நான் ரிப்போர்ட்டிங் பண்ணினதில்லை. டெஸ்க் வொர்க்தான். ஆனா, குமுதத்துலே என்னை ரிப்போர்ட்டரா இருக்கச் சொன்னாங்க. அதான் வேண்டாம்னு வந்துட்டேன்!”

“விகடனைப் பொறுத்தவரைக்கும் நிருபர்களுக்குப் பஞ்சமில்லே. டெஸ்க் வொர்க் பண்ணத்தான் ஆளில்லை. நீங்க சாவி கிட்டே எட்டு வருஷம் வேலை பார்த்திருக்கீங்க. அதை விடப் பெரிய தகுதி வேண்டியதில்லை. நீங்க இங்கே ஜாயின் பண்ணலாம். ஆனா, முதல்ல கான்ட்ராக்ட்லதான் வேலை செய்யணும். அதான் இங்கே முறை. கான்ட்ராக்ட்ல வேலை செய்யறப்போ உங்களுக்கு விகடனைப் பிடிக்கணும்; விகடனுக்கு உங்களைப் பிடிக்கணும்.பரஸ்பரம் திருப்தி இல்லேன்னா விலகிக்கலாம். கான்ட்ராக்ட் முடிஞ்சு சில மாசமோ, சில வருஷமோ புரொபேஷன் பீரியட் இருக்கும்! அதுக்கப்புறம்தான் உங்க வேலை நிரந்தரமாகும்.  நீங்க நல்லா வேலை செய்வீங்க. அதுல எனக்குச் சந்தேகமில்லே. ஆனா, அங்கே நீங்க தனியாளா ஒரு பத்திரிகையைப் பார்த்து, சுதந்திரமா முடிவெடுத்துப் பழக்கப்பட்டிருக்கீங்க. உங்களுக்கு மேலே சாவி மட்டும்தான்! இங்கே அப்படியில்லே. உங்களுக்கு மேல பல சீனியர்ஸ் இருக்காங்க. அவங்களோடு இணைஞ்சு வேலை செய்ய வேண்டியிருக்கும். ஈகோ க்ளாஷ் ஆகலாம். மத்தபடி, ஒரு பிரச்னையும் இல்லே. ஒண்ணாந்தேதிலேர்ந்து நீங்க இங்கே வந்து வேலை செய்யலாம். அன்னிக்கே உங்கஅப்பாயின்ட்மென்ட் ஆர்டரையும் வாங்கிக்கலாம். பெஸ்ட் ஆஃப் லக்!” என்று கைகுலுக்கினார் ஆசிரியர்.

விடைபெற்று வெளியே வந்தேன். ராவ், வீயெஸ்வி இருவரிடமும் விடைபெற்று வெளியேறி, வீட்டுக்கு வந்தேன். 

அது மார்ச் கடைசி. ஏப்ரல் முதல் தேதிக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள்தான் இருந்தன.

அந்த மூன்று நாட்களும் மூன்று யுகங்களாக நகர்ந்தன. 
 
எக்கச்சக்க ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் கனவுகளோடும் முதல் தேதியன்று விகடன் அலுவலகத்துக்குச் சென்றேன்.
 
எனக்குப் பெரிய இடியையும் ஏமாற்றத்தையும் தந்தது ஏப்ரல் 1.
 
(இன்னும் சொல்வேன்)
 

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பதிவிடுங்கள் அபராஜிதன் நன்றாக இருக்கின்றது தொடர்...! உங்களுடைய இந்த வசனமும் பிடித்திருக்கு...!

நந்தி கடலிடை வந்து தழுவிடும் காற்றிலும் மூச்சிருக்கும் ,அங்கு நாளும் மலர்ந்திடும் தாழை மலர்களில் வந்து முகம் சிரிக்கும்.  tw_blush: 

  • தொடங்கியவர்

 

ப்ரல் 1. 

பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் நுழைய ஆசைப்பட்ட அந்த பிரமாண்ட கோட்டைக்குள் ஒருவாறாக நுழைய அனுமதி கிடைத்து, எக்கச்சக்க ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் கனவுகளோடும் நான் சென்றபோது, எனக்கு முதலில் ஏமாற்றமே காத்திருந்தது.

ரிசப்ஷனிஸ்ட் நான் வந்த காரணம் பற்றி விசாரித்தார். இன்றுமுதல் விகடன் எடிட்டோரியலில் வேலையில் சேர்ந்திருப்பதாகச் சொன்னேன். அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைக் காட்டும்படி கேட்டார். “இன்னும் தரவில்லை. இன்றைக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்றேன். “சற்று அப்படி உட்காருங்கள்” என்று இருக்கையைக் காண்பித்தார். பின், இன்டர்காமில் யாருடனோ பேசினார். அதன்பின்பு ஒரு அட்டெண்டரை அழைத்து, என்னை திரு.வீயெஸ்வியிடம் அழைத்துப் போகச் சொன்னார்.

நானும் அவரோடு முதல் மாடியில் இருந்த வீயெஸ்வி சாரின் அறைக்குச் சென்றேன். “வாருங்கள் ரவிபிரகாஷ்!” என்று வரவேற்ற அவர், என்னை அதே தளத்தில் இருந்த வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார். ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களின் அறையைவிட மூன்று மடங்கு பெரிதான அறை அது.  ஹால் போன்றதொரு பிரமாண்ட அறை.

அங்கே நீளமும் அகலமுமான ஒரு பெரிய மேஜையின் பின்னால், சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் கார்ட்டூனிஸ்ட் மதன்.

“இவர் ரவிபிரகாஷ். சாவி பத்திரிகையில், சாவி சாரின் நேரடிப் பார்வையில் வொர்க் பண்ணினவர். இங்கே வேலைக்குச் சேர அப்ளிகேஷன் கொடுத்திருக்கார். நீங்க பார்த்துக்குங்கோ!” என்று அவரிடம் என்னை அறிமுகப்படுத்திவிட்டு, வீயெஸ்வி அவர்கள் வெளியேறிவிட்டார்.

அதன்பின், மதன் சாருக்கும் எனக்குமான உரையாடல் தொடங்கியது.

“எத்தனை வருஷமா சாவியில வொர்க் பண்ணினீங்க ரவிபிரகாஷ்?” என்று மெலிதான புன்னகையோடு கேட்டார் மதன். 1987-லிருந்து பணி புரிந்ததைச் சொன்னேன்.

“சாவி ஏன் நின்னு போச்சு? என்ன பிரச்னை?” என்றார். நான் உள்பட ஏழெட்டு பேரை சாவி சார் பெங்களூர் அழைத்துச் சென்றதையும், அங்கே ஏற்பட்ட ஒரு குழப்பத்தால் சாவி சார் என் மீது கோபம் கொண்டதையும், அதன் காரணமாக அங்கேயே பத்திரிகையை மூடிவிட்டதாக அவர் அறிவித்ததையும் திரு.மதனிடம் சொன்னேன். புன்சிரித்தார்.

“சாவி ரொம்ப கோபக்காரரா?” என்று கேட்டார்.

“ரொம்பவே! ஒருத்தனிடம் திறமை இருக்குன்னு தெரிஞ்சா ஓஹோன்னு கொண்டாடுவார். மனம் திறந்து பாராட்டுவார். உயரே தூக்கி வைப்பார். அதுவே அவன் ஒரு சின்ன தப்பு பண்ணினாலும், கண்டபடி திட்டுவார். நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேப்பார்” என்றேன்.

“அவர் கோபக்காரர், கண்டபடி திட்டினார்ங்கிறதாலதான் நீங்க சாவியை விட்டு வெளியே வந்தீங்களா?” என்று கேட்டார் மதன்.

 

“ஏற்கெனவே இரண்டு முறை அவரோட கோபம் தாங்காம வெளியேறியிருக்கேன். ஆனா, ஒரு சில மாதங்கள்ல மீண்டும் அவர் கிட்டேயே போயிருக்கேன். காரணம், அவர் கொடுத்த உற்சாகம்; சுதந்திரம். கோபம் உள்ள இடத்துலதான் குணமும் இருக்கும்கிற மாதிரி, அவர் ரொம்ப கோபக்காரராக இருந்தாலும் என் மீது நிறைய நம்பிக்கை வெச்சிருந்தார். அவர் என்னைக் கண்டிச்சது, திட்டினது எல்லாமே என் மேலுள்ள அக்கறையினால்தான். இது அவர் திட்டும்போது புரியறதில்லை. அப்புறம் நிதானமா யோசிக்கும்போது புரியும். அதனால நானே திரும்ப அவரிடம் போயிடுவேன். அவரும் எதுவுமே நடக்காத மாதிரி அன்போடு என்னைச் சேர்த்துப்பார். ஆனா, இந்த முறை அவரை விட்டு நான் வெளியேறினதுக்குக் காரணம் அவர் காட்டிய கோபம் இல்லை. பத்திரிகையை நடத்த பொருளாதார ரீதியா அவர் ரொம்ப சிரமப்பட்டுக்கிட்டிருந்தார். கடன்கள் பெருகிப் போச்சு. வரவேண்டிய நிலுவைத் தொகைகள் வந்து சேரவே இல்லை. பத்திரிகையை நிர்வகிக்கவும் சரியான ஆள் இல்லை. சாவி சார் சிறந்த பத்திரிகையாளர். ஆனா, சிறந்த நிர்வாகி கிடையாது. அவர் வாரிசுகளும் இந்தத் துறையில் இல்லை. இன்னிக்கில்லேன்னா நாளைக்கு, நாளைக்கில்லேன்னா அடுத்த வாரம் என்கிற நிலைமையில்தான் சாவி பத்திரிகையின் ஆயுள் இருந்தது. இந்த நிலையில் சார் திடீர்னு ஒரு நாள் பத்திரிகையை மூடிட்டா என் கதி என்ன ஆகுறதுன்னு கவலையா இருந்தது. அதனால்தான் அவரோட இந்தக் கோபத்தை ஒரு சாக்கா வெச்சு, அங்கிருந்து வெளியேறிட்டேன்...” என்று விரிவாகச் சொன்னேன்.
 
“ஒருவேளை, சாவி பத்திரிகை நல்லபடியா நடந்து, இன்னும் ஒரு பத்து வருஷத்துக்குக் கவலையில்லேன்னு தெரிஞ்சா, நீங்க அங்கே வேலையில் தொடர்ந்திருப்பீங்களா?” என்று கேட்டார் மதன்.
 
“கண்டிப்பா! அவர் கிட்டேர்ந்து பிரிஞ்சு வரணும்கிறது என் விருப்பம் இல்லை. என் கால்கள் பிடிமானமில்லாமல் அந்தரத்தில் தொங்குற மாதிரி இருந்துது நிலைமை. எனவே, என் காலை அழுத்தமா ஊனிக்கணும்னுதான் வெளியேறினேன். அந்த பயம் இல்லைன்னா, அவரிடமே பணியில் தொடர்ந்திருப்பேன்” என்றேன்.
 
“அப்போ ஆனந்த விகடனில் வேலை செய்யணும்கிறது உங்க நோக்கம் இல்லை!” என்று கேட்டுப் புன்னகைத்தார் மதன்.
 
“ஆனந்த விகடன்லதான் வேலை செய்யணும்னு எனக்கு ஒரு பெரிய கனவே உண்டு. அதுக்காக ஏற்கெனவே முயற்சி பண்ணித் தோத்திருக்கேன். இங்கே வேலை செய்ய ஒரு தகுதி வேணும்; ஒரு கொடுப்பினை வேணும். எனக்கு அதுக்கான தகுதியோ கொடுப்பினையோ இல்லைன்னு தெரிஞ்ச பிறகுதான், புஷ்பாதங்கதுரை சிபாரிசுல சாவி சாரிடம் வேலைக்குச் சேர்ந்தேன். அதன்பிறகு, எனக்கு வேறெந்தச் சிந்தனையும் எழுந்ததில்லை. அவர் என் மீது சில சமயம் கோபப்பட்டால்கூட, அது என்னோட வளர்ச்சிக்காகத்தான்னு எனக்கு நல்லா புரியுது. என் மீது சாவி சாருக்கு தனிப்பட்ட அபிமானம் உண்டு. அன்பு உண்டு. அதை உணர்ந்த பிறகு அவரை விட்டு வெளியேற நான் விரும்பியதில்லை. எனவே, சாவி பத்திரிகை எந்தத் தொய்வும் இல்லாமல் இன்னும் பத்து வருஷம் நீடிக்கும் என்கிறபட்சத்தில், ஆனந்த விகடனில் வேலைக்குச் சேர வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியே இருக்காது என்பதுதான் உண்மை. எனவே, நான் மீண்டும் ஒருமுறை விகடன் வேலைக்கு முயற்சி பண்ணியே இருக்க மாட்டேன்!” என்றேன்.
 
“ம்ம்...” என்று சிந்தனையோடு தமது ஃப்ரெஞ்ச் தாடியை வருடி விட்டுக்கொண்டார் மதன்.
 
பின்னரும் அவர் கேட்ட கேள்விகள் எல்லாம், சாவி பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள், அட்டைப்பட ஜோக் போட்டு கைதானது பற்றியதாகவே இருந்தன.
 
இங்கே ஓர் உண்மையை நான் சொல்லியே ஆகவேண்டும். என் அப்ளிகேஷனின்பேரில் மதன் சார் அப்போது என்னை இன்டர்வியூ செய்துகொண்டிருக்கிறார் என்பதை நான் உணரவே இல்லை. சுத்தமாக அது எனக்கு உறைக்கவே இல்லை. அவர் இயல்பாக என்னோடு பேசிக்கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால், அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் வெள்ளந்தியாக பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன்.
 
எவ்வளவு வெள்ளந்தி என்று, அவர் கேட்ட ஒரு கேள்விக்கு நான் அளித்த பதிலைச் சொன்னால் உங்களுக்குப் புரியும்.
 
பேச்சினூடே மதன் சார் என்னிடம், “ரவி, சிறந்த கார்ட்டூனிஸ்ட்னு நீங்க யாரைச் சொல்வீங்க?” என்று கேட்டார்.
 
நான் தயக்கமே இல்லாமல், “மதிக்குமார்தான் சார்!” என்றேன். இப்போது தினமணி நாளேட்டில் கார்ட்டூனிஸ்ட்டாகப் பணிபுரிகிறாரே, அந்த ‘மதி’தான்! அவர் அப்போது தொடர்ந்து சாவி பத்திரிகையில் கார்ட்டூன்கள் வரைந்துகொண்டிருந்தார். அவர் ஏற்கெனவே ‘மக்கள் குரல்’ நாளேட்டில் ஃப்ரீலான்சராக கார்ட்டூன்கள் வரைந்துகொண்டிருந்தார். பின்னர் ‘இதயம்பேசுகிறது’ பத்திரிகையிலும் ‘சிதம்பரம்’ என்ற பெயரில் கார்ட்டூன்கள் வரைந்தார். 
 
அவர் வரைந்த கார்ட்டூன்களை எல்லாம் கொண்டு வந்து என்னிடம் காண்பித்து, சாவி பத்திரிகையில் கார்ட்டூன் வரைய வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டார். அவரின் கார்ட்டூன்களைப் பார்த்து அசந்து போனேன். ஒவ்வொன்றும் புத்தம்புதுச் சிந்தனையோடு, அற்புதமாக இருந்தன.  திருத்தமாக இருந்தன. கேலி, கிண்டல், நகைச்சுவை என கார்ட்டூனுக்கு இருக்கவேண்டிய அத்தனை ரசனைகளும் குறைவற இருந்தன. சொல்ல வந்த விமர்சனத்தை சின்னச் சின்ன கோடுகளில் நறுக்கென்று சொல்லும் அவரின் உத்தி அசத்தலாக இருந்தது. அவரை நான்தான் சாவி பத்திரிகையில் கார்ட்டூன்கள் போடச் செய்தேன்.
 
சாவி சார், மதியின் கார்ட்டூன்களைப் பார்த்து பிரமித்துப் போனார். ஒவ்வொரு வாரமும் நாலைந்து கார்ட்டூன் ஐடியாக்களை ரஃப் ஸ்கெட்ச் போட்டுக் கொண்டு வந்து  காட்டுவார் மதி. அதில் எதை எடுப்பது, எதை விடுப்பது என்று குழப்பமே வந்துவிடும். அத்தனையுமே அற்புதமாக இருக்கும். பின்னர் ரொம்ப யோசித்து, அவற்றிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பார் சாவி சார். ஒருமுறை ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்து மதி போட்டிருந்த எட்டு கார்ட்டூன்களையுமே தேர்ந்தெடுத்து, எட்டுப் பக்கங்களுக்கு வரிசையாகப் போடச் சொன்னார் சாவி. அந்த அளவுக்குத் திறமையானவர் கார்ட்டூனிஸ்ட் மதிக்குமார்.
 
எனவே, மதன் சார் கேட்டதுமே சற்றும் தயக்கமின்றி, “மதிக்குமார்தான் சிறந்த கார்ட்டூனிஸ்ட்” என்றேன்.
 
மதன் சார் என்னை ஆழமாகப் பார்த்து, “ம்... இஸ் இட்?” என்றபோதும் சுதாரிக்காமல், “ஆமாம் சார்” என்றேன்.
 
கேட்பவர், ஆனந்த விகடனின் இணையாசிரியரும், கார்ட்டூனிஸ்ட்டுமான மதன்; நான் இங்கே வேலை கேட்டு விண்ணப்பித்திருக்கிறேன். அவர் என்னை இன்டர்வியூ செய்யவில்லை, சும்மாதான் கேட்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். நான் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்? “என்ன சார் நீங்க, உங்களைவிட சிறந்த கார்ட்டூனிஸ்ட் உண்டா? எனக்கு உங்கள் கார்ட்டூன்கள் என்றால் உயிர்! நீங்கள் இந்திராகாந்தியை கார்ட்டூனில் தத்ரூபமாகக் கொண்டு வந்தது போல் வேறு யாருமே போட்டதாக எனக்குத் தெரியவில்லை...” என்று சிலிர்ப்பும் பரவசமுமாகக் கொட்டியிருக்க வேண்டாமா? புத்தியுள்ள பிள்ளை அதைத்தானே செய்வான்? சரி, அதுதான் போகட்டும்... அவரைத்தான் சொல்லவில்லை. தமிழ்ப் பத்திரிகையில் அல்லாது தி ஹிண்டு, இண்டியன் எக்ஸ்பிரஸ் என ஆங்கிலப் பத்திரிகைகளில் வரையும் கார்ட்டூனிஸ்ட், அல்லது வெளிநாட்டு கார்ட்டூனிஸ்ட்டுகளில் யார் பெயரையாவது சொல்லியிருக்கக் கூடாதா? 
 
நான்தான் முழு அசடனாயிற்றே! மதிக்குமார் பெயரை இரண்டாம் முறையும் மதன் சாரிடம் அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன்.
 
அப்புறம், அவர் மேற்கொண்டு சம்பிரதாயத்துக்கு நாலைந்து கேள்விகள் கேட்டுவிட்டு, “சரி ரவிபிரகாஷ், நீங்க கிளம்புங்க. ஆசிரியரோடு பேசி முடிவெடுத்து, அப்புறம் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அப்ளிகேஷன்ல உங்க அட்ரஸ் கொடுத்திருக்கீங்க இல்லியா... லெட்டர் வரும்.  போயிட்டு வாங்க!” என்றார்.
 
தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அப்போதுதான் எனக்கு உறைத்தது, அத்தனை நேரம் மதன் சார் என்னை இன்டர்வியூ செய்திருக்கிறார் என்று. நாலைந்து நாள் முன்னாடியே வந்து, ஆசிரியரைப் பார்த்துப் பேசி, அவரும் என்னை செலெக்ட் செய்துவிட்டதாகச் சொல்லி, முதல் தேதியிலிருந்து வரச் சொல்லிவிட்டபடியால், இப்போது மதன் சாரிடம் உரையாடியதை இன்டர்வியூவாகவே எடுத்துக் கொள்ளவில்லை என் மனம்.
 
எனவே, பதறிப் போய், “சார், நான் நாலைந்து நாள் முன்னாடியே வந்திருந்தேன். ஆசிரியர் என்னை இன்டர்வியூ செய்தார். என்னை செலெக்ட் செய்துட்டதா சொன்னார். முதல் தேதி வந்து ஜாயின் பண்ணிக்கும்படியும், அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை அப்போ வாங்கிக்கலாம்னும் சொன்னார். அதான், ஜாயின் பண்றதுக்காக இன்னிக்கு வந்தேன்” என்றேன்.
 
“ஓஹோ! ஏற்கெனவே இன்டர்வியூ முடிஞ்சாச்சா? இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே ரவிபிரகாஷ்? நான் இவ்வளவு நேரம் உங்க டயத்தை வேஸ்ட் பண்ணியிருக்கவே மாட்டேனே? சரி, போய் வீயெஸ்வியை வரச் சொல்லுங்க!” என்றார் மதன்.
 
மதன் சாரின் அறையிலிருந்து வெளியேறி, மீண்டும் வீயெஸ்வியின் அறைக்குச் சென்று, நடந்ததை விவரித்து, அவரை மதன் சார் அழைத்ததாகச் சொன்னேன்.
 
“அன்னிக்கு நீங்க வந்தப்போ மதன் சார் லீவுல இருந்தார். அவர் உங்களைப் பார்க்கலை, இன்டர்வியூ பண்ணலை இல்லியா... அதான்! கொஞ்சம் இருங்க, வந்துடறேன்!” என்று சொல்லிவிட்டு எழுந்து போனார் வீயெஸ்வி.
 
இருபது நிமிடம் கழித்துத் திரும்பினார். “சரி, நீங்க கீழே போய் ரிசப்ஷன்ல வெயிட் பண்ணுங்க!” என்றார்.
 
கீழே வந்தேன். காத்திருந்தேன். நிமிடங்கள் யுகங்களாக நகர்ந்தன.
 
மதன் சார் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு நான் அளித்த பதில்களும் மனதில் ரீவைண்டாகி, மீண்டும் ஒருமுறை ஓடின.
 
‘சத்தியமாக இங்கே எனக்கு வேலை கிடைக்கப் போவதில்லை’ என்கிற எண்ணம் பலமாக எழுந்தது.
 
காத்திருக்கப் பொறுமையின்றி, கிளம்பிவிடலாமா என்று தோன்றியது.
 
(இன்னும் சொல்வேன்
 
 
On 2/29/2016 at 3:35 AM, suvy said:

தொடர்ந்து பதிவிடுங்கள் அபராஜிதன் நன்றாக இருக்கின்றது தொடர்...! உங்களுடைய இந்த வசனமும் பிடித்திருக்கு...!

நந்தி கடலிடை வந்து தழுவிடும் காற்றிலும் மூச்சிருக்கும் ,அங்கு நாளும் மலர்ந்திடும் தாழை மலர்களில் வந்து முகம் சிரிக்கும்.  tw_blush: 

நன்றி  அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்

On 3/1/2016 at 11:39 AM, புங்கையூரன் said:

தொடருங்கள், அபராஜிதன்!

நன்றி  அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் பச்சைக்கும் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.